Home Blog Page 40

மறை பிம்பங்கள்

0

கா.சிவா

திருமலை பள்ளி மற்றும் கலைக்கல்லூரியின் முதல்வர் அலுவலகத்தின் முன்புறம் போடப்பட்டிருந்த நீலநிற நாற்காலியில் இருப்புக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான் சங்கர். கல்லூரி மாணவர்களில் ஓரிருவர் மட்டும் அலுவலகத்திற்குள் செல்வதும் வருவதுமாக இருந்தார்கள். முதல்வரைக் காண்பதற்காக இவன் காத்திருந்தான். எதிரேயிருந்த பள்ளியில் பிள்ளைகள் நீர் அருந்தவும் கழிவறைக்கும் இரண்டு மூன்று பேர்களாக புறவுலகைக் கருதாத பறவைகள் போல குதித்தபடியும் ஒருவரையொருவர் சீண்டியபடியும் சிரித்தபடியும் சென்று வந்தார்கள்.

பீட்டர் சாலைக்கு எதிரேயிருந்த தின்பண்டக் கடையில் நின்று உள்ளிருந்தவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான்.

இன்று முதல்வராக இருக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்மணி வரவேண்டுமே என்று சங்கரின் மனம் மர உச்சித்தளிர் காற்றிலென தவித்துத் துடித்துக் கொண்டிருந்தது. அவர் கையில்தான் இவன் எதிர்காலமே உள்ளது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு இது தெரியாது. பத்து நாட்களுக்கு முன்பும் வந்திருந்தான். எண்ணியது நடக்கவில்லை. இன்றுதான் இறுதி நாள். இன்றும் முடியாவிட்டால்… நினைக்கவே பெரும் அச்சம் எழுந்தது. உச்சியில் இருக்கும் கனியைப் பறிக்கப் பெரும்பாடு பட்டு ஏறியவன் கை தொடும் அண்மையில் கால் வைத்த கிளை உடைந்ததென கீழேதான் விழவேண்டும். கனியைக் கைக்கொள்ள வேண்டுமானால் மறுபடி முதல் அடியிலிருந்துதான் தொடங்க வேண்டும். மீண்டும் பழைய அடிமை வாழ்க்கையா… எண்ணமே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிப்பதில் எத்தனை புறக்காரணிகள் சீராக இருக்க வேண்டியுள்ளது. “அத்தனை வெற்றிகளும் தோல்விகளும் தன் முயற்சியால் விளைவதுதான்” என்பது எத்தனை தவறான கூற்று என்று புரிந்தது. இங்கு மீண்டும் வரவைத்த அரசு அதிகாரி ராமலிங்கம் மீது கசப்பு ஊறியது. அதிகாரத்தில் இருந்தால் மற்றவர்களை இளப்பமாகக் கருத வேண்டுமாயென்ன… சாதிகள் முன்பு இருந்தது போன்ற வரைமுறையில் இல்லை. இப்போது அதிகாரம் இருப்பவன் உயர்ந்தவன். இல்லாதவன் தாழ்ந்தவன் என்றவாறு ஓடிய மனவோட்டத்தின் முடிவில் இங்கு வரவேண்டிய அவசியம் நேர்ந்ததை நோக்கி அவன் எண்ணம் சென்றது.
*
கல்லூரி படிப்பு முடித்ததுமே பணிக்குச் செல்லவேண்டிய நிலை சங்கருக்கு. தனியார் நிறுவனத்தில் அடிநிலைப் பணியில் சேர்ந்து, பின் சலித்து அதிலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் அடுத்த நிலையில் சேர்ந்தான். ஆனால் அங்குமே ஏவல் பணிதான். அதுவும் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றுவார்கள் என்ற பதட்டத்தை அளித்துக் கொண்டேயிருப்பார்கள். இப்படியே வெவ்வேறு நிறுவனங்களில் பத்து வருடங்கள் பணி புரிந்து சலிப்பின் உச்சத்தில் இருந்தபோது தான் கல்லூரியில் உடன் படித்த தாமஸ் பீட்டரை சந்திக்க நேர்ந்தது. அவன் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனும் தன் பணியில் சலிப்பில் இருந்தான். தான் அதிகமாகவே ஈட்டினாலும் கவுண்டரின் உள்ளே அமர்ந்திருப்பவன் தன்னைக் கீழானவனாகக் கருதி நடத்துவதாக எண்ணி மனம் புண்பட்டிருந்தான்.

“அதிலிருந்து மீள்வதற்கு ஒருவழிதான் உள்ளது. தேர்வு எழுதி அரசு அதிகாரியாக ஆகவேண்டும்” என்று கருதிய அவன் நம்பிக்கையை சங்கரின் மனதிலும் பதிய வைத்தான். படிப்பை முடித்து பல ஆண்டுகள் ஆனபோதும் மனதில் ஏற்பட்டிருந்த கனலின் தாக்கத்தால் ரெயிலின் வேகத்தையும் தாங்கி தண்டவாளத்தின் அருகில் பூத்து ஒளிரும் மலர்போல மனதில் பூத்த ஒருவித நம்பிக்கையில் செய்து கொண்டிருந்த உவக்காத பணிக்கு நடுவிலும் அயராமல் படித்தார்கள்.

வாரம் முழுவதும் பணி செய்வதால் அல்ல, அந்தப் பணியின் மீதான ஒவ்வாமையே மனதை பெருவிசையென அழுத்தியது. எதைச் செய்தாவது இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டுமென உறுதி தோன்றியது. வார இறுதி நாட்களில் மட்டும் வகுப்புகளுக்குச் சென்றான். பிற நாட்களின் அனைத்துக் கணங்களிலும் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களையே மனதில் ஓட்டிக் கொண்டிருப்பான். கைப்பையில் எப்போதும் குறிப்பேடு இருக்கும். திரையரங்கில் பிலிம் ரோல் சுற்றுவது போல மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் பாடத்தில் இடையில் சிக்கலெழுந்தால் குறிப்பேட்டை எடுத்துப் பார்த்து சரிசெய்து மீண்டும் ஓட்டுவான். வேறு நினைவேதும் உள் துழையாமல் பயின்ற அந்நாட்களை இப்போது எண்ணும்போதே, மீண்டும் பெற முடியாத தீவிர தியான அனுபவம் போல கருங்கல் மலையின் மேல் அமைந்த தண்சுனையென ஒரு தித்திப்பு மனதினுள் ஊறி சிலிர்க்க வைத்தது.

தேர்வில் சங்கர் தேறினான். பீட்டர் ஐந்து மதிப்பெண்களில் தவறவிட்டான். “விடு மச்சான். ஆபீசுல ஒருத்தன்கிட்ட கை கட்டி பாக்கற வேலையெல்லாம் வேலையா. நான் நெனச்சா வேலை பாப்பேன். இல்லேன்னா தூங்குவேன். நாள் முழுக்க வேல பாக்குறதெல்லாம் என்னால முடியாது” என்று தனக்குள் சொல்லித் தேற்றிக்கொண்டதை சங்கரிடமும் வீம்பாகக் கூறினான்.

ஒரு செய்தியால் இத்தனை மகிழ்ச்சியை அளிக்க முடியுமென்பதை, தேர்ச்சியடைந்த விபரத்தை வீட்டில் தெரிவித்தபோதுதான் சங்கர் அறித்தான். இவன் பெற்றோர் இவன் பிறந்தபோதுகூட இவ்வளவு உவகையை அடைந்திருக்கமாட்டார்கள் எனத் தோன்றியது. தன் மகன் தனியார் நிறுவனங்களில் படும் பாடுகளை, அதைத் தவிர்க்க முடியாத தங்களின் கையறு நிலையை எண்ணியவாறு எத்தனை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருந்திருந்தால் இத்தனை மகிழ்வு பொங்கியிருக்கும். பெற்றோரின் மகிழ்வைக் கண்டபிறகுதான் தான் ஏதோ சாதித்திருக்கிறோம் என்ற சிறு பெருமிதம் சங்கருக்கு ஏற்பட்டது.

சான்றிதழ் சரி பார்ப்புக்கென தேர்வாணையம் சென்றபோது பீட்டரும் உடன் வந்தான். தன் வழிகாட்டுதலின்படி ஒருவன் உயர்நிலைக்குச் செல்கிறான் என்பது பீட்டருக்கு பெரும் நிறைவையளித்தது என சங்கருக்குத் தோன்றியது. இருநூறு பேருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். தேர்வானவர்களுக்கு துணையாக வந்து வெளியில் நின்றவர்களே ஐநூறு பேர்களுக்கு மேலிருக்கும். பலர் கைகளில் பயணப் பொதிகளை வைத்திருந்தார்கள். சென்னையிலேயே வசித்ததால் அந்த அவதி சங்கருக்கு இல்லை. சான்றிதழ்களின் கோப்பினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

சரிபார்ப்பிற்கு மூன்று அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருந்தனர். வந்திருந்தவர்களை ஒருவர்பின் ஒருவராக வரிசையாக மூவரில் ஒருவரிடம் அனுப்பினார்கள். மூன்று பேரில் ஒருவர் நாற்பது வயதைக் கடந்த பெண். ஆண்கள் இருவரில் ஒருவர் துடிப்பான இளையவராகவும் மற்றொருவர் சற்று சாந்தமான ஐம்பதை வயதை நெருங்கியவராகவும் இருந்தார். பெண்மணி அவ்வயதிற்குரிய சலிப்பைக் காட்டினார். இளைய ஆண் இளமைக்குரிய அதீத துடிப்பும் எரிச்சலுமாக இருந்தார். பணிக்கு வருமுன் இவர்களிடமிருந்த பரிதவிப்பை தேர்வானவர்கள் நினைவுபடுத்தியதால் தான் இப்படி நடந்து கொள்கிறார்களோ என சங்கருக்குத் தோன்றியது. மேலேறிய நெற்றியுடன் கண்ணாடி அணிந்திருந்த மற்றொருவர் சாந்தமானவராகத் தோன்றினார். இவனுக்கு தன்முறை அந்தப் பெரியவரிடம் செல்வதாக அமையவேண்டுமே என்றிருந்தது. அப்படியே நிகழ்ந்து அவரிடம் தன் சான்றிதழ்களுடன் சென்றான்.

பதட்டம் குறைந்தவனாக அவருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பத்தாவது, பனிரெண்டாவது, பட்டப்படிப்பு, சாதி என எல்லாச் சான்றிதழ்களையும் ஒவ்வொன்றாக வாங்கிப் பார்த்தார். அவர் புன்னகைக்கிறாரா அல்லது முக அமைப்பு அப்படியா என்ற யோசனை இவன் மனதில் ஓடியது. ஆசிரியர் தன் பிரிய மாணவனை நோக்குவது போன்ற பார்வை அவர் விழிகளில் இருந்தது. அவர் எல்லோரையும் அப்படித்தான் பார்த்தார். ஆனால் தன்னை மட்டுமே அப்படி வாஞ்சையுடன் நோக்குவதாக ஏனோ அவனுக்குத் தோன்றியது. “கான்டாக்ட் சர்டிபிகேட் எங்கே” எனக் கேட்டார். வேறு சிந்தையில் இருந்த இவனுக்கு அவர் கேட்டது செவியில் விழுந்தபோதும் அதன் பொருள் சட்டென அர்த்தமாகவில்லை.

“என்ன சார்”

“நன்னடத்தை சான்றிதழ்”

“அதை எடுத்திட்டு வரல்லியே சார். அது தேவையில்லையினு நெனச்சேன்”

“நீயே ஏன் அப்படி நெனக்கிற. தேவையில்லாமதான் ஒரு சர்டிபிகேட் தர்றாங்களா”

“முக்கியம் இல்லேன்னு நெனச்சிட்டேன் சார்”

“நீ காலேஜ்ல நல்லா படிச்சேன்னு தெரியிது. ஒழுக்கமா இருந்தியான்னு எங்களுக்கு எப்படித் தெரியும். அந்த சர்டிபிகேட் கண்டிப்பா வேணும்”

அவர் குரலில் இருந்த எதிர்த்து பேச விடாத உறுதி சங்கரை திகைக்க வைத்தது. மற்ற இருவரில் ஒருவர் இப்படிப் பேசியிருந்தால் இவன் திகைத்திருக்க மாட்டான். சாந்தமானவர் என்றெண்ணி வந்தவரிடமிருந்த கடுமை இவனை ஒடுங்க வைத்தது.

“அந்தச் சர்டிபிகேட் வந்தாதான் கிளியர் பண்ணுவேன். எப்ப எடுத்திட்டு வருவீங்க” என்றார் இறுக்கமான முகத்துடன்.

“நாளைக்கே எடுத்திட்டு வந்திடறேன் சார்”

“பத்து நாளைக்குள்ள எடுத்துக்கிட்டு முதல் மாடில இருக்கிற என் அறைக்கே வாங்க. தவறினா அடுத்த தேர்வுக்கு படிக்க ஆரம்பிங்க” என்று அவர் கூறியவுடன் சான்றிதழ்களை எல்லாம் எடுத்து கோப்பினுள் வைத்துக் கொண்டு கிளம்பினான். எப்படி அந்தச் சான்றிதழ் மட்டும் தவறியது. எங்கே வைத்தோம். எல்லாச் சான்றிதழ்களும் ஒரே இடத்தில்தானே இருந்தது என்று எண்ணியவாறு தளர்ந்து மெதுவாக நடந்து வந்தவனின் முகத்தைப் பார்த்து பீட்டர் பதறினான்.

“என்னடா ஆச்சு. பிரச்சனைக்கு ஒன்னுமேயில்லையே…” என்று கேட்டான். சங்கர் விவரத்தைக் கூறிதும் “வீட்லதான்டா இருக்கும். இதுக்கா இப்படி ஒடஞ்சு போயிட்ட” என்று தேற்றியவாறு தன் இருசக்கர வாகனத்தில் ஏறி முடுக்கினான்.

பீரோவை ஐந்து முறை முழுதாக கலைத்தும் கோப்புகளை பலமுறை திருப்பிப் பார்த்தும் அந்தச் சான்றிதழை மட்டும் காணவில்லை. அது ஏ4 தாள் அளவில் பாதிதான் இருக்கும். அதனால் கீழே விழுந்திருக்குமோ. சான்றிதழ்களுக்கு நடுவே இந்தியா போட்டோ ஸ்டுடியோவின் காக்கி நிற கவரில் வைக்கப்பட்ட போட்டோ கூட இருந்தது. ஆனால் அந்தச் சான்றிதழைக் காணவில்லை.

ஒவ்வொரு முறை கோப்பில் தேடும்போதும் விழிகளில் ஆர்வம் மின்ன பார்த்துக் கொண்டிருந்த அம்மா “நல்ல காலம் பொறந்திருச்சின்னு நம்புனனே. ரெண்டு நாள் சந்தோசமா இருந்தது இந்தக் கடவுளுக்கு பொறுக்கலையே. எம் புள்ள மொகத்த பாக்க சகிக்கலையே. நான் என்ன பண்ணுவேன். என்னன்னமோ பேப்பரெல்லாம் இருக்குது. தேவையானத மட்டும் காணலை….” என்று புலம்ப ஆரம்பித்தார்.

“அம்மா… கவலப்படாதீங்கம்மா. காலேஜ்ல போயி வாங்கிக்கிடலாம். கேட்டா புதுசா ஒன்னு எழுதித் தருவாங்க. நாம படிச்சதுக்கு அத்தாட்சியா மார்க் சீட்டெல்லாம் இருக்குதில்ல” என்று பீட்டர் கூறியதைக் கேட்டபோது சங்கர் முகத்திலும் அம்மா முகத்திலும் மெலிதாக நம்பிக்கை பூத்தது.
*
படிப்பு முடிந்து சான்றிதழ்களை வாங்கி வந்த பிறகு இப்போதுதான் அவர்கள் படித்த கல்லூரி இருந்த மதுரவாயல் பகுதிக்கே சென்றார்கள். கல்லூரி முன்பு ஏரிக்கரைக்கு அருகில் இருந்தது. இப்போது தூர்க்கப்பட்ட ஏரியின் மத்தியில் இருந்தது. இருவருமே ஒருவரையொருவர் ஆச்சர்யமும் திகைப்புமாய் பார்த்துக் கொண்டார்கள். பெயர்ப் பலகையைக் கண்டுதான் இது தாங்கள் படித்த கல்லூரிதானென உறுதி கொண்டார்கள்.

விசாரித்துக் கொண்டு முதல்வர் அறையை அடைந்தார்கள். ஒரு பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மூடியிருந்த அறைக்கு வெளியே வேகமாக நடந்து கொண்டிருந்தவரிடம் முதல்வர் எப்போது வருவார் என பீட்டர் கேட்டான். பாமரனைப் பார்க்கும் பேரறிஞரின் பார்வையில் இவர்களைப் பார்த்தவர் “ஒங்களுக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டார்.

“சார், நாங்க இங்கதான் பத்து வருசத்துக்கு முன்ன படிச்சோம். கன்டக்ட் சர்டிபிகேட் வேணும் சார்” என்றான் குழைவுடன். அவர் முகத்தில் ஏளனம் வழிந்தோடியது.

“பத்து வருசத்துக்கு முன்ன படிச்சதுக்கு கன்டக்ட் சர்டிபிகேட் இப்ப வேணுமா. ஏன் இப்பதான் ஞாபகம் வந்துச்சா”

“இல்ல சார், அப்பவே வாங்கிட்டோம். தொலைஞ்சு போச்சு. இவன் கவர்ண்மென்ட் எக்சாம்ல பாஸ் பண்ணிட்டான். கன்டக்ட் சர்டிபிகேட் இருந்தாத்தான் வேலை கெடைக்கும்….” என்று குரலில் வேண்டுதல் தொனிக்கக் கூறினான்.

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. நீங்க படிச்சப்ப இருந்தவங்க யாரும் இப்ப இல்ல. கரஸ்பாண்டன்ட் இறந்துட்டாரு. அவரு பொண்ணுதான் நிர்வாகம் பாக்குறாங்க. அவங்களால நடக்க முடியாது. அதனாலயோ என்னவோ உலகமே தன்னை ஏமாத்தத் துடிக்கறதாவும் தன்னோட ஊன்றுகோலால அத எதிர்த்துப் போராடுறதாவும் அவங்களுக்கு நெனப்பு. பிரின்ஸ்பால் மேல நம்பிக்க இல்லாததால அந்தம்மாவேதான் அந்தப் பொறுப்புலயும் இருக்குறாங்க”

“பரவாயில்ல சார். யாரா இருந்தா என்ன. நாங்க இங்க படிச்சதுக்கான ஆதாரமா மார்க் சீட் வச்சிருக்கோம்”

“நீங்க வச்சிருக்கீங்க. ஆனா அவங்க இங்க வந்தாத்தானே”

“ஏன் வர்றதில்லையா”

“அப்பப்ப ஒடம்புக்கு முடியாம ஆயிடும். இங்க மாசத்துக்கு ரெண்டு தடவதான் வருவாங்க. முக்கியமானத மட்டுந்தான் வீட்டுக்கு கொண்டுபோயி கையெழுத்து வாங்கிட்டு வருவோம்”

“சார்… சார், அதே மாதிரி எங்களுக்கும் ஒரு கையெழுத்து வாங்கித் தந்துருங்க சார்”

“அந்தம்மா எதையுமே நம்பாதுன்னு சொல்றேன்ல. வாங்குனத தொலச்சா அதுக்கு நாம பொறுப்பாக முடியுமான்னு கத்துவாங்கப்பா. சொன்னா புரிஞ்சிக்கிடுங்க. போயி நல்லாத் தேடிப் பாருங்க” என்று கூறியபோது சலிப்பும் வெறுப்பும் தொனித்தது.
*
“இப்படி கொஞ்சம் கூட பொறுப்பிலாமயா ஒருத்தன் இருப்பான். ஊருக்குள்ள இருக்கறவனெல்லாம் எத்தனை சாமர்த்தியமா ஒவ்வொரு காரியத்தப் பண்றான். எங்களுக்குன்னு வந்து வாச்சிருக்குதே எந்தப் பிரயோசனமுமில்லாம. ஓரடி மேல வச்சா மூனடி சறுக்குதே. கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமப் போயிடும் போல இருக்கே” என இருந்த சிறிய நம்பிக்கையும் கரைந்தவுடன் அதீத எதிர்பார்ப்புடன் மிதந்த அம்மா தரையில் தள்ளப்பட்ட வேதனையில் புலம்பினார். இதைக் கேட்டதும் இத்தனை நாள் தாய் தன்மேல் கொண்டிருந்த அபிப்ராயத்தை உணர்ந்த சங்கர் முற்றிலும் உள்சுருங்கி உண்மையிலேயே தான் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தான் என நம்ப ஆரம்பித்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பீட்டர் “டேய் மச்சான், எனக்கு வேறொரு யோசனை தோனுச்சு, எங்கூட வா” என அழைத்துக் கொண்டு ஓட்டேரி பகுதிக்குச் சென்றான். பெரிய கழிவுநீர் ஆற்றை ஒட்டி சிமெண்ட்டால் பூசப்படாத செங்கல் கட்டிடங்கள் நெருக்கமாகக் காணப்பட்டன. தெருவும் ஒரு ஆட்டோ மட்டுமே செல்லுமளவிற்கு குறுகலாகவே இருந்தது. டவுசர் மட்டும் அணிந்த மூன்று சிறுவர்களும் பழைய உடையை அணிந்திருந்த சிறுமியும் ஆளுக்கொன்றாக வைத்திருந்த பம்பரத்தை கூச்சலிட்டபடி தரையில் கிடந்த ஒரு பம்பரத்தின் மீது ஓங்கிக் குத்தினார்கள். ஒரு சிறுவன் தனியாக வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தான். “என்னடா பண்றாங்க” என்றான் சங்கர்.

“அந்தப் பையன் தோத்திருப்பான். இவங்க நாலு பேரும் அவன் பம்பரத்த ஆக்கர் அடிக்கிறாங்க”

“அது ஒடஞ்சிடாதா”

“நல்ல மரத்துக் கட்டைனா ஒடையாது. லகுவான கட்டைனா மூனு தடவைக்கு மேல அடி வாங்கினா ஒடையும்”

“அந்தப் பையனப் பாத்தா பாவமா இருக்குடா”

“அவன் ஜெயிச்சிருந்தா இன்னொருத்தரோடத ஆக்கர் அடிக்க தயாரா இருந்திருப்பான்ல” கூறியபடியே மஞ்சள் வண்ணம் அடிக்கப்பட்ட வீட்டின் முன் நின்றான். வாசற்படி தெருவிலேயே இருந்தது. படியில் ஏறியவுடனேயே வீடுதான். படியில் நின்று இரும்பு கிரில்லைத் தட்டினான் பீட்டர். நாற்பது வயது மதிக்கக்கூடிய பருத்த, கருத்த பெண் கலைந்து கிடந்த முடியை கொண்டையிட்டபடி “யாருப்பா…” என்று கேட்டு கதவைத் திறந்தார்.
“அக்கா, மோகன் அண்ணனைப் பாக்கணும். பீட்டர்னு சொன்னாத் தெரியும்”

“இரு கூப்பிடறேன்…” என்று அவர் உள்ளே சென்றார். சட்டையை மாட்டியபடியே “வா பீட்டர்.. பாத்து நாளாயிடுச்சே” என்றபடி வெளியே வந்த மோகன் மனைவியைவிட இளமையாகத் தெரிந்ததற்கு அவரின் மெலிதான உடலும் நல்ல கருமையில் மிளிர்ந்த தலைமுடியும்தான் காரணம் என சங்கருக்குத் தோன்றியது. இவரைப் பார்க்க எதற்கு அழைத்து வந்தான் என்பது இவனுக்கு இதுவரை புரியவில்லை. பீட்டர் காரணம் இல்லாமல் எதையும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடனேயே அருகிலிருந்த டீ கடைக்கு சென்றான். மலையாளத்துக்காரர் நடத்தும் கடையது.

“சேட்டா மூனு பஜ்ஜி கொடு… அப்பறம் மூனு டீ” என்று கூறிவிட்டு அங்கிருந்த இருக்கையில் மோகன் அமரவும் இவர்களும் அமர்ந்தார்கள்.
“சொல்லுப்பா பீட்டர். இப்பவும் பர்த் சர்டிபிகேட்தானா. எத்தனை வேணும்”

“இல்லண்ணா. இவன் என் ப்ரண்டு சங்கர். கவர்மென்ட் வேலைக்கு எக்ஸாம் எழுதி பாசாயிட்டான். அதுல ஒரு சிக்கல்…”

தனித்தனி பிளாஸ்டிக் தட்டுகளில் காய்ந்த மந்தார இலைமேல் காரச்சட்னியுடன் வாழைக்காய் பஜ்ஜியை கொண்டுவந்து வைத்தார் சேட்டன்.

“டிகிரி சர்ட்டிபிகேட்டெல்லாம் ரொம்பக் காஸ்ட்டாவும்பா” என்று மோகன் கூறியபோது விபரம் புரிந்து சங்கர் திடுக்கிட்டான்.

“டிகிரியெல்லாம் இருக்குதுண்ணே. இந்த கன்டக்ட் சர்டிபிகேட்தானே காணாம்”

“இந்தச் சர்டிபிகேட் கேட்டு எவனுமே வந்ததில்ல. நீதான் பர்ஸ்ட். அது எப்படியிருக்கும்னு சாம்பிள் வச்சிருக்கிறியா” பஜ்ஜியை மென்றபடியே அவர் கேட்க, தேவைப்படாதென நகல் கூட எடுத்து வைக்காதலால் சங்கர் யோசித்தான். ஆனால், “இதோ இருக்குண்ணே…” என ஒரு கணமும் தயங்காமல் பையிலிருந்து எடுத்து சான்றிதழ் ஒன்றைக் காட்டினான். எட்டிப் பார்த்த சங்கர் அது பீட்டருடையது எனக் கண்டான்.

அதை வாங்கிப் பார்த்த மோகன் “இது பழசாயிருக்கே” என்றார்.

“ஆமாண்ணா இதுக்கு வயசு பனிரெண்டு ஆச்சு” மென்று கொண்டிருந்ததை விழுங்கிவிட்டு கூறினான் பீட்டர்.

“புதுசுன்னா ஈசியா பண்ணிடலாம். பழசுன்னா கொஞ்சம் சிரமம். இந்தப் பேப்பரப் பாரு… கொஞ்சம் பழுப்பா மாறியிருக்குல்ல. அது மாதிரி பேப்பரத் தேடி எடுத்து ரெடி பண்ணணும். ரேட்ட கேட்டு சொல்றேன். இப்ப கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போ. எவ்ளோ ஆகும்னு நாளைக்கு சொல்றேன்” முடித்தார். டீ வரவும் குடித்து விட்டு எழுந்தார்கள். பீட்டர் சட்டைப்பையிலிருந்து எடுத்த பணத்துடன் சங்கரின் பெயரை முதலெழுத்துடன் எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு “இன்னும் மூனு நாளுக்குள்ள அங்க கொடுக்கணும்” என்று கூறியபடி இருவரும் விடைபெற்றார்கள். அப்போது சங்கரின் மனச்சாட்சி பல அறக்கேள்விகளை தனக்குள்ளேயே ஆவேசமாகக் கேட்டது. கேட்டுக் கேட்டு நாவறண்ட போதும் பதிலேதும் வரவில்லை. முடிவில் எல்லாவற்றிற்குமான பதில்களையும் ஒவ்வொன்றாக தர்க்கத்துடன் அதுவே உருவாக்கிக் கொண்டது. மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற அச்சம் மட்டும் கடைசியாக மனதில் நீடித்தது. அம்மாவிடம் இந்த முயற்சி பற்றி எதுவும் தெரிவிக்கவேண்டாம், திரும்பவும் தவறு நேர்ந்தால் அவர்களால் தாங்கமுடியாது. எல்லாம் எண்ணியபடி நிகழ்ந்தபின் கூறலாம் என முடிவு செய்தார்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மோகன் கொடுத்த சான்றிதழுடன் பீட்டரும் சங்கரும் அரசு அலுவலகத்திற்கு சென்றார்கள். முதல் மாடிக்குச் சென்று அவரின் அடையாளங்களைக் கூறி விசாரித்தார்கள். “அவர்தான் ராமலிங்கம் சார். அந்தக் கடைசி ரூம்ல இருக்கிறார். போய் பாருங்க. ஒருத்தர் மட்டும் உள்ள போங்க” என்று அழுத்திக் கூறினார்.

அந்தச் சான்றிதழை வாங்கி வந்து, வீட்டிற்கு வெளியே அழைத்து பீட்டர் காட்டியபோதே சங்கரின் முகம் சுருங்கியது. “என்ன பீட்டர் இது. ஒன் சர்டிபிகேட் எப்படி இருக்கு, இது ரொம்ப பழுப்பா பிரிண்டிங்கெல்லாம் லைட்டா இருக்குதே” என குரல் கமறக் கேட்டான்.

“அத நானும் கேட்டேன்டா. பழசு மாதிரி தெரியணும்லன்னு சொன்னதோட என் சர்டிபிகேட்ட பாக்கிறதாலதான் வித்தியாசம் தெரியிது. ஆபீசுல இருக்கிறவர்கிட்ட புதுச மட்டும்தானே காட்டப் போறிங்கன்னு சொன்னார். அதுவும் சரிதானேன்னு தோனுச்சுடா” என்று தேற்றினான்.

பாதி திறந்திருந்த கதவு வழியாக அறையின் மூலையில் போடப்பட்டிருந்த டேபிளுக்குப் பின் அமர்ந்து அருகில் அமர்த்திருந்தவரிடம் ராமலிங்கம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. தயக்கத்துடன் கதவை நன்றாகத் திறந்தான் சங்கர். நிமிர்ந்து நோக்கிய இராமலிங்கம் தலையசைவால் அழைத்தார். கால்கள் பின்ன மனம் பின்னுக்கிழுக்க முன்னே நடந்தான். இப்போது கூட வாய்ப்பு இருக்கிறது, ஏதாவது காரணம் கூறிவிட்டு அப்படியே திரும்பிவிடலாம். ஆனால் போலியைக் கொடுத்து மாட்டிக் கொண்டால் புதைகுழியில் சிக்கியது போலத்தான்… மனதினுள் எச்சரிக்கைக் குரல் ஓங்கி ஒலித்தது. அக்கூக்குரலை சட்டை செய்யாத வேறொன்று உடலை இழுத்துக் கொண்டு அவரிடம் சென்றது.
“சொல்லுங்க” என்று எதிர்பார்ப்புடன் நோக்கினார். சங்கரின் முகம் அவருக்கு நினைவில்லை என்பதை அவர் முகம் காட்டியது.
“சார், நான் சங்கர். போன வாரம் சர்டிபிகேட் வெரிப்பிகேஷனுக்கு வந்திருந்தேன்…”

“சங்கரா… கன்டக்ட் சர்டிபிகேட் தரணுமில்ல… கொண்டு வந்திருக்கீங்களா”

“ஆமா சார்” என்றபடி சான்றிதழை நீட்டினான்.

கையில் வாங்கிப் பார்த்தவரின் முகம் கூர்மை கொண்டது. தாளை லேசாக வருடிய பின் முகத்திற்கு அருகில் வைத்துப் பார்த்தார். சங்கரின் மனம் சிந்தையின்றி ஒடுங்கி நடுங்கிக் கொண்டிருந்தது. அவர் எதையோ உணர்ந்ததைப் போலத் தோன்றியது. நிமிர்ந்து இவன் நடுக்கத்தைக் கண்டவுடன் “இது சரியாயில்ல. புதுசா ஒன்னு வாங்கிட்டு வந்திடுங்க. நாளைக்குதான் கடைசி நாள்” என்று எந்த உணர்வுமில்லாமல் கூறியபடி இவன் கையில் கொடுத்துவிட்டு அருகில் இருந்தவரின் பக்கம் திரும்பினார்.

சங்கரின் மனம் கொந்தளித்தது. எத்தனை ஆணவம். சான்றிதழின் உண்மையை அறிந்தாரா இல்லையா என்பதை பார்வையிலோ வார்த்தையிலோ உணர்த்தாமல் புதிதாக வாங்கிவரக் கூறுகிறாரே. வாங்கி வரவேண்டியது மோகனிடமா அல்லது கல்லூரியிலா… சரியாகயில்லையெனக் கூறியது பழையதாக இருப்பதையா… போலியாக உள்ளதையா… முகத்தை எப்படி எவ்வுணர்வையும் காட்டாதவாறு பழக்கமுடியும். அல்லது அவரது இயல்பே இப்படித்தானா… கேள்விகள் ஈசல்கள் போல பெருகி எழுந்து, இறகுதிர்த்து மனமெங்கும் ஊர்ந்து விதிர்க்க வைத்தது. இந்த அறிவுகெட்ட பீட்டர் ஏன் இவ்வளவு தூரத்தில் நிற்கிறான். அருகில் வந்து நடுங்கும் கைகளைப் பிடிக்கக் கூடாதா.. ஒன்றும் தவறாக ஆகவில்லையென அரவணைக்கக் கூடாதா… பத்தடி தூரத்தை பெரும்பாலையை கடப்பது போன்ற தடுமாற்றத்துடன் கடந்து வெளியே வந்தான்.

பீட்டரின் தோளைப் பற்றியபடி நடந்து கீழே வந்ததும் நடந்ததைக் கூறினான். கேட்டு பதட்டமடையாமல் இருந்தவனைப் பார்த்து சங்கருக்கு சினம் எழுந்தது. கல் நெஞ்சக்காரன்… எல்லாக் கதவுகளும் அடைத்துக் கொண்ட பின்பும் எதுவுமே நிகழாததைப் போல இயல்பாக இருக்கிறானே. நிகழ்ந்தது அவனுக்கில்லையே, எதற்கும் பயனில்லாத இந்தச் சங்கருக்குதானே என்று எண்ணங்கள் ஓடின. கொதிக்கும் எண்ணெயில் நீரைத் தெளிப்பதுபோல சிறிய புன்னகை தவழ பீட்டர் சங்கரை நோக்கினான். சங்கர் முகம் சிடுசிடுக்க ஏதோ சொல்ல வாய்திறந்தபோது அதை வேண்டாமென்று கைகளால் தடுத்து “ரொம்பப் பொங்காத மச்சான். பிரச்சனை பெருசா வர்றப்பதான் நாம நிதானமா இருக்கணும். ஒடனே ரியாக்ட் பண்ணினா இன்னும் சிக்கலாதான் ஆகும். புதைகுழிக்குள்ள விழுந்தவன் பொறுமையா இருந்து யோசிச்சாதான் வெளிய வர்றதுக்கு வாய்ப்பிருக்கும். அவசரமா துடிச்சா அவ்ளோதான்…”

சங்கரின் மனம் சற்று நிதானத்திற்கு வந்தது.

“பிரச்சனைக்குள்ள இருக்கிறவனுக்குதானே அதோட வலி தெரியும். வெளிய இருக்குறவனுக்கு என்ன தெரியும்னு நெனக்கிற… சரியா”

சங்கர் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான்.

“வெளிய இருக்கிற எனக்கு ஒன் வலி தெரியாததுதான். ஆனா வழி தெரியும். எப்படி இந்த இக்கட்ட கடந்து போறதுன்னு. எதுக்கும் தீர்வு காண கொஞ்சம் தள்ளி நின்னு பார்க்கணும்னு சொல்வாங்கல்ல. அது இப்பதான் புரியிது”

சங்கர் எதுவுமே கூறாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

“காலேஜுக்கே மறுபடி போய் பாக்கலாமேன்னு எனக்கு தோனுது” என்று கூறியவனை சங்கர் நிமிர்ந்து பார்த்தான். ஆமாம் அதைத் தவிர செய்வதற்கு வேறென்ன உள்ளது என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். பணியாற்றுபவர் சொல்வதை ஏன் நம்பவேண்டும்… நேரடியாக சாமியிடமே வரம் கேட்பதுபோல அந்தம்மாவிடமே கேட்டு விடலாமே என்று கூறியபடி கல்லூரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பீட்டர் தாளாளரும் முதல்வருமான அந்தப் பெண்மணி எப்போது வருவார்கள் என்று கேட்டான். மறுநாள் வருவார் எனத் தெரிவித்தார்கள். நாளைதான் கடைசி நாள் என்று எண்ணம் தோன்றிட உடலுக்குள் ஓர் அதிர்வு ஓடியது.
*
இடைவேளை நேரம் முடிந்து பள்ளிப் பிள்ளைகளெல்லாம் வகுப்புகளுக்குள் சென்றுவிட்டதால் வெயில் சற்று உக்கிரமாக அடித்தது போல் சங்கருக்குத் தோன்றியது. பீட்டர் கல்லூரியின் நுழைவாயிலில் நின்று அங்கிருந்த பாதுகாவலரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவனால் எப்படி எவரிடமும் பார்த்தவுடனேயே பேசி அவர்களுள் ஒன்றென ஆகிவிட முடிகிறதென்று சங்கருக்கு புரியாத ஆச்சர்யமாகவே இருக்கும். அப்படிப் பேசுவதன் மூலம் அவனுக்கு தேவையான தகவல்களையும் திரட்டி விடுவான். அந்த இயல்பினால்தான் காப்பீட்டு முகவர் பணியை தேர்ந்தெடுத்தான் என்பது நினைவுக்கு வந்தது. பீட்டர் சங்கரை நோக்கி வந்தான். அப்போது பெரிய காரொன்று வாயிலின் வழியே உள் நுழைந்தது. கார் வருவதை கவனித்த பின்தான் பீட்டர் உள்ளே வரத்தொடங்கினான் எனத் தோன்றியது. சங்கரிடம் இவங்கதான் என்பதுபோல விழிகளாலும் உதட்டசைவாலும் சைகை செய்தான்.

முதல்வர் அறைக்கு முன்பாக கார் வந்து நின்றதும் ஓட்டுநர் இறங்கி பின்கதவைத் திறந்து அலுமினிய ஊன்றுகோல்களை எடுத்து வந்தபின் முன்கதவைத் திறந்தான். ஒரு கூர்மையான உறுமலுடன் அதை வாங்கிக் கொண்டு உடலை பிரயத்தனத்துடன் உந்தி கோல்களை பிடித்தபடி எழுந்து நின்ற பெண்ணுக்கு வயது நாற்பதிற்கும் குறைவாகவே இருக்குமென சங்கர் எண்ணினான். கண்ணைப் பறிக்கும் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் சுடிதார் போன்ற வடிவத்தில் அவரது உடை இருந்தது. யாரையும் நிமிர்ந்து பாராமல் இரண்டடிக்கு ஒருமுறை உறுமலோசை எழுப்பியபடி கெந்திக் கெந்தி நடந்தார். நிற்கும் போது அழகாகத் தெரியும் அவர் முகம் நடக்கும் போது துயருடன் தெய்வத்தை பழிக்கும்போது தோன்றுவது போன்ற ஒரு விகாரத் தன்மையை அடைந்தது.

இவர்களுக்கு முன்னால் நான்குபேர் பணம் தொடர்பான விசாரிப்புகளுக்காகவும் ஒப்புதல்களுக்காகவும் கையில் கோப்புகளோடு காத்திருந்தார்கள். அவர்களில் முதலில் இருந்தவர் உள்ளே சென்றபோது முதல்வர் கடிந்து பேசும் ஒலி வெளியே கேட்டது. அவர் திரும்பி வந்தபோது பெரும் பாரத்தைச் சுமந்திருப்பது போன்ற களைப்புடன் தோற்றமளித்தார். பீட்டர்தான் விசாரித்தான்.

“என்ன சார்… மேடம் மூட் சரியில்லையா”

“ஆமா சார். பல வருசமா இவங்கிட்ட பிஸினஸ் பண்றேன். எப்பவுமே சந்தேகத்தோடயே பாக்கறாங்க. சின்னச் சின்ன விசயத்தையும் விசாரிக்கிறாங்க. அவங்கள நம்ப வைக்கிறதுக்குள்ள…” என்று பெருமூச்சு விட்டபடி நகர்ந்தார்.

அதைக் கண்டபோது சங்கரின் உள்ளத்தில் நடுக்கம் அதிகரித்தது. பீட்டர் ஏதோ உற்சாகமான பாடலை உதடுகளுக்குள் பாடிக் கொண்டிருந்தான். அவனுக்கென்ன பிரச்சனை… எதற்கு கவலைப்பட வேண்டும் என்று கறுவியபடி பல்லைக் கடித்தான். அதன் பிறகு சென்று வந்தவர்களின் முகங்களும் வெளிறியே இருந்தன.

அடுத்து இவர்கள் செல்லவேண்டிய முறை. உள்ளே சென்றவர் துவண்ட முகத்துடன் வெளியே வரவும் சங்கர் எழுந்தான். அப்போது வேகமாக வந்த ஒருவர் “தம்பி.. மேடத்தை அவசரமா பாக்கணும். கொஞ்சம் பொறுத்துக்கப்பா…” என்று கேட்டார். சங்கர் மறுப்பாக சொல்ல முயற்சித்தபோது தடுத்த பீட்டர் “சரி பரவாயில்ல சார் நீங்க போங்க…” என்று அனுமதித்தான். சங்கர் முறைப்பதைக் கண்டு பரவாயில்லடா என்ற பாவனையுடன் தோளில் தட்டினான். அப்போது பள்ளியின் மணியடித்து பிள்ளைகளெல்லாம் இறகு கசங்கிய வண்ணத்துப்பூச்சிகளாய் வெளியே வந்தார்கள். வெளிக்காற்று முகத்தில் பட்டவுடனேயே அவர்கள் முகம் மலர்ந்து ஒருவரையொருவர் பார்த்தும் தொட்டும் சிணுங்கியபடி கசங்கல் நீங்கிய சிறகு விரித்து பறக்கும் பறவைகள் போல உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்கள்.

உள்ளே சென்றவர் வந்த வேலை இவருக்கு சாதகமாக முடிந்த திகைப்பு முகத்தில் நிலைக்க வெளியே வந்து “நன்றிப்பா.. ஒரு அவசரம் அதனாலதான்..” என்றபடி நகர சங்கர் எழுந்தான். “இப்போது போகவா” என்று பீட்டரைப் பார்த்தவனை “போடா…” என்று தோளில் கை வைத்து விளையாட்டாக தள்ளினான்.

கல்லூரிப் படிப்பை முடித்து பலகாலம் ஆன பின்பும், படித்தபோது இருந்த அதே தயக்கமும் பதட்டமுமாகவே முதல்வர் அறைக்குள் நுழைந்தான். நிமிர்ந்து முதல்வரைப் பார்த்தபோது அவர்களின் முகத்தில் தவழ்ந்த பிள்ளைகளைக் காணும் அன்னையின் பரிவைக் கண்டு ஒரு கணம் திகைத்தான். பருந்தை விரட்டும் தாய்க்கோழியின் முகத்தை எதிர்பார்த்து உள்ளே வந்தவனுக்கு கோழி தன் குஞ்சுகளிடம் காட்டும் முகத்துடன் அவர் இருந்தது யோசிக்க வைத்தது. ஒருமுறை சுற்றிலும் பார்த்தான். எதையும் இவனால் கூர்ந்து கவனிக்க முடியவில்லை. முன்பு இருந்த தோற்றத்திலேயே வடிவமைப்பு இருந்ததாகத் தோன்றியது. ஒரு சாளரம் பள்ளியை பார்க்கும் வண்ணம் அமைந்திருந்தைக் கண்டதும் சற்று தெளிவு கிடைத்தது.

“சொல்லுப்பா, என்ன விசயம்”

சங்கர் விபரத்தைக் கூறியதும் ஆச்சர்யத்தில் விரிந்த விழிகளுடன் புன்னகையுடன் “வாழ்த்துகள்பா… வேல கெடச்சதுக்கு. இத்தனை வருசத்துக்கு அப்பறமும் படிச்சு வேல வாங்கறது பெரிய விசயம். எப்படி முடிஞ்சது” என்று கேட்டபோது சங்கரின் முகமும் மலர்ந்தது.
“உயிர் தப்ப வேற வழியே இல்லாத முனையில நிக்கிறப்ப விலங்குகள்ட்ட ஒரு ஆக்ரோஷம் வரும்ல மேடம்… அந்த மாதிரி மனநிலைல படிச்சசேன். தன்மானம் கூட உயிர் போலத்தானே மேடம்” என்று தெளிவாகப் பேசியது அவனுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

“எனக்கே கூடத் தோனும்.. இந்த கன்டக்ட் சர்டிபிகேட் ஏன் கொடுக்குறோம்னு. அதோட யூஸ் இப்பதான் தெரியுது. கொஞ்சம் வெயிட் பண்ணு தரச்சொல்றேன்” என்று கூறிய முதல்வரை நன்றியுடன் தலைகுனிந்து வணங்கிவிட்டு வெளியே வரும்போது கதவுக்கு மேலே ஆதிபராசக்தியின் பெரிய ஓவியம் இருந்ததை கவனித்தான்.

“வெற்றி தான மச்சான்” என்று கேட்ட பீட்டரை அருகில் சென்று அணைத்துக் கொண்ட போது “எப்படிடா டைமிங் தெரிஞ்சது” என்று கேட்டான்.

“செக்யூரிட்டிக்கு தெரியாதது எதுவும் இருக்குமா” என்று அவன் இவன் தோளைத் தட்டியபோது ஒருதுளி விழிநீர் பீட்டரின் சட்டையில் விழுந்தது.

  • நேராக அரசு அலுவலகம் சென்று ராமலிங்கம் சார் அறைக்குச் சென்றார்கள். சங்கர் மட்டும் அறைக்குள் சென்றபோது அவர் இருக்கை காலியாக இருந்தது. அன்று சங்கர் வந்தபோது அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சங்கர் அவரை அழைத்து “சார் இன்னைக்கு லீவா சார்…” என்று இராமலிங்கம் இருக்கையைச் சுட்டி பயமும் குழப்பமுமாக வினவினான். நிமிர்ந்து பார்த்த அவர் “சார் இப்பதான் ஒரு அவசர வேலை இருக்குதுன்னு கிளம்பினார். என்ன கன்டக்ட் சர்டிபிகேட் கொண்டு வந்திருக்கிறீங்களா” என்று கேட்டார்.

“ஆமா சார், காலேஜ்ல போயி கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டு வந்தோம். இன்னைக்குதான் கடைசி நாள்னு சார் சொன்னாரு. இப்ப என்ன சார் பண்றது” என்று சான்றிதழைக் காட்டியபடி திணறலாகக் கூறினான்.

வாங்கிப் பார்த்தவர் “சரியா இருக்கே. இப்படி கொடுக்கிறத விட்டுட்டு அன்னைக்கு அத கொண்டு வந்து கொடுத்தியே.. அதுனால வர்ற பிரச்சனைய பத்தி தெரியுமா”

சங்கர் முகத்தில் உணர்வேதும் தெரியாமலிருக்கப் பிரயத்தனம் செய்தான். “போலியான சர்டிபிகேட் கொண்டுவந்து தந்தியே, வேற யார்கிட்டயாவது நீ இப்படி கொடுத்திருந்தா தப்பிச்சிருக்கவே முடியாது. அது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா. வேலையும் கெடச்சிருக்காது. இதுக்கப்பறம் எக்ஸாமும் எழுத முடியாதவாறு பண்ணியிருப்பாங்க”

இதைப் பற்றி எதையுமே அறியாத பாவனையுடன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

“சின்னப் பையன் பின்விளைவப் பத்தி தெரியாமச் செய்றான்னு நீ போனப்பறம் சொன்னாரு. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா… அன்னைக்கு ராமலிங்கம் சார சாபம் விடுற மாதிரி முறைச்சுக்கிட்டே போனியே.. சார் நல்ல மனுசன்னு ஒனக்குப் புரியணும்னுதான்”

சங்கர் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்தபடி நின்றான். “சரி புறப்படு. ராமலிங்கம் சாருக்கு லேசா காய்ச்சல். இருந்தாலும் உன் ஃபைல சப்மிட் பண்ணனுமேன்னு இன்னைக்கு வந்து இவ்ளோ நேரம் இருந்தாரு. அவரால ஒக்கார முடியல. நான்தான் சர்டிபிகேட்ட வாங்கி பைல்ல சப்மிட் பண்ணிடுறேன் சார்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பி வச்சேன். தயக்கத்தோட தான் போனாரு. சரி நான் பாத்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” என்று அவர் கூறியவுடன் நன்றி சொல்லியபோது இவன் குரல் தழுதழுத்தது. திரும்பியவனை அழைத்தவர் “கூடிய சீக்கிரம் அப்பாயின்மென்ட் ஆர்டர் வீட்டுக்கு வரும். தபால்காரர்கிட்ட சொல்லி வைங்க. அவரு முகவரியில ஆள் இல்லேன்னு திருப்பி விட்ற போறாரு” என்றவருக்கு மீண்டும் நன்றி சொல்லி வணங்கிவிட்டு வெளியே வந்தான்.

வண்டியில் பின்னால் அமர்ந்து வந்தபோதே உவகையோடு விபரங்களைக் கூறிக்கொண்டே வந்தான் சங்கர். ராமலிங்கம் அந்தச் சான்றிதழை இவனிடம் திருப்பிக் கொடுக்காமல் வேறு நடவடிக்கை எடுத்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை பற்றியே கூறிக்கொண்டே வந்தவன் விரைவிலேயே பணி ஆணை வீட்டுக்கு வருமென்பதையும் கூறினான். எப்போதும் உற்சாகமாக பேசிக்கொண்டே வரும் பீட்டர் எதுவுமே கூறாமல் வந்தான். விரைவாகச் செல்ல வேண்டிய நேரத்திலும் நிதானமாக வண்டியை ஓட்டும் பீட்டர் இப்போது மிகவேகமாக ஓட்டினான். சாலையில் மெதுவாகக் குறுக்கிட்ட இருவரின் குடும்பத்தினரை வைதான். பீட்டரின் தோளைப் பிடித்திருந்த கரங்களில் வண்டி அதிர்வது போல அவன் உடல் அதிர்வதை சங்கர் உணர்ந்தாலும் அதை உள்ளத்திற்கு கொண்டு செல்லவில்லை. வீட்டின் முன் வண்டி நின்றவுடன் இறங்கி வீட்டிற்குள் நுழைய ஆரம்பித்த சங்கர் வண்டி நகரும் ஓசையை கேட்டவுடன் தான் எப்போதும் வீட்டிற்குள் வரும் பீட்டர் இன்று உள்ளே வராமல் கிளம்புவதைக் கண்டான். பக்கவாட்டில் தெரிந்த அவன் முகத்தை ஒரு கணம்தான் கண்டான். அம்முகம் இதுவரை இவன் கண்டிராத வகையில் பெருகி நிறைந்து பீறிட முயலும் நீரைத்தடுத்துக் கொண்டிருக்கும் மதகைப் போல கொந்தளிக்கும் உணர்வுகளை அடக்கிக் கொண்டு மிக இறுக்கமானதாக இருந்தது. அவன் உள்ளத்தைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்பதும் அறிந்து கொள்ள இதுவரை தான் முயன்றதில்லை என்பதும் இப்போதுதான் உறைத்தது. போலிச் சான்றிதழ் கொடுக்க முயற்சித்ததில் சிக்கியிருந்தால் நடந்திருக்கக் கூடிய பின்விளைவுகளைப் பற்றி எண்ணி கலங்கியிருப்பானோ.. பணி தொடர்பாக ஏதேனும் நெருக்கடியாக இருக்குமோ.. இவன் அதற்கெல்லாம் கலங்குகிற ஆளாகத் தெரியவில்லையே… என்ற எண்ணங்களுடன் உள்ளே நுழையும் போது வளையின் துளையில் கரும்புள்ளியெனத் தெரியும் பெருச்சாளியின் மூக்கு நுனி போன்ற எதையோ உணர்ந்து ஆழுள்ளம் திடுக்கிட்டது.

வண்டியின் ஓசை கேட்டு வெளியே வந்து “ஏன் பீட்டர் உள்ளே வராமல் போகிறான்” என்று கேட்ட அப்பாவின் கைகளில் “இந்தியா போட்டோ ஸ்டூடியோ” கவரும் நன்னடத்தை சான்றிதழும் இருந்ததை கவனித்தபடியே “உள்ளே அனல் அதிகமாயிருக்கு.. அது தணிஞ்சாதான் அவன் இந்தப் பக்கம் வருவான்” என்று கூறிவிட்டு சங்கர் உள்ளே சென்றான். சூரியன் சாய்ந்திறங்கிக் கொண்டிருக்கும் வானத்தை புரியாமல் சில கணங்கள் நோக்கியபின் வீட்டை நோக்கித் திரும்பினார் அப்பா.

***

கா. சிவா – தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் இவரது “விரிசல்” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்: sivaangammal1983@gmail.com

தெய்வங்கள்

0

நந்தகுமார்

னக்கு தெரிகிறதா, அது போதி சத்வன் தான்.

ஆனால் மழு இல்லை. மலரும் இல்லை. வெறுமனே அமர்ந்திருக்கிறான். அபய ஹஸ்தம் கூட இல்லை. அவன் இளைஞனாகவும் ஆகியிருக்கவில்லை. பாலகன் தான். ஆனால் பால்யம் தாண்டிய பருவம் அவனது உடலில் தெரிகிறது. அங்கு உள்ளது போலவுமில்லை. மிகப்பெரிய ஒரு ஒற்றை மனிதனின் முழு உருவத்தை வடித்திருக்கிறார்கள்.

சாஸ்தாக்கள் பெரும்பாலும் காவுகளில் தான் இருக்க வாய்ப்புண்டு. இந்த இடமும் ஒருகாவுதான். ஆனால் தரைக்கு மேலே உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் வழிப்பாதையில் தான் பழையாறு சென்றிருக்கக்கூடும். தடிமாடன் இதற்கு புறத்தே தான் இருக்கிறான். இதன் பழைய உருவத்தை நீ கண்டிருக்கிறாயா?

ஆம். இவன் மிக புதுப்பிக்கப்பட்ட உருவம் போல இருக்கிறான். பழைய உருவம் அந்த பொந்தந்தடியைத் தூக்கிக்கொண்டு நிற்கும் உருவமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வெறியாட்டு இங்கு நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

ஏன் எனக்கு இன்னும் புரியவில்லை.

எதைக்கொண்டு சொல்கிறாய் இது பழைய உருவம் இல்லை என்று?

நீ இங்கு மண்டல பூஜையன்று கற்பூர ஆழி பார்க்க வரவேண்டும். திரும்ப அந்த தெய்வங்கள் உருப்பெறும் நிகழ்வு அது. ஆம். அந்த பழங்குடித்தன்மை மீளும்பொழுது அங்கு நீ இருக்க வேண்டும். வருடாவருடம் கார்த்திகை மாத முடிவில் இங்கு இருக்கும் தெய்வங்களுக்குச் சம்மந்தமற்றவர்கள் அங்கு வருகை தருவார்கள். நடுவில் எரியும் ஆழி, வான் நோக்கி நா தழலும் நெருப்பினுள் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அந்தத் தெய்வங்கள் பாதாளங்களிலிருந்து முளைத்தெழுவதைப் பார்க்கும் பொழுதுதான் எனக்குத் தோன்றியது. இந்த போதிசத்வன் மிகப் பிந்தையவன். இதனுள் காத்துக் கொண்டிருப்பது ஒரு பழைய முளை. அது இருளைப் போல இங்கும் அங்குமாய் முளைத்துக் கொண்டிருப்பது. சில நேரங்களில் அவர்கள் இந்தக் கட்டுக்களின்றி ஒட்டுமொத்தமாக அந்த ஆழியினை சுற்றி உருவெடுப்பார்கள். வெடித்துச் சிதறுவதைப் போல அதனுள்ளிருந்து வெளிவரும் வெவ்வேறு உடல்களையும் தாளங்களையும் நீ காண வேண்டும்.

முக்கியமாக இந்த நாகர் சிலைகளை நாம் எந்தக் காவிலும் காண முடியும். எப்பொழுதும் ஒரு அரசைச் சுற்றி நாகர்கள் இருக்கும். இங்கும் அங்குமாய் கருப்பனும் கருப்பியும், பின்னால் புலமாடன், புல்லுவத்தி. முக்கியமாய் இந்தச் சிலையைப் பார். இது பிரம்ம ராட்சசன். இவனையும் இங்கு அமர்த்தியிருக்கிறார்கள்.

முன்னால் பார்த்தாயென்றால் பலி பீடத்தில் நாள்பட்ட ஊன் பலியின் வாடையை இப்பொழுதும் என்னால் உணர முடிகிறது. இவன் ஒரு பழங்குடித் தெய்வம். இந்த சாஸ்தாவினுடைய பழைய சிலையை நான் பாராத வரை இதை நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அவன் அமர்ந்த நிலையிலிருக்கும் ஒரு பேருரு. போர்க்கண்களுடன் ரத்த வெறியுடன் வெறுமனே அமர்ந்திருக்கும் ஒரு ஆண். போதி சத்வனாக இவன் ஆகிய பொழுது எப்படி இருந்திருக்கும்.

ஊனற்ற தெய்வங்களிடம் இறைஞ்ச என்ன எஞ்சியிருக்கிறது. மாடன்களும் மாடத்திகளும் ஒவ்வொரு முடுக்குகளிலும் முக்குகளிலும் அமர்ந்திருந்து எல்லை பரப்பிய வனமாகத்தான் இது இருந்தது. நீ இறச்சகுளத்தில் எருக்கலங்கொண்ட சாஸ்தா கோவிலுக்குச் சென்றிருக்கிறாயா?

அங்கு பெரிய பூதத்தான் சிலை உண்டு. பொம்மை போல ஆக்கி விட்டார்கள் இப்பொழுது. அது அல்ல நான் சொல்ல வந்தது. இரு. என் மொபைலில் அந்த இமேஜ் உண்டு. இங்கு பார் இதன் மேலே இருக்கும் இந்த தேவதைச் சிலைகளைப் பார். நீ இதை எங்கோ கண்டிருக்கிறாயா?

ஏதோ சமண மலைக்குன்றில் இது போல ஒரு ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன். சித்தன்ன வாசல் ஓவியங்களில் இதேபோல ஒரு ஓவியம் மலரைப் பறிப்பது போல. அட அதேதான். இங்கு இருக்கும் போதி சத்வனின் உருவம் இதுதான். வெறிக்கண்களுடனும், தடியுடனும் நின்றிருக்கும் பேருரு. பரி வேட்டையில் நம்பிரான் விளையாட்டில் இதேபோல இங்கிருக்கும் சத்வ தெய்வம் உக்கிரமெடுப்பதைக் காணலாம்.

பெரும்பாலும் இவன் எல்லை தெய்வம் தான். அய்யனாரும் சாஸ்தாவும் ஒன்றுதான் என்று கூட சொல்வதுண்டு. ஆனால் மெல்லிய வேறுபாடு தோன்றும். இங்கிருக்கும் பாலகனைக் காணும் பொழுதெல்லாம் தோன்றுவது அது.

இவர்கள் கணத்திற்கு கணம் உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள், சாஸ்தாக்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கருப்பன் ஏன் சாஸ்தாவிற்கு காவல் தெய்வமாகிறான் என்று தோன்றியது. இவர்கள் ஆடிபிம்பம் போல. இருமைகளின் இரு கண்ணிகள். ஒன்றின் உக்கிரம் இன்னொன்றில் சாந்தமாக்கப்படுகிறதா?

ஒன்றின் பிரம்மச்சரியம் இன்னொன்றில் கட்டற்ற காமமாக உருமாறுகிறதா?

பூதத்தான் என்று சொல்லப்படும் இந்த தெய்வத்தின் சிலையைப் பார். பூதங்களின் அதிபதி. இவர்கள் எல்லாமே நம் மூதாதை வெறிகொண்டு ஆடிய நிலத்தினுள் அமிழ்ந்திருப்பது போல ஒரு மயக்கு எனக்கு தோன்றுவதுண்டு. கனவுலகங்களில் மட்டுமே சாத்தியப்படும் நிகழ். நானும் இவர்களை மூன்று சீட்டுக்காரன் போல மாற்றி மாற்றிப் போட்டு விளையாடிப் பார்க்கிறேனோ என்று தான் இப்பொழுது நினைக்கிறேன்.

இவர்கள் நம்முன் வந்தமர்ந்திருப்பது எதற்காக?

ஆராட்டு நிகழ்வில் லெட்சுமண சித்தப்பா திடீரெனக் கீழே பதுங்கி முட்டிக்கொண்டே இருந்தார். நெற்றியிலிருந்து வழிந்து கொண்டே இருந்தது குருதி. அதற்கு நேர் எதிரே இரு தெருக்கள் தள்ளி இருக்கிறது பன்றி மாடன் கோவில். நையாண்டி மேளம் முழங்கத் தொடங்கியதும் வேறொன்றாக, உண்மையில் ஒரு பன்றியைப் போலவே அவர் இருந்தார். பன்றியை நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம் என்றேன் நான். அந்த மூர்க்கம் நிறைந்த கண்கள் சந்தனக் காப்பிட்ட பின்பும் அதே உக்கிரத்துடன் அருள் பாலித்துக் கொண்டிருந்தது.

தெரியவில்லை. இதனை அறிய என்ணியது. இப்பொழுது பெரிய தவறாக விட்டது. மிகப் பெரிய சுழலினுள் திரும்பத் திரும்ப அகப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல இருக்கிறது.

முன்னால் நாம் வெளிக்கிருக்கச் செல்லும் இடம் தெரியுமல்லாவா உனக்கு. அங்கு ஒரு இசக்கி உண்டு. வெறும் மொண்ணையான கல்லிற்கு மஞ்சளைத் தடவி பாவாடை உடுத்தியிருப்பார்கள். நம் தெருவில் வீற்றிருக்கும் சந்தன மாரிக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம். காலம் காலமாய் நம் குற்ற உனர்விலிருந்து பெருகியவைதான் இந்த பெண் தெய்வங்கள் என்று தோன்றியதுண்டு. அதே நேரம் நம்மால் கணிக்க முடியாததை, அப்பாற்பட்ட ஒன்றை ஒரு தெய்வமாக நாம் மாற்றிக்கொள்ளும் பொழுது உருவாகும் ஆசுவாசம் இருக்கிறதே.

அவர்களுக்கான நாளில் அவர்களாகவே மாறுதல் மூலமாய் நாம் நிகழ்த்துவதும் அதைத்தானே. மிகப்பெரிய கடந்த காலத்தினுள்ளிருந்து வெளிவரும் ஒன்றை மெல்ல அணைத்துக் கொள்ளுதல். எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அதற்குள் நம்மை சரணிடுதல். அதன் மூலமாக அந்த காலத்தினுள் நாமும் வாழ்ந்து விடுதல். சிக்கலான கண்ணிகள் கோர்க்கப்பட்ட அந்த சங்கிலிகளின் அரண்கள் உடைபடும் பொழுது முழுக்க முழுக்க தெய்வமாக உருமாறி விடும் ஒரு அதிமனிதனை நான் பார்க்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. சாத்தியப்பட்ட வழிமுறை என்ன என்று யோசிக்கிறேன். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அதற்குண்டான இசையும், பாடு முறையும், கதையாடலும், சொல்லாடலும், விளித்தலும் உண்டு. அதுவும் அந்தந்த காலத்தில் மட்டுமே நிகழ்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்று நம்புகிறேன்.

அதுவரை நம்பியிருக்காத ஒன்று எனக்கே நிகழும் பொழுதுதான் அதை நான் அறியவே முடியாது என்பதை உணர்ந்தேன். விடுமாடன் கொடை நிகழ்வில் எனக்கு சாமி வந்தது என்றார்கள். எனக்கு அது நிகழந்ததா. உச்சபட்ச முறுக்கேறுதலில் அந்த இசை, தப்பட்டையும் நாதஸ்வரமும் இணைந்து முயங்கிய நொடியில் அவனது கதைப்பாடலும் ஒலிக்க, எங்கோ ஒரு முக்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த என்னுள் அது நிகழ்ந்தது என்றார்கள். என்னால் இதனை மறுதலிக்கவே முடியவில்லை. அதுவரை அது ஒரு நாடகீயம், வெறுமனே ஒரு கதை நிகழ்வு அவ்வளவே தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது அது எனக்கு நிகழ்ந்தது.

நான் எல்லாவற்றையும் தவிர்க்க ஆரம்பித்தேன். இரவை இன்னும் இன்னும் தள்ளிப்போட்டேன். அந்த நாட்களை போதையில் முழுக்க நிரப்பி மூர்ச்சையுற்ற்றுக் கிடந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது தேடி வந்து கொண்டிருந்தது. ஒரு இணை உடல் போல என்னுடனேயே அது எப்பொழுதும் வாழ்ந்தது. இது ஒரு மனச்சிதைவு என்பது போலவே நானும் நினைத்தேன். நான் இசை கேட்பதையே முற்றிலுமாகத் தவிர்த்தேன். எந்த ஓசையும் நேரடியாக இன்றி மிகமிக மட்டுப்படுத்த முடியுமா என்று முயன்றேன். ஆனால் அவ்வளவு சாதாரணமாக இரவுகளை என்னால் கடக்க இயலவில்லை.

அதனால் ஒவ்வொன்றையும் மிக மிக நுணுக்கமாய் ஆராய ஆரம்பித்தேன். எல்லா தெய்வங்களுக்கும் உள் இருக்கும் பழங்குடி உருவம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியது. அதன் ஆதிரூபம் அத்தனை எளிதாக எங்கும் அழிந்து விடவில்லை.

செம்பட்டை நிறம் தீற்றலாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அறையின் நிசப்தத்தினுள்ளிருந்து மெல்ல மெல்ல அதனை நான் சந்தித்தேன். கண் பொருத்திக் கொண்டிருந்தனர். தீவட்டமாய் சுழலத் தொடங்கியது அறை. வேண்டாம் வேண்டாம் எனக்குள் எழுந்த பிதற்றல் தொண்டைக்குழியினுள் அடைப்பட்ட ஓலமாய் சிக்கிக்கொண்டு திமிறியது. பின் மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். திரட்சியான சிலந்தி வலையினுள்ளிருந்து எட்டிப்பார்த்தன அந்தக் கண்கள். உள்ளிருந்து குதிதெழுந்தான் மாடன். களப மணம் கலந்த வியர்வை நெடி.

நீ முகமூடி படம் பார்த்திருக்கிறாயா? உருமாறிக் கொண்டே இருக்கும் மனித மனத்தின் அலையெழும்பும் மேன்புள்ளியின் கிறுக்குத்தனம் பிடித்த இயல்புகளை உட்கிரகித்துக் கொண்டு அவன் உருவாக்கும் உலகம். இதுவும் அது போலத்தானா? தெரியவில்லை. கண் பொருத்தியவுடன் என்ன நிகழ்கிறது. ஒவ்வொரு முறையும் கொடையில் சாமி புகும் நொடிப்பொழுதில் அதிர்வுகளுடன் உருவாகும் திமிறல். அது சாமி என்கிறாய். அப்படியில்லை ஆழ்மனது முடிச்சிடும் தொலைதூர நீள்வட்டம். அது சுற்றிச்சுழன்று கொண்டிருக்கும் பிரதிகளின் பிரபஞ்சம் போல அந்தர வெளியில் மிதந்து கொண்டிருக்கும் நாத அலைகளின் வீரியம் கூடக்கூட ஒரு செல்போன் இணைந்து கொள்வது போலவே மனித மனமும் எங்கிருந்தோ இணையும் ஒன்று. நாம் இங்கு இந்த உலகத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இதே போலவே ஒரு இணை உலகம். இங்கு இதோ வீற்றிருக்கும் இந்த கோட்டை மாடனை நீ பார். பழையாற்றின் கரையில் தன்னந்தனியே இருக்கும் இந்த மண் பீடம். இது ஒரு விளைநிலக் கடவுள். மாடன்கள் மாட்டுடன் சம்மந்தப்பட்டவர்களா? மாடுகளை தெய்வமாக வணங்குகிறோமா. சாத்தியமில்லை, இவர்கள் ஊன் தெய்வங்கள். கொலை தெய்வங்கள். கொலைகளின் பொருட்டோ, வீரத்தின் பொருட்டோ, வன்மத்தின் பொருட்டோ, தீராப் பகையினிலிருந்தோ இவர்கள் வீதிகளெங்கும் முண்டுகளாய் முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை இப்பொழுது அருள் பொருந்திய, முக்கியமாய் சைவத்துடன் இணைத்துக் கொண்டிருக்கிறோம். கும்பாபிஷேகம் செய்கிறோம். அவர்களுக்கான திட்டமிடல்களில் எதுவோ ஒன்று அவிழ்ந்து அப்பால் சென்று அனுதினமும் காத்துக் கொண்டிருக்கிறது. வெறுமனே இவர்கள் இங்கு அமர்த்தப்பட்டிருக்கவில்லை. பின்னால் கழற்ற கழற்ற வெவ்வேறு முகங்களை நாம் காண இயலும். ஆனால் அதை வைத்து நீ எதை நிரூபிக்கப் போகிறாய். உனக்குள் உருவாகும் ஒன்றிலிருந்து நீ தொடங்கிப் பார். அது எதனுள் சென்று சேர்கிறது என்று. அதற்கு உனக்கு வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் கங்கணம் பொருத்தியவுடன், வேஷங்கள் இட்டவுடன் கணப்பொழுதேனும் இவர்களுள் சென்று காலம் அறுபடும் நொடியில் சட்டென்று அந்த அலையெழும்பும் மேற்புள்ளியில் உராசிக் கொள்ளும் அதிர்வுகளின் பெருக்கத்தை நான் உணரும்போது, என்முன்னே இங்கு நின்று கொண்டிருக்கும் அத்தனை திரளும் ஊன்களாக மட்டுமே என்னால் பாவிக்க முடிகிறது. கொடும் பசியினிலிருந்து மட்டுமே இந்த பாதாளங்கள் திறந்து விடப்படுகிறது. என்றோ ஏதோ ஒரு மூதாதை தனக்குள் உருக்கிக் கொண்டிருந்த சிதலிலிருந்து முளைந்தெழும் பல்லாயிரம் அரவங்கள் பெருகிக்கொண்டே இருப்பது போல.

அரவு நீள் சடையான். இது சோழற்கால தெய்வம். ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழைய லிங்கம். மண்டை சற்று உடைந்து போன குறி. அரவுகள் நீண்ட முடிக்கற்றைகளால் ஆனது இவனது காமம். நகரின் மையத்தில் காமத்தை உறைய வைத்தல் என்பது எப்படிச் சாத்தியமானது. இதனைச் சுற்றி இவனது பரிவாரங்களும் பூதங்களும் அமைகின்றன. கொம்மண்டை அம்மைக்கு இவன் நிவர்த்தம் செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. கோமந்தை இருந்த இடத்தில் இருத்தப்பட்ட தாய் தெய்வம் இவள். தன் முலைப்பாலினால் பசி போக்கிய தாய் தெய்வம்.

நீ எல்லாவற்றையும் குலைத்துப்பார்க்க விரும்புகிறாயா? இல்லை உனக்குள் நிகழும் அந்த ஆதி விளியை அறிய முற்படுகிறாயா?

சத்தியமாய் நான் ஒரு குழப்பத்திலிருக்கிறேன். என்னவென்றால் சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாக உருமாறியதா? இல்லை அவை தனிப்பட்ட தெய்வங்களா. ஒரு மலை அரசன் குமரனாக, முருகனாக உருமாறி பெருந்தெய்வப் பட்டியலில் அமர்வது போல. ஒரு கழுமாடன் ஏன் போய் அமைய முடியவில்லை. உண்மையில் இதுமட்டும் எனது தேடல் அல்ல. இது போலவே இந்த வெறியாட்டு ஏன் பெருந்தெய்வங்களிடம் இல்லை. அங்கு எல்லா சாந்தப்படுத்தலும் சத்வமாய் மட்டும் ஏன் இருக்க வேண்டும். ஒரு உக்கிரம் அங்கு ஏன் அமையவில்லை. அதே நேரம் இந்த தெய்வங்களேல்லாம் போர்த் தெய்வங்காவே இருக்கின்றன. ஆயுதங்களுடன் போர் வெறியுடனும் சாந்த முகத்துடனும் அருள் பாலிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

ஒரு தொலைதூரச் சங்கிலியில் ஆழம் காண இயலா திசை தூரம் கொளுத்தியிருப்பதைப் போல உணர்கிறேன். சில நேரங்களில் என் அருகிலேயே மிக நெருக்கமாய் என்னுள் இணைந்து விட முயலும், அலைக் கழிக்க விரும்பும் ஒன்றினைப் போலவும். நான் செல்லச் செல்ல அடைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உண்மையில் விடை தேவையில்லாத ஒன்றிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அது எனக்கும் தெரிகிறது. ஆனால் நான் நினைத்தது வேறு. நான் நிரூபணம் தேடிக் கொண்டிருக்கிறேன். பிண வாடையினுள் மோந்திக் கொண்டிருக்கும் சுடலையை நான் கண்டறிய முடியும் என்று இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறேன். அதற்கான சாத்தியங்களை நானே உருவாக்க முற்படுகிறேன். அவன் அங்கு நிச்சயமாய் இருக்க வேண்டும். இல்லையேல் இங்கு இந்தப் பீடம் இருப்பதன் அர்த்தம் என்ன. சூட்சும உடல்களினால் அவனை நான் அறிந்து கொள்வேன். அவனது கச்சையும், கண்களையும் அணிந்து கொள்ளும் ஒருவன் மூலம் அத்தனை வீரியத்துடன் அவனது உலகம் இங்கு இணைக்கப்படும் என்பதை நான் சந்தேகமின்றி சிலநேரம் நம்பி விடுகிறேன். ஆனால சிறு பிசகல் போதும் நான் பின்வாங்கி விடுகிறேன். பின் எல்லாமே வெறும் நம்பிக்கைதான் என்று சொல்லிக் கொண்டு கேலி செய்ய முனைகிறேன். இரு சாத்தியமான உச்ச நிலைகளுக்குள் மட்டும் என்னை தள்ளிக்கொண்டே இருக்கும் இந்த தெய்வங்களை நான் உண்மையில் வெறுக்கிறேன். அவர்களின் சிலைகளின் பாங்கில் அதில் உருப்பெறும் அந்தக் குறியீடு அதனுள்ளிருந்து நோக்கிக் கொண்டிருக்கும் அந்த முகத்தினை மெல்ல மெல்ல உரித்துக் கொண்டே இருத்தல் மட்டுமே எனக்கிட்ட பணி போல எண்ணிக் கொண்டு அணுகிப் பார்க்கிறேன். அப்படி செல்கையில், அதனுள்ளிருந்து என்னுள் இணைந்து கொள்ளும் ஒன்று அதனை என்னால் எங்கும் எதனுள்ளும் நிரூபிக்கவோ விளக்கவோ இல்லை அறிந்து கொள்ளவோ முடியாமல் காலத்திலிருந்து கழன்று எங்கோ ஒரு பிலத்தில் விழுந்து விடுகிறேன். அதை மிக சந்தோசமாக அனுபவிக்கவும் முடிகிறது என்பதை பின் தான் அறிந்து கொண்டேன். போதை வஸ்துக்களைப் போல திரும்பத் திரும்ப அது என்னை அழைக்கிறது.

மலைகளின் அசைவின்மையிலிருந்து பிரிந்து முயங்கிக் கொண்டிருந்தது இருளும் ஒளியும். வானம் மேற்கூரையற்று அந்தரத்தில் அலைந்து கொண்டிருந்த முகில்களினுள்ளிருந்து உற்று நோக்கியது. தெளிவாகவே கனவுகளுக்குள் இருப்பதும் வெளியில் இருப்பதும் ஒன்று போலவே உருவாகியிருந்தது. ஒளியின் சிறுதுண்டு ஒரு கூரிய ஆயுதம் போல என்னச்சுற்றி படம் எடுக்கத் தொடங்கியது. மெல்ல காலடிகள் எடுத்து வைத்து அதனுள் நுழைந்தேன்.

கேட்பாரற்றுக் குப்புறக் கிடந்த வங்கார மாடன் அருகில் முளைத்திருந்தது ஆல் செடி. பின்னால் களத்தில் முட்செடிகளும், புற்களுமாய் பச்சை விரித்திருந்தது. அப்பால் பழையாறு சாக்கடை நாற்றத்துடன் முனகியது. படித்துறையில் தன்னந்தனியே அமர்த்தி வைக்கப்பட்டிருந்த கிடைக்கல்லில் மஞ்சனை சாத்திய ரத்தச்சாந்தின் எச்சம், இடுப்பில் இருத்திய பாவாடையிலிருந்து வழிந்து சதுப்பாகியிருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் நாகப்படங்கள். ராட்சச விலங்கு போல சடை விரித்த கருங்கூந்தல் போல கிளை பரப்பிய அரசின் கீழ் உள்ள பலி பீடத்தில் தான் நான் அமர்ந்திருந்தேன்.

கழுத்து நரம்பில் எந்த நரம்பில் உயிர் நாடி துடிக்கிறது. மெல்ல மெல்ல ஆட்டின் கழுத்திலிருந்து பீய்ச்சும் ரத்தத்தை வாய்க்குள் வைத்து அகட்டி சப்பிக் கொண்டிருந்தான் சுடலை. மூன்றாவது ஆட்டின் பச்சை ரத்தத்தை மனிதன் முழுவதுமாய் குடிக்க வாய்ப்புண்டா. இது சுடலை. சுடலையே தான். பந்த ஒளியினுள்ளிருந்து துளிர்த்தெழும் குருதியின் வீச்சம் சூழலெங்கும் பரவத் தொடங்கியது. அறைக்குள்ளிருந்தேன். மூலைகளில் துடித்துக்கொண்டிருந்தது உயிர் நாடி. குமிழிக்குள்ளிருந்து பீறிட்டது குருதி வெள்ளம்.

மரணத்தின் மூலமே கடவுளை அறிதல் என்பதிலிருந்தே இவர்கள் உயிர்தெழுந்தார்கள். நானும் இவர்களுடன் அதன் பொருட்டே உழன்று கொண்டிருக்கிறேன். வேறு வேறு தருணங்களிலிருந்து நான் உருவாக்கிய கனவு வெளியில் காலம் என்ற ஒன்றை இல்லாமலாக்குவதன் மூலமாய் உருவாக்கும் நித்தியத்துவத்தில் மரணம் என்ற ஒன்று எண்ணற்ற போர்வைகளால் பொதியப்பட்ட வெற்று மூட்டை போல காட்சியளிக்கிறது. உரிக்க உரிக்க ஏதுமற்றதுதான் அது என்று சொல்லிக் கொள்ளும் பொழுதே மரணம் இறுக்கத் தொடங்குகிறது. நொடி நேர பதற்றம், இல்லை விலக்கம் இல்லையேல் நெருங்கிப் பற்றிக் கொள்கிறேன். ஆனால் அங்கு நான் யார்?

நான்
எண்ணற்ற ஒன்றுகளின் ஒற்றைப் பிணைப்பு
எண்ணற்ற நிகழ்த்துகைகளின் ஒற்றை எரி
எண்ணற்ற காலங்களின் ஒற்றைக் கனா
எண்ணற்ற விளிகளின் ஒற்றை அழுகுரல்
எண்ணற்ற காலப்பெருவெளியில் ஒற்றை விசும்பு

என்னுள்ளிருந்தே உன்னை உரிக்கிறேன். என்னைப் பலியாக்கும் வரை.

***


நந்தகுமார்
Nantha65@gmail.com

டெல்டா ஊதாரி – 3

0

கொரோனா வார்டில் சொல்லப்பட்ட கதை

சிவகுமார் முத்தய்யா

கொரோனா வந்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடியவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தடுப்பு ஊசிகள், மாற்று மருந்துகள் என அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தற்போதும் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். தொற்று நோய் குறித்த பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் ஒரு பக்கம் அச்சத்தையும் மறுபக்கம் பயமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மருத்துவ உலகம் சற்று சலிப்புடன் ஏற்றுக்கொள்ளவே செய்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த அந்த கடைசி ஞாயிற்றுக்கிழமை. தமிழகத்தைப் போல டெல்டாவில் கடும் வெய்யிலும் வறட்சியுமாக வீட்டுக்குள்ளே முடங்கி எல்லோரையும் போல நானும் இரவையும் பகலையும் போ…போவென சபித்து விரட்டிக் கொண்டிருந்தேன். அலைதலில் பற்று கொண்ட என்னால் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பது அவ்வளவு எளிதாக எனக்கு இருக்கவில்லை. தொற்று குறித்தான பயத்தால் எல்லோரும் போல் எனக்கும் மனக்குலைவு ஏற்பட்டிருந்தது.

இதற்கு தூபம் போடுவது போல ஊடகங்கள் கொரோனா குறித்த மரணங்களை அறிவித்து பயத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. இலக்கியம் படிக்கவும், பேசவுமான மனநிலையின்றி அலைந்து கொண்டிருந்தேன். இந்த நிலையில் அந்த நண்பரிடமிருந்து மன்னிக்கவும், படிம கவிஞர் நீலமேகத்திடம் இருந்து எனக்கு செல்போனில் அழைப்பு வந்தது.

இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கவிஞரின் குரல் கவியரங்கத்தில் கவிதை பாடும்போது ஏற்ற இறக்கம் கொண்டு ராகமாய் ஒலிப்பது போல செல்போனில் ஒலித்தது. என்னை அழைப்பதில் அவர் உறுதியாக இருந்தார். கவிஞரின் நச்சரிப்பு தங்காமல் அவரது இல்லத்துக்கு கிளம்ப முடிவெடுத்தேன். நான் புறப்படுவதற்குள் கவிஞர் தொடர்ந்து நாலைந்து தடவை போன் செய்துவிட்டார். வேறு வழியின்றி இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன்.

நான் பெரும்பாலான நேரங்களில் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன். இதுவும் கவிஞருக்கு நன்கு தெரியும். ஆனாலும் அது குறித்து என்னிடம் குறைப்பட்டு கொண்டதில்லை. இதனை தாண்டி என்மீது அவருக்கு ஒரு மதிப்பு இருக்கவே செய்தது. கவிஞருக்கு பொதுப்பணித்துறையில் உதவியாளர் பணி. பணியின் போது அவரது தந்தையார் இறக்க நேரிட்டதால் வாரிசு அடிப்படையில் இவருக்கு அரசு வேலை கிடைத்திருந்தது. எதற்காக அவரை நான் சந்திப்பதை பல நேரங்களில் தவிர்க்கிறேன என்றால் அவரது கவிதை செயல்பாடு மீது நான் கொண்ட அதிருப்தியால் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

அவரது கவிதை செயல்பாட்டின் தொல்லை தங்க முடியாமல்தான் தவிர்க்க தொடங்கியிருந்தேன். இதுவரை கவிஞர் தனது சொந்த ஊதியத்தின் மூலமாக ஐந்து கவிதை தொகுப்புகள் கொண்டு வந்து இருக்கிறார். மேலும் சில வார இதழ்களில் அவ்வப்போது கவிதைகளும் எழுதிவருகிறார்.
ஆனாலும் அதில் எதுவுமே என்னை கவரவில்லை. இதில் அவரது படைப்புகளை படித்த சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்.

நான் கவிஞருடன் வெட்டாற்றங்கரை எண்கண் பாலத்து மதகிலும் திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலம்பாள் மண்டபத்திலும் பல மணி நேரங்கள் அவரது கவிதையின் தரம், மற்றும் உத்திகள் பற்றி எடுத்துச் சொல்லியும் பார்த்துவிட்டேன். இதனைத் தவிர உள்ளூர் பிரமிள் தொடங்கி சிலி நாட்டு கவிஞன் பாப்லோ நெருதா வரை எத்தனையோ கவிஞர்களின் கவிதை புத்தங்களை வாசிக்க கொடுத்தும் எந்த மாற்றமும் நிகழவில்லை. அவர் ஊதிய சங்கை மீண்டும் மீண்டும் ஊதிகொண்டு இருந்தார். இதனால் நீலமேகத்திடம் கவிதைப் பற்றி பேசுவதையே முழுமையாக நிறுத்தியிருந்தேன். ஆனால் அவர் என்னை மட்டுமே அவர் கவிதைகள் குறித்து தடாலடி விமர்சனம் செய்ய அனுமதி அளித்திருந்தார். வேறு யார் அவரது கவிதைகள் குறித்து பேசினாலும் மனிதர் வம்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். சில நேரங்களில் இது கொலை மிரட்டல் வரைக்கும் கூட சென்றதுண்டு. இது ஒருபுறம் இருக்க, ஆண்டின் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அவரது திருமண மற்றும் பிறந்த நாட்களில் எனக்கு மட்டும் ‘தீர்த்தவாரி’ கொண்டாட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுப்பார். சரக்கு பார்ட்டிக்கு அவர் வைத்திருக்கும் ரகசிய பெயர் தான் ‘தீர்த்தவாரி’ ஆகும்.

அன்றைய அழைப்பும் அப்படியான ஒன்று தான். நீண்ட நாளைக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமனார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தீர்த்தவாரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த தனிமையை அனுபவிக்க வேண்டும் என்ற காத்திருப்பில் என்னை அழைத்திருப்பதாகச் சொன்னார். தனது “இருத்தலை” நீண்ட நாளைக்கு பிறகு இன்று முழுமையாக உணர்வதாகவும் பெருமிதமாகக் குறிப்பிட்டார். மாடி வீட்டின் பால்கனியில் அமர்ந்தேன்.

நாற்காலிகள் போடப்பட்டன. மேசையில் மது பாட்டில்கள் வைக்கப்பட்டன. ஊரடங்கின் போது கவிஞருக்கு மட்டும் எப்படி பாட்டில்கள் கிடைத்தன என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. ஊரடங்குக்கு முன்பாகவே கவிஞர் வாங்கி சேமித்து வைத்தவை. சேமிப்பு மற்றும் கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்ற விவகாரங்களில் கவிஞர் கறார்தன்மை கொண்டவர். தங்க நிறத்தில் மின்னும் திரவத்தை கண்ட நான் பெரும் பேறாக எண்ணி பரபரப்பாகிவிட்டிருந்தேன். மெல்லிய இருள் வரத்தொடங்கியிருந்த முதிர்ந்த மாலைப்பொழுதில் ’மது விளையாடலை’ தொடங்கினோம். தீர்த்தம் கோப்பைகளில் மினுங்க தொடங்கின. கவிஞரின் கண்கள் சிவக்கத் தொடங்கியதும் முதலில் மத்திய அரசு பற்றிய தனது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். கொரோனா நோய் தொற்று, சீனா நடத்தும் கிருமி போர் என்றார். எங்களின் உரையாடல் உள்ளூர் தொடங்கிய உலகம் வரை நீண்டு தொடர்ந்தது. அவரது உரத்த குரல் கணீரென்று ஒலித்தது. இரவாகியிருந்தன. வானில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. நீலமேகம் உற்சாகம் கொண்டவராக திடீரென்று எழுந்து போய் ஒரு காகித்தை எடுத்து வந்து வேகவேகமாக அதில் எழுதினார்.

நான் மூன்றாவது ரவுண்டில் இருந்தேன். சில மிடறுகளும் மணி காராபூந்தியும் சமமான அளவில் சுவைத்துக் கொண்டேயிருந்தேன். அவர் கவிதை எழுதி முடித்த கர்வத்தில் என்னைப் பார்த்தார். அவரது கண்கள் அங்குமிங்கும் அலை பாய்ந்தன. “தல இந்த கவிதையை மட்டும் கேளும்” என காதிதத்தைப் பார்த்து வாசிக்க தொடங்கினார். அதில் கொரோனா வைரஸ் கிருமியை தனது தீந்தமிழால் எரித்துச் சம்பலாக்கியிருந்தார். கடைசி வரியை இப்படி முடித்திருந்தார். “கொரோனாவே… உனக்கு ஒரு கொடுஞ்சாவு வராதா” என்று இதனைக் கேட்டதும் எனக்கு பெரும் சிரிப்பு வந்தது. மல்லுக்கட்டி அடக்கிக் கொண்டேன்.

நான் நான்காவது முறையாக எனது கோப்பையில் திரவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன். அவருக்குள் கவிதை பெருவெள்ளமாக ஊற்றெடுத்து விட்டது என்பதை அவர் உதிர்க்கும் வார்த்தைகளில் இருந்து உணர்ந்தேன். நானும் கவிபேரரசு தான் என்றார். அவரது சொற்களில் தீவிரத்தன்மை எனக்கு சிறிது பயத்தை உண்டாக்கியது. அவருடன் சேர்ந்து நான் தீர்த்தம் பருகி நூறு நாட்கள் மேல் ஆகியிருக்கும் என நினைத்தேன். இத்தனை நாட்கள் அவர் அறிந்த, அனுபவித்தவற்றை என்னிடம் சொல்லி தீர்க்கும் முனைப்பில் இருந்தார். இனிமேல் அவரிடமிருந்து தப்ப முடியாது என தோன்றிய கணத்தில், “நேரமாயிட்டு கிளம்புறேன்” என்றேன். “தோசை மாவு உள்ளது. தோசை வார்த்து குளிர்சாதன பெட்டியில் வெள்ளாட்டு கறி குழம்பு உள்ளது இருவரும் சாப்பிடலாம்” என்றார். நான் ஐந்தாவது கோப்பையை முடித்து விட்டு கிளம்புகிறேன் எனப் பிடிவாதமாக வெளியேறினேன்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் வீட்டில் இருந்து நான் இறங்கி வருவதை ஏமாற்றத்துடன் பார்த்தார். அப்போது நான் நிமிர்ந்து இருள் கொண்ட வானத்தைப் பார்த்தேன். மழை பெய்வதற்கான அறிகுறிகள் துலங்கின. எனது செல்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். சில நிமிடங்களிலேயே தூறல்கள் விழத்தொடங்கியிருந்தன. ஆனாலும் அந்த இதமான காற்று இருசக்கர வாகன பயணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு பார்லாங் தூரம் வந்திருப்பேன், மழை கொட்டத் தொடங்கியிருந்தன. தூறல் தான் விழும் என்ற என் கணிப்பு பொய்யாகியிருந்தது. பின்வாங்காது நிறைந்த போதையில் குளிர்ந்த காற்றும் மழையோடும் தொப்பலாக நனைந்துபடி வீடு வந்து சேர்ந்திருந்தேன்.

அதன் பிறகு என்ன நடந்தது என எதுவும் நினைவில்லை. காலை எட்டு மணிக்கு எழுந்துப் பார்த்தேன். தலை கனத்து போயிருந்தது. மூக்கு அடைத்து மூச்சு விட சிரமமாக இருந்தது. மனைவியை அழைத்து ‘டீ’ கேட்டேன். பாக்கெட் பால் முறிந்து விட்டது என்றாள். வெளியே வந்தேன். இரவு பெய்ந்த மழையின் சுவடு இன்றி வெக்கலித்திருந்த காலைப்பொழுதில் தெருவின் முக்கில் இருந்த டீக்கடைக்கு வந்து டீ கேட்டேன். ஊரடங்கையும் மீறி கிராமத்து டீக்கடை ஒன்று இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆட்கள் அதிகமில்லை. இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எனக்கு நான்கு தும்மல்கள் வரிசையாக எழுந்தன. டீக்கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். கிளாஸ்சை வாயில் வைத்தபோது மெல்ல அமட்டியது. சற்று தூரம் போய் இரண்டு முறை காறி உழிழ்தேன். டீயைக் குடித்ததும். காலை கடனுக்கான மணி வயிற்றுக்குள் அடித்தது.

வீட்டுக்கு வந்து ஒரு அரைமணி நேரம் கூட ஆகியிருக்காது. வீ ட்டு வாசலில் இரண்டு பேர் நின்று உள்ளே பார்த்து, “சார்” என குரலிட்டனர். நான் வெளியே வந்து என்ன? என்று கேட்டேன். “சார்.. நீங்கள் தும்மியதாகவும் இருமி துப்பியதாகவும் போன் வந்தது” என்றனர். “யார் சொன்னது நீங்கள் யார்” “நாங்கள் சுகாதாரத்துறை சார். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்கள்.

நான் அவர்களிடம் “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நைட் சரக்கு கொஞ்சம் ஓவர். அதோடு மழையில வேற நனைஞ்சுட்டேன்” என்றேன். அவர்கள், “கடை தான் இல்லியே.. சரக்கு உங்களுக்கு எப்படி கிடைச்சது” என்றார்கள். அதனை கேட்டு கடுப்படைந்த நான் “அதைப் பற்றி விசாரிக்க நீங்கள் யார்?” எனக் கேட்டு வாக்குவாதம் செய்யத் தொடங்கினேன். தெரு ஜனங்கள் கூடிவிட்டிருந்தனர். என் மனைவி நடப்பவற்றை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து டெஸ்ட் மட்டும் கொடுத்துவிட்டு வந்தால் போதும்” என்று கெஞ்சினார்கள். எனக்கு அணிந்து கொள்ள ‘’மாஸ்க்’ கொடுத்தார்கள்.

சில நிமிடங்களிலேயே அபாய ஒலியை எழுப்பியவாறு தெரு முக்கில் வந்து ஆம்புலன்ஸ் நின்றது. தெரு ஜனங்கள் என்னைப் போகச்சொல்லி வலியுறுத்தினார்கள். மனைவி அச்சத்துடன் என்னைப் பார்க்க, வேறு வழியின்றி ஏறி அமர்ந்தேன். எனது மகள் அழுகையுடன் நான் போவதைப் பார்த்தாள்.

நான் டீ குடித்த போதும் இரவு அருந்திய மதுவின் போதை கொஞ்சம் இருக்கவே செய்தது. மருத்துவமனையில் முகமுடியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்னை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது மீண்டும் தொடர் தும்மல் வந்தது. இதனைக் கண்டு அஞ்சிய அவர்கள் என்னை கொரோனா சந்தேக வார்டுக்கு கொண்டு செல்லுமாறு பணியாளிடம் தெரிவித்தனர். சில நிமிடங்களில் கொரோனா டெஸ்டும் எடுக்கப்பட்டது.

நான் மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்த வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இரண்டு பெண் செவிலியர்களும் நான்கு ஆண் பணியாளர்களும் அந்த வார்டில் இருந்தனர். அதில் இரண்டு பணியாளர்கள் கொரோனா நோயாளிகள் எவரும் தப்பிவிடமால் இருக்க காவலுக்கு இருந்தனர். 15 படுக்கைகள் போடப்பட்டிருந்தன. அதில் இரண்டு படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தது.

இடைவெளியுடன் போடப்பட்டிருந்த படுக்கையில் ஜன்னலோரமாக எனக்கு இடம் அளிக்கப்பட்டது. படுக்கையில் இருந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம் ஆண்களாகவே இருந்தனர். இவர்கள் டெல்லியில் நடந்த ஏதோ ஒரு மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் என்று சொன்னார்கள். எனக்கு அருகிலே படுக்கையில் இருந்த நடுத்தர வயதுக்கார மன்னார்குடி கோபால் என்னை பயம் கலந்த பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் செல்போனை எடுத்து இதே மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலைப் பார்க்கும் சித்தி மகன் கண்ணனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அவன் குரல் சற்று உள்ளடங்கிப் போயிருந்தது. மதியம் வந்து பார்ப்பதாக சொன்னான். ஆனாலும் எனக்கு அது தேவைப்பட்டது. கவிஞரை அழைத்தேன். அவர் உறக்கம் கலையாத கரகரப்பான குரலில் பேசினார்.” “நீங்கள் எழுந்த பிறகு போன் பண்ணுங்க” என்றேன். அவரிடம் தெளிவான பதில் இல்லை. படுக்கையில் சிறு போதையின் சோர்வில் குழப்பமான மனநிலையில் படுத்துவிட்டேன். நேரம் கடந்து கொண்டிருந்தது. எனக்கு வீட்டில் இருந்து சில உடைகளும் காபி பிளாஸ்க், தம்ளர். செல்போன் சர்ஜர், புத்தகங்கள் போன்றவையும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பணியாளர் ஒருவர் வந்து அந்த பேக்கை என்னை அழைத்துக் கொடுத்தார். அதில் முன்று நாவல்களும் மற்றும் காலம் – வரலாற்று சுருக்கம் என்ற ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய அறிவியல் புத்தகமும் இருந்தது. வாசித்தே பொழுதை கழிக்கலாம் என்று ஆறுதல் அடைந்து கொண்டிருந்தேன். அப்போது பணியாளர் ஒருவர் வந்து நீங்க கண்ணன் சார் அண்ணவா? என்றார். ஆமாம் என்று தலையாட்டினேன். “சரிண்ணே ஒன்னும் பிரச்சனையில்ல.. பயப்படாம இருங்க” என்றவன். என் பெயர் மூர்த்தி எப்போது வேண்டுமானலும் கூப்பிடுங்க என்று அவனது போன் நம்பரையும் கொடுத்தான். காலை ஆகாரம் ஒரு தட்டில் கொடுத்தார்கள் சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன். எனது வார்டில் இருந்தவர்களுக்கு இடைவிடாது போனில் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.

மல்லிகா செவிலியர் வார்டுக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் உரத்த குரலில் போனில் பேசிக்கொண்டிருந்தவர்கள். சற்று அடக்கி வாசித்தனர். நான் செல்போனில் முகநூல் பக்கங்களை பார்த்து கொண்டிருந்தேன். மல்லிகா நர்ஸ் அப்போது தான் பணிக்கு வந்திருந்தார். “யாரு இங்க நியூ அட்மிஷன்” என்றாள். மூன்றாவது படுக்கையில் இருந்த கொடிக்கபாளையம் சுலைமான் பாய் என்னைச் சுட்டிக்காட்டினார். நான் அவரைப் பார்த்தேன். எல்லோருக்குக்கும் சூடான நிலவேம்பு குடிநீர் கொடுத்தார். எனக்கும் கொடுத்தார். அவரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு. சில மாத்திரைகளும் வழங்கப்பட்டது. நான் எதனையும் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே படுத்து உறங்கிவிட்டிருந்தேன்.

மதியம் பணிரெண்டு மணியிருக்கும் கவிஞர் நீலமேகம் போன் பண்ணினார். நடவந்தவற்றை சுருக்கமாக சொன்னேன். செலவுக்கு கூகுள் பேவில் பணம் அனுப்புகிறேன் என்றார். “அது எல்லாம் வேண்டாம். “அது எவ்வளவு பாக்கி இருக்கு” என்றேன். சற்று யோசித்தவர்… ‘ஒன்னு இருக்கு அதுவும் ரம்’ என்று இழுத்தார். அவருக்கு ரம் பிடிக்காது குடிக்க மாட்டார். அதனால் அவரிடம் கொஞ்சும் தொனியில் எப்படியாவது அதை எடுத்து வந்து எனக்குத் தர முடியுமா என்று கேட்டேன். “எப்படி” என்றார். ஒரு பையில் வைத்து அதற்கு மேல் நாலைந்து புத்தகங்களை அடுக்கி வைத்து எடுத்து வாருங்கள் என்றேன். பதிலேதும் சொல்லாமல் போன் கட்டாகியது.

மதிய சாப்பாடு பறிமாறப்பட்டபோது சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் ரெண்டு பேருக்கு ‘பாசிட்டிவ்’ வந்திருந்தது. அவர்களை எங்களது வார்டில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் படுத்திருந்த படுக்கைகளை அப்புறப்படுத்தினார்கள். இரும்பு கட்டிலில்களில் கிருமிநாசினிகளை தெளித்தனர்.

கண்ணன் என்னை பார்க்க வந்திருந்தான். பாதுகாப்பு கவச உடையில் இருந்தான். செவிலியர்கள் மல்லிகா மற்றும் சிந்துஜா ஆகியோரிடம் என்னை “அண்ணன் ஒரு கதையாசிரியர்” என்று அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் ஒருமாதிரியாக என்னை பார்த்து சிரித்தார்கள். எதுவும் கேட்கவில்லை. வார்டில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் பெரியவர்கள் தங்களுக்கு கொரோனா வந்துவிடக் கூடாது என்று படுக்கையில் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்ட பிறகு எல்லோர் முகத்திலும் மரண பயம் கரைபுரண்டது. சிலர் தங்கள் உறவுகளிடம் இனி நான் உயிரோடு திரும்பிவர வாய்ப்பில்லை என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தனர். நான் அவர்களை பார்த்து கொண்டு மவுனமாக அமர்ந்திருந்தேன்.

இரவு 7 மணியிருக்கும் கவிஞர் அழைத்தார். பதட்டத்துடன் எடுத்தேன். “ஆஸ்பத்திரி வாசல்ல நிக்கிறேன்” என்றார். “அங்கேயே நில்லுங்கள் ஆள் அனுப்புகிறேன்” என்றேன். பணியாளர் மூர்த்தியை அழைத்து புத்தகபையோடு வாசலில் நண்பர் நிற்கிறார் என்றும் அவரிடமிருந்து அதனை வாங்கிவரச் சொன்னேன். சில நிமிடங்களிலே புத்தகப்பை வாங்கி வந்திருந்தான் பணியாளர். கவிஞருக்கு போன் செய்து நெஞ்சம் கனிந்த நன்றியை தெரிவித்தேன்.

7 மணிக்குள் இரவு சாப்பாடு வந்துவிடும் என்றார்கள். அதற்குள் 90 மில்லியாவது போட்டுவிட வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் இருந்தேன். அது லிட்டர் பாட்டில் வேறு. அதனை கவனமாக எடுக்க வேண்டும். இது என்னிடம் இருப்பது தெரிந்து போனால் உடனே பறிக்கப்படும். ட்ரஸ் மாற்றுவது போல் போக்கு காட்டி பேக்கில் பாட்டிலை எடுத்து வைத்துக்கொண்டே தண்ணீர் பாட்டிலோடு கழிவறைக்கு போனேன். வேறு வழியில்லை. தண்ணீரை பாதியளவு கீழே ஊற்றிவிட்டு அந்த ஒயிட் ராம்மை 200 மில்லி அளவுக்கு பாட்டிலில் கவனமாக ஊற்றினேன். சில நிமிடங்களில் வார்டின் படுக்கைக்கு வந்தேன். மார்க்வேஸ்சின் “தனிமையின் நூறாண்டுகள்” நாவலை எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு மிக நிதானமாகப் பருகத் தொடங்கினேன். சில நிமிடங்களிலேயே சப்பாத்தி மற்றும் இட்லியுடன் இரவு உணவு வந்தது.
அதனை சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தி கொண்டேன். வியர்க்கத் தொடங்கியது. எனக்குள் உற்சாகம் கரைபுரள தொடங்கியது.

கவலையுடன் படுக்கையில் இருப்பவர்களை பார்த்து பேசத்தொடங்கினேன். “இது ஒரு பெரிய நோயே இல்ல. நம்ம நாடு வெப்பமண்டல நாடு. இங்க எப்படிபட்ட வைரஸ் கிருமியா இருந்தாலும் ஒரு பத்து நாளக்கி கூட தாக்கு பிடிக்காது. நீங்க வேண்ணா பாருங்க பாய்” என்றேன் சுலைமானைப் பார்த்து. அப்போது அவர், “அரே அல்லா” என்று முணுமுணுத்தார். என் பேச்சு தொடர்ந்தது. படுக்கையில் அரை தூக்கம் மற்றும் கவலையில் இருந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள். எனது குரல் அவர்களை ஏதோ ஒருவகையில் பாதித்து இருக்கும் என்று எண்ணினேன். அப்போது பணியாளர் மூர்த்தி வெளி வரண்டாவில் இருந்து என்னைப் பார்த்தவன் அர்த்தத்துடன் புன்முறுவல் காட்டினான். ஒருவேளை புத்தகப்பையைப் பிரித்து சரக்கைப் பார்த்திருப்போனோ என்று எனக்கு தோன்றியது. எதுவானாலும் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

என் பேச்சை எல்லோரும் கேட்கத் தொடங்கினர். மல்லிகா செவிலியர் பக்கத்து அறையில் ஒய்வு எடுத்துகொண்டிருந்தார். அவரது ஜூனியர் சிந்துஜா மட்டுமே முகப்பில் அமர்ந்து கேஸ் விவரங்களை எழுதிக்கொண்டிருந்தாள். நான் படுக்கையில் அமர்ந்து எனது பக்கத்தில் இருந்த மன்னார்குடி கோபாலிடமும் நான் நாட்டு நடப்புகளை உரத்த குரலில் பேசினாலும் கொரோனாவைச் சுற்றியே வட்டமிட்டது பேச்சு. சரக்கு மிதமாக வேலை செய்யத் தொடங்கியிருந்து.

இது ஒரு நோயே இல்லை. இதனை வைத்து அரசு இயந்திரங்கள் மக்களை ஏமாற்றி மன நோயாளியாக ஆக்கி கொண்டிருக்கிறார்கள். யாரும் பயப்பட வேண்டாம் என்று நான் சொன்னபோது சிந்துஜா நர்ஸ் என்னை கேலியாகப் பார்ப்பது தெரிந்தது. சுலைமான் பாய் என்னைப் பார்த்து நீங்கள் புலவரா என்றார். அதற்கு மன்னார்குடி கோபால், “இல்லை பாய் கவிஞர்” என்றார். அதனை சுலைமான் பெரிதாக எடுத்துக் கொள்ளமால் “பரவாயில்ல நீங்க பேசுங்க” என்றார் அப்போது நான் “பாய் நீங்க வெளிநாட்டுக்கு போயிருக்கிங்களா” என்றேன். “என்ன இப்படி கேட்டிட்டிங்க புலவரே. இருவது வருஷம் மலேசியாவுல பரோட்டா கடை வெச்சிருந்தேன். இப்ப ரெண்டு வருஷமாத்தான் இங்க கொடிக்கால்பாளையத்துல இருக்கேன்” என்றார். நான் அவரை குடைய ஆரம்பித்து விட்டேன். அவரது ஒட்டல், வியாபரம், லாபம், நஷ்டம், பணியாளர்கள் என்று விலாவரியாகச் சொல்லத் தொடங்கிவிட்டார் பாய். எல்லோரும் அவரது பேச்சை ஆர்வமாக கேட்கத் தொடங்கிவிட்டனர்.

பாய்.. அங்க பொம்பள சமாச்சாரம் எப்படி என்று கேட்டபோது சற்று தயங்கினார். “அதை ஏன் புலவரே இந்த நேரத்துல கிளப்புறீங்க. அது ஒரு வாழ்க்கை. அதை மாதிரி இனி நெனைச்சாலும் வாழ முடியாது. இருபது வருஷம் என்பது எனக்கு எப்படி ஓடிச்சுன்னே தெரியில. இரவு பத்து மணிக்கு கடையை அடைச்சிட்டு பொம்பள சோக்குல கிளம்பிடுவேன். சீனாக்காரிங்களும், மலேயா பொண்ணுங்களும், தாய்லாந்து அழகிங்களும் இன்னும் மனசை விட்டு நீங்கல” என்று சொல்லிவிட்டு மவுனமாகி அவர் நினைவுகளில் முழ்கிபோனார். எனக்கு தூக்கம் வந்தது.

அதிகாலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து படுக்கையில் இருந்த நாவலை எடுத்துப் பார்த்தேன். வாசிக்கத் தோன்றவில்லை. கவிஞர் நீலமேகம் கொண்டு வந்து கொடுத்திருந்த புத்தகப்பையை தூழாவினேன் நாலைந்து கவிதைப் புத்தகங்கள் இருந்தது. எதிர்பார்க்காத நிமிடத்தில் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் மற்றும் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை ஆகிய நாவலும் இருந்தன. இரண்டு சிறிய அளவிலான நாவல்களையும் கவிஞர் எனக்காக எடுத்து வந்திருந்தார். அதனை எடுத்து தனியாக வைத்துவிட்டு யோகா செய்யத் தொடங்கினேன்.

யோகா செய்பவர்கள் மது அருந்தக் கூடாது என்று சொல்வார்கள். நான் இருபது வருடங்களாக மதுவும் அருந்துகிறேன். யோகாவும் செய்கிறேன். பதினைந்து நிலைகளை முடித்துவிட்டு சர்வாங்காசனத்தில் இருந்தபோது மல்லிகா நர்ஸ் புத்தம் புதிய கவச உடையில் வந்து மிகச்சரியாக இரண்டு மீட்டர் தொலைவில் நின்று “இதுவும் உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டபடி பார்த்துக் கொண்டிருந்தார். நான் மூன்று நிமிடங்கள் அந்த நிலையில் இருந்து எழுந்து மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது கோபால் வந்து கவிஞரே.. எனக்கும் யோகா சொல்லிக் கொடும் என்றார்.

மல்லிகா நர்ஸ் நடந்துபோய் தனது இருக்கையில் அமர்ந்தார். நான் மூச்சுப்பயிற்சியை முடித்துவிட்டு, எழுந்து மல்லிகாவிடம் வந்து “மேடம் எனக்கு ரிசல்ட் எப்ப வரும் என்று கேட்டேன்” “இன்னும் மூனு நாள் ஆகும்” என்று சொல்லிவிட்டு ஏதோ குறிப்புகள் எழுதி கொண்டிருந்தார்.

மருத்துவர் வந்து தூரத்தில் நின்று எங்களுக்கு அளிக்கப்பட்ட எண் அடிப்படையில் உடல் நிலவரம் குறித்து விசாரித்தார். எனக்கு இருமலோ, தும்மலோ இல்லை என்று சொன்னேன். அதனை அவர் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. மாத்திரைகள் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். நான் தூக்கியெறிந்துவிட்டு வாடிவாசல் நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது கையில் இருப்பதைப் பார்த்து சுலைமான் பாய் என்ன புத்தகம் என்று கேட்டார். அந்த நாவலின் கதையைச் சுருக்கமாகச் சொன்னேன். அந்தக் கதையில் மிருகத்துக்கும் – மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும் இறுதியாக மிருகம் அதனை வளர்க்கும் மனிதனால் கொல்லப்படுவதையும் சொன்னேன். சுலைமான் பாய் கழிவிரக்கம் கொண்டார்.

அப்போது கோபால் “யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி இருக்கிறதா” என்று என்னிடம் கேட்டார். இருக்கிறது ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையே நிகழும் உடலுறவு தான் என்றேன். கோபால் விக்கித்து நின்றார். சுலைமான் பாய் விழுந்து விழுந்து சிரித்தார். சரிய்யா சொன்னிங்க புலவரே… அதனை மற்றவர்களுக்கும் கேட்கும்படி சத்தமாக சுலைமான் சொல்லிவிட்டுச் சிரித்தார். மற்றவர்களும் சிரித்தார்கள்.

சுலைமான் பாய், “இப்ப உங்க கையில இருக்குற புக்குல அந்த மாதிரி கதையிருக்கா புலவரே” என்றார். “அந்த மாதிரி கதை புடிக்குமா பாய்” என்றேன். “சொல்லுங்க கேட்போம்” என்றார்.

பதிலேதும் சொல்லாமல் எழுந்து அந்தப் பையோடு போய் அதில் இருந்த பாட்டிலைத் திறந்து நூறு மில்லி அளவில் குடித்துவிட்டு வந்தேன்.

மூன்று விஜயாக்கள் என்ற குறுநாவலை சற்று மாற்றி ஒரே பெயரில் உள்ள மூன்று பெண்கள் வெவ்வேறு சமூகநிலையில் இருந்து தெரிந்தோ, தெரியாமலோ, சூழ்நிலை காரணமாகவோ பாலியல் உறவில் ஈடுபாடுகிறார்கள் என்பதைச் சற்று காமரசம் பொங்க விவரித்தேன். அதுவரை நோய் தொற்றின் கவலையில் ஆழ்ந்து இருந்தவர்கள் எழுந்து அமர்ந்தார்கள். சிலர் ஆர்வ மிகுதியில் ‘ம்’ போட்டார்கள். குறுக்கீடு இல்லாமல் சொல்லிக்கொண்டே போனேன். விஜயபுரத்து விஜயா பற்றிய வர்ணணையில் லயித்துப் போன கூத்தாநல்லூர் ரகீம் பாய் அவள் ஒரு தெய்வப்பிறவி என்று முணுமுணுத்தார். சற்று தூரத்தில் இருந்து மல்லிகா எனது கதையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். சற்று இடைவெளியிட்டு மீண்டும் நூறு மில்லியை அருந்திவிட்டு வந்தேன். அதன் பிறகு அரசவனங்காடு சாரதாவின் கதையைப் பற்றி சொன்னேன். ஆசை அடங்காத பெண்ணான சாரதாவின் இறுதிக்காலத்திலிருந்து கதையைத் தொடங்கி அவளது காதலன்கள் அவளின் இளம்பருவத்தோடு பல்வேறு படிநிலைகளில் நான் படித்திருந்த சில அந்த மாதிரியான கதைகளின் விவரணைகளையும் சேர்த்துச் சொல்லி முடித்தபோது மதியமாகியிருந்தது.

எனது அருகில் இருந்த கோபால் தனது செல்பேசியில் யாரிடமோ போனில் கெஞ்சும் தொனியில் பேசிக்கொண்டிருந்தார். வார்டில் இருந்த நோயாளிகளும் போனும் கையுமாக இருந்தார்கள். சுலைமான் பாய் ஏற்பாட்டினால் பள்ளிவாசலில் இருந்து எங்களுக்கு மட்டன் கறியுடன் சாப்பாடு வந்தது. நான் மறுபடியும் குடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன்.

மாலை 5 மணிக்கு எழுந்தேன். மதியம் குடித்திருந்த மது என்னவோ செய்தது. பாட்டிலில் அரை பாட்டிலுக்கும் குறைவாகவே இருந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு மீண்டும் கொஞ்சம் குடித்தேன். சுலைமான் என்னை அழைத்து உயர்தரமான பேரிச்சைப் பழங்களை கொடுத்து சாப்பிட சொன்னார். மீண்டும் அவர்களுக்கு இடையே அமர்ந்து கதை சொல்லத் தொடங்கினேன்.. அவர்கள் மிக நெருங்கி அமர்ந்து கதைகளைக் கேட்டார்கள். ஒருவர் சொன்னார், நீங்கள் சொல்றது காட்சியா பார்ப்பதை விட இன்னும் கற்பனையை உருவாக்குது. சிலர் முகக்கவசம் அணிவதைக்கூட மறந்து இருந்தார்கள். அந்த இரவு நீண்ட நேரம் கதையாடல் நடந்தது. என்னைப் போல் மற்றவர்களும் அவர்களது அனுபவக் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். பல அனுபவங்கள் அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நர்ஸ் சிந்துஜா மணியாகிவிட்டது படுங்கள் என்று சத்தம் போட்டாள். அப்போது கோபால் தனது டியூசன் வாத்தியாரின் மனைவியிடம் மண்டியிட்ட கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார். மல்லிகா ஒய்வு அறையில் இருந்து வந்து “இது என்ன ஆஸ்பத்தரியா? லாட்ஜா? மணி ஒன்னாகுது. படுங்கப்போறீங்களா.. போலீசை அழைக்கவா” என்றாள். அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. என்னை எரித்துவிடுவது போல பார்த்தாள். அனைவரும் சிரித்துக்கொண்டே படுக்கையில் விழுந்தோம்.

மூன்றாவது நாள் பாதிபேருக்கு மேல் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது. அதில் சுலைமான், ரகிம் மற்றும் கோபாலும் இருந்தார்கள். என்னிடம் போன் நம்பர் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனார்கள்.

சரக்கும் என்னிடம் இருப்பு குறைந்து கொண்டே வந்தது. யார் கதை கேட்டாலும் நர்சுகளுக்குத் தெரியாமல் சொல்லிக்கொண்டு இருந்தேன். எனக்கும் நான்காவது நாள் ’நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்தது.

நான் டிசார்ஜ் சீட்டை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். அப்போது சிந்துஜா வந்து பக்கத்து அறையில் இருந்து மல்லிகா கூப்பிடுகிறார் என்று சொன்னாள். நான் அவரிடம் சென்றேன், “சார் கிளம்பிட்டிங்களா? என் சர்வீஸ்ல உங்கள மாதிரி ஆளை நான் பார்த்தே இல்ல. கொரோனா எவ்வளவு பெரிய நோய். அதை பத்தி கவலைபடாம ஒரே கதை உங்களுக்கு. நான் இதைப்போல கதை கேட்டது இல்ல. பொண்ணை கல்யாணம் பண்ணிக்குடுத்து பேரப்புள்ளையும் தூக்கிட்டேன். உங்க கதைங்கள கேட்டது இருந்து நைட்டுல அதே ஞாபகம். என் புருசனோட வாழ்ந்த அந்த பத்து வருஷத்துல அப்படி ஒன்னுமே இல்லன்னு தான் தோனுது. நீ மட்டும் கல்யாணம் ஆகாத ஆளா இருந்தின்னா வை. உன்னை இப்பவே கல்யாணமே பண்ணிக்குவேன். இப்ப உன்னை நான் அழைச்சிட்டு போனா உன் பொண்டாட்டி பாவம் இல்லியா. ஆனா ஒன்னு இதே மாதிரியா யார்கிட்டேயும் சொல்லி மூட் ஏத்துற வேல செய்யாதே” என்று பேசி முடித்தார் மல்லிகா. அவளுக்கு பதில் சொல்லாமல் வெளியேறிக் கொண்டிருந்தேன். அப்போது என் செல்போன் சிணுங்கியது. எதிர்முனையில் இருந்து பேசிய கவிஞர் நீலமேகம் “எனக்கு காலையிலிருந்து காய்ச்சல் அடிக்குது. தொற்றா இருக்குமோன்னு பயமா இருக்கு” என்றார். பயப்படாதே மாலை வீட்டுக்கு வருகிறேன் என்றேன்.

-தொடர்ந்து பேசுவான் ஊதாரி….

***


சிவகுமார் முத்தய்யா – நெற்களஞ்சியமான கீழத்தஞ்சை திருவாரூர்- தண்டலைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை, கவிதை, கட்டுரை என இதுவரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் – muthaiyasivakumar@gmail.com

அவன்

1

வைரவன்

ன்ன பெங்களூர் வந்திருக்க.. அத்தான்ட்ட ஒரு வார்த்தை சொல்லல.. சாயந்திரம் கோரமங்களா வா.. பாக்கலாம்”. அத்தான் அலைபேசியில் அழைத்ததும் உள்ளே அப்பா சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் கனத்தைக் கூட்டியது. “அங்க போறதுலாம் சரி. பண்டாரம் மவன்ட்ட ரொம்ப பழக்க வழக்கம் வச்சுக்க வேண்டாம். ஆளு ஒரு மாரியாம். பாத்தீலா ஆச்சிக்க துஷ்டி வீட்டுக்கு அவன் வந்த லச்சணம். போய் ஏதாச்சும் அவன் கூட சுத்துன மாதிரி கேள்விப்பட்டேன். ரெண்டா வகுந்துருவேன் பாத்துக்க. வேலைக்காக மட்டும் தான் அனுப்பியிருக்கேன்” எல்லாம் சொல்லிவிட்டு பண்டாரம் மணி மாமா வீட்டிற்கு செல்லும் போது “நம்ம மருமவன் பெங்களூர்ல இருக்க தைரியத்துலயாக்கும் பிள்ளையை அனுப்புகேன். பயலுகிட்ட சொல்லும் மாப்பிள” அப்பா நளியாய் கூற, மணி மாமா தலையாட்டியபடி சிரித்துக் கொண்டே “உமக்க வாயி தான்டே சனியன்” வாயில் குதப்பிய வெத்திலை சாறு தெறிக்க சொன்னார். உள்ளே பூஜையறைக்கு அழைத்து திருநீறு பூசும்போது “அவன் தெற்று ஒன்னும் செய்யல மக்களே. அப்பன் நானே புரிஞ்சிக்க கொல்லம் ஒருவாடு ஆச்சு. ஊருக்காரன் புரிஞ்சி என்ன மயித்துக்கு. அங்க போய் ஏதாச்சும் உபகாரம் வேணும்னா அத்தான போய் கண்டிப்பா பாரு. இன்னா அவனுக்க நம்பர் பதிச்சு வச்சுக்கோ” நான் வெளியே இறங்கவும், கையில் இருநூறைத் திணித்தவர், மெதுவாய் காதருகே “அம்மை பலகாரம்ல சுட்டு தாரால”, தூரத்தில் அப்பா வழக்கம் போல பக்கத்து வீட்டு ஐயப்பன் மாமாவிடம் ஊர்க்கதை வம்பளந்து கொண்டிருந்தார். நான் மெதுவாய் மாமாவிடம் “ஆமா, அதிரசம் முந்திரிக்கொத்து கட்டி வச்சுருக்கா”, “அவனுக்கும் கொடுத்துவிட ஆசைதான். உங்க அம்மை செஞ்ச அதிரசம் அவனுக்கு இஷ்டம். போய் அவனுக்கு கொஞ்சம் போய் கொடு மக்களே” என்றபடியே நெற்றி சிவக்க முத்தமிட்டார்.

பள்ளிக்கூடம் படிக்கையில் சூர்யா அத்தான் ஊரின் முக்கில் இருக்கும் களத்திற்கு வந்தாலே நான் உட்பட சிறுசுகள் பார் கம்பிகள் பொருத்தப்பட்ட இடத்திற்கு வந்துவிடுவோம். பாரில் ஏறி பல வித்தைகள் காட்டுவான். அவனின் பலமான விரிந்த நெஞ்சும், உலக்கைப் போல கனத்திருக்கும் கைகளும் பார்க்கும் போதே கிறக்கத்தைக் கொடுக்கும். அவனும் சிலரைத் தூக்கி பார் கம்பியில் ஏற்றி விட்டு மெதுவாக அதிலே தண்டால் போட சொல்லிக் கொடுப்பான். என்னைத் தூக்கும் போது மட்டும் கூச்சப்படும் அத்தானைக் கூடி நிற்கும் அவன் நண்பர்கள் கிண்டுவார்கள். முத்தாரம்மன் கோயில் பண்டாரம் மணி மாமாவின் மகன் என்பதால் ஒடுக்கத்தி வெள்ளிகளில் கோயிலில் காவிச்சாரம் கட்டிக்கொண்டு சட்டையணியாமல் கெத்தாக நிற்கும் போது வயதுக்கு வந்த ஊர் பெண்பிள்ளைகளின் கண்கள் அத்தானையே மொய்க்கும். எனக்கும் அவனைப் போலவே சட்டையணியாமல் சாரம் கட்டிக்கொண்டு நிற்க பிடிக்கும்.

சாயந்திரம் எப்படியோ கேப் புக் செய்து கோரமங்களா அத்தான் வீட்டிற்கு வந்துவிட்டேன். தலையில் ஒரு முடியில்லாமல் வழித்து, காதில் கடுக்கனோடு, கை முழுக்க தீப்பிடித்து எரியும் மண்டை ஓடு பச்சை குத்தியிருந்தது. துஷ்டி வீட்டில் அவனை வித்தியாசமாய் எல்லோரும் பார்த்த அந்த நொடி நியாபகம் வர, அத்தான் வழக்கம் போல “சின்னதுல கட்டக்கிளின்னு கூப்பிடுவேன். இப்போ என் உசரம் வந்துட்ட மக்கா” சிறுவயதில் அத்தான் கால் மாட்டிலே சுற்றுவதால் அத்தான் சூட்டிய பட்டப்பெயர் ‘கட்டக்கிளி’. கையில் இருந்த பையை நீட்டினேன், அதில் இருந்த அதிரசத்தை மட்டும் எடுத்தவன் “அத்தை சுட்டதா. நல்ல நெய் ஊத்தி சக்கரப்பாக இந்த பக்குவத்துல செய்ய உங்க அம்மைய விட்டா ஆளுண்டா”, “அத்தான் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ” நான் சொல்லவும், “சின்னதுல பாத்த மாறியே இருக்க. சரி அடுத்து என்ன பிளான். வா வீக் எண்ட் வெளியே போவோம். எப்படி பார்ட்டி ட்ரிங்க்ஸ்லாம் பழக்கம் இருக்கா. பொய் சொல்லாத. இன்ஜினியரிங் மெட்ராஸ்ல படிச்சிருக்க”, “பைனல் இயர்ல கொஞ்சம் பியர் சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்த்தான்”, “போடு வெடிய” அத்தான் சிரித்துக்கொண்டே சொல்லவும் நான் மெதுவாய் வீட்டை நோட்டமிட்டேன். அலங்காரமான வீடு எல்லாமே சுத்தமாக இருந்தது. ஆங்காங்கே செடிகள், பால்கனியில் செவ்வண்ண நிற பூக்கள் படர்ந்த கொடி எல்லாமுமே பசுமையாய் இருந்தது. பக்கவாட்டு சுவற்றில் கண்ணாடி பொருத்தியிருந்த அலமாரி முழுக்க கோப்பைகள், பதக்கங்கள் அலங்கரித்தன. “இதுலாம் நீங்க வாங்குனதா”, “அடியேன் தான், பின்ன வேற யாரு. சரி வா.. வெளியே போலாம்” இருவருக்கும் பேசிக்கொள்ள பல கதைகள் இருந்தன.

சாலை முழுக்க தாழ்ந்து நின்ற மரங்களில் மென்மையாய் தூறிய துளிகள் சிந்த, எங்கும் அழகாய் ஜொலிக்கும் உடைகள் அணிந்த யுவ, யுவதிகள். “வீக் எண்ட் இப்படித்தான் இருக்கும். ஊருல எல்லோரும் எப்படி இருக்காங்க. ஆச்சி இறந்தப்போ வந்தது. மூனு வருஷம் ஆயிட்டு பாத்தியா. ஊருக்கு வரணும். சரி நாகுப்பிள்ள இருக்காரா?”, “அவரு செத்து வருஷம் ஒன்னாச்சு. சாகது வர எந்த மவன் வீட்டுலயும் சேத்துக்கல. எல்லாவனும் கிண்டிட்டு அலைவானுக. சுடுகாட்டு சுடல கிட்ட செத்து கிடந்தாரு. வெட்டியானே எல்லாம் முடிச்சானாம். பைசா மட்டும் மூத்தவன் கொடுத்தான்”, “தேவடியா பசங்க” அத்தான் கோபமாய் வாயில் முணுமுணுத்தது தெரிந்தது, அருகே இருந்த கடையில் சிகரெட் வாங்கி சிலநிமிடங்கள் சற்று ஒதுங்கி நின்றான். அருகில் செல்லவும் கையில் சிகரெட்டை மறைக்க, மீண்டும் விலகி நின்றேன்.

நாகுப்பிள்ளை தாத்தாவைப் பற்றி ஊரில் யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. அவரின் பேச்சில் எப்போதும் ஒரு நளினம் இருக்கும். ஆண்கள் மத்தியில் எப்போதும் குழைந்தபடி பேசிக்கொண்டிருப்பார். யார் ஆரம்பித்தார் என ஊரில் யாருக்கும் தெரியாது “நாரோயில் தியேட்டர்ல தான் கிடை. ஆம்பளைக கூடப் போற யோக்கியன். நல்ல வேலை பொண்டாட்டி செத்தா. சாக வர காத்திருந்து இருப்பான். கிழட்டு நாயி” அவர் அடிக்கடி நாகர்கோயில் போவது வழக்கம் தான். ஆனாலும் இந்த பேச்சு அவர் வீட்டுப்படி வரையேறி ஒத்தைக் கட்டையாய் தனிவீட்டில் அமர்த்தும் நிலைக்குத் தள்ளியது. “நாகுப்பிள்ள இன்னைக்கும் தோப்புக்கு அந்த பயல கூட்டிட்டு போனான் பாத்தியா. பண்டாரத்த கண்டா சொல்லணும். பொட்டப் பைய நம்ம குடும்பத்துலலா எழவுக்கு நிக்கான். சூர்யாவுக்கு எதுக்கு அந்த ஆகாதவன் கூட பழக்கம். அவன் கூட எங்கயாச்சும் பேசிட்டு திரியத பாத்தேன். அங்கையே ரெண்டா பொளந்துட்டு ஒரு பொம்பளப்பிள்ள மட்டும் போதும்னு உனக்கு காடாத்து நடத்திருவேன்” அப்பாவின் குரல் காதில் மீண்டும் ஒலிக்க, அத்தான் பக்கத்தில் நின்றிருந்தேன். “ஊரா மக்கா அது. இன்னும் மாற மாட்டாங்க. அதான் அந்த பக்கமே தல வச்சு படுக்கது இல்ல”. அத்தான் என்னையே பார்த்து ஒரு நொடி உதடு விரியாமல் சிரித்தவன் “உங்க அய்யாக்கு தெரியுமா? இப்பிடி என்கூட இருக்கது”, நானும் எதுவும் சொல்லாமல் ‘இல்லை’ என்பது போல தலையாட்டினேன்.

ஊரிலே முதல் ஆளாய் ஐ.டி துறையில் வேலை பார்த்தது சூர்யா அத்தான் தான். அதன் பிறகே பண்டாரம் மாமா தட்டு வீடு கட்டியது, இரண்டு பெண்பிள்ளைகளின் திருமணம் நடந்தது. முத்தாரம்மன் கோயில் வருமானத்தில் என்ன செய்ய இயலும். ஊரார் வரி கொடுத்தால் உண்டு, அதுவும் ஒடுக்கத்தி வெள்ளிகளில் வைக்கும் சர்க்கரை பாயாசத்திற்கும், ஆரங்களுக்கும் மட்டுமே காணும் அளவிற்குக்குதான். சித்திரை கொடைக்கு வரிவசூல் செய்ய தலைவர், செயலாளர், பொருளாளர் உண்டு. அவர்கள் பொடை நிறைய மீதி கொஞ்சம் வரும். மஞ்சனையும் கமுகமும் கைக்காசில் தான் ஓடுகிறது.

அவன் வடசேரி எஸ்.எம்.ஆர்.வியில் படித்தான். அதனாலே ஊரில் பொண்டுப் பொடிசுகள் போர் ரூட் பேருந்து நிறைய படிக்கட்டில் தொங்கியப்படி திட்டுவிளையில் இருந்து வடசேரிக்கு வருவர். கோவை அரசு பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு எங்கள் ஊரில் இருந்து பெங்களூருக்கு முதலில் வந்தவனும் அவன்தான். முடுக்கு வீட்டு வேணிக்கு அத்தான் என்றாலே பிடித்தம், மாறாக துளியும் அக்கறை இல்லாமல் கண்டுகொள்ளாமல் சுத்துவான். இத்தனைக்கும் வேணி என்றாலே ஊர் இளைஞர் கூட்டம் பின்னாலே சுத்தும். சில நேரங்களில் வேணியின் கடிதங்களுக்குத் தூதாய் சென்றுள்ளேன். நான் என்பதால் அத்தான் ஏசாமல் திருப்பியனுப்புவான். பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகே அத்தானையும் நாகுப் பிள்ளை தாத்தாவையும் பற்றி புறணி பேசுவது என் வயது ஒத்தவர்களிடையிலும் நடந்தது. “உங்க அத்தான் இனி உன்கூடலாம் பேச மாட்டான். அவனுக்கு நாகுப்பிள்ளை போதும்” இதை அத்தானிடம் இதுவரையிலும் நானாய் சொன்னது கிடையாது, சொல்பவர்களும் நேராய் அவனிடம் போய் சொல்ல தைரியமில்லை. பண்டாரம் மாமா அதிர்ந்து கூட பேசமாட்டார். அப்பாவும் ஊர்க்காரனை போல அவரிடம் ஏத்திவிட்டுக் கொண்டே இருப்பார். வீட்டில் சிறுபிள்ளைகள் இருக்கும் போது அத்தை வயிற்றில் ஆபரேஷன் என்று கோட்டார் ஆசுவத்திரி போனவர் திரும்பி பிணமாய் வந்தார். நல்ல ஆகாரம் வேண்டும் என்றால் அத்தான், மைனிமார்கள் எங்கள் வீட்டிற்கு தான் வருவார்கள். அப்பாவிற்கு அதில் பெரிதாய் விருப்பமில்லை. ஒருநாள் தோப்பில் இருந்து பண்டாரம் மாமா அத்தானை அடித்து இழுத்து செல்லும் போது, கூசியபடி நடந்த அத்தானின் நடை எனக்கு பிடிக்கவில்லை, மாமாவின் சொற்கள் தெருவெங்கும் சிதறியது “மூத்த ரெண்டு கொமரு இருக்கு. நீ கழுவா போய். அவாளுக்கு மாப்பிளை தரம் வராண்டாம்னு பாக்கியோ”. வேணியும் அதன் பிறகு அத்தானைப் பற்றி பேசியதில்லை. பிறகு ஒருநாள் முத்தாரம்மன் கோயில் வெளிநடையில் அத்தான் அமர்ந்திருந்தான், கோயிலுக்கு சென்ற நான் அருகில் உட்காரவும் “என்ன உன் பிரண்ட்லாம் கத சொல்லலியா. என்கிட்ட இருக்காத தள்ளிப்போ. கருக்கள் நேரம் வேற வீட்டுக்கு போ. சீக்கிரம் படிச்சுட்டு ஊரை விட்டே போணும் மக்கா. எப்படியும் நல்ல வேலைக்கு போய் அக்காவலாம் கட்டி கொடுத்துருவேன். சீக்கிரம் போணும், ஊரை விட்டு போணும்” என் முன்னே அழுவதைத் தவிர்க்க அத்தனை முயற்சித்தும் அவன் தோற்பதை விரும்பாமல் நானே எழுந்து சென்றேன். நினைத்தபடியே கோவை சென்றான். ஊருக்கும் அதிகம் வருவதில்லை, வேலையும் கிடைத்தது. அக்காக்கள் திருமணத்திற்கு வந்தவன் என்னிடம் கொஞ்சமாகவே பேசினான்.

ஒரு குகையில் நுழைவது போல இருந்தது அந்த கட்டிடம். எங்குமே பலவண்ண நிறங்களில் விளக்குகள், அதன் ஒளி விரியும் வெளியெங்கும் புகைக்கோளம். அத்தான் கூட்டிச்சென்ற மேஜை அருகே யாருமே சாதாரணமான தோற்றத்தில் இல்லை, பெண்களின் முடியெங்கும் சாயம், உதட்டில் புருவத்தில் தோடுகள். ஆண்கள் எல்லாருமே பலசாலிகள் போலவிருந்தனர். அங்கே ஒல்லியாய், என்போன்ற உடையில், தோற்றவாக்கில் யாருமே இல்லை. ஒரு பீர் வாங்கி மெதுவாய் பருக ஆரம்பித்தேன். அத்தான் என்னிடத்தில் மட்டும் தமிழில் பேசினான். சுற்றிலும் ஆங்கிலம் மிதக்க கைகள், கால்கள், தோள்கள், மொத்த உடலுமே எடையில்லை. கை கால்கள் அசைய எங்குமே நடனம், அத்தான் ஆட ஆரம்பிக்க விசில், கைத்தட்டல் சத்தம். ஒரு புதிய அத்தானை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெளியே வரவும் “பழசு எதையும் யோசிக்க கூடாது. ஊர் ஸ்லாங்கே நீ வரவும் தான் வந்துச்சு. நாகுப்பிள்ளைலாம் பொறந்த காலம், ஊரு தப்பு மக்கா. ஆளும் படிக்கல, அவர மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சு. ரொம்ப கஷ்டம் அதுலாம். அத்தான் ஓவரா பேசுகனா?”, “இல்லத்தான். அப்பா சொல்லியும் கேக்காம பாக்க வந்திருக்கேன், பொறவு என்ன. நீ பேசு”, “உங்க அய்யா பழைய ஆளு மக்கா. மாறவே மாட்டாரு. இன்னும் கௌரவத்த விடாம வச்சுருக்க மனுஷன், அதுல கால் பைசா பிரயோஜனம் கிடையாது. நல்லவன்தான், எங்கள கண்டா பிடிக்காட்டியும் நல்ல சோறு அவரு சம்பாதிச்ச பைசால தானே சாப்பிட்டோம்”, “அவர விடுங்க அத்தான்”. “நாகுப்பிள்ளை பாவப்பட்ட மனுஷன். அந்த ஆச்சி இருக்க வரை. துணையா கிடந்து, வேற நினைப்பு வராம பாத்துக்கிட்டுச்சு. அதுக்கு காரணம் ஆச்சிக்கு அவர் மேல இருந்த அன்னியோன்யம். ஒரு சூழ்நிலை கைதி தன்னோட விருப்பம் என்னனு தெரிஞ்சும் தன்னையே தண்டிச்சுட்டு வாழ்ந்தாரு. அது சாகவும், பெத்த புள்ளைகளும் மதிக்கல. வெளிய இறங்கிட்டாரு, அதுதான் அவருக்க சுதந்திரம். அது தப்பா மக்கா. நம்ம வேணி.. எப்பா லட்சணமா எப்புடி இருப்பா. ஆனா அவமேல எதுவும் தோணல.” அத்தான் நிலையில்லாமல் பேசுவது ஏற்கனவே ஊரில் நான் கேட்ட கதைகள் தான். எதையும் வெளிப்படையாய் பேசமால் நான் புரியும்படியே பேசிக்கொண்டு இருந்த அத்தானை யாருக்குத்தான் பிடிக்காது. நான் பார்த்த பதக்கங்களில் மிஸ்டர்.கே இந்தியாவில் அத்தான் ராஜவுடையில் தோரணையாய் இருந்ததே இன்னும் கண்ணுக்குள் தெரிகிறது.

அவனது முகநூல் வளையத்தில் நான் இல்லையே ஒழிய, தினமும் அதை ஒருமுறையாவது நோண்டாமல் உறங்கியதில்லை. எப்போதும் அவனின் வித்தியாசமான புகைப்படக் கோணங்கள், அவனின் நண்பர்கள், அந்தக்குழு, அவனின் சில இணையப் பேட்டிகள் அதில் புலப்படும் தனியாளுமை எல்லாமுமே ஈர்க்கும் விஷயங்கள். அதுவே அத்தானைத் தேடி பெங்களூரு வர நிர்பந்தித்தது. எனக்கான கேள்விகளின் விடை அவனுக்குத் தெரியும் என்பதே ஆசுவாசம்.

“அத்தான் அப்போ நீ நாகுப்பிள்ள மாதிரி கல்யாணம் பண்ண மாட்ட அப்படித்தானா”, முகம் பார்த்து அப்படியே தலைக்கோணச் சிரித்தவன் “ஆல்ரெடி எனக்கு பார்ட்னர் இருக்கான். சாகர் இப்போ வீட்டுக்கு வந்திருப்பான். அவன் ஒரு பஞ்சாபி. வீட்டுக்கு போகும்போது பாரு சிக்கன் டிக்கா, கீ ரைஸ் மணக்கும். கெஸ்ட் வராங்கனு மெசேஜ் பண்ணிட்டேன்”, நான் எதுவும் பேசாமல் எனக்குள் குமைய ஆரம்பித்தேன். என்னிலை அறியாதவன் “உனக்கு தெரியுமா இங்க கலாச்சாரம் மாற ஆரம்பிச்சாச்சு. எல்லாமே பரந்த நிலையை நோக்கி நகருது. எல்.ஜி.பி.டி பத்தின புரிதல் ஓரளவுக்கு வர ஆரம்பிச்சாச்சு. நீயும் படிச்சிருக்க, உனக்கு புரியும்னு நினைக்கிறேன்”, “எல்லாம் புரியும் அத்தான். நீ ஒரு கே அவ்ளோதான. அது உன்னோட விருப்பம்”, அத்தான் ஒருமுறை குறுகுறுவெனப் பார்த்தவன் “நான் ஆக்ஸ்போர்ட்ல எல்.ஜி.பி.டி பத்தின கோர்ஸ் படிச்சுட்டு இங்க கவுன்சலரா இருக்கேன். எவ்ளோ கேஸஸ். தன்னோட பாலின விருப்பம் அதுக்கு நேர்மாறான உடல் இருக்கும் போது இயல்பா சுத்தி இருக்கிற சமூக அமைப்பு அது உருவாக்கி வச்சிருக்கற எழுதப்படாத விதிகள், சாதாரணமான ஆணையோ பெண்ணையோ பார்க்கிற போது தான் இவங்க இரண்டும் இல்ல என்கிற பதட்டம் தான் முதல் சவால். அப்புறம் தன்னோட குடும்பம் எப்படி எடுத்துப்பாங்கங்கிற அழுத்தம். அதை மீறும் போது தனக்கான நபர்கள் யாருனு சரியா தேர்ந்து எடுக்கணும். என்னோட புரிதல் மாறுனது நாகுப்பிள்ளையால தான். வேலைக்கு வந்த இடத்துல ஒரு நண்பர் மூலமா இந்த வளையத்துக்குள்ள சேர்ந்த பிற்பாடு தான் எனக்கான சரியான பாதைல பயணிக்க ஆரம்பிச்சேன். இங்க சாதி பாலின வேறுபாடு இல்ல. வெளியேயும் கொஞ்சம் கொஞ்சமா எங்கள தப்பா பாக்குற கண்ணோட்டம் மாறி இருக்கு. இப்போ சின்ன மழைத் தூறல் அளவுக்கு, மொத்தமா ஒருநாள் பாஞ்சு போற வெள்ளம் ஆகும். நான் கே – சத்தமா சொல்றேன், என்னோட அடையாளம் தெரிஞ்சு நம்ம ஊர்ல ஒருத்தன் மேல இயல்பா கை போட்டன்னு வை செக்ஸ்வலா நா முயற்சி பண்றேன்னு சொல்வாங்க. சரியான அணுகுமுறையா அது?”, அத்தான் என் பதிலுக்காகக் காத்திருப்பது போல பார்வையை வீசினான். பதில் சொல்ல விருப்பமிருந்தும், ஆம் எனக்கான பதில் ஏற்கனவே அத்தான் மூலமாக அழுத்தமாக கிடைக்கப் பெற்றேன். ஆனாலும் அதனை மறைக்கும் தொனியில் மெல்லிய புன்னகையை பதிலுக்குக் கொடுத்தேன்.

தொடர்ந்து பேசும் மனநிலையில் அவன் இருந்தான் “ஒரு ஆண் பெண் மேல நட்பா கை போடுற மாதிரிதானே இதுவும். ஊர்ல அதுவே தப்பு. அப்போ என்ன எப்படி புரிஞ்சிப்பாங்க. அப்பாவே என்கூட ஆறு மாசம் இருக்கப் போய் கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டாரு. சாகர அப்பாக்கு ரொம்ப பிடிக்கும். நேர்ல பாக்க ரெஸ்ட்லர் கிரேட் காளி மாதிரி இருப்பான். ஆனா பழக குழந்தை மாதிரி. நம்மளோட வாழ்க்கை முறை இருக்க கட்டின சங்கிலி மாதிரி சடங்குகள், சம்பிராதயங்கள் நிறைய. மொகல், பிரிட்டிஷ் இந்தியா வர முன்னாடி ஏத்துக்கொள்ளப்பட்ட பாலினச் சுதந்திரம், அதுக்கு பிறகு மதம் சார்ந்து குற்றமா பாக்க ஆரம்பிச்சிசாச்சு. உலகத்துல நிறைய நாட்டுல இதுக்கு மரண தண்டனை தெரியுமா. இந்தியால கஜூராகோ மாதிரியான கோயில்ல தன்பாலின கலவிச் சிற்பங்கள் இருக்கு, ஆனாலும் இங்கதான் இ.பி.கோ 377-ல மாற்றங்கள் கொண்டு வர சட்ட ரீதியா போராட்டம் தேவைப்படுது, க்ரீக்ல தன்பாலின ஈர்ப்பு அதிகம் உள்ள ஆண்கள் வீரம் நிறைஞ்சவங்கனு தனிப் படைப்பிரிவே இருந்துச்சு. ரொம்ப பேசுறன்லா நான். நீ என்ன எப்படி எடுத்துப்பன்னு இன்னும் தெரியல. ஜஸ்ட் உனக்கு புரியணும்னு பேசிட்டேன்” அத்தான் அமைதி ஆகவும், “எனக்கு உன்ன தெரியும் அத்தான்” என கூறிவிட்டு, அனல் போல குமிழும் அகம் அடங்க அமைதியாக நடந்தேன். அருகே அவன் குடியிருப்பு வரவும் மீண்டும் எனக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்த கேள்விகள் நாவை நீட்ட ஆரம்பிக்க, மறைக்க இயலாமல் தவிக்க ஆரம்பித்தேன் “கேப் புக் பண்ணுங்க. நான் ரூம் போறேன். லேட் நைட் ஆயிடுச்சு” சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயற்சித்தேன், “இது ஒன்னும் ஊரு இல்ல. நீ சாப்டுட்டு போ. கேர்ள்ஸ்க்குலாம் இங்க சுதந்திரம் முழு நாளைக்கும் இருக்கு” விடாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஒருவேளை செல்லாமல் இருந்திருந்தால் அருமையான உணவு ஒன்றை தவற விட்டிருப்பேன். சாகர் இயல்பாக நட்போடு உரையாடினான், “ஷி இஸ் ப்ரிட்டி” என ஆங்கிலத்தில் அத்தானிடம் கூறும்போது மட்டும் கோபம் வந்தது. அவனுடைய காரிலே அத்தான் என்னுடைய விடுதிக்கு அழைத்துச் சென்றான். விடுதி வரவும் பொறுமை இல்லை, இன்னும் சிலநொடி தேவைப்பட்டது என் மெல்லிய ஆத்துமா பெரிதாய் ஊதிய நீர்க்குமிழியாய் உடைய, காரை நிறுத்தி கதவை அத்தான் திறக்கவும், அவனிடம் மெதுவாகச் சொன்னேன் “அத்தான் இனிமேல் நான் ‘ஷி’ இல்ல ‘ஹி’ ” திரும்பிப் பார்க்காமல் முதல்முறையாய் சுதந்திரமாய், வேகமாக, இன்னும் வேகமாக நடந்தேன்.

***


வைரவன்
vairavanlr@gmail.com

மழை பெய்யும் நாளொன்றில்

0

ஜீவ கரிகாலன்

மழை நாளொன்றில் – 1

ரசாங்கங்களின் நீண்டகாலத் திட்டங்களால் எட்டிப் பிடிக்க முடியாத அளவு தூரத்திலிருந்த எதிர்காலத்தின் ஆண்டொன்றை தனது போலோ சட்டையில் பெரிதாகப் பொறித்திருக்கும் மானுடவியலாளர்களால் தரம் பிரிக்க முடியாத கலப்பின மனிதன் அவன். மழைநீரால் சூழப்பட்டு அரை ஷட்டர் கீழறக்கப்பட்டு இருக்கும் பகுதியில் இருக்கின்ற 500 சதுர அடி புத்தகக் கடையில் திக்விஜயம் செய்து, “அனைத்தும்” என்றான். பின்னர் “மலிவான ஃப்யூஅல்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

அந்நகரத்தின் மழை சூழாத மேட்டுப்பகுதியில் இருக்கின்ற புத்தகக் கடைக்கு இந்தச் செய்தி வரும்போது கூடவே வேறு சிலரும் வந்து சென்றார்கள். அவர்களும் அதையே சொன்னார்கள். மழையே பெய்யாத மாவட்டங்களின் புத்தகக் கடைகளுக்கும் அவர்கள் வந்தார்கள். பின்னர் அவர்கள்தான் என்றில்லை, அந்த நிலத்தின் அத்தனைக் கடைகளும் காலியாக்கப்பட்டன. ஒருமுறை கூட வாசகர்களுக்கு தள்ளுபடியே தராத புகழ்பெற்ற புத்தகக்கடை ஒன்று மட்டும் கொள்ளையடிக்கப்பட்டது. அவர்களும் அதே காலத்தை சட்டையில் பொருத்தியவர்கள் தாம்.

பதிப்பகங்கள் திடீரெனக் கோமாவிலிருந்து விழித்தன. அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எழுதித்தர அவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்களின் வீட்டில் வரிசையில் நின்றார்கள். கவிதைகளுக்கான பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பிற்கு கல்லூரிகள் வகுப்புகள் தொடங்க பல்கலைக்கழகங்களுக்கு அரசாணை பிறப்பித்தன.

எழுதுவதற்கான காகிதம் தீர்ந்து போகும் என்கிற அச்சத்தில் இராணுவத்தினர்கள் வனத்தைப் பெருக்கவும் உருவாக்கவும் தொடங்கினார்கள். மரம் வெட்டுவதற்கு எதிரான தண்டனைகள் மனிதத்தன்மையற்றது என உலக சபை அறிவுறுத்துவதை அவர்கள் பொருட்படுத்தாமல் இருந்த வேளையில், அச்சகத்தில் கிடைத்த வெட்டப்பட்ட உபரிக்காகிதங்களை தாஸ் பொறுக்கி விற்றுக் கொண்டிருந்தான்.

ஈஸ்வருக்கு தனிநபர் கடன் கிடைத்ததால் அவனும் சில கட்டுக் காகிதங்களை வாங்கி வீடுவந்து சேர்ந்தான். இந்தக் காகிதம் தான் வடிவத்தை தீர்மானிக்கும் என்று அவனுடைய கனவில் வந்த கழுதையின் ஞாபகம் வந்தது.

*

மழை நாளொன்றில் – 2

மழை பெய்யும் நாளொன்றில்தான் குளிக்க முடியும் என்று எதிர்பார்த்த மனிதர்களைப் போல அதுவும் தன் அகத்தை விட்டு வெளியே வந்தது. தன் தலையில் பட்டுத் தெறிக்கும் ஒவ்வொரு சொட்டின் ஓசையும் தன் இணையைக் கட்டையால் அடித்துக் கொன்ற சப்தத்தை நினைவுபடுத்தினாலும் பெய்வது மழை அன்றோ. ஆறு போகும் நிலத்திற்கோ கண்மாயுள்ள பூமிக்கோ இடம்பெயராமல் கொன்றவனைப் பழிவாங்கக் காத்திருந்த அந்த ஆறு அடி கருநாகத்திற்கு அருகிலேயே நின்றாலும்.. முதல் மழையை சந்திக்கின்ற எலி கரிசல் மண்ணின் சகதியால் ஒரு கார்க் பந்தாக மாறப்போவதை அறியாமல் தன் மீசையில் ஒழுகும் நீர்த்துளிகளை எண்ணிக் கொண்டிருந்தது.

கிழிந்த சொக்காயும் ஒழுகும் மீசையும் கைகளில் ஆறு ஏழு சூட்டுக்காயத் தடங்களும் கொண்ட சிறுவனின் முதல் மழை.. உப்புச் சோப்பினாலும் சவரு தண்ணியாலும் கழுவப்படாத கந்தக விரல்களில் மழை நீர் தேய்த்து உறித்தெடுக்கும் தோல்களில் முளைத்திருக்கும் புதுத்தோல் தன் குஞ்சுகளின் தோல்களைப் போன்றே இருப்பதை அறிந்தது கருநாகம்.

அச்சிறுவனோடு சேக்காளிகள் வந்து மாரியாத்தா பாட்டு பாடினார்கள்.

கருநாகம் படமெடுத்து வானைப் பார்த்து வாய்பிளந்து, பிளவு பட்ட நாக்கை நீட்டி 1 2 3 என நீர்த்தொகுப்புகள் உள்ளிறங்க, தன் இணையைக் கொன்றவனின் மகனைக் கொல்லாமல் விட்ட அது மழையைக் குடித்தது.

*

மழை நாளொன்றில் – 3

மழை பெய்யும் நாளொன்றில் சென்று கொண்டிருந்தது சவ ஊர்வலம். தினத்தந்தியில் எப்போதும் பிரிவினைகளுக்கான கொலைச்செய்தி தரும் நகரொன்றில் எப்போதுமில்லாத நாளாய் எல்லோரும் ஒன்று கூடியிருந்தார்கள். மெஸெஞ்சர்களை, இணையத்தை முடக்கி வைத்திருந்த அரசு அந்த ஊர்வலத்தின் வெற்றியைக் குலைக்க அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்தது.

பிற சாதிக்காரர்களை வீட்டிற்குள் விடாத, வேலைக்காரர்களை பின்வாசல் வழி உள்ளே விடும் சுதா, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செல்வதாக பொய் சொல்வதை அவள் வீட்டுநாய் கூட அறிந்திருந்தது.

“எந்த வேச மக்காவாச்சும் லத்திய தூக்குட்டும்.. பொறவு அவன் அம்மாட்ட வாங்குன பால கக்கிட்டுத்தான் ஊரெவிட்டும் போகனும்லே” என்று அதிகாரியை மிரட்டிய பாதிரியாரைப் பார்த்தபடியேதான்.. அவளும் கூட்டத்தில் இணைந்தாள். பின்வாசல் வழி வந்தவளைக் கண்டு அவள் கை கோர்த்தாள். அது மன்னிப்பைக் கோரும் கை கோர்ப்பு.

“சகாய மேரி” என்று தன் கடுஞ்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட பாதிரியாரைப் பின் தொடர்ந்து அந்த நகரத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஊர்வலம் வந்தது. ஆண்டவனின் வார்த்தைகளை உதிர்க்கின்ற வெள்ளையுடைகளின் முகங்கள். ரஸாயனக் காற்றை சுவாசித்து வெள்ளையாகிப் போன அவள் உதடுகள் பைபிள் வசனத்திற்கு ஈடாக குல தெய்வத்தை முனுமுனுத்தது

சடங்குகள் முடித்து போய்க்கொண்டிருந்தவர்களை அங்கங்கே நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஏம்மா அந்தத் தெருல இருந்து நீயேம்மா?” என்கிற.. திருநீற்றை டிஸ்டெம்பர் போல் நெற்றியில் நிரந்தரமாய் பூசிய அதிகாரிக்கு..

“உசுரக் கொடுத்து இந்த மழையக் கொண்டு வந்தவ அவ, இந்த ஊருக்கே இது கன்னி தெய்வம்” என்றபடி பாதிரியாயிடம் கேட்டுப் பெற்ற மையவாடி மண்ணைக் காண்பித்தாள். மஞ்சள் தடவி அவள் வணங்கப் போகும் மண்ணிற்கு உயிர் கொடுத்தது மழைச்சொட்டு.

*

மழை நாளொன்றில் – 4

மழை பெய்யும் நாளொன்றில் வீட்டிற்கு வந்த கோடங்கி ஒரு படி அரிசி கேட்டான். கடையிலேயே இரண்டுமாதக் கடனும் வீட்டிலேயே குறைவாகத்தான் இருக்கு என்பதையுமறிந்திருந்தவன் கையில் ஒரு தம்ளர் அரிசியைக் கொட்டும் அம்மாவைப் பார்க்கையில் ஆச்சரியமாய் இருந்தது அவனுக்கு.

அச்சிறுவனைப் பார்த்ததும் வீட்டின் கூரையைப் பார்த்த கோடங்கி, “மாரியாத்தா போயிடுச்சா” என்றான். வாடிய முகத்தோடும் கருவளையங்களில் இன்னும் ஒளி பொருந்திய கண்களோடும் இருக்கும் அவள்.. “மூனாவது தண்ணியும் ஊத்தியாச்சு” என்றாள். தூரத்தில் இன்னொரு பையனும் கணவனும் முகத்தில் புள்ளிகளோடு அமர்ந்திருந்தனர்.

பையில் வாங்கிக் கொண்ட அரிசி முழுவதுமாக விழுவதற்குள் நான்கு மணிகளைப் பிடித்து வாயில் போட்டுக் கொண்டவன். பழைய அரிசியின் வாசனையில் புன்முறுவலித்தான்.

“மக்களப் பெத்த மகராசி நீ.. உன்னால மத்த உசுரும் பூமியில நிக்குது. குலதெய்வம் யாருன்னு தெரியாம நிக்கிற நீயும் தெய்வந்தான்”

வெலவெலத்தாள்.

“போய் வெளக்கேத்தி கோலம் போட்டு அதுல மஞ்சத்தண்ணிய தெளி.. மிஞ்சுன கோலம்தான் உன் சாமி.. அதைய படத்துல வரஞ்சி வை..”

“அதல்லாம் நம்பாத, ஏமாத்தி காசு வாங்குறான்” என்று உள்ளிருந்து எக்காளிமிட்ட குரலைக் கண்டித்தான்.

“நீ இன்னிக்கு உசுரோட இருக்கறதே இந்தம்மாவோட புண்ணியத்துல தான். சாமி இருக்கற எடத்துல மெதப்புக்குன்னு பேண்டவங்க தான் நீங்க”

இவனுக்கு எப்படித் தெரியும் என்று யாரும் கேட்காத போதும்..

“சுத்தமான தண்ணி நெனச்ச ஒடம்புல பொய் வராது – மழை – அந்த மாரியாத்தாவே உனக்கு யார்னு காட்டுவாடா”

அன்றிரவு நடுநிசி அமைதி கும்மெனச் சூல்கொண்டிருந்த மழை மேலிருந்து சோவென உதிரத்தயாராகும் முன்னர் இருந்த பேரமைதியில் அவ்வீட்டில் பரிசு கொடுக்க என்று வாங்கிய வெண்கல குத்துவிளக்கு ஒன்று விழுந்து உருண்ட சப்தம்.. அந்த சப்தமே குரலானது.

“டேய் யாராச்சும் வெளக்கப் போடுங்கடா”

அம்மையின் குரல் இத்தனைக் கம்பீரமாய், அதட்டலாய், எதிரொலிக்க கேட்காதவர்கள் அலறியடித்தபடி விளக்கைப் போட்டார்கள். படுக்கையின் மேலே நால்வரும் ஒருவர் பார்த்தார்கள். பின்னர் அம்மாவையே மற்ற மூவரும் பார்த்தார்கள்.

“குறிச்சு வச்சுக்கங்கடா என் பேரை”

மீண்டும் சப்தம் வந்தபோது அது அம்மா இல்லை என்று அச்சிறுவர்களுக்குப் புரிந்தது. நிதானத்துடன் அவர்களை அமரச்செய்து காகிதத்தை நீட்டினாள். இடது கையால் பேனாவை வாங்கி எழுதத் தெரியாமல் தண்ணீர் அழித்து எஞ்சியிருந்த கோலத்தையே காகிதத்தில் போட்டார்.

“என்னடி பாக்குற நான் தான் காந்தாரி”
கூப்பாடு போட்டு பெய்யத் தொடங்கியது மழை.

*

மழை நாளொன்றில் – 5

மழை பெய்யும் நாளொன்றில் தேநீர் வாங்கி வரச்சொல்லி தன் இளைய மகனை கடைவீதிக்கு அனுப்பினார் அவர். அடகிலிருந்து வீடு மீண்டது என்கிற சந்தோசத்தில் பொன்னியம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்ய தன் மகளோடு போயிருந்தாள் மனைவி. தானும் போயிருக்கலாம் என்றுதான் தோன்றியது. பட்டறையை முழுவதும் விற்று, தான் மீண்டு வந்தது உண்மையில் மீட்சியா என்கிற அலை.

“இனி ஒன்னும் செய்ய வேணாம், நாம் பாத்துக்கறேன்” என்று டிப்போவுக்கு செல்லும் மகனை வாசல் வந்து வழியனுப்பிய மனைவியின் முகத்தில் தாம் என்னவாக இருப்போம் என்று யோசித்திருக்கக் கூடாது.

“டீக்கடையில் இரும்புச் சத்தம் கேக்காமல் எப்படி இருக்க முடியும், டவுன்ல ஏ.டி.எம் பார்த்துக்குறியா” என்று சிநேகிதன் கேட்டிருக்கக் கூடாது.

மூன்றாவது புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்று சொல்லும் ரேடியோவில் அதற்கடுத்து ஒலிபரப்பிய பாடலைக் கேட்கும் முன்னரே நிறுத்தினார் அவர். அவர் வழக்கமாகப் பாடல் கேட்கும் நேரம்.. தான் நிப்பாட்டியிருக்கக் கூடாது.

சைக்கிளில் கழன்றுக் கிடந்த செயினை இழுத்துப் பொருத்திவிட்டு கையாலேயே பெடலைச் சுற்றுகையில் அது தன்னைப் பொருத்திக் கொண்டது. அவனுக்கு அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

“சைக்கிள் செய்ன மாட்டுறது மாதிரி தான் வாழ்க்க, ஒரு ரெண்டு பல்ல சரியா கோர்த்து சுத்துனா அதுவா மாட்டிக்கும். எதையாச்சும் ஒன்னையாவது உருப்படியா செஞ்சன்னா வாழ்க்க பிடிச்சுக்கும்.. ஒன்னு நல்லா நல்லா படி இல்ல வெளையாடு இல்லன்னா வேலை செய்யி.. எல்லாத்தலயும் அரமனசா இருந்தா எதுவுமே சரியாகாது”

குரங்குப் பெடல் அடித்தபடி ஒரு கையில் தூக்குச்சட்டி கீழே விழாது பிடித்துக்கொண்டே வானவில் பார்த்தபடி ஓட்டிச் சென்றான்.

‘ஏன் இப்பல்லாம் அப்பா டீக்கடைக்கு போகாம வாங்கிவரச் சொல்றார்’ என்று மனதில் தோன்றியது. தேநீர் கடையில் நிற்கையில் மனதும் சட்டையைப் போலே ஈரமாகியது.

தன்னை நோக்கி குரல் கொடுத்தபடியே டி.வி.எஸ்ஸில் வந்த பக்கத்து வீட்டு அண்ணன் “உங்கய்யா தூக்கு மாட்டிக்கிட்டாருடா” என்று சொல்கையில் அவன் தந்தை கேட்காமல் விட்ட பாடலின் கடைசி வரி ஒலித்தது.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

மழை நாளொன்றில் – 6

மழை நாளொன்றில் அவள் கோயிலுக்குச் சென்றிருந்தாள். சும்மா போக்குக் காண்பித்துவிட்டு பெய்யும் மழையென்று தான் அவள் நினைத்திருக்க வேண்டும். இல்லை அவன் அப்போதாவது பின்தொடர்ந்து வரமாட்டான் என்கிற நம்பிக்கையாய் இருக்கும்.

சின்ன கற்கோயிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு. கருவறைக்குள் நின்றபடி நான்கடி பெரிய லிங்கத்தைத் தழுவி வணங்கி கும்பிடுவது அவ்வூர் மக்கள் வழக்கம். மழை வலுத்த நேரத்தில் யாரோ ஒரு பெண்ணிடம் தனது ராசியை, நட்சத்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது அவனும் உடனிருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள். வேறு யாரிடமோ பேசுவது. இத்தனை நாள் தன்னைத்தான் பார்க்க வந்தானா என்கிற சந்தேகம் கிளர்த்த, அவள் புதுவிதமான உணர்வு கொண்டாள்.

தன்முறை வந்து லிங்கத்தை அணைக்கையில் வரும் பால் வாசம், கற்பூர வாசம் அன்று வரவில்லை. இறுக்கமாய் தழுவிக்கொண்டாள் அவன் வாசனை வந்தது. அவள் முதுகை யாரோ தட்டும் வரை எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை.

ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் கோயில் என்பதால் கோயிலுக்கு வந்தோர் வீடுகளிலிருந்து குடைகளோடும் சிலர் இரண்டு குடைகளோடும் வந்து கூட்டிச்சென்றனர்.

அவளைக் கூட்டிவர யாரும் ஊரில் இல்லை என்று தெரியும். அவள் அம்மாவின் சுகவீனத்திற்காய் தான் அவள் கோயில் வருகிறாள். அவன் குடை ஒன்றை இரவல் பெற்று அவளிடம் வந்தான். வீடுவரை வந்து விடுகிறேன் என்று சொல்லும்போது தலையாட்டினாள். அவள் குரல் சமாதியடைந்தது போல் தோன்றிற்று. இன்னும் ஒருமுறை என்று லிங்கத்தைத் தழுவிவிட்டு வந்தவளைப் பார்க்கையில் அவன் மிரட்சியாய் இருந்தான்.

அதுவரை இருந்த அவனுக்கு இல்லாத ஒன்றைத் தந்தாள். குடையை நான் பிடித்துக் கொள்கிறேன் என்று அவனுக்கும் பிடித்தபடி நடந்துச் செல்ல, அவனும் உடன் வந்தான்.

ஊருக்குள் நுழையும்போதே குடையிலிருந்து விலகி அவளை வீட்டுக்குச் செல்லுமாறும் தான் அடுத்தநாள் வந்து வாங்கிக்கொள்வதாகவும் சொல்லி வீடு நோக்கி விரைந்தான். குடையில் அவன் தொட்ட இடத்தின் சூட்டை மழைநீரால் குளிர்வித்தாள்.

*

மழை நாளொன்றில் – 7

மழை நாளொன்றில் பயணத்தை மேற்கொண்டிருந்தோம். அது முற்றிலும் எதிர்பார்த்தேயிராத விடுதிதான். முன்பொரு காலத்தில் அரண்மனையாக இருந்த அந்த மாளிகை இப்போது நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதியாகியிருந்தது.

ஒரு ராஜா ராணியை வரவேற்பது போல் பாவனை செய்யும் சிப்பந்திகளும் அவர் தம் சேவைகளும் நம்மையும் மன்னராக உணரவைக்கும் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அப்படித்தான் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவளைப் பாவிக்கும் முறையில் ஒரு வித்தியாசம் இருந்தது. அவளை உபசரிக்க, உபசரிக்க மிகுந்த மிடுக்குடன் நடமாட ஆரம்பித்தாள். அந்த நானூறு வருட பழமையான படுக்கையறையும் அதன் பொருட்களும் பழமையோடும் புதுமையை மறைத்துக் கொண்டுமிருந்தன.

உள்ளே நுழைந்ததும் தோரணையோடே அமர்ந்தாள். உடைகளை எடுத்துவைக்கப் பணித்தாள். சிப்பந்தியை அழைத்து தேநீர் கேட்கையில் அவன் கைகள் நடுங்கியபடி வைத்துவிட்டுப் போனான். கதவைச்சாற்றச் செல்கையில் அவன் என்னைப் பரிதாபத்தோடே பார்த்தபடி மூடினான்.

கடலோரம் என்பதால் இருட்டிக் கொண்டிருக்கும் வானமும் கடலும் எனது அச்சத்தை இருமடங்காகக் கூட்டியது.

எப்போதும் போல சல்லாபத்தோடு ஒன்றாகத்தானே குளிப்போம் என்கிற வழக்கத்தில் ஆடை களைந்து ஏற்கனவே குளித்துக் கொண்டிருந்த அவள் நான் கதவைத் திறந்ததும். “வெளியே போ” என்று கத்தினாள்.

சில விநாடிகள் நின்று துடித்த இதயத்திற்கு இயல்பான ரிதத்தை அடைய அவகாசம் தேவைப்பட்டது.

இரவு கவிழ ஆரம்பிக்க, ராஜா.. ராணி உபச்சார இரவுணவு முடித்து படுக்கைக்குச் சென்றோம். மிகுந்த ஆளுமையோடு என்மேல் அமர்ந்தபடி மேலாடைகளற்று இயங்கிக் கொண்டிருந்தவள், தலையில் ஏதோ அணிந்திருப்பதைப் போலவும் இயங்குவதால் ஏற்படும் அதிர்வில் அது கீழே விழுகையில் பிடிப்பது போலும் பாவனைகளைத் திரும்பத் திரும்பச் செய்தாள்.

நான் அதிர்ச்சியோடே அவளிடம் கேட்க முற்படுகையில் அவள் தலைக்குப் பின்னே இருக்கும் கண்ணாடியைப் பார்க்கச் சொன்னாள். நான் இறுகக் கண்களை மூடிக்கொண்டேன். நூற்றாண்டுகளைக் கண்ட கட்டில் ஆடும் சப்தமும் ஓடுகளில் சடசடக்கும் பேய் மழைச் சப்தமும் முயங்கிக் கொண்டிருந்தது,

நான் கண்களைத் திறக்கவேயில்லை.


ஜீவ கரிகாலன்டிரங்குபெட்டிக் கதைகள், கண்ணம்மா – இரு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். மின்னஞ்சல்: yaavarum1@gmail.com, yaavarumdocs@gmail.com

நீலப்பூ

1

அகராதி

நீலக்கலர் அவனுக்கு மிகப் பிடிக்கும். உடுத்தும் பெரும்பாலான ஆடைகள் நீலக்கலரிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வாள். நீலத்தைக் கவனித்து, கவனித்து அவளுக்கும் அந்த நீலத்தின் மீது தணியாத மையல் வந்து விட்டது, நீலமே மையல் வண்ணம்தானே! நீலத்தில்தான் எத்தனை வகை! வானிலொன்று, வண்ண மயிலில் ஒன்று, கடலில் ஒன்று, கார்வண்ணனில் ஒன்று, ராணுவத்தில் ஒன்று, ராமனில் ஒன்று, விடத்தில் ஒன்று, விழியில் ஒன்று… விரிந்து கொண்டேயிருக்கும் வானின் அழகைப்போன்று திகட்டாத விந்தை இந்த நீலம்! உலகமே நீலத்தினால் ஆனது என்ற எண்ணம் அவளுக்குள் நீலச்சொட்டாய் விழுந்து உள் எங்கும் வியாபித்திருந்ததை விளக்க முடியவில்லை…

ஆளுயரக் கண்ணாடியின் முன் நிற்கையில் அவள் தோளில் முகத்தை வைத்து ஒட்டியபடி நிற்பான். இரண்டு மூன்று முறைகள் தொடர்ந்து இப்படி வந்து நின்றதன் பலன் எப்போது அவள் கண்ணாடி முன் தனித்தே நின்றாலும் அவள் முகத்திற்கு முன் அவன் முகமே கண்களில் சிரிப்புடன் தெரியும்.

வெளிர் நீலநிற ஆடை அணிந்தீர்களானால் மனம் அமைதியாயிருக்கும் என வண்ணங்களின் ஆராய்ச்சிகள் கூறியதைப் படித்திருக்கிறாள். அவனும் அவனது நீலமும் அமைதியின்மையைத்தான் கொடுக்கிறது. நீலநிற ஆடை அணிவதால் வெப்பத் தாக்குதல் குறையும். அவ்வளவு ஏன் விளையாட்டுகளுக்கான இந்திய நிறம், நோபல் விருதில், ஐ.நா சபை அலுவலகச் சின்னங்களில் எல்லாம் நீலம்தான் என்று பள்ளியிறுதி ஆண்டு விளையாட்டு விழாவில் தலைமையேற்ற சிறப்பு விருந்தினர் கூறியதை அவனிடம் கூறினாள். பல் தெரியாமல் சிரித்தான். பாராட்டுவது போன்று இருந்த அந்தச் சிரிப்பிற்காக மேலும் சில தகவல்களைத் தேடிப்படித்துக் கூறினாள். கேட்டுவிட்டு இடுப்பில் இரு கைகளையும் கோர்த்து தரையிலிருந்து நின்றவாக்கில் இரண்டடித் தூக்கி இறக்கினான். மாலைப் பொழுதொன்றில் தென்றல் வருட நீலநிற ஆகாயம் காணும் கண்களில் ஆகாயம் முழுதும் அவனது முகமும் வண்ணமுமே தெரிந்ததை நினைத்து தனக்கு டியுட்டரெனோஃபியா என்னும் நிறக்குருடு வந்து விட்டதோ எனவும் அவள் யோசித்தது உண்டு.

இங்கு வரவிருக்கும் தேதியையும் நேரத்தையும் இன்று மேலதிகாரியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றிருக்கிறான்.

கொஞ்சமாய் வரையத் தெரியும். மலர்கள் பிடிக்கும். அதுவும் நீலக்கலரில் ஆழ்ந்து கிடக்கும் சங்குப்பூ மீது கூடுதல் பிரியம். வந்தவுடன் பரிசளிக்கவே இந்த ஊதாப்பூ. அதைத்தான் இம்மி இம்மியாக வரைய முற்பட்டுக் கொண்டிருக்கிறாள். மலரின் காம்பு பாகத்திலிருந்து ஆரம்பித்திருக்கவில்லை. இதழின் நுனியிலிருந்து கோடிழுத்து ஆரம்பித்தாள். இரண்டடித் தாள் முழுதும் ஒரே ஒரு சங்குப்பூ வரையத் திட்டம். அகண்டு விரிந்திருந்த நுனிப்பகுதி தீட்டும் பொழுது அந்தத் தடிமனான தாள் மீது கிட்டத்தட்ட படுத்து வரைந்து கொண்டிருந்தாள். முதன்முதலில் அவனுக்கும் அவளுக்குமான தூரம் இப்படித்தான் மையப்பகுதி விட்டு அந்தந்தப் பக்க, நுனியில் இருந்தது.
*
ஷாப்பிங் மாலில் விரைந்து கொண்டிருந்த லிஃப்ட்டிற்குள் இருக்கையில் அவன் கீழ்தளத்தில் நின்றிருந்தான். நின்றிருந்த தோரணையும் இங்கிருந்து தெரிந்த அவனது ஒரு பக்கமும் கவர்ந்தது. ஓசைப்படாமல் அதே லிஃப்ட்டில் இறங்கிப்போய் பார்க்கலாமா என்று விளையாட்டாய்க் குறுகுறுத்த மனதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டாள். சங்குப்பூவின் நுனியில் இந்த ஓரத்தை தீட்டிக் கொண்டிருக்கும் போது அந்த ஓரம் எட்டாமல் மெனக்கெட வேண்டியிருந்தது. ஷாப்பிங் மாலில் அவன் ஒரு பக்கமும் இவள் ஒரு பக்கமும் சந்திக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது போல அன்று அவன் பார்த்தது போலவும் இருந்தது பார்க்காதது போலவும் இருந்தது.

வீட்டிற்கு வந்து அவன் சிந்தனையே சுற்றியது. அவன் பார்த்திருந்து அவன் மனதிலும் இதேபோல என் நினைவு இருந்தால் திரும்பவும் சந்திப்போம். சந்திக்க வேண்டும். அந்த வியாழன் அன்று துர்க்கை அம்மனிடம் விண்ணப்பித்தாள். வெள்ளி எள் விளக்கிட்டாள். அடுத்த வாரம் அதே கிழமை, அதே இடம், அதே நேரத்திற்குச் சென்றிருந்தாள்.

இல்லை.

இரண்டாவது வாரம் திரும்பவும் போகச் சொல்லியது நினைவில் இருந்த அவன் உருவம்.

சென்றாள்.
*
பூவின் மத்தியப் பகுதிக்கு வந்திருந்தாள். பென்சிலில் கவனமாகத் தீட்டி அழுத்தமானத் தீற்றல் கொடுக்காமல் மெலிதாக அதே சமயம் நன்றாகத் தெரியும்படி தீற்றிக் கொண்டிருந்தாள். இது முடிந்த பின்தான் நீலத்தை அழுத்தமாய்க் கலக்க வேண்டும்.
*
ஷாப்பிங் மால் செல்லும் போது எந்த நம்பிக்கையில் வருகிறோம், எது நம்மை இங்கே நடத்திக்கொண்டு வருகிறது தனக்குத்தானே ஆச்சரியப்பட்டுக் கொண்டே விழிகளைச் சுழல விட்டாள். வந்திருந்தான். கறுப்பென்றால் ஒரு இடம் கூட விடாத நெருக்கமான அடர்த்தி மிகுந்த கறுப்பு. பளபளப்பான தோல். அகண்டு பரந்திருந்த தோளின் கம்பீரம் தஞ்சமடையக் கட்டளையிட்டது. சிரித்தால் திகட்டாத அந்தச் சிரிப்பு திரும்பவும் எப்போது வாயில் அமரும் என்ற எண்ணத்தைத் தோன்ற வைத்தது.. அரிதாகவே பல் தெரியச் சிரித்தான். பால் வண்ணத்தில் கரிய முகத்தின் மேல் அச்சுக் கொட்டியது போல் பற்கள். திட பசும்பால்.

மறைத்தவற்றைக் கண்டுபிடித்து விடும் கண்கள் கொண்டவன்! ஒரு தரத்துக்கு மேல் இன்னொரு தரம் பார்த்தாலே கண்டுபிடித்து கருவிழி, மேல் நின்று நகர்கிறது. துடிப்பும் உழைப்பும் சேர்ந்து வாகான உடல்..
மயிர்கள் சுருண்டிருந்த உறுதியானக் கைகளில் அணைந்து கொள்ள வேண்டும். ஒருமுறை பார்த்து நகர்ந்த பிறகும் அழிச்சாட்டியமாய் நகராமல் கண்களை நிறைத்து நின்று கொண்டது கறுப்பு வண்ணம். திரும்பிய பக்கமெல்லாம் கண் மறைத்து நின்ற வண்ணத்தை மிகுந்த முயற்சி செய்து விலக்கி விலக்கி நகர வேண்டியிருந்தது.
நெருப்பு மாதிரியல்லவா மின்னுகிறது. மஞ்சளும் செந்நிறமுமாக இருக்கிற நெருப்பை அணைத்தால் வருகிற கரியின் கருப்பு களை இழந்து போகிறது. ஆனால் இந்தக் கருப்பு மினுங்குகிறதே! மனது கரைந்து கொண்டிருந்தது.

எப்படிப் பேசுவது, என்னப் பேசுவது? ஏதேனும் பேச வேண்டுமென்று மனம் உந்தியது. அவனுக்கும் இதே போன்று எண்ணம் இருக்குமா? தெரியாமல் எப்படிப் பேசுவது? இருவரும் ஒரே வரிசையில் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “நீங்க இதே ஏரியாவா?” அவன்தான்… சட்டென்று வந்தக் கேள்வியில் திகைத்துப் போனாள்.

“இ.. இல்லைங்க”

“ஹோ ‘இல்லைங்க’க்குக் கூட இனிஷியல் இருக்கா!”

இறுக்கமும் பதட்டமும் தளர்ந்து சிரித்துப் பேசத்தொடங்கினாள். பேசினார்கள். அடுத்தடுத்த முறை என்று வேலை வைத்துக்கொண்டு அதே மாலில் சந்திப்பு தொடர்ந்தது. அதை ஒட்டிய ரெஸ்டாரெண்டில் காஃபி நேரங்கள் அதிகரித்தன. பார்க், பீச், சினிமா தியேட்டரின் நேரங்களும் போதாமல் ஒருநாள் திருமணம் செய்து கொள்ளலாமென முடிவெடுத்து அவர்களே திருமணம் பேசி ஒரு நன்னாளில் செய்து கொண்டார்கள். சுற்றம் பின்னொரு நாளில் இணைந்து கொண்டது. இணைத்துக் கொண்டது.
*
பூவின் மையக்குழிவுப் பகுதிக்கு வந்திருந்தாள். அவனுடனான தனித்த பொழுதுகள் நினைவிற்கு வந்து, மையப்பகுதியை வரைய இயலாமல் பென்சிலைக் கீழே வைத்து விட்டாள். வெளியில் சென்று சிறிது நேரம் ஆகாய நீலத்தை விழிகளில் விழுங்கினாள். தாகம் தீர்ந்த பறவைப் போன்று சிறிது ஆசுவாசம் அடைந்து உள்ளே வந்து மையப்பகுதிக்கு கணம் கூட்டக்கூட்ட விரல்கள் நெகிழ்ந்தன.
பூ கசிந்தது.
*
அவனுக்கு உடை மறைத்த இடம் ஒரு கலர், முதுகு ஒரு கலர், தொடை ஒரு கலர், வயிறு ஒரு கலர் என்றில்லை அத்தனையும் இடம் விடாமல் ஒரே அளவில் அடித்துக்கொள்ள முடியாத கறுப்பு மின்னல். மர்மப் புன்னகை! அப்படியே அவனைத் தன்மேல் அப்பிக்கொள்ளும் ஆசை வரும். ஒட்டிக்கொள்ள முடியாததால் அவளது எண்ணத்தின் வடிகாலாக கை காலென மாற்றி மாற்றி கிள்ளி வைப்பாள். சிரிப்பான். அவனுக்குத் தெரியும் கிள்ளிய இடங்களில் முத்தங்கள் கிடைக்குமென…
*
பெருமூச்சுடன் இடைவெளி விட்டு ஒருவழியாக முடித்தாள். இன்னும் சில சின்னச்சின்ன ஒழுங்குகளைச் செய்து முடித்து வண்ணம் சேர்க்கும் பணியில் சிரத்தையாயிருந்தாள். அப்படியே கண்ணனின் நிறம். லேசாகத் தீற்றியிருந்த கோடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நீலத்தைக் கலந்தாள். நீலம் அடர்ந்தது.

வெளிர் பச்சையை நடுவில் கொடுத்து விட்டு நிமிர்ந்த போது தானே சங்குப்பூவாகி இருந்ததாய் உணர்ந்தாள். வரைந்த பூவின் மீது உடல் ஒட்டி, கன்னம் வைத்துப் படுத்துப் பார்த்தாள். இரண்டு நீலப்பூக்கள்!.. வரைந்ததை எடுத்து வைத்துவிட்டு எழுகிறாள். வரையும் மும்முரத்தில் கவனிக்காதப் புடவை கடலலை நனைத்த மணல் போல அலைந்திருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

வீட்டில் இருக்கையில் அவன் உடுத்தும் மஞ்சள் வண்ண அரைவேட்டி அலைந்திருக்கும் போது கடலோர மணலெல்லாம் மஞ்சள் வண்ணமானது போலிருக்கும்.

அவன் நினைவுக்காக இந்த மேகநிறப் புடவையை உடுத்திக் கொண்டிருந்தாள். கண்ணாடியின் முன் நின்று புடவையை சரிசெய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க, பிளவுசிலும் தோளிலும் நீலக்கலர் விரவிக் கிடக்கிறது.. கண்ணாடியில் தெரியும் தோள், அதனில் அப்பிக் கிடக்கும் நீலம். கண் விலக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் தான் ஒரு கேள்வி போலவும் அவன் பதில் போலவும் தெரியும். பன்மையா? ஒருமையா? எனில் எது ஒருமை? எது பன்மை? பெண் உடல் கேள்வி. ஆண் உடல் பதிலென நினைத்துக் கொள்வாள். அவன் தன் தோளில் முகம் புதைத்துக் கொள்ளும் காட்சி, தனித்த பொழுதில் இதே தோளில் செல்லமாய் பற்பதித்த தருணம், முகவாய்க் கட்டையை வைத்து தாங்கியாக்கிய நேரம் எல்லாமும் மங்கலானக் காட்சியாகிக் கண்முன் சுருங்குகிறது.

கண்ணாடியில் தெரியும் தன்னைக்கண்டு தனக்குத்தானே தோழியாக்கிப் பேசிக்கொள்கிறாள். பெரிய வேலை, கை நிறைய சம்பளம் என்று வெளிநாட்டிற்குச் சென்று விட்டவன் வருவதற்குள் தனது சின்னச்சின்ன ஆசைகளும் போய் விடுமோ, இளமையும் போய் விடுமோ என நொந்து கொண்டவளாகக் கூறினாள். “அடுத்த ஜென்மத்திலயாவது என் கூடவே இருக்கணும். இதோ இப்படிக் கலைஞ்சிருக்க புடவை, ஈஷியிருக்க மை, இந்தப் பூ எல்லாமும் பக்கத்திலேயே இருந்து பாக்கணும்” பொதுவாய் ஜீன்ஸ், குர்தி, சுடி என்று அணிபவள் அவனுக்குப் பிடிக்கும் என்று அவன் நினைவில் புடவை உடுத்தியிருந்தாள். எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் பிடிவாதமாய் வீடியோ அழைப்பைத் தவிர்த்து விடுவாள். அவள் அம்மா கூட சொல்லிப் பார்த்து அலுத்து விட்டாள். ஏக்கம் இன்னும் கூடுமென உறுதியாக மறுத்து விட்டாள்.

செய்தி பரிமாற்றமெல்லாம் செவிவழி அழைப்புகளில்தான். அதனை விட்டால் மெசேஜ். அவள் குறிப்பிட்ட நேரம் வந்து விட்டது மேலதிகாரியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேனென்ற நேரம் இது. டெலிகிராம் சத்தம் குயில் கூவுவது போல் நுண்ணிய இடைவெளி விட்டு இரண்டு முறை கேட்கிறது. நாலு இலக்க பாஸ்வேர்டை நொடிக்கும் குறைவான நேரத்தில் தட்டச்சிட்டு ஓபன் செய்கிறாள்.

இந்த வருடமும் வர இயலவில்லை என்கிறது டெலிகிராம் மெசேஜ்.

கண்கள் மூட கருமை நிறம் உள்ளே அடர்ந்து பரவுகிறது. மிகத் தொலைவில் அவன் முகம் தெளிவற்று மங்குகிறது. கேள்விகள் அத்தனைக்கும் பதில் கிடைப்பதில்லை. மெதுவாகத் தனக்குள் சொல்லிக் கொண்டு அப்படியே வரைந்த நீலப்பூவை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள். உடற்சூட்டில் சங்குப்பூவின் நீலம் வெளிறத் தொடங்கியிருந்தது….

***


அகராதி
aharathi26@gmail.com

பகல்கனவு

0

அதீதன்

யிற்றை இன்னும் கொஞ்சம் மேலேற்றிக் கட்டியிருக்கலாம். ஒருவேளை உயரம் பத்தாமல் போய்விட்டால் என்ன செய்வது” சுருக்கைத் தன் கழுத்தில் மாட்டிக்கொள்ளும் முன் கிருஷ்ணன் இவ்வாறு எண்ணிக் கொண்டான். காலுக்குக் கீழிருந்த ஸ்டூலைத் தள்ளிவிட்டவுடன் முழு உடலும் ஊஞ்சலாடத் தொடங்கியது. கால்களுக்கும் தரைக்கும் இடையேயான தூரம் மூன்று அல்லது நான்கடிகளுக்குள்ளாகவே இருந்தபோதும் பல்லாயிரக்கணக்கான அடிகளுக்கும் மேல் அந்தரவெளியில் கால்கள் நடனமாடுவது போலவும் உடலிலிருந்து கடைசி சொட்டு ரத்ததையும் உறிஞ்சிக் குடித்துவிட முனையும் அட்டைப்பூச்சியினைப் போல முழு உயிரையும் உறிஞ்சி எடுத்துவிடும் வேட்கையில் முகம் தெரியாத பெண்ணொருத்தியின் உதட்டிலிருந்து கழுத்திற்குள் பிரவேசிக்கும் அழுத்தமான முத்தத்தினையும் ஒருசேர உணர்ந்தான்.

உயிர் துடித்து அடங்குவதற்கும் மொபைலில் அலாரம் அடிப்பதற்கும் சரியாகஇருந்தது. சட்டென்று கண்விழித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் இயல்பாகவே இருந்தது. இப்போது கட்டிலில்தான் உட்கார்ந்திருக்கிறான். கழுத்தில் கயிற்றின் தடங்கள் எதுவும் இல்லையென்பதையும், தூக்கிட்டுக்கொள்ள பயன்படுத்திய ஸ்டூல் கூட எப்போதும் இருக்கும் மூலையிலேயே சமர்த்தாக இருப்பதையும் சற்று முன்னர் முத்தமென்னும் கொலைக்கருவியால் உருவியெடுக்கப்பட்ட உயிர்கூட தனது உடலிலேயே பத்திரமாகப் புதையுண்டிருப்பதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். சிலநிமிடங்கள் நிதானித்த பிறகு கடிகாரத்தின் சிறிய முள் ஏழாம் எண்ணிலும் பெரிய முள் பன்னிரண்டாம் எண் தாண்டிய மூன்றாவது கோட்டிலும் நின்றிருப்பதைக் கண்டவன் மணி 7.03 “பகல்கனவு” என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

“பகல்கனவு” இந்த வார்த்தை அவனுக்கு நிம்மதியைத் தந்தது. மீண்டும் ஒருமுறை சத்தமாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். இப்போது மனம் கொஞ்சம் தெளிவு பெற்றிருந்திருந்தது. சூடாக ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியதால் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு தெரு முக்கிலிருக்கும் டீக்கடைக்குக் கிளம்பினான்.

அந்தத் தெருவில் நான்கிலிருந்து ஆறு டீக்கடைகளாவது இருக்குமென்ற போதும் தெரு முக்கிலிருக்கும் கடையில்தான் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். கிருஷ்ணன் கூட அங்கு டீ குடிப்பதைத்தான் பெரிதும் விரும்பினான். அதற்குக் காரணம் அந்தக் கடையில் கிடைக்கும் “தம்டீ”தான். முன்னரே தயார் செய்யப்பட்ட தேநீரை கேனில் ஊற்றி மேலே கனமான உருண்டைக் கல்லை வைத்திருப்பார்கள். டீயில் சர்க்கரைக்கு மாறாக கருப்பட்டியோ, நாட்டுச்சர்க்கரையோ தான் சேர்க்கப்பட்டிருக்கும்.

எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும் கேனில் ஏலக்காய் வாசனையுடன் கூடிய டீயை பிளாஸ்டிக் கப்புகளிலோ, கண்ணாடி டம்ளர்களிலோ அல்லாமல் அதற்கென பிரத்யேகமாக வைத்திருக்கும் கப்&சாஸரில் வாங்கிக் குடிப்பது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

டீக்கடைக்கு வந்தபிறகு தான் கிருஷ்ணனுக்கு தான் இன்னும் பல் துலக்கவில்லை என்கிற நினைவே வந்தது. காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல்தேய்த்து விடுவான். இதுவரை ஒருநாள்கூட அதைச் செய்யாமல் டீயோ, காப்பியோ குடித்தது கிடையாது. சிறுவயதில் அம்மா சொல்லிக் குடுத்த வழக்கம் இது. இப்போதுகூட அறைக்குச் சென்று பல்துலக்கிவிட்டு வரலாம். ஆனால் நாக்கு தம் டீயின் சுவைக்காக ஏங்கியது. வாழ்வில் இந்த ஒருமுறை மட்டும் பல்துலக்காமல் டீ குடிப்பதனால் பற்சிதைவோ அல்லது வாய்புற்று நோயோ வந்துவிடப் போவதில்லை. மேலும் அம்மா சொல்லிக் கொடுத்த பழக்கங்களில் பலவற்றை விட்டொழித்தாகி விட்டது. இந்த ஒன்றை மட்டும் காப்பாற்றி என்ன புண்ணியம் என்று தனுக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன் அங்கு குடிதண்ணீர் என்று பெயிண்டினால் எழுதப்பட்டிருந்த ட்ரம்மிலிருந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தான். அவனைப் பார்த்த உடனேயே மாஸ்டர் கப்&சாஸரில் தயாராக வைத்திருந்த டீயை எடுத்து உறிஞ்சத் தொடங்கினான். பல் துலக்காமல் டீகுடிப்பது அவனுக்குப் புதிதாகவும் சங்கடமானதாகவும் தோன்றினாலும் சமாளித்துக் கொண்டு குடித்துவிட்டு அறைக்குத் திரும்பினான்.

அறைக்கு வந்தவுடன் கட்டிலில் அமைதியாக உட்கார்ந்தவனுக்கு காலை நடந்தவைகளை நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு கொடுங்கனவு இதற்குமுன் எப்போது வந்தது என நினைவுகூறத் தொடங்கினான்.

முதல் முறையாக பாட்டியிடம் கிருஷ்ணனை விட்டுவிட்டு அப்பாவும் அம்மாவும் வெளியூருக்குச் சென்றிருந்தனர். அப்போது அவனுக்கு எட்டு வயதிருக்கும். அதுவரை அவனைத் தனியாக விட்டுவிட்டு எங்கேயும் சென்றது கிடையாது. காலையில் எந்த நினைப்பும் இல்லாமல் விளையாடியவன் இரவில் பாதி தூக்கத்தில் எழுந்து கதறி அழத்தொடங்கினான்.. பக்கத்தில் படுத்திருந்த பாட்டி எழுந்து அழுது கொண்டிருக்கும் பேரனைத் தேற்றி விசாரித்த போதுதான் அம்மாவும் அப்பாவும் ஊருக்குச் சென்று கொண்டிருக்கும் பேருந்து விபத்திற்குள்ளாகித் தீப்பிடித்து எரிவதாகவும் அதில் அவர்களிருவரும் சிக்கிகொண்டிருப்பதாகவும் சொல்லி மீண்டும் அழத்தொடங்கினான்.

“அடப்போடா கிறுக்குப் பயலே! இதுவரைக்கும் அவுங்க ரெண்டு பேரும் உன்னத் தனியா விட்டுட்டுப் போனதில்ல. இப்போத்தான் மொதமொறையா போயிருக்காங்க. அதான் இப்பிடியெல்லாம் கண்டதையும், கெடுதலையும் நெனச்சுக்கிட்டு நடுராத்திரில அழுதுக்கிட்டுருக்க. நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். புள்ள ஏங்கிப் போயிரும் கூட்டிப் போங்கன்னு கேட்டாங்களா ரெண்டுபேரும்… இப்போ பாரு” என்று சொல்லிக்கொண்டே நெற்றியில் திருநீறு பூசிவிட்டு அணைத்துக் கொண்ட பின்தான் கொஞ்சம் தூங்கினான்.

அதற்கடுத்து வந்த நாட்களில் அதிலிருந்து மீளமுடியாமல் பயத்துடனேயே கழித்தான். மூன்று நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து அவர்களிருவரும் வந்ததுமே ஓடிச்சென்று அம்மாவை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினான். அவர்களைக் கண்ணால் பார்த்த பின்புதான் அவனால் இயல்பு நிலைக்கு வரமுடிந்தது. அம்மா ஏன் அழுகற என்று கேட்க பாட்டிதான் காரணத்தை விளக்கிச் சொன்னாள். அம்மா சிரித்துக்கொண்டே நெற்றியில் முத்தமிட்டு உன்ன விட்டுட்டு நாங்க எங்கடா கண்ணா போவோம், நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகி சந்தோஷமா இருக்கறதப் பாத்துட்டுதாண்டா செல்லம் நாங்க போவோம் என்று சொன்னாள். அவள் சொல்வது முழுதாகப் புரியவில்லையென்றாலும் இனி எங்கேயும் அவர்கள் தன்னை விட்டுவிட்டுப் போக மாட்டார்கள் என்கிற உத்திரவாதமே பெரும் சந்தோஷத்தைத் தந்தது.

கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் என்னைத் தனியே விட்டுப்போய் விட்டார்கள். அவர்களுக்கென நானும் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று அணிச்சையாய் வாய் முணுமுணுத்தது. அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் ரிங்டோனாய் ஒலிக்கத் தொடங்கி பல்லவி முடிந்து சரணத்திற்கு வந்த பின்னரே சுயநினைவுக்கு வந்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அழைப்பது மணி. அவனோடு ஒன்றாகப் பணிபுரியும் நண்பன். தினமும் அவனது பைக்கில்தான் இருவரும் அலுவகத்திற்குச் செல்வார்கள். தொடுதிரையில் பச்சை நிற வளையத்தைத் தேய்த்து ம்! சொல்லுடா என்றான்.

எதிர்முனையில் “என்ன சொல்லுடா… எவ்வளவு நேரமா கால் பண்ணிக்கிட்டுருக்கேன் அட்டண்ட் பண்ணாம எங்க போயிருந்த” என்று கேட்டவனுக்கு. “ஓ! சாரிடா பாத்ரூம்ல இருந்தேன். அதான் உடனே ஃபோன எடுக்க முடியல” என்று பதிலளித்தான். “பரவால்லடா இதுக்கெதுக்கு சாரில்லாம், சரி நான் வீட்ட விட்டுக் கிளம்பிட்டேன். பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன் ரெடியா இரு” என்றான். “ம்! சரி ரெடியா இருக்கேன்” என்று சொல்லிவிட்டு காலைத் கட் செய்தவன் பத்து நிமிடத்தில் மணி வந்துவிடுவதாகச் சொல்லியிருப்பதால் எழுந்து குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்கையில் மீண்டும் அந்தக் கனவு நினைவுக்கு வந்தது. சம்பவம் நிகழும் சமயம் நிச்சயமாக பகலோ, மதியமோ, அல்லது மாலையோ இல்லை அது இரவுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும் அது நாளையாகவோ அல்லது வேறொரு நாளாகவோ இல்லாமல் நிச்சயமாக இன்றுதான் என்பதையும் உறுதியாக உணர முடிந்தது. எனில் இந்த நாளின் ஏதோவொரு பகுதியில் நிகழக்கூடிய ஏதேனுமொரு புறக்கணிப்போ, அவமானமோ, அல்லது தோல்வியோதான் தன்னை தற்கொலைக்கு இட்டுச்செல்லக் கூடிய காரணியாக இருக்கலாம். ஆகவே இன்றைய தினத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எப்படியேனும் இந்த ஒருநாளை மட்டும் பிரச்சனை எதுவுமில்லாமல் சமாளித்துவிட்டால் பின்னர் அந்தப் பகல் கனவு குறித்தோ அதன் தாக்கம் குறித்தோ கவலை கொள்ளத் தேவையில்லை. மாறாக மருத்துவர் ஃப்ராய்டின் கூற்றுப்படி “ஆழ்மனதின் நினைவுகள்தான் கனவுகளாக உருத்தோற்றம் கொள்கின்றன”வெனில், இதுவரை தற்கொலைக்கான எண்ணமே அவனது மனதில் வந்தது கிடையாது. அதற்கான எந்தக் காரணங்களும் இதுவரை வாழ்வில் நடந்ததில்லை. எனவே அது ஒரு பொருட்படுத்தத்தக்க கனவாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நிற்க! வாசகர்களின் கவனத்திற்கு: இதுவரை நாம் சொல்லிக்கொண்டு வந்த கிருஷ்ணனின் தற்கொலை குறித்தான பகல் கனவைப் பற்றிய இந்தக் கதையின் மேற்சொன்ன பத்தியில் உள்ள இரண்டாவது கூற்றை அதாவது மருத்துவர் ஃப்ராய்டின் கூற்றை அடிவொற்றிய காரணத்தை நாம் எடுத்துக் கொண்டோமேயனால் இந்தக் கதையும் அந்தக் கனவைப் போலவே பொருட்படுத்தத் தேவையற்ற ஒன்றாக ஆகிவிடும். ஆனால் முதலில் சொன்ன கூற்றின்படி இந்தக் கதை தொடங்கும் நேரமும் அவன் கனவு கண்ட நேரமும் அந்த நாள் முடியக்கூடிய தருணமாக இல்லாமல் அந்த நாளின் தொடக்கமாக இருப்பதால் மீதமிருக்கக் கூடிய நாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கவோ அல்லது நடக்காமல் போகவோ வாய்ப்புள்ளது. ஆகவே நடப்பவைகளின் நிகழ்தகவுகளின் வழியேதான் நம்மைப் போலவே கிருஷ்ணனும் மீதமிருக்கும் நாளை தொடர வேண்டியிருக்கிறது.

கீழிருந்து பைக் ஹாரன் சத்தம் கேட்டவுடன் உடையணிந்து தயாராக இருந்தவன் வெளியே எட்டிப் பார்த்து “இதோ வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அறைக் கதவைப் பூட்டி கீழிறங்கிச் சென்று உறுமிக்கொண்டிருந்த பைக்கில் ஏறிக்கொண்டான். எப்போதுமே அலுவலகம் போகும் வழியில் இருவரும் ஏதேனும் பேசிக்கொண்டே போவது வழக்கம். பெரும்பாலும் பேச்சைத் தொடங்குவது கிருஷ்ணனாகத்தான் இருப்பான். அன்று வழக்கத்திற்கு மாறாக அவன் பேசாமலிருப்பது மணிக்கு வித்தியாசமாகப்பட்டது. வண்டி சிக்னலில் நின்றபோது திரும்பிப் பார்த்து. “ஏன்டா இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டவனிடம் “ஒன்னுமில்ல.. நான் சாதாரணமாத்தான் இருக்கேன்” என்று பதிலளித்தான்.” எதுவுமே பேசாம இப்பிடி உம்முன்னு வரியே அதான் கேட்டேன்” என்று மீண்டும் கேட்கவும், சிக்னலில் பச்சை விழவும் சரியாக இருந்தது. கிருஷ்ணன் “பாரு சிக்னல் போட்டாங்க” என்று சொல்ல, சரி சாயுங்காலம் பேசிக்கலாம் என்று சொன்னபடியே மணி வண்டியைக் கிளப்பினான்.

அலுவலகத்தில் அவனுக்குப் பிரச்சனை தரக்கூடிய விஷயமென்று எதுவுமில்லை. வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து இன்றுவரை எல்லோரிடமும் நற்பெயரையே வாங்கி வந்திருக்கிறான். மற்ற மாதங்களைப் போலவே இந்த மாதமும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த டார்கெட்டை முடித்துவிட்டான். இனி அவனுக்கு வரப்போவது எல்லாமே கூடுதல் வருமானம் தான். மேலும் இந்த மாதத்தின் சிறந்த விற்பனைப் பிரதிநிதியாகவும் அவனே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து நான்காவது மாதமாக அவனே சிறந்த விற்பனைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டிற்கான சிறந்த பிரதிநிதியாக அவனே தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு அன்று மாலைக்குள்ளாகவே அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சகபணியாளர்கள் பேசிக்கொண்டனர்.

அதைக்கேட்டு கொஞ்சம் கூட மகிழ்ச்சியடந்ததாகவோ குறைந்தபட்சம் அதைப் பொருட்படுத்தியதாகவோ கூடத் தெரியவில்லை. மாறாக வந்திருக்கும் வாடிக்கையாளரிடம் கனிவாக நடந்து கொள்வதிலேயே குறியாக இருந்தான். அவனுக்கு வாழ்த்துச் சொல்பவர்களிடம் அவர்களைப் பார்க்காமலேயே வாடிக்கையாளரைப் பார்த்துக்கொண்டே நன்றி கூறினான். வெளிப்புறத்தில் மற்றவர்களின் பாராட்டுக்களை அங்கீகரிக்காதது போன்ற தோற்றம் இருந்தாலும் உண்மையில் வந்திருக்கும் வாடிக்கையாளரைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அவர்களில் எவரேனும் அதனைத் தனது கௌரவக் குறைச்சலாக எடுத்துக் கொண்டு இச்சிறு விஷயத்தைப் பெரிதுபண்ணி மேலாளரிடம் ஏதேனும் புகார் தெரிவிக்கவோ, அதனையே காரணமாகக் கொண்டு தனது நற்பெயர் களங்கப்பட்டு விடலாம். மேலும் இந்த ஒரு காரணத்திற்காக அவனுக்குக் கிடைக்கக்கூடிய பாராட்டுகளும், பரிசுகளும் தட்டிப் பறிக்கப்படப் போவதில்லையெனினும் அன்றைய தினம் அது மேலாளரின் கோபத்தைத் தூண்டக் கூடியதாக அமைந்து ஏதேனும் கடுமையாகச் சொல்லிவிட்டால் அதுவே கூட தன்னுடைய கனவு பலிப்பதற்கான காரணமாக அமையலாம் என்கிற பயமே அவ்வாறு நடந்துகொள்ளச் செய்தது.

மேலாளரின் அறையிலிருந்து வெளியே வந்து கிருஷ்ணனை மேனேஜர் உள்ளே அழைப்பதாகச் சொன்ன நண்பனையே திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் “ஏய் உன்னைத்தான் உள்ள மேனேஜர் கூப்புட்றாரு” என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகச் சொன்னவுடன் தான் திடுக்கிட்டு அதனை உள்வாங்கியது போல, ‘இதோ போறேன், போறேன்’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றவனை மணி குழப்பத்துடன் பார்த்தான்.

அறைக்குள் நுழைந்தவனை கவனிக்காமல் கம்ப்யூட்டரில் எதையோ மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்த மேலாளரின் முன் எதுவும் பேசாமல் கதவினருகிலேயே நின்று கொண்டிருந்தான். எதேச்சையாய் தலையைத் நிமிர்த்தியவர் அவன் நின்றிருப்பதைப் பார்த்து “கிருஷ்ணன் எப்போ உள்ள வந்தீங்க?” என்று கேட்டதும்தான் தான் கதவைத் தட்டி உள்ளே வருவதற்காக அனுமதி கேட்கும் குறைந்தபட்ச நாகரீகம்கூட இல்லாமல் தான் உள்ளே வந்திருப்பது உறைத்தது. பதற்றத்துடன் “சாரி சார்.. நீங்க கூப்ட்டீங்கன்னு மணி சொன்னான், நான்தான் கதவைத் தட்டாமலேயே வந்துட்டேன்” என்று சொன்னவனின் பதட்டத்தைக் கவனித்தவர் “இட்ஸ் ஓகே அதனால ஒன்னுமில்ல முதல்ல வந்து உக்காருங்க” என்றவுடன் எதிரிலிருக்கும் இருக்கையில் உட்கார்ந்தவனைப் பார்த்து “வாழ்த்துக்கள் கிருஷ்ணன் ட்ரீட் எப்போ தரப்போறீங்க? எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தவனிடம் “கிருஷ்ணன் ஆர் யூ ஆல்ரைட்” எனக் கேட்டார். சுதாரித்துக் கொண்டவன் பதட்டத்துடன் “சாரி சார் ஐ ஆம் ஆல்ரைட் சார்” என்று சொன்னான். மேலாளர் “சரி சரி பதறாதீங்க ரிலாக்ஸ் ரிலாக்ஸ்” என்று சொல்லிக்கொண்டே தனது மேஜையிலிருந்த கண்ணாடி டம்ளரை அவன் முன் நீட்டினார். சட்டென அதை வாங்கி அதிலிருந்த தண்ணீரைக் குடித்தான். அது அப்போது மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது.

“அடுத்த மாசம் நடக்கப்போற நம்ம கம்பெனியோட ஆனுவல் மீட்ல உங்களத்தான் பெஸ்ட் எம்ப்ளாயீயா செலெக்ட் பண்ணிருக்காங்க. அப்போ நம்ம சேர்மேன் உங்களுக்கு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும் தரப்போறார். அதுமட்டுமில்லாம நம்ம கிளை சார்பா உங்களுக்கு ஒரு புது பைக்கும் தரப்போறோம். சந்தோஷம்தானே” என்று கேட்டதற்கு எந்தவித பாவமும் இல்லாமல் “தாங்க் யூ சார்!” என்றான். “என்ன கிருஷ்ணன் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லிருக்கேன். நீங்க எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா? இல்ல உடம்பு எதுவும் சரியில்லையா? வேணும்னா அரைநாள் லீவ் தர்றேன் போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாங்களேன்” என்று சொல்ல, “அதெல்லாம் வேண்டாம் சார், ஐ ஆம் ஒகே, தாங்க் யூ சார்”. என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான்.

அவன் வரும்வரை காத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் எல்லோருக்கும் சமபிரதாயமாக மட்டும் நன்றி சொல்லி அங்கிருந்து நழுவி கழிவறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டான். நீண்ட நேரம் கழித்து வெளியே வரும்போது அவரவர் அவரவர் இருக்கைகளுக்குச் சென்று பணிகளை கவனிக்கத் தொடங்கியிருந்தனர்.

மதிய உணவு இடைவேளையில் எப்பொழுதும் சில நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுபவன் அன்று எவரிடமும் சொல்லாமல் தனியே சாப்பிடச் சென்றான். அலுவலகத்தின் சூழ்நிலையிலிருந்து தப்பித்துச் செல்வது அவனுக்கு அவசியமாய் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தவனை எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுக்கு தர்ம சங்கடத்தைக் கொடுத்தது. வேறு டேபிளுக்குப் போவதற்காக எழுந்தவனிடம் எதிர் இருக்கை ஆசாமி “நீங்க கிருஷ்ணன்தானே?” என்று கேட்டான். ஒரு அன்னிய நபர் தன்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுவது அவனுக்கு ஆச்சர்யத்திற்குப் பதில் பயத்தையே தந்தது. “ஆமாம். நீங்க யாரு? என் பேர் உங்களுக்கு எப்பிடித் தெரியும்” என பதில் கேள்வி கேட்டவனின் தோள்களில் ஓங்கித் தட்டிய எதிர் இருக்கை ஆசாமி “என்ன கிருஷ்ணா என்னைத் தெரியலயா! நான்தாண்டா குமரகுரு… நாம ரெண்டுபேரும் ஒன்னா பள்ளிக்கூடத்துல படிச்சோமே நியாபகம் இல்லியா” என்று கேட்டான். ஆம் குமருகுரு என்னோடு பள்ளியில் படித்தவன் என்பது நியாபகத்திற்கு வரவே பயம் கொஞ்சம் தணிந்தது. இருவரும் பரஸ்பரம் நலவிசாரிப்புகளுக்குப் பின்னர் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணனுக்குத் தன் பயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் நண்பனிடம் இப்படிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்துகொள்வது நன்றாக இருக்காது. மேலும் அவன் தன்னைத் தவறாக நினைக்கக்கூடும் என்ற பயத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பின்னர் அலுவலகத்திற்கு நேரமாவதாகச் சொல்லி குமரகுருவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அலுவலகத்திற்குள் நுழைந்தவனின் கண்ணில் முதலில் தென்பட்டவள் மதுமிதா தான். அவள் அவனை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தாள். மது வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகின்றன. அவளைப் பார்த்தவுடன் கிருஷ்ணன் காதலிக்கத் தொடங்கிவிட்டான். கண்டதும் காதல். ஆனால் இதுவரை ஒருமுறை கூட இருவரும் பேசிக்கொண்டதில்லை. ஒரே அலுவலகத்தில் இருந்தும் அதற்கான சூழல் இன்னும் வாய்க்கவில்லை. வெறும் பார்வையும், சிறுசிறு புன்னகைகளும் மட்டுமே அவர்களுக்குள்ளான சம்பாஷணைகளாக இருந்திருக்கின்றன. அவள் மனதிலும் காதல் இருப்பதைச் சாத்தியப்படுத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மணி பலமுறை சொல்லியிருக்கிறான். அவள் நெருங்கி வருவது அவனுக்குள் ஓர் இனம் புரியாத பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது. மற்ற நாளாக இருந்திருந்தால் இது மகிழ்ச்சியான ஒன்றாகவே இருந்திருக்கும். ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது.

“ஹாய் எப்பிடி இருக்கீங்க?” என்று மதுமிதா கேட்ட கேள்விக்கு, நல்லாருக்கேன் என்று ஒரு இயந்திர மனிதனைப் போல் பதிலளித்தான். இந்த வருஷத்தோட பெஸ்ட் எம்ப்ளாயீயா நீங்கதான் தேர்ந்தெடுக்கப்பட்டுருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து நின்றாள்.

எந்த பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனிடம் “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் இப்போ இல்ல, இன்னிக்கு சாயுங்காலம் பக்கத்துல இருக்கற ஹோட்டல்ல பாக்கலாம் கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என்றதும் கிருஷ்ணனின் மனதில் முன்பு பார்த்த ஒரு சினிமாவின் காட்சிகள் ஓடத் தொடங்கின.

அதிலும் இப்படித்தான். கதாநாயகன் கதாநயகியைக் காதலிப்பான். அவளும் அவனைக் காதலிப்பதாகவே தோன்றும். உடனிருக்கும் நண்பர்களும் அதனை உறுதிப்படுத்துவார்கள். இருவரும் நண்பர்களாக நெருங்கிப் பழகத் தொடங்கியவுடன் அவள் அவன் மீது பேரதிக அக்கறை எடுத்துக் கொள்வாள். அது நிச்சயமாக காதல்தான் என்பதை நாயகன் மட்டுமல்லாது பார்வையாளராகிய நாமும் உறுதிசெய்து கொள்வோம். ஒருநாள் கதாநாயகி கதாநாயகனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டுமெனச் சொல்லி ஒரு இடத்திற்கு வரச்சொல்லுவாள். அவனும் தன் ஆசைகளை எல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டில் கனவு டூயட்டையும் முடித்துக் கொண்டு அவள் சொன்ன இடத்தில் குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து காத்திருப்பான். ஆனால் அங்கோ நாயகியுடன் வேறொருவனும் வருவான். நாயகி நாயகனிடம் அந்த மூன்றாம் நபரைக் காட்டி இவர்தான் எனது காதலர், எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆகவே எப்படியாவது நீங்கள்தான் எங்களைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று சொல்லுவாள். நம் நாயகனும் தன் காதல் சுக்குநூறாய்ப் போன வலியையும் பொருட்படுத்தாது அந்தக் கணமே அவர்களைச் சேர்த்து வைக்கும் தியாக சாகசத்திற்குத் தயாராகிவிடுவான்.

சம்மந்தமே இல்லாமல் இப்படியொரு திரைப்படக் காட்சி மனதிற்குள் ஊடாடியதும் கிருஷ்ணனின் பதற்றம் கூடி அதிகமாக வேர்த்துக் கொட்டியது. இந்த மாற்றத்தைக் கவனித்தவள் “என்னச்சு ஏன் இவ்வளவு வேர்க்குது” எனக் கேட்டாள். அவனோ ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான். அவன் நெற்றியில் கைவைத்து “உடம்புக்கு எதுவும் முடியலியா” எனக் கேட்க அவனோ “அதெல்லாம் ஒன்னுமில்ல இன்னிக்கு சாயுங்காலம்தானே நான் வரேன்” என்றான். அவள் “இல்ல பரவால்ல இன்னிக்கு வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்கலாம். என்னைக்கா இருந்தாலும் எதுவும் மாறப் போறதில்லை”. என்று சொல்லிவிட்டு பின்னால் சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த மணியிடம் “அண்ணா அவருக்கு ஏதோ முடியல போல ரொம்ப பதட்டமா இருக்கறா மாதிரி தெரியுது, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. கொஞ்சம் பாத்துக்கோங்கண்ணா” என்றாள்.

பின்னாலிருந்து வந்தவன் கிருஷ்ணனின் தோளைத் தொட்டதும் திடுக்கிட்டுத் திரும்பியவனை ஆசுவாசப்படுத்த. “ஏ.. நான்தான் பதறாத” என்று சொல்லிவிட்டு, “என்னாச்சுடா உனக்கு ஏன் எப்பிடியோ இருக்க” என்று கேட்டான். அதெல்லாம் ஒன்னுமில்லை என்கிற வழக்கமான பதில் வரவும், சற்று கோபத்துடன். “டேய் சும்மா நடிக்காதடா நானும் இன்னிக்கு காலைலேர்ந்து உன்னை கவனிச்சுட்டுதான் இருக்கேன். நீ நடந்துக்கற விதமே சரியில்ல. இபோ நான் மேனேஜர்கிட்ட போய் பெர்மிஷன் கேட்டு வர்றேன். நாம ரெண்டு பேரும் வெளியில போறோம். என்ன பிரச்சனைன்னு என்கிட்ட மறைக்காம சொல்ற” என்று சொல்லிவிட்டு தள்ளி நின்றிருந்த மதுவிடம் “நீ ஒன்னும் கவலப்படாதம்மா நான் பாத்துக்கறேன்” என்றவாறு மேனேஜர் அறைக்குள் நுழைந்தான்.

மணியும் கிருஷ்ணனும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து குளிர்சாதன வசதி கொண்ட அறைக்குள் சென்றனர். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்திருக்க மேஜையின் மேல் காப்பிக் கோப்பைகள் வைக்கப்பட்டன.

“என்னடா ஆச்சு உனக்கு? இன்னிக்கு காலைலேர்ந்து நீ ஆளே சரியில்ல. என்கிட்டயும் ஒழுங்கா பேசல. மேனேஜரும் உனக்கு என்னவோ ஏதோன்னு பயப்பட்றாரு, வாழ்த்து சொன்ன யாருக்குமே நீ பதில் சொல்லல. இப்போ மதுமிதாவே உன்னைத் தேடிவந்து பேசியும் நீ மனநலம் பாதிக்கப்பட்டவன் மாதிரியே நடந்துட்ருக்க. என்ன பிரச்சனை உனக்கு” என்று மணி கேட்டான். இதற்கு மேலும் தன்னால் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தவன் தனது கனவைப் பற்றி விவரித்தான்.

அதைக் கேட்டதும் என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மணி “நீ சொல்றதுபடி பார்த்தால் இன்னிக்கு ஒருநாள் சமாளிச்சுட்டா உன்னுடைய அந்தக் கனவுலேர்ந்ந்து நீ வெளியில வந்துரலாம் இல்லியா” என்று கேட்டதும் ஆமாம் என்று மௌனமாகத் தலையாட்டினான். “ஏன்டா உன்னால ஒருநாள் தாக்குப் பிடிக்க முடியாதா? வெறும் இருபத்தி நாலே மணிநேரம்” என்றவனைப் பார்த்து. “இல்லை.. நீ நினைப்பது போல தற்கொலை என்பது நீண்ட நாட்களா திட்டம் போட்டுச் செய்யக் கூடிய காரியமில்லை. என்னைப் பொறுத்தவரை அது ஒருநொடிப் பொழுதில் நிகழக் கூடியது, அந்த ஒரு நொடி தூண்டக்கூடிய உணர்வெழுச்சியில் நடக்கக் கூடியது. நீ சொல்வது போல அது வெறும் ஒரு நாளாகவோ அல்லது இருபத்தி நாலு மணி நேரமாகவோ இருக்கலாம். ஆனால் அந்த இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் எண்பத்தி ஆறாயிரத்தி நானூறு நொடிகள் ஒளிந்திருக்கின்றன. இதில் என்னைத் தற்கொலைக்குத் தூண்டக்கூடிய ஒரு நொடி எதுவாயிருக்குமோவென்கிற நினைப்பில் வருவதுதான் இந்த பயமெல்லாம்” என்றான். அவன் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றியது. “சரி அப்போ ஒன்னு பண்ணுவோம். இங்கேருந்து ஏதாவது சினிமாவுக்குப் போகலாம். அது முடிவதற்குள் இரவாகிடும். பின் எங்கயாவது சுற்றலாம். வெளியிலேயே சாப்பிட்டு தூங்குவதற்காக மட்டும் உன் அறைக்குப் போனால் போதும். மறுநாள் தூங்கி எழும்போது நீ சொன்னது போல இந்த ஒருநாளானது முடிந்து போயிருக்கும். உன் தற்கொலையும் காலாவதியாகியிருக்கும் என்ன சரிதானே” என்றிட, அதுவும் சரி என்றே பட்டது. இருவரும் கிளம்பி தியேட்டருக்குச் சென்றனர்.

தியேட்டரில் இருவரும் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கிருஷ்ணனின் செல்ஃபோன் ஒலித்தது. முதலில் அதைப் பொருட்படுத்தாதவன் மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே அலைபேசியை வெளியில் எடுத்தான். ஆனால் மணியோ அதைப் பிடுங்கி சைலண்ட் மோடில் போட்டுவிட்டான். படம் பார்த்து முடியும் வரை நீ எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது என்றும் சொல்லிவிட்டான். பின்னர் இருவரும் திரைப்படம் முடிந்து வெளியே வந்து பல இடங்களுக்குச் சென்று இரவு உனவையும் முடித்துக் கொண்டனர். மணி கிருஷ்ணனை அவனது அறையில் இறக்கிவிட்டு பத்திரமாக இருக்கும்படியும், ஏதேனும் தேவையெனில் தனக்கு எந்த நேரத்திலும் அழைப்பு விடுக்குமாறும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அறைக்குத் திரும்பியதும் உடைகளை மாற்றிவிட்டு மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். ஒரே எண்ணிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் வந்திருப்பதாகக் காட்டியது. கடிகாரத்தைப் பார்த்திட மணி இரவு 11:45 ஆகியிருந்தது. இந்நேரத்தில் தெரியாத எண்ணிற்கு அழைப்பது சரியில்லை என்பதாலும் காலையிலிருந்தே ஏற்பட்ட மன உளைச்சலும் அதனால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவனுக்கு நல்ல தூக்கம் தேவை என்பதை வலியுறுத்தின. மேலும் அந்தத் தூக்கமே தன்னை அடுத்த நாளுக்கு இட்டுச் செல்லுமென்பதால் அது ஒரு கட்டாயத் தேவை என்பதையும் உணர்ந்தான். உறங்குவதற்கு முன் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குள் சென்றான். அவனது அலைபேசி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது,

வேக வேகமாக வெளியே வந்து கூப்பிடுவது யாரெனப் பார்த்தான், திரையரங்கில் கூப்பிட்ட அதே எண். பத்து முறை தவறியும் பதினோறாவது முறையாக அழைக்கும் அந்த எண்ணைப் பார்த்தவுடன் மீண்டும் மனதில் ஏதோ இனம்புரியாத பயம் தொற்றிக் கொண்டது. அழைப்பை ஏற்றான். எதிர்முனையில் ஒரு பெண் குரல்
”ரொம்ப நன்றி.. கடைசியாவாவது என்னுடைய அழைப்பை நீ எடுத்துட்டேல அதுக்குத்தான் நன்றி. எத்தனை முறை உன் எண்ணுக்கு அழைத்திருப்பேன், ஒவ்வொரு முறையும் என்னத் தவிர்த்துக் கொண்டேதான் இருந்தாய். என்னை உனக்குப் பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று நீயும் சொல்லவில்லை, எனக்கும் தெரியவில்லை, ஆனால் உன்னை உண்மையாகத்தான் காதலிச்சேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போ நீ என்னை உதாசீனப்படுத்தி, ஏமாத்தறேன்னு தெரிஞ்சதும் எனக்கு உயிர் வாழவே பிடிக்கலை. அதனாலதான் நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன். நீ வாங்கிக் குடுத்த அதே புடவைல தூக்குப் போட்டுக்கப் போறேன். என்னோட இறப்புக்கு நீதான் காரணம்னு யார்கிட்டையும் சொல்ல மாட்டேன். அதுக்கான எந்தத் தடயத்தையும் விட்டுட்டும் போகமாட்டேன். ஆனால் என்னுடைய இந்த முடிவிற்குக் காரணம் நீதாங்கறது உனக்கு மட்டுமாவது தெரியணும். என்னுடைய காதலை அதன் மூலமாவது நீ உணரணும். அதுதான் என்னோட கடைசி ஆசையும் கூட உனக்கு என்னோட முத்தங்கள். ஐ லவ் யூ” என்று ஒரே மூச்சில் பேசி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தது அந்தப் பெண்குரல்.

கிருஷ்ணன் செய்வதறியாது திகைத்து நின்றான், யாரிவள்? எங்கிருந்து பேசுகிறாள்? நிச்சயமாக மதுமிதா இல்லை. யாரந்தக் காதலன்? என்னுடைய எண்ணுக்கு ஏன் இவள் அழைக்க வேண்டும்? அவள் மரணம் எனக்கு மட்டும் ஏன் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும்? என்னுடைய தற்கொலையில் துவங்கிய நாள் யாரோ ஒரு பெண்ணின் தற்கொலையில்தான் முடிய வேண்டுமா? எனில் இன்று காலையிலிருந்து என்னைத் துன்புறுத்திய மரணம் என்னுடையது இல்லையா? இந்தப் பெண்ணுடையதுதானா? நான் ஏன் இந்த மாயப்புதிர் விளையாட்டில் சிக்கிக்கொள்ள வேண்டும் எனப் பல எண்ணங்கள் அவனை அலைகழித்தன. நீண்ட நேரத்திற்குப் பின்னர் சுயப் பிரக்ஞையை அடைந்தவன் ஏதோ ஒரு பொறி தட்டவே தன் அலைபேசியை எடுத்து அந்தப் பெண்ணின் எண்ணிற்கு டயல் செய்தான். அந்த எண் இப்போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

***


அதீதன்
adheedhansuren@gmail.com

க.வசந்த்பிரபு கவிதை

2

வளர்ந்தாலும் தேயும்; தேய்ந்தாலும் வளரும்

திமிங்கல வாலில்
பட்டுப்பறந்த
அரைப் பிறை
அருகிருந்த மீனின்
துடுப்பில்பட்டு
இன்னும் தேய்கிறது.

மீண்டும் திமிங்கல
வாய்க்கருகில் போய்
அளவாய் கொஞ்சம்
தேய்ந்திருக்க
இன்னும் அறுமீன்
அதை தேய்த்து
காளையின்
கொம்புகள் தேய்க்க

இரட்டையரில்
ஒருவன் மீட்டு
சுடுஒளியில் நனைத்து
நண்டுக்கு
ஒளிக்கோடாய்
காண்பிக்கிறான்.

சிங்கப் பிடறியின்
அசைவில் பட்டு
கன்னியின்
தொடைதொட்ட
வளரொளியை
கோதுமைக்கதிர்கள்
அளக்க முயன்றன.

தேள் பெருஒளி
கண்டு தீண்ட
மறந்திருந்தது.
இருகால் ஊன்றி
இருகால் தூக்கி
வாலசைத்தவனின்
அம்புகளும்
துளைக்காதபடி
ஒளிபெருகி
விலங்குமீனின்
வால் பணிந்து
ஒளி மிளிர்ந்தது.

பெருஒளி
வளரவும் தேயவும்
கூடும்
சிக்காதவைகளிடம்
சிக்கக்கூடும்
பாதையும் வண்ணமும் கூட
கொஞ்சம் மாறக்கூடும்

வளர்ந்தாலும் தேயும்
தேய்ந்தாலும் வளரும்

ஆனாலும்
அது ஒளி தான்.

***

க.வசந்த்பிரபு – atchayaads@gmail.com

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

0

1

365 நாட்களிலும் மழை

வேண்டும் என்ற தருணத்தில்
வானம் பார்த்து வேண்டினார்கள்
கடுமையாகக் காய்ந்து கெடுத்தது
வேண்டாம் என்ற பொழுது
தீவிரமாகப் பெய்து கெடுத்தது
எப்பொழுதும் துயரத்தோடு
அழுது தீர்க்கும்
உழவனின் கண்களில்
என்றுமே ஓயாது
பெய்து வருகிறது

வருடம் முழுவதும்
கண்ணீர் மழை

எந்த பருவத்திலும்
அவர்களின் இமைகள் ஈரத்தோடும்
இதயம் காயத்தோடும் தவிக்கிறது

துளிர்த்துக் காய்ந்தும்
அழுகியும் போகும்
விதைகள் அவர்கள்

*

2

நதி சேர்ந்த கண்கள்
இசை தொடும் மனம்

எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட கூழாங்ல்லை இன்று பார்த்தேன்

அழகான புன்முறுவலோடு
இசைத்தது அதன் இசையை

நீர் போக்குவரத்தோடு
பார்த்துவிட்டு வந்த பிறகும்

அந்த கூழாங்கல்லின் இசை
ஓடிக்கொண்டே இருக்கிறது

என் உடல் நதியில்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

மீண்டும் மீண்டும் இடம் பெயர்தல்

*

3

தொடர்

துளித்துளியான மழை
பறவையின் எச்சங்கள்

துவண்ட மனதோடும்
துள்ளலோடும் விழும் பாதச்சுவடுகள்

என அனைத்தையும் செரித்தும்
சாம்பலாக்கியும் கடக்கும்

இடைவெளியில்

பூத்துக் களிக்கும் நிலம்
பிரபஞ்சத்தின் சிறிய அறை

இந்த பூமி எனும் சிறிய அறையில்
பறந்து வந்து தங்கி
மீண்டும் பறந்து போகும்
தூரம்தான் இந்த வாழ்வு

சொற்குறிப்புகளை நிரப்பிவிட்டு
பறக்கிறது ஒவ்வொரு பறவையும்

சொற்கள் இறந்துவிடாமல் பற்றிக்கொள்கிறது உடல்

*

4

அணு விதைத்த அறுவடையில்
ஆள் மயங்கி தடம் பதித்தது
ஒரு பாதை

பாதை வழியே மெல்ல நகரும்
மனப்பந்து

உயிர் மலர்ந்து
திரை நீக்கி

உதிர்கிறது வாழ்க்கைப் பூ

நரை நகர்த்தி
கரை அமர்ந்து ரசிக்கிறது
மன அலை

கரையருகே அழகான வண்ணத்துப்பூச்சி
உச்சி முகர்ந்தது உவர்க்கும் சமுத்திரத்தை
ருசி பார்த்தது

கடலில் தேன் எடுக்க முடியாமல்
கரையருகே
பூவைத் தேடியது

மனமோ வாழ்வைத் தேடுகிறது

இன்னும் உவர்க்கும் சமுத்திரத்தில்
வாழ்வின் பயங்கரம்
அடிமனதின் ஆழத்தில்
நிழலாய் நகர்கிறது

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
யாருடைய நிழலையும் விரும்பாமல்
சுற்றி வருகிறது சூரியன்

*

5

இந்த இரவு அவ்வளவு
அழகாக இல்லை
அவளை விரும்பினேன்

இது மோன இரவு

தூங்கும் மலரைத் தட்டி எழுப்பி
முத்தம் தருவதைப்போன்ற இரவு

அவள் தூங்குவதைப்போல் நடிக்கிறாள்
மெத்தையில் பூக்கள் பூத்துக்கொண்டேயிருந்தன

அவ்வளவும் வாசனை

அது உன் வாசனை மாயா

நீ கனவில் அடிக்கடி வந்தாய்
உன்னைக் காதலி என்று
அழைத்துவிட்டேன்

அதனால் உன் கோபம்
எனக்குப் புரிகிறது

அறை முழுவதும் உன் நினைவுகள்

மாயப் பூக்களோடு போரிட
என் இதய ஆயுதத்தை
சுதர்சனமாக்கி எரிந்து விட்டேன்

பூக்களை உதிரச்செய்யும் அளவிற்கு
காதல் செய்கிறது காம சக்கரம்

ஆடையற்ற இந்த இரவை
ஒளி குடிப்பதைப் போல்

நான் உன்னைக் குடித்துக்கொண்டே
இருக்கிறேன்

மன்னித்துவிடு மாயா

உன் அனுமதி இல்லாமலேயே
உன்னைக் குடிப்பதற்கு

*

6

அழகான வெள்ளை இதயமும்
வெள்ளை இரத்தமும்
கருப்பு ரத்தத்தைக்
தனக்குள் அடக்கி
அழகுபார்க்கிறது

தன் தூய்மையான முகத்தில்
எழுதித் தீர்க்கும் வரிகளைச் சுமந்து
வேதனையோடும்
இன்பத்தோடும்

புத்தக உடலாக நீள்கிறது

எரிந்து சாம்பலாகி
ஆற்றலை வெளிப்படுத்தும்
ஒவ்வொரு பக்கத்திற்குள்ளும்
வெள்ளைத்தாளும்
கருப்பு மையும் விளையாடி மகிழ்ந்து

எடிட்டர்களோடு கருப்பு மை
தன்னை சரிசெய்து கொள்கிறது

வெள்ளைத்தாள் எப்பொழுதும் மேகம் போன்று
எழுத்தைப்பொழியும்

வெள்ளைத்தாளின் கர்ப்பத்தில்
எத்தனையோ எழுத்துகள் மழைபோல் பிறக்கிறது

மனிதர்களைப்போலப் பேசவும் செய்கிறது
கனத்த இதயத்தோடு

காகிதங்கள் இசைக்குறிப்பின் தீராத பக்கங்களாய் அசைகிறது.

***

ப.தனஞ்ஜெயன்
danadjeane1979@gmail.com

பெருங்கசிவு

0

பாரதிராஜா

(முதல்கதை)

***

காலை 6:06

லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ், கலிஃபோர்னியா.

கதிரவன் இருட்டை விழுங்கி ஏப்பம் விடும் நேரம்.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் – இன்னும் தன் இரவு உடையில்தான் இருக்கிறார் – உலகெங்கிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருக்கும் தற்கொலைப் புள்ளிவிவரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு கொரோனா சாவுகளின் எண்ணிக்கையைப் பார்த்த போதைவிடப் பயங்கரமானதோர் அனுபவம் இது. ஒவ்வொரு நொடியும் எண்கள் எகிறிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு சாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர். நேற்றிரவு வரை ஆறு லட்சத்தைக்கூடத் தாண்டவில்லை இந்த ஆண்டுக்கான எண். கடந்த மூன்று மணிநேரத்தில் மட்டும் 33,000 பேர் இறந்திருக்கிறார்கள். பல் துலக்கக்கூடப் போகப்பிடிக்கவில்லை. அதற்குள் எண்ணிக்கை எவ்வளவு ஆகிவிடுமோ.

இந்த எண்கள் எப்படிச் சேகரிக்கப்படுகின்றன? இவற்றின் உண்மைமையை எப்படி நம்புவது? இது போன்ற சாவுகளை அடியோடு மறைக்கும் – குறைத்துக்காட்டும் நாடுகளும் இருக்கின்றன. நான் பிறந்த புனித பூமியே அப்படியான ஒன்றுதானே! இதுபோன்ற சாவுகளைக் கணக்கிடவே முடியாத நாடுகளும் கூட இதே உலகத்தில்தான் இருக்கின்றன. இதையெல்லாம் கணக்கிடும் வழிமுறையை (அல்கரிதம்) எப்படி அமைத்தார்கள்!

ஐயோ, அநியாயமே! சமூக ஊடகங்களில் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்களே! சனியன்கள்! ஆஆஆ! நேரலையில் இப்படி தன் சாவை – தற்கொலையைப் பதிவிடுகிறார்களே! என்னதான் ஆகிவிட்டது இந்த மனிதக் கூட்டத்துக்கு! இதெல்லாம் எப்படி வெளிவர அனுமதிக்கிறார்கள்! சமூக ஊடகங்களில் இவற்றைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்யும் குழுவினரெல்லாம் என்ன ஆனார்கள்! அவர்களும் எத்தனை பதிவுகளை – காணொளிகளைக் கண்டு கட்டுப்படுத்த முடியும்! ஐயோ.. இதென்ன? ஃபீனிக்சில், இந்தக் காணொளிகளைக் கண்டு கட்டுப்படுத்தும் குழுவில் உள்ள ஒருவனே இவற்றையெல்லாம் காணச் சகியாமல் அலுவலகத்திலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான்! இந்தப் பணி இப்போது பெருமளவில் இந்தியாவுக்கும் மாற்றப்பட்டுள்ளது. அங்கு மாலை நேரம். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லையே.

“இன்றில்லையென்றால் என்றோ ஒருநாள் இந்த முடிவை எடுத்திருப்பேன் தான். இன்றைய நிகழ்வுகள் என் முடிவைத் துரிதப்படுத்தியிருக்கின்றன. அவ்வளவுதான். இந்த உலகத்தின் மீதான என் அவநம்பிக்கைகளை உறுதிப்படுத்தியிருக்கின்றன. நான் புறப்படுறேன்!”

இதுதான் அவன் உலகுக்குச் சொல்லும் கருத்து. அவன் பதிவுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு கருத்தையும் படித்தால் குலை நடுங்குகிறது. அடுத்த சிலமணி நேரத்தில் எத்தனை கோடிப்பேர் செத்துப்போகப் போகிறார்களோ தெரியவில்லையே! எவராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. எப்படி முடியும்! என்னது, இதையும் அறிவியல்பூர்வமாகக் கணக்குப் போட்டுச் சொல்ல முடியுமா! அடப்போங்கப்பா! அறிவியல் என்ன அம்புட்டா முன்னேறிவிட்டது!

தற்கொலைகள் மட்டுமல்ல, உலகெங்கும் கொலைகளும் பெரிதளவில் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மனநிலை பேதலித்துவிட்டார்கள். பெரும்பாலான கொலைகள் கணவன்-மனைவிகளால் அல்லது காதலன்-காதலிகளால் செய்யப்படுபவையாகத்தான் இருக்கின்றன. தற்கொலைகளும் அவர்களுக்குப் பயந்துதான். அமெரிக்காவில் நடைபெறும் பெரும்பாலான தற்கொலைகளும் கொலைகளும் துப்பாக்கிச் சூட்டில் நிகழ்கின்றன. பொது இடங்களில் மொத்தமொத்தமாகச் சுட்டுக்கொல்லும் கொடுமையும் நாடெங்கும் தீயாகப் பரவுகிறது.

“மாட்டிக்கொள்வோம் என்று பயமாக இருந்தால்.. உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள் மிருகங்களே. உங்களால் துரோகமிழைக்கப் பட்டவர்களை ஏன் கொல்கிறீர்கள்? #துரோகக்கொலை”

துரோகக்கொலை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது.

“கிறுக்குப் பிறவிகள். உன்னைக் கொன்று கொள். அல்லது உன்னைக் கொல்லப் போகிறவரைக் கொல். எதற்காகத் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் கொன்று குவிக்கிறீர்கள்? #துப்பாக்கிச்சூடுகள்”

திடீரென்று கொரோனா சாவுகள் ஒரு பிரச்சனையே இல்லை என்றாகிவிட்டது. நேற்றுவரை கொரோனா சாவுகளைக் காட்டிக்கொண்டிருந்த வலைப்பக்கங்களில் அதே அட்டவணையில் இப்போது இந்தச் சாவுகளைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டில் ஒருநாள் இந்த உலகத்தின் முன்னோடிக் குடிமகன்களின் ஒருவர் என்ற முறையில் இந்தப் பெருந்தொற்றைச் சமாளிக்க – அதிலிருந்து இந்த மனித குலத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று அவரே மண்டையைப் போட்டுக் குடைந்து தன் பணித்தோழர்கள் எல்லோருடனும் பேசி தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டுபிடிக்கும் செயலி ஒன்றை உருவாக்க இறங்கினார். இந்தப் பணியில் தொழில்நுட்பத் துறையில் நாயும் பூனையுமாக – அல்லது ஆப்பிளும் ஆரஞ்சுமாக என்று வைத்துக்கொள்வோமே – இருக்கும் தன் போட்டி நிறுவனத்தோடு இணைந்து பணி புரியவும் இறங்கி வந்தார். எவனோ ஒரு முகம் தெரியாதவன் தெரிந்தோ தெரியாமலோ செய்த பெருந்தவறால் இந்த உலகமே அழிந்துகொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப உலகம் எப்படித் தன் லாபநட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மனிதகுலத்துக்குத் தன்னால் முடிந்த நன்மைகளை எல்லாம் செய்ய முன்வந்திருக்கிறது என்று பல இடங்களில் திரும்பத் திரும்பப் பேசினார். இப்போது என்ன செய்யப் போகிறார்? அவருடைய துறையிலேயே நிகழ்ந்துள்ள பெரும் குளறுபடி உலகத்தையே இதுவரை கண்டிராத ஒரு பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இதற்கெல்லாம் காரணமானவன் யார் என்று தெரியவில்லை. அதை அப்புறம் பார்க்கலாம். இப்போதைக்குப் பற்றியெரியும் இந்த உலகத்தை எப்படிக் காப்பாற்றுவது! அதற்கான தீர்வு தன்னிடம் இல்லை. குறைந்தபட்சம் இதனால் உண்டாகும் பாதிப்புகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று கூடப் புரிபடவில்லை. ஒரு போரில் நிகழ்வதை விடக் கொடுமையாக – ஒரு பெருந்தொற்று கண்டு மீண்டிருப்பதைவிடக் கொடுமையாக உயிர்கள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சிலமணி நேரத்தில் எத்தனை லட்சம் அனாதைகள்… எத்தனை லட்சம் விதவைகள்… இன்று இரவுக்குள் என்னதான் நடக்கப் போகிறதோ தெரியவில்லையே!

இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது. தான் பேசியே ஆகவேண்டிய வேளை இது.

“மக்களே, இத்தோடு உலகம் முடிந்து போய்விடப் போவதில்லை. வரலாற்றில் இதைவிடக் கொடுமையான பேரழிவுகளைப் பார்த்திருக்கிறோம். அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம். இதற்காக உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள். நாம் எல்லோரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாக வென்று வெளிவருவோம். தயவுசெய்து என் பேச்சைக் கேளுங்கள். இதற்காகப் பின்னர் நிச்சயம் எனக்கு நன்றி சொல்வீர்கள்.”

சமூக ஊடக வரலாற்றில் முதன்முறையாக தொன்னூறு லட்சம் பேர் இதை மறுபகிர்வு செய்தார்கள். மூன்று கோடி பேர் விருப்பமிட்டார்கள். அடுத்த சிலநாட்களில் இதைவிடப் பெரிதளவில் பகிரப்படும் கருத்துகள் உதிர்க்கப்படலாம். இப்போதைக்கு இதுதான்.

வேறு எந்தச் சமூக ஊடகத்திலும் அவர் இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் அவை குப்பை. அது மட்டுமில்லை, தனிமனிதர்களின் தரவுகள், தனியுரிமை விஷயத்தில் அவர்கள் எவ்வளவு பெரிய மோசடிக்காரர்கள் என்பதை அவரைவிட நன்றாகத் தெரிந்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கவா போகிறார்கள்! குறிப்பாக சமூக ஊடகங்களையே புரட்சிக்குள்ளாக்கிய அவன் இருக்கிறானே அவனைக் கண்டால் அவருக்கு ஆகவே ஆகாது. “எந்த அறமும் தரமும் அற்ற அரக்கன் ஒருவன் உருவாக்கிய நிறுவனத்திடம் – வலைதளத்திடம் – செயலியிடம் என்ன தரத்தை எதிர்பார்க்க முடியும்!” என்று அவருக்கு நெருங்கியவர்களிடம் அவர் அடிக்கடிக் குறிப்பிடுவார்.

ஆகா.. அரக்கனைப் பற்றி நினைக்கும் வேளையில் அரக்கனே அழைக்கிறான்: “ஏய்! இப்போது என்ன செய்வது? அடுத்து என்ன செய்வது என்று பிடிபடும் வரை எல்லாவற்றையும் மூடிப்போட்டு விடுவோமா? இது முற்றும் கையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் நானே உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. ஈ-பொதுமுடக்கம் ஒன்றே தீர்வு.”

என்னது, ஈ-பொதுமுடக்கமா… அதற்குள் பெயரும் கண்டுபிடித்து விட்டானா?

“யோவ்! என்ன பேசிக்கொண்டு இருக்கிறாய்? தொழில்நுட்பத்தால் வைக்கப்பட்ட தீதான் இது. ஆனால் அதை அணைக்கும் வேலையையும் தொழில்நுட்பந்தான் செய்துகொண்டிருக்கிறது. இது ஒரு பெருங்குழப்பம். புரிகிறது. அதற்காக அப்படியே இணையத்தை அணைத்துப் போட்டுவிட முடியாது. அது இன்னும் இன்னும் உயிர்களைக் காவு வாங்கத் தொடங்கிவிடும். ஒன்று செய்வோம். உடனடியாக அதிபர் அவர்களோடு பேசுவோம். இது மனித குலத்துக்கெதிரான போர். இது ஒரு வெறும் தொழில்நுட்பப் பிரச்சனை அல்ல.”

இது நடந்தது அதிகாலை 3 மணி பசிபிக் நேரம். இதை யார் செய்திருப்பார்கள் என்பது பற்றிப் பல்வேறு சந்தேகங்கள் வந்துள்ளன. சிலர் சீன அல்லது ரஷ்யக் கொந்தர்கள் (ஹேக்கர்ஸ்) செய்திருக்கக்கூடும் என்கிறார்கள். சிலர் சரியாக ஹவாயி நேரம் பன்னிரண்டு மணிக்கு நடந்ததால் அங்கிருந்துதான் எவரோ செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதுவும் சரியாகத்தான் படுகிறது. இவ்வளவு பெரிய வேலையைச் செய்கிற ஒருவர் அதை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அரங்கேற்றுவது இயல்பான ஒன்று. கலிஃபோர்னிய விரிகுடாப் பகுதியில் – சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் பலர் தம்மில் ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த நிமிடம் வரை எவரும் தாங்கள்தாம் செய்தோம் என்று பொறுப்பேற்கவில்லை.

“அவர்கள் பணத்துக்காகச் செய்திருந்தால் பணக்காரர்களை மட்டும் குறிவைத்து ஏதாவது செய்திருக்கலாம். இதற்குப் பின்னால் இருக்கும் நோக்கம் ஏதோ மிகப்பெரியதாக இருக்க வேண்டும்.” இன்னொரு பெரிய மனிதர் ட்வீட்டினார்.

“நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏதோ மிகக்கேவலமானதாகவும் இருக்கலாம்!” என்றது அதன் கீழ் ஒரு பதிற்கருத்து.

“காலை ஒன்பது மணிக்கு ஒர்லாண்டோவுக்கு விமானம் பிடிக்க வேண்டும். ஆறு மணிக்கு, கழிப்பறையில் அமர்ந்துகொண்டு, ‘ஏய் சிரி, தட்பவெப்பம் இன்று எப்படி இருக்கிறது?’ என்றேன். நேரே தேடல் பக்கத்துக்குச் சென்று காட்டிய முதற் சில முடிவுகள் என்னை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. பத்தாண்டுகளுக்கும் மேல் இருக்கும். என் முன்னாள் காதலிக்கு நான் அனுப்பிய அதிமுக்கியமான அந்த மின்னஞ்சல். 1/2”

“இருவருமே அதைக் கடந்து வெகுதொலைவு வந்துவிட்டோம். அவளுக்கு அனுப்பிய / அவளிடமிருந்து பெற்ற மின்னஞ்சல்கள் எல்லாவற்றையும் எப்போதோ நிரந்தரமாக அழித்துவிட்டேன். இதை மீண்டும் என் வாழ்நாளில் பார்ப்போம் என்று ஒருநாளும் நான் கனவில் கூட நினைக்கவில்லை. அதைவிடக் கொடுமை அந்த மடலில் எந்த இடத்திலும் தட்பவெப்பம் என்ற சொல்லே இல்லை! 2/2”

அட்லாண்டாவிலிருந்து வந்தது இந்த ட்வீட். அந்த மின்னஞ்சல் இன்னும் இருக்கிறது என்பதை அறிந்ததும் ஆடிப்போனவனுக்கு அதை ட்விட்டர் போன்ற ஒரு பொதுத்தளத்தில் பகிர்ந்து கொள்வதைப் பற்றி ஒரு தயக்கமும் இல்லாதது பெரிய விஷயந்தான்.

மாலை மூன்றரை மணிக்குச் சென்னைக்காரக் கவின் ‘தமிழ்’ என்ற ஒற்றைச் சொல்லோடு தேடப்போக, அவனுக்கு வந்து சேர்ந்ததோ, அவன் மறக்க விரும்பும் – மறைக்க விரும்பும் ஒரு பழைய மின்னஞ்சல். படித்து முடித்து முதல் வேலையில் சேர்ந்து இரண்டே மாதங்களில் வேலையைவிட்டு நீக்கப்பட்டான். காரணம்? அவன் இணையத்தில் சென்று பார்த்த தளங்கள். வேலையைவிட்டு நீக்கும் முன்பாக அவன் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அவனுக்கு ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்பியது. அவன் சென்று கண்ட தளங்களின் பட்டியல்தான் அது. அந்த மின்னஞ்சலை மட்டுமல்ல அந்த மின்னஞ்சல் கணக்கையே மூடிவிட்டான். பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் முழுமையாகத் தன் தவறின் தடயத்தை அழிப்பதற்காகச் சென்னைக்கு மாறிவிட்டான். இரண்டாவது வேலையில் சேரும் முன்பு பெயரைக்கூட மாற்றிவிடலாமா என்று நினைத்தவன் கடைசியில் மின்னஞ்சல் கணக்கில் மட்டும் தன் உண்மைப்பெயர் வராதபடிப் பார்த்துக்கொண்டான்.

எல்லாத்திலும் பயங்கரம் இதுதான். அவளுடைய நேரம் காலை 11 மணிக்கு லண்டன்காரி ஒலிவியா ‘இந்த ஆண்டின் தலைசிறந்த 10 இசைத் தொகுப்புகள்’ என்று தேடப்போக, அவளுக்கு வந்ததோ அவளுடைய காதலன் ஆர்தர் தன் பள்ளிக் காலத்திலிருந்து அவனுடைய காதலிகளுடன் பேசிய அரட்டைகள் அனைத்தும் வந்து விழுந்தன. உடனடியாக அவனை அழைக்கிறாள். அவனோ வேறு யாருடனோ முடிவிலாது பேசிக்கொண்டிருக்கிறான்.

“இது என்னுடைய அரட்டை வரலாறு அல்ல. அவனுடையவை. என் கணினியில் நான் ஏதோ தேட அவன் வரலாறு எதற்கு எனக்கு வருகிறது! இது எப்படி சாத்தியம்? அப்படியானால் என் வரலாற்றை யாரெல்லாம் படிக்கப் போகிறார்கள்!” தனக்கு அருகில் இருக்கும் பணித்தோழியிடம் கத்தினாள்.

இந்த அனுபவத்தைத் தொடர்ந்து இவர்கள் மூவருமே நடந்துகொண்ட விதத்தில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. முதல் தேடல் முடிவு மூஞ்சியில் அறைந்த அதிர்ச்சியைவிட்டு வெளியேறும் முன்பே அடுத்து உடனடியாக வேறு ஏதேனும் ஒன்றை அடித்துத் தேடினார்கள். அவர்கள் தேடுவது எதுவாக இருந்தாலும், அவர்களுக்குக் கிடைத்தது ஒன்றுதான். அவர்கள் மீண்டும் எதைப் பார்க்கக் கூடாது என்று எண்ணினார்களோ அதுவோ அல்லது தன் வாழ்வில் அப்படி ஒன்று இருக்கிறது என்று எதை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்களோ அதுவோ வந்து விழுந்தது. ஏதோவொரு வகையில் அவர்களை உலுக்கிப் போடுவது.

***

தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் தங்கள் இணையக் குழுக்களில் இதன் சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கிறார்கள்.

“இதை எப்படிச் செய்தார்கள் என்று அறிந்துகொள்ளவில்லையென்றால் என் தலை வெடித்துவிடும். மின்னஞ்சல்கள் என்று மட்டுமில்லை. அரட்டை வரலாறு, இணையத்தில் மேய்ந்த வரலாறு, தேடல் வரலாறு… எல்லாமே. கையால் எழுதி வைத்தவற்றின் – தொலைத்தவற்றின் ஸ்கேன் பிரதிகள் மட்டுமே இன்னும் வெளிவரவில்லை. இது தவறுதலாகக் கசிந்துவிட்டது போலவும் இல்லை. நன்றாக உட்கார்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்திய வேலை போலத் தெரிகிறது. அதெப்படி மறக்கவே முடியாத – ஆனால் மறக்க விரும்புகிற வரலாற்றை மட்டும் தேடித்தேடி வெளியிட முடியும்! அதுவும் இவருக்கு அவருக்கு என்று இல்லாமல் ஒட்டுமொத்தமாக இணையத்தைப் பயன்படுத்தும் எல்லோருக்கும். எப்படி?”

“அது மட்டுமில்லை, மற்றவர்கள் நம்மிடம் மறைக்க விரும்புபவையும் நாம் மற்றவர்களிடம் மறைக்க விரும்புபவையும்…”

“இதன் வழிமுறை (அல்கரிதம்) என்ன? இதன் நோக்கம் என்ன? இதை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்?”

“யாருக்குத் தெரியும். அதைச் செய்தவன் இப்போது நம்மோடு உரையாடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவனாகவும் இருக்கலாம்.”

“ன்? செய்தவன்? அதெப்படி இவ்வளவு தெளிவாக அது ஓர் ஆணாகத்தான் இருக்க முடியும் என்று முடிவு செய்கிறீர்கள்?”

“இது ஒருவனோ ஒருத்தியோ என்று ஏன் முடிவு செய்ய வேண்டும்? இது ஒரு குழுவோ பயங்கரவாத இயக்கமோ இல்லையென்று எப்படி முடிவு செய்தீர்கள்?”

“இந்த உலகத்தில் பயங்கரவாத இயக்கம் என்றெல்லாம் எதுவுமில்லை. அவற்றுக்கு ஒரு பெயர்தான். அரசுகள். உலகின் ஆகப்பெரும் பயங்கரவாத அரசுகள் யாவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதில் பங்குபெறும் எல்லோருமே பயங்கரவாதிகள்தாம்.”

“நண்பர்காள்! உங்களுக்கு ஒன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். இது அரசியல் பேசும் இடமல்ல. இங்கு ஒருபோதும் நாம் அரசியல் பேசியதில்லை. இந்த உலகத்தின் மிகப்பெரும் தொழில்நுட்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்கள் நாம். அதற்காகத்தான் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். அதை மட்டும் மறந்துவிட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.”

“அதன்றி வேறென்ன செய்துகொண்டிருக்கிறோம் இப்போது? சந்தேகத்துக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறோம். இது ஒரு பெரும் அரசியற் பிரச்சனை. அதனால் அரசியலைத் தவிர்க்க முடியாது. அதையும் மறந்துவிட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.”

“எம்மா என்பது யார்?

“தெரியவில்லை.”

“அவளோடு இதுவரை மூன்று லட்சம் சொற்களுக்கு மேல் உரையாடியிருக்கிறாய்.”

“அதுபற்றி நீ தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை.”

“முதலில் உனக்குத் தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிய வேண்டியதில்லை. எனக்குத் தெரிந்தாக வேண்டும். சொல்.. அவள் எங்கே இருக்கிறாள்?” குரலை உயர்த்திக் கத்துகிறாள்.

“அதுபற்றித் தெரிந்துகொள்ளும் தேவை வராது.”

“நீ சொல்லவில்லை என்றால் நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்.”

“அந்த வேலையை நீயே செய்துகொள்ள வேண்டியதில்லை. உனக்காக நான் செய்துகொடுக்கிறேன். இந்தா!” டுமீல்.

இது லூயிசியானாவில்.

***

“என்னிடம் எல்லாமே சொல்லிவிட்டதாகச் சொன்னாய்!”

“ஆமாம். சொல்லிவிட்டேன்.”

“சும்மா விடாதே.”

“நீ இப்போது எதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாய்?”

“பில் என்பது யார்?”

“உனக்குத் தெரிய வேண்டியதில்லை.”

“எனக்குத் தெரிய வேண்டும்.”

“நான் உனக்கு அதைச் சொல்ல வேண்டியதில்லை.”

“சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்…”

“இல்லாவிட்டால்…” டுமீல்! தன்னைத்தானே கொன்றுகொள்கிறான்.

இது நெவாடாவில்.



***

“இதை ஏன் நீ என்னிடம் முன்பே சொல்லவில்லை?”

“சொல்லத்தான் முடிவு செய்திருந்தோம். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை.”

“எப்போது சொல்லலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தீர்கள்? நீங்கள் இருவரும் செத்துப்போன பின்பா?”

“அப்படியெல்லாம் பேசாதேப்பா. எங்கள் உண்மையான மகன் எங்கே இருக்கிறான் என்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. கடந்த 18 ஆண்டுகளாக நீதான் எங்களின் மகனாக இருந்திருக்கிறாய். எங்கள் காலம் முழுக்கவும் நீதான் எங்களின் மகனாக இருக்கப் போவதும்.”

“நீங்கள் உங்கள் மகனைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். எனக்கு என் பெற்றோரைப் பற்றிய கவலை இருக்கிறது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்தாக வேண்டும். அவ்வப்போது எனக்கு இந்த ஐயம் வரத்தான் செய்தது. அப்படியெல்லாம் இராது என்று எனக்கு நானே சொல்லி ஏமாற்றிக்கொண்டேன். நீங்கள் இருவரும் இவ்வளவு இழிவானவர்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இனியும் உங்கள் மூஞ்சியிலேயே முழிக்க விரும்பவில்லை. இத்தோடு என்னை விட்டுவிடுங்கள்,” இப்போதுதான் திருவிழாக் கூட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தையைப் போலக் கதறிக் கதறி அழுதான்.

அருளின் பெற்றோர் அவனிடம் கெஞ்சிக் கதறினார்கள். மூன்று பேரும் அழுது தீர்ந்தபாடில்லை. அவர்கள் சொல்லும் எதையுமே அவன் கேட்கத் தயாராக இல்லை. அந்த ஆவணத்தைப் படித்த நிமிடத்திலிருந்து இந்த உலகமே அவனுக்கு இருண்டு போனது.


“விக்கிலீக்ஸ் எல்லாம் ஒரு லீக்ஸே – கசிவே இல்லை. நீங்கள் இப்போது கண்டுகொண்டிருப்பது பெருங்கசிவு. மனிதகுல வரலாற்றிலேயே இதுவே மாபெருங்கசிவு. உலகப்பெருங்கசிவு. #WWWலீக்ஸ் #பெருங்கசிவு”

“1. நாமெல்லாம் அது தன் புதுமையான கண்டுபிடிப்புகளின் மூலமாக மனிதகுலத்தின் வாழ்வை மேலெடுத்துச் செல்லும் உயரிய பணியைச் செய்யும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்று எண்ணினோம். இப்போது என்ன நடந்திருக்கிறது பாருங்கள். இவர்கள் மக்களை வேவு பார்க்கும் ஒரு வேவு நிறுவனம். கொடுமை என்னவென்றால் அங்கு பணிபுரியும் 99% பணியாளர்களுக்கே இந்த உண்மை தெரியாது. #WWWலீக்ஸ்”

கொரோனா புண்ணியத்தில் நேரில் சந்திக்க முடியாது. இணையவழியில்தான் சந்திக்க முடியும். இவ்வளவும் நடந்த பின்பு இணையவழியில் சந்தித்துப் பேசும் எதுவும் வெளியில் தெரியாமல் இருக்கும் என்று எவர் நம்புவார்! ஆனால் முடிவு எடுத்தாக வேண்டும். பணியாளர்களும் வெளிமக்களும் விளக்கம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். நிர்வாகக் குழுமம் கூடியாக வேண்டும்.

இவ்வளவுக்கும் பிறகு இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கிறது? இணையவழியே சந்திக்கலாம் என்று எண்ணித் துணிந்தனர். உலகமே அவர்களின் விளக்கத்தை – முடிவைக் கேட்கக் காத்திருக்கிறது.

“2. போட்டி நிறுவனங்களின் கூட்டுக்களவாணித்தனம் என்ற ஒரு சாத்தியத்தை நாம் நினைத்தே பார்க்கவில்லை. இதோ உங்களுக்காக… உலகின் மிகப்பெரும் வங்கிகள் இரண்டு தம் நலனுக்காக எப்படி இந்த உலகத்தின் நிதி அமைப்பையே கூடிக்கெடுத்தார்கள் என்கிற கதை… #WWWலீக்ஸ்”

தொடர்புடைய கட்டுரை: இவ்வளவு காலமும் நாம் எதிரிகள் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருந்த இவ்விரு மருந்து நிறுவனங்களும் எப்படிக் கூட்டணி வைத்து மனித இனத்தை முடிவிலா நோய்வாழ்வில் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். #WWWலீக்ஸ்”

இந்த இரு வங்கிகளும் மருந்து நிறுவங்களும் மட்டும் நிர்வாகக் குழுவைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசவில்லை. இந்தப் புதிய உலகத்தில் எப்படி இயங்குவது என்பது பற்றி ஒட்டுமொத்த வணிக உலகமுமே மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்தது. பல குழுமங்கள் அவர்களின் தலைவர்களை நீக்கிவிட்டன. சில வணிகத் தலைவர்கள் தம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ட்வீட்டுகிறார்கள். அரசு பாதுகாப்பு வேண்டுமாம்.

“3. அணு ஆயுத ரகசியங்கள்தாம் நம் காலத்தின் மிகப்பெரும் சிரிப்பானிக் கூத்து. உலகப் பெரும் ரகசியங்கள் என்று ஒரு சில உண்டு என்றும் அவை இந்த மொத்த உலகத்திலும் ஒரு சிலருக்கு மட்டுந்தான் தெரியும் என்றும் இவ்வளவு காலமாக நமக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்று, இந்த நிமிடம், உலகின் ஒவ்வொரு நாட்டின் அணு ஆயுத ரகசியமும் அவர்களின் எதிரிகளுக்கும் நண்பர்களுக்கும் எல்லோருக்கும் தெரிந்ததாகிறது. #WWWலீக்ஸ்”

“இதுதான் இந்த உலகத்தின் முடிவு. நாம் நம்பிய ஒவ்வொரு விஷயமும் பொய். எல்லோரும் எல்லாத்தையும் ஆனா ஆவன்னாவிலிருந்து தொடங்க வேண்டும். தனிமனிதர்கள், வணிகங்கள், நாடுகள்… எல்லோரும்! #WWWலீக்ஸ்”

“மக்களே! கொந்தர்களும் புரளிக்காரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புதிய பல பொய்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று எவருக்கும் புரிபடாத வேளையில் இது தொடர்பாகவும் நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கேள்விப்படுவதெல்லாம் உண்மையில்லை. அவ்வளவுதான். #WWWலீக்ஸ்”

இதை ட்வீட்டியது யார் தெரியுமா? உலகின் ஆகப்பெரும் அதிகாரம் பெற்றவர்.

“ஆகப்பெரும் அதிகாரம் பெற்றவர்? #பெருங்கசிவுக்கு முன்பா பின்பா?” என்கிறீர்களா?

ஒவ்வொரு முக்கிய அறிவிப்பும் கருத்தும் பல லட்சம் முறை மறுபகிர்வு செய்யப்பட்டது. பெரியவரின் இந்தக் கருத்து எத்தனை லட்சங்களைக் கடந்திருக்கும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இணையம் சுமைதாங்க முடியாமல் முக்கி முனகியது.

பெரியவரின் கருத்துக்குக் கீழே, “அப்படியானால் அவற்றில் சில உண்மை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?” என்றொரு பதிற்கருத்து பல லட்சம் பேரால் விரும்பப்பட்டது.

பெரியவர் இன்னும் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதற்கு மற்றவர்கள் தினுசு தினுசாகப் பதில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

“அவர் ஒத்துக்கொண்டால்தான் நம்புவீர்களா, தோழர்? ஹிஹி.”

“அவற்றில் ஒன்று உண்மை என்பது எனக்குத் தெரியும். நீங்களும் ஒன்றைக் கண்டுபிடித்து விட்டால் +1 செய்யுங்கள்.”

“ஐயா, இதுதான் உங்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட ரகசியங்களைக் கண்டுகொள்வதற்கான சரியான நேரம். விடாதீர்கள். ஹாஹா.”

“உலகத்துக்கான இன்றைய சீட்டு மரணம் (DEATH). அதுவும் நேராக வந்துள்ளது. இது கெட்ட செய்தி என்று சொல்ல முடியாது. டாரோவில் மரணம் வந்தால், புதிய தொடக்கம் என்று பொருள். இன்று வரைக்குமான வாழ்வு மரணிக்கிறது என்று பொருள். நாளை புதிய நாள். புதிய வாழ்க்கை. #WWWலீக்ஸ்”

அவளுடைய வானியற்பியல் தொடர்பான சில கருத்துக்களுக்காக நாசா நிர்வாகியிடமிருந்து பாராட்டுக் கடிதம் பெற்றபின் உலகெங்கும் புகழ்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நிலா என்ற 13 வயதுச் சிறுமி ட்வீட்டினாள்: “இதைப் பாருங்கள். இன்று கசிந்திருக்கும் ரகசியங்கள் யாவும் உலகின் தலைசிறந்த தகவல் பாதுகாப்புச் சட்டங்கள் வைத்திருக்கும் முன்னணி மக்களாட்சி நாடுகளுடையவை. அவசரப்படாமல் துடிக்காமல் ஒவ்வொன்றாகப் பாருங்கள். எல்லா நாட்டு ரகசியங்களும் கசிந்திருக்கின்றனவா? #WWWலீக்ஸ்”

“ஆஆஆ!!! அப்படியானால் நம் அணு ஆயுத ரகசியங்கள் அவர்களுக்குத் தெரியும். அவர்களுடையவை இன்னும் ரகசியங்களாகவே இருக்கின்றனவா?” நிலாவின் கருத்துக்குக் கீழ் நாசா நிர்வாகி அடித்த பதில் உடனடியாக அழிக்கப்பட்டது.

மேற்கே இருட்டும் வேளையில் கிழக்கே விடியத் தொடங்கியிருந்தது.

***

பாரதிராஜா – தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com இது இவருடைய முதல் சிறுகதை.