Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்ஆர்.கே.ஜி கவிதைகள்

ஆர்.கே.ஜி கவிதைகள்

பூமாதேவி என்னுடன் எதையோ பேச நினைக்கிறாள்.
கவிதைகளின் காலம்
என நான் எண்ணிக் கொண்டிருந்த பொழுது
எந்த தொடர்பும் இல்லாமல்
வானத்தில் அந்த ஒளி தோன்றியது.
பழகி வந்த புராணங்களைக் கொண்டு
அந்த ஒளி தேவர்களின் சஞ்சாரம் என்று தான்
முதலில் யூகித்தேன்.
செய்தித்தாளிலும்
இரண்டு நாடுகளுக்கு இடையே போர்
என்று தான் சொல்லியிருந்தார்கள்.
மத்தியில் எங்கள் நிலம் இருந்ததால்
பட்டும் படாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாட்கள் செல்லச் செல்ல
அந்த ஒளி
என் வானத்தை விட்டு நீங்குவதாக இல்லை.

எங்கள் ஊரில்
போர் ஒரு சாதாரணமான சொல்லாக மாறி விட்டது.
போரைக் குறித்து அறிமுகம் இல்லாத மாமாவும் மாமியும்
அதைக் குறித்து உரிமையாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
கச்சா எண்ணெய் என்றும்
கடல்வழி முக்கிய வணிகப் பாதை என்றும்
சர்வாதிகாரியான ஒரு நாட்டின் தயவிற்காக
இரு நாடுகள் மோதிக் கொள்வதாகவும்
சாதாரணமாகப் பேசிக் கொண்டார்கள்.
அந்த வெளிச்சத்தை தரிசித்தபடி
போர் தேவையற்றது என்று சிலரும்,
அரிதான கண்டுபிடிப்புகள்
போர்க் காலங்களின் பிள்ளைகள் என்று சிலரும்,
இதுவரை கவலையேப்படாத
அறம், அருள் குறித்தெல்லாம் கூட
பேசத் தொடங்கினார்கள்.
இந்தப் போர் எந்த திசையில் செல்கிறது,
வரும் காலங்களை இந்தப் போர் எப்படி மாற்றும் என
புத்தகங்களிலும் இணையத்திலும் பதிவிட்டார்கள்.

வானத்தில் நின்ற வெளிச்சம்
என்னை நெருங்கத் தொடங்கியது.
அதன் வெம்மையை நாங்கள் உணரத் தொடங்கினோம்.
உடல் தகிக்க,
எங்கள் எண்ணங்கள் இன்னும் உக்கிரமாக மாறின.
எதிரிகளைத் தெரிந்தும்
அவர்களைக் கொல்ல முடியாத கோபம்,
இயலாமையின் தனிமை.

அந்த வெளிச்சம் என் முன்னால்
நடக்கத் தொடங்கியது.
உலகின் மொத்தப் பேராசையின் வடிவமாக
அது திரண்டிருந்தது.
என்னை நோக்கி வந்த அந்த பேரொளியை
அதன் சிறுமையின் காரணமாக
நான் வணங்க விரும்பவில்லை.

இத்தனைக்கும்
நான் நிற்கும் இந்த நிலம்
சமீபமாக வந்து சேர்ந்தது தான்.
என் தாய்நிலத்தை குறித்து
ஏனோ
அந்தக் கடைசி நொடியிலும்
நான் நினைக்க விரும்பவில்லை.

இறப்பதற்குள்
இந்தக் கவிதையை
எப்படியாவது கிறுக்கி விட வேண்டும்.

நான் ஆசையாக வளர்த்து கொண்டிருந்த
தென்னங்கன்றை நோக்கி ஓடினேன்.
அதை இறுக அணைத்தபடி
என் முன்னால் நிற்கும்
அந்த ஒளியின் கண்களைப் பார்த்தேன்.
அதன் கண்களில்
சொல்ல முடியாத ஒரு கனிவு, ஒரு ஏமாற்றம்.

பேரொளியைப் பேரொலி சூழ்ந்தது.
எங்கும் கூச்சல், அலறல்.
தென்னங்கன்றை என் கைக்குள் பிடித்தபடி
காதை கரங்களால் பொத்தி
உடலை நிலத்தில் சாய்த்தேன்.
“அய்யோ, எதுவும் பேசாதீர்கள்…
அமைதியாக இருங்கள்.
பூமாதேவி என்னுடன் எதையோ பேச நினைக்கிறாள்.”

பேர் அமைதி.

தூரத்தில்
கடல் என் சார்பாக
உலகம் அழியும் வரை பேசியது.


இரவு எனும் கரும் மழை.

எத்தனையோ முறை
அவளுடன் பேசிப் பேசி
இரவுகளை
கட்டிப் போட்ட ஞாபகம்.

பெரிய சித்தாந்தங்களைப் பேசும் பொழுது
சலனமின்றி
கன்னத்தில் கை வைத்து கேட்டுக் கொண்டிருப்பாள்.

அவ்வப்போது
பேசுவது பிடித்தால்
நெற்றியில் முத்தமிடுவாள்.

எனக்குத் தெரியும்…
நான் பேசும் சொற்கள்
அவள் உலகம் சார்ந்தவை அல்ல.
இருந்தும்,
பேசிக் கொண்டே இருப்பேன்.

அக்காலங்களில்
மாலைச் சூரியன்
வானில் ஒட்டி வைத்தது போல
நகராமல் நிற்பான்.

நான் பேசுவதையெல்லாம்
கேட்டுக் கொண்டிருந்தவள்
ஒரு நாள்
மௌனமாக என்னை விட்டு நகரத் தொடங்கினாள்.
நானும் கோபப்படாமல்
அவளை
அவள் உலகத்தில் விட்டுவிட்டு
என் இடத்திற்கு திரும்பினேன்.

இப்பொழுதெல்லாம்
மாலையில் வீட்டின் மாடியில் நின்றபடி
தனியாக
சூரிய அஸ்தமனங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

காற்று
நினைவுகளை மகரந்தம் என்று புரிந்து கொள்ளாமல்
தூசியெனத் தட்டிச் செல்கிறது.

தனிமை,
என்னை நூறாகக் கிழித்து
அந்தி சூரியன் முன்
படையலாகப் போடுகிறது.

இத்தனை நாள் தவிர்த்த
இரவு எனும் கரும் மழை.
துளித் துளியாகத் தூறி
எனை முழுதாக
நனைக்கிறது.


ஆச்சிப் பாட்டியின் Autopsy

எப்படி பொதுவுடைமை ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டதோ,
அன்பும் கொண்டாடப்பட்டது
என்று சொல்லும் காலத்தில் தான் நாம் இருக்கிறோம்.
அந்த காலத்தைச் சேர்ந்தவள் என் ஆச்சிப் பாட்டி.

பாட்டிக்கு பொதுவுடைமை தெரியாது.
அவளுக்கு தெரிந்தது எல்லாம்
அவள் சமைத்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியலை
குறிப்பாக, பாத்திரத்தின் விளிம்பிலும் அடியிலும் ஒட்டிக் கிடக்கும்
அந்த எண்ணெய் மிதக்கும் நறநற கத்திரிக்காயை
அவள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் என்பதே.

வாய்ப்பமைந்து,
எல்லோரும் சாப்பிட்ட பின் ஏதேனும் எஞ்சியிருந்தால்,
சமைத்த பாத்திரத்தில்
சோற்றில் நீரும் மோரையும் ஊற்றி
தானும் உண்பாள்.

பாட்டி பிறந்தது வேலூரில்; இறந்தது சென்னையில்.
முதல் பிள்ளையான மாமா
அவள் போட்டதையெல்லாம் உண்டார்.
அம்மா, மூக்கை உறிஞ்சியபடி
“கடன்காரி” என்றும் “மூளி”என்றும் எதை எதையோ ஏசிக்கொண்டு
அவள் சமைத்ததை சாப்பிட்டாள்.

பேரனான நான்
கூச்சமில்லாமல்,
எந்த வஞ்சனையுமின்றி சாப்பிட்டேன்.

பல நாட்கள்,
கீரை சாதம் மணக்கும் அவள் கைகளை
என் மூக்கில் வைத்தபடி,
புடவையின் இடுக்கில்
சுருங்கிய அவள் தோலின் சருமத்தில்
தலை புதைத்து தூங்கியுள்ளேன்.

உண்மையில்,
சோறு போட்டு வளர்த்த என் பாட்டி சுப்புலட்சுமி
என் அன்னலட்சுமி,
என்னைத் தட்டி தூங்க வைத்த நித்திரா தேவி.

அவள் பிள்ளைகள் எல்லாம் நகர்ந்து போனார்கள்.
மாமா தன் மகளுக்கு வதுவை செய்தார்;
அம்மா என்னைப் படிக்க வைத்தாள்.

மாமாவின் பெண்ணிற்கு பெண் பிறக்க,
அவளுக்கும் ஒரு பெண் பிறக்க,
பாட்டி அவர்கள் வீட்டிலும் சமைத்து கொண்டே தான் இருந்தாள் .

வருங்காலங்களில்
இன்னும் எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் பிறக்கலாம்;
கிழவியும் சமைத்து கொண்டே போகலாம்.

காலம் இதை நிறுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன்.
அவள் சமைத்த அன்பை நினைக்க நினைக்க
உலகியல் பழகிய எனக்கு
ஏனோ இப்பொழுதெல்லாம் திகட்டுகிறது.

ஒரு முறையாவது பாட்டி
அவளைப் பற்றி மட்டும் யோசித்தாளா?
அணு அளவாவது மனிதத்தனமான சுயநலம்
அவளிடம் இருந்ததா?

ஒரு முறை யோசித்ததாக நினைவு.
தாத்தா தொண்ணூறு வயதில்
வாய்வாதத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொன்னபோது,
மாமாவிடம் கடுமையாக சண்டை போட்டாள்.
“சொத்தில் ஒரு பங்கு உனக்கு சேராது” என்று சொன்னாள்.
தாத்தாவிற்காக சொன்ன இந்தச் சொற்களும்
என் அளவில்
அரைகுறை சுயநலம் தான்.

ஆச்சி பாட்டி நேற்று இறந்து விட்டாள்.

இன்று
சொர்க்கத்தில் புடவையை இழுத்துக் கொண்டு,
தேவர்களுக்கு வியர்க்க வியர்க்க
பாட்டி சமைத்து கொண்டிருக்கக்கூடும்.

கண் முன் உயிரற்று என் ஆச்சிப்பாட்டி கிடக்கிறாள்.
எறும்புகள்
அவள் கைகளில் எஞ்சியப் பருக்கைகளை
எள்ளுப் பேரன்கள் போல்
உரிமையாக சுவைத்து கொண்டிருக்கின்றன.

ஆச்சிப் பாட்டியின் Autopsy முடிந்து விட்டது.
இனி நீங்களும் விரும்பியபடி
அவள் பிரேதத்தை பரிசோதிக்கலாம்.

***

ஆர்.கே.ஜி – இயற்பெயர் ராம் கார்த்திக் கணேசன். 2013 ஆம் ஆண்டு கனடாவின் கனகார்டியா பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறையில், முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது டொரோண்டோவில் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியக் குரல்களுள் ஒன்றான இவரின் நாவல்கள், ‘பாடுவான் நகரம்’ மற்றும் ‘அகம்’, யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. மின்னஞ்சல் : ramkarthiksgm@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here