Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்ஒரு முட்டையின் வெற்றி

ஒரு முட்டையின் வெற்றி

ஷெர்வுட் ஆண்டர்சன்

தமிழில்: பாலா இளம்பிறை

னக்கு நினைவு தெரிந்து, இயல்பிலேயே எனது தந்தை கருணை மிகுந்தவர். எப்போதும் மகிழ்வோடிருக்கும் மனநிலையை தக்கவைத்துக் கொண்டிருந்தவர் என்றே நினைக்கிறேன். அவர் தன்னுடைய முப்பத்தி நான்கு வயது வரை ஓஹியோ மாநிலம் பிட்வெல் நகரத்தில் தாமஸ் பட்டர்வொர்த் என்கிற நிலக்கிழாரின் நிலத்தில் விவசாயக் கூலியாக இருந்தார். அவருக்கென்று சொந்தமாய் ஒரு குதிரையும் இருந்தது. சனிக்கிழமை மாலைகளில் நகரத்திற்குச் சென்று ஏனைய விவசாய ஊழியர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் அளவளாவி வருவதும் வழக்கம். அப்போதெல்லாம் கணக்கில்லாமல் பீர் குடிப்பதும் பென் ஹெட் சலூன் வாசலில் கூடுவதுமாக அந்த இடமே விவசாயிகளால் நிறைந்திருக்கும். மதுக்குவளைகளின் உரசலும் உரத்த பாடல்களுமென்று அந்த நேரங்களெல்லாம் அமர்க்களமானவை. இரவு பத்து மணிக்கு மேல் குதிரை வண்டியை அந்த ஆள் அரவமற்ற கிராமத்து சாலையில் தன்னந்தனியாய் குதிரையையும் தொந்தரவு செய்யாமல் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து, எப்போதும் போல் படுக்கைக்குச் செல்வார். அதுவே அப்போது அவருடைய என்றன்றைக்குமான வாழ்வு. அதற்கு மேல் பெரிய ஆசைகளெல்லாம் எதுவும் அவரிடம் இருந்ததில்லை.  

அம்மாவை திருமணம் செய்த போது அவரது வயது முப்பதைந்து.. அப்போது அம்மா ஒரு கிராமப்பள்ளியின் ஆசிரியர். அதற்கடுத்த ஆண்டிலேயே இயற்கையின் சுழலில் இருந்து வெளிவந்த திருப்பமாய் எனது அழுகை சத்தமும். இருவருக்குமிடையே தருக்கங்கள் விவாதங்கள் என்று ஏதோ நடந்திருக்க வேண்டும். அவரவர் லட்சியங்களுக்கான பயணங்களைத் தொடர்ந்தார்கள். வெகுசீக்கிரத்தில் முன்னேற வேண்டும் என்கிற அமெரிக்கர்களின் வலுவான இயல்புகள் அவர்களையும் உள்வாங்கிக் கொண்டது. 

அதற்கும் அம்மாவே பொறுப்பேற்றிருந்திருக்க வேண்டும். ஒரு பள்ளி ஆசிரியையாக புத்தகங்களும் செய்தித் தாள்களுமாக அம்மா ஒரு தீவிர வாசகி என்பதில் எந்த ஐயமும் இல்லை. கார்ஃபீல்ட், லிங்கன் போன்ற அமெரிக்கர்கள் தங்களுடைய வறுமை நிலையிலிருந்து மீண்டெழுந்து எப்படி புகழுக்கும் பிரநிதித்துவத்துக்கும் உயர்ந்தனர் என்பதை ஒரு கதை சொல்லியாக அவள் என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பக்குவப்படுத்தியதையும்.. நானும் ஒரு நாள் அவ்வாறே ஒரு தலைவனாக இந்தச் சமூகத்திற்கு பொறுப்பேற்பேன்.. நகரங்களை ஆள்வேன் என்பதெல்லாம் அவளுடைய கனவாய் இருந்திருக்கும் என்று உணர்வேன். அப்பாவை ஒரு பண்ணைத் தொழிலாளி என்ற நிலையிலிருந்து எப்படியாவது விடுபடச் செய்து, அவர் தனது குதிரையை விற்றுவிட்டாவது சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்று ஊக்குவித்தாள். உயரமும் மிடுக்கான தோற்றமும் அமைதியான சுபாவமும் நீண்ட மூக்கும் பழுப்பு நிறக் கண்களுமாக அம்மா ஒரு பேரழகி. அவளுக்கென்று பிரத்தியேக விருப்பமானது என்று எதுவுமில்லை. வாழ்வின் தீராத இலக்குகள் கொண்டவள் அம்மா என்பதே எனக்கும் அப்பாவுக்குமான கருத்து.   

இருவரும் துவங்கிய முதல் முயற்சி மோசமான தோல்வியிலேயே முடிந்தது. பிட்வெல்’லிருந்து எட்டு மைல் தொலைவில் க்ரிக் சாலையில் கல்லும் கரடுமாய் இருந்த நிலத்தை வாடகைக்கு எடுத்தனர். அதில் கோழி வளர்ப்பு தொடங்கியது. எனது பிள்ளைப் பருவமும் அங்கே தான் தொடங்கியது. அங்கேயிருந்து தான் வாழ்வின் தாக்கங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்திலிருந்தே அங்கே பேரழிவின் அச்சுகள் பதிந்து கிடந்தன. வாழ்வின் இருண்ட பகுதியைக் காணும் ஒரு துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதனாக – அதுவே எனது முழுமுதல் கணங்களாக. எனக்கான மகிழ்ச்சியான நாட்களாக.. சிறு வயதின் இன்பங்களாக அந்த கோழிப்பண்ணையில் கழிந்த தருணங்களையே எல்லா நேரங்களிலும் எண்ணிப் பார்க்கிறேன்.  

முன் பின் பழக்கமில்லாத இந்த மாதிரியான விசயங்களில் அனுபவமில்லாத ஒருவர் கோழி ஒன்றுக்கு ஏற்படக்கூடிய கொடிய பல துன்பங்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கோழிக் குஞ்சானது முட்டையிலிருந்து வருகிறது, நீங்கள் ஈஸ்டர் வாழ்த்து அட்டைகளில் காண்பது போல சின்னஞ்சிறு பஞ்சுப் பொதியாக சில வாரங்கள் இருக்கிறது. பிறகு முற்றிலும் அம்மணமாக. கண்கள் வெளிறி அப்பாவின் நெற்றி வியர்வை சிந்திக் கிடைத்த மக்காச்சோளத்தையும் மாவையும் உண்டு. பிப் மற்றும் காலரா என்று சொல்லப்படும் இன்ன பிற நோய்களையும் பெற்றுக் கொண்டு. சூரியனை வெறித்துப் பார்க்கும் மூர்ச்சையுற்ற கண்களோடு நோயுற்று இறந்து போய் விட, அவற்றிலிருந்து சில சேவல்களும் பெட்டைகளும் தப்பிப் பிழைத்து இயற்கையின் மர்ம நோக்கங்களுக்கான சேவைகளுக்காக அடுத்தடுத்த வளர்ச்சி நிலையை அடையப் போராடுகின்றன. கோழியிலிருந்து முட்டைகள்.. பின் அதிலிருந்து பிறக்கும் கோழிகள் என்று முழுமையான ஓர் அதிபயங்கரச் சுற்று. இவையெல்லாம் நம்பமுடியாத அளவுக்கு சிக்கலான கருத்துகள். பெரும்பாலான தத்துவஞானிகள் கோழிப் பண்ணைகளிலிருந்து தான் வெளிவந்திருப்பார்கள் போல. ஒருவர் ஒரு கோழியிடமிருந்து மிக அதிகமாய் எதிர்பார்க்கலாம், ஆனால் ஏமாற்றமடையும் அளவுக்கு மனமுடைந்து போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. கோழிக்குஞ்சுகள் தங்களது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும்போது மிகப் பிரகாசமாய் கவனத்தை ஈர்ப்பவைகளாய் இருக்கின்றன, ஆனால் அவை பயங்கர முட்டாள்கள். அவைகள் மனிதர்களைப் போலவே இருப்பதால், மற்றவரோடு ஒப்பிட்டு தங்களுடைய மதிப்பீடுகளை குழப்பிக் கொள்பவையாக இருக்கலாம். நோய் தாக்கி அவைகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லையென்றால், அவைகள் உங்களது எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி முழுமையாக செழித்து வளர்ந்து வாகனத்தில் ஏற்றப்படும். பின் தன்னை வளர்த்தவருக்காகவே நசுங்கி உயிரிழந்து தனது உரிமையாளரிடமே சென்று சேரவும் செய்யும். 

பூச்சிகள் அவற்றின் இளமையைத் திண்ணுகின்றன. அரித்துத் தீர்க்கின்றன. நலம் காக்கும் உணவுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். கோழிகள் வளர்ப்பதின் மூலம் பிறக்கின்ற அதிர்ஷ்டங்களால் தத்துவங்கள் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்பதையெல்லாம் என்னுடைய பின் நாட்களிலான வாழ்வின் போதே அறிந்து கொண்டேன். என்னுடைய விருப்பமென்பது, அறிவு மரத்தின் நல்லவை தீயவைகளை உண்டுவிட்ட கடவுள்கள் தான் அவற்றையெல்லாம் தயை கூர்ந்து படிக்க வேண்டும். குறைந்த அளவு எண்ணிக்கையிலான கோழிகள் வைத்திருக்கும் வெகு சாதாரண இலக்குகள் கொண்ட மனிதர்களுக்கு, அதுவொரு நம்பிக்கைக்குரிய இலக்கியம். அதனால் யாரும் வழிதவறிப் போகும் வாய்ப்புகளை கூடத் தவிர்க்கலாம். அது உங்களுக்காக எழுதப்பட்டதில்லை. அலாஸ்காவின் உறைந்த மலைத் தொடர்களில் தங்க வேட்டைக்குச் சென்று பாருங்கள். ஓர் அரசியல்வாதியின் நேர்மைக்குள் உங்களது நம்பிக்கையை பொருத்திப் பாருங்கள். உலகம் ஒவ்வொரு நாளும் மேம்பாடு அடைந்து வருகிறது. தீமைகளைத் தாண்டியும் நன்மைகள் வெற்றி பெறும் என்று நீங்கள் நம்பவேண்டும். ஆனால், கோழிகளின் உலகைப் பற்றிய இலக்கியம் அது என்கிற எண்ணத்தோடு நம்பிக்கை வைத்து அதை நீங்கள் படிக்கக்கூடாது. அது உங்களுக்காக எழுதப்பட்டதில்லை.  

இருந்தாலும் நான் உங்களை திசை திருப்பவே செய்கிறேன். நான் சொல்கிற கதைக்கு கோழி என்பது ஒரு முதன்மைப் பொருளே அல்ல. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அது முட்டையை மையப்படுத்தியதாகும். பத்து வருடப் போராட்டத்திற்குப் பின்னர் எனது பெற்றோர் தங்களது கோழிப்பண்ணையை வைத்து பணம் ஈட்டினர். பெரும் போராட்டம். பின் அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு மற்றொன்றுக்குத் தயாராயினர். ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்துக்கு இடம் பெயர்ந்து உணவகம் ஒன்றைத் தொடங்கினர். குஞ்சாகப் பொரிந்து வெளிவராத இன்குபேட்டர் நிலையின் கவலையாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறியதாக. அவர்களின் இரசனைக்குத் தகுந்ததாக, அழகாக. அரை நிர்வாணத்தோடு பஞ்சுப் பொதிகளோடு இருந்த சின்னஞ்சிறிய பெட்டைக் குஞ்சுகள் அதன் தன்மையிலிருந்து நழுவி இறந்த நிலைக்குச் சென்றுவிட்டன. எல்லாவற்றையும் ஒரு பக்கமாகத் தூக்கியெறிந்துவிட்டு உடைமைகள் அனைத்தையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிரிக்ஸ் சாலையின் வழியாக பிட்வெல் நகரை நோக்கி நகர்ந்தோம். கடந்து போன நாட்களெல்லாம் தாண்டியதொரு நம்பிக்கையுடன் புதிய இடம் தரப்போகிற மேன்மையான, வளமான வாழ்க்கையை நோக்கியதொரு பயணம் அது.   

சோகம் அப்பிய முகத்தோடு பயணப்படும் ஒரு குழுவாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.. இல்லை.. அலங்காரத்தோடு சொல்லவேண்டுமென்றால், போர்க்களத்தில் இருந்து தப்பியோடும் அகதிகள் போல் அல்லாமல் என்று வைத்துக்கொள்ளலாம். அம்மாவும் நானுமாக சேர்ந்து சாலையில் நடைப் பயணம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஆல்பர்ட் கிரிக்ஸ்’இடமிருந்து கடனாகப் பெற்ற வாகனத்தில் எங்களது உடைமைகள் அனைத்தும் இருந்தன. பக்கவாட்டில் அரதப் பழசான நாற்காலிகளின் கால்கள் முட்டிக்கொண்டு நின்றன. பின்னால் இருக்கும் பக்கவாட்டில் மேசைகளும் கோழிக்குஞ்சுகளை அடைக்கப் பயன்படுத்திய பெட்டிகளில் இருக்கும் சமையல் பாத்திரங்களும். அதற்கும் மேலே நான் குழந்தையாய்த் தவழ்ந்த சக்கரம் வைத்த வண்டி. அந்த வண்டியைப் பற்றி, தூளியைப் பற்றிப் பேசி அதற்குள் நாம் ஏன் இப்போது சிக்கிக் கொள்கிறோமென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்தடுத்த குழந்தைகள் பிறக்க, தவழ வாய்ப்புகள் இல்லாததாலோ என்னவோ, பயன்பாடின்றி சக்கரங்கள் உடைந்து போயிருந்தன. என்ன செய்வது மிகச் சிறிய அளவில் உடைமைகள் உள்ளவர்கள், அந்த சொற்ப சொத்துக்களில் ஒன்றிப் போய் விடுகிறார்கள். மீதமுள்ள வாழ்க்கையை மிகவும் சோர்வாக்குவதற்கு அதுவும் ஒரு காரணம், நிலைப்பாடு. 

வண்டியின் மேல் தளத்திலிருந்து அப்பா வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வழுக்கைத் தலையோடு தனது நாற்பத்தைந்தாவது வயதில் இருந்தார், கொஞ்சம் சதைப்பற்றுடனும். அதுவும் ரொம்ப காலமாகவே இந்தக் கோழிகள் பராமரிப்பில் இருப்பதால் இயல்பான அமைதியுடனும் ஊக்கம் ஏதும் இல்லாமலும் இருந்தார். கடந்த பத்தாண்டுகளாக கோழிப்பண்ணைத் தொழிலிலும் அக்கம் பக்கத்துப் பண்ணைகளின் கூலித் தொழிலாளியுமாக இருந்ததில் சம்பாதித்த பெரும்பாலான தொகை கோழிகளை அதன் சீக்குகளில் இருந்து காப்பாற்றுவதிலும், அதற்கான மருந்துகள் வாங்கவும், அதாவது வில்மர்’இன் ஒயிட் காலரா க்யூர் அல்லது அம்மா அவ்வப்போது பார்த்து பரிந்துரைக்கும், பேராசிரியர் பிட்லோ’வின் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகள் பற்றிய விளம்பரங்கள் அடங்கிய கட்டுரைகள் கொண்ட பத்திரிகைகளுக்காக செலவிட்டவை. அப்பாவின் காதுகளுக்கு மேலாக கொத்துக் கொத்தாய் சிறிய அளவிலான முடிக் கற்றைகள் இருக்கும். குளிர்காலத்தின் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் கணப்பு அடுப்புக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை சிறு குழந்தையாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததெல்லாம் நினைவிருக்கிறது. அதெல்லாம் நான் புத்தகங்கள் படிக்கத் தொடங்கியிருந்த நேரம். எனக்கென்று கருத்துகள் உருவாகிக் கொண்டிருந்த நேரமும் கூட. அவருடைய வழுக்கைத் தலைக்கு மேலாக எப்படி முதிர்ச்சியான சிந்தனைகள் உருப்பெறுமோ அதைப் போன்ற கிளர்ந்தெழுகின்ற கற்பனைத் திறன், சீசர் எப்படி தனது படையணிகளை ரோமை விட்டு வெளிக்கிளம்பி திறந்த அகன்ற சாலைகளில் அதுவரை அவர்களுக்குத் தெரியாத உலக அதிசயங்களைக் காண்பிக்க வழி நடத்திச் சென்றானோ அது போன்றதொரு கிளர்ச்சி எனக்கு. அவருக்கோ காதுகளுக்கு மேலாக வளர்ந்திருந்த கொத்து மயிர்க் கற்றைகள் முன்பை விட அதிகமாக வளர்ந்து காடு போலிருப்பதாய் எனக்கு உணர்த்தியது. நான் அரை உறக்கத்தில் தளர்ந்த நடையில் கனவுக்குள் வீழ்கிறேன், நானொரு சிறு குழந்தையாய், சாலை வழியாக தொலை தூரத்தில் ஓர் அழகான இடம் நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே கோழிப்பண்ணைகள் இல்லை. முட்டைகளைப் பற்றிய தேடல்கள் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வை நோக்கிய பயணம்.

கோழிப்பண்ணையிலிருந்து நகரம் நோக்கி விரையும் எங்களைப் பற்றி யாரேனும் ஒரு கதை எழுதலாம். அம்மாவும் நானும் முழுவதுமாக எட்டு மைல்களை நடந்தே கடந்தோம். அவள் வண்டியிலிருந்து ஏதும் ஏடாகூடமாய் விழுந்து விடாதிருப்பதை உறுதி செய்துகொண்டே வந்தாள். நான் இந்த உலகத்தை பரவசத்தோடு பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்பாவின் அருகிலிருந்த இருக்கையில் அவருடைய விலைமதிக்க முடியாத பொக்கிசம் இருந்தது. அதைப்பற்றிச் சொல்கிறேன் உங்களுக்கு. 

நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியே வரும் ஒரு கோழிப்பண்ணையில், அதிசயிக்கத்தக்க சம்பவங்களும் சில சமயங்களில் நடக்கும். மனிதப் பிறப்புகளில் சில கோரங்கள் நிகழ்வதைப் போல கோழிகளிலும் உண்டு. அம்மாதிரியான விபத்துகள் அடிக்கடி நிகழ்பவை அல்ல. ஆயிரத்தில் ஒன்று இருக்கலாம். உங்களுக்கே தெரியும் – ஒரு கோழி என்பது பிறக்கும் போது கூடவே நான்கு கால்கள், இரட்டை சோடி இறக்கைகள், இரண்டு தலைகள், அல்லது வேறென்ன இல்லை – எதுவும் நிகழலாம். அந்த ஜந்துக்கள் வாழ்வதில்லை. நடுங்கித் தொலைக்கும் அவை உடனடியாக உற்பத்தியாளரின் கைக்குச் சென்று விடும். அந்தக் கடைநிலை உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் சாத்தியமில்லையே என்கிற உண்மை அப்பாவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திவிடும். அவருக்கு வினோத எண்ணம் ஒன்று உண்டு – அதாவது ஐந்து கால்களோடு கூடிய சேவலோ அல்லது பெட்டைக் கோழியோ அல்லது இரண்டு தலை கொண்ட சேவலோ பிறந்து விட்டால், அதிர்ஷ்டம் கூடி செல்வம் பெருகும் என்பதான நம்பிக்கை அது. அந்த அதிசயத்தை அப்படியே அங்கிருக்கும் மற்றைய உற்பத்தியாளர்களிடமும் கொண்டு சென்று காட்சிப்படுத்தி அதன் மூலம் செல்வம் பெருகும் உத்தியைத் தெரிவிக்க வேண்டுமென்ற கனவும் உண்டு அவருக்கு. 

கோரமான நிலையில் பிறந்தாலும் எங்களது கோழிப்பண்ணையில் கண் விழிக்கும் சின்னஞ்சிறிய உயிரினங்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவார் அப்பா. அவைகளுக்கு மதுவைக் கொடுத்துக் கூட தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து காப்பாற்றினார். இப்போது நகரத்தை நோக்கிய நமது பயணத்தில் அவர் கொண்டு வரும் கோழிகள் கூட பெட்டிகளில் அடுக்கப்பட்டு அவருடைய ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கையால் சாட்டையைச் சொடுக்கி குதிரைகளை விரட்டிக்கொண்டே மற்றொரு கையால் அந்தப் பெட்டியையும் பிடித்துக் கொண்டிருக்கிறார். வரவேண்டிய இடம் வந்தவுடன் பெட்டிகள் கீழே இறக்கப்பட்டன. கண்ணாடி மூடிகள் பெட்டிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்தில் ஓர் உணவகத்தின் உரிமையாளராய் கழித்திருந்த இத்தனை நாட்களில், கோரமான உருவத்தோடு பிறந்த கோழிக்குஞ்சுகள் அனைத்தும் கண்ணாடிக் குடுவைகளில் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு கடையின் வரவேற்பறைக்குப் பின்னால் இருந்த அலமாரி அறைகளில் வைக்கப்பட்டன. இந்தச் செயல்களை அம்மா அடிக்கடி எதிர்ப்பாள். ஆனாலும், தனது மதிப்பிற்குரிய பொருளின் மீதான நம்பிக்கையில் மிகுந்த உறுதிப்பாட்டோடு இருந்தார் அவர். அந்த உயிரினங்கள் ‘விலை மதிப்பில்லாதவை’ என்று அறிவிக்கவும் செய்தார். விநோதமானதும் அற்புதமானதுமான பொருட்களைப் பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு என்பார்.   

ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்தில் நாங்கள் உணவகத் தொழிலைத் துவக்கினோம் என்று சொன்னேனா? அது கொஞ்சம் மிகைப்படுத்தல் தான். அந்த நகரே கூட ஒரு குறுகிய மலையடிவாரத்தின் கீழ் சிறிய ஓர் ஆற்றின் கரையில் இருந்தது. இரயில் சாலை கூட அந்த நகரத்தின் வழியாகச் செல்லவில்லை. இரயில் நிலையமானது வடக்கே ஒரு மைல் தொலைவில் இருக்கும் பிகல்வில்லே என்ற இடத்தில் இருந்தது. அங்கே ஆப்பிள் சாறு நொதிக்கப்படும் ஒரு தொழிற்சாலையும் ஊறுகாய் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையும் ஏற்கனவே இருந்து. நாங்கள் வருவதற்கு முன்பே அவை வணிகத்தில் இருந்து விலகியும் விட்டன. பேருந்துகள் காலையிலும் மாலையிலும் உணவகம் இருக்கும் இடத்திலிருந்து டர்னர்ஸ் பீக் எனப்படும் சாலை வழியாக முதன்மைச் சாலையான பிட்வெல் நகருக்காக கீழே வந்து கொண்டிருந்தன. நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் இந்த மாதிரியான இடத்தில் உணவகம் துவக்குவது என்பது அம்மாவின் யோசனை. ஓர் ஆண்டாக இதைப் பற்றியே பேசி வந்த அம்மா ஒரு நாள் இரயில் நிலையத்துக்கு எதிரில் இருந்த ஒரு காலி கடை ஒன்றை வாடகைக்குப் பிடித்தார்கள். உணவகம் இலாபம் நிறைந்த தொழில் என்பது அம்மாவின் கருத்து. பயணம் செய்ய வரும் மனிதர்கள் இரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் எப்படியாவது வந்து காத்திருப்பார்கள்.. நகரத்து மக்களும் வருகின்ற இரயில்களுக்காக அங்கே வந்து காத்திருப்பார்கள். எப்படியும் அவர்கள் ஒரு ரொட்டித் துண்டுக்காகவும் ஒரு காஃபி’க்காகவும் அங்கே வந்து தான் ஆகவேண்டும். நான் இப்போது வளர்ந்து விட்டேன் அல்லவா, ஆகவே சொல்வதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இந்தப் பயண நேரத்தில் அவளுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஆம், என்னுடைய வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறாள் இப்போது. என்னை நகரத்து பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்து அந்த நகரத்து மனிதர்களில் ஒருவனாக நான் என்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதே அவளது பேராவல்.   

அப்பாவும் அம்மாவும் பிகல்வில்லே’வில் எப்போதும் போலவே தங்களுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் நாங்கள் தங்கியிருந்த இடத்தையே உணவகமாக உருமாற்றுவதற்கு மெனக்கெட்டோம். அதுவே ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டது. அப்பா அலமாரி ஒன்றைத் தயார் செய்து அதனுள் காய்கறிக் கூடைகளை அடுக்கினார். சிவப்பு மை கொண்டு தனது பெயரை பெரிதாக மேலே எழுதி வைத்தார். பெயருக்குக் கீழே ‘இங்கே சாப்பிடுங்கள்’ என்கிற கூர்மையான கட்டளையாக ஒரு வாசகம் – அந்த மாதிரியான நடைமுறைகள் அரிதாகவே அங்கே பேணப்படுவது. கண்ணாடிப்பெட்டி ஒன்றில் சிகரெட்டுகளும் புகையிலையும் அடுக்கப்பட்டது. சுவர்களையும் தரையையும் அம்மா தேய்த்துக் கழுவினாள். நகரத்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் தோல்வி முகத்தோடும் வருத்தத்தோடும் காட்சியளிக்கும் கோழிக்குஞ்சுகளை விட்டு கொஞ்சம் தள்ளியிருப்பது சற்றே மகிழ்ச்சியான விசயம் தான். இன்னமும் எனக்கு அவ்வளவு பெரிய மகிழ்ச்சி இல்லை தான்.  மாலையில் டர்னர்’ஸ் பீக் வழியாக வீடு வரும்போது நகரத்துப் பள்ளி மைதானத்தில் அன்றைய நாள் குழந்தைகளோடு நான் விளையாடிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பெண் குழந்தைகள் குழு ஒன்று துள்ளிக் குதித்து பாடிக் கொண்டிருந்தது. நானும் அதை முயற்சித்தேன். பனி மூடி உறைந்திருந்த இறக்கமான சாலையில் ஒரு காலால் துள்ளித் துள்ளி அழுந்தக் குதித்துக் கொண்டே வந்தேன். ‘ஹிப்பிட்டி ஹாப் – டூ த பார்பர் ஷாப்’ என்று கூச்சத்தோடு பாடிக்கொண்டே வந்தேன். திடீரென்று பாட்டை நிறுத்தி சந்தேகத்தோடு சுற்றிலும் பார்த்தேன். எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியோடிருப்பது கொஞ்சம் பயமும் தந்தது. ஏதோ செய்யக்கூடாத ஒன்றை ஒருவர் செய்வதாக எனக்குத் தோன்றியிருக்க வேண்டும்.. அதுவும் தினசரி மரணத்தை விருந்தாளியாக வரவேற்றுக் கொண்டிருக்கும் ஒரு கோழிப்பண்ணையோடு வளர்ந்து வரும் எனக்கு அது பொருத்தமில்லாதது போலிருந்தது. 

இரவு வரை உணவகம் திறந்திருக்க வேண்டுமென்று அம்மா முடிவு செய்தாள். ஒரு சரக்கு இரயிலைத் தொடர்ந்து பயணிகள் இரயில் ஒன்று இரவு பத்து மணிக்கு வடக்கு நோக்கிச் செல்லும். வேலை முடிந்து பிகல்வில்லே’வில் பணி மாற்றம் செய்து கொள்ளும் இரயில் தொழிலாளர்கள் சூடான காபிக்காகவும் உணவுக்காகவும் எங்கள் உணவகத்துக்கு வந்தார்கள். சில நேரங்களில் அவர்களில் யாரேனும் ஒருவர் முட்டை பொரியல் வேண்டுமென்பார்கள். அவர்களே அதிகாலை நான்கு மணிக்கு திரும்பவும் வடக்கேயிருந்தும் கடைக்கு வந்தனர். சிறிதளவாக வணிகம் வளரத் தொடங்கியது. அம்மா இரவு நேரத்தில் தூங்கி எழுந்து கடையைப் பார்க்கத் துவங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறத் தொடங்கியவுடன், அப்பா தூங்கச் சென்று விடுவார். அம்மா இரவில் தூங்கி எழுந்து விட்டு வந்த படுக்கையிலேயே அப்பா காலையில் படுத்துத் தூங்க ஆரம்பித்து விடுவார்.. நான் வழக்கம் போல் பிட்வெல் நகரப் பள்ளிக்குச் சென்று விடுவேன். அம்மாவும் நானும் இரவில் உறங்க ஆரம்பித்த பிறகு வெகு நேரம் விழித்திருந்து அடுத்த நாள் மதிய உணவு வாடிக்கையாளர்களுக்காக சாண்ட்விச்’சில் வைக்கத் தேவையான இறைச்சி உணவை தயாரிக்கத் தொடங்கி விடுவார் அப்பா. உலகத்தில் போராடி முன்னேற அடுத்ததாக இன்னொரு யோசனையும் அவருக்கு வந்தது. ஆனாலும் அமெரிக்க மனப்பான்மை அவரைக் கட்டுப்படுத்தியது. அவருடைய இலட்சியங்கள் இன்னும் வளர்ந்தன.   

நீண்ட இரவுகளின் சிறிய ஆசுவாசத்தில் இந்த மாதிரியான சிந்தனைகளுக்கு அப்பாவுக்கு நேரம் வாய்க்கும். அதுதான் அவருக்கான வேலையில்லாத நேரம். கடந்த காலத்தில் ஒரு வெற்றியாளனாக இல்லாமல் எந்தவொரு மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாமல் துன்பப்பட்ட அவர் எதிர்காலத்திலாவது ஒரு நல்ல நிலையை அடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். வேலைகள் முடித்து அதிகாலையில் மாடிப்படியேறி வந்து படுக்கையில் அம்மாவுக்கு அருகில் படுப்பார். அம்மா எழுவாள். வழக்கம் போல் அவர்கள் தங்கள் வளர்ச்சியைப் பற்றி பேசத் தொடங்கி விடுவர். படுக்கையின் ஓரத்தில் இருக்கும் நான் அவர்களது உரையாடலை கவனிக்கத் தொடங்குவேன். 

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்கிற கருத்தானது அப்பாவுக்கும் அம்மாவுக்குமான பொதுவானதொரு யோசனையாக இருந்தது. அவருடைய சொற்களை இப்போது சரியாக என்னால் நினைவு கூற முடியவில்லை. தனது நிகழ்ச்சிகளின் மூலமாக பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்துபவர் என்று ஒருவரைப் பற்றிய பதிவை பொத்தாம் பொதுவாக சொல்லிச் சென்றவர், அவர். பிட்வெல் நகரத்தின் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வெகு அரிதாக ஒன்று கூடி எங்களது கடைக்கு வரும்போது, மகிழ்ச்சியான பிரகாசமான உரையாடல்களைத் தொடர்வது வழக்கம். அப்பாவின் வார்த்தைகளில் இருந்து நான் தெரிந்து கொண்ட ஒன்று என்னவென்றால் சொற்கள் அகமகிழ்ந்து வெளிப்பட வேண்டும். அதுதான் வாடிக்கையாளர்களை உள்ளிழுக்கும். அம்மாவுக்கு சந்தேகமாயிருக்கும். ஆனாலும் அவருடைய வார்த்தைகளால் யாரும் தளர்வடைவதில்லை. பிட்வெல் நகரத்தின் இளைஞர் கூட்டத்திற்கு அப்பாவும் அம்மாவும் பெற்றோர் மனப்பான்மையோடு பரிமாறுவது மிகுந்த உதவியாய், அனைவரையும் கவர்வதாய் இருக்கும் என்பது அப்பாவின் கருத்து. மாலை நேரத்தில் மகிழ்ச்சியான இளைஞர் குழுக்கள் டர்னர்’ஸ் பீக்’கில் ஒன்று சேர்ந்து பாடத் தொடங்க வேண்டும். அவர்கள் கூட்டமாய் சேர்ந்து எங்களுடைய இடத்தில் மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு சிரிக்க வேண்டும்.. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அங்கே பாடலும் விழாக் குதூகலமும் இருக்க வேண்டும். அப்பா இவற்றை விரிவாகச் சொன்னார் என்று நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல அதிகமாய் பேசிப் பழக்கமில்லாதவர் தான். “அவர்கள் ஏதாவதொரு இடத்துக்கு போகணும்னு விரும்புறாங்க.. ஆமா.. அவங்க கண்டிப்பா அதைத்தான் விரும்புறாங்க” என்றார். அப்பா திரும்பத் திரும்ப இதைச் சொன்னார். அவருக்கு எவ்வளவு தெரியுமோ, அதைச் சொன்னார். என்னுடைய சொந்தக் கற்பனைகள் மிச்சத்தை நிரப்பிக் கொண்டன.   

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அப்பாவின் இந்தக் கருத்துக்கள், எங்கள் வீட்டிற்குள் அலைந்து திரிந்தன. வீட்டில் நாங்கள் அதிகமாக பேசிக் கொள்வதில்லை.. ஆனால் சோகமான பொழுதுகளை மீறி மகிழ்ச்சி எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்றே எண்ணினோம். அம்மா முடிந்த அளவுக்கு புன்முறுவலோடு சாப்பிட வருபவர்களைக் கவனித்தாள். அவர்கள் என்ன நானும் தான். ஆனால் அவர்களுடைய சம்பிரதாயமான புன்னகையை நான் கண்டு கொள்வேன். அப்பாவுக்குத் தான் வாடிக்கையாளர்களைப் புன்னகையோடு கவர்வதில் ஒருவிதக் கவலையும் நடுக்கமும் இருந்தது. சந்தேகமேயில்லை. அது அவருக்குள் எங்கேயோ ஒளிந்திருக்கிறது. காட்சி வடிவமைப்பவரின் உள்ளில் இருந்து இயக்கும் ஒரு சக்தியைப் போல. இரவில் பணி முடித்துத் திரும்பி வரும் இரயில்வே பணியாளர்களிடம் அவர் தனது திறமையைக் காட்டி தனது ஆற்றலை வீணாக்கவில்லை. ஆனால், அவர் தனது திறமையைக் காண்பிக்க பிட்வெல்’இல் இருந்து வரும் ஓர் இளைஞன் அல்லது இளைஞிக்காக அன்றைய தினம் காத்திருப்பதாகத் தெரிந்தது. உணவகத்தின் கவுண்டர் முகப்பில் முட்டைகள் நிரம்பிய ஒரு வலைப்பின்னல் கூடை எப்போதும் இருக்கும். மூளைக்குள் ஒரு மின்னலாய் பொழுதுப்போக்கு யோசனை ஒன்று தோன்றியவுடன் அது முந்திக்கொண்டு அவரது கண்களில் வெளிப்பட்டுவிடும். முட்டைகள் எவ்வாறு வளர்சிதை மாற்றம் பெற்று குஞ்சுகளாய் மாறுகிற தொடர்ச்சியைப் போல் அவருடைய யோசனைகளும் அவ்வாறே நிசப்தமாய் உருக்கொண்டு விடுகின்றன. ஏதோவொரு சூழலில் முட்டை வீணாகி விடுவதைப் போல் அவருடைய வாழ்வின் மீதான ஈடுபாடும் ஈர்ப்பும் கூட ஒரு கட்டத்தில் அழியவே செய்தது. ஒரு நாள் பின்னிரவில் கோபத்தில் அப்பாவின் தொண்டையிலிருந்து வெளிப்படும் உறுமல் சத்தத்தில் நான் எழுந்து கொண்டேன். நானும் அம்மாவும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டோம். நடுங்கும் கைகளோடு தலைக்குப் பக்கத்தில் இருந்த விளக்கை ஏற்றினாள் அம்மா. கீழே உணவகத்தின் கதவு படாரென்று மூடப்பட்டு அப்பா வேகவேகமாக தடதடவென்று படிக்கட்டுகளை மிதித்துக்கொண்டு படியேறி வருகிறார். அவருடைய கையில் முட்டை ஒன்றை வைத்திருந்தார். ஏதோ குளிர்ச்சியான பொருள் ஒன்றை கையில் தாங்கியிருப்பது போன்று அவரது கை நடுங்கிற்று. பாதி மனம் பிறழ்ந்த ஒளி தெரிந்தது கண்களில். அவர் எங்களை வெறித்துப் பார்ப்பதிலிருந்து, அந்த முட்டையை அம்மாவின் மீதோ அல்லது என் மீதோ எறியப் போகிறார் என்று உறுதியாக நினைத்தேன். பின், மெதுவாக அந்த முட்டையை மேசை மீதிருந்த விளக்குக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு அம்மாவின் படுக்கைக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்தார். உடனே ஒரு சிறுவனைப் போல் கதறி அழத் தொடங்கினார்.. அவருடைய துக்கத்தில் பங்கு கொள்வது போல் நானும் அழுதேன். நாங்கள் இருவரும் மேல் மாடியில் இருந்த அறையை எங்களது கதறலால் நிரப்பினோம். அது ஒரு வேடிக்கையான நிகழ்வே. ஆனால், அதிலிருந்து நான் நினைவில் கொள்வதெல்லாம் அன்று அம்மா அவரின் வழுக்கைத் தலையை தொடர்ந்து ஆதுரத்துடன் தடவிக் கொடுத்ததைத் தான். அம்மா அவரிடம் என்ன சொன்னாள், எதைச் சொல்லி அவரிடமிருந்து கீழே நடந்தவற்றைக் கேட்டறிந்தாள் என்பதெல்லாம் எனக்கு மறந்து விட்டது. அவருடைய விளக்கம் கூட என்னில் இருந்து மறைந்து விட்டது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம், அந்த விளக்கின் வெளிச்சத்தில் படுக்கை அருகே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பாவின் வழுக்கைத் தலைக்கு மேலே ஓடிய பளபளப்பான கோடுகள் தான்.    

கீழே என்ன நடந்ததென்றால், எனக்குத் தெரிந்தும், நானும் அங்கே ஒரு சாட்சியாக இருந்ததுமாக என்னால் விவரிக்க முடியாத சில காரணங்களாக – நான் ஒரு பார்வையாளனாக என் கண் முன்னே அப்பா அவமானப்பட்ட தருணம் அது. காலத்தோடு ஒருவர் விவரிக்க முடியாத சம்பவங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவும் நேர்கிறது. தெற்கிலிருந்து கிளம்பி வரும் பத்து மணி இரயிலில் எதிர்பார்க்கப்பட்ட பிட்வெல் நகரத்து வியாபாரியின் மகனான இளைஞன் ஜோ கேன் அன்று மாலை பிகல்வில்லே’வுக்கு அப்பாவைச் சந்திப்பதற்காக வந்திருந்தான். மூன்று மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு எங்களைச் சந்திக்க எங்கள் இடத்திற்கு வந்த ஜோ தனது நேரத்தை தளர்வாய் செலவிடுவதற்கும் காத்திருப்பதற்கும் அந்தப் பயணம் அமைந்தது. அதற்குள் சரக்கு இரயிலும் வந்து விட்டது.. தொழிலாளர்கள் பயணிகள் என குழுவாக வந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு விட்டது. ஜோ அப்பாவுடன் உணவகத்தில் தனித்து விடப்பட்டான்.  

எங்கள் இடத்துக்கு வந்து சேர்ந்த நேரம் முதலே அப்பாவுடன் இருந்த இளைஞன் ஜோ கேன் அப்பாவின் நடவடிக்கைகளால் நிச்சயம் குழப்பமடைந்திருக்க வேண்டும். அவனுடைய நோட்டங்கள் அவரைச் சுற்றிக் கொண்டேயிருந்ததால் அப்பாவும் கோபமடைந்திருக்க வேண்டும் என்பது அவனது எண்ணம். ஆம், நிச்சயமாய் உணவகத்தின் உரிமையாளர் திடமானதொரு மனக் குழப்பத்தில் இருப்பதை அவன் கண்டுகொண்டான். எனவே வெளியே செல்லத் திட்டமிட்டான். ஆனாலும் பெய்யத் தொடங்கிவிட்ட மழையின் ஊடாக நகரத்தை நோக்கிய ஒரு நீண்ட நடையோடும் பிறகு திரும்பவுதென்பதும் இசைவானதாகவும் இருக்கவில்லை. ஐந்து சென்ட் மதிப்புள்ள ஒரு சிகரெட்டை வாங்கி விட்டு ஒரு காஃபிக்காக ஆர்டர் செய்தான். அவனுடைய பாக்கெட்டில் இருந்த தினசரியை எடுத்து படிக்கத் தொடங்கினான். “சாயங்கால இரயிலுக்காக காத்திருந்தேன். தாமதமாயிடுச்சு,” இறைஞ்சிக்கொள்வது போல் சொன்னான். 

இதற்கு முன் இந்த நபரைப் பார்த்ததே இல்லை என்கிற தோரணையில் நெடுநேரம் ஜோ கேன் பேசுவதை இமை கொட்டாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா. பொதுவெளியில் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒருவனைப் போல் சந்தேகத்திற்கு இடமின்றி அவன் உறைந்து போயிருந்தான். வழக்கம் போல் வாழ்க்கையின் போக்கில் நிகழும் எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்திருந்தாலும் அதற்கெல்லாம் மாறாக தற்போதைய நிகழ்வு ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது அப்பாவுக்கு. 

எந்தத் திட்டமும் இல்லாமல் இருக்கும் கைகளால் அவரால் இப்போது எதுவும் செய்ய முடியாது போலிருந்தது. ஏதோ ஓர் உந்துதலில் கவுண்டரில் கையை விட்டு நடுக்கத்தோடு ஜோ கேன்’க்கு கை கொடுத்தார். ‘எப்டி.. எப்டி இருக்கீங்க,” என்றார். ஜோ கேன் தினசரியை கீழே வைத்துவிட்டு அவரை உற்றுப் பார்த்தான். கவுண்டரில் இருந்த முட்டைக் கூடையை கவனித்துக்கொண்டே அவனுடன் பேசத் தொடங்கினார். “நல்லது..” தயக்கத்தோடே இருந்தது தொடக்கம். “நல்லது.. நீங்க கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்க இல்லையா?” அவன் கோபத்தோடிருந்தது தெரிந்தது. “அந்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஒரு மோசடிப் பேர்வழி” அழுத்திச் சொன்னார். “அவன்தான் ஒரு முட்டை தன்னுடையதான நிலையில் இருப்பதைப் பற்றி சொன்னான்.. ஆம்.. அவன் பேசினான்.. செய்தான்.. ஆம்.. பிறகு அவனேதான் முட்டையின் இறுதிப்பகுதியை உடைக்கவும் செய்தான்.” 

கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் இரட்டை நிலைப்பாடோடு அப்பா தன்னை நாடி வந்த விருந்தாளியின் முன்னால் நிற்பது போல் தோன்றியது. சபிப்பது போல் முணுமுணுத்தார். கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஒரு சிறந்த மனிதன் என்று குழந்தைகளுக்குக் கற்பிப்பது கூட தவறு. ஓர் இக்கட்டான சூழலில் ஓர் ஏமாற்று வேலையையே செய்தார், என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். ஒரு முட்டையை தன்னுடைய நிலைப்பாட்டிலேயே நிறுத்தி வைக்கமுடியும் என்று அவன் தான் பிதற்றினான். அது ஒரு தந்திரம். கொலம்பஸைப் பற்றிய குற்றச்சாட்டுகளுடனேயே கூடையில் இருந்த ஒரு முட்டையை கையில் எடுத்துக்கொண்டு இங்குமங்கும் நடந்தார். உள்ளங்கைகளில் முட்டையை சுழற்றிக் கொண்டேயிருந்தார். இணக்கமாகப் புன்னகைத்தார். மனித உடலில் உருப்பெறும் மின்விளைவானது கையிலிருக்கும் ஒரு முட்டையின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். அவர் ஒன்றை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார் – அதாவது முட்டையின் ஓட்டை உடைக்காமல் அதை இயல்பாய் சுழற்றிக் கொண்டிருக்கும் போதே அது தன்னிலையில் நின்று காட்டும். உடலின் வெப்பநிலையை சுமந்து கொண்டிருக்கும் தனது கையில் மெதுவாய் உருண்டு கொண்டிருக்கும் முட்டையானது ஒரு மைய ஈர்ப்பு விசையை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அவர் விவரித்துக் கொண்டிருந்ததை, ஜோ கேன் மெலிதான ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். “நான் இந்த மாதிரி ஆயிரக்கணக்கான முட்டைகளைக் கையாண்டிருக்கிறேன்” என்றார். “என் அளவுக்கு முட்டைகளைப் பற்றி வேறெவருக்கும் அதிகமாய்த் தெரியாது” 

முட்டையை கவுண்டரில் நிறுத்தி வைக்க முயற்சித்தார். ஆனால் அது ஒரு பக்கமாய் சாய்ந்தது. அந்த தந்திரத்தை மீண்டும் மீண்டும் முயற்சித்தார். ஒவ்வொரு முறையும் உள்ளங்கைகளில் உருளும் அந்த முட்டை உருவாக்கும் மின் விளைவுகளையும் ஈர்ப்பு விதிகளின் மகத்துவங்களையும் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஓர் அரை மணி நேர முயற்சியாக ஒரு முட்டையை நிற்க வைக்க அவர் எடுத்துக்கொண்ட பாடுகளை அவரது வாடிக்கையாளர் ரொம்ப நேரமாக கண்டுகொள்ளவே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டார். தொடர்ந்த தனது முயற்சிகளின் வெற்றியாக நிற்க வைக்கப்பட்ட முட்டையைக் கொண்டு ஜோ கேன்’இன் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கையில் அந்த முட்டை உருண்டு போய் ஒருக்களித்துக் கொண்டது.  

ஒரு வித்தைக்காரனின் பேரார்வத்தோடு இத்தனை நேரம் மேற்கொண்ட கடும் முயற்சியின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விட்டேத்தியாய் இருந்த அப்பா, இப்போது அலமாரி அறைகளில் இருந்த கோரமான இறைச்சி திணிக்கப்பட்ட குடுவைகளை எடுத்து வந்து வந்திருந்த விருந்தினருக்கு காட்டத் தொடங்கினார். தன்னுடைய மதிப்பு மிக்க பொக்கிசங்களை எடுத்துக் காட்டிக் கொண்டே, “எப்படி?!.. நீங்கள், ஏழு கால்கள் இரண்டு தலைகளைக் கொண்ட இவர்களைப் போல ஆக விரும்புகிறீர்களா?”. அவருடைய முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. கவுன்டர் அருகே செல்கையில் – சனிக்கிழமை தோறும் ஓர் இளம் வயது விவசாயியாக பேன் ஹெட் சலூனில் ஏற்கனவே பழக்கப்பட்ட மனிதர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் குதூகலமுமாய் எப்போதும் புழங்கும் மனிதர்களுள் ஒருவராக மிகவும் பழக்கப்பட்ட ஒருவனை அணுகுவது போல ஜோ கேன்’இன் முதுகில் செல்லமாகத் தட்ட முயற்சித்தார். கோரமான நிலையில் சிதைவுற்று குடுவைகளில் அடைக்கப்பெற்று சாராய திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் பறவைகளைக் கண்ட நிலையில் விருந்தினனானவன் மிகுந்த சங்கடத்துடன் எழுந்து கிளம்பத் தயாரானான். கவுண்டரிலிருந்து எழுந்து வந்த அப்பா, அந்த இளைஞனின் தோள்களைப் பற்றி திரும்பவும் அவனை அந்த இருக்கையிலேயே அமர வைத்தார். இளைஞன் சிறிதே கோபமுற்றாலும் வலுக்கட்டாயமாய் அவரைப் பார்த்து புன்னகைத்து வைத்தான். பின் குடுவைகள் அனைத்தையும் அலமாரி அறைகளில் வைத்தார் அப்பா. எந்தவித சிரத்தையுமில்லாமல் அவனை தன்னுடைய செலவில் ஒரு காஃபியையும் சிகரெட்டையும் எடுத்துக்கொள்ள வற்புறுத்தினார். பிறகு, கவுண்டருக்குப் பின்னால் நகர்ந்து தவா ஒன்றை எடுத்து சிறிது வினிகர் ஊற்றி தனக்குள்ளாக ஓர் உறுதி எடுத்துக்கொண்டு புதிதாய் ஒரு அதிசயம் நிகழ்த்தத் தயாரானார். “வினிகர் இருக்கும் இந்த சட்டியில் நான் இப்போது இந்த முட்டையை வேக வைப்பேன். பிறகு அதை இந்த பாட்டிலின் கழுத்து வழியே உள்ளே தள்ளுவேன்.. பாட்டிலின் உள்ளே சென்ற பிறகு அந்த முட்டை பிறகு அதன் முந்தைய தன்மைக்கு வந்துவிடும். முட்டை ஓடும் முன்னிருந்ததைப் போல் உறுதியாகிவிடும். அப்புறம் அந்த முட்டை உள்ள பாட்டிலை நான் உங்களுக்குத் தந்துவிடுவேன். அதை நீங்கள் எங்கே சென்றாலும் கூடவே எடுத்துச் செல்லலாம். பாட்டிலுக்குள் முட்டை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அவங்களுக்கு சொல்லாதீங்க. அதையெல்லாம் அவங்க யூகத்துக்கு விட்டுடுங்க. அதுமாதிரி தான் இந்த விளையாட்டுத்தனமான தந்திரங்களைக் கையாளணும்’.   

அப்பா அவனைப் பார்த்து கண்ணை சிமிட்டிச் சிரித்தார். ஜோ கேன் முடிவு செய்துவிட்டான். தன்னுடன் முரண்பட்ட இந்த மனிதன் கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்டவர் ஆனால் தொந்தரவானவர் இல்லை. ஜோ தனக்குத் தந்த காஃபியை பருகிவிட்டு திரும்பவும் தினசரியை எடுத்து படிக்கத் தொடங்கிவிட்டான். வினிகரில் சூடாக்கப்பட்ட முட்டையை அப்பா ஒரு சிறிய கரண்டியில் எடுத்துக்கொண்டு கவுன்டர் வரை வந்து பிறகு பின்னறைக்குச் சென்று காலி பாட்டிலை எடுத்தார். தேடினார். தான் செய்த தந்திரங்களை தன்னுடைய வாடிக்கையாளர் சரிவரப் பார்க்காததால் அப்பாவுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் மகிழ்ச்சியோடு தன்னுடைய வேலைகளைச் செய்தார். முட்டையை பாட்டிலின் கழுத்து வழியே உள்ளே தள்ளுவதற்கு வெகு நேரம் போராடினார். வினிகர் இருந்த சட்டியில் மீண்டும் முட்டையைப் போட்டு சூடு படுத்தத் தொடங்கி விரல்களை சுட்டுக் கொண்டார். இரண்டாவது முறையாக வினிகர் திரவத்தில் கிடந்த முட்டை கொஞ்சமாக மென்மை அடைந்ததேயொழிய இலக்கு நிறைவடையவில்லை. அவர் திரும்பத் திரும்ப அதற்காக உழைத்தார். ஆனால், தீர்மானிக்க முடியாத அவநம்பிக்கை ஒன்று அவரை ஆட்கொண்டுவிட்டது இப்போது. கடைசியாக தன்னுடைய முயற்சி நிறைவேறப்போகிறது என்று நினைக்கையில் தாமதமாய் வந்து கொண்டிருந்த அந்த இரயில் இப்போது நிலையத்துக்கு வந்துவிட ஜோ தன்னிச்சையாய் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான். அப்பாவும் தன்னுடைய இக்கட்டான இறுதி முயற்சியாக முட்டையோடு போராடி வெற்றி பெற்றுவிட வேண்டும். அதன் மூலம் தன்னுடைய பாரம்பரியமான விருந்தினர்களை மகிழ்விக்கும் கலையில் தான் வல்லவன் என்கிற தன்னுடைய பெயரை நிலைநிறுத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். முட்டையை வலியிறுத்தினார், சங்கடத்தில் ஆழ்த்தினார். அதனாலெல்லாம் அது கசப்பான அனுபவமாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் அதில் உறுதியாய் இருந்தார். அதன் வெளிப்பாடாய் நெற்றி முழுவதும் வியர்வை படர்ந்தது. எதிர்பாராத விதமாய் அவர் கையிலிருந்த முட்டை உடைந்தது. உடைந்த முட்டையிலிருந்த திரவம் சிதறி அவருடைய சட்டை மீது தெரித்தபோது, கதவருகே நின்றிருந்த ஜோ திரும்பிப் பார்த்து சிரித்தான். 

கோபக்கனல் அப்பாவின் தொண்டையிலிருந்து பீறிட்டது. அலைவரிசையற்ற தெளிவற்ற சொற்கள் அவரது வாயில் நடனமாடின. ஆத்திரத்தில் கவுன்டரில் இருந்த கூடையில் இருந்து ஒரு முட்டையை எடுத்து கதவருகில் நின்றிருந்த இளைஞனை நோக்கி எறிய, அவன் தலையில் விழப்போனது தவறி வேறொரு பக்கம் விழுந்தது.  

நானும் அம்மாவும் இருந்த மேல் மாடிக்கு அப்பா கையில் முட்டையோடு வந்தார். அவர் எந்த நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறார் என்பதை நான் அறியேன். மெதுவாக அந்த முட்டையை மேசையின் மீது வைத்துவிட்டு, நான் முன்பே விவரித்தது போல் கட்டிலின் முன்னே வருத்தத்தோடு மண்டியிட்டு அமர்ந்தார். பின் உணவகத்தை மூடிவிட்டு மேலே ஏறி வந்த அப்பா உடனேயே படுக்கச் சென்றார். நீண்ட நேரம் அம்மாவோடு முணுமுணுப்போடு விவரித்துக் கொண்டேயிருந்தார். போதுமான அளவுக்கு உரையாடிய பின்னர் அப்பாவும் அம்மாவும் அப்படியே உறங்கிப் போயினர். நானும் இந்நேரத்துக்கு உறங்கியிருக்க வேண்டும். ஆனால், உறக்கம் கலைந்து போனது. விடியற்காலையில் எழுந்த நான் நீண்ட நேரமாக மேசையின் மீதே இன்னமும் இருந்த அந்த முட்டையைப் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஏன் முட்டை வர வேண்டும் ? ஏன் அந்த முட்டை கோழியிலிருந்து வர வேண்டும்? பிறகு யார் அந்த முட்டையை அந்த கோழிக்குள் வைத்தார்கள்? கேள்விகள் என் இரத்த நாளங்களுக்குள் பாய்ந்து கொண்டிருந்தன. அவை அங்கேயே தங்கிவிட்டன. நான் கற்பனை செய்து பார்த்தேன்.. அதுவொரு சுழற்சியான கற்பனை.. ஏனெனில் அப்படிப்பட்டதொரு தகப்பனின் மகன் நான். எது எப்படியாயினும் பிரச்சினையானது தீர்க்கப்படாததாகவே என் மூளைக்குள் தங்கிவிட்டது. அதன் பின்னர் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஆனால் குறைந்தபட்சம் என்னுடைய குடும்பத்தின் கருத்தோடு நான் ஒத்திசைந்து போனால், பிறிதொரு ஆதாரமாக முற்றும் முழுதுமான அந்த முட்டையின் வெற்றியாகவே இதை நான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஷெர்வுட் ஆண்டர்சன் (1876–1941) : அமேரிக்க நாவல் மற்றும் சிறுகதையாசிரியர். யதார்த்தவாத கதைகளில் தனித்துவமான நடையால் கதைகளில் முத்திரை பதித்தவர்.

***

பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here