Saturday, May 2, 2026

மொடாம்பால்

பாரத் தமிழ்

ல்ல நேரம் முடியரத்துக்குள்ள பொணத்த தூக்கியாகணும். சொன்னா கேளுங்கொ. மானம் வேற மகாதேவமல பக்கமா இருண்டினு வர்து. சத்த இப்படிக்கா வாங்கொ எல்லாரும். அழ்தது போறும். சாங்கியம் செய்யணுமா இல்லியா? யார்ரி அவளுங்கொ? வந்து இவங்களக் கொஞ்சம் அப்பிடிக்கா கூப்டுனு போயி ஓயப்படுத்துங்கடி” அம்சாவின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொண்ட போங்கு மூக்கி, மாரடித்து அழுதுகொண்டிருந்த ஐமாவையும் அமுதாவையும் இடுப்பைப் பற்றி தனியொருத்தியாய் இழுத்து வந்தாள். 

“அந்த சாணி சட்டிய எட்த்து ஒராளு அளவுக்கு பிசுறில்லாம ஒட்ட மொழுகி வுடு கலா” 

அம்சா, கிளியம்மாவின் இறுதிச் சடங்கைச் செய்யயும் முனைப்பில் முந்தானையை எடுத்துச் செருகியபடி மும்முரமாக இருந்தாள். பரபரப்பாகப் பிணத்தைச் சுற்றியிருந்தவர்களிடம் வேலை வாங்கிக் கொண்டு. 

“எப்பா! இந்தப் பூ மாலைங்கள ரெண்டு மூனு சைக்கிள்ள எட்த்து மாட்டுங்கொ. எல்லாத்தையும் தேர்ல கட்டனா பாரம் தாங்காது. தூக்குறவங்களுக்குத் தோள்பட்ட போயிறும்” 

இடது கையில் சிகைக்காய்த்தூள் நல்லெண்ணெய் வைத்துக் கொண்டு வலது கையில் தென்னந் துடைப்பத்தால் வாசலைப் பெருக்கிக் கொண்டே ஆணையிட்டாள். 

சுற்றியிருந்த வாலிபப் பயல்கள் நான்கைந்து நாற்காலிகளில் குவிந்து கிடந்த மாலைகளை அள்ளிக் கொண்டுபோய் சைக்கிள் கேரியர்களில் வைத்துக் கொண்டிருந்தனர். 

“மசமசான்னு நிக்காமா மொழுகுனதுல நாளாப்பக்கம் கம்பி இழ்த்துவுட்டு நடுவாப்பல சுக்க கோலம் போட்றி சொறாளு. த்திரி,.. எப்பிடி வேடிக்க பாக்குறாளுங்கொ பாரு, கொமுரிங்களாம் இவளுங்கொ. அட்ஜேய்,… நாய் நக்கன மூஞ்சி! அந்த மொகுமாவு டப்பாவ சின்னப்பையன் பொண்டாட்டி கிட்ட குட்த்துட்டு எங்கூட வா நீ. எம்மா வாசுகி! ஒடம்பு வளஞ்சி கொஞ்சம் சுருக்கா கோலம் போட்டு வெட்டுக்கத்திய எட்தா ஓடிப்போய்” 

அம்சா சென்னபடி ஆளாளுக்கு வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

மெழுகிய சாணிமீது கோலம் போட்ட இடத்தில் முடைந்த பச்சை தென்னங்கீற்றை வடக்குத் தெற்காகப் போட்டு உருண்டை சாணியில் ஊதுவத்தியை ஏற்றினாள் திருப்புதம். ஐஸ் பெட்டியின் மூடியை எடுத்துவிட்டு பிணத்தின்மீது தவலைத் தண்ணீரை ஊற்றி சிகைக்காய்க் கொண்டு தலையை கசக்கி விட்டாள் காமாட்சி. தொப்பக்கடையாக நனைந்த பிணத்திற்குப் பழைய புடைவையை அகற்றிவிட்டு புதுப் புடைவை கட்டிவிட பெண்கள் எல்லாம் கூடித் தடுப்புச் சுவராய் நின்று மறைத்துக் கொண்டனர். மஞ்சள் நிறப் புடவையை நான்கைந்து பெண்கள் கிளியம்மாவுக்குச் சுற்றி விட்டனர். குழைத்த மஞ்சளை முகத்திற்குப் பூசி விட்டு, நெற்றியில் திருநீறு பட்டை இழுத்து குங்குமத்தால் பொட்டும் இட்டு, உறைந்து போயிருந்த கைகள் கொள்ளும் அளவுக்குக் கண்ணாடி வளையல்களை அணிவித்தாள் அம்சா. அம்மா வீட்டுக் கோடி வந்ததும் காடாத் துணியைக் கிழித்து இரு கட்டை விரல்களையும் இணைத்துக் கால் கட்டுக் போட்டுவிட்டு, பன்னீர் தெளித்து சாம்பிராணி புகையை ஊதி பிணத்தின் மீது பரவ விட்டாள். அப்போதுதான் இழவு வீட்டிற்கான எல்லாத் தகுதிகளும் வாசனையாய்ப் பரவியது.

 அலங்காரம் செய்யப்பட்ட கிளியம்மாவுக்கு வயது எண்பதுக்குமேல். மஞ்சள் பூசியதும் எங்கிருந்துதான் அந்தக் கலை வந்து கவ்வியதோ அவள் முகத்தை! அப்படியே வருடி முத்தம் கொடுத்து அழுதாள் ஐமா. அவளை மீண்டும் விலக்கி ஓயப்படுத்திவிட்டு கிளியம்மா கழுத்திலும் காதுகளிலிலும் கிடந்த நகைகளைக் கழற்றிப் பால் சொம்பில் போட்டுக் கொண்டிருந்தாள் போங்கு மூக்கி. 

கல் வைத்த காளான் மூக்குத்தியை மட்டும் எரிக்கும்போது கிளியம்மா வாயிலேயே போடச் சொல்லி அம்சாவிடம் கொடுத்தான் வீரப்பன். 

“பங்காளிப் பைத்தாளி மரக்கா கோலம் சுத்தணும். ஒருவொரத்தரா வந்து ஊதுவத்தி வாங்கிக்குங்கொ” தன் கையில் பிடித்திருந்த ஒரு கொத்து ஊதிவத்தியைப் பந்தத்தால் கொளுத்தியபடி கூப்பிட்டாள் சத்தமாக. கொல்லிப் போடும் வீரப்பன் முதலில் வந்தான். அவனைத் தொடர்ந்து வந்த உறவினர்கள் கையில் தலா மூன்று ஊதுவர்த்திகளைக் கொடுத்து, மாலை அணிவித்து, திருநீறு இட்டு அவன் பின்னே சுற்ற விட்டாள். பதினோரு சுற்றுக்குப் பிறகு பாடையைத் தூக்கும் இறுதி பறையடிக்க சைகை செய்தாள். கெட்டுகான் தலைமையிலான இளைஞர்கள் பிணத்தைத் தூக்கித் தேரில் கிடத்தினர். வெடக் கோழி ஒன்றும் மூன்று உரிக்காத தேங்காய்களையும் தேரின் இடது கைப்பிடியில் கட்டிவிட்டு கொல்லிச் சட்டியை வீரப்பனிடம் எடுத்துக் கொடுத்தான் ஊறுகா நக்கி. 

 தேர் போகும் தெரு முழுவதும் புடவைகளை வரிசையாக விரித்து கிளியம்மாவின் இரு மகள்களும் மருமகளும் உருண்டு புரண்டினர். அவர்களைத் தாண்டித் தேர் போனது. கடைகளில் பணத்தாள் கொடுத்து மாற்றி வரப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயம் முதல் ஐந்து ரூபாய் நாணயங்களை வாரி வாரி தேர்மீது வீசினாள் அம்சா. காசு பொறுக்கும் தலைமுறை கடந்துபோன ஊரில், சில கிழடுகளும் குடிகாரர்களும் மட்டும் குனிந்து நாணயங்களைப் பொறுக்கிக் கொண்டே வந்தனர். பட்டாசு, வான வேடிக்கை, பறை சத்தங்களுக்கு இடையே யாருடைய ஒப்பாரி பாட்டும் எடுபடாமல் சுடுகாட்டை நோக்கிப் போய் கொண்டிருந்தது தேர். 

நடுகாட்டான் சடங்குக்காக நடுகாட்டில் பிணத்தை இறக்கி வைத்ததும் கொண்டு வந்திருந்த புண்டாச் சோற்றை சட்டியோடு போட்டு உடைத்தாள் அம்சா. பூமாலை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டு உதிரிப் பூக்களை உள்ளங்கையில் வாரி வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பிணத்தின்மீது தூவியபடிச் சொன்னாள்,

அடேய்! மகா கணபதி, சித்தி கணபதி!

தேரில் வந்தவர்க்குச் சீரோங்கும் கதையச் சொல்ல,

கடமையும் குறிப்பெடுத்து கைக் கூப்பி நின்றேன் பாராய்..!

முந்திப் பிறந்தவன் நான்; பூநூல் தரித்தவன் நான்; சங்கப் பறையோன் நான்; ஜாதிக்கெல்லாம் முத்த ஜாம்பவன் நான்…!

முடிநூல், அடி நூல், தறிநூல் தறித்தவன் நான்…

கோசல நாட்டுத் தலைநகர் அயோத்தி மகராஜா அரிச்சந்திரனை வெற்றிகொண்ட வெட்டியான் நான்தான் சாமி!…

நீர் தோன்றி, நெடுங்கடல் தோன்றியது, ஊர் தோன்றி, உலகம் தோன்றியது.

அந்த ஊருக்கு மேலாக ஓர் ஆல விரிச்சம் தோன்றியது.

அந்த ஆலமரத்தடியிலே, ஒரு கன்னிப் புற்று தோன்றியது.

அந்தக் கன்னிப் புற்றினிலே ஒரு காராம் பசு பிறந்தது.

அந்தக் காராம் பசுவின் வயிற்றினிலே

ஒரு கமலக் கன்னி பிறந்தநாள்.

அந்தக் கமலக்கன்னி வயிற்றினிலே

ஓடப் பட்டதாக ஒன்பதாயிரம் கோடி, பறக்கப்பட்டதாகப் பனிரெண்டாயிரம் கோடி, நடக்கப்பட்டதாக நாநூறாயிரம் கோடி, தாவப்பட்டதாக ஓராயிரம் கோடி,

இப்படியாக எண்பதாயிரம் ஜீவராசிகளைப் படைத்தார் பிரம்மன்.

இந்த ஜீவராசிகளானது, பூமியிலே பெருகப் பெருக, பூமா தேவியால் பாரம் தாங்க முடியவில்லை.

அதனால் பூமாதேவியானவள், பிரம்மனிடம் சென்று ‘சாமி என்னால் பாரம் தாங்க முடியவில்லை’ ஏதாவதொரு உபாயம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டாள்.

‘என்னிடம் கேட்டால் உனக்கு உபாயம் கிடைக்காது. கைலாயம் சென்று சிவனிடத்திலே உன் குறையைச் சொல்!’ உபாயம் கிடைக்கும் என்றான் பிரம்மன்.

அப்போது, காலால் நடக்காமல், காற்றாய் பறந்தோடி, கைலாயம் சென்று ‘சாமி என்னால் பூமியின் பாரம் தாங்க முடியவில்லை’ என்று சிவனிடத்தில் முறையிட்டாள்.

அதைக் கேட்கும் நேரத்தில், கம்பு குப்பத்துக் கம்மாள பறையர்கள், காராம் பசுவின் காலைக் கட்டி, கழுத்தை அறுத்து, தோலை உரித்தார்கள். அதன் உயிரானதோ எமலோகம் சென்றது. காராம் பசுவின் மாமிசத்தை அனுமன், நீலன், அங்குஜன் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து ஐந்து பங்காகப் போட்டார்கள். அதிலே முதல் பங்கைச் சிவசக்தி எடுத்துக் கொண்டாள். இரண்டாவது பங்கை நாராயண மூர்த்தி எடுத்துச் சென்றார். மூன்றாவது பங்கைப் பிரம்மதேவன் எடுத்துச் சென்றார். நான்காவது பங்கை வீர ஜாம்பகன் எடுத்துச் சென்றான். ஐந்தாம் பங்கு யாரும் எடுக்காமல் இருந்தது. பார்த்தார் சிவபெருமான். இந்தப் பூமியிலே பூமாதேவியின் பாரத்தைத் தீர்க்க வேண்டும் என்றால், இந்தக் காராம் பசுவின் மாமிசத்தின் மகிமையை அறிய வேண்டும் என்றால், யாரைக் கேட்டால் தெரியும் என்று யோசித்து,

‘அடேய் வீரா ஜாம்பக்கா!’ என்று குரல் கொடுத்தார். குரலைக் கேட்டு, ஓடி வந்து, பாத நமஸ்காரம் செய்து, அழைத்ததன் காரணம் கேட்டான் வீர ஜாம்பகன்.

‘அடேய் வீர ஜாம்பகா!’

‘உனக்கு உன் தாய் பெயர், தந்தை பெயர் தெரியுமா?’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘சாமி எனது தாயார் சமுத்திரம். எனது தந்தை சூரியன். எனது பெயரோ வீர ஜாம்பகன்’ என்றான்.

‘அடேய் வீர ஜாம்பக்கா!’

பாருலகிலே, சிவசக்தி முதல் பங்கு எடுத்துச் சென்றாள். அந்தக் காராம் பசுவின் முதல் பங்கு யாருக்கடா உதவும்? என்றார் சிவபெருமான்.

சுவாமி! சிவசக்தி எடுத்துச் சென்ற முதல் பங்கானதோ மாமிசம். அது மந்திரம் கற்றவர்க்கும், தந்திரம் கற்றவர்க்கும், மாயாஜாலம் அறிந்தவர்க்கும் மையாகும் சாமி என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

அப்போது நாராயண மூர்த்தி எடுத்துச் சென்ற இரண்டாவது பங்கு யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! நாராயணமூர்த்தி எடுத்துச் சென்ற பங்கானதோ கொம்பு; எலும்பு. அது சீப்பாகும்; சிமிழாகும்; சீர் பெற்று வாழ்கின்ற பெண்களுக்கெல்லாம் வர்ண டப்பியாகும் சுவாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

அப்போது பிரம்மதேவன் எடுத்துச் சென்ற மூன்றாவது பங்கு யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! பிரம்மதேவன் எடுத்துச் சென்ற பங்கோ வாலானது. அந்த வால், அரச பரம்பரைக்கும் அருள் கொடுக்கும் தேவர்க்கும், வீசும் வெண்சாமரமாகும் சுவாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீரா ஜாம்பகா! நீ எடுத்து வைத்திருக்கும் நான்காவது பங்கு யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! நான் எடுத்து வைத்திருக்கும் பங்கானதோ தோல். அது வாராகும்; வடமாகும்; வண்ணக் கயிறாகும்; வாசிக்கும் மேளம் ஆகும். வெண்கல தமுக்காகும்; ஆயிரம் பேருக்கு அங்குபடியாகும்; மூன்றாயிரம் பேருக்கு முதுகு பட்டையாகும் என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

யாருமே எடுக்காமல் இருக்கும் ஐந்தாவது பங்கானது யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! யாருமே எடுக்காத ஐந்தாவது பங்கானது, சாணம். அதில் நீரிட்டுக் குழைத்துப் பூசி மொழுகினால்; சீர் கெட்ட வீட்டுக்குள் ஸ்ரீதேவி புகுந்து , மூதேவி விலகிடும். மீதமுள்ளதை எடுத்து உருண்டையாக உருட்டி வெயிலிலே காயவைத்து அக்கினியிலே இட்டு எரித்தால், நெற்றிக்கு நல் திருநீராகும் என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் டேய் வீரா ஜாம்பகா!

காராம் பசுவின் மாமிச மகிமை அறிந்து கொண்டேன்.

அடுத்து, திசையின் திருப்பலன்கள் என்னடா என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! வடக்கே வள்ளல்கள் துறை; தெற்கே தேவர்கள் துறை; மேற்கே மேகவன் துறை; கிழக்கே ஜாம்பகன் துறை. அதாவது என்னுடைய துறையாகும் சாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பக்கா! அப்போது நான்கு திசைகளின் முழு பலன் என்னடா என்று கேட்டான் சிவபெருமான்.

சுவாமி! வடக்கே மகாபாரதம் பிறந்தது, தெற்கே ராமாயணம் பிறந்தது, மேற்கே சாளவர்கள் அழிந்தார்கள், கிழக்கே சங்கும் சானார் கத்தியும் பிறந்தது என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீரா ஜாம்பக்கா! கிழக்கே பிறந்த சங்கும் சானார்க்கத்தியின் மகிமையும் என்னடா என்று கேட்டான் சிவபெருமான்.

சுவாமி! பிறந்தவுடன் தாய்க்கொடி அறுக்க சானாரக் கத்தியும், இறப்பவரின் ஈமச்சடங்கைச் சொல்ல சங்கும் வேண்டும் என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

கால் பிண்டம், வாய்க்கரிசி, வழி பிண்டம் இதையெல்லாம் வாங்கித் தின்று வயிறு பிழைக்கும் நீ ஒரு சுடு பறையன். உன்னைச் சோதித்துப் பார்த்தேனடா என்றார் சிவபெருமான்.

சுவாமி! நான் கால் பிண்டம், வாய்க்கரிசி வழி பிண்டம் இதையெல்லாம் வாங்கித் தின்றபோதிலும், கடமைக்குக் கட்டுப்பட்டு அடிமையாக இருக்கின்றவன். இவையெல்லாம் அறியாமல் எப்படி இருக்க முடியும் என்று கேட்டான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பக்கா!

இந்தப் பார் உலகத்திற்கும் பரலோகத்திற்கும் நான் பிறந்தேன். இந்த பூலோகத்தில் சுடு பறையனாய் நீ பிறந்தாய். இனிமேலும் நீ பறையன் அல்லன், பரமனின் ஜாதி என்று மங்கலம் பாடி வெண்கல பறை எடுத்துக் கொடுத்தார் சிவபெருமான்.

வெண்கலப் பறை வாங்கிய வீர ஜாம்பகன், அடியேனுக்கு என்ன கட்டளை என்று கேட்டான்.

எட்டுத்திக்கும் பதினாறு கோணம் சென்று இரவன்றும் பகலென்றும் பாராமல், பார் பொழிய, பூ மலர, பழம் உதிர.. பழம் உதிர… பழம் உதிர… என்று பூலோகத்திலே பறைசாற்றி விட்டு வா! அப்படிச் செய்தால், வயதானவர்கள் இறந்து, இந்தப் பூமியின் பாரம் குறைந்து, பூமாதேவி மகிழ்வாள் என்றான் சிவபெருமான்.

சுவாமி நான் பூமி பாரம் தீர்க்க பறைசாற்ற வேண்டுமென்றால், எதைத் தின்று? எதன் மீது ஏறி? எப்படிப் பறைசாற்ற வேண்டும்?

ஐங்கள்ளு சாராயமும், அரை கலன் கள்ளும் கலந்து வைத்திருக்கிறேன் அதை அருந்தி, வெள்ளை மதயானை மீதேறி, இந்தப் பாரெங்கும் பறைசாற்றி வாடா!

ஐயனின் வார்த்தைபடி, மதுவை அருந்தி, வெள்ளை மதயானை மீதமர்ந்து, அதிகாலை நேரத்திலே, காவி கோவணம் அணிந்து, அம்மனே…! அம்மனே…! அம்மனே…! என்று குரல் கொடுத்தான் வீர ஜாம்பகன்.

ஜாம்பகனின் குரல் கேட்டு, சக்தியோ கண்விழித்து, பச்சரிசி பல் கடித்து, பராசக்தியாய் எழுந்து நின்று, ஏழு கதவைத் திறந்து, எதிரே வந்து நின்றாள் காளி.

அவளைப் பார்த்தவுடன், சாராய நிலை மறந்து, கால் நடுங்கி, கரம் நடுங்கி, உடல் நடுங்கி நின்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீரா ஜாம்பக்கா!

வெள்ளியும் முளைக்கவில்லை, விடியற்காலை பிறக்கவில்லை, இந்த அன்னையை எழுப்பிய காரணம் என்னவென்று கேட்டாள் காளி.

தாயே ஆத்திரம் கொள்ளாதே! தேவர்கள் ஒன்று கூடி, வேதங்கள் பல ஓதி, வெண்கலப் பறை கொடுத்து, வீரப்பறையாலே சாற்றச் சொல்லி அனுப்பிவிட்டனர். பறைசாற்றுவதற்கு கனிப்பில்லாத காரணத்தால், கைச் சோர்ந்து நிற்கின்றேன் தாயே! என்றான் வீர ஜாம்பகன்.

ஜாம்பகனைப் பாவம் பார்த்து, அங்கே இருந்த வேங்கை மரத்தைத் தள்ளி, அடியும் நுனியும் கிள்ளி, மீதமுள்ளதைக் கனிப்பாகக் கொடுத்தாள் காளிகா தேவி.

காளியின் அருள் பெற்ற வீர ஜாம்பகன், போய்ச் சேர்ந்தான் கம்மாள தேசம். கம்மாளர் தேசத்திலே, கலசம்பறை சாற்றும் பொழுது, கனிப்பானது கீழே விழுந்தது.

அப்பொழுது ஒரு கன்னிப்பெண்ணானவள், குடத்தை எடுத்து, குளக்கரைக்குப் போனாள்.

கன்னிப் பெண்ணைப் பார்த்து, கையால் கனிப்பை எடுத்துத் தரும்படிக் கேட்டான் வீர ஜாம்பகன்.

கன்னிப் பெண்ணோ, வலது காலால் எடுத்து, இடது கையில் கொடுக்க, கோபமுற்று ஓங்கி ஓர் அடி அடித்தான் பறையை. செந்தாமரை பூத்தது. இரண்டாவது அடித்தான். ராஜ்யத்தை அடைந்தான். மூன்றாவது முறை அறைந்தான் பூலோகத்தைப் போய்ச் சேர்ந்தான். பூலோகத்தில், சாராய மயக்கத்திலே, கஞ்சா போதையிலே, தன்னிலை மறந்து, சுய நினைவு இழந்து, பூ உதிர…, பிஞ்சு உதிர…, காய் உதிர… கனி உதிர… ஆறு மாதத்துப் பிண்ட மலர் உதிர… மூன்று மாதத்துப் பிண்டம் முடங்கிவிட… ஒரு மாதத்துப் பிண்டம் ஒழிந்து விட… என்று சாற்றி வந்தான் வீர ஜாம்பகன்.

அதைப் பார்த்த சிவபெருமான், வீர ஜாம்பகனைத் தடுத்து நிறுத்தி,

அடேய் வீர ஜாம்பகா! ஏனடா இப்படிச் செய்தாய் என்று கேட்டார்.

சுவாமி! நீங்கள் சொல்வது போல் வாசித்தால், பூமாதேவியின் பாரம் குறையாது. பூவுலகம் நிலைக்காது, அடியேன் நானும் பிழைக்க முடியாது. எனவே என் இஷ்டத்துக்கு வாசித்தேன் என்றான் வீர ஜாம்பகன்.

நீ பிழைக்க வேறு என்ன வழி உண்டென்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! சின்னப் பசங்க செத்தா சின்னப் பிணம். பெரியவங்க செத்தா பெரிய பிணம். அரிச்சந்திர காசு ஆறு காசு. வாய்க்கரிசி வழிப்பிண்டம், முக்காட்டுச்சீலை, முழுசலை, இதெல்லாம் எனக்குச் சேரும் சாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா! பார் உலகிலே பாவ புண்ணிய காரியங்களை அறிய வழி என்னடா என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! கூலியைக் குறைத்தவன், குறைபடி இட்டவன், தாயை அடித்தவன், பங்கிலே பாதி எடுத்தவன், கடிக்கிற நாய் விட்டு வேடிக்கை பார்த்தவன், கறந்த பாலில் நீரிட்டு கலந்தவன், அண்ணன் தம்பிக்கு துரோகம் செய்தவன், பிறர் மனை புகுந்தவன், கோயிலை இடித்தவன், கொள்ளையடித்தவன், கொலை புரிந்தவன், பொய் சாட்சி சொன்னவன் இவர்கள் எல்லாம் பாவிகள் சுவாமி என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா! இந்தப் பாவிகளுக்கு என்ன கட்டளை என்று கேட்டான் சிவபெருமான்.

சுவாமி! சொல்கிறேன் கேளுங்கள்.

பாம்பு குழி, பல்லிக்குழி, அட்டை குளி, அரணைக்குழி என்று நரகத்திலே தள்ளுவார்கள் என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அப்படியென்றால் புண்ணியம் செய்பவர்களுக்கு என்னடா கட்டளை என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! நான் புண்ணியம் செய்பவர்களைச் சொல்ல வேண்டுமென்றால், புண்ணிய காணிக்கை வேண்டுமென்றான் வீர ஜாம்பகன்.

போடுங்கம்மா… போடுங்க… புண்ணிய காசு போடுங்க…!

என்று அம்சா சொல்லி முடித்ததும், அவள் தரையில் விரித்திருந்த துண்டில், சில்லரைக் காசுகளையும் பணத்தாள்களையும் தூக்கி எறிந்தனர் ஊரார்; உறவினர் எல்லாரும்.

சடங்கு செய்து கொண்டிருந்தபோதே அம்சா எதிர்பார்த்தது போலவே மழை பிடித்துக் கொண்டது. நடு ரோட்டில் பிணத்தைத் தேரோடு விட்டுவிட்டு மரத்தடிகளை நோக்கி ஓடினர் பாதிப்பேர். பலர் பிணத்தோடு நனைந்து கொண்டிருந்தனர் செய்வதறியாது. மழை விட்டதும் பாடையைத் தூக்கலாம் என்று காத்திருந்தவர்கள் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு கொட்டோ கொட்டென்று ஓயாமல் பெய்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் சுடுகாட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளைக் காப்பாற்ற ஓடிப் போய்த் தார்ப்பாய் போர்த்தியிருந்தனர் குட்டையனும் மொட்டையும். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கடந்தும் மழை நிற்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. என்ன செய்வது என்று ஆளாளுக்குக் கேட்கத் தொடங்கினர். 

“இப்பதானே எரிமேட புதுசா கட்டி முட்ச்சாங்கொ? அதுல எட்த்துனு போயி கொளுத்துனா என்னா?” 

அம்சா சொன்னதும் மிரண்டு போனார்கள் எல்லாரும். “குடியான சுடுகாட்டுக்கு நம்ம பொணத்த எட்த்துனு போகலாங்குறியே, கொஞ்சமாவது அறிவு நெனவோடத்தான் பேசுறியா?”

கயாலு கேட்டான். 

“ஏன், எட்த்துனு போனா என்னா?”

இது நாய் நக்கன மூஞ்சி. 

“அதானே! எப்பவும் எட்த்துனு போலனா என்னா? இப்ப எட்த்துனு போவோம். மழ வுட்ற மாதிரி தெர்ல. இப்பிடியே ராவெல்லாம் பேஞ்சா என்னா பண்றது?” வாசுகி கேட்டாள். 

வாசுகி கேட்டதை வாலிபப் பயல்கள் ஆமோதித்து வரவேற்றனர். 

“குடியானவஞ் சுடுகாட்டுல நம்ம பொணம் போறது அவ்ளோ லேசுபட்ட வேல இல்ல. சொம்மா தெரியாம பேசாதீங்க! நமக்குன்னு சுடுகாடு கீறப்போ அங்க ஏன் போவானெ? பேசாம பொதச்சிப் புடலாம் கம்முனு இருங்கொ” ராமகிருஷ்ணன் சொன்னான்.

“ண்ணோவ், என்னா பேசற நீ? தலச்சம் பொணமிச்சே! இல்லாகாட்டி நீ சொல்றாப்டி பொதச்சிப் புடலாம். அம்சக்கா சொல்றதுல என்னா தப்பு?” மீண்டும் கேட்டாள் வாசுகி.

“என்னா தப்பா? ஜாதி சண்ட வந்து வெட்டுக் குத்து போலீஸ் கேசுன்னு லோலாய்ப் படணும் எம்மா அத்திய ஓசி”

“எத்தினி காலத்துக்குத்தான் இப்பிடியே பெய்ந்துறு கீறது? இந்த மழைல எவனும் வூட்டவுட்டு வர மாட்டான். நாம பாட்டுக்கு எட்த்துனு போயி எரிச்சிறலாம்” அம்சா தீர்க்கமாகச் சொன்னாள்.

“எம்மா தப்பும்மா! அவங்க கிட்ட கேட்டுப் பாக்கலாம். அட்லீசு தலிவுர கிட்டியாவது தகவல் சொல்லணுமில்ல? திர்ட்டாட்டமா தூக்கினுப் போக்கூடாது. சுடகாடு அவுங்குள்தாச்சே!”

“தீர்பட்டா ஓசிச்சி செய்ய இதுவொண்ணும் தேர்திர்னா இல்ல. சுருக்கா முடிக்கணும். அதெப்பிடி சுடுகாடு அவுங்குள்தாகும்? சுடகாட்ட எவனும் பட்டா பண்ண முடியாது. கவுருமெண்ட்டு கட்டுன எரிமேடயில எவன் வோணா எரிக்கலாம்தானெ?”

 ‘அதானே!’ என்று அம்சா வாதத்தையை மீண்டும் ஆமோதித்தது கூட்டம்.

 “உஸ்கோலு ஒண்ணுதாங் கீது. எல்லார் வூட்டுப் பசங்களும் போயி ஒண்ணா மண்ணா பழகி படிக்கல?

ரேஷன் கட ஒண்ணுதான். ஆம்பள பொம்பள வரிச மட்டும்தான் அங்கியும்!

பஸ்ல அவன் ஜாதி ஒரு பக்கம் நம்ம ஜாதி ஒரு பக்கம் ஒக்கார்றதில்லியே! 

ஊராஸ்பத்திரில டாக்டரா கீற தம்பி கூட நம்மாளுதானாம். வந்து ஒடம்புக்கு ஒண்ணுன்னா பாத்துனு போல அவங்கொ?

அட, குடிக்கிற தண்ணி டேங்க் ஒண்ணு, குடுத்தனும் கீற வூடு வாசலும் ஒண்ணு. அவுங்குள்து மெத்த வூடுன்னா, நம்புள்தும் மெத்த வூடு. அவங்கள வுட ஜாஸ்தியா நம்ப பசங்கதான் போலீஸுக்கும் பட்டாளத்துக்கும் போயி கீறானுங்கொ. அவங்க துன்ற சோத்ததான் நாமளும் துன்றொம். எதுல எண்ணா அவங்க நம்மளவுட மேல?” அம்சாவின் இந்தக் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆர்ப்பரித்து வாலிபக் கூட்டம்.

 ஆயிரம் பிணங்களுக்கும் மேல் கையாண்ட அம்சா, கோபால் செத்ததிலிருந்து வண்ணாந்தொழிலை வாழ்வாக்கிக் கொண்டவள். பெண்கள் சுடுகாட்டுப் பக்கம் போக உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் தன் கணவன் இறந்தபின் குழந்தைகளுக்காத் துணிந்து இந்த முடிவை எடுத்தாள். இந்தத் தொழில் மட்டும் அவளுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் இரண்டு மகள்களை வளர்க்க அவள் என்ன செய்திருப்பாள் என்று அவள் நம்பும் மாரியம்மாளுக்குத்தான் வெளிச்சம். வண்ணாங்மூட்டு ஆண்களுக்கே பண்ணை நிலங்களிலும் வேலை மறுக்கப்படும் சூழலில் கணவனின் தொழிலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அம்சாவால் ஆரம்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் ஆலம் சுற்றவும் நலங்கு வைக்கவும் கூட நா எழவில்லை. பதட்டத்தில் என்னென்னவோ பிதற்றினாள். எவ்வளவோ கேலி கிண்டலுக்கு ஆளானாள். சுபகாரியங்களை வர்ணனை சொல்லி மைக் பிடிக்க பல ஆண்டுகள் ஆனது அவளுக்கு. 

நடுக்காட்டில் சொல்லப்படும் அரிச்சந்திரன் கதையை மட்டும் கற்றுக் கொள்ள ஐந்தாறு மாதங்கள் பிடித்தன. அதை இரவுப் பகல் பாராமல் மனப்பாடம் செய்தாள். அவளது கணவன் இறந்தபோது, சடங்கு செய்ய ஆளில்லாததால், துக்கம் தொண்டையை அடைக்க, மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவ்வளவு துயரத்திலும் நடுக்காட்டான் கதையை முதல்முறையாகச் சொன்னாள். அதைப் பார்த்து அன்று அழாத ஆளே இல்லை. 

இப்போதெல்லாம் மாடு விடும் திருவிழாவிலும் கபடியிலும் அறிவிப்பு வர்ணனைகள் செய்யுமளவுக்கு கெட்டிக்காரியாகச் சுத்துப்பட்டு ஊர்களில் அவள் மட்டுமே தட்டுப்படுகிறாள். 

இளைஞர்கள் முடிவுக்கு வந்து விட்டனர். என்னவானாலும் சரி குடியான சுடுகாட்டில் கிளியம்மாவை எரிப்பதென்று. 

“ஏன் மார்கா! ஒரு வருஷத்துக்கு முன்னாடி நாம கும்புட்னுருந்த காளியம்மா கோயில யாருக்கும் சொல்லாம இதே மழக்காலத்துல ஜேசிபி வச்சி இட்ச்சி தரமட்டமாக்கல அப்பனோலியான் மக்கொ? அவங்களுக்கு ஒரு நாயம் நம்புளுக்கொரு நாயமா? சாமின்னு கூடப் பாக்காம கோயில இட்ச்சித்தள்ளிப்புட்டு இன்னும் வாந்திபேதி வராம தெனாவட்டாத்தானெ சுத்தினு கீறானுங்கொ? நாமென்ன சுடுகாட்ட துன்னவா போறோம்? பொணத்த எரிக்க அப்பிடிப் பெய்ப்புட்ணும்னு என்னா கீது?” அம்சா மீண்டும் சொல்ல,

‘அதானே! தூக்குங்கோ போவோம்’ என்றனர் பெரும்பாலான பெண்களும் இளைஞர்களும். 

வானம் இன்னும் இன்னும் இருட்டிக் கொண்டு இடி மின்னலுடன் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது. இனியும் தாமதிப்பது அர்த்தமற்றது என்ற முடிவுக்குப் பெரும்பாலானவர்கள் வந்து விட்டதினால் முதல்முறையாக குடியான சுடுகாட்டை நோக்கி நகர்ந்தது கிளியம்மாவின் தேர். 

எல்லார்க்கும் இனம் புரியாத பரவசம். இழப்பிலும் எதையோ சாதிக்கப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு. சோகம் மாறி புன்னகை பரவத் தொடங்கியிருந்தது. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக வேலை செய்தாள் அம்சா. இதனால் வரப் போகும் எதிர்வினைகளை நினைத்துக் கிழடு கட்டைகள் நடுங்கிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் விசிலுடன் கூடிய குத்தாட்டத்தில் ஆர்ப்பரித்தனர். மழையில் நமுத்துப் போன பறைகளை நாக்கைக் கடித்தபடி வெறிகொண்டு அடித்துக் கிளர்த்தினர் பயல்கள். அதன் தோல்களுக்கான சூடு அவர்களின் எல்லை மீறலிலிருந்து கிடைத்திருக்க வேண்டும். 

புதிய எரிமேடையின் மத்தியில் இரண்டு லாரி டயர்கள் வைத்து, அதன்மீது பெரிய பெரிய கட்டைகளைக் கட்டில்போல் கட்டம்கட்டி கிளியம்மாவைக் கிடத்தினர். கிளியம்மாவின் நாளாப் புறமும் கெடவேலன் மரங்களைச் சார்த்திவிட்டு பிணத்தை வரட்டிகளால் அடுக்கிப் போரத்தினாள் அம்சா.‌ அதுவும் போதாதெனச் சிறு சிறு விறகுகளை எல்லா இடுக்குகளிலும் செருகினாள். வீரப்பன் கொண்டு வந்த கொல்லிச் சட்டியை வடக்குப் பார்த்து ஓங்கி உடைத்தாள். நிரப்பி வைக்கப் பட்டிருந்த மொடாம்பாலை தோள்மீது தூக்கிக் கொண்டு கிழக்கிலிருந்து தெற்காக, தெற்கிலிருந்து மேற்காக, மேற்கிலிருந்து வடக்காக என்று மூன்றுமுறை சுற்றி வந்தான் வீரப்பன். ஒவ்வொரு முறைக்கும் மொடாவை மேலிருந்து கீழாக வெட்டுக் கத்தியால் கொந்து போட்டாள் அம்சா. மொடாம்பால் பீய்ச்சியடித்து. 

பிணமானாலும் பெற்றத் தாய் என்பதால், கொள்ளி வைக்க கைகள் நடுங்கின. விறுவிறுவென வந்த அம்சா, வீரப்பன் கைகளைப் பிடித்து தானே கொள்ளி வைத்தாள். மண்ணெண்ணெய் கிடைக்காததால் தின்னர் ஊற்றியிருந்தாள் பிணத்தின் மீது. நாளாப் புறமும் தீ மளமளவெனப் பரவி அனலைக் கக்கியது. உப்பையும் சர்க்கரையையும் எரிதழலில் பிடிபிடியாய் அள்ளி எறிந்தாள். அது மீண்டும் படபடவென்று பொறித்து எரிந்து சிதறியது. 

கணவன் சாகும்வரை சுடுகாடு பக்கம் எட்டி இறங்கி பார்காமலிருந்த அம்சா, கடந்த பதினைந்து ஆண்டுகளில் பலவிதமான பிணங்களைப் பார்த்து விட்டாள். புதைக்கும் பிணங்களுக்கு மட்டும் குழிதோண்ட ராமகிருஷ்ணனையோ, சிகாமணியையோ துணைக்கு வைத்துக் கொள்வாள். எரிக்கும் பிணங்களுக்கு யார் உதவியையும் நாடியதில்லை இதுவரை. நடுராத்திரிவரை எரியும் பிணத்தோடு தனியாக மல்லுக் கட்டுவாள். அதிலும், நோய் வந்து மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு இறந்து போன பிணங்களை எரிப்பதென்றால் விடியற்காலை கூட ஆகிவிடும். சீக்கு வந்த பிணங்கள் சீக்கிரம் எரிவதில்லை. கொழுத்துப் பெருத்த பிணங்கள் என்றால் மூன்றே மணிநேரத்தில் சாம்பலாகி விடும். நாரும் நரம்புமாம் இருக்கும் கிழட்டுப் பிணங்கள்தாள் உயிரை வாங்கும். அவற்றின் தசைநார்கள் அவ்வளவு சீக்கிரம் எரியாது. பல நேரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கட்டையிலிருந்து எரியும் பிணங்கள் சரிந்து கீழே விழும். வெந்தும் வேகாமலும் கிடக்கும் அதை மீண்டும் துடுப்புக் கொம்பால் குத்திக் கிழித்து எரிதழலில் தள்ள வேண்டும். குளிர்காலத்தில் எரிப்பதென்றால் பரவாயில்லை. வெயில் காலத்துப் பிணங்களை எரிப்பது சிரமமானது. அனல் ஆளை வாட்டும். கசகசவென்று வியர்த்துப் புடவை ஜாக்கெட்டெலாலாம் நனைந்து போகும். பிணம் வெடித்து வேகும் நெடி, மூக்கிலும் வாயிலும் நுழைந்து மண்டையைக் குடையும். சுட்ட கறியின் வாசம் பத்து நாளுக்கு ஆளை விட்டுப் போகாது. 

அதுவரை இருண்டிக் கொண்டிருந்த வானம் மெல்ல வழி வாங்கியது. கொஞ்ச நேரத்தில், கலக்கா அறுவடைக்குப் பின்னான தும்பைப் பூக்கள் முளைத்த நிலமாய் வெள்ளை வெளேரென்று பகல்போல் மாறியது. மஞ்சள் வெயிலும் காய்த் தொடங்கியது.

 சடங்கு முடித்துவிட்டு பெரும்பாலான சனங்கள் வீட்டிற்கே போய் விட்டிருந்தனர். சில இளைஞர்களும் உறவுக்காரப் பெண்களும் மட்டுமே அம்சாவுக்குத் துணையாக நின்றிருந்தனர். யார் வழியாகவோ தகவல் தெரிந்து கொண்ட பஞ்சாயத்துத் தலைவர், ஏழெட்டு ஊர்க்காரர்களோடு விரைந்து வந்து கொண்டிருந்தான். அவர்கள் வருவதைப் பார்த்தும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் விறுவிறுப்பாக இருந்தாள். அதற்குள் பாதி எரிந்து விட்டிருந்த கிளியம்மாவின் உடல் வெடித்து பட் பட்டெனச் சத்தமிட்டது. 

“ஏய், இந்தாம்மா அம்சா, நிப்பாட்டு! எவ்ளோ கொழுப்பிருந்தா இந்த வேலயப் பாப்ப?  உன்ன என்னா பண்றன் பாரு இப்ப” சொல்லிக் கொண்டே கையை ஓங்கியபடி அவளருகே ஓடினான் ஊர்த் தலைவர். அப்போதும் துடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவளாய் எரிதழலை நோக்கிப் பாய்ந்தாள் எவரையும் திரும்பிப் பார்க்காமல். 

நரம்புகள் வெந்து வெடித்ததினால், படுத்திருந்த பிணம் புடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தது. ஓங்கிய கையைக் கீழே போட்டவர்களாய் வாயடைத்துப் பார்த்தனர் அந்தக் காட்சியை. உட்கார்ந்த பிணத்தின் மார்பில் துடுப்புக் கோலால் ஓங்கி அடித்துக் கிடத்தினாள். உக்கிரமான அம்சாவின் உருவத்தையும், அவள் கையிலிருந்த உலக்கைப் போன்ற துடுப்பையும், பிணத்தை அடித்துக் கிளர்த்திய அவளது தைரியத்தையும் கண்ட பஞ்சாயத்துத் தலைவரும் உடன் வந்தவர்களும் வியர்த்துப் போனவர்களாய்  அப்படியே பின்வாங்கினர். 

***

பாரத் தமிழ் – வேலூர் மாவட்டம், கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கி வரும் இவர், ஆபத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான குழந்தைகளை மீட்டிருக்கிறார். சிறார் சிறையில் பணிசெய்த அனுபவம் பெற்றவர். வரலாற்று ஆய்வாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ ‘மரணத்தைச் சுமந்தலையும் எறும்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் ‘டாஃபி’ ‘பொலி எருமை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.மின்னஞ்சல்: bharaththamizhselvi@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here