Homeஇதழ்கள்2026 இதழ்கள்விமர்சனக் கலை

விமர்சனக் கலை

கிருஷ்ணமூர்த்தி

தீவிர தமிழிலக்கிய வாசகர்களுக்கு விமர்சனக் கலை க. நா.சு வின் நூலை நினைவூட்டும். படைப்பை ஆணுகுவதற்கான எண்ணற்ற வாசலை அந்த நூலில் சுட்டிக்காட்டியிருப்பார். கலை இலக்கியத்திலும், சமூகவியல் வாழ்விலும் விமர்சனம் அத்தியாவசியமான ஒன்றாகிறது. பெரும்பாலான நேரங்களில் குறைகளைச் சுட்டுவது மட்டுமே விமர்சனமாகக் கருதப்படுகிறது. நிறைகளின் வழியே வாழ்க்கையை அல்லது படைப்பை கூர்மையாக அவதானிப்பதற்கான கருவியாகவும் விமர்சனம் திகழ்கிறது. பல்துறை சார் அறிவுகளையும் தேற்றங்களையும், கோட்பாடுகளையும் கருவிகளாகக் கொண்டு படைப்பையும் அதன் வழி வாழ்க்கையையும் சீர் தூக்கிப் பார்க்கிறது. அவற்றில் முரண்கள் எழும்போது எதிர்மறை விமர்சனமாகவும், நுட்பங்கள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும்போது நேர்மறை விமர்சனமாகவும் பதிவாகின்றன.

விமர்சனங்களை முன்வைப்பவர்கள், எதிர்கொள்பவர்கள் எனும் அம்சத்தில் அதன் நுகர்வுத் தன்மை அடங்கியிருக்கிறது. சிறுபத்திரிக்கைகள் தீவிரமாக இயங்கிவந்த காலத்தில் காத்திரமாக வெளிப்பட்ட விமர்சனங்கள் படைப்பின் நிலைத்த தன்மைக்காக குரல் கொடுத்தன. அவை மொழியின் செல்வப்பெட்டகமாக இலக்கியம் அமைய வேண்டும் எனும் உயரிய நோக்கில் வெளியாகின. அதன் அளவுகோல்கள், குரலின் தன்மை, உள்ளடக்கத்தின் தீவிரம் இப்போது அதே விகிதத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்றே. அனைத்தின் மீதான நுகர்வு மன இயங்கியலில் நிதானமாக எடுக்க வேண்டிய தீவிர உரையாடல் களத்தை நாம் இழந்திருக்கிறோம். காலத்தைக் கடந்து எனும் சொற்பதம் அர்த்தமற்று போயிருக்கிறது. மீச்சிறு கணத்தில் அடுத்த்தை நோக்கித் தாவும் மனதுடன் நிதானமான விமர்சனப்போக்கு சமர் புரிகிறது. எதிர்மறை விமர்சனங்கள் நம்மை பதற்றாத்திற்கு உள்ளாக்குகின்றது. நொடி நேரத்தில் இருமையான (நல்லது/கெட்டது) விமர்சனங்களே போதுமானவையாக இருக்கின்றன. வாழ்வின் நுட்பங்களைப் பேசும் கலைப்பெட்டகங்களுக்கு அவை ஒத்துவராது. சமூகத்தின் கண்கொண்டு கலையையும், கலையின் கண்கொண்டு சமூகத்தையும் பார்க்க வேண்டிய நுட்பத்தை காலம் மறந்து வருகிறது. நுட்பமான விமர்சனக் கலை எழ வேண்டிய தேவையும் இப்போது இருக்கிறது.

இருப்பவற்றை புரிந்துகொள்வதிலிருந்து தொடங்குகிறது விமர்சனத்திற்கான பயணம். அவ்வகையில் தொல்காப்பியம், சமூகம், நவீன இலக்கியம், சங்க இலக்கியத்தின் கூறுகள் என்று பல அம்சங்களில் விமர்சனக் கருவிகளை சிறப்புப் பகுதிகளாக இந்த இதழில் பேசியிருக்கிறோம். சமகாலக் கவிஞர்களின் அக உலகை உரையாடலாக்கும் விதமாக இம்முறை கவிஞர் யதிராஜ் ஜீவாவை லாவண்யா சுந்தரராஜன் நேர்காணல் செய்திருக்கிறார். சமகால எழுத்தாளரான பிரமிளா பிரதீபனின் நேர்காணல் சமகாலத்தில் புனைவின் மீதான பார்வை என்னவாக இருக்கிறது எனும் பொது கேள்விக்கான பதிலை விரிவு செய்கிறது. சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, கவிதை, சமகால நூல்களுக்கான மதிப்புரைகள், மறைந்த இயக்குனர் பாரதி ராஜாவிற்கான அஞ்சலி, ஆதவன் சிறுகதைகளில் இடம்பெறும் பெண்களின் இலக்கியத்தன்மை, என்று நிறைவான இதழாக தயாராகியிருக்கிறது.

மீள்வருகையின் இரண்டாம் ஆண்டை இந்த இதழோடு தொடங்குகிறோம். இதுவரையிலும் இந்த இதழிலும் பங்களித்த படைப்பாளுமைகளுக்கு எங்களது அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here