பாரதிராஜா
மனிதகுலத் தோற்றத்திற்கு முன்பு தொடங்கி மனிதகுல வரலாறு முழுக்கவும் பல்வேறு காலங்களிலும் நாகரிகங்களிலும் பண்பாடுகளிலும் சமயங்களிலும் நாடுகளிலும் பகுதிகளிலும் மொழிகளிலும் மெய்யியல்களிலும் காதல் ஒரு பேராறாக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆற்றின் பாதையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
குகைகளில் வாழ்ந்த மனிதனிலிருந்து இன்றைய எண்முறை (டிஜிட்டல்) வாழ் மனிதன் வரை காதலை வெவ்வேறு விதமான பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறான் – பயன்படுத்தியிருக்கிறான். பெரும்பாலும் கொண்டாடவே பட்டிருக்கிறது என்றாலும் பல நேரங்களில் – இடங்களில் கட்டுப்படுத்தவும் பட்டிருக்கிறது. பல நேரங்களில் – இடங்களில் கெடுபிடியான கட்டுப்பாடுகளோடே கொண்டாடவும் பட்டிருக்கிறது. இன்னும் வேடிக்கையாக, புறத்தில் கட்டுப்படுத்தப்பட்டு அகத்தில் கொண்டாடப்பட்டும் கூட இருக்கிறது. இப்போதும் கூட அது தொடரத்தானே செய்கிறது? திரைப்படத்தில் வரும் காதலை மனமார ஏற்றுக்கொள்கிற – ஆதரிக்க முடிகிற அதே மனதால் தம் சொந்தக் குடும்பத்தில் நிகழும் போது ஏற்றுக்கொள்ள முடிவதில்லையே!
பண்டைய உலகின் காதல் – முதற் குரல்கள்
மெசபடோமியா: காதலின் முதற் பாடல்கள்
மனிதகுலத்தின் முதல் எழுத்து வடிவம் தோன்றிய நிலப்பரப்பில்தான் காதலின் முதற் கவிதைகளும் எழுதப்பட்டன. கி.மு. 3000-க்கு முந்தைய மெசபடோமியாவில், டைக்ரிஸ்-யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையே உள்ள இடத்தில், இனன்னா என்ற காதற்கடவுளுக்கும் துமுசி என்ற மேய்ப்புக் கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட காதல் பற்றி – அல்லது, ஏற்பட்டதாக – பாடல்கள் எழுதப்பட்டன.
இந்தப் பாடல்கள் எந்தவிதமான நாணமுமின்றி உடற்காதலைக் கொண்டாடுகின்றன. “அவர் என் பிறப்புறுப்புகளை அழகாக்கியுள்ளார்… கை கோர்த்து உறங்குதல் இனிமை” என்று இனன்னா பாடுகிறாள். அன்றைய மெசபடோமியாவில் இது வெறும் உடல் இன்பம் மட்டுமல்ல – இது பேரண்டத்தின் படைப்பாற்றலாக, வயல்களுக்கு வளம் தரும் இரையாற்றலாகப் பார்க்கப்பட்டது.
மெசபடோமிய மக்கள் காதலை மூன்று விதமான நோக்குகளில் கண்டனர். கருவுறுதலுக்கும் இனப்பெருக்கத்துக்குமான வழி என்பது ஒன்று. இன்று அறிவியல் – உளவியல் அதைத்தான் சொல்கிறது. மனிதன் செய்யும் எல்லா வேலைகளுக்கும் பின்னணியில் தன்னையும் தன் இனத்தையும் காத்துக்கொளல் – பெருக்கிக்கொளல், தன்னைப் பிறரோடு பிணைத்துக்கொளல் ஆகிய இரு உள்நோக்கங்களே இருக்கின்றன என்கிறார்கள். இரண்டாவதாக அதை ஒரு கடமையாகக் கண்டார்கள். தன்னைச் சார்ந்தோருக்குப் பொருளீட்டி வருதல், அவர்களை ஆபத்துகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் காத்தல் போல காதலித்தலும் கடமையாகப் பார்க்கப்பட்டது. அதைத்தான் இன்று வழங்கல், பேணல், பெருக்கல் (provide, protect, and procreate) என்கிறோம். மூன்றாவதாக, காதலை ஓர் இறைச்சித்தம் என்று எண்ணினார்கள். எதுவெல்லாம் இயற்கையோ அதுவெல்லாம் இறைச்சித்தம் என்றும் கொள்ளலாந்தானே! பிறப்பும் இறப்பும் போல.
திருமணம் என்பது குடும்பங்களுக்கு இடையேயான கூட்டணி, பொருளியல் ஒப்பந்தம், கொடுக்கல்-வாங்கல் (transaction) என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில், காதற் கவிதைகளும் மடல்களும் எழுதினார்கள் என்றால் மக்கள் உடலுறவைத் தாண்டிய உணர்ச்சிகளை உணர்ந்தார்கள் என்றுதானே கொள்ள வேண்டும்! அல்லது, ஆண் மயில் தோகையைக் காட்டிப் பெண் மயிலைக் கவர்வது போல, மனிதர்கள் தம் அழகுணர்வைக் கவிதைகளாகவும் மடல்களாகவும் வரைந்து தனக்கு வேண்டிய விதமான பெண்ணை அடைந்து கொண்டார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதாவது, உடலுறவைத் தாண்டிய உணர்ச்சிகளுக்கும் அடிப்படையானது உடற் தேவையே எனும் பார்வை.
எகிப்து: நைல் நதிக்கரையில் காதல்
பண்டைய எகிப்தின் புதிய பேரரசு (கி.மு. 1500) நமக்கு வியப்பூட்டும் விதத்திலான புதுமை ஒலியோடு பல காதற் கவிதைகளைத் தந்துள்ளது.
தவிட்டுப்புறா குறுகுறுத்தது
“பொழுது விடிகிறது, எந்த வழி போகிறாயடி?” என்றது என்னிடம்
தொலைந்து போ குட்டிப் பறவையே
என்னை ஏன் சீண்டுகிறாய்?
என் காதலனைப் படுக்கையில் கண்டேன்
அளவிலாமல் இனித்ததென் இதயம்
இந்தக் கவிதைகளில் கள்ளச் சந்திப்புகள், பிரிவின் வேதனை, உடல் ஈர்ப்பு – எல்லாமே இருக்கின்றன. முறைப்படியான திருமணம் என்பதும் எகிப்திய வரலாற்றில் இருக்கிறது. அதற்கு இணையாகவே காதலும் இருந்திருக்கிறது.
பண்டைய இந்தியா: காதலின் ஆன்மீக வேர்கள்
இந்திய நாகரிகத்தில் காதல் என்பது வெறும் மனித உணர்வு என்று மட்டுமில்லாமல், அது ஓர் அண்டப் பேராற்றலாகப் பார்க்கப்பட்டது.
ரிக்வேதத்தில் (கி.மு. 1500) காமம் என்பது படைப்பின் முதல் ஆற்றலாக விவரிக்கப்படுகிறது.
காமசூத்திரம் (கி.மு. 400 – கி.பி. 200) வெறும் பாலியல் வழிகாட்டியாக மட்டும் இல்லாமல், அது ஒரு காதற் பேருரையாக இருக்கிறது. மனைவியை எப்படி நடத்த வேண்டும், காதலை எவ்வாறு கட்டிக்காக்க வேண்டும் போன்றவற்றையெல்லாம் விளக்குகிறது.
தமிழகத்தின் அகம்: காதலின் நுண் மொழி
சங்க காலத்தில் (கி.மு. 300 – கி.பி. 300) தமிழர்கள் காதலை ஒரு கலை வடிவமாக உயர்த்தினார்கள். உலக வரலாற்றில் முதன்முறையாக தமிழில் அகம் என்ற கவிதை வகை முற்றிலும் காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு – ஐந்து திணைகள். திணை என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைக் குறிப்பது என்று மட்டும் இல்லாமல், அது காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகளையும் குறிப்பதாக வகுக்கப்பட்டது. அதாவது, மலையைக் காணும் போது வரும் உணர்வு போலக் காதலிலும் ஓர் உணர்வு இருக்கிறது, கடலைக் காணும் போது வரும் உணர்வு போலக் காதலிலும் ஓர் உணர்வு இருக்கிறது என்றார்கள்.
குறிஞ்சி (மலை) – முதற் காதல், திருமணத்திற்கு முந்தைய கூடல், இரவில் கள்ளச் சந்திப்பு ஆகியவற்றைப் பேசுகிறது. இவையெல்லாம் முறையே மலையைப் போல முதலில் தோன்றியவை, காலத்தால் முந்தியவை, மலைப் பகுதிகளில் நடத்த வசதியானவை என்று கொள்ளலாம்.
முல்லை (காடு) – பொறுமையுடன் காத்திருத்தல், கணவன் வெளியூர் சென்றிருக்கும்போது மனைவியின் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசுகிறது. இங்கே காடு காத்திருப்பின் அடையாளமாக இருக்கிறது. முறையே காட்டினங்கள் நீருக்காக மழைக்குக் காத்திருப்பது போல, மழை வரும் என்று நம்பிக்கையோடு இருப்பதைப் போல என்று கொள்ளலாம்.
மருதம் (வயல்) – காதலர்களின் சண்டைகள், கணவனின் துரோகம், சமரசம் ஆகியவற்றை விவரிக்கிறது. மருதம் மனிதர்கள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் சலசலப்பு நிறைந்ததாக இருக்கிறது. இங்குதான் சமூகம் எனும் அமைப்பு உருவாகிறது. வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்மூலம் நேரும் பிரச்சனைகள் இங்கு உள்ளே வந்துவிடுகின்றன.
நெய்தல் (கடற்கரை) – பதட்டமான காத்திருப்பு, பிரிவின் ஏக்கம் ஆகியவற்றைப் பாடுகிறது. முல்லையில் நம்பிக்கையோடு காத்திருந்தவள், நெய்தலில் பதட்டம் கொள்கிறாள். காரணம், கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைவிட, புயலும் கடற்கொள்ளையரும் தொலைதலும் கடலில் பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. காடு மனிதனுக்குப் பல்லாயிரமாண்டுப் பழக்கப்பட்டது எனும் காரணமாக இருக்கலாம்.
பாலை (பாலைவனம்) – ஓடிப்போதல், பிரிவின் கொடூரமான வேதனை ஆகியவற்றைப் பாடுகிறது. பாலைவனம் என்பது எதுவுமற்றது. உயிர் அற்றது. நீர் அற்றது. வெறுமையும் வெப்பமும் மட்டுமே கொண்டது. உச்சகட்ட வெறுமையின் விளைவாக தற்கொலை எண்ணமும் உளநோயும் வந்து வதைக்கின்றன.
சங்கப் பாடல்களில் மிக முக்கியமான கூறாக பெண்ணின் குரல் அவற்றில் மையமாக இருப்பது இருக்கிறது. அவளது ஆசை, அவளது உணர்வுகள், அவளது தேவைகள் – இவையனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன – கொண்டாடப்பட்டன.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
இந்த மனிதன் மீதான காதல், உலகத்தைவிடப் பெரியது, வானத்தைவிட உயர்ந்தது, நீரைவிட ஆழமானது என்கிறாள். எப்போது? கி.பி. முதல் நூற்றாண்டில். தமிழர் அகம் முழுக்கவும் இப்படியான உணர்வுகளைக் கொட்டுவதாக இருக்கிறது.
கிரேக்கமும் ரோமும்: காதலின் மெய்யியல்
கிரீஸ்: ஈரோஸின் பிறப்பு
உணர்ச்சிமிக்க, காமம் ததும்பும், பாலியற் காதலை பண்டைய கிரேக்கர்கள் ஈரோஸ் என்ற கடவுளின் பெயரில் வகைப்படுத்தினார்கள்.
பிளாட்டோவின் “சிம்போசியம்” என்ற உரையாடலில், காதல் என்பது உடலழகிலிருந்து தொடங்கி ஆன்மீக அழகை நோக்கி உயரும் ஓர் ஏணி என்று விவரிக்கப்படுகிறது.
நிறையப் பெண் கவிஞர்களைக் கொண்டிருந்த சங்க இலக்கிய காலத்துக்கும் சற்று முந்தைய காலத்தில் – கி.மு. 630-இல் – சாஃபோ என்ற கிரேக்கப் பெண் கவிஞர் தீவிரமான காதல் ஏக்கத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்:
அவர் எனக்குக் கடவுள்களுக்குச் சமமாகத் தோன்றுகிறார்…
உங்கள் குரலின் இனிய முணுமுணுப்பை
என் இதயத் துடிப்பையே வேகமாக்கும் கவர்ச்சியான சிரிப்பை
நெருக்கத்தில் கேட்பவர் அவர்.
ரோம்: காதல் எனும் வேதனை
ரோமானியக் கவிஞர்கள் காதலை மிகவும் வேறுபட்ட முறையில் பார்த்தார்கள். அவர்களுக்கு காதல் என்பது ஆபத்தானதாகவும் அழிவையே அளிப்பதாகவும் பகுத்தறிவற்றதாகவும் பட்டது.
கேட்டுல்லஸ் தனது சிக்கலான காதலை இப்படி வெளிப்படுத்துகிறார்:
நான் வெறுக்கவும் செய்கிறேன் காதலிக்கவும் செய்கிறேன்
ஏன் இப்படிச் செய்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்
எனக்குத் தெரியவில்லை
ஆனால் அது நிகழ்வதை உணர்கிறேன், அது என்னைத் துன்புறுத்துகிறது
ஓவிட் தனது “காதலின் கலை” (ஆர்ஸ் அமடோரியா) என்ற நூலில் காதலரை எவ்வாறு மயக்குவது, காதலை எப்படிக் கட்டிக்காப்பது என்று நடைமுறை ஆலோசனை கொடுக்கிறார். இதில் சற்று இந்தியக் காமசூத்திரத்தின் வாடை அடிக்கிறது.
மதங்களின் பார்வை: புனிதமா? பாவமா?
கிறித்தவம்: பதற்ற உறவு
தொடக்ககாலக் கிறித்தவம் காதலையும் பாலுறவையும் ஐயத்துடன் பார்த்தது. புலனடக்கம் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்பட்டது. ஆனால் விவிலியத்தில் உள்ள “பாடல்களின் பாடல்” என்ற நூல் முற்றிலும் காமக்காதலைப் பாடும் கவிதையாக இருக்கிறது:
அவர் என்னைத் தனது வாயின் முத்தங்களால் முத்தமிடட்டும்…
உங்கள் காதல் மதுவை விட மகிழ்ச்சியானதாக இருக்கிறது.
பிற்காலத்தில் இது இயேசுவுக்கும் சபைக்கும் இடையேயான காதல் என்று விளக்கப்பட்டது. ஆனால் அதன் மொழி தெளிவான உடற்காதல் மொழி என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.
கிறித்துவத்தில் திருமணத்தின் அடிப்படை காதல் அல்ல. குடும்பங்களின் கூட்டணியும் குழந்தைகள் பெறுதலுமே முக்கியம். இன்றைய நம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போலத்தான் அவர்களுடையதும். காதல் என்பது ஒரு கூடுதல் நன்மையாக இருக்கலாம்; ஆனால் அது ஓர் அடிப்படைத் தேவை அல்ல எனும் பார்வை.
இசுலாம்: இறையன்பும் மனிதக் காதலும்
இசுலாமியப் பாரம்பரியத்தில் இரண்டு வகைக் காதல்கள் உள்ளன. சங்க இலக்கியத்தில் இருக்கும் கற்பு நெறி, களவு நெறி போல.
ஹப் – மென்மையான அன்பு, திருமணத்தில் உள்ள காதல். கற்பு நெறி.
இஷ்க் – தீவிரமான, எரிக்கும், உணர்ச்சிமிக்க காதல். களவு நெறி.
சூஃபி கவிஞர்கள் காதலை ஆன்மீகத் துய்ப்பாக உயர்த்தினார்கள். 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமி எழுதுகிறார்:
காதலர்கள் கடைசியில் எங்கோ ஓர் இடத்தில் சந்திப்பதில்லை
அவர்கள் எப்போதும் ஒருவருக்குள் ஒருவர் இருக்கிறார்கள்
லைலா மஜ்னூன் கதை – காதலால் பைத்தியக்காரனான இளைஞனின் கதை, இஸ்லாமிய உலகின் மிக முக்கியமான காதல் கதையாக மாறியது. மஜ்னூன் லைலாவைத் திருமணம் செய்ய முடியாமல், அவளை நினைத்துக்கொண்டே பாலைவனத்தில் அலைந்து திரிந்து, இறுதியில் காதல் ஏக்கத்தால் செத்தே போகிறான். இது, காதலை வாழ்தலை விட வலிமையான ஓர் இடத்தில் வைக்கிறது.
மஜ்னூன் என்பது அவன் உண்மையான பெயர் அல்ல. பைத்தியக்காரன் என்பதற்கான சொல்லே அது. காதற் பைத்தியம் பிடித்த மஜ்னூன் லைலா மீதான காதலை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறான்:
நான் காதலிப்பது உண்மையான லைலா அல்ல
நான் காதலிப்பது காதல் என்ற கருத்தை
லைலா என்பது ஒரு சின்னம்
தெய்வீக அன்பின் சின்னம்
நான் அவளைத் தாண்டிச் சென்றுவிட்டேன்
நான் இப்போது காதலையே காதலிக்கிறேன்
இந்து சமயத்தின் பக்தி: ராதையும் கண்ணனும்
இந்து சமயத்தின் பக்தி இயக்கத்தில், காதல் கடவுளை அடையும் பாதையாக மாறியது. கண்ணன் ராதையின் காதல், சமூகத்தால் தடை செய்யப்பட்ட காதல் என்ற போதும், நிலை பெற்ற அன்பின் சின்னமாகக் கொண்டாடப்பட்டது, புனிதமானதாகப் பார்க்கப்பட்டது.
12-ஆம் நூற்றாண்டு எழுதப்பட்ட ஜெயதேவரின் “கீத கோவிந்தம்” வெளிப்படையான காம விவரணைகளைக் கொண்ட பக்திக் கவிதை. இதில் ராதையின் ஏக்கம், கண்ணனின் மயக்கல், அவர்களின் உடல் ஒன்றிப்பு – எல்லாமே விவரிக்கப்படுகின்றன. இது பாவமல்ல – இது ஆன்மா கடவுளை நாடும் வழி எனப்படுகிறது.
அவனது கரங்கள் என்னைச் சுற்றுகின்றன
அவனது உதடுகள் என் கண்களை முத்தமிடுகின்றன
நாம் இரண்டு உடல்கள் ஆனால் ஒரே உயிர்
தமிழ் மொழியின் பக்தி: ஆண்டாளின் மணவாளன்
8-ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் என்ற பெண் துறவி திருமாலைத் தனது காதலனாக, மணவாளனாகப் பார்க்கிறாள். அவளது திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் காதலின் மொழியில் எழுதப்பட்ட பக்திக் கவிதைகள்:
“எட்டுத் திசையும் அழகிய செந்தாமரைக் கண்ணும் ஆரமுதுமாய் ஒட்டி வந்து என்மனம் புகுந்தானைக் கண்டேன்” என்ற வரியில் பக்தியைவிடக் காதலே மேலிடுகிறது.
ஆண்டாள் ஒரு பெண்ணாக, கடவுளைக் காதலிக்கிறாள், அவனைப் பெற ஏங்குகிறாள் – இது பக்தியில் நிகழ்ந்த பெரும் புரட்சி. பெண்ணின் காதல் ஆசையும் பாலியல் உணர்வுகளும் இங்கே புனிதமான – ஆன்மீகப் பொருள்களாக மாறுகின்றன.
இடைக்காலம்: காதலின் மறுவரையறை
ஐரோப்பாவில் ‘தலையழி’
12-ஆம் நூற்றாண்டில் தெற்கு பிரான்சில் ஒரு புரட்சிகரமான கருத்து தோன்றியது – தலையழி (Courtly Love). இதன்படி, காதல் என்பது மனிதனை உயர்த்தும் – மாற்றும் ஆற்றல். காதலன் தனது காதலியை (பெரும்பாலும் திருமணமான உயர்குடிப் பெண்) கடவுள் போல வழிபட வேண்டும்.
அங்கிருந்த ட்ரூபடோர்கள் இந்த காதலைப் பலவாறு பாடியிருக்கிறார்கள். அவற்றின் முக்கியக் கூறுகள்:
காதலன் காதலியை விடத் தாழ்ந்தவன்
காதல் பொதுவாக நிறைவேறாது
தடைகள் காதலை வலுப்படுத்தும்
காதலில் மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும்
காதலில் துன்பப்படுதல் அதன் மீதான ஈடுபாட்டைக் காட்டும்
இது ஏன் புரட்சிகரமானது? முதன்முறையாக, காதல் திருமணத்திற்கு வெளியே, குடும்பக் கடமைகளுக்கு வெளியே, ஒரு தனி – உயர்ந்த மதிப்பாகப் பார்க்கப்பட்டது.
மன்னனின் மனைவியுடன் மிகச் சிறந்த மாவீரன் ஒருவன் காதல் கொள்வதாக வரும் லான்ஸ்லாட் கினிவெர் கதை, இந்த மரபின் மிக முக்கியமான எடுத்துக்காட்டு. இது தடம் மாறிய களவு நெறி பற்றியது, துரோகம் பற்றியது எனினும் அவர்களின் காதல் உண்மையானது எனும் கணக்குப்படி இன்னும் கொண்டாடப்படுகிறது.
பாரசீகக் காதல் மாதிரிகள்
இசுலாமிய உலகிலும் காதல் பற்றிய மாதிரிக் கதைகள் தோன்றின. லைலா மஜ்னூன் கதை மத்திய கிழக்கு, பாரசீகம், துருக்கி, இந்தியா முழுவதும் பரவியது. இது ஒரு வகையான காதற் கதைகளுக்கு முன்னோடியானது – தீவிரக் காதல், சமூகத் தடைகள், பிரிவு, சோகமான முடிவு எனும் பாணியிலான வகை.
நிசாமி, ரூமி, ஹாஃபிஸ் போன்ற கவிஞர்கள் காதலை ஆன்மீகத் துய்ப்பாக எழுதினார்கள். உலகியற் காதல் இறைக்காதலின் எதிரொளிப்பு எனும் படியாக இருந்தன அவை.
தமிழில் சிலப்பதிகாரம்
5-ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் எழுதிய “சிலப்பதிகாரம்” தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான காதற் கதைகளில் ஒன்று. கண்ணகியும் கோவலனும் திருமணம் செய்துகொண்டு கற்பு நெறிப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள். கோவலன், மாதவி என்ற நடன மங்கையின் காதலில் விழுகிறான். கண்ணகி காத்திருக்கிறாள். இறுதியில் கோவலன் திரும்பி வருகிறான். அவர்கள் புதிய வாழ்க்கை தொடங்க மதுரை செல்கிறார்கள். அங்கே கோவலன் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்படுகிறான். கணவனை இழந்த கண்ணகியின் சீற்றம் மதுரை நகரையே எரிக்கிறது.
கணவன் மீது தூய்மையான அன்பு கொண்ட மனைவியின் காதல், அவன் செய்யும் துரோகத்தை மன்னிக்கிறது, ஆனால் அவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராடும் ஆற்றல் கொடுப்பதாகவும் இருக்கிறது.
மறுமலர்ச்சிக் காலம்: காதலைத் தனிமனிதப்படுத்தல்
14-ஆம் நூற்றாண்டில் பெட்ராக் என்ற இத்தாலியக் கவிஞர் லாரா என்ற பெண்ணைக் கண்டு காதலில் விழுகிறார். அவளோ அவரைத் திருமணம் செய்யகொள்ள மாட்டாள். ஆனால் அவர் பல பத்தாண்டுகள் அவளைக் காதலித்து, அவளுக்காக சொனட் பாடல்கள் எழுதுகிறார். அவள் இறந்த பிறகும் அவர் அவளைப் பற்றியே பாடுகிறார்.
இது “பெட்ராக்கன் காதல்” என்ற ஒரு பாணியை உருவாக்கியது. நிறைவேறாத காதல், காதலியை உன்னதமாக்குதல், காதல் வலியே ஒரு வகை இன்பம் எனும் பாணி.
ஷேக்ஸ்பியர்: காதலின் உளவியல்
16-17-ஆம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் காதலின் அனைத்து வகைகளையும் ஆராய்ந்தார்.
ரோமியோ ஜூலியட் – இளம், தீவிரமான, குடும்பங்களை எதிர்க்கும், சோகமான காதல்.
“மச் அடூ அபௌட் நத்திங்” (Much Ado About Nothing) – புத்திசாலித்தனமான, சமத்துவமான காதல்.
தனது சொனட் பாடல்களில் ஆசை, பொறாமை, காதலில் காலத்தின் தாக்கம் போன்றவற்றை விரிவாக ஆராய்ந்தார்.
ஷேக்ஸ்பியர் காதலைச் சிக்கலானதாக, முரண்பாடுகள் நிறைந்ததாகக் காட்டுகிறார். அது ஒரே நேரத்தில் இன்பமும் வேதனையும், பகுத்தறிவும் பைத்தியக்காரத்தனமும், நிலையானதும் மாறக்கூடியதுமாக இருக்கிறது என்கிறார்.
காதல் இயக்கம்: உணர்ச்சியின் உச்சம்
18-19-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் “புனைவியம்” எனும் காதல் இயக்கம் (Romanticism) தோன்றியது. இது காதலை வாழ்க்கையின் மிக உயர்ந்த துய்ப்பாக உயர்த்தியது.
கோதேவின் வெர்த்தர்
1774-இல் கோதே எழுதிய “இளம் வெர்த்தரின் துயரங்கள்” ஐரோப்பாவையே உலுக்கியது. வெர்த்தர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவள் வேறொருவரைத் திருமணம் செய்கிறாள். அவனால் தாங்க முடியாது. எனவே தற்கொலை செய்து கொள்கிறான்.
இந்த நூல் வெளியான பிறகு, இளைஞர்கள் வெர்த்தர் உடை அணிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். காதல் வாழ்தலைவிட முக்கியமானது என்ற கருத்து பரவியது.
கடமையிலிருந்து காதலுக்கு
இந்தக் காதல் இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்பு – காதற் திருமணம். அதற்கு முன்பு இருந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குடும்பங்களின் கூட்டணி, சொத்துப் பரிமாற்றம், குழந்தைகள் பெறுதல், சமூகக் கடமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உலகம் முழுக்கவுமே அப்படித்தான் இருந்தது. காதல் இயக்கத்திற்குப் பிந்தைய திருமணம் என்பது இருதலைக் காதல், தன்னைக் கண்டடைதல், கண்டதும் காதல், உணர்ச்சி அடிப்படையிலான தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலானதாக மாறியது. இது மேற்கத்திய சமூகத்தை முற்றிலும் மாற்றியது. இன்று நாம் “காதற் திருமணம்” என்று சொல்வது இந்தக் காலத்தின் கண்டுபிடிப்பே.
காலனித்துவம்: பண்பாடுகளின் மோதல்
19-ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய காலனித்துவ ஆற்றல்கள் ஆசியா, ஆப்பிரிக்கா முழுவதும் பரவின. அவர்களோடே அவர்களது காதற் கருத்துக்களும் வந்தன.
இந்தியாவில் பதற்றம்
விக்டோரிய ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குக் காதற் திருமணத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் வழக்கத்தில் இருந்தது. இரண்டு கருத்துக்களும் மோதின.
இந்தியச் சீர்திருத்தவாதிகள் – குறிப்பாகத் தமிழ் மறுமலர்ச்சியாளர்கள் – திருமணச் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று வாதிட்டார்கள். பெண்களுக்குத் தெரிவுரிமை, காதலில் பெண்களின் ஒப்புதல், அவர்கள் வாழ்வில் காதலுக்கான இடம் – இவையெல்லாம் விவாதிக்கப்பட்டன.
ஆனால் இப்படியொரு கேள்வியும் எழுந்தது: நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் காதல் வரலாமே? திருமணத்திற்கு முன்பே காதல் இருக்க வேண்டுமா?
“நமது மரபில் திருமணத்திற்குப் பிறகு காதல் வளர்கிறது. இது வேறு வகைக் காதல், ஆனால் எந்த வகையிலும் குறைந்ததல்ல” என்று இந்தியர்கள் பலர் வாதிட்டார்கள்.
20-ஆம் நூற்றாண்டு: காதலின் புரட்சி
பிராய்ட்: காதலின் உளவியல்
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிக்மண்ட் பிராய்ட் காதலை உளவியல் நோக்கில் பகுப்பாய்வு செய்யத் தொடங்கினார். அவரைப் பொருத்தமட்டில், காதல் என்பது பால்மயக்க உணர்வு, குழந்தைப் பருவப் பாடுகளின் – உளநிலைச் சிக்கல்கள்களின் விளைவு என்றார்.
இது காதலை மறைபொருளாக்கியது. இது முதல் காதல் வெறும் கவிதைப் பொருள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வுக்கு உட்பட்ட ஒன்றும் என்றானது.
1960-களின் பாலியற் புரட்சி
1960-களில் மேற்கில் பாலியற் புரட்சி நடந்தது. குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை கர்ப்ப பயமற்ற பாலுறவைச் சாத்தியமாக்கியது. “சுதந்திரக் காதல்” இயக்கம், காதல், திருமணம், பாலுறவு ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்தது.
இந்தக் காலத்தில்தான் கீழ்வரும் இந்தக் கேள்விகள் பிறந்தன:
காதல் இல்லாமல் பாலுறவு கூடாதா?
திருமணம் இல்லாமல் காதல் கூடாதா?
ஒரே நபருடன் வாழ்நாள் முழுவதும் காதலில் இருக்க வேண்டுமா?
பெண்ணியம்
பெண்ணிய எழுத்தாளர்கள் காதல் என்ற கருத்தியலையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினார்கள்.
காதல் பெண்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
“எப்போதும் மகிழ்ச்சி” என்ற கதை பெண்களை வீட்டில் வைத்திருக்க உதவுகிறதா?
“காதல்” என்ற பெயரில் அதிகார ஏற்றத்தாழ்வுகள் மறைக்கப்படுகின்றனவா?
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சமத்துவக் கூட்டாண்மை, இருதலை மரியாதை, ஒருவர் மற்றவருக்கு “முழுமையாக்குபவர்” அல்ல என்ற கருத்து போன்ற உரையாடல்கள் நடைபெற்றன.
LGBTQ+ விடுதலை
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஒரே பாலினக் காதல் மெதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காதல் என்பது ஆண்-பெண்ணுக்கு இடையில் மட்டும் நிகழ்வது அல்ல என்ற கருத்து பரவியது.
இன்று பல நாடுகளில் ஒரே பால் திருமணம் சட்டப்படியாகிவிட்டது. காதல் என்பது பாலினத்தைத் தாண்டியது என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
21-ஆம் நூற்றாண்டு: எண்முறைக் (டிஜிட்டல்) காதல்
இணையப் பழகள் (ஆன்லைன் டேட்டிங்): படிமுறைத் தீர்வுக் (அல்காரிதம்) காதல்
இன்று கோடிக்கணக்கான மக்கள் டிண்டர், பம்பிள், ஹிஞ்ச் போன்ற செயலிகளில் காதலரைத் தேடுகிறார்கள். ஒரு புகைப்படத்தை வலதுபுறமோ இடதுபுறமோ தேய்த்து விடுவதன் மூலம் காதல் தொடங்குகிறது.
இது காதலை மாற்றியுள்ளதா? இது காதலை எளிதாக்கியுள்ளது – மக்கள்மயப்படுத்தியுள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். இது காதலை வணிகம் (“ஷாப்பிங்”) ஆக்கியுள்ளது, இதில் மனிதர்கள் பொருள்களாகப் பார்க்கப்படுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.
புதிய உறவு வடிவங்கள்
இன்று காதலில் பல புதிய வடிவங்கள் வந்துவிட்டன:
பன்மைக்காதல் (Polyamory) – ஒரே நேரத்தில் பலருடன் காதல் உறவு, அதுவும் தொடர்புடைய அனைவரும் அறிந்தவர்களாக, அதை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்
திறந்த உறவுகள் (Open Relationships) – முக்கிய உறவு என்று ஒன்று இருக்கிறது, ஆனால் மற்றவர்களுடன் பாலுறவு கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது
உறவுக் கட்டுடைப்பு (Relationship Anarchy) – காதல், நட்பு, பாலுறவு ஆகியவற்றின் படிநிலைகளை மறுதலித்த நிலை
ஈர்ப்பின்மை (Aromanticism) – காதல் ஈர்ப்பை உணராதவர்கள் என்றும் ஒரு குழுவினர் இருக்கிறார்கள்
இவையெல்லாம், “காதல் என்றால் என்ன?”, “அது தேவைதானா?” என்ற கேள்விகளை எழுப்புகின்றன.
சமூக ஊடகங்களின் தாக்கம்
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் மனிதர்கள் தங்கள் உறவுகளைப் பொதுவில் காட்டுகிறார்கள். ஒருவரின் “உறவு நிலை” முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இணைகள் தங்கள் காதல் வேளைகளைப் பிறரோடு பகிர்கிறார்கள்.
இது காதலை எவ்வாறு மாற்றுகிறது? காதல் இப்போது மற்றவர்களுக்குக் காட்டுவதற்கான ஒன்று என்றாகிவிட்டது.
சைட் அடித்தல், கரெக்ட் பண்ணுதல், ரூட் விடுதல் போன்ற சொற்களைப் பயன்படுத்தியவர்களின் பிள்ளைகள் இப்போது ghosting, breadcrumbing, situationship போன்ற சொற்களோடு விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழ் கூறும் நல்லுலகின் நன்மைக்காக இப்போதைக்கு அவற்றை இப்படியாக மொழி பெயர்த்து வரையறை செய்து வைப்போம்:
ஆவியாதல் (ghosting) – திடீரென தொடர்பைத் துண்டித்தல்
ரொட்டித்தூள் காட்டல் (breadcrumbing) – சிறிதாக அக்கறை காட்டி மனிதரைத் தொங்க விடுதல்
நிலைமையுறவு (situationship) – உறவா இல்லையா என்று தெரியாத நிலை.
அறிவியல் என்ன சொல்கிறது?
“காதலில் விழும்போது” மூளையில் என்ன நடக்கிறது என்பது பற்றி நவீன நரம்பியல் அறிவியல் ஆய்வு செய்கிறது. டோபமைன், ஆக்சிடோசின், செரடோனின் ஆகிய மூன்றும் காதல் வேதிப்பொருள்கள் எனப்படுகின்றன.
டோபமைன் – இன்பம், வெகுமதி, இயக்கம், உற்சாகம், கவனம் ஆகியவற்றைக் கிளறுவது.
ஆக்ஸிடோசின் – இணைப்பு, நம்பிக்கை, காதல் போன்ற உணர்ச்சிகளைக் கிளறும் இதுதான் முதன்மையான காதற் சுரப்பி.
செரடோனின் – மகிழ்ச்சி, தூக்கம், மூளைக்கும் உடலுக்குமான பரிமாற்றங்களுக்கான சுரப்பி.
இதில், காதல் மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது:
காமம் (Lust) – பாலியல் ஆசையை மட்டும் மையமாகக் கொண்டது.
ஈர்ப்பு (Attraction) – ஒருவர் மீது காதலில் விழுவதும் வெறித்தனமாகக் காதலிப்பதும் இந்த நிலையில் நடப்பது.
இணைப்பு (Attachment) – காமத்தையும் ஈர்ப்பையும் தாண்டி நீண்டகாலப் பிணைப்பு உருவாவது இந்த நிலையில்தான். அவற்றைக் கடந்துதான் இந்த நிலையை அடைய வேண்டும். அவற்றைத் தவிர்த்து நேரடியாக இந்த நிலைக்குள் குதித்துவிட முடியாது.
காதலையும் உணர்வுகளையும் ஆராயும் அறிவியல் ஒருபோதும் உணர்வுகளுக்கு ஆட்பட்டு விடாது. இந்த ஆராய்ச்சிகளைச் செய்யும் அறிஞர்கள் கூடத் தாம் காதலிக்கும் போது அறிவியலுக்கு உட்படுத்த முடியாத ஓர் உணர்வு நிலையை அடையத்தான் செய்வார்கள். உணர்வுகளை ஆய்தல் வேறு; உணர்தல் வேறு – அல்லவா?
தமிழ்த் திரைப்படங்களில் காதல்
தமிழ் திரைப்படங்கள் காதலை எவ்வாறு சித்தரித்தன என்பது தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பார்வையை எதிரொளிக்கிறது.
1950-கள், 60-கள்: அப்பாவித்தனமான – உன்னதமான காதல் பேசப்பட்டது. “மன்னாதி மன்னன்”, “பாசமலர்” போன்ற குடும்ப மதிப்புகள், தியாகம், நம்பிக்கை ஆகியவற்றை முன்னிறுத்தும் படங்கள் வெளிவந்தன.
1970-கள், 80-கள்: சோகக் காதல் நிறைந்திருந்தது. “16 வயதினிலே”, “மூன்றாம் பிறை” போன்ற சமூகத் தடைகள், சாதி வேறுபாடுகள், சோகமான முடிவுகள் பற்றிப் பேசும் படங்கள் வந்தன.
1990-கள், 2000-கள்: கல்லூரிக் காலக் காதல்கள் நிறைய இருந்தன. “காதலன்”, “காதல் கோட்டை” போன்ற இளமை, துடிப்பு, நகைச்சுவை போன்றவற்றைக் கொண்ட படங்கள் வந்தன.
2010-களுக்குப் பின்பு: இயல்பான, சிக்கலான உறவுகள் பற்றிப் பேசப்படுகிறது. “விண்ணைத்தாண்டி வருவாயா”, “96”, “சூரரைப் போற்று” போன்ற நவீன உறவுகளின் சிக்கல்கள், கனவுகளுக்கும் இயல்புக்கும் இடையிலான முரண்கள், தனிமனிதத் தேர்வுகள் போன்றவற்றைப் பேசும் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
காதலின் நிலையான மர்மம்
ஐயாயிரம் ஆண்டுகள் கடந்தும் காதல் இன்னும் நம்மைக் குழப்புகிறது, ஈர்க்கிறது, மாற்றுகிறது. மெசபடோமியாவில் இனன்னாவும் துமுசியும் பாடிய காதல், தமிழகத்தில் குறிஞ்சி மலைகளில் ஏக்கத்துடன் காத்திருந்த தலைவியின் காதல், ரூமியின் மாய ஏக்கம், ஷேக்ஸ்பியரின் ரோமியோவின் துடிப்பு, இன்று திறன்பேசியில் செய்தி அனுப்பும் இளைஞனின் பதட்டம் – எல்லாமே ஒரே உணர்வின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தானே!
காதல் மாறியுள்ளது – யார் யாரைக் காதலிக்கலாம், எவ்வாறு வெளிப்படுத்தலாம், என்ன எதிர்பார்க்கலாம் – இவையெல்லாம் காலத்துடன் மாறியுள்ளன. ஆனால் காதலின் மையம் – இன்னொரு மனிதரோடு ஆழமாக இணைய விரும்பும் ஏக்கம், அவர்களைப் புரிந்து கொள்ள விரும்பும் ஆசை, அவர்களுடன் இருக்க விரும்பும் தவிப்பு – இவை என்றும் மாறாதவை.
காதல் நம்மை மனிதர்களாக்குகிறது. அது நமக்கு மகிழ்ச்சியையும் வேதனையையும், நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும், பலத்தையும் பலவீனத்தையும் தருகிறது. அது நம்மை மரணத்தை எதிர்கொள்ள வைக்கிறது (கில்காமெஷ் அனுபவித்தது போல), நம்மை இறைமையைத் தொட வைக்கிறது (ஆண்டாள் உணர்ந்தது போல).
இன்று, 21-ஆம் நூற்றாண்டில், காதல் பல புதிய வடிவங்களை எடுத்துள்ளது. ஆனால் அதன் சாறு அப்படியேதான் உள்ளது. நாம் இன்னும் காதற் கவிதைகள் எழுதுகிறோம், காதற் பாடல்கள் பாடுகிறோம், காதற் கதைகள் சொல்கிறோம். அவற்றையெல்லாம் கேட்கும் போது சுவைக்கிறோம்.
காதலாற்றுப் பாதை தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது. அது எங்கே போகிறது? எதிர்காலத்தில் காதல் எவ்வாறு இருக்கும்? யாம் அறியோம். ஆனால் ஒன்று உறுதி – மனிதர்கள் இருக்கும் வரை, காதலும் இருக்கும்.
***
பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

