Saturday, May 2, 2026

வடை கடை

அருண் பிரகாஷ் ராஜ்

1

திருமணத்திற்கு முன்பு நான் குறைந்தது பத்து கிலோவேனும் குறைக்க வேண்டும் என யாமினியின் அம்மா மிகவும் உறுதியாகக் கூறுவிட்டார். அவர்கள் கேட்டது அத்தனை அசாத்தியமான காரியமாக அப்போது எனக்குத் தோன்றவில்லை. வங்கிக் கணக்கு நிறைய சம்பாத்தியம் இல்லையென்றாலும், அவருடைய செல்ல மகள் விரும்பிவிட்டாள் என்பதற்காகவும், என்னுடைய அப்பா-அம்மாவின் குணத்திற்காகவும், யாமினியின் அம்மா திருமணத்திற்கு அனுமதி வழங்கினார். எங்களுடைய முதல் சந்திப்பில் இருந்தே எனது சற்றே பெருத்த தொந்தியை முறைத்துப் பார்த்த யாமினியின் அம்மா, அவரது கணவரின் மரணத்திற்கு காரணம் அதிகமாகிப் போன கொலஸ்ட்ராலும், சர்க்கரை நோயும்தான் என இரண்டாவது முறையாக அவர்கள் வீட்டிற்கு நான் சென்ற போது அறிவுரைக் கூறி நீண்ட வகுப்பெடுத்தார். முகூர்த்த தேதி குறித்ததுமே, எடையை நிச்சயமாக குறைக்க வேண்டும் என உத்தரவிட்டார் அவர். பதிலுக்கு நான் யாமினியிடம் திருச்சியில் இருக்கும் நல்ல உடற்பயிற்சி நிலையங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டித் தருமாறு கேட்டேன்.

காதலிப்பதற்கு முன்பு எழுபத்தைந்து கிலோ மட்டுமே இருந்த நான், யாமினியுடன் பழகத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தொண்ணூறு கிலோ தொட்டுவிட்டேன். ஆஸ்பத்திரிகளும், பள்ளிக்கூடங்களும் நிரம்பியிருக்கும் திருச்சி நகரத்தில், காதலிப்பவர்களுக்காக இருப்பது திரையரங்குகளும், உணவகங்களும் தான். சமீபத்தில் இங்கு பல பூங்காக்கள் திறக்கப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலும் குடும்பமாக வாக்கிங் செல்வதற்குதான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மாலை ஆறு மணிக்கு எங்களது அலுவலகப் பணி நிறைவடைந்ததும் தில்லை நகரில் இருக்கும் ஏதேனும் ஒரு உணவகத்தில் சந்திப்பதே வாடிக்கையாக இருந்தது. எனது எடையும் கூடி, தொப்பையும் லேசாக வெளியே தள்ளியது. ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, என்ன மந்திரமோ புரியவில்லை யாமினியின் எடையும், உடலமைப்பும் இரண்டாண்டுகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உறைந்துப் போய் இருந்தது.  

தினமும் ஏதேனும் நல்ல உணவகத்திற்குப் போய், வேண்டியதை ருசியாகத் தின்று பழகிய நாக்கிற்கு ஜிம் மாஸ்டர் பரிந்துரை செய்த டயட் அட்டவணையில் இருந்த உணவு வகைகள் கசத்தன. அலுவலகம் முடிந்தக் கையோடு, நேரே உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று ஒரு மணி நேரம் செலவிட்டப் பிறகுதான் நானும் யாமினியும் சந்தித்துக் கொண்டோம். ராமலிங்கா நகரில், அவளது வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவிற்கு கூட்டிச் செல்வாள். பூங்கா வாசலில் பானிப்பூரி, மிளகாய் பஜ்ஜி, பர்மா நூடுல்ஸ் முதலான தின்பண்டங்கள் விற்கும் கடைகள் கண், மூக்கு, நாக்கு என எனது ஐம்புலன்களில் மூன்றை லேசாக சுண்டி இழுக்கும். தன்னந்தனியே ஏழு பானிப்பூரிகளை விழுங்கிவிட்டு, எனக்கு புரதச்சத்து நிரம்பிய ஒரு பொட்டலம் சுண்டலோ, பட்டாணியோ இருபது ரூபாய்க்கு வாங்கித் தருவாள் யாமினி. அப்போதெல்லாம் அவள் மீது கோபம் பீறிட்டாலும், திருமணத்திற்கென அவளது அம்மா விதித்த கட்டளையை நினைத்து என்னை நானே சமாதனம் செய்துக் கொள்வேன்.

ஆனால், அவரது கட்டளை, யாமினியின் மீதான கோபத்தை அடக்கிக்கொள்வதற்கான ஆற்றல் கொண்டிருந்ததே தவிர, என்னுடைய நாக்கிற்கு கடிவாளமிடும் வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. நள்ளிரவில் திடீரெனத் தூக்கம் கெடும்போது, யாருக்கும் எந்த சத்தமும் கேட்காத வகையில், அலமாரியில் உள்ள சம்படத்தைத் திறந்து, கடலை மிட்டாயையும் ஒரு கை மிக்சரையும் அள்ளி வாயில் போட்டுக் கொண்டு மீண்டும் தூங்கிவிடுவேன். சரியாக அவற்றை மென்று விழுங்காததால், காலை எழுந்ததும் சில மிக்சர் துகள்கள், பல்லிடுக்கிலோ, நாக்கினடியிலோ ஒட்டிக்கொண்டிருக்கும். அலவலகத்திற்கு அம்மா இரண்டு சப்பாதிகளும் நிறைய காய்கறிகளும் சமைத்து டப்பியில் வைத்து அனுப்புவார். ஆனால், நண்பர்கள் ஆர்டர் செய்யும் பீட்சாக்களிலும், பர்கர்களிலும் பங்கு கேட்டுவிடுவேன். இவ்வாறு மற்ற சமயங்களில், கட்டுப்பாடின்றி எனது நாக்கு விருப்பப்பட்டதை சுவைத்தாலும், ‘ஜிம்முக்கு’ செல்லும் போது மட்டும் ஒழுக்க சீலனாக இருக்க முயற்சித்தேன். இத்தனைக்கும், சாஸ்திரி ரோட்டில் உள்ள எனது ஜிம் அமைந்திருக்கும் கட்டிடத்தில் கே.ஃப்.சி, ஹக்கீம் கல்யாண பிரியாணி உட்பட பல ருசிமிகு உணவுக் கடைகள் இருந்தன. ஜிம் கதவைத் திறக்கும் சமயத்தில் பொறித்த கேஃப்சி கோழியின் வாசம் நாசியை வருடும். குறைந்தது உடல் பயிற்சிக்காக சென்று திரும்பும் நேரத்திலேனும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதால் ஆசையை அடக்கிக் கொண்டேன்.

ஆனால், ஒரு மாதத்திற்குள் அந்த கட்டுப்பாடும் தகர்ந்துவிட்டது. ஒரு சனிக்கிழமை மாலை, ஜிம் வாசலில் – வாகனங்கள் நிப்பாட்டும் இடத்தில் – எனது ஸ்கூட்டியை நிறுத்த இடம் கிட்டவில்லை. ஜிம் இருந்த கட்டிடத்தில் உள்ள உணவு அங்காடிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்ததால், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களீன் வண்டிகள்தான் வாகன நிறுத்தத்தை ஆக்கிரமித்திருக்க வேண்டும். அக்கட்டிடத்தின் செக்யூரிட்டி, சாலையின் எதிர்புறமாக விரியும் வீதியின் முனையில் ஸ்கூட்டியை நிறுத்தச் சொன்னார். அங்கிருந்த ஒரு டீக்கடையின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, சாலையை கடக்கக் காத்திருந்த சமயத்தில்தான், ஒரு பாட்டி தள்ளுவண்டியில் பல வகையான வடை, பஜ்ஜிக்களை நிரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அருகில் சென்று, தற்போதுதான் சூடாக எண்ணையில் இருந்து எடுத்த பருப்பு வடையொன்றை வாயில் போட்டேன். நல்ல மொறு-மொறுப்பு. மறுநாளில் இருந்து, ஜிம் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தவற்கான இடம் இருந்தாலும், சாலையைக் கடந்து சென்று, அந்த தள்ளுவண்டி கடைக்கு பக்கத்தில்தான் வண்டியை நிப்பாட்டத் தொடங்கினேன். அந்த கடைக்காரப் பாட்டியிடம் இருந்து ஜிம்முக்கு போகும் போதும், வரும் போதும் ஒரு வடையை வாங்கி வாயில் போட்டுக் கொள்வது வழக்கமாகத் தொடங்கியது.

உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய மூன்றாவது மாதத்தின் இறுதியில் வெறும் இரண்டு கிலோ எடையை மட்டுமே குறைத்திருந்தேன். யாமினியின் அம்மா மிகவும் கவலைப்பட்டார். திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்களே இருந்தன. எனவே, கருவேப்பிலை பொடியை அவரே தயார் செய்துக் கொடுத்து, தினம் அதிகாலை சுடு நீரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் என்னை குடிக்கச் சொன்னார். சரியான உடற்பயிற்சி மேற்கொண்டும், மூன்று மாதங்களில் வெறும் இரண்டு கிலோ மட்டுமே குறைந்தது எனது ஜிம் மாஸ்டருக்கு சற்று வியப்பாக இருந்தது. எனக்கும் யாமினிக்கும், நான் தின்னும் தீனிக்கு எவ்வாறு இரண்டும் கிலோ குறைந்தது வியப்பை வழங்கியது.

2

நான் தினமும் தனது கடைக்கு வாடிக்கையாக வருவதைக் கவனித்த அந்த வடைக்காரப் பாட்டி என்னிடம் ஒரு நாள் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.

“ஏம்பா, தம்பிக்கு எந்த ஏரியா?”

“வயலூர் ரோட்ல, குமரன் நகர் இருக்குதுல. அங்கதான் பாட்டி வீடு இருக்கு.”

“தினமும் இங்க வரீங்களேன்னு கேட்டேன்ப்பா. ஒன்னும் தப்பா எடுத்துக்காத”

“அய்யோ. அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி” என சொல்லிவிட்டு, சாப்பிட்ட வடைக்கான காசை நீட்டினேன். அதை வாங்கி வைத்துக்கொண்டப் பாட்டி, சில்லறை பாக்கி கொடுப்பதற்கு பதிலாக அடுத்த கேள்வியை தொடுத்தார்.

“தம்பிய பாத்தா நல்லா படிச்சவராட்டம் தெரியுத. என்ன வேல பாக்குறீங்க ?”

“நான் இன்ஜினியரா இருக்கேன் பாட்டி”

“சந்தோசம்யா, சந்தோசம்யா” என்றுக் கூறியவர், சில்லறையைத் தரவேயில்லை. எனக்கும் வாயைத் திறந்த பாக்கி காசை கேட்பதற்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. அப்படியே கிளம்பிவிட்டேன்.

மறுநாள், வழக்கத்திற்கு மாறாக, ஒரு வடைக்கு பதில், இரண்டு வடைகளை பேப்பரில் மடித்துக் கொடுத்தார் அந்த பாட்டி. நான் அதை திரும்பித் தர முயன்ற போது, “சும்மா சாப்புடியா. நீ கூடுதலா காசெல்லாம் தர வேண்டாம்” எனக் கூறினார். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக இப்படி சாப்பிடுகிறோமே என்ற குற்றவுணர்ச்சியும், மெலிந்த தேகத்துடனுள்ள அந்த பாட்டியின் மீது மெல்லிய பாசமும் ஒரு சேர எழுந்தது. வடையை விழுங்கிவிட்டு கிளம்பும் நேரத்தில், மீண்டும் என்னை அழைத்தார் அந்தப் பாட்டி.

“தம்பி. எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுறியாப்பா?”

“சொல்லுங்க பாட்டி. என்ன வேணும் ?”

”பாட்டிக்கு பிரஷர், சுகர் இருக்குப்பா. எனக்கு டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை எல்லாம் வாசன் மெடிக்கல்லதான் கெடக்கும் தம்பி. பாட்டியால அவ்வளவு தூரம் நடந்துப் போக முடியாது. எனக்காக இந்த மாத்திரையெல்லாம் ஒரு மாசத்துக்கு வாங்கிட்டு வர முடியுமா?”

என கேட்டுவிட்டு, ஒரு சிறு நோட்டையும் முந்நூறு ருபாய் பணத்தையும் நீட்டினார். அந்த நோட்டில் அவர் சாப்பிட வேண்டிய மருந்துக்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. மறுப்பேதும் கூறாமல், அவற்றை பெற்றுக் கொண்டு வாசன் மருந்தகத்திற்குச் சென்றேன். அவர் கொடுத்ததைக் காட்டிலும், இருநூறு ருபாய் கூடுதலாகவே மாத்திரைகளுக்குப் பணம் செலவானது. எனினும், வடைக்காரப் பாட்டியிடம் அதைப் பற்றி எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக, மாத்திரைகளுடன், அவற்றுக்கான ரசீதையும் சேர்த்துதான் அவரிடம் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மறுநாளேனும் அப்பணத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கைதான். ஆனால், அதைப் பற்றி பாட்டி எதையுமே குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு வடைக்கு காசு கொடுத்தால், அவர் எனக்கு மூன்று வடைகளை பேப்பரில் மடித்துக் கொடுத்தார். நான் கொடுத்த இருநூறு ருபாயை இப்படியாக பாட்டித் திருப்பிக் கொடுக்கிறார் என நினைத்துக்கொண்டேன்.

சில தினங்கள் கழித்து மீண்டும் தனக்கு ஓர் உதவி செய்யுமாறு என்னை வேண்டினார் அந்த வடைக்காரப் பாட்டி. இம்முறை மாத்திரைகள் அல்ல, பாலில் கலந்துக் குடிப்பதற்கு ‘என்சியூர்’ (Ensure) எனும் சத்து மாவை வாங்கித் தர வேண்டினார். கடுமையான உடல் சோர்வைப் போக்குவதற்கு, டாக்டர் தினமும் காலையும் மாலையும் என்சியூர் சத்து மாவைப் பால் அல்லது சுடு நீரில் கலக்கிக் குடிக்கக் கூறியதாகக் சொன்னார். நான் அதை வாங்குவதற்கு பணம் கேட்டதும்,

“வடை வித்து சம்பாதிச்ச காசெல்லாம் மத்த மருந்து வாங்குறதுக்கும், சமச்சி சாப்பிடுறதுக்குமே சரியாப் போவுது. இந்த ஒரு வாட்டி பாட்டிக்கு நீங்களே வாங்கி தாங்களே தம்பி”

என்று அவர் கூறியதும், எனக்கு ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. சரியென மெடிக்கலுக்கு சென்று அந்த சத்துமாவுப் பொடியின் விலையை விசாரித்தேன். அரைக் கிலோ பாக்கெட் ஆயிரத்தி ஐநூறு ரூபாயாம். ’கூகுல் பே’ செய்துவிடலாம் என்று செல்போனை திறந்து, வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என ஒரு முறை சோதித்தேன். அன்றாடச் செலவு, திருமணத்திற்கான சேமிப்பு – இவைப் போக வெறும் நான்காயிரம் ரூபாய்தான் எஞ்சியிருந்தது. அடுத்த மாதம் சம்பளம் வரும் வரை இதை வைத்துதான் ஓட்ட வேண்டும். சம்பளம் போட்டதும் இந்த சத்துமாவு பொடியை வடைக்காரப் பாட்டிக்கு வாங்கிக் கொடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அடுத்த சில நாட்களாக, அந்த வடைக்காரப் பாட்டியின் கடைக்கு அருகில் வண்டியை நிறுத்த எனக்கு மனமில்லை. ஜிம் வாசலிலேயே வண்டியை நிறுத்தினேன். அவர் கேட்டதை வாங்கித் தர இயலவில்லை என்று லேசான குற்ற உணர்வுதான் இதற்கு பிரதான காரணம். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு, நான் ஜிம் முடித்துவிட்டு வண்டியை எடுக்கும் போது, எதேச்சையாக சாலையின் மறுபுறம் இருந்த பாட்டியின் தள்ளுவண்டிக் கடையை பார்த்தேன். அங்கு அமர்ந்திருந்த பாட்டி, என்னையே தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்ததையும் கவனித்தேன். திடீரென கைகளை அசைத்து என்னை கூப்பிட்டார். நானோ, அவரது அழைப்பைக் கவனிக்காததுப் போல ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். யாமினியிடம் இதை சொல்லி வருத்தப்பட்ட போது, அவர் கேட்ட என்சியூர் பொடிக்கு பதிலாக வேறு ஏதேனும் விலை மலிவான சத்து மாவையோ, பழங்களையோ வாங்கித் தர உபதேசித்தாள். அவ்வாறே மறுநாள் தெருக்கடையில் ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக் கொண்டு போய் பாட்டியிடம் நீட்டினேன்.

“சாரி பாட்டி. நீங்க கேட்ட என்சியூர் பொடி பாக்கெட்டு வெல ரொம்ப அதிகம். எனக்கு அத வாங்கி தரது கஷ்டம். அதுக்கு பதிலா பழம் வாங்கியிருக்கேன். சத்துக்கு இத சாப்புடுங்க.”

“சரிப்பா, சரிப்பா. ஒரு பேச்சுக்குதான் தம்பி அதெ வாங்கித் தர சொல்லி கேட்டேன். அதுக்கு சங்கடப்பட்டுட்டா இத்தென நாளு கடை பக்கம் வரமா இருந்தீங்க.” என்று சொல்லி பழத்தை வாங்கித் தனது கூடையில் வைத்துவிட்டு அன்பாக சிரித்தார். பிறகு அவரே உரையாடலைத் தொடர்ந்தார்.

“தம்பி வீட்ல யாராரு இருக்கா?”

“நானு, அம்மா, அப்பா, தம்பி, அப்புறம் பாட்டி. மொத்தம் ஐஞ்சு பேரு”

“இன்னும் கல்யாணம் ஆவலயா தம்பிக்கு?”

“பொண்ணெல்லாம் பாத்தாச்சு பாட்டி, இன்னும் ரெண்டு மாசத்துல கலியாணம்”

“வீட்டுல பாத்தாங்களா, இல்ல நீங்களே பொண்ணு பாத்துட்டீங்களா?”

“எல்லாம் வீட்ல பாத்த பொண்ணுதான் பாட்டி” என அவரிடம் என்னுடைய காதல் கதையை விவரமாக சொல்வதற்கு மனமில்லாது பொய்யுரைத்தேன்.

“ரொம்ப சந்தோசம். பாட்டிக்கு மறக்காம பத்திரிகை வச்சிடுங்க. அப்புறம் கண்டிப்பா எனக்கு கல்யாணத்துக்கு கட்ட நல்ல பொடவை ஒன்னும் வாங்கித் தரணும்”

எனக் கூறியவாறு, நிறைய வடைகளை அள்ளி பொட்டலம் கட்டி எனது கையில் திணித்தார். வீட்டில் உள்ள அனைவருக்கும் அவற்றைத் தருமாறு வலியுறுத்திய அப்பாட்டி, அவ்வடைகளுக்கு காசு எதையும் வாங்கவில்லை. சின்ன சந்தோசத்துடன் நான் ஜிம்முக்குள் நுழைந்தேன். அன்று மாலை பூங்காவில் அமர்ந்தப்படியே நானும் யாமினியும் அந்த பாட்டி கட்டித் தந்த வடைகளைத் தின்று தீர்த்தோம்.

3

அடுத்த ஓரிரு வாரங்கள், அந்த வடைக்கார பாட்டியின் மீது எனக்கு எரிச்சலும் வெறுப்பும்தான் அதிகம் தோன்றியது. போன் ரீசார்ஜ் செய்வது, வீட்டிற்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவது, மருந்து வாங்குவது என ஓயாமல், தினமும் ஏதேனும் வேலை சொல்லிக் கொண்டேயிருந்தார். சில நேரங்களில் அதற்காக பணத்தைக் கொடுத்துவிடுவார். பல சமயங்களில் நான் தான் அவருக்காக செலவு செய்ய வேண்டியிருந்தது. இதை, அவர் தரும் ருசியான வடைகளுக்காக செய்கிறேனா, அல்லது அவரின் மீதுள்ள அன்பு அல்லது பரிதாபத்தால் செய்கிறேனா என சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. எரிச்சல் பட்டாலும், வெறுப்புத் தோன்றினாலும் அவர் கூறும் வேலைகளை ஏதோ மகுடியின் இசைக்கு ஏற்றவாறு ஆடும் பாம்பைப் போல நிறைவேற்றிக் கொண்டிருந்தேன்.

அன்றொரு நாள் மாலை, தள்ளுவண்டியில் வடைகள் எதையும் காணவில்லை. பாட்டி மட்டும் தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும்,

“பாட்டிக்கு ரொம்ப ஒடம்பு முடியல தம்பி. சீதா லட்சுமி டாக்டர்ட்ட போயி ஊசிப் போடனும். நடந்துப் போகவும் தெம்பில்ல. பஸ் ஏறி போவலாம்னா, ரொம்ப கூட்டமா இருக்குப்பா. பாட்டிய கூட்டிட்டுப் போறீங்களா?” என கேட்டார்.

அன்று ஜிம் முடித்துவிட்டு என்னை நேரே அவளது வீட்டிற்கு வர சொல்லியிருந்தாள் யாமினி. பம்பாயில் இருந்து உறவுக்காரர்கள் சிலர் திருச்சிக்கு வந்திருப்பதால், அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தாள். வடைக்காரப் பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துப் போகச் சொன்னதும், சமீப நாட்களாக அவர் மீது எனக்கிருந்த வெறுப்பு மேலும் அதிகரித்தது. எனினும், முகத்தை சுளித்தப்படி பாட்டியை வண்டியில் அமரச் செய்து, அவர் கூறிய டாக்டரிடம் கூட்டிச் சென்றேன். போனதும், ஊசிப் போட்டுவிட்டு திரும்பிவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அந்த கிளீனிக்கில் நல்ல கூட்டம். டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து, டாக்டரைப் பார்த்து ஊசிப் போட்டு முடிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. மருத்துவமனையில் காத்திருந்த பொழுதெல்லாம், இனி தவறியும் அந்த பாட்டியுடன் எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது, அவர் கூறும் எந்த வேலையையும் செய்யக் கூடாது என தீர்மானம் எடுத்தேன். எனினும், பாட்டி உறையூரில் இருக்கும் தன்னுடைய வீட்டில் அவரை இறக்கிவிடுமாறு கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. யாமினியிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. அரை மணி நேரத்தில் அவளது வீட்டிற்கு வந்து சேர்வதாக சொல்லிவிட்டு, பாட்டியுடன் உறையூரை நோக்கிக் கிளம்பினேன்.

ஏதோ குடிசையிலோ, சிறு ஓட்டு வீட்டிலோதான் அந்த பாட்டி தங்கியிருப்பார் என நினைத்திருந்த எனக்கு பெரும் வியப்பு காத்திருந்தது. நான் அவரை இறக்கிவிட்டதும், அகலமான திண்ணையும், பெரும் கல் தூண்களையும், கொண்டிருந்த ஒரு பெரிய வீட்டின் கதவுகளைத் திறந்தார் வடைக்காரப் பாட்டி. என்னை உள்ளே வரும்படி அவர் அழைத்ததும், ஒரு ஆர்வத்தில் நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். ஊருக்கு நடுவே, இத்தனை விசாலமான வீட்டில் அவர் தங்கியிருப்பது மிக விநோதமாகத் தோன்றியது. ஆனால், வீட்டினுள்ளே பொருட்கள் ஏதும் அதிகமாக இல்லை. நிறைய அறைகள் இருந்தாலும், ஒரு சிறிய கட்டிலும், பழைய டிவி பெட்டியும் தான் வரவேற்பு அறையை அலங்கரித்திருந்தன. சமையலறையை எட்டிப்பார்த்தேன். ஒரு பழைய அடுப்பும், சில சமையல் பாத்திரங்களும் மட்டும்தான் இருந்தன. எனது ஆர்வத்தை அடக்க இயலாமல் கேட்டுவிட்டேன்.

“ஏன் பாட்டி, இந்த வீடு யாரொடது?”

“இதுல என்னப்பா சந்தேகம். என் வீடுதான்”

“இவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது, ஏன் வடை வித்திட்டு இருக்கீங்க?”

“தங்குறதுக்கு வீடு இருந்தா போதுமாயா? சாப்பாட்டுக்கும், உடுத்துறத்துக்கும் வழி பண்ணனும்ல. அதான் வடைக் கடை போட்டிருக்கேன்.”

“ஏன், வீட்டில வேற யாரும் இல்லையா? வீட்டுக்காரரு, பசங்க இப்படி யாரும் இல்லையா உங்களுக்கு?”

“வீட்டுக்காரரு இருபது வருசத்துக்கு முன்னாடியே போயி சேந்துட்டாரு. மொத்தம் மூணு பசங்க எனக்கு. எல்லாரையும் ஒத்த ஆள வளத்து, கொஞ்சம் படிக்க வச்சு, வேலையும் வாங்கி கொடுத்தேன். அப்போ எல்லாம், எனக்கு உறையூர்லயே இந்த வீட்டையும் சேத்து நாலு வீடு இருந்துச்சு. மத்ததெ வாடகைக்கு விட்டுட்டு, அந்த காசுலதான் வீட்டையும், பசங்களையும் கவனிச்சிட்டு இருந்தேன். இப்படி அம்மா கஷ்டப்பட்டு நம்மல வளத்தாங்களேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம, என்னைய ஒரு வார்த்தை கேட்காம, அவுங்களே ஏதோ பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்புறம், சொத்த பிரிச்சிக் கொடுன்னு தகராறு பண்ணி, என்னோட மத்த மூணு வீட்டையும் புடிங்கிட்டானுங்க. இப்போ நான் இங்க தனியாதான் இருக்கேன். என்ன ஏதுன்னு கேக்ககூட யாரும் வரமாட்டாங்க. நான் செத்ததும் இந்த வீட்டை பங்குப் போட்டுக்கதான் கழுகு மாதிரி காத்துக் கெடக்காங்க”

என்று வடைப் பாட்டி சொல்லி முடித்ததும், எனக்கு அவர் மீது மீண்டும் பரிதாபம் தோன்றியது. அவர் முன்பொரு நாள் கேட்டதுப் போல, கல்யாணப் பத்திரிகை தரும்போது, ஒரு சேலையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். டாகடரிடம் கூட்டி சென்றதற்கு நன்றி சொன்ன பாட்டி, தேநீர் போட்டுத் தருவதாக சொன்னார். நான் அவசரமாக புறப்பட வேண்டும் என்றதும் ஒரு செம்பு தண்ணீர் கொடுத்தார். அதை குடித்துவிட்டு, அவரிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினேன். வெளியே, எனது ஸ்கூட்டியின் அருகே தடிமனாக ஒரு ஆள் நின்றுக் கொண்டிருந்தார்.  என்னை கண்டதும்,

”சார். அம்மா ஒடம்புக்கு என்னாச்சுனு டாக்டர் சொன்னங்க?”

“நீங்க யாருங்க ? ஏன் பாட்டிய பத்தி விசாரிக்குறீங்க?”

”அந்த வடைக்கார அம்மாவோட ரெண்டாவது மகன்தான் சார் நானு. கொஞ்ச நாள் அம்மா உங்ககிட்ட தினமும் பேசுறதயும், இன்னைக்கு அவுங்கள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதையும் கவனிச்சேன். அதான் கேட்டேன் சார்.”

“பாட்டிக்கு உடம்புல சத்து கம்மியா இருக்காம். மத்தப்படி ஒன்னும் பிரச்சனை இல்லையாம். ஆனா, பாட்டிதான் நீங்க யாரும் அவுங்கள கவனிக்குறது இல்லன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க. பாவங்க பாட்டி. மூணு பசங்க இருக்கீங்க. கொஞ்சம் கவனிக்கலாம்ல. இந்த வயசான காலத்தில தனியா இருக்குது.”

“அட ஏன் சார். அம்மாதான், நாங்க அவுங்ககிட்ட பேசக்கூடாது, வீட்டுக்கு உள்ளேயும் வரக்கூடாதுனு உறுதியா இருக்காங்க. நாங்களும் எவ்வளவோ, பேசிப் பாத்துட்டோம், கெஞ்சிப் பாத்துட்டோம். எங்கள அவுங்க ஏத்துக்குறதா இல்ல.”

“கலியாணத்துக்கு பிறகு நீங்க எல்லாரும் சொத்தை அவுங்க கிட்ட இருந்து பறிச்சாத புலம்புறாங்களே!”

“அது சார். எங்க மூணு பேருக்கும் லவ் மேரேஜ். எங்க அம்மாவுக்கு மருமகளோடு சுத்தமா ஒத்து வரல. எங்க வைஃப்புக்கு, அம்மா அதிகாரம் பண்ணுறதும், வேல சொல்லுறதும் சுத்தமா புடிக்கல. தினம் தினம் ஏதாவது ஒரு சண்டை வீட்ல வெடிக்கும். திடீர்னு இருக்கிற சொத்தை எல்லாம் குழுமாயில் அம்மன் கோவிலுக்கு எழுதி வைக்கப் போறேன் சொல்லி பீதியக் கிளப்பிட்டாங்க. அப்புறம் சொந்தக்காரங்கள வச்சி, பஞ்சாயத்துப் பண்ணி எங்களுக்கு வர வேண்டிய வீட்டையும் சொத்தையும் வாங்கினோம் சார். அதுக்கப்புறம், எங்களோடு சுத்தமா அம்மா பேசுறதே இல்ல.”

இவ்வாறு அவர் சொன்னதும், அந்த வடை கடைக்காரப் பாட்டியின் மகன்களின் பக்கமும் நியாயம் இருப்பதாகவேத் தோன்றியது. ஆனால், பாட்டியின் வார்த்தைகளையும் அப்படியே நிராகரிக்க முடியவில்லை. இருவர் கூறுவதிலும் கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் பொய்யும், நிறைய மிகைப்படுத்துதலும் இருப்பதாகவே மனதிற்குப்பட்டது. ஆனால், அதைக் குறித்து ஆழமாக யோசிக்கவும், விவாதிக்கவும் எனக்கு விருப்பமில்லை. யாமினி காத்துக் கொண்டிருப்பாள். பாட்டியின் பையனிடம் இருந்து விடைப்பெற்றபோது, ஐநூறு ருபாய் தாளொன்றை எனது சட்டைப் பையில் திணித்தார். பாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றதற்காக இதைத் தருகிறேன் என்றார். நான் வேண்டாமென மறுத்ததை அவர் கேட்கவில்லை. கலவையான உணர்வுகளுடன்தான் அங்கிருந்துப் புறப்பட்டேன்.

அன்றிரவு யாமினி எனக்கு அறிமுகப்படுத்திய பம்பாய் உறவினர் ஒரு சித்த வைத்தியர். நான்கு மாதங்களாக நான் உடற்பயிற்சி செய்தும் எடையை குறைக்க இயலாததற்கு காரணம் என்னுடைய உணவுப் பழக்கம்தான் எனும் ரகசியத்தை என்னை சந்தித்த பத்து நிமிடங்களில் கண்டுப்பிடித்துவிட்டார். நாவடக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கொஞ்ச நேரம் பாடம் நடத்திவிட்டு, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் அபாயங்களைப் பற்றியும் விளக்கினார். பிறகு, யோகா செய்வதால் விளையும் நன்மைகள் குறித்து ஒரு சிறிய சொற்பொழிவை நிகழ்த்தினார். கடைசியாக, தான் இணையத்தில் தினம் காலையும் மாலையும் யோக வகுப்புகள் எடுப்பதாகவும், அவற்றில் கலந்துக்கொண்டு, உணவு பழக்கத்தை சரி செய்துக்கொண்டாலே எடையை சுலபாகக் குறைத்துவிடலாம் என்றார். அவர் கூறியது அனைத்தையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த யாமினியின் அம்மா, நான் ஜிம்முக்குப் போவதை நிறுத்திவிட்டு, அவர் நடத்தும் யோகா வகுப்பில் உடனடியாக இணையுமாறு கட்டளையிட்டார். நல்லபடியாக, என்னுடைய உணவுப் பழக்கத்தை அவர் விமர்சிக்கவில்லை என நினைத்து பெருமூச்சுவிட்டேன்.

ஜிம்முக்கு செல்வதை நிறுத்திவிட்டதால், வடை கடைக்காரப் பாட்டியை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு அதன் பிறகு கிடைக்கவில்லை. ஓரிரு முறை அந்தப் பக்கம் வண்டியில் போகும் போது, சற்று தொலைவில் இருந்துதான் அவரைப் பார்க்க முடிந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டிற்கு சென்று கல்யாணப் பத்திரிகை கொடுக்கத் தொடங்கிய சமயத்தில் மீண்டும் அந்த பாட்டியின் நினைவு வந்தது. தனக்கு கட்டாயும் பத்திரிகை வைக்க வேண்டும் எனவும், அப்போது ஒரு புடவை வாங்கித் தர வேண்டும் எனவும் அவர் முன்பொரு முறை கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது. ஆனால், திருமணச் செலவு ஏற்கெனவே உச்சம் தொட்டிருப்பதால், அந்த பாட்டிக்கு வெறும் பத்திரிக்கை மட்டும் வைத்தால் போதும் என்று நினைத்தேன்.

வழக்கமாக அவர் வடை சுட்டு விற்றுக் கொண்டிருக்கும் இடம் வெறிச்சோடி இருந்தது. அந்த பாட்டியையும் காணவில்லை, அவரது தள்ளுவண்டியும் அங்கு நிற்கவில்லை. பக்கத்தில் இருந்த டீக்கடையில் விசாரித்த போது, அந்த பாட்டி உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்திருக்கிறார் என்று கூறினார். மகன்களும், மருமகள்களும் அவரைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். எனக்கு, அவரது வீடு வரை சென்று பார்க்க நேரமில்லை. முடிப்பதற்கான திருமண வேலைகள் நிறையவே மிச்சம் இருந்தன.

4

தேனிலவிற்கு கோவா சென்று, திருச்சிக்கு திரும்பிய நானும் யாமினியும் எங்களது புதிய இயல்பு வாழ்க்கையைத் தொடங்கியிருந்த சமயம் அது. எடையைக் குறைக்க யோகா எனக்கு துளியும் துணைப்புரியவில்லை என உணர்ந்ததும், மீண்டும் என்னுடைய பழைய ஜிம்முக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தேன். இம்முறை எத்தனை மாதங்கள் நான் தொடர்ந்து வரப் போகிறேன் எனும் தொனியில் ஜிம் மாஸ்டர் என்னை பார்த்தார்.

ஜிம்முக்கு வெளியே வந்த போது, பாட்டியின் தள்ளுவண்டிக் கடை வழக்கமான இடத்தில் நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். ஆனால், பாட்டிக்குப் பதிலாக வேறொரு நடத்தர வயதுப் பெண் அந்த வடைக்கடையில் அமர்ந்திருந்தார். விசாரிப்பதற்காக அருகில் சென்றபோதுதான், அந்த தள்ளுவண்டியில் பாட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த பாட்டியின் பெயர் ருக்மணி என்பதை அந்த போஸ்டரில் இருந்துதான் தெரிந்துக் கொண்டேன்.  சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவர் இறந்திருக்கிறார் என்று அதில் எழுதியிருந்தது. நானும் யாமினியும் கோவாவில் இருந்த சமயம் அது.

அன்றிரவும், அடுத்த சில நாட்களும் எனக்கு சரியான தூக்கம் இல்லை. ஏதோ குற்றம் செய்துவிட்டோம் என்ற உணர்வு மன அமைதியையும், தூக்கத்தையும் சேர்த்துக் கெடுத்தது. அடுத்த திங்கட்கிழமை காலை, வீட்டில் இருந்து நேரே அலுவலகம் செல்வதற்கு பதிலாக, சாரதாஸ் ஜவுளிக்கடைக்கு சென்றேன். நல்ல காட்டன் புடவையை வாங்கிக் கொண்டு உறையூரில் இருக்கும் ருக்மணிப் பாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டினேன். வாயிலைத் திறந்த பாட்டியின் இரண்டாவது மகன், என்னை உடனே அடையாளம் கண்டுக் கொண்டார்.

சில மணித்துளிகள் அவரிடம் விசாரித்துவிட்டு, சுவரில் மாட்டியிருந்த ருக்மணி பாட்டியின் புகைப்படத்திற்கு அருகில் சென்றேன். வாங்கி வந்திருந்த சேலையை ஒரு மாலையைப் போல மடித்து, அதை பாட்டியின் போட்டோவில் சாத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

***

அருண் பிரகாஷ் ராஜ் – வரலாற்று துறை ஆய்வு மாணவர், தில்லி அம்பேத்கார் பல்கலைகழகம். இவர் எழுதிய சிறுகதைகள் கணையாழி, அகநாழிகை இதழ்களிலும், வாசக சாலை இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் எனும் நூலை நண்பருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மின்னஞ்சல் : arunprakashrajn@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here