Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்கார்த்திகை சோமவாரம்

கார்த்திகை சோமவாரம்

தருணாதித்தன்

ஞ்சய், ஒரு புதிய ப்ராஜெக்ட் வந்திருக்கிறது. மிக சுவாரசியமானது, நாம் இது வரை செய்யாதது. பைலட் ப்ராஜக்ட் சுமார் பத்து மில்லியன் டாலர்தான் இருக்கலாம், ஆனால் அதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான இன்ஸ்டலேஷன் இருக்கும்.”

“அப்படியா ? இப்போது நாம் பத்து மில்லியன் ப்ராஜெக்ட் பற்றி எல்லாம் பேச வேண்டிய நிலைமை ஆகி விட்டது. அரஸ், உண்மையிலேயே ஆயிரக்கணக்கான இன்ஸ்டலேஷன் இருக்குமா இல்லை உன்னுடைய விற்பனைத் திறமையை என்னிடமும் காண்பிக்கிறாயா ?”என்று சிரித்தான் என்னுடைய மானேஜர் சஞ்சய். 

தமிழரசன் ஆகிய நான் அரசன் ஆகி யுஎஸ் வந்த பிறகு அரஸ் என்று அமெரிக்கர்களுக்கு வசதியாக உச்சரிக்கக் கூடிய ஈரசைச் சொல்லாகச் சுருங்கி விட்டேன். நான் இருப்பது டல்லாஸில்.

சஞ்சய் அமெரிக்க பிரதேச வைஸ் ப்ரெசிடென்ட், விரைவில் சீஃப் பிஸினஸ் ஆஃபீசராக போர்டில் சேரப் போவதாக வதந்தி. வசிப்பது சான்ஃப்ரான்சிஸ்கோ பே பகுதியில். முன்பெல்லாம் நூறு மில்லியனுக்கு குறைவான ப்ராஜெக்டுகளைப் பற்றி நாங்கள் மொபைலில் கூட பேச மாட்டோம். இப்போதைய மந்தமான மார்கெட் நிலவரத்தில், பத்து மில்லியன் ப்ராஜெக்ட் வீடியோ அழைப்பில் விவாதிக்கப்படுகிறது. 

“அது மட்டும் இல்லை, இதையே ப்ராடக்ட் ஆக செய்து, யூரொப், ஜப்பான், ந்யூசிலாண்ட் என்று மற்ற பிரதேசங்களிலும் விற்கலாம். நாம் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இஆர்பி இம்ப்ளிமெண்டேஷன் செய்து அமித் கேட்கும் முப்பது சதவீத வளர்ச்சி காண்பிக்க முடியாது.”

அமித் எங்கள் கம்பெனி எம் டி மற்றும் சிஇஓ. மூன்று வருடங்களில் எங்கள் கம்பெனி வருவாயை இரண்டு மடங்காக ஆக்குவதாக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து வருகிறார். இன்னும் இரண்டு வருடங்களில் இந்திய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தையில் அய் பி ஓ வுக்கு எங்கள் நிறுவனம் போவதாக வதந்தி. அதையும் ஒரு பேட்டியில் கேட்ட போது, அமித் மறுக்காமல் சிரித்தது உறுதி செய்வதாக இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். 

நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் இவர்களுடைய கலாச்சாரம் முழுவதாப் புரியவில்லை. எந்த புதிய ப்ராஜெக்ட் கொண்டு வந்தாலும் இறுதியாக அமித் சரி என்று சொல்ல வேண்டும். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹெச் ஆர் தலைவர் என்னை அழைத்திருந்தார், வேறு நிறுவனத்திலிருந்து வந்திருப்பதால், நான் புதிய கலாச்சாரத்துக்கு எப்படி பழகிக் கொண்டிருக்கிறேன், எனக்கு முற்றிலும் பிடிக்காத, ஒப்புக் கொள்ள முடியாதவை என்ன என்றெல்லாம் கேட்டார். அப்போது நான் என்னுடைய கருத்தை துணிச்சலாக சொல்லி விட்டேன். நான்கு பில்லியன் வளர இருக்கும் நிறுவனத்தில் சி இ ஓ அமித் எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

 நான் சொன்னதுதான் காரணமோ, இல்லை மற்றவர்களும் சொல்லி இருக்கலாம், அமித் அதைப் பற்றி இப்போது சொல்லத் துவங்கி இருக்கிறார். நிறுவனம் வளர, ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகாரம் தலைமை அலுவலகத்தில் மட்டும் இல்லை, ஒவ்வொரு சின்ன ப்ராஜெக்டுக்கும் இனிமேல் அமித்திடம் வரத் தேவை இல்லை என்று டவுன் ஹால் கூட்டத்தில் பேசினார். கூடவே அந்தந்த பிஸினஸ் யூனிட் தலைவர்களே முடிவு செய்து கொள்ளலாம். நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பு இருந்தால் மட்டுமே அமித்தின் ஒப்புதலுக்கு வர வேண்டும் என்று புதிய விதிகளையும் மின்னஞ்சலில் எங்களுக்கு எழுதினார். அதனால் நான் இப்போது உற்சாகத்துடம் இன்னும் நிறைய புதிய , எங்கள் நிறுவனம் இதுவரை செய்யாத ப்ராஜெக்ட்டுகளுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

“அரஸ், என்ன ப்ராஜெக்ட் அது ?”

“நாம வெறும் சாஃப்ட்வேர் மட்டும் செய்வதை விட, கூடவே ஹார்டுவேரும் இருக்கும்படியான ப்ராஜெக்டுகளை செய்ய வேண்டும் என்று நான் சேல்ஸ் ஸ்ட்ராடெஜி மீட்டிங்கில் சொன்னேன் அல்லவா ? அமித் கூட, ஆமோதித்து, இந்த மாதிரி புதிய முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பாராட்டினாரே, நினைவு இருக்கிறது அல்லவா?”

“ஆமாம் நினைவிருக்கிறது, என்னிடம் மீட்டிங் ஆன பிறகு, அரஸ் மாதிரி மற்ற நிறுவனங்களிலிருந்து புதியவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும், நம்முடைய பையன்கள் புதிதாக எதுவுமே செய்வதில்லை என்று சொன்னார். இது என்ன ஹார்டுவேரும் சேர்ந்த ப்ராஜெக்டா ?”

“ஆமாம், வெறும் ஏ அய் மட்டும் இல்லை, அய் ஓ டி எனப்படும் சென்ஸார், நெட்வொர்க் தவிர டேடா, க்ளவுட் எல்லாமே உண்டு.”

“அட, இத்தனையும் இருந்தும் பத்து மில்லியன்தானா ?”

“இது பைலட் ப்ராஜெக்ட், இப்படி ஒரு புதுமை யாருமே அய் ஓ டியில் செய்ததில்லை, நாம் முதலில் செய்து நிரூபித்தால், பிறகு ஆயிரம் இன்ஸ்டலேஷன் உறுதி.”

“சரி, என்ன ப்ராஜெக்ட் ?”

“இங்கே ‘ரான்ச்”அப்படின்னு சொல்லுகிறார்களே, அந்த மாதிரி பெரிய பண்ணைகளுக்குத்தான் இது”

“நாம் பண்ணைகளுக்கு இதுவரை எந்த சாஃப்ட்வேரும் செய்தில்லை, புதிய மார்க்கெட், மேலேசொல்லு, அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?”

“ஒரு பெரிய ரான்ச்சில் ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும். நிலப்பரப்பு ஆயிரம் ஏக்கர்கள் கூட இருக்கலாம். நூறாண்டுகளுக்கு முன் கௌபாய்கள் குதிரை மேல் ஏறி சுற்றி வருவார்கள், மேய்ப்பார்கள். தண்ணீர் எல்லாம் ஏற்பாடு செய்து, அவை சரியாக சாப்பிடுகிறதா, வளர்ச்சி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுவார்கள். நடமாட்டத்தைக் கவனித்து நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்று கண்காணிப்பார்கள்.”

“இப்போது ஏஅய் வைத்துக் கொண்டு அதை எல்லாம் செய்ய வேண்டுமா ?”

“ஆமாம், நடுவில் ட்ரோன் வைத்துக் கொண்டு கண்காணித்தார்கள். இப்போது ஒவ்வொரு மாட்டுக்கும் கழுத்தில் பட்டையுடன் ஜிபிஎஸ், வேறு சென்ஸார்கள் எல்லாம் போட்டு விட்டால், அவை எங்கே இருக்கின்றன, எவ்வளவு நடக்கின்றன , சுறுசுறுப்பாக இருக்கின்றனவா, எவ்வளவு நேரம் சாப்பிடுகின்றன, எவ்வளவு நேரம் தூங்குகின்றன என்று நாள் முழுவதும் கண்காணிக்கலாம்.”

“நாம ஸ்மார்ட் வாட்ச் கட்டிக் கொண்டு எத்தனை அடிகள் நடந்தோம் என்று எண்ணி, இதயத் துடிப்பை அளந்து வாராந்திர மாதாந்திர சார்ட் போடுவது போல ?”

“ஆமாம் சஞ்சய், அந்த மாதிரி வைத்துக் கொள்ளலாம்,”

“மாடுகளுக்கு ஸ்மார்ச் வாட்ச் செய்ய பத்து மில்லியன் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களா ?”

“சாதாரண ஸ்மார்ட் வாட்ச் மட்டும் இல்லை, அதற்கு மேலும் நிறைய செய்ய முடியும்.”

“வேறு என்ன செய்ய முடியும் ?”

“மாடுகளின் உடல் ஆரோக்கியத்தை தினமும் கவனிக்க முடியும். இதயத் துடிப்பு, உடல் வெப்ப நிலை, சுவாசம் இப்படி அடிப்படை அளவுருக்களைத் தொடர்ந்து கண்காணிக்கலாம். இந்த மாதிரி பண்ணைகளில் ஒரு மாட்டுக்கு ஏதாவது நோய் வந்தால், எல்லாவற்றுக்கும் பரவி விடும். நாம் மாடுகளின் அளவுருக்களுடன் அவற்றின் நடமாட்டத்தையும், தீனி எடுப்பதையும் டேடா சேகரித்து ஏ அய் மாடல் செய்தால், உலகம் முழுவதும் பண்ணைகளுக்கு விற்கலாம்.”

“புரிகிறது, இப்படி ஒன்று ஏற்கெனவே யாரும் செய்யவில்லையா ?”

“இல்லை சஞ்சய், இது வரை எல்லா டேடாவையும் ஒன்றாகச் சேர்த்து யாரும் ஏ அய் மாடல் செய்யவில்லை.”

“வசீகரமாக இருக்கிறது. டேடா கிடைத்தால் அல்காரிதம் செய்வோம் இருந்தாலும் பால் அதிகம் கறப்பதற்குப் பத்து மில்லியன் கொடுப்பார்களா ?”

“சஞ்சய், இது பாலுக்காக அல்ல. டெக்ஸாஸ்தான் அமெரிக்காவிலேயே பீஃப் , மாமிசத்துக்காக மாடுகளை வளர்க்கும் பகுதி. அது எவ்வளவு பில்லியன் மார்கெட் தெரியுமா ? நான் முழுதாக விளக்கவில்லை, முன்பெல்லாம் மாடுகளைக் கடைசியாக சிறிய இடத்தில் அடைத்து வைத்து, நிறைய உணவு கொடுத்துப் பருக்க வைப்பார்கள். இப்போது மாடுகளைப் பரந்த வெளியில் சுதந்திரமாக உலாவ விடுகிறார்கள். அதனால் மாடுகள் நடந்து செல்லும்போதே பாதையில் சென்சார் பதித்து எடையை அளக்க வேண்டும். அவை எவ்வளவு தீவனம் சாப்பிடுகின்றன, எவ்வளவு தண்ணீர் குடிக்கின்றன போன்றவற்றை மதிப்பீடு செய்து, தீவனத்தில் எவ்வளவு ப்ரோட்டின் சேர்க்க வேண்டும், எவ்வளவு சப்ளிமென்ட் மினரல்கள் தேவை ஒவ்வொரு மாட்டுக்கும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அப்போது மாடுகள் நன்றாக, ஆரோக்கியமாக வளரும். சரியான வளர்ச்சி அடைந்து விட்டனவா என்பதை ஏஅய் அல்காரிதத்துடன் கவனித்து எப்போது வெட்ட அனுப்பலாம் என்று முடிவு எடுக்கலாம்.”

சஞ்சய் ஒரு கணம் மவுனமாக இருந்தான். பிறகு 

“நாம் இவ்வளவு சென்சார், ஹார்டுவேர் எல்லாம் செய்ததில்லையே ? அதில் அனுபவமும் இல்லை.”என்று கம்மிய குரலில் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

“சஞ்சய், இதெல்லாம் கவலையே பட வேண்டாம், சென்னையில் ஒரு ஸ்டார்ட்டப் நிறுவனர்களுடன் பேசி கொட்டெஷன் வாங்கி இருக்கிறேன். அவர்கள் இந்த மாதிரி சென்சார், ஹார்டுவேர் எல்லாம் செய்திருக்கிறார்கள்.”

“ஓ அப்படியா”

“இன்னொரு அல்காரிதமும் கேட்டிருக்கிறார்கள். மாடுகள் வளர வளர சரியான சதைப் பிடிப்புடன் எடைக்கு…”

“அரஸ், எனக்கு எல்லாம் புரிந்தது. நேரம் ஆகிறது, அடுத்த மீட்டிங் இருக்கிறது. நீ எல்லாம் யோசித்திருக்கிறாய். இருந்தாலும் எனக்கு சில கேள்விகள்.”

சஞ்சய் தீவிரமாக இரண்டு விரல்களை இடது நெற்றியிலும் கட்டை விரலை முகவாயிலும் வைத்துக் கொண்டு வலதுபுறம் மேலே பார்த்துக் யோசித்துக் கொண்டிருந்தான்.

“என்ன கேள்வி ?”

ஏதோ கேட்க வாயைத் திறந்து, தானே தலையை மறுத்து அசைத்தான்.

“இவ்வளவு செலவழிப்பார்களா என்று புதிராக இருக்கிறது.”

“சஞ்சய், நான் அந்த பண்ணை முதலாளியுடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்கிறேன், நேராக அவரிடமே கேட்கலாம்.”

“ம் ம், கேட்கலாம், அமித்திடம் சொல்லி வைக்கிறேன், பிறகு மீட்டிங் ஏற்பாடு செய்யலாம்.”

“சஞ்சய், எனக்குப் புரியவில்லை, எதற்காக அமித்திடம் சொல்ல வேண்டும் ? இது வெறும் பத்து மில்லியன்தானே ?”

“இல்லை அரஸ், அமித்திடம் ஒரு வார்த்தை சொல்லி விடுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.”

“சஞ்சய், நாம் வருவாயை மூன்று வருடங்களில் இரட்டிப்பாக்க வேண்டும், அதனால் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், நம்முடைய நிறுவன கலாச்சாரமே மாற வேண்டும் என்று சொல்லுவது யார் ? இப்படி ஒவ்வொரு ப்ராஜெக்டுக்கும் அமித்திடம் அனுமதி வாங்கப் போனால் நாம் வழக்கம் போல பத்து சதவீதம் வளரலாம்.”

“அரஸ், கோபப் படாதே, இன்னும் உனக்கு இந்த நிறுவனத்தைப் பற்றி முழுதாகத் தெரியவில்லை. இந்த ப்ராஜெக்டுக்கு அனுமதி கேட்டுதான் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.”

“அப்படியானால் முதலில் வழக்கம்போல சக்ராவிடம் போக வேண்டுமா ?”

இது வரை எல்லா ப்ராஜெக்ட் ஒப்புதலுக்கும் அமித்திடம் போவதற்கு முன்பு சக்ரா என்று அழைக்கப் படும் சீஃப் ஃபைனான்ஸ் சக்ரபாணியிடம் போக வேண்டும். அவரிடம் எந்த ப்ராஜெக்டுக்கும் ஒப்புதல் வாங்குவது எளிதல்ல. அவர் குடைந்து குடைந்து லாபக் கணக்கு கேட்பார். என்னுடைய குரலில் ஆயாசம் தெரிந்திருக்க வேண்டும்.

“அரஸ் ஆசுவாசப் படுத்திக்கொள். சக்ராவிடம் போக வேண்டாம், அவர் இந்த ப்ராஜெக்டை கண்டிப்பாக நிராகரித்து விடுவார்.”

“ஏன், ஹார்டுவேர் இருப்பதாலா ? இல்லை நான் உறுதியாகச் சொல்லும் இன்னும் ஆயிரம் இன்ஸ்டலேஷன்கள் வராது என்றா ?”

“அதெல்லாம் இல்லை. அமித்திடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம்.”

“அமித்துடன் மீட்டிங் கேட்டால் மூன்று வாரங்களுக்குப் பிறகு பத்து நிமிடம் கிடைக்கும். அதற்குள் இந்த பண்ணை உரிமையாளர் இருக்கும் பட்ஜெட்டை வேறு ஏதாவது அய்டி ப்ராஜெக்டுக்கு செலவழித்து விடுவார்.”

“அரஸ், அப்படி அவசரப்பட முடியாது. அடுத்த வாரம் நாம் சேல்ஸ் மீட்டிங்குக்கு பெங்களூர் செல்ல வேண்டும், அங்கே அமித்தை சந்தித்து நேராகப் பேசி விடலாம்.”

 நான் பதில் சொல்லக் காத்திருக்காமல் சஞ்சய் முடித்து விட்டான். நான் விடுவதாக இல்லை, அமித்தின் செக்ரட்டரிக்கு மீட்டிங் கேட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பினேன்.

சேல்ஸ் மீட்டிங்கில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. அமித் எதிர்பார்த்தபடி அடுத்த வருடத்துக்குப் பெரிய ப்ராஜெக்ட் எதுவும் வருவதாக இல்லை. ஐந்து நாட்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த நாங்கள் எல்லோரும் விவாதம் செய்தாலும், வெள்ளிக்கிழைமை வரை நல்ல தீர்வாக, புதிதாக எதுவும் தேறவில்லை. இப்படியே போனால், இரண்டு வருடங்களில் இருபது சதவிகிதம் கூட வளர முடியாது என்று அமித் காட்டமான உரையுடன் முடித்தார், நடுவில் நான் மறுபடியும் ஹார்டுவேர் இருக்கும்படியான ப்ராஜெக்டுகளை செய்ய வேண்டும் என்று சொன்ன போது அமித் நிமிர்ந்து புன்னகைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நிச்சயம் என்னுடைய பண்ணை ப்ராஜெக்ட்டுக்கு ஒப்புதல் அளித்து விடுவார் என்று நம்பிக்கையாக இருந்தேன்.

அமித்தின் செக்ரடரி திங்கள் கிழமை பன்னிரெண்டு மணிக்கு மீட்டிங் கொடுத்திருந்தாள். நான் வார இறுதியில் ஊருக்குப் போகாமல் அந்த சந்திப்புக்காக காத்திருந்தேன்.

திங்கள் காலை பதினொன்றரை மணிக்கே நானும் சஞ்சயும் அமித்தின் அலுவலகத்தில் காத்திருந்தோம். செக்ரடரி உள்ளே சென்று கேட்டுவிட்டு சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு எங்களை அனுமதித்தாள். 

அமித் கை குலுக்கிக் கொண்டே”என்ன அரஸ், புதிதாகப் பெரிய ப்ராஜெக்ட் எதுவும் வட அமெரிக்காவிலிருந்து வருவதே இல்லையே ? நீயும் மார்கெட் நிலவரம் சரி இல்லை என்று இங்கு இருக்கும் பழகியவர்கள் மாதிரி பேச ஆரம்பித்து விட்டாயா ?”என்று முதல் கேள்வியிலேயே சற்று பின்னடைய வைத்தார்.

சஞ்சய் குறுக்கிட்டு”அமித், இவன் ஒரு புதிய ப்ராஜெக்ட் கொண்டு வந்திருக்கிறான். ஹார்டுவேர், ஏ அய், டேடா, க்ளவுட் எல்லாம் இருக்கிறது. அதைப் பற்றி பேசத்தான் இன்றைய மீட்டிங்.”என்றான். 

அமித் சற்று உற்சாகத்துடன்,”என்ன ப்ராஜெக்ட் ? எவ்வளவு மதிப்பு ?”என்று என்னைப் பார்த்தார்,

“இப்போதைக்கு பைலட் ப்ராஜெக்டுக்கு பத்து மில்லியன்தான், ஆனால் நாம் இதை வெற்றிகரமாகச் செய்து முடித்தால், ஆயிரக்கணக்கான இன்ஸ்டலேஷன் வரும்.”

பத்து மில்லியன் ப்ராஜெக்டுக்கு எதற்கு என்னிடம் ஒப்புதல் வாங்க வருகிறீர்கள் என்று அமித் கேட்பார் என்று எதிர்பார்த்தேன், கேட்கவில்லை. 

முதலிலேயே வருவாயை சரியாக சொல்லிவிடுவது நல்லது. அமித்துக்கு தொழில்நுட்பம் எல்லாம் அவ்வளவாகப் புரியாது. எவ்வளவு வரும், எவ்வளவு லாபம், வேறு எங்கு அதே மாதிரி விற்க முடியும், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் உண்டா என்பது மாதிரியான கேள்விகள்தான் நிறைய கேட்பார்.

“நீயும் இப்போதைக்கு பத்து மில்லியன் ஆனால் பின்னால் பில்லியன் டாலர் வரும் என்று ஸ்டார்ட் அப் மாதிரி பேசுகிறாய்.”

சஞ்சய் என்னுடைய உதவிக்கு வந்தான் “அமித், இந்த ப்ராஜெக்ட் நிறைய விற்கும் என்றுதான் தோன்றுகிறது, அரஸ் விளக்கினால் நீயே புரிந்து கொள்ளுவாய்.”

நான் பண்ணை ப்ராஜெக்டை மறுபடியும் விளக்க ஆரம்பித்தேன். மாடுகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் என்று எளிதாக சொன்னேன். அமித் நடுவில் நிறைய கேள்விகள் கேட்டார். ஹார்டுவேருக்கு சென்னையில் ஸ்டார்ட்டப் பார்த்து பேசி இருப்பதாக சொன்னதற்கு பாராட்டினார். 

“சஞ்சய், இப்படித்தான் சேல்ஸ் இருக்க வேண்டும், வெறும் கஸ்டமர் மீட்டிங் மட்டும் ஏற்பாடு செய்து விட்டு எஞ்சினியரிங் பையன்களை மேலே பார்த்துக் கொள்ளச் சொன்னால், புதிதாக எதுவும் செய்ய மாட்டோம் .”

நான் பெருமையாக,”அமித் அது மட்டும் இல்லை, நாம் புரட்சிகரமான ஏஅய் அல்காரிதம் ஒன்று செய்து காட்ட வேண்டும்.”

நான் மாடுகளுக்கு ஸ்மார்டு வாட்ச் மாதிரியான கருவியால் என்னென்ன செய்ய முடியும் என்று விவரமாகச் சொன்னேன். பாதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அமித்தும் அதே கேள்வியைக் கேட்டார்.

“இவ்வளவும் செய்து மாடுகள் அதிகம் பால் கொடுக்குமா ?”

“அமித் இது பால் கறக்கும் மாடுகளுக்கு இல்லை, மாடுகள் சரியான சதைப் பிடிப்புடன் எடைக்கு வளர்ந்தவுடன், நம்முடைய ஏ அய் அல்காரித்தை பயன்படுத்தி..”

அமித் குறுக்கிட்டு ஒரு விசித்திரமான முகக் குறிப்பு காட்டினார். 

எழுந்து நின்று ஜன்னல் வழியாகச் செடிகளை பார்த்துக் கொண்டே,”எனக்குப் புரிந்தது. பத்து மில்லியன் ப்ராஜெக்டுக்கு எதற்கு என்னிடம் ஒப்புதல் வாங்க வருகிறீர்கள் ? ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகாரம் தலைமை அலுவலகத்தில் மட்டும் இல்லை, நான் திரும்பச் சொல்லுகிறேன், நீங்களே முடிவு செய்ய வேண்டிய சிறிய ப்ராஜெக்ட் இது.”என்று திரும்பி சஞ்சய் பக்கம் முறைத்தார்.

 நான் உற்சாகமாக,”நன்றி அமித், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அடுத்த வருடமே ஆயிரம் பண்ணைகளில் நமது அய் ஓ டி சிஸ்டம் ஏ அய் அல்காரித்துடன் செயல்படும்.”என்றேன்.

சஞ்சய் அதைக் கவனிக்காதது போல”அமித் இரண்டு நிமிடம் தனியாகப் பேச வேண்டும்.”என்று என்னையும் கதவையும் பார்த்தான். நான் மடிக் கணினியை எடுத்துக் கொண்டு எழுந்தேன்.

“சஞ்சய், உனக்கு நேரம் இருந்தால், இன்றைக்கே லஞ்ச் பொழுதில் இந்த ப்ராஜெக்டுக்கு அடுத்தது செய்ய வேண்டியதைப் பேசலாம்.”

சஞ்சய் அமித்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அமித் கைக் கடிகாரத்தில் மணி பார்த்து,”மதிய உணவு நேரம் ஆயிற்றே, எங்கே கேஃபடேரியாவுக்கா ?”என்றார்.

“ஆமாம், நான் வெளியே காத்திருக்கட்டுமா ? .”என்றேன்.

அமித் “எதற்கு கேஃபடேரியா ? என்னுடன் சாப்பிடலாம், இன்றைக்கு கார்த்திகை சோமவாரம் அல்லவா ? விரத நாள், வீட்டிலிருந்து அம்மா சாபுதானா கிச்சடி நிறையவே செய்து அனுப்பி இருக்கிறார். வாருங்கள்.”என்று ஓரத்தில் வைத்திருந்த ஒரு பையை எடுத்தார்.

சஞ்சய் என்னைப் பார்த்து நிம்மதியாகப் புன்னகைத்தான்.

அமித் ஷர்மாவின் அம்மா சுவையாக சமையல் செய்பவராக இருக்க வேண்டும். சாபுதானா கிச்சடி நிறைய உருளைக்கிழங்கும், பொடித்த வேர்க்கடலையும், பச்சை மிளகாய்க் காரமும், பிழிந்த எலுமிச்சையின் மணமுமாக மிக அருமையாக இருந்தது.

***

தருணாதித்தன் : இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ணன், பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும், பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில் வாகன மென்பொருள் துறையில் பணியாற்றினார். தருணாதித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு “மாயக்குரல்” எழுத்து பிரசுரத்தால் (ஸீரோ டிகிரி) வெளியிடப்பட்டிருக்கிறது. மின்னஞ்சல் முகவரி : tharunadithan@gmail.com.

RELATED ARTICLES

4 COMMENTS

  1. அருமையான சிறுகதை. படித்து முடித்ததும், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது, இச்சிறுகதை

  2. Hello Tharunadhithan,

    Excellent way of narration keeping the fast-paced style that has come to be your hallmark! Nice ending with your usual way of “not saying anything, yet saying so much!”. Keep it up!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here