விக்ரம்
குட்டை மரங்களும் புற்களும் நிறைந்த நிலப்பரப்பின் நடுவே சிறு குன்றென உயர்ந்து நின்ற அந்த பாறையின் மீது நின்று பார்த்திருந்தனர் நகுலனும் சகாதேவனும். அர்ஜுனன் மூங்கில் வில்லுடன் விரைந்து ஓடினான். ஓடிக்கொண்டே சுழன்று அம்புகள் எய்தான். புற்களால் செய்த அம்புகள். முதலில் நான்கு திசைகளிலும் நான்கு அம்புகள் ஓரே சமயத்தில் பாய்ந்தன. அவன் சுழற்சியின் வேகம் அதிகரித்தது. எட்டு அம்புகள் எட்டுத் திசைகளிலும். பின் நொடிகளில் பதினாறு…முப்பத்தியிரண்டு. அதன் பின் அம்புகளை எண்ண முடியவில்லை. அவனைக் காணவும் முடியவில்லை. விரைந்து நகரும் சுழி ஒன்றின் மையமென அவன் ஆனான். 360 பாகைகளிலும் அம்புகள் விசையுடன் விரைந்து கொண்டிருந்தன.
“மூத்தவருக்கு நிகரே இல்லை” என்றான் நகுலன்.
“சுழன்றாடும் நடனம். ஆடும் அலைகளெனவும் பொழியும் மழையெனவும் திசைகள் அனைத்தும் விரியும் அம்புகளே அவரது ஆடை. தம் வாழ்வின் இறுதியை நெருங்கிவிட்ட உயிர்களே இந்த ஆடையின் நுனியைத் தொட நேரும். ஊழின் நடனம்”
நகுலனி்ன் பேச்சிற்கு சகாதேவன் எதுவும் சொல்லாமல் புன்முறுவல் புரிந்தான்.
தன் பயிற்சி முடித்து நகுல-சகாதேவர்களை நோக்கி அர்ஜுனன் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவர்களும் பாறையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். பாறையின் கீழிருந்த குட்டை மரங்களில் அர்ஜுனனின் புல்லம்புகள் தைத்திருந்தன. கழுத்தின் கீழாக அம்பு துளைத்திருந்த சிறு பறவை ஒன்று மண்ணில் தன் ஒரு இறக்கையை அடித்து துடித்தவாறே கிடந்தது. துண்டுபட்ட பாம்பொன்றின் ஒரு பாதி நெளிந்துகொண்டிருந்தது.
மூவரும் நடந்தபோது அர்ஜுனன் களைப்பை உணர்ந்தான்.
”ஒவ்வொருமுறையும் வியக்கிறேன் மூத்தவரே. வேறெவரையும் உங்களுடன் ஒப்பிடுவது பிழையென்றே தோன்றுகிறது” என்றான் நகுலன்.
அர்ஜுனன் புன்னகையுடன் மறுப்பதுபோல் தலையசைத்து தன் வில்லை மறுகைக்கு மாற்றிக்கொண்டான்
”இது சரியான கேள்வியா என்று தெரியவில்லை என்றாலும் கேட்கத் தோன்றுகிறு. தங்களுக்கு மட்டும் எவ்வாறு இது இயல்கிறது?” நகுலன் கேட்டான்.
”விருப்பமும் பயிற்சியும் தான் வேறென்ன?” என்றான் அர்ஜுனன். ”சகாதேவனுக்கு நிமித்த இயல் போலத்தான் இதுவும்” என்று சகாதேவனை நோக்கி புன்னகைத்தான்.
”விருப்பம் கொண்டு பயிற்சி மேற்கொள்ளும் அனைவருக்குமா அமைகிறது?” என்றான் நகுலன்.
”அப்படி அமையாது” என்று சொன்னான் சகாதேவன். ”மூத்தவரின் பிறவி நூல் அவ்வாறு அமைந்திருக்கிறது. அவரது ஊழ்….அவரது முற்பிறவி பயன்… அதற்கேற்ப கோள்களின் அமைவு.….திங்களுடன் செவ்வாயும், வெள்ளியும்……….”
அர்ஜுனன் குறுக்கிட்டு ”பார்த்தாயா அம்பின் விழிபெற்று நான் உயிர்களை நோக்குவது போல இவன் ஊழின் விழிபெற்று உயிர்களை நோக்குகிறான்” என்றான். பின் ”அதெவ்வாறோ திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என எல்லாக் கோள்களின் நாட்களும் என் பயிற்சிக்குரியவைதான்” என்றான்.
”பசிக்கிறது இளையோரே இதை உண்போம்” தன் ஒரு கையில் காதைப் பிடித்து பற்றியிருந்த பருத்த முயலைக் காண்பித்தான் அர்ஜுனன்.
“இது எங்கிருந்தது? நாங்கள் இதுவரை காணவில்லையே” ஓரே குரலில் வியப்புடன் கேட்டனர் நகுலனும் சகாதேவனும்.
“இங்கேயே தான் இருந்தது. தன் இடையில் பிணைத்திருந்த மரவுரிப் பையைக் காண்பித்தான்” பை முயலின் குருதியால் நனைந்திருந்தது. அவன் பற்றி இருந்த இறந்த முயல் பாதி செந்நிறமும் பாதி வெண்மையுமாக இருந்தது.
“இதை எப்படி காணாமல் போனேன்!” மீண்டும் வியந்தான் நகுலன்.
“நீ கண்டிருக்கமுடியாது” என்றான் அர்ஜுனன்.
“ஏன்?”
“நீங்கள் காண முடியாதவாறு உங்கள் கண்களை நான் மறைத்திருந்தேன். மற்றவர்கள் காண முடியாதவாறு ஒன்றை மறைப்பதும் விற்கலையின் திறன்களில் ஒன்றுதான்”
“ஊழைச் செயல்படுத்தும் கோள் உண்மையை நோக்க முடியாதவாறு மனிதரின் கண்களை மறைப்பதுபோல” என்றான் சகாதேவன்.
“எப்போதும் கோள்கள் மனிதர்களை ஊழ் என்ற பேரில் துன்புறுத்திக் கொண்டுதான் இருக்குமோ?” என்று கேட்டான் நகுலன்.
“நான் எப்போது அப்படிச் சொன்னேன்? மனிதருக்கு திறன்கள் அருளி விழிப்பித்து காத்து நலங்கள் செய்வனவும்…..மெய்மை நோக்கி செலுத்துவனவும் கோள்களே. கோள்களுக்கும் ஊழ் உண்டு” என்றான் சகாதேவன்.
“எனில் ஊழ் என்பது….” என்று நகுலன் கேட்க வர ”இளையோர்களே பிறகு பேசுவோம். பசிக்கிறது” என்றான் அர்ஜுனன்.
காய்ந்த புற்களை எரித்து சுட்ட முயலின் ஊனை அம்பால் கிழித்து இலையில் இட்டபோது சகாதேவன் ”மூத்தவரே நீங்களும் இவனும் உண்ணுங்கள். நான் உண்ணவில்லை” என்றான்.
“ஏன்?” என்றான் அர்ஜுனன்.
“இவன் அருகே இருக்கும் காட்டின் அப்பாலுள்ள குன்றின் சிறுகுகையில் தங்கி இருக்கும் சமண முனிவர் ஒருவரை சில நாட்கள் முன்பு சென்று கண்டுவந்தான். அவரை மீண்டும் காணச் செல்ல இருக்கிறான். அதன் பொருட்டு புலால் மறுப்பு நோன்பு மேற்கொள்கிறான்.” என்றான் நகுலன்.
“ஆம் மூத்தவரே அவர் சில தியான முறைகளை எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். அதன் பொருட்டு சென்று வருகிறேன். அத்துடன் தென்நிலத்தின் தொன்மையான நிமித்த நூல் ஒன்றும் அவரிடம் உள்ளது. பெருங்குன்றன் என்ற முனிவரால் இயற்றப்பட்டது. அதை அவரே மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். அதை எனக்குத் தருகிறேன் என்றார்” என்றான் சகாதேவன்.
“சரி” என்று சொன்ன அர்ஜுனன் ”காட்டின் வழியாக தனியாகவா சென்றாய் சிறுவனே?” என்று கேட்டான்.
“ஆம் மூத்தவரே நான் மட்டும்தான் சென்றேன். இவனை அழைத்துச் செல்லவில்லை” என்றான் சகாதேவன்.
“இனி அவ்வாறு செய்யக் கூடாது. நான் உன் உடன் வருகிறேன்” என்றான் அர்ஜுனன்.
“வேண்டாம் மூத்தவரே. நான் இவனுடன் செல்கிறேன். நான் பார்த்துக் கொள்வேன் இச்சிறுவனை” என்றான் நகுலன்.
அர்ஜுனன் சிரித்தான். உண்டபோது சிரித்ததால் இருமத் தொடங்கினான்.
நகுலன் இலையிலிருந்து ஊனை எடுத்து மெல்லத் தொடங்கினான்.
நகுலனும் சகாதேவனும் விடை பெற்றபோது ”இரு” என்ற அர்ஜுனன் தன் மூங்கில் வில்லையும் புல்லம்புகள் கொண்ட அம்பறாதூணியையும் நகுலனிடம் அளித்தான். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நகுலன் ”மூத்தவரே தங்களுக்கு ?” என்றான்.
“மூடனே…..தேவை எனில் ஒரு கரம் வில் மறு கரம் அம்பு நம் மூத்தவருக்கு… தெரியாதா உனக்கு?” என்று கடிந்து கொண்டான் சகாதேவன்.
அர்ஜுனன் உரக்கச் சிரித்தான். பின் சிரிப்பை அடக்கிக் கொண்டு ”நீ கொஞ்சமேனும் விற்கலை தேர்ச்சி கொண்டவன் அல்லவா?” என்று நகுலனிடம் கேட்டான்.
“ஆம் மூத்தவரே. தங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும்“ என்றான் நகுலன்.
இருவரும் அர்ஜுனன் பாதம் தொட்டு வணங்கி விடை பெற்றனர்.
*
செல்லச் செல்ல இருண்டு வந்த காட்டை நினைவில் இருந்து மீட்டெடுத்த காட்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தான் சகாதேவன். அவனது காவலன் என்ற கடமையுணர்ச்சியுடன் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தான் நகுலன். நீண்ட நேரம் நடந்து கால்கள் ஓய்ந்தபோது ஒளி மிகுந்து வரத் தொடங்கியது. குறுக்கிட்ட நீரோடை ஒன்றில் நீரருந்தி கை கால்கள் கழுவி அருகே இருந்த பாறை ஒன்றில் அமர்ந்து ஓய்வெடுத்தார்கள்.
வெயில் சாய்வதற்கு முன்னதாகவே சமண முனிவர் இருந்த குன்றின் குகையை எட்டிவிட்டிருந்தார்கள். அவர்கள் பற்றி ஏறிய மரக்கிளைகளின் அசைவிலும் பறவைகளின் கலைவு ஒலியிலுமாக அவர்களின் வருகையை உணர்ந்துகொண்ட சமண முனிவர் குகையினின்று வெளிவந்து அவர்களை புன்முறுவலுடன் தலையசைத்து வரவேற்றார். சகாதேவன் குனிந்து அவரது பாதம் தொட்டான். தன் தோள் உயரத்திற்கு இருந்த வில்லை ஒரு கையால் விலக்கி குனிந்து தடுமாறி அவர் பாதம் தொட்ட நகுலனைக் கண்டு சமண முனிவர் முகத்தில் குறும்பு தோன்றியது. உயிர்க்கொலை தவிர்க்கும் நெறி கொண்ட சமண முனிவரைக் காண வில் அம்புகளுடன் வந்தது தவறோ என நினைத்தான் நகுலன்.
அவர்கள் தலைதொட்டு ஆசி வழங்கிய அவர் உள்ளே வருமாறு சைகை செய்தார். குகையின் உள்ளே மேலிருந்த இடுக்கு ஒன்றின் வழியாக மஞ்சள் வெய்யில் கதிர் விரித்திருந்தது. வெளியே சிறுகுகை என்று தோன்றிய போதும் உள்ளே செல்லும்போது பெரியது என்று தோன்றியது. அன்று சமண முனிவர் பேசா நோன்பு கொண்டிருந்தார்.
“நீங்கள் உணவு உண்ண வேண்டுமல்லவா?” என்று அவர் சைகையில் கேட்டபோது இருவரும் பசியில்லை என்று மறுத்துவிட்டனர். பின் நகுலன் குகைக்குள் சுற்றிக் கண்டு பின் வெளியே சென்று சுற்றுப்புறங்களைக் கண்டுவிட்டு வந்தான். தியானத்தில் அமர்ந்துவிட்ட முனிவரின் எதிரில் தானும் தியானம் செய்ய அமர்ந்து கொண்டான் சகாதேவன். நகுலன் சற்று விலகிச் சென்று பெரிய கல் ஒன்றில் முதுகு சாய்த்து கால்நீட்டி அமர்ந்தான். கதிர் மறைந்த போது குகையில் சிற்றகல் ஒன்று சுடர்விட்டுக் கொண்டிருந்தது.
சுடரை நோக்கிக் கொண்டிருந்த நகுலன் திரும்பி தியானத்தில் இருந்த சமண முனிவரை நோக்கினான். அவரது உடல் முற்றிலும் அசைவற்று இருந்தது. அவர் மூச்சு விடுகிறாரா என்று அய்யம் தோன்றும் விதத்தில் இருந்தது. நகுலனின் உள்ளம் நெகிழ்ச்சி அடைந்தது. அவன் கண்களில் நீர்பெருகி கன்னங்களில் வழியத் தொடங்கியது. கரங்களால் அதைத் துடைத்துக் கொண்ட போது அது ஏன் என்று அவன் வியந்து கொண்டான்.
அவன் சகாதேவனை நோக்கியபோது அவன் தியானம் விட்டெழுந்து சுடர் விளக்கின் அருகே சென்று அமர்ந்து சுவடி ஒன்றை நோக்கிக் கொண்டிருந்தான்.
பகல் போல் அல்லாமல் புறத்தில் இருக்கும் காட்டின் இரவு ஒலிகளை மட்டும் முற்றாக விலக்கி அமைதியை தன்னுள் நிறைத்திருந்தது அந்த குகை. நகுலன் தரையில் சரிந்து உறக்கத்தில் அமிழ்ந்தான்.
*
மறுநாள் காலை உணவிற்கென காய் கனிகளைத் திரட்டி வரவும் அவர்கள் நீராடவும் அவர்களை அருகே இருக்கும் ஓடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் சமண முனிவர். கடமை உணர்வுடன் தன் வில்லை ஏந்திச் சென்றான் நகுலன். சமண முனிவர் அதற்கு மறுப்பேதும் சொல்வாரோ என்று எண்ணினான் அவன். அவர் எதுவும் சொல்லவில்லை. பாறைகளின் வழி இறங்கி காட்டினுள் நடந்தனர் மூவரும்.
சற்று நேரம் மௌனமாக சென்றபின் ”முனிவரே…” என்று அழைத்த சகாதேவன் ஒருவேளை அவர் இன்றும் பேசா நோன்பு கொண்டுள்ளாரோ என்று தயங்கினான்.
“சொல் குழந்தை”
“அருக நெறியின் முதன்மைக் கொள்கை கொல்லாமை அல்லவா?” என்று கேட்டான்.
“ஆம். அதில் உனக்கு என்ன அய்யம்?” என்றார் சமண முனிவர்.
“ஆனால் நாங்கள் உயிர்கொலை செய்கிறோமே?”
“ஆம்”
“அது பாவம் இல்லையா?”
“ஆம்”
“எனில் என்ன செய்வது?”
“பாவம் என்று கருதுவதை செய்யாமல் இரு”
“அது எப்படி இயலும்? இப்புவியில் அது உண்மையில் இயல்வதா என்ன?” என்று நகுலன் கேட்டான்.
“இயலும் என்பதே அருகர் நெறி” என்றார் சமண முனிவர். பின் ”கருணையினால் தவத்தால் இயலாதது ஒன்றில்லை” என்றார்.
நகுலனும் சகாதேவனும் எதுவும் கூறவில்லை.
மேலும் சிறிது தொலைவு சென்றபின் சகாதேவன் நின்றான். ”முனிவரே” என்று அழைத்தான்.
சமண முனிவர் நின்று திரும்பி நோக்கினார்
“நேற்று வியாழன் வக்கிரம் பெற்றது. சனி செவ்வாயுடன் இணைந்து சிம்மத்திலிருக்கும் ராகுவை நோக்க……அங்கிருந்து…….” என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டான்.
“அதனால்?” என்றார் சமணப் படிவர்.
“வக்கிரம் என்றால் கோள் பின்நோக்கிச் செல்வதுதானே” என்றான் நகுலன்.
“இல்லை. பின்நோக்கிச் செல்வது போல தோற்றமளிப்பது” என்றான் சகாதேவன். பின் சுற்றிலும் பார்த்துவிட்டு கூச்சலிட்டான் ”முனிவரே அங்கு மறைந்து கொள்ளுங்கள்” என்று ஒரு பெரும் பாறை இடைவெளியைக் காண்பித்தான். ”தயவுசெய்து உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் முனிவரே..செல்லுங்கள்”என்றான்.
சமண முனிவர் சில கணம் தயங்கி ’“நீ காணும் நிமித்த நூல் குறிகளை நானும் அறிவேன். அதன்பொருட்டு அஞ்ச வேண்டியதில்லை” என்றார் அவர்.
“இப்போது என்ன ஆயிற்று? அதுதான் நான் இருக்கிறேனே? என்ன அச்சம் உனக்கு?” என்று சகாதேவனை நோக்கி எரிச்சலுடன் சொன்னான் நகுலன்.
“இல்லை முனிவரே தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். இந்நேரம் தங்களின் உயிருக்கு ஆபத்திருக்கிறது. மறைந்துகொள்ளுங்கள் தயவு கூறுங்கள்” கதறி கூச்சலிட்டான்.
முனிவர் மறுசொல் கூறாமல் சென்று பாறை இடைவெளி சென்று மறைந்தார். மறுகணம் எங்கிருந்தோ பாய்ந்து வந்த அம்பு ஒன்று சாகதேவனின் தோளை உரசி அவன் ஆடையைக் கிழித்துச் சென்றது. நகுலன் வில்லில் அம்பைத் தொடுத்துக் கொண்டு அம்பு வந்த திசை நோக்கி விரைந்தான்.
“யாரது கோழையே ஏன் மறைந்திருக்கிறாய்?” என்று கூச்சலிட்டு இலக்கறியாமல் அம்பை செலுத்தினான். மறுகணம் பிறிதொரு அம்பு வந்து நகுலனின் மூங்கில் வில்லை முறித்தது.
பாறை இடைவெளியில் இருந்து சமண முனிவர் வெளியே வந்தார். பெருங்குரலில் ”எவராயினும் அறிக. நான் சமண முனிவன். இவர்கள் என்னைக் காண வந்த சிறுவர்கள். எங்களிடம் பொருள் எதுவும் இல்லை. நாங்கள் எவர்க்கும் தீங்கழைப்போரும் அல்ல. எவரையேனும் நீங்கள் கொன்றாக வேண்டுமென்றால் என்னைக் கொல்லுங்கள். இச்சிறுவர்களை விட்டுவிடுங்கள். அருகரின் பெருங்கருணையின் பெயரால் கேட்கிறேன். அளி கூறுங்கள்” என்றார்.
அத்திசையில் பசுந்தழைப்பின் இடையே சலசலப்பு ஒலி கேட்டது. பின் ஒலிகள் முற்றாக அமைதி அடைந்தன.
“அஞ்ச வேண்டியதில்லை சிறுவர்களே” என்று கூறிக்கொண்டே நகுல-சகாதேவர்களின் அருகே வந்த சமண முனிவர் அவர்களைக் கனிவுடன் நோக்கினார்.
அவரது கண்கள் மெல்ல இருண்டன. கால்கள் தடுமாற அவர் தரையில் அமர்ந்தார்.
சட்டென்று ”இல்லை….முனிவரே இல்லை…..” சகாதேவன் கதறத் தொடங்கினான். நகுலன் பாறை இடைவெளியிலிருந்து வெளியே ஊர்ந்த நீண்ட அரச நாகத்தைக் கண்டான்.
“நீ நிமித்த நூலில் தேர்ச்சி பெற்றுவிட்டாய் சிறுவனே” சமண முனிவர் புன்முறுவலுடன் சொன்னார்.
“இல்லை… இல்லை… நான் தான் உங்களைக் கொன்றுவிட்டேன். இல்லை…நீங்கள் என்னைப் பிரியக் கூடாது” சகாதேவன் அழ நகுலன் செய்வதறியாது சுற்றிலும் பார்த்து எழுந்து ஓடினான்.
சகாதேவனும் எழ ”வேண்டாம். செல்லாதே. பயனற்று நேரத்தை வீணாக்க வேண்டாம். ஊழை மீற வீணில் முயல வேண்டியதில்லை. நான் உனக்கு அளிக்க வேண்டிய தியான நுண்சொல் ஒன்றிருக்கிறது. பயன் மிக்கது. கொல்வதும் கொல்லப்படுவதுமான உலகினின்று விடுதலை அருள்வது. தன்னுயிர் தான் அறப்பெற்றோனாக்குவது”
வலது கையை தன் முகத்தின் முன்னிறுத்தி, அழுகையை அடக்கி செவியை தாமரை இருக்கையில் அமர்ந்த அவரது முகத்தருகே கொண்டு சென்றான் சகாதேவன்.
மிகப் பின்னொரு காலத்தில் அர்ஜுனன் அமர்ந்த துலாவின் மறுதட்டில் சகாதேவனை அமர்த்தியது அந்த நுண்சொல்.
***
விக்ரம்: கோவையில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார். மின் இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: vikram321shiva@gmail.com

