Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்மௌனத்தின் சுடரும், ஜன்னலின் வெளிச்சமும்

மௌனத்தின் சுடரும், ஜன்னலின் வெளிச்சமும்

அ.முனவர்கான்

ட்டாம் நூற்றாண்டின் சூஃபி ஞானி ராபிஆ அல்-அதவியாவையும், இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கவிஞர் ஃபோரூக் ஃபாரோக்சாத்தையும் ஒப்பிடுவது ஒரு சுவாரஸ்யமான ஆன்மீக மற்றும் இலக்கியப் பயணமாகும். காலத்தால் ஆயிரம் ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், இருவருமே பாரசீக நிலப்பரப்பின் மிகச்சிறந்த பெண் குரல்களாகத் திகழ்கின்றனர்.

மௌனத்தையும், இறைவனிடம் முன்வைக்கும் நேரடி வினாக்களையும் கொண்டது ராபிஆவின் மொழி; அது அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் “ஆன்மீகத் துணிச்சல்”. நவீன பாரசீகக் கவிதையில் ஒரு மைல்கல்லாக விளங்குவது ஃபோரூக்கின் மொழி; அது மரபுசார்ந்த யாப்பிலக்கணங்களை உடைத்து, ஒரு பெண்ணின் அந்தரங்க உணர்வுகளைப் பொதுவெளியில் பேசிய முதல் துணிச்சலான குரல்.

ராபிஆ அல்-அதவியா (கி.பி. 714–801) ஈராக்கின் பஸ்ராவில் வாழ்ந்த புகழ்பெற்ற சூஃபி ஞானி ஆவார். இஸ்லாமிய சூஃபித்துவ வரலாற்றில், இறைவனைத் தூய அன்பால் நேசித்த மிக முக்கியமான பெண் துறவியாக இவர் போற்றப்படுகிறார். உலகியல் பற்றுகளைத் துறந்து, இறைவனின் நினைவிலேயே வாழ்ந்த இவரது வாழ்க்கை, இன்றும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்குப் பெரும் வழிகாட்டியாக உள்ளது.

ஆன்மீகத்தை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல், தூய அன்பின் வெளிப்பாடாகப் பார்ப்பதே ராபிஆவின் தத்துவத்தின் அடிப்படையாகும். “இறைவனை நரகத்தின் பயத்தினாலோ அல்லது சொர்க்கத்தின் ஆசையினாலோ வழிபடக்கூடாது; இறைவனை அவன் என்பதற்காக மட்டுமே நேசிக்க வேண்டும்” என்பதே இவரது போதனையின் சாராம்சம்.

இறைவனை அடைவதற்கு எவ்வித நிபந்தனைகளும் இருக்கக்கூடாது என்பது அவர் கருத்து. சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற பேராசையோ அல்லது தண்டனைக்கு அஞ்சும் நிலையோ ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கும் தடைகளாகும். தன்னலத்தை முழுமையாக அழித்து, இறைவனின் விருப்பமே தனது விருப்பமாக மாறும் நிலையை அடைவதே உண்மையான பக்தி. இதயம் என்பது இறைவனின் இருப்பிடம்; உலகியல் ஆசைகள், வஞ்சகம் மற்றும் சுயநல எண்ணங்களால் நிறைந்த இதயத்தில் இறை அன்பு தங்குவதில்லை. எனவே, இதயத்தை அனைத்துப் பற்றுகளிலிருந்தும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ராபிஆ, மிகவும் எளிமையான துறவற வாழ்க்கையைக் கடைபிடித்தார். உலகியல் இன்பங்களை விட இறைவனின் நினைவே மேலானது என்பதைத் தனது அன்றாட வாழ்வின் மூலம் அவர் தெளிவுபடுத்தினார். 

இன்றும் சூஃபித்துவத்தில், அன்பு மற்றும் பக்தி மார்க்கத்திற்கு ராபிஆவின் போதனைகளே மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவர் மனித குலத்திற்கு விட்டுச் சென்ற மிக முக்கியமான செய்தி: “அன்பே இறைவனின் வழி.”

ஃபோரூக் ஃபாரோக்சாத் (1935–1967) நவீன பாரசீகக் கவிதையுலகின் மிக முக்கியமான, துணிச்சலான பெண் கவிஞர். ஈரானிய இலக்கிய வரலாற்றில் பெண்களின் குரலை, உணர்வுகளை மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான புரட்சிகரமான கருத்துகளைப் பதிவு செய்த முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.

பாரம்பரிய கவிதை வடிவங்களிலிருந்து விலகி, ‘வசன கவிதை’ முறையில் எழுதிய இவரது கவிதைகள் பெண்களின் காதல், ஏக்கம், தனிமை மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை வெளிப்படையாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசின. ஈரானின் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில், ஒரு பெண்ணின் அக உணர்வுகளைக் கவிதைகளாகப் பதிவு செய்தது அக்காலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன் வாழ்வின் அனுபவங்களையே அவர் கவிதைகளாகப் படைத்தார்.

“மற்றொரு பிறப்பு” (Another Birth – Tavallodi Digar): இது இவரது மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்று.”குளிர்ந்த காலத்தின் தொடக்கத்தை நம்புவோம்” (Let Us Believe in the Beginning of the Cold Season): இவரது மறைவுக்குப் பின் வெளியான இத்தொகுப்பு, அவரது முதிர்ச்சியான கவிதை ஆளுமையைக் காட்டுகிறது. “பாவம்” (The Sin / Persian: Gonāh): பாரசீக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இக்கவிதை மிகுந்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

ஒரு பெண் தனது விருப்பத்தை, உணர்வுகளை, உடல் சார்ந்த இன்பத்தை வெளிப்படையாகப் பாடுவது எப்படிச் சமூகத்தால் “பாவம்” என்று முத்திரை குத்தப்படுகிறது என்பதை “பாவம்” கவிதை விவரிக்கிறது.

 காதலும் இன்பமும் கலந்த ஒரு தருணத்தை எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவர் வர்ணிக்கிறார். அந்த உணர்வு அவருக்கு ஒரு புதிய சுதந்திரத்தையும், அதே நேரத்தில் சமூகக் கட்டுப்பாடுகளால் உருவான ஒருவித குற்ற உணர்ச்சியையும் அளிக்கிறது.

1950-களின் ஈரானிய ஆணாதிக்க சமூகத்தில், ஒரு பெண் தனது பாலியல் விருப்பங்களைப் பற்றி இவ்வளவு துணிச்சலாகப் பேசியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அக்கால இலக்கியவாதிகளும் சமூகமும் இதை ஒரு “தவறான செயலாக” பார்த்தனர்; ஆனால் ஃபோரூக் அதை ஒரு கவிதையாகப் படைத்து, பெண்ணின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். பல நூற்றாண்டுகளாகத் திரைக்குப் பின்னால் மறைக்கப்பட்டிருந்த பெண்ணின் உணர்ச்சிகளை, உலகிற்கு உரக்கச் சொன்ன முதல் கவிதைகளில் இதுவும் ஒன்று.

பாரசீகக் கவிதைகளில் வழக்கமாகப் பெண்கள் காதலிக்கப்படுபவர்களாகவே சித்தரிக்கப்பட்டனர். ஆனால், ஃபோரூக் தான் காதலிப்பவராகவும், தனது இன்பத்தை அனுபவிப்பவராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். இது இலக்கிய ரீதியாக மட்டுமின்றி, கலாச்சார ரீதியிலும் ஒரு பெரிய புரட்சியாகக் கருதப்பட்டது. 

“Sin” (Gonāh) என்பது வெறும் கவிதை அல்ல; அது ஃபோரூக் ஃபாரோக்சாத் என்ற பெண்ணின் தைரியமான அறிக்கை. சமூகத்தின் பார்வையில் அது “பாவமாக” தெரிந்தாலும், ஃபோரூக்கின் பார்வையில் அது ஒரு பெண்ணின் இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடாகவும், தன்னைத் தானே கண்டறியும் பயணமாகவும் இருந்தது.

கவிஞர் மட்டுமல்லாது, இவர் ஒரு திறமையான திரைப்பட இயக்குநரும் கூட. தொழுநோயாளிகள் பற்றிய இவரது ஆவணப்படமான “தி ஹவுஸ் ஈஸ் பிளாக்” (The House is Black), ஈரானியத் திரையுலகின் மிகச்சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தனது 32-வது வயதிலேயே ஒரு கார் விபத்தில் இவர் காலமானார். ஃபோரூக் வெறும் கவிஞர் மட்டுமல்ல, அவர் ஈரானியப் பெண்களின் சுதந்திரக் குரலின் அடையாளம். இன்றும் நவீன பாரசீகக் கவிதையை வாசிக்கும் எவருக்கும் இவரது கவிதைகள் ஒரு தவிர்க்க முடியாத அனுபவத்தைத் தரும்.

தடையற்ற சுதந்திரம், ‘காதல்’ எனும் புரட்சிகர ஆயுதம், இருத்தலியல் தாகம், படிமங்களின் வலிமை போன்றவற்றை ராபிஆ மற்றும் ஃபோரூக் ஆகிய இருவரின் கவிதைகளிலும் தென்படும் பொதுவான இழைகள் எனலாம்.

சமூகக் கட்டுப்பாடுகள், திருமண பந்தம், மத நிறுவனங்களின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, இறைவனுடனான நேரடித் தொடர்பை ராபிஆ தேர்ந்தெடுத்தார். அவருக்கு “சுதந்திரம்” என்பது ஆன்மீக விடுதலையாக இருந்தது. ஆணாதிக்கச் சமூகம் பெண்ணின் மீது சுமத்தியிருந்த விலங்குகளைத் தனது கவிதைகளால் ஃபோரூக் உடைத்தெரிந்தார். “பாவம்” போன்ற கவிதைகளில் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பதிவு செய்ததன் மூலம் தனிமனித சுதந்திரத்தை அவர் முன்னிறுத்தினார்.

 ராபிஆவின் ‘இறைக்காதல்’ நரக பயத்தைக் கடந்தது. “நரகத்தை எரிக்கவும், சொர்க்கத்தை அழிக்கவும் விரும்புகிறேன்” என்ற அவரின் கூற்று, காதலை ஒரு தூய்மையான, கணக்கற்ற உணர்வாக மாற்றியது. காதலை அதன் உடல் மற்றும் மன ரீதியான அனைத்துப் பரிமாணங்களிலும் கொண்டாடிய ஃபோரூக், “மீண்டும் பிறப்பு” கவிதையில் காதல் ஒரு பெண்ணை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்கிறது என்பதைப் பாடினார். இருவருமே காதலை ஒரு கலகமாகவே பார்த்தனர்.

 ராபிஆவின் ‘இஷ்க்’ சமூகத்தின் போலித்தனமான மதச்சடங்குகளுக்கு எதிரான கலகம். “கடவுளை நரகத்திற்கு அஞ்சி நேசிப்பவன் வியாபாரி” என்று அவர் சாடியது அக்கால ஆணாதிக்க மத போதகர்களை உலுக்கியது. ஃபோரூக்கின் காதல், உடலைச் சிறைபிடித்த சமூக விழுமியங்களுக்கு எதிரான கலகம். “நான் பாவம் செய்தேன், இன்பம் நிறைந்த பாவம்” என்று அவர் எழுதியபோது, அது ஈரானியச் சமூகத்தில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

“என்னுள் இருப்பவன் நீயே” என்று இறைவனுடன் ஒன்றிணைவதைத் தேடி, புற உலகைப் புறக்கணித்து அகத்தின் ஆழத்திற்குச் சென்றார் ராபிஆ. “ஜன்னல்” கவிதையில் சொல்வது போல, உலகைப் பார்ப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஒரு திறப்புக்காக ஏங்கினார் ஃபோரூக். ராபிஆ இறைவனைத் தேடிய அதே தீவிரத்தோடு, ஃபோரூக் வாழ்வின் அர்த்தத்தைத் தேடினார்.

 நெருப்பு, தண்ணீர், ஒளி போன்ற இயற்கைப் படிமங்களை ஆன்மீக நிலைகளை விளக்க ராபிஆ பயன்படுத்தினார்; மண், செடி, பறவை, இருள் போன்ற படிமங்களைப் பயன்படுத்தி நவீன வாழ்வின் விரக்தியையும் நம்பிக்கையையும் ஃபோரூக் படம்பிடித்தார்.

ராபிஆ அல்-அதவியாவின் “நிபந்தனையற்ற காதல்” மற்றும் ஃபோரூக் ஃபாரோக்சாத்தின் “மீண்டும் பிறப்பு” ஆகிய இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும், “தன்முனைப்பு அழிந்து, ஒரு புதிய அடையாளத்தைக் கண்டடைதல்” என்ற புள்ளியில் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றிணைகின்றன.

இறைக்காதலில் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொண்ட ராபிஆ, “நான்” என்ற அகந்தை அழியும் போதுதான் உண்மையான இறைத்தன்மை வெளிப்படும் என்றார். உலகியல் ஆசைகளைத் துறப்பது அவருக்கு ஒரு வகையில் மரணம், பிறிதொரு வகையில் மறுபிறப்பு. சூஃபித்துவத்தில் மரணம் என்பது ‘அல்-லிகா’ (Al-Liqa) – அதாவது காதலன் (இறைவன்) தனது காதலியைச் சந்திக்கும் ஒரு திருமண விழா போன்றது. ராபிஆவிற்கு மரணம் என்பது ஒரு பயங்கரமான நிகழ்வு அல்ல; அது உலகியல் திரைகளை விலக்கிவிட்டுப் பேரொளியைக் காணும் ஒரு வாசல். தனது இறுதி நாட்களில், “எனது மரணம் என்பது எனது உண்மையான வாழ்வின் தொடக்கம்” என்று அவர் நம்பினார். அவர் உலகைத் துறந்தது ஒருவகையான ‘இறப்பிற்கு முன் மரணித்தல்’ (Moutu Qabla an Tamoutu) ஆகும்.

அதே சமயம், தனது “மீண்டும் பிறப்பு” கவிதையில், “எனது முழு இருத்தலும் ஒரு இருண்ட மந்திரம்” என்று தொடங்குகிறார் ஃபோரூக். ஃபோரூக்கிற்கு மரணம் என்பது ஒரு நிழலைப் போன்றது; அது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தொடர்கிறது. ஆனால், அவர் மரணத்தை ஒரு தோல்வியாகப் பார்க்கவில்லை. மாறாக, பழைய சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்ந்த ஒரு பெண் இறந்து, கவிதை மற்றும் காதலின் வழியே ஒரு புதிய மனுஷியாக உருவெடுப்பதையே இக்கவிதை பறைசாற்றுகிறது. “பறவை இறக்கக்கூடும், ஆனால் பறத்தலை நினைவில் கொள்” என்ற அவரது வரி, உடல் அழிந்தாலும் ஒருவரின் ஆக்கப்பூர்வமான செயல் மரணத்திற்குப் பின்னும் வாழும் என்ற ‘இருத்தலியல் நம்பிக்கையை’ காட்டுகிறது.

ராபிஆவிற்கு நேற்று, இன்று, நாளை என்ற காலக் கணக்குகள் கிடையாது; இறைவனுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் நித்தியமானது. “நேரம் கடந்துவிட்டது, கடிகாரம் அடித்துவிட்டது” என்று பாடும் ஃபோரூக், ஒரு மலர் விரிவதைப் போல அல்லது ஒரு கவிதை பிறப்பதைப் போல, காலத்தின் பிடியிலிருந்து விடுபட்டு ஒரு நித்தியமான கணத்தில் வாழ்வதைப் பற்றிப் பேசுகிறார்.

நரகத்தின் நெருப்புக்கோ, சொர்க்கத்தின் நிழலுக்கோ அஞ்சாத ஒரு காதல் மற்றும் எவ்வித நிபந்தனையுமற்ற அர்ப்பணிப்புதான் ராபிஆவை ஒரு ஞானியாக்கியது. ஃபோரூக்கோ தனது உணர்வுகளைச் சமூகத்திற்கு ஒளிக்காமல், அதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் காதலை ஒரு புனிதமான செயலாக முன்வைத்தார். “வாழ்க்கை என்பது ஒரு நீண்ட தெரு, அங்கே ஒரு பெண் தினமும் தன் பையோடு கடந்து செல்கிறாள்” என்ற வரிகள், வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.

ராபிஆ, ஃபோரூக் ஆகிய இருவருமே சமூகத்தின் இரைச்சல்களிலிருந்து விலகி, ஒரு ‘ஆக்கப்பூர்வமான தனிமையை’ தங்களுக்குள் வரித்துக்கொண்டவர்கள். ஆனால், அந்தத் தனிமையின் தன்மையும் அதன் இலக்கும் மாறுபட்டவை.

அவர்களின் ‘தனிமை’ குறித்த பார்வையை இப்படிக் கூறலாம் ராபிஆவிற்குத் தனிமை ஒரு தவம். அவர் உலகத்தை வெறுக்கவில்லை, மாறாக இறைவனை முழுமையாக நேசிக்கத் தனிமை தேவை என்று கருதினார். ராபிஆவின் தனிமையில் இறைவன் மட்டுமே உரையாடுகிறான். “எனது தோழன் எப்போதும் என்னுடனேயே இருக்கிறான்” என்பது அவரது நிலைப்பாடு. இது ஒருபோதும் ‘தனிமை உணர்வு’ அல்ல; இது ஒரு துளி கூட வருத்தமோ அல்லது ஏமாற்றமோ இல்லாத ‘ஏகாந்தம்’. ராபிஆவின் தனிமை ஒரு பூட்டிய அறை போன்றது; அதன் கதவுகள் உலகிற்கு மூடப்பட்டிருக்கும், ஆனால் அதன் கூரை இறைவனின் வானத்திற்குத் திறந்திருக்கும்.

ஃபோரூக்கின் தனிமை ஒரு கலகம். ஆணாதிக்கச் சமூகம் ஒரு பெண்ணின் மீது திணிக்கும் போலித்தனமான உறவுகளிலிருந்து தப்பிக்கும் இடமாக அவர் தனிமையைப் பார்த்தார். ஃபோரூக்கின் தனிமையில் ஏக்கமும், வலியும், சமூகத்தின் மீதான விமர்சனமும் கலந்திருக்கும். “தனிமை என்பது ஒரு கறுப்புச் சுவர்” என்று அவர் பாடினாலும், அந்தச் சுவருக்குப் பின்னால்தான் உண்மையான ‘தான்’ இருப்பதை உணர்ந்தார். “மீண்டும் பிறப்பு” கவிதையில் அவர் சொல்வது போல, ஒரு ஜன்னலோரம் அமர்ந்து உலகை அதன் நிஜத் தன்மையோடு பார்ப்பதற்கான அவகாசமே அவரது தனிமை. ஃபோரூக்கின் தனிமை ஒரு ஜன்னல் போன்றது; அதன் வழியே அவர் தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறார், அதே சமயம் வெளியுலகின் அநீதிகளையும் அவதானிக்கிறார்.

“இறைவா, என் அறைக்குள் நீ இருக்கும்போது எனக்கு உலகம் எதற்கு?” என ராபிஆ கேட்கையில், “தனிமையே, நீதான் என் உடலின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே கண்ணாடி” என்கிறார் ஃபோரூக். ராபிஆவின் தனிமை ‘கடவுளைக் காணும் ஒரு வழி’ என்றால், ஃபோரூக்கின் தனிமை ‘தன்னைக் கண்டடையும் ஒரு வெளி’. ஃபோரூக்கின் “மீண்டும் பிறப்பு” கவிதையில் 

“நான் ஒரு சிறிய ஜன்னலை அறிவேன், 
அங்கே காதலும், அமைதியும், 
மண்ணின் ஈரமும் கலந்திருக்கின்றன. 
அந்த ஜன்னல் வழியே, 
நான் மீண்டும் பிறக்கிறேன்…” -என்று அந்த ஜன்னலை “கவிதை மற்றும் சுதந்திரம்” எனக் கூறுகையில், ராபிஆ அந்த ஜன்னலை “இறைவனின் திருமுகம்” என்கிறார். 

ராபிஆ, ஃபோரூக் ஆகிய இருவருக்குமே ‘உடல்’ என்பது வெறும் சதைப்பிண்டம் அல்ல; அது ஒரு தளம். ஆனால், அந்தத் தளத்தை அவர்கள் கையாண்ட விதம் நேர் எதிர்மறையானது.

ராபிஆவின் சூஃபித்துவப் பார்வையில், உடல் என்பது ஆன்மா தங்கியிருக்கும் ஒரு தற்காலிகக் கூண்டு. இறைவனுடனான ஒன்றிணைப்பிற்கு (Fana) உடல் சார்ந்த இச்சைகளும், லௌகீகத் தேவைகளும் பெரும் தடைகளாக அவர் கருதினார். பசி, உறக்கம், வலி போன்ற உடலின் மொழிகளை மௌனிக்கச் செய்வதன் மூலம் ஆன்மாவின் மொழியைப் பெருக்க முடியும் என்பது ராபிஆவின் வழி. 

“நான் ஒரு பெண்” என்ற உடல் சார்ந்த அடையாளத்தையே அவர் கடந்தார். சூஃபி மரபில் “ஆணாக மாறிய பெண்” என்று ராபிஆ போற்றப்படுவது, அவர் தனது பாலின அடையாளத்தைத் துறந்து ‘தூய ஆன்மாவாக’ நிலைபெற்றதைக் குறிக்கிறது. அவருக்கு விடுதலை என்பது உடலிலிருந்து ஆன்மா பெறும் விடுதலை.

ஃபோரூக்கிற்கு உடல் என்பது ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு நிலப்பரப்பு. நூற்றாண்டுகளாக ஆணாதிக்கச் சமூகம் பெண்ணின் உடலை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது மூடி மறைக்கப்பட வேண்டிய ‘பாவத்தின் ஊற்றாகவோ’ பார்த்தது. ஃபோரூக் அதைத் தலைகீழாக மாற்றினார்.

 உடலின் இச்சைகளை, ஸ்பரிசத்தை, வேட்கையை அவர் பாடியபோது, அது ஆபாசமாக அல்லாமல் ஒரு ‘இருத்தலியல் உண்மையின்’ வெளிப்பாடாக இருந்தது. “நான் ஒரு பெண், எனக்கு உடல் இருக்கிறது, அதற்கு உணர்வுகள் உண்டு” என்று பிரகடனப்படுத்தியதன் மூலம், மறைக்கப்பட்ட பெண்மையின் குரலுக்கு அவர் வடிவம் கொடுத்தார். அவருக்கு விடுதலை என்பது உடலின் வழியே அடையும் விடுதலை.

ராபிஆ ‘உடலைத் துறப்பதன்’ மூலம் அன்றைய மத நிறுவனங்கள் விதித்த சட்டங்களை உடைத்தார். ஃபோரூக் ‘உடலைக் கொண்டாடுவதன்’ மூலம் சமூகம் விதித்த தார்மீகச் சங்கிலிகளை உடைத்தார். இருவரும் தங்களைச் சுற்றியிருந்த அதிகார அமைப்புகளை நிராகரித்தனர். ராபிஆ உலகை நிராகரித்தார்; ஃபோரூக் உலக நியதிகளை நிராகரித்தார். ராபிஆவின் ‘இறைக்காதல்’ நரக பயத்தைப் பொருட்படுத்தவில்லை; ஃபோரூக்கின் ‘பாவம்’ சமூகத்தின் பழிச்சொல்லைப் பொருட்படுத்தவில்லை. இருவருமே அச்சமற்ற நிலை என்ற புள்ளியில் சந்திக்கிறார்கள். இந்த அச்சமின்மையே உண்மையான விடுதலை.

எனது வாழ்வின் ரகசியம் – ராபிஆ அல்-அதவியா

ஓ இறைவா!
எனது வாழ்வின் இரகசியமும்
என் இதயத்தின் அழியாத இன்பமும் நீயே.
என் ஆழத்தின் வேட்கையும் நீதான்;
என் அகத்தின் தாகம் தீர்க்கும் அருவியும் நீயே.
உலகில் உள்ள சகலப் பொருட்களையும்
உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்;
ஆனால், நீயோ—
அனைத்திற்கும் மேலான உன்னதப் பரிசு.
என் தனிமையின் இனிமையே!
நான் எங்குச் சென்றாலும்
உனது பேரொளி எனக்குத் துணையாக இருக்கிறது.
உன் நினைவுகள் மட்டுமே என் இதயத்தில்
இடைவிடாத நடனத்தை நிகழ்த்துகின்றன.
உன்னை நேசிப்பதை விட,
உன்னை அறிவதை விட,
எனக்கு வேறு என்ன பேரின்பம் இருந்துவிடப் போகிறது?
இந்த வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும்
உன் அருகாமையை உணர்வதே
என் இருப்பின் ஆகச்சிறந்த இரகசியம்.
ஜன்னல் – ஃபோரூக் ஃபாரோக்சாத்
எனக்கு ஒரு ஜன்னல் போதும்—
ஒரு ஜன்னல் மட்டுமே போதும்;
அதன் வழியே நான் உலகைப் பார்க்கிறேன்,
உலகம் என்னைப் பார்க்கிறது.
அந்த ஜன்னல் ஒரு திறப்பு;
வார்த்தைகள் வந்து விழும் ஒரு வெளி.
அங்கே சூரியன் தன் கரங்களை நீட்டி
என் அறையின் இருளைக் கலைக்கிறான்.
பறவைகள் பாடும்போது,
அந்த ஜன்னல் ஒரு இசைக் கருவியாகிறது.
மழை பெய்யும்போது,
அது என் கண்ணீரின் சாட்சியாகிறது.
வாழ்க்கை என்பது—
இந்தச் சிறிய ஜன்னலோரம் அமர்ந்து
காலத்தின் நதியைக் காண்பதுதான்.
இங்கேதான் நான் மீண்டும் பிறக்கிறேன்;
இங்கேதான் என் இருப்பு
ஆகாயத்தின் நீலத்தோடு கலக்கிறது.

(நீள் கவிதையான ஜன்னல் கவிதையிலிருந்து சில வரிகள்)

பழைய அடையாளங்கள் அழிந்து, ஒரு புதிய கவித்துவ ஆளுமையாகப் பிறப்பது என்பது ஒருவகையான ஆன்மீக ரசவாதம்தான். ராபிஆ மற்றும் ஃபோரூக் – காலம், மதம், வாழ்வியல் சூழல் என இவர்களுக்கிடையே பல நூற்றாண்டுகளும், முற்றிலும் மாறுபட்ட உலகங்களும் குறுக்கிடுகின்றன. ஒருவர் பாலைவனத்தில் இறைவனைத் தேடித் தவம் புரிந்தார்; மற்றொருவர் நவீன நகரின் இரைச்சலில் தன் அடையாளத்தைத் தேடிப் போராடினார். ஆனால், இவர்களுடைய ஆன்மாவின் வேட்கை ‘சுதந்திரம்’ என்ற ஒரே புள்ளியில் சங்கமிக்கிறது.

ராபிஆ இறைவனை “நீயே என் இதயத்தின் ரகசியம்” என்று அழைத்த அதே தீவிரத்தோடு, ஃபோரூக் தனது காதலையும் வாழ்வையும் அணுகுகிறார். ராபிஆவின் ‘இஷ்க்’ எனும் தத்துவத்தை ஃபோரூக் லௌகீக உலகிற்கு இடமாற்றம் செய்கிறார். ராபிஆவின் தீவிரமான மொழிநடை, ஃபோரூக்கின் கவிதைகளில் ஒரு நவீன ஆன்மீகத் தன்மையைத் தோற்றுவிக்கிறது.

ராபிஆவின் வாழ்க்கை அன்றைய ஆணாதிக்க மத போதகர்களுக்கு எதிரான ஒரு கலகம். ஃபோரூக்கின் கவிதைகளில் இருக்கும் ‘துணிச்சல்’, ராபிஆ போன்ற பெண் ஞானிகள் ஏற்படுத்தி வைத்த ‘பாரசீகப் பெண் கலக மரபின்’ தொடர்ச்சிதான். ராபிஆ எப்படி “சொர்க்கத்தின் மீதான ஆசை வியாபாரம்” என்று சாடினாரோ, அதே தொனியில் ஃபோரூக் சமூகத்தின் போலி அறங்களை எள்ளி நகையாடுகிறார். நிறுவனமயப்பட்ட அமைப்புகளை ஒரு பெண் கேள்வி கேட்கும் அந்த ‘ஆன்மீகத் துணிச்சல்’ ராபிஆவிடமிருந்து ஃபோரூக்கிற்குத் தடையின்றி கடத்தப்பட்டிருக்கிறது.

ராபிஆவின் கவிதைகளில் வரும் ‘ஒளி’ (Nur), ஃபோரூக்கின் கவிதைகளில் ‘ஜன்னல் வழியே வரும் சூரியனாக’ உருமாற்றம் பெறுகிறது. இருவருமே அறியாமை அல்லது சமூக ஒடுக்குமுறை என்னும் இருளுக்குள் ஒரு திறப்பைத் தேடுகிறார்கள். ராபிஆவின் ஆன்மீக ரசவாதம் (Alchemy), ஃபோரூக்கின் கவிதைகளில் மானுட உணர்வுகளின் ரசவாதமாகத் திரட்சியடைந்துள்ளது.

இறுதியில், இந்த இரு பெண் ஆளுமைகளும் உலகுக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்: “சமூகமோ, மதமோ அல்லது சம்பிரதாயங்களோ உங்களைச் சிறைபிடிக்க முயன்றால், உங்களது அகத்திற்குள் ஒரு ஜன்னலைத் திறந்து கொள்ளுங்கள்.”

ராபிஆ அந்த ஜன்னல் வழியே இறைவனின் பேரொளியைக் காண்கிறார்; ஃபோரூக் அதே ஜன்னல் வழியே தன் கவிதைகளுக்கான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறார். ராபிஆ ஒரு ஆதி-புள்ளி என்றால், ஃபோரூக் அதன் விரிவு. இருவரும் பார்த்தது ஒரே ஒளியைத்தான். அவர்கள் காட்டிய அந்த விளக்கு, இன்றும் சுதந்திரத்தைத் தேடும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.

அ.முனவர் கான் –  தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் முகவரி: amkhansrv@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here