Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்வெளிச்சத்தைத் துண்டாடும் நிழற் கோடுகள்

வெளிச்சத்தைத் துண்டாடும் நிழற் கோடுகள்

ந.ரஞ்சித் குமார்

(கிறிஸ்டின் உல்பெர்கா எழுதி ரெஜினா சந்திரா மொழிபெயர்த்த பச்சைக் காகம் நாவல் குறித்த மதிப்புரை)

ரு இலக்கியப் பிரதியுடன் வாசகன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். பெரும்பாலும் தனது சொந்த அனுபவங்களுக்கு முற்றிலும் அந்நியமான பின்னணிகளைப் பேசும் படைப்புகளுடன் வாசகனுக்கு இப்படியான தொடர்பு சடுதியில் அமைந்து விடுவது தான் வாசிப்புச் செயல்பாட்டில் நிகழும் விசித்திரமான யதார்த்தம்.

நம்முடைய அனுபவங்களில் காணத் தவறியவற்றை, அலட்சியத்துடன் அல்லது புரிதல் குறைபாடு காரணமாக கண்டுகொள்ளாமல் விழ நேர்ந்த இடைவெளிகளை இப்பிரதிகள் நினைவூட்டுகின்றன. அறிமுகமும் அனுபவமும் இல்லாத கதைக்களம் என்ற போதும் அதன் கதை கூறல் நாம் கவனத்தில் நிறுத்தாமல் கடந்து வந்த சூழலுக்கு பரிச்சயமான தொனியைக் கொண்டிருக்கிறது.

குடும்ப உறவுகளின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப்பெறாத தனிமையின் அழுத்தத்தில் மனச்சிதைவுக்குள்ளான ஒரு பெண் தான் நாவலில் கதைசொல்லி. மருத்துவர் மற்றும் வெவ்வேறு காரணங்களால் மனநல மருத்துவமனையில் அவளுடன் சிகிச்சைக்கு வந்து தங்கியிருக்கும் பெண்களுடன் தனது கடந்த வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். 

உடன் தங்கியிருக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு கொண்டு வரப்பட்டதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இவர்களுக்குள் பேசிக் கொள்ளக்கூடிய சம்பவங்களின் தொகுப்பு தான் முழு நாவலும். அவர்கள் முழுமையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள அமைந்த ஒரே இடம் அதுதான். 

அவர்களுக்குக் காது கொடுக்காத புற உலகம் அவர்களுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறது. அது பற்றிய புகார்களும் அவர்களிடம் இல்லை. ஏனெனில் அவர்கள் அவர்களுக்கென்றே உருவாக்கிக் கொண்ட உலகத்தில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். நாவலின் நோக்கம் அவர்கள் அங்கு வந்ததற்கான காரணங்களைப் பதிவு செய்வது அல்ல. காரணங்கள் வெறும் கதைகள் தான். அக்கதைகளின் வழியாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் அடைந்த உளவியல் பாதிப்புகளை மிகையின்றி அவர்களின் குரலிலேயே பதிவு செய்வது தான் நாவலின் பிரதான நோக்கம். 

நம்முடைய பழக்கப்பட்ட அவதானிப்புகளை உதறிவிட்டு அவர்களின் உலகுக்குள் சென்று அவர்களின் பார்வை வழியாக, அவர்களின் நேரடிக் குரலிலேயே அவ்வுலகைக் காண்கிறோம். கற்பனையிலும் கண்டிராத விசித்திரமான கதாமாந்தர்கள் வந்து போகிறார்கள். வினோதமான நிகழ்வுகள் இயல்பாக நம் கண் முன்னே அரங்கேறுகின்றன. 

கடந்த கால நாட்களில் கதைசொல்லியின் தனிமைக்கு ஆதரவாக அவளுக்கு வாய்த்த ஒரே நண்பன் அவளது கண்ணுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பச்சைக் காகம் மட்டுமே. 

கதைசொல்லியின் விடுதலை மீதான தீராத ஏக்கத்தின் உருவகமாக வடிவெடுத்தது போல் வருகிறது பச்சைக் காகம். சிறு பிராயத்து நினைவுகள், கணவன், பிள்ளைகள், நண்பர்கள், பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் முதலிய அனைத்திலிருந்தும் அனைவரிடமிருந்தும் விடுபடத் துடிக்கும் அவளது விடுதலை ஏக்கம் இருக்கிறது. அப்படிப்பட்ட விடுதலை எண்ணத்தின் ஆதியும் அந்தமுமாக இருக்கிறது பச்சைக் காகம்.

தனது அடக்கப்பட்ட உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடாக அவ்வப்போது சில அசட்டையான விளையாட்டுத் தனங்களில் ஈடுபடுகிறாள். அவையெல்லாம் ஒரு தற்காலிகமான ஆசுவாசத்தை மட்டுமே அளிக்கின்றன. தனக்கான விடுதலையை அவள் யாரிடமிருந்தும் யாசிப்பதுமில்லை, அதை அடைவதற்காக தன்முனைப்புடன் துணிவுகரமான செயல்களில் ஈடுபடுவதுமில்லை. காரணம் அவள் வேண்டும் சுதந்திரம், தன்னைக் கட்டி வைத்திருக்கும் அனைத்துத் தளைகளிலிருந்தும் துண்டித்துக்கொள்ளக்கூடிய அப்படி ஒரு நிரந்தரமான சுதந்திரம், கால் தரையில் படும் இந்த உலகின் எந்த மூலையிலும் சாத்தியமே இல்லை என்று அவள் புரிந்து கொண்டதால் தான்!. இவளா மனப்பிறழ்வு கொண்டவள்? 

நட்பு, காதல், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள் என மனித உறவுகளில் நிரம்பியிருக்கும் போலியான ஆசாபாசங்கள், ஒவ்வொருவரும் தம்மைத் தாமே முக்கியத்துவம் கொண்டவர்களாகக் கருதிக் கொள்ளும் மனப்பாங்கு ஆகியவை மனச்சிதைவுக்கு உள்ளானவராகப் பார்க்கப்படும் ஒரு கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகின்றன. டயரிக்குறிப்புகள் போல நேரடியாக எழுதப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியை வாசிக்கும் நெருக்கமான உணர்வைத் தருகிறது படைப்பு.

இந்தப் பார்வை தான் நாவலின் தொனியை நெய்கிறது. இந்தப் பார்வை தான் நாம் காணும் தெளிவான நாகரீகமான உலகை சித்திரவதைக் கூடமாகக் காட்டுகிறது. இவற்றில் எங்கும் விமர்சனத் தொனி வெளிப்படுவதில்லை. ஆனால் ஆழமாக நம்மைச் சீண்டுகிறது. இந்த அம்சத்தில் தான் நாவலின் அடர்த்தி கூடுகிறது. 

கதைசொல்லி நாவலில் நேரடியாக வெளிப்படுத்தியிராத ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. அவளை ஏளனமின்றி சக மனித உயிரியாக நினைப்பது மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடன் இருக்கும் தற்காலிகமான தோழிகள் மட்டுமே. இந்த கதை சொல்லப்பட காரணமாக அமைந்த ஒரு வாய்ப்பும் அவர்களின் இருப்பு மட்டும் தான்.

கதைசொல்லியை மனச்சிதைவுக்கு உள்ளான ஒருவராக அடையாளப்படுத்துவதுமே கூட அபத்தம் தான். அது அவளால் நேர்ந்ததல்ல மாறாக அவள் மீது சுமத்தப்பட்ட அடையாளம். அதில், கற்பனையில் மட்டுமே தனக்கென சுதந்திரமான உலகைப் படைத்துக் கொள்ள நிர்பந்தித்த அவளது குழந்தைப்பருவம் கொடுத்த பதற்றம் இருக்கிறது‌; தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத கணவன் மீதான பரிகாசம் இருக்கிறது; பாசமற்ற பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கை இருக்கிறது; இந்தத் தளைகளில் துண்டித்துக் கொள்ள முடியாமல் ஒரு எல்லைக்குப் பிறகு மீண்டும் அதிலேயே வந்து ஒட்டிக்கொள்ள நேரிடும் தன்னுடைய இயலாமை குறித்து தன் மீதான பரிதாபம் இருக்கிறது. 

அழுத்தமாக தனித்து தெரியும்படி அல்லாமல் போகிற போக்கில் எளிமையாக உதிர்க்கப்படும் மேற்கோளிட்டுச் சொல்லத்தக்க வாக்கியங்கள் ஒவ்வொரு பத்தியிலும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருமுறைக்கு மறுமுறை வாசிப்பில் நுட்பங்களின் ஆழம் கூடுதலாக துலக்கமாகிறது. 

“என்னால அற்புதமாக இருக்க முடியாது – என் குடும்பம் என்னை நேசிக்க நான் துயரமா இருக்கணும்.”

“உங்களைச் சுத்தியிருக்கற எல்லாரும் மகிழ்ச்சியற்றவங்களா இருக்கும்போது நீங்க தொடர்ந்து மகிழ்ச்சியா இருக்கணும்னா நீங்க மிகப்பெரிய சுயநலவாதியா இருக்கணும்.”

“உங்க மூளையில ஒரு கொடூரமான எதிர்காலத்தைக் கட்டமைக்கறத விட, கடந்த காலத்த உங்க கனவுகள்ல அனுபவிக்கிறது சிறந்தது.”

“நாட்கள் நகல் எடுக்கப்பட்டக் காகிதத் தாள்களைப் போல இருக்கின்றன”

“எனக்குக் கனவுகள் வருவதில்லை என்பது வேறு. அல்லது நான் இல்லவே இல்லை என்பது போல், அவை ஒருவேளை என்னைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம்”

“ஒரு நினைவை விட மென்மையானது உலகத்துல வேறெதுவும் இல்ல.”

“ஒரு குறிப்பிட்ட சொற்றொடருக்கு நீங்கள் நன்கு பழகிவிட்டால், அது எதைக் குறிக்கிறது என்பதை நீங்கள் உணரவோ புரிந்துகொள்ளவோ மாட்டீர்கள்.”

நிகழ்வுகளின் காலவரிசையும் தொடர்ச்சிகளற்று முன்பின்னாகச் சொல்லப்படுகிறது. நேரடித் தன்மையிலிருந்து ஆரம்பித்து நனவோடைக்குள் நழுவிச் சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளியில் ஒரு சுற்று வந்து சங்கமித்து நிற்பது போன்ற வாசிப்பனுபவத்தைத் தருகிறது. கதாபாத்திரங்களின் உளவியல் தன்மையை வார்த்தெடுத்தது போலவே இருக்கிறது நாவலின் கட்டுமானமும்.

நாவலின் இறுதியில் இதுவரை சொல்லப்பட்டவற்றுள் எதுவெல்லாம் நிஜம் எதுவெல்லாம் கற்பனை என்று பிரித்தறிய முடியாத புதிரான சுழலுக்குள் ஆட்படுகிறோம். நிஜம் கற்பனை ஊகங்களுக்கு அப்பால் எளிதில் இறக்கி வைக்க முடியாத கனம் நம்மை யோசனைகளின் சஞ்சாரம் இல்லாத மௌனத்தில் ஆழ்த்துகிறது.

எந்தவித அறிமுகங்களும் இல்லாமல் வாசிக்கத் துவங்கியதில் இவ்வளவு சுவாரஸ்யமான வாசிப்பனுபவமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. சர்ரியல் பாணியிலான கதைசொல்லல் என்று இலக்கிய வகைமையில் அடையாளப்படுத்தலாம் தான், ஆனால் கதைசொல்லியின் கண்ணோட்டத்தில் நடப்பவை யாவும் எளிமையான சந்தேகத்திற்கு இடமில்லாத யதார்த்தமே – நம்முடைய பழக்கப்பட்ட கண்கள் காண முடியாத யதார்த்தம். யதார்த்தங்களின் மீதான நம்முடைய புரிதல்களை மிருதுவான வருடலுடன் சீண்டிப் பார்க்கும் கதைசொல்லல். மெதுவாக ஆழ்ந்து அனுபவித்து வாசிக்க நிர்ப்பந்திக்கும் படைப்பு. பேச்சிலும் கதைசொல்லிலும் தொனி மாறுபடக்கூடிய மொழிநடை. தமிழில் முதல் மொழிபெயர்ப்பாக இப்படைப்பை ஒருவர் தேர்வு செய்வது ஆச்சரியம் தான். ஆனால் உண்மையில் இப்படைப்பு தான் மொழிபெயர்ப்பாளரைத் தேர்வு செய்திருக்கிறது. வெகு சிறப்பாக உள்ளது ரெஜினா சந்திரா அவர்களின் மொழிபெயர்ப்பு.

சமுதாய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் ஒரு தனி மனித சுதந்திரந்தில் செலுத்தும் ஆதிக்கங்களைப் பேசும் நிறைய படைப்புகள் தமிழிலும் பிற மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. அதற்கும் அடிநிலையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்களற்ற மாந்தர்களின் பேசப்படாத இருண்மை உலகம் புனைவிலக்கியங்களில் அரிதாகவே தட்டுப்படுகின்றன. அப்படியான அரிதான கருப்பொருளில் உருவாகியிருக்கும் படைப்பு “பச்சைக் காகம்”.

***

ந.ரஞ்சித் குமார் – சொந்த ஊர் தென்காசி அருகே சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அச்சு ஊடகங்களில் தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: ranjithlogin01@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here