1)
1) புன்கணீர்
முதன் முதலாக
முகம் பார்த்து
முழுதாய்
முப்பது வருடங்கள்
முடியப்போகிறது.
மூளை மடிப்புகளில்
ஒளித்து வைத்திருக்கும்
வடிவமதிலிருந்து
வதனம் உனது
எவ்வளவோ மாறியிருக்கலாம்;
இன்று
குரலென நினைவில்
எதிரொலிப்பதும்
எத்தனைக்கு
ஒத்துப்போகுமென
எனக்குத் தெரியாது.
எனினும்
எந்தவொரு சந்நிதானத்திலும்
எண்ணெய் இன்றி
அணையத் தவிக்கும்
விளக்கைப் பார்க்கும் போதெல்லாம்
நிறைவேறாத பிரார்த்தனை
நினைவில் மேலெழ,
கருவறைக்குள் உறையும்
இறையைப் பார்க்கவும் மறுத்து
முகத்தை திருப்பிக் கொள்வேன்.
அவ்வளவு ஒன்றும்
அதிகமில்லை;
எனது வேண்டுதல் மிகவும்
எளிமையானதுதான்.
என் நிலை
எதுவானாலும் குறையில்லை
எங்கோ தொலைவில்
கண் மறைவாக இருக்கும்
உன் பொருட்டு,
எல்லாமும் எப்போதும்
நலமென நம்பியிருக்கவே
நான் விரும்பினேன்.
உயிரை நனைக்கும்
அந்த ஈரச் சிரிப்பு
ஒருகாலுமுன் உதட்டிலிருந்து
உலராதிருக்க விழைந்தேன்.
அந் நிம்மதியையும் கூட
ஆகாதென்று ஊதியணைத்த
ஊழின் கருணையைக் கண்டு
திக்கித்து நிற்கிறேன்.
கதியின்றி
தம்மைத் தொழுபவர்களின்
நம்பிக்கையை
அடுத்திருந்து காப்பாற்றுவதால்
அல்ல, அவர்கள்
இடர்படும் வேளைகளிலெல்லாம்
இரக்கமின்றி
கைவிடுவதன் வழியாகவே
கடவுள் தன் இருப்பை
நிறுவிக்கொள்கிறார் போலும்.
வாழ்வின் அங்கதத்திற்கு
கண்ணில் நீர் வருமளவிற்கு
சிரிக்கத் தெரிந்தவர்கள்
வலிக்கு அழாதிருக்கப் பழகிக்கொள்கிறார்கள்.
தம் வருத்தங்களுக்கு
அர்த்தம் எதுவெனத் தேடி
சொற்களுக்குப் பின்னால்
அவர்கள் அலைகழிவதில்லை.

2) நம்பற்குரியது நம் நடிப்பு
இதற்கு முன்
இந்த மேடையில்
எத்தனையோ காலமாக
எண்ணிறந்த பேர்கள்
ஏற்று நடித்து வந்த
அவல நாடகம்தான்
அதே பாத்திரங்கள்
அட்சரம் பிசகாத வசனங்கள்
இப்போது நமது முறை
பார்வையாளராக அன்றி
பாத்திரமாக வேண்டும்
அவ்வளவுதான் வேறுபாடு
அவசரமாக
ஆடைகளை அணிகிறோம்
அசிரத்தையாக
அணிகளைப் பூணுகிறோம்
அலட்சியமாக
அடி எடுத்துவைத்து
அரங்கிற்குள் நுழைகிறோம்
திரை விலகத் தெரியும்
அரை இருளுக்கு
கண் பழகும்
கணப் பொழுதில்
மனம் மயங்குகிறது
வாழ்வு இதுவென.
***
க. மோகனரங்கன் கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசம்பட்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். நாமக்கல்லில் தொழில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்க் கவிஞர். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கிவருபவர். தேவமகள் அறக்கட்டளை விருது மற்றும் கவிஞர் ஆத்மாநாம் விருது வென்றிருக்கிறார்.
மின்னஞ்சல்: mohankrangan@gmail.com

அற்புதமான வகை, கவிதை ,,,
எந்தவொரு சந்நிதானத்திலும்
‘எண்ணெய் இன்றி
அணையத் தவிக்கும்
விளக்கைப் பார்க்கும் போதெல்லாம்
நிறைவேறாத பிரார்த்தனை
நினைவில் மேலெழ,
கருவறைக்குள் உறையும்
இறையைப் பார்க்கவும் மறுத்து
முகத்தை திருப்பிக் கொள்வேன்.’ —அற்புதமான கவிதை —