வில்லா கேதர்
தமிழில் : சுபஶ்ரீ முரளிதரன்
மேற்கத்திய உலகில் வாழ்வதில் வெற்றி பெறுவதற்கு, ஒரு பெண் வலிமை மிக்கவளாக இருந்தால் மட்டுமே முடியும். ஹெஸ்டர் அப்படியானவள் என்பதில் சந்தேகமே இல்லை. மேக்ஃபெர்சன் மாகாணத்தில் மக்கள் வளமான விவசாயி என்று வில்லியத்தைப்பற்றி பேசும்பொழுது, வழக்கமாக அவரது மனைவியை ஒரு நல்ல மேலாளர் என்பதையும் சேர்த்தே சொல்வார்கள். அவள் நாவண்மையும் அதிகார தோரணையும் மிக்க ஒரு நிர்வாகத் திறன் கொண்ட பெண். அவள் கணவன் அவளிடம் வியாபாரத்தைப் பற்றி கலந்தாலோசிக்க முற்படாததன் காரணம், அவள் அதற்கான அவசியத்தை ஏற்டுத்த காத்திருக்கவில்லை என்பதாலேயே.
ஹெக்டருடைய அறிவுரைகள் அனைத்தையும் ஒரு மனிதன் பின்பற்றுவது என்பது மனித செயல்பாடுகளுக்கு சாத்தியமில்லாதது என்றாலும், அவற்றில் சிலவற்றை வில்லியம் பின்பற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். போரடிக்கும் இயந்திரத்தை அவர் திறந்த வெளியில் விட்டுவைத்திருப்பதை ‘பொறுப்பற்றத்தனம்’’ என்று அவள் கடுமையாக விமர்சித்தபோது, ஒருவழியாக அதற்காக ஒரு கொட்டகையைக் கட்டினார். புல்லைக் கொண்டு பன்றிக்கு வேலி அமைப்பதைப்பற்றிய அவரின் கருத்தினை இளக்காரமாக அவள் பார்த்தபோது, தன்னுடைய ”கோபத்தைக் காட்டும்விதமாக” சுரத்தேயிலாமல் அந்த வேலையைத் தொடங்கினார். ஆனால், கடைசியில் அந்த வேலையை முடிப்பதற்கு அருகாமையிலிருந்த நகரத்திற்கு சென்று முள்கம்பியை வாங்கி வந்து அதை முடித்தார். முதல் கனமழை பெய்தபொழுது, பன்றிகள் உள் நுழைய ஆங்காங்கே அந்த புல்வேலிக்கு அடியில் சிறுசிறு பாதைகளை ஏற்படுத்திக் கொண்டபோது, அவர் மனைவி சாப்பாட்டு மேசையில் மந்திரியிடம் பன்றி குட்டிகள் மணல்வீடு கட்டிய கதையை ரசித்து சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டு, ஒரு நொடியும் தன் கண்ணியத்தை இழக்காதவராக இருந்தார் – சொல்லப்போனால் மௌனமே அவருக்கான பலமும் தஞ்சமும்.
வில்லியம், தன் பிள்ளைகள் அவர்களுடைய தாயாரை மதிப்பதற்கான முழு முன்மாதிரியாக திகழ்ந்தார். அவரை அறிந்தவர்கள் அவர் தன் மனைவியை மதிப்பதோடு ரசிப்பதாகவும் ஐயப்பட்டனர். அண்டை வீட்டாருக்கு அவர் பேராசையும், பிடிவாதமும் லட்சியமும் கொண்ட ஒரு கடினமான மனிதராகவே தெரிந்தார்.
அவர் எப்பொழுதாவது வீட்டுக் கணக்கை பார்க்கும் சோர்வான நாட்களில், ஒருபோதும் அவருடைய மனைவியின் அங்கி மற்றும் குல்லாய்களுக்கான செலவிற்கு ஆட்சேபம் தெரிவித்ததில்லை. எனவே தேவையற்ற சின்னஞ்சிறு பொருள்களை ஹெஸ்டெர் தன் மகன்களுக்காக செலவு செய்துவிட்டு, அதை அவள் கணக்கில் சேர்த்து விடுவாள்.
ஒரு மழை நாள் இரவில் ஹெஸ்டர் ஜன்னலுக்கு அருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி காலுறைகளை தைத்துக் கொண்டிருந்தாள். அவள் நாற்காலியில் பலமாக ஆடியபடியே அவள் கையிலிருந்த நீளமான ஊசியை காலுறை கிழிசலை தைக்கப் பயன்படும் உருளையான உபகரணத்தின் வழியாக மும்மரமாக முன்னும் பின்னும் செலுத்தியதில், அவள் ஏதோ மனக்கிலேசத்தில் ஆழ்ந்திருக்கிறாள் என்பது சிறு பார்வையிலேயே தெரிந்துபோகும். வில்லியம் மேசையின் மறுபக்கம் அமர்ந்து விவசாய பத்திரிகையொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். அவர் மனைவியின் முகத்திலிருந்த கொதிப்பைப் பார்த்தும், சுத்தமாக மழிக்கப்பட்ட அவரின் முகம் எந்தவித அக்கறையும் காட்டாமல் இருந்தது. அவர் இரவு உணவு நேரத்தில் அவள் கிண்டலாக பேசியதையும், அவளது வளர்ந்த பிள்ளைகள் அமைதியாக சாப்பிடுவதையும் கவனித்திருக்கலாம். இரவு உணவு பாதியில் இருந்தபோது அவர்களின் இளைய மகன் பில்லி திடீரென தட்டை தள்ளிவிட்டு, துக்கம் தொண்டையை அடைக்க மேசையிலிருந்து நழுவினான். வில்லியம் டவேனர், வீட்டு விவகாரங்களில் புயல் அடிக்கும் பொழுதுகளில், அதற்கு முன்னான முன்னெச்சரிக்கைகளை பொருட்படுத்துவதில்லை.
இரவு உணவிற்குப்பின் அவர்களது மகன்கள் உழுததினால் ஏற்பட்ட தூசியை அகற்றிக் கொள்வதற்காக மாட்டுக் கொட்டகையின் பக்கமாக இருந்த குளத்திற்கு சென்றனர். அவள் ஜன்னலருகே உட்கார்ந்திருக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்கும் சத்தமும் சிரிப்பொலியும் இரவின் அமைதியில் ஹெஸ்டரால் கேட்க முடிந்தது. அவள் ஒரு மணி நேரமாக எப்படித் துவங்குவது என்பது குறித்து பல்வேறு திட்டங்களை மனதில் சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் திட்டமிடல்களில் தீவிரம் காட்டாது நேரிடையாகவே தன் கருத்திற்கு வந்துவிடுபவள். கடைசியில் நூலை துண்டித்து தைத்துக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, திட்டவட்டமாக,
“வில்லியம், பிள்ளைகளை நாளைக்கு சர்கசுக்கு அனுப்புவதில் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை”
வில்லியம் தன் விவசாய பத்திரிகையை வாசிப்பதைத் தொடர்ந்தார், ஹெஸ்டருக்கு பதிலுக்காகக் காத்திருக்கும் வழக்கம் இல்லை. அவர் வாயைத் திறந்து எதையும் சொல்வதற்கு முன்பே, அவற்றைத் தானாக யூகித்து அவற்றிற்கு பதிலளித்துவிடுவாள்.
“வெய்யில் காலம் முழுவதும் உங்களுக்கு ஆள் பற்றாக்குறை இருந்தது, அதனால் பயல்களைக் கடினமாக வேலை வாங்கினீர்கள். ஒரு மனிதன் அவன் வேலையாட்களுக்கு இணையாக தன் ரத்தத்தையும் சதையையும் பயன்படுத்தத்தான் வேண்டும். நமக்கு செலவு செய்ய போதுமான அளவிற்கு பணம் இருக்கிறது, அதோடு நம் மகன்கள் அதில் சிறிதளவு மட்டுமே செலவழிக்கிறார்கள். நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தாமலே, எப்படி நிதானத்துடனும் கடினமாகவும் உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. சர்கஸ் பார்ப்பதில் எந்த கெடுதலும் இல்லை என்பதோடு, அவர்கள் அதற்கு சென்றதும் இல்லை. ஓ, ஜிம் ஹோவ்லியின் மகன்கள் குடிக்கிறார்கள், குடித்துவிட்டு அப்படியே சென்று ரகளை செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், நம் மகன்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் வில்லியம். விலங்குகள் மூலம் நிறைய கற்க முடியும், இங்கு இந்த புல்வெளி பிரதேசத்தில் நம் மகன்களால் நிறைய பார்க்க முடிவதில்லை. நாம் வளர்ந்த விதம் வேறு, நம் மகன்களுக்கு இங்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை, நீங்கள் அவர்களை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் கத்துக்குட்டிகளாகவேதான் இருப்பார்கள்”.
ஹெஸ்டர் ஒரு கணம் நிறுத்தினாள், வில்லியம் எந்த பேச்சும் கொடுக்காமல் பேப்பரை மடித்து வைத்தார். ஹெஸ்டர் பெர்கின்சுடன் வில்லியம் போன்ற அமைதியான ஒருவனால்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்று விர்ஜினியாவில் இருக்கும் அவரின் சகோதரி அடிக்கடி சொல்வாள். வில்லியம் தன் மனைவி வழிபாட்டுக் கூட்டங்களின்போது ஒரு ஆணுக்கு இணையாக சரளமாக பேசுவதில் அவளுடைய ”பேச்சாற்றல்” குறித்து ரகசியமாக பெருமைப்படுபவர். அவர் அந்த வகையில் தன் முயற்சிகளை வழிப்பாட்டுக் கூட்டங்களில் சிறு பிரார்த்தனை என்பதோடு நிறுத்திக்கொள்வார்.
ஹெஸ்டர் இன்னொரு சாக்ஸை எடுத்துக் கொண்டு தொடர்ந்தாள்.
“சர்கஸுக்கு போவதால் யாருக்கு எந்த கெடுதலும் நடந்ததில்லை. ஏன், என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்! நான் சிறியவளாக இருந்தபோது ஒரு முறை சென்றிருக்கிறேன். கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன். அது ப்யூடவுனில் நடந்தது, நான் அதற்கு என் மனதை எப்படி தயார் செய்து கொண்டேன் என்று நினைவிருக்கிறது. மழைக்குப் பிறகு அந்த செம்மண் வழித்தடம் அவ்வளவு பயங்கரமானதாக இருந்தது என்றாலுமே என் தந்தை என்னை மட்டும் கூட்டி சென்றிருக்காவிட்டால், நான் அவரை மன்னித்திருக்கவே மாட்டேன். அங்கு ஒரு யானை, ஆறு கிளிகள், ஒரு மலைப் பூனை, ஒரு குரங்குக் கூண்டு மற்றும் இரண்டு ஒட்டகங்கள். ஆகா! அது எனக்கு கண் நிறைந்த காட்சியாக இருந்தது”.
ஹெஸ்டர் கையிலிருந்த கருப்பு சாக்ஸை கீழே போட்டுவிட்டு, தலையை ஆட்டியபடி தன் நினைவுகளில் மூழ்கிப்போய் புன்னகைத்தாள். அவள் வில்லியத்திடமிருந்து எதையும் இன்னும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவர் வழிபாட்டுக் கூட்டங்களில் சொல்லக்கூடிய அதே விதமான தொனியில் அவர் பேசியதைக் கேட்டு பதற்றமானாள்.
“இல்லை. அங்கு ஒரு ஒட்டகம் மட்டுமே இருந்தது. மற்றொன்று ஒற்றை திமில் கொண்டது”
அவள் விளக்கை உற்று நோக்கியபடியே அவரையும் கூர்ந்து பார்த்தாள்.
“எப்படி, உங்களுக்கு எப்படி தெரியும்?”
வில்லியம் பேப்பரை மடித்து விட்டு சற்றே தயக்கத்துடன் “நானும் அங்கு இருந்தேன்” என்று பதிலளித்தார்.
ஹெஸ்டர் ஆர்வம் மின்ன “நல்லது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்திருக்கிறது வில்லியம்! நீங்கள் அப்பொழுது நம் பில்லியைவிடவும் பெரியவனாக இருந்திருப்பீர்கள். நான் உங்களப் பற்றி நினைவுகூற உங்களின் இளவயதில் பார்த்ததேயில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால், ஓடைப்புறம் வாழ்ந்த உங்களுக்கு மலைப்பகுதியில் வாழ்ந்த எங்களுடன் ஒருபோதும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் நீங்கள் எப்படிப் போனீர்கள்? நீங்கள் நம் பிள்ளைகளிடம் இருப்பதைவிட உங்கள் தந்தையார் உங்களிடம் அதிக கண்டிப்புடன் இருந்தார்”.
“நான் போயிருக்ககூடாது என்று நினைக்கிறேன்” என்றார் மெதுவாக. “ஆனால் பயல்கள் முட்டாள்தனமான வேலைகளை செய்வார்கள். நான் அதற்கு முந்தைய குளிர் காலத்தில் நரி வேட்டைக்கு சென்றிருந்தேன், அதில் கிடைத்த உபரித் தொகையை வைத்துக்கொள்ள என் தந்தை அனுமதித்திருந்தார். நான் சோளக்காட்டில் களை பறிக்க டாம் ஸ்மித்தின் ஆட்களை அமர்த்திவிட்டு, அப்பாவிற்குத் தெரியாமல் அந்த காட்சிக்கு சென்று விட்டேன்”
ஹெஸ்டர் இதமாக பேசினாள், “அபத்தமாக பேசாதீர்கள் வில்லியம்! அதனால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் எப்பொழுதுமே கடினமாகவே உழைத்திருக்கிறீர்கள். சர்கஸை சிறு வயதில் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். அந்த கோமாளி உங்களுக்கு வயிறு வலிக்க சிரிப்பை ஏற்படுத்தியிருப்பார்”.
வில்லியம் கால் மேல் கால் போட்டபடி, தன் நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.
“நான் இப்பொழுது அந்த முட்டாள்தனமான ஜோக்குகளை சொல்லலாமா என்று யோசித்துப் பார்க்கிறேன். சில சமயம் பிரசங்கம் அதிக நேரத்திற்கு நீளும்போது அதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. நான் அணிந்துகொண்டிருந்த புதிய காலணிகள் என் காலைக் கடித்து புண்ணாக்கிக்கொண்டிருந்தது, ஆனால் அந்த மனிதன் கழுதை மீதேறி சென்றதைப் பார்த்தபோது அதெல்லாம் மறந்தே போய்விட்டது. நான் நகரத்தின் பார்வையிலிருந்து விலகியதுமே காலணிகளைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு வெறுங்காலுடன் சேற்றில் ஓடியதை நினைத்துப் பார்க்கிறேன்”.
ஹெஸ்டர் அவளுடைய நாற்காலியை பக்கத்தில் நகர்த்திக்கொண்டு, முழங்கைகளை மேசைமீது ஊன்றியபடி “ஐயோ பாவம்” என்றாள். “குழந்தைகளுக்கு எவ்வளவு மோசமான காலணிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சர்கஸ் கூடாரங்கள் எடுத்து செல்லப்படுவதைப் பார்க்க நான் ஓடைக்கு பின்புறம் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் கரையோரமாகத்தான் வந்தார்கள் தெரியுமா. சர்கஸ் ஆட்கள் அங்கு ஓடைப்பக்கம் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக நிறுத்தினார்கள், அந்த யானை அடங்காமல், அங்கிருந்த சுங்கச் சாவடியின் வாயிலிலிருந்த ஒரு மரத்தின் கிளையை முறித்தது, அங்கிருந்த எழுத்தர்கள் அது எங்கே அந்த கட்டிடத்தையே கீழே தள்ளிவிட்டு, தாங்கள் இறந்துவிடுவோமோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால், நான் அது இப்படி செய்ததைப் பார்த்தேன். அது ஓடையில் அளைந்து தன் தும்பிக்கையில் நீரை நிரப்பிக்கொண்டு, அந்த எழுத்தர் சர்கஸ் செல்ல வேண்டி இஸ்திரி செய்து கட்டில்மேல் தயாராக வைத்திருந்த ஆடையின் மீது, ஜன்னல் வழியாக நீரைப் பீய்ச்சியடித்து அதை கெடுத்து விட்டது.”
“அது எலனுக்கு ஏற்பட்ட சோதனையாக இருந்திருக்கும்” என்று வில்லியம் சிரித்தபடி கூறினார். “அவர்கள் காலத்தில் அவள் மிகவும் முக்கியமானவள்”.
ஹெஸ்டர் தன் நாற்காலியை வில்லியத்திற்கு இன்னும் அருகில் நகர்த்திக்கொண்டாள். குழந்தைகள் பெரியவர்களாகத் தொடங்கியதிலிருந்து அவளுக்கு தன் கணவருடனான பேச்சுவார்த்தைகள் என்பது குடும்ப பொருளாதாரம் மற்றும் செலவீனங்கள் குறித்தானதாக மட்டுமே என்றாகியிருந்தது. அவர்களின் உறவு ஒரு வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைதாரருக்குமானது போன்று வியாபார நிமித்தமானதாக ஆகிவிட்டிருந்தது. தன் மகன்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவள் தன்னையும் அறியாமலே தன் கணவருடன் ஒருவித தற்காப்பு மற்றும் பகைமை மனோபாவத்தையே கடைபிடித்து வந்தாள். கடன்காரன் ஒருவன் கந்துவட்டிக்காரனிடம் எப்படி பேரம் பேசுவானோ அதைவிட அதிகமாக தன் மகன்களுக்காக ஹெஸ்டர் தன் கணவனிடம் மல்லுக்கட்டுவாள். இந்த வகையான போட்டி மனோபாவம் அவர்களுக்கிடையில் இருந்த நெருக்கமான உறவின் நினைவுகளை மங்கிப் போகச் செய்திருந்தன. இன்று இரவு எதிர்பாராதவிதமாக அவர்களிடையே நடந்த இந்த ரகசியங்களின் பரிமாற்றங்கள், பொதுவாக நினைவு படுத்திக்கொண்டவைகள் காதலின் அதிசயத்தை கொண்டிருந்தது. அவர்கள் பழைய அண்டை வீட்டார் பற்றி, அவர்கள் வளர்ந்த அந்த பிரதேசத்தில் அவர்களுக்கு தெரிந்த முகங்களைப்பற்றி, நெடுங்காலமாய் மறந்துபோயிருந்த அவர்களின் இளமைக் கால சம்பவங்களை, திருமணங்கள், சுற்றுலாக்கள், பனிச்சறுக்கு விளையாட்டுகள் ஞானஸ்நானக்களைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். பல வருடங்களாக வெண்ணெய் விலை, முட்டை விலை மற்றும் இதர சில பொருட்களின் விலைகளைத் தவிர அவர்கள் வேறு எதையுமே பேசியிருக்கவில்லை என்பதால் நீண்ட காலமாக பிரிந்திருந்தவர்களைப்போல ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள அவர்களிடம் நிறைய இருந்தன.
கடிகாரத்தில் மணி பத்து அடித்தவுடன், வில்லியம் அவரது வாதுமை மரத்தாலான பெட்டகத்தைத் திறந்தார். அதிலிருந்த சிவப்பு நிற தோல் பணப்பையிலிருந்து ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்து ஹெஸ்டருக்கு அருகாக மேசைமீது வைத்தார்.
“பயல்களிடம் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குதிரைகளை வேகமாக விரட்ட வேண்டாம் என்றும் சொல்லிவிடு” என்று மென்மையாக சொல்லிவிட்டு தன் படுக்கைக்குச் சென்று விட்டார்.
ஹெஸ்டர் விளக்கை ஊதி அணைத்துவிட்டு நெடுநேரம் இருட்டில் உட்கார்ந்திருந்தாள். அவள் வில்லியம் எங்கு பணத்தை வைத்துவிட்டு சென்றாரோ அதே இடத்தில் வைத்துவிட்டு சென்றாள். அவளுக்குத் தான் எதையோ இழந்துவிட்டதைப் போலவும் தொலைத்துவிட்டதைப் போலவும் ஒரு வலியை உணர்ந்தாள். காலம் எப்படியோ தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தோன்றியது..
வேலியோரமாக வளர்ந்திருந்த சிறிய லோகஸ்ட்(இலந்தை) மரங்களில் வெண்ணிற மலர்கள் பூத்திருந்தன. அந்த இரவில் அவற்றிலிருந்து காற்றில் மிதந்து வந்த அதன் அடர்த்தியான மணம், நெடுநாட்களுக்கு முந்தைய ஒரு இரவை அவளுக்கு நினைவிற்குக் கொண்டு வந்தது. வசந்த காலத்தின் முதல் விப்-பூர்-வில் (whip-poor-will) பறவையின் குரல் கேட்கும் போது, ஹாக்கின்ஸ் கேப் (Hawkins Gap) பகுதியின் அந்த முரட்டுத்தனமான, துடிப்பான இளம்பெண்கள் அவளைப் பிடித்து, அந்த இலந்தை மரங்களின் (locust trees) கீழ் சிரித்துக்கொண்டே போராடும் அவளை அடக்கி, அவளுடைய மார்பில் அவளது காதலனின் தலைமுடிச் சுருள் இருக்கிறதா என்று தேடினார்கள்; ஏனெனில், முதல் விப்-பூர்-வில் பறவை பாடும்போது, ஒவ்வொரு பெண்ணின் மார்பிலும் அவளது காதலனின் தலைமுடி இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த பெண்களில் இருவர்தான் அவளுடைய திருமணத்தின்போது பெண் தோழிகளாய் இருந்தார்கள். ஹெஸ்டர் மிகவும் மகிழ்ச்சியான மணப்பெண்ணாய் இருந்தாள். அவள் எழுந்து மெதுவாக வில்லியம் படுத்திருந்த அறைக்குள் சென்றாள். அவர் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார் என்றாலும் அவ்வப்போது கொசுக்களை விரட்டுவதற்காக தன் கைகளை முகத்திற்கருகே அசைத்துக் கொண்டிருந்தார். ஹெஸ்டர் வீட்டின் முன் அறைக்கு சென்று, அவள் சகோதரி இறப்பதற்கு முன் செய்திருந்த மெழுகு ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்கள் அடங்கிய கூடையிலிருந்து கொசுவலையை எடுத்தாள். விலைமதிப்பற்ற இந்த அலங்காரப் பொருட்களை சரக்கு வண்டியில் எடுத்துவருவதை ஹெஸ்டர் விரும்பவில்லை என்பதால் இவற்றையெல்லாம் தகர டப்பாவில் வைத்து அவளுடைய மகன்களில் ஒருவன் விர்ஜினியாவிலிருந்து கொண்டுவந்தான். அவள் படுக்கையறைக்கு திரும்பிச் சென்று, வில்லியம் தலைமீது அந்த கொசுவலையை விரித்தாள். பிறகு கட்டிலுக்கருகில் மகன்கள் திரும்பி வரும்வரை அவருடைய ஆழ்ந்த சீரான சுவாசத்தை கவனித்தபடி அமர்ந்திருந்தாள். அவள் தன் மகன்கள் அவர்களுடைய தந்தையை எழுப்பிவிடாமலிருக்க எச்சரிக்கை செய்ய வேண்டி வெளியில் சென்றாள்.
“பசங்களா, நான் உங்களுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக சீக்கிரமே எழுந்து விடுவேன். நீங்கள் சர்கஸ் காட்சிக்கு செல்லலாம் என்று உங்கள் தந்தையார் சொல்லிவிட்டார்” என்று கூறியபடி பணத்தை மூத்தவனிடம் கொடுக்கும்போதே தன் கணவன் மீது அவளுக்குள் ஒருவிதமான உணர்வுப்பூர்வமான பற்று ஏற்பட்டதில், நறுக்கென “ஜாக்கிரதையாக இருங்கள், தேவையில்லாமல் வீணாக்கிவிடாதீர்கள். உங்கள் தந்தை இந்த பணத்திற்காக கடினமாக உழைக்கிறார்” என்றாள்.
பயல்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டதோடு தங்களுடைய வலிமையான கூட்டாளியை இழந்துவிட்டதாக உணர்ந்தார்கள்.
வில்லா கேதர் : 1873-1947. அமேரிக்க நாவலாசிரியர். சமவெளிப் பகுதிகளின் வாழ்க்கையை புனைவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர். One of Ours என்ற நாவலுக்காக புலிட்சர் விருது வென்றவர்.
***
சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

