Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்அறிவைக் கையளித்தலும் - அதிகாரத்தை நிலைநிறுத்துவதும்

அறிவைக் கையளித்தலும் – அதிகாரத்தை நிலைநிறுத்துவதும்

நிஜந்தன்

நாவலில் எமிலிக்கும், அவந்திகைக்கும் இடையேயான உரையாடலிலிருந்தே தொடங்குகிறேன். எமிலி அவந்திகையிடம் சொல்கிறாள். 

“ஏன் நாம் கடவுளாக அவற்றுக்கு (விலங்குகளுக்கு) தோன்றுவதில்லை? அதாவது எந்த உயிரியாவது நம்மைக் கடவுளாக நினைப்பதுண்டா? எனக்கு அந்த சந்தேகம் எப்போதும் உண்டு.”

“நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை எமிலி. நாம் எதற்கு மிருகங்களுக்குக் கடவுளாகத் தோன்றவேண்டும். அவற்றுக்கு அப்படிச் சிந்திக்கத் தெரியாதே?”

எமிலி அவள் முடிப்பதற்குள் குறிக்கிட்டு, “ஆமாம் அந்தச் சிந்தனைதான் மிருகத்தையும் மனிதத்தையும் பிரிக்கிறது.”

அந்த அறிவு மிருகங்களுக்கிடையே மட்டுமல்லாமல் மனிதர்களுக்குள்ளாவும் அதிகாரம் கொண்டவர்கள், அவர்களுக்கு கீழ்படிந்தவர்காளாகவும் பிரிக்கிறது. அதிகாரம் படைத்தவர்கள், தங்களை மேல் நிலையில் வைத்திருக்க அறிவைத் தங்களுக்குள்ளாகவே தொகுத்து தங்களது குறிப்பிட்ட இன, மொழி, மதம் மற்றும் சாதிக்குள்ளாக பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்களை அதிகாரம் பொருந்தியவர்களாகவே நிலை நிறுத்திக்கொள்கிறார்ர்கள்.

இது ஆதியிலிருந்தே தொடர்ந்து வரும் போக்கு. பொதுமை படுத்திக்கொள்ள அதிகாரம் பொறுந்தியவர்கள் விரும்புவதேயில்லை. இதை எளிதாக புரிந்துகொள்ள முடியும், மேலதிகமாக விவரங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

மேற்கூறியவை சம்மந்தமான ஆய்வு ஒன்று மலை உச்சியில் இருக்கும் கதீட்ரல் ஒன்றில் (கிறுத்தவர்களின் தலைமை சபை) நிகழ்வதாக தூயன் எழுதிய கதீட்ரல் நாவல் விரிகிறது. 

ஒரு துப்பறியும் நாவலுக்கான வேகம் கதீட்ரலில் இருந்தாலும், நாம் ஆழ்ந்து வாசிக்கும்போது நாவல் அதிகமான களங்களை விவாதத்துக்கு எடுத்து கொண்டிருக்கிறது, அதை நேரடியாக விவரிக்காமல் நம்மிடையே வாசிக்கும் பொருட்டு உருவாகும் சிந்தனையின் போக்கில் விட்டுவிடுவதை நாவலின் சிறப்பான அம்சமாகத்தான் பார்க்க வேண்டும், விடுபடல்களாக எடுத்துக்கொள்ளமுடியாது.

யாவரும் இணைய இதழில் ‘தாண்டவராயன் கதை’ குறித்த விமர்சனத்தில் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 

“‘தாண்டவராயனின் கதை’ இனி எழுதப் புகுபவர்களுக்கும், பா.வெங்கடேசனுக்குமே அளித்திருக்கும் சவால் என்னவென்றால், இந்த வடிவத்தை மறுமுறை பயன்படுத்தினால் அது போலச் செய்தலாக தோற்றம் பெறும்.”

இந்த சவால் தூயனுக்கு அதிகம் இருந்திருக்க வேண்டும், சில இடங்களில் ‘தாண்டவராயன் கதை’யின் பாதிப்பும் அதே போன்ற பாணியும் சில இடங்களில் வெளிப்படுகிறது, ஆனால் துருத்திக்கொண்டு தனியாகத் தெரியவில்லை. 

கதீட்ரல் நேர்கோட்டில் இல்லாமல் பயணிக்கும் நாவல், கதாப்பாத்திரங்களை மட்டுமல்லாமல், மேலிருந்து பார்க்கையில் குதிரையின் லாடம் போன்ற அமைப்பில் இருக்கும் கதீட்ரலின் கட்டிட அமைப்பையும் புரிந்துகொள்ள தேவையும் இருக்கிறது.

யாளிகளின் வருகை என மாய யதார்த்ததில் இறுதி அத்தியாயத்தோடு நாவல் தொடங்குகிறது. 

கதீட்ரலில் ரகசியமாக மருத்துவ உளப்பகுப்பாய்வை செய்துவரும் நீட்ஷன், அவரது நண்பரில் ஒருவர் பிரிட்டிஷ் துரையிடம், பங்காவாலாக (விசிறி போன்று காற்றிற்காக உத்திரத்தில் திரை போன்ற பெரிய துணியை முன்னு பின்னுமாக இழுப்பவர்களின் பெயர்) வரும் ஆப்ராஹம், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஓவியங்களை பிரதியெடுக்க வரும் அவந்திகை, மற்றும் எமிலி என்ற கன்னியாஸ்திரி. இந்த நால்வர்களை மையமாக கொண்டு அவர்களின் கதையையும் முன்னும் பின்னுமாக கொண்டும் அதன்வழியே கதீட்ரலில் இருக்கும் ரகசிய ஆய்வையும் ஒரு புதிரான கட்டிடத்துக்குள் சிக்கவைக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ஒரு கண்ணோட்டமும், அதற்கு காரணமான வரலாற்று பின்னணியும் உள்ளது. மேலும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு அறிவு தொகுப்புமுள்ளது, அனைத்தும் ஓரிடத்தை நோக்கி இணைகிறது.

நீட்ஷனுக்கு நோய்மை குறித்த பார்வை ஃப்ரூக் உரையாடலில் அளிக்கிறது, நோயைக் குறித்த நினைவு அளிப்பது என அவந்திகையோடு பகிர்ந்துகொள்கிறார். நீட்ஷனின் பார்வையில் காலகட்டம் நீர்த்துப்போனாலும் தனி மனித சுயத்தை ஒருவன் தன்பால் ஈர்ப்பது அறிவுத் தொகுப்பே, அதன் மூலமே நிலத்தைத் தொடர்ந்து கையில் வைத்திருக்க முடியும் என்ற பார்வையுள்ளது. அதற்கான உளப்பகுப்பாய்வைதான் ரகசியமாக செய்து வருகிறார். அதற்கான ஓவியத்தை பிரதியெடுக்கவே அவந்திகை வருகிறாள்.

அவந்திகையிடம் எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கும் ஒரு அறிவு செயல்பாடு உள்ளது. மாதவிடாயை கணிப்பதன் மூலமே எண்களாக எல்லாவற்றையும் கணிக்கும் நுட்பம் வாய்க்கப்பெறுகிறார். நீட்ஷனின் ஆய்வு கூட தன்னுடையது என ஒரு சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டவராக, அவருக்கு அந்த ரகசிய ஆய்வை எடுத்து தர உதவுவது ஆப்ரஹாம். ஆப்ராஹம் மட்டும் சைகை மொழியில் பேசுபவரல்ல, அங்கிருக்கும் மொத்தம் மூன்று நபர்களுமே காது, வாய் இரண்டுமே செயல்படாதவர்கள். பொதுவாகவே பங்காவாலாகவே இருக்கும் தகுதிகளில் இதுவும் ஒன்று, இதன் பின்னனி நாவலில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் பறங்கியர்களின் விவாதங்களில் பங்கியை இயக்கும் பொழுது அந்த விவாதத்தை தெரிந்துகொள்ளக்கூட வாய்ப்புள்ளது என்றிருக்கலாம் எனக் கருதுகிறேன்.

ஆப்ரஹாமும் அவந்திகையும் இருவருக்குமிடையேயான உரையாடல் சைகை மொழியில் நடைப்பெற அந்த கட்டிட அமைப்பு உதவுவதை விவரிக்கும் பொழுதில், புனைவின் உட்சத்தை தொடுகிறார் தூயன். ஆப்ரஹாமிடம் கூத்து காட்டும் ஒரு திறமையொன்றுள்ளது. அதன் மூலம் கட்டிட அமைப்புகளை விளக்கவும் முடிகிறது. அவனது கூத்து முடியும்பொழுது நாவல் முடிகிறது, ஆனால் கூத்து நாவலின் முந்தைய பகுதிகளிலே தொடங்கி விடுகிறது.

மிஷனிலிருந்து வெளியேற நீட்ஷனை நெருக்கும் பொழுது, அந்த பிரிட்டிஷ்காரர்களை தத்தமது அறையிலிருந்து பிறிதொரு அறைக்கு மாற்றுவது அவரின் சிந்தனையோட்டத்தை குழப்பும் வகையில் இருக்கிறது. ஆனால் ஆப்ரஹாம் வந்தவுடனே அறிந்துகொள்கிறான். அதற்கு அவனது பின்னனி உதவுகிறது.

“பறங்கியர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நாங்கள் கூறுவதற்கு வெறுமனே செவி கொடுக்கிறார்களே தவிர அவர்களின் புத்தி தேடுவது. எங்களிடம் இருக்கும் மந்திரசாவியைத்தான். அதாவது அரண்மனையில் விசித்திர சரீரத்தின் ஆத்ம வழியைக் கண்டுபிடிப்பது”

எமிலி கன்னங்கரிய சிறுமியாக மங்களூரில் ஒரு தேவலாயத்துக்கு வந்து சேர்கிறாள். அதன் கிறுத்துவ சிலுவையுரு மற்றும் ஆலயத்துள் சென்று பார்த்தபோது சிலுவையிலிருந்து ரத்தமும் காயமுமாக கிருஸ்துவை கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் பால்முகம் கொண்ட ஒருத்தியின் சிலையைப் பார்க்கும்போது, காயப்பட்ட கிருஸ்து தனது பலியை தருவதன் மூலம் அவள் தன் கருப்பைமீது வைத்துக்கொள்கிறாள். இதை இறுதி வரை நம்பி கன்னியாஸ்திரியாகி நீட்ஷனிடம் வந்து சேர்கிறாள். 

புனைவுகளில் கதாபாத்திரங்களின் செயற்பாடுகளை முன்நகர்த்துவது அவர்களின் உரையாடல்களே. ஃப்ரூக்கிடம் உரையாடும் நீட்ஷன், புதிய கோட்பாடுகள் பதில்கள் மூலமாகவே தன்னை நிலைத்து நிறுத்திக்கொள்கிறது. அறிவொளிக்காலம் அப்படியொரு பதில்களின் குவியல் தான். அதுவே அவரது ஆய்வை முன் நகர்த்துகிறது.

எமிலிக்கும் நீட்ஷனுக்குமிடையேயான உரையாடல் விவிலியம் குறித்த நம்பிக்கையை உருவாக்குவது அதன் தொன்மை தான். தொன்மைக்கான கட்டமைப்புதான் அதை நம்பிக்கையிலேயே வைத்திருக்கிறது என்கிறார்.

எமிலி கிறிஸ்துவின் சிலுவை அறைதல் கூட பழங்குடிகளின் பண்பாட்டின் ஒரு கூறு என விவாதிக்கும் போது பதிலற்று போகும் நீட்ஷன் அந்த ஆய்வின் எட்டாண்டுகள் முழுவதுமாகவே அவளின் முடிவுறா கேள்விகள்தான்.

ஆப்ரஹாமிடையே சைகையால் உரையாடும் அவந்திகை அவன் எழுப்பும் கேள்விகள், நீட்ஷனின் அந்த ஆய்வு நூலை வாசிக்க நகர்த்துகிறது.

அந்த நூலை கைப்பற்ற ஆப்ரஹாம் மற்றும் அவந்திகை எடுக்கும் முயற்சிகளும் அதை எமிலி கண்டுணரும் பகுதி முழுவதுமே நாவலை தனித்துவமாக நிற்க செய்கிறது.

இறுதி பகுதிக்கிடையே வரும் “தீம்பு அல்லது பூர்வக்குடிகள் தம் ஸ்வாதீனத்தை இழந்து கதை” யில் வரும் புதளி மற்றும் அதன் தொடர்ச்சியாக வரும் ஹலக்கொ பழங்குடிகளின் பகுதிகள் எமிலியின் முன்கதையாக மட்டுமல்லாமல் நாவல் பேசும் அதிகாரம் எப்படி அறிவின் தொகுப்பாக இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.

அவந்திகையின் நுதல் பற்றிய குறிப்பு, அவளுடைய வாசனை, அதனாலே அவளுடையவளாகும் பூனி என்ற பூனை, நூலகத்தின் சாவியை கண்டுப்பிடிக்கும் தருணம் எல்லாம் சேர்ந்து வாசிப்பதில் கொடுக்கும் இன்பம் சலிப்பு தட்டாத வாசிக்கும் புனைவில் புனைவின் உட்சமான இடங்கள்.

“ஆமாம் சர்வ வல்லமை படைத்த ஒரு சாம்ராஜ்யத்தின் வெறும் புவியியல் அமைப்பைப் பெறுவதால் மட்டும் திருப்தி அடைவதில்லை. அதாவது, நிலம் என்பது வெறும் புவியியல் அமைப்பு என்பதைத்தாண்டி ஒரு கலாச்சாரத்தின் இடம், விருப்பு வெறுப்புகளின் சூழல், அவர்களின் நம்பிக்கை. இப்படி அத்தனையும் சார்ந்தது. ஒரு தலைமைக்குக்கீழ் பணிகையில் அவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பும் உழைப்பும் அதிகார பீடத்துக்குரிய மரியாதை. அப்படியொரு விழுமியத்தை மாற்றுவதுதான் உண்மையான அரசதிகாரம். அது ஒருபோதும் சலிக்காது.” 

வரலாற்றோடு புனைவு கலந்து மாய யதார்த்தத்தை எழுதுவது அத்தனை எளிதானதல்ல. ஆனால் அதில் பெரும் கலைஞராக இருக்கும் பா.வெங்கடேசனோடு சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் தூயன் அந்த வரிசையில் இணைந்து கொள்கிறார்.

***

நிஜந்தன் – கோயம்புத்தூரை பிறப்பிடமாக கொண்டவர் நிஜந்தன். ஆரம்பத்தில் இடதுசாரிய அமைப்புகளோடு தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு கொண்டிருந்தவர். தீவிர வாசகர். நூல்கள் குறித்த அறிமுக கட்டுரைகள் தொடர்ச்சியாக சமூக ஊடங்களில் எழுதி வருகிறார். தற்போது குறுங்கதைகள் மற்றும் சிறுகதைகளை வாசகசாலை, நடுகல் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். மட்டுமன்றி நக்கலைட்ஸ் என்ற You tube சேனலில் Script writer ஆக பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர். பிறழ் இவரின் முதல் நாவல். மின்னஞ்சல் : chenijanthan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here