Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்என் கவிதைகள் உள்ளத்தில் அமைதி பரப்பும் சுடரின் நிழல்!

என் கவிதைகள் உள்ளத்தில் அமைதி பரப்பும் சுடரின் நிழல்!

நேர்காணல் : கார்த்திகா முகுந்த்

நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்

கார்த்திகா முகுந்த் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்தவர். தற்சமயம் பெங்களூரில் கணவர் மற்றும் மகளோடு வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 6 கவிதைத் தொகுப்புகள், சிறார் கதைகள் தொகுப்பு ஒன்று, ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றன. கல்கி, தமிழ்வெளி போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். கார்த்திகாவை திரு. லக்ஷ்மணன் அவர்கள் வழியாக தெரியும். இவளுக்கு இவள் என்றும் பெயர் என்ற இவருடைய முதல் தொகுப்பு 2010-இல் வெளியாகியது. அதன் பின்னர் ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான், துமி, க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண், என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது, ஜிக்ஸா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள் ஆகிய தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. கார்த்திகா இவற்றின் வழியே நவீன கவிதையுலகில் நீண்ட பயணம் செய்துள்ளார். அவருடைய தொகுப்புகளிலிருந்து நேர்காணல் செய்தால் நன்றாக இருக்குமென்று யோசித்தேன். அதன் வழியே எனக்கும் கார்த்திகாவுக்கும் மிக நல்ல உரையாடல் நிகழ்ந்தது அற்புதமானது. இதுவரை இவருடன் மிகவும் குறைவாகவே உரையாடியிருந்த நான் இவரை இப்போது அணுக்கமாக உணரத் தொடங்கி விட்டேன்.

கேள்வி: உங்கள் கவிதைகளை எங்கிருந்து தொடங்கினீர்கள்? இலக்கியத்துக்குள் நுழைந்தது எப்படி? சமகாலக் கவிதை உலகில் உங்கள் பயணம் எத்தகையது?

பதில்: கவிதை எழுதத் தொடங்கியது எப்போது என்றால், பதினைந்து வயதில் பள்ளிக்கூடங்களுக்கிடையே நடந்த ஒரு போட்டிக்காக எழுதியபோதுதான். ஆனால், கவிதைகளில் ஈடுபாடு வந்தது எப்போது என்று சொல்லவேண்டுமெனில் அதற்கும் மிக இளம் வயதில், முதன்முதலாகப் பள்ளியில் சேர்ந்தபோது என்று இப்போது தோன்றுகிறது. Prodigy என்பது போன்ற நோக்கில் இதைக் கூறவில்லை. உங்கள் கேள்விகளை வாசித்தபோது என் வாழ்வில் வெகுதூரத்துக்கு அவை என்னைத் திரும்பிப் பார்க்கவைத்தன. அதை வைத்தே கூறுகிறேன்.

முதன்முதலாகப் பள்ளியில் என்னைச் சேர்த்தபோது – அந்த விஜயதசமியில் பள்ளியில் சேர்ந்த ஒரே குழந்தை நான்தான். மற்றவர்கள் ஓரிரு மாதங்களாக ஏற்கெனவே வரத் தொடங்கியிருந்தார்கள். அரிச்சுவடி தொடங்கிய நாள், ஒரு விளையாட்டு போலச் சென்றுவிட்டது. ஆனால், நிஜமாகப் பள்ளிக்குச் செல்லவேண்டிய நாளில், நானும் பல குழந்தைகளைப் போலவும், அழுதும் புரண்டும் வகுப்புக்கு வெளியே நின்று போராட்டம் நடத்தினேன். என்னை வாசற்படியிலேயே அமர சுந்தரவல்லி டீச்சர் அனுமதித்தார். எனக்கு என்ன வேண்டும், ஏன் அழுகிறேன் என்று என்னிடம் கேட்டார். நான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று அவரிடம் சொன்னேன். எதற்கென்று கேட்டார். தண்ணீர் குடிக்க என்று சொன்னேன். அதற்காக என்னை அனுப்பிவிடுவார் என்று எண்ணியதை நினைத்தால் இப்போது சிரிப்பாக வருகிறது. ஆனால், அன்று மெய்யாகவே அவ்வாறு நம்பினேன். அவர் என்னை மெல்ல அணைத்துக்கொண்டு, அவர் நீரருந்த வைத்திருந்த செம்பிலிருந்து எனக்கு நீர் புகட்டினார். அக்கணத்திலிருந்து எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. மறுநாளிலிருந்து நான் பள்ளிக்குப் போக விரும்பிய முதல் காரணம் அவர் என்றால், இரண்டாவது காரணம் பள்ளியில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப் பாடல். நான்காவது, ஐந்தாவது படிக்கும் அக்காக்களும், அண்ணன்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்று பாடும் பாடலை, மற்ற குழந்தைகள் எங்கள் வகுப்பில் நின்று பாடவேண்டும். அப்படி அத்தனை பேர் ஒன்றாகச் சேர்ந்து பாடியதை முதன்முதலாகக் கேட்டபோது எனக்கு அது ஏதோவொரு மிகப் பெரிய அதிசயமான விஷயமாக இருந்தது. 

‘நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’ என்கிற பாடல். அது நாவுக்கரசர் தேவாரம் என்பதோ, அதன் பொருளோ அப்போது தெரியாவிட்டாலும், அதைப் பாடுகையில் எழும் ஓசைநயம் என்னை ஈர்த்திருக்கிறது என்று பின்னர் உணர்ந்திருக்கிறேன்.

அது போல, என் அம்மா பூஜை செய்யும்போது பாடும் பாடலின் இரு வரிகள் என்னை மிகவும் ஈர்ப்பவை. ‘சொல்லுக் கடங்காவே பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்’, ‘சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்’ – இவ்விரண்டு வரிகளும் எப்போது வருமெனக் காத்திருப்பேன். சில நாட்கள் நேரமில்லாவிடில், சஷ்டிக் கவசத்துடன் நிறுத்திக் கொள்வார். ஆனால், இந்தப் பாடல் பாடினால்தான் ஆயிற்று என்று நான் அடம்பிடித்து அடியும் வாங்குவதுண்டு. அந்த அளவுக்கு ஏனோ இவ்விரண்டு வரிகளும் என்னை ஆட்படுத்தியிருந்தன. பின்னால்தானே தெரிந்தது, அது பாரதியின் மாயமென்று.

அப்போதிலிருந்து, பாடப் புத்தகங்களில் இருக்கிற செய்யுள்களும் காப்பியப் பாடல்களும், சங்கப் பாடல்களும் மதிப்பெண்களுக்காக என்பதைத் தாண்டி மிகவும் விரும்பிப் படிப்பேன். நாமும் அதுபோல் எழுதவேண்டும் என்று எண்ணிப் பார்ப்பேன். எவ்வளவோ நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கவிதை இப்போதும் நம்மை இவ்வளவு ஊன்றி வாசிக்க வைக்கிறதே… இதுபோல் நாமும் செய்யமுடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணியிருக்கிறேன். உண்மையாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் அன்றி, அது ஒரு ஆசை என்கிற அளவில்தான் அப்போது இருந்தது. போட்டிக்காக எழுதிய கவிதைகூட, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பள்ளிக்குப் பரிசுகளை வாங்கியிருந்த காரணத்தால், இதையும் என்னால் செய்யமுடியும் என்று எங்கள் தலைமை ஆசிரியை ஊக்கிய ஒரே காரணத்தால் எழுதியதுதான். தொடர்ச்சியாக எழுதிப் பழகத் தொடங்கியது, ஒரு சுயநலத்துக்காக என்று சொல்லலாம். 

பொறியியல் படிப்பில் சேரவிருந்த சமயம், குடும்பச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடியால், பள்ளியிறுதியுடன் படிப்பைக் கைவிடும் நிலை. வேலையில் சேர்ந்துவிட்டேன். நிறையப் படிக்கவேண்டும், ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்ளவேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டுகொண்டிருந்த பெண் நான். இந்தத் திடீர் நிகழ்வுகள், மாற்றங்கள் என்னை மிகவும் பாதித்தன. மிகவும் தனியாக உணர்ந்தேன். உள்ளொடுங்கிப் போனேன். உடலும் நலிந்தது. அதனால் அல்ஸர் பிரச்னை ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சையளித்த மருத்துவர் என் பின்னணியைக் கேட்டபிறகு சொன்னார்,

‘நண்பர்கள் மட்டும்தான் நண்பர்கள் என்று இல்லை. நீ யாருடனாவது பேச வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைப்பதை ஒரு குறிப்பேட்டில் எழுது. பிறகு அப்படியே தொடர்ந்து எழுதிக்கொண்டிரு’ என்றார்.

அவர் சொன்னபடியே, நெஞ்சை முட்டும் உணர்வுக் கொந்தளிப்பு ஏற்படுகையில் எல்லாம் எழுதி வைக்கத் தொடங்கினேன். அது எனக்கு ஒரு ஆசுவாசம் அளிப்பதை உணர்ந்தேன். பின்னர், தொலைநெறியில் தமிழிலக்கியம் பயிலத் தொடங்கியபோது, தீவிர இலக்கியம் அறிமுகமாயிற்று. அதன் தாக்கத்தால், எழுத வேண்டும் என்ற ஊக்கம் அதிகரித்தது. 

எம்.ஃபில்., முடித்திருந்த சமயத்தில் கல்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. நிறைய படைப்புகளை வாசிக்கவும், அவற்றை பத்திரிக்கைக்காகத் திருத்தவும், கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே காரணிகளாக அமைந்தன.

சமகாலக் கவிதையுலகில் என் பயணம் எத்தகையது என்று கேட்கிறீர்கள். அதை ஒரு பயணம் என்று கொண்டால், அதிகம் கவனம் ஈர்க்க விரும்பாத ஒரு அமைதியான வழிப்போக்கி நான் என்று நினைக்கிறேன். எனக்கு நானே சொல்லிக்கொள்வதையே பல வேளைகளில் எழுதி வைக்கிறேன். ‘சத்தமாகச் சிந்தித்தல்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் இருக்கிறதே… அதுபோல், நான் எழுதிச் சிந்திக்கிறேன் என்று சொல்லலாம். அப்படி எழுதி முடித்ததோடு, எனக்கு அதனோடு ஒரு தொடர்பும் இல்லாமலாகிவிடுகிறது. ஆனால், சில சமயங்களில், என் எழுத்து பிரசுரமாகி, அது சில மனிதர்களைத் தொட்டுவிடவும் செய்யும்போதுதான், அது எனக்கு மட்டுமானதில்லை என்கிற ஒருவித… அதை எப்படிச் சொல்வது… பொறுப்புணர்வு என்று சொல்லலாம்… – அல்லது ஒரு வித ஆச்சர்யம் என்றும் சொல்லலாம். 

கவிதைகள் நம் மொழியில் அதிகம் எழுதப்படுகின்றன. நானொருத்தி கவிதை எழுதுவதாலோ எழுதாததாலோ பெரிதாக ஒன்றும் குறைந்துபோய்விடப் போவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும், நான் எழுதுகிறேன். எழுதாமல் என்னால் இருக்க முடிவதில்லை.சிலவேளை, தொடர்ந்து பல மாதங்கள்கூட எழுதாமல் இருப்பேன். சொல்லப்போனால், என் முதல் தொகுப்புக்கும், இரண்டாவது தொகுப்புக்கும் இடையே பத்தாண்டுகள் இடைவெளி. ஆனால், எழுதாமல் இருக்கும்போதும், சில சமயம் எழுதுவதைப் பற்றியே சிந்தனை இருக்கும். பழக்கத்தாலோ என்னவோ… எங்கே சுற்றியும் எழுத்திடம்தான் நான் திரும்பிவர வேண்டியிருக்கிறது. தொகுக்கப்படுவதோ, வெளியிடப்படுவதோ குறித்து நான் எண்ணுவதேயில்லை. எழுத்து என் மனசின் வீடு. அது அங்கே திரும்பி வருவது இயல்பு. அதற்கு வேறு ஒரு பிரகடனமும் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

கே: பத்திரிக்கையில் பணி புரிந்திருக்கின்றீர்கள், சமகால இலக்கிய இதழ் ஒன்றில் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கின்றீர்கள். இதன் பொருட்டு படைப்பாளிகள் பலரின் கவிதைகளை, தேர்ந்தெடுக்கும் பொருட்டும் மெய்ப்பு பார்க்கும் பொருட்டும் வாசிக்க வேண்டியிருந்திருக்கும். இவை உங்கள் கவிதைகளை எவ்வாறு பாதிக்கின்றன? குறிப்பாக அயல் தேசத்துக் கவிதைகள் உங்கள் கவிதைகளை எப்படி மாற்றுகின்றன? வசந்தகால கான்லெஸ், முராகமியின் கண்ணாடி போன்ற கவிதைகள், கிழவனும் கடலும் கதையை கவிதையாக்கியிருப்பது, கின்ட்ஸுகி என்ற ஜப்பானியக் கலையில் உடைந்த பாண்டங்களை மீட்டுருவாக்கம் செய்வது போல உங்களை நீங்களே வனைந்து கொள்வதைக் கவிதையாக எழுதியிருப்பது அபாரமானது. உங்களின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று ‘கின்ட்ஸுகியும் ஒரு பாண்டமும்’. இவையெல்லாம் கவிதையுள் வந்தமர்ந்தது தற்செயலானதா?

ப: ஆசிரியர் குழுவில் இருந்தாலும், பிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும்போது, முதலில் ஒரு வாசகியாகவே அவற்றை வாசிப்பேன். கவிதையின் சமகாலப் போக்குகள் குறித்த ஒரு கண்ணாடியாக அவை இருக்கும். அயல்தேசத்துக் கவிதைகளாயினும், கலாசார வேறுபாடுகள் தவிர்த்து, கவிதை மொழி எவ்விதம் இயங்குகிறது என்பதே என்னை அதிகம் ஈர்க்கும். அவை என் கவிதைகளை நேரடியாகப் பாதித்திருக்கின்றன என்று சொல்லமுடியாது. ஆனால், கவிதையில் சாத்தியங்கள் குறித்த புதிய எண்ணங்களை அவை தந்திருக்கின்றன. புதிய முறைகளில் எழுதிப் பார்க்கும் உத்வேகம் அவை மூலம் சில சமயம் கிட்டுகின்றது.

கிழவனும் கடலும், முராகமியின் கண்ணாடி போன்றவை சில அனுபவங்களால் தூண்டப்பட்டவை. முராகமியின் கண்ணாடி, என் மகள் பிறந்திருந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு வினோதமான சுவாரஸ்யமான அனுபவத்தால் தூண்டப்பட்டது

கிழவனும் கடலும் கவிதை முதலில் ஒவ்வொரு பகுதியாக, பலமுறை எழுதப்பட்டது. ஒரு முறை, அந்த நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ கைமறதியாக வைத்துத் தொலைத்துவிட்டேன். அப்போது, முதல் பகுதி, ‘கிழவனை எங்கோ கடலோடு தொலைத்துவிட்டேன்…’ என்று சில வரிகள் எழுதியிருந்தேன். பின்னர், தற்செயலாக, காரின் முன்னிருக்கையின் பின்னாலிருந்த பையில் வைத்திருந்தது, திரும்பக் கிட்டியது. அத்தோடு, அது கவிதையாகும் உத்தேசம் நின்றுவிட்டது. 

பிறகு, சில வாரங்களுக்குப் பின், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த துக்க சம்பவம் நேரிட்டது. அது நிகழ்ந்த நான்கு தினங்களுக்குள், டைட்டானிக்கின் மூழ்கிய பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகிய துக்க சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுமே, கற்பனைக்கெட்டாத தீவிரத் தன்மை கொண்ட நிகழ்வுகள்தான்; என்றாலும், சில ஊடகங்கள் அவ்விரண்டு நிகழ்வுகளையும் அணுகியதிலிருந்த பாரபட்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு பகுதியாக எழுதப்பட்ட, அகதியும் கடலும் கவிதையின் பின்னணி இதுதான். தற்செயலோ அல்லது ஆழ்மனவோட்டத்தின் விளைவோ… இவ்விரண்டு கவிதைகளும், intertextual படைப்புகளாக, வேறு பிரதிகளின் மேலாக அமைந்துவிட்டன.

ஆனால், வசந்தகால கான்லெஸ் மற்றும் கின்ட்ஸுகியின் கதை வேறு. ஓவியம் மற்றும் புகைப்படக் கலை, நிட்டிங் மற்றும் அது போன்ற பல்வேறு கைவினைக் கலைகளில் இருக்கும் ஈடுபாட்டால், அவை தொடர்பான சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். அதில் ஒரு குழுவில்தான் கின்ட்ஸுகி குறித்த ஒரு சிறிய கட்டுரையை வாசித்தேன். வாசிக்கும்போதே, ஏனோ, அது மனித மனங்களைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. எவ்வளவு தீவிரமான விளிம்பில் நிற்கும்போதும், எப்போதும் தீர்வுகளில் நம்பிக்கை கொண்டவள்தான் நான். அதனால், எனக்கு அந்தக் கலை ஒருவித மகிழ்ச்சியையும் ஆசுவாசத்தையும் அளித்தது. அதன் அடையாளமாகவே அதை எழுதினேன்.

வசந்தகால கான்லெஸ், யுகேயில் வசிக்கும் ஒரு தோழி கெல்லி மென்ஸிஸின் அனுபவத்தினால் ஏற்பட்ட தாக்கம். புதிய உடைகள் வடிவமைக்க நிட்டிங் பாட்டர்ன்களை எழுதும்போது, அது பலதரப்பட்ட உடலமைப்புக்குப் பொருந்தும் வகையில் வெவ்வேறு அளவுகளுக்கு சிறுசிறு மாற்றங்களுடன் எழுதுவோம். அப்படி எழுதிய புதிய பாட்டர்ன்கள் சரியாக உள்ளனவா எனச் சோதிக்க இதுபோன்ற சிறு குழுக்களில் அழைப்பு விடுப்போம். நேரமிருக்கும் பிற உறுப்பினர்கள் அவர்கள் பாட்டர்ன்களைப் பின்னிப் பார்த்து, அது பிழையின்றி இருக்கிறதா என உறுதிசெய்வோம். அப்படி பாட்டர்ன்களைப் பகிரும்போது, அது போல் ஒன்றை வடிவமைக்க எது தூண்டுதலாக இருந்தது போன்ற விவரங்களைப் பதிவிடுவோம். அப்படித்தான், கெல்லி அந்த வயல்களைப் பற்றிய படங்களைப் பகிர்ந்து, அதிலிருந்து அந்த பாட்டர்ன் வடிவமைக்க, தமக்கு யோசனை தோன்றியதைக் கூறியிருந்தார். அருமையான படங்கள் அவை! அவற்றோடு அவர் அந்தக் காட்சி குறித்து வர்ணித்திருந்த விதம் என்னையே கெல்லியாக மாற்றிவிட்டது. அவர் வளர்ந்த இடத்தினருகேதான் இந்த கான்லெஸ் நதி ஓடுகிறது. கெல்லியை கான்லெஸ்ஸினருகே எண்ணிப் பார்த்தபோது, அதை ஒரு கவிதையாக மாற்றி அவருக்குப் பரிசளிக்கத் தோன்றியது. தமிழில் எழுதி, ஆங்கிலத்துக்கு மாற்றி அவருக்கு அனுப்பி வைத்தேன். பின்னர், தமிழ் வடிவம் ஒரு இதழிலும் பிரசுரமானதால், தொகுப்பிலும் இடம்பெற்றுவிட்டது. இதுதான், வசந்தகால கான்லெஸ் இங்கு வந்த பின்னணி.

இவ்வாறான அனுபவங்களும், அயல்தேசக் கலைகளும், intertextual முயற்சிகளும் – என் கவிதைகளில் வந்து சேரும்போது, முன்னரே சொன்னது போல், என் எழுத்தில் புதிய சாத்தியங்களைக் காட்டுகின்றன. சில சமயம், இவற்றை நான் எழுதினேன் என்று அல்ல, இவை தம்மைத் தாமே எழுதிக்கொண்டனவோ என்று தோன்றும். ஒருவேளை, இவை நானறியாமல் என்னில் சில புதிய பரிமாணங்களையும் உண்டாக்கி இருக்கலாம். 

கே: ‘பழைய பகல்களின் வெளிச்சம் – என் / பால்யத்தின் வெளிச்சம்.’ உங்கள் கவிதைகளில் பால்யத்தில் வாழ்ந்த அனுபவித்த விஷயங்களின் மயக்கம் அல்லது கடந்த கால நினைவுகளில் அலைவுறும் நிகழ் காலத்தின் நிதர்சன ஏக்கங்கள் நிறைந்திருக்கின்றன. ‘ஏழாம் பக்கத்தில் எப்போதும் இளமையாக இருக்கும் ஊர்’ – இது ஏக்கத்தின் சாயலா இல்லை கடந்தகாலத்தின் மகிழ் தருணத்தில் உறைந்த கணத்தை மீட்டெடுக்கும் முயற்சியா? ‘இனி எப்போதும் நனைய முடியாத கடந்தகால மழை’ என்ற துயரம் ‘இன்றின் மழையை எப்படிக் காண்பது’ என்ற பயமாய் ஏன் மாறுகிறது? இப்படி நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் அலைவுறுதலை பல கவிதைகளிலிருந்து எடுத்து சொல்லி விடமுடியும். அந்த அனுபவங்கள் சார்ந்து சொல்ல முடியுமா? காலம் ‘ஊஞ்சல் போல பின்னாலும்/ ஒருமுறையேனும் வரக்கூடாதோ!’ என்ற ஏக்கம் எப்போதிருந்து தொடங்கியது?

ப: காலம் பின்னால் வரக்கூடாதா என்ற அந்த ஏக்கம் மிக இளம்வயதிலேயே இருந்திருக்கிறது. அப்படி ஏற்பட முக்கியமாக இரண்டு சூழல்கள் காரணமாக அமைந்தன. என் பத்தாவது வயதில், வீட்டில் நிறைய நேரம் நான் தனியாக இருக்கவேண்டிய சூழல் திடீரென ஏற்பட்டது. அது எனக்கு எதிர்கொள்ளத் தெரியாத பெரும் அதிர்ச்சியாக இருந்தது அப்போது.

நான் ஆறாவது வகுப்பில் சேர்ந்த சமயம், பள்ளிக் கட்டிடங்கள் பற்றாக்குறையால், ஏழாவதும், ஆறாவதும், பகுதி நேர வகுப்புகளாக நடந்து வந்தன. அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அக்கா பள்ளி சென்று விடுவார். நான் மத்தியானம் பள்ளிக்குச் செல்லும் வரை வீட்டில் தனித்திருக்க வேண்டும். அது என்னை மிக மிக பாதித்தது. பாதுகாப்பான வளவில்தான் குடியிருந்தோம் என்றாலும், எனக்கு மிகுந்த அச்சமும் பதற்றமுமாகவே இருக்கும். எனக்கு எப்படியிருக்கிறது என்று கேட்கவோ, கவனிக்கவோ யாருக்கும் நேரமில்லை. நானே தலை சீவி, உணவு எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு, தனியாக எப்படியோ நேரத்தைக் கடத்தவேண்டும். சில சமயங்களில், முன்னர் எங்கள் வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்த மகமாயி என்கிற ஆச்சி வருவார். அவரைக் கண்டால் போதும், அவர் மடியில் விழுந்து அழத் தொடங்கிவிடுவேன். அவர் என் அழுகையை அமர்த்தி, எனக்குத் தலை சீவி விட்டு, உணவு பிசைந்து கையில் போட்டு என்னைச் சாப்பிட வைப்பார். நான் அவரோடு அவர் வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று அழுது அடம்பிடிப்பேன். ‘ஒரு வருஷம்தானே… சரியாப் போயிடும் பாரு’ என்று ஆறுதல் சொல்வார். எனக்கு இன்னும் ஐந்தாம் வகுப்பிலேயே இருந்திருக்கக் கூடாதா… அல்லது அதற்கும் முன்னால் போய் முதலிலிருந்து மறுபடியும் வளரக் கூடாதா என்றெல்லாம் இருக்கும்.

அடுத்தது, என் பன்னிரண்டாவது வயதில், எங்கள் அம்மா எங்களைப் பிரிந்து தனித்துச் சென்றபோது. அம்மாவுக்கு அதற்கான காரணங்கள் இருந்திருக்கலாம்; ஆனால், அம்மா என்னைத் தேடவேயில்லை, என்னைப் பிரிந்து அவரால் இருக்கமுடியும் என்பது, அந்தச் சிறு வயதில் எனக்கு மிகுந்த துயரைத் தந்தது. எப்படியாவது, ஏதாவது நடந்து எங்கள் வாழ்க்கை முதலிலிருந்து மீண்டும் மகிழ்ச்சியாகத் தொடங்கக்கூடாதா என்ற தீராத ஏக்கம் அப்போது ஏற்பட்டது. அப்படி நாங்கள் திரும்பிப் போகவென ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அந்த நாளில், விடிகாலையில், அம்மாவும், அப்பாவுமாக என்னையும், அக்காவையும் பள்ளியில் கொண்டு விட ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றனர். வீட்டுக்குள் காலை வெயில் வந்து கொண்டிருக்கிறது. வானொலியில் ஏதோ பாட்டு. நான் சீருடை அணிந்துகொண்டு ஜம்மென்று நிற்கிறேன். கனவின் வெளிச்சத்தில் போல் ஒரு மயக்கப் பளபளப்புடன் அந்த நாளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். நான் திரும்பிப் போய் எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்க விரும்பும் நாட்களில், அந்த அழகிய காலைக்குத்தான் முதலிடம்.

நினைத்துப் பார்த்தால், என் மனசின் ஒரு பகுதி என் சின்ன வயசிலேயே தங்கிவிட்டது என்று தோன்றுகிறது. அதை என்ன செய்தும் நிகழ்காலத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. அங்கே ஏதோ தீராத கணக்கு ஒன்று அதற்கு இன்னும் இருக்கிறது. என்னவோ நிகழ்ந்து, ‘உம்… நீ இனி அடுத்த கட்டத்துக்குச் செல்’ என்று என்னை என்னிடம் அனுப்பி வைக்கும் அதிசயம் எதுவோ அங்கே இன்னும் நிகழக் காத்திருக்கிறது. ரொம்ப இனிப்பாக, ரொம்பக் கசப்பாக, ரொம்ப வெளிச்சமாக, ரொம்ப இருட்டாக, வேறு எங்கும் கிட்டாத ஒரு குளிர்ச்சியும், அமைதியும் அங்கே இருக்கின்றன. அதற்காகவே நான் அங்கே மீண்டும் மீண்டும் திரும்பிப் போகிறேன். 

‘மண்டவெல்லமொன்றைத் தன்னந்தனியாகப் புற்றுக்கு உருட்டிப் போகும் ஓரெறும்பு நான்’ என்று ஒரு வரி எழுதியிருக்கிறேன் அல்லவா… என் மண்டவெல்லம்தான் என் பால்யம். அதை என்னால் என்னோடு உருட்டிக்கொண்டு வர முடியவில்லை. அதனால், என் ஞாபகங்களுக்கு அடிக்கடி சென்று அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துப் பார்த்துத் தீர்க்கப் பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் ஒரு விஷயம். ‘என் ஊர்’ எழுதியதற்கும் இந்த ஏக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் ஊர் என்று குறிப்பிட்டிருப்பது, இரண்டாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் நான் படித்த ‘என் ஊர்’ என்ற பாடத்தை. அது இடம்பெற்றிருந்தது, ஏழாம் பக்கத்தில். அதில் ஒரு அழகிய ஓவியமும் இடம்பெற்றிருக்கும். வரிசையாக ஓட்டு வீடுகள் அமைந்த ஊரின் பறவைப் பார்வை ஓவியம் என்று சொல்லலாம். நான் அப்போது அந்த ஓவியத்தை, என்னுடைய அம்புப் பெரியம்மை இருந்த மீனாட்சிபுரத்தின் படம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது மட்டுமென்ன, இப்போதும் அப்படித்தான் எண்ணுகிறேன். அதை என் ஊர் என்று உரிமையாக எண்ணக் காரணம், அவர்கள் வீட்டில் அடிக்கடி நின்று வளர்ந்தது மட்டுமல்ல; தாமிரபரணி நாங்கள் வசித்த டவுனை விட, அவர்கள் ஊருக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்ததும்தான். ‘என் ஊர்’ – மகிழ்ச்சியான ஞாபகங்களின் அடையாளம்.

மகிழ்ச்சியோ, துக்கமோ… அலையடித்து ஓய்ந்ததும் ஞாபகங்களாகக் கரைசேர்கிற சிப்பிகள்தானே… அவற்றைச் சேர்த்து வைத்து அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்வதும் இயற்கைதானே..! 


கே: உங்கள் பல கவிதைகளில் காட்சிப் படிமங்கள் அபாரமாய் அமைத்தெழுதப்பட்டிருக்கின்றன. சூரியனைக் கிழிக்கும் கட்டுமரம், சூரிய வெளிச்சத் துண்டுகளை ஏந்தி வரும்/ ஏந்திச் செல்லும் கடலலை, கடலில் செதில் செதிலாய் உதிரும் சூரியன், ‘துடிக்கும் மணிக்கழுத்தை/ அடிக்கடி அடிக்கடி திருப்பி/ இறகுகள் கோதிக்கொள்ளும்’ புறாக்கள், இது போன்றவற்றை உதாரணத்துக்குச் சொல்லலாம். அதை நீங்கள் பார்க்கும் போதே எழுதுவீர்களா அல்லது காட்சி ஆழ்மனத்தில் புதைந்து கொண்டு பின் எப்போதேனும் கவிதையாகி வருமா? மேலும் ‘சைக்கிள் பூட்டை மெதுவாக விடுவித்து/சத்தமின்றி உருட்டித் திருப்பி/ஒற்றைக் காலால் மிதித்து/உருளத் தொடங்குகையில்/ஏறியமர்ந்து செல்ககையில்/ஒரு பூ காற்றில் செல்வதுபோல் இருக்கும்’ இது போல பால்யத்தில் கண்ட காட்சிகளை, அந்த வயதில் பயம் கொண்டதை கவிதைக்குள் ஏற்றியிருப்பது எப்படி நிகழ்ந்தது? ‘இரண்டு மஞ்சள் யானைகள்…/எடுத்து உயர்த்தவும்/இடித்து நகர்த்தவும்/ எங்களாலாகுமென்று/இரும்புத் துதிக்கை நீட்டி முழக்கும்/இயந்திர யானைகள்’ –  JCB வாகனங்களை யானையாகவும், இந்த நகரத்தை கான்கிரீட் காடாகவும் பார்த்த பிரமாதமான சித்திரம் இயற்கையின் மீது உங்களுக்கு அக்கறையைப் பேசுகிறது. இயற்கைக்கும் உங்களுக்குமான பிணைப்பை இது போல இன்னும் சிலவற்றிலிருந்தும் காட்ட முடியும். இதெல்லாம் கவிதையுள் எப்படி சாத்தியமாகிறது?

ப: இவ்வளவு விஷயங்கள் ஒரு கோணத்தில் ஒன்றாகத் தொடுக்கப்பட்ட ஒரு கேள்வி. ஒவ்வொன்றாகப் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். முதலில் காட்சிகள், காட்சிப் படிமங்கள் பற்றி. காட்சி ஞாபகங்கள் எப்போதும் எனக்கு அதிகம். எதுவுமே காட்சியாக என்னை மிகவும் தாக்கும்; ஆழமாகப் பாதிக்கும். சிறு குழந்தையாக இருந்த சமயத்தில் நிகழ்ந்தவை கூட எனக்கு ஞாபகத்தில் உள்ளன.

நான் அதிகம் சேட்டை செய்யும் குழந்தை; வேலையாக இருக்கும் நேரங்களில் என் அம்மா எப்போதும் ஒரு தூணில் என்னைக் கட்டிப் போட்டிருப்பார். ஒரு ஓட்டுக்கையின் உள்புறம் அமைந்த தூண்களில் ஒன்று. அதற்கும் எங்கள் வீட்டுக்கும் இடையில் ஒரு வெளி தார்சால்; முற்றம் என்று சொல்வது போல். அந்தத் தூணில் இருந்து, வீட்டுப் பட்டாலையைப் பார்க்கலாம்; ஓட்டுச் சாய்வுக்குள், தூணுக்கு எதிரில், தண்ணீர் நிரப்பிய கொப்பரைகள் ஒரு கல் சுவரின் கீழே வரிசையாக இருக்கும். அதில் வெயில் சாயும்போது, கற்சுவர்களில் அழகழகாக வெளிச்சம் வட்டமிடும். அதையே பார்த்துக்கொண்டு இருந்த ஞாபகம் இருக்கிறது. அந்தக் கற்சுவரின் மென்பச்சை கலந்த பழுப்பு நிறமும், அதில் கிட்டுகிற குளிர்ச்சியும்கூட இதை எழுதும்போது என்னால் உணரமுடிகிறது. 

அது போலவே, வானத்தையும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பேன். வானின் நீலமோ, அல்லது மேகங்கள் விதவிதமாகப் போவதோ, கீச்சிட்டுக்கொண்டே மிதப்பது போல் பறக்கும் கழுகு, கருடன் போன்ற பறவைகளோ… எதன் மீது ஈர்ப்பென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒன்று ஞாபகம் இருக்கிறது. எப்போதாவது நமக்கும் இறக்கைகள் முளைக்கும்; அப்போது நாமும் இந்தப் பறவைகள் போல மேலேயிருந்து கீழே பார்க்கலாம் என்பது போல் பின்னர் சில சமயங்களில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருந்திருக்கிறது. 

இதுபோல் பல ஞாபகங்கள், காட்சிகளாகவே எனக்கு உள்ளன. எங்கள் பக்கத்து வீட்டுத் தட்டி ஆச்சியுடன் எனக்கு ரொம்ப சிநேகம். தினமும் ஒருமுறையாவது அவர் வீட்டில் போய், அவர் கையால் அச்சு வெல்லம் வாங்கித் தின்பேன். அவர் என் அம்மா ஏசுவார் என்று மறுப்பார். இருந்தாலும், நான் முரண்டு பிடித்து வாங்கித் தின்னுவேன். அப்படியொரு முறை, ஆச்சி எனக்கு வெல்லம் தந்துகொண்டிருந்தபோது, என் அம்மா ஆச்சி வீட்டின் ஒரு மூலையில் தட்டியை விலக்கிக்கொண்டு, வெளியில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு புன்னகை. எனக்கு ‘அம்மா ஒன்றும் கோபப்படவில்லை’ என்ற ஆசுவாசம் ஏற்பட்டது. இது போல் காட்சிகளாக ஞாபகங்கள் பதிவதால், பின்னர் எப்போதேனும் எழுதும் கவிதைகளில்கூட அவற்றை என்னால் மீட்டெடுத்து எழுத முடிந்திருக்கிறது.

இப்போதும்கூட, வானம், வெயில், விதவிதமான ஒளிப் பிரதிபலிப்பு என்றால் எனக்கு அதிலொரு சுவாரஸ்யம், ஒரு லயிப்பு, ஒரு சுகம், ஒரு அமைதி. என்னுடைய ஞாபகங்கள், அனுபவங்கள்தாம் என்றில்லை; வாசிக்கும்போது கூட, காட்சி விவரணைகள், காட்சிப் படிமங்கள் என்றால் அவை என் மனசில் அதிகம் தங்கியிருக்கும்.

நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தபோது ஒரு முறை, – என் அக்காவின் தமிழ்த் துணைப்பாடப் புத்தகத்திலா அல்லது வேறெங்கேயோவா என்று நினைவில்லை – ‘மழை’ என்ற கதை வாசித்தேன். (பின்னர்தான் அது அசோகமித்திரனின் கதை என்று தெரிந்துகொண்டேன்.) ‘சட்டை சிறியதாகப் போகுமா, அப்பா?’ என்று அவன் கேட்கும் கேள்வி எப்படி இன்றும் புதிது போல் மனசில் நிற்கிறதோ, அதுபோலவே கருமேகங்கள் உயர்ந்து வரும் காட்சியை அவன் காண்பதும், மழை முடிந்த காலையில் எருமைகள் சுத்தமாகிப் போவதைக் காண்பதும், வாசல் மரத்தடியில் அந்தச் செடி இன்னும் கொஞ்சம் வளர்ந்திருப்பதைக் காண்பதும்… இந்தக் காட்சிகளெல்லாமும்கூட மனத்துக்குள் அப்படியே விரிந்து பதிந்திருக்கின்றன. புதுமைப்பித்தன் பொய்க்குதிரையில் சொல்லியிருப்பாரே… ‘கனவின் நிலவு போலும் மென்மையாக…’ என்று… இதுபோல் ஒரு வரியை வாசித்தபிறகு, அதை எப்போதேனும் மறக்கமுடியுமா, சொல்லுங்கள்.

ரூமியின் ஒரு கவிதையில், ‘What stops us from joining the dance the dust particles do? Look at the subtle motions in sunlight’ என்று இறப்பைப் பற்றி எழுதியிருப்பார். இறப்பை எவ்வளவு அழகான ஒரு அனுபவமாக எண்ண வைக்கின்றன இந்த வரிகள். இதுபோன்ற படிமங்கள் எப்போதும் என்னைச் சட்டென்று ஆட்கொண்டுவிடுகின்றன. மனசுக்குள் காட்சிகளாக அப்படியே படிந்துவிடுகின்றன.

சங்கிலி பூதத்தார் கவிதையில் அந்தப் பயத்தை உணர்த்த முடிந்திருப்பதும், அந்தக் காட்சி ஞாபகத்தின் புண்ணியத்தில்தான். எப்போதும் ஆராதனை வந்து ஆடும் அவரையே பார்த்திருந்துவிட்டு, ஒருமுறை அவர் சாவதானமாக சைக்கிளில் ஏறிச் செல்வதைப் பார்த்தபோது, அது அவர்தான் என்பதையே நான் நம்பமறுத்தேன். அவ்வளவு உக்கிரமாக அவர் ஆடும் காட்சி மனத்தில் பதிந்திருந்ததுதான் காரணம்.

இயற்கை சார்ந்த கவிதைகளைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இயற்கை தன் மொத்த ஆகிருதியில் இருக்கும் இடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆறு, கடலை விட மலைகள் காடுகளென்றால் ஒரு தனி ஆச்சர்யம். அதுபோன்ற அடர்ந்த காடுகள் வழியே போகும்போது, நாம் வெறும் மனுஷி… இவ்வளவு பெரிய அற்புதத்தின் முன் அற்பத்திலும் அற்பம் என்ற எண்ணம் மேலெழும். காடு, மலை சார்ந்த இடங்களுக்குப் போகும்போதெல்லாம் எனக்குக் குதூகலமும், இதுபோல் ‘தத்துவ’ விசாரமும், வேடிக்கை பார்த்துத் தீரா ஆர்வமுமாக ஒரே உணர்வுக் கலவையாக இருக்கும். நான் இயற்கையின் ஒரு சிறிய கைக் கருவி என்று தோன்றும். காடுகளில் அவ்வளவு உயர்ந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது, மிகமிக லேசாக, சொந்த வீட்டுக்கு வந்தது போல் இருக்கும். குறிப்பாக, முதுமலையைக் கடக்கும் சமயங்களில் நான் அடிக்கடி ஒன்று சொல்வேன்: “அடுத்த பிறப்பு ஒன்று நானே தேர்வு செய்யமுடியுமானால், இந்த மலையில் இந்தக் காட்டிலொரு மரமாகத்தான் நான் வந்து பிறப்பேன்”. ஒரு மரம் இந்தப் புவிக்கு ஆற்றமுடிந்த நன்மையில் ஆயிரத்தில் ஒரு பங்கு சிறு நன்மை என்னால் செய்யமுடியுமானால், நான் ஆறறிவுடன் பிறந்ததற்கு ஏதோ ஒரு பலனென்று எண்ணியிருக்கிறேன். 

அப்படிப்பட்ட ஒரு பயணம் முடிந்து திரும்பிவரும்போது எழுதிய கவிதைதான், நீங்கள் குறிப்பிட்ட ஜே.ஸி.பி. கவிதை. எப்போதும் முதுமலை வழியாகக் கடக்கும்போது, நிறைய மிருகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும். ஏதில்லாவிட்டாலும், நிறைய மான்கள் மற்றும் ஓரிரு யானைகளையாவது பார்க்காமல், பயணம் நிறைவுற்றதில்லை. ஆனால், ஏனோ அம்முறை ஒரு யானை கூட பார்க்கக் கிட்டவில்லை. பெங்களூர் வரும் வரை அதுவே நினைவாக இருந்தது. பெங்களூருக்குள் நுழையும்போது நல்ல மழை. போக்குவரத்து நெரிசலில், ஒரு கட்டுமானப் பணி நிறுவனத்தின் இரண்டு ஜே.ஸி.பி.களைக் கண்டபோது, என் ஏக்கத்துக்கு ஒரு சிறிய நிவாரணமாக அவற்றை யானைகளாகக் கற்பனை செய்தபோது எழுதிய கவிதை அது.

‘Our Town’ என்ற நாடகத்தில் ஒரு பாத்திரம் பேசும் வரி: ‘Oh earth! You are too wonderful for anybody to realise you!” அது மிகவும் சத்தியம். நாம் எவ்வளவு முயன்றாலும், இயற்கையின் முழுமையான ரகசியங்களை, சக்தியை, அழகை நம்மால் எழுதிவிட முடியாது.

கே: ‘எளிய இரவு/கனத்துக்கிடக்கிறது இன்று/சிறு மரக்குச்சியிழுக்கும் திருவைக்கல்லென’ – இது பிரிவுத்துயருணர்த்தும் வரிகளென்றாலும், மரக்குச்சி, திருவைக்கல் காலச்சுழற்சியின் குறியீடாக, நம்மால் கைவிடப்பட்ட வரலாற்றை கவிதையில் பொதித்து அதன் பயன்பாட்டை நீட்டிக்கும் முயற்சியாக, ‘சிறு குச்சிதான்; ஆனால் அதுவே திருவைக் கல்லை இயக்கும் சூத்திரதாரி’ என்ற தத்துவ விசாரமாக வடிவமைத்த கற்பனை எங்ஙனம் எழுதப்பட்டது?

ப: திருவைக் கல் எங்கள் வீட்டில் அன்றாடப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அது போன்ற சிறிய இயந்திரங்கள் மீது, எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும் ஈர்ப்பைப் போலவே எனக்கும் இருந்திருக்கிறது. பின்னாட்களில், நானே அதைப் பயன்படுத்திய அனுபவமும் உண்டு. அதன் பின்னால் இருக்கும் அறிவியல் தத்துவம்தான் அப்போது மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கிற்று. ஆனால் கவிதையில் இவ்விதம் அதனைப் பயன்படுத்தியது, என்னை அறியாமல் நிகழ்ந்ததுதான். மனம் இப்படிப்பட்ட தொடர்புகளை எப்படி ஏற்படுத்திக்கொள்கிறது என்பது வினோதம்தான். 

கனத்துக் கிடக்கும் இரவை இழுத்துச் செல்வதைக் கற்பனை செய்தபோது, சட்டெனத் திருவைக் கல் என்று தோன்றியது.

இக்கவிதையில் என்று மட்டுமில்லை; வேறு சில கவிதைகளிலும் எளிமையான ஏதேனும் ஒரு விஷயம்தான் என்னை முதலில் எழுதத் தூண்டியிருக்கும். ஆனால், பிறகு அதுபோல் இருக்கும் பெரிய விஷயங்களைக் குறித்து சிந்தனை போய்க்கொண்டேயிருக்கும். அது எப்படியோ அந்தக் கவிதையில் வந்து சேர்ந்துவிடும். இது என்னையறியாமலே நிகழ்வதை, பல கவிதைகளில் உணர்ந்திருக்கிறேன். ஒரு வகையில், ஏதோ ஒரு பெரிய விஷயத்தின் எளிய கூறுகளை, அல்லது மாதிரிகளைக் கண்டுகொள்வது – சில சமயங்களில் அது ஒரு பாவனையாகக்கூட இருக்கலாம் – ஒரு புதிரை விடுவிப்பது போல் எனக்கு சுவாரஸ்யம் தருகிறது என்று நினைக்கிறேன்.


கே: மேய்ப்பரும் ஆட்டுக்குட்டிகளும் நிறைந்திருக்கும் கவிதைகளும் இருக்கும் அதே தொகுப்பில் காந்திமதியின் தாய்மையைத் தரிசிக்கும் கவிதைகளும் காட்சியாகின்றன. வெட்டவெளியில் எப்போதும் வசிக்கும் சின்னப் பிள்ளையாரின் எளிமையைப் பேசும் கவிதையிருக்கும் அதே தொகுப்பில் ஆடி தை மாதங்களில் வீட்டினுள் வழிபடப்படும் முறுக்கிய சேலையின் வடிவில் இருக்கும் கன்னி தெய்வத்துக்கும் இடமிருக்கிறது. வானம் பார்த்த மொட்டை மாடி உலவும் கவிதைவெளியில் வீட்டுக்குள்ளேயே சுழலும் மின்விறிசிக்கும் இடமுண்டு. வெயிலைக் கொண்டாடும் விந்தை நிகழ்ந்திருக்கும் கவிதையுலகுக்கு நிகராக மழை தூறிக்கொண்டு வசீகரத்தையும் வெறுப்பையும் ஒரே விதமாகப் பார்க்கும் மாயமும் நிகழ்கிறது. ‘நீர்காணா சங்குபுஷ்பம்’ வறட்சியின் இழப்பின் குறியீடாகும் கவிதையில் ‘ஆலம்பூ ஒன்று நீலத்தில் பூத்திருக்கிறது’ என்ற நீர்மையும் நிறைவும் பதிவாகிறது. இப்படி முரண்களை எல்லா முனைகளிலும் வெவ்வேறு கவிதைகளில் வெவ்வேறு மனநிலையில் புனைவது படைப்பாளியின் குணாதிசயங்களில் ஒன்றோ?

ப: அவற்றை முரண்கள் என்ற நோக்கில் நான் காண்பதில்லை; அப்படியொரு தொனி அதில் வந்திருந்தாலும். அவை வாழ்க்கையின் இயல்பான கூறுகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.  ஆறாம் வகுப்பிலிருந்து என் பள்ளித்தோழி முத்துவேணி. அவள் சாமி கும்பிடும்போது என்ன சொல்லிக் கும்பிடுவாள் என்று ஒரு முறை அவளிடம் கேட்டேன். அவள் விவிலியத்திலிருந்து ஒரு வசனம் சொல்லிக் காட்டினாள். ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்’ என்கிற வசனம். ‘அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் நடத்தி அமர்ந்த தண்ணீரண்டையில் நிறுத்துகிறார்’ என்று சொல்லும்போது, அது அப்படியொரு காட்சியாகவே மனத்தில் பதிந்துவிட்டது. மிக அழகிய ஒரு வழிபாடாகத் தோன்றியது அது. 

எப்படி அவள் வழிபாடு குறித்த ஆர்வம் எனக்கிருந்ததோ, அது போலவே, நாங்கள் நெல்லையப்பர், காந்திமதியம்மை கோயில்களுக்குச் செல்கையில் அவளும் எங்களுடன் வருவாள். மேய்ப்பரோ, காந்திமதியோ, சின்னப் பிள்ளையாரோ, கன்னியாக வணங்கும் என் பாலா அத்தையோ… தெய்வமென்று நினைத்தால் நமக்கு அது தெய்வம். அதன் மூலம் நாம் பெறும் அனுபவங்கள் வெவ்வேறு. என்றாலும் அது எப்படியெப்படியோ நம்மை வடிவமைக்கிறது. அதன் வெளிப்பாடாக, அவை கவிதைகளில் அப்படி இயல்பாக வந்து அமைந்திருக்கலாம். முரண்களைப் புனைந்து காட்டவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டதில்லை.

சங்குபுஷ்பம் கவிதை, ஒரு உபதேச நோக்கு சத்தமாக வெளிப்பட்டுவிட்டதோ என்று நானே என்னுள் அதிகம் நொந்துகொண்ட கவிதை. ஆனால், அதை ஒரு காட்சிப் படிமமாக மாற்றியதால், அவ்விதம் அது தொனிக்கவில்லை என்பதை உங்கள் கேள்வியின் மூலம் உணர்கிறேன்.

கே: ஆலம் பூ வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். நீங்கள் எழுதியிருக்கும் நீல ஆலம் பூ ஒரு புனைவா? 

ப: நீர் பாய்ச்சப்படாத கொடியில் பூத்திருந்த சங்கு புஷ்பம்தான், அந்த நீல ஆலம் பூவும். நீ நினைத்தால் எந்தச் சூழலிலும் பூக்கலாம் என்ற ஒரு வெளிச்சத்தைத் தந்ததால் அது ஆலம் பூ. வேர் நெகிழ்ந்தாலும் விழுதூன்றிப் படரும் தருவல்லவா அது?! பிடிவாதமாக வேர் பிடித்து வளர்ந்து வந்த அந்த மெல்லிய கொடியிலும் ஒரு ஆலமரத்தின் பலம் இருப்பதாகத் தோன்றியது. அது பற்றியே அதனை நீல ஆலம்பூ என்று குறிக்க நினைத்தேன்.

கே: ‘பால்யங்களைப் பதியனிடும் கண்ணாடி’, உங்களது கவிதைகளின் உச்சம். ஏழு கண்ணாடி ஏழு தலைமுறையைக் குறிப்பதா? பால்யங்களை கண்ணாடி வழியே பதியனிடுதல் – இந்தப் பதமே அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. கிஜோ முராகமி ‘இலையுதிர் காலக் கண்ணாடியின் பால்யம் நினைவுகள்’ என்பதைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட கவிதை, காலத்தை உதிர்த்து மூன்று தலைமுறைக்கு முன் சென்று மூன்று தலைமுறையை முன் நோக்கி குழந்தைபோல் மாறும் நொடியைப் பதிவு செய்யும் கவிதை எழுதிய அனுபவத்தைப் பற்றிப் பகிருங்கள்.

ப: முன்னொரு முறை குறிப்பிட்டபடி, தற்செயலாக intertextual ஆக அமைந்த கவிதை இது. மனிதர்களுக்கு ஏழு பருவங்கள் இருப்பதாக, தமிழிலக்கிய மரபில் கூறப்படுகிறது. அதனடிப்படையில்தான் ஏழு கண்ணாடிகள் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனால், முராகமியின் கவிதையுடன் ஒப்பிட்டு இதை ஏழு தலைமுறைகளாகப் பார்ப்பதும், அல்லது வேறு எந்த விதமாகப் பொருள்கொள்வதும் வாசிப்பவரின் சுதந்திரம்தான். அதன் மூலம் ஒரு கவிதைக்குப் புதிய பரிமாணங்கள் கிடைக்கின்றன அல்லவா? இந்தக் கவிதைக்கு என்று மட்டுமல்ல; நவீன கவிதைகளுக்கு இது பொதுவாகப் பொருந்தும் என்றே எண்ணுகிறேன். எதையும் அப்படியப்படியே பொருள் கொள்ளக்கூடிய – லிட்டரல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்களே – அப்படியான ஒரு மனப் பழக்கம் எனக்குண்டு. பால்யத்தைப் பதியனிடுதல் என்ற பதமும் அதிலிருந்தே தோன்றியது. ஒரு செடியைப் பதியனிடும்போது, அந்தச் செடி ஒரு தொட்டியில் இருக்கும். அதை வளைத்து இன்னொரு தொட்டியில் அதன் நுனி மட்டும் வெளித் தெரியுமாறு, மண்ணுக்கடியிலாக அதைக் கொண்டு சென்று அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். சில நாட்களில் இந்தப் புதுச் செடி வேர் பிடித்துவிடும். ஆனால், உண்மையில் அது முந்தைய செடியின் ஒரு கிளைதான். நாமும், ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு தோற்றம் கொள்கிறோம். அதைத்தான் ஏழு கண்ணாடிகள் மூலம் குறிப்பிட விரும்பினேன்.

எங்கள் மகள் பிறந்திருந்த சமயத்தில், எனக்கு எந்தக் கண்ணாடியில் பார்த்தாலும், என் முகம் ஒரு குழந்தையின் முகம்போலவே தோன்றத் தொடங்கியிருந்தது; ஏனென்று தெரியவில்லை. ‘என்னடா இது… முராகமியின் கண்ணாடியில், வயதாகும்போது பிம்பத்தில் தந்தையின் முகம் தெரிகிறது. என் முகம் குழந்தையாக இருந்தபோதிருந்த முகமாக மாறிவருகிறதே…’ என்று வேடிக்கையாகத் தோன்றியது. அதனால்தான் அதில் வந்த இலையுதிர்காலம் என் கவிதையில் வசந்தகாலமாக மாறியது. 

ஆனாலும், எனக்கு நான் குழந்தையாக இருந்தபோது, என் தாயின் முகம் எப்படியிருந்திருக்கும், அவர் குழந்தையாக இருந்தபோது என் ஆச்சியின் முகம் எப்படியிருந்திருக்கும் என்கிற கேள்விகளெல்லாம் தோன்றத் தொடங்கின. அப்போதுதான் ஒவ்வொரு தலைமுறையும் பதியன் போடப்பட்டு, அதிலிருந்து மீண்டும் பதியனிடப்பட்டு வரும் நீண்ட சங்கிலித்தொடர்… எல்லாம் ஒரு முதல் ஆதிச் செடியிலிருந்து என்கிற ஒரு சின்னக் குமிழ் அப்போது தெறித்ததுதான்.

கே: ‘கர்ப்பக்கிருஹத்துக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது’ – நீங்கள் எழுதிப் பார்த்திருக்கும் பெண்ணியம் வித்தியாசமானது. குடும்பத்தலைவியாய் இழந்து பெற்றதை அவ்வளவு நாசூக்காய்ப் பேசும் கவிதை. இதைப் பதிவிட்ட மனநிலையைப் பற்றிச் சொல்ல முடியுமா? அதே போல் இன்னொன்று, “நான் கடவுள் இல்லை/தோசைகளை மட்டுமே சிருஷ்டிப்பவள்/அதுவும் சாயாத கல்லில்’ இதுவும் பெண்ணியக் கவிதை. மேலும் இது ‘பூமி இருபத்து மூன்றரைப் பாகை சாய்ந்துள்ளதுதான்’ என்ற அறிவியல் பௌதீக உண்மையைப் பேசுகிறது. இதைச் சார்ந்தும் சொல்லுங்கள். மேற்சொன்ன கவிதைகள் பெண் உலகுக்கே உரிய கவிதைகள் என்றாலும், உங்களில் பெரும்பாலான கவிதைகள் வீட்டுக்குள் இருக்கும் வெளியை விட வெளியுலகில் காணும் கிடைக்கும் அனுபவங்களைப் பதிவிடுகிறது. அகத்தனிமையை அதிகம் பேசும் கவிதைகள் புற உலகக் காட்சிகளில் திளைப்பது எதிர்த் துருவத்தில் இயங்கும் அனுபவங்களைத் தருகிறது. இது எப்படி சாத்தியமானது?

ப: பெண்ணியம் எழுதவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அன்று இக்கவிதைகள். ஆனால், பின்னர் அந்தச் சாயல் அதில் ஏற்பட்டுவிட்டது இயல்பாக நிகழ்ந்ததுதான். முந்தைய பதிலில் சொன்னபடி, எதையும் லிட்டரலாக இடையீடு செய்யும் தன்மை என்னிடம் உண்டு. (சில சமயங்களில் அது வெளியுலகுடன் இயங்குகையில் இடைஞ்சலாகவும் இருப்பதுண்டு.) 

என் பால்யம் நெல்லையப்பர்-காந்திமதியம்மை கோயிலைச் சுற்றியே அமைந்தது. அனேகமாக, நிறைய மாலை நேரங்கள் அந்தக் கோயில்களுக்குச் செல்லாமல் நிறைந்ததில்லை. அவர்களை தெய்வங்கள் என்பதைவிட, அன்றாடம் சென்று காணும் ஒரு உறவாகவே அப்போது நினைத்திருந்தேன். ஏதேனும் வேலைகளினூடே தற்செயலாக, ஊர் ஞாபகங்கள் எழும்போது, அந்த ஞாபகமும் அப்போது செய்துகொண்டிருக்கும் வேலையும் தொடர்பாக இது போன்ற வினோதக் கற்பனைகள் தோன்றும். அப்படியொன்றுதான், காந்திமதியம்மையும், இதுபோல் அடுப்பில் கல்லைப் போட்டுவிட்டு வந்து பிராகாரப் பலகணி வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தால்… என்ற கற்பனை தோன்றியது. பெண்ணிய நோக்கில் அமைந்துவிடும் என்று உண்மையில் அப்போது தோன்றவில்லை.

தோசைக் கவிதையும் அப்படியே. பெண்கள் என்றால் சமையல் செய்யவேண்டும் என்ற ரீதியில் இதைச் சொல்லவில்லை; ஆணோ, பெண்ணோ… சமையலை உயிர்வாழத் தேவையான ஒரு அடிப்படைத் திறனாகத்தான் பார்க்கிறேன். ஒருவேளை அது இளமையிலிருந்து சமையலுக்கு சுயச்சார்புடன் இருந்துவிட்டதால் எழுந்த எண்ணமாகக்கூட இருக்கலாம். என் அப்பா சமைப்பதைப் பார்த்துத்தான் நானும் சமைக்கக் கற்றுக்கொண்டேன். அவர் இரவுப் பணிக்குச் செல்லும் காலங்களில், நான் காலை, மதிய உணவு தயாரித்துக்கொண்டு, பணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால், பதினேழு வயதிலிருந்தே அது ஒரு இயல்பான அடிப்படையான திறனாகவே பழகிவிட்டது. அன்றாட உணவு என்றில்லை; சில சமயம் தீபாவளி, திருக்கார்த்தியல், பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில்கூட, அவர் பணிக்குச் செல்லவேண்டியிருக்கும். எங்கள் ஊரிலெல்லாம், கார்த்தியல் பெரிதாகக் கொண்டாடுவோம். அதுபோல, வீட்டு வாசல்களில் வைத்துப் பொங்கல் விடுவதே வழக்கம். நம் வீட்டில் மட்டும் இதெல்லாம் செய்யாமல் இருப்பதா என்கிற ஒரு தீவிரத்தில் அவற்றையெல்லாம் செய்து கற்றுக்கொண்டேன். எல்லாம் செய்துவிட்டு, தனியாக அமர்ந்து சாப்பிடும்போது, எது எப்படியானாலும் நமக்கு ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிற ஒரு சின்னப் பெருமிதம் இருந்தது ஞாபகமிருக்கிறது. காரணம், அந்த ஒரு திறனைக் கற்றுக்கொள்ள முயன்றதுதான்.

ஆனால், நீங்கள் கேட்க விரும்பும் கோணம் விளங்குகிறது. சமைப்பது மற்றும் சாப்பிடுவதில் அப்போது பெண்களுக்கு ஒரு நெருக்கடியும் கட்டாயமும் இருக்கத்தான் செய்தன; இப்போதும்கூட இருக்கின்றன. எங்கள் குடும்பங்களிலேயே, ஒன்றாகக் கூடும் சமயங்களில், ஆண்கள் முதலில் சாப்பிடுவார்கள். பிறகு பெரியவர்கள் சொல்வார்கள்: ‘ஆம்பளைப் பிள்ளைங்க முதல்ல சாப்பிடட்டும். அப்புறம் பொம்பளைப் பிள்ளைங்க சாப்பிடுங்க…’ என்று. ‘ஏன் எனக்கு மட்டும் வயிறு பசிக்காதா..?’ என்று எதிர்த்தும் நின்றிருக்கிறேன். திறன் என்று கற்றுக்கொள்வது வேறு; ஆனால், நீ பெண்ணென்பதால் இப்படியிரு என்று சொன்னால், என்னால் அப்படியிருக்க முடிந்ததில்லை. ஆண், பெண் என்று பார்ப்பதில் எனக்கு எப்போதும் குழப்பம் இருந்திருக்கிறது. என்னால், மனிதர்கள் என்றுதான் யாரையும் எண்ணமுடிந்திருக்கிறது; இப்போதும் அப்படித்தான். 

‘அவர் ஆண். அவர்தான் அதைச் செய்யவேண்டும்…’ அல்லது ‘செய்யக்கூடாது’ என்பதோ, அல்லது ஒரு பெண் என்பதால், இவர்கள் இப்படியிப்படியிருக்க வேண்டும் என்று சொல்வதோ, அதன் தாத்பர்யம் நிஜமாகவே எனக்கு விளங்குவதில்லை. நாமெல்லாரும் அடிப்படையில் மனிதர்கள்தானே..? 

இந்த மனநிலைதான், வீட்டைவிட வெளியிலடையும் அனுபவங்களை அதிகம் எழுதவைக்கிறதோ… என்னவோ..! நீங்கள் குறிப்பிட்ட தோசைக் கவிதையிலே, சாய்ந்திருக்கும் பூமியின் கோணம் பற்றிக் குறித்திருப்பதைக் கேட்டீர்கள். சாய்ந்திருக்கும் பூமியே இவ்வளவு நிலையாகச் சுற்றுகிறதே… நாம் கல்லை நேராக வைக்க இவ்வளவு போராடுகிறோமே என்று ஒருமுறை சலிப்பான எண்ணம் தோன்றியது. அதுபோன்ற விஷயங்களில் ஒரு கட்டாயமான பிடிவாதம் எப்போதும் எனக்குண்டு. தோசைக் கல்லென்றால், சரியாக மையத்தில் இருக்கவேண்டும், பேனாக் கூடு என்றால், பேனாக்கள் ஒரு பிரிவில், பென்சில்கள் ஒரு பிரிவில், இன்னபிற ஒன்றில்… சரியாக இருக்கவேண்டும், செருப்பைக் கழற்றிவிட்டால் இரண்டும் சரியாக இணையாக சீராக இருக்குமாறு கழற்றி வைக்க வேண்டும் – இப்படிச் சின்ன சின்ன விஷயங்களில் ஏதோவொரு ஒழுங்கைக் கையாள்வதில் ஒரு பிடிவாதம். அதனால், அந்தக் கல்லை நிலைநிறுத்தப் போராடிய சிறு சலிப்பு, அவ்வளவு பெரிய விஷயத்தை அதில் இணைத்ததில் முடிந்தது. இதென்றில்லை… வேறு சில கவிதைகளிலும், அதில் அறிவியலோ அல்லது வேறு எத்துறையோ தொடர்பான ஒரு விஷயம் என்னையறியாமல் நினைவுக்கு வந்ததென்றால், அதனைச் சேர்த்து எழுதவே முயற்சிப்பேன். என் மனம் அப்போது இப்படி இயங்கிற்று என்று எனக்கே பின்னால் நினைவூட்டிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக அத்தகைய கவிதைகளை எண்ணுகிறேன்.

இது போல் பிற துறை விஷயங்களை இணைத்துச் செல்லும் சில கவிதைகளுக்காக, சில நாட்கள் வாசித்து ஆராய்வதும் அதன் மூலம் அது பற்றிய பல விஷயங்களை நான் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களும் நேர்ந்திருக்கின்றன. இதெல்லாம், கவிதை எழுதும் அனுபவம் என்பதைவிட, அம்முயற்சியால் நான் கற்றுக்கொள்ளும் அனுபவம் என்று சொல்லலாம்.


கே:அவள் கதைகளில் உலவும் / அத்தனை பேரும் நானே!’ வளரும் மகளும் குழந்தைமை மனம் மாறாத தாயும் அவள் வளர வளர, இவள் மனம் நகராத காலத்தில் சூல் கொண்டு தவிக்கும் பல கவிதைகளை உங்கள் துமி தொகுப்பில் பார்க்கிறேன். அதே நேரம் தாய் தன் மகளின் வளர்ச்சியை வியந்து நோக்கும் தருணங்களும் அந்தத் தொகுப்பில் உண்டு. குழந்தைமை மனம் கொண்ட தாய்க்கு தாய்மை மிகக் கடினமான பொறுப்பு என்பதாக தொனிக்கும் குரலும் உண்டு. தாய்க்கும் மகளுக்குமான உரையாடல்கள் எல்லாமே கவிதையாக விரிந்த விந்தை நிகழ்ந்தது எப்படி? அதே நேரம் நீங்கள் பால்யத்தில் பார்த்த கேட்ட அனுபவித்ததை அந்தக் காலத்துக்குள்ளேயே மையமிட்டுக் கிடக்கும் உங்கள் மனத்தை தற்காலத்துக்குப் பொருத்திக் கொள்ளும் முரண் வெளியாகும் கவிதைகளும் உண்டு. ஒரே மனுஷி தாயாகவும் அதே கணம் தன்னை குழந்தையாகவும் பதிவிடும் படைப்பாளி, வாசகர்க்குச் சொல்ல நினைப்பது என்னென்ன?

ப: கொஞ்ச காலத்துக்கேனும் முற்றமுழுக்க நம்மை மட்டுமே சார்ந்து வாழும் ஒரு சின்ன உயிர் என்பது மிகப் பெரிய பொறுப்பு. பெற்றோராக எப்படி இருக்க வேண்டுமென யாரும் நம்மை ஆயத்தம் செய்ய முடியாது. அதற்கு எந்தக் குறிப்புப் புத்தகமும் கிடையாது; உதவாது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு குடும்பமும் தனித்துவமானது. குழந்தை வளர்ப்பும், விழுந்து எழுந்து நடக்கக் கற்றுக்கொள்வது போல்தான்; ஆனால் என்ன… அதனை இன்னொரு சின்ன உயிருடன் சேர்ந்து நாம் செய்யவேண்டும். மனத்தளவிலும், உடலளவிலும் நாம் ஏற்கவேண்டிய மாற்றங்கள், எவ்வளவு எதிர்பார்த்திருந்தபோதிலும், அதற்கும் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்கும் இடையில், நாம் நம்மையே மீண்டுமொரு முறை கட்டமைத்துக்கொள்வது போன்ற செயல்முறை அது.

அதனைக் கவிதைகளில் பதிவு செய்யும்போது, பெற்றோர் என்கிற பொறுப்பிலிருந்து கொஞ்சம் மாறி நின்றுகொண்டு, அந்த அனுபவங்களைத் திரும்பிப் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. நீங்கள் சொல்வது போல், குழந்தைமை மனநிலை என்று கொண்டால் (அது பற்றிய விரிவான பார்வையை அடுத்த பதிலில் தருகிறேன்.) அது பல வேளை எனக்கு இந்தப் பொறுப்பை லகுவாக்கியிருக்கிறது. குழந்தையோடு குழந்தையாக இருக்கவேண்டும்; தாயாக மாற வேண்டிய நேரங்களில் அந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும். இந்த நுட்பம் பிடிபட்டுவிட்டால் போதும்.  பால்யத்தில் மையமிட்டிருக்கும் மனம் தற்காலத்துக்கு அதைப் பொருத்திப் பார்க்கும் முரண் என்று கேட்டிருக்கிறீர்கள். சிலபல கவிதைகளில் இது நேர்ந்திருக்கிறது. ஆனால், ஞாபகங்களை மீட்டிப் பார்த்தல் அல்லது ஒப்புநோக்குதல் என்ற முறையில் அமைந்ததாக அவற்றைச் சொல்லலாம். 

இப்போது, இதில் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள் பற்றி எழுத, கவிஞர்களாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை என்பேன். இயன்ற அளவு அவர்களுடனான உங்கள் தருணங்களை, உங்களுக்குக் கைவரும் மொழியில் பதிந்து வையுங்கள். அது புத்துணர்வு தரும் ஒரு அனுபவம். 

உங்களுடைய குழந்தைகளாக இருந்தால், அவர்களுடன் மெய்யாக நேரம் செலவழியுங்கள். அவர்களை அவதானியுங்கள். அவர்கள் குழந்தைகள் என்றாலும், சிறிய மனிதர்கள்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு; அதை வெளியிட அவர்களுக்கு இடம்தர வேண்டும். இயல்புக்கு மாறாக அவர்கள் இருக்கும்போது, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்கவேண்டும். சிலவேளை, அவர்களுக்குச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், பெரியவர்களைக் காட்டிலும் தீவிரமாக உணர்வுகளை உள்வாங்குவார்கள் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். என் குழந்தை – அப்போது அவளுக்கு ஆறு வயது – ஒருமுறை பள்ளியிலிருந்து வருகையில் ஏதோ சிறு காயம்பட்டுக்கொண்டு வந்திருந்தாள். ஆனால், எப்படியென்பது அவளுக்கே தெரியவில்லை. என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள, அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோது, அவள் அழத் தொடங்கிவிட்டாள். பள்ளிச்சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்… ஆனால் அவள் அவ்வளவு அழ என்ன காரணம் எனக் கேட்டபோது, நான் அவள் சொல்வதை நம்பவில்லை என்பதால் அவளுக்கு அழுகை வருகிறது என்றாள். குழந்தைகளின் உணர்வுகள் எவ்வளவு நுட்பமானவை என்பதை நான் அறிந்துகொண்ட தருணங்களில் ஒன்று அது. சிலசமயம், அவர்களுக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவற்றை அடையாளம் காண நாம் அவர்களுக்குக் கற்றுத் தரமுடியும். வளரும் காலத்தில், வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைப் பகிர முடியாத சூழல் அமைந்தால், அது அவர்கள் வாழ்வில் நெடுங்காலம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

‘சிக்கல் தேவதை’ போன்ற சில கவிதைகளில், குழந்தைகள் மனம் செயல்படும் நுட்பங்களை இதுபோல் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். அவர்களுடன் நாம் செலவிடும் தருணங்களை, அனுபவங்களை, முடிந்த அளவு பதிந்து வைக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். நம் பதிவுகள் நமக்கும் அவர்களுக்குமிடையிலான உறவின் வலிமையான இழையாக எப்போதுமிருக்கும். பின்னாளில் நாமே அதை வாசித்துப் பார்க்கலாம்; நாம் முன்னர் காணத் தவறவிட்டிருந்த புதிய உலகங்களை அது திறந்து காட்டும். ஏனெனில், குழந்தைகள் ஒரு நாள் நுட்பமான மெல்லியல் தன்மை கொண்ட செடியாக இருப்பார்கள். மறுநாளே வளர்ந்து அழகிய மரமாகக் கிளை பரப்பி நிற்பார்கள். அவர்கள் உலகில் காலத்துக்கு நமதைக் காட்டிலும் இரு மடங்கு சக்கரங்கள். அது வேகமாகத் தாண்டிச் செல்லும் முன், படம் பிடித்து வைத்துக் கொள்வதே நம்மால் செய்யமுடிந்தது.

கே: உங்கள் கவிதைகளில் நிறைய குழந்தைகள் வருகின்றார்கள். நீங்களும் பல கவிதைகளில் சிறுமியாக வருகின்றீர்கள். ‘சிக்கல் தேவதை’ , ‘கல்லு முத்தம் – சின்னக் கூழாங்கல் முத்தம்’ – இது போல இன்னும் பல கதைகளும் உங்கள் மகள் உங்களுக்குச் சொல்கிறாள். வளர்ந்து இந்த உலகின் கோர முகத்தைக் கண்ட பின்னரும் குழந்தைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? இது இயல்பானதா அல்லது இயல்பை விட்டு விலகிய நிலையா? குழந்தைகளோடு இருக்கும் விந்தையுலகை எழுதுவதற்கும் குழந்தைப் பருவத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்களை எழுதுவதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? அதில் சந்தித்த சவால்கள் என்ன? ‘மணித்தக்காளிக் கொத்தைப் பறிப்பது போல் மிக எளிதானதா’ அது அல்லது ‘கழற்சிக்காய் ஆட்டத்தில் எல்லாக் கற்களையும் அள்ளியெடுப்பது’ போல கவனநேர்த்தி கொண்டதா?

ப: என் சில கவிதைகளில் குழந்தைகள் வருகின்றார்கள். சிலவற்றில் என் பால்யம் குறித்து எழுதுவதால், நானே சிறுமியாக வருகிறேன். இதில், குழந்தைமையைத் தக்க வைத்துக் கொள்வது என்றால் என்ன? குழந்தைகள் வெளிப்படைத் தன்மை மிக்கவர்களாயிருக்கிறார்கள். உணர்வுகளை உடனுக்குடன் வெளியிடுகிறார்கள். அநேகமாக எல்லாவற்றின் மீதும் நேர்மறைப் பார்வை; எல்லாம் நல்லது என்கிற நம்பிக்கை. உலகின் மீது எப்போதும் புதிதான ஆர்வத்துடன் அதை அணுகுகிறார்கள். – இது போல இன்னும் சில குணங்கள். ஆனால், பெரியவர்களானதும் இவற்றில் விட்டுவிட வேண்டிய குணம் என்று என்னால் எதையும் காண முடியவில்லை. நண்பர்களும், குடும்பத்தினரும் என்னைப் பற்றி அடிக்கடி வைக்கும் அவதானம் இது: ‘நீ குழந்தை போல் இருக்கிறாய்.’ அந்த அவதானத்தை என்னால் மாற்றமுடிவதில்லை. சில சந்தர்ப்பங்களில்… – வெளிப்படைத் தன்மையுடன் அணுகுவது, அப்படியில்லாத சில சங்கேதங்களை விளங்கிக்கொள்வதில் குழப்பம் போன்றவற்றால் – வெளியுலகுடன் ஊடாடுகையில் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்தேயிருக்கிறேன். உலகின் கோரமுகம் என்று நீங்கள் சொல்லும்போதே எனக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சமூகச் சூழலில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நம் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சில நண்பர்கள் எங்களுக்குள் உரையாடிக்கொண்டுதானிருக்கிறோம்.

என் மகளை தனக்கென சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரிந்த பெண்ணாகத்தான் வளர்க்கிறோம்; தேவையான நேரங்களில் எப்போதும் அவள் அணுகும் தூரத்தில் ஒரு அரணாக இருந்துகொண்டு உலகை அவள் பார்வையில் கண்டறிய முடிந்த அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். அவர்கள் குழந்தைத்தன்மையைச் சிதைக்காமல், தற்போதைய சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளை ஆயத்தமாக்குவது நிச்சயம் ஒரு சவால்தான். அடிப்படை சரி தவறுகள் தெரிந்த மனசுக்கு, அதன்படி நடக்கவேண்டும் என்று நிற்கும் மனசுக்கு ஒரு விதத் துணிச்சல் உண்டு. அது சுற்றியுள்ளவர்களைப் பல சமயங்களில் ஆச்சர்யப்படுத்தும். அவளை அப்படியிருக்கத்தான் ஊக்குகிறோம். சொற்களின் மூலம் அச்சுறுத்துபவர்களோ, பூடகமாக நம்மைத் தாழ்த்திப் பேசுபவர்களோ… அல்லது பெர்சனல் ஸ்பேஸ் என்கிற நம் எல்லைக்குள் நுழைந்து நம்மை அச்சுறுத்தப் பார்ப்பவர்களோ… இவை போன்ற சூழல்களை நானும் சந்தித்திருக்கிறேன்; அமைதியான முறையிலும், உறுதியாகவும் அவற்றைக் கையாண்டும் இருக்கிறேன். 

இதைச் சொல்லி வருகையில், எனக்கொன்று ஞாபகம் வருகிறது. என் அப்பா விளையாட்டாக என்னை ‘நீ ஒரு ராஜபாளையம்’ என்று அடிக்கடி சொல்வார். ‘குழந்தை போல் அன்பு காட்டுவாய், ஆனால் உனக்கென்று இருக்கும் சில எல்லைகளை யாரும் தாண்டப் பார்த்தால், விழுந்து கடித்துவிடுவாய்’ என்று. ஆனால், இந்தக் குணம், என்னைத் தற்காத்துக்கொள்ள பல சமயங்களில் உதவுகிறது. ஏனெனில், நல்லதை மட்டும் காணும் மனம் நமக்கிருந்தாலும், உலகம் எல்லாவித மனிதர்களும் – அற்ப, ஈன புத்தி கொண்ட மனிதர்கள் உட்பட – உள்ளடக்கியதுதான். அப்படி ஒரு ஆள், ஒருமுறை பேருந்தில் என்னிடம் அத்துமீற முயன்றபோது, எதிர்த்துக் கண்டித்தும் விலகாதபோது, கையில் வைத்திருந்த புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பால் தாக்கியிருக்கிறேன். எனக்கென்று இல்லை; வேறு யாருக்கேனும் இதுபோன்று நிகழும்போதும், அச்சமயங்களில் நான் அஞ்சியோ, ஒதுங்கியோ போவதில்லை; குரலெழுப்பத் தயங்குவதும் இல்லை.

ஆனால், இதெல்லாம், அந்தந்தத் தருணங்களில்தான். மறுகணமே, நான் என் இயல்புக்குத் திரும்பிவிடுவேன். ரொம்பவும் கோபமாக, சோகமாக இருப்பதெல்லாம் எனக்கு ஒத்துவருவதில்லை. எவ்வளவு தீவிரமான சிக்கலோ, துக்கமோ, அந்தச் சூழலிலும், உள்ளே இன்னொரு மனசு, இதிலிருந்து மீண்டு எப்படிப் பழைய நிலைக்கு வருவது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சிதான் என் இயல்பான மனநிலை என்று தோன்றுகிறது. அது நான் எழுதும் முறையையும் பாதிக்கிறது. சோகக் குறிப்பு கொண்ட கவிதையாக இருந்தாலும், மறுவாசிப்பு செய்து எடிட் செய்கையில், எப்படியோ அதில் மகிழ்ச்சியின் அல்லது நம்பிக்கையின் சிறுகுறிப்பு வந்து சேர்ந்துவிடுகிறது.

ஒருமுறை, திருமண நிகழ்வொன்றில் சந்தித்த ஒரு பெண் கூறினார்: “அண்மையில் இவ்வளவு content ஆக உணரும் ஒருவரைப் பார்த்து வெகு காலமாயிற்று” என்று. ஒருவேளை அதுதான் என்னில் குழந்தைமையாகப் பார்க்கப்படுகிறதோ என்று அப்போதுதான் தோன்றியது. குழந்தைகள் அதுபோன்ற மனநிலையில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேற்று, நாளை பற்றிய கவலைகள், எதிர்பார்ப்புகள் இல்லை. அவர்கள் உலகம் எளிமையானது. ‘இன்று, இப்போது’ – இதில் சுழல்வது. எனக்கும் என்னவோ குழந்தைகள் மற்றும் முதியவர்களோடு உணரும் நெருக்கம், மத்திய வயதினருடன் உணர முடிவதில்லை. அவர்களோடு பழகுவதை மிகவும் சிக்கலான விஷயம் போல் உணர்கிறேன். குழந்தைகளோடு இருக்கும் உணர்வை எழுதுவது, அவர்களை நெருங்கிக் கவனிப்பதில் கிடைக்கும் அவர்கள் தரும் எதிர்பாரா ஆச்சர்யங்களை, ஒரு அழகான சாட்சியமாகப் பதிவது எனத் தொடங்குவதுதான். சில வேளை அது வேறு கோணங்களில் நீண்டு விடுவதுமுண்டு.

குழந்தைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்து எழுதுவதென்பது, பல சமயங்களில் அவ்வளவு சுகமான அனுபவமில்லை. அந்தத் தருணங்களில் மீண்டும் வாழ்வது போன்ற ஒரு வலி, எழுதும் சமயங்களில் ஏற்படும். ஆனால், எழுதித் தீர்ப்பது அதைக் குணப்படுத்துவது போலுள்ளது. நான் அவற்றைத் தாண்டி வந்து, திரும்பிப் பார்த்து, அவற்றைப் பதிவு செய்ய முடிகிறது என்பது, அவை நடந்து முடிந்த நிகழ்வுகள் என்கிற ஒரு உறுதியை கொஞ்சகாலத்துக்கேனும் தருவதாக உணர்கிறேன். குழந்தைகளின் விந்தையுலகை எழுதுவது ஒரு சாட்சியம்; குழந்தைப் பருவத்தை எழுதுவது ஒரு குணமடைதல். இரண்டும் என் கவிதைகளுக்கு வேறு வேறு பரிமாணங்களைத் தருகின்றன. 


கே:  புதிர்கள் உங்களது கவிதையுள் பல விதமாய்ப் பரிமளிக்கின்றன. பின்னலைப் பின்னும் போது சில புதிர்களைப் போட்டு விடுகின்றீர்கள். நீங்களே ஜிக்ஸா புதிராகின்றீர்கள். இன்னொரு கவிதையில். ‘ஜிக்ஸா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள்’ என்ற முழுத் தொகுப்பும் பல்வேறு மனப்புதிர்களைப் பேசுகின்றன. கவிதைக்குள் வாழ்க்கைப் புதிர்களுக்கு விடை தேடும் எண்ணம் எப்படி எழுந்தது? புதிர்களை, சிக்கல்களை கவிதைக்குள் எளிதாக்கி வைத்துக் கொள்ளும் முயற்சியாக இதைப் பார்க்கலாமா?

ப: புதிர்கள் என்றால் எனக்கு அதீத ஈடுபாடு. 1000 துண்டு ஜிக்ஸா புதிர்கள், எண்களே இல்லாமல் குறிப்புகள் மட்டும் இருக்கும் கில்லர் ஸுடொக்கு புதிர்கள் எல்லாம் நேரம் காலம் தெரியாமல் செய்து கொண்டேயிருக்கமுடியும் என்னால். வீட்டுக்கு மேஜை போன்ற பொருட்கள்கூட, சில சமயம் பாகங்களும், அவற்றை இணைக்கும் படிநிலைக் குறிப்புகளும் தரும் கடைகளில் வாங்கி, நானே அவற்றை வீட்டில் கொண்டு வந்து முழுமையாக்குவேன். இதெல்லாம் ஏனோ உலகைக் கொஞ்சம் புதுமையாக, இன்னும் வெளிச்சமாக ஆக்குகின்றன எனக்கு. எவ்வளவு சிறியதாக இருந்தாலும், ஒரு புதிரைத் தீர்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அந்தக் கணத்தில் மிகப் பெரியது.

என் பெரியப்பா (அம்மாவின் அக்காள் கணவர்) காவலராக இருந்தார். அவர்தான் இதற்குப் பிள்ளையார் சுழி. அவர், தங்கள் பயிற்சித் தேர்வில் கேட்கும் நிறைய புதிர்க் கேள்விகளை குழந்தைகளான எங்களிடம் போட்டுக் கேட்பார். மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

போலவே, இன்னொரு விஷயமும் அப்போது என்னுள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த ஈடுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம். என் அப்பா, வீட்டு உபயோகப் பொருட்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தாமே சரி செய்வார். மேஜை விசிறி, வானொலிப் பெட்டி, சிறிய அலாரம் கடிகாரம் – இது போல. எனக்கு அப்போது அது பெரிய சாகசமாகத் தோன்றியிருக்கிறது. அப்பா வீட்டில் இல்லாத சமயங்களில், நானாகவே வானொலியைக் கழற்றி அவர் செய்வதுபோல் நானும் செய்வதாக பாவனை செய்துகொண்டு திருகுதாளங்கள் செய்து வைப்பேன்; பின்னர் அடியும் வாங்குவேன். பெரியவளானதும், அது போன்ற பணியொன்றில்தான் ஈடுபட வேண்டுமென்று மிகத் திட்டவட்டமாக இருந்தேன். அப்படி நடவாதபோதும், புதிர்கள் மேல் ஏற்பட்ட நாட்டம் மட்டும் விட்டுப் போகவில்லை. 

வாழ்வில் எதிர்ப்படும் பிரச்னைகளும், நமக்குப் புதிர்கள் என்பதே என் எண்ணம். ஏதேனும் சிக்கலோ, பிரச்னையோ… மனம் குழம்பி நிற்கும்போது, என்ன பிரச்னை என்பதை எழுதி வைத்துக்கொள்வேன். அப்போது எனக்கு அது குறித்த தெளிவு கிடைக்கும். தீர்க்க முடியாத ஏதாவது வருத்தம் மேலிடும் உணர்வு என்றாலும், அதை எழுதி வைத்துவிட்டால், மனசு அமைதியுற்று கொஞ்சம் நிலைபெறும். அதுவே என் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. கவிதையாக எழுதும்போது, தெளிவும், அமைதியும் மட்டுமன்றி, அதையொரு படைப்பாக மாற்றிய சிறிய மகிழ்ச்சியும் கூடக் கிட்டும். கவிதையும் புதிரும்கூட ஒன்றுதான். சில வேளை கவிதை புதிராக இருக்கிறது; சில வேளை புதிருக்கு விடையாக இருக்கிறது.

கே: உங்கள் கவிதைகளுக்கு மனதின் சத்தத்தை மௌனத்தின் பல வடிவில் மொழியாக்கம் செய்கின்றீர்கள். அங்கே மௌனம் அறையாகிக் கதவடைத்து நிற்கிறது, மௌனம் மின்மினியாக ஜ்வலிக்கிறது, மௌனம் ஆடைகளின் பூசப்படவேண்டிய வர்ணமாகிறது. இன்னொரு கவிதையில் ‘ஒரு மலை/ எவ்வளவு மௌனித்திருக்கிறது/எவ்வளவு தனித்திருக்கிறது’ என்று பிரகடனம் செய்கின்றீர்கள். இவ்வளவு மௌனத்தை கவிதையுலகு தாங்குமா?

ப: நான் எழுதுவதையே கவிதையுலகு தாங்கும்போது, இவ்வளவு மௌனத்தைத் தாங்க இயலாதா?! வேடிக்கைக்காகச் சொன்னேன். ஸ்தூலமான உணர்வுகளை எழுதுவதில் உள்ள வசதி இது. மௌனமும் பல சமயம் பல உணர்வுகளின் பிரதிபலிப்புதானே! அது என்னவென்று கற்பனை செய்ய இன்னும் ஏராளமான சாத்தியங்கள் உள்ளன எனும்போது, சில சமயம் அந்த மறுக்கமுடியாத உண்மை என்னை வாயடைக்கச் செய்துவிடுகிறது. 

தடயமின்றி மௌனமாக ஒழுகிச் செல்லும் மெல்லிய நீர்த்தடம் நம் வாழ்வு. ஏதேனும் ஒரு சிறிய வெளிச்சம் அதனைக் கடக்கும்போது, சிறுகணம் அது ஒளிர்கிறது, தன் இருப்பை, தன் பொருளை, தன் பயனை தனக்கே ஞாபகமூட்டிக்கொண்டு. சில சமயம் அந்தச் சிறிய வெளிச்சம் ஒரு கவிதையாக வருகிறது. ‘ஒரு கடைசி வரி தோன்றிவிட்டது மனத்தில்’ கவிதையில் வரும் ‘ஆயிரம் பதினாயிரம் இலைகளின் அபூர்வ மௌனம்’ போல் இருக்கிறது அப்போது.

கே: ‘நெற்றியில் வெட்டுத் தழும்போடு/நெல்லையப்பர்’, ‘சிறுவீட்டுப் பொங்கல்’, குடிக்கன்னி வழிபாடு, இசைத் தூண்கள் – இவற்றைப் பற்றி குறிப்புகள் கவிதை நெடுகக் கிடக்கின்றன. இவை எல்லாம் நெல்லை மண்ணின் கலாசாரம், பண்பாடு, தொன்மம் சார்ந்த நம்பிக்கைகளை, சடங்குகளை, கதைகளைப் பதிவிடுகின்றன என்று நினைக்கிறேன். அதைப் போல உங்கள் கவிதைகளில் நெல்லை மண் மணக்கும் வட்டாரச் சொற்களும் உண்டு. (ஆமை வடை அதை நாங்கள் மசால் வடை/பருப்பு வடை என்போம், பன்னீர்ப் பூக்கள் இதை நாங்கள் மரமல்லி என்போம், கழற்சிக்காய் இந்த வழக்கு திருச்சியிலும் அதற்கு வடக்கேயும் இல்லை; கல்லாங்கா ஆடுதல் என்போம். அதே போல அசேதனமாய் இந்த வார்த்தையும் திருச்சிக்குத் தெரியாது.) இதை எல்லாம் சார்ந்து சொல்லுங்கள்.

ப: ஆமாம். நெல்லையப்பரின் நெற்றித் தழும்புக்கு ஒரு கதை இருக்கிறது. எங்கள் ஊர்த்தல புராணம். சிறு வயதில், தினமும் கோயிலுக்குப் போனாலும், போகுந்தோறும் கேட்க விரும்பும் கதை அது. அங்குள்ள இசைத் தூண்கள் இப்போது கம்பிகளுக்குள் அடைபட்டுவிட்டன.  ஞாபகத்தில் இருக்கும் எல்லாமே இப்போது வேறாக மாறிவிட்டன. அந்த ஏக்கம், என்னுடைய ஊரின் மேல் இருக்கும் தீராத ஏக்கம், இது போன்ற கவிதைகள் எழுதும்போது கொஞ்சம் நிறையும்; சில சமயம் பெருகவும் செய்யலாம். ஆனால், இது என்றும் தீராத ஏக்கம்தான். 

என் ஊர் என்று பிரியத்தோடும், வாஞ்சையோடும் நினைப்பது, நான் சின்னவளாக இருந்தபோது கண்ட அந்தத் திருநெல்வேலி டவுனை. அந்தக் காலத்திலிருந்து எங்கள் ஊர் இப்போது வெகுதூரம் நகர்ந்துவிட்டது. ஆனால், என் ஞாபகங்களில் இருக்கும் திருநெல்வேலியை அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்த்துக் கொள்வேன்; பார்க்கும் சமயம் இருக்கும் மனநிலைக்கேற்ப, இவை போன்ற கவிதைகளாக அவை மாறும். இப்படியெல்லாமும் இருந்தது என்று பதிந்து வைத்துக்கொள்கிற ஒரு வாய்ப்பு எனக்கு.

வட்டாரச் சொற்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எங்கள் ஊர்த் தமிழை விடுங்கள்… பொதுவாகத் தமிழில் பேசவே நாங்கள் இருக்குமிடத்தில் வாய்ப்பு குறைவு. முகுந்தின் தாய்மொழி கன்னடமாக இருந்தாலும், வீட்டில் தமிழ்தான் அதிகம் புழங்கும். ஆனால், மகளோடு மட்டும்தான் திருநெல்வேலித் தமிழ்ப் பழக்கம். அது இயல்பாக அமைந்துவிட்டது. அதுபோல்தான் கவிதையிலும்; எங்கள் வட்டாரச் சொல்லைச் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அது இயல்பாக அமைந்துவிடுவதுதான். பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் சொல் வேறாக இருக்கலாம் என்ற எண்ணம் அப்போது தோன்றுவதில்லை. கழச்சிக்காய்க்கு வேறு பெயர்கள் இருக்கின்றன என்பது உங்கள் கேள்வியின் மூலம்தான் அறிந்துகொண்டேன். பழந்தமிழ் இலக்கியங்களில், இவ்விளையாட்டு ‘கழங்காடுதல்’ என்றே குறிக்கப்படுகிறது. அதுதான் கழற்சிக்காய் என்றானதால், அதை ஒரு பொதுவான பயன்பாடு என்றே நான் கருதி வந்தேன். இதில் ஒரு விசித்திரமாக, கன்னடத்தில் ஆமவடை, ஆமவடை என்றுதான் வழங்கப் பெறுகிறது.

கே: ‘பிச்சி மனங்களுக்குத் தேவை/கன்னத்தில் அறைந்து/கயிற்றைக் கழற்றச் சொல்லும்/கவுண்டமணிகள் மாத்திரமே!’ – உங்கள் தொகுப்பில் பித்துமை பற்றிப் பேசும் கவிதைகளை இவ்வளவு அப்பட்டமாய்ப் பதிவிட வேண்டுமா என்றே தோன்றுகிறது. இதைச் சார்ந்து சொல்லுங்கள். ‘பதியன்’ கவிதையில் பெண் மன உலகை, பழைய வீட்டின் வேப்பங்கொம்பில் சிக்கிய மனம், புது வீட்டில் விட்டுச் செல்லப்பட்ட இளம்பாகல்கொடியின் நுனியில் ஒட்டியிருக்கும் இன்னொரு மனத்தோடு உறவு கொள்வது அபூர்வமானது. நகரத்து இயந்திர வாழ்வில் இத்தகைய மனத்தை, குணத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் இருக்கும் சிக்கல்கள், சவால்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப: உடல் சார்ந்த பிணி மற்றும் உபாதைகளைப் பற்றிப் பேசுவது எப்படி இயல்பானதோ, அதுபோன்றே மனநிலை மற்றும் அது சார்ந்த பிரச்னைகள் பற்றிப் பேசுவதும் இயல்பாக வேண்டும் என்பதுதான் என் நோக்கம். கவிதை என்பதே அகவெளிப்பாட்டின் ஒரு வடிவமல்லவா? 

‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்’ என்று ஔவையார் எழுதிய ஒரு சங்கப் பாடல் உள்ளது. எத்தகைய பித்து நிலையில் நிற்கும் ஒரு தலைவியின் குரலாக அது உள்ளது… அவள் மனவெழுச்சியின் தீவிரத்தை எவ்வளவு தயக்கமின்றி அவர் ஒரு பாடலாக்கியிருக்கிறார். ஒரு கவிஞரோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எழுதும் படைப்பாளியோ… மனித உணர்வுகளை இதுபோல் நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு, எதிர்வினைகள் பற்றிய அச்சமும் தயக்கமும் தடையாக இருந்துவிடக்கூடாது. படைப்பு வெளியில் மனநிலை பற்றி எழுதுவதற்கு ‘இதை நம்முடன் தொடர்புபடுத்திய கண்ணோட்டங்கள் எழுமோ…’ என்பது போன்ற நெருக்கடிகள் இல்லாத சூழல், அதை எழுத நினைப்பவர்களுக்கு அமைய வேண்டும். 

‘பதியன்’ கவிதையைக் குறிப்பிட்டு, நகரத்து வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துக் கேட்டிருக்கின்றீர்கள். நகரம் என்றில்லை… வேறு எங்கும் இதுபோல் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். எனக்கு இருக்கும் சிக்கல்களில் ஒன்று, சிநேகமாக இருக்க விரும்புவதும், அன்பை எதிர்கொள்ளத் தெரியாததும்தான். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், எதிரில் வந்தால் அவர்களை நோக்கிப் புன்னகைப்பேன். அவர்களும் புன்னகைப்பார்கள். இந்த அளவிலேயே அந்த சிநேகம் இருக்கும்வரையில் என்னால் இயல்பாக இருக்கமுடியும். ஆனால், நான் நட்பானவள் என்று என்னிடம் உண்மையில் அன்பு பாராட்டத் தொடங்கினால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற திகைப்பு ஏற்பட்டுவிடும். பொதுவாக, எல்லாவற்றையும் நல்லதாகப் பார்க்கும் குணம் உண்டு எனினும் பிறரின் அன்பை இயல்பாக ஏற்றுக்கொள்வதில் மட்டும் எனக்கு எப்போதும் சிரமமுண்டு… அது எப்போதேனும் நம்மைக் காயப்படுத்தி விடும் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு நம்பிக்கை ஏற்படும் இடத்தில் இயல்பாக அன்பை ஏற்றுக்கொண்டு குதூகலமாக இருப்பேன். முன்னர் சொன்னது போல், நாங்கள் இப்போது இருக்குமிடத்தில், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நட்புதான் எனக்கு அதிகம். அதனால், என் கவிதைகளிலும் அது அவ்விதமே வெளிப்படுகிறது. அதற்கு நான் வசிக்குமிடம் ஒரு தடையாவதில்லை. மனம் லயிக்கும் இடம் நம் வீடு; புறக்காரணிகள் செய்வதற்கு அங்கு அதிகம் வேலைகள் இல்லை. 

கே: உங்கள் இசையறிவைக் காட்டும் கவிதை ‘தலைமுறை’, ‘ரோவன் மரங்களில் ஹாலுசினேஷன் தொட்டில்கள்’, ‘எதுவோ என் மூளையை நிரலமைத்திருக்கிறது’ போன்ற கவிதைகள்; பின்னலாடை புனைவதைப் பற்றி பல கவிதைகளில் குறிப்பிருக்கிறது; அது போல நீங்கள் பூப்பின்னல் வேலை செய்வது பற்றியும் எழுதியிருக்கின்றீர்கள்; நீங்கள் ஓவியம் வரைபவரும்கூட. அதைச் சார்ந்த குறிப்புகளும் சில கவிதைகளில் உண்டு. சிறுகதைகளும் சிறார் சிறுகதைகளும் எழுதியிருக்கின்றீர்கள். நிறைய கவிதைகளும் எழுதியிருக்கின்றீர்கள். இப்படிப் பல்கலை வித்தகராக இருப்பது கொடுப்பினையா அல்லது எந்தக் கலைக்கும் முழு நேரத்தையும் ஒதுக்க முடியவில்லையே என்பதொரு சுமையா? சமகாலத்தில் இந்த எல்லாத் துறைகளிலுமிருந்து இயங்கி வருபவர்களிடமிருந்து நீங்கள் எதைப் பெறுகின்றீர்கள்? முக்கியமாக சமகால கவிதைகளில் நீங்கள் எதை அவதானிக்கின்றீர்கள்?

ப: இசை பயின்றவள் இல்லை நான். அதனால், இசையறிவு என்று சொல்ல முடியாது; ரசனை என்று சொல்லலாம். பல வகையான இசையும் எனக்குப் பிடிக்கிறது. பாடல்கள் என்று இல்லை; வாத்தியக் கருவிகள் மட்டும் கொண்ட இசையும் பிடிக்கும். அது எந்த அடிப்படையில் என்று எனக்கே தெரியாது. அதனால்தான், என்னுடைய ஒரு ப்ளே லிஸ்ட்டில் இருந்த பாடல்களெல்லாம், ஒருநாள் வரிசையாக வானொலியில் ‘மோகன ராகப் பாடல்கள்’ என்கிற குறிப்பில் ஒலிபரப்பானபோது, ஆச்சர்யத்தை விட ஒரு வகையில் அதிர்ச்சியாக இருந்தது ஞாபகம் இருக்கிறது. 

நீங்கள் சொல்வது போல், பல விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. உங்கள் கேள்வியில் இடம்பெறாத வேறு சிலவும் உள. புகைப்படங்கள் எடுப்பது, கீ போர்ட் வாசிப்பது போல் சில. சிறு வயதில் எல்லாக் குழந்தைகளிடமும் கேட்பது போல், நான் பெரியவளானதும் என்ன செய்யப் போகிறேன் என்று யாராவது கேட்டால், ‘நான் நிறைய நிறையப் படிப்பேன்… புதுசு புதுசாக எல்லாவற்றைப் பற்றியும் படிப்பேன். எப்பவும் படிச்சுக்கிட்டேயிருப்பேன்…’ என்று சொல்வேன். அது ஒருவகையில் உண்மையாகிற்று என்று தோன்றுகிறது. ஆனால், அதையொரு சுமையாக நான் எப்போதும் எண்ணுவதில்லை. எனக்கு எதையேனும் புதிதாகக் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும். புதிய மொழிகள், புதிய கலைகள்… இப்படி. அதில்லாவிடில், எதையேனும் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கவேண்டும் – எழுதுவது, ஓவியம், புகைப்படங்கள் எடுப்பது அல்லது கைவினைக் கலையில் ஏதேனும் செய்வது… எல்லாமே இந்த மனநிலையால்தானே தவிர, பல்கலை வித்தகியெல்லாம் இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எதையேனும் க்ரியேட் செய்யாமல், அல்லது கற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது, உண்மையில் நான் இருப்பதாகவே தோன்றுவதில்லை; அவ்வளவுதான். இவையிரண்டில் ஒன்று இல்லாவிடினும் என்னால் நிலைகொள்ள முடியாது. தட்டழியுதல் என்றும், பொசமுட்டுதல் என்றும் பதங்கள் எங்கள் ஊரில் பேச்சுவழக்கில் உண்டு; எதுவும் செய்யாமல் சும்மாயிருக்க வேண்டுமென்றால் அப்படித்தானிருக்கும் எனக்கு. 

மருத்துவமனைகளிலோ, வேறு எங்கோ காத்திருக்க வேண்டுமென்றால், வாசிப்பதற்குப் புத்தகம், அல்லது வரைய ஒரு சிறு நோட்டுப் புத்தகம் – இப்படி ஏதேனும் ஒன்றைக் கையோடு கொண்டு செல்வேன். இல்லாவிடில், என்னை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எனக்கே தெரியாது.

இதுபோன்ற துறைகளில் இயங்கி வருபவர்களிடமிருந்து என்ன பெறுகிறேன் என்றால், முக்கியமாக எவ்வளவு புதிய சாத்தியங்கள் உள்ளன என்பது குறித்த அறிவு. மேலும், மேற்குறிப்பிட்ட துறைகள் சார்ந்து இயங்கும் சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு சில நல்ல நண்பர்களை அடையும் வாய்ப்பும் அதனால் எனக்குக் கிட்டியிருக்கிறது. தனிப்பட்ட நட்பு ஏற்படும்போது, எவ்வளவு ஊக்கத்துடன் அவர்கள் தங்கள் துறையில் இயங்குகிறார்கள் என்பதை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது. அது எனக்கு ஊக்கமாகவும் இருக்கிறது. சில சமயங்களில் அவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

வசந்தகால கான்லெஸ் எழுத உந்துதலாக இருந்த கெல்லி யு.கே.யைச் சார்ந்தவர். நிட்டிங் வடிவமைப்பாளர். அவருடைய பல புதிய பாட்டர்ன்களைச் சந்தைப்படுத்தும்முன் சோதித்துப் பார்க்க நான் டெஸ்ட் நிட்டராக இருந்திருக்கிறேன். ஒஹையோவில் லிடியா என்றொரு தோழி, ஓவியங்கள் சார்ந்த ஒரு குழுவில் அறிமுகமானவர். கோவிட் ஊரடங்குக் காலத்தில், அவர் பயிலத் தொடங்குவதாக இருந்த போர்ட்ரெய்ட் ஸ்கெட்ச் பயில என்னையும் ஊக்கி, ஒவ்வொரு நாளும் பாடங்களையும் என்னுடன் பகிர்ந்து வந்தார். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்துகொண்டு, இருவரும் ஒன்றாகப் பயின்றது, ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

இதனால், பல விஷயங்களில் மனம் ஈடுபடுவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாக மட்டும் இல்லாமல், வாழ்வில் அழகிய பெறுமதி மிக்க பல விஷயங்களைக் கொண்டுவருவதாக உள்ளது எனக்கு. ஒன்றிலிருந்து இன்னொன்று… அதிலிருந்து வேறொன்று என ஓடிக்கொண்டேயிருக்கையில், கொஞ்சம் எழுதவும் செய்யலாம்; நிறையக் கற்றும் கொள்ளலாம்; இந்தச் சகட யோக மனசினால் கிடைக்கும் பரிசு இதுதான்.

தமிழில் சமகாலக் கவிதைகளில், இது போல் வேறு துறை சார்ந்த கோணத்திலிருந்து எழுதுபவர்கள் இருக்கிறார்கள். கவிஞர் ரவிசுப்பிரமணியன் கவிதைகளில், இசை சார்ந்த ப்ரயோகங்களையும், கோணங்களையும் பார்க்கமுடியும். இசையின் சில கவிதைகளிலும் பாடல்கள் மற்றும் இசை சார்ந்த ரசனை உள்ளோடிக்கொண்டிருப்பதைக் காண முடியும். கௌரிப்ரியாவின் கவிதைகளில் அவர் பணியாற்றும் மருத்துவத்துறை சார்ந்த சில அனுபவங்கள் கவிதையாகும் விதம் ஆச்சர்யப்படுத்தும். இதுபோல் இன்னும் பலரும் இருக்கலாம். இதன்றியும், பொதுவான ஒரு கவிதை வாசகியாக, எளிய மொழியில் ஆழ்ந்த உணர்வுகளைத் தூண்டும் கவிதைகளை சமீபகாலங்களில் அதிகம் வாசிக்கிறேன். முகுந்தின் பல கவிதைகளும்கூட எளிய கூறுமுறையிலிருந்து கிளைப்பவையே. அதுபோன்ற அனுபவம் தரும் கவிதைகளை இப்போது அதிகம் வாசிக்கமுடிகிறது. இயல்பான மொழியில் பகிரப்படும் நுட்பமான அனுபவங்கள் தீவிரமான தாக்கம் ஏற்படுத்துகின்றன. மேலும், மரபு வடிவங்கள், குறிப்பாக சங்க இலக்கியத்தை வாசிக்கும் அனுபவங்களை நவீனப்படுத்தித்தரும் கவிதைகளையும் காண முடிகிறது. தம் சிலபல கவிதைகளில் பெருந்தேவி அச்சித்திரங்களை நவீன உலகின் பின்னணியில் வரைந்து காட்டுகிறார். 

பல்வேறு பின்னணிகளில், தமக்கென ப்ரத்யேகப் பாணிகளில், நிறைவான வாசிப்பனுபவம் தரும் கவிதைகளை எழுதும் பலர் சமகாலத்தில் இருக்கிறார்கள். 

எளிமையின் அழகியலையும் கவிதையின் உள்ளார்ந்த தீவிரத்தையும் ஒன்றாகக் கொண்டாடி வரும் காலமாக இதனை நான் உணர்கிறேன்.

கே: உங்கள் கவிதைகளில் கனவில் வரும் காட்சிகளை அப்படியே எழுதி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் உச்சம் ‘என் கனவு எழுதிய ஒரு பருத்திச் செடி’. இந்தக் கவிதையில் இறுதி இரண்டு வரி தவிர கவிதை வரிகளாவே கனவில் வந்தன என்று அடிக்குறிப்பு இடப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கான கவிதைப் பித்து உணர்த்துவது என்ன? கனவில் கூட கவிதை எழுதும் கவிஞரை உங்களுள் கண்ட தருணம் எப்படியிருந்தது?

ப: 2024-இல் எழுதப்பட்ட பல கவிதைகள், தூக்கத்தினிடையே எழுந்து எழுதப்பட்ட கவிதைகள். தூக்கத்தில் மங்கலான கோட்டுச் சித்திரம் போல சில சமயம் யோசனைகள் தோன்றும்; உடனே எழுந்து அதனை எழுதி வைப்பேன். சிலவற்றை, பின்னர் திருத்தியும் எழுதுவேன். ஆனால், நீங்கள் குறிப்பிடும் கவிதை மாறுபட்டது. இது ஒரு யோசனையாகவோ, கருப்பொருளாகவோ தோன்றவில்லை. ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட வடிவத்திலேயே கனவில் வந்தது. அது எனக்கே ஒரு வினோதமான அனுபவம்தான். ஆனால், விழிப்பு நிலையில் எழுதுவதற்கும் கனவில் எழுதுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பதே என் எண்ணம். நாம் விழிப்பு நிலையில் கவிதையெழுதும்போதுகூட, நாமாக இருந்தா எழுதுகிறோம்? எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. எழுதும்போது நாம் வேறு யாரோவாக இருக்கிறோம்; அல்லது ஒரு trance நிலை என்று வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் எழுதி முடித்தவுடன், பல சமயங்களில், அதனுடன் எந்தத் தொடர்பையும் உணர முடிவதில்லை. ஒவ்வொரு சமயம், என்ன நினைத்து அப்படி எழுதினோம் என்பது எனக்கே புதிராக இருப்பதும் உண்டு. சில சமயம் எழுதக் கூடாமல் கை நழுவிப் போவதும் உண்டு. விழித்தெழும்போதே ஏதோ ஒரு வரி தோன்றும். தூக்கத்தில் அவ்வளவு பெரியதொரு உண்மையைச் சொல்லும் பொருள் தருவதான வரி போலத் தோன்றும். ஆனால், உண்மையான பொருள் தரும் சிந்தனைகள் சட்டென மறந்து போய்விடுவதைக் கண்டிருக்கிறீர்களா… சில சமயம் ஊற்று நீர் பொங்கி அந்த ஊற்றிலேயே மறைந்துவிடும். அது போல் இந்தச் சிந்தனைகளும் மனசின் ஆழத்தில் தோன்றி மீண்டும் அங்கேயே போய் மறைந்துகொள்ளும். அதனால், விழித்திருக்கும்போது எழுதுவது, தூக்கத்தினிடையில் எழுந்து எழுதுவது அல்லது கனவில் எழுதுவது – எல்லாமே ஒரு வகையில் எனக்கு ஒன்றுதான்.


கே: தொழிற்நுட்பம் (chat GPT) மற்றும் மருத்துவச் சொற்கள் (ஹாலுசினேஷன், Alexithymic) போன்ற சொற்களும், கடல் கடந்த இலக்கியத்தின் மீதான தாக்கத்தால் எழுதிய கவிதைகளும், அந்தந்தச் சொற்களின் அடியாழம் உணராதபோது சம்பந்தப்பட்ட கவிதானுபவம் உணரப்படமால் போய் விடுமோ என்ற சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது எழுந்திருக்கிறதா? அடிக்குறிப்புகள் தாண்டி அந்த அனுபவத்தைக் கடத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சி என்ன?

ப: நீங்கள் குறிப்பிடுவது போன்ற துறை சார்ந்த நுட்பமான சொற்களைச் சில கவிதைகளில் பயன்படுத்துகிறேன். Chat GPT அது எழுதப்பட்ட காலம் சார்ந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் அமைந்தது. மேலும், கவிதையில் நான் விரும்பும் உள்ளடக்கத்தைக் கடத்தத் தேவைப்படும்போது, துறை சார்ந்த சொற்களைப் பயன்படுத்துகிறேன். அது ஒரு பரிசோதனை முயற்சியாகப் பார்க்கப்படலாம். என்னைப் பொருத்த அளவில், கவிதைக்கு அது தேவையாக இருந்தது; அவ்வளவுதான். மட்டுமன்றி, இது போன்ற சிக்கல்களற்ற ஒரு கவிதையை வாசிக்கும்போதுகூட, ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வித வாசிப்பனுபவத்தைத் தரலாம். இச்சொற்கள் வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, அது பற்றி அவர்கள் தேடிக் கண்டறியலாம்; அல்லது இது எனக்கான கவிதையன்று என அவர்கள் விலகிச் செல்லலாம். அது வாசிப்பவரின் சுதந்திரம். அப்படிப்பட்ட சொற்களுக்கு ஒரு எளிய அறிமுகமாகத்தான், அடிக்குறிப்புகளைத் தருகிறேன். அதை விரித்தெழுதுவதோ அல்லது அதை வாசகர்கள் விளங்கிக்கொண்டு வாசிக்கவேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் வேறு எந்த முயற்சியுமோ, அவர்களின் வாசிப்பனுபவத்தில் குறுக்கீடு செய்துவிடும் என்றே எண்ணுகிறேன். அப்படி இடைப்படுவதை நான் விரும்புவதில்லை.

கே: நீங்கள் பல கவிதைகளில் ஒரு வரியையோ அல்லது வார்த்தையையோ இரண்டு முறை அல்லது மும்முறை சொல்கின்றீர்கள். சில கவிதைகளில் முதல் பத்தி, இரண்டாம் பத்தி – இரண்டும் ஒன்றாக இருக்கின்றன; மீதிக் கவிதை வேறாக இருக்கிறது. உங்களது கவிதைகள் free format-இல் இருப்பது, நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட கவிதை சொல்லும் முறையா? கவிதையின் வடிவம் சார்ந்த உங்கள் பார்வையைச் சொல்லுங்கள்.

ப: எங்கள் திருநெல்வேலி டவுன் நேதாஜி சந்தையில் மைய நூலகம் இருந்தது. அங்கே பொருநை வாசகர் வட்டம் என்ற அமைப்பு இருந்தது. நானும் அதில் உறுப்பினர். வாரம் ஒருமுறை வாசகர் வட்டக் கூட்டம் நடக்கும். அதில் ஒரு முறை, ஒரு மூத்த உறுப்பினர் சொன்னார்: “புதுக்கவிதை பக்கோடா போன்றது. ஒவ்வொன்றும் தன் வடிவத்தைத் தானேதான் தேர்ந்தெடுக்கும்’ என்று. இப்போது அதுதான் ஞாபகம் வருகிறது. எழுதி முடிக்கும் வரையிலும், இது இவ்வடிவத்தில் வரவேண்டும் என்ற எந்த நோக்கும் முன்னிற்பதில்லை. நான் உணர்ந்தது முழுமையாக என் மனத்தில் இருந்த அளவுக்கு அதே தொனியில் வெளிப்பட்டிருக்கிறதா என அதில் மட்டுமே என் முதற் கவனம் இருக்கும். அதற்காக, சில முறை, பல முறை எடிட் செய்வதும் உண்டு. நான் பகிர விழைந்தது அதே ரீதியில் எழுத்தாகவில்லை எனக் கைவிட்ட கவிதைகளும் உண்டு.

இருமுறை மும்முறை மீளெழுதப்படும் வரிகள், அது அப்படித்தான் தேவையென என் மனசுக்குத் தோன்றும். சொல்லிப் பார்ப்பேன்; சில சமயங்களில் அது பிடிவாதம் பிடிக்கும். சரியென அப்படியே விட்டுவிடுவேன். வடிவம் சார்ந்த என் பார்வை என்றால், எல்லாவிதப் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும். எனக்கு மரபு பிடிக்கும். சந்தம் பிடிக்கும். என் முதல் தொகுப்பின் ‘அண்ணன்களாகிவிட்ட அண்ணன்கள்’ போன்று சில கவிதைகள் சந்தத்தில் முயன்று பார்த்திருக்கிறேன். ஆனால், சந்தத்துக்கு குழந்தைப் பாடல்கள் ஒரு நல்ல வாய்ப்பு; உள்ளடக்கத்துக்கும், குழந்தைகளை ஈர்ப்பதற்கும். அப்படி எழுதியதில் ஒன்றிரண்டு தும்பியில் வெளியாகியிருக்கின்றன. சித்திரக் கவி பிடிக்கும். ஓரிரு கவிதைகள் சித்திரக் கவியாக எங்கள் தனிப்பார்வைக்கான கையெழுத்துத் தொகுப்பில் எழுதி வைத்திருக்கிறேன். நூல் வடிவமைப்பில் அது எவ்விதம் பொருந்தும் என்கிற தயக்கத்தால், இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படவில்லை.

ஆனால், வடிவம் எதுவாயினும், கவிதை கடத்தும் உணர்வுதான் முக்கியம். அது நம் மனத்தின் மனத்திலிருந்து வெளிப்படும்போது, வடிவம் பொருட்டாவதில்லை.

கே: உங்கள் மொத்தக் கவிதையுலகை உங்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘எடையற்ற நிழல்’ என்ற பதத்துக்குள் அடக்கிவிட முடியும். உங்கள் கவிதைகள் வழியாக நீங்கள் எதையும் சுமக்கவோ சுமத்தவோ நினைக்கவில்லை. அது நிழல் போல எடையற்று எப்போதும் உடனிருக்கும்; ஆனால் எல்லாச் சமயத்திலும் வெளிப்படாது. இந்தக் கவிதைகளை எழுதி முடித்த பின்னர் நீங்கள் என்ன உணர்கின்றீர்கள்? அவற்றை வாசிப்பவர்களுக்கு அவை என்னவாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்கள்?

ப: எப்போதும் எழுதி முடித்தவுடன், ஏதோ ஒரு நிறைவான உணர்வும் இருக்கும்; அதே வேளை, அதிலிருந்து சட்டென்று ஒரு விலக்கமும் தோன்றும். சில சமயம், நான் எழுதி முடித்து நானே வாசித்ததும், அதன் வேலை முடிந்தது என்று தோன்றும். முகுந்தின் தூண்டுதல் இல்லாவிட்டால், இவற்றையெல்லாம் நூலாக்கம் செய்யும் எண்ணம் தோன்றியிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், எப்போதேனும் என் கவிதையை வாசித்தவர்கள் அது பற்றி ஓரிரு வார்த்தைகள் பகிரும்போது, நாம் நம்மையறியாமல், இன்னொருவர் வாழ்வில் ஒரு சின்னஞ்சிறிய பகுதியாகி அவர்களைத் தொட்டிருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி. 

என் கவிதைகள் வாசிப்பவர்களுக்கு வாழ்வின் இனிமையை எடுத்துக்காட்ட வேண்டும்; நம் பூமி என்கிற அற்புதத்தை, அதில் நாம் வாழக் கிட்டிய பெறுமதியை நினைவூட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். என் கவிதையை வாசித்த நாளில், அதனால் அவர்கள் முகத்தில் ஒரு புன்னகையோ, மனசில் மகிழ்ச்சியின் ஒளியோ தோன்ற வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், ஒரு பறவை என்னைவிட இதை அதிகம் சாதித்துவிட இயலும். பறவைகள் நம்மிலும் உயர்ந்த கவிஞர்கள். அவற்றுக்கு அன்றாடம் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அத்தனையும் சத்தியம்; அத்தனையும் உள்ளத்தில் அமைதி பரப்பும் ஒரு சுடர். என் கவிதைகள் அச்சுடரின் ஒரு நிழலாக இருந்தால்கூட, என் எண்ணம் கைகூடிவிடக் கூடும். 

கே: உங்களது கவிதைகள், உங்களை அமைதியான, கூச்ச இயல்புடைய, தனிமையை நாடுகிற ஒருவரென அடையாளப்படுத்துகிறது. உள்முகச் சிந்தனையாளராகவே உங்களைக் காட்டித் தருகிறது. ஆமவடை என்ற படிமம், ‘அடிக்கடி உடைக்கப்பட்ட மட்பாண்டம்’ என்ற படிமம், ‘கிறுக்கு பிடித்த சுவர்’ என்ற படிமம் எல்லாம் குறிப்பது அதுவே. எந்தச் சொல்லையும் புன்னகையில்லாமல் சொல்ல முடியாத உங்களது கவிதையுலகில் வெறுப்பின்மை, தாய்மை, எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு – இவையே பிரதானமாய் இருக்கின்றன. காய்கறி வண்டியிலிருந்து சிதறும் தக்காளிக்குப் பதறும், குட்டிப் பூனைகளின் பிரிவுக்கு தாய்ப் பூனையிடம் மன்னிப்பு கேட்கும் தூய மனமும் கொண்டது உங்கள் கவிதை மனம். அதற்கு தங்கரளியும் ஈர்க்குச்சியும் போதுமானதாக இருக்கிறது நினைவுகளைக் கொண்டாட. கையடக்க வான் கலைடாஸ்கோப் என்று உங்களை சுயப்பிரகடனம் செய்து கொள்கிற கலைமனம் உங்களது. அப்படிப்பட்ட நலம் சூழும் மனம் மொட்டை மாடியில் கட்டப்பட்ட ஆட்டுக்குட்டியென தனிமைக்குத் திரும்புவது ஏன்? ‘ஆயிரமாயிரம் ஒளிர்தனிமலர்களை’ அவை பூத்த போதும் அது எப்போதும் சூடவிரும்பவது ஒளிகுறைந்த வெளிச்சத்தை, அந்த மனத்தை சிக்கல் தேவதை விதவிதமான அலைவுறுதலுக்கு உட்படுவது ஏன் என்ற கண்டடைதலை நோக்கியே உங்கள் கவிதையுலகம் விரிகிறது. ‘மனசின் இருண்ட ஆயிரங்கால் மண்டபம்’ அதில் ‘தொலைதலும் மீள்தலும் ஒன்றுதான்’ என்று சொல்லும் உங்கள் கவிதைகளில் அகத் தனிமைக்குப் பெரிய இடமுண்டு. அது கண்டறியும் பெரிய சித்தாந்தம் தத்துவம் “காலைச் சூரியன் ஒன்றே/ என் தோசைகளுக்கு நிகரானது.’ இந்த பிரம்மாண்ட தன்னம்பிக்கைக்கு வந்து சேர்ந்ததைச் சார்ந்து சொல்ல முடியுமா?

ப: தனிமை பற்றி அவ்வளவா எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.  காட்சி விவரிப்புகள், காட்சிப் படிமங்கள் கொண்ட கவிதைகளை எழுதும்போதோ அல்லது இயற்கையை உற்றுநோக்கும் கவிதைகளை எழுதும்போதோ, அதில் தனிமையுணர்வின் தொனி சேர்ந்துவிடலாம். தனிமை ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு பொருள் தரக்கூடிய நுட்பமான உணர்வு என்பதால் எழுதியவரின் சுய அனுபவமாக இடையீடு செய்யப்படும் வாய்ப்பு அதிகம். ஆனால், எப்போதும் அது அப்படியிருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. நீங்கள் சொல்வது போலவே, பலரும் என்னை அன்பான நட்பான மனுஷியாகவே காண்கிறார்கள். அது ஒருவகையில் உண்மையும்கூட. மீண்டும் மீண்டும் என்னைக் காயப்படுத்தியவர்களிடம், அந்த வலிக்கு அஞ்சி விலகியிருந்தாலும், அவர்கள் மீதும் எனக்கு எப்போதும் அதே அன்புதான். எனக்கு எல்லாரையும் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள எல்லாமே பிடிக்கிறது. 

சில மாதங்களுக்குமுன் ஒரு முறை, நாங்கள் கடைவீதியிலிருந்து திரும்பிவரும்போது, ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டி ஒன்று எங்களுடன் வந்துவிட்டது; சொல்லப்போனால், என் மகளின் பின்னாலேயே வந்தது. அதை எங்கள் குடியிருப்பின் சார்பாக இப்போது வளர்த்து வருகிறோம். குடியிருப்புக் காவலர்கள் அறை அருகே அதற்கு இருக்கை. அதன் பெயர் பிங்க்கி. சில சமயம் காலை நடையில், அது எங்கள் அருகே வந்து அமரும். அதைத் தடவிக் கொடுக்கும்போது, உலகில் உள்ள எல்லாவற்றின்மீதும் ரொம்ப ரொம்ப அன்பாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அன்பு தளும்பும்போது எல்லாருக்கும் அப்படித்தான் மனசு குழம்பும் போலும்; ஆனால் அதில் ஒரு நிறைவு.

என் நட்பு வட்டம் குறுகியதுதான்; ஆனால், அவ்வளவு தனிமையான ஆள் இல்லை நான். வீட்டிலும் நெருங்கிய வட்டத்திலும் எப்போதும் ஒரே குதூகலமாக இருப்பேன். அதற்கு எனக்குச் சிறிய காரணங்கள் போதும்; சில சமயம் காரணமே தேவையில்லை. என்னைப் பாதுகாப்பாக உணரவைக்கும் சிறிய வட்டத்துக்குள் இருப்பதால், தனிமையை நாடும் ஆள் போன்ற தோற்றம் வந்திருக்கலாமே தவிர, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு quirkiness இருக்கலாம்; அப்படியொரு தன்மை கொண்ட சாதாரண ஆள்தான் நானும். 

அம்மாவைத் தேடி ஒருமுறை போய், அவளைக் கட்டிக்கொள்ள நினைத்து, அவருடைய வெறுப்பான பார்வைதான் திரும்பக் கிடைத்த அதிர்ச்சி. அதற்குப் பெரியவர்களின் உலகில் ஏதோவொரு காரணம் இருந்தது, என் தவறு ஒன்றும் இல்லை என்று அதை ஏற்றுக்கொண்டு தாண்டி வர எனக்கு வெகு காலம் ஆனது. அந்த அனுபவங்கள், அன்பை நான் அணுகும் தன்மையை எப்படிப் பாதித்திருக்கின்றனவோ, அதே அளவுக்கு என்னை உறுதியானவளாகவும் ஆக்கியிருக்கின்றன. 

இவ்விரண்டுமே என் கவிதைகளின் தன்மையைப் பாதிக்கின்றன என்று நினைக்கிறேன். தனிமையையும், மகிழ்ச்சியையும் இணையான முறையில் எழுத முடிவது அதனால்தான். எதையும் தாண்டி வந்து என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்ற உறுதியான எண்ணம்தான், கவிதைகளில் அப்படி அதீத தன்னம்பிக்கையாக வெளிப்படுகிறது போலும்.

முகுந்திடம் நான் அடிக்கடி ஒன்று சொல்வேன்: ‘இருக்கும் ஒரு வாழ்வின் மதிப்பையறிந்து, மகோன்னதங்களை உத்தேசிக்க வேண்டும். நான் இங்கு இருந்தேன் என்பதற்கு அடையாளமாக மிகப்பெரிய ஏதோவொன்றை விட்டுச் செல்ல வேண்டும்’. இதுவும் ஒரு பிரம்மாண்ட தன்னம்பிக்கை போல் தொனிக்கிறதல்லவா… ஆனால், என் வாழ்வில் இதுதான் மிகச் சிறிய ஆசை!

***

லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here