Homeஇதழ்கள்2026 இதழ்கள்க.நா.சு: இலக்கியத்துக்கு அப்பால்

க.நா.சு: இலக்கியத்துக்கு அப்பால்

ஶ்ரீநிவாச கோபாலன்

.நா.சு.வுடன் முரண்படுபவர்கள் அவர் இலக்கியத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி செயல்பட்டார் என்பதை அவர்மீதான விமர்சனமாகச் சொல்வார்கள். இந்தக் விமர்சனம் எழுவதற்கான வித்து 1945ஆம் ஆண்டில் விழுந்தது. ‘தினசரி’ பத்திரிகையில் எழுதிவந்த தொடரில் ‘உபயோகமான இலக்கிய’த்தை நிராகரித்து க.நா.சு. ஒரு கட்டுரை எழுதினார். அக் கட்டுரை தன்னைச் சீண்டுவதாகக் கருதினார்  ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம். உடனே, க.நா.சு.வுக்கு மறுப்பு எழுதும் வேலையைப் புதுமைப்பித்தனுக்குக் கொடுத்தார். புதுமைப்பித்தனும் இதற்குமேல் எழுதுவதற்கு ஒன்றுமில்லை எனும் அளவுக்கு ஒரு கட்டுரையை எழுதி ஆசிரியர் இட்ட பணியை நிறைவேற்றினார்.[1]

இந்த விவாதத்தில் க.நா.சு., புதுமைப்பித்தன் இருவரின் கட்டுரைகளையும் கண்டு, புனைவெழுத்து அல்லாத பிற எழுத்துகளைக் க.நா.சு. புறந்தள்ளுகிறார் என்றும் புதுமைப்பித்தன் அரசியல், விஞ்ஞானம், வரலாறு போன்ற துறைகளிலும் அக்கறை கொண்டு அத்துறைகளிலும் புதிய நூல்கள் எழுவதை விரும்புகிறார் என்றும் சிலர் கருதுகிறார்கள். இந்த விவகாரத்தினால் க.நா.சு.வுக்கு ‘இலக்கியத் தூய்மைவாதி’ என்ற பெயரும் கிடைத்திருக்கிறது.

தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம் என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த க.நா.சு., பிற துறைகளிலும் அக்கறை காட்டவில்லை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. இதற்கு மாறான கருத்தை வெளியிட்டுவந்தவர் க.நா.சு.வை நேரிலும் எழுத்திலும் நன்கறிந்து, அவரைப் பின்தொடர்ந்து செயல்பட்ட விமர்சகர் வெங்கட் சாமிநாதன். க.நா.சு இலக்கியம் மட்டுமே முக்கியம் எனத் தன் பார்வைக்கு திரையிட்டுக்கொண்டவர் அல்ல என்பதை வெ.சா. மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். க.நா.சு என்கிற ஆளுமையின் ஆதார ஸ்ருதி இலக்கியம் மட்டுமல்ல, எல்லா கலைத் துறைகளும் சிந்தனைத் துறைகளும்தான் என்கிறார்.

ஓவியம், சிற்பம், திரை, நாடகம், நடனம், வரலாறு, நாட்டாரியல், இதழியல், பதிப்பு எனப் பல துறைகளிலும் பரந்துள்ள க.நா.சு.வின் பார்வை வெ.சா.வின் கூற்றுச் சான்று பகர்கின்றன.

வரலாறு

இலக்கியத்துக்கு அடுத்தபடியாக க.நா.சு. மிகுந்த ஈடுபாடு காட்டிய துறை வரலாறு. “இலக்கியம் என்னுடைய முதல் ஆர்வம் என்றால் சரித்திரம் என்னுடைய இரண்டாவது ஆர்வம்” என்றும் நாகரிகம், இலக்கியம், கலை, பழக்க வழக்கங்கள், விஞ்ஞான வளர்ச்சி பற்றிய சரித்திர நூல்களைப் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்றும் கூறியிருக்கிறார்.

க.நா.சு. நேரடியாகத் தமிழில் எழுதி வெளியான முதல் புத்தகமே ‘கவி ரவீந்திரநாத் தாகூர்’ (1941) என்ற வாழ்க்கை வரலாற்று நூல்.[2] ஹெலன் கெல்லரின் ‘என் கதை’ (1955), தோரோவின் ‘வால்டன் எளிய வாழ்க்கை’ (1956), ‘ஆல்பர்ட் ஸ்வைட்ஸரின் சுயசரிதம்’ (1958) ஆகிய தன்வரலாற்று நூல்களை ஐம்பதுகளிலேயே க.நா.சு. மொழிபெயர்த்திருக்கிறார். ‘தினமணி கதிர்’ இதழில் எழுதிய ‘இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள்’ என்ற தொடர் வெவ்வேறு துறைகளில் முக்கியப் பங்களிப்பாற்றிய தலைவர்கள், கலைஞர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் எடுத்துரைப்பதாக அமைந்தது.

மனிதகுல சிந்தனையின் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நோக்கில் டி. எஸ். சொக்கலிங்கத்தின் ‘நவசக்தி’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைத் தொடர் ‘மனிதகுல சிந்தனை வளம்’. நாற்பதுகளில் எழுதப்பட்ட இந்தத் தொடர் 1966இல் நூலாக வெளியானது. ‘குங்குமம்’ இதழில் தானறிந்த பல எழுத்தாளர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ என்ற நூலாக வெளியானது. புதுமைப்பித்தனுடன் நெருங்கிப் பழகிய ‘மணிக்கொடி’ எழுத்தாளரான கி.ரா. என்கிற கி. ராமச்சந்திரன் பற்றி எழுதப்பட்ட ஒரே கட்டுரை க.நா.சு. எழுதியதுதான்.

இந்தியாவில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் வரலாற்றை விவரிக்கும் க.நா.சு.வின் ஆங்கில நூல் The Catholic Community in India (1970). திருக்குறள் பற்றி Tiruvalluvar and his Tirukkural (1986) என்ற ஆய்வையும் எழுதிய க.நா.சு., பின்னர் ‘வள்ளுவரும் தாமஸும்’ என்ற வரலாற்றுப் புனைகதையையும் ‘ஞானரதம்’ இதழில் எழுதினார். அத்தொடர் ‘தாமஸ் வந்தார்’ (1988) என்ற புதுத்தலைப்பைப் பெற்று நூலானது. “மஹிஞ்சிதரேயைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதுபற்றிய நாவல் ஒன்று எழுதினால் என்ன” எனத் தோன்றியதால் உருவான நாவல் ‘மாதவி’. 1947 வாக்கில் ‘சந்திரோதயம்’ பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்ட இந்த நாவல், பல வருடங்கள் கழித்து நூலாக்கம் பெற்று, ஒரே பதிப்புடன் மறைந்துவிட்டது.

க.நா.சு. எழுதிவைத்த வரலாற்று நூல்கள் சில இன்னும் அச்சேறாமலே உள்ளன. தஞ்சையை ஆண்ட மன்னர் ராஜா சரபோஜியைப் பற்றிய வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் க.நா.சு.வால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அவை கையெழுத்துப்படியாகத் தங்கிவிட்டன.

நாட்டாரியல்

க.நா.சு. இளமைப் பருவத்திலேயே நாட்டாரியலில் விருப்பம் கொண்டிருக்கிறார். 1926ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே நாட்டுப்புறக் கதைகளை எழுதிவந்திருக்கிறார்.[3] அப்போதே அவர் எழுதிய தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது[4]. க.நா.சு.வின் அந்தப் பிராயத்து எழுத்துகள் இனி கிடைப்பது அரிது. ஆனால் பிற்காலத்தில் ‘இலக்கிய வட்டம்’ என்ற தனது சிறுபத்திரிகையில் எழுதிய மதிப்புரைகள் நாட்டாரியலில் அவரது ஈடுபாட்டை நன்கு புலப்படுத்துகின்றன. நா. வானமாமலை வெளியிட்ட நாட்டார் பாடல் தொகுப்புகளைச் சிறப்பித்துக் கூறும் இரண்டு மதிப்புரைகளும் குறிப்பிடத்தக்கவை. ‘தமிழர் நாட்டுப்பாடல்கள்’ என்ற பெருநூலுக்கு எழுதிய மதிப்புரை இவ்வாறு தொடங்குகிறது: “ஏதாவது ஒரு பிராந்தியத்தில் வழக்கிலுள்ள பாடல்களைப் பிரதியெடுத்து வெளியிடுவது என்பது மிகவும் அவசியமான ஒரு காரியம். நாட்டு மக்களின் மனப்போக்கையும் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் நாட்டுப் பாடல்கள் தமிழ்நாட்டில் பலவும் உண்டு.”[5]

‘தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற சிறு தொகுப்பைப் பற்றிய மற்றொரு மதிப்புரையில்[6] நாட்டார் பாடல்கள் பற்றிய க.நா.சு.வின் முக்கியமான அவதானிப்புகள் உள்ளன. அப்பாடல்களைத் திரட்டுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய கடும் உழைப்பையும் அவர்களின் சிரமங்களையும் க.நா.சு. நன்கு உணர்ந்திருப்பதை இந்த மதிப்புரை காட்டுகிறது. நாட்டுப் பாடல்களைத் தொகுக்க முற்படும் சிலர் தங்கள் கைச்சரக்கையும் புகுத்திவிடும் வழக்கத்தை விமர்சித்து, நா. வானமாமலையின் தொகுப்பு அந்தப் போக்கிற்கு மாறாகவும் அவரது சிரத்தையான தேடலின் வெளிப்பாடாகவும் அமைந்திருப்பதைப் பாராட்டுகிறார். குறிப்பாக, அறுபதுகளில் தளர்நடை பயிலத் தொடங்கிய தமிழ்ப் புதுக்கவிதைக்கு இந்த நாட்டுப் பாடல்களை முன்மாதிரியாகவும் காண்கிறார்.

இரண்டு மதிப்புரைகளிலும் தமிழ்நாட்டில் பல வட்டாரங்களிலும் வழங்குகிற பாடல்கள் தொகுத்து நூலாக்கம் பெறவேண்டும் என்று தூண்டுகிறார்.

தமிழக மாவட்டங்களின் வரலாற்றை விவரிக்கும் வகையில் சோமலெ எழுதிய நூல்களை மதிப்பிடும்போது, நாட்டாரியலில் ஓர் உறுப்பான வட்டார வழக்குகளில் க.நா.சு. கொண்டிருந்த கவனமும் தெரிகிறது. “எனக்குத் தெரிந்த மாவட்டமான, என்னைப் பற்றிய வரையில் விரும்பி உட்கார்ந்து படித்த தஞ்சாவூர் மாவட்டத்தைப் பற்றிய வரையில் என் கண்ணில் தவறான தகவல் ஒன்றுகூடத் தேடியும், காணவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மொழி வழக்கிலுள்ள சில பிரயோகங்களைக்கூட எடுத்துச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.”[7] ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ வெளியானவுடன் அதைத் தமிழின் ‘முதல் வட்டார நாவல்’ எனக் குறிப்பிட்டதிலும் வட்டார வழக்குகள் குறித்து க.நா.சு. கொண்டிருந்த ஈடுபாட்டை உணரலாம்.

நாடகம்

க.நா.சு. எழுதி அச்சில் வெளியான முதல் நூலான ‘பொம்மையா, மனைவியா?’ (1939) இப்சன் நாடகத்தின் மொழிபெயர்ப்பு. க.நா.சு. முதலில் பிறர் நூலுக்கு எழுதிய முன்னுரை ந. சிதம்பரசுப்பிரமணியனின் ‘ஊர்வசி’ (1944) நாடகத் தொகுப்புக்கு எழுதியதுதான். இவ்விரு நூல்களின் முன்னுரைகளிலும் நாடகங்கள் குறித்து தன் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். நாடகம் மேடையேறுவதற்கான அம்சங்களுடன் இருப்பதைவிட, இலக்கியப் பிரதியாக உருவம் பெற்றிருக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நோக்கில்தான் ‘நல்லவர்’, ‘ஊதாரி’ போன்ற நாடகங்களை எழுதினார்; பல நாடகங்களை மொழிபெயர்த்தார்.

கு.ப.ரா.வின் ‘அகலியை’[8] (1964), புரசு பாலகிருஷ்ணனின் ‘கிருஷ்ணகுமாரி’[9] (1964) ஆகிய நாடக நூல்களுக்கு எழுதிய மதிப்புரைகளில் அவை கதைகளாக மட்டுமே உருப்பெற்றிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘நாடகங்கள்’ என்ற சிறிய கட்டுரையில் தமிழ் நாடகங்களுக்கு அடிப்படையாக அமையவேண்டியவை அம்சங்கள் பற்றி எழுதியுள்ளார். தரமான சிறுகதைகள், புதுக்கவிதைகள் தோன்றுவதற்கான சூழலை எழுத்தாளர்களே உருவாக்கியது போல நாடகங்கள் விஷயத்திலும் முயல வேண்டும் என்கிறார். சிறுகதைக்கு புதுமைப்பித்தன் என்ற ஒரு மேதை தோன்றியதைப் போல, தமிழில் நாடக இலக்கியம் தழைப்பதற்கும் ஒரு மேதையின் தோற்றம் போதும் என்பது அவர் நம்பிக்கை.

தமிழ் நாடக வரலாற்றை விவரித்து எழுதப்பட்ட க.நா.சு.வின் ஆங்கிலக் கட்டுரை[10] குறிப்பிடத்தக்கது. 1967இல் வெளியான இந்தக் கட்டுரை சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் காணும் நாடகக் கூறுகள், கோயில் நாடகங்கள், நாடக சபாக்கள், திராவிட இயக்கப் பிரச்சார நாடகங்கள், வேம்பம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்ட முன்னோடிகளின் பங்களிப்புகள் எனப் பல புள்ளிகளைத் தொட்டுச் செல்கிறது. அந்தக் கட்டுரை தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அன்றைய சூழலையும் சாடுகிறது. சோ. ராமசாமியின் நாடகங்களை நகைச்சுவைத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுபவை என எழுதும் க.நா.சு. அவற்றின் தயாரிப்புத் தரமும் மோசமானது என்கிறார். புதிய சோதனை முயற்சிகளுக்கு இடமில்லாத அளவுக்குத் தரமற்ற நாடகங்களுக்குப் பழகிப்போன ரசிகர்களையும் விமர்சிக்கிறார்.

சினிமா

க.நா.சு. சிறிதுகாலம் திரைப்படத் தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்தக் காலத்தில் பல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தில்லியில் வெங்கட் சாமிநாதனுடன் சேர்ந்து உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் க.நா.சு.வை நடிக்க வைக்க முயற்சி நடந்திருக்கிறது. அவர் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.[11]

திரைத்துறையுடன் இத்தகு உறவுகள் இருந்தாலும் க.நா.சு. சினிமா பற்றிய தனது அபிப்பிராயங்களை அதிகமாக வெளியிட்டதில்லை. 

இந்திய மொழிகளில் சினிமாவாக எடுக்கப்பட்ட நாவல்கள் பற்றிப் பேசும் கட்டுரை ‘இந்திய இலக்கியம்’ நூலில் உள்ளது. சிறந்த படைப்புகள் சினிமாவாக வந்துதும் உடனே இலக்கிய அந்தஸ்து பெற்றுவிடுவது பற்றியும், சினிமாவாக எடுக்கப்படாத சிறந்த படைப்புகளும் படைப்பாளிகளும் கவனம் பெறாதிருப்பது பற்றியும் க.நா.சு. கவலைப்படுகிறார். ஒரு சினிமாக்காரரை முதல்வராக்கிய தமிழகத்தின் நிலையையும் பற்றியும் பரிகசிக்கிறார்.

எண்பதுகளில் ‘குங்குமம்’ பத்திரிகை வெளியிட்ட சினிமா சிறப்பிதழில் க.நா.சு. எழுதிய ‘என். எஸ். கிருஷ்ணன் நகைச்சுவையில் சமுதாய நோக்கு’ என்ற கட்டுரை முக்கியமானது. என். எஸ். கிருஷ்ணனின் நடிப்பில் ஹாஸ்யத்தை மீறிய கனமும் ஆழமும் இருப்பதாகச் சொல்லும் க.நா.சு., சிதம்பரம் அருகில் நடந்த கிந்தனார் கதா காலட்சேபத்தைக் கேட்டது பற்றி நினைவுகூர்கிறார். அந்த நிகழ்ச்சி, நகைச்சுவையாகச் சொல்லப்பட்டது போலத் தோன்றினாலும் எவ்வளவு முக்கியமான விஷயம் எனச் சிந்திக்க வைத்தது என்கிறார். கலைவாணரை ‘அசாதாரணமான மேதை’யாகப் போற்றும் இந்தக் கட்டுரை, அவரது சமூதாய நோக்கையும் தன்மான உணர்வையும் எடுத்துக்காட்டுகிறது.[12]

சினிமாவுக்கும் க.நா.சு.வுக்குமான தொடர்பில் முக்கியமாகச் சொல்லவேண்டிய செய்தி ஜான் ஆபிரகாமின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றியது. 1977இல் நடந்த 25வது தேசியத் திரைப்பட விழாவில் அந்தப் படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. அந்த ஆண்டில் திரைப்பட விழாவுக்கான நடுவர் குழுவில் க.நா.சு.வும் இடம்பெற்றிருந்தார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’க்கு அங்கீகாரம் பெற்றதில் அவரது பங்கும் குறிப்பிடத்தக்கது.

இசை

“நான் செவிடன். அதாவது சங்கீதத்தைப் பற்றிய வரையில் நான் செவிடன். அரைச்செவிடு, கால்செவிடு கூட இல்லை; முழுச்செவிடுதான்”[13] என்று அறிவித்த க.நா.சு. இசை தொடர்பாக எழுதிய கட்டுரைகளும் சில உண்டு.

கல்கி எழுதிய கதைகளை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் நிராகரித்த க.நா.சு., தமிழிசை பற்றி அவர் எழுதிய கட்டுரைகளை அமோகமாகப் பாராட்டி எழுதுகிறார். ‘சங்கீத யோகம்’ என்ற தலைப்பில் வெளியான கல்கியின் தமிழிசை குறித்த விவாதக் கட்டுரைகள் பற்றி ‘படித்திருக்கிறீர்களா?’ தொடரின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

தியாகப் பிரும்மம், ஸ்வாதித் திருநாள், கோபாலகிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை ஆகியோர் பற்றி ‘தினமணி கதிர்’ தொடரில் எழுதினார். தமிழ் நாவல் முன்னோடியாக வேதநாயகம் பிள்ளை பற்றி எழுதிய க.நா.சு., தமிழிசையில் அவரது பங்களிப்பையும் தனிக் கட்டுரையாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘சங்கீதப் போராட்டம்’ என்ற க.நா.சு.வின் கதை மௌனி சொன்ன விஷயத்தை ஆதாரமாகக் கொண்டது. தனக்குப் பிரியமான வயலின்கார நண்பர் ஒருவரின் மறைவுக்குப் பிறகு, வேறு யாருடைய இசையையும் தன்னைத் திருப்திப்படுத்த முடியாது என்று சங்கீதம் கேட்பதையே நிறுத்திவிட்டாராம் மௌனி. இதையே கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் க.நா.சு.வுன் கதை.[14]

நடனம்

ருக்மிணிதேவி அருண்டேலுக்கு க.நா.சு. ‘ஞானரதம்’ இதழில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு நடனக்கலையுடன் அவருக்கு இருந்த பரிச்சயத்தைக் காட்டுவது. இந்த அஞ்சலிக் குறிப்பைப் படித்த வெங்கட் சாமிநாதன் க.நா.சு.வின் துல்லியமான மதிப்பீட்டை எண்ணி மலைத்துப்போய்விட்டாராம். “இவ்வளவு சுருக்கமாக, தீர்க்கமாக, பூரணமாக, அவர் சொல்லியிருப்பது மலைப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. இவ்வளவுக்கும் இவ்விரண்டு குறிப்புகளும், அப்போதைய அவசரத்தில் ஒரு பத்திரிகை நடத்தும், அச்சுக்கு அனுப்பும் நிர்பந்தத்தில் நேரக்குறைவில் எழுதியவை என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.”[15]

நடனக்கலை மீது க.நா.சு. கொண்டிருந்த ஈடுபாடு அவரது புனைவுகளிலும் வெளிப்பட்டுள்ளது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அவரது ‘ஆடரங்கு’ சிறுகதை. ஒரு சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வை அவளது பார்வையிலேயே மிக நுட்பமாக விவரிக்கும் இக்கதை, நடனக்கலையை அவர் எவ்வளவு தூரம் அகவயமான அனுபவமாக உள்வாங்கியிருந்தார் என்பதைப் புலப்படுத்துகிறது.[16] இக்கதையை அவரே ‘The Debut’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். இது சிறந்த இந்தியச் சிறுகதைகளில் ஒன்றாக வெவ்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது.

நவீனப் புனைவுகளில் மட்டுமின்றி, பண்டைய இலக்கியங்களில் உள்ள நடனக் கூறுகளையும் அவர் நுட்பமாக ஆராய்ந்துள்ளார். சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையொன்றில், ஆய்ச்சியர் குரவை பகுதியைத் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த கவிதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் க.நா.சு., நடனக்கலையை இளங்கோவடிகள் நுட்பமாகக் கையாண்டிருக்கும் விதத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.[17]

ஓவியம், சிற்பம்

இலக்கியத்தில் இந்தியத்தன்மையை வலியுறுத்திய க.நா.சு., ஓவியத்திலும் அதைத்தான் விரும்பினார். ஓவியக்கலை பற்றிய தேனுகாவின் ‘வண்ணங்கள் வடிவங்கள்’ (1987) என்ற நூல் குறித்து க.நா.சு. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ‘தீபம்’ வெளியிட்ட கட்டுரையில், ஓவியக்கலை பற்றி எழுதுபவர்கள் அயல்நாட்டுத் தாக்கம் இல்லாமல், இந்திய மண்ணில் ஊன்றிய பார்வையுடன், நம் நாட்டுக் கலைஞர்கள் பற்றி எழுதவேண்டும் என்கிறார். காவிரிக்கரையில் அமைந்திருக்கும் கும்பகோணம் கலைக் கல்லூரி கலைஞர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது என தேனுகா கூறுவதை க.நா.சு.வும் ஆமோதிக்கிறார். ஓவியம், சிற்பம் குறித்த நல்ல நூல்களுக்கு இருக்கும் பஞ்சம் பற்றிக் குறிப்பிட்டு, தேனுகா ஒரு கலைஞரைப் பற்றி தனிநூல் எழுத முன்வர வேண்டும் என்கிறார்.[18]

ரவிவர்மா பற்றிய க.நா.சு.வின் கட்டுரை ‘இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள்’ தொடரில் இடம்பெற்றது. அதில், கலைகள் மக்களை எட்ட வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு ஏற்ப, சாமானிய மக்களை எட்டக்கூடிய சித்திரங்களை முதன்முதலில் தீட்டியவர் ரவிவர்மா என்கிறார்.

தமிழகக் கோயில் சிற்பங்கள் பற்றிய க.நா.சு.வின் ஆங்கிலக் கட்டுரையும் சிறப்பாகச் சொல்லவேண்டியது. ஆஸ்திரேலியப் பத்திரிகையொன்றில் வெளியான அந்தக் கட்டுரை உன்னதமான சிற்பங்களைத் தாங்கி நிற்கும் பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களைப் பற்றிப் பேசுகிறது. மாமல்லபுரம், மயிலாப்பூர், காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை, சுசீந்திரம் ஆகிய இடங்களில் உள்ள கோயில் சிற்பங்களை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை அற்புதமான புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது.[19]

இந்திய ஓவியங்கள், சிற்பங்களின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய ஆனந்த குமாரஸ்வாமியை ஈடிணையில்லாதவர் என்று வானளாவப் புகழும் க.நா.சு[20], புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி உள்ளிட்ட தன் இலக்கிய நண்பர்களோடு ஆனந்த குமாரஸ்வாமியின் பணிகளைப் பற்றி உரையாடியிருக்கிறார்.[21] ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையை நடத்தியபோது அவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார்.[22]

தொகுப்பும் பதிப்பும்

செம்மையான பதிப்புகளை உருவாக்குவதில் க.நா.சு.வுக்கு இருந்த ஈடுபாட்டை அவரது எழுத்துகளில் பரக்கக் காணலாம். கம்பராமாயணப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த கருத்திருமனின் ‘கம்பர் – கவியும் கருத்தும்’ நூலுக்கான மதிப்புரை முக்கியமானது. சுலபமாக வாசிப்பதற்கு ஏற்ற அச்சாக்கம், கதைத் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் தொகுப்பு முறை, விமர்சனபூர்வமான முன்னுரை, பதிப்பாசிரியர் குறிப்புகள் என நூலின் சிறப்புகளை விதந்தோதுகிறார்.[23]

உ.வே.சா.வின் ‘தியாகராச விலாச’த்திற்கு எதிர்வீட்டில் வசித்தபோது எழுதப்பட்ட க.நா.சு.வின் கட்டுரையொன்று ‘கலைமகள்’ இதழில் வெளியானது. ஐயர் பதிப்பின் அருமையை உணர்ந்து, அவரது பணிகளைப் பற்றி ஜுரவேகத்தில் எழுதி முடித்து அனுப்பிய கட்டுரை அது.[24] “மேல்நாட்டுப் பதிப்பு முறை பாணிகள் அறியாத ஒருவர், எப்படியோ தமிழுக்கும் அற்புதமான பல பதிப்புகளைத் தந்துகொண்டிருந்தார். அப்பதிப்புகளின் தரத்தை எட்டிய அளவில், அவற்றுடன் ஒப்பிடக்கூடியனவாக அதற்குப் பின்னர் இதுவரை பதிப்புகள் வந்ததில்லை…”[25] என உ.வே.சா.வின் பதிப்புகளைப் பார்த்து வியக்கிறார்.

தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்த பெரும் சாதனையாகிய ‘கலைக்களஞ்சியம்’ பற்றி ஆழமான பார்வைகளை முன்வைத்தவர் க.நா.சு. கலைக்களஞ்சிய உருவாக்கத்தை தொடக்கம் முதல் இறுதிவரை கவனித்து அதுபற்றித் தொடர்ந்து எழுதிவந்தார். ஆங்கிலக் கட்டுரைகளிலும் தமிழில் நிகழும் அப்பெரும்பணி குறித்துப் பதிவுசெய்தார்.[26]

செம்பதிப்புகளை மெச்சியதைப்போல், பிழை மலிந்த பதிப்புகள் வரும்போது அதைக் கடிந்தும் எழுதினார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தில் வடமொழிச் சொற்களை நீக்கி, ‘தூய தமிழ்ச் சொற்கள்’ பெய்து வெளியிட்டபோது, ‘இலக்கிய வட்ட’த்தில் அதனைக் கண்டித்து சிறுகுறிப்பை எழுதினார். உடனே கழகப் பத்திரிகையான ‘செந்தமிழ்ச் செல்வி’ அவர்மீது வசைமாரி பொழிந்து ஓய்ந்தது.[27] 

கட்டுரை நூல்களில் பொருத்தமான பிற்சேர்க்கைகள் அமைந்திருக்க வேண்டும் என்பதில் க.நா.சு. தனிக்கவனம் கொண்டிருந்தார். ‘இலக்கிய விசாரம்’ முதல் ‘கலை நுட்பங்கள்’ வரை அவரது பெரும்பாலான கட்டுரைத் தொகுப்புகளில் விரிவான பொருளடவைச் சேர்த்திருக்கிறார். (இன்று கிடைக்கும் மறுஅச்சுப் பிரதிகளில் பொருளடைவைக் காண்பது அரிது.) ‘இலக்கிய விசாரம்’ (1959) தான் க.நா.சு.வின் முதல் விமர்சன நூல். அந்தச் சிறிய 80 பக்க நூலில் அயல்நாட்டு எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள நூல்கள், கலைச்சொற்கள் பற்றிய விளக்கங்களும் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியில் பொருள் அகராதியும் உள்ளது.

இத்தகு இணைப்புகள் நூல்களின் பயன்பாட்டை எளிமையாக்கும் என எண்ணினார். பிறர் எழுதிய நல்ல நூல்களிலும் தக்க இணைப்புகள் இருக்க வேண்டும் என விரும்பினார். சோமலெ எழுதிய மாவட்ட வரிசை நூல்கள் பற்றி எழுதும்போது, இந்த நூல்வரிசை நிறைவுறும்போது அகரவரிசை அட்டவணையுடன் ஓர் அனுபந்தம் தேவை எனப் பரிந்துரைக்கிறார். பிரம்மராஜனின் எஸ்ரா பவுண்ட் பற்றிய நூலில், ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், நூல் பட்டியல் போன்ற பிற்சேர்க்கைகளைப் பாராட்டிவிட்டு, பொருள் அகராதியும் இருந்திருக்கலாம் என்கிறார்.[28]

பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி முதலான நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளுக்குச் சிறப்பான பதிப்புகளை வெளியிடுவதில் அவர் கொண்டிருந்த அக்கறையும் தனித்துவமானது. 1940இல் எழுதிய ஒரு கட்டுரையில் பாரதியார் பாடல்களுக்குத் திருத்தமான, பாடவேறுபாடுகளும் விளக்கங்களும் கொண்ட பதிப்பு தேவை என்கிறார்.[29] பாரதியின் கவிதைகளில் தனிச் சிறப்பு மிக்க படைப்பான ‘காட்சி’ என்ற காவியத்தைத் தாமே பதிப்பிக்கவும் முயன்றார். முந்தைய பதிப்புகளில் உள்ள பிழைகளைக் கவனித்து, பாரதியின் கையெழுத்துப்படியையே மூலபாடமாகக் கொண்டு ‘காட்சி’யைப் பதிப்பிக்கத் திட்டமிட்டார். இதற்காக, அப்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருந்த பாரதியின் கையெழுத்துப்படியின் நகலைப் பெற்றுவந்து பதிப்புப் பணியில் இறங்கினார். ஆனால் அந்தப் பதிப்பை வெளியிடுவதற்குக் காலம் அனுமதிக்கவில்லை. க.நா.சு. மறைவுக்குப்பின், புதுவை பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘பாரதியின் காட்சி’ என்ற நூல் அவர் விரும்பியபடி அமையவில்லை.

இன்று புதுமைப்பித்தன் கதைகளுக்குச் சலபதி உருவாக்கிய செம்பதிப்பு இருக்கிறது. அதற்கு முன்பு வெளியான புதுமைப்பித்தன் கதைத் தொகுப்புகளில் தழுவல் கதைகளும் கலந்திருந்தன. சிலர் புதுமைப்பித்தன் பற்றி அவதூறு பரப்புவதற்கு அந்தப் பதிப்புகள் இடமளித்துவிட்டன. இவை நிகழ்வதற்கு முன்பே, புதுமைப்பித்தன் கதைகளை வெளியிடும்போது தழுவல் கதைகளைப் பிரித்துக் காட்டிப் பதிப்பிக்க வேண்டும் என எழுதியவர் க. நா. சுப்ரமண்யம். “புதுமைப்பித்தனைப் பிரசுரிப்பவர்கள் எது அவர் கற்பனை, எது பிறர் கற்பனை என்று குறிப்பு சேர்த்துப் பிரசுரித்தால் வாசகர்களில் பின்வரும் தலைமுறைகளுக்குச் சௌகரியமாக இருக்கும்.” 1962இல் இதை எழுதியபோது தழுவல் கதைகளால் “அவர் [புதுமைப்பித்தன்] கற்பனைக்கு இழுக்கு ஒன்றுமில்லை” எனவும் குறிப்பிட்டார்.[30] 38 ஆண்டுகள் கழித்துதான், க.நா.சு. விரும்பியபடி தழுவல் கதைகளைத் தவிர்த்த, புதுமைப்பித்தன் கதைத் தொகுப்பு வெளிவந்தது.

ஓர் எழுத்தாளரின் மறைவுக்குப்பின், அவரது அனைத்து எழுத்துகளும் முறையாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவர வேண்டும் எனக் கருதியவர் க.நா.சு. இவ்வகையில், கு. ப. ராஜகோபாலனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறவேண்டும் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். இதை வலியுறுத்திச் சொன்னதோடு அமையாமல், மறுபதிப்புகளுக்கு அனுசரணையாகவும் செயல்பட்டார். “கு. ப. ராஜகோபாலன் இறந்து இப்போது (1959) பதினைந்து வருஷங்களாகிவிட்டன. இந்தப் பதினைந்து வருஷங்களில் அவருடைய புதுத் தொகுப்புகள் எதுவும் வெளிவரவில்லை” என்று எழுதினார்.[31] பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், சி. சு. செல்லப்பா, சிட்டி முதலான சிலரது முயற்சியால் கு.ப.ரா.வின் தொகுக்கப்படாத படைப்புகள் அடங்கிய ‘சிறிது வெளிச்சம்’ (1969) தொகுப்பு வெளிவந்தது.

1930களில் ‘மணிக்கொடி’யில் சாகாவரம் பெற்ற பல கதைகளை எழுதியவர் மௌனி. ஆனால், அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1959இல்தான் வெளியானது. அதற்கு முன் அன்றைய இலக்கிய வாசகர்கள் மௌனியைப் பெயரவில்தான் அறிந்திருந்தனர். அவரது கதைகள் படிக்கக் கிடைக்கவில்லை. கிடைத்த இடங்களில் எல்லாம் மௌனியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த க.நா.சு.தான், ‘அழியாச்சுடர்’ என்ற தலைப்பில் அவரது கதைகள் முதன்முறையாகத் நூலாக்கம் பெற முக்கியக் காரணமானவர். அவர்தான் அந்த நூலுக்குத் தொகுப்பாசிரியர்.

க.நா.சு. தொகுப்பு நூல்களின் தேவை, முக்கியத்துவம் குறித்து எழுதிய முன்னோடியாகவும் திகழ்கிறார். 1959இல் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பை உருவாக்குவது பற்றி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தைத் தூண்டியது. பிற்காலத்தில் இந்திய, தென்னிந்திய, தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து மூன்று தொகுப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அவை அனைத்திலும் விரிவான முன்னுரையும் கதாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய அறிமுகக் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. இறுதி நாட்களில், தேர்ந்தெடுத்த கவிதை, கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட விரும்பி அதற்கான ஆயத்தங்கள் செய்திருக்கிறார்.

இதழியல்

க.நா.சு. தமிழிலும் ஆங்கிலத்திலும் சொந்தப் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறார்; பிறர் நடத்திய பத்திரிகைகளுக்குச் சிறப்பாசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார். பல ஆண்டுகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் இதழாளராக இயங்கினார். அவ்வழியில் பிறமொழியினருக்குத் தமிழ்ச் சமூகத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளை ஏராளமாக எழுதினார். ஆங்கிலத்தில் எழுதும்போது தன்னை ஓர் இதழாளராகவே முன்வைத்தார்.

தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தின் மூலவர்களில் ஒருவராக கருதப்படும் க.நா.சு., வெகுஜனப் பத்திரிகைகள் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது தொடக்ககால இதழியல் முயற்சிகளான ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ இரண்டுமே வெகுஜனப் பத்திரிகைக்குரிய அம்சங்களுக்கு மத்தியில் இலக்கியத்தைப் புகுத்தும் நோக்கம் கொண்டிருந்தன. இந்த இதழ்களின் மூலம் தரமான படைப்புகளுக்கு இடம் கொடுக்கும் வெகுஜன இதழ் என்ற முன்மாதிரியை உருவாக்க நினைத்தார்.

வெகுஜனப் பத்திரிகைகளின் மலிவான உள்ளடக்கம் பற்றித் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் வாய்ப்பு அமையும்போதெல்லாம் அந்த இதழ்களில் தானும் எழுதினார். அவ்வப்போது பிரபலப் பத்திரிகைகளில் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த இதழ்களில் ஒதுக்கப்பட்ட குறைவான பக்கங்களில் அவர் எழுதிய தொடர்கள் ஒவ்வொன்றுமே வாசகர்களுக்குப் புதிய சாளரங்களைத் திறப்பவை. ‘படித்திருக்கிறீர்களா?’ (சுதேசமித்திரன்), ‘முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ (குமுதம்), ‘புகழ்பெற்ற நாவல்கள்’ (முத்தாரம்), ‘உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்’ (கல்கி), ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ (குங்குமம்), ‘இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள்’ (தினமணி கதிர்) எனப் பல உதாரணங்களாகச் சொல்லலாம்.[32]

பத்திரிகைகள் சமூகப் பொறுப்புடன் உள்ளடக்கத் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என அழுத்தமாகச் சொல்லிவந்தவர் க.நா.சு. பத்திரிகைகள் பொழுதுபோக்குச் சரக்காக மட்டுமில்லாமல், அறிவூட்டும் சாதனமாகத் திகழ வேண்டும் எனப் பேசியும் எழுதியும் வந்தார். 1985இல் ‘துக்ளக்’ பத்திரிகையில் ‘பத்திரிகை விமர்சனம்’ என்ற தொடர் வெளிவந்தது. கேளிக்கை அம்சங்களால் நிறைந்திருக்கும் வெகுஜனப் பத்திரிகைகளை விமர்சித்து எழுதினார். விற்பனை, வாசகர் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்த தெளிவான புள்ளிவிவரங்களுடன் அன்றைய வெகுஜனப் பத்திரிகைகளின் வீச்சை வரையறுத்தார். அவ்விதழ்கள் தம்மை மேம்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமாகச் செயல்படுவதற்குப் பல யோசனைகளையும் பட்டியலிட்டார்.

இறுதிக்காலத்தில் தமிழ்ப் பத்திரிகைத் தர நிர்ணயம் ஸ்தாபனம் என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார்.[33]

*

க.நா.சு.வை ‘இலக்கியத் தூய்மைவாதி’ என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்குவது, அவரது ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் உள்வாங்கத் தவறியதன் வெளிப்பாடே ஆகும். 1945-ல் எழுந்த ‘உபயோகமான இலக்கியம்’ குறித்த விவாதம் அவருக்குச் சமூக யதார்த்தங்களிலிருந்து விலகியவர் போன்ற ஒரு பிம்பத்தை அளித்திருக்கலாம்; ஆனால், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், நாடகம், சினிமா, நுண்கலைகள், இதழியல் என அவர் இயங்கிய தளங்கள் அனைத்தும், கலை, பண்பாட்டுத் தளங்களில் அவர் கொண்டிருந்த ஆழமான அக்கறையைக் காட்டுகின்றன.

ஒரு கலைப் படைப்பைத் துல்லியமாக மதிப்பிடுவதற்குத் தேவையான விரிவான வரலாற்று, அழகியல் பின்புலத்தை இந்தப் பிற துறை ஈடுபாடுகளே அவருக்கு வழங்கின. பாரதி, புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்க அவர் காட்டிய மெனக்கெடலும், வெகுஜன ஊடகங்களின் தரத்தை உயர்த்த அவர் முன்வைத்த சமரசமில்லாத விமர்சனங்களும் ஒரு முழுமையான அறிவுஜீவியின் அடையாளங்கள்.

வெங்கட் சாமிநாதன் கூறுவது போல், க.நா.சு.வின் ஆதார ஸ்ருதி இலக்கியம் மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த கலை, சிந்தனைத் தளங்களின் ஒருங்கிணைந்த இயக்கமே அவரது ஆளுமையை வடிவமைத்திருக்கிறது. இலக்கியத்திற்கு அப்பால் அவர் மேற்கொண்ட இந்தத் தேடல்களும் செயல்பாடுகளுமே, நவீனத் தமிழ் இலக்கிய விமர்சன மரபில் அவரை ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியுள்ளன.

***

குறிப்புகள்:

  1. இந்த விவாதத்தைத் தொடர்புபடுத்தி புதுமைப்பித்தன் ‘க.நா.சு.வின் நிலைப்பாடுகளுக்கு எதிரான’வர் என்ற தோற்றத்தை எழுப்பும் முயற்சியும் நடக்கிறது. புதுமைப்பித்தனை வைத்து க.நா.சு.வுக்கு மறுப்புக் கட்டுரை எழுதி வெளியிட்ட டி. எஸ். சொக்கலிங்கம், இன்னும் காட்டமாக மற்றொரு கட்டுரை எழுதும்படி மீண்டும் அவரை வற்புறுத்தினார். எரிச்சலடைந்த புதுமைப்பித்தன் ‘தினசரி’ வேலையையே அத்தோடு விட்டொழித்தார். (மேலும் விவரமறிய தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்றில் ‘தினமணியும் தினசரியும்’ என்ற அத்தியாயத்தைப் பார்க்கலாம்.)
  2. தாகூர் பற்றிய க.நா.சு.வின் புத்தகம் அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரின் தொடர்ந்த வற்புறுத்தலால் எழுதப்பட்டது. க.நா.சு. தாகூரைப்பற்றி நூல் எழுத ஒப்புக்கொண்டது புதுமைப்பித்தனுக்குப் பிடிக்கவில்லை. கட்டாயத்தினால் எழுதிய அந்த நூல் க.நா.சு.வுக்கும் திருப்தி தரவில்லை. பின்னால் அதைப் பற்றிக் கூறும்போது ‘வெற்றி பெறாத நூல்’ என்றே குறிப்பிட்டார். (விவரமறிய க.நா.சு.வின் ‘புதுமையும் பித்தமும்’, ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ ஆகிய நூல்களைப் பார்க்கலாம்.)
  3. இலக்கியச் சந்திப்புகள், பேட்டி: க.நா.சு., பேட்டி கண்டவர்: கிருஷ்ணமணி, தீபம், செப்டம்பர் 1966, பக்.34
  4. D. Anjaneyulu, ‘Ka Naa Subramanyam: Critic as crusader’, Bhavan’s Journal, February 15, 1989, pp.64
  5. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 34, 26-2-1965, பக்.11-12
  6. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 7, 14-2-1964, பக்.12
  7. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 4, 3-1-1964, பக்.6
  8. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 23, 25-9-1964, பக்.12
  9. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 34, 26-2-1965 பக்.10-11
  10. Traditional Tamil Drama and The Present Impasse, Sangeet Natak, 1967
  11. சா. கந்தசாமி, ‘என்றும் இருப்பவர்கள்’, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், டிசம்பர் 2024
  12. இந்தக் கட்டுரை முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்த பிரதியில் சில பகுதிகளில் எழுத்துகள் தெளிவாகத் தெரியவில்லை. ‘சினிமா சிறப்பிதழ் 1933-1986’ என்ற குறிப்பிலிருந்து இக்கட்டுரை 1986இல் வெளியாகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
  13. க. நா. சுப்ரமண்யம், ‘படித்திருக்கிறீர்களா?’, அமுத நிலையம், நவம்பர் 1957
  14. தரும சிவராமூ (பிரமிள்), ‘வெய்யிலும் நிழலும்’, எழுத்து, இதழ் 48, டிசம்பர் 1962
  15. வெங்கட் சாமிநாதன், ‘சில இலக்கிய ஆளுமைகள்’, காவ்யா, 2001, பக்.92
  16. கல்கி வீட்டில் நடந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘ஆடரங்கு’ சிறுகதை ‘கலைமகள்’ (மார்ச் 1942) இதழில் வெளியானது. கதையைப் படித்த கல்கி க.நா.சு.வுக்கு ஒரு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார்.
  17. Indian and Foreign Review, March 15, 1967, pp.8-10
  18. ‘தீபம்’, மார்ச் 1988, பக்.6-8
  19. S. Rajee, ‘The South Indian stone cutter at work’, Hemisphere, August 1964, pp.16-19. இது மனைவி ராஜி பெயரில் எழுதிய கட்டுரை. இக்கட்டுரையுடன் இடம்பெற்ற படங்களை எடுத்தவர் க.நா.சு.வின் மைத்துனர்களில் ஒருவரான வெங்கட்ராமன். 
  20. Ka Naa Subramanyam, ‘None Like Ananda Coomaraswamy’, Deccan Chronicle, 29 May 1988, pp.3
  21. கு. அழகிரிசாமி, பழ. அதியமான் (ப.ஆ.), ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’, மு.ப. ஜூன் 1961, காலச்சுவடு மு.ப. செப். 2022
  22. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 24, 9-10-1964
  23. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 1, 22-11-1963, பக்.12
  24. இந்தக் கட்டுரை கிடைக்கவில்லை. இதுபற்றிய குறிப்பு க.நா.சு.வின் ‘இலக்கிய சாதனையாளர்கள்’ (1985) நூலில் உள்ளது.
  25. ஶ்ரீநிவாச கோபாலன், ‘க.நா.சு. வாசித்த கலைக்களஞ்சியம்’, அம்ருதா, மே 2025
  26. ‘இலக்கிய வட்டம்’ ஆண்டு மலர் 1963 (பாரதி நினைவு); ‘பாரதி தோன்றிய காலம்’, எழுத்து பிரசுரம், மே 2024.
  27. 1963ஆம் ஆண்டு நடந்த தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஆதரித்து க.நா.சு. ‘இலக்கிய வட்ட’த்தில் (இதழ் 2, 6-12-1963) சிறு குறிப்பு எழுதினார். அக்குறிப்பைக் கண்டித்த ‘செந்தமிழ்ச் செல்வி’ (ஜனவரி 1963) க.நா.சு.வைத் தாக்கி எழுதியது. அதற்கு ‘இலக்கிய வட்ட’த்தில் (இதழ் 6, 31-1-1964) துரை என்பவர் எழுதிய பதிலுரையும் வந்தது. “இதற்கு திரு. க.நா.சு.தான் காரணம் என்பது போல் தரக் குறைவான முறையில் அவரைத் தாக்கி எழுதி இருக்கிறது. இதை வரவேற்று எழுதியதைத் தவிர அவருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் எவ்வித உறவுமில்லை. இரண்டு மாநாடுகளிலுமே அவர் கலந்துகொள்ளவில்லை. ஆகவே, கழகம் க.நா.சு. போன்றவர்களைத் தாக்கிவிட்டால் தன் தவறு மறந்துபோகும் என்று நினைக்கிறது போலும்!”
  28. ‘ஞானரதம்’, ஏப்ரல் 1986, பக்.34
  29. க. நா. சுப்ரமண்யம், ‘பாரதியாரைப் பற்றி ஒரு சம்பாஷணை’, ‘லோகோபகாரி’, 7-9-1940, பக்.61-66; ‘பாரதி தோன்றிய காலம்’, துரை லட்சுமிபதி (தொ-ர்), எழுத்து பிரசுரம், மே 2024.
  30. ‘எழுத்து’, இதழ் 37, ஜனவரி 1962
  31. இன்னும் நூல்வடிவம் பெறாத தொடர்களும் உள்ளன. ‘தாய்’, ‘ஓம்சக்தி’, ‘ஜனரஞ்சனி’ போன்ற இதழ்களில் வந்தவை இன்னும் தொகுக்கப்படவில்லை.
  32. ‘எழுத்து’ இதழ் 5, மே 1959
  33. தமிழ்ப் பத்திரிகைகள் தர நிர்ணய ஸ்தாபனம் (TAPSO) பற்றிய அறிவிப்பு. ‘ஞானரதம்’, ஏப்ரல் 1986

***

ஶ்ரீநிவாச கோபாலன்: 1994இல் பிறந்தார். திருநெல்வேலியில் வசிக்கிறார். பதிப்பாளர், பத்திரிகையாளர். க.நா.சு.வின் நூல்வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘நாரத ராமாயணம்’ (2021), ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ (2022), ‘The Birth of a Poet’ (2024), ‘The Fall’ (2024), ‘சிரமமான காரியம்’ (2024), ‘என்ன ஆனந்தம்’ (2025), ‘உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்’ (2025) முதலிய நூல்களின் தொகுப்பாசிரியர் / பதிப்பாசிரியர். ‘புதுதில்லியில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு 1987’ (2025) என்ற குறுநூலையும் வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் : sharetosrini@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here