தூயன்
”மனித வழிபாட்டை ரசிக்க முடியாத ஜனநாயகவாதி நான். அது ஜனநாயகத்தின் பிறழ்ச்சி. ஒரு முறை ஒரு தலைவர் ஒரு தீர்க்கதரிசியின் நிலைக்கு கொண்டு போகப்பட்டுவிட்டால், அவர் தீர்க்கதரிசி செய்வது போலவே தன் ஆதரவாளர்களுக்கு செய்திகள் அளிக்க வேண்டும்”- அம்பேத்கர்
கொச்சி பினாலே கலைக்கண்காட்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பேசப்பட்ட, டாம் வட்டக்குழியின் காந்திச் சுடப்பட்டு வீழ்கிற ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஆபத்தான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில்தான் அம்பேத்கரைப் பற்றிய கேலிச் சித்திரங்களின் தொகுப்பான “நகைக்கத்தக்கதல்ல” நூலை நாம் அணுக வேண்டியிருக்கிறது. தமிழில் இந்த நூலை சா. தேவதாஸ் மொழிபெயர்த்திருக்கிறார்.
உலக அளவில் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் கிறிஸ்து என்பதும் இந்தியாவில் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் காந்தியென்பது புழக்கத்திலுள்ள சொல்லாடல். அதாவது, இருவரையும் கருத்துருவாக்கமாக விமர்சித்தாலும் காந்தி உருவக் கேலியாக நிறையவே சித்திரப்படுத்தப்பட்டுள்ளார். காந்தியின் உருவம் குழந்தைகளுக்கு இயல்பிலேயே எளிதாக கைவந்து விடுகிறது. காந்தியின் சிரிப்பு, கண்ணாடி, உடல் வாகு, கைத்தடி என ஒவ்வொன்றையும் தனித்தனியாக கிறுக்கலாக வரைந்தாலே அதற்குப் பின்னால் காந்தி ஒளிந்திருப்பது தெரியும். பள்ளிகளில் குழந்தைகள் வரைகிற முதல் சுதந்திரப் போராட்டத் தலைவர் காந்தியாகத்தான் இருப்பார். இந்தக் கிறுக்கல்கள் எப்போதுமே விளையாட்டுத்தனத்தோடு கூடிய குழந்தைமையைக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். கூடவே, இந்தக் கிறுக்கல்கள் காந்தி என்கிற பௌதீக உருவத்தை வரைகிற அதே சமயம் காந்தியின் கருத்துருவாக்கத்தையும் (காந்தியம்) கொண்டிருக்கிறது. அதாவது. காந்தியின் சித்திரங்கள் ஒவ்வொன்றும், குனிந்து அள்ளுவது (உப்பு சத்யாகிரகம்), ராட்டையோடு அமர்ந்திருப்பது (சுதேசி இயக்கம்), மூன்று குரங்கு பொம்மைகள் (தீமையின் குறியீடு) எனக் காந்தியத்தை அழுத்தமாக வெளிப்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்திய அளவுக்கு அம்பேத்கரின் உருவச் சித்திரங்கள் அம்பேத்கரியத்தில் செல்வாக்கு செலுத்தியதா என்று நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அம்பேத்கரின் உருவச்சித்திரங்கள் (பத்திரிக்கை மற்றும் இதழ்களில் தீட்டப்பட்ட கேலிச்சித்திரங்களுக்கு இதில் பெரும் பங்கு உண்டு) எவ்வகையில் அவரது சிந்தனைகளை மக்கள் மத்தியில் மற்றமைகளின் விமர்சனங்களோடு சேர்ந்தே உரையாடின என்பதை சியாம சுந்தரின் ”நதைக்கத்தக்கதல்ல” நூலில் அவதானிக்க முடிகிறது.
ஊடக அரசியலில் பத்திரிக்கை, இதழ்கள், துண்டுப் பிரசுரங்கள் உருவானக் காலம்தொட்டே கேலிசித்திரங்கள் இடம் பெறத் தொடங்கிவிட்டன. பெஞ்சமின் ஃபிராங்ளின் முதன் முதலில் 1754 ல் பெனிசுலெவேனியா கெஸட்டில் அமெரிக்கக் காலனியத்தை ஒன்றுபடுத்துவதற்காக பிரஞ்சு மற்றும் பூர்வக்குடி இந்திய நிலங்களுக்கெதிராக join or Die என்கிற ஆணையோடு !துண்டுத் துண்டான பாம்பு உடல்களை வரைந்தார். அதாவது, வெட்டுப்பட்டப் பாம்பின் உடல்கள் மறுபடியும் இணைந்துவிடும் என்கிற நம்பிக்கை அது. ஒன்றுபட்ட அமெரிக்க ஒரு பாம்பைப் போல இருக்குமென்கிற குறியீடும் அதில் பொருள்படும். ஹெர்பர்ட் பிளாக் என்பவர் அமெரிக்க செனட்டர் மெக்கார்த்தியின் கம்யூனிச எதிர்பை விமர்சித்து தீட்டிய புகழ் பெற்ற கேலிச்சித்திரங்கள், ஐம்பதுகளில் அமெரிக்க அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிற்று. Harper weekly, Dayton Daily, Chicago Daily News போன்ற பத்திரிக்கைகள் கேலிச்சித்திரங்களின் வழியாக அமெரிக்காவின் பெரிய அரசியல் கதையாடலையே ஏற்படுத்தின. உண்மையில் அமெரிக்காவின் உள்நாட்டுப் போர்தான் அத்தகைய கேலிச்சித்திரங்களுக்கு பெரும் தீணியாக அமைந்தது. அமெரிக்காவின் அரசியல் கேலிச்சித்திரங்கள்தான் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் தன்னுடைய ஆளுமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்தது. ஸ்டீபன் ஹெஸ் தொகுத்த Drawn and Quartered the history of Americal Political cartoon என்கிற புத்தகம்தான் சியாம சுந்தர் தொகுத்திருக்கும் அம்பேத்கரின் கேலிச்சித்திரங்கள் நூலுக்கு நெருக்கமாகக் கொண்டுவரக் கூடியதாக இருக்குமென சுந்தர் இந்நூலில் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் அரசியல் கேலிச்சித்திரங்களை அதிகமாக பிரபலப்படுத்தியவர் சங்கர் பிள்ளை. சங்கரின் கேலிச்சித்திரங்களுக்கென்றே பெரும் வாசகப்பரப்பு உண்டு என்பதை நாம் அறிய முடியும். தில்லியிலுள்ள சங்கரின் டால் மியூசியம் அவரது காலத்திலேயே மிகவும் பிரபலமான கலை அடையாளமாக மாறிற்று. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கேலிச்சித்திரங்கள் அரசியலில் பேசு பொருளாக இருந்தன. சங்கர், என்வெர் அகமத், பிரேஷ்வர், உம்மன் போன்றவர்கள் பிரபலமான கேலிச்சித்திரக்காரர்கள். சங்கரும் அகமெத்தும் ஆயிரத்து தொல்லாயிரத்து முப்பதுகளிலிருந்தே அரசியல் கருத்துக்களை நிறைய இதழ்களில் வரைந்தவர்கள்.
அரசியல் கேலிச்சித்திரங்களுக்கான பொதுவிதியென்று ஏதும் உள்ளதா? அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? கேலிச்சித்திரங்கள் உண்டாக்கும் உரையாடல் என்ன? இந்தக் கேள்விகள் அறிவார்ந்த புலங்களில் ஆராயப்பட்டாலும் கேலிச்சித்திரங்களுக்குரிய இயல்பான பண்பு அது சுயவிமர்சனத்தை அளிக்கிறது என்பது மட்டுமே. ஒரு கருத்தாக்கம் பொது வெளியில் எத்தகைய உரையாடலை உண்டாக்குகிறது என்பதன் பௌதீக வடிவமே கேலிச்சித்திரங்கள். பத்திரிக்கைகளில் வாசிக்கும் அத்தனைபேரும் கேலிச்சித்திரத்தை ரசிக்கக் கூடியவர்கள். ஒருவித எள்ளலான தொனியுடன் சிந்திக்கும் ஆற்றலைச் சித்திரங்கள் கொண்டிருப்பது உண்டு. இன்னும் சொல்லப்போனால் கைகொட்டி சிரிக்குமளவு அது வாசகனை ஆசுவாசப்படுத்திவிடும். கேலிச்சித்திரங்களின் படைப்பாக்கக் கலையின் தளம் அரசியல் பத்திரிக்கை, மாத இதழ்கள் மட்டுமே. அதனால் சித்திரங்களின் கதையாடல்களுக்கு கச்சாப் பொருள் அன்றாட அரசியல் மட்டும்தான். தொலைக்காட்சி, அலைபேசி, இணையத்தளம் போன்ற தொழில்நுட்பங்களின் ஆக்கிரமிப்பு இல்லாத இந்தியாவின் அன்றையக் காலக்கட்டத்தில் பத்திரிக்கைகள்தான் அன்றாட அரசியலைத் தெரிந்துகொள்ள ஒரு வழி. காலனியத்திலிருந்து விடுபட்டு புதிய அரசை உருவாக்குவதற்கான பெரும் சிக்கலில் இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு நாளும் சட்ட வரைவுகளை வாசிப்பதும் திருத்தங்கள் செய்வதுமாக சட்ட நடவடிக்கைகளுக்கு விமர்சனங்களை ஏற்பதுமாக அரசியல் தலைவர்கள் அல்லாட்டங்கள் அன்றைக்கு பெரும் கதைக்களமாக கேலிச்சித்திரக்காரர்களுக்கு அமைந்திருக்கிறது.
”நகைக்கத்தக்கதல்ல” நூல் அம்பேத்கரின் அரசியல் வாழ்வை கேலிச்சித்திரங்களின் ஊடாக நாம் வாசிக்கும் கண்ணோட்டத்தை அளிக்கிறது. அம்பேத்கரைப் பற்றி எழுதப்பட்ட அத்தனை நூல்களும் ஏன் சவீதா அம்பேர்கர் எழுதிய நூல் உட்பட எல்லாம் ஒருவித வாசிப்பை முன்னெடுக்கிறபோது நகைக்கத்தக்கதல்ல அவரைப் பற்றிய வேறொரு கதையாடலை நமக்கு அளிக்கிறது. மற்ற நூல்களையும்போலவே நகைக்கத்தக்கதல்ல நூலும் ஒரு கதையாசிரியரின் கதைசொல்லலில்தான் சொல்லப்படுகிறது. அந்தக் கதைசொல்லி பெரும்பாலும் கேலிச்சித்திரக்காரர் சங்கராக (சில இடங்களில் என்வெர் அகமெத்) இருக்கிறார். மற்ற நூலுக்கும் இதற்குமுள்ள வித்தியாசம் இந்தக் கதையாடல் அம்பேத்கரை விமர்சனப் பூர்வமாக அணுகுவதற்குப் பதிலாக அவரை எவ்வாறு காட்ட முயற்சிக்கிறது என்பதுதான் இந்த நூல்.
அம்பேத்கரின் பொது வாழ்வின் 1932 லிருந்து 1956 வரையுள்ள காலக்கட்டத்தை இந்நூல் விவரிக்கிறது. இப்புத்தகம் வழியாக அம்பேத்கரின் இருபத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்வை சித்திரங்களின் ஊடாக நாம் தெரிந்துகொள்கிறோம். ஆங்கில பத்திரிக்கைகளில் இடம் பெற்ற அவரது 122 கேலிச்சித்திரங்களை காலவரிசைப்படி தொகுத்திருக்கிறார் இந்நூலாசிரியர் உண்ணாமதி சியாம சுந்தர். அமெரிக்க அரசியலின் கேலிச்சித்திரங்களின் தொகுப்பான Drawn & Quartered மற்றும் ரீது கெய்ரொலோ கந்தூரி எழுதிய Caricaturing Culture in India ஆகிய நூல்கள் சியாம சுந்தருக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கேலிச்சித்திரத்திற்கும் அது வெளியான ஆண்டுக்கு முன்னும் பின்னுமான அரசியல் வரலாற்றை விளக்கமாக அளிப்பதோடு அச்சித்திரத்தை எவ்வாறு புரிந்துகொள்வதென்கிற தனது பார்வையையும் வைக்கிறார். சியாம சுந்தரின் உழைப்பு அபாரமானது.
2012 ல் NCERT வெளியிட்ட பதினோராம் வகுப்பு, சமூக அறிவியல் பாடநூலில் சர்ச்சைக்கு இடமான அம்பேத்கர் கேலிச்சித்திரம்தான் இந்த நூல் தொகுப்பதற்கான அடிப்படைக் கேள்வியை சியாம சுந்தரிடம் எழுப்புகிறது. அன்றைய மத்திய அமைச்சர் கபில் சிபில் அதுகுறித்து மன்னிப்புக் கேட்டிருந்தாலும் லோக்சபாவில் பெரிய விவாதமாக அது மாறியது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் அம்பேத்கர் மந்தமாக செயல்படுவதாகவும் (நத்தைமீது அமர்ந்திருக்கிறார்) நேரு அவரை சாட்டைக் கொண்டு அடித்து வேகப்படுத்துவதாகவும் அச்சித்திரத்தை 1949ல் சங்கர் வீக்லியில் சங்கர்பிள்ளை வரைந்திருந்தார். அச்சித்திரம் பள்ளிப் பாடப் பகுதியில் இடம் பெற்றபோது உணர்வுபூர்வமான ஒரு நடுக்கத்தை எல்லோரையும்போலவே சியாம சுந்தரும் அடைந்திருக்கிறார். அதுதான் சியாம சுந்த அம்பேத்கரைப் பற்றிய மற்ற கேலிச்சித்திரங்களை தேட உந்தியுள்ளது. இந்தக் கேலிச்சித்திரங்கள் வழியே அம்பேத்கரின் சிந்தனைகள், கொள்கைகள் இவற்றுக்கும் சமூதாயத்திற்குமான உறவை, மற்றவர்களின் பார்வைகளின் வழியே நமக்குக் கடத்துகிறது. அதாவது, ஒடுக்கப்பட்ட சமூதாயத்தின் எதிர்காலத்திற்கான லட்சியங்களை முன்வைக்கும் அவரது கருத்துருவாக்கங்களை விமர்சிக்கிற சித்திரங்கள் இவை.
தனித் தொகுதிகள் கேட்டு சிறுபான்மையினத் தலைவர்களின் கோரிக்கைகளை விமர்சித்து இந்துஸ்தான் டைம்ஸில் சங்கர், பாராளுமன்றம் பற்றி எரிகிறபோது நான்கு தலைவர்களும் வயலின் வாசிப்பதுபோன்ற ஒரு சித்திரத்தை வெளியிட்டார். 1936 எவலோ மாநாட்டில் பேசிய அம்பேத்கரின் உரை மிகவும் முக்கியமானது. இதில் இந்துமதம் எனும் நோயிலிருந்து தான் குணப்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். இந்துமதத்தின் முன்னனித் தலைவர்கள் இத்தீர்மாணத்தை விமர்சித்தனர். பிற சிறுபான்மை மதங்கள் தம்மோடு அம்பேத்கரை இணைக்கத் துடிப்பதாக , சீக்கியம், இஸ்லாம், கிறிஸ்தவம் அடையாளத்தோடு சிலர் கையில் அறுவை சிகிச்சைக் கத்தியும் ஊசியொடு மருத்துவமனையிலிருக்கும் அம்பேத்கரைச் சுற்றி வாய் முழுக்க சிரிப்போடு இருப்பதாக சங்கர் வெளியிட்டார். அம்பேத்கரின் எவலோ மாநட்டுப் பிரகடனத்துக்குப் பிறகு பூனா ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் உரிமைகளை இழப்பதாக அது இருக்காது என்று அம்பேத்கரின் உரை நிறைய விவாதங்களை உண்டாக்கியது. அதாவது, தனித் தொகுதிகள் இந்துத் தொகுதியிலிருந்து உருவாக்கப்பட்டன என்னும் அனுமானம் தவறானது என அம்பேத்கரின் பதிலை சங்கர் தனது அடுத்த இதழில், அம்பேத்கரை முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போடுகிறவராகவும் அதை சமையல் கற்றத் தேர்ந்த ஒரு பெண்மணி குழப்பமாகப் பார்ப்பதாகவும் சித்திரம் தீட்டினார்.
பெரும்பாலும் சங்கரின் கேலிச்சித்திரங்கள் அம்பேத்கரின் கடந்தக் காலத்தின் சம்பவங்களோடு ஒரு முடிச்சிட்டே வெளியாகியிருக்கின்றன. அதாவது, ”அன்றைக்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்கிற தொனியில். உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் லின்லித்தோ பிரிவு தலைமையிலான பிரநிதித்துவத்தில் இணைந்த அம்பேத்கரின் செயல்பாட்டை, “ஆலய நுழைவு உறுதி” என்கிற தலைப்போடு ஒரு பிராமணன் அம்பேத்கரை கையை நீட்டி அனுமதிப்பதாக சங்கர் வெளியிட்டார். அதாவது, அம்பேத்கர் போராடி வந்த ஆலய நுழைவு இனி சாத்தியம் என்பதாக குத்திக் காட்டுவதாகவோ அல்லது இந்தப் பிரதிநிதித்துவத்தில் நுழைவதுதான் ஆலய நுழைவு என்பதாகவோ பொருள்படும்படியான சித்திரம் அது. உதாரணத்திற்கு இன்னொரு சம்பவம். 1943ல் அரசாங்க நூலகங்கள் சார்பில் “யுத்தகாலத்தில் நூலகங்கள்”எனும் தலைப்பில் அம்பேத்கர் பேசுகிறார். “நமது புத்தக சேகரிப்பும் தயாரிப்பும் இன்னும் புராதனக் காலத்திலேயே இருக்கிறது. சங்கர் இந்தக் கருத்துக்கு இந்துஸ்தான் டைம்ஸில் சித்திரம் வரைகிறார் எப்படியென்றால் அம்பேத்கரோடு சில சிறுபான்மையினத் தலைவர்கள் மரத்துக்கடியில் அமர்ந்திருப்பதாகவும் வைஸிராய் லின்லித்தோ ஆசிரியரைப் போல குருகுலக் கல்வி வடிவத்தில் இருக்கிறது.
கேலிச்சித்திரங்கள் செழித்து வளர்ந்தக் காலம் – இந்திய அரசமைப்பு சட்ட வரைவு
அரசின் தளங்களில் அன்றைக்கு அம்பேத்கரின் ஒவ்வொரு அசைவுக்கும் எல்லா வழிகளிலும் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன. சட்ட மசோதாவில் நிறைய திருத்தங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. அம்பேத்கர் ஒவ்வொரு முறையும் மசோதாவை வாசிப்பதும் விமர்சனங்களைப் பெறுவதும் விமர்சனப்பூர்வமாக அணுக முடியாமல் தடுமாறுவதுமாக நிறைய தொந்தரவுகளுக்கு உள்ளானார். 1953 ல் அவரே இந்தச் சட்டம் அரசியல் ஜனநாயகமற்ற சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்கள் இதை உடைத்தெறியும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்றார். கிராம சமுதாயங்கள் பின்தங்கிய நிலையில் இந்திய நாகரிகத்திற்கு வெளியே இருப்பதாக அம்பேத்கர் எப்போதும் விமர்சித்து வந்தவர். “பஞ்சாயத்து என்பது சாதிக்குழு தவிர வேறொன்றுமில்லை”. என்வெர் அகமத் இதை நேஷனர் ஸெரால்டில் அம்பேத்கர் பூணூல் அணிந்து கிராம மக்களை தூர நிறுத்துவதுபோல “புதிய தீண்டாமை” என்கிற தலைப்புடன் வெளியிட்டார். அம்பேத்கர் சட்டவரைவின் முதல் வாசிப்பை சட்டசபையில் உரையாற்றி பல்வேறு உடன்படுகிற முரண்படுகிற கருத்துக்களை கேட்டறிந்ததற்கு, சங்கர், தொன்மையல்லா எட்டுக் கைகள் கொண்ட யட்சியொன்று அரைநிர்வாணத்துடன் ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு சட்ட வரைவுகளை வைத்துக்கொண்டு நிற்பதாகவும் அம்பேத்கர் அதனருகே இருப்பதுபோல சித்திரம் வெளியிட்டார்.
இந்து சட்ட மசோதா வரைவின் ஒவ்வொரு திருத்தங்களுக்கும் அம்பேத்கர் வாசிக்கிறபோதெல்லாம் தினசரிகளில் கேலிச்சித்திரங்காரர்களின் படைப்பூக்கம் செழிப்பாக இருந்துள்ளது. சங்கர், என்வெர் அகமத், பிரேஷ்வர் இந்த மூவரும் மாற்றி மாற்றி தம் திறமைகளை காட்டியிருக்க வேண்டும். இந்து சட்ட மசோதாவின் சாராம்சத்தில் ஆன்மிகத் தன்மையுள்ள இந்து சமூகத்தின் கொள்கைகளை அறியாதவர் எழுதியிருக்கிறாரென பழமைவாதியான கார்பத்ரியின் பேச்சிற்கு அம்பேத்கர் பதில் கொடுத்ததற்கு இந்தச் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி கார்பத்ரியின் பேச்சிற்கு அழுத்தம் கொடுப்பதுபோல சங்கர், ஒரு பிராமணன் கையில் கம்புடன் நடராஜரைப் போல கால் தூக்கி நின்று அம்பேத்கரை நோக்கி விரல் உயர்த்துவதுபோல சித்திரம் தீட்டியிருந்தார். நேஷனர் ஸெரால்டில் பிரேஷ்வர், அம்பேத்கரை கையில் ஸ்டெதஸ்கோபுடன் மருத்துவரைப்போல வரைந்து, அவரை நோக்கி இந்து சட்ட மசோதா என்கிற நோயாளி படுக்கைமீது நின்று அடிக்கப் பாய்வது போலக் காட்டியிருந்தார். இந்தஸ்தான் டைம்ஸில் என்வெர் அகமத், சட்ட வரைவுக்கான காலம் போய்க்கொண்டிருப்பதை, அம்பேத்கரை பெட்டை கோழியாக வரைந்து பெரிய முட்டை மீது அது நாட்களைத்தாண்டியும் அடைக்காத்துக்கொண்டிருப்பதாக காட்டினார். ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு வரைவை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்புக் கோரியதை, உடைந்து போன நொண்டி மாட்டு வண்டியில் ராஜேந்திர பிரசாத் அம்பேத்கருடன் பயணிப்பதாக அகமதுவும் யாரும் உண்ண முடியாத கூழ் ஒன்றை அம்பேத்கர் கிண்டுவதாக சங்கரும் பெரிய இரும்பை அடித்து உடைக்கிற கொல்லனாக என நிறைய கேலிச்சித்திரங்கள் குறுகிய கால இடைவெளிக்குள் வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கின்றன. இதன் உச்சம்தான் சங்கர் தனது சங்கர் வீக்லியில் வெளியிட்ட அம்பேத்கர் நத்தையில் பயணிப்பதாக, அவரை நேரு சாட்டையால் விளாசுவதாக இடம் பெற்ற கேலிச்சித்திரம்.
அதீதக் கற்பனையும் கதைப்பின்புலங்களையும் கொண்ட சங்கரின் கேலிச்சித்திரங்கள்
இந்நூலின் கேலிச்சித்திரங்களில் பெரும்பாலானவை சங்கர் தீட்டியவைதான். ஏற்கனவே சொன்னதுபோல அன்றைக்குச் சங்கரின் கேலிச்சித்திரங்களுக்கு பெரும் வாசகப்பரப்பு உண்டு. இந்திய அரசியலமைப்புமீதான அம்பேத்கரின் விவாதங்கள் உச்சத்திலிருந்தபோது அவருடன் உரையாடுவதில் (விமர்சிப்பதில்) சங்கர் போன்றவர்கள் உற்சாகத்தைக் கொண்டிருந்தார்களென தனஞ்செய் கிர் எழுதுகிறார். சங்கர் அறிவார்த்தமானவராகவும் அம்பேத்கரின் செயல்பாடுகளின்மீது பொறாமை சார்ந்த அபிமானம் கொண்டிருந்தாரென சியாம சுந்தர் இந்நூலின் முன்னுரையில் சொல்கிறார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள மற்ற கேலிச்சித்திரக்காரர்களைவிட (என்வெர் அகமத், பிரேஷ்வர், உம்மன்) சங்கரின் சித்திரங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வெறுப்பையும் சிறுமையையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இருந்தாலும் சங்கர் பற்றிய சியாம சுந்தரின் முடிவு சரியானதா எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். சங்கர் இந்துஸ்தான் டைம்ஸில்தான் தனது கேலிச்சித்திரங்களை முதன் முதலில் தொடங்குகிறார். சங்கரின் சித்திரங்களுக்கு நேரு மிகப்பெரிய விசிறி. நேரு இயல்பிலேயே இலக்கிய வாசகர் பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சிறையிலிருந்தபோது தனது மகள் இந்திராகாந்திக்கு எழுதியக் கடிதம் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கேலிச்சித்திரக்காரர் லான்காஸ்டரின் pocket cartoon புத்தகங்களை பரிந்துரைத்திருக்கிறார். கூடவே இந்துஸ்தான் டைம்ஸில் வெளியாகும் சங்கரின் சித்திரங்களையும் குறிப்பிடுகிறார். சங்கர் வைஸிராய் லின்லித்தோவை பத்ரகாளியாக சித்தரித்தப் படம் பிரபலாமாகியிருந்த சமயம். காந்தியும் சங்கரின் கேலிச்சித்திரங்கள் வழியாக தனது சகாக்களின் நடத்தைகளை எவ்வாறு பொருள் கொள்ளப்படுகின்றன என்று பார்ப்பதும் உண்டு என நேரு குறிப்பிடுகிறார். சங்கர், நேருவை விமர்சித்து எள்ளலும் கேலியுமாக தீட்டிய சித்திரங்களை நேரு மனமார பாராட்டியதாக இந்திராகாந்தி, நேருவின் கேலிச்சித்திரங்களின் தொகுப்பான Don’t spare me shankar நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். காந்தியைப் பற்றிய 112 கேலிச்சித்திரங்களை நவஜீவன் டிரஸ்ட் தொகுத்திருக்கிறது. அம்பேத்கரின் இந்நூலைப்போன்றே இதிலும் பல்வேறு தினசரிகளில் பிரசுரமான வெவ்வேறு கேலிச்சித்திரக்காரர்களின் படைப்புகள் உள்ளன. சங்கரைப் பற்றிய நூலைத் தொகுத்த அவரது மருமகள் ”சங்கர் தனது படைப்புகளுக்கு நீதிபதியாக இருந்தார். பெரும்பாலும் அவரது சித்திரங்களை அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் அது வெளிவந்த பின்னே பார்ப்பார்” என்கிறார். இந்துஸ்தான் டைம்ஸின் நிர்வாகத்தில் தேவதாஸ் காந்தி பொறுப்பிலிருந்தபோது, ராஜகோபாலச்சாரியைப் பற்றிய ஒரு கேலிச்சித்திரத்தில் இருவருக்கும் விமர்சனம் எழ, சங்கர அதிலிருந்து வெளியேறி தனியாக சங்கர்ஸ் வீக்லியை தொடங்கிவிட்டார். நேருதான் அதைத் தொடங்கி வைத்ததாகச் சொல்லப்படுகிறது. சங்கர்ஸ் வீக்லியில் அபு ஆப்ரஹாம் போன்றவர்கள் பணியாற்றினார்கள்.
சங்கரின் முழுமையான படைப்புலகை அவதானித்தால் அவை இரண்டு காலங்களில் இந்திய அரசியலை ஆவணப்படுத்துகிறது புரியும். ஒன்று, அவர் காலனிய காலக்கட்டத்தில் இந்தியர்களின் நிலையை சுதந்திரத்திற்கு முந்தையக் காலத்தோடு விமர்சிப்பதும் இரண்டாவது, சுதந்திர இந்தியாவில் தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகளின் ஏற்ற இறக்கங்களை விமர்சிப்பது. கிட்டத்தட்ட இந்த இரண்டாவது காலக்கட்டத்தில்தான் சங்கர் நான்காயிரத்துக்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களை படைத்திருக்கிறார். சங்கரின் செல்வாக்கு பெரும் பாய்ச்சலாக இருந்துள்ளது. 1956 ல் அவர் வரைந்த அரசியல் பிரச்சார ஓவியம்(நேரு தன்னுடன் தலைவர்களுடன் இருப்பதுபோல) அன்றைக்கு அரசியல் தளத்தில் நேருவுக்கு பெரும் வரவேற்பை அளித்தது என ரீது கந்தூரி சொல்கிறார். இதே சங்கர்தான் நேருவை கடுமையாக விமர்சித்து கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். தேசியமயமாக்கலில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய கேலிச்சித்திரத்தில் குண்டு குண்டான பெண்கள்(தனியார்) வேடிக்கைப் பார்க்க, நேரு அழகான இளம் பெண்ணை அணைத்துக்கொண்டு(அரசு) போகிறதுபோல வெளியிட்டார். சீனாவை அங்கீகரிக்காமல் உலகளாவிய தன்மை என்ற கொள்கையை ஐக்கிய நாடுகள் தவறவிட்டுவிட்டதாக நேரு பேசினார். உண்மையில் நேரு அன்றைக்கு சீனாவும் இந்தியாவும் இணைந்து ஒரு வல்லரசாக உருவாவதற்கான வக்காலத்து அது எனப் பத்திரிக்கைகள் சாடின. இந்த விவகாரத்தை சங்கர் கேலிச்சித்திரமாக எப்படி வரைகிறார் தெரியுமா? அமெரிக்க கலைஞர் அன்னா மெரிடிடின் புகழ்பெற்ற Love locked out எனும் ஓவியம் உள்ளது. அதில் ஒரு பெண் பின்பக்கம் திரும்பி நிர்வாணமாக நின்றபடி கதவைத் தள்ளுவது போன்று இருக்கும். அதே போல நேருவை ஐக்கிய நாடுகள் என்கிறக் கதவிற்கு முன்பாக திரும்பி நிற்பது போன்று வரைந்திருந்தார். இந்தச் சித்திரத்திற்கு நேருவிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் வந்தமாதிரிய பதிவுகள் கிடைக்கவில்லை.
ஆனால் காந்தி, ஜின்னா பற்றிய கேலிச்சித்திரத்தில் சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென சங்கருக்கு அஞ்சல் அட்டை எழுதி அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து சங்கரின் படைப்புகளில் மட்டுப்படுகிற உணர்வுகளைச் சுட்டிக்காட்டி, ”உங்கள் கேலிச்சித்திரங்கள் கலைப் படைப்புகளாக நன்றாக உள்ளன. ஆனால் யாரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையாக இருக்க முடியவில்லையென்றால், உங்கள் தொழிலில் உயர்ந்த நிலையை அடைய முடியாது. நிகழ்வுகளைப் பற்றிய உங்கள் ஆய்வு, அவற்றைப் பற்றிய துல்லியமான அறிவை நீங்கள் கொண்டிருப்பதைக் காட்ட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒருபோதும் மட்டமானவராக இருக்கக் கூடாது. உங்கள் கேரிகேச்சர் ஒருபோதும் யாரையும் கடிந்துவிடக் கூடாது,” என்று காந்தி 1939 இல் கடிதம் எழுதியிருக்கிறார்.
உண்ணாமதி சியாம சுந்தர் தொகுத்த ”நகைக்கத்தக்கதல்ல” இந்நூலில் சங்கர் வரைந்த அம்பேத்கரின் சித்திரங்களை நாம் கவனிப்போம். 1951ல் காங்கிரஸ் உடனான தனது அதிருப்தியை வெளியிட்ட அம்பேத்கர் மற்றக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க கோரிக்கை விடுத்தார். சங்கர் இவ்வறிப்புக்கு இரண்டு விதமாக சங்கர்ஸ் வீக்லியில் சித்திரங்கள் வரைகிறார். ஒன்று, வயதான ஒரு பெண்மணி (அம்பேத்கர்) திருமணத்திற்காக ஏங்கியபடி அமர்ந்திருக்க இரண்டு வயதானவர்கள் அவரிடம் விழுந்து வழிவதுபோலவும் இன்னொரு சித்திரம், அம்பேத்கரை திரௌபதி பாத்திரப் படைப்பில் உருவாக்கி, ஐந்து பேர் அவரை திருமணம் செய்திருப்பதாகவும் வெளியிடுகிறார். மேத்தாவுடன் கூட்டணி முடிவானதும் சங்கர்ஸ் வீக்லியில் இன்னொரு சித்திரம் வருகிறது. அதில், குண்டு பெண்மணியான அம்பேத்கரிடம் வாட்ட சாட்டமான இளைஞனான மேத்தா (இருவரும் திருமணக் கோலத்தில்) தனக்கு நிறைய மனைவிகள் உள்ளன என்கிறார், அதற்கு குண்டு பெண்மணி (அம்பேத்கர் ) எனக்கும் நிறைய கணவன்கள் உண்டு என்கிறார். அரசமைப்பு திட்ட மசோதாவில் அரசாங்கத்தில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எதிர்க்கட்சியை அடக்கும் என்கிற பேச்சுக்கு சங்கர், பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் (கட்சித் தலைவர்கள்) அடம்பிடிக்கிறார்கள், தலைமையாசிரியர் (ராஜாஜி) கையில் பிரம்புடன் நிற்க ஆயம்மா (அம்பேத்கர்) பணிவுடன் அருகே நிற்கிறார். அம்பேத்கரின் உருவங்களை சங்கர் இவ்வாறு கேலி செய்வதாக நாம் எடுத்துக்கொள்ளவது படைப்பாக்கச் சிந்தனையின் சுதந்திர வெளிக்குச் சரியான உரையாடலை அளிக்குமா என்றால் இல்லைதான். ஆனால் அதே சமயம், அம்பேத்கரின் உருவங்கள் ஏன் ஒரு முதிய பெண்மணியை, அம்மாஞ்சியான ஓர் உருவத்தோடும் அல்லது சாட்டையில் அடிவாங்குகிற தத்தி போன்ற ஒருவராக இருக்க வேண்டுமென்பதைக் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
நேருவையும் காந்தியையும் சிறுமையாகவும் கடுமையான விமர்சனத்துடன் சித்திரங்கள் சங்கர் வரைந்திருக்கிறாரே அப்படி இருக்க ஏன் அம்பேத்கரின் சித்திரங்கள் மட்டும் காயப்படுத்தவதாகப் பார்க்கப்பட வேண்டும்? வாழ்நாள் முழுக்க அம்பேத்கர் தன்னுடைய மக்களுக்காக அவர்களுக்கு எந்த வழியிலாவது நியாயத்தைப் பெற்றுத் தந்துவிடும் ஓட்டத்தில் நிறைய பிரயத்தங்களை செய்திருக்கிறார். அதில் பல தோல்விகளும் உண்டு. உழைப்பாளர் கட்சி உருவாக்கி பாட்டாளி வர்க்கங்களை இணைத்துக்கொள்ள விரும்பினார். கிரிப்ஸ் தூதுக்குழு பல்வேறு சமுகத்தினரைத் தொகுத்திட தொடங்கியபோது அது உழைப்பாளர் கட்சியில் அது தலித் சாதியின் பிரதிநிதித்துவமாக இல்லை என்றது. அதனால் அம்பேத்கர் சாதி அரசியலுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். பிறகு அரசியலமைப்பு சட்ட வரைவுக்கு பல்வேறு பழைமைவாதிகளிடமிருந்து எதிர்ப்புகள். பெண் உரிமைக்கு அவர் தொகுத்த அத்தனை வரைவுகளும் சபை விவாதங்களில் தள்ளுபடியாகியது. இந்து மசோதாவை நாட்டின் சமுத்துவத்துக்குமானவொன்றாக அவரால் உண்டாக்க முடியவில்லை. சட்டவரைவு தனக்கு திருப்தியாக இல்லையென அறிவித்தார். 1951 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறாமல் போனது. 1954ல் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டார். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அம்பேத்கரிய சிந்தனைகள் எங்கோ சிறு பொறியாக உயிர்ப்புடன் இருந்தது.
”நதைக்கத்தக்கதல்ல” நூல் முழுக்க முழுக்க அம்பேத்கரை சிறுமைப்படுத்துவதாக வாசிக்க முடியாது. உதாரணத்திற்கு, இந்து மசோதா மீதான வரைவில் அம்பேத்கர் பெண்களுக்கான சிறப்பு உரிமைகளை வாசித்தது பழைமைவாத இந்துக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அக்கருத்தைச் சங்கர் ஒரு பிராமணன் கையில் கம்புடன் நடராஜரின் கோலத்தில் ஒரு பெண்ணின் மீது நின்றவாறு அம்பேத்கரை நோக்கி கை உயர்த்துவதாக இருக்கிறது. இது அம்பேத்கரை சிறுமைப்படுத்தியதாக சியாம சுந்தர் குறிப்பிடுகிறார். ஆனால் இது, இந்து பழைமைவாதிகளின் அதிகார உருவத்திற்கெதிராக அம்பேத்கர் தனியொருவராக தனித்து நிற்பதாகத்தான் என்னால் வாசிக்க முடிகிறது. அதேபோல இந்து சட்ட மசோதாவை விமர்சித்து சங்கர் தீட்டிய சித்திரங்களில், முதலில் சதி ஒழிப்பு பதாகையுடன் வருவதைக் காண்கிற பிராமணர் அமைதியாக இருக்கிறார், பிறகு காந்தி தீண்டாமை பதாகையுடன் வருகிறார் அப்போதும் அமைதியாக இருக்கிறார். ஆனால் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் பெண்களுக்கான சமஉரிமைப் பதாகைகள் கண்டு ஆக்ரோஷமாக பாய்வதுபோல கேலிச்சித்திரம் படைத்திருக்கிறார். இவை அன்றைக்கிருந்து உயர்குடிகளின் ஆதிக்க மனோபாவத்தையே காட்டுகிறதேயொழிய அம்பேத்கரை எந்த வகையிலும் சீண்டுவதாக இல்லை.
ஆனால் நத்தையும் சவுக்கும் என்கிற (அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போன்ற சித்திரம்) NCERT பாடத்திட்டத்தில் இடம்பெறுகிறபோது எந்தமாதிரியான மனநிலையை வாசிக்கிறபோது அளித்திருக்கும்?
நேருவை நிர்வாணமாக காட்சிப்படுத்தியதும், காந்தியை கேலிக்குரிய கிழவனாக தொடர்ந்து சித்திரமாக்கியதையும்விட அம்பேத்கரின் இச்சித்திரம் ஏன் உணர்வுப்பூர்வமாக மனம் நொறுங்கப்படுகிற உணர்வைக் கடத்த வேண்டும்? காந்தி உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இச்சித்திரத்திற்குத் தன் எதிர்வினையை கடுமையாக முன்வைத்திருப்பார் (ஏற்கெனவே அவர் ஜின்னாவுக்காக சங்கருக்குக் கடிதம் எழுதியிருந்தார்). நேருவியக் கொள்கைகளையும் காந்திய நெறிமுறைகளையும் இந்திய அரசியலையும் கடுமையாகச் சாடிய சங்கரின் கேலிச்சித்திரங்களுக்கும் அம்பேத்கரை சாட்டையடி வாங்குபவராக வரைந்ததையும் ஒருசேர பார்க்க முடியுமா?
இந்தச் சித்திரத்தை சியாம சுந்தர் சித்தலிங்கையாவின் ஊரும் சேரியும் தன்வரலாறு நூலில் இடம் பெறுகிற சம்பவத்தைக் குறிப்பிட்டு உணர்வுப்பூர்மாக விளக்குகிறார். ஊரும் சேரியும் நூலில் சித்தலிங்கையா விவரிக்கிற இடம் இதுதான் : “ஐயரின் நிலத்தில் அழகான வீடும் பம்புசெட்டும் கிணறும் இருந்தன. அக்கிணற்றிலிருந்துதான் ஐயரின் மற்ற நிலங்களுக்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. நானும் மற்ற பிள்ளைகளும் நின்று எங்கள் அப்பா அம்மாவைத் தேடிக் கூவிக்கொண்ருந்தபோது ஒரு காடசி தெரிந்தது. ஐயரின் நிலத்தில் இரண்டுபேர் தம் கழுத்தில் நுகத்தடியைச் சுமக்க ஒருவன் கலப்பையை அழுத்தி உழுதுகொண்டிருந்தான். நுகத்தடியைச் சுமந்த இருவரும் எருதுகள்போலச் சென்றுகொண்டிருக்க, நுகத்தடியைச் சுமந்த இருவரில் ஒருவர் எனது தந்தை”
சித்தலிங்கையாவின் வாழ்வனுபவத்தைக் கொண்டிருக்கிற ஒருவன் NCERT பாடநூலில் நத்தையும் சவுக்கும் கேலிச்சித்திரத்தைக் காண்கிறபோது எம்மாதிரியான உணர்ச்சிக்குத் தள்ளப்படுவான் என்கிற கேள்வியை ”நகைக்கத்தக்கதல்ல” நூலைத் தொகுத்த உண்ணாமதி சியாம சுந்தர் கேட்கிறார். பட்டியலினத்தவர்கள் பெரும்பாலானவர்கள் சித்தலிங்கையாவின் வாழ்வனுபவத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தம் வாழ்வில் பிரிக்க முடியாதவாறு கொண்டிருப்பார்களென்பது நிச்சயம். நேருவின் நிர்வாண ஓவியத்திற்கும் அம்பேத்கரின் “சவுக்கடி வாங்கும்” ஓவியத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது ஒருவரின் தனிப்பட்ட தகுதியை சிறுமையாக்குகிறதென்றால் பின்னது மாபெரும் சமூதாயத்தின் கனவைச் சிறுமையாக்குகிறது. அதுதான் அவர்களை கடந்தக் காலத்தோடு தொடர்புடையதாகவும் எதிர்காலத்துக்கு நகர விடாமலும் எப்போதுமே வைத்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் என்றைக்கும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
அம்பேத்கரும் நேருவைப் போன்ற நவீனத்துவத்தை முழுமையாக அறிந்துகொண்டவர்தான் ஆனால் அவரை நவீனத்துவத்தின் பக்தன் என்ற நிலையிலிருந்து விமர்சனப்பூர்வமான ஆதரவாளராக மாற்றியது பௌத்தம். அம்பேத்கரைப் பொறுத்தமட்டில் நிகழ்காலம்தான் கடந்த மற்றும் எதிர்காலங்களுக்கான அர்த்தங்களைக் கொடுத்தன. அம்பேத்கர் தன்னை விமர்சனப்பூர்வமான நவீனத்துவவாதியென்றே சொல்வதை விரும்பினார். மற்றமையோடு ஆழமான உறவு இல்லையென்றால் தீண்டாமையை ஒழிப்பதற்கான எத்தனை முயற்சிகளும் பயன்தராது. முழுமையான ஒற்றையுணர்வோடு ஒருவர் மற்றமையை இறுகப் பற்றிக்கொள்வதில் மூலமாகவும் அதனோடு போராடுவதன் மூலமாகவும்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தவர் அம்பேத்கர். இந்நூலின் வழியே கட்டமைக்கிற கதையாடலை இப்படியாகத்தான் நாம் அர்த்தப்படுத்த வேண்டியுள்ளது.
உதவிய நூல்கள்
Ghandi in Cartoon – Navajeevan trust
Don’t spare me shankar- Jawaharlal Nehru – Children book trust
Caricaturing Culture in India is a highly original history of political cartoons in India.- Ritu Gairola Khanduri
Drawn & Quartered: The History of American Political Cartoons -Stephen Hess and Sandy Northrop
***
தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளும் ‘மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று இரயில்கள்’ என்கிற குறுங்கதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்: thuyan154@yahoo.com




