கிருஷ்ணமூர்த்தி
இந்திய மக்கள் வர்க்கம், சாதி, மதம், பொருளாதாரம் ஆகிய சூழல்களால் பிளவுபட்டு இருக்கின்றனர். இந்த வகைமையினாலேயே அதிகரத்தை கையில் வைத்திருப்பவர்களால் சூழ்ச்சி செய்வது எளிதாகிறது. ஒரு சாரார் வளர்ந்து மேலேறி செல்வதும் மற்றொரு சாரார் பாதிப்பிற்குள்ளாவதும் இச்சமூகத்தின் இயல்பாகிறது. இந்த மக்களை கருத்தியல் ரீதியாக ஒன்றிணைப்பது எளிதான காரியமன்று. அதை நடைமுறையில் இருவர் சாத்தியப்படுத்தினர். ஒருவர் காந்தி மற்றொருவர் அம்பேத்கர். பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் சுய ஒழுக்கத்தை சீர் செய்வதன் வழியே சமூக அகந்தையை ஒழிக்க இயலும் என்று காந்தி மக்களிடம் பேசினார். மற்றொரு புறம் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை காலத்திற்கும் தீர்ப்பதற்காக சட்டமாக மாற்றியவர் அம்பேத்கர். இவர்களே இந்தியாவின் இரு முகங்களாக இருக்கின்றனர். பொதுவுடைமை சமுதாயத்திற்கு சட்ட ரீதியான விதிமுறைகளும், சுய ஒழுக்கமும் இன்றியமையாததாகிறது. இரண்டில் எது சறுக்கும்போதும் யாரேனும் ஒருவரால் இவர்கள் நினைவுகூறப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சமூக உரையாடலில் இவர்களுக்கான இடம் என்றும் மங்கப்போவதில்லை.
காந்திய சிறப்பிதழை வடிவமைக்கும்போதே அம்பேத்கரையும் தீர்மானம் செய்தோம். இருவரும் குறிப்பிட்ட விஷயங்களில் குவிமையம் கொண்டவர்கள் அல்ல. மாறாக கருத்தியல் ரீதியான பலதரப்பட்ட விஷயங்களை தீர்க்கமாக தர்க்க நியாயங்களோடு அணுகியவர்கள். அவர்களின் கருத்தியல்களை நவீன பார்வையோடு முன்வைப்பதற்கு சிறு முயற்சி செய்தோம்.மேலும் காந்தி மற்றும் அம்பேத்கரை முரணியக்கமாக பார்க்காமல், இணைகோடாக காணும் முயற்சியாகவே இதை முன்னெடுத்தோம். அம்பேத்கரின் கருத்தியல்களை ஆழங்கால் தொட்டு எழுதியிருக்கும் எழுத்தாளர்கள் இந்த இதழை வாசிப்பில் ஒரு கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள்.
*
யாவரும் மின்னிதழின் மீள்வருகை முதலே கவிதைக்கான பகுதிக்காக நிறைய முயற்சித்தோம். அனைத்தும் கை நழுவும் தருணத்தில் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் ஈடுபாடு புதிய நிறத்தை இதழுக்கு அளிக்கிறது. சமகால கவிஞர்களின் கவிதை உலகை கேள்விகளின் வழியே செறிவான நேர்காணலாக ஆக்க விழைவதே அவருடைய நோக்கம். அதன் முதல்படியாக கவிஞர் மதாரின் பதில்கள் கவிதைகளின் பல கதவுகளை, சந்தேகங்களை நமக்கு தீர்த்துவைக்கிறது. உடன் வெளியாகும் ஹேமி கிருஷ் மற்றும் கணேஷ் பாபுவின் நேர்காணல்கள் சமகால கதை உலகின் பரப்பை மேலும் விரிவு செய்கிறது. சமகால படைப்பாளர்கள் ஆளுமைகளாக மாறும் தருணமாக நேர்காணல் விரிவடைகிறது.
*
காந்தி சிறப்பிதழை மேற்கொள்ளும்போது எழுத்தாளர் அரவிந்தன் நிறைய யோசனைகளையும், எந்தெந்த எழுத்தாளர்களிடம் கட்டுரை கேட்கலாம் என்று ஆலோசனைக் கூறினார். அவை சிறப்பாகவே வெளியானது. அம்பேத்கர் இதழுக்கு அவரை அணுகவில்லை. இப்போது அணுகும் இடத்திலிருந்து சற்று விலகியே இருக்கிறார். இருப்பினும் அவர் கொடுத்த ஆலோசனைகளை என்றும் யாவரும் மின்னிதழ் அதன் செயல்பாடுகளில் சுமந்து செல்லும். அவருக்கான அஞ்சலி கட்டுரை இடம்பெறச் செய்வதை மின்னிதழின் மாண்பாகவே எண்ணுகிறோம். மனதை நெகிழச் செய்யும் அஞ்சலிக் கட்டுரை நல்கிய லாவண்யா சுந்தரராஜனுக்கு மீண்டும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.
*
சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை, சிறப்புப் பகுதிக்கான கட்டுரைகள் ஆகியவற்றைப் பங்களித்த அனைத்து படைப்பாளருக்கும் எங்கள் அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம். ஒவ்வொரு படைப்பின் பங்களிப்பும் அடுத்த இதழுக்கான செயலூக்கியாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
