Tuesday, May 26, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்போரும் அமைதியும்: வகைப்பாடுகளை மறுக்கும் காப்பியம்

போரும் அமைதியும்: வகைப்பாடுகளை மறுக்கும் காப்பியம்

பாரதிராஜா

ல்ஸ்தோய் எழுதிய ‘போரும் அமைதியும்’, உலக இலக்கியத்தில் இதுவரை எழுதப்பட்ட புதினங்களிலேயே தலைசிறந்த புதினம் என்று பேசப்படுவனவற்றுள் ஒன்று. அந்த அளவுக்கு அதில் சரக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான இந்த நூலை முதற்பதிப்பில் சரியாக 1225 பக்கங்களாக வெளியிட்டார் தல்ஸ்தோய். நெப்போலியன் ஐரோப்பிய நாடுகள் மீது நடத்திய போரை மையமாக வைத்து, ரஷ்யாவின் உயர்குடிக் குடும்பங்களின் வாழ்வையும் வரலாற்றையும் மெய்யியலையும் பேசுகிறது இந்த நூல்.

தல்ஸ்தோயே இதை ஒரு புதினமாகக் கருதவில்லை. “நான் இதை ஒரு புதினமாகக் கருதவில்லை. காப்பியமாகவும் கருதவில்லை. வரலாற்றுக் குறிப்பாகவும் கருதவில்லை. அத்தகைய வகைப்பாடுகளைக் கடந்த, நான் விரும்பிய வகையில் எழுதித் தீர்த்த, ஒரு படைப்பு இது” என்றுதான் சொல்கிறார். இந்த வகைப்பாட்டு மறுப்புதான் இந்த நூலை இன்றும் முக்கியமானதாக வைத்திருக்கிறது.

ஏன் இன்றும் இது முக்கியம்

இன்றைய புவியரசியற் பதற்றங்கள் நிறைந்த காலத்தில், தல்ஸ்தோயின் மையக் கருத்து மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது: வரலாறு என்பது பெரிய மனிதர்கள் பெரிய முடிவுகள் எடுப்பதால் வடிவமைக்கப்படுவதல்ல, மாறாக தம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் சிக்கிய எளிய மக்கள் எடுக்கும் மில்லியன் கணக்கான சிறு சிறு முடிவுகளால் வடிவமைக்கப்படுகிறது. 

நெப்போலியன், எவ்வளவு பெரிய மேதையாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே! ரஷ்யக் குளிரையோ தங்கள் தாயகத்தைக் காக்கும் மக்களின் கூட்டு விருப்பத்தையோ அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

நூலின் அமைப்பும் சவால்களும்

1805-இல் பீட்டர்ஸ்பர்கில் தொடங்கி 1820 வரை பரவியிருக்கும் இந்தக் கதை, மொத்தம் நான்கு தொகுதிகளாகவும் 15 நூல்களாகவும் இரண்டு முடிவுரை நூல்களாகவும் எழுதப்பட்டிருக்கிறது. பீட்டர்ஸ்பர்கின் உயர்குடி அறைகளுக்கும் குருதி தோய்ந்த போர்க்களங்களுக்கும் இடையில், வரலாற்றுக் காரணிகள் பற்றிய மெய்யியற் கட்டுரைகளுக்கும் காதலில் விழுந்து எழும் இளைஞர்களின் உள்ளார்ந்த சித்திரங்களுக்கும் இடையில் கதை நெய்யப்படுகிறது.

நூலைப் படித்த பலரும், பல முறை முயன்று தோற்றுப் பின்னர் வென்றதாகத்தான் சொல்கிறார்கள். இடையில் எங்கேனும் சலிப்படைந்தாலும் இடைவெளி கொடாமல் படித்துவிட்டால் நல்லது. எண்ணற்ற கதாபாத்திரங்கள், அடிக்கடி பிரெஞ்சுக்கும் ரஷ்யத்துக்கும் என்று மாறுதல், வரலாற்று வாதங்களுடன் கதையைக் குறுக்கிடும் தல்ஸ்தோயின் அந்தக் ‘கெட்ட’ பழக்கம்—இவை அனைத்தும் வாசிப்புக்கு உண்மையான தடைகளை உருவாக்குகின்றன.

சில படலங்கள் கட்டுரை போலவே இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளை அப்படியே நீக்கிவிட்டு வெளியிடப்பட்ட பதிப்புகளும் இருக்கின்றனவாம். கதையைக் கதையாக மட்டும் படிக்க விரும்புகிற வாசகர்கள் நிறைய இருக்கிறார்களே! ஆனால் புனைவு வாசகர்கள் இது புதினமே அல்ல என்று வாதிடவும் கூடும். அந்த அளவுக்கு நேரடியாக வாசகர்களிடம் திகட்டத் திகட்ட வரலாறும் தத்துவமும் பேசிவிடுகிறார் தல்ஸ்தோய்.

மொழியும் பண்பாட்டுப் பின்னணியும்

நூல் முழுக்கவும் பிரெஞ்சு மொழியில் நிறையப் பேசப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த போதும், ஒரு காலத்தில் அவர்களின் மொழியைப் பேசுவதைப் பெருமையாகவோ அம்மொழியை உயர்தட்டு மக்களின் மொழியாகவோ ரஷ்யர்கள் கருதியிருக்கிறார்கள். இப்போது உலகின் பல பகுதிகளில் ஆங்கிலம் பிடித்திருக்கிற இடத்தை அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்சு பிடித்திருந்திருக்கிறது.

நூல் முழுக்கவும் ரஷ்யாவின் உயர்குடியினர் தமக்குள் பிரெஞ்சும் வீட்டுப் பணியாளர்கள், விவசாயிகள் போன்றவர்களிடம் ரஷ்ய மொழியும் பேசுகிறார்கள். ஆனால் போர் தொடங்கியதும் அவர்களுக்குள் ரஷ்ய மொழியின் மரியாதையை உயர்த்த வேண்டும் என்கிற உணர்வு மேல் எழுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்யர்களின் நாட்டுப்பற்று உணர்வைத் தட்டியெழுப்ப ஸ்டாலின் இந்த நூலைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிட்டதாகச் சொல்லப்படுவதுண்டு.

புதினத்தில் கோமான் ரோஸ்தோப்சின் கூறியதாக வரும் வரிகள் பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரெஞ்சு மொழிக்கும் அந்த நேரத்தில் இருந்த மரியாதையையும் மோகத்தையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன: “பிரெஞ்சுக்காரர்கள் நம் கடவுள்கள்: பாரிஸ் நம் சொர்க்க நிலம்.”

முக்கியக் கதாபாத்திரங்கள்

கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் என்றால் அது சில உயர்குடிக் குடும்பங்களும் அக்குடும்ப உறுப்பினர்களும் என்று சொல்லலாம். பெசுக்கோவ், பொல்கோன்ஸ்கி, ரோஸ்தோவ், குராகின் ஆகிய குடும்பங்கள்.

பியர் பெசுக்கோவ்: கதையின் உண்மையான தலைவன்

பெசுக்கோவ் குடும்பத்தின் பியர்தான் கதையின் தலைவன். கதை முழுக்கவும் அவனைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது என்றாலும் அவனைக் கதைத்தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு நீண்ட நேரம் ஆகிறது. புதினம் போருக்குச் சற்று முன்பு ஓர் உயர்குடிக் குடும்பத்தின் இல்லத்தில் நடைபெறும் விருந்துக் காட்சியோடு தொடங்குகிறது. அந்த விருந்தில் பியர் அவ்வுயர்குடிக் குடும்பங்களில் பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படுபவனாகவே காட்டப்படுகிறான். வெளிநாட்டில் படித்து ரஷ்யா திரும்பும் பியர் அந்தச் சமூகத்தில் ஒட்ட முடியாமல் திணறுகிறான்.

அவனுடைய தந்தை தன்னுடைய உயிலில் தன் சொத்து முழுவதும் பியருக்கே போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டுப் போய்ச் சேர்ந்து விடுகிறார். பியர் பெயரில் சொத்து வந்து சேர்ந்ததுமே அந்தச் சமூகத்தில் அவனுக்கான மரியாதை கூடத் தொடங்கி விடுகிறது. இது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அன்றைய ரஷ்ய சமூகத்தில் இருந்த மரியாதையைத் தெளிவாக விளக்குகிறது.

பியர் தனக்கென்று தெளிவான நியாய அநியாயங்கள் கொண்டவனாக இருக்கிறான். எப்போதும் மெய்யியல் ஆன்மீகத் தேடல்களில் ஈடுபடுபவனாக இருக்கிறான். தல்ஸ்தோயின் சிந்தனைகள் பெருமளவில் பியர் வழியாகத்தான் நமக்கு வந்து சேர்கின்றன. அவனுடைய பயணம் குறிப்பாகக் கவர்ச்சிகரமானது. தவறான வழியில் பிறந்த மகனாக மகத்தான செல்வத்தில் தள்ளப்பட்ட பியர், ப்ரீமேசன், சமூகச் சீர்திருத்தம், துறவு என்று ஒவ்வொன்றாகத் தாவிப் போகிறான். ஒரு கட்டத்தில் போர்க்கைதியாகவும் சிக்கிக்கொள்கிறான்.

குராகின் குடும்பத்தின் ஹெலனை அவளுடைய தந்தை சூழ்ச்சியாகப் பியருக்குக் கட்டி வைக்கிறார். ஹெலன் ஒரு அறிவற்ற, கணவனை மதிக்காத, பல ஆண்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். இந்த உறவு பியரை மனரீதியாக நொறுக்குகிறது. பின்னர் அவளிடமிருந்து பிரிந்து போகும் பியர், ப்ரீமேசன் கூட்டத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் ஆறுதல் தேடுகிறான்.

ஆண்ட்ரே பொல்கோன்ஸ்கி: இயல்பான வீரன்

ஆண்ட்ரே பொல்கோன்ஸ்கிதான் கதைத் தலைவனாக இருக்குமோ என்று தொடக்கத்தில் தோன்றும். ஆண்ட்ரே நாட்டுக்காக உழைக்க வேண்டும், உயிர் கொடுக்க வேண்டும் என்று போருக்குச் சென்று, கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு அருகில் சென்று, தப்பி வந்து, போர் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்து, மீண்டும் போருக்குப் போய் உயிரிழக்கிறான்.

கட்டிய முதல் மனைவியைப் பேதை என்று எண்ணுகிறான். திருமண வாழ்வே பிடிக்காதவன் போல நடந்துகொள்கிறான். அவளுடைய உணர்வுகளுக்குச் சற்றும் மதிப்பளிக்காமல் நாட்டுக்காக உயிர் கொடுப்பதுதான் ஆண்மகனின் உயரிய கடமை என்று முதன்முறை போருக்குப் போய் உயிர் தப்பித் திரும்பும் போது, மகப்பேறு நேரத்தில் சிக்கல் ஏற்பட்டு மனைவி இறந்து போகிறாள்.

பெரியவர் நிக்கோலாய் பொல்கோன்ஸ்கி சொல்வதாக வரும் இந்த வரிகள் தல்ஸ்தோயின் பொன்மொழிகளில் ஒன்றாக இன்றும் சொல்லப்படுபவை: “மனிதர்களின் தீமைகள் அனைத்துக்கும் இரண்டே இரண்டு மூலங்களே உள்ளன—சோம்பலும் மூடநம்பிக்கையும், இரண்டே இரண்டு நல்லொழுக்கங்களே உள்ளன—சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும்.”

பெண் கதாபாத்திரங்கள்: மரியா, நடாஷா, ஹெலன்

ஆண்ட்ரேயின் தங்கை மரியா தீவிர கடவுள் பக்தி கொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பெண் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்கிற விதத்தில் நாம் எண்ணுகிற அளவுக்குச் செதுக்கியிருக்கிறார். “நாத்தனாள்கள் கொப்புளங்கள் கொடுப்பார்கள். ஆனால் இவள் ஓர் ஈயைக் கூடக் காயப்படுத்த மாட்டாள்” என்று மரியா பற்றி மரியா திமித்ரியேவ்னா என்பவர் சொல்வார்.

ரோஸ்தோவ் குடும்பத்து நடாஷா இனிமையானவளாக இருக்கிறாள். கதையில் வரும் பருவ வயது ஆண்கள் எல்லோருமே அவள் மீது ஆசை கொள்கிறார்கள். முதலில் ஆண்ட்ரே பொல்கோன்ஸ்கிக்கு மனதைக் கொடுத்துவிட்டு, வயதுக் கோளாறால் நிகழும் சில குழப்பங்களால் அதிலிருந்து பின்வாங்கி, பின்னர் போருக்குப் பிந்தைய காலத்தில் பியரைத் திருமணம் செய்து கொண்டு, ஹெலனால் துச்சமாக மதிக்கப்பட்ட அதே பியரை உயிருக்கு உயிராக நேசித்துக் குழந்தைகள் பெற்று வாழ்ந்து காட்டுகிறாள்.

குராகின் குடும்பத்து ஹெலன் எப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறாள். அறிவற்ற மூடப்பெண்ணாக இருந்தும் கூட அவளோடு தொடர்பு வைத்துக் கொள்வதை ரஷ்ய உயர் சமூகத்து ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இது ரஷ்ய உயர்குடிச் சமூகத்தின் மேலோட்டமான போலித்தனத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

ரோஸ்தோவ் குடும்பம்: வீழ்ச்சியும் மீட்சியும்

கோமகன் ரோஸ்தோவ் குடும்பம் கடுமையான பணச் சிக்கலுக்கு உள்ளாகிறது. ஆடம்பரமான உயர்குடி வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்கள் அதை விட்டுக் கொடுக்க முடியாமல் மேலும் மேலும் வாழ்வைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள். இந்தக் குடும்பத்தின் கடைசிப் பையன் பேட்யா, பதின்ம வயதிலேயே நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று போருக்குப் போய் உயிரிழந்து விடுகிறான்.

அவர்களோடே வாழ்கின்ற அனாதைப் பெண் சோனியா எதன் மீதும் விருப்புக் கொள்ள முடியாத, வெறுப்புக் கொள்ள முடியாத, தியாகமே அவள் வாழ்வின் ஒற்றைக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது போல வாழ்கிறாள். அவள் மீதான நம் பரிதாப உணர்வைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

போர்க்காட்சிகள்: கண் முன் நிகழும் வரலாறு

முதற்தொகுதியிலேயே போர் தொடங்கி விடுகிறது. போருக்கும் குடும்பங்களுக்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்குமாகக் காட்சிகள் மாறி மாறி வருகின்றன. தல்ஸ்தோய் போர்க்காட்சிகளை திரைப்படத் துல்லியத்துடன் எழுதுகிறார். “அப்படியே கேமராவை இங்கே திருப்பு”, “அங்கே திருப்பு”, “உருப்பெருக்கிக் காட்டு”, “சுருக்கிக் காட்டு” என்பது போலக் காட்சிகளை விவரித்து இருக்கிறார்.

பியர் போரைக் காண்பதற்காகப் போர் முனையில் போய் உட்கார்ந்து கொண்டு, படைவீரர்களுக்கு அதை இதை எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான். அதன் மூலம் போரில் நடப்பவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு பியருக்கு மட்டுமின்றி நமக்கும் கிடைக்கிறது.

நெப்போலியனின் படை மாஸ்கோவைப் பிடிக்கும் காட்சிகள் நூலின் முக்கியமான பகுதி. மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதும் நகரத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதும் அப்படியே நம் கண் முன்னால் கொண்டுவரப்படுகின்றன. மர வீடுகள் என்பதால், போரில் தோல்வியுற்று விடுவோம் என்று அஞ்சி, வெளியேறும் போது நகரங்களைத் தீயிட்டுக் கொளுத்தி விடுவது ஒரு போர் முறை உத்தியாக இருந்திருக்கிறது.

எரியும் மாஸ்கோவைக் கண்டு பொறுக்க முடியாத பியர் இதற்கெல்லாம் காரணமான நெப்போலியனைப் போட்டு தாக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கிறான். இந்த இடத்தில் இதுதான் கதையின் முக்கிய நோக்கமோ என்ற ஐயம் வருகிறது. ஆனால் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரெஞ்சு வீரனுக்கு எதிராகச் சண்டையிடும் போது பியரைப் போர்க்கைதியாகப் பிடித்துச் சென்று விடுவார்கள். அத்தோடு அந்த நோக்கம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிடும்.

தல்ஸ்தோயின் தீவிரப் பார்வை: வரலாறு எப்படி உருவாகிறது

மற்ற வரலாற்று நாவல்களிலிருந்து இதை வேறுபடுத்துவது, வரலாற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது குறித்த தல்ஸ்தோயின் சீற்றமான வாதம். இரண்டாம் முடிவுரை முழுக்க தல்ஸ்தோயின் கட்டுரை வடிவிலான எழுத்துக்களே. வரலாறு எழுதப்படும் முறையைக் கேள்வி கேட்கிறார். ஒரு தலைவனைச் சுற்றி வரலாற்றை உருவாக்குவது எவ்வளவு தவறு என்பதை விளக்குகிறார்.

பெரும் வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தனிமனிதனின் திறமையாலோ முடிவாலோ மட்டும் ஏற்படுபவை அல்ல, பல்லாயிரம் சிறு சிறு நிகழ்வுகளின் விளைவாகத்தான் ஒரு பெரிய நிகழ்வு நிகழும் என்று அடித்துச் சொல்கிறார். அறிவியல், மெய்யியல், கணிதம் என்று ஆழ்ந்த தர்க்கங்களை முன் வைக்கிறார். நுண்கணிதம், நிகழ்தகவு போன்ற கணிதக் கருத்துகள் எல்லாம் வருகின்றன. எத்தனை புனைவு நூல்களில் இதையெல்லாம் படிக்க முடியும்!

போரில் திட்டமிடுதல் என்பது சாத்தியமே இல்லை, அதுவும் குறிப்பாக போர் நடக்கும் இடத்தை விட்டுப் பல நூறு மைல் தொலைவில் இருப்பவர்கள் போட்டுக் கொடுக்கும் திட்டம் எதையும் போரில் செயல்படுத்தவே முடியாது என்கிறார். திட்டத்தில் உள்ள ஒன்று சொன்னது போல் நடக்காவிட்டால் அடுத்ததும் திட்டத்தின் படி நடக்க முடியாது. அந்த நேரத்துக்கு எது சரியான முடிவோ அதைக் களத்தில் இருப்பவர்கள்தாம் எடுக்க வேண்டும்.

நெப்போலியன் x குத்துசோவ்

நெப்போலியனை மொத்த ஐரோப்பாவும் எப்படிக் கொண்டாடினாலும் அவன் ஒரு மனித குலத்தின் எதிரி என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறார். பிரெஞ்சுப் புரட்சி நாயகனான நெப்போலியன், வெற்றிகரமாக முடிந்த அந்தப் புரட்சியோடு நிறுத்தாமல் நாடு பிடிக்கும் முழுநேர வேலையில் இறங்குவதுதான் அவனுடைய அழிவின் தொடக்கமாகிறது. ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஐரோப்பியர்கள் அனைவருக்கும் உயர்வான வாழ்வைக் கொடுக்கும் உயரிய நோக்கத்துடன் இதைச் செய்வதாகத் தனக்குத் தானேயும் தன் மக்களுக்கும் அவன் சொல்லிக் கொள்கிறான்.

ஆனால் தல்ஸ்தோய் வைக்கும் கேள்வி: ஐரோப்பிய மக்கள் அனைவருக்கும் உயர்வான வாழ்வைக் கொடுக்க விரும்புகிறவன், இத்தனை போர்கள் மூலம் இத்தனை இலட்சம் வீரர்களை அழித்து அதைச் செய்வானா? அவன் உண்மையிலேயே நல்ல மனிதனா?

தொடர்ந்து வெற்றிகளையே கண்டு அதன் மூலம் தன்னைக் கடவுளுக்கு இணையான ஒரு மனிதனாக உணரத்தொடங்கி விடுகிறான் நெப்போலியன். அவனுடைய மக்களும் அப்படியே அவனை ஏற்றிவிடுகிறார்கள். இப்போது நடப்பதுதானே! தொடர் வெற்றி பெற்று விட்டாலே தன்னைக் கடவுளுக்கு இணையாகக் கருதிக் கொள்வதும் அதற்குச் சுற்றி இருப்பவர்கள் ஒத்து ஊதுவதும் இப்போதும் நடப்பதுதானே!

ரஷ்யப் படைத் தலைவர் குத்துசோவ் போரைத் தவிர்க்க முயன்றதற்காகப் பலராலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டாலும், “அவர் ரஷ்ய வீரர்களின் உயிரை மதித்தவர்”, “மூடத்தனமாகப் பகையை வளர்த்து எதிரிக்கு இரண்டு கண் எனக்கு ஒரு கண் என்று இழப்பதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார் தல்ஸ்தோய்.

ரஷ்யாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று நெப்போலியன் முடிவு செய்தபோது அவனுடைய அழிவு தொடங்கிவிட்டது. ரஷ்யாவை வீழ்த்துவது எவருக்கும் எளிதல்ல என்பது இரண்டாம் உலகப் போருக்கு முன்பே ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனியொரு முறை இதைச் செய்ய முயலும் எவரும் கருத்தில் கொள்ள வேண்டிய வரலாறு இது.

எழுத்து நுணுக்கம்: கண் முன் வரும் காட்சிகள்

காட்சிகளாகச் சொல்லப்படும் பகுதிகள் முழுக்கவும் மிக மிக நேர்த்தியாக நுணுக்கமான விவரணைகளுடன் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவையாக இருக்கின்றன. வங்காளத்துக்கும் கேரளத்துக்கும் அடுத்தபடியாக ரஷ்ய இலக்கியத்தின் செல்வாக்கு பெருமளவு செலுத்தப்பட்ட மாநிலம் தமிழ்நாடு எனலாம். ஒரு காலத்தில் தமிழில் எழுதிய பெரும்பாலான எழுத்தாளர்கள் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கத்தால் எழுத வந்தவர்கள். அதிலும் முக்கியமாக தல்ஸ்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி ஆகிய இருவரைச் சொல்லலாம்.

தல்ஸ்தோயைப் படித்து எழுத வந்து, இன்று அந்த நுணுக்கத்தைத் தேர்ச்சி பெற்றுவிட்டவர்கள் என்று நாம் எண்ணுபவர்களை விடவும் நுணுக்கமான முறையில் பல காட்சிகளை தல்ஸ்தோய் விவரித்து இருக்கிறார். 

பிரன் நகரத்தின் நடைபாதை வீதிகளில் இளவரசன் ஆண்ட்ரே சத்தமிட்டு நடந்து சென்றபோது – முகாம் வாழ்க்கைக்குப் பிந்தைய ஒரு சிப்பாயை எப்போதும் கவர்ந்திழுக்கும் உயரமான கட்டிடங்கள், கடைகள், வீடுகள், தெரு விளக்குகள், நேர்த்தியான வண்டிகள், பெரிய சுறுசுறுப்பான நகரத்தின் சூழல் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்ததை உணர்ந்த போது – ஏற்கனவே இருட்டிவிட்டது.” இது போன்ற வரிகளில் யுத்தங்களுக்கு இடையில் போர் வீரர்கள் குடிமைச் சமூகத்துக்குத் திரும்பும் போது சந்திக்கும் மாற்றங்கள் விளக்கப்பட்டிருக்கிறது.

பண்பாட்டு எதிரொலிகள்: இந்தியாவும் ரஷ்யாவும்

இந்த நூலைப் படிக்கும் போது – 200 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்றாலும் கூட சில கதாபாத்திரங்களைப் பற்றிப் படிக்கும் போது – இன்று நம்மோடு வாழ்கிற பல மனிதர்களை நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அடிப்படை மனிதப் பண்புகள் என்று இருப்பவை எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் ஒன்றுதானோ என்பதைத்தான் இந்தப் புதினம் நமக்கு நினைவூட்டுகிறது.

வரதட்சணை முறை, உயர் வர்க்கத்தினர் பிரெஞ்சு பேசுவதையும் ரஷ்ய மொழியை வேலைக்காரர்களுக்கு விட்டுவிடுவதையும், பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை மரியாதைக்குரியதாக இல்லை என்ற நம்பிக்கையையும் பார்க்கும் போது இவை இன்றைய இந்தியப் பிரச்சனைகள் போலவே இருக்கின்றன. காலமாற்றம், இடமாற்றம் போன்றவற்றால் மனிதர்களின் பண்புகளில் வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்றாலும், சமூக அமைப்புகளின் அடிப்படை இயக்கவியல் உலகளாவியது என்பதை தல்ஸ்தோய் இங்கு காட்டுகிறார்.

போரைப் பற்றிய கேள்விகள்

ஆண்ட்ரேயின் மனைவி கேட்டுவிட்டுப் போன இந்தக் கேள்விதான் நூல் முழுக்கவும் பெண்களின் கேள்வியாக நம்மை வதைக்கிறது: “எனக்குப் புரியவில்லை. ஆண்களால் ஏன் போர்கள் இல்லாமல் வாழவே முடியவில்லை என்பதை என்னால் சிறிதளவும் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

ஆண்ட்ரேயின் தங்கை மரியா தன் தோழிக்கு எழுதும் கடிதத்தில் இப்படிச் சொல்லிப் புலம்புவாள்: “மனிதர்கள் ஒருவரையொருவர் கொல்லும் திறமையை மிகப்பெரிய தகுதியாகக் கருதுகின்றனர்.”

ஒரு காலம் வரும், அப்போது இனி போர்களே இரா” என்று பியர் சொல்லிவந்தான் என்பது தல்ஸ்தோயின் நம்பிக்கை போலப் படுகிறது நமக்கு. இதுதான் இன்றும் மனிதகுலத்தின் மாபெரும் கனவுகளில் ஒன்று. அவனுக்குப் பதில் அளிக்கும் விதத்தில், ஆண்ட்ரேயின் தந்தை அவனிடம் சொல்வார்: “ஆண்களின் நரம்புகளில் இருந்து இரத்தத்தை எல்லாம் வடித்து, அதற்குப் பதிலாக தண்ணீர் ஊற்றுங்கள், அப்போது இனி போரே இருக்காது!” இது ஒரு வகையில் போரற்ற மனிதகுலம் என்பது சாத்தியமே அற்றது என்று தல்ஸ்தோயும் நம்பினார் என்பதற்கான சான்று.

படை வாழ்க்கையின் உண்மைகள்

நாம் அரசதூதரல்ல, நாம் படைவீரர்கள், அதைவிட எதுவும் இல்லை. நம்மை மரணிக்க உத்தரவிடப்பட்டால், நாம் மரணிக்க வேண்டும். தண்டிக்கப்படுவதாக இருந்தால், அதற்கு நாம் தகுதியானவர்கள் ஆகிறோம்; அதை நாம் தீர்மானிக்க முடியாது” என்று பேசும் ரோஸ்த்தோவின் சிந்தனைதான் பெரும்பான்மைப் படைவீரர்களின் சிந்தனை.

ஒவ்வொரு தளபதியும், ஒவ்வொரு படைவீரனும் தன் அற்பத்தன்மையை உணர்ந்திருந்தான்; மனிதப் பெருங்கடலில் வெறும் ஒரு துளியாக இருப்பதை அறிந்திருந்தான், அதே சமயம், அந்த மிகப்பெரிய ஒன்றின் ஒரு பகுதியாக இருக்கின்ற தனது வலிமையையும் உணர்ந்திருந்தான்.” இந்த வரிகள் படைவீரர்களின் உள்மன ஓட்டத்தைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன.

பணியில் வெற்றி அடைவதற்கு உழைப்போ வேலையோ, அல்லது தைரியமோ, அல்லது விடாமுயற்சியோ தேவையில்லை, ஆனால் பரிசுகளை வழங்கக்கூடியவர்களுடன் எவ்வாறு ஒத்துப்போக வேண்டும் எனும் அறிவு மட்டுமே தேவை” என்று வரும். முதலாளி-தொழிலாளி உறவு போல, தலைவன்-தொண்டன் என்ற உறவு வந்துவிட்டாலும் இந்தச் சிக்கல்கள் வந்துவிடுகின்றன.

ஆன்மீகமும் ப்ரீமேசன்களும்

பியர் ப்ரீமேசன் கூட்டத்தில் போய்ச் சேர்கிறான். ப்ரீமேசன் பற்றிய விவரிப்புகள் அனைத்தும் சுவையாக இருக்கின்றன. இவ்வளவு விரிவாக அவர்களைப் பற்றிப் பேசிய முதல் உலக இலக்கிய நூல் இதுவாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது. வாழ்வு பற்றிய அவர்களுடைய விளக்கங்களும் அவர்களுடைய வாழ்க்கை முறையும் பியருக்கு ஒரு விதமான தெளிவையும் வாழ்க்கை மீதான பிடிப்பையும் ஏற்படுத்துகின்றன.

மேசன் பெரியவர் ஒருவர் சொல்வார்: “உயர்ந்த அறிவு வெறும் காரணத்தின்மீது மட்டுமே கட்டமைக்கப்பட்டதல்ல. உயர்ந்த அறிவு என்பது ஒன்றே. உயர்ந்த அறிவு என்பது ஒரே அறிவியல் கொண்டது—முழுமையின் அறிவியல்—முழுப் படைப்பையும் அதில் மனிதனின் இடத்தையும் விளக்கும் அறிவியல்.”

ப்ரீமேசன்களின் ஏழு வழிகாட்டு நெறிமுறைகள்: கவனம், சீர்மையின் ரகசியங்களைக் காப்பாற்றுதல், சீர்மையில் உயர்ந்த நிலைகளில் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படிதல், நெறிமுறை, மனிதகுலத்தின் மீது அன்பு, தைரியம், தாராளம், சாவின் மீதான அன்பு. இதில் சீர்மை என்பது ப்ரீமேசன்.

பிடித்த சில வரிகள்

எளிமையும் நன்மையும் உண்மையும் இல்லாத இடத்தில் எந்தப் பெருமையும் இல்லை” என்கிற ஒரு வரி இந்தப் புதினத்தின் தலைசிறந்த வரியாகச் சொல்லப்படுவதுண்டு. இந்த வரியைக் கொண்டுதான் ஆகப்பெரும் ஆளுமைகளில் ஒருவராகக் கொண்டாடப்பட்ட நெப்போலியனை மனிதகுலத்தின் எதிரி என்ற இடத்தில் வைத்துக் கேள்வி கேட்கிறார் தல்ஸ்தோய்.

ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த நம்பிக்கையினால் மட்டுமே அன்றி மற்ற எதற்கும் போரிடவே மாட்டான் என்றால் போர்களே இரா” – இந்த வரி போரைப் பற்றிய இந்த நூலின் மிக முக்கியமான கருத்து. போரிடப் போகிற ஒவ்வொரு வீரனுக்கும் இதைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தினால் எப்படி இருக்கும்?

எப்போதும், எப்போதும் திருமணம் செய்து கொள்ளாதே, என் அன்பு நண்பனே! நீ உன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டாய் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்ளும் வரை, நீ தேர்ந்தெடுத்த பெண்ணை நேசிப்பதை நிறுத்தும் வரை, அவளை அப்படியே அவள் இருக்கிறபடியே காணும் வரை திருமணம் செய்து கொள்ளாதே” என்று ஆண்ட்ரே பியரிடம் சொல்வான்.

நீங்கள் ஏன் இந்த நூலைப் படிக்க வேண்டும்?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடுமையான இலக்கண விதிகளுடன் கூடிய செய்யுள்கள் படைத்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாம் என்ற போதும், 160 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு விரிவான, தெளிவான உரைநடை எழுத்துக்கள் நம்மிடம் இல்லை என்பதால் இதன் மீதான வியப்பையும் தவிர்க்க முடியவில்லை.

இந்தப் புதினத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நாடகங்கள் போடப்பட்டிருக்கின்றன. அப்படியானால் இதைப் புதினம் என்று மட்டும் சொல்ல முடியுமா? இதுதானே காப்பியம் என்பதற்கான வரையறை!

1200 பக்கங்களுக்கும் மேலான நீளம், சிக்கலான கதாபாத்திரங்கள், மெய்யியல் விவாதங்கள் – இவையெல்லாம் வாசிப்புக்குத் தடைகளாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கப் போவது வெறும் கதை அல்ல. வரலாறு எப்படி உருவாகிறது, மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், போர் என்றால் என்ன, அமைதி என்றால் என்ன என்பதைப் பற்றிய ஆழமான புரிதல்.

200 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யாவில் நடந்ததைப் படிக்கும் போது, இன்றைய இந்தியாவில் நடப்பவற்றையும் நினைவு கூர்வீர்கள். மனித இயல்புகள், சமூக அமைப்புகள், அதிகார விளையாட்டுகள் – இவை காலம் கடந்து நிற்பவை என்பதை நமக்கு உணர்த்துகிறது இந்நூல்.

எளிய கதையும் தெளிவான முடிவுகளும் வேண்டுமானால், அதற்கான இடம் அல்ல இது. ஆனால் இலக்கியம் என்ன செய்ய முடியும் என்பதை அதன் மிக உயர்ந்த வடிவில் அனுபவிக்க வேண்டுமானால், பொறுமையுடன் இதைப் படியுங்கள். வாசித்து முடித்தபின் நிச்சயம் உங்கள் மீதே பெருமை கொள்வீர்கள்.

மனித வரலாற்றின் பெரும் நகர்வுகள் முக்கியம்தான். ஆனால் நாம் எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும், எதை மதிக்க வேண்டும் என்பது பற்றி நாம் எடுக்கும் சிறிய முடிவுகளும் அதே அளவு முக்கியம். அவையும் – அல்லது அவையே – வரலாற்றின் பெருநகர்வுகளைத் தீர்மானிப்பவை எனும் காவியம் இது.

***

பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here