நேர்காணல்: ஐசக் பேசில் எமரால்ட்
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ஐசக் பேசில் எமரால்டுடன் உரையாடுகையில் அவர் உருவாக்கும் படிமங்களின் பின்னுள்ள சமூக – அரசியல் – கோட்பாட்டு பார்வையை அணுக்கமாக புரிந்துகொள்ளமுடிகிறது. ஐசக் பேசில் எமரால்ட் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். சமகால எழுத்து சூழலில் தனக்கென பிரத்யேகமான சொல்முறைகளையும், தொடர்ச்சியாக சோதனை முயற்சிகளாலான கதைகளையும் எழுதிவருபவர். சர்ரியல் பாணி சிறுகதைகள் இவருடைய கதையுலகின் தனித்த முத்திரை. சர்ரியல் படிமங்களின் வழியே சூழலியல், அரசியல், பண்பாடு ஆகிய அம்சங்களை வாதத்திற்கு உட்படுத்துபவர். இதுவரை ‘அபினி’ எனும் நாவலும், ‘பற்றி எரியும் நரம்புகள்’, ‘மின்மினிப்பூச்சியின் மினியேச்சர்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
- கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?
தமிழ் துணைப்பாடம் மூலம் நேரடி பரிட்சயம் ஆகியிருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் வாசிப்புக்குள் நுழையும் ராணி காமிக்ஸ், விகடன் குமுதம் உள்ளிட்ட பத்திரிக்கைகள் வழியாக வாசிப்பு பழக்கம் ஆரம்பித்திருந்தது. வாசிப்பு சூழல், கலைசெயல்பாடுகள், வழிகாட்டிகள் எதுவும் இல்லாத பின்புலம் என்பதால் ஒவ்வொன்றையும் தாமதமாகத்தான் தெரிந்துக்கொண்டேன். ஊரில் ஒரு சிறிய வட்டார நூலகம் இருந்தது. தினமும் பள்ளி முடித்து அங்கு சென்று வாரப்பத்திரிக்கைகளைப் படிப்பேன். நூலகத்தின் அருகில் இருந்த ஒரு கேசட் கடைக்கு சென்றபின் பெரிய இடைவெளி. வெகுவாக வாசிப்புப் பழக்கம் குறைந்தது. கல்லூரி நாட்களில் தமுஎகச, மகஇக அமைப்புகளில் இயங்கும் சகாக்கள் அறிமுகமாகி வாசிப்பை மீண்டும் உயிர்பிக்க வைத்தது. தீவிரமான அரசியல் வாசிப்பிலிருந்து நவீன இலக்கியத்தை வந்தடைந்த தருணம் சரியாக நினைவில்லை. இடது பின்னணியில் சிந்தனை அமைப்பு இருந்ததால், தமிழில் பரவலாகியிருந்த ரஷ்ய பெரு நாவல்கள் என்று தொடங்கி தமிழ் முன்னோடிகளின் செவ்வியல் படைப்புகளை ஆரம்பத்தில் வாசித்தேன். அப்போது நவீன தமிழ் இலக்கியம் ஓர் அமைப்பாக செய்திருக்கும் சாதனைகள் பிரமிப்பாக தோன்றியது. அது எழுதுவதற்கு முதலில் மனத்தடையை உருவாக்கியது. மரபணு மூலம் உருவான இயல்பின்மையும், அகத்தனிமையும் ஒருகட்டத்தில் எழுத்து ஒன்றே மீட்சி என எண்ண வைத்தது. புனைவு எழுதும்போது உணரும் இருப்பைக்காட்டிலும் சிறந்த தருணத்தை இதுவரை எதிலும் உணர்ந்ததில்லை.
- முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?
முதல் சிறுகதை எழுதுவதற்கு முன்பாகவே முதல் நாவல் எழுதிவிட்டேன். சிறுகதையின் கரு, நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு வளர்ப்பு பிராணி மீது வைக்கும் அன்பைப் பற்றிய எதார்த்தவாதக் கதை. வாசகசாலை மின்னிதழில் வெளிவந்தபோது ஓரிருவர் படித்து கதையோட்டம் சீராக உள்ளதாக தெரிவித்தனர்.
- அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?
பத்தில் இருந்து இருபது சதவீதம் எந்தக் களம் என்பதனை தீர்மானிப்பதில் அறிவுக்கு வேலை இருக்கலாம். பின்பு அறிவைப் பெரும்பாலும் ஒதுக்கி வைக்கிறேன். அதற்குப்பின் கதை போகும் பாதையின் பின்னால் போய்க் கொண்டிருப்பது மட்டும் தான் என் வேலை என்று நினைக்கிறேன். கூட்டு நனவிலியில் சேகரமான அனுபவங்கள் படிமங்களாக, துண்டுத்துண்டாக வெளிப்படும். அது தனிப்பட்ட இயல்பானாலும், அல்லது நுகர்ந்த படைப்புகளின் வழியாக வந்து சேர்ந்ததாக ஆனாலும், அந்த தொழில்நுட்பத்திற்கு பின்னாலிருக்கும் கோட்பாட்டை மிகப் பிந்தி அறிந்து, அதிலிருக்கும் வாசக நன்மையை தெரிந்து உடன்பட்டுக்கொண்டேன். அதைப் பின்னால் முடிந்தால் சொல்கிறேன். பெரும்பாலும் மொழியை எடுத்துக்கொண்டு தன்னுணர்வு அற்ற பயணமாகவே மாறியிருக்கும். அப்படி இல்லாத படைப்புகள் நிறைவைத் தருவதில்லை. அது எப்படி முடிகிறது? புதிதாக ஒன்றைக் கண்டடைகிறதா? என்பதனைத் தாண்டி மொழியைக் கொண்டு எந்த அளவிற்கு விளையாட முடியும்? கற்பனையை விரிக்க முடியும்? என்பதனைப் பார்க்கிறேன். மேலும் சிறுகதைக்கான மரபான நவீன வடிவங்களை ஏன் உடைக்க வேண்டும் என்பதற்காக புரிதல் வலுவாக உள்ளதால், மனித மையப் பார்வையிலிருந்து விலகி ஒரு கனவை சிறுகதையாக எழுதிப்பார்க்க முடிகிறது. இச்சிந்தனை அமைப்பு, கதைசொல்லல் முறை அனைத்துமே இங்கு ஏற்கனவே இருப்பதால், புதியதாக ஒன்றை செய்கிறேன் என்கிற பதற்றமில்லை. மொழியில் நீள்வரிகள், அதாவது ஒன்றை சொல்லி முடிவடையப் போவதும் முற்றுப்புள்ளி வைக்காமல் மடக்கி, அதற்கு நேரெதிரான ஒன்றை அல்லது சம்பந்தமில்லாதது போல் தோன்றும் ஒன்றை இணைப்பதைக் கூட புனைவின் அங்கமாகத் தான் தோன்றுகிறது. ஒரே வரியில் எதிர்கருத்து உருவாக்கும் வாக்கியங்களை தொடர்ந்து எதிர்கொள்ளும் மூளை, சிந்தனை அமைப்பை மாற்றுகிறது. இத்தகையை மொழி விளையாட்டுகள் நிலபிரபுத்துவ சிந்தனை முறைக்கு எதிரான ஆயுதங்கள் என்று நம்புகிறேன். இங்கு திரும்பத்திரும்ப மனிதர்கள் மேல் விமர்சனம் வைக்கப்படுகிறது. பெருங்கதையாடல்கள் முன்வைக்கும் அற விழுமியங்கள், மதிப்பீடுகள் கடைசியில் யாருக்கு பயன்படுகிறது? நம்முடைய முன்னோடிகளால், முன்னரே கண்டறியப்பட்ட நுட்பங்களிற்கு ஒப்பனை செய்து, இறுதியில் தோசையைத் திருப்பிப் போட்டு அடிப்பக்கம் வெந்துள்ளது என்று சொல்லும் கதைகள், நம் சமூகம் ஒரு இன்ச் அளவிற்கு முன் நகர்ந்துவிடக் கூடாது என்று தங்களை அறியாமல் சொல்லப்படுபவை. அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதைச் செய்யலாம். இனி தமிழ் மொழிக்கு கதையாடல் தொழில்நுட்பங்கள் மட்டுமே தேவை என்பது வலுவான நம்பிக்கை.
நாவல்
- ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?
கதைகளில் இயங்கும் தொழில்நுட்பங்களை மேலோட்டமாக கவனிக்கையில் நிலத்திலிருந்து விலகி எழுதுவதுப் போல் தோன்றலாம். நிலத்திலிருந்து அந்நியமான எழுத்து என்கிற விமர்சனம் சிலரால் வைக்கப்படுவதுண்டு. காரணம் வட்டார வழக்கு சொற்களின்மை, உள் உரையாடல்கள் உள்ள எழுத்துமுறை. உண்மையை சொல்லப்போனால் கதைகளில் செம்மண் இல்லாத நிலத்தை எழுதுவது சிரமம். களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை தான் கதைக்களமாக இருக்கிறது. அறியாத நிலத்தை கள ஆய்வின்றி எழுதுகையில் அதன் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடக்கூடிய வாய்ப்புள்ளது. அப்படி ஒன்றை பெரும்பாலும் முயற்சிப்பதில்லை. தெரியாத ஒன்றைக் குறித்து எழுதிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், அனைத்தையும் உள்ளடக்கிய நிலத்தை அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே மனித மைய கதைகளில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன். ஊர் குறித்த கேள்விகள் அனைத்தும் விமர்சனங்களாக இருக்கிறது. ஒட்டுமொத்தமான நிலத்தின் தற்போதைய பிரச்சனை சூழலியல் என்பதானால், இரண்டாவது தொகுப்பில் அத்தகைய கதைகள் இடம்பெற்றது. சென்னையில் அதிகமாக புழங்கிய இடத்தைக் கொண்டு மட்டும் இரு கதைகள் எழுதியுள்ளேன். பால்யம் தாழ்வுணர்ச்சியினால் ஒடுங்கிப்போய் தனிமையில் இருந்துக்கொண்டு, சுற்றி நடப்பவற்றில் பங்குக் கொள்ளாமல் ஓர் அந்நியனாக அனைத்தையும் உற்றுநோக்கும் தன்மையுள்ள உதிரியாகவே இருந்திருக்கிறேன். அந்த நிலையும் கூட எழுத்திற்கு உதவுவதாகவே எண்ணுகிறேன். இரவு மேகக்கூட்டங்கள் விலகி வானம் பளிச்சிடும்போது குவியலாய் விரிந்துக் கிடக்கும் நட்சத்திரங்களை பார்க்கும்போது உருவாகும் மனநிலையை, புனைவு எழுதும்போது உருவாக்க நினைக்கிறேன்.
- உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ?
முதல் நாவல் “கரமஸோவ் சகோதரர்கள்” வாசிப்பு தந்த உந்துதல் தான் எழுத வைத்தது. ஆயிரம் பக்கங்களுக்கு மேலான அகவயமான உணர்ச்சிக் கொந்தளிப்புகளை பக்கம், பக்கமாக வாசித்து முடிக்கும்போது, மண்டைக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் சொற்களை ஒருக்கட்டதில் இறக்கி வைத்தாக வேண்டும். அப்படி ஒரு உந்துதல் முதல் படைப்பிற்கு மட்டும் தான் நிகழ்ந்தது. அதற்குப்பின் பல்வேறு இலக்கிய வகைமைகளின் அறிமுகமும், தமிழ் மொழியில் நிகழவேண்டிய சாத்தியங்கள் குறித்த கனவும் பரீட்சாத்தமான முயற்சிகளை செய்வதற்கு உந்துதலாக அமைந்தது. மேலும், இப்போதைக்கு உந்தித் தள்ளி உத்வேகம் அளித்துக் கொண்டிருப்பவர் கவிஞர் பச்சோந்தி.
- எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?
ஆதர்சம் என்று சொல்வதைவிட நம்முடைய சிந்தனை முறை ஓரளவிற்குப் பொருந்திப்போகும் எழுத்தை வாசிக்கும்போது ஒருவித நெருக்கம் உருவாகும். அப்படி தமிழ் செவ்வியல் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நூலில் ஓரிடத்தில் ‘அவனோடு எந்த முரணும் வந்ததில்லை, ஏனென்றால் அவன் என்னிடம் பேசவே இல்லை, கதவைத் திறந்து என்னை பார்க்க உள்ளே வந்தவுடன் நான் அவனாக மாறிவிட்டேன். அவன் அவனிடம் பேசுவதில் என்ன முரண் வரப் போகிறது’ (இதே வாக்கியம் இல்லை, அர்த்தம் மட்டும்) இப்படியொரு இடம் என் மனநிலையோடு நெருக்கமாக உணர்ந்த இடம். அந்த பிரதி நினைவுப் பாதை; ஆசிரியர் நகுலன். அடுத்தபடியாக பிரதியே முக்கியம் என்பதை தமிழ் சூழலில் அறிமுகம் செய்த தமிழவன் அவர்களின் படைப்புகளை வாசித்தபோதும் இது நான் நம்பும் இலக்கியத் தரப்பின் முன்னோடி எழுத்து என்பதனை அறிந்துக் கொண்டேன். அவரது ஆரம்பக்கால பிரதிகள் (இந்த சொல்லை தமிழுக்கு கொடுத்தவர் அவர் தான்) ஆதர்சமானவை. “ஸ்கொயர்” போன்ற ஒரு சிறுகதை நாற்பது வருடங்கள் முன்பே எழுதப்பட்டிருக்கிறது என்பது நம்ப முடியாததாகவும், ஆச்சரியம் நிறைந்ததாகவும் உள்ளது.
- சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
உற்றுக் கவனிக்க வைக்கும் ஒரு சித்திரம் கிடைத்தால் போதும். எலியட்ஸ் கடற்கரை சாலையோரம் நடந்துக்கொண்டிருந்த போது அங்கிருந்த குப்பைத்தொட்டியில் அச்சு அசலான வெட்டப்பட்ட மனிதத் தலையின் சிலையைக் கண்டேன். உண்மையான மனிதனின் தலையைவிட அளவில் சற்று சிறியதாக இருக்கலாம். ஆனால், பார்ப்பதற்கு மனிதனின் தலை தான் குப்பைத் தொட்டியில் கிடப்பது போல் இருந்தது. அந்த சித்திரம் ‘இரவானால்’ சிறுகதையாக ‘நீலம்’ இதழில் வெளியானது. இதைத்தவிர சென்னையின் மையமான ரிப்பன் மாளிகைக்கு பணி நிமித்தமாக குறைந்தபட்சம் வாரம் மூன்று நாட்கள் வீதம் மூன்று வருடங்கள் சென்றேன். அங்கு சிறு தொழிலாளர்கள் முதல் பெரிய அதிகாரிகள் வரையிலும் மனிதர்கள் மீது அதிகாரத்தை எப்படியெல்லாம் பிரயோகித்து ஆர்கசம் அடைகிறார்கள் என்பதை எரிச்சலுடன் கவனிப்பேன். சுற்றி மிகவும் பரபரப்பாக இருக்கும் அந்த நிலத்தில் தான் உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்ததாகவும், ஒரு தீ விபத்து ஏற்பட்டு வண்டலூருக்கு மாற்றப்பட்டதும், வரலாற்றைப் படித்து தெரிந்தபோது புனைவுக்கான சித்திரம் உருவாகிவிட்டது. அங்கே தான் அதுவரை போர்ஹேசை படித்திராத, ஆனால் போர்ஹேஸ் கதைகளைப் போன்று எழுதும் படைப்பாளி (யார்?) நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்து ஆரம்பத்தில் பணிபுரிந்திருக்கிறார் என்பதும், தமிழின் முதன்மை எழுத்தாளர் ஒருவர் அங்கிருக்கும் மூர் மார்க்கெட் அருகே மேன்ஷனில் தங்கியிருந்திருக்கிறார் முதலிய தகவல்கள், அவர்களைப் புனைவுக்குள் கொண்டு வந்து அதிகாரத்திற்கு எதிரான இரண்டு சிறுகதைகளை (மனிதக்காட்சி சாலை, நிலத்தடியில் நகரும் பிரேதங்கள்) எழுதினேன். அந்த அதிகார மையத்திற்கு சென்று தான் இரண்டு சிறுகதைகளோடு மூன்றாவதாக வாழ்க்கைத் துணையும் கிடைத்தது. அந்தக் காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை.
- சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணார்த்தத்துடனான செயல்பாடா
வரலாறு, தொன்மங்கள், பெருங்கதையாடல்களில் இணைக்கப்படுவதினால் பலனிருப்பதாக நம்பவில்லை. இதனால் தொன்மத்தில் இருக்கும் விமர்சனக் கூறுகள், அல்லது மாற்றப்பட வேண்டிய விழுமியங்கள் மாறாமல் அப்படியே கடத்தப்படுகிறது. அது ஒற்றைப்படையான பார்வையை வழங்கும். மேலும், இவை அனைத்துமே ஒற்றைப் பிம்பத்தை மண்டைக்குள் கட்டமைப்பதாக உள்ளது. பிம்பங்கள் எப்படி நம்மை விழுங்குகிறது என்பதனைப் பார்க்கிறேன். கருத்தைவிட பிம்பம் முக்கியமென வரும்போது தான் எனக்கு ஆந்த்ரே பிரட்டன் உதவி செய்கிறார். ஒன்றைப் பலவாக பார்க்கும் பயிற்சியை எழுத்து தான் செய்தாக வேண்டும். ‘புரியும்படியான நேரடியான கதை எழுதலாம் இல்லையா?’ என்ற கேள்வியை பலர் எழுப்புவதுண்டு. இப்போது நமக்கு வந்து சேர்ந்திருக்கும் சிந்தனை முறைமைக்கு முதல் காரணம் இலக்கியம் என்பதனை உணராதவர்களின் கூற்று இது. இலக்கியத்திலிருந்து பல்வேறு கலைவடிவங்கள் வழியாக என்றாவது ஒருநாள் வெகுஜனப் பரப்பிற்கு வந்து சேரும். இங்கு தான் தொன்மங்களை கூராய்வு செய்து தூக்கி வீசி, வாசகனிடம் ஒன்றிணைக்க சொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. என் நிலம் பழைய வேணாடு. தமிழ் நிலத்திற்கு முற்றிலும் அந்நியமான நிலம். இங்கு பல தலைமுறைகளாக கிறிஸ்துவ தொன்மங்கள் வேரூன்றிக் கிடக்கிறது. பிற மதச் சின்னங்கள் இருந்தாலும், பெரும்பான்மையாக கிறிஸ்துவ சின்னங்களை அடையாளமாகக் கொண்டு தான் ஒவ்வொரு நிலத்தையும் மனச் சித்திரத்தில் நினைவுக்கு கொண்டு வர முடியும் என்றளவிற்கு. அதற்கு முட்டிடிசான் பாறை, சீடர்கள் வந்து தங்கிய தேவாலயங்கள் என்று நிறைய சொல்லலாம். எனவே தான் இந்த நிலத்தை எழுத வேதாகமத் தொன்மங்கள் கொண்டு எளிதாக புனைவில் அணுக முடியும் என்று நினைக்கிறேன். அதிலிருந்து புனைவுகள் வழியாக பின் அமைப்பியல் சார்ந்து புதிய சிந்தனையை உருவாக்க முடியும். மேலும் இது உலகளாவிய தொன்மங்களாகவும் இருப்பதால், இந்நிலத்திலிருந்து உலகத் தன்மையையும் எளிதாக அடைந்துவிட முடியும் என்றுக் கருதுகிறேன். மேலும், ஏற்கனவே பின் நவீன கூறுகளோடு இருக்கும் தொன்மங்களைத் தொடுவதில்லை. மிகவும் புனிதமான, ஒழுங்கான, பழமைத் தன்மையோடு எவை இருக்கின்றன என்பது தான் முக்கியமாகப் படுகிறது. ஆனால், இது அனைத்துமே என்ன காரணம் என்று யோசித்து தொகுக்க முடிகிறதே தவிர, எழுத்தில் என்னை அறியாமல் நடக்கும் விஷயங்கள் தான் மிகுதியாக உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ இப்படி எழுதுகிறேன் என்று சொல்லலாம். ஒவ்வொரு நகர்வுகளும் மெதுவாக இருப்பினும், திட்டமிடல் எதுவுமின்றி பிரக்ஞையற்று முன்னகர்வதாக நினைக்கிறேன். மேலும், மேற்கூறிய கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவை அணுக வேண்டிய அவசியமில்லை. வாசக கூட்டு நனவிலியின் அறிதல்களைக் கொண்டும், தன் நிலத்தின் சித்திரத்தைக் கொண்டும் அணுகுவது இக்கதையாடலின் நோக்கம் என்பதால், உள் அடுக்குகளை சொல்வதை ஒரு எல்லைக்குள் நிறுத்துவது தேவையாகப்படுகிறது. பிரதியின் குரல் மட்டுமே முக்கியம்.
- சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து
சமகால இலக்கியம் குழுக்களில் இயங்குவதாக பலராலும் விமர்சிக்கப்படுகிறது. முகநூலில் எழுதப்படும் விமர்சனத்தை வாசித்து பரவசமாகி நூலை வாங்கி ஏமாற்றமடைந்தாக பதிவிடும்போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது. ‘சர்வதேச விருதுகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கான மாபெரும் படைப்பை நான் எழுதியுள்ளேன். பணிவோடு என் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்று என் நூலை வாசியுங்கள்’ என்று சந்தைப் படுத்தப்படும் சமகால படைப்புகளில் சரியான ஒன்றை தேர்வு செய்வது கொஞ்சம் கடினமான காரியம். ஆனால் குறிப்படத் தகுந்த முயற்சிகள் தமிழில் எல்லாக் காலத்திலும் நடப்பது போன்று, வாசக ஏற்பை பொருட்படுத்தாமல் இப்போதும் நடப்பதாகவே நினைக்கிறேன். ரசிக்கும் படைப்புகள் குறித்து சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் நல்ல படைப்புகளைத் தருகிறார்கள். எண்ணிக்கை அளவுகளில் மாறுபாடுகள் இருக்கலாம்.
- உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?
நேரமேலாண்மையில் போதாமை உள்ளது. எந்த சூழலிலும் எழுதும் திறன் இன்னும் வாய்க்கவில்லை. ஆனால், எப்போதும் எழுதுவது குறித்த சிந்தனை ஓட்டங்களும், எழுதாமல் இருந்ததற்கான குற்ற உணர்ச்சியும் அதிகமாக இருக்கும். சிறுகதைகள் எழுதுவதைவிட அதற்கான முன் தயாரிப்புகளுக்கு அதிக நேரம் எடுக்கும். பாபிலோன் அரசன் நேபுகாத் நேச்சரையும், மணிமேகலை – சுதாமதியையும் குமரிக்கு அழைத்து வரும்போது நல்லபடியாக கவனிக்கவேண்டும் என்ற பதற்றம் எப்போதுமுண்டு.
- உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து
இப்போதைக்கு சிறுகதையாடலாக ஒரு நாவல் எழுதும் திட்டம் உள்ளது.
***
நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.




