Homeஇதழ்கள்2026 இதழ்கள்கார்த்திகா முகுந்த் கவிதைகள்

கார்த்திகா முகுந்த் கவிதைகள்


கார்த்திகா முகுந்த்

னங்களை ஒழித்துப் போடுவதுபோல்
மனசில் அடிபிடித்த ஞாபகங்களைத்
தோண்டித் தோண்டி
ஒரு அட்டைப் பெட்டியில் போடத் தொடங்கினேன்

மலையாகக் கனக்கும் ஞாபகங்கள்
மஸ்லின் துணியாக மடித்து மடித்துப் போட
பெட்டி நிரம்புகிறது

எனக்கான ஒரு இணையற்ற பரிசு
வழுக்கும் காகிதங்களைக் கொண்டு
அழகாகப் பொதிகிறேன்
பிரியம் மீதூறுகிறது

கைக்குழந்தையைச் சிங்காரிப்பது போல்
மென்னிறப் பட்டு ரிப்பனைக் கொண்டு கட்டுகிறேன்

பெட்டிக்குள்ளே என்னவொரு கலகலப்பு
ஏதோ ஆனந்தக் குதூகலம்
சிறு ஸாட்டின் துண்டைப் பூவாக நெய்து
உச்சியில் நிறுத்தி முத்தமிடுகிறேன்

தள்ளி நின்று பார்க்கிறேன் பெட்டியை
ஈற்றைக் காணும் பசுவின் சிலிர்ப்பு

ஜீனியைப் பெட்டியில் அடைத்த அக்கணத்தைச் சுழற்றி
சுண்டு விரலில் மோதிரமாக அணிகிறேன்.
துக்கங்களின் என்னவொரு எழில்!


ஓட்டை விழுந்த படகில்
என்னைக் கட்டிப் போட்டிருக்கிறது
திசைகளற்ற கடல்
மிதந்துகொண்டே போகிறேன்
விழித்துக் கொண்ட அறிவு
வெறும் நங்கூரமாகக் கனக்கிறது

என்னைப் படகோடு கட்டியிருப்பது எது?

சில சமயம் நான்
வெயிலைத் தின்னும் தாவரம்
அப்போது உலகம் மிக எளிமையானது

அலையோசை என்னை விழுங்கப் பார்க்கிறது
அறிவைக் கைவிடுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு
தாவரமாக என்னைக் கனவு காண்கிறேன்

எல்லாப் புதிர்களின் விடைகளையும் தன்னுள் வைத்துள்ளது
கனவின் மென்குளிர் காற்றில் அசையும்
அச்சிறு செடி.

படகு போய்க்கொண்டிருக்கிறது
என்னைக் கட்டிப் போட்டிருக்கிறது.

கனவின் மென்குளிர் காற்று
கனவின் மென்குளிர்
கனவின் கனவு
கனவு.


கங்குப் பொறிகள் காற்றில்
அங்குமிங்கும் எதையோ தேடி
அலைந்து திரியும் ஓரிரு கணங்கள்
நாம் கூடுதலாகச் சொற்ப நேரம்

யுகாந்திரங்கள் தீராமல் நின்றெரியும்
மாயநெருப்பின் பெருநடனம்
தலைமுறைக் கண்ணிகள் கிணுகிணுங்க
அதன் அடவுகளின் ஓரிரு தெறிப்புகள்

என்னமாய் ஒளி சிந்தி
மினுங்கித் தீர்ந்துபோக வேண்டும் நாம்!


பத்ரதீபத்தைக் கையிலேந்தி
எளிதாகச் சுழற்றுகின்றனர் சிலர்

எண்ணெய் தளும்பும் சிற்றகலைக்
காற்றுக்கு மறைக்கத் திண்டாடுகிறேன் நான்

வல்லாட்டு போல் வாழ்வைச் சுருட்டி
உருமாலை கட்டிக்கொள்கிறார்கள் சிலர்

ஆற்றங்கரையிலிருந்து வீடு திரும்பும் சிறுமி நான்
காற்று படபடத்தும் ஈரத்துண்டாக
தலைக்கு மேல் விரிக்கிறேன் என் வாழ்வை

கப்பலும் சிப்பியும்
சொல்லப்போனால் ஒன்றா வேறா…
ஆனால்
நான் லேசாகக் கடலை ருசித்துப் பார்க்கிறேன்.

***

கார்த்திகா முகுந்த்: பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தும் பணியில் உள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர். கம்பளி ஆடை வடிவமைப்பு (Knitting), பூப்பின்னல் (Crotchet), புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள். வெளியாகியுள்ள படைப்புகள்: ஆறு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: karthika.mukil@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here