கேட் சோப்பின்
தமிழில்: அருந்தமிழ் யாழினி
தன் கணவனுடைய நண்பரான கவர்னேயில் இரண்டு நாளோ அல்லது ஒரு வாரமோ அவர்களுடைய தோட்டத்தில் தங்கப்போகும் செய்தியறிந்ததிலிருந்து திருமதி பரோடா கொஞ்சம் கோபத்தோடு இருந்தார்.
குளிர்காலம் முழுவதும் விருந்தோம்பலிலும் பெரும்பாலான நேரம் நியூ ஆர்லீனிலும் கழிந்திருந்த காரணத்தால் இப்போது எந்த இடையூறும் இல்லாமல் தன் கணவனுடன் ஓய்வு நேரத்தை கழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கணவருடைய நண்பர் கவர்னேயில் இங்கு ஒரு வாரம் தங்கபோவதாய் சொன்னது அவருக்கு கோபத்தை வரவழைத்தது.
அந்த நண்பரைப் பற்றி நிறைய கேட்டிருக்கிறாளே தவிர அவரைப் பார்த்ததில்லை. அந்த நண்பர் கணவருடைய கல்லூரித் தோழன். இப்போது பத்திரிகையாளராக இருக்கிறார். நகரவாசியும் கூட. அந்த காரணத்தினாலே அவரை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. ஆனால் திருமதி பரோடா அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை தன்னுடைய ஆழ்மனதில் வரைந்து வைத்திருந்தாள். ஒல்லியாக, உயரமாக நம்பிக்கையற்ற கண் கண்ணாடியை போட்டுக்கொண்டு பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை வைத்துக்கொண்டு கற்பனை செய்யும் போதே அவரை இவளுக்கு பிடிக்கவே இல்லை. கவர்னெயில் கொஞ்சம் ஒல்லி தான் ஆனால் உயரமாகவோ நம்பிக்கையற்றவராகவோ இல்லை. கண்களில் மூக்கு கண்ணாடியோ பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளோ கூட வைத்திருக்கவில்லை. சொல்லப்போனால் முதலில் அவரைப் பார்க்கும்போது இவளுக்கு பிடித்திருந்தது.
அவரை எதனால் இவளுக்கு பிடித்திருந்தது என அறிய முற்படுகையில் கூட அவளால் அது சரியாக சொல்ல முடியவில்லை. அவளது கணவன் கேஸ்டன் சொல்லி இருந்ததைப் போன்ற அறிவாளித்தனமான நம்பிக்கைக்குறிய பண்புகள் எதுவும் அவரிடம் அவளால் கண்டறிய முடியவில்லை. மாறாக அவரை வீட்டில் இருப்பது போல் சௌகரியமாக உணர வைக்கும் வகையில் அவள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பேச்சிற்க்கும் இசைந்து கொடுத்தவராக கேஸ்டனுடைய வெளிப்படையான விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வது போன்று அமைதியாக இருந்தார். எந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணிடம் எதிர்பார்க்கும் அத்தனை குணநலங்களோடு அவர் இருந்தார். ஆனால் அவர் வெளிப்படையாக அவளுடைய அனுமதிக்காகவோ மதிப்பு பெற வேண்டும் என்பதற்காகவோ எதையும் செய்யவில்லை.
அந்த நிலத்தில் குடியேறிய பிறகு, அங்கிருக்கும் விரிந்த வராண்டாவில் எழுப்பப்பட்டிருக்கும் கொரிந்திய தூண்களுடைய நிழல்களின் கீழ் அலாதியாக அமர்ந்துக்கொண்டு கேஸ்டனினுடைய கரும்பு விவசாயம் பற்றிய அனுபவங்களை சிகரெட் பிடித்துக் கொண்டு கேட்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பெரிய கரும்பு தோட்டத்தின் வழியாக கதகதப்பான வாசனை மிக்க வெல்வட்டின் மிருதுவான தொடுதலை போன்று வரும் காற்றை அனுபவித்த வாரே “ இதுவல்லவோ வாழ்க்கை” என்று ஆழமான திருப்தியுடன் கூறினார். மேலும் அவரையே சுற்றி சுற்றி வந்த பெரிய நாய்களுடன் பழகுவது மகிழ்ச்சி தந்தது. அவை அன்பாக அவரின் கால்களை உரசிக்கொள்ளும். இப்போது அவருக்கு மீன் பிடிப்பதில் விருப்பமில்லை. கிரோஸ்பெக் பறவைகளை வேட்டையாட கேஸ்டன் அவரை அழைத்தப்போதும் அதில் பெரிய ஆர்வத்தையும் அவர் காட்டவில்லை.
திருமதி பரோடாவிற்கு கவர்னெயிலுடைய குணாதிசயம் விடுகதையாகவே இருந்தது. ஆனால் அவளுக்கு அவரைப் பிடித்திருந்தது. அவர் உண்மையாகவே அன்பானவராகவும் தீங்கற்றவராகவும் இருந்தார். அத்தனை நாளை அவள் அவரோடு சேர்ந்து கழித்தப் பிறகும் கூட முன்பு அவரைப் புரிந்து கொள்ள முடியாததை போலவே இப்போதும் இருந்தது. எனவே அவள் குழப்பம் அடைவதை விட்டுவிட்டு கோபத்தோடு இருந்தாள். இந்த மனநிலைக்காகவே அவளின் கணவனையும் வந்திருந்த விருந்தினரையும் தனியாகவே விட்டாள்.
தன்னுடைய எந்த செயல்களையும் கவர்னேயில் பெரிதாக ஈடுபாட்டு காட்ட வில்லை என்று அறிந்ததும் அவள் சில விஷயங்களை செய்யத் துவங்கினாள். அவரோடு சோம்பேறித்தனமாக ஆலைக்கு செல்வதும் நதிக்கரையோரமாக நடப்பதுமாக செய்து கொண்டிருந்தாள். அவரை அறியாமலேயே அவர் தன்னை சுற்றி உருவாக்கிக் கொண்டிருந்த கண்டு கொள்ளப்படாத அந்த மனநிலைக்குள் அவள் நுழைய தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.
உங்களுடைய நண்பர் எப்போது கிளம்புகிறார்? என அவளின் கணவரிடம் கேட்டாள். “என்னுடைய பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அவர் என்னை மிகவும் வெறுப்படைய செய்கிறார்”.
“அன்பே எனக்கு புரியவில்லை, அவன் வந்து ஒரு வாரம் தானே ஆகிறது. அவர் உனக்கு எந்த தொந்தரவும் தரவில்லை தானே?”
“இல்லை.. மற்றவர்களைப் போல அவர் அப்படி இருந்திருந்தால் எனக்கு அவரைப் பிடித்திருக்கும். அவருக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்திருக்க முடியும்.”
காஸ்டன் தன்னுடைய அழகான மனைவினுடைய முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி கொண்டு கவலை நிறைந்த அவளுடைய கண்களை கனிவோடு உற்று நோக்கினான். அவர்கள் மிக இயல்பாக திருமதி பரோடாவினுடைய அறையில் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
“நீ எப்போதும் ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறாய் என் அழகே. என்று அவன் அவளிடம் கூறினான்.
நீ எந்த சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்வாய் என்பதை என்னால் சில நேரம் கணிக்கவே முடியாது”, என அவளை முத்தமிட்டு கண்ணாடி முன் நின்று தனது கழுத்துப்பட்டையை சரி செய்ய திரும்பினார்.
“இங்கே பார் என் அன்பே”, என்று அவன் தொடர்ந்து கூறலானான். “நீ கவர்னெயில் பற்றி தேவையில்லாமல் கவலைப்படுகிறாய். அவன் பெரிதாக எதையும் எதிர்பார்க்கும் ஆளில்லை”.
“அவன் அப்படித்தான். நிறைய வேலை செய்து நொடிந்து போயிருக்கிறான் அதனால் தான் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக இங்கே வரச் சொன்னேன்.”
“அவர் நன்கு சிந்திக்க கூடிய மனிதர் என்று தானே சொன்னீர்கள் குறைந்தபட்சம் கொஞ்சமாவது சுவாரசியமானவராக இருப்பார் என்று எதிர்பார்த்தேன்”, என்று கவலை தோய்ந்த சமாதானமடையாதவளாய் கூறினாள்.
“சரி நாளை காலை நான் நகரத்துக்கு சென்று எனது வசந்தகால உடைகளை சரி செய்யப்போகிறேன். கவர்னேயில் இங்கிருந்து கிளம்பி விட்டால் எனக்கு தகவல் சொல்லுங்கள். நான் அத்தை ஆக்டேவின் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்”.
அன்று இரவு அவள் தனியாக நடந்து சென்று ஓக் மரத்தின் கீழ இருக்கக்கூடிய ஒரு நாற்காலியின் மீது அமர்ந்தாள். அவளுடைய நோக்கங்களும் எண்ணங்களும் இந்த அளவு குழப்பமாக இருக்கும் என அவள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அவற்றிலிருந்து பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்றாலும் அப்போது அவளுக்கு புரிந்த ஒரே விஷயம் காலையில் எப்படியாவது இந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான்.
அந்த கற்கள் நிறைந்த நடை பாதையில் யாரோ நெருங்கி வரும் காலடித்தட சத்தம் திருமதி பரோடாவிற்கு கேட்டது. அந்த இருட்டில் யார் என்று சரியாக கணிக்க முடியவில்லை சிகரெடினுடைய சிவப்பு கங்கு மட்டுமே தெரிந்தது. அது கவர்னேயில் என்று அவளுக்கு தெரிந்தது. ஏனென்றால் அவளது கணவன் சிகரெட் பிடிக்க மாட்டான். அவள் அங்கிருப்பது யாருக்கும் தெரிய கூடாது என்று நினைத்தாள். ஆனால் அவளுடைய வெள்ளை உடை அவளது இருப்பை காட்டிக் கொடுத்தது. அவர் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு அவளது அருகில் உட்கார்ந்தார், அவளுக்கு அங்கு உட்காருவது பிடிக்குமா பிடிக்காதா என்கிற உணர்வு கூட இல்லாமல் .
உங்களது கணவர் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார் திருமதி பரோடா என்று கூறி அவள் தலையையும் தோள்களையும் மூடிக்கொள்ள பயன்படுத்தும் மெல்லிய வெள்ளை துண்டை அவளிடம் கொடுத்தான். அவள் அதை முறுமுறுத்தவாறு நன்றி எனச் சொல்லி வாங்கி தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள்.
அந்த கால நிலையில் வீசும் இரவு காற்றின் அசாதாரணமானத் தன்மையை பற்றி தனது தெரிந்த விஷயத்தை அவன் கூறினான். கூறியவாறு அவனுடைய பார்வை இருளை நோக்கி சென்ற போது தனக்குத் தானே பேசிக் கொள்வது போல மெதுவாகப் பேசினான்.
“தெற்கில் வீசும் காற்றின் இரவு .. சில பெரிய நட்சத்திரங்களின் இரவு .. இன்னும் அசைந்தாடும் இரவு…”
இந்த இரவைப் பற்றிய அவனுடைய குறிப்புகளுக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. சொல்லப்போனால் அது அவளுக்காக சொல்லப்பட்டதும் இல்லை.
கவர்னெயில் நம்பிக்கை அற்ற மனிதரோ தன்னுணர்வுள்ள மனிதரோ அல்ல. அமைதி அவருடைய இயல்பு அல்ல. சூழ்நிலையின் மற்றும் மனநிலையின் வெளிப்பாடு. திருமதி பரோடாவிற்கு அருகில் அமர்ந்த தருணத்தில் அவருடைய அமைதி மெல்லக் கரைந்து போனது. அவர் சுதந்திரமாகவும் ஆழமாகவும் பேசினார். தயக்கம் நிறைந்த மதுவான அவருடைய குரல் கேட்க அவ்வளவு இனிமையற்றதாக இல்லை. அவர் காஸ்டனுடன் நெருங்கி பழகிய கல்லூரி நாட்களை பற்றி பேசினார். தீவிரமான தெளிவற்ற லட்சியங்களும் நோக்கங்களும் நிரம்பிய நாட்களைப் பற்றி பேசினார். இப்போது இந்த வாழ்க்கையினுடைய ஒழுங்கு அமர்வுகளை தத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை மட்டுமே எஞ்சியிருந்தது. வெறுமனே வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற ஆசை அதற்கிடையில் இப்பொழுது அவர் சுவாசித்துக் கொண்டிருக்கும் இவ்வாழ்வின் சுவை அவ்வப்போது கிடைத்தால் போதும் என்கிற மனநிலை.
அவர் கூறுவதை அவளது மனம் தெளிவற்றதாகவே உணர்ந்து கொண்டிருந்தது. அந்த கணத்தில் அவரின் மனதை விட அவளின் உடல் உணர்ச்சிகளே மேலோங்கி இருந்தது. அவன் கூறிய வார்த்தைகளைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை. அவரின் குரல் ஒலிகளை மட்டுமே அவள் பருகிக் கொண்டிருந்தாள். அந்த இருளில் தன் விரல்களை நீட்டி மெல்லிய தொடுதலால் அவரது முகத்தையோ உதடுகளையோ தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. அவனுக்கு நெருக்கமாக சென்று அவனுடைய கன்னத்தையொட்டி ஏதாவது கிசுகிசுக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால், அவள் ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக இல்லையெனில் அவள் அதை செய்திருப்பாள்.
அவரிடம் நெருங்க வேண்டும் என்கிற உணர்வு அதிகரிக்கும்போது அவரிடமிருந்து இன்னும் தூர விலகினாள். மரியாதைக் குறைவாக தோன்றாத அளவிற்கு அங்கிருந்து எழுந்து அவரை அங்கே தனியாக விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள். அவள் வீட்டை அடைவதற்கு முன்பாகவே கவர்னேயில் இன்னொரு சிகரட்டைப் பற்ற வைத்து இரவைப் பற்றிய அவனது குறிப்பை முடித்திருந்தான்.
திருமதி பரோடாவிற்கு அந்த இரவு அவளை ஆட்கொண்ட அந்த முட்டாள்தனத்தை குறித்து தன்னுடைய கணவரிடம் கூற வேண்டும் என்கிற ஆசை மேலெழுந்தது. அவளுடைய கணவன் சிறந்த நண்பன் என்றாலும் கூட அந்த ஆசைக்கு அவள் செவிமடுக்கவில்லை. மரியாதைக்குரிய பெண் என்பதை தாண்டி விவேகம் உள்ள பெண்ணும் கூட. வாழ்க்கையில் நிகழும் சில போராட்டங்களை மனிதர்கள் தனியாக தான் சந்திக்க வேண்டும் என்கிற தெளிவு அவளுக்கு இருந்தது.
கேஸ்டன் காலையில் எழுந்திருக்கும் போது அவனுடைய மனைவி ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டிருந்தாள். நகரத்திற்கு செல்லும் அதிகாலை தொடர் வண்டியில் ஏறியிருந்தாள். கவர்னேயில் அந்த வீட்டிலிருந்து கிளம்பும் வரை அவள் அந்த வீட்டிற்கு வரவே இல்லை.
அடுத்த கோடை விடுமுறைக்கு கவர்னேயிலை திரும்ப அழைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. கேஸ்டனுக்கு அவரை அழைப்பதில் விருப்பமும் இருந்தது. ஆனால் அவனது மனைவியினுடைய எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டது. எப்படியோ அந்த ஆண்டு முடிவதற்கு முன்பாகவே கவர்னேயிலை திரும்ப அழைக்கலாம் என்று முழு மனதாக அவள் சொல்லியதைக் கேட்க கேஸ்டனுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“அவர் மீது இருந்த வெறுப்பை நீ மாற்றிக் கொண்டதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனது அன்பே.. அவன் உண்மையில் அதற்கு தகுதியானவன் அல்ல”, என்று கேஸ்டன் கூறினார்.
ஆஹா என்று மகிழ்ந்தவாறு அவனது உதட்டில் நீண்ட முத்தத்தை பதித்துவிட்டு “நான் எல்லாவற்றையும் கடந்துவிட்டேன் நீங்கள் அதை பார்ப்பீர்கள். இந்த முறை நான் அவரிடம் நன்றாக நடந்து கொள்வேன்”.
கேட் சோப்பின் (Kate Chopin) (1850–1904) – அமேரிக்க சிறுகதையாசிரியர். பெண்ணியச் சிறுகதைகள்ளின் முன்னோடியாக கருதப்படுபவர்.
***
அ. அருந்தமிழ் யாழினி – சென்னையிலுள்ள தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், அகில இந்திய வானொலியின் RAINBOW FM 101.4 ல் பண்பலைத் தொகுப்பாளராகவும் இருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவர். மொழியாக்க முயற்சிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகிறார். மின்னஞ்சல்: aruntamilyazhiniaravindan@gmail.com

