இவான் கார்த்திக்
“கண்டிப்பாக முடியாது. இதெதுவும் நாம் எதிர்ப்பார்த்த முடிவுகள் கொடுக்காமல், தலையும் காலும் புரியாதபடிக்கு சிக்கலாக உள்ளது என்பது உனக்கே தெரியும். தெரிந்தும் இதை நம் வாடிக்கையாளரிடம் கொடுக்கலாம் என்கிறாய். நல்லது ரொம்ப நல்லது” என்று முடிக்கும் முன் டீன் சத்தமாக தொப்பை குலுங்க அடித்தொண்டையில் விக்கலும் இருமலும் ஒரே நேரத்தில் வருவது போல சிரித்தார். அந்த எரிச்சலூட்டும் சிரிப்பு ஆரம்பித்து முடிய சில வினாடிகளானது. வினாடிகள் என்பது கேட்பதற்கு எதோ காலத்தின் மிகக் குறுகிய அளவைப்போலிருந்தாலும் அவரது சிரிப்பு அப்படி உணரச்செய்வதில்லை. நான் பதில் சொல்லத்தொடங்க முயற்சிப்பதற்குள் அவர் மீண்டும் “நாளை சரி செய்து தருவாயல்லாவா. அப்போது பார்த்துக்கொள்கிறேன். இதோ மணி ஒன்பதாகிவிட்டது. அடுத்த அழைப்பிற்கான நேரம். பிறகு பேசுவோம். டேக் கேர்”. என் பதிலுக்குக் காத்திராமல் இணைப்பைத் துண்டித்தார். கணினித்திரையில் அவரது அலுவலக கணக்கிற்காக வைத்திருந்த, எதையும் ஏளனமாக மார்பில் கைகட்டியபடி பார்க்கும் பெரிய மீசை வைத்த பூனையின் கேலிச்சித்திரம் என்னையும் அப்போது ஏளனமாக பார்த்து சிரிக்கத்தொடங்குவதற்கு முன், கணினியை மூடிவைத்துவிட்டு எழுந்தேன். கழுத்தில் எழுந்த வலி மெல்ல கீழிறங்கி நடுமுதுகில் வெடித்துத் தெறித்தது. பின் பக்கமாக முதுகை வளைத்து அரை நொடிக்குள் அந்த வலியை இல்லாமலாக்க எடுக்கும் முயற்சியில் ஐந்தாறு டப் டப் ஒலியைத்தவிர வேறெதுவும் மிஞ்சவில்லை. பளீர் வெளிச்சம் கொண்ட அறையில் அச்சமயம் என்னைப்போல குறைந்தது ஐம்பது பேராவது அமர்ந்து நெட்டிமுறித்துக்கொண்டிருப்பார்கள். இதோ அந்த டப் டப் ஒலிகள் நீண்ட இசைத்துணுக்கென கேட்டுக்கொண்டேயிருக்கிறது. மந்தமான வயிற்றிலிருந்து எழுந்த ஏப்பத்தை மெல்ல படிப்படியாக ஏற்றி தொண்டைக்கு கொண்டுவந்து வெளியேற்றிவிடலாம் என எத்தனிக்கையில் அது தொண்டைக்குள் சிக்கி எரிந்து நாக்கில் அமிலமென கசந்தது. குளிர்ந்த நீரை தொண்டைக்குள் இட்டு நிரப்பி அந்த அமிலத்தின் நெடியை மாற்றியதும் சற்றே ஆசுவாசமானது.
இன்றோடு டீனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு வருடங்கள் முடிந்துவிட்டன. அவருடன் முதல் நாளில் பேசிய போது அமெரிக்க ஆங்கில வார்த்தைகளும் அதன் உச்சரிபுகளும், யோசித்தாலும் புரிந்துகொள்ள கடினமான ஆங்கில நகைச்சுவைகளும் என எல்லாவற்றையும் அன்றைய நாளிலேயே அனுபவித்துவிட்டேன். அவர் குரலில் எழுந்த கார்வையும் சொற்கள் வந்து விழும் வேகமும் ஏனோ இதுவரை பார்த்திராத அவரை தடித்த எப்போதும் காளர் வைத்த டீசர்ட் அணிந்து தொப்பையும் கழுத்துச்சதையும் குலுங்க பேசும் ஆணாகவே கற்பனை செய்திருந்தேன். ஆறு வருடங்கள் நேரிலோ புகைப்படத்திலோ பார்த்திராத ஒருவரின் மீது இத்தனை வன்மமும் கோபமும் உண்டாகுமென முன்பு சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன்.
காலையில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பும் முன் எழுந்த சண்டையின் வீச்சு இன்னும் தணிந்திருக்கவில்லை. ஜெனியின் குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றாக மாடிப்படி ஏறுவது போல வெறியின் கூச்சலுடன் நீண்ட வாக்கியங்களாக வந்து விழுந்துகொண்டிருந்தன. அவற்றைத் திறந்து பார்த்தால் இந்த அறைக்குள் கத்தி கூப்பாடு போட்டு “வந்து உன் கழுத்த அறுக்குறேன். முண்ட முண்ட” என அலறி எங்காவது ஓங்கி குத்திக்கொண்டிருக்கவேண்டும். உடலின் அனேக பாகங்களில் இதுபோல குத்திக்கொண்டதால் உண்டான வீக்கம் ரத்தக்கட்டு சதை கிழிவு என எல்லாம் வந்தாலும் குத்துதல் மட்டும் குறைந்தபாடில்லை. கடைசியாக வந்த குறுஞ்செய்தியில் இப்படி எழுதியிருந்தாள் “உன்னோட அம்மா எங்க என்ன தொழில் செஞ்சான்னு தெரியும். என்னப்பத்தி பேச வந்துட்டான்” துப்புவது போன்ற எமோஜியொன்றையும் வாக்கியத்தின் இறுதியில் சேர்த்திருந்தாள்.
அம்மா என்னை அங்குதான் பெற்றெடுத்தாள். அங்கென்றால்…விடுதி…விபச்சார விடுதி. அந்த இடம் நரகச் சாலைக்கு அப்பால் மங்கலான தூசுப்படலம் நிறைந்த பாழடைந்த மண்டபத்தைப் போல் ஞாபக அடுக்கின் அடியில் கிடக்கிறது. அதிலிருக்கும் கருவறைக்குள் உடலெல்லாம் சீழ்வடியும் தெய்வமாக, ஒற்றைக்கால் மடித்து, தளர்ந்த முதுகும், குனிந்த தலையுடன், அபயமுத்திரை ஏதுமின்றி அழுதுவடிந்த முகத்துடன் அம்மா அமர்ந்திருப்பதாக கற்பனைசெய்திருக்கிறேன். கனவுகளில் அதே நீர்கசியும் கண்களுடனேயே வந்திருக்கிறாள். முழுமையான மனித உடலாகவோ, முகமாகவோ அல்லாமல் முலைக்காம்பாகவோ கருத்த உதடுகளாகவோ மென்மையாக உள்ளங்கைகளாகவோ தொடையிடுக்காகவோ கனவுகளில் அவளை அடையாளம் கண்டுகொள்கிறேன். எப்படி யோசித்தாலும் அவளின் முகம் உண்மையில் எனக்கு ஞாபகமில்லை. அவளின் தொடுகையும் உடுத்தியிருந்த நைலான் சேலையின் வழுவழுப்பும் நினைவிருக்கிறது. ஒருவேளை அந்த தொடுகையும் வழுவழுப்பும் கூட அவளுடையதாக இருக்கவேண்டியதில்லை. ஏதோ ஒரு பெண் என்னிடம் விட்டுச்சென்ற நினைவுகள் எனும் இடத்திலேயே அவற்றை வைக்கமுடியும். நினைவு தெரிந்த நாளில் என்னுடனிருந்தது சுத்தமான அறையும் கூட தங்கியிருந்த நண்பனும் மட்டுமே. அம்மாவைப் பற்றிய செய்தியை பின்னாளில் ஃபாதரிடமிருந்து தெரிந்துகொண்டதும் “இதச் சொல்லாமலே இருந்திருக்கலாமே ஃபாதர்” என்றேன்.
புன்னகையுடன் “இது வேறயாரோ தப்பாச் சொல்லி தெரிஞ்சாத்தான் பிரச்சன ஜான். உனக்கும் அந்த இடத்துக்கும் சம்பந்தமில்ல. அத நீ தெளிவா புரிஞ்சுக்கனும். நீ இங்கருந்து காலேஜு வேலன்னு போனாலும் உன்ன அதோட சேர்ந்துவச்சு பாக்ககூடாது. மத்தவங்க சொல்றதில்ல. நீ புரிஞ்சுக்கனும்”
”புரியுது” என்றேனே தவிர அதன் பிறகு அம்மாவைப் பற்றிய தகவல்களை சேகரிப்பததை நிறுத்தவில்லை. அவளது ஒரேயொரு புகைப்படம் மட்டும் கிடைத்திருந்தால் தேடலை நிறுத்தியிருப்பேன். கிடைக்கவில்லை. கிடைக்கப்போவதுமில்லை. அதற்காக தேடாமலும் இருக்கமுடியாது. தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஜெனியிடம் இந்த விசயத்தை நான் சொல்லியிருக்ககூடாது என்ற எண்ணம் சொல்லும்போது தோன்றவில்லை. சொல்லிமுடித்ததும் எனக்குள் எரிந்துகொண்டிருந்த அழுகும் சுடரொன்றை இணையான இன்னொருவரின் இதயத்தில் ஏற்றி வைத்ததன் ஆசுவாசம். ஆனால் பிறகு எங்களுக்குள் எழுந்த சாதாரண பிரச்சனைகளின் இடுக்குகளில் அந்த செய்தியை சேர்த்து வசையொன்றை உதிர்ப்பதை அவள் பழக்கமாக்கியிருந்தாள். வசைகளுக்கிடையே என்னை நானே குத்திக்கொள்வதை ஒரு நாள் இணைந்த உதடுகளின் வலது ஓரமாய் எழுந்த நமுட்டுச் சிரிப்பால் கடந்து “இப்பிடி குத்திக்கிட்டா எல்லாம் செரியாகிருமா. செத்துப்போயிராத அப்புறம் நான் தான் காரணம்னு ஆகிரும்” என்றாள். அதுபோன்ற தருணங்களில் பின்னெப்போதும் அவள் முன் அடித்துக்கொள்வதில்லை. அதற்காவே நான் உண்டாக்கி வைத்திருக்கும் பிரதேசங்களில் சத்தமின்றி நுழைந்து கொள்வேன்.
அம்மா செய்ததை தொழில் என அடையாளப்படுத்தியிருந்தாள். நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் உண்டாக்கியிருக்கும் செயலியானது சமூக வலைதளமென அடையாளப்படுத்தப்படுகிறது. அதில் வெளிவரும் காணொளிகளை பயனாளிகள் பணம் கட்டி பார்த்துக்கொள்ளலாம். அதில் பதிவேற்றப்படும் காணொளித் தொகுப்புகள் எல்லாமே பார்னோகிராபி அல்லது சற்றே குறைந்த அளவிலான பார்னோகிராபி போன்றவை மட்டுமே. இந்த செயலி, சரியாக பயனர்கள் காணொளிகளை சொடுக்கியதும் ஒரு வினாடி கூட பொறுக்காமல் காட்சிகளை திரையில் ஆரம்பிக்கவேண்டும் என்பதை நாங்கள் வெற்றிகரமாக போன மாதம் நிறைவேற்றியிருந்தோம். இந்த வினாடியை எப்படி அரைவினாடிக்கும் குறைவாக ஆக்குவது என்பதற்காகவே நானும் டீனும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த வினாடிக்கும் குறைவான நேரம்கூட பயனர்களை பொறுக்கவைக்கக்கூடாது. உண்மையில் இந்த வேலையால் எனக்கும் மாதம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது. இந்தப் பணத்தில்தான் ஜெனி மகிழ்ச்சிக்கான பொருட்கள் அனைத்தையும் வாங்கி குவித்துக்கொள்கிறாள். ஆனால் அம்மாவின் தொழிலை இழிவுபடுத்த அவளுக்குக் கூசுவதில்லை. “தழுக்கி குலுக்கி” என ஒருமுறை அம்மாவை அடையாளப்படுத்தியிருந்தாள். நானும் அந்த மாதிரி பெண்களை கைப்பேசியில் பல தளங்களில் பார்த்திருக்கிறேன் தான். ஆனால் அம்மாவை அப்படி தழுக்கி குலுக்கு வந்து கட்டிலில் படுத்திருக்கும் பல ஆண்களின் குறிகளை வருடுவதை என்னால் எப்படி தாங்கமுடியும். அல்லது என் மகள் அப்படி செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது. டீனுக்கு இது சார்ந்த குழப்பங்கள் ஏதும் இருப்பதில்லை. இதைப்பறிய பேச்சு எப்போதாவது வரும்போது “கமான்…நீயா அவளை வந்து படுத்துக்கொண்டு காலைவிரிக்கச் சொன்னாய். தேவை, விரித்தாள். இருப்பவர்கள் பார்த்து சந்தோசப்படட்டுமே. எல்லா அருமை பெருமைகளையும் நீயே எடுத்துக்கொண்டால் எப்படி. எனக்கும் கொஞ்சம் குடு. நானும் கொஞ்சமாய் கண்ணீர் வடித்துக்கொள்கிறேன்” எனும்போது என் கற்பனைக்குள் அவர் தொப்பை குலுங்கச் சிரித்துக்கொண்டிருப்பார்.
நான் எவ்வளவோ தூரம் தாண்டி இந்த அலுவலகத்தில் அமெரிக்காவின் சார்லெட் நகரத்தில் வசிக்கும் டீனுடன் சரிக்கு சமமாக அமர்ந்து வேலை செய்ய வந்தாயிற்று ஆனால் ஜெனி வலுக்கட்டாயமான என்னைப் பிடித்து அந்த பாழ் மண்டபத்திற்குள் தள்ளுகிறாள். கருவறைக்குள் அம்மாவுடன் நான் மூச்சுமுட்டி திணறுவதை காண்பதற்கான எல்லா செயலையும் இதுபோன்ற தருணங்களில் அவளால் செய்யமுடியும். இப்போது பதிலுக்கு எதாவது குறுஞ்செய்தி அனுப்பியாகவேண்டுமென கைவிரல்கள் பரபரத்தன. ஆனால் இந்த அளவு அருவருப்பான வாழக்கை அவளுக்கில்லை. நித்தியமான அரசாங்க வருமானத்துடன் வாழ்ந்து பென்சனுடன் சாவகாசமாக தொடுதிரை கைப்பேசியை மூக்குக்கணாடி வழியாக கூர்ந்து பார்த்துககொண்டிருக்கும் சாதாரண அப்பாவிற்கும், அடுக்கடுக்காக சேலைகளுடனும் மாதாந்திர சொசைட்டி குழுவும் நடத்தும் அம்மாவிற்கும் பிறந்ததால் அவளைப்போல் அசிங்கமாக கேட்க முடியாதபடி ஆகிவிட்டது. ஆனால் கேட்கவேண்டும் “நீயும் அதே கேஸ்தான். எங்கம்மா என்ன வளக்க இப்புடி செஞ்சா. ஆனா நீ ஃபேமஸாக அவுத்து போட்டு ஆடாத கொறதான்” என்று எழுதி அனுப்புவதற்குமுன் யோசித்தேன். அப்படியொன்றும் அவள் செய்வதில்லை. ஆனால் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அனுப்பிவிட்டேன். நெஞ்சுக்கூட்டிலிருந்து இதயம் துடிப்பது மொத்த உடலும் முன்னும் பின்னும் அதிர்வது போலிருந்தது. பாக்கெட்டிற்குள் போனை போட்டு கணிணியை திறந்தேன்.
“முந்தைய நாள் நீ கிட்டில் அனுப்பிய கோடை சரி பார்த்தேன். ஆறு வருடங்களில் ஒன்றும் மாறவில்லை. நானே சரிசெய்துவிட்டேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜாப் முடிந்துவிடு” கணினியின் ஓரம் எழுந்து நின்ற செய்திவந்த செயலியை எழுப்பி ”நன்றி” என்றனுப்பிவிட்டு என் கையாலாகதனத்தை எண்ணியபடி அறையைவிட்டு வெளியே வந்தேன். இவ்வளவு பெரிய அலுவலகத்தில் நான் வந்து செல்வதை எல்லாராலும் கவனிக்கமுடியும். என் கணினி தற்சமய உறக்கத்திற்குள் செல்லும்போது என் அலுவலக இருப்பை கண்காணிப்பவர்களுக்கு குறிப்பொன்று சட்டென செல்லும். டீன் அதை கவனித்திருப்பார். தற்சமயம் அதற்காக ஒன்றும் செய்யமுடியாது. மணி ஒன்பதாகியிருந்தது. இன்னும் இரண்டுமணி நேரம் என் தற்படத்துடன் கூடிய செயலியில் பச்சை வண்ணம் தெரியும்படி வைத்திருந்தால் போதுமானது. வேலை செய்வதற்கான மனநிலை கூடிவரவில்லை. ஆனால் டீனுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மண்டைக்குள் நடுவிரவில் இரையும் நாய்க்குறைப்பின் வீரியத்துடன் மூளையை முடுக்கிக்கொண்டிருந்தது.
லிஃப்டில் இறங்கி கட்டிடத்தின் தரைத்தளத்தில் வலது ஓரமாக வைக்கப்பட்டிருந்த டீக்கடையின் வாசலில் அப்போதும் கூட்டமாக இருந்தது. கூட்டத்தினுள் நுழைவதை எப்போதும் வெறுத்திருந்தேன். கூட்டத்தில் ஒரு தலையாகவே இருக்கிறேன் என்பதை டீன் ஒரு முறை மறைமுகமாகச் சொல்வதாக நினைத்துக்கொண்டு நேரடியாகவே சொன்னார் “இதோ பார் ஜான், நீ அடிக்கும் கோட் சரியாக வரவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அதை யாராலும் இத்தனை தவறுகளோடு அடித்துவிட முடியும். இருந்தாலும் முடித்துக்கொடுத்ததற்கு நன்றி”. இறுதியில் இணைந்துகொள்ளும் இந்த கொசுறுபோன்ற ‘நன்றி’ என்ற வார்த்தை மேலதிகமாக துன்புறுத்துவது. கூட்டத்திலிருந்து விலகி தனியாக மரமா அல்லது செடியா எனச் சொல்லமுடியாத ஒன்றின் கீழே நின்று சிகரெட்டைப் பற்றவைத்தேன். பாக்கெட்டுக்குள் கிடந்த போன் துடித்துக்கொண்டே இருந்தது. அந்த அதிர்வுகளை உடல் வாங்கிக்கொண்டிருந்தது. வரிசையாக அவள் அனுப்பிக்கொண்டிருந்த குறுஞ்செய்திகள்தான்.
“உன்னோட ஹிஸ்டரி தெரிஞ்சிருந்தா ஒனக்கெல்லாம் பொண்ணே கெடச்சிருக்காது. கெடச்சிருச்சின்னு இப்போ என்ன வேணா சொல்லலாம். இல்லையா”
“என்னோட ப்ரொபஷன் பத்தி போச உனக்கி என்ன ரைட்ஸ் இருக்கு”
“தாலி கட்டிட்டா என்ன வேணும்னா பேசலாமா”
“எல்லாம் உன் குடும்ப புத்திதான…வேற என்ன எதிர்ப்பாக்க முடியும்”
“எங்கையாவது போயி சாகேன்”
“செத்துப்போ அப்பையாவது எனக்கு நிம்மதி வருதான்னு பாக்கலாம்”
“சோஃபியாவ நீயே கொண்டுபோ. உன் பொண்ணெல்லாம் வச்சி என்னால காலம் பூறா ஓட்ட முடியாது. அது என்னோட வேலையும் இல்ல”
“நீயே சம்பாதிச்சி. நீயே நல்லா வளத்துவிடு”
“உங்கம்மா மாதிரி ஆக்கிராத அவள”
“மகாநதி படத்துல் அப்பங்காரன் போயி காப்பாதுதான். நீ கொண்டுபோயி விடு”
“பேசாம வேலைய விட்டுட்டு. உன் பிள்ளைய வச்சி ஃபாமிலி பிஸ்னஸ் பண்ணேன். நல்லா காசுவரும். உங்கம்மா பெரும படுவாங்க”
கடைசி வாக்கியம் என்னை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்துக்கொண்டேன். முகம் தெரியாத அம்மாவை முன்பு எப்போதும் இந்தளவு வெறுத்திருக்கவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் அவள் தன்னுடலை விற்று என்னை வளர்த்திருக்கவேண்டாம். யாருடைய விந்து விழுந்து பிறந்தவன் நான் ? அல்லது பலவித விந்துக்களின் தொகுதியாக இருந்ததா நான் உருவான கரு? ஃபாதர் சொன்னது நினைவிற்கு வந்தது “பெத்தவங்கள சபிக்க நமக்கு உரிமையில்ல ஜான். அவங்களோட சூழ்நிலைய நம்மால முழுசா புரிஞ்சிக்க முடியாது. அததுக்கு ஒரு காரணமிருக்கும். உன்ன உருவாக்குனது இயற்கையோட ஆசைனு வச்சுக்க. அதோட கருணையால நீ உருவாகியிருக்க. அந்த கருணை உன்ன வழி நடத்தட்டும். அவங்கமேல வன்மம் வேண்டாம்” .
வன்மம் இல்லாத வாழ்க்கை எனக்கு வரமளிக்கப்படவில்லை. ஃபாதர் ஒருவேளை அம்மாவின் விசயத்தை என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் ? அம்மாவைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாமல் போய் அவளின் காலம் பிரபஞ்ச காலத்திலிருந்து மொத்தமாக சாலையோரக் கழிவென அகற்றி எறியப்பட்டிருந்தால். நான் மகிழ்ந்திருப்பேன். கடந்த காலமற்ற அல்லது எல்லையில்லா நல் கற்பனைக்கு மட்டுமே சாத்தியமுள்ளவனாக நானும் ஆகியிருப்பேன். ஆத்திரம் மெல்ல நெகிழ்ந்து வழிந்து கழிவிரக்கம் நோக்கிச் சென்றது. அந்த பிம்பத்தை பிரதிபலிக்கும் நெகிழ்வில் என் முகம் அன்னையால் கைவிடப்பட்டு சாலையோரத்தில் பசித்து பசித்து வயிறொட்டி இனிமேல் சாப்பிடவும் முடியாதபடி குடல் வரண்டு சுருண்ட ரோமமற்ற நாய்க்குட்டியைப்போலானது. இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழ இழுத்தேன். புகையை நெஞ்சில் சில நொடிகள் தேக்கிவைத்து மெல்லிய கிறுகிறுப்பை மூளையிலும் இதயத்துடிப்பிலும் உருவாக்கினேன். எதையாவது பற்றி இந்த பள்ளத்திலிருந்து மேலேறிவிடவேண்டுமென மனம் துடிதுடித்தது. கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். வண்ணப் பிரிவுகள் ஒவ்வொன்றாக மெல்ல எழுந்து வந்து நிறம்மாறிக்கொண்டிருந்தது. இறுதியில் இருளைப் பிடித்துக்கொண்டதும் சட்டென பொறிதட்டியது போல அந்த எண்ணம் வந்தது.
சிகரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டு அலுவலக கட்டிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். மூச்சின் வேகம் மெல்ல மெல்ல ஏறிகொண்டிருந்தது. லிப்ஃட்டை விட்டுவிட்டு படிக்கட்டில் தாவி ஏறிக்கொண்டிருந்தேன். மூன்றாவது மாடியிலிருந்த என் மேசைக்குச் சென்று கணினியை இயக்கி செயலிக்கான நிரலின் குறிப்பிட்ட பகுதியை மாற்றத்தொடங்கினேன். ஒவ்வொரு வரியாக எழுந்துவர இயந்திர வேகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். தவறுகள் ஏற்படப்போவதில்லை என்பதை மனம் ஏற்கனவே உணர்ந்திருந்ததன் வேகம் விரல்களின் வழியே எழுந்த விசைப்பலகையின் டப் டப் ஓசையில் புரிந்தது. பத்து நிமிடத்திற்கும் நான் எழுதி முடித்திருந்த அந்த வரிகளை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை வாசித்து சில மாற்றங்கள் செய்தேன். இந்த நிரல் மாற்றம் காணொளியை வினாடிக்கும் குறைவான வேகத்தில் இயங்கச் செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லாமல் ஒருமுறை ஓட்டிப்பார்த்தேன். அப்படி ஓட்டிப்பார்ப்பதற்கான குறிப்பிட்ட காணொளிகள் எங்களது முதல் நிலை செயலியில் இருந்தன. சோதனைக்காக செயலியை இயக்கியதும் காணொளி வினாடிக்கும் குறைவான வேகத்தில் எங்களது தரவுத்தொகையிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து காட்டியது. ஆனால் இதுமட்டும் போதாது. பயனர்கள் பயன்படுத்தும் அதேமாதிரியான இயக்கமும் செறிவும் இருக்கும்போதும் நிரல் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்யவேண்டும். முதல் தளத்திலிருந்து நிரலின் குறிப்பிட்ட மாற்றத்தை புதிய சோதனைத் தளத்திற்கு கொண்டுசென்று வேறு எதாவதொரு காணொளியை ஓட்டிப்பார்க்கவேண்டும். அதற்காக எங்களுக்கு கொடுக்கப்பட்ட போலியான பயனர் கணக்கினுள் சென்று ஏற்கனவே எங்கள் நிர்வாகத்தில் என்னைப்போன்ற ஒருவர் பார்த்துவைத்திருந்த காணொளியை இயக்கினேன். ஆயிரம் ஆண்கள் வரிசையாக ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு எழும் நீண்ட காணொளியது. அதைக் திறந்ததும் வினாடிக்கும் குறைவான நேரத்தில் அது ஓடத்திடங்கியது. இறுதியாக அந்தப்பெண் தன்கையில் குழந்தையொன்றை வைத்துக்கொண்டு நிர்வாணமாக சோபாவில் அமர்ந்திருக்க, அவளுக்குப் பின்னால் அந்த ஆயிரம் ஆண்களும் நின்றிருக்கும் காட்சி ஐந்தாறு வினாடிகள் மிச்சமிருந்த நிலையில் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் முன்னால் நீச்சல் குளமொன்றும் பின்னால் பெரிய மாளிகையொன்றுமிருந்தது. அந்தப்பெண் “தாங்க்யூ ஆல்…ம்ம்மா” என்று கையிலெடுத்த முத்தத்தை காற்றில் வீசினாள். கேமராவின் கோணம் மெல்ல அவர்களிடமிருந்து விலகி வான் நோக்கிச் சென்று அவர்களனைவரும் வெறும் புள்ளியாகினர். அந்த காணொளி ஆரம்பிக்க எவ்வளவு நேரமானது என்பதை செயலியில் நான் பார்ப்பதற்காக வைத்திருந்த குறிப்பேட்டில் காட்டியது “0.0003” வினாடிகள்.
மனம் குதியாளமிட்டு நிலையின்றி தவித்தது. அறையிலிருந்த குளிரிலும் நெற்றியில் அக்குளில் முதுகில் வியர்க்கத் தொடங்கியது. இதோ முடித்துவிட்டேன்…டீனின் முகத்தில் அடர்கரியை பூசிவிடலாம் எனும் எண்ணத்தால் விரல்கள் நடுங்கத்தொடங்கின. டீன் கணினியின் முன் இருக்கிறாரா எனப்பார்த்தேன். அவரது பூனைப்படத்தின் மேல் பச்சையோ சிவப்போ இன்றி சாம்பல் நிறமிருந்தது. ஒருவேளை டீன் இருந்திருந்தால் அப்போதே இதைச் சொல்லி “முடித்துவிட்டேன். முடிந்தால் சரிபார்க்கவும்” என்றொரு செய்தியை அனுப்பிவிடலாம் என நினைத்தேன். சிறிய கூர்மையான மின்னஞ்சல் ஒன்றை அடித்து அணித்தலைவரையும் அதில் சேர்த்துவைத்து அனுப்புவதே சரியாக இருக்குமென விசயத்தை தொகுத்தேன்.
ஹய் டீன்,
நாம் மூன்று மாதங்களாக போராடிக்கொண்டிருந்த பிரச்சனை சரியாகிவிட்டது. சரியாக 0.0003 வினாடி மட்டுமே எடுத்துக்கொண்டு காணொளி திரையில் வந்துவிடுகிறது. குறிப்பிட்ட நிரல் மாற்றம் சோதனை தளத்தில் உள்ளது. நீங்கள் மற்ற வேலைகளின்றி இருக்கும்போது இதை சரிபார்த்துவிட்டால் பயனர் தளத்திற்கு அனுப்பிடலாம்.
சியர்ஸ்,
ஜான்
மின்னஞ்சலை அனுப்பிவிட்டு மணியைப்பார்த்தேன் பதினொன்று தாண்டி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்திலிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு நான்கு வழிச் சாலையில் வேகமாகச் சென்றேன். மனம் நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியதும் மனம் நிரம்ப இடமின்றி பொங்கி வழியத்தொடங்கியது. எப்போதாவது என்னைக் கடந்தோ அல்லது எதிர்வெளிச்சம் காட்டியோ சென்ற வாகனங்களின் சக்கரக்கள் சாலையில் ரம்யமான ஒலியெழுப்பின. கைப்பேசி விட்டுவிட்டு அதிரத்தொடங்கியதும் நினைத்துக்கொண்டேன் “ஜெனியிடம் மன்னிப்புக் கேட்டு எல்லாவறையும் சரிசெய்துவிடவேண்டும்”. முகத்தில் புன்னகை தொற்றி ஏறிக்கொண்டிருந்தது. ஒரு கணம் வேகமான காற்றின் சுழிப்பொன்று என்மேல் பட்டுத் திரும்பியதும் அந்த முகங்கள் மூளையில் இடைவெட்டி வந்தன, கையில் குழந்தையுடன் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் அம்மா, பின் டீனின் கரிபிடித்து அகண்டிருந்த பூதமுகம்.
***
இவான் கார்த்திக் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். தற்போது மதுரையில் வசிக்கிறார். இலக்கிய வாசிப்புடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார். பதாகை, சொல்வனம், ஒலைச்சுவடி, வனம் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது. ‘பவதுக்கம்’ இவரது முதல் நாவல். தொடர்புக்கு: Ivaankarthik@gmail.com 9003405948

