ஸ்டாலின் சரவணன்
காந்தியின் மறைவையொட்டி அம்பேத்கர் எழுதிய டைரிக் குறிப்பை “காந்தி படுகொலைப் பதிவுகள்” புத்தகத்தில் வாசித்தேன். அதுவரை காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த முரண்களை அறிந்த வகையில் அம்பேத்கரின் எழுத்தாளுமையை இந்தக் குறிப்புகள் மேலும் உறுதிப்படுத்தின. அந்தக் குறிப்பை அம்பேத்கர், “காந்தியை ஆராதிக்கும் அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு…” என்று தொடங்கி, காந்தி குறித்து அவருக்குள் இருந்த மனச்சித்திரத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தி இருப்பார். “தீமையிலும் நன்மை விளையக்கூடும்” என்ற பைபிள் வாசகத்தை அதில் அம்பேத்கர் பயன்படுத்தி இருப்பதை வாசித்தபோது கருத்தை வெளிப்படுத்துவதில் அவருக்கு இருக்கும் தெளிவை அறிந்து கொள்ள முடிந்தது.
பொதுவாக அம்பேத்கரின் வாழ்க்கையை வாசிக்கும்போது இந்தியாவில் தீண்டப்படாமல், ஒடுக்கப்பட்டவர்களில் இருந்து எழுந்த முதல் தலைவர் அவர்தான் என்பதை எளிதில் உணர முடியும். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் உடன் இருந்த தலைவர் காந்திக்கு அதனை ஏற்றுக் கொள்ள மனம் வாய்க்கவில்லை. அதனைக் காந்தி பல நேரங்களில் வெளிப்படையாகவும் பேசி உள்ளார்.
நாட்டின் விடுதலை போராட்டத்தைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலை என்பது மிகவும் அவசியமாக இருந்துள்ளது. இதனைக் காலத்தின் சாட்சியாக இப்போதும் சாதியின் பெயரால் நிகழும் அக்கிரமங்களால் நாம் உணர முடிகிறது. காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு அதிகாரத்தை பிரிட்டிஷ் முதலாளிகளிடம் இருந்து உள்நாட்டு முதலாளிகளுக்கு கைமாற்றிக் கொள்வதில்தான் அக்கறை இருந்திருக்கிறது. அம்பேத்கர் என்னும் தலைவரின் அரசியல் செயல்பாடுகள், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பெறும் விடுதலை மீதே கூடுதலாக இருந்துள்ளது. அம்பேத்கரின் வரலாற்றை முழுக்கப் படித்தவர்கள் இந்தியாவில் மக்களாட்சி அமைய அவர் எடுத்த முயற்சிகளையும் தெளிவுற அறிய முடியும். அவர்தான் கல்வி, சொத்து, பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமையை முதலில் வலியுறுத்தினார்.
அம்பேத்கர் இந்தியச் சமுகத்தில் சாதி எனும் கோரம் ஊடுருவி நிலைத்து இருப்பதை வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் அனுபவித்தவர். மன்னர்களின் புரவலர் நிதியால் வெளிநாட்டில் கல்வி கற்று வேலை கிடைத்தும் பம்பாய் நகரத்தில் மகர் இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் வீடு கிடைக்காமல் திரும்பியவர். எனவே பிரிட்டிஷார் மூலமாக அரசியல் சாசன உருவாக்கத்தின் போதே தலித் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை பெற்றுவிட எண்ணினார். ஆனால் காந்தி, ”இது குடும்ப பிரச்சனை. இதை அந்நியர் முன் ஏன் எழுப்ப வேண்டும்!?” என்றார். ”இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் பனிக்கட்டி போல. சுதந்திர சூரியனின் இதமான ஒளியில் கரைந்து விடும்” என்று கற்பித்துக் கொண்டு இருந்தார். ஆனால் காந்தியின் மீதும், அவர் வழிநடத்திய காங்கிரஸ் மீதும் அம்பேத்கருக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் அப்போது அவர்களின் சொல்லுக்கும், செயலுக்கும் பாரதூர இடைவெளி இருந்தது.
காந்தி, இந்திய நாட்டுக்கான சுதந்திரத்தை முன்னெடுத்து இருக்கலாம். உண்ணாவிரதம், அகிம்சா போரட்டங்களை அறிமுகம் செய்தவர். ஆனால் அவருக்கு நால்வர்ணக் கோட்பாட்டில் இருந்த நம்பிக்கையும், இந்து மதத்தின் மீது இருந்த ஆழமான நேசமும் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், சமூக விடுதலைக்கு பெரும் தடையாக இருந்தன என்பதே வரலாற்றில் பொதிந்திருக்கும் உண்மை. அம்பேத்கர் தனது செயல்பாடுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் காந்தியோடு சமர் புரிந்திருக்கிறார். மூன்று முறை நடைபெற்ற வட்டமேசை மாநாட்டுக் காட்சிகளும், அதன் பின்னணியில் காந்தி தந்த அழுத்தங்களும் வரலாற்றில் காந்தியின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறது.
பூனா ஒப்பந்தத்தின் போது “அம்பேத்கர் மட்டுமே தலித் மக்களின் பிரதிநிதி அல்ல. அவர்கள் மத்தியில் வாக்கு நடத்தினால் நானும் தேர்வு செய்யப்படுவேன்” என்று அவர் கூறியதாக ஒரு காட்சியைப் படிக்க நேரிட்டபோது எனக்கு, காந்தி எனும் மகாத்மாவுக்கு, உத்தம வில்லன் பட்டமும் பொருந்திப் போகுமோ என்று அதீதமாகவோ, நியாயமாகவோ நினைக்கத் தோன்றியது. அதே போல வட்ட மேசை முதல் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களாக இல்லை என்று காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வெளியில் இருந்து காந்தி அதை உற்றுக் கவனித்தவாறே இருந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அதில் கலந்து கொண்ட அம்பேத்கரை சந்திக்க விரும்புகிறார். காய்ச்சலில் இருந்த அம்பேத்கர் ஒரு சில நாள்கள் கழித்து, தானே காந்தியை சந்திக்கச் செல்கிறார். ஆனால் காந்தி அக்கறையின்மை, அலட்சியத்தோடு அந்தச் சந்திப்பில் நடந்து கொண்டது பல நூல்களில் பதிவாகியுள்ளது. அப்போதுதான் தலித் மக்களுக்கான தனித் தொகுதி முறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அம்பேத்கரிடம் வெளிப்படுத்துகிறார்.
அதன் தொடர்ச்சியாக காந்தி செயல்படுத்திய திட்டங்களால், தாழ்த்தப்பட்ட இயக்கங்களின் பல ஆண்டு முயற்சிகள் காரணமாக பெற இருந்த இரட்டை வாக்குரிமை தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது வரை தலித் அமைப்புகள் இது குறித்து பேசியவாறு மட்டுமே இருக்க முடிகிறது.
அம்பேத்கர் உயர் சாதி இந்துக்களுடனும், மறுபுறம் காந்தியோடும் போராடியபடியே இருந்துள்ளார். மகர் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம் இவற்றை எல்லாம் முன்னெடுக்கும் போது அம்பேத்கர், காந்தியின் அகிம்சா முறையை முன்மாதிரியாக்க கொண்டார். ஆனால் காந்தி, ஆலய நுழைவுப் போராட்டத்திலும் கூட முழு மனதோடு இயங்கவில்லை என்றே வரலாற்றுப் பக்கங்கள் கூறுகின்றன. அதிலும் கூட உயர்சாதி இந்துக்களுக்கு மனம் கோணாதவாறு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார். சாதிகளுக்கேற்ப தனி வரிசை, தலித்மக்கள் வழிபாடு முடித்தவுடன் ஆகம விதிகள்படி கோவிலை சுத்தம் செய்து கொள்வது போன்றவை எல்லாம் காந்தியால் பரிந்துரைக்கப்படவோ, ஏற்றுக்கொள்ளவோ செய்யப்பட்டுள்ளன. அம்பேத்கர் இவற்றை எல்லாம் அப்போது உணர்ந்தே காந்தியை எச்சரிக்கையோடு எதிர் கொள்கிறார். அதே நேரம் அம்பேத்கர், போரட்டங்களின் போது நடைமுறையோடு சில முடிவுகளை எடுக்கவும் தயங்கவில்லை. மகர் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் தீவிரமடைந்தவுடன் அந்த நகராட்சி மூன்று ஆண்டுகள் முன்பு, அந்தக் குளத்தில் அனைவரும் நீர் எடுக்கலாமென்று பிறப்பித்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற்றுக் கொள்கிறது. அம்பேத்கர் சளைக்காமல் நீதிமன்றத்தில் முறையிட்டு. உரிய உத்தரவை சில ஆண்டுகள் கழித்துப் பெற்றுள்ளார். சில பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தை நாடுவதே சிறந்தது என்று எண்ணியுள்ளார்.
வட்டமேசை மாநாட்டில் காந்தி, தனது முழு பலத்தையும் அம்பேத்கரிடம் செலுத்தி தனது கருத்தில் நிலை கொண்டுள்ளார். தலித் மக்களின் நீண்ட காலப் போரட்டத்தை இந்து சமயப் பார்வையில் அணுகி அதனில் தலித் இயக்கங்கள் வெற்றிகொள்ள இயலாதபடி செய்கிறார். முதல் வட்ட மேசையை புறக்கணிக்கிறார். ஆனால் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போது, அதில் கலந்து கொண்ட சிறுபான்மை, தலித் பிரதிநிதிகளை மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்றார். ”இங்கு வந்துள்ள அனைவரும் அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமே” என்று ஆவேசமாக பேசி உள்ளார். மேலும் இசுலாமியர்களிடம் சென்று, ”தலித் மக்களுக்கான தனித் தொகுதியை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் ஏன் இந்து சமுதாயத்தை பிளவுபடுத்த முனைகிறீர்கள்? இத்தகைய செயலை உங்கள் குரான் மதநூல் அனுமதிக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி தாழ்த்தப்பட்ட – இஸ்லாமியர் ஒற்றுமையை குலைக்க காந்தியே முயன்றுள்ளார் என்பதும் அதிர்ச்சியாக உள்ளது. இதைப் பற்றி எழுதும் போது எழுத்தாளர் அ. ஜெகநாதன், “காந்தியின் செயல்பாட்டை நாகரீக மனிதன் எவனும் சகித்து கொள்ள மாட்டான். இச்செயல்பாடு காந்திய சதியின் உச்சபட்சம் என்றே சொல்ல வேண்டும்” என்கிறார். ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் அம்பேத்கர் தன் நிலைபாட்டில் பின் வாங்காமல் தொடர்ந்து முன்னேறுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதியின் முக்கியத்துவத்தை தனது அரசியல் புரிதலோடு அணுகி கடக்க முயன்றுள்ளார். லண்டனில் பலரையும் நேரில் அணுகி தலித் மக்களுக்கான தனி பிரதிநிதித்துவத்தை, அதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இடையே அம்பேத்கர் உடன் இருந்த தலித் பிரதிநிதி ராஜாவை அவரிடமிருந்து திட்டமிட்டு பிரிக்கின்றனர். இதற்குப் பிறகும் காந்தி, வட்ட மேசை மாநாட்டில் தோல்வியைத் தழுவி இந்தியா திரும்புகிறார். பிரிட்டிஷ் அரசு காந்தியை இதில் பொருட்படுத்தவில்லை. இதனை அறிந்து கொண்ட காந்தி, உடனடியாக உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார். “தீண்டப்படாதவர்களுக்கு தனி பிரதிநிதித்துவம் தந்தால் தன் உயிரை தந்தேனும் எதிர்ப்பேன்” என்றார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக காந்தியால் எற்றுக்கொள்ள இயலவே இல்லை. தலித் மக்களுக்கு வழங்கப்படும் தனிபிரதிநிதித்துவம் மூலம் இந்து மதம் பிளவுப்பட்டு விடும் என்று காந்தி பதறினார்.

இந்த உண்ணாவிரத மிரட்டல் அம்பேத்கரை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. நாடு முழுவதும் செய்திகள் பரப்பப்படுகின்றன. கூட்டங்கள் நடத்தப்பட்டன. திட்டமிட்ட நாடகம் போலவே அனைத்தும் அரங்கேறியுள்ளன. காந்தி இங்கு வழக்கமான உத்தமராக காட்சியளிக்க, அம்பேத்கரை வில்லனாக முன்னிறுத்த முனைந்துள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த கவனமும் அம்பேத்கர் மீது விழுந்தது. “பொதுத் தொகுதிகளில் தலித் மக்களின் வாக்குகளை இந்துக்கள் பெறுவதன் மூலம் உறவு நிலைத்திருக்கும்” என்று காந்தி தரப்பில் நியாயப்படுத்தினார்கள். வேறு வழியின்றி அம்பேத்கர், பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ”காந்தியின் உண்ணாவிரதம் தலித் மக்களின் நலனுக்கானதல்ல. இந்து மதம் பிளவுப்படக்கூடாது என்பதே” என்ற கருத்தை அம்பேத்கர் நிலைப்படுத்திக் கொண்டார். “இரட்டை வாக்குரிமை” நூலில் “உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட காந்தி, அடுத்த இரண்டு நாள்களில் தனக்குப் பிரியமானப் பாடல்களை ரவீந்திரநாத் பாடக் கேட்டு மனம் மகிழ்ந்துள்ளார்” என்று எழுதப்பட்டுள்ளது. இதுபோன்று வரலாற்றில் பல அதிர்வுகளை உருவாக்கிய பூனா ஒப்பந்தத்தை அம்பேத்கர் 1935 ஆம் ஆண்டில் நிராகரித்தார்
காந்தியின் இந்தப் போக்குகள் நமக்கு புரிய வைப்பது எல்லாம், காந்தி சனாதனத்தை உறுதியாக நம்பி பின்பற்றிய ஒருவர். அதன் தாக்கத்துடன் சேர்த்து தலித் மக்களின் விடுதலையை அணுகும்போது அவர் ஒரு கலங்கலானப் பார்வையோடு இருக்கிறார். இந்து மத நலனையே முதன்மையாகப் பார்த்திருக்கிறார். அவருக்குத் தீண்டப்படாத மக்களின் மீது வெறும் கரிசனம் மட்டுமே இருந்தது. அதுதான் அவரை அடுத்தப் பிறப்பில் தீண்டப்படாத மக்களில் பிறந்து, அவர்களின் வேதனைகளை அவரது மறுபிறப்பில் பகிர்ந்து கொள்வேன் என்று சொல்லவைத்துள்ளது. வெறும் பேச்சளவிலேதான் அவரிடமும், அப்போது அவர் வழிநடத்திய காங்கிரசிடமும் தலித் மக்கள் முன்னேற்றம் சார்ந்த அக்கறைகள் இருந்துள்ளன. செயல் திட்டங்கள் ஏதுமிருந்திருக்கவில்லை. வகுத்த திட்டங்களும் ஆமை வேகத்தில் உயர் சாதியினர் கரிசனத்தை எதிர்பார்த்தபடியே இருந்துள்ளன.
வாழும் காலத்தில் அம்பேத்கர் தலித் மக்களின் அடிமை வாழ்க்கை நிலையை மேம்படுத்த எண்ணினார். அதற்காக அவர்கள் அரசியல் அதிகாரத்தை பெற வேண்டியது அவசியம் என்று கருதினார். இரட்டை வாக்குரிமை, மகர் குளத்தில் நீர் எடுக்கும் உரிமை, ஆலய நுழைவுப் போராட்டம், தலித் மக்களுக்கும் ஏனையோருக்கும் நிபந்தனை இன்றி வாக்களிக்கும் உரிமை, அரசியல் சாசனம் வடிவமைத்தல் என்று எல்லாவற்றிலும் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் சீர்திருத்தத்தை அனுமதிக்காத இந்து மதத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். தன் வாழ்நாளில் கடமைப்பட்டு இருந்த புத்தரை பின்பற்றப் போவதாக அறிவித்தார். அதனோடு இந்துவாக சாகமாட்டேன் என்ற உறுதியின்படி புத்த மதத்திற்கும் மாறினார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து போராடிக் கல்வியைப் பெற்று, தலித் சமூக விடுதலைக்காக அர்ப்பணித்து வாழ்ந்த அம்பேத்கரை காந்தி என்னும் சனாதனவாதியால் தலித் மக்களின் தலைவராக கூட ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதே காந்தி 1934 க்கு பிறகு அம்பேத்கரைப் புகழத் தொடங்கினார். காந்தியிடம் போற்றத்தக்க பல அம்சங்கள் இருந்தன. அவரின் தலித் நலன் சார்ந்த செயல்பாடுகளை வட்டமேசை மாநாட்டு நிகழ்வுகளை மட்டும் வைத்து அளவிடக்கூடாது என்றாலும், பெரிதாகப் பிற தலித் மக்கள் நலன்சார் நடவடிக்கைகளிலும் அவர் திருப்தியை விளைவிக்கவில்லை என்பதே நிதர்சனம். ஆனால் அம்பேத்கரின் உத்வேகமிக்க செயல்பாடுகளுக்கு காந்தி ஊக்கியாக எதிர்நிலையில் நின்றும் இருந்துள்ளார் என்பதை மறுக்க இயலாது.
எந்த மதம் பிளவுபடக் கூடாது என்று காந்தி பரிதவித்தாரோ அதே சனாதனவாதிகளால் காந்தி கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பிறகும் சனாதனவாதிகள் ஓயவில்லை. காந்தியை ஏற்றுக் கொள்வது போல் நாடகமாடி அவரை தூய்மையின் தூதுவராக மட்டும் வைத்து, அவரின் மதசார்பற்ற அறைகூவல்களை மறக்கடிக்க தினமும் முயன்று வருகின்றனர். அதையும் மீறி காந்தி சத்தியத்தின் வடிவமாக மக்களின் மனதில் உள்ளார்.
அம்பேத்கரும் மாபெரும் தலைவராக காலத்தில் நிலைபெற்றுள்ளார். இப்போதும் சனாதனவாதிகள் அம்பேத்கரைப் பெயராகவும் எண்ணி அச்சமுறுகின்றனர். இப்போது எனக்கு இரண்டு கேள்விகள் முழுக்க விசித்திரமாக எழுகின்றன. காந்தி, அவரே விரும்பியபடி மறுபிறப்பில் தலித்தாகப் பிறந்து கொடுமைகளை உணர்ந்திருப்பாரா? இப்போதேனும் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பாரா?
***
ஸ்டாலின் சரவணன் : தமிழ்க்கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கியச் செயற்பாட்டாளர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். “2000 க்குப் பிறகான இந்திய சினிமாவில் பெண்களின் வாழ்வியல்” என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார். தேவதைகளின் வீடு, ஆரஞ்சு மணக்கும் பசி, ரொட்டிகளை விளைவிப்பவன் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் : stalinsaravanan@gmail.com
