Saturday, May 2, 2026

விமோசனம் 

அருண் பிரகாஷ் ராஜ்

ஞ்சுண்டபுரத்தைப் பற்றி இதிகாஷ் என்னிடம் அத்தனை ஆர்வமாக சொன்ன போது, எனக்கு உண்மையில் ஆச்சரியமாகவே இருந்தது. திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் இப்படியொரு ஊர் இருப்பதையோ, அங்குவோர் பிரம்மாண்டமான கோவில் இருப்பதையோ இதற்கு முன்பாக நான் கேள்விப்பட்டதில்லை. இத்தனைக்கும் கடந்த ஐந்தாண்டுகளாக நானும், அவனும் சேர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பழமையான கோவில்களைப் பார்வையிடுவதிலேயே எங்களது விடுமுறை நாட்களையெல்லாம் செலவிட்டிருந்தோம். எங்கள் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்த பாலுசாமி சார் ஏற்பாடு செய்திருந்த மகாபலிபுரம் சுற்றுலாவில் கலந்துக்கொண்டதில் இருந்து எங்களை இந்தக் கோவில் பைத்தியம் தொற்றிக்கொண்டது. அங்கிருந்த கிருஷ்ண மண்டபத்தையும், அர்ஜுன தபசு சிற்பத் தொகுதிகளையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நின்றபடி அவர் விளக்கி சொன்ன விதம், பூக்களில் இருக்கும் மிக சுவையான தேன் துளிகளையெல்லாம் எங்களைப் பருகச் செய்து போதையேற்றிவிடுவதைப் போல இருந்தது. அன்று தொடங்கிய கோவில்களை நோக்கிய எங்களது பயணம், நானும் இதிகாஷும் வேலைக்கு சென்ற பிறகும் முடிவடையவில்லை. 

அன்றைய அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, வித்யாவுடன் சிங்காரத்தோப்பில் அத்தோ சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இதிகாஷ் கூப்பிட்டான்,

“மச்சான், வர சனிக்கெழம காலையில ஐஞ்சு மணிக்கே ராக்போர்ட்ல திருச்சி வந்திடுவேன். நான் போன வாரம் சொன்னேனே, நஞ்சுண்டபுரம் கோயில் பத்தி. ஒரு மணி நேரத்தில உன் கார்லயே போயிடலாம். நான் உனக்கும் அனுப்பின போட்டோஸ் எல்லாம் பாத்தியா? உண்மைலயே மார்வலஸ் அந்த கோவில். வேற எங்கயும் இவளோ அழகான கங்காதரர் சிற்பத்த நான் பாத்தது கிடையாது.”

அவன் அனுப்பிய படங்கள் எல்லாம் என்னையும் கிளர்ச்சியடையவே செய்தன. எப்படி இத்தனை ஆண்டுகள், திருச்சிக்கு அருகாமையிலேயே அமைந்திருக்கும் அற்புதமான சோழர் காலத்து கோவிலைப் பற்றி தெரியாமல் இருந்தது என்கிற கேள்வி என்னுள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன், அவ்வூரைப் பற்றி முதன்முதலாக சொன்னபோதே, இணையத்தில் நஞ்சுண்டபுரத்தைப் பற்றித் தேடினேன். அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஏதோ பழைய புத்தகத்தில் இருந்து அவ்வூரில் இருக்கும் அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றிய குறிப்புகளையும், புகைப்படங்களையும் எனக்கு இதிகாஷ்தான் மெயில் அனுப்பியிருந்தான். திருச்சியில் இருக்கும் சில நண்பர்களிடம் நான் விசாரித்தேன். யாருக்கும் அந்த ஊரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கவில்லை. 

இதிகாஷ் திருச்சி வந்ததும், தில்லை நகர் சங்கீதாவில் ஏழு மணிக்கெலாம் சூடாக மினி டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம். பத்து கிலோ மீட்டர், திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் சென்றுவிட்டு, பிறகு இருபது கிலோ மீட்டர் தூரம் சின்னஞ்சிறு கிராமங்கள் வழியாக பயணிக்குமாறு கட்டளையிட்டது கூகுல் மேப். தூரம் குறையக் குறைய, நாங்கள் கடக்கும் கிராமங்களின் அளவு சிறிதாகிக் கொண்டேயிருந்தன. குண்டும் குழியுமான, குறுகிய மண் பாதையில் நாங்கள் ஊர்ந்தப்படி நஞ்சுண்டபுரத்தை அடைந்த போது, அவ்வூரின் அமைப்பு எங்களை வியப்படையச் செய்தது. 

உயர்ந்த மதில் சுவர்களோடு ஒரு கோட்டையைப் போல எழுப்பப்பட்டிருந்தது அகத்தீஸ்வரர் ஆலயம். அக்கோவிலும், அக்கோவிலை சுற்றியிருக்கும் நான்கு தெருக்கள் மட்டும்தான் நஞ்சுண்டபுரம். கோவிலுக்குள் நுழையும் முன்னர், காரிலேயே அந்த நான்கு தெருக்களையும் சுற்றிவந்தோம். இருந்தது முப்பது வீடுகள். அவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்த நிலையில், வசிக்க யாருமற்று இருந்தன. ஒரேயொரு சாப்பாட்டுக் கடை இருந்தது. பயணக் களைப்பு நீங்க, அங்கு டீ குடித்துவிட்டு ஆலயத்திற்குள் நுழைந்தோம். ராஜகோபுரத்திற்கு அருகில் ஒரு பாட்டி மட்டும் பூக்கட்டிக் கொண்டிருந்தார். அவரையும் எங்களையும் தவிர கோவிலுக்கு அடுத்த சில மணி நேரத்திற்கு யாரும் வருவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. 

ஆர்வமார்வமாக, நானும் இதிகாஷும் கோவிலைச் சுற்றினோம். சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தது அவனுக்கு எந்த ஏமாற்றத்தையும் தந்திடாத வகையில் திகட்டத் திகட்ட கோவிலின் சுவர்களிலும், தூண்களிலும் புடைப்புச் சிற்பங்கள் நிரம்பி வழிந்தன. அவன் எனக்கு புகைப்படமாக அனுப்பிய பிரம்மாண்டமான, கங்காதரரோடு, திரிப்புராந்தகர் சிற்பமும் எங்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தது. அவ்விரு சிற்பங்களையும் அரை மணி நேரமாகவது பார்த்துக் கொண்டிருந்தோம். அவை சோழர் கால சிற்பமா அல்லது பிற்பாடு கோவிலை விரிவாக்கம் செய்த நாயக்கர் காலத்து சிற்பமாக என எங்களிடையே சின்ன விவாதம் கூட நடந்தது. வெவ்வேறு கோணங்களில், அவற்றை புகைப்படம் எடுத்துக்கொண்ட இதிகாஷ், இவைப் பற்றி நிச்சயமாக தான் முகநூலில் எழுதப் போவதாக கூறினான். 

எப்போதும் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்வையிட்டப் பிறகு, கடைசியாகவே நாங்கள் மூலவர் சந்நிதிக்கு போவோம். ஒரு வேளை கூட்டம் அதிகம் இருக்கிறதென்றால், மூலவரைப் பார்க்காமலேயே நாங்கள் சென்றுவிடுவதும் உண்டு. இதனாலேயே நான் வீட்டில் உள்ளவர்களோடும், மற்ற உறவினர்களோடும் கோவிலுக்கு சென்றால் என்னை வினோதமாகவும் எரிச்சலோடும்தான் பார்ப்பார்கள். ஆனால், அகத்தீஸ்வர கோவில் சிற்பங்களை நாங்கள் பொறுமையாக பார்த்து முடிக்கும்வரை, வேறு எந்த பக்தரும் கோவிலுக்குள் வரவில்லை. எனவே, துணிந்து மூலவர் சந்நிதிக்கு சென்றோம். கறுத்த சிவலிங்கமும், அதன் மீது ஒரு குடையைப் போல ஐந்து தலை நாகமும் கருவறையில் தென்பட்டது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கோவில் அர்ச்சகர், நாங்கள் வரும் சப்தம் கேட்டு கண்விழித்து, மெல்ல சூடமேற்றி தீபாரதணைக் காட்டினார். அவ்வெளிச்சத்தில், அந்நாகத்தின் பத்து கண்களும் ஒளிர்வாதாக எனக்குத் தோன்றியது. 

அய்யரின் தட்டில் நூறு ருபாய் போட்ட இதிகாஷ், அவரிடம் கோவிலின் தலப்புராணம் குறித்துக் கேட்டான். நன்றாக சிரித்தப்படி அவரும் கதையைச் சொன்னார். 

“அதாவது தம்பி. பல்லாயிரம் வருசத்துக்கு முன்னாடி இங்க அகத்தியர் கடுமையா தவம் பண்ணினார். அவருக்கு, மகேஸ்வரன் திருமண கோலத்தில பார்வதி தேவியோடு இங்க காட்சிக் கொடுத்தார். அவுங்க மறஞ்சதும், சுயம்புவா லிங்கம் இந்த எடத்துல உருவாச்சு. அப்புறம், ரொம்ப காலம் கழிச்சு, சுந்தர சோழர் கனவுல இந்த இடம் வர, அவர்தான் சுயம்புலிங்கத்தை சுத்தி இந்த கோயில கட்டினாரு.”

“அப்படியா! அவ்வளோ பழமையான கோவிலா சாமி இது. பொதுவா, இந்த மாதிரி பெரிய கோவில் இருந்தா, ஊரும் பெருசா இருக்குமே. இங்க நஞ்சுண்டபுரத்தில ஆளுங்க ரொம்ப பேரு இருக்கிற மாதிரியும் தெரியலயே.”

”நீங்க ஊர்ல கேட்டீங்கனா, ஆளாளுக்கு ஏதோ சாபம்னு கதை விடுவாங்க. அதெல்லாம் நம்பாதீங்க. ஊர்ல, மழ சரியா இல்லாததால விவாசயமும் பண்ணமுடியல. அதான், எல்லாரும் பஞ்சம் பொழைக்க வேற ஊருக்குப் போயிட்டாங்க.”

பிறகு அய்யரிடம் விபூதி வாங்கி பூசிக்கொண்டு, கோவிலைவிட்டு கிளம்பினோம். அப்போது, மண்டபத்தில் ஆங்காங்கு சில பூனைகள் ஓடுவதைக் கவனித்தேன். வித்யாவிற்கு பூனைகள் என்றால் உயிர். எங்கே பூனைகளைப் பார்த்தாலும், அவள் அவற்றோடு கொஞ்ச நேரம் விளையாடாமல் இருக்க மாட்டாள். நாய்களைப் போலயில்லை பூனைகள். அவ்வளவு எளிதாக மனிதர்களை தன்னிடம் அண்டவிடாது. ஆனால், பூனைகள் எப்படி வசியம் செய்து தனதருகே வர செய்வது எனும் வித்தை அவளுக்குத் தெரியும். அவளோடு இருப்பதால், நானும் அதைப் பழகிக் கொண்டேன். எனவே, கோவில் மண்டபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பூனைகளை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீரங்கம் கோவிலில் நானும் இவ்வாறு பூனைகள் திரிவதைப் பார்த்திருக்கிறேன். அங்குள்ள பூனைகள் நன்றாகக் கொழுத்திருக்கும். ஆனால், இங்கிருப்பவையோ எலும்பும் தோலுமாக இருந்தன. என்னைப் பார்த்ததும், சில பூனைகள் பசிக்குரலை எழுப்பியப்படி அருகே வந்தன. 

“இந்த பூனைங்களுக்கு பால் இல்லாட்டி தயிறு வாங்கி தரலாமாடா?”

“என்னடா, வித்யாவோடு சேந்து உனக்கும் இந்த பூனை பைத்தியம் தொத்திக்கிச்சா?”

“அப்படிதான்னு நினைக்கிறேன். வரியா, நாம காலையில டீ குடிச்ச கடையில ஏதாவது வாங்கிட்டு வரலாம்.”

“என்னனு தெரியல. நல்ல காலு வலி. நைட்டு ட்ரெயின்ல சரியாவும் தூங்கல. டையர்டா இருக்கு. நீ போய் வாங்கிட்டு வா. நான் இங்கயே உக்காந்திருக்கேன்.”

கடையில் இருந்து தயிர் பாக்கெட்டுகள் வாங்கி வந்த போது மண்டபத்திலேயே தூணில் சாந்து, காலை நீட்டியப்படி உறங்கிப் போயிருந்தான் இதிகாஷ். நானும் அங்கிருந்த காலி தேங்காய் மூடியில் தயிரை ஊற்றிவிட்டு சற்று கண்ணயர்ந்தேன். என்னையும் அறியாமல், நெடு நேரம் தூங்கிவிட்ட என்னை வெயில்தான் முகத்தில் அரைந்து எழுப்பிவிட்டது. மணி மதியம் பன்னிரெண்டு. இதிகாஷ் அருகே இருக்கிறானா என தேடினேன். இன்னும் அவன் தூக்கத்தில் இருந்து மீளவில்லை. பிறகு, தேங்காய் மூடியை எனது கண்கள் பார்வையிட்டன. பூனைகள் அதில் ஊற்றப்பட்டிருந்த தயிரை காலி செய்துவிட்டன. எனக்கு, உடலெல்லாம் அசாத்தியமான அசதி. மீண்டும் படுத்துவிட்டேன். இதிகாஷ் எழுப்பிவிடும் வரை தூங்கலாம் என நினைத்துக்கொண்டேன். 

ஆழ்ந்து நித்திரையில் கிடந்த என்னை ஒரு கொடுங்கனவு ஆக்கிரமித்தது. இருள் சூழ்ந்த ஒரு காட்டில், கண்கள் ஒளிர என்னையும், இதிகாஷையும் ஐந்து தலை நாகம் துரத்துவதுப் போன்ற கனவது. தப்பிப் பிழைப்பதற்காக, நாங்கள் இருவரும் எங்கெங்கோ ஓடினோம். கடைசியாக ஒரு மரத்தில் மோதினோம். யோசனை செய்யாமல், இதிகாஷ் மரத்தின் மீது ஏறத் தொடங்கினான். நான், பயத்தோடு தரையிலேயே இருந்தேன். ஆனால், நாகம், என்னை விட்டுவிட்டு மரத்தின் மீதேறி மிக ஆக்ரோஷமாக இதிகாஷைத் தீண்டியது. கனவில் அவன் அலறிய சபதம் கேட்டு நான் பதட்டத்தோடு கண் விழித்தேன். சூரியன் மங்கத் தொடங்கியிருந்தது. இதிகாஷ் எனதருகே முனங்கியப்படி படுத்திருந்தான். அவனை எழுப்ப முயற்சித்தேன். ஆனால், அவன் கண் விழிக்கவில்லை. அவனது தலையையும், கழுத்தையும் தொட்டுப்பார்த்தேன். நெருப்பைப் போல அவனுடல் கொதித்தது. 

பையில் வைத்திருந்து பாட்டிலில் இருந்து தண்ணீரை அவன் மீது தெளித்தும் பார்த்தேன். அவன் வேதனையில் சுயவுணர்வில்லாமல் முனங்கியப்படி இருந்தான். இதுவரை இப்படி ஏதும் இதிகாஷுக்கு நடந்ததில்லை என்பதால், அவனுக்கு என்ன பிரச்சனை என்றே புரியாமல் குழம்பித் தவித்தேன். எப்படியாவது அவனை கார் வரைக் கூட்டிக்கொண்டு போனால் போதும், பிறகு அருகே இருக்கும் ஏதாவது ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்துவிடலாம். அவனைத் தூக்க முயற்சித்தேன். தடித்த அவனுடலை என்னால் தரையில் இருந்து அசைக்கவே முடியவில்லை. வேறெதுவும் யோசிக்காமல், உதவிக்காக கோவிலுக்கு வெளியே ஓடினேன். தனது பூக்கடையை அடைத்துக் கொண்டிருந்த கிழவியிடம் விவரத்தைக் கூறினேன். அவர் ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வருவதாக சொன்னார். நான் மீண்டும் மண்டபத்திற்கு சென்று, இதிகாஷின் அருகே அமர்ந்துக் கொண்டேன். இரண்டு பூனைகள் எங்களை சற்று தூரத்தில் இருந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. 

கிராமத்து ஆட்கள் சிலர் பூக்கடைப்பாட்டியுடன் கோவில் மண்படத்திற்குள் வந்து, என்னோடு சேர்ந்து இதிகாஷைத் தூக்கி காருக்குள் கிடத்த உதவினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கார் ஸ்டார்ட் ஆகவில்லை. எனக்கு உதவியவர்கள் காரைத் தள்ளவும் செய்தார்கள். இம்மியும் நகரவில்லை வண்டி. நான் பயத்திலும், பதற்றத்திலும் செய்வதறியாது கிடந்தேன். இதிகாஷ் ’பாம்பு பாம்பு’ என உளறிக்கொண்டிருந்தான். அவனுடல் முன்பைவிட பல மடங்கு அதிகமாக அனலடித்தது. இதே நிலை நீடித்தால், அவன் சாம்பாலாகிவிடுவானோ என்றுகூட எண்ணத் தோன்றியது. சிக்கலை உணர்ந்த ஊர்க்காரர்கள், உள்ளூர் வைத்தியர் வீட்டில் இதிகாஷைக் கூட்டிச் செல்வதாக அவனைத் தூக்கினார்கள். அவர்கள் கிளம்பிய பிறகே, அது மடத்தனமான முடிவு என்றெனக்கு தோன்றியது. 

“வைத்தியரெல்லாம் வேண்டாமங்க. அது இவனுக்கு சரிப்பட்டு வராது. டாகடர்கிட்டதான் போகனும். அப்போதான் என்ன ஏதுன்னு கண்டுபுடிச்சி, கரெக்டா குணப்படுத்த முடியும்.”

“ஒன்னும் பயப்புடாதிங்க தம்பி. வைத்தியரொட பொண்ணு பெரம்பலூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில நர்ஸா வேல பாக்குறாங்க. கொஞ்சம் இங்கலீசு மருந்து மாத்திரைய அவுங்க வீட்லயே வச்சிருக்காங்க.”

அவர்களின் பதில் என்னை மௌனமடையச் செய்தது. ஆனால், என்னுடைய அவநம்பிக்கை முழுமையுமாக தணியவில்லை, எனவே, மொபைலில் இருந்து ஆம்புலன்சுக்கு தகவல் சொன்னேன். ஊர் பேரைக் கேட்டதும், அங்குவரை வர முடியுமாயெனத் தயங்கியவர்கள், பிறகு நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்ததும் கிளம்பி வருவதாக சொன்னார்கள். ஆனால், நஞ்சுண்டபுரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தடைய ஒரு மணி நேரமாவது பிடிக்குமாம். 

வைத்தியரின் வீட்டு வாசலில் அவ்வூரை சேர்ந்த இருபது முப்பது ஆட்களும் கூடிவிட்டார்கள். அதில் அதிகமாக வயதானவர்களே இருந்தனர். உள்ளே, வைத்தியரும் அவர் மகளும் இதிகாஷுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றாலும், ஜுரம் குறைய ஊசி குத்தியிருப்பதாக அந்த பெண் என்னிடம் கூறினார். ஆம்புலன்ஸ் வந்ததும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கே கூட்டிச் சென்றுவிடலாம் என தைரியமும் சொன்னார். அங்கிருந்த மற்றவர்களெல்லாம், ஒரு மரத்தருகே கூடி தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார்கள். சில வயதான பெண்கள், அம்மரத்தடியில் இருந்த குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வணங்கினார்கள். நான் ஆம்புலன்ஸ் டிரைவரை அழைத்தேன். இன்னும் அரை மணி நேரம் ஆகுமென்றார்.

அப்போது மரத்தருகே இருந்த பெரியவர்கள் என்னைக் கூப்பிட்டார்கள். ஊர் வைத்தியர் என்னிடம் ஒரு விசித்திரமான கேள்வி கேட்டார். 

“உன் நண்பனோடு பூர்வீகம் எந்த ஊர்னு தெரியுமாப்பா?”

“இல்லங்களே அய்யா. அவன் ஊர் சென்னைதான். இத ஏன் இப்போ கேக்குறீங்க?”

“அவன் பிறந்தது சென்னை சரி. அவுங்க அப்பா, தாத்தா எல்லாரும்?”

“எனக்கு தெரியலங்களே. ரொம்ப காலமாக அவுங்க குடும்பம் மெட்ராஸ்லயே இருக்காங்கனுதான் தெரியும். ஆனா, எப்போ அங்க குடியேறுனாங்கங்கிற விவரமெல்லாம் தெரியாதே எனக்கு. ஏங்க, இந்த நேரத்தில இந்த விவரம் ரொம்ப முக்கியமா?” 

என சற்று எரிச்சலடைந்து அவர்களிடம் பேசினேன். மிகவும், பொறுமையாக தனது பேச்சை தொடங்கினார் வைத்தியர். 

“தம்பி இந்த ஊருக்கு ஒரு பெரிய சாபமொன்னு இருக்கு. ஒரு காலத்தில் நூத்து கணக்குல மனுசங்க வாழந்த ஊரு இது. பெரிய பெரிய ராஜாக்களெல்லாம் இந்த கோவிலைக் கட்டி, கோவிலை சுத்தி இருந்த காட்டை அழிச்சு இந்த ஊரையும் உருவாக்குனாங்க. மாசி மாசம் நடக்குற கோவில் தேர் திருவிழாவுக்கு நாட்டுல எங்கெங்க இருந்தோ எல்லாம் சாமியாருங்களும், ஜனங்களும், வியாபரிங்களும் இங்க வருவாங்க. ஆனா, அந்த திருவிழாவையும் ஜனக்கூட்டத்தையும் இப்போ இந்த ஊர்ல இருக்கிற யாருமே பாத்தது இல்லை. எனக்கு எழுபது வயசாவுது. என்னுடைய அப்பா காலத்திலயும், திருவிழா நடந்தது கெடயாது. தாத்தா காலத்திலயும் கெடயாது. எல்லாம், பல நூறு வருசத்துக்கு முன்னாடி நடந்தது. 

ஒரு திருவிழாவுக்கு, வடக்க இருந்து கயித்துல நடந்து வித்த காமிக்கிற குடும்பம் இங்க வந்துச்சு. புருஷன், பொண்டாடி, அப்புறம் அவுங்களோட சின்ன பொண்ணு. அவுங்க அரையும் குறையுமாதான் தமிழ் பேசுவாங்களாம். கோவில் திருவிழா முடியுற கடைசி நாளப்போ, அந்த வடநாட்டுகாரன், ரெண்டு பெரிய குச்சிய நட்டுவச்சு, அது மேல கயிறு கட்டி நடந்து வழக்கம் போல வித்தை காண்பிச்சிட்டு இருந்தான். எங்க ஊர் சின்னப் பையன் ஒருத்தன் வேடிக்கையா, அந்த குச்சிய தள்ளிவிட்டுடான். அந்த ஆளும் கீழ விழுந்து, பாறையில தலைய மோதி செத்துப் போயிட்டான். 

நம்ம ஊரு பைய பண்ண சேட்டையால ஒரு உசிரு போயிடுச்சேன்னு வருத்தப்பட்ட ஜனங்க, செத்துப்போனவனோட பொண்டாட்டியும் மகளும் தங்குறதுக்கு ஊர் எல்லையில குடிசைக் கட்டிக் கொடுத்தாங்க. அப்புறம் அவுங்க ரெண்டு பேரும் எங்க ஊர்லயே ரொம்ப காலம் தங்கியிருந்தாங்கலாம். காட்டுக்குள்ள திரியிற அஞ்சு குட்டி பாம்பை புடிச்சி பழக்கி, அம்மாவும் மகளும் பக்கத்துல இருக்கிற ஊர்களுக்கு போயி வித்தை காம்பிச்சு பொழப்பு நடத்திட்டு வந்தாங்க.

ஒரு முறை, சமயபுரம் கோவில்ல திருவிழா நடந்தப்போ, அந்த பொண்ணுக்கு நல்ல காய்ச்சல். அதனால, அவள குடிசையிலயே விட்டுட்டு, அந்த அம்மா மட்டும் பாம்புகள கூட்டிட்டு சமயபுரத்துக்குப் போன. இரண்டு நாள் கழிச்சு ஊருக்கு திரும்பி வந்தப்போ, அவளோடு மக குடிசையில இல்ல. ஊரெல்லாம் பைத்தியக்காரி மாதிரி அவ தேடி அலைஞ்சாலாம். எங்கயும் அந்த பொண்ணு கிடைக்கல. நாலு நாள் கழிச்சு அந்த சின்னப்பொண்ணு கோவில் நந்தவனத்தில பொணமா கிடந்தா. அவ உடம்பெல்லாம் இரத்த காயம். சில பேரு சேந்து அவள கெடுத்துக் கொன்னுட்டாங்க. தன்னுடைய மகளோடு உடம்ப கட்டிப்பிடிச்சு அழுததால, அந்த அம்மாவோட உடம்பும் முழுக்கவும் ரத்தம். அந்த கோலத்தில அவளப் பாக்க துர்க்கயம்மன் மாதிரி இருந்ததா எங்களுக்கு கதை சொல்லியிருக்காங்க. 

எங்க ஊர்ல அவளோட மொத்த குடும்பத்தையும் பறி கொடுத்ததுனால, இந்த நஞ்சுண்டபுரத்தையே சபிச்சா. அவளோடு மகள கெடுத்து கொன்ன ஆட்களோட வம்சமே அழியுற வரை எங்க ஊர்ல ஒரு பொட்டு மழை வராதுன்னு சாபம் கொடுத்துட்டு, காட்டுக்குள்ள ஓடிப் போயிட்டா. அப்போயிருந்து, இன்னைக்கு வரைக்கும் எங்க ஊர்ல மழையே பெய்யல.”

“அந்த பொண்ண கொன்னவுங்க யாரு? அந்தம்மா கொடுத்த சாபப்படி அவுங்க சாவலயா?”

”ஆரம்பத்துல ஊர் காரங்களால யாரு அந்த பாவத்த செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்க முடியல்ல. அந்த அம்மா சாபம் கொடுத்த நாப்பத்தி எட்டாவது நாள்ள இருந்து, எங்க ஊர்ல சில இளந்தாரி பசங்களுக்கு விஷக்காச்சல் வர ஆரம்பிச்சதாம். காய்ச்சல் வந்த ராத்திரையே அவுங்க செத்தும் போயிட்டாங்க. அப்படி காய்ச்சல் வந்தவங்க எல்லாம், தங்கள பாம்பு கடிச்ச மாதிரி கனவு கண்டதா மயக்கத்துல உளறினாங்களாம். எங்க ஊர் ஜனங்களுக்கு புரிஞ்சிடுச்சு. அந்த சின்ன குழந்தைய கொன்னுவங்க தான் விஷ காய்ச்சலால சாவுறாங்கன்னு. ஊர்ல மறுபடியும் மழைப்பெய்யனும்னா, இது நடந்தே ஆவனும்னு வேற வழியில்லாம எல்லாரும் இளந்தாரி பசங்க சாவுறத பாத்துட்டு இருந்தாங்க. ஒரு மாசத்துல எட்டு பேர் செத்துப் போனாங்க. சரி, சாபம் அதோட முடிஞ்சதுன்னு எங்க ஊர்காரங்க எல்லாரும் நினைக்க, அப்புறம் அந்த பசங்கோளட குடும்பத்த சேந்த ஆம்பளங்களும் அதே மாதிரி விஷக்காய்ச்சல் எடுத்து சாக ஆரம்பிச்சாங்க. எந்த பாவமும் பண்ணாத வயசானவங்களும், சின்ன பசங்களும் சாகுறத பொறுக்காத அப்போயிருந்த ஊர் வைத்தியரு அவுங்கள காப்பாத்த முயற்சிப் பண்ணினார். எந்த மருந்தும் அவுங்கள குணமாக்கல. அவரோடு எந்த மந்திரமும் அந்த குடும்பங்களோட மரணத்தை நிப்பாட்டல. ஒரு வருசம்தான். அந்த அந்த எட்டு பசங்களோட குடும்பத்தில இருக்கிற எல்லா ஆம்பளங்களும் செத்துப் போயிட்டாங்க.”

“நீங்க சொல்லுறபடி பாத்தா, அந்த சாபம் முடிஞ்சிடுச்சுதானே?”

“அதான் இல்ல. எட்டு குடும்பம் அழிஞ்சாலும், ஊர்ல மழையே பெய்யல. இங்க இருந்த ரெண்டு குளமும் வத்திடுச்சு. விவசாயத்துக்கு வழியில்ல. ஊர்ல சுத்திட்டு இருந்த ஆடு-மாடுங்க எல்லாம் தண்ணியில்லாம செத்துட்டே போச்சுங்க. அப்புறம்தான் விசயம் செரிஞ்சது. ஊர் ஜமீந்தாரோட பையனும் அந்த எட்டு பசங்களோட சேந்துதான் அந்த பாவ காரியத்தை பண்ணியிருந்திருக்கான். மொதல சில பேர் சாக ஆரம்பச்சதுமே, ஒரு மளையாள மந்திரவாதிகிட்ட விசயத்தை சொல்லி, இந்த சாபத்துக்கு என்ன விமோசனம்னு விசாரிச்சிருக்கார் ஜமீந்தார். அந்த மளையாளத்தான் சொன்னானம், அந்த அம்மா விட்ட சாபம் ஊர் எல்லை வரைக்குதான் எடுபடுமாம். அதனால, புள்ளைய ஊர விட்டு அனுப்பிடுங்கன்னு. யாருக்கும் தெரியாம ஒரு ராத்திரி அந்த பையன ஜமீந்தார் வெளியூருக்கு அனுப்பிட்டார். ஜமீந்தாரும் அவரு குடும்பத்துல இருக்கிற மத்த ஆண்களும் கூட அந்த வருசத்துலயே இறந்து போயிட்டாங்க. ஆனா, தப்பிச்சிப் போன அந்த பையன் சாவல. எங்கேயோ போயி அவன் வம்சத்தை வளர்த்திருக்கான். அந்த வம்சத்துல பிறந்த எல்லா ஆம்பளங்களும் செத்தாதான் தான் எங்க நஞ்சுண்டபுரத்துக்கு விமோசனம். தீயில எரிஞ்சுப் போன காடு மாதிரி, சாபத்துல அழிஞ்ச இந்த கிராமம் மறுபடியும் துளிர்க்கனும்னா அது மட்டும்தான் வழி.”

அந்த வயோதிக வைத்தியர் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. மிகவும் முட்டாள்தனமான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கதையை சொல்லி, அந்த ஜமீந்தார் குடும்பத்தின் வாரிசாக இதிகாஷ் இருக்கலாம் என அவர் நினைக்கிறார். அவரின் இந்த மூடக்கதையை காரணம் கட்டி, எங்கே அவரே இதிகாஷை கொன்றுவிடுவாரோ என பயந்தேன். நல்ல வேளையாக, அவர் என்னிடம் வேறு எதுவும் பேசுவதற்கு முன்பு ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆச்சரியப்படும்படியாக, அந்த ஊர்க்காரர்கள் யாரும் இதிகாஷை நான் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதைத் தடுக்கவில்லை. செவிலியராக இருக்கும் மருத்துவரின் மகளும் என்னுடன் ஆம்புலன்சில் ஏறினார். அவரிடம் இந்த கதையைப் பற்றி கேட்டேன். 

“ஆமாம் சார். அந்த அம்மாவோட சாபம்தான் எங்க ஊர் நிலைமைக்கு காரணம்னு ஜனங்க நம்புறாங்க. அதோ அந்த மரத்திடியில குங்குமம் தடவின ஒரு சாமி செல இருக்கே, அதுதான் அந்த அம்மானு நினைச்சு கும்பிடுறாங்க. உங்க பிரண்டுக்கு இப்படி திடீர்னு காய்ச்சல் வந்ததும், எல்லாருக்கும் இவர்தான் ஜமீந்தார் வம்சமோன்னு சந்தேகம். ஆனா, எதுவும் உறுதியா தெரியாததால அவுங்களும் குழப்பத்துலதான் இருக்காங்க.”

மறுநாள் இரவு வரை மருத்துவமனை ஐசியூவில் இருந்தான் இதிகாஷ். அதன் பிறகு அவன் தாக்குப்பிடிக்கவில்லை. இறந்துவிட்டான். அங்கிருந்த மருத்துவர்களால் அவன் இறப்பிற்கான காரணம் இதுதான் எனத் துல்லியமாக்க கூற முடியவில்லை. அவனுடைய பிரேதத்தை நான் தான் சென்னையில் இருக்கும் அவனது வீட்டிற்கு கொண்டு சேர்த்தேன். அவனுடைய அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நண்பர்களும், சில தூரத்து உறவினர்களும் வந்திருந்தனர். இதிகாஷின் உடல் எரியூட்டப்படும் வரை நான் அவர்களுடனேயே இருந்தேன். என் நெருங்கிய நண்பனை இழந்த சோகமும், அவனைக் காப்பாற்ற முடியாமல் போனதே என்கிற குற்றவுணர்வும் மிகத் தீவிரமாக இம்சித்தது. இனிமேல், எந்த கோவிலுக்கும் சிற்பத்தை காண்பதற்காக என்னால் போக முடியாது என உறுதியாக நம்பினேன். இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை காலமாகும் என்று என்னால் கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. 

எல்லாவற்றையும் முடித்துவிட்டு, மீண்டும் திருச்சிக்கு திரும்புகையில், ஏதோவொரு உந்துதல் ஏற்பட்டு, வண்டியை நஞ்சுண்டபுரத்தை நோக்கி செலுத்தினேன். 

அந்த மே மாத வெயிலில், தமிழ்நாடே கருகிக்கொண்டிருக்க, நஞ்சுண்டபுரத்தில் மட்டும் லேசாக சாரலடித்துக் கொண்டிருந்தது. வண்டியை எங்கும் நிறுத்த மனமின்றி, கோவிலைச் சுற்றியிருக்கும் நான்கு வீதிகளிலும் காரிலேயே வலம் வந்தேன். வைத்தியரின் வீட்டருகே இருந்த மரத்தடியில் நிறுவப்பட்டிருந்த அந்த அம்மனின் சிலையின் மீதிருந்த குங்குமமெல்லாம் மழைச் சாரலில் கறைந்துப் போயிருந்தது. பிரக்ஞையின்றி ‘விமோசனம்’ எனும் வார்த்தையை நான் மெலிதாய் உதிர்த்தேன். 

***

அருண் பிரகாஷ் ராஜ் – வரலாற்று துறை ஆய்வு மாணவர், தில்லி அம்பேத்கார் பல்கலைகழகம். இவர் எழுதிய சிறுகதைகள் கணையாழி, அகநாழிகை இதழ்களிலும், வாசக சாலை இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் எனும் நூலை நண்பருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல் : arunprakashrajn@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here