Tuesday, May 5, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்மதுஷன் சிவன் கவிதைகள்

மதுஷன் சிவன் கவிதைகள்

1
டிப்படையில் பலூன் ஒரு வெடிக்கும் கச்சா பொருள்;
அது ஊதிப்பெருக்கும் போது அழகுறும்
ஒரு விளையாட்டுப் பொம்மையின் சாயலைப்பெறும்
ஊழ் வினையின் பிடியில் அலைக்கழியும்
மனிதனைப்போல நிலையில்லாது அலைவுறும்
சோர்ந்த நிலையில் இருந்து காற்றை உள்வாங்கி
மெதுவாக மெதுமெதுவாக
பெருத்து பெருத்து பெருத்து
ஒரு நிலையில் உருப்பெருத்தலை நிறுத்தத்தூண்டும்
அதன் நிறுத்த தூண்டும் சமிக்ஞைகளை
எச்சரிக்கையாக கவனித்தபடி இருக்க வேண்டும்
எச்சரிக்கை மணி ஒலிக்கும் கணத்தை
உணர்ந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்
தோல் விரிந்து கொண்டே வரும், பதற்றம் அறவே கூடாது
ஒவ்வொரு பலூனிற்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கும்
அளவீடுகள் வேறுபடும்
சமயங்களில் எச்சரிக்கை மணி ஒலிக்காமலே வெடித்து விடும்
அப்படி வெடித்து விடநேர்ந்தால்;
அப்படி வெடித்துவிடும் வாய்ப்புகள் உண்டென தயாராகவிருந்தால்;
அந்த வெடிப்பு பூ மலர்தலைப் போல கடந்து போய்விடும்;
தயாராக இல்லாத போது எதிர்பாராதபோது
வெடித்து விட நேர்ந்தால் ,
வீழ்ந்து வெடித்த எவுகணையின் பாதிப்புக்களை நிகழ்த்திக்காட்டும்.

2
ஆடையில் ஒட்டி இடம்பெயரும்
குறு விதைகளைப்போல உதிர்ந்திடாது
பதியம் தேடி அலைந்து
சின்னதான பரிதவிப்பை உருவாக்கி
உள்ளுறக் கனன்று எரிந்து வெடித்துச் சிதறும்
தருவாயில்;
மேகம் சூழும், அங்கிங்கென எங்கும் விழும் துளிகளில்
மருதானிச் சாயத்தில் இருந்து
கைகளை விடுவித்துக்கொள்ள நாட்கள் எடுப்பதைப் போல
முகம் காட்டி பின், முதுகு காட்டி
என்புகளாகி நரம்புகளாகி
ஆண்குறியாக புடைத்து நின்று.
ஒரு பரிகாசம்;அடர்ந்த நெருப்பை படரவிடுகிறது.

3
புகைக்கும் மின்சாதனத்தை எறிந்து விட்டேன்
தூரமாய் எறிந்து விட்டேன்
தூரமாய் தூரமாய் வெகுதூரமாய் எங்கேயோ
அயலண்டவாசியின் படுக்கையில் போய்
வீழும் தூரமாய் எறிந்து விட்டேன்
அதை ஒரு விளையாட்டு பொருளாய்,
ஒரு முகமில்லாத பொம்மையாய்
விளையாடிப்பார்க்கிறான்
பின் எதை கிடைத்தாலும் வாயில் வைத்து விளையாடும்,
தன் குழந்தையிடம் கொடுத்துவிடுகிறான்
நொடிகளில்;மெதுமெதுவாய் மெது மெதுவாய்
புகை வருகிறது
புகையை உள்ளெடுக்க
உணர்வுகள் மாறுபடுவதை
விந்தைகள் நிகழ்வதை உணரும் பெழுதில்;
புகைக்கிறான்,புகைத்துக்கொண்டே இருக்கிறான்
சில மணிகளில் அல்லது நாள் முடிவதற்குள்;
திரவம் தீர்ந்துவிடுகிறது
மறுபடி மறுபடி புகையை உள்ளெடுக்கும் முயற்சியில்
ஏமாற்றமடைந்தவன்
தேவையற்ற பெருளென வீசி எறிகிறான்
தூரமாய் தூரமாய் வெகு தூரமாய்
அயலண்டவாசியின் படுக்கையறையில்
வீழும் தூரமாய் வீசி எறிகிறான்

ஏன் எறிந்தேன் என மறந்து விட்டிருந்த நான்
என்னுடையதேயான புகைக்கும் மின்சாதனம்
எனக்கு அருகில் வந்து விழுந்ததும்
திரவத்தை நிரப்பி புகைக்க ஆரம்பிக்கிறேன்
சில நாட்கள் தொடர்ந்து புகைக்கிறேன்
புகைத்துக் கொண்டே இருக்கிறேன்
அதில் அதிகப்படியான ரசாயனங்கள் இருப்பதை
மனைவி திட்டியதை, இடது நெஞ்சு வலித்ததை
மாடிப்படி ஏறி இறங்கும் போதெல்லாம் இளைத்ததை ,
நினைவுக்கு திருப்புகிறேன்
மறுபடியும் தூரமாய் தூரமாய் தூரமாய்
அயலண்ட வாசியின் படுக்கையில் வீழும் தூரமாய்
வீசி எறிகிறேன்
மறுநாள் மீளவும் என் அருகிலேயே வந்து விழுகிறது

4
பிராணணைக் கட்ட வைத்து விட்டதால்;
எங்கு போவதென்று அதற்கு தெரியாது
அதன் முகம் சிதைக்கப்பட்டிருக்கிறது
புன்னகைத்தபடியே நீரில் மூழ்கிப் போக வேண்டும்
ஒன்றிரண்டு மூன்று என வெளிவரும் போது சிரிப்பின்
சத்தம் அதிகரித்து இறுதியாக சிரித்தபடியே மூழ்கிப்போக வேண்டும்;
பெரும் கூட்டத்தின் விருப்பங்கள், தெரிவுகள், பேராசைகள்,
அழுத்தும்; மெதுமையாக தொடங்கி, இறுக்கமாக
பின் எழுந்து விடமுடியாதபடி அழுத்தும்
வழியும் கண்ணீர் பருகக் கிடைக்கும்.
குருதியை பிழிந்து;
ஏதும் கோரிக்கைகள் விருப்பங்கள் இருக்கிறதா?
ஏதும் கோரிக்கைகள் விருப்பங்கள் இருக்கிறதா?
ஏதும் கோரிக்கைகள் விருப்பங்கள் இருக்கிறதா?
காதுக்குள் ஒலித்தபடியே இருக்கும் பின்
அங்கிருந்து நடக்கவைத்து ஒவ்வொரு படியாக இறக்கி
கூட்டிப் போகும் பொழுதில்
சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படித்தபடியே நகர வேண்டும்
“அழுகுரல் யாருக்கும் கேட்காது
கண்ணீரை விரயம் செய்யாதீர்கள்
இங்கிருந்து கண்ணீர் கூட பருகக் கிடைக்காது”

5
கடல் தன் பிரியமான அலைகளை சுமந்தபடி
கரையை அடைந்து தன் பிரியத்தை
கரையிலேயே தவிக்கவிட்டு வேறொரு பிரியத்தை
சுமந்துவர நகர்ந்து சென்று விடுகிறது
கடலின் ஆர்பரிப்பின் முன் அலைகளின் மீதான அதன் காதல்;
ஏதோ ஒரு இடத்தில் பெரும்
அமைதியாகிறது
அலைகள் ஆர்பரிப்பின் வழி நிகழ்பவை
ஆர்பரிக்கும் போதெல்லாம் நிகழ்பவை

என் முன் இருக்கும் கடல் ஒரு பிரபஞ்சப் பேரமைதியின்
ஒரு மிகச்சிறிய ரூபத்தை வெளிக்காட்டியபடி இருக்கும்
அதன் ஆழமான பேரமைதியில் பிரபஞ்சம்
ஆழ்ந்து உறங்குகிறது
சூரியன்; வருகிறது பின் போகிறது பின்
வருகிறது பின் போகிறது
ஆழ்ந்த அமைதியில் சப்பணமிட்டு
கரையில் அமர்ந்திருப்பவன் நான்; யாருமல்ல நான்
என் அமைதியை மெது மெதுவாக உள்வாங்கி
ஆர்பரிக்கத் தெடங்குகிறது,
என்னிடம் அலைகளைத் தருகிறது,
பின் ஒரு பொழுதில் என்னை முழுதாக
எடுத்துக் கொள்கிறது

6
முகங்களை மூடியபடி ஒளிந்து கொள்கிறார்கள்
இது முறையற்ற வினையாடல் என்பது அவர்களுக்குத் தெரியும்;
ஒளிந்து கொள்ளும் இடங்களை கண்டடைவதற்கு
கண்களை அகலவிரித்து,
ஒரு பிரமாண்ட பிரகாசத்தை வெளிக் கொணர்ந்து
சூரியனைப் போலவும் சந்திரனைப் போலவும்
இரவு பகலென இடை விடாது;

பிரகாசமுள்ள இருள் பேரருள் உடையது
பிரபஞ்சத்தின் அத்தனை பிரகாசத்தையும்
உறிஞ்சி உருப்பெருக்கி அரக்காதி அரக்க
ரூபமாக உருக்காட்டியபடி இருக்கும்
எப்பெரு வெளிச்சமும் ஊடறுக்க முடியாதபடி
காப்பரண்களை சுழலச் செய்யும்
வெளிச்சங்கள் மண்டி இடும்
கால் கடுக்க கடுக்க நிற்கும்
கூர் ஆயுதங்கள் ஏந்திப் போர் செய்யும்
வெப்பத்தளல்களை உருட்டி விடும்
இறுதியில் சாஷ்டாங்கமாக மண்டி இட்டு
பின் சரண்டைந்து,இருளோடு இருளாக,
இருள்; ஒரு முகமாக தன்னைக் குறுக்கி மறு முகமாக
தன்னைப் பெருக்கி பேரண்டமாகும்

7
ஆழமாக நேசித்த நகரம்
நேருக்கு நேராய் சந்திக்கக் கிடைக்கையில் தூரமாக இருக்கும்,
இரத்தத்தில் ஒட்டாத தூரம்
அடர் ஜாமத்தையும் நண்பகலையும் ஒத்த தூரம்
அந்தத் தூரம் முட்செருப்பை கால்களில்
அணிய வைத்து ஓடப்பணிக்கும்;

8
எங்கிருந்து வந்தாய் என கேட்கப்பட்டால்;
கொதிக்கும் நெருப்புப் பாளங்களை உருக்கி
செம்மண்ணை அப்பி படி செய்து
உருகியதை உள் வார்த்து
உருவமென உருக்கொண்டேன் என
ஆசை தீர அறிவிப்புச்செய்யலாம்
அறிவிப்பு முடியும் தருவாயில்
மீளவும் உருகிப்போகுமளவிற்கு
பரிகாசம் மேலெழும்
கூரையைப் பிளந்து வானைப்பிளந்து மேலெழும்
பூமியை இரு துண்டாக்கும்
பிரபஞ்சம் துகள் துகளாக உதிர்ந்து வீழும்

9
பூர்வீக நிலத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவன்;
விழுந்து புரண்டு உருண்டு முதல் நடை வைத்து
முதன் முதலாய் பறித்த சிவப்பு செவ்வரத்தம் பூவை
உன்னிடம் அர்பணிக்கும் போது;
உன் திருக் கோலம் மறைக்கப்பட்ட உருவமாக;
கண்கள் ஒளி மீட்ட
எங்கெல்லாம் வெளிச்சம் பரவுகிறதோ
அங்கெல்லாம் நீயென்றலைந்தேன்
கருணையில் இருந்து விழிக்கும் பகலாக
உனது குரல்;

10
பரந்த வானத்தில் எங்கேயோ தூரமாக
அடி வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல
துடித்தபடி இருக்கும் அவனின் வெளிச்சம்
சூரியனின் ஆர்பரிப்பை ஒத்தது;
பிரபஞ்சப்பிரகாசத்தை சுமந்த குழந்தையைப் போல
எரிமலைக்குழம்பாக கொதிக்கும் உள் வெளிகளில்
இருந்து வெளிப்படுவது உறைய வைக்கும் பேரருள்;
ஒரு போதும் உள்ளிருந்து கடந்திடாது
வெளிப்படும் ஏகாந்த அற்புதங்கள்
அவன் சாயல் ஒத்த நிழல் பிரவாகம்;
விசத்தை பருகியபடி இருக்கிறான் மரிக்காதிருக்கிறான்
அமிர்தத்தை உமிழ்கிறான்;

-இன்னும் எத்தனை முறைதான் என் கபாலத்தை நெறிப்பீர்கள்
என் கண்களை கட்டிப் போடுவீர்கள்
பெரும் செழிப்புடைய காட்டில் இருந்து
குரலெழுப்பும் பறவைகளைப் போல
என் பிரபஞ்சத்தின் இருள் விலக நானே சூரியனாக
மாற வேண்டுமா,
சில காலம் என் பரிசுத்த குரலைக் கேளுங்கள்
என் குருரமான குட்டிக் கண்களால் பூமியைப்
பார்த்திருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன்
தாளாத கொதி நிலையில் வரும் கொப்பளங்கள்
கண்களுக்கு தெரிகிறது.
“அண்ட சராசரங்களின் பேரொளியே”
என் கண்களை திறக்க வைப்பாய்
நாசித் துவாரங்கள் வழி உள்ளெடுக்கும் காற்றில்
அண்டங்களை சுழல வைத்து
ஆழப் பெரிய அனாதியற்ற நிகழ்வுகளை நடத்துவிப்பாய் காலமே
அற்புத தீர்கதரிசனங்கள் என் உள்ளிருந்து வெளிப்படுவன
அகமும் புறமும் ஒன்றென தெரிவிக்கும் பொழுதில்
தீவிர வாசனை உடைய கண்கள்
தீராத வாசனையை கசிந்தபடி இருக்கும்
மென் அகங்காரம் இனிப்புத்துவர்க்கும் சுனை;
வெளிப்படுவது,
எல்லாம் அறிந்த பாகனின் புன்னகை;”

***

மதுஷன் சிவன் – (1990 ஜீலை 25) கவிஞர் மற்றும் ஓவியர். 2003ம் ஆண்டில் இருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். இதுவரை ஆறு கவிதை தொகுதிகள் எழுதியுள்ளார், 2025 இல் பரியலம் என்ற தொகுதி வெளிவந்தது. மின்னஞ்சல்:mathusansivam@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here