காலன்

ஆர்.சங்கரநாராயணன்

உணவுக்கூடத்தின் புகை 

போர்க்களம் என்பது வீரர்களுக்கு மட்டுமல்ல.

போர்க்களத்தின் பின்னே ஒரு நெருப்பு தொடர்ந்து எரிகிறது. அது வாள்களின் ஒளியல்ல. நிறைவடையாத வயிறுகளில் எரியும் நெருப்பை நிரப்பும் அவிசு. மண் பானைகள் வரிசையாய் நிற்கின்றன. அரிசி அளக்கும் கைகள் நடுங்குவதில்லை . நடுங்க நேரமில்லை. வியர்வை முகத்தில் வழிகிறது, கழுத்தில் வழிகிறது, முதுகில் வழிகிறது. அந்த வியர்வை எந்த வீரகாவியத்தின் அடியிலும் இடம் பெறவில்லை. எந்தச் சூதரும் அதற்கு ஒரு பாடல் எழுதவில்லை. பாடல் வாளுக்கும் வில்லுக்கும், கதைக்கும், அவற்றை ஏந்தும் கைகளுக்கும் தான். அந்தக் கையின் வியர்வைக்கு அல்ல. வாளுக்குப் பின்னால் நிற்கும் உடலுக்கு அல்ல. அந்த உடலுக்கு உணவூட்டும் நெருப்புக்கு அல்ல.

அந்த நெருப்பின் ஆழத்தில் அவன் இருந்தான்.

அவனைப் போன்றவர்களுக்கு பெயர் இல்லை. பெயர் என்பது அதிகாரம். பெயர் என்பது ஆடம்பரம். பின்னொரு நாள் ஒரு பெயர் உருவாகும். காலத்தின் மண்ணிலிருந்து அது முளைக்கும். ஆனால் விதை முளைக்கும் முன்பு மண்ணுக்கு அடியில் இருட்டில் கிடக்கும்.

பாண்டவர் படையின் உணவுக்கூடம். ஆயிரக்கணக்கான வீரர்களின் பசியைப் பின்னாலிருந்து தாங்கும் நெருப்பு. அவன் அந்த நெருப்புக்குத் தண்ணீர் கொண்டு வருபவன். விறகு வெட்டுபவன். சாம்பலை வாரிச் சொரிபவன். உணவு தயாரிப்பவர்களுக்கு உதவி செய்பவன் — ஆனால் தயாரிப்பவன் அல்ல. உண்பவர்களுக்குச் சமைப்பவன் — ஆனால் உண்பவன் அல்ல.

இந்த இரட்டை விலக்கங்களின் நடுவில் அவன் நின்றான். அங்கே நிற்பதில் அவனுக்கு வியப்பு இல்லை. பிறந்தது முதல் அந்த இடமே அவன் இடம். இடைவெளிகளில் வாழும் ஒரு இனம் உண்டு. வரலாறு முழுவதும் அந்த இனத்திற்கு எந்தவிதமான அங்கீகாரமும் இல்லை.

ஒரு எள் விதை மண்ணுக்கு அடியில் விதைக்கப்படும்போது அது இருட்டை அறியும். குளிரை அறியும். மண்ணின் அழுத்தத்தை அறியும். முளைவிடும் என்று தெரியும். ஆனால் எந்தப் பருவமழையில், எந்தக் காலை வெளிச்சத்தில், எந்தப் பூமியின் வெடிப்பில் என்று தெரியாது. தெரியாமலேயே பொறுத்திருக்கும். பொறுமை என்பது பலவீனமல்ல. அது விதையின் ஆயுதம்.

விடியற்காலையில் நெருப்பு மூட்டும்போது புகை கண்களைச் சூழ்ந்து கொள்ளும்.

அவன் இமை மூடமாட்டான். புகையை நேருக்கு நேர் பார்ப்பான். புகை அவனுக்குப் பழகிய துன்பம். உலைக்களத்தின் கண்ணீர். அவனை வாட்டும் முன்னமே அவன் அதனுள் புகுந்துவிடுவான் . ஒரு தேர்ந்த நீச்சல்காரன் அலையின் அடிவாரத்தில் நுழைவதுபோல் புகையின் அடியில் நுழைவான். வலியை எதிர்கொண்டு, அங்கேயே உறைந்து, மௌனமாய் அதை வழியனுப்பும் திறமை. இந்தத் திறமைக்கு யாரும் பெயர் வைக்கவில்லை. கவிதை வாளின் வீச்சுக்கு எழுதப்படும். நெருப்பின் முன் நிற்கும் இமைகளுக்கு அல்ல. வேதியர் வளர்க்கும் யாகத்திற்கும் இந்த நெருப்பிற்கும் வேறுபாடு இல்லை.

துரோணரின் குருகுலத்தில் எத்தனையோ பருவங்கள் அவன் இருந்தான். பாத்திரம் கழுவும் கைகள். விறகு அடுக்கும் தோள்கள். நதிக்குச் சென்று திரும்பும் கால்கள். சமையல்காரர்களுக்கு ஏவலன். ஒரு நிழலுக்குள் இன்னொரு நிழல்.

சத்திரிய மாணவர்கள் அவனைக் கடந்து செல்கையில் அவர்கள் கண்கள் வெறுமையாய் இருக்கும். ஒரு கருவியைப் பார்ப்பதுபோல், சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள் போல் அந்தப் பார்வை இருக்கும். ஒரு கருவிக்கு விழிகள் இருக்காது. ஒரு கருவிக்கு நினைவு இருக்காது. ஒரு கருவிக்கு வலி தெரியாது.

அவனுக்கு விழிகள் இருந்தன. மிகக் கூர்மையான விழிகள். பார்த்து, பதித்து, புதைத்து வைக்கும் விழிகள். உள்ளே ஒரு களஞ்சியம் வளர்ந்து கொண்டிருந்தது. வருடங்களாய்ச் சேர்த்த செல்வங்கள் அதில் குவிந்தன. அந்த விழிகள் பார்த்த ஒவ்வொன்றும் உள்ளே ஒரு விதையாக மாறியது. விதை என்பது முடிவல்ல. காத்திருத்தல்.

குருகுலத்தின் மண்

அதிகாலை. பொழுது வெடிக்கும் தருணம்.

குருகுலத்தின் முற்றத்தில் வழக்கமான புழுதி கிளம்பிக் கொண்டிருந்தது. நாள்தோறும் கிளம்பும் புழுதி. வழக்கமான காலை. வழக்கமான நிசப்தம்.

அப்போது முதலில் வந்தது ஒரு நிழல்.

கிழக்கு வாசலில் நீண்ட கருமையான நிழல் தரையில் படர்ந்தது. கதவின் மேல் சட்டத்தை அந்த நிழலின் தலை தொட்டது. ஒரு கணம் நின்றது. பின் உயரம் மேலும் நீண்டது. நிழல் மட்டும் வந்தது. நிழலுக்குப் பின் உடல் வந்தது.

அவன் உள்ளே வந்தான்.

அவன் வெறும் உடல் அல்ல. அந்தத் தோற்றம் நீண்டு வளர்ந்த உறுதியான காஞ்சிர மரம் கைகளை விரித்து நின்றது போல இருந்தது. உயரம் வெறும் அளவு மட்டுமல்ல, அது ஒரு பிரகடனம். அவன் நிறம் மைக்கருப்பு. சூரிய ஒளியில் அவன் தேகம் மின்னின. அலைபாயும் அந்தக் கண்கள் அடர்ந்தவை, ஆழமானவை. அவனை நெருங்கும் ஒளிக்கதிர்கள் கருமைக்குள் ஒரு மங்கிய செம்மை இருப்பதைக் காட்டின. எங்கோ ஆழத்தில் எரிந்து கொண்டிருக்கிறான். மேலே அடங்கிய கொதிப்பு ஒரு எரிமலையின் மேற்பரப்பில் தெரியாது. ஆனால் உள்ளே இருப்பதை உடல் உணரும்.

அவன் நடந்தான். காற்று சிறிது பக்கவாட்டில் விலகியது. கண்ணுக்குத் தெரியாத காற்று எங்கும் உள்ளது. ஆனால் அந்த நடை காற்றையும் நகரும்படி செய்தது. அந்த மனிதனைக் கடந்து செல்லக் காற்றுக்கும் ஒரு தயக்கம் தோன்றியது.

துரோணர் நிமிர்ந்தார். கண்கள் வந்தவன் மீது பதிந்தன. ஒரு சிறிய அதிர்வு. உள்ளே ஒரு குளம் போன்ற ஆழம் இருப்பதை உணர்ந்தார். ஆனால் உடனே ஒரு மதில் எழுந்தது. குலம் என்னும் மதில். அதைத் தாண்டிப் பார்க்கும் மரபு இல்லை. மரபை மீறிய எதுவுமே இந்தப் பாரதவர்ஷத்தில் இல்லை.

“குலம் என்ன?”

குரல் நடுநிலையானது. ஆனால் “குலம்” என்ற சொல் மட்டும் சவுக்கின் முனைபோல் வந்து விழுந்தது.

அவன் பதில் சொன்னான்.

என்ன சொன்னான் என்று விவரிக்க வேண்டியதில்லை. சொல்ல அனுமதிக்கப்படாத ஒன்று. சொன்னாலும் மண்ணில் முளைக்க மறுக்கப்படும் ஒரு விதையின் பெயர்.

துரோணர் கேட்டார். தலையை மெதுவாய்த் திருப்பிக் கொண்டார். பின், திரும்பி நடந்தார். வார்த்தை எதுவும் பேசவில்லை. ஆனால் ஒரு முழுப் பேருரையை விடப் பெரிய மறுப்பு அந்த முதுகில் இருந்தது. சமையலறை வாசலில் நின்று கொண்டிருந்த பெயரில்லாதவன் அந்த முதுகைப் பார்த்தான்.

அது அவனுக்கு மிகவும் பழக்கமான ஒரு குரல். ஒரு கருவிக்கு வார்த்தைத் தேவையில்லை. உயர்குல வாசல்களில், வரவேற்பறைகளில், கேள்வி கேட்கும் தருணத்தில், உதவி கோரும் நேரத்தில் — பதில் இந்த முதுகே. வாழ்நாள் முழுக்க அவன் எத்தனையோ முதுகுகளைப் பார்த்திருந்தான். ஒவ்வொரு முதுகும் ஒரே கதை சொன்னது — நீ இல்லை. நீ வேண்டாம். நீ இங்கே வர முடியாது.

வந்தவன் சில கணங்கள் அப்படியே நின்றான்.

ஒரு மரம் வெட்டப்பட்ட பின்னும் உடனே விழுவதில்லை. வெட்டிய கோடரி விலகும். ஒரு இடைவெளி. அந்தக் கணத்தில் மரம் தான் நின்று வாழ்ந்த வருடங்கள் முழுவதையும் ஒரே சுவாசத்தில் சேகரிக்கும். படர்ந்த கிளைகளை. தழுவிய மழையை. வேரின் ஆழத்தை. பின் மிக மெதுவாய், அல்லது மிக வேகமாய், நிலத்தை நோக்கிப் பயணம் தொடங்கும். அந்த இடைவெளி அவனுக்கு வந்தது.

சுற்றும் மாணவர்கள். சிலர் ஏளனப் பார்வை. சிலர் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அர்ஜுனன் மட்டும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. இது அவனுக்குப் பொருட்டல்ல என்று காட்டிக் கொண்டான். அல்லது உண்மையிலேயே பொருட்டல்ல.

அவன் திரும்பினான். முகம் தெரியவில்லை. ஆனால் கழுத்தின் பக்கவாட்டுத் தசைகள் இறுகியிருந்தன. வலது கை விரல்கள் சிறிது நடுங்கியிருக்கலாம். அந்தச் சிறு அசைவுகள் மட்டுமே தெரிந்தன — முகத்துக்குப் பதிலாக அவை உண்மையைக் கூறின.

முற்றத்தைக் கடந்து, வாசலை நோக்கி அவன் நடந்தான். காலடித் தடங்கள் மழைக்கால மண்ணில் ஆழமாய்ப் பதிந்தன. அழுந்திய இடங்களில் நீர் கசிந்தது.

பெயரில்லாதவன் அந்தக் காலடித் தடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். கையில் மண்பானை இருந்தது. அதை உடைக்காத தூரத்தில், ஆனால் உடைத்துவிடக்கூடிய அழுத்தத்தில் இறுக்கிப் பிடித்திருந்தான். உள்ளே திரண்டிருந்த ஒரு வலி உடலின் ஒரு பகுதியில் தங்கி இளைப்பாற அந்த அழுத்தம் வேண்டியிருந்தது. பானை வெடிக்கவில்லை. மண்ணால் ஆனது. மண் தாங்கும். மண்ணால் ஆனவை எல்லாவற்றையும் தாங்கும்.

இரவு இருள் குருகுலத்தை மூடியிருந்தது. மாணவர்கள் உறங்கும் வேளை. ஆசிரியர் குடிலில் விளக்கு அணைந்து வெகு நேரமாகிவிட்டது. அந்த நிசப்தத்தில் ஒரு உருவம் வந்தது.

கருப்பு நாய். ஒல்லியான உடல் — ஆனால் அதன் உயரம் சராசரி நாய்களை விடப் பெரியது. விலா எலும்புகள் தோலுக்கு அடியில் அசைவது தெரிந்தது. ஆனால் உடலின் மெலிவைப் பார்த்து அதன் முழு இருத்தலைக் கணிக்க முடியாது.

காரணம் கண்கள்.

அந்தக் கண்கள் தேங்கிய இரு குளங்கள் போல இருந்தன. மேலே அமைதி. உள்ளே நீரின் நினைவு. நிரம்பியிருக்கும் ஒரு நீர்நிலை எப்படி இருக்குமோ அப்படி.

வாசலில் வந்து படுத்துக் கொண்டது.

ஏவலர்கள் கற்கள் வீசி விரட்டினார்கள். நாய் எழுந்து போனது. சிறிது நேரம். பின் மீண்டும் வாசலின் அதே இடத்தில் வந்து படுத்தது. மாற்று வாசல் இல்லை. மாற்று உலகம் இல்லை.

பெயரில்லாதவன் தொலைவிலிருந்து பார்த்தான். இந்த நாயும் நானும் ஒரே எல்லையில் நிற்கிறோம். வாசலுக்குள் நுழைய முடியாது. வெளியேயும் இடமில்லை. இடையே. எல்லைக்கோட்டின் மீது. தீட்டானவன். தீட்டான விலங்கு. இருவரும் ஒரே இடத்தில்.

நள்ளிரவு. எல்லோரும் உறங்குகின்றனர். தூக்கம் வராத அவன் எழுந்து வெளியே வந்தான். கொட்டடிக்கு அருகே கிடந்த பழைய மரத்துண்டில் நாய் சுருண்டு படுத்திருந்தது. அவன் மெதுவாய் நடந்து சென்று சற்றுத் தள்ளித் தரையில் அமர்ந்தான்.

நாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தது.

அந்தக் கண்கள்.

அந்தக் குளங்கள் அவனுக்குள் நுழைந்தன. யுகங்களைக் கடந்த காலம் . வர மறுத்த காலமும், வந்து கடந்த காலமும், இப்போது நிகழும் காலமும் ஒரே சமயத்தில் கலந்து நிற்கும் விழிகள். எல்லா முதுகுகளையும் பார்த்த கண்கள். எல்லா கற்களையும் ஏற்ற தோல். எல்லா வாசல்களுக்கும் வெளியே நின்ற கால்கள்.

காலம் அந்தக் கண்களில் இருந்தது. அந்த கண்களின் மொழிக்கு வார்த்தைகள் இல்லை.

பாண்டவர் படையின் புகை

குருகுலத்தில் கண்ட கருப்பு நாய் அவ்வப்போது மாலை வேளையில், ஒரு நதிக்கரையில், ஒரு சுடுகாட்டின் ஓரத்தில், எதிர்பாராத திக்கில் என மீண்டும் தோன்றும். வாழ்க்கையின் இடுக்குகள் வழியே அதன் வருகை நெய்யப்பட்டிருந்தது. ஒரு நூல் போல. அந்த நூலை யாரோ பிடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

குருகுலத்தை விட்டு அவன் வெளியேறினான்.

ஓடுகின்ற நீர் கல்லைத் தேய்ப்பதுபோல் நாள்கள் மனிதனின் நிலையை மாற்றுகின்றன. மாற்றத்தின் தருணம் தெரியாது. அதன் விளைவு மட்டுமே தெரியும். ஒரு காலை அவன் வாசலை விட்டு வெளியே நடந்தான். திரும்பவில்லை. வாசலின் இந்தப் பக்கம் என்று இனி ஒன்றில்லை என்பதை அவன் உணர்ந்தான்.

நெடிய வழிகள். பல வேலைகள். ஆனால் எல்லாம் ஒரே தாழ்வரைக்குள். நெருப்பு, விறகு, நீர், உணவுத் தயாரிப்பின் வியர்வை. இவையாவும் அவன் வாழ்வின் மாறாத நேர்க்கோடுகள்.

யுத்தம் வரும் என்பது காற்றிலேயே தெரிந்தது. பறவைகள் வழக்கத்துக்கு மாறான பாதையில் பறந்தன. மண் ஒரு வித்தியாசமான மணத்தை வெளிப்படுத்தியது. அது விசும்பு திறந்து வரும் முதல் துளியை வாங்கிக் கொண்ட மண்ணின் வாசனை அல்ல. இது பாதாளம் எரிந்து வரும் புகை மணம். மழை வரும் முன்பு வானம் நிறம் மாறுவதுபோல், மொத்த நிலத்தின் முகமும் மாறியிருந்தது. நிலத்துக்கும் ஒரு முகம் இருக்கிறது. அது போர் வரும் முன்பு வேறுவிதமாக இருக்கும்.

சத்திரியப் படைகள் எல்லாத் திசைகளிலும் நகரத் தொடங்கின. தேர்கள். யானைகள். குதிரைகள். காலாட்கள். பேரிகை ஒலிகள் இரவின் நிசப்தத்தில் எட்ட வந்தன. ஒரு பிரம்மாண்டமான மரணத்துக்கான முன்னொலிகள்.

யுத்தம் சத்திரியர்களுக்கானது. ஆனால் சூத்திரர்களுக்கும் பணி இருந்தது. விறகு வெட்டுவதில் ஒரு வேகம், மலை நீரைச் சுமந்து வரும் சகிப்புத்தன்மை, பெரும் பானைகளைத் தலைக்கு மேல் தூக்கி வைக்கும் வலிமை, ஒரே சமயத்தில் ஐந்து அடுப்புகளைக் கண்காணிக்கும் கவனம் — இந்தத் திறமைகளுக்கு வம்சாவழி கேட்கப்படவில்லை. பசிக்குக் குலம் தெரியாது. நெருப்புக்குச் சாதி தெரியாது.

***

போர் தொடங்கியது.

பதினெட்டு நாட்கள்.

விடியற்காலையில் சங்கொலிகள். நெடுநேரம் கழித்து முதல் அம்பின் சத்தம். பின் மொத்தப் போர்க்களமும் இடிமுழக்கம்போல் எழும். இடையில் செய்திகள் பறவைகள்போல் பின்புறம் பறந்து வரும்.

அவன் கேட்பான். கேட்டுக்கொண்டே வேலை செய்வான்.

“பிதாமகர் வீழ்ந்தார்.”

அவனுக்குப் பெரிதாக எந்தச் சலனமும் இல்லை.

பின் — “துரோணர் வீழ்ந்தார்.”

செய்தி உணவுக்கூடத்தின் புகை வழியே வந்தது. அவன் கைகளில் விறகு வெட்டும் கோடரி விறகில் இறங்கியது. இரண்டு துண்டுகள். மூன்றாவது விறகை எடுத்தான். அடுத்த வெட்டு.

துரோணரின் முதுகு இப்போது மண்ணில் கிடக்கிறது. முதுகு மண்ணில் கிடந்தால் முகம் கீழே இருக்கும். யாரையும் நிராகரிக்க முடியாத நிலை. தரையே அவரை ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்க மறுத்தார்கள். தரை மறுக்காது.

கோடரி மேலே ஏறி இறங்கியது.

மூன்று நாட்கள் கழிந்தன.

“கர்ணன் இறந்தான்.”

செய்தி வந்தது.

கோடரி நின்றது.

மேலே தூக்கிய கை அப்படியே நின்றது. சூரியன் நண்பகலில் எரிந்து கொண்டிருந்தது. அவன் முகத்தில் வியர்வை. அடுப்பின் சூடு. ஆனால் இந்த நிறுத்தம் வெப்பத்தால் அல்ல.

கர்ணன். குருகுலத்தில் திரும்பி நடந்த மனிதன். காற்று விலகி வழிவிட்ட நடை. கழுத்தின் இறுகிய தசைகள். மழைக்கால மண்ணில் ஆழமாய்ப் பதிந்த காலடித் தடங்கள்.

விழுந்தான்.

மரம் வெட்டப்படும்போது கோடரியின் முனை பட்டவுடன் மரம் உடனே விழுவதில்லை. ஒரு இடைவெளி. அந்தக் கணத்தில் மரம் தான் வாழ்ந்த எல்லாக் காலங்களையும் ஒன்றாய்ச் சேகரித்து, நின்ற நிலத்தையும், படர்ந்த கிளைகளையும், தழுவிய மழையையும், வேரின் ஆழ ஞாபகங்களையும் ஒரு முறை தொட்டுப் பார்க்கும். பின் விழும்.

அந்த இடைவெளி இப்போது அவனுக்கு வந்தது. கோடரியை இறக்கவில்லை. மேலே தூக்கிய கை அப்படியே தங்கியது. நண்பகல் வெயில் அதன் மீது விழுந்தது.

“வில்வித்தையில் அவனுக்கு நிகர் யாருமில்லை” செய்தி சொன்னவன் தொடர்ந்தான். உணவுக்கூடத்தில் இன்னொருவர் சொன்னார். மூன்றாமவர் சொன்னார்.

இப்போது சொல்கிறார்கள் அவன் தன்னிகரற்றவன் என்று.

கோடரி மீண்டும் அசைந்தது. விறகு வெடித்தது. நெருப்பு எரிந்தது. சோறு பொங்கியது. வீரர்களின் பசிக்கு உணவு தயாரானது. யுத்தம் தொடர்ந்தது.

நாயின் மொழி

பதினெட்டாவது நாளின் சூரியன் மறைந்தபோது குருக்ஷேத்திரம் ஒரு பேரமைதியில் மூழ்கியது. ஊழ் யாருடைய கை வழியாக இறங்கி போயிருக்கிறது என்று தெரியவில்லை.

சங்குகள் ஓய்ந்தன. வாள்கள் அடங்கின. கூக்குரல்கள் காற்றில் கரைந்தன. எஞ்சியது மௌனம். அந்த மௌனம் வெறுமையல்ல — அது நிரம்பியிருந்தது. இறந்தோரின் மூச்சுகளால் நிரம்பியிருந்தது.

இரவில் உணவுக்கூடத்தின் கடைசி அடுப்பும் அணைக்கப்பட்ட பின் அவன் குருக்ஷேத்திரத்தின் விளிம்பை நோக்கி நடந்தான்.

கால்களுக்கு அடியில் உடைந்த தேர்களின் பாகங்கள். காய்ந்த குருதி மண்ணில் கரும்புள்ளிகளாய். ஓரிடத்தில் சிதைந்த கொடி. மற்றோரிடத்தில் ஒரு கேடயம் உடைந்து நிலவொளியைப் பிரதிபலித்தது. தொலைவில் சில நெருப்புகள் எரிந்தன. இறந்த உடல்களை எரிக்கிறார்கள். சடங்குகள். மந்திரங்கள். சத்திரியன் சூத்திரனை எரிக்கிறானா, சூத்திரன் சத்திரியனை எரிக்கிறானா — இந்த நெருப்பில் வித்தியாசம் தெரியாது. நெருப்பு பேதம் அறியாது.

நிலத்தில் எலும்புகள்.

வெண்மையானவை. கருமையானவை. முழுமையானவை. உடைந்தவை. எல்லாம் மண்ணுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.

அவன் கீழே பார்த்தான். ஒரு எலும்பு. வேறொரு எலும்பு. யாருடையவை? பெயருள்ளவர்களுடையதா, பெயரில்லாதவர்களுடையதா? உயர்குலத்தினரது என்று, கீழ்குலத்தினரது என்று?

மண்ணுக்குத் தெரியாது. மண் யாரிடமும் விவரம் கேட்பதில்லை. மண் தன் வேலையைச் செய்கிறது. விதை முளைக்கிறது. மண்ணுக்கு முன்னால் உயர்வு தாழ்வு என்பது வெறும் மேற்பரப்பின் மாயம்.

அந்த நிசப்தத்தின் விளிம்பில் இருளிலிருந்து ஒரு உருவம் பிரிந்து வந்தது.

கருப்பு நாய்.

குருகுலத்தின் இரவுகளில் சந்தித்த அதே நாய். ஆண்டுகள் வழிந்தோடியிருக்கின்றன. நாய் மாறவில்லை . அதன் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாய்க்குக் காலம் வேறு விதமாய் நகர்கிறது. அல்லது நாய்க்குக் காலமே இல்லை. அல்லது நாயே காலம்.

அது அவன் அருகே வந்து மெதுவாய் உடலை அவன் வலது கால் பக்கமாய்ச் சேர்த்துப் படுத்துக் கொண்டது.

அந்தக் கண்கள் அவன் இதுவரை காணாத ஒன்றைச் சொல்லும் வகையில் இருந்தன.

அந்த விழிகளுக்குள் இந்தப் பதினெட்டு நாட்களும் இருந்தன. துரோணரின் திரும்பிய முதுகு. கர்ணனின் விழுந்த நிழல். குந்தி தேவி தனியே நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி. சத்ரிய படைகளில் இருந்த ஒவ்வொரு முகமும் அலைகளாய் மிதந்தன. மொத்தக் குருக்ஷேத்திரமும் ஒரு நொடியில் கரைந்து மறைந்தது.

நாய் ஓசை எழுப்பியது.

அது குரைப்பு இல்லை. அலறல் இல்லை. அது ஒரு மெல்லிய, ஆழ்ந்த ஒலி. நெஞ்சின் கூட்டுக்குள் நுழைந்து எலும்புகளில் ஊடுருவும் ஒலி. காதுகள் கேட்கவில்லை. இருதயம் கேட்டது. உடல் கேட்டது.

அவன் உணர்ந்தான். உள்ளே வார்த்தைகள் உருவாகின. அவை நாயின் குரலில் இருந்தன அல்லது அவனது உள்ளத்தின் ஆழம் அந்த நாயின் மூலமாகப் பேசியது. எப்படியும், பொருள் ஒன்றுதான்.

“பார்.

முப்பத்தாறு அக்ஷௌகிணிகள். சத்திரியம் முடிந்தது. வாள் சுமப்பார் யாருமில்லை. தேசத்தைக் காப்பவர் யார்? வீரம் என்னும் தொழில் இனி ஒரு வெற்றிடம். வெற்றிடத்தைக் காற்று நிரப்பும். இனி இந்த வெற்றிடம் வாசலுக்கு வெளியே நிற்பவர்களால் நிரப்பப்பட வேண்டும். முதுகை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் இதுவரை காத்திருந்தார்கள்.

காத்திருப்பது வேறு ஒன்றுமில்லை — அது ஒரு தகுதி. விதை மண்ணில் கிடந்து காத்திருப்பதைப் போல். அந்தக் காத்திருத்தலே அதன் வலிமை. அடைபட்ட காற்றைப் போல் வலிமையானது வேறொன்றும் இல்லை.”

அந்த வார்த்தைகள் காற்றில் கரையவில்லை. அவன் உடலுக்குள் இறங்கின. எலும்புகளுக்குள். இரத்தத்துக்குள். விதை மண்ணில் விழுவதுபோல்.

புதிய உலகு

யுதிஷ்டிரன் அரசவையில் விவாதம் தொடங்கியது.

குருக்ஷேத்திரத்தின் சாம்பலும் புகையும் இன்னும் முற்றாய் மறையவில்லை. ஆறுகளில் குருதி வற்றியிருந்தது. விதவைகளின் வெண்மை விரவிய நகரங்கள். ஆனால் யுதிஷ்டிரர் முடிசூடிய நாள்முதல் ஒரு கேள்வி பிறைபோல் மேலே எழும்பிக் கொண்டே இருந்தது.

தேசத்தைக் காப்பவர் யார்?

வாளெடுக்கச் சத்திரியர் இல்லை. முப்பத்தாறு அக்ஷௌகிணிகள் மண்ணுக்குள் போயின. எஞ்சியவர் சிலரே. தேசத்தின் எல்லைகள் நீண்டிருந்தன. பாதுகாப்பு என்பது வெறும் சுவர் இல்லை.

புதிய வீரர்கள். புதிய குலம். புதிய உதிரம்.

அந்தணர்களுக்கு ஏற்பு இல்லை என்றாலும், புதிய சத்திரியர்கள் உருவாகியே தீர வேண்டும்.

“வாள் பிடிப்பவன் சத்திரியன். குலம் இனித் தொழிலில் தங்கும். உதிரத்தில் அல்ல.”

*

காலன் வெட்ட வெளியில் நின்றான்.

குருக்ஷேத்திரத்தின் ஒரு விளிம்பு. போர் முடிந்து பல திங்கள் கடந்திருந்தாலும் இன்னும் காற்றில் புழுதி. எரிந்த மணத்தின் எச்சம். ஆனால் வட்டமிடக் கழுகுகள் இல்லை — விண் வெறும் விண்.

அவன் முன்னால் தரையில் ஒரு வில்.

யாருடையது? தெரியாது. கர்ணனுடையதா? வேறு யாருடையதாவது? யாருடையது என்பது பொருட்டல்ல. வில் என்பது வில். அம்பு என்பது அம்பு. தொழில் என்பது தொழில். குலம் என்பது — இனி — தொழில் மட்டுமே.

அவன் குனிந்து எடுத்தான்.

வில் கையில் அமர்ந்தது. நாண் விரல்களைத் தொட்டது.

விறகு உடைத்துக் காய்ந்திருந்த கைகள் அவை. குருகுலத்தின் இரவுகளில் எல்லோரும் உறங்குகையில் ஒரு குச்சியை வில்போல் பிடித்து நிலவைக் குறிவைத்த கைகள் இவை. யாரும் பார்க்காத வேளை. யாரும் அறியாத பயிற்சி. எந்தச் சான்றும் வேண்டியதில்லை — உடம்பின் ஞாபகமே போதும். கை மறக்கவில்லை.

நாணை இழுத்தான். வில் வளைந்தது.

வெற்று வானத்துக்கு எதிரே அம்பு ஒரு புள்ளியை நோக்கியது. குறி தெரியவில்லை — ஆனால் காலன் கண்கள் மூடவில்லை. அவன் வானத்தைப் பார்த்தான். அந்த வெற்று வெளியில் அவன் கண்களுக்கு ஒன்று தெரிந்தது.

கர்ணனின் காலடித் தடங்கள். மழைக்கால மண்ணில் ஆழமாய்ப் பதிந்த அந்தத் தடங்கள் — இப்போது வானத்தில். ஒரு பாதை. யாரோ ஒருவர் முன்பே நடந்து சென்ற பாதை. அந்தப் பாதையில் இப்போது இவன் நடக்க வேண்டும்.

தன் இலக்கு என்ன என்பதை கண்டு கொண்டான்.

நாணை விட்டான்.

அம்பு புறப்பட்டது. காற்றைக் கிழித்தது. வானில் மறைந்தது. எங்கே சென்றது என்று தெரியவில்லை. ஆனால் கை சரியாகப் பிடித்திருந்தது. உடல் சரியாக நின்றிருந்தது. விழிகள் சரியாகக் குறிவைத்திருந்தன.

காற்றில் ஒரு மாற்றம். பழைய வரிசைகள் கரையத் தொடங்கின.

விதை முளைத்தது.

நாய் அவன் பக்கத்தில் நின்றது. அசைவில்லாமல் காலத்தின் சாட்சியாக. அது குரைக்கவில்லை. அசையவில்லை. நின்றது.

அவன் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். குருக்ஷேத்திரத்தின் வானம் வேறாயிருந்தது. சாம்பல் நிறம் மெதுவாக விலகி ஒரு இளம் நீலம் திரும்பிக் கொண்டிருந்தது. மேகங்கள் கலைந்து வெறுமைக்குப் பதில் ஒரு சுத்தமான வெளி.

அந்த வெளியில் அவனும் இருந்தான். இப்போது.

நாய் மீண்டும் அந்த ஒலியை எழுப்பியது. வார்த்தையற்ற பெயர். காற்று அதை அருகே இருந்த புதர்களுக்குக் கடத்தியது. புழுதி எழுந்து கடந்து சென்றது.

காலன்.

***

மண் எல்லாவற்றையும் நினைவில் கொண்டது.

விதை விழுந்த இடம். வேர் இறங்கிய திசை. இருளில் கழிந்த பொறுமை. முதுகு காட்டிய நாட்கள். கோடரி நின்ற கணம். வில் கையில் அமர்ந்த நொடி.

மண் எல்லாவற்றையும் அறியும். ஆனால் மண் யாரிடமும் சொல்வதில்லை. மண்ணின் மொழி ஒன்றே ஒன்றுதான் — முளைத்தல்.

காலம் வரும்போது மண் தன் கதவைத் திறக்கும்.

காலன் நடந்தான். வில் கையில். நாய் பின்னால். குருக்ஷேத்திரத்தின் மண் அவர்கள் கால்களை அடையாளம் கண்டுகொண்டது.

இது தொடக்கம்.

***

ஆர்.சங்கரநாராயனன் – தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர். பணி நிமித்தமாக மும்பையில் வசித்து வருகிறார். 10 வருடங்களுக்கும் மேலாகத் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன் . 2017 ல் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர் நீலபத்மநாபன் அவர்களின் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிதைக்கு வழங்கப்படும் “தலைமுறைகள் “ விருது எனது “மாயவிதைகள் என்ற கவிதைக்கு கிடைத்து. தொடர்ச்சியாக சிறுகதைகள், கவிதைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: rbisankar2009@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here