ஜார்ஜ் ஜோசப்
நாகை மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் மூச்சு வாங்கியபடி நடந்துகொண்டிருந்தார். அதன் முகப்புக் கட்டடத்தில் பணியிலிருந்த பாதுகாவலர், நான் எதிர்பார்த்த ஆனால் தாத்தா எதிர்பாரா ஒன்றைச் சொன்னார்.
‘நீங்கள் தேடிவந்த புரோபசர் நசீர் விடுமுறைல இருக்காரே. அவர் மக திருமணக் காரியமா லீவ்ல இருக்கார். எப்போ வருவார்னு தெரியாதே தாத்தா. ஏன் இப்படி வெயிலுல கிடந்து அலையுறீங்க. ஜனவரில யுனிவர்சிட்டி தொடங்கினதும் வாங்க’ என்றார். ஐம்பதைக் கடந்தவரும் அவரைத் தாத்தா என்று அழைப்பதைக் கண்ட பின்தான், முதுமை தன் அலகுகளால் அவரை எவ்வளவு பூரணப்படுத்தியிருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். இரு கால்களும் கவனிக்கத்தக்க அளவு குறுகி வளைந்திருந்தன. நடக்கையில் செருப்புத் தேயும்படியான இழுவை கூடியிருந்தது. ஒவ்வொரு அசைவிலும் நிதானம் பீறிட்டது. ஆனால் இந்தக் காரியத்தில் மட்டும் அவரால் பொறுமை காக்க முடியவில்லை. தன் நாட்கள் குறைந்துவருகின்றன என்ற நினைப்பால் இருக்கலாம். சோர்வடைந்து முகப்பிலிருந்த அலங்காரக் குளக் கட்டையில் அமர்ந்தார். கனத்த கருங்காக்கை சீண்டுவதைப் போல் நெருங்கி வந்து தன் காலளவு நிரம்பியிருந்த குளத்தினுள் இறங்கி நின்றது.
‘அவரோட நம்பராவது கிடைக்குங்களா, ரொம்ப தூரத்துலேந்து வந்துருக்கோம்’ என்றேன்.
நான் முயற்சிக்கிறேன் என்பதைப் பார்த்ததும், தாத்தா தன் இடக்கையால் வெள்ளைத் துணியில் மடித்துக் கட்டப்பையினுள் புதைந்து வைக்கப்பட்டிருந்த தன் பொக்கிஷத்தை மேலாகத் தடவிப் பரவசப்பட்டுக் கொண்டார். அவர் கண்களில் மிளிரும் நம்பிக்கையின் ஒளி, சட்டெனத் தோன்றிப் பின் மறைந்துபோவதாய் இருந்தது. வினைவலி பற்றிப் பெரிய யோசனைகளற்ற அவரது நம்பிக்கை ஒவ்வொரு முன்னேற்றச் சந்தர்ப்பங்களிலும் இறுக்கமாவது தெரிந்தது.
‘தண்ணீ வேணுங்களா தாத்தா’
‘கொஞ்சங்கொடு’ என்றார்.
வெயில் பாந்தமாகவே இருப்பினும் கடல்புறத்தின் அனல் காற்று, வியர்க்க வைத்தன. பச்சையத்திற்குப் பழக்கமாயிருந்த கண்கள், நீலத்தின் வெவ்வேறு ரூபங்களை அசைபோட்டன. வந்திறங்கியது முதல் அதன் முழுமையை இன்னும் காணவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லை என்றே பட்டது. தோள்பையிலிருந்து கொடுத்த சிறிய பாட்டிலைச் சாய்த்துச் சிறிது நீரை வாயில் கொட்டிக்கொண்டார்.
‘தம்பி, இதோ மேடம் வரேன்னு சொன்னாங்க. அவங்க ஜாகீர் சார் டிப்பார்ட்மெண்ட்தான். கொஞ்சம் பொறுங்…’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே இறுக்கமான பச்சை சுடிதாரில் மேம் என்று விழிப்பதை விரும்பும் தோரணைகொண்ட ஒருவர் வந்தார்.
‘சொல்லுங்க எதுக்கு அவரைப் பாக்கணும். லீவ் நேரங்கள்ல சந்திக்க முடியாதே!’
‘இல்லங்க மேம். சார் தினச்சேதியில மீன்களோட முள்ளுகப் பத்தி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தாத்தா அதுபத்தித் தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுறாங்க, அதான் வந்தோம். அவர் நம்பராவது தர முடியுங்களா’ என்றேன். இவ்வளவு கெஞ்சலான குரலில் பேச வேண்டியுள்ளதே என்ற கோபமும், அப்படிப் பேசுவதால் காரியம் நிகழும் என்று கற்பிக்கப்பட்ட சாமர்த்தியம் செயல்படுகிறதே என்ற உணர்வும் ஒருசேர எழுந்தது.
‘சரி’ என்று தொடர்பு எண் கொடுத்துவிட்டு நகர்ந்தார். காவலரும் தன் இருக்கைக்குத் திரும்பினார்.
நான்கைந்து முறை சிறுசிறு இடைவெளிவிட்டு முயற்சித்தபின், பேராசிரியர் நசீர் அழைப்பை எடுத்தார். தன் மகள் திருமண வேலையாகச் சொந்த ஊரான சேலம் சென்றிருப்பதாகவும், இருபது நாட்கள் கழித்து வந்தால் நிச்சயம் சந்திக்கலாம் என்றும் சொன்னார். என்ன காரியம் என்று அவரும் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. நான் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தாலும், ‘என்ன?’ என்பதுபோல் தாத்தா பார்த்தார். ‘அடுத்த மாசம் வரச் சொல்றாங்க’ என்று அவரது பையை எடுத்துக்கொண்டேன். மீண்டும் நடக்கப் போகிறோமே என்ற கலக்கத்துடன் எழுந்தார்.
வளாக நுழைவில் ஒரு ஆட்டோ வரவே, அறுபதுக்கு பேரம் பேசி நாகூர் தர்காவில் சென்று இறங்கினோம். ‘நான்கு மணிக்குத்தான் ரயில் வரும். அதுவரை இங்கே இருக்கலாம் தாத்தா’ என்றேன். எதுவுமே பேசாதிருந்தார். மினாரின் மினுப்புகளினூடே மதியநேர பாங்கொலிக்கான மன்றாட்டுக் கூவல் காற்றை ஊடறுத்தது. வாசலில் விற்கப்பட்டுக்கொண்டிருந்த தஸ்பீஹ் மணிகளையும் அல்பாத்திஹா தகடுகளையும் பார்த்தவாறிருந்தார். குழந்தைகளை மையமிட்டு ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பக்தி மையங்களெல்லாம் ஏன் குழந்தைகளை ஈர்க்கும் பாவத்துடன் நிரம்பிவழிகின்றன; பக்தி என்பதே குழந்தைகளுக்கானதுதானோ என்று தோன்றியது.
‘தாத்தா உள்ள போறதுக்கு முன்னாடி சாப்பிடலாமா?’ என்றேன்.
‘எனக்கு வேணாம் கேபா நீ சாப்பிட்டு வா. உள்ள உக்காந்திருக்கேன்’ என்றார். புழுக்கம் தணிய ஏதேனும் குடித்தால் போதுமென்றிருந்தது. சப்ஜா விதைகள் தழும்ப, கண்முன் கத்திரிக்கப்பட்ட பாக்கெட்டிலிருந்து பாலைப் பீய்ச்சியூற்றி ரோஸ் மில்க்கைக் கையில் தந்தார் சைக்கிளில் கடை அமைத்திருந்த இளைஞர். அப்பானம் தந்த களிப்பு, காத்திருக்க நேர்ந்ததையும், நேர்வதையும் மறக்கச் செய்தது. தர்காவினுள்ளே நுழைந்தேன். இந்த நூற்றாண்டைப் பின்னுக்கு வைத்துவிட்டு வரும் நினைப்பை வழங்கும் எல்லா திவ்ய ஸ்தலங்களையும் போலவே அதுவும் உணரச் செய்தது.
தாத்தா வலப்பக்கச் சுவரில் தன் முதுகைச் சாய்த்தவாறு கால்களை நீட்டி அமர்ந்திருந்தார். களைப்பை அவருடல் லேசான நடுக்கத்துடன் வெளிக்காட்டியது. அவர் அருகே சென்றமர்ந்ததும், இமைதிறந்து மூடிக்கொண்டார். நரை வியாபித்திருந்த அவரது மீசையில் ஆங்காங்கே நீர்த்துளிகள் தொற்றிக்கொண்டிருந்தன. நான் அவரைப்போலவே சாய்ந்தமரலாம் என்றிருக்கும்போது,
‘ஏன்யா பெரியவரே புதுசா நீரு. ஆண்டவருக்கு நேரா கால் நீட்டி உக்காரக்கூடாதுன்னு தெரியாதா? ஒன்னு கால மடக்கும், இல்லனா திரும்பி உக்காரும்’ என்று மிரட்டும் தொனியில் பேசியவருக்கு அரணாக மூவர் பின்னே நின்றுகொண்டிருந்தனர்.
‘ஐயோ தெரியாதுங்க. நான் கால மடக்கிக்கிறேன்’ என்றார். ஏற்கனவே மடங்கியதுபோலவே வளைந்துவிட்டிருந்த கால்களை மடிக்கமுடியாது, பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்தபடி அசௌகரியத்துடன் கால்களை நீட்டிக்கொண்டார். என்னுடன் வந்திருக்கும்போது அவருக்கு ஒரு சுடுசொல் விழுந்துவிட்டதே என்று ஆதங்கத்தோடு நின்றவாறிருந்தேன்.
‘நாம வேணும்னா ஸ்டேசன்ல உக்காந்துக்கலாம் தாத்தா’ என்றேன். இதெல்லாம் தனக்கு ஒரு பொருட்டில்லை என்பதுபோல் ’இல்லப்பா. நீ உக்காரு. இனியும் வெயில்ல அலைய முடியாது. கொஞ்சம் ஓஞ்சாதான் இனி நடக்க முடியும்’ என்று கால்மூட்டை நீவிக்கொண்டார். எங்கள் முன் விரிந்திருந்த தர்காவின் பரப்பினுள் எண்ணற்ற புறாக்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தன. அவற்றுக்கு எந்நேரமும் உணவிருக்கும்படி தளமெங்கும் கோதுமை, சோளம், பயிறு, வெள்ளை கௌபி, கொள்ளு உள்ளிட்ட தானிய வகைகள் தூவப்பட்டிருந்தன. அக்காட்சியை மறைத்தவராக வெள்ளைக் குல்லாவும் செம்பட்டையடித்த நீண்ட தாடியும் சிறுத்த கண்களும் தடித்த உதடுகளும் கொண்ட உயரமான மனிதர் எங்கள் பக்கம் வந்து தாத்தாவின் அருகே அமர்ந்துகொண்டார். சட்டையின் கழுத்துப்பட்டை மடிப்பில் பச்சைக் கைக்குட்டை மடிந்திருப்பது தெரிந்தது. வெள்ளைக் கைலி முழங்காலுக்கு மேலாக இருந்தது.
‘ரஹ்மானே என் ரப்பே’ என்று குல்லாவைக் கழற்றி நெற்றி வியர்வையைத் துடைத்தவர், ‘என்ன நைனா எஜமான பாத்துக் கால நீட்டிட்டனு திட்டிட்டாங்களா. பாத்தேன் நான் எல்லாம் பாத்தேன். அதான் மனசு பொறுக்காம வந்துட்டேன்’ என்று அவரது கால்களைப் பற்றிப் பரிவுடன் பிசைந்துவிட்டார். அவரது குரலில் இருந்த கனிவுமிக்க அதிகாரம் எங்களைப் பேசவோ மறுக்கவோ விடவில்லை. நீண்ட ஓட்டத்தை முடித்தவனின் உறக்கம்போல் தாத்தா சொக்கிவிட்டார். ஒரு கண்கட்டு போல், முன்னெழுதப்பட்ட நாடகம் போல, என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் சிவத்த மேனியுடைய அஜானுபாகுவான அந்த ஆண் மறைந்திருந்தார். உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவை எழுப்பாமல் வளாகத்தில் அவரைத் தேடி சுற்றிச் சுற்றி வந்தும் வசப்படவில்லை. நினைவில் அவர் உருவைச் சிக்கெனப் பிடித்தவனாக, திரும்பினேன். தாத்தா ’புறப்படலாம்’ என்று எழுந்துகொண்டார். நிழல் படர்ந்த தெருக்கள் வழியாக நாகூர் ரயில் நிலையத்திற்குச் சென்றடைந்தோம். அரை மைலுக்கும் மேல் நீண்டது நடை. சகஜமாய் அடியெடுத்து வந்தார்.
ரயில் பெட்டியை மீன் கவிச்சி நிறைத்திருந்தது. வெயில் தோய்ந்த உடைகளின் வீச்சம் குபீரென்று காற்றை நிறைத்திருந்தது. தாத்தா முதல்முறை தனது சேகரிப்பில் உறங்கிக்கொண்டிருந்த சுறா முள் பாடத்தைப் பொக்கிஷம் என அறிவித்து எனக்கென ரகசியமாய்க் காட்டிய தருணம் நினைவை ஆக்கிரமித்தது. ஒருபோதும் அழியக்கூடாதென்ற நேசத்தில் எட்டுமுழ வெள்ளை வேட்டியால் தன் மிடிமையை மாற்றவிருக்கிறது என்று நினைத்த அரணைக் கட்டவிழ்த்தார். அப்போது உள்ளறைக்குள் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். கைகளில்லாச் சிலுவை போலும் நீள்கத்தியைப் போலும் இருந்த மரப்பட்டையின் இரு பக்கவாட்டிலும் வரிசையாய் முட்கள் பதியப்பட்டிருந்தன. சற்றே நீண்ட பூசணி விதை போல இருந்தன முட்கள். அது பூரானை ஒத்த தோற்றத்தையும் பிரமிப்பைக் கூட்டித்தரும் சிலிர்ப்பையும் அதற்கு அளித்திருந்தது.
’என் பூட்டன் காலத்திது. அப்பா கடசீல அண்ணணுகள விட்டுட்டு என்கிட்டதான் தந்தாரு. எனக்கு என்னடாப்பா ஆண்டவா வழினு கிடந்தப்ப, இன்னிக்குக் காலையில ஒரு சேதிய வாசிச்சப்பதான் இது ஞாபகம் வந்துச்சு. உடனே தேடி எடுத்துட்டேன். இனி கவலையே இல்லடா’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். எங்கே மகன்களின் கைகளுக்குப் போய்விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வு எழவே, மீண்டும் அழகாய்த் துணிச்சுற்றிப் பரணில் அதை ஒளித்தார்.
நாளிதழில், ‘சுறா முட்கள் புற்றுநோய் மருந்து தயாரிப்பதில் அதிகம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதன் விலை இலட்சங்கள் போக்கக்கூடியதாக உள்ளது. இறால் வகைகளிலும்கூட மருத்துவ குணம் வாய்ந்தவை நிறைய உள்ளன’ என்று கடல்வாழ் இனங்களின் மருத்துவ குணங்கள் என்ற கட்டுரையில் சில வரிகள் அடிக்கோடிடப் பட்டிருந்தன. அந்த ஓரிரு வார்த்தைகள் அவரது வாழ்நாளின் ஆச்சர்யமாகவும் தேடுதல் வேட்கையாகவும் மாறும் என அதை வாசித்தபோது நான் நினைக்கவே இல்லை.
வீடு திரும்பி, ‘அது நம்புற மாதிரியான செய்தியா இல்லையே’ என்று அப்பாவிடம் கேட்கவே, அவர் தனது நண்பர்களிடம் விற்பனை பற்றி விசாரித்துவிட்டு, ‘அதெல்லாம் கரிக்கு உதவாதுடா. முந்நூறு வருஷ ஆண்டிக்ஸ் பொருள கைமாத்தனும்னு ரயிஸ் புல்லிங்னு திரியவன்கிட்டகூட கேட்டுட்டேன். எப்படா எது கிடைக்கும்னு ஜிமிக்ஸ் காட்டறவனே ஆகாதுன்னுட்டான்’ என்று துளியாய் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசையையும் ஒழித்துவிட்டார்.
‘வேற வாய்ப்பே இல்லியாப்பா?’
’என்ன நடக்கணுங்கிற?’
‘அவர் விரும்புற மாதிரி சின்னதா ஒரு நிலத்த வாங்கிட்டாப் போதும்பா. இன்னும் பத்து வருஷம் உசிரோட இருப்பாரு. மண்ணு அவர் காலுல புரளனும். எதையாவது கைல வச்சிக்கிட்டு அதைக் கொத்திட்டு இருக்கணும். மரங்கொத்தி மாதிரி அவரு மண்கொத்தி.’
‘சரிதான். ஆனா இருந்ததெல்லாம் உன் மாமனுங்க அழிக்காம இருந்தா இப்ப ஏன் இப்படி ஏங்கிட்டிருப்ப போறாரு’ என்று அமைதி காத்தவர், ‘அவர் கையும் தரித்திரியம்தான்டா. என்னைக்குமே ஒரு வேலை தெரிஞ்சவந்தான் பொழப்பான். அந்த மனுஷனுக்குத் தெரியாத வேல உண்டா! நிலம்னு இருந்துட்டா அங்குல அங்குலமா பிரிச்சு விதைச்சிடுவாரு. கம்பிய பாத்துட்டா, கட்டி வேலி பிண்ணிடுவாரு. கல்யாணமான புதுசுல திடீர்னு குதிங்கால் வலி. ஓயவே இல்ல. பாக்காத வைத்தியரில்ல. உங்கம்மா அவர்ட சொன்னதும், வேங்கூர் காடெல்லாம் அலைச்சு ஐஞ்சாறு மூலிக எடுத்தாந்தாரு. அதுல நொச்சிய தவிர வேறு எது பெயரும் எனக்குத் தெரியல. ஒரு நாள் முழுக்க கொசுக்கடியத் தாங்கிட்டுப் புறங்கடையில உக்காந்து தைலம் செஞ்சுத் தந்தார்னா பாத்துக்கோ! அன்னிக்கு ராத்திரியே வலி பறந்துடுச்சு. மண்டைக்கு இத்தனை வேல தெரியும்னா அது ஓஞ்சுப் போயிடும்டா! போதும் அந்த மனுசன் ஆடியோடுனது. முடிஞ்சா மனசத் தேத்தி வீடு தங்க வையி’ என்றார்.
ஆனால் அதன்பிறகு எனக்கு அவரைப் பார்க்கச் செல்லவே மனம் கூடவில்லை. முதிர்ந்தவர்களின் பேச்சுகளும், மீளமீள நினைவுபடுத்திச் சொல்லும் கடந்தகால அருமை பெருமைகளும், வாழ மறுத்துவிட்ட சில பக்கங்களும், உழைப்பில் ஓடினப்போன காலத்தைப் பற்றிய ஏக்கங்களும் என்னைச் சலிக்குமளவு ஆக்கிரமித்துவிட்டன. தோற்றுப்போனதாய் நம்புவோரின் வசந்தங்களைக் கேட்பதும் வலி என்று உணர்ந்ததாலோ என்னவோ அவரைக் காணச் செல்வதை வெகுவாகக் குறைத்துவிட்டேன். மீறிச் செல்லும்போதெல்லாம் வாசலில் ஞெகிழி நாற்காலியில் அமர்ந்தபடி பறவைக்கூடுபோல் எலும்புத் தெரிய ஒடுங்கிய நெஞ்சாங்கூட்டை வெள்ளைத் துணியால் போர்த்தி கையில் புத்தகமேந்தி அமர்ந்திருப்பார். பெரும்பாலும் அது வேளாண்மைச் சார்ந்த நூலாக இருக்கும். சமயங்களில் அவரால் ஒரு துணுக்குச் செய்தியோடுகூட நாள் முழுவதும் உறவாடமுடியும். பிடித்து வைக்கப்பட்ட முந்தைய காலத்துப் பொருளாய் ,பாடம் பண்ணப்பட்ட முள்போலவே காட்சியளித்தார்.
இறுதியாக, தட்டிக்கழிப்பதை நிறுத்தினால் நிம்மதி கொள்வார் என அழைத்து வந்திருந்தேன். இப்போது அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் ஜன்னலுக்கு அப்பால் வெளியைப் பார்க்கும்படி கண்களை அலையவிட்டேன். ரயில் நகரவாரம்பித்தது. கூட்ட நெரிசலில் எங்கள் இருக்கைக்குக் கீழ் உட்கார்ந்த பெண்ணின் மடியில் துள்ளிக்கொண்டிருந்த பையனது கையில் தன்வசமிருந்த பிஸ்கெட் சில்லுகளைக் கொடுத்துச் சிரித்துக் கொண்டார். எது பேசினாலும் அவர் துவண்டுவிடக்கூடும் என அமைதிகொண்டேன்.
‘கேபா திரும்ப வருவோம் என்ன! விட்டுடக்கூடாது’ என்றார்.
ரயில் வேகமெடுத்துப் பாய்ந்தது.
***
ஜார்ஜ் ஜோசப் : இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். தஞ்சாவூரில் பிறந்தவர். ஜார்ஜ் ஜோசப் என்ன பெயரில் கதை, கட்டுரை, கவிதை முதலியன எழுதி வருகிறார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். எமரால்ட் மற்றும் பெருநெஞ்சன் என இரு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. ‘இஸ்மாயில்’ ‘பூனைகளில்லா உலகம்’ என இரு நாவல்களை ஆங்கிலம் வழி தமிழ்ப்படுத்தி உள்ளார். ‘எமரால்ட்’ கதைத் தொகுதி 2024 சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான திருக்கார்த்தியல் விருது பெற்றது. மின்னஞ்சல்: george.joshe@gmail.com

