சிவகுரு நடராஜன்
ஒரு வாழும் வரலாற்று ஆளுமையின் மகத்தான சாதனைகளை, மக்கள் பணிகளை, காந்திஜி, வினோபாவின் கனவுகளை சாத்தியமாக்கிய ஒருவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை எழுத்துக்களால் விவரிக்க இயலாது.
இப்படியும் ஒரு சாதனையாளர் நம் காலத்தில் எந்த விளம்பரமும் இல்லாமல், இன்றும் தன்னால் ஆன மக்கள் பணிகளை எளிமையாக தன் ஆசான் வழிகாட்டி உருவாக்கிய பல்கலைகழகத்திலேயே தங்கி செய்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒரு மலைப்பான விசயமே. அந்த சாதனையாளர் மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
அவரைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணமே சுதந்திரத்தின் நிறம் எனும் அற்புத படைப்பு. எப்படி காந்தி ரிச்சர்ட் அட்டென்பரோ எனும் இயக்குனரால் இந்திய வெள்ளி திரைக்கு வந்தாரோ அது போல கிருஷ்ணம்மாளும் லாரா கோப்பா எனும் இத்தாலியர் மூலமாகவே ஆவணம் ஆக்கப்பட்டார்.
283 பக்கங்கள் கொண்ட ஒரு அற்புதமான, அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். அவசியம் நம் இல்லத்து வளரும் தலைமுறைக்கு படிக்க வேண்டும் எனும் எண்ணத்தை உருவாக்க வேண்டிய நூல் .
தடைகளைத் தகர்த்து…..
கிருஷ்ணம்மாள் 1926 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் பிறந்தவர். மிக ஏழ்மையான ஒரு கூலி தொழிலாளியின் மகளாக பிறந்தவளுக்கு தன் தாயிடமிருந்தே பெண்கள் நலன் , அவர்களின் மேன்மைக்காக உழைக்க வேண்டும் எனும் எண்ணம் உருவாகியுள்ளது என பதிவு செய்கிறார் நூலாசிரியர். இந்த புத்தகம் கிருஷ்ணம்மாள் பற்றிய நூல் மட்டுமல்ல. அவரின் வழிகாட்டி, இணையர், தன்னலமற்ற களப்போராளி, மக்கள் தொண்டர், இந்தியாவின் வரைபடத்தின் பாதியை நடந்தே சென்றவர். விளம்பர வெளிச்சம் தன் மீது படாமல் பார்த்துக் கொண்டவர்.
காந்திஜியின் முக்கிய சீடரான வினோபாவின் வாழ்வியல் நெறிகளை ஏற்றுக்கொண்டு அதில் சிறிதும் பிசகாமல், தன் முழு வாழ்வையும் மக்களை ஒற்றுமைபடுத்துவதிலும், பூதான இயக்கத்தின் கொள்கைகளைப் பிரபலப்படுத்தியவர்.
சிறு வயதிலேயே காந்தியத்தின் மீது பற்றும், அளவிலா காதலும் கொள்கிறார். அதனடிப்படையில் தன் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும் எனும் கொள்கைப் பிடிப்போடு இயங்குகிறார். தமிழ்நாட்டிலிருந்து காந்தியைக் காண வேண்டும் எனும் எண்ணத்தோடு செல்கிறார். அங்கு காந்தியை சந்தித்த தருணத்திலிருந்து தான் எப்படி மாறினேன் என்பதை மிக எதார்த்தமாக அவரின் பேட்டியின் மூலமாக பதிவிடுகிறார்க. ஒரு பெரும் அனுபவத்தை நமக்கும் கற்றுத் தரும் பகுதி அந்த நீண்ட பதில்
படித்து பாருங்கள். ஒரே ஒரு உதாரணம். வடமாநிலங்களில் காந்திஜி பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டவர். அப்படி அவர் பயணித்த போது அவரோடு இணைந்து நடந்தே சென்று பாபுவின் உறுதியான தொண்டராக மாறுகிறார். ஒரு கட்டத்தில் இமய மலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் சிகரத்துக்கு நடந்தே செல்கிறார். என்னே ஒரு மனத்திடம். அந்த நீண்ட பதிலில் அவரின் சுவையான அனுபவங்களையும் சேர்த்தே சொல்கிறார். பயணமாக செல்லும் இடங்களில் எப்படி உணவை தேடிக் கொண்டார்கள், வெவ்வேறு மனிதர்களோடு உரையாடி காந்தியக் கொள்கைகளை எப்படி உள்வாங்கினார், பின்பற்றினார். போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்ற போது பட்ட துயரங்கள், எதிர் கொண்ட சவால்கள் என எல்லாமே நெகிழ்ச்சி தரும் பதிவுகள். இந்த பக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு ஜீவனுள்ள உரையாடலை நம்மால் உணர முடியும்.
இப்படி மக்கள் பணிகள் செய்து கொண்டிருந்த ஜெகந்நாதனை தமிழ்நாட்டுக்கு போ, அங்கே போய் பட்டியலின மக்களுக்கான சேவைகளைத் தொடங்கு, ஒரு பள்ளி உருவாக்கு, அந்த மக்களைக் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்று எனும் அன்புக் கட்டளை விதித்தார் காந்திஜி. இட்ட பணி செய்வேன், மகாத்மா சொன்னதை செய்வேன் எனத் தமிழகம் திரும்புகிறார். இங்கே வந்து காந்திய நெறிகளை கற்று தரும் ஒரு ஆசிரமத்தை உருவாக்குகிறார்.
அன்னையின் போராட்ட வாழ்வின் பாதைகள்:
கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து அதையே தனக்கு சாதகமாக்கிய வரலாறு அன்னைக்கு உண்டு. இரவு முழுதும் படிக்க, பள்ளியிலிருந்து திரும்பிய பின் அம்மாவுக்கு உதவி., மீண்டும் படிப்பு எனத் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து உருவான ஒரு பட்டதாரி.( இப்போதும் கூட அடக்குமுறைகள் அம்மக்கள் மீது தொடருகிறது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என சிந்தித்து பாருங்கள்.)
இளம் வயதிலிருந்தே வடலூர் இராமலிங்க அடிகளாரின் அறம் சார் கொள்கைகளின் மீது ஈர்ப்பும், பற்றும் ஏற்படுகிறது. அதனின் தொடர்ச்சியாக காந்தியடிகளின் அகிம்சை வழி சுதந்திர போராட்டங்கள் அவரைக் கவர்கிறது. கல்லூரி முடித்து பெண் விடுதலை, மேம்பாடு, குறித்த ஒரு புரிதல் இருந்ததால் அவர் இந்த பணிகளுக்காக தன்னை அர்பணித்து கொண்ட மரு. சவுந்தரம் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது. அதுவே அன்னையின் வாழ்வின் ஒரு மிக முக்கியத் திருப்புமுனை.
அன்றைய சூழலில் சவுந்தரம் அம்மாவோடு இணைந்து மிக முக்கியமானப் பணிகளை செய்கிறார். உதாரணமாக, பொருளாதார மற்றும் குடும்ப நெருக்கடிகளால் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட பெண்களை இரவு நேரத்தில் சந்தித்து, முறையான மாற்று ஆலோசனைகளையும் வழங்கி அவர்களிடம் நம்பிக்கையை உருவாக்கி அந்த இழி தொழிலிருந்து பலரை மீட்டு எடுத்துள்ளார்.
தன் ஆதர்ச நாயகன் காந்தியைப் பார்க்க வேண்டும் எனும் தீரா ஆசை கொண்டிருந்தார். பெருவாய்ப்பாக அந்த மாமனிதரோடு ஒரு வாரம் பயணிக்க முடிந்தது என் வாழ்வின் முக்கிய தருணங்கள் என்கிறார் அன்னை. அது மட்டுமா? அவரின் தென் மாவட்ட சுற்று பயணத்தில் அவருக்கு அன்றாட உதவிகள் செய்ய வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாக பழனி முருகன் கோவிலில் காந்திக்கு முன்னால் பாட்டு பாட வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க லட்சிய தம்பதிகளாக இருந்த இவர்கள் எப்படி வாழ்விணையர்களாக மாறினார்கள் என்பதை மிக அழகுற பதிவு செய்துள்ளார்கள்.
இந்த புத்தகம் வெறும் இருவரின் வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல. வாசகனுக்கு இந்தியாவில் எப்படியான ஆளுமைகள் இருந்துள்ளனர் என்பதை நமக்கு சொல்லும் படைப்பு.
ஜே.சி. குமரப்பா எனும் அபூர்வ மனிதரை பற்றி நாம் அறிந்திருப்போம்..ஆனால் அவரின் அறிவுத்திறன்த, விவசாயம் பற்றிய அவரின் புரிதல், அணுகுமுறை, கிராமப்புற மேம்பாடு காந்திய வழியில் எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்த ஒரு ஆளுமை பற்றிய தகவல்கள்.
அந்த மகத்தான மனிதரின் கிராமப்புற வளர்ச்சி கண்ணோட்டங்கள் அன்னையை வெகுவாகக் கவர்ந்தது. அதோடு மட்டுமல்லாமல் அதை அந்த எளிய மக்களுக்கு கடத்துவது என்பதை புரிந்து கொண்டு அதற்கான செயல் வடிவத்தை உருவாக்கியவர் அன்னை. அது குறித்த தெளிவான பார்வையும் அவர் கொண்டிருந்தார்.
இரு பெரும் மக்கள் சேவகர்கள்:
விளம்பர வெளிச்சம் படாத அன்னையும் ஜெகன்நாதனும் எப்படி வாழ்க்கையில் இணைந்தார்கள் என்பதே ஒரு சுவையான விசயம். அதை அவர்கள் இந்தப் பேட்டியின் மூலமாக பகிர்ந்து கொள்வது மிக அலாதியானது. போராட்டமும், மக்கள் பணியுமே முன்னுரிமையாகக் கொண்டு பயணிக்கும் இவர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள், எப்படி ஒரு மகத்துவம் மிக்க வாழ்வை உருவாக்கி கொண்டார்கள் என்பதை மிக நேர்த்தியாக , பதிவு செய்துள்ளார் லாரா கோப்பா.
ஒரு லட்சிய தம்பதிகளின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமான வாழ்வியல் முறை. ஜெகந்நாதன் ஐயா வினோபாவின் பூதான இயக்கத்தின் முன்னணி படை வீரர். அந்த இயக்கத்தில் அன்னையும் இணைகிறார். இயல்பாகவே இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்ததால் இணையர்களாக மாறும் தருணங்கள், எளிய திருமணம், திருமணம் முடிந்த கையோடு இயக்கத்தில் பங்கேற்க செல்லும் இணையர், அதற்கு பிறகு சரியாக ஒராண்டுக்கு பிறகே சந்திப்பு. சம காலத்தில் கிருஷ்ணம்மாள் ஆசிரியர் பயிற்சிக்கு படித்து முடிக்கிறார். முடித்த கையோடு பூதான இயக்கத்தில் பங்கேற்க இணையர் காசிக்கு அழைக்கிறார். இதெல்லாம் படித்த போது மெய் சிலிர்த்தது.
தமிழ்நாட்டில் பூதான இயக்கம்:
வினோபா துவக்கிய பூதான இயக்கம் வட மாநிலங்களில் நிலவுடைமையாளர்களோடு ஒரு பெரும் உரையாடலை உருவாக்கியது. அவர்களின் மனமாற்றத்தை உடனடியாகக் காண முடிந்தது. தாமாகவே முன்வந்து நிலங்களைக் கொடுத்து அது ஏழை விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. (இதில் சாதுரியமாக சிலர் தரிசு நிலங்களாக இருந்தவற்றை கூடத் தானம் எனும் பெயரால் கொடுத்தார்கள்.) இந்த பூதான இயக்கத்தைத் தமிழ்நாட்டில் துவக்கிட, ஒழுங்கமைத்திட முன்னணியில் நின்று பணியாற்றிவர் ஐயா ஜெகன்நாதன் அவர்கள்.
நல்ல நேர்த்தியான தயாரிப்பு, திட்டமிடல், பங்கேற்போரின் பட்டியல், பயண நிகழ்ச்சி என எல்லாமே ஐயாவின் ஏற்பாடுகள் தான். 1952 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பூதான இயக்கம் துவங்கியது. முதலாவதாக ராமநாதபுரம் இராஜாவை சந்தித்தனர். நீண்ட உரையாடலுக்குப்பின் தன் கட்டுப்பாட்டிற்குள் இருந்த 1000 ஏக்கரைத் தருகிறார். ஒரு மாத பயணத்தின் முடிவில் 3500 ஏக்கர் நிலம் கிடைக்கிறது.
இவர் (ஐயா ஜெகந்நாதன் ) ஒரு பக்கம் மற்றொரு பக்கம் இணையர் கிருஷ்ணம்மாள் விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு சரியான நேரத்தில் சரியான கூலித் தொகையைக் கொடுக்காமல் இருக்கும் பண்ணையார்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது, அகிம்சை வழியில் இயக்கம் நடத்துவது, எனப் பல வடிவங்களில் மக்களைத் திரட்டுவது ஒரு புறம், மற்றைய நேரங்களில் அதே பண்ணையார்களோடு பூதான இயக்கத்தைப் பற்றி பேசுவது என இரண்டு பணிகளையும் ஒருங்கே செய்தார்.
நூலாசிரியர் லாரா இப்படி குறிப்பிடுகிறார்: கிருஷ்ணம்மாள் ஒரு அருவி போல, அது பின்னர் சிற்றருவிகளாக, ஓடைகளாக, வெவ்வேறு வடிவங்களில் பாய்ந்து போகிறதோ அதைப்போல அக்காலத்தின் நினைவுகள், கடந்து வந்த மனிதர்கள் என எதையும் விடுபடாமல் தெளிவாக இணைத்து சொல்லுவார்.
கிருஷ்ணம்மாள் எனும் சமரசமில்லா போராளி:
ஐயா ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கம் வினோபாவின் எண்ணப்படி நடக்கவில்லை. மாறாக, மக்களின் போராட்ட இயக்கமாகவே மாறியது. போராளி கிருஷ்ணம்மாளின் முக்கிய போராட்டம் நிலத்துக்கான உரிமை கோரும் போராட்டங்களே. அதில் வத்தலக்குண்டு போரட்டமும், இராமநாதபுரம் பிரச்சனையும் மிக முக்கியமானவை. அவை இரண்டும் மிக விரிவாகப் பதிவாகியுள்ளது.
அதே போல விளை நிலத்தை , நிலத்தடி நீர் ஆதாரத்தை பாழாக்கும் இறால் பண்ணை அகற்றும் போராட்டங்கள் அனைத்துமே பெரும்பான்மை பெண்கள் பங்கேற்கும் போரட்டங்களாக மாற்றினார். கிழக்கு கடற்கரையோர அனைத்து கிராமங்களிலும் இதற்கெனப் பிரச்சாரம் செய்தார். நீதிமன்ற வழக்கு, அரசுகளிடம் முறையீடு, அரசின் கொள்கை முடிவு தெரிய வேண்டுமென அறவழி இயக்கங்கள் என முன்னின்று போராடினார். ஐயா ஜெகந்நாதன் அத்துணை இயக்கங்களுக்கும் வழிகாட்டினார்.
அன்னை தனக்குப் பிடித்தமான பணியாகக் கருதியது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுதல், அவர்களுக்கு சுற்று சூழலை எப்படி சுகாதாரமாக வைத்து கொள்வது, துணிகளை துவைப்பது, எப்படி சமைப்பது போன்றவைகளைக் கற்று கொடுப்பது தான் என நூலாசிரியர் சொல்கிறார்.
அவரின் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது நாகை மாவட்டம் வலிவலத்தில் நடந்த நில மீட்பு போராட்டம் தான். அந்த ஊரில் இருந்த உயர்சாதி பண்ணையார் தன் கிராம எல்லைக்குள்ளும், அங்கு உள்ள கோவிலிலும் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டார். கூலி உயர்வு, ஆலய நுழைவு, ஊருக்குள் நுழைவது என அம்மா நடத்திய அறவழி போராட்டம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பின்னர் லாப்டி (உழுபவனுக்கே நிலம் சொந்தம்..LAND FOR THE TILLERS LAFTI) எனும் அமைப்பை உருவாக்கினார். அந்த இயக்கம் மூலம் 10000 பேருக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
1968 கீழ்வெண்மணியில் நடைபெற்ற கொடூரம். இராமையாவின் குடிசையில் இருந்த 44 கூலித் தொழிலாளர்களை உயிரோடு பண்ணையார்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். அந்த மிருகத்தனமான செயல் நடந்த அடுத்த நாள் விடியற்காலை அம்மாவும் குன்றக்குடி அடிகளாரும் நேரடியாக களத்தில் நின்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.
தேவனாம்பட்டினத்தில் இறால் பண்ணை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் குடிசைகளை அந்தப் பண்ணை முதலாளிகள் கொளுத்தினார்கள். அதற்கு எதிராக அறவழியில் போராடி உரிமைகளை மீட்டு எடுத்தார். காலனியாதிக்கம் செய்த கொடுமைகளை விட உலகமயமாக்கல் பன்மடங்கு அதிகமான தாக்குதலை நடத்தியுள்ளது.
சத்யா—பூமிகுமார்:
அன்னையின் வாரிசுகள் சத்யாவும், மகன் பூமிகுமாரும் இந்த புத்தகத்தில் தங்கள் தாய் தந்தையரைப் பற்றி நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ள கடைசி கட்டுரைகள் வாசிப்பவர்கள் அத்தனை பேரையும் உலுக்கிவிடும். அதுவும் அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை வாசித்த போது பக்கங்களைத் திருப்ப முடியாமல் கண்களில் பீறிட்டு கண்ணீர் கொட்டியது.
திரு பூமிகுமாரின் அனுபவங்களும் அப்படியே. பள்ளியில் அவரை நோக்கி ஒருவர் நீ என்ன சாதி என வினவுகிறார். அதற்கு அவர் சிறிதும் கோபபப்டாமல் நான் பூதான சாதி என பதிலளிக்கிறார். இப்படிச் சொல்ல, சிலாகிக்க ஏராளமான விசயங்கள் அடங்கிய வரலாற்று பெட்டகம் தான் இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தின் இன்னொரு மிக முக்கியமான பகுதி நூலாசிரியர் ஐயா ஜெகந்நாதனிடம் பாகிஸ்தான் பிரிவினை, இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி கேட்டக் கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும். காந்திய வழியில் நின்று பிரச்சனைகளை அணுகும் அவரின் அனுபவமும், தொலைநோக்கு சிந்தனையும் அதில் வெளிப்பட்டது. அதே போல சாதிகள் பற்றிய அவரின் புரிதல், கிராம சுயராஜ்ஜியம் எப்படி சாத்தியமாகும் என்பதற்காக அவர் சொல்லும் வழிமுறைகளும்..
இப்படிப்பட்ட ஆங்கில மூல நூலை மிக எளிய மக்கள் மொழியில் மொழிபெயர்த்த திரு பி.ஆர். மகாதேவனுக்கு நன்றிகள். நூலை வெளியிட்ட குக்கூ ஐயா சிவராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
சுதந்திரத்தின் நிறம்
லாரா கோப்பா..
தமிழில் பி.ஆர். மகாதேவன்
தன்னறம் நூல்வெளி..
ரூ500/
***
சிவகுரு நடராஜன் – தஞ்சாவூரில் வசிக்கிறார். 30 ஆண்டுகளாக வாழ்வனுபவங்களையும், நூல் மதிப்புரைகளையும் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: sivaguru_1970@yahoo.com


