தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்
ஒரு ஜதை புதிய காலணிகளை எப்படி அடக்கியாள்வது
(திருமலேஷ்-க்கு)
அவற்றை ஒன்றாக வைக்காதீர்கள்
அவற்றைத் தங்களுக்குள் பேச அனுமதிக்காதீர்கள்
அவை ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கக்கூடும்
சுவர்-கடிகாரம், சட்டப்புத்தகங்கள், நாட்காட்டி, தேசியக்கோடி,
காந்தியின் புகைப்படம் அல்லது செய்தித்தாளுக்கு அருகில்
ஒருபோதும் அவற்றை விட்டுப்போகாதீர்கள்
சுதந்திர தினம், சத்தியாகிரகம், விடுமுறைகள்,
வேலை நேரங்கள், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊழல் குறித்து
அவை தெரிந்து கொள்ளக்கூடும்
உங்களுடைய ஆலயத்துக்கு அவற்றை எடுத்துச் செல்லாதீர்கள்
நீங்கள் மிகவும் பலவீனமானவர் என்பதையும்
உங்கள் கடவுள் போலியானவர் என்பதையும்
உடனடியாக அதைத் தெரிந்துகொண்டு
அவை உங்களை கடிக்கக்கூடும்
உங்களுடைய உணவு-மேசைக்கு அருகில்
ஒருபோதும் அவற்றை எடுத்துச் செல்லாதீர்கள்
அவை உணவளிக்கும்படி கேட்கக்கூடும்
அல்லது உங்களின் செழுமையான இரவுணவின் மீது
அவற்றின் கொள்ளிக்கண்களை வைக்கக்கூடும்
முதலில் அவற்றை சிறிய நடைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்
பிறகு மெல்ல மெல்ல தூரத்தை அதிகரியுங்கள்
தாங்கள் பார்க்கும் வேலையின் அளவு யாதென்பதை
ஒருபோதும் அவை அறிந்துகொள்ளக்கூடாது
அவற்றின் இறுக்கமான வார்களை தளர்த்தி விடுங்கள்
அவற்றை மகிழ்ச்சியாக உணரவிடுங்கள்
அவை பெரிதாக வளர்ந்து வருகின்றன
கரடுமுரடாக இருக்கும் வார்களின்மீது
சிறிதளவு பழைய எண்ணெயை ஊற்றிவிடுங்கள்
தங்களுக்கு அபிஷேகம் நடப்பதாக அவை எண்ணிக் கொள்ளட்டும்
தற்போது அவை
உங்களின் கொழுத்த கால்களுக்காக
கூடுதல் நேரமும் பணிபுரியத் தயாராயிருக்கும்
அற்புதமான அடக்கஒடுக்கமான பணியாளர்கள்
*
ஒரு கோரிக்கை
புத்தர்
கிறிஸ்து
கிருஷ்ணர்
மஹாவீர்
முகம்மது
மோசஸ்
நானக்
ராமர்
ஜராதுஷ்ட்ரர்
நான் உங்களை வணங்குகிறேன்
புதிய காற்றால் நிரம்பிய
பச்சைவண்ண பலூன்களால்
இம்முறை எங்களை ஆசிர்வதியுங்கள்
*
ஆந்தை
ஒரு கண்ணை மட்டுமே திறக்க
நம்மால் ஆகாது
ஆனால் ஒருகண்ணை மட்டும் மூடமுடியும்
அந்த முதிய ஆந்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும் –
ஒரு நீதிக்கதையில் வரும் ஞானி
ஒரு சிறிய பிரச்சனையோடு
ஒரு முயல் அவரிடம் வரும்பொழுது
அவர் ஒற்றைக்கண்ணை
மட்டுமே திறக்கிறார்
ஏனென்றால் அதைப் புரிந்துகொள்ள
இரண்டு கண்கள் தேவையில்லை
ஆந்தை ஓர் எளிய தந்திரத்தை மெல்ல கிசுகிசுக்கிறது
குரூரமும் ஆற்றலும் நிறைந்த சிங்கத்தை
முயல் ஒரு கிணற்றுக்கு அழைத்துச்சென்று
அதற்குள் எட்டிப்பார்த்து குதிக்கச் சொல்கிறது
சிங்கத்துக்கோ படுபயங்கர அச்சம்
அது சொல்கிறது: என்னைக் காட்டிலும்
ஆற்றல்மிகுந்த இன்னொரு மிருகம் உள்ளே இருக்கிறது
அதுவும் என்னைப் பார்த்து கர்ஜிக்கிறது
முயல் சொல்கிறது: முட்டாள்
உன்னுடைய புலன்களை பயன்படுத்து
அந்த மற்றொரு மிருகம் உனது நிழல்தான்
அந்த கர்ஜனையும் கூட உனது குரலின் எதிரொலிதான்
ஆகவே சிங்கம் அதில் சமாதானமாகி
கிணறு பாதுகாப்பான இடம்தான் என்பதை ஏற்றுக்கொண்டு
உள்ளே குதிக்கிறது
நம்மால் வெளிச்சத்தை நோக்கி ஒற்றைக்கண்ணை மட்டும் திறக்கமுடியாது
ஆனால் தகுந்த காரணத்தோடு ஒற்றைக்கண்ணை மூடிக்கொள்ளமுடியும்
அவளுடைய இறந்து-பிறந்த / இன்னும்-பிறக்காத குழந்தைகள்
தனது உணர்வுகளை அவள் எப்போதும் அவனிடம் சொன்னதில்லை
ஒவ்வொரு இரவும் ஒரு மாத்திரையை விழுங்குவாள்
அவர்களிருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
தனது உணர்வுகளை அவனும் கூட எப்போதும் அவளிடம் சொன்னதில்லை
ஒவ்வொரு இரவும் ஒரு கேப்சூலை விழுங்குவான்
அவர்களிருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
ஒருமுறை
ஒரு மனநல ஆலோசகரை பார்ப்பதற்காக
அவன் வெளியூர் சென்றிருந்தபோது
அவள் மிகவும் தனிமையாகவும் நம்பிக்கையிழந்தவளாகவும் உணர்ந்தாள்
அவனுடைய போத்தலில் இருந்த அத்தனை கேப்சூல்களையும் எடுத்து
அவற்றின் உள்ளிருந்த மருந்துகளை வெளியே வீசியெறிந்தாள்
அவள் பேசி விரும்பிய அனைத்தையும் பேசிவிட்டு
கேப்சூல்களை அவை முன்பிருந்ததுபோலவே மூடி
மீண்டும் போத்தலுக்குள் வைத்துவிட்டாள்
ஒரு மருந்துபோத்தலைப் போலவே
அந்த போத்தல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தது
ஒரு பச்சநிற அடையாளச்சீட்டுடன்
“ரீனோ-13 ஆண்மைக்கான மருந்து”
ஆனால் உண்மையான மருந்தென்பது
அந்த காலி கேப்சூல்கள்தான்
மௌனத்தால் நிரப்பப்பட்ட கேப்சூல்கள்
அவள் பேசிய வார்த்தைகளால் ஆன மௌனத்தால்.
*
எறும்பு
நீங்கள் முற்றிலும் அகந்தை பீடித்த ஒரு தலைமுறை
உங்களுடைய எறும்பு-தின்னி நாவின் மூலம்
பேசிக்கொண்டே போகிறீர்கள்.
கவனியுங்கள்:
என்னுடைய வெண்ணை-கத்தியின்
வெண்ணைக்குள்
ஓர் எறும்பு சிக்கிக்கொண்டது,
ஒரு தீக்குச்சியின் உதவியோடு
அதை நான் மேலே தூக்கினேன்.
ஒரு சின்னஞ்சிறிய உயிருக்கு
அதன் சின்னஞ்சிறிய வாழ்வை வாழ
நான் ஒரு சின்னஞ்சிறிய உதவி செய்திருக்கிறேன்.
உங்களைக் காட்டிலும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
என்னைக் காட்டிலும் அந்த எறும்பு மகிழ்ச்சியாயிருக்கிறது.
தன்னுடைய வாயில்
ஒரு சிறிய சர்க்கரைத்துளியை தூக்கிக்கொண்டு
அந்த எறும்பு
தனது எறும்புப்புற்றுக்குச் செல்கிறது.
எறும்புகள் தங்களால் இயன்றளவுக்கு வேலைகளைச் செய்கின்றன.
தங்களுக்குத் தேவையானதைப் பெறுகின்றன.
ஆனால் மார்க்ஸ் யார் என்றோ
அல்லது மாவோ யார் என்றோ
அவற்றுக்குத் தெரியாது.
***
கோபால் ஹொன்னால்கெரே (1942-2003) கர்நாடகத்தைச் சேர்ந்த கவிஞர். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியவர். மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனில் நுண்கலைகள் பயின்றிருக்கிறார். இலக்கியத்தை உண்மையாக நம்பும் எல்லாக் கலைஞர்களையும் போலவே யதார்த்த வாழ்வின் சுழல்களில் சிக்கிச் சீரழிந்தவர். மொத்தம் ஆறு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடைய வாழ்நாளில் அவை பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஹொன்னால்கெரே இறந்தபிறகு அவருடைய மொத்தக் கவிதைகளையும் அவரின் நண்பர் ஜெயசீலன் தொகுத்து பொயட்ரிவாலா மூலம் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். சிறுபிள்ளை விளையாட்டு என்று கருதப்பட்ட முதல் தொகுப்பு மட்டும் முழுக்கவே இந்தத் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஹொன்னால்கெரே பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் – அற்புதம்.
கார்த்திகைப் பாண்டியன் – 1981 ஆம் வருடம் மதுரையில் பிறந்த கார்த்திகைப் பாண்டியன் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். எஸ்.ராமகிருஷ்ணனை தனது ஆதர்சமாகக் கொண்டவர். 2011 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். அத்துடன் மொழிபெயர்ப்பிலும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், பத்து மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. – மின்னஞ்சல்: karthickpandian@gmail.com
