லாவண்யா சுந்தரராஜன்
சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் நீண்ட காலம் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் சென்ற பிறகே, அவர்கள் நம்முள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் நம்முள் எவ்வளவு பரப்பை அமைதியாகக் கைப்பற்றியிருந்தார்கள் என்பதும் புரிகிறது. காலத்தின் அளவால் அல்ல, அவர்கள் நம்மிடம் விட்டுச் செல்லும் சிந்தனைகளாலும் குரல்களாலும் நினைவுகளாலும்தான் அவர்களின் இருப்பு அளவிடப்படுகிறது. அவர்கள் இல்லாத இடங்கள்கூட அவர்களின் வடிவத்தைத் தாங்கிக் கொண்டே இருக்கும். அவர்கள் பேசாத மௌனங்களிலும் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அரவிந்தன் அப்படிப்பட்ட மௌனக் குரல்.
அவரை நான் சந்தித்து உரையாடிய சந்தர்ப்பங்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே. தினசரி பேசுவது போன்ற பழக்கம் இல்லை. எல்லாமே அவ்வப்போது நிகழ்ந்த சந்திப்புகளின் தொகுப்பாக, ஒளிந்து கிடக்கும் சில நிமிடங்களின் ஒட்டுகளாக நினைவின் இடுக்குகளில் பதித்திருக்கிறது. இலக்கிய நிகழ்வுகள், காலச்சுவடு குடும்ப விழாக்கள், புத்தகக் கண்காட்சிகளின் கூட்ட நெரிசல், அந்த சூழல்களில் எங்கோ நின்றபடி, சில நிமிடங்கள் நடந்த உரையாடல்கள். அப்போது அவை சாதாரணமாகத் தோன்றின. ஆனால் இன்று நினைத்துப் பார்க்கும்போது, அந்தச் சில நிமிடங்களே நீண்ட அத்தியாத்தின் விதைகளாக இருந்திருக்கின்றன. அவை அப்போது சாதாரண உரையாடலின் நீர்குமிழிகள் மட்டுமே. இன்று நினைத்தால், அவை காலத்தின் மேற்பரப்பில் எழுதப்பட்ட அழியாத குறியீடுகள்.
ஷாலினி ஜெயக்குமார் திருமண நிகழ்வு, காலச்சுவடு கண்ணன், அரவிந்தன், சுகுமாரன் இவர்கள் சேர்ந்து உருவாக்கிய அந்தச் சூழல் தனித்துவமான ஆற்றல் கொண்டது. சிரிப்பு அங்கே இயல்பான மொழி. ஒருவர் தொடங்கினால் மற்றவர் அதைத் தொடர்ந்து, அந்தச் சிரிப்பு வட்டமாக விரியும். சிரிப்பு அவர்களிடம் செயல் அல்ல, பரிமாற்றம். ஒருவர் கிண்டலைத் தொடங்கினால் மற்றவர் அதைத் தொடர்வார்; ஒரு சொல்லைப் பிடித்து அதைச் சிரிப்பாக உருவாக்கும் வரை விடமாட்டார்கள். அந்த வட்டத்தின் ஓரத்தில் நின்று நான் ரசித்தேன். சில நேரங்களில் அந்தச் சிரிப்புக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். சில நேரங்களில், குழந்தையைப் போல அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த நாளில், கிண்டல்களின் நடுவே வெறொரு சிறிய வெளிப்பாடு. அரவிந்தன் எழுபதுகளின் சில திரைப்பாடல்களை பாடத் தொடங்கியபோது, வேறொரு பரிமாணத்தில் தெரிந்தார். அவரது குரல் புறவெளிக்கான குரல் அல்ல; உள்ளிருந்து எழுந்த ஆத்மார்த்தமான குரல். சில மனிதர்களின் ஆழம், அவர்கள் பேசும் போது அல்ல, அவர்கள் எதையாவது உணர்ந்து வெளிப்படுத்தும் போதுதான் தெளிவாகிறது. அந்தத் தருணம் அப்படிப்பட்டது. சுகுமாரனும் அரவிந்தனும் உரையாடும் சில தருணங்களை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அந்த உரையாடல்கள் வெறும் கருத்துப் பரிமாற்றங்கள் அல்ல. அவை இலக்கியத்தின் அடுக்குகளைத் திறக்கும் முயற்சிகள். வரிகளினிடையே மறைந்திருக்கும் பல பரிமாணங்கள், சொற்களின் பின்னணியில் நிற்கும் வரலாறு, பிறர் கவனிக்காத நுணுக்கங்கள் அவற்றை அவர்கள் மெதுவாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்கள். அந்த உரையாடல்களை மௌனமாகக் கேட்டாலே, நம் வாசிப்பு மாறத் தொடங்கும். வாசிப்பது என்பது செயல் அல்ல; அதொரு அனுபவமாக மாறும் என்பதை அவர்களின் உரையாடலில் இருந்தே நான் அறியத் தொடங்கினேன்.
அரவிந்தன் கூர்ந்த வாசகர். வாசிப்பின் உள் நரம்புகளை உணரும் ஒருவர். தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான தடம் பதித்தவர்களில் ஒருவர். காலச்சுவடு பதிப்பாசிரியராக அவர் செய்த பணி தொழில் மட்டுமல்ல சிந்தனை முயற்சி. இலக்கியம் என்பது வெறும் எழுத்துக்களின் தொகுப்பு அல்ல என்ற நம்பிக்கையோடு அவர் செயல்பட்டார். புதிய எழுத்தாளர்களுக்கு அவர் ஊக்கமளிப்பவர். அவர்களின் எழுத்தை வாசித்து, அதனை மேம்படுத்த தேவைப்படும் கருத்துகளைச் சொல்பவர். நல்ல பதிப்பாசிரியரின் பங்கு என்ன என்பதற்கு அவரது செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டு. என் எழுத்துப் பயணத்திலும் அவருடைய இடம் தனித்துவமானது. ‘காயாம்பூ’ நாவலின் இரண்டாம் வரைவு முதல் இறுதி வரைவு வரை அந்த நூலை குறைந்தது மூன்று முறை முழுமையாக வாசித்தவர் அவர். அது வாசிப்பு மட்டுமல்ல, படைப்பின் வளர்ச்சியில் பங்கேற்ற ஈடுபாடு. அந்த உரையாடல் ‘காயாம்பூ’ முதல் ‘முரட்டுப் பச்சை’, ‘நீலமிடறு’, ‘அதே ஆற்றில்’, ‘மாய மலர்’ வரை நீண்டது. ‘மாய மலர்’ தனது சரியான வடிவத்தை அடைய அவர் செய்த பங்களிப்பு முக்கியமானது. என் எழுத்துப் பயணத்தில் அவருடைய இடம் மிகவும் அமைதியானதாய் இருந்தாலும் மிகவும் ஆழமானது.
எழுத்தாளருக்கு மிக முக்கியமானது அவரது எழுத்தின் மீது யாராவது நம்பிக்கை வைப்பது. அது ஊக்கம் அல்ல, ஒரு சுமை; ஒரு பொறுப்பு. அந்த பொறுப்புச் சுமையை சுமக்கத் துணிந்தவர் அரவிந்தன். அந்த நம்பிக்கை, எழுத்தைத் தாண்டி செயல்படுவது. அந்த நம்பிக்கையின் பொருட்டு அவர் எனக்கு சில முக்கியமான பணிகளை அளித்தவர். அது எனது வாசிப்பை அதிகப்படுத்தும், எழுத்தைக் கூர்மையாக்கும் நோக்கமிருந்தது. காலச்சுவடு இதழில் சில கட்டுரைகள் எழுத வைத்தது, கருந்தரங்களில் பேச வாய்ப்பு கொடுத்தது என்று பட்டியலிட நிறைய விஷயங்கள் உண்டு. அந்த நம்பிக்கை, எழுத்தைத் தாண்டி செயல்படுவது. அரவிந்தன் எனக்கு அந்த நம்பிக்கையை அளித்தவர். அவரோடு உரையாடுவது எளிது. எந்த விஷயத்தையும் தயக்கமின்றி பேசக்கூடியவர். இலக்கியம் மட்டுமல்ல; வாழ்க்கையின் பல பரிமாணங்களிலும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியவர். சில நேரங்களில் நாம் நம்முள் சிக்கிக்கொள்வோம். அப்போது நம்மை வெளியே கொண்டுவர யாரோ ஒருவர் தேவை. அவரோடு பேசுவது தீர்வு அல்ல; ஒருவித தளர்வு. சிலரோடு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கசப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர் நல்ல நண்பராக மாறியிருந்தார். அவ்வாறான தருணங்களில் அவர் பதிலளிப்பவராக மட்டும் இல்லாமல், காதுகொடுத்துக் கேட்கத் தெரிந்தவராக இருந்தார். கேட்பது என்பது அரிதான கலை. அதில் வல்லவர் அவர். அந்தத் தருணங்களில் எரியும் தீயில் எண்ணெய் வார்க்காது தனது மென்மையான ஓரிரு வார்த்தைகளால் திசை திருப்பியவர்.
‘ராணியுடன் ஒரு தேநீர் விருந்து’ அவரது படைப்புகளில் நான் முதலில் வாசித்தது. அந்த மொழி வெளிப்படையாக எளிமையாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் கட்டுப்பட்ட ஒழுங்கு இருந்தது. வாசிக்க மொழியாக்கம் எந்த தடையையும் செய்யவில்லை. பின்னர் ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பின் தலைப்புக் கதையை வாசித்தபோது, பெண்ணியத்தை அவர் வேறு கோணத்தில் அணுகுகிறார் என்பது தெளிவானது. அதைச் சார்ந்து அவரோடு பேசிய போது அந்த கதையில் வரும் நாயகி போன்றோர் மீது அவருக்கு பரிவு அதிகம் என்றார். அந்தக் கதையையும் அவருடைய இன்னும் சில கதைகளையும் வாசித்து பேசிய போதும் பெரிதும் மகிழ்ந்தார். அவருடைய எந்த படைப்பைப் பற்றியும் படித்துப் பார்க்கச் சொல்லி தயங்காமல் சொல்வார். பன்முக ஆளுமை கொண்டவராக இருந்தும், இளம் எழுத்தாளர்களிடம் எந்தவித இலக்கியச் செருக்கும் இல்லாமல் பழகிய விதம் அவர் மேலிருந்த மரியாதையை இன்னும் உயர்த்தியது. சிற்றில் வழியாக அரவிந்தனுக்கு கருத்தரங்கம் ஒன்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஒருமுறை சுனில் கிருஷ்ணனோடு பேசிய போது சொல்லிக் கொண்டிருந்தேன். பட்டியலில் அவர் பெயர் சேர்த்திருந்தோம். அதை ஆலோசனைக் குழுவிடம் எடுத்துச் சென்று திட்டமிட்டு செயல்படுத்தும் தூரம் அதிகமில்லை. ஆனால் அவர் எங்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை. இவ்வளவு விரைவாக தனது எல்லா செயல்பாடுகளையும் நிறுத்திவிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
3.4.2026 காலை 8:39 மணிக்கு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அந்தச் செய்தி சென்றது. ஆனால் அதை வாசிக்க அவர் இல்லை என்பதை சில மணி நேரங்களில் தெரிந்துகொண்டேன். ஒரு செய்தி அதன் இலக்கை அடைந்து, அதன் பொருளை இழக்கும் தருணம். அது வெறுமையை உருவாக்குகிறது. அந்த வெறுமை, சொல்ல முடியாத ஒன்றாக உள்ளே தங்குகிறது. அன்று, ஜவகர் பதிவில் வெளியான சில புகைப்படங்களில் கண்ணனும் மைதிலியும் கமலாம்மாவும் அவரது உடலருகில் ரோஜா மாலையை அணிவிப்பது போன்ற அந்தப் புகைப்படம் என்னுள் அமைதியான உடைப்பை ஏற்படுத்தியது. பல மரணங்களை நாம் செய்தியாகக் கேட்கிறோம்; சிலவற்றை மட்டும் நாம் அனுபவிக்கிறோம். இது அப்படிப்பட்ட ஒன்று.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த காலச்சுவடு சந்திப்பில் இரண்டு நாட்கள் அவரோடு இருந்தோம். அவர் பேசும்போது வெளிப்பட்ட அறிவின் பரப்பு. அது விரிவான வரைபடம் போல. பல துறைகளில் அவர் கொண்டிருந்த அறிவு, எந்த இடத்திலும் சிக்கிக்கொள்ளாத சிந்தனை. அவை எல்லாம் அந்த உரையாடல்களில் வெளிப்பட்டன. கடந்த வாரம் ஏதோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவர் எனக்குக் கொடுத்திருந்த பணியொன்றைப் பற்றி கேட்ட போது “வார இறுதியில் செய்வேன்” என்ற என் பதிலுக்கு, “வார இறுதி அரசியல் போலவா?” என்ற அவரது பதில்- சமகாலத்தை ஒரு வாக்கியத்தில் சுருக்கக்கூடிய அவரது திறனை வெளிப்படுத்தியது.
அவரது இறுதிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெங்களூரிலிருந்து கிளம்பினோம். ஆனால் வாழ்க்கை எப்போதும் நம் விருப்பங்களுக்கு இணங்காது. தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் பொருட்டு வாகன சோதனைகளில் நின்ற நீண்ட வரிசை என நாங்கள் சென்றடையும் முன்னர் இருபது கிலோமீட்டர் தொலைவிலிருந்து செந்தூரனை அழைத்தோம். அவரது மைத்துனர் மணிகண்டன் அவர்களுக்கு தொலைபேசினோம். மயானத்துக்கு கொண்டு போயாச்சே நீங்க அங்க பேசுங்க என்றார். சரியாக ஒருமணி ஆறு நிமிடத்துக்கு செந்தூரனை அழைத்தோம், பள்ளிக்கரணைக்கு இன்னும் இருபத்தைந்து கிலோமீட்டர் தான் இருக்கு வந்துடறோமே என்றோம் இல்லை அக்கா ஷட்டரை திறந்து அனுப்பிட்டோம் என்றார். வண்டியருகே இருந்த கரும்புச்சாறு கடையில் பசுங்கரும்பை சக்கரங்களுக்கு இடையே வைத்தார் கரும்பைச் சாறாக்கும் பெண்மணி. அது மெல்லிய சத்ததோடு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே இருக்கியது. அது ஷட்டர் வழியே மெல்ல உள்ளே சென்று சாம்பலாகும் உடலை நொடி நேரம் நினைவூட்டியது. சில தருணங்களில் உலகம் தன் இயல்பான ஓட்டத்தில் செல்லும் விதமே நம்மைத் தூரமாக உணர வைக்கிறது.
அவரது வீட்டிற்குச் சென்றோம். அவர் இருந்திருந்தால் ஒரு புன்னகை, ஒரு நகைச்சுவை எங்களை வரவேற்றிருக்கும். இயல்பாகவே நகைச்சுவை உணர்வோடு பேசும் அரவிந்தனன் புகைப்படங்கள் எதிலும் சிரித்து நான் பார்த்ததில்லை. ஆனால் 3.4.2026 உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ளாத அரவிந்தன் நன்கு சிரிக்கும் புகைப்படத்தை 2.4.2026 அன்று பதிவேற்றியிருந்தார். அவர் முகத்தை இறுதியாக பார்க்காவிட்டால் என்ன? அந்த சிரித்த முகமே மனதில் தங்கியிருக்கும். அதற்காகத்தானோ என்னவோ நாங்கள் வரும்முன்னர் சாம்பலாவதற்கு கிளம்பிவிட்டார். ஒருவேளை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அந்த சிரித்த முகத்தை மட்டுமே என்பதை எல்லோருக்கும் சொல்லவே அப்படியொரு புகைப்படத்தை பதிவேற்றினாரா தெரியவில்லை. ஒரு மனிதரின் இறுதி நினைவாக அந்த சிரிப்பு. அது சோகத்தின் மத்தியில் அமைதியான ஆறுதல்.
அவருக்காக கொண்டு வந்த ரோஜா மாலையை அங்கேயே வைத்து விட்டு வந்தோம். அது அந்த வீட்டில் இன்னும் கொஞ்சம் மணம் சேர்க்கட்டும். மணம் நினைவுகளுக்கு மிக அருகில் நிற்கும் ஒன்று. திரும்பும் வழியில், நெடுஞ்சாலையில் சிறிய புயல் எழுந்தது. விளம்பர பேனர் கீழே விழுந்து தனது தூக்கத்தை பதிவு செய்தது. மழை பெய்தது. காற்று இதமாக வீசியது. அந்தச் சிறிய இயற்கை மாற்றம் கூட அந்த நாளின் மனநிலையை பிரதிபலித்தது போலத் தோன்றியது. சில இழப்புகள் ஒரே தடவையில் வருவதில்லை; அவை சிறு துண்டுகளாக உள்ளே உடைந்து கொண்டே இருக்கும். சென்று வாருங்கள் அரவிந்தன் என்று சொல்ல முடியவில்லை. ஏன் விட்டுச் சென்றீர்கள் என்று கேட்டாலும் பதில் சொல்ல அவரும் இல்லை. அவர் விட்டு சென்றுவிட்ட இந்த வெற்றிடத்தை நிரப்ப இனி யாருமில்லை.
இயற்கை
எதையும் நிறுத்தவில்லை.
நேரம்
தன் வேலையைச் செய்தது.
வாழ்க்கை
தன் ஓட்டத்தைத் தொடர்ந்தது.
ஆனால்
அந்த ஓட்டத்தின் உள்ளே
ஒரு மெல்லிய பிளவு.
அந்தப் பிளவின் வழியாக
அரவிந்தன் இன்னும் தெரிகிறார்.
வாழ்க்கை அதைத் துரத்தும் காலம்
இரக்கமற்ற நிறுவனம்.
லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com

