Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்தூயன் - ஆறு குறுங்கதைகள்

தூயன் – ஆறு குறுங்கதைகள்

கடலின் வாக்குமூலம்

இறந்த இளம்பெண்ணின் உடலைப் பத்திரமாகக் கரைக்குக் கையளித்தன அந்திநேர அலைகள். நுரையோடு நுரையாக அவள் கிடந்தாள். சுடிதாருக்குள் சிக்கிய மீன் ஒன்று அவளோடு சேர்ந்தே இறந்துவிட்டது. கடற்பயணக் களைப்பில் உறங்குவதுபோல குப்புறப்படுத்திருக்கிறாள். தற்கொலைக்கானக் காரணத்தைத் தேடியவர்களிடம் மூன்று நாளைக்கு முந்தின இரவு அவள் விளையாடிய காலடித் தடங்களைத்தான் நான் உடனுக்குடன் அழித்தேனே தவிர வேறொன்றும் செய்யவில்லையே என்று அலைகள் புலம்புவது யாருக்கும் கேட்கவில்லை.

பூதம் நுழைய கிணறு கிளம்பியக் கதை

சொன்னபடியெல்லாம் கேட்கும் இராட்சஸ பூதத்தை அவர்கள் எங்கிருந்தோ பிடித்து வந்து பூமிக்குள் விட்டார்கள். பூதம், புதியதோர் புகைவண்டித் தடத்துக்காக நிலத்துக்குள் புற்றுகட்ட ஆரம்பித்தது. நகரத்தின் அடுக்குமாடிகளும் மேம்பாலங்களும் சாக்கடைத் துளைகளும் நிலத்துக்கு மேலே பெரும் கூச்சலுடன் கத்துகின்றன நிதமும். கூச்சலுடன் கூச்சலாக மெல்ல மெல்ல பூதம், நகரத்தின் கீழே பெரும் கோலமொன்றை வரைய ஆரம்பித்திருக்கிறது. இளமை தளர்ந்துபோன நகரத்திடம், “அவ்வளவுதான் அவ்வளவுதான் முடிந்துவிட்டது” என்று எத்தனைமுறை சமாதானம் சொன்னாலும் கேட்பதில்லை சுருங்கிய ஸ்தனங்களுக்கு. பூதம் உறுமி உறுமி நகர்ந்து போகும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அடியிலிருந்து பெரிதாக மூச்சுவிடுகிறது. அவர்களும் “அப்பாடா” என்று பெருமூச்சு விடுகிறார்கள். ஆயிரஞ்சேரியைத் தாண்டிவிட்டால் அத்துடன் முடிகிறதாம் நிலத்தடிப் புற்றின் கோலம். அதன்பிறகு இன்னொரு நகரம். அவளையும் இவளையும் இணைத்தால் போதும். இராப்பகலாக ஊர்ந்துகொண்டிருந்த பூதம் ஆயிரஞ்சேரியைத் தொட்டபோது, முன்பொரு காலத்தில் அவ்வூரையே கொழிக்கச் செய்திருந்த கிணறுகளெல்லாம் விழித்துக்கொண்டன. அவ்வளவுதான், பிரசவத்தில் வீறுகொண்டு அலறுவதுபோல ஒவ்வொன்றும் அலறியதில் கெட்டுப் போனப் பனிக்குட நீர் பீச்சியடித்தது நிலவைத் தொட.

சாய்வு நாற்காலி

பள்ளியை விட்டு வந்ததும் தாத்தா அமர்கிற நாற்காலி காலியாக இருப்பதை சிறுவன் கவனித்தான். அது  சாய்வு நாற்காலி. அதில் அமர்ந்தால் குளத்தில் மல்லாக்கப் படுத்து நீச்சல் அடிப்பதாட்டம் இருக்கும். புத்தகப் பையை வீசிவிட்டு உடனே  அதில் அப்படியே சாய்ந்தான். திடுக்கென வானம் கண்ணுக்கு முன்னால் வருவதுபோல விழுந்தது. ஆகாயத்தில் உழவாரக்குருவிகள் வேக வேகமாக எதையோ கிறுக்கின. அதன் தடத்தைக் கூர்ந்து கவனிப்பதற்குள் மேகம் பின்னாலயே அழித்தபடி வருகிறது. கிளி ஒன்று கழுத்தைத் திருப்பி அவனைப் பார்த்தது. தாத்தா வராமல் இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம்கூட சுகமாக சாய்ந்திருக்கலாமென்று நினைத்தான். சாய்ந்தவாறே மதில்சுவரில் உட்கார்ந்திருக்கும் பூனையைக் கவனித்தான். எதிர்வீட்டின் சோமு பாட்டி தெரிந்தார். பக்கத்து வீட்டு மாடியில் யாரோ துணிகளை எடுத்து மடிப்பது துலக்கமாகத் தெரிகிறது. தாத்தா மாதிரியே கைகளை மடித்து புறங்கழுத்துக்கு வைத்தான். கால்களைத் தூக்கி ஸ்டூலில் போட்டான். இமைகளை மூடுவது மட்டும்தான் இன்னும் பாக்கி. கண்கள் சொருக ஆரம்பித்தன. ஏதாவதொரு புத்தகத்தை இப்படிச் சாய்ந்தபடி படித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றிற்று. ஓடிச் சென்று கைக்குச் சிக்கியதை எடுத்து வந்தான். சுகமாக இருந்தது. ஆனால் கையில் வெகுநேரம் பிடித்திருக்கத்தான் முடியவில்லை. தூக்கிப் போட்டுவிட்டான். மறுபடியும் கைகளை புறங்கழுத்திற்குள் செறுகியபடி வாசலைப் பார்த்தான். பேரன் அப்போதுதான் பள்ளியிலிருந்து வருகிறான். அருகில் அமர்த்தி என்ன வீட்டுப்பாடம் இன்றைக்கு என விசாரித்தான். மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்கச் சொல்லிக் கேட்டான். எட்டாத அவனது காதைப் பிடித்திழுக்க இடது கையை காற்றில் அலையவிட்டான். இப்படி செய்யும்போது நாற்காலி முன்னாலும் பின்னாலுமாக ஆடியது. ”தாத்தா” என்று பேரன் கத்தினான். காது வலிக்கிறது என்று அழுகிறான். அவன் அழுவதைக் கவனிக்காததுபோல மார்பைச் சொறிந்துகொண்டிருந்தபோது யாரோ உள்ளிருந்து அழுவது கேட்டது. எட்டிப் பார்த்தான். கொல்லையில் தாத்தாவை ஸ்டூலில் உட்கார்த்தி வைத்து பாட்டியும் அம்மாவும் குளிப்பாட்டுகிறார்கள். அவரது தலை தொங்கிவிட்டிருந்தது. தலையைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கையில் தாத்தா தன்னைப் பார்த்துவிடக் கூடாதென படாரென்று நாற்காலிக்குள் ஒளிந்துகொண்டான். ஈரப்புடவையுடன் அவனை நோக்கி அவசரமாக வந்த அம்மாவிடம் “தாத்தா பாத்துட்டாரா” என்று பயந்துபோய் கேட்டான்.

இளவரசி

அண்ணா நகர் சுரங்கப்பாதை இரயில் நிலையத்திற்கு மேலே தட்டுக்கடை ஒன்று இருக்கிறது. சற்று முன்புதான் அங்கு காத்திருந்தேன். பின்னிரவுக் கடந்துவிட்டிருந்தது எனக்கானப் பேருந்து இன்னும் வரவில்லை. முகங்கள் மறைகிற இரவின் கருமையில் பெரிய முட்டை வடிவ மின்னொளியுடன் சிறிய தேர் போல ஒரு வண்டி மெல்ல வந்தது. பேட்டரி விளக்கில் கண்ணாடி சீஸாவுக்குள் தேவதையொருத்திக் களைத்துப்போட்ட ஆடைகளாட்டம் சோன்பப்படி குவியல். இளவரசியின் உத்தரவைப் பணிகிற சேவகனைப் போலத்தான் சோன்பப்படிக்காரன் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான் அவனது வருகை ஒருவரையும் தலைத் திருப்பிவிடவில்லை. தட்டுக்கடைச் சிறுமி மட்டும் தன் பாட்டியிடம் “பப்படி” என்று கேட்டாள். பாட்டி மறுக்கிற அந்தக் கணத்தில்தான் நானும் சிறுமியும் சந்திக்கிறோம். சோன்பப்படிக்காரன் நிற்பதா நகர்வதா என சில கணங்களை எங்களுக்கு நடுவே தங்கிவிட்டுக் கிளம்பிவிட்டான். அச்சிறுமிக்கு ஒரு பப்படி வாங்கித் தரத் தோன்றியது எனக்கு. நானும் பப்படி தின்று வெகுநாளாகிற்று. சோன்பப்படிக்காரனை அழைத்து ஒன்று எனக் கைக்காட்டினேன். “இருபது சார்” என்றான். நான் சரி என்றேன்.

அவன் கண்ணாடி சீஸாவுக்குள் கரண்டியை விட்டுப் புரட்டியபோது சிறுமி அப்பாலிருந்தாலும் சீஸாவுக்குள் வந்து போவதைக் கண்டேன். நான் ரசிப்பதைக் கவனித்தவன், பப்படி கிளறிவிழுவதை விளக்கு வெளிச்சத்தில் மேலும் கீழும் காட்டினான். உறங்குகிற ஒருத்தியாட்டம் பப்படிக் குவியல் புரண்டன. அவன் கிளறக் கிளற ஆடையை உதறுவதுபோல சீஸாவுக்குள் பப்படிக்கட்டிகள் பறந்தன. பால்வெளிக் கோலம் அவ்வாறுதான் பூமியைப் படைத்திருக்கும் என்று அச்சிறுமிக்குக் காட்டினேன். பிரபஞ்ச வெடிப்பை பல முறை எனக்கும் சிறுமிக்கும் அவன் நிகழ்த்திக்காட்டினான். சிறுமி சீஸாவுக்குள் உருப்பெருகி உருப்பெருகி மறைகிறாள். சில கணங்களுக்குப் பிறகு கையால் பிடிக்க முடியாதளவு கவிழ்த்திய காகிதப் பிரமிடுக்குள் காற்றில் சரியச் சரிய சோன்பப்படியை அவன் எனக்கு அளித்தான். நான் அப்படியே அச்சிறுமிக்குத் தர திரும்பினேன். அவளை அங்குக் காணவில்லை, அதுவரை அங்கு நின்றுகொண்டிருந்தவர்களும் கடைசிப் பேருந்தில் போய்விட்டது எனக்கு அப்போதுதான் விளங்கிற்று. சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் ஓடின.

பப்படியை சிந்தாமல் இரு கைகளாலும் பிடித்தபடி குவியலை அள்ளி நாவில் கரையவிட்டுக்கொண்டே தலையை இறக்கியபோது, பாதசாரியின் தூரத்தில் நின்று சிறுமி என்னைப் பார்த்தாள். நான் அவளை நோக்கி பப்படியுடன் சென்றேன். நான் வருவதைப் பார்த்தவள் வேக வேகமாக பாதசாரியில் நட்டிருக்கிற லிங்கங்களுக்குள் புகுந்து ஓடினாள். எனது வேகமும் கூடிற்று. வெளிச்சம் மறைகிற இருளுக்குள் அவளைப் பின்தொடர்வது சிரமமாக இருந்தது. எதற்காக ஓடுகிறாளென்று தெரியவில்லை ஆனால் பிடிக்க வேண்டுமென்கிற வேகம் எனக்கு. நான் அவளை அன்மித்ததாக நினைக்கையிலெல்லாம் அவள் கைநழுவிக்கொண்டே இருந்தாள். ஒரு வளைவில் திரும்பியவள் சட்டென சுரங்கப்பாதைக்குள் புகுந்துவிட்டாள். அவளைக் கூவியழைத்தவாறே நானும் உள்ளே நுழைந்தேன். சுரங்கப்பாதைக்குள் ஒரு பாம்புபோல அவள் வேக வேகமாக ஊர்ந்தாள். அந்தத் தடம் அவளுக்குப் பழக்கமானதாக இருக்க வேண்டும். நான் நெருங்க நெருங்க அவள் என்னைத் திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள். சோன்பப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் விரல்களில் சிந்த ஆரம்பித்தது. சுருட்டி பத்திரப்படுத்திக்கொண்டே சிறுமியை விரட்டிச் சென்றேன். வியர்வை நெற்றிப் பொட்டிலிருந்து வழிவதைத் துடைத்துக் கொள்வதற்குள் சுரங்கப்பாதையின் மையத்தில் பிரிகிற நான்கு வழியின் எதற்குள்ளோ மறைந்துவிட்டாள். என் பார்வைச் சிதறிவிட்டது. சிமிட்டுகிற விளக்கொளியில் சிறுமியைத் துழாவினேன். எனது மூச்சொலி பயங்கரமாய் எதிராலித்தது. எனக்குப் பின்னே யாரோ வருகிற உணர்வு. திரும்பிப் பார்த்தேன். சோன்பப்படிக்காரன் கையில் விளக்குடன் ஓடி வந்துகொண்டிருந்தான். அவனுடைய பேட்டரி விளக்கின் ஒளியில், தூணுக்குப் பின்னால் அமர்ந்திருந்த சிறுமியின் நிழல் சுவரில் வெளிப்பட்டது. நான் தூணுக்கு முன்னால் சென்று அவளைப் பிடிக்கக் குனிந்தபோது சிறுமி முகத்தை மூடிக்கொண்டு அழ முடியாமல் திணறினாள். நான் அவள் கைகளைப் பிடிக்க முயன்று (தொடுவது தெரிந்து தொடைகளுக்குள் ஒளித்துக்கொண்டாள்) தொட்டும் தொடாமலுமாக, அவளிடம் “சோன்பப்படி கொடுக்கத்தான் விரட்டுனேன்” என்றேன். அவள் தலையை ஆட்டி மறுத்தபடியே விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அவளது அழுகை கடவுள் அழுவதைப் போன்றிருந்தது. சோன்பப்படி முழுவதுமாகச் சிந்திவிட்டது. தேவதையின் ஆடைப்போன்றிருந்த அதன் அழகு குப்பையாக மாறியிருந்தது. நான் சிறுமியின் முன் என் கடந்தக் காலத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டேன். சிறுமி என்னைத் தாண்டி ஓடினாள். சுரங்கப்பாதையின் எல்லா தூண்களிலும் யாரோ சிலர் யாரோ சிலரிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

சிந்தாதிரிபேட்டை

தம்பதியரின் விவாகரத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தபோது, அரசு பணியில் இருக்கும் பெண்ணுக்கான இழப்பீடு தொகை என்று எதுவும் இல்லையென்பது முடிவாகிற்று. கணவனோடு நான்கு வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை வீணானதற்கு ஏதாவது இழப்பீட்டைத் தரத்தான் வேண்டும் என்று பெண்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அந்தப் பெண்ணும் நீதிபதியிடம், கணவனுக்கு இழப்பீடாக நான் விவாகரத்தைத் தரும்போது அவர் எனக்கென்ன இழப்பீடு தருவார்? என்று கேட்டேவிட்டாள். அவள் சொல்வதும் நியாயம்தான். பணம் அல்லாமல் வேறெதையாவது அவள் கேட்பதற்கு உரிமை உண்டு என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்தப் பெண், இனி தான் மறுமணம் செய்யப் போவதில்லை, அதில் எனக்கு விருப்பமும் இல்லை, எனவே அவன் மூலமாக ஒரு குழந்தையை இழப்பீடாகத் தர வேண்டுமென்றாள்.

கணவன் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு பெண்ணுக்கு திருணமத்திற்கு முன்பே கர்ப்பக் குழாயில் காசம் தொற்று உள்ளதை எங்களிடம் மறைத்துவிட்டதும் குற்றச்சாட்டில் சேர்த்திருக்கிறோம் என்றனர். அதற்கு நீதிபதி, ”செயற்கைக் கருத்தரிப்பில் ஆணின் உயிரணுவைச் செலுத்தலாமே” என்றார். விவாகரத்து முடிவானதற்குப் பிறகு எந்த ஒட்டும் உறவும் கூடாதென்பதில் எதிர்தரப்பு பிடிவாதமாக இருந்தது. குழந்தையை இழப்பீடாக தந்தே ஆக வேண்டுமென்பதில் அவளும் பிடிவாதமாக நின்றாள். வழக்கை எப்படி முடிப்பதெனத் தெரியவில்லை.  உணவு வேளைக்குப் பிறகு இருதரப்பு வழக்கறிஞர்களும் கலந்து பேசி வாடகைத் தாய் மூலம் அவள் கேட்கிற இழப்பீட்டை ஏற்பாடு செய்யலாமென்கிற யோசனைக் கூறினர். அப்படியானால் மருத்துவ விதிமுறைகளின்படி ஒரு வாடகைத்தாயை அமர்த்த நீதிமன்றம் உத்தரவிடுகிறதென்று நீதிபதி வழக்கைக் கெடுவுடன் முடித்தார்.

நீதிமன்றத்தின் கெடுவால் அவனுக்கு மறுமணம் செய்யும் ஏற்பாடும் நின்று போயிற்று. அவள் அவனிடம் வருத்தம் தெரிவித்தாள். வாடகைத்தாய் கிடைக்கிற அன்றைக்கே கருப்பையில் விந்தணுவைச் செலுத்திவிட்டால் போதும் இழப்பீடு பாதி முடிந்த மாதிரிதான். வழக்கின் ஆணையும் கிடைத்துவிடும் என்றாள். இருதரப்பும் அவசரவசரமாக தங்களுக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் வாடகைத்தாயைத் தேட ஆரம்பித்தனர். சென்னையில் சுலபமாக வாடகைத்தாய் கிடைக்கிறதாகக் கேள்விபட்டு தம்பதிகள் உடனே சென்னைக்குக் கிளம்பினர். இந்தச் சமயத்தில் மருத்துவக் குழுமத்திலிருந்து அவர்களுக்கான வாடகைத்தாய் பதிவு சம்பந்தமாக மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அவர்களின் முன்பதிவுக்கான எண்ணும், வாடகைத்தாய் கொடையாளரின் காத்திருப்புப் பட்டியலும் இருந்தது. அதாவது, மருத்துவக் குழும கணக்கின்படி அவர்களுக்கான வாடகைத்தாய் கொடையாளர் இன்னும் இரண்டு வருடங்களுக்குக் கையிருப்பில் இல்லை. தம்பதிக்குத் தூக்கிவாறிப் போட்டது. வழக்கறிஞரைத் தொடர்புகொண்டார்கள், இது மருத்துவக் குழுமத்தின் பழைய பட்டியல், அவர்கள் எப்போதும் இப்படித்தான் பதிவு வரிசைகளைச் சரிபார்ப்பதே இல்லை. அதனால் நமக்குத் தெரிந்தவர்களிடம் விசாரிக்கலாம் என்று சமாதானம் கூறினர். அதுவும் சரிதான். பெரும்பாலும் அரசு திட்டங்களில் இதுபோல சுணக்கம் உண்டு. கொடையாளரை நேராகப் போய் பார்த்தால்தான் சரியாக இருக்கும்.

இருவரும் வழக்கறிஞர் கொடுத்த முகவரிகளுடன் ஆளுக்கொரு இடமாகச் சென்று விசாரிக்கத் துவங்கினார்கள். மூன்றாவதுமாதம் நான்குமாதம், ஆறுமாதம், எட்டுமாதம், எனப் பார்க்கிற வாடகைத்தாய்கள் எல்லாரும் அடுத்து அடுத்து குழந்தைப் பேறுக்கானப் முன்பதிவுகளை வைத்திருந்தனர். ஒவ்வொருத்தரையும் குறைந்தது மூன்று வருடங்களுக்கு அணுக முடியாத நிலைமை.

தம்பதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. விசாரித்தவர்களிடமிருந்து அவரவர்களுக்குத் தெரிந்த வாடகைத்தாய்களின் முகவரிகளை வாங்கி, ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு கடைசி வரை எதுவும் அமையவில்லை. இதற்கென தனியார் நிறுவனம் ஒரு செயலி வைத்துள்ளது. தினசரியில் விளம்பரங்கள் நிறைய வருகிறது. தொலைபேசிக்கு நிறுவன அழைப்புகள் வருவதும் உண்டு. எல்லாமே இதைப் பற்றித் தேடத் தேடத்தான் தெரிய ஆரம்பிக்கின்றன. ஆனால்  அத்தனையும் எதிர்காலத்துக்கானத் திட்டங்களாகவே உள்ளன. உடனே நடக்கிறமாதிரி எதுவும் இல்லை. இப்படியே எவ்வளவுநாள் காத்திருக்க முடியும். தனியார் மருத்துவமனைகள் வெளிநாட்டிலிருக்கும் வாடகைத்தாய்களை கைவசம் வைத்திருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பெரும் செலவு ஆகும். தம்பதிகளால் அவ்வளவு கொடுக்க முடியாது. குறைந்த விலைக்கு வெளியே, இரண்டு மூன்று முறை வாடகைத்தாயாக இருந்து, உடல் தகுதியிழந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் பலவீனமாகவும் வயதானவர்களைப் போல இருப்பதைப் பார்த்ததும் தம்பதிக்கு பயம் பிடித்துவிட்டது. அதில் ஒருத்தி, ”பயப்பட வேண்டாம் ஒப்பந்தம் போட்டுக்கலாம். கருவுக்கு ஏதும் ஆனா காப்பீடும் உண்டு.” என்றாள். இவள் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். பரவாயில்லை என்று அந்த வாடகைத்தாய் ஒரு தரகர் எண்ணைத் தந்தாள். அவர் மருத்துவக் குழுமத்தில் பணியாளர்.

தம்பதிகள் தரகரைத் தொடர்பு கொண்டார்கள். அவர் அவர்களது பதிவு எண்ணைச் சரியாகச் சொன்னார். ஆமாம் நாங்கள்தான் என்றனர். தொடர்பு எண் கொடுத்தவள் ஆவடி என்றால், நீங்கள் பட்டினப்பாக்கத்திலிருந்து, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, செங்குன்றம் கடைசியாக ஆவடி என்று தேடியிருப்பீர்கள் சரிதானே என்றார். தம்பதிகளுக்குத் தலைச்சுற்றியது. அவர் தன்னைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் நேரத்தையும் சொன்னார்.

இருவரும் சிந்தாதரிபேட்டையில் காத்திருந்தனர். அவ்வளவு ஜனநெருக்கடிக்குள் தரகர் அவர்களைச் சரியாக கண்டுபிடித்தார். இருவரையும் வட்டச்சுருள் போன்ற தெருவுக்குள் அழைத்துபோனார். அவர்களைப் பார்த்த  கடைவாசிகள் ”வா வா” என்று நிறைமாதப் பெண்ணின் படத்தையும் சிலர் குழந்தை பொம்மையையும் காட்டி, கையைப் பிடித்திழுக்காத குறையாக அழைத்தனர். தரகர், ”இதெல்லாம் ஏமாத்து. இன்னும் நாலு வருஷத்துக்கு ஆகாது” என்றார். சட்டென ஒரு நிலவறைக்குள் புகுந்தார். அதில் நீளமான பாதையொன்று பூமிக்குள் சென்று மறுபக்கம் தெருவுக்குள் தொடங்கிற்று. ”எப்போதோ மெட்ரோவுக்காக தோண்டி கைவிடப்பட்ட இடம். வடநாட்டினர் சிலர் கள்ளத்தனமாக வாடகைத்தாயாக இங்கு இருக்கிறார்கள். வயது நாற்பது இருக்கும் பரவாயில்லையா?” தம்பதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”ஏழோ எட்டோ மாதத்தில் குழந்தைத் தயாராகிவிடும். அப்போதான் போலீஸ் கெடுபிடியிலிருந்து தொழில காப்பாத்த முடியும். கொழந்த கைல வந்தபுறம் பணம் தந்தா போதும். என்ன சரியா?” தம்பதிகள் அமைதியாக வந்தனர். அவர்கள் ஒரு கடை வாசல் வழி சென்று வீட்டின் ஹாலை அடைந்தனர். முக்காடிட்ட அழகானப் பெண் ஒருத்தி வரவேற்றாள். தரகரிடம் பத்திரம் ஒன்றைக் காட்டினாள். தரகர் இவர்களிடம் திரும்பி, ”இப்போதான் ஒருத்தர் முன்பதிவு பண்ணிட்டு போறார். பெரிய பெரிய டாக்டர்ங்க கன்சல்ட் பண்ண வராங்க. புது டெக்னிக். உங்களுதயும் கொடுத்தா ஒரே சமயத்துல கெர்ப்பம் கிடைச்சுடும். ரெண்டு இல்ல மூணு வரைக்கும்கூட வாடிக்கையாளருங்களுக்குப் பண்ணுவாங்க. உங்க ஒருத்தருக்காக ஒரு வாடகைத்தாயப் பிடிக்கிறதலாம் கட்டுபடியாகாது. என்ன சரியா?” அவர் பேச்சை முடிப்பற்குள் தம்பதிகள் இருவரும் ”சரி சரி” என்று சந்தோஷத்தில் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு குதித்தனர்.

தெரியாமல்தான் தினமும் வந்து போகிறார் அவர்.

சித்ரா அவசரமாக வேலைக்குக் கிளம்பும்போதெல்லாம் ஜன்னலைச் சார்த்துவதில்லை. பாவம், கண் தெரியாதக் காற்று திசைமாறி சித்ராவின் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. அறைக்கதவில் மோதிக்கொள்வது, தினசரியைக் கிழிப்பது, துணிகளைக் களைத்துப் போடுவது, குப்பைக் கூடையை உதைப்பது, புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவது, மேசையிலிருக்கும் ஊஞ்சல் அழகியை கீழே சாய்ப்பது, ஒப்பனைக் குப்பிகளை உருட்டிவிடுவது, பால்கனியில் காயும் ஆடைகளைப் பிடுங்கிவிடுவதென தினமும் வீட்டை கந்தர்கோலம் பண்ணும். சித்ரா அலுவலகம் முடிந்து வந்து ஜன்னலைச் சார்த்தும்வரை அஃதால் வெளியே போக முடியாது. பிறகு அடுத்தநாள் இதேபோல திறந்து கிடக்கும் ஜன்னல் வழியாகத் திரும்பவும் வீட்டிற்குள் வரும்.  ஒருநாள் கோபத்தில் சருகுகளை அள்ளி வீட்டுக்குள் வீசியது. அப்படித்தான் ஒருமுறை சிகரெட் துண்டு ஒன்றைப் போட்டது. இன்னொரு முறை சாக்லேட் காகிதம். வீட்டுக்குத் திரும்பியதும் களைந்தவற்றையெல்லாம் அடுக்கி வைக்க சித்ரா ஒருநாளும் சுணங்கியதில்லை. வேண்டுமென்றேதான் ஜன்னலைச் சார்த்தாமல் போகிறாளென்று கண் தெரியாகக் காற்று வெட்டவெளியில் நின்றுகொண்டு சிலசமயம் கூப்பாடு போடும். சித்ரா காதில் விழாதவாறு போய்கொண்டிருப்பாள்.

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்: thuyan154@yahoo.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here