ஐசக் பேசில் எமரால்ட்
கதவைத் திறந்தபோது அவன் முகம் இறுகிப்போய் காணப்பட்டது. அதுவரைக் கண்களை மூடி தியானத்தில் இருந்த மலை கண்திறந்து அவனை பார்க்கத்தொடங்கியது. நிலவின் வெளிச்சத்தில் எலிகள் வயலுக்குள் மறைவது நன்றாகத் தெரிந்தது. சுற்றிமுற்றி பார்த்தவன் பெரிய சுத்தியல் ஒன்றை எடுத்து, முற்றத்தில் கிடந்த கல்லை அடித்து நொறுக்கத்தொடங்கினான். காற்றில் சாய்ந்து நிமிர்ந்துக்கொண்டிருந்த புற்கள் லேசாக அசைந்துக்கொண்டிருந்தது. ரீங்காரமிட்டுக்கொண்டிருந்த பூச்சியினங்கள் மௌனமாயின.
மூன்றுப்பக்கமும் வயல்பரப்பு. முன்பக்கம் சாலை. வயலைக்கடந்து மலைத்தொடர் தெரிந்தது. நடுவில் தீயினால் கீறல் விழுவது போல் ஏதோ ஒன்றுத் தெரிந்தது. நடுநடுவே இடிசத்தம். அடித்து உடைத்ததில் சல்லிகளாக மாறியிருந்தது. வெறி அடங்காமல் தேடித்தேடி ஒவ்வொரு கற்களாக உடைத்துக்கொண்டிருந்தான். பலமுறை ஒரே கனவை கண்டதன் விளைவு. அது ஒரு பெரிய சிலை. தலைப்பகுதி மட்டும் பொன். கழுத்திலிருந்து மார்பு வரை வெள்ளியிலும், வயிறு வெண்கலத்திலும், தொடை இரும்பிலும் இருக்க, பாதம் மட்டும் களிமண்ணினால் செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தடவையும் அந்த சிலை கனவில் வரும்போது பிரமிப்பூட்டும்விதமாக இருந்தது. அந்த வசீகரமான சிலையைப் பார்த்துக்கொண்டு கனவில் உறைந்துவிடலாம் என்று நினைத்தான். அதிலும் பொன் தலைப்பகுதி அவனுக்குள் பரவசத்தைக்கொடுத்தது. அதன் தலையில் இருக்கும் கிரீடத்தை தொட்டுத்தடவி ரசித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஒவ்வொரு தடவையும் அந்த சம்பவம் நடந்தது. மலை பிளப்பது போல் ஒரு சப்தம். கூடவே யானைப் பிளிறலும், திரும்பிப்பார்ப்பதற்கும் பெரிய கல் ஒன்று மலையில் இருந்து உருண்டு அந்த சிலையை உடைத்துவிடும். ஒவ்வொரு தடவையும் சிலையை முழுமையாக ரசிப்பதற்குள் இந்த சம்பவம் நடந்து கனவு முடித்துவைக்கப்படுகிறது.
கல்லை உடைத்து சோர்வானவன், அருகே ஓடிக்கொண்டிருந்த ஓடையில் இருந்து நீரை அருந்திவிட்டு படுத்தான். புரண்டுபுரண்டுப் படுத்தும் தூக்கம் வரவில்லை. இரவு ஒருமுறை விழித்தால், அதற்குப்பிறகு தூங்கமுடியாது. வீட்டின் உரிமையாளர் ஒரு மாதம் முன்பாக பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது கனரக லாரி ஏறி இறங்கி இறந்தார். தாரோடு ஒட்டி கூழாகியிருந்த உடலை சாலையில் இருந்து கைவிரல்களால் சுரண்டி எடுத்து, துணியில் பொதிந்து அடக்கம் செய்தனர். பிள்ளைகள் வெளியூரில் வசித்துவந்தனர். இரவில் பெரும்பாலும் அப்பகுதியில் மனித நடமாட்டங்கள் இருக்காது. ஊர்வனவற்றின் அசைவைக்கூட பேய் என்று நினைத்துப்பயப்படுவான்.
ஒருநாள் திடீரென்று கண்விழித்தபோது கான்கிரீட் கூரை ஓடாக மாறி, நடுவே துவாரம் தென்பட்டது. மழைப்பெய்ய தயாராகும் நேரத்தில் புளியமரம் ஆடிக்கொண்டிருந்தது. வெள்ளை சீலை உடுத்த கிழவி கையில் உலர வைத்த மரவள்ளிக்கிழங்குளை கையில் ஏந்தியபடி ஓட்டில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தாள். எவ்வளவு வற்புறுத்தியும் அவன் அந்தக் கிழங்குகளை வாங்காததால் கதவைத் திறந்து கொல்லைப்பக்க கல்லறையில் அணைந்திருந்த மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து அதில் கிழங்குகளை வைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் குழிக்குள் போய் படுத்துக்கொண்டாள். அன்று இரவு மனித நடமாட்டம் இருப்பது போல் தெரிந்தபோது தவளையாக இருக்குமோ என்று தான் முதலில் நினைத்தான். அதற்குப்பிறகு வளையல்கள் சப்தம் கேட்கவே அந்த கிழவிதான் குழியில் இருந்து மறுபடியும் வந்துவிட்டதாக நினைத்தான்.
கல்லை அடித்து நொறுக்கிய சுத்தியலை எடுத்துக்கொண்டு மெதுவாக கதவைத் திறந்தான். வெளியே நின்றுக்கொண்டிருந்தது கிழவி இல்லை. திரும்பி பார்த்தபோது கல்லறையில் மெழுகுவர்த்தி அணைந்திருந்தது. எதிரில் அழகான இளம்பெண் நின்றுக்கொண்டிருந்தாள். “என்பெயர் சுதா.. சுதா என்று அழைப்பதைவிட தாரா என்று செல்லமாக அழைப்பதுதான் என் கணவனுக்கு பிடிக்கும். நான் அவரைத் தேடி இங்கு வந்திருக்கிறேன், நான் கடலில் நீராடிக்கொண்டிருக்கும்போது சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பெட்டியத் தேடி இந்த மலைக்கு வந்துவிட்டார். நான் இந்த ஊருக்கு புதியவள். நீங்கள் அவரை கவனித்தீர்களா? எனக்கு இந்த இரவில் உங்களை விட்டால் உதவ ஆளில்லை. அவர் பெயர் டேனி. ஒன்று மட்டும் தெரியும், அவரை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. மிகவும் திறமைசாலி. புதிய ஊர் என்பதனால் மட்டுமே உதவி கேட்கிறேன்.” பதற்றமாக நின்றுக்கொண்டிருந்த அவளைச் சற்றுப் பொறுமையாக இருக்க சொன்னவன் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினான்.
மலையில் இரவில் விளக்கு வைத்து மும்மூரமாக வேலை நடந்துக்கொண்டிருந்தது. பெயர்த்து எடுத்த கற்களை உடைந்த மலையில் பொருத்திக்கொண்டிருந்தார்கள். துறைமுகத்திற்கு கொண்டுசென்ற கற்கள் அனைத்தும் டாரஸ் லாரிகளில் திரும்பி வந்துக்கொண்டிருந்தது. ஒருவன் கல்லின் வடிவத்தை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான். “உன் கணவனின் புகைப்படம் கையில் இருக்கா?” என்று கேட்டபோது இல்லையென்பதுபோல் தலை அசைத்தாள். போகும்வழியில் மிதிபட்டு புற்கள் மண்ணோடு புதைந்துக் காணப்பட்டன.
ஒருத்தர் நடப்பதற்கான சிறுபாதை வளைந்து வளைந்து உருவாக்கப்பட்டிருந்து. ஏற்ற இரக்கத்தைக் கடந்து கற்களை கைத்தாங்கலாக முன்னகர்த்தினார்கள் . வழியில் சிறிய தண்ணீர் பாட்டில்கள். ஆங்காங்கே உடைந்த மதுப்பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. பாறைகளில் எழுதப்பட்டிருந்த காதலர்களின் பெயர்களுக்கு நடுவே எய்தப்பட்ட அம்பு. குருத்தோலைகள் காயத்தொடங்கியிருந்தது. மலைப்பொருத்தும் இடத்தைக்கடந்து உச்சிக்கு வந்தபோது அங்கே ஒரு வில்வமரம் இருந்தது. ஓடிசென்று அதை சுற்றி வந்தவள், தான் இதற்கு முன்பே கணவனுடன் இந்தப்பகுதிக்கு வந்தது போல் இருப்பதாக சொன்னாள்.
நதிநீரின் சலசலப்பை உணர்ந்தவள், ‘நாங்கள் வரும்போது இந்த நதி தோன்றியிருக்கவில்லை. என் கணவனின் அற்புத சக்திகளால் இந்த நதி உருவானது’ என்று பெருமையாக சொன்னாள். வான்நோக்கி நிலவை பார்த்துவிட்டு அவளை நன்றாக உற்றுப்பார்த்தான். கால்பட்டு உடைந்த சருகளை கவனித்தவன் அதைப் பின்பற்றி நடக்கத்தொடங்கினான். முடிவில் ஒரு குகை ஒன்று காணப்பட்டது. தங்கமுலாம் பூசப்பட்ட நான்கு பிடிகள் கழன்று கிடப்பதைக் கவனித்து உள்ளே சென்று பார்த்தான். பெட்டி இருந்ததற்கான தடயம் அங்கிருந்தது. மண்ணோடு ஒட்டியிருந்த பலகைக்கீற்றுகள். சுற்றியெங்கிலும் பறவைகளின் இறகுகள் பறந்துக்கொண்டிருந்தன. மேற்குநோக்கி பக்கவாட்டில் பெய்துக்கொண்டிருந்த மழைக்கீற்றினுள் புகுந்த தையல் பறவை மலையை ஒட்டிக்கொண்டிருந்தவனின் தலையை கொத்துவதற்காக கீழே பாய்ந்தது. பறவை உள்ளே செல்லும்விதமாய் பதற்றத்தில் வாயைத்திறந்தான்.
மலையை ஒட்டிக்கொண்டிருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் வேறுவேறு மொழி பேசுபவர்களாக இருந்தனர். வெட்டிக்கொண்டு போகிறபோது அப்படியில்லை. அவர்களை நிறுத்த சொல்லலாம் என்றால் மொழி புரியவாய்பில்லை. கனவில் வரும் பெரிய கல் அவர்கள் தலைமீது விழாதா என்று நினைத்தபோது சுதா அங்கிருந்த செடிகளையும், கற்களையும் எடுத்து அவன்மீது வீசத்தொடங்கினாள். “கொலைக்கார பாவி.. என் கணவனை எங்கே அடைத்து வைத்திருக்கிறாய்? இந்த மலைகளை அழிப்பதும் நீதான். உன் வம்சம் அழிந்துபோகும்” என்று வெறிபிடித்தவள் போல் கத்திக்கொண்டிருந்தாள்.
கற்களை மண்ணிலிருந்து எடுத்தபோது மனிதனின் கால் பெருவிரல் ஒன்று கையில் தட்டுப்பட்டது. குத்திருட்டு அகன்று வானில் முழுநிலவு. அவன் சிரிப்பது மலைமுழுதும் எதிரொலித்தது. காற்றில் கேசம் அசைந்து அவன் முகம் வேறொரு முகமாகத் தோன்றி மறைந்துக்கொண்டிருந்தது. சுதா காலை ஓரடி எடுத்துவைக்க எண்ணினாள். சேலை அசைந்தது. கால் முன்னகரவில்லை. இரு உதடுகளும் ஓட்டிக்கொண்டு மூளையில் உதிக்கும் சொற்கள் சிறைப்பட்டன. இந்த மலை இருக்கும்வரை அதிசய சிலையை என்னால் முழுமையாக ரசிக்க முடியாது. எத்தனை கற்களை ஜல்லிகளாக மாற்றினாலும் கல் திரும்ப வரும். நான் சிலையை ரசிப்பேன். அதனுடன் புணர்வேன் என்று அங்கிருந்த புற்களை மாட்டைப்போல் மேய்ந்துவிட்டு நடந்து சென்றான்.
அவன் நடந்த பாதைகளில் மூன்று எலும்புகளை கவ்வியபடி கிழட்டு சிங்கம் ஒன்று நடந்தது. அதற்குப்பின் இரண்டு எலும்புகளை கவ்வியபடி ஒரு கரடி. வெறும் வாயுடன் ஒரு பன்றி. மூன்றுநாட்கள் கழித்து அங்கே வந்த பசு சுதாவின் கால்களில் பாலை பீய்ச்சி அடித்தபோது கால் அசைந்தது. உதட்டை அடிமடியில் வைத்தபோது வாய் திறந்துக்கொண்டது. டேனியைத்தேடி அவள் கால்கள் வேகமெடுத்தன.
டேனிக்கு எப்போதிலிருந்து பிறர் கனவை அறியும் சக்திக்கிடைத்தது என்று சரியாக நினைவில்லை. பிறர் கனவுகளுக்காக உறக்கத்தை இழந்த அவன் இப்போது ஒரு பெட்டியைத்தேடி இங்கு வந்திருக்கிறான். அது இந்த மலையில் எங்கேயோ ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. சுதா இதுவரை வருவாள் என்பது அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவன் கண்முன்னே நின்றுக்கொண்டு கண்களை வட்டமடித்துக்கொண்டிருந்தாள்.
காற்றில் பச்சைத்தருவையின் மணம் நிரம்பியிருந்ததால் அவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படியும் அவளால் கண்டுபிடித்திருக்க முடியாது. ‘தாரா.. தாரா..” என்று கத்திக்கொண்டிருக்கும் அவன் குரலை கேட்டிருக்க முடியாது. மந்திர வளையத்தினுள் உருவமற்று நின்றுக்கொண்டிருந்தான் டேனி. அங்கிருந்து அவள் சென்றபோது தருவைப்புற்களை அவன் எரிக்கத்தொடங்கியிருந்தான். வெளிச்சம் வரும் திசையை நோக்கி செல்லும் அவள் நிழலின் முடிவுவரைப் பார்த்துக்கொண்டு அழத்தொடங்கினான்.
இந்தமுறைக் கனவை முழுமையாக கண்டுவிடவேண்டும் என்று மலை உச்சியில் உறங்கத்தொடங்கினான். இதற்குமேல் கல் எப்படி விழும் என்று பார்க்கிறேன். இந்தமுறை கனவை முழுமையாகக் காண்பது உறுதி என்று ஆழ்ந்த நிலைக்கு சென்றான். கனவு வந்தது. கிரீடத்தை தொடும்நேரம் கல் எதுவும் விழவில்லை. பல டன் எடையுள்ள பெட்டி ஒன்று அந்த சிலையின் மீது விழுந்து சுக்குநூறாக உடைந்தது. கோவத்துடன் பெட்டியைத் தேடி மலை முழுவதும் திரிந்தான். சல்லடைபோட்டு தேடியும் பெட்டி எங்கும் கிடைக்கவில்லை. இவ்வளவு பெரிய பெட்டி எப்படி தன் கண்களை மறைத்து இந்த மலைக்குள் பதுங்கியிருக்க முடியும் என்று எண்ணினான். மலையெங்கிலும் அலைந்ததில் கழைத்துப்போய் உறங்கத்தொடங்கினான்.
சிலை வருவதற்கு முன்பு ஒரு சிறுபெட்டி வந்தது. திறந்து பார்த்தபோது அதிலிருந்த குறிப்பை வாசித்தவன் நேராக வளையத்தின் அருகேவந்து மந்திரத்தை செயலிழக்கச் செய்தான். கை,கால்கள் முளைத்த பெட்டி கையில் அவன் காணும் சிலையின் சிறிய வடிவத்தை கையில் ஏந்தியபடி நின்றுக்கொண்டிருந்தது. அவன் அதனை துரத்தத்தொடங்கினான். இரும்பு ஸ்க்ரூக்கள் கழன்று தெறித்தன. மரத்தோல்கள் பெட்டியின் பாகங்களில் ஒட்டத்தொடங்கியது. மரத்துகள் மண்ணில் இருந்து பறக்கத்தொடங்கின. சதுரம் அரைவட்டத்தை அடைந்தது. பிளக்கப்பட்ட மரத்துண்டுகள் ஒரு மரமாக இணைந்தது. பக்கவாட்டில் சரிந்து நகர்ந்துக்கொண்டிருந்த மரம் காற்றின் அசைவில் நேராக நிமிரத்தொடங்கியது. எரிக்கப்பட்ட தருவையில் இருந்து பரவிய நெருப்பு சருகுகளையும் சாம்பலாக்கியது.
புகை மேலிருந்து உள்ளே சென்றுக்கொண்டிருந்தது. மழமழவென எரியும் நெருப்பின் சத்தம் மெல்ல குறைந்துக்கொண்டிருந்தது. உடைக்கப்பட்ட இலைகள் நடுங்கிக்கொண்டு இணையத்தொடங்கியதும், அதன்மீது படிந்திருந்த கருமையின் இருள் மடியத்தொடங்கியது. இந்த நிலை அங்கிருந்த அனைத்து இலைகளிலும் ஒரே நடந்துக்கொண்டிருந்தன. கிளைகளுடன் மேலெழும்பிய மரத்தில் இலைகள் சென்று சேருமாறு காற்று கீழிருந்து மேலாக வீசிக்கொண்டிருந்தது. மரத்தூண் தரையில் பட்டதும், மண், சிறு கற்களை பிளந்துக்கொண்டு ஊடுருவிய வேர் பக்கவாட்டில் சல்லிவேர்களை பரப்பி உறுதியானது. ஓடிவந்தவன் பெட்டி எங்கே சென்றது என்று சுற்றிமுற்றி பார்த்தபடி வில்வமரத்தின் அடியில் நின்றுக்கொண்டிருந்தான்.
பறந்துக்கொண்டே காணும் பறவை ஒன்று கனவில் வந்ததைப்பார்த்து கண்விழித்தான் டேனி. சுதா எங்கே என்று தேடும்போது, அவர்கள் உருவாக்கியதாக சுதா சொன்ன நதியருகே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
தூரத்தில் நின்றுபார்த்தபோது பனிப்புகையால் மறைக்கப்பட்டிருந்த மலை உச்சி இப்போது தெளிவாக தெரிந்தது. இரு ஆண்குறியினால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை புணரும் ஆணின் தோற்றத்தில் பூத்திருந்த மலரை புகைப்படம் எடுக்க விரும்பினாள். அவள் அருந்தியிருந்த மது கைகள் நிலையாக நிற்காமல் பார்த்துக்கொண்டது. காற்றில் மழைத்துளிகள் லென்ஸை நனைத்துக்கொண்டிருந்தன. ஒரு கெட்டவார்த்தையை சொல்லி துடைத்தவள் கேமிராவால் அந்த மலரைப் பார்த்தாள்.
காற்றில் புணர்ச்சியின் வேகம் அதிகமாக இருந்தது. அதை பறித்துவிட எத்தனித்த மனம் புகைப்படம் எடுப்பதற்காக தள்ளிப்போட்டது. காற்றின் அளவு குறையும் நேரம் அருமையான புகைப்படம் ஒன்றுக்கிடைத்தது. மெதுவாக கொடிகளை அறுத்து மலரின் அருகே பறிக்க கையை வைத்தாள். கால்பகுதி மட்டும் கையிலிருந்தது. மலர் கிழியும் ஓசையை அவளால் கேட்கமுடியவில்லை. கிழிக்கப்படும் நேரம் தூரத்தில் பிளிறிய யானையின் சத்தம் தடையாக இருந்தது.
கையில் ஒரு பெண்ணின் உருவமுடைய மலர் மட்டும் இருந்ததைப்பார்த்து கண்ணீர் வடிக்க தொடங்கியவள், சோகத்தில் மீதமிருக்கும் மலரைப்பறித்து மலையிலிருந்து கீழே போட்டு தற்கொலை செய்ய வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். பாசிபடிந்த பாறைகளில் உரசி மலையிலிருந்து கீழிறங்கிக்கொண்டிருந்தபோது மலரின் இதழ்களில் தெரிந்த காட்சி, இதுவரை பயம் என்ற உணர்வை முதன்முறையாக அனுபவித்தாள்.
தேரோசை வந்ததும் அந்தக்காட்சி மறைந்தது. கண்களை மூடிக்கொண்டபோது எரியும் பிணங்கள் கொண்ட சுடுகாட்டின் நடுவே அவள் கால்கள் நடந்துக்கொண்டிருந்தன. மதிலில் இருந்து விழும் பெண்பிணம் சுடுகாட்டின் எரியும் சிதையின்மேல் விழுந்தபோது ஓரிதழ் தரைக்கு வந்து சேர்ந்தது. சிதையைச் சுற்றி யானைகள் வட்டமடிக்கத்தொடங்கின. மீதி பூவிதழ் மலையின் பாதியைக் கடந்திருந்தது. கண்ணில் இருந்து பரவிய வலி உடல்முழுதும் கிளைவிரித்தபடி பரவத்தொடங்கியது. கடைசியில் முதுகை ஊசியால் குத்துவது போல் ஓரிடத்தில் வலி குவியத்தொடங்கி மறைந்தது. சுதாவின் கண்கள் இயல்பாகி தூங்கத்தொடங்கின.
மலைக்குள் மந்திர சுழல்பாதை ஒன்று உருவாகியிருந்தது. பித்துப்பிடித்தவன் போல் பெட்டியைத் தேடி சுழன்றுக் கொண்டிருந்தவனுக்கு சுழல்பாதை என்பது பிடிபடவில்லை. பாதையின் ஓரத்தில் இரு எலும்புகளை கவ்வியக் கரடி வந்து நின்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கத்தொடங்கியது. உடைந்துக் கிடக்கும் சிலையின் துண்டுகள். அதன் வழியில் நடக்கத்தொடங்கினான். நடையின் வேகம் அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. பாலைப் பீய்ச்சி அடிக்கும் பசு வந்தது. கூடவே மூன்று எலும்புகளுடன் சிங்கம். வெள்ளை சேலை உடுத்தியக் கிழவி, அடுப்பில் வேகும் மரச்சீனி கிழங்கின் மணம். தங்கமுலாம் பூசப்பட்ட பிடிகள் வழியில் கிடந்ததில் கால்தட்டப்பட்டு விழப்போனான். சிலையின் அடிப்பகுதி சாரல் மழையில் கரையத்தொடங்கியது. மலை உடையும் சப்தம். கொஞ்சம் நேரம் தான் அதற்குள் பெட்டியைக் கண்டுபிடித்துவிடலாம். மனம் இயல்பாகும். கனவில் பதறி எழும் அவன் முகம். நிற்கப்போகும் இதயம். கல்லறையில் எரியும் மெழுவர்த்தி.
அவனைக்கண்டு மிருகங்கள் மிரண்டுப்போய் நின்றுக்கொண்டிருந்தன. காரணம் காது கிழியும் விதமாய் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தான். துண்டு துண்டாய் உடைந்துக்கிடக்கும் சிலையின் அருகே நின்ற பன்றிகள். வாய் திறக்கப்படும் என்று அடிக்கடி பயமுறுத்தும் உக்கில். கண்களில் இருந்து நீர் வரத்தொடங்கியது. வேகம் மெதுவானது. இதனூடாய் ஒரேநேரம் பழமொழி பேசுபவர்களின் குரல்கள். உடைந்துக்கிடந்த சிலைத்துண்டுகளைக் கடந்து முதியக்கால் ஒன்று பாதைக்குள் வந்தது. முதியவர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் கையில் சாட்டையை வைத்துக்கொண்டு அவனிடம் ஏதோ சொல்லி கெஞ்சத்தொடங்கினார். அதைக்காதில் வாங்காமல், திரும்பிப்பார்க்காமல் பெட்டியைத்தேடி சுழன்றுக்கொண்டிருந்தான். அவர் கூறுவது முணுமுணுப்பது போன்று இருந்ததாலும், பலநாட்கள் பட்டினிக்கிடந்தவர் போன்று இருந்ததாலும் குரல் உள்ளிழுத்து ஒலித்துக்கொண்டிருந்தது.
நதியோசை கேட்டு கண்முழித்தாள் சுதா. எதிரே நின்றுக்கொண்டிருந்த டேனியை பார்த்து எவ்வித சலனமும் இல்லாமல் இருந்தவள் இயல்பாக சிறிதுநேரம் பிடித்தது. “தேடிச்சென்ற பெட்டி எங்கே? கிடைத்ததா? ஏன் எதுவும் சொல்லாம மௌனமா இருக்கீங்க?” என்று முகம் வாடிப்போயிருந்த டேனியை விடாமல் அவள் கேட்டுக்கொண்டிருந்தபோது வில்வமரத்தைக் கடந்திருந்தார்கள்.
பல வருடங்கள் கழித்து, முற்றிலும் மலை அகற்றப்பட்டு மழைநீர் அவ்விடத்தை குளம் போல் நிரப்பிக்கொண்டிருந்த நாளில், நல்ல உறக்கத்தில் சுழல்பாதைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என்ன சொல்கிறார் என்று காதை வாயருகே கொண்டுசென்று உன்னிப்பாகக்கேட்டான். “என்னை சிலுவையில் அறையவாது இந்த மலையில் கொஞ்சம் இடத்தை விட்டு வையுங்கள்”.
***
ஐசக் பேசில் எமரால்ட் – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், முதுகலை மென்பொருள் பொறியியல் முடித்துவிட்டு ஊடகத்துறையில் பணிபுரிகிறார். “அபினி” (நாவல்), “பற்றி எரியும் நரம்புகள்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது படைப்புகள் நீலம், யாவரும்.காம், வனம், நகர்வு, தடாரி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் : issacb06@gmail.com

