Home Blog

சாகசச் சங்கதிகள்

0

தேன்மொழி அசோக்

மறதியைத் தழுவும் கொற்றவை

பாலையில் பரிதவித்துத் தேடுகிறாள்
ஊற்று நீரில் வளரும் வல்லாரையை.
பொன்னந்தியானது
மழையாய்ப் பொழியும் வேளையில்
ஒட்டகத்தில் நகர்வலம் செல்கிறாள்.
வெண்கம்பிக் கூந்தல்
சிறகெனப் பறக்கின்றன
முழங்கால் வலி கொஞ்சம் ஆசுவாசமடைகிறது.
வெடித்துக் கிடக்கும் தேகம்தனை
கூதிர் காற்று கட்டித் தழுவுகிறது
அவ்வப்போது சில நீர்த்திவலைகள்
தீர்த்து வைக்கின்றன
அவளின் முத்த வேட்கையை!

***

சாதாரணத்திலும் சாதாரணமான கொற்றவை

சாதாரணமானவளாகவே இருந்தாலும்
சாதாரணமானவளாகத் தெரியவில்லையாம் தலைவனுக்கு.
அவளின் சாதாரணமான செயல்களால் மிளிர்வதே
அவள் பலமே தவிர
மிகையாய் எங்கேயும்
காட்சிக்கு நிற்க மாட்டாள்.
அத்தனை நபர்களையும்
அசாதாரணமாக ஈர்க்கும் அவளுக்கு
எத்தனை கொடூர  பட்டங்களை
அவன் வழங்கினாலும்
சற்றும் தலை குனியாத
மிடுக்கான நடையும்
அவளுக்கு சாதாரணமானதே.
பாலை நிலத்திலும்
பசுமையாய் முளைக்கின்றன
அவள் சுவடுகள்.

***

அகச் செடியில் மலர்ந்த மலர்

கசங்காமலும்

புறச் செடியில் பூத்திருக்கும் பூ

உதிராமலும்

அன்றாடம் நீர் பாய்ச்சி

வளர்க்கிறாள்.

பாலை நிலக் கொந்தளிப்பில்

இருவேறு செடிகளை

முழுமனதோடோ

அரை மனதோடோ

கொற்றவை வளர்த்துக் கொள்ளலாம்.

உயிர் நிறைந்து வழிபவளாய்த்

தோற்றமளிக்கலாம்

ஒருபோதிலும்

நிலத்தை நீங்கி

பாசனத்தை மட்டும் தேடலாகாது.

***

பல்லிடுக்கில் மாட்டிய

மாமிசத் துகள்களை

ரகசியமாய்

நாவினில் எடுப்பதைப்போல

பால்யத்தில் பதுக்கிய

பாலியல் சந்தேகங்களை

பால்யத்திலிருந்தே பயணிக்கும்

தோழியிடம் கொட்டுகிறாள்

நாற்பதைத் தொட்ட கொற்றவை.

அதோடு

அந்தக் காலத்தின் ரகசியங்களை

இரு சாரரும்

எடுத்துப் பரப்புகின்றனர்.

என்றபோதிலும்..

நாற்பதின் இச்சைகளை மட்டும்

கயற்றில் கோர்த்த உப்புக்கண்டமாய்க்

காவல் காக்கின்றனர்.

இருவரின் ஆழ்மூச்சில் நனைந்த

அந்த உலர்துண்டில்

செல்வதறியாது

வேறெங்கும் செல்லவும் மனதில்லாத

பெருத்த இயலாமைப் புழுவொன்று

அங்குமிங்கும் ஊர்கிறது.

***

என்னதான்

பாலை நிலத்து தெய்வமேயானாலும்

அன்றைய கொற்றவை

வாழும் நாட்களில் 

வாழ இயலாமல்

உரியவர்களால் வதைக்கப்பட்டு

பக்தர்கள் கூடி போற்றப்படுகிறாள் இன்று.

கொற்றவைகள்

பாலையில் மட்டும் வளரவில்லை

எல்லா நிலங்களிலும்

வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

***

தேன்மொழி அசோக்  – கவிதை,நூல் அறிமுகம் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூர் தமிழ் முரசு, மக்கள் மனம், மின்கிறுக்கள் இணைய இதழ், சிராங்கூன் டைம்ஸ் மற்றும் திணைகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வாசகசாலை, வளரி, நுட்பம், ஆனந்த விகடன், கொலுசு மற்றும் கணையாழி போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரின் தேசியக் கலைகள் மன்றம் நடத்தும் தங்கமுனைப் போட்டிகளில்(2023) கவிதைப் பிரிவில் மூன்றாம் பரிசைப் பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: honeylx@gmail.com

நிழல் பிரதி

0

லட்சுமிஹர்

டைப்பாளியின் பிரதியை மீறிய பன்முகத்தன்மையை வாசகன் எடுத்துக் கொள்வதில் எவ்வித பிரச்சனையுமில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். புதினத்தை நோக்கிய பயணம் என்பது எழுத்தாளரின் உலகத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டியது அதனினும் அவசியம். வாசகரின் கற்பனைப் போக்கு படைப்பை மீறாது இருத்தலே அதில் முதன்மையான பங்காற்றுகிறது. எழுத்தாளரின் நோக்கை மீறிய புரிதல் அப்படைப்பை சிதைப்பதற்கு சமம் ( பி.கு.1 ). அங்கு தான் விமர்சனம் தேவைப்படுகிறது.

தமிழில் விமர்சனம் சார்ந்த வெளிகளை நாம் அணுகும் போது அவை புதினத்திற்கு எவ்வளவு வழிவகை செய்திருக்கிறது என்கிற ரீதியில் அணுகினால் படைப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ள இடைவெளியை நாம் கண்டுபிடித்துவிடலாம். 

விமர்சனம் என்பதை வரையறுத்து கூறும் போது அங்கு கருத்துருக்கள் தேங்கி விடுவதாக மாறுகிறது. அவை எப்போதும் தொடர்நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அவை வெவ்வேறு படிநிலைகளை தளர்த்தியும், ஏற்றும் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று தொடங்கி விமர்சனம் விமர்சகரை நோக்கி நகர்கிறது. படைப்பாளியின் நோக்கம் குறித்து பேசும் போது விமர்சகரின் நோக்கம் குறித்தும் விவாதிப்பது குறுகியவெளியை நமக்கு வெளிப்படுத்தும். விமர்சகர் மேலெழும்பி வரும் பின்புலங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக தற்சமயம் மாறியிருக்கிறது. 

படைப்புகள் காலகட்டத்தின் வெளிப்பாடு என்பதை மீறி அவை கருவாக தன்னை எங்ஙனம் நிலைநிறுத்திக்கொள்கிறது என்பதனை அறிய முற்படும் போது, தற்கால படைப்புகள் முன்பிருந்த உணர்வுகளைத் தாண்டி எவ்விதமான சூழ்நிலைகளைத் தங்களின் படைப்புகளில் கொண்டிருக்கிறது என்பதை ஆராயவேண்டும். இங்கு உணர்வுகள் கூட உணர்வுகளின் சாட்சியாக மாறி மட்டுமே நிற்கிறது. ஏனென்றால் அதன் நித்யத்தன்மையில் வாசகர்கள் உணர்ந்த பருவங்களே மீண்டும் மீண்டும் சுற்றுகிறது. அவை ஒரு சுழற்சியாக தமிழ் புதினங்களில் மீண்டும் மீண்டும் வரையறுக்கப்படுகிறது (பி.கு.2). தமிழ் நாவல்கள் பெருமளவு உலக அரங்கில் சோபிக்காததற்கு காரணம் (பி.கு.3) நம் படைப்புகள் ஒரு வித சுழற்சி ஆட்டத்தினைக் கைகொண்டிருக்கிறது. அதனை துண்டிக்க முயலும் புதினம் இங்கு முக்கியம். சுழற்சியைத் துண்டிக்க கால அவகாசம் என்பது தேவையான ஒன்று. ஆனால் அதில் பரிமாணம் அடைவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழ் புனைவு வெளியில் விமர்சனங்களின் பங்கு இப்பரிமாணங்கள் குறித்து நகர வேண்டிய சூழலில் இருக்கிறது. இவை எதை வழங்கும் என்கிற கேள்விக்கு அது நகர்வை நோக்கியப் பாதையை அளிக்கும். சில ஒப்பீடுகளை வழங்கலாம். தேக்க நிலையைக் குறித்து நிதர்சனத் தன்மையோடு அணுகுதல் முக்கியம். இங்கு நிதர்சனத்தில் முதல் முறை எழுத்தாளர்கள், சமூகம், குழுக்கள், அரசியல் பிரதி என்று கொடுக்கப்படும் சலுகைகளைப் புறம் தள்ளலாம். முக்கியமாக நமது எல்லை எது என்பதை அறுதியிட்டு கூறுவதற்கான காலமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய விமர்சன மரபோ (அது இலக்கியத்தில் மட்டுமில்லை, பன்முகத் துறைகளில்) ஏற்றலையும், மறுப்பையும் வழங்குகிறது. அங்கு விமர்சகர்கள் சுழற்சியினை சரியான நேரத்தில் சுட்டிக் காண்பிப்பது வழக்கமாகவே நிகழ்ந்தேறி வந்திருக்கிறது. அதிலிருக்கும் குறைகளைப் பற்றிப் பேச இது பொருத்தமான இடமில்லை. சுழற்சி முறையை நிறுத்துவது ஒரு ஒப்பீடு அவ்வளவே. இங்கு செய்யுள் மரபையும், கவிதை காலத்திற்கு ஏற்ப தன் போக்கையும் கைவிட்டதையும் சுழற்சி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவை வடிவத்தில் நடந்தது, கருத்தாக்கம் என்னவாக இருக்கிறது என்பதே இதன் மையம். எடுத்துக்காட்டாக தமிழில் எழுதப்படும் அயல் நாட்டு கதைகள் கூட பெரும்பாலும் அந்நிலத்தினை அடையாளப்படுத்தாமல் இதில் வந்து மாட்டிக்கொள்வதைக் கவனிக்க வேண்டும். களத்தை புதியதாக எடுத்துக்கொண்டு மற்றவை எல்லாம் முன்பு எழுதிய பிரதிகளை ஒத்திருக்கிறது. தமிழ் புதினங்களை விமர்சகர்கள் அடையாளப்படுத்தினால் ஒருவித தமிழ் புனைவு தளம் கடந்து வந்த பாதையை கண்டுவிடலாம். இதை ஒருபோதும் எழுத்தாளர்கள், அவர்கள் எழுதும் விமர்சனங்கள் கூறவே முடியாது. இதுவரை அது நிகழ்ந்தது இல்லை. அவை எழவே இல்லையா? என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக விமர்சனக் குரல்களின் தாக்கம் பெருமளவு படைப்பாக மாறவில்லை என்பதை அடிக்கோடிடலாம். 

அதன் நீட்சியாக வடிவங்களுக்கும் விமர்சனத்திற்கும் சம்பந்தம் உண்டா என்றால் கண்டிப்பாக இருக்கிறது. உலக அரங்கில் வடிவம் எப்போதும் மாறக்கூடியது. அவை நம் தமிழ் புனைவு தளத்திற்கு வந்தடையும் முன் அதில் வெவ்வேறு சாத்தியங்களை முயன்ற பிரதிகளும் அதன் விமர்சனங்களும் சாலவடிவத்துடன் சேர்ந்தே நமக்கு கிடைக்கிறது.

 அப்படியாக ஒர் வடிவத்தினை கைகொள்ளும் போது தமிழ் எழுத்தாளர்கள் தடுமாறியதாகவே தெரிகிறது. தற்கால இலக்கியத்தில் வடிவம் என்கிற போக்கிலிருந்து நீளம் (பக்க அளவில் இல்லை) குறித்தானப் பார்வைகளில் தனி கவனம் செலுத்துகிறது. அதில் குறிப்பாக வடிவத்தினை கைவிட்டுவிட்டு கதையாடலினுடைய எழுத்து நுட்பத்தின் செயலாக்கம் எப்படி வெளிப்படுகிறது என்பதாக மாறியிருக்கிறது. 

தமிழ் மொழியில் களத்தைத் தாண்டி மொழியில் அது எங்ஙனம் உதவுகிறது என்பதே முக்கியம். ஒரு பத்தி எப்படிப் பிரிகிறது என்பதை பேசத் தொடங்கவேண்டும். இங்கு முதல் பிரதி பிம்ப எழுத்துமுறையும் அதை அணுகும் போக்கும் உடைகிறது. துண்டுகளாக அவை மாறிநிற்கும் போது எழுத்தாளின் நகர்வுகளை இயல்பாகவே கணித்திட வழிவகை செய்கிறது. பல நேர்த்திகளைக் கையாளவும், அதை ஒன்றிலிருந்து ஒன்றாக உருமாற வழிவகைப் புரிகிறது. விமர்சகன் எழுத்துப் பிரதி கருவின் தன்மையை உடைத்தெறிந்து அவை பத்திகளாக (பி.கு) அவற்றை உருமாற்றுகிறான். நீளம் குறித்தான பார்வை ஏன் என்று புரிகிறது. காட்சி விவரணைகள், உரையாடல்கள் எனப் பிரித்துப் பார்த்துக்கொண்டிராமலும், தொகைநிலையான போக்கினையும் உடைதெரிந்தால் எழுத்தாளனை சவாலிற்கு அழைப்பது போன்ற ஒர் களம் உருவாகிறது. விமர்சகன் கோட்பாடுகளுக்குள் மட்டும் பிரதியை அளக்காது விமர்சனப் பார்வையை விரிவாக்க வேண்டும் என்பதே நோக்கம். 

இதைவிடுத்து குறிப்பாக முன்பு சொன்னது போல விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் நாவல் என்னும் வடிவத்தில் தமிழ் புனைவுப் பிரதிகள் உருவாகியிருக்கிறது என்பதை வாதத்தால் முரண்பட்டு அடம்பிடிக்கலாம் ‘இல்லை’ என்று. ஆனால் அதுவே உண்மை. முக்கியமாக இதற்கு காரணமாக அமைந்தது வகைமை கதைகளை இலக்கியம் இல்லை (பின்.கு4.) எனும் கூற்றை ஏனோ பரவலாக தமிழ் சூழலில் அப்படியே மேலை யுத்தியை எடுத்து பயணித்தது ஒரு காரணம். தமிழ் நிலப்பரப்பில் மட்டுமில்லை, இந்திய நிலப்பரப்பிலும் வகைமைக் கதைகளே பிரதானப் பங்காக இருந்திருக்க வேண்டும். நம் இந்தியக் கூட்டினுடைய நிலப்பரப்பு அதற்கு ஏற்றார் போன்ற மானுடவியல் தன்மை கொண்டது. ஆனால் அவை இலக்கியம் இல்லை என்று கூறி மேற்கத்திய படிநிலை உணர்வு கூறுகளையும், வரலாற்றுப் புதினங்களை மறுசீர் செய்வது (இங்கு அவர்களுக்கு யுத்தம் என்கிற பெரும் நிகழ்வு இருந்தது என்பதை மறந்திடக் கூடாது) எனப் பல அடுக்குகளில் அதனுடைய நீட்சியாகவே அவர்களின் வேலைகளை இங்கு நடத்திக்கொண்டிருந்தனர். இருக்கின்றனர். தொழில்முறை எழுத்து என சுருக்கி விடுவது வாடிக்கை. இங்கு இயல்பு வாதம், மாற்று முயற்சி என்று அடங்கிவிடாமல் பிரதியின் ஆற்றல் தன்மையில் இன்று வரை எழுத்தாளன் தடுமாறுவது தொடர்கிறது என்பது அசாத்தியமான நிலை. அதை விமர்சகர் சுட்டிக்காட்டலாம். இதைத் தொடும் போதே நாம் மொழியைத் தொடுகிறோம். 

தமிழில் எழுதப்பட்ட வகையறை கதைகளின் மொழியில் இருக்கும் குறைபாட்டினாலேயே அதை இலக்கியம் இல்லை என்கிறோம். அதன் நிகழ்வுகள் முக்கியத்தன்மை உடையது என்பதை மறந்துவிடுகிறோம். இங்கு நிகழ்வுகள் என்று குறிப்பிடும் போது மொழி தன் இருப்பை தக்க வைப்பது முக்கியம். மொழியை வைத்து நாவல் எழுதும் தமிழ் புலம் மாறவேண்டிய காலகட்டம். நிகழ்வுகள் வீரிய மொழியில் இருத்தல் அவசியமாகிறது. தமிழ் இலக்கியத்தில் நிகழ்வுகள் குறித்தான பார்வை எழுத்தாளர்களுக்கு விமர்சன வெளி விஸ்தாரமாக அறிமுகப்படுத்த வேண்டியதாகவும் மாறுகிறது. ஏனென்றால் தமிழ் வடிவத்தில் அதிக சிபாரிசுகளையும், சலுகைகளையும் பெற்றது நாவல்களே. இங்கு விடுபட்ட விமர்சனக் கோர்வைகளையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். வெளியான தமிழின் (தமிழின்) சிறந்த நாவல்கள் இதில் விதிவிலக்கு. எவ்வளவு முன்னோக்கி நமது இலக்கியமும் விமர்சனமும் இருக்கிறது என்பதை பேசும் போது எங்கே நாம் பின் தங்கி இருக்கிறோம் என்பதைக் கூறாமல் இருப்பது சரியாகாது. 

மேற்கூறியவற்றில் எழுத்தாளன் இதை செய்ய வேண்டும் என்கிற எந்த நிர்பந்தமும் இல்லை. அவன் போக்கில் எழுதலாம். அப்படியானால் எழுத்தாளன்- விமர்சகன் எனும் போக்கை எவ்வாறு கையாள்வது எனக் கூறவேண்டிய நிலைக்கு வாசிப்பை மட்டுப்படுத்தியிருக்கிறோம். படைப்பின் பிரதி பிரித்தாளப்படும் நோக்கின் நிலைத்தன்மை விரிவாக்கப்பட வேண்டும். பிரதியின் நுண்பொருள் சாத்தியங்களும், அவற்றின் மீது எழும்பும் மனித சிந்தனையே பிரதான விமர்சகன் வாசகனுக்கு கடத்த நினைக்கும் அடிப்படை. அது தன்னிலையை உதற எப்போதும் தயார் நிலையில் இருத்தல் அவசியம். ஒப்பீட்டுத் தன்மை படைப்பிலிருந்து படைப்பிற்கு மாறுவதில்லை அது நிகர்பலன் உடையது. ஒன்றை நிலைநாட்டுவது விமர்சனத்தின் நோக்கமுமில்லை. 

அதன் சாரமாக துறைசார் நூல்களின் தன்மையை மேற்கோள் காட்டுவது சிறந்த ஒன்றாக இருக்க முடியும். அவை வெறும் தகவல்களாக மட்டும் இல்லாமல் எப்படி புனைவு வெளிக்குள் மாறுகிறதென்பது ஒரு சுவாரஸ்யமான பகுப்பாய்வு. திறன், நடைமுறையில் அத்துறைக்கு உதவும். ஆனால் அவை பிரதியின் தன்மையை ஏற்கும் போது மனிதன் ஏற்கும் குறி மற்றும் குறிப்பானை எப்படி உளம் ஏற்கிறது என்பது காலம் நகர்த்தி வந்த பார்வை. அதிலிருந்து குறிப்பான் எப்படி குறியாளுகையாக மாறுகிறது என்பது முக்கியம். 

குறியாளுகை அனுபவமும், பாதிப்பும் என்கிற காலவெளியில் அலைவதை கணிக்கமுடியும். வழக்காறு மொழிக் கதைகள் குறித்த பார்வை இங்கு பேசப்படுவது முக்கியம். ஒரு பக்கம் துறையையும், இன்னொரு பக்கம் வழக்காறு வெளிப்படுத்தும் பண்பாட்டையும் வெளிக்கொணரும் படைப்புகள் ஒரே மாதிரியான சிக்கல்களைக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் தகவல்கள், இன்னொரு பக்கம் தொன்மம் இரண்டும் வெற்றியின் சூட்சமமாக புனைவில் தப்பித்துக்கொள்வதை பற்றிய விமர்சனங்கள் கவனிக்கப்படவேண்டியவை. இங்கு தான் மொழிக்கும், அர்த்தத்திற்கும் இடையே இருக்கும் படிநிலைகள் ஏற்றிருக்கும் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

 இங்கு வாசகனுக்கான பிரதியைப் படைப்பாளன் உருவாக்க முயல்வது, படைப்பாளனின் சுதந்திரம் என்றில்லாமல் படைப்புவெளி என்பதே குறியாளுகையின் போக்காக வரையறுக்கலாம். ஆனால் உடன்பட வேண்டிய அவசியமில்லை. படைப்பாளிக்கும் படைப்பாளிக்கும் உள்ள வேறுபாட்டை அறுதியிட்டு கூறும் போது படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பையும் தனித்து அடையாளப்படுத்துவது முக்கியம். எழுத்தாளனின் படைப்புலகை அல்லது வெளிப்பாட்டை ஒர் புள்ளியில் நிறுத்த முயல்வது அவசியமற்றது.

அந்நிலையில் தான் வாசிப்பின் போக்கை ஒரு விமர்சகனால் மேலெழுப்ப முடியும் என்கிற தன்மை மீளுகிறது. எதை, ஏன், எப்படி வாசிக்க வேண்டும் என்கிற அட்டவணையை விமர்சகன் கொடுப்பது அவசியமற்றது. வார்த்தைகள் சிதறுண்டு கிடக்கும் பிரதிக்குள் இவை மூலக்கருக்தை நோக்கியும், அருவ குரல்களுக்கும் வாசகனை இழுத்து வருவதே முதன்மையான ஒன்று. அதிலும் பாலின முரண் பற்றி படைப்பாளிகளிடமே இதுகாலம் வரை உரையாடி வந்திருக்கிறோம். அது உண்மையில் பேச வேண்டிய இடமாக விமர்சனத் தளத்தில் இருந்திருக்க வேண்டும். பாலின கூறுகளின் விமர்சன அர்த்தத்தின் முதல் படியில் கூட ஒரு பாலரின் கருத்தை மட்டும் முன்னகர்த்தாத குரல் எழும்ப வேண்டும். ஆண், பெண் என்கிற விமர்சன முரண் இல்லை பாலின முரணை இங்கு பேசுகிறோம். இன்பநெறி உடல்சார்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட்டிருப்பதும், புரிந்துவைத்திருப்பதும் எவ்வளவு பெரிய பிழை. அவை தேவைகளாக உருமாறி நிறைவேறிய பின் கைவிடபட்டுக் கொண்டிருப்பதன் மீது விமர்சகனின் பார்வை இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.   

இப்படியான நிலையிலேயே விமர்சனத்திற்கு கையாளும் வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமோ என்று தோன்றுகிறது (பி.கு.5). கோட்பாடுகளின் நிலைத்தன்மை எங்கிருந்து தொடங்குகிறது – அவை காலங்களும், அதன் சாட்சிகளுமாக மனிதனின் எண்ணப்பூர்வ வடிவமாக இருக்கிறது. அவை அவ்விலக்கியம் எழுதப்படும் வரலாறு, நோக்கம் அதன் காலம் என தன்னை உருவாக்கிக் கொள்வது அவசியம். ஒன்றை ஒன்றின் ஏற்ப வகைமைக்குள் அடக்காது அதன் சார்பு நிலைக்குள் பொருத்திப்பார்ப்பது என்பது சரிவராத காரியம். அப்படியிருக்க முன்பு செய்த தவறான ஒன்று வாசகனும், விமர்சகனும் தன் நிலைக்கு ஒரு படைப்பை இழுப்பது. படைப்பை நோக்கி முன்நகர கூடுமான முகாந்திரத்தை உருவாக்குவது என்பதிலும், எண்ணம் வீறுகொண்ட கோட்பாடு ஆகியவை பிரதிக்கு பிரதி மாறுதல் உடையது என்பதை ஏற்றுக்கொண்டு பயணிக்க முயல வேண்டும். அங்குதான் சொல் கொண்ட பொருளும், பொருள் கொண்ட சொல்லும் தங்களை எங்ஙனம் பக்கங்களில் வகுத்து கொண்டு கதையாடலை வெளிப்படுத்துகிறது என்பதைப் பின்தொடர இயலும். தன்னை வரித்து கொள்ள முனையும் விமர்சனப் பக்கங்கள் ஒன்றின் பிடியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இலக்கண மரபுகள் என்பது உரைநடையில் இருந்து தொடங்கவில்லை என்பதை இங்கு பல வாசகர்களுக்கும், புதியதை விரும்பாத பழைமைவாத எழுத்தாளர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். இலக்கணம் என்பது உரைநடையின் போக்கிற்கு மாறுதல்களை கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும். அதன் பணிகள் நமது மொழியில் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது எப்போதும் மறைபொருள். கதையும், இலக்கணமும், மொழியும் என மூன்று வெவ்வேறு உலகம் ஒன்றிசைவதை பற்றியான கோட்பாடுகள் மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும். அவை படைப்பிலிருந்தும் தொடங்கலாம், பாடத்திட்டத்திலும் தொடங்கலாம், விமர்சனத்திலிருந்தும் தொடங்கலாம். அப்படி ஒன்றை மறந்து பக்கங்களில் நாம் பயின்ற ஒன்றைத் தேடிக் கொண்டிருப்பது நேர விரயம். புனைவுகள் மொழியை உடைத்துக் கொண்டே இருக்கும் என்பதை விமர்சகன் உணர்த்தி கொண்டே இருக்கிறான். 

பிரதிகளுக்கு இதுவரை கொடுத்திருக்கும் சலுகைகளைப் பற்றி ஒர் விமர்சகன் கவனத்தைக் குவிக்க பழக்குதல் என்பது அவனுடைய பார்வையின் கூர்மையைக் குறைக்கும் இடங்களைக் கண்டுகொள்ளல் எனலாம். மேலும் அது தன் திசையிலிருந்து பிறழாமல் இருக்க வழிவகைசெய்யும். குறிப்பாக விமர்சகர்களாக அறியப்படுபவர்களை எவ்வித கட்டுக்குள்ளும் கொண்டுவந்து விடாமல் தங்களைப் பாதுகாப்பது முக்கியமான ஒன்று. பல விமர்சகர்கள் தடுமாறிய இடம் இது. விமர்சகன் மற்றவர்களுக்கு அளிக்கும் பயத்தை( எதிர் விமர்சனத்தை மட்டும் கையாளுதல்), கேலியை, நக்கலை, தன் ஈர்ப்பு போன்ற விடயத்திற்குள் மாட்டிகொண்டால் பெரும் சிக்கல். வாசகனை உள்ளிழுத்துக் கொள்ள எதனை எழுத்தாளர் வலியுருத்தியிருக்கிறார், ஏற்கவில்லை, மறைபொருளாக தாவுகிறார், கடந்திருக்கிறார் எனலாம். ஆனால் இதைச் செய்திருக்கலாம் என்பது அவசியமற்றது. புரிதல் என்கிற விதியிலிருந்து எதிர்பார்ப்பு என்னும் விதிக்கு விமர்சகன் வரும் இடம். எதிர்பார்ப்பின் வினையை ஆதரிப்பது விமர்சகனின் நோக்காக இராது. படைப்பை அணுகும் தன்மை இருக்கும் பட்சத்தில் பல்வேறு சாத்தியக்கூறுகளை படைப்பாளனுக்கு காட்டும் விதத்தில் நகர்வது ஒரு பண்பாட்டின் ஒத்திசைவுக்கு வழிவகுக்கும். அடிமனம். அறிமனம் என பிரிக்கும் தொனிக்கு தனி வகைமை கற்பிக்காமல் இங்கு பல்வேறு சாத்தியங்களை ஒன்றிணைக்கும் விரிவாக்கம் அவசியமாகப்படுகிறது. ஒன்றிசைவு என்பது அனைத்தையும் தனியாகப் பார்க்கும் திறன் உடைய பல்வேறு அறிவுசார் வெளிகளைக் கையாளுவது. தனித்தன்மையை அழிப்பது இல்லை.  

அதிலும் இக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக விமர்சன அரங்கில் நடப்பது என்பது ஒன்றின் அளவை கொண்டு அனைத்து விதமான பிரதிகளை அணுகுவது. இங்கு குறிப்பிடும் ஒன்றின் அளவு என்பது விமர்சகனின், வாசகனின் அனுபவமும், அவன் துறை சார்ந்த அறிவை மேலும் விரிவாக்கிக் கொள்ளாமல் கூட்டுக் கதிராக சில வாதங்களை (இதில் கோட்பாடுகள் அடங்காது. ஏனெனில் அதில் இருந்தும் இவற்றில் பொதுவாக இடம் பெறுகிறது) மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக பல காலங்களின் இலக்கியத்தை அணுகியிருக்கிறோம் என்பதைக் கூறியாக வேண்டும். இது பிரதியை ஒரு எல்லைக்குள் அடுக்குவது என்பது அப்பட்டம். மீறல் பிரதியில் இலக்கணம் தேடுவது, இயல்புவாதத்தில் புதுமையைத் தேடுவது என்று இவை சம்பந்தம் இல்லாத விமர்சனங்களாக முன்னகர்வதை அகற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது ஒரு விதமான மனநிலையினை புதிய வாசகர்களுக்கு அளித்து அவை அவர்களின் தேடலை மட்டுப்படுத்துவதோடு நில்லாமல் அவர்களின் காலத்தையும் முழுங்குகிறது. ஏனோ மாஸ்டர்ஸின் புகழ் பாடாது அவர்களின் சமீபத்திய பிரதியை அணுகும் போது அவர்கள் பிம்பம் சுக்குநூறாகும். ஒரு விமர்சகனாக அவர்கள் நல்ல பிரதியை எழுதியிருக்கலாம் என்கிற காலத்தைக் கடந்து தற்போதைய நிலையில் அவர்களின் இலக்கிய தரத்தை அணுகுவது அவசியம். விமர்சன தவறு தொடங்குவதே புதிய வாசகர்களுக்கு மாஸ்டர்ஸ் என்று அறிமுகப்படுதுவதிலிருந்து ஆரம்பமாகிறது. விமர்சனம் என்பது அறிமுகப்படுத்துவதோ, துதிபாடுவதோ, என்ன எழுதினாலும் ஒரு மனக்கோட்டையாய் கட்டி வைப்பதோ இல்லை. விமர்சனம் படைப்பின் நிழலாக இருத்தல் அவசியமாகிறது. (இங்கு மதிப்புரை, துணுக்கு பார்வை, வாசகப் பார்வை, முன்னுரை எல்லாம் தனி மனித விருப்பத்திற்குள் அடங்குபவை அது விமர்சனம் இல்லை, திறனாய்வு மற்றொரு எல்லை கொண்டது ) 

விமர்சனம் எழுதுவதை பற்றிப் பேசும் போது அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட வேண்டியது ‘விமர்சன அணுகுமுறை’. விமர்சகன் படைப்பை அணுகுவது ஒரு புறம் இருக்க, விமர்சனத்தை அணுகும் படைபாளியிடமும், வாசகனிடமும் அது நேரடியாக கைமாற்றப்படுகிறது என்பது ஒரு விதம். இதில் படைப்பாளியும், வாசகனும் ஒரு திசையில் பயணிக்க முடியுமா என்றால் சந்தேகமே. சில அடிப்படையானக் கூறுகளை இருவருக்கும் பொருந்தும்மட்டில் அவற்றைக் கூற விழையலாம். விமர்சகனுகென தேர்ந்த பகுதி ஒன்று இருக்கும். அதை ஒட்டிய அணுகுமுறையாக அது இருக்கிறதா என்று முதலில் பார்க்கலாம். உதாரணத்திற்கு சரித்திரம், தத்துவம், கோட்பாடு, அரசியல் என பல்வேறு விதங்களில் பிரியும். இவை அனைத்திலும் தேர்ந்த ஒருவர் இருப்பது சிரமம். ஆனால் ஒர் அடிப்படை புரிதல் அவசியம். இதில் தனித்துவ துறையில் ஒரு படைப்பை கையாளும் போது அது மதிப்புரை, வாசக உரை என்றிலிருந்து திறனாய்வு என்று தாவுகிறது. இதற்குள்ளான விடயத்தை நாம் அறிந்திருப்பது அவசியம். இல்லையென்றால் ஏதோ ஒரு பரிந்துரைகள், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்பதற்குள் சிக்கி, விமர்சனம் என்கிற பெயரில் திராபைகளை வாசித்துக்கொண்டு இருப்போம். எழுத்தாளனுக்கு இவ்வணுகுமுறை எழுத்திலும், வாசிப்பவனுக்கு புதிய வாசிப்பின்பத்தை அளிப்பதாகவே அவை மாறவேண்டும். விமர்சனம் என்பதை நம் சமூக சூழல் இதுவரை எப்படி எதிர் கொள்ள கற்றுக் கொடுத்திருக்கிறது என்பது மிக முக்கியமான விடயம். அவை எதிர்ப்பு மனநிலையிலிருந்து தொடங்கி எதிர்ப்பு அணுகுமுறைக்கு மாறுவதையே நாம் இதுவரைக் கண்டிருக்கிறோம். அதனின் திசையை மாற்றுவதிலும் கவனம் தேவைப்படுகிறது. சமூக அமைப்பியலுக்கும் விமர்சனத்திற்கும் தொடுதூர உறவு மட்டுமே இருக்கிறது என்பதே உண்மை. அதனால் என்னவோ நிதர்சனத்தை எதிர் கொள்ள முடியாத, கையாலாகாத தனத்தை அது மனிதனின் செயலுக்கு பதிலாக அளிக்கிறது. அது ஒரு மனோபாவம். விமர்சனம் தன்னளவில் உருவாகும் புனைவு தளம் அன்றி நேர்கோட்டில் அடுக்கும் திறன் உடையது. 

படைப்பு காலம் தாண்டி நிற்கும், படைப்பாளன் இறந்துவிட்டான் போன்ற பல பொதுச் சொல்லாடல்களை மறுபரிசீலனைக்கு கொண்டுவருவது முக்கியமாக தோன்றுகிறது. அதில் இலக்கியப் பொதுத்தன்மையிலிருந்து மட்டுமில்லாது சமூகம் கைக்கொண்டிருக்கும் சொல்லாடல்களை இலக்கியத்திற்கும், இலக்கியத்திலிருந்து சமூகத்திற்கும் என அவற்றை ஒரு மாற்றுத் திசை அல்லது மறுசீர் வாய்மொழியாக மாறவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அங்கு விமர்சகனின் பங்கு முக்கியமானது. நீண்டப் பாதையை உருவாக்குவதை விடுத்து ஒர் விமர்சகன் ஆழமான ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாக மாறுகிறது (பி.கு.6). இதன் வரையறை அற்றத் தன்மை விமர்சனத்தின் புதிய சாத்தியக் கூறுகளை ஏந்தி நிற்கும். எதையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மனதிசையில் பயணித்தல் ஆகச் சிறந்தது. ஒவ்வொரு விமர்சனமும் ஒரு புதிய வாசகனை உருவாக்கும் என்கிற பெரும் நம்பிக்கை எப்போதும் உண்டு. 

***

(பி.கு.1): இங்கு வாசகர்களின் பரந்துபட்ட எண்ணச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நோக்கமல்ல. ஒர் வாசகன் பிரதியை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லலாம். ஆனால் நாம் குறிப்பிடுவது விமர்சகனின் பங்கு பிரதிக்கு எப்படி ஆட்கொள்ள வேண்டும் என்பதே. வாசகனின் அணுகுமுறையும், விமர்சகனின் அணுகுமுறையும் வேறானது. 

(பி.கு.2): யதார்த்தவாத கதைகள் ஒரே உணர்வுகளைக் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டும், பின்நவீனத்துவம் மற்றும் பல உள்ளடக்கம் சாராத பிரதிகள் மொழியின் போக்கை மட்டும் கையாளுகிறது என்கிற எண்ணத்தை பரவலாகப் பார்க்கமுடியும். இதில் யதார்த்தவாதக் கதைகளை பிரித்துப் பார்த்த அளவு மீறல் கதைகளை இங்கு பொதுவெளி வாசகர்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் அவர்களின் உரையைப் போல மொழி இல்லை என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது. (தமிழ் எழுத்தாளர்கள் சிலரின் உரையும், எழுத்தும் ஒன்றாக இருக்கிறது என்பது முக்கியம். அவர்களின் நாவல்களில் இருக்கும் உரையாடல் பகுதிகள் தமிழின் சாபக்கேடு. பக்க விரயம். மீதி வாசகன் கையில். 1990 முன் நாவல் எழுத்தாளர்களிடம் ஒரு பன்முக அணுகுமுறை இருந்தது. பின்னால் அது தேய்ந்து தேய்ந்து வருகிறது. நிறைய முயற்சி தென்பட்டது இப்போது அதில் ஓரளவு கூட இல்லை. சிலரை விதிவிலக்காக்கலாம்). இதன்போக்கு கதைகளின் களத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறது. மொத்தமாக இவர்களை மொழியின் மேல் கட்டமைக்கும் பார்வையை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மொழியின் தளத்திலேயே அவ்வளவு வித்தியாசங்களைக் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இவர்கள் ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார்களா ? என்றால் இல்லை. யதார்த்தவாதக் கதைகளே (எழுத்தாளர்கள் இல்லை) சுழற்சியை கொண்டிருக்கிறது என்பது விளங்கும். விமர்சகர்களின் அலாதியான வரையறை இதை எல்லாம் அறுதியிட்டு கூற விழைவதே. 

பி.கு. : பத்தி என்பது இங்கு கட்டுரையையோ அல்லது துனுக்கையோ குறிக்கும் பொருள் இல்லை. 

பி.கு 3 : தமிழ் நாவல்கள் குறித்தான காத்திரமான வெளிப்பாடுதான் இவை. என்ன வாசித்திருக்கிறான்? சிறுவன்? காலம் கடக்க புரியும்? இந்த ஸ்கூல் ஆப் தாட்? போன்ற பேச்சுக்களைக் கடந்தும், தெரிந்தும் தான் முன் நகர்கிறோம். வாசகனாக நாவல்கள் தமிழில் அவ்வளவு திருப்தித் தந்தது இல்லை. தங்களுக்குள்ளேயே சுற்றி அலைந்து கொண்டிருக்கும் போக்காக தான் பார்க்கிறேன். அவை தமிழ் சமுகத்தில் நிகழ்த்திய மாற்றங்களை மறக்கவில்லை. ஆனால் உலக இலக்கியத்தில் யாது? என்கிற கேள்வியே எழுகிறது. உலக நாவல்களை தொடர்ந்து வாசிப்பவர்களாக இவை பெரும் அயர்ச்சியை கொடுக்கிறது. நூற்றாண்டிற்கு ஒரு படைப்பு ஒரு எழுத்தாளன் அதை நோக்கி நகர்ந்தால் ஆச்சர்யம். தமிழ் சூழல் அதை அனுமதிக்காது. ஏனென்றால் தங்களுக்கு எது வருகிறதோ அதுவே இலக்கியம் என தம்பட்டம் அடிப்பவர்களின் குரல் மேலோங்கியிருக்கிறது. அதிக பக்கங்கள் எழுதுவது (இங்கு maximal writing in minimal asethetics, grand narrative) பற்றி பேசவில்லை இங்கு பக்கம், எழுத்து, எழுதவரும் திறைமையை மட்டும் வைத்துக்கொண்டு எழுதுபவர்களை பேசுகிறோம்) இங்கு ஏன் நாவல்கள் மட்டும் வருகிறது மற்ற வடிவங்களை குறித்து ? என்கிற கேள்விக்கு உங்களின் வாசிப்பு வழிகாட்டும். 

பி.கு.4 :இது இலக்கியம். இது இலக்கியம் இல்லை என்று கூறுபவர்கள் பெரும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களை நம்ப வேண்டியத் தேவை இல்லை. அப்போது எதையோ எழுதி, குப்பையாக ஒன்றைத் தமிழில் முன்னிறுத்த முடியுமா என்றால்? கண்டிப்பாக இல்லை. அங்கு தான் எழுத்தாளனுக்கு தன்னுடைய பிரதியை வெளிப்படுத்துவதோடு நின்று கொள்வது முக்கியம். மற்றதை விமர்சனம் பார்த்துக்கொள்ளும். ஒரு எழுத்தாளன் மற்றொரு எழுத்தாளனுக்கு கொடுக்கும் விமர்சனமும், அங்கீகாரமும் மனரீதியில் ஆறுதல் அடைந்து கொள்ளலாம். அதை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அது தேவையுமில்லை. விமர்சகர்களின் குரல் ஓங்கும் போது இப்படிப்பட்ட குரல்கள் தானாக உடையும். 

பி.கு.5 : இங்கு விமர்சகர் இருவகையாகப் பிரிகிறார்கள். மேலை விமர்சன இயலை பயன்படுத்தியவர்கள், பயன்படுத்தாதவர்கள். ஒரு தரப்பினர் பிரதியிலிருந்து ஒன்றை உருவாக்க முயன்று கொண்டிருந்தனர். விமர்சன கலை என்றே முன்னிலைபடுத்தினர். மற்றொரு தரப்பில் வரக்கூடியவர்கள் தத்துவங்களின் வழியே, கோட்பாடுகளின் வழியே விமர்சன மரபை முன்னகர்த்தினர். இரண்டும் தாங்கள் எடுத்துக் கொண்டதிலிருந்து எவ்வித சமரசமும் செய்யாது நேர்கோட்டில் பயணித்தனர். ஆனால் இருவருக்கும் வாசகர் பரப்பில் அதை நிகழ்த்திக் காட்டிட முடியவே இல்லை. அவர்கள் எழுத்தாளர்கள் உடனேயே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும் தங்களின் விமர்சனப் போக்கில் முன் நகராது எழுத்தாளர்கள் கவனமாக பார்த்துக்கொண்டனர். எதையும் எழுதினால் தான் விமர்சனம் செய்ய முடியும் என ஒரு தரப்பு சொல்லி அதைக் கடந்தது. இன்னொரு தரப்பு இன்றுவரை கோட்பாடுகளின் விளக்கத்தை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. 

பி.கு.6 : பண்பட்ட ஒர் மனிதனால் விமர்சனத்தை உருவாக்கவும் முடியும், அதை எதிர்கொள்ளவும் முடியும். 

***

லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணிபுரிந்து வருகிறார். இதுவரை யாவரும் வெளியீடாக ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சிந்தாந்தம், கிளாஸிக் டச், கூத்தொன்று கூடிற்று என நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதில் கூத்தொன்று கூடிற்று நூலுக்கு சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மின்னஞ்சல்: latshmihar.malai@gmail.com

தமிழ் அரசியற் திறனாய்வு மரபு

0

பாரதிராஜா

திகாரத்தைக் கேள்வி கேட்ட நாகரிகம், காட்சியாக மாறிவிட்ட அரசியலை இன்று எப்படி எதிர்கொள்கிறது?

முன்னுரை: ஒரு நாகரிகத்தின் நினைவிழப்பு பற்றிய கதை

ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றி சில அடிப்படை நம்பிக்கைகளை வைத்திருக்கிறது. சில சமூகங்கள் தங்களைப் போர்வீரர்களின் சந்ததியென நினைக்கின்றன. சில சமூகங்கள் தங்களை வணிக நாகரிகம் என நினைக்கின்றன. சில சமூகங்கள் தங்களை அறிவியல், காரண-ஏரணத்தின் (logic) வாரிசுகள் எனக் கருதுகின்றன. அந்த வகையில், தமிழ்ச் சமூகத்தை எந்த அடிப்படைப் பண்பால் அடையாளம் காண்பது?

இக்கேள்விக்கான பதிலை வரலாற்றின் நீண்ட நதிக்குள் தேடிச் சென்றால், ஒரு தனித்துவமான உண்மை நமக்குத் தென்படும். தமிழர்கள் வெறும் அரசுகளை உருவாக்கியவர்கள் அல்லர். வெறும் பேரரசுகளை நிறுவியவர்கள் அல்லர். வெறும் மன்னர்களின் வரலாற்றை எழுதியவர்களும் அல்லர்.

தமிழர்கள், வரலாற்றின் மிக நீண்ட மரபுகளில் ஒன்றாக அதிகாரத்தை எப்போதும் கேள்விக்குட்படுத்தியவர்கள். அதிகாரத்தைப் புனிதப்படுத்தாமல், அதை அறத்தின் அளவுகோலில் அளந்து பார்த்தவர்கள். இதுவே தமிழ் நாகரிகத்தின் மிக ஆழமான பண்புகளில் ஒன்று.

திருவள்ளுவர் முதல் சங்கப் புலவர்கள் வரை, சோழர் கால உள்ளாட்சி அமைப்புகள் முதல் பெரியாரின் பகுத்தறிவுப் புரட்சி வரை, தமிழ்ச் சமூகம் ஒரு விந்தையான தொடர்ச்சியை நமக்குக் காட்டுகிறது: எந்த அதிகாரமும் நிலையானதல்ல. எந்த அதிகாரமும் திறனாய்வுக்கு அப்பாற்பட்டதல்ல. 

தமிழ்ச் சமூகத்தைப் பற்றிப் பேசும்போது நாம் வழக்கமாக அதன் மொழி, இலக்கியம், கலை, ஆன்மீகம், வீர வரலாறு போன்றவற்றையே முன்னிறுத்துகிறோம். ஆனால் உலக நாகரிக வரலாற்றில் தமிழ்ச் சமூகத்திற்குத் தனியே ஓர் அரிய அடையாளம் உண்டு. அது வெறும் ஆட்சியை ஏற்றுக்கொண்டு வாழும் சமூகம் அல்ல. மாறாக, அதிகாரத்தைக் கேள்விக்கேட்கும் சமூகம்.

தமிழர் வரலாற்றைப் படிக்கையில் ஒரு வியப்பூட்டும் உண்மை தெரிகிறது. உலகின் பல சமூகங்கள் அரசர்களைக் கடவுளாக்கிக் கொண்ட காலத்தில், தமிழ்ச் சமூகம் அரசனை நெறிக்குள் வைத்துப் பார்த்தது. அதிகாரத்தை அறமாக மதிப்பிட்டது. அரசியல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல. சமூக நியாயத்தின் கருவி என்று புரிந்துகொண்டது.

ஆனால் இங்கேதான் வரலாற்றின் மிகக் கடுமையான முரண்பாடு உருவாகிறது. இதே தமிழ்ச் சமூகம்தான் இன்று இந்தியாவில் மிகவும் அரசியல் ஆர்வம் கொண்ட சமூகங்களில் ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும், அதன் அரசியல் ஈடுபாடு பல நேரங்களில் அறிவுசார் மதிப்பீடாக இருப்பதில்லை. அது ஓர் உணர்ச்சி நாடகமாகத் தெரிகிறது. அரசர்களைக் கடுமையான விதிகளின் படி மதிப்பிட்ட நாம் அரசியல்வாதிகளை வேடிக்கை பார்ப்பவர்களாக மாறியிருக்கிறோம். ஒருகாலத்தில் அரசியல் அறத்தின் கேள்வியாக இருந்தது. இன்று அது உணர்ச்சியின் கேளிக்கையாக மாறிவிட்டது.

இந்த முரண்பாடு எங்கே ஆரம்பித்தது? அதைப் புரிந்துகொள்ள தமிழர் அரசியற் திறனாய்வு மரபின் நீண்ட வரலாற்றைப் பார்க்க வேண்டும். இது வெறும் அரசியல் பற்றிய கட்டுரை அல்ல. ஒரு நாகரிகத்தின் நினைவிழப்பு பற்றிய கதை.

தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைப் பண்பு: அதிகாரத்தைப் புனிதமாக்க மறுத்த பண்பாடு

ஒவ்வொரு நாகரிகத்திற்கும் ஓர் உளவியல் அடிப்படை இருக்கும். ரோமானிய நாகரிகத்தின் அடிப்படை கட்டுப்பாடு. சீன நாகரிகத்தின் அடிப்படை படிநிலை. மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படை காரண-ஏரணம். தமிழ் நாகரிகத்தின் அடிப்படை என்ன?

தமிழ்ப் பண்பாட்டின் மையப் பண்பு கீழ்ப்படிதல் அல்ல. மறுவினை. தமிழ்ச் சமூகத்தில் அதிகாரம் என்றால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரலாற்றில் வலுவாக இருந்ததில்லை. மாறாக அரசனைக் கேள்வி கேட்கலாம். சமயத்தை எதிர்க்கலாம். சமூக மரபுகளை உடைக்கலாம். அதிகார அமைப்பை மறுக்கலாம்.

இது வெறும் அரசியல் நடத்தை அல்ல. இது ஒரு நாகரிகப் பண்பு.

தமிழர்கள் அரசியலைத் திறனாய்வு செய்தவர்கள் மட்டுமல்லர். அதிகாரத்தை எப்போதும் தனியாராக்க விடாதவர்கள். இந்த ஒரு வரியில்தான் தமிழ் அரசியற் திறனாய்வு மரபின் சாரம் இருக்கிறது.

திருக்குறள் — தமிழின் முதல் அரசியற் திறனாய்வு நூல்

திருக்குறள் பெரும்பாலும் ஒழுக்க நூலாகப் படிக்கப்படுகிறது. ஆனால் அது உலகின் தொன்மையான அரசியல் நெறிமுறை நூல்களில் ஒன்று என்பதை நாம் மறக்கக்கூடாது. வள்ளுவர் அரசனின் அதிகாரத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட அரசனையும் புகழ்ந்து பாடும் வழக்கம் அப்போது இருக்கவில்லை என்பதையும் திருக்குறள் நமக்குச் சொல்கிறது.

அவர் அரசனைத் தாண்டி ஒரு நெறி அமைப்பை உருவாக்குகிறார். அரசன் யார்? அவன் எப்படிப் பேச வேண்டும்? எப்படி வரி விதிக்க வேண்டும்? மக்களை எப்படிக் காக்க வேண்டும்? இவற்றை வள்ளுவர் நேரடியாக மதிப்பிடுகிறார்.

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.” (குறள் 550)

கொடுங்கோலனை அழிப்பது பயிரில் களை எடுப்பதற்கு ஒப்பானது என்று சொல்கிறார். இது அரச அதிகாரத்திற்கு நேரடியான சவால்.

“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.” (குறள் 552)

ஆட்சியாளன் அறநெறி தவறி வரி கேட்பதை வழிப்பறிக் கொள்ளையோடு ஒப்பிடுகிறார். இதில் மிகப் பெரிய வேறுபாடு என்னவென்றால், இது அரசனைப் புகழும் இலக்கியம் அல்ல. அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் இலக்கியம். 

ஒருவேளை, வள்ளுவரே அரசகுடியில் பிறந்திருந்திருக்கலாம். இளங்கோவடிகள் போல். அதனாலேயே அவருக்கு அரச புகழ் பாடும் தேவையில்லாமல் போயிருந்திருக்கலாம். அவருடைய அரசியல் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளுக்கும் அதுவே காரணமாகவும் இருக்கலாம். இதுவரை அப்படி எதுவும் நிறுவப்படவில்லை. எனவே வள்ளுவர் வெளியிலிருந்து வினா எழுப்பிய நம்மைப் போன்ற எளிய மனிதர் என்றே வைத்துக்கொண்டு தொடர்வோம்.

அதாவது, தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான நூல்களிலேயே அரசியற் பொறுப்புணர்வு பற்றி இருக்கிறது. தமிழ் அரசியற் திறனாய்வு மரபின் முதற் பண்பு இதுதான்: அதிகாரத்திற்கு வெளியே நின்று பேசுவது.

சங்க காலம் — மன்னருக்கு எதிரே நின்ற புலவர்

புறநானூறு படிக்கும்போது நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சங்கப் புலவர்கள் அரசவைப் பொழுதுபோக்காளர்கள் அல்லர். அவர்கள் அரசியற் கருத்தாளர்கள்; அறவியற் தணிக்கையாளர்கள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார் சொல்வது அரசியல் எல்லைகளைக் கேள்விக்குட்படுத்துவது. ஒரு புலவன், “எல்லா ஊரும் என் ஊரே, எல்லோரும் என் உறவே” என்று சொல்வது அன்றைய காலத்தில் அரசியற் துணிச்சல். இனம், இடம், அரசு என்ற எல்லைகளை மறுப்பது. போர் வழி எல்லைகளை விரிவாக்க விரும்பும் அரசன் வரைந்து வைத்திருக்கும் எல்லைகளை ஏற்க மறுக்கும் குரல்.

பல பாடல்களில் மன்னர்களின் முடிவுகள் நேரடியாகச் சாடப்படுகின்றன. புலவர் மன்னனைப் பார்த்து “இது தவறு” என்று சொல்லும் உரிமை பெற்றிருந்தார். சில இடங்களில் குரலில் இருக்கும் அச்சத்தை உணர முடிந்தாலும் அதை மீறிய துணிவையும் உணர முடிகிறது. கோவூர் கிழார், சோழன் கிள்ளிவளவனின் கொடூரத்தை முகத்திற்கு நேரே தடுத்து நிறுத்தினார். வெள்ளைக்குடி நாகனார் வரியைக் குறைக்கக் கோரி மன்னனின் குடை நிழல் உழவனின் கலப்பையில் தங்கியுள்ளது என்பதை நினைவூட்டினார்.

இதுவே தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை அமைப்பு: அதிகாரம் பேசலாம். ஆனால் அதிகாரம் பதில் சொல்லவும் வேண்டும். அதிகாரம் என்பது இறைமை அல்ல. புலவர்களுக்கு அரசர்களை மதிப்பிடும் சமூக உரிமை இருந்தது. இந்த நிறுவனமயமான திறனாய்வு இடம் உலகின் பிற தொன்மையான நாகரிகங்களில் இணையான வடிவத்தில் இருக்கவில்லை.

புலவன் அரசனின் ஊழியன் அல்லன். அவன் அறத்தின் தூதன். இங்கே பா ஒரு கவசமாகச் செயல்பட்டது. வெளிப்படையான திறனாய்வை அழகிய வடிவில் சொல்வது புலவர்களின் உத்தி. அரசன் சினங்கொள்வான் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் செய்யுளை முழுதாக மறுத்தால் அரசனே காட்டுமிராண்டி என்று ஆகிவிடும். அதனால் அதிகாரம் பாடலின் முன்னால் பணிந்தது.

சோழர் காலம் — அதிகாரத்தைப் பகிர்ந்த சமூக அறிவு

இராஜராஜ சோழன் காலம் பெரும்பாலும் படை வெற்றியாகப் பேசப்படுகிறது. ஆனால் சோழ அரசியலின் உண்மையான புரட்சி வேறோர் இடத்தில் இருந்தது. அது உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இருந்தது. உள்ளாட்சித் தேர்தல் (குடவோலை முறை), நிர்வாகப் பொறுப்பு, கணக்குத் தணிக்கை, பொதுக் கண்காணிப்பு, தவறு செய்தவர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் பொறுப்புத் தடை போன்றவை மனிதகுல வரலாற்றில் முன்னோடி வழக்கங்கள். நிர்வாக முடிவுகள் பொது இடங்களில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன. கோவிற் சுவர்கள் அரசாங்க ஆவணங்களாக மாறின. 

இது தற்கால வெளிப்படைத்தன்மையின் முன்னோடி. இதன் பொருள் தெளிவானது. தமிழ்ச் சமூகம், அரசியல் என்பது ஒரே தலைவனைச் சுற்றிய அமைப்பு அல்ல என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புரிந்துகொண்டிருந்தது. அதிகாரம் பகிர்வான பொறுப்பாகவே பார்க்கப்பட்டது. இது மேற்கத்திய மக்களாட்சிக்கு முற்பட்ட தமிழ் மக்களாட்சி மரபு.

இந்திய அரசியல் மரபோடு ஒப்பீடு

அர்த்தசாத்திரம் இந்திய அரசியல் எண்ணப்பாட்டின் மிகப் பெரிய நூல். ஆனால் அது முக்கியமாக அரசன் எப்படி அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதைப் பேசுகிறது. “எப்படி வெற்றி பெறுவது?”, “எப்படி எதிரிகளை அழிப்பது?”, “எப்படி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது?” என்பவைதான் சாணக்கியரின் கேள்விகள். இது அரசனை வலிமைப்படுத்தும் வகைகளைச் சொல்வது.

தமிழ் மரபில் கேட்கப்பட்ட கேள்வி முற்றிலும் வேறானது: “அரசன் அறமற்றவனாக இருந்தால் என்ன செய்வது?”, “அவன் மக்களுக்காக இல்லாவிட்டால் அவன் அதிகாரத்தின் பொருள் என்ன?”, “அரசன் ஏன் அவனைவிடவும் மக்களை மையப்படுத்த வேண்டும்?”

வட இந்திய மரபு அதிகாரத்தைத் தக்க வைப்பதைப் பேசுகிறது. தமிழ் மரபு அதிகாரத்தை அறமாக மதிப்பிடுவதைப் பேசுகிறது. சாணக்கியர் அதிகாரத்தைக் காக்கும் கலையை கற்றுக்கொடுத்தார். வள்ளுவர் அதிகாரத்திற்கு எல்லை விதித்தார். சாணக்கியர் அரசனுக்கு வெற்றியைக் கற்பிக்கிறார். வள்ளுவர் அரசனுக்கு நீதியைக் கற்பிக்கிறார். ஒருவருக்கு அரசியல் என்பது சூழ்ச்சி. மற்றவருக்கு அரசியல் என்பது அறம். இவை இரண்டும் வெவ்வேறு அரசியல் உலகங்கள்.

உலக மரபோடு ஒப்பீடு — கிரேக்கம் முதல் சீனம் வரை

மேற்கத்திய அரசியற் திறனாய்வு சாக்ரடீஸிலிருந்து (கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு) தொடங்குகிறது. அவர் அதிகாரத்தையும் சமூக நெறிகளையும் தெருவில் நின்று கேள்வி கேட்டார். அவரது முறை எதிர்கேள்வி முறை. அதிகாரிகளின் வாதங்களை அவர்களே பொய்யாக்கிக் கொள்ளும்படி செய்வது சாக்ரடீஸின் உத்தி. அரிஸ்டாட்டில் 158 நகர அரசுகளின் அமைப்பை ஆய்வு செய்தார். ஒப்பீட்டு அரசியற் திறனாய்வு அவரிடமிருந்து தொடங்குகிறது. ஆனால் கிரேக்க அரசியற் திறனாய்வு பெரும்பாலும் கல்வியறிவு கொண்ட சிறு வட்டத்துக்குள் இருந்தது. 

தமிழில் அது மக்கள் வாழ்வுக்குள் இருந்தது. ஒரு புலவன் அரசனை எதிர்கொள்கிறான். ஒரு விவசாயி வரி பற்றிக் கருத்து சொல்கிறான். ஓர் இலக்கியம் அரசனின் அறத்தை அளக்கிறது. இது அரிய நாகரிகப் பண்பு.

கிரேக்கர்கள் காரண-ஏரணம் (logos) வழியாக மதிப்பிட்டனர். தமிழர்கள் அறம் வழி மதிப்பிட்டனர். ரோமானிய சிசரோ தன் உயிரைப் பணயம் வைத்துப் பேச்சு வழியாகச் சாடினார். தமிழ்ப் புலவர்கள் செய்யுள் என்ற கவசத்தில் சாடினர். சீன மெய்யியல் மேதை கன்பூசியஸோடு தமிழ் மரபிற்கு ஓர் ஆழமான ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஆட்சியாளனின் தனிப்பட்ட பண்பை அரசியலின் வேரடியாகப் பார்க்கின்றனர். நிறுவனங்கள் அல்ல, மனிதர்களே முதன்மை என்பது கிழக்கின் பொதுவான அரசியற் கொள்கை.

மாக்கியவெல்லியின் “இளவரசன்” (“The Prince”) மேற்கத்திய இயல்புநெறியின் உச்சம். “அதிகாரம் தக்க வைக்க அரசன் எதுவும் செய்யலாம்” என்பது மாக்கியவல்லியின் கோட்பாடு. சாணக்கியரைப் பிடிப்பவர்களுக்குப் பிடிக்கும் கோட்பாடு. தமிழ் மரபு இதற்கு நேர் எதிர். சாணக்கியரைப் போலவே மாக்கியவெல்லியும் அரசனுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுத்தார். தமிழ் மரபோ அரசனுக்கு நீதியைக் கற்றுக்கொடுத்தது. வள்ளுவர் “அதிகாரம் தக்க வைக்க” என்று எழுதவில்லை. “அதிகாரம் நீதியாக இருக்க” என்று எழுதினார். கன்பூசியஸைப் பிடிப்பவர்களுக்குப் பிடிக்கும் எழுத்து.

பண்புதமிழ் மரபுகிரேக்க மரபுஇந்திய மரபு
அடிப்படைஅறம்காரண – ஏரணம்அதிகாரம்
வடிவம்செய்யுள், நாட்டார்உரை, நாடகம்நூல், சாத்திரம்
நிலைவெளியிலிருந்துவெளியிலிருந்துஉள்ளிருந்தும் வெளியிலிருந்தும்
இலக்குஅறவியல் நியாயம்உண்மைவெற்றி, பாதுகாப்பு

காலனித்துவத்திற்குப் பிறகு — இதழியலும் புதிய விழிப்பும்

19-ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் அரசியற் திறனாய்வு புதிய வடிவம் எடுத்தது. இதழ்கள் வந்தன. பொது உரையாடல் உருவானது. சுப்பிரமணிய பாரதி அரசியற் பாக்களைப் புரட்சியாக மாற்றினார். அரசியலைத் திறனாய்வது மக்கள் கடமை என்ற எண்ணம் சமூகத்தில் வளர்ந்தது. 

இந்தக் காலகட்டத்தில் தமிழ் அரசியற் திறனாய்வு இரண்டு மேடைகளில் ஒரே நேரத்தில் நடந்தது. முதலாவது, காலனிய அதிகாரத்திற்கு எதிரான போராட்டம். இரண்டாவது, சாதி அமைப்பு என்ற உள்நாட்டு அதிகாரத்திற்கு எதிரான போராட்டம். இரண்டையும் ஒரே மூச்சில் செய்தவர்கள் தமிழகத்தில் இருந்தனர். எடுத்துக்காட்டு: அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன். இது தமிழ் மரபின் தனித்துவமான வலிமை.

திராவிட இயக்கம் – திறனாய்வை மக்களிடம் கொணர்ந்தது

தமிழ் அரசியற் திறனாய்வு தொடக்கத்தில் அறிவுசார் இடத்தில் இருந்தது.

வள்ளுவர். சங்கப் புலவர்கள். பண்டிதர்கள்.

20-ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய மாற்றம் நடந்தது.

பெரியார் அரசியற் திறனாய்வை உயர்குடி உரையாடலிலிருந்து மக்கள் உரையாடலுக்குக் கொண்டு வந்தார்.

தெருக் கூட்டங்கள். மேடைப் பேச்சுகள். சுவர் எழுத்துகள். இதழ்கள்.

முதன்முறையாக எளிய குடிமகன் அரசியற் திறனாய்வாளராக மாறினார். இது திறனாய்வின் மக்கள்மயப்படுத்தல்.

தமிழகத்தின் பெரிய தனித்துவம் ஒன்று உண்டு. இங்கே எல்லா அரசியல் மாற்றங்களும் தேர்தல் அரசியலிலிருந்து வரவில்லை. அரசியலுக்கு வெளியில் நின்று பேசுவது ஒன்று. அரசியலுக்குள்ளேயே இருந்துகொண்டு, அதன் பரவலான வடிவத்தை – அதிகாரத்தை மறுத்து அந்த உள்வட்டத்துக்கு வெளியே நின்று பேசுவதும் திறனாய்வதும் ஒன்று. இந்திய அளவில் காந்தி செய்ததோடும் இதை ஒப்பிடலாம். ஆனால் காந்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய இயக்கத்துக்குள் இருந்துகொண்டு அதிகாரத்தை மறுத்தார். பெரியார் தான் மட்டுமின்றி தன் இயக்கமே அதிகாரத்தை விட்டு விலகி நிற்கும் – திறனாய்வு மட்டுமே செய்யும் என்ற நிலை எடுத்தார். இந்திய அரசியலில் இது மிகவும் அரிதான நிகழ்வு.

“கடவுள் இல்லை, கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” — இவற்றுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் ஆழமானது. இந்தச் சொற்றொடர்கள் சமயத்தை மட்டுமல்ல, சமயத்தின் மூலம் நிலைநிறுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தையும் தாக்குகின்றன. சாதி என்ற அமைப்பு அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்துகிறது. அதைக் கேள்விக்குட்படுத்தாமல் அரசியற் திறனாய்வு முழுமையாகாது என்பது பெரியாரின் நிலை. பெரியார் திருக்குறள் மரபை அவர் காலத்தில் தொடர்ந்தார். அதிகாரத்திற்கு வெளியே நின்று பேசும் அதே மரபு.

வேறுபாடு என்னவென்றால் — வள்ளுவர் அரசனை நோக்கிப் பேசினார்; பெரியார் மக்களை நோக்கிப் பேசினார். மக்களுக்குள் இருந்துகொண்டு அரசனைவிட அதிகாரம் கொண்டிருப்பவர்கள் என்று அவர் நம்பியவர்களுக்கு எதிராகப் பேசினார். இலக்கு மாறியது, ஆனால் சாடலின் நிலை மாறவில்லை.

அரசியலை நாடகமாகப் பார்த்தல்

இங்கேதான் நாம் ஒரு கடினமான கேள்வியைக் கேட்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக அரசியலை ஆழமாக மதிப்பீடு செய்த சமூகம் இன்று ஏன் அரசியலை வேறு விதமாகத் துய்க்கிறது? மறைந்த தமிழ் அரசியற் திறனாய்வாளர் ஞாநி ஒரு முறை மிகக் கூர்மையான பார்வை ஒன்றைச் சொன்னார். “தமிழர்கள் அரசியலையும் ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான் பார்க்கிறார்கள்.” இந்த ஒரு வரியில் சமகாலத் தமிழ் அரசியல் உளவியல் முழுவதும் அடங்கியிருக்கிறது. அவர்களுக்கு அரசியலில் கொள்கை பற்றிய ஆர்வத்தை விடக் கூடுதலாக தலைவர்களுள் நடக்கும் மோதல் பற்றிய ஆர்வம் இருக்கிறது. 

“யார் யாருடன் சண்டை போட்டார்கள்?”, “யாரை யார் ஏமாற்றினார்கள்?”, “யார் துரோகம் செய்தார்?”, “யார் பாதிக்கப்பட்டார்?”, “யார் இழிக்கப்பட்டார்?” — இந்த நன்மை-தீமை நாடகந்தான் அவர்களை அரசியலுக்குள் இழுக்கிறது. நாடகம் பார்க்கும்போது நாம் என்ன செய்கிறோம்? கதாபாத்திரங்களோடு உணர்ச்சிப்பூர்வமாக இணைகிறோம். தலைவன் யார், வில்லன் யார் என்று தீர்மானிக்கிறோம். தலைவனுக்குத் துன்பம் நேர்ந்தால் சினங்கொள்கிறோம். ஆனால் நடக்கும் நாடகம் நம் வாழ்க்கையை எந்த விதத்தில் பாதிக்கும் என்கின்ற எண்ணம் வருவதில்லை. ஏனெனில் அது நாடகந்தானே. தமிழ் அரசியலில் இதே உளவியல் செயல்படுகிறது என்பது ஞாநியின் கருத்து.

ஒரு குடிமகன் அரசியலைக் கொள்கைகளின் வழியே பார்க்கிறான். ஒரு பார்வையாளன் அரசியலைக் கதாபாத்திரங்களின் வழியே பார்க்கிறான். ஒரு குடிமகன் கேட்கும் கேள்வி: “இந்தக் கொள்கை என் சமூகத்தை எப்படி மாற்றும்?” ஒரு பார்வையாளன் கேட்கும் கேள்வி: “யார் வென்றார்? யார் தோற்றார்? யார் யாரை இழித்தார்?” 

மக்கள் எப்போதும் எவர் நல்லவர், எவர் கெட்டவர் என்று சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது நாடகப் பார்வையாளனின் கேள்வி. அவர்கள் என்ன கொள்கை கொண்டிருக்கிறார்கள், அந்தக் கொள்கை எனக்கு என்ன செய்கிறது என்று கேட்பது அரசியற் குடிமகனின் கேள்வி. தமிழகத்தின் சமகால அரசியற் பண்பாட்டில் எந்தக் கேள்வி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே ஞாநியின் கவலை. இந்த வேறுபாட்டில்தான் எல்லாமே இருக்கிறது. அவர் காலத்திலேயே அப்படியென்றால், அதற்குப் பின் எவ்வளவோ நடந்துவிட்ட இப்போது எப்படி என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழர்கள் ஒருவர்மீது அன்பு செலுத்துவதை தனிப்பட்ட விதத்தில் மட்டும் செய்துவிட்டு விடுவதில்லை. ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பதற்கு எளிதானது அதிகாரம். “இவர் எங்களுடையவர்” என்ற உணர்வு வந்துவிட்டால் அடுத்த நகர்வு இதுதான்: “அவர்தான் எங்களை ஆள வேண்டும்.” 

இதனால் தேர்தல் என்பது இங்கு ஆட்சித் திறன் பற்றிய தேர்வு அல்ல. அது ஒரு கூட்டு உணர்ச்சி அறிவிப்பாக மாறுகிறது. அன்பு, நம்பிக்கை, வழிபாடு, அடையாளம், பழிவாங்குதல் — இவை கொள்கையை விட முக்கியமாகின்றன. இந்த உளவியலின் வேர்கள் ஆழமானவை.

அரசியலே நாடகம் கலந்த – நாடகத்தின் தேவை இருக்கிற துறைதான் எனினும் திரைத்துறையினர் அரசியலுக்குள் வரத் தொடங்கியதும் அது பன்மடங்கு கூடியது. மக்களைப் பார்வையாளர்களாகப் பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு – அவர்களின் நுகர்வுக்குப் பிடித்த விதத்தில் படைத்தளிக்கத் தெரிந்தவர்களுக்கு – அவர்களின் தேவையறிந்து தீனி போடுவது எளிதானது. இயல்பாகவே அதுதான் அவர்களுக்கு வந்தது. கவர்ச்சியான கருத்துகளை மட்டும் பேசினால் போதாது. கவர்ச்சியான சொற்களையும் பயன்படுத்த வேண்டும். கவர்ச்சியான முகங்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று இறங்கினார்கள். தம்மைவிடத் தம்மோடு அழைத்துச் சென்ற முகங்களை நம்பிய மூளைகளுக்குத் தெரியவில்லை – மக்களும் கூடிய விரைவில் தம்மைவிட அந்த முகங்களையே கூடுதலாக நம்பத் தொடங்கிவிடுவார்கள் என்று.

கலையையும் கலைஞர்களையும் போற்றும் தமிழகத்தில் இப்படியே பல பத்தாண்டுகளாக அரசியல் நாடக வடிவம் ஏற்று மென்மேலும் வளர்ந்தது. எப்போதும் இரு மையப் பாத்திரங்கள் இருந்தார்கள். இந்தக் காலத்தில் தமிழக மக்கள் பொருளியற் கொள்கை, கல்விக் கொள்கை, நீர் மேலாண்மை போன்ற உரையாடல்களால் அரசியலில் ஈடுபடவில்லை. அவர்கள் பார்க்க விரும்பியது வேறு. இன்று யார் வென்றார்? யார் இழிவுபடுத்தப்பட்டார்? யார் பழி வாங்கப்பட்டார்? யார் மீண்டும் எழுந்தார்? இது ஒரு ஷேக்ஸ்பியர் நாடகம் போல் விரிந்தது. அல்லது ஒரு மாபெரும் தமிழ்த் திரைப்படம் போல் இயங்கியது. ஒரு தலைவன் அல்லது தலைவி. ஒரு வில்லன் அல்லது வில்லி. ஒரு துரோகம். ஒரு மீட்சி. அரசியல் என்பது, கொள்கை உரையாடலிலிருந்து உணர்ச்சி மேடையாக மாறியது.

இவர்களின் பகை தனிப்பட்ட பகை மட்டும் என்றில்லாமல், ஒரு நாடகக் கட்டமைப்பு போல் ஆனது. ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பார். ஒருவர் நடந்துகொள்வதற்கு நேர் எதிர் பாணியில் இன்னொருவர் நடந்துகொள்வார். இப்படியாகத் தனிமனிதத் திறமைகளையும் கோளாறுகளையும் வியக்கும் – சாடும் வேலையை மட்டுமே விரும்பிச் செய்பவர்களாக மக்கள் ஆனார்கள். அதில் வியப்பில்லை. அப்படித் தடம் மாறிப் போகும் மக்களை மாற்றி வழிக்குக் கொண்டுவரும் பணியைச் செய்ய வேண்டிய திறனாய்வாளர்களும் மக்களுக்குப் பிடித்த விதமான வேடிக்கைகளையே படைத்துப் படையலிட்டார்கள். இப்படித்தான் மின்னல் வேகத்தில் ஓர் இனத்தின் அரசியற் திறனாய்வு வீழ்ச்சி நிகழ்ந்தது. அது அவ்வினத்தின் அரசியல் மரபின் வீழ்ச்சியா இனத்தின் வீழ்ச்சியேவா அல்லது அரசியற் திறனாய்வு மரபின் வீழ்ச்சி மட்டுந்தானா என்பது உங்கள் சிந்தனைக்கு. 

டிஜிட்டல் ஊழியின் தாக்கம் — சிதறிய கவனம்

இன்று இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமடைந்திருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சி காலத்தில் அரசியல் நாடகமாக இருந்தது. சமூக ஊடகக் காலத்தில் அரசியல் துண்டு துண்டாக உடைந்துவிட்டது. ஒருகாலத்தில் நீண்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இன்று பதினைந்து நொடிக் காணொளிகள் பார்க்கப்படுகின்றன. ஒருகாலத்தில் கருத்து முக்கியம். இன்று உணர்ச்சியும் எதிர்வினையும் (reaction) முக்கியம். ஒருகாலத்தில் எண்ணம் முக்கியம். இன்று கவனம் (attention) முக்கியம். ஒருகாலத்தில் அரசியற் திறனாய்வு திருக்குறளின் இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லப்பட்டது. இன்று அது ஒரு நகைச்சுவை மீம் ஆகச் சுருங்கிவிட்டது. அரசியலைப் புரிந்துகொள்ளவெல்லாம் யாருக்கு நேரமிருக்கிறது! அதை விரல் உருட்டிக் (scroll) கடக்கிறோம்.

இது வெறும் தொழில்நுட்ப மாற்றம் அல்ல. மக்களாட்சியின் கவனச் சிதைவு.

தமிழர் அரசியல் உளவியலின் மிகப்பெரிய முரண்பாடு

இன்று நாம் ஒரு முரணைப் பார்க்கிறோம். ஒருகாலத்தில் வள்ளுவர் அரசனை மதிப்பிட்டார். சங்கப் புலவர்கள் மன்னர்களை எதிர்த்தனர். பெரியார் சமூக அமைப்பை உடைக்க முயன்றார். ஊர் மன்றங்கள் அதிகாரிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கின. இன்று: மக்கள் தம் தலைவர்களை ரசிகர் நிலையில் நின்று பார்க்கிறார்கள்; அரசியல் உரையாடல்களில் கொள்கைகளைவிட ஆளுமைகள் அதிகம் பேசப்படுகின்றன.

என்ன நடந்தது? மக்கள் அரசியலைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்தவில்லை. ஆனால் அரசியலை நிறுவனமாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். பாத்திரங்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் சில நேரங்களில் கொள்கை அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சில தேர்தல்களின் போது கொள்கை அடிப்படையிலான உரையாடல்கள் மேலோங்கி நின்று திறனாயும் போக்கு இருந்ததும் உண்மைதான். ஆனால் அரசியற் திறனாய்வுக்கும் அரசியற் கண்டுகளிப்புக்கும் இடையே தமிழ்ப் பொதுவெளியில் போதுமான வேறுபாடு இல்லை. ஒரே உரையாடல் இரண்டையும் கலைத்துப் போடுகிறது. இது தமிழ் மண்ணில் மட்டும் அல்ல. உலகெங்கும் தற்கால மக்களாட்சியில் இந்த நோய் பரவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த மாற்றம் வேகமாகவும் ஆழமாகவும் நடந்தது என்பது கவலைக்குரியது.

முடிவாக…

தமிழர் வரலாறு நமக்குப் பெருமையளிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரத்தை அறத்தால் அளந்த சமூகமாக நாம் இருந்தோம் என்பதில் பெருமைதான். ஆனால் சமகாலம் நமக்கு ஓர் அச்சத்தையும் தருகிறது. இன்று நாம் அதிகாரத்தைத் திறனாய்கிறோமா? அல்லது அதிகாரம் உருவாக்கும் காட்சிகளை மட்டுமே நுகர்வோராக இருந்து கண்டுகளிக்கிறோமா? வள்ளுவர் அரசனுக்கு எல்லை விதித்தார். சங்கப் புலவர்கள் மன்னர்களைத் திருத்தினார்கள். பெரியார் சமூக அமைப்பையே கேள்விக்குட்படுத்தினார். ஞாநி அரசியலை நாடகமாகப் பார்க்கும் மனநிலையை எச்சரித்தார். 

இப்போது நம்முன் நிற்கிற கேள்வி இதுதான்: அடுத்த தலைமுறை குடிமக்களாக உருவாகப் போகிறதா? அல்லது ரசிகர்களாகத் தொடரப் போகிறதா? ரசிகப் பண்பாடு என்பது ஏதோ திடீரென்று சென்ற சில ஆண்டுகளில் வந்த அலை அல்ல. இது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக மெதுமெதுவாக நீரூற்றி வளர்க்கப்பட்டிருப்பது. தமக்கு நன்மை பயக்கும் என்று நம்பி நீர் ஊற்றி ஏமாந்தவர்களுக்கு இது நல்ல தண்டனை என்று வைத்துக்கொண்டாலும், எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் போகிற போக்கில் ‘பார்க்க நன்றாகத்தானே இருக்கிறது!’ என்று நீர் ஊற்றிவிட்டுப் போவோர்தான் தம் அடுத்த தலைமுறைக்குப் பெரும் பாவத்தைச் செய்பவர்கள்.

தமிழ் மரபின் உண்மையான வலிமை அதிகாரத்தையும் அதன் திருவிளையாடல்களையும் கண்டு களிப்பதில் இல்லை. அதைக் கேள்வி கேட்பதில் இருக்கிறது. அதிகாரத்திற்குக் கைதட்டுவது எளிது. காலில் விழுவது எளிது. காசு வாங்கிக்கொண்டு பக்கம் பக்கமாக ஆதரவுக் கட்டுரைகள் எழுதுவதும் எளிது. மேல்-கீழ் என்று பேசும் எல்லாமும் பார்ப்பனியமே என்று சொல்வது போல், கண்மூடித்தனமான வழிபாடு எல்லாமே மூடத்தனமே! அது திரைக்கவர்ச்சியின் பால் ஏற்படும் வழிபாடு என்று மட்டும் சுருக்குவதும் மூடத்தனமே! 

அதிகாரத்தைக் கேள்வி கேட்பதுதான் நாகரிகத்தின் உயர்ந்த வடிவம். ஒருகாலத்தில் அதைத்தான் தமிழர் நாகரிகம் உலகுக்குக் கற்றுக்கொடுத்தது (பிற்காலத்தில் திரைக்கவர்ச்சியை அரசியலுக்குள் கொண்டு வரும் பண்பாட்டையும் தமிழர் நாகரிகந்தான் பக்கத்து நிலங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை).

கேள்வி ஒன்றுதான்.

அந்த மரபு இன்னும் நமக்குள் உயிரோடு இருக்கிறதா?

***

பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

கலைக்குள் கண்ணியம்

0

நிர்மல்

ட்டுரையின் தலைப்பு “கலைக்குள் கண்ணியம்” என்பதால், அதைப் பற்றிப் பேச முயலும் இக்கட்டுரையும் அந்தக் கண்ணியத்தை பிரதிபலிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. ஒருவேளை இந்தக் கட்டுரையின் தொனியிலோ, விமர்சனங்களிலோ, சொல்லாடல்களிலோ அந்தக் கண்ணியத்தின் அளவு குறைந்திருக்குமேயானால், அக்குற்றத்திற்கு என்னைப் பொருத்தருள வேண்டுகிறேன்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களைப் பற்றிப் பேசும்போது, அவர் என்ன செய்தார் என்ற பட்டியலையே பெரும்பாலும் முன்வைக்கிறோம். கிராமத்தைத் திரைக்குக் கொண்டு வந்தார், புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார், தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றி அமைத்தார் எனப் புகழ்கிறோம். ஒரு கலைஞனை அவர் செய்தவற்றால் மட்டும் அளவிட முடியுமா? அவர் செய்யாமல் தவிர்த்தவற்றைக் கொண்டும் அளவிட வேண்டுமல்லவா! பாரதிராஜா அவர்கள் செய்யாமல் தவிர்த்தவை எவை என்ற கேள்வி, ஒருவேளை அவரது திரைப்படங்களையும் அவரது கலை உள்ளத்தையும் வேறொரு வெளிச்சத்தில் பார்க்க நமக்கு உதவக்கூடும்.

அவர் கிராமியப் பண்பாட்டை வினோதப் பொருளாக்கவில்லை. ஆங்கிலத்தில் ‘Fetish’ என்கிற சொல் உண்டு. ஒரு பொருளின் இயல்பானத் தன்மையை மறந்துவிட்டு, அதை வெறும் காட்சிப் பொருளாக, வினோதமாக, ரசனைக்கானப் பொருளாக மட்டும் மாற்றுவது என்று இதற்குப் பொருள். எளிமையாகச் சொன்னால், மனிதர்களை மறந்துவிட்டு அவர்களின் அடையாளங்களையோ பழக்கவழக்கங்களையோ மட்டும் வேடிக்கைப் பார்ப்பது.

உதாரணமாக, கிராமத்தை மனிதர்கள் வாழும் இடமாகப் பார்க்காமல் வெறும் மாட்டு வண்டி, கரகாட்டம், திருவிழா, வண்ண உடைகள் என்பதோடு மட்டுமன்றி—வன்முறை, மீசை, அருவாள், வெட்டு குத்து, ரத்தம், அடக்குமுறை போன்ற காட்சிகளின் தொகுப்பாக மட்டும் சுருக்குவது; ஒரு சமூகத்தின் துயரங்களையும் சிக்கல்களையும் மறைத்துவிட்டு, அதன் “வித்தியாசத்தை” மட்டும் சந்தைப்படுத்துவது. இதை நாம் தமிழில் “வினோதப் பொருளாக்கம்” அல்லது “காட்சிப் பொருளாக்கம்” என்று சொல்லலாம்.

பாரதிராஜா இப்படியானக் காட்சிப் பொருளாக்கத்திற்குத் தன் கலையில் இடம் கொடுக்கவில்லை. ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை, அதன் மனிதத் தன்மையை மறந்துவிட்டு, வெறும் ரசனைக்கான காட்சிப் பொருளாக அவர் மாற்றியதில்லை. திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், கலைகள் ஆகியவற்றின் பின்னால் வாழும் மனிதர்களை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. பண்பாட்டை மதிப்பது என்பது, அதை விற்பனைப் பொருளாக்காமல் இருப்பதில்தான் தொடங்குகிறது.

பாரதிராஜா அவர்கள் மனிதர்களை வெறும் காட்சிப் பொருளாக மாற்றவில்லை. மாற்றுத்திறனாளிகளை நகைச்சுவைக்கான கருவியாகவோ, இரக்கத்தைப் பிச்சையெடுக்கும் பாத்திரங்களாகவோ அவர் பயன்படுத்தியதில்லை. மனிதர்களின் வலியையும் பலவீனத்தையும் மலிவான உணர்ச்சிகளுக்கான சந்தையாக அவர் மாற்றியதே இல்லை. கலையை நாம் நுகரும் ஒரு பண்டமாக (Commodification) அவர் சுருக்கவில்லை. கலை என்பது மனிதர்களைப் புரிந்துகொள்வதற்காகவே என்பதைத் தன் படைப்புகள் மூலம் அவர் உணர்த்தினார்.

அவர் காதலைப் பற்றிப் பேசத் தயங்கியதில்லை. ஆனால், காதலை வெறும் பாடல்களுக்கும் பொழுதுபோக்கிற்கும் சுருக்கிவிடவில்லை. காதலை அதன் இயல்போடு, மனித சுதந்திரத்தின் அடையாளமாகக் காட்சிப்படுத்தினார். காதல் என்றதும், அதை அதீதமாகப் புகழ்ந்தோ ஆராதித்தோ அவர் காட்டியதில்லை. அதே நேரத்தில், அவரது திரைப்படங்களில் காதல் தோல்வியடையவும் செய்கிறது. ஆனால், அங்கே தோல்வியடைவது காதல் அல்ல; காதலைத் தாங்கிக்கொள்ள முடியாத சமூக அமைப்புகள்தான்! ஒவ்வொரு காதல் தோல்வியிலும் சாதி தோல்வியடைகிறது, குடும்பத்தின் பிடிவாதம் தோல்வியடைகிறது, மனிதர்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூக ஒழுங்குகள்தான் அங்கே தோல்வியடைகின்றன. காதலின் தோல்வி, காதலின் பொய்மையை நிரூபிப்பதில்லை; மாறாக, அதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்தச் சமூகத்தின் எல்லைகளையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பாரதிராஜா தமிழ்க் கிராமங்களை நேசித்தார். ஆனால், அவற்றைப் பற்றிப் பொய் சொல்லவில்லை. மண்ணின் வாசனையைப் பதிவு செய்த அதே நேரத்தில், அதன் நிழல்களையும் சாதியக் கொடுமைகளையும் மறைக்கவில்லை. அதே நேரத்தில், கிராமங்களை முழுமையான இருளின் சின்னங்களாகவும் அவர் காட்டவில்லை. தீர்ப்பளிப்பதை விட, சிக்கல்களை அப்படியே வெளிப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்தது.

பாரதிராஜா அவர்கள், மனிதர்களை அவர்களது குழு அடையாளங்களுக்குள் சிறை வைக்கவில்லை. அவரது திரைப்படங்களில் சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது, மரபுகள் இருக்கின்றன. ஆனால் ஒரு முழு சமூகத்தையே வில்லனாகவோ, ஒரு சாதியையே ஒரே குணாதிசயத்துடனோ, ஒரு மதத்தையே ஒட்டுமொத்தப் பிரச்சினையின் மூலமாகவோ சித்தரிக்க அவர் முயன்றதே இல்லை. அவருக்கு முக்கியமானது குழு அடையாளம் அல்ல; அந்த அடையாளங்களுக்குள் வாழும் மனிதர்கள்தான். ஏனெனில் ஒரு மனிதன், அவனது அடையாளத்தை விடப் பெரியவன். கலை, அடையாளங்களை அறிமுகப்படுத்தலாம்; ஆனால் மனிதர்களை அந்த அடையாளங்களுக்குள் சிறை வைக்கக் கூடாது.

பாரதிராஜா நட்சத்திரங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவில்லை. நடிகர்களை விடக் கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்தார். தனிமனித வழிபாட்டைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கிற கலையின் மிக அடிப்படைத் தன்மையை அவர் ஆழமாகப் புரிந்திருந்தார்.

இளையராஜாவுடன் அபூர்வமான கலைச் சேர்க்கையும் ஆழமான நட்பும் இருந்தபோதிலும், அவர் தன்னை அந்த ஒரு கூட்டணிக்குள் மட்டுமே அடைத்துக் கொள்ளவில்லை. தன் கலையுணர்வின் சுதந்திரத் தன்மையை அவர் எங்கும் விட்டுக் கொடுக்கவில்லை.

இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவை, உடலை விற்பனைப் பொருளாக்கும் காட்சிகள் போன்ற மலிவானப் பாதைகளை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் காதலைக் காட்டினார், கொச்சைத்தனத்தை அல்ல. அவர் ஈர்ப்பைக் காட்டினார், ரசனையோடு காட்டினார், எப்போதும் எல்லை மீறியதில்லை. 

பாரதிராஜா அவர்கள் அரசியலை நேரடிப் பிரசாரமாகவோ, ஒரு பரப்புரையாகவோ திரைப்படங்களில் திணிக்கவில்லை. ஆனால் அவரது திரைப்படங்களே மிகச்சிறந்த அரசியல் உரையாடல்களை உருவாக்கின. யாருடைய கதைகள் சொல்லப்பட வேண்டும்? யாருடைய காதல் மதிப்பிற்குரியது? யாருடைய வாழ்க்கை திரையில் இடம்பெற வேண்டும்? திரையில் காட்டும்போது அதை எப்படி கண்ணியமாகக் காட்ட வேண்டும்? போன்ற அரசியல் கேள்விகளை அவரே அழுத்தமாக எழுப்பினார்.

இன்றைய தமிழ்நாட்டில் கலைத்திறனும் மக்கள் செல்வாக்கும் தேர்தல் அரசியலுக்கான முதலீடாக மாற்றப்படுவது பொதுவான ஒன்றாக ஆகிவிட்டது. அந்தச் சூழலில் பாரதிராஜாவின் தேர்வு கவனிக்கப்பட வேண்டியது. அவரிடம் புகழ் இருந்தது, மக்கள் அன்பு இருந்தது, அரசியல் தொடர்புகளும் இருந்தன. இருந்தும், அவர் தனது கலை வாழ்க்கையை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஏணியாக மாற்றிக் கொள்ளவில்லை. அதே வேளையில், ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அறச்சீற்றத்தை வெளிக்காட்டவும் அவர் தயங்கியதில்லை.

கலைஞனின் பணி என்பது, மனிதர்கள் தங்களை இன்னும் மேன்மையாகக் கற்பனை செய்துகொள்ளத் தூண்டுவது; மற்றவர்களின் சிந்தனையை மாற்றுவது. மாறாக, மனிதர்களை வெறும் ரசிகர்களாக்கி, வாக்கு வங்கியாக்கி, அவர்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்காக ஆட்சியைப் பிடிப்பது அல்ல.

பாரதிராஜா ஆன்மிகப் பிரசங்கராகவும் மாறவில்லை. அவரது திரைப்படங்களில் மனித வாழ்க்கையே மையமாக இருந்தது. மனிதனைப் புரிந்துகொள்வதையே அவர் தனக்கான ஆன்மிகப் பயணமாகக் கொண்டிருந்தார்.

ஒரு கலைஞனின் மகத்துவம் அவர் அடைந்த வெற்றிகளில் மட்டும் இல்லை. அவர் நிராகரித்த சமரசங்களிலும் இருக்கிறது. பாரதிராஜா திரைப்படங்களை மட்டும் உருவாக்கவில்லை, ஒரு கலைஞன் எதைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு தார்மீக அளவுகோலை உருவாக்கினார். சில நேரங்களில் ஒரு கலைஞனின் மகத்துவம் அவர் செய்தவற்றில் இல்லை, அவர் செய்ய மறுத்த சமரசங்களில்தான் இருக்கிறது.

கலைக்குள் மண் இருக்கலாம், காதல் இருக்கலாம், அரசியல் இருக்கலாம், பெரும் வலியும் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் தாங்கி நிற்க வேண்டிய அடிப்படை ஒன்றுண்டு… அதுதான் கண்ணியம்!

கண்ணியம் என்பது மௌனம் அல்ல. தவிர்ப்பும் அல்ல. சொல்லத் தெரிந்தும், செய்ய முடிந்தும் , காட்டத் தெரிந்தும், எங்கே நிறுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பதுதான் கண்ணியம். பாரதிராஜாவின் திரைப்படங்களைப் பற்றி நாம் பல விதமாகப் பேசலாம். ஆனால், அவற்றின் ஆழத்தில் இருந்த மிக அமைதியான, உன்னதமான பண்பு இதுதான், கலைக்குள் கண்ணியம்!

நேசிப்பையே சுவாசமாக்கி, காதலால் கனிந்துருகி, அன்பால் புடமிடப்பட்ட அற்புதக் கலை உள்ளத்தின் சீரிய செயல்வடிவமே அந்தக் கண்ணியம். அந்த உள்ளத்தின் வெளிப்பாடுகளே அவரது படைப்புகள். அதனால்தான் அவை காலத்தைக் கடந்து, என்றும் அழியாத, மறக்கப்படாத படைப்புகளாக வாழும். அந்த அழகிய உள்ளத்திற்கு நேசமிகு முத்தங்கள் பாசமிகு புகழ் வணக்கம்.

***

நிர்மல் – தூத்துக்குடி மாவட்டம் ‘ஏரல்’ எனும் ஊருக்கு அருகில் உள்ள ‘திருவழுதிவிளை’ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்’ தேசத்தில் ‘பெட்ரோ கெமிக்கல்’ துறையில் பணி செய்து வருகிறார். ‘ காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “அறியாத உறவுகள்”, “இடுக்கண் படினும்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

கவிதை: மனநிலையைக் கடத்தும் அலைவரிசை!

0

நேர்காணல்: யதிராஜ் ஜீவா

னேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்

யதிராஜ ஜீவாவை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும். ஆவநாழி இதழில் வெளிவந்த அவரது “பாரூர் வாய்க்காலில் துணி துவைப்பவர்கள்” என்ற குறுநாவலின் வழியாகத்தான் அவருடைய எழுத்து முதலில் எனக்கு அறிமுகமானது. பின்னர் அந்தக் குறுநாவல் ஆவநாழி குறுநாவல்கள் தொகுப்பிலும் இடம்பெற்றது. 2024 ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற ஆவநாழியின் நூல் வெளியீட்டு விழாவில் ஆவநாழி குறுநாவல்கள் நூலை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, தனது “உன்னதம் ஆரத்தழுவும் நேரம்” கவிதைத் தொகுப்பை யதிராஜ ஜீவா எனக்கு அனுப்பி வைத்தார். முதல் வாசிப்பில் எளிதாகத் திறந்துகொள்ள மறுக்கும் கவிதைகள் பல அந்தத் தொகுப்பில் இருந்தன. மேலோட்டமாகப் பார்த்தால் வாசகனை ஏமாற்றிவிடும் போலத் தோன்றும்; ஆனால் மீண்டும் மீண்டும் வாசிக்கும்போதுதான் அவை தங்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்களையும் அனுபவங்களையும் மெல்லத் திறக்கத் தொடங்குகின்றன. அந்த வகையில், வாசகரிடமிருந்து பொறுமையையும் மறுவாசிப்பையும் கோரும் கவிதைத் தொகுப்பாகவே உன்னதம் ஆரத்தழுவும் நேரம் எனக்குத் தோன்றியது. அந்தத் தொகுப்பை மையமாக வைத்து யதிராஜ ஜீவாவுடன் இந்த நேர்காணலை நிகழ்த்தியிருப்பது எனக்கு ஒரு வாசகராகவும், இலக்கிய நண்பராகவும் மனநிறைவை அளிக்கிறது.

கேள்வி: புனைகதை, கட்டுரை, கவிதை என பல வடிவங்களில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். உங்கள் படைப்புலகின் தொடக்கம் கவிதையிலா அல்லது வேறு வடிவத்திலா? அந்த வடிவமே முதலில் உங்களை ஈர்த்ததற்கு என்ன காரணம்?

பதில்: எனது படைப்புலகின் தொடக்கம் கவிதைதான். இலக்கிய வடிவங்களில் கவிதை என்றைக்குமான ஈர்ப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கவிதை நிலவொளி போன்று வசீகரமானதும், சூரியன் போன்று சுயஒளி கொண்டதுமாகும். மிகச் சில சொற்களிலேயே ஒரு வாழ்நாளின் அனுபவத்தையும், ஒரு பிரபஞ்சத்தின் பரப்பையும், ஒரு இதயத்தின் துடிப்பையும் தாங்கிச் செல்லும் வல்லமை கவிதைக்கே உரியது என்று கூட நாம் காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் உண்மையில் ஈர்ப்பு என்பது சொல்லப்பட்ட ஆயிரம் காரணங்களுக்கும் அப்பால் நிகழும் ஒரு புதிர் என்றே நான் நினைக்கிறேன். அந்த ஈர்ப்பின் உண்மையான மையம் எல்லா காரணங்களையும் தாண்டி, விளக்க முடியாத ஓர் உள்மன அழைப்பாகவே இன்றும் எனக்குத் தோன்றுகிறது.

கேள்வி: இன்றைய தமிழ்க் கவிதை குறித்து உங்கள் பார்வை என்ன? சங்க இலக்கியம் தொடங்கி நவீனக் கவிதை வரை நீளும் தமிழ்க் கவிதை மரபில் உங்களை எங்கே நிறுத்திப் பார்க்கிறீர்கள்? மரபும் புதுமையும் உங்கள் கவிதைகளில் எவ்வாறு ஒன்றோடொன்று உரையாடுகின்றன?

பதில்: இன்றைய தமிழ்க் கவிதை அதன் ஆக சாத்தியமான வீழ்ச்சியின் தருணங்களில் நின்றுகொண்டிருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருக்கிறது. படைப்பாளிகள் மத்தியிலும், பதிப்பகச் சூழலிலும், வாசகப்பரப்பிலும் கவிதையின் வீழ்ச்சி என்னைத் திகைக்க வைக்கிறது. நீங்கள் கவனித்திருக்க முடியும். இன்றையச் சூழலில் ஒரு இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளில் மிகக் குறைவாக வரவேற்கப்படுவது கவிதைதான். கவிதைத் தவிர ஏனைய எந்த வடிவத்தையும் இதழாசிரியர்கள் உவந்து ஏற்றுக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். 

கவிதைக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் இதழ்களும் இருக்கத்தான் செய்கின்றன என்ற போதிலும் அவை போதுமானதாகவோ திருப்தி அளிப்பதாகவோ இல்லை.

மரபு – புதுமைகள் என்கிற பிரிவினைகளின் பால் நான் ஆர்வமோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. எனக்கு என்ன கைவருகிறதோ, என்னால் என்ன இயலுகிறதோ அதையே நான் செய்கிறேன்.

சங்க இலக்கியம் முதல் தற்போது வரையிலான தமிழ்க்கவிதை மரபில் நான் என்னை நிறுத்திப் பார்க்கும் இடம் குறித்து நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டதைத் தொடர்ந்து எனக்குள் யோசித்துப் பார்க்கிறேன். இதற்கு பதிலளிக்கும் முகமாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனக்கு என்னுடைய பனிரெண்டாவது வயதில் தமிழ்மொழியின் மீது, இலக்கியத்தின் மீது, மிக ஆழமான பற்றுதலும் நேசமும் உண்டாயிற்று. அப்போது நான் திருவண்ணாமலையில் என் சித்தி வீட்டில் தங்கி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்த உறவினரான பூபதி மாமா என்பவர் ஒரு தமிழாசிரியர். அவர் வீட்டு அலமாரியில் நிறையத் தமிழ் புத்தகங்கள் வைத்திருந்தார். அவர்தான் எனக்கு கம்பராமாயணத்தை, பட்டினத்தார் பாடல்களை எல்லாம் அறிமுகப்படுத்தி, அதைப் படித்துக் காண்பித்து, விளக்கமும் சொல்வார். அவர் அலமாரியில் இருந்த புத்தகங்களை எல்லாம் படித்துவிட்டு பிறகு நூலகம் சென்று படிக்க ஆரம்பித்தேன். ஒரு வருடம் மட்டுமே திருவண்ணாமலையில் படித்த நான் பிறகு என் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்திற்கு வந்து விட்டேன். தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள அழகிய ஊர்களில் ஒன்று அது. நூலகத்தில் இருந்து பலதரப்பட்ட புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன் என்றாலும் கவிதைகளும் நாவல்களும் அதிகமாகப் படித்தேன். அவற்றின் பாதிப்பில் சிறு சிறு கவிதைகளை எழுதிப் பார்த்தேன். என்னுடைய பதினாறாவது வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நான் வீட்டிலேயே பல மாதங்கள் முடங்கிப்போய், படுத்த படுக்கையாக இருக்க நேரிட்டது. அப்போது ஓஷோ அறிமுகமானார். அவருடைய ‘உண்மையைத் தேட வேண்டியதில்லை’ எனும் புத்தகம் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் குடும்பம் ஒரு கம்யூனிஸ குடும்பம் என்பதால், என் தாத்தாவைப் பின்பற்றி நானும் சிறு வயதில் இருந்தே ஒரு நாத்திகனாய் இருந்தேன். கடவுள் என்று ஒருவர் எப்படி இருக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருந்தது. ஓஷோவின் அறிமுகம் கிடைத்த பிறகு வாழ்க்கைப் பற்றிய பார்வையும், கடவுள் பற்றியச் சிந்தனையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஞானம் அடைதல் என்கிற ஒன்றை நோக்கி பயணப்படத் தொடங்கினேன். அதே சமயம் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தேன். என்னுடைய 16 ஆவது வயதில் ’வானவில் கனவுகள்’ என்றொரு தொகுப்பைத் தயார் செய்து, சென்னைக்குச் சென்று மாநில கல்லூரியில் பணிபுரிந்த பிரபலமான பாடலாசிரியர் மு.மேத்தா அவர்களை நானும் என் அண்ணன் மணிகண்டன் என்பவரும் சந்தித்து, கவிதை தொகுப்புக்கு முன்னுரை கேட்டேன். அவர் தொகுப்பை படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும் என்றும், அவசரப்பட வேண்டாம் என்றும் சொன்னார், எப்போதும் முதல் தொகுப்பு பேசப்படும் விதத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். முன்னுரையைப் பிறகு தருவதாக கூறிய அவர் என்னை வாழ்த்தி எழுதிக் கொடுத்த சில வரிகள் அப்போது எனக்கு மிகுந்த ஊக்கத்தை தருவதாக இருந்தன: ‘ஆகாயம் உன்னை வியப்புடன் வியந்து பார்க்கும். வெற்றி உந்தன் விரல்களிலே நிமிர்ந்து பார்க்கும்’ என்கிற வரிகள்தாம் அவை. பிறகு வானம்பாடி இயக்க வகையிலான கவிதைகளிலிருந்து பரிணாமம் அடைந்து பிரமிள், பசுவய்யா போன்றோரின் கவிதைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

 பிறகு என் அம்மாவின் நெக்லஸ் மற்றும் என் சகோதரியின் செயின் ஆகியவற்றை விற்று 2001 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பை சொந்தமாக கொண்டு வர முயன்று, 2002 ஆம் ஆண்டு அது வெளியிடப்பட்டது. அதுதான் எனது முதல் புத்தகமான ‘கடைசி இரவின் நடு ஜாமத்தில்’ . அக்காலங்களில் எங்கள் பிரதேசத்தில் பேசுபொருளாக இருந்த பெண்சிசுக் கொலை சார்ந்த கவிதையே தலைப்புக் கவிதை. ஒரு பக்கம் இதுபோன்ற தீவிர இலக்கிய செயல்பாடுகளுக்கும், ஞானத் தேடுதலுக்கும் சம அளவில் நான் ஆட்பட்டதானது ஒரு சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் ஜே.கிருஷ்ணமூர்த்தி என் வாழ்வில் வந்தார். ஓஷோ, இரமணமகரிஷி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் மிகவும் தாக்கத்திற்கு உள்ளான என்னால் கல்விபடிப்பைத் தொடர இயலவில்லை. இந்த ஞானத்தேடுதல் என்னை இழுத்துச் சென்ற திசைகளில் எல்லாம் பயணித்தேன். சமூகம் பற்றியோ குடும்பம் பற்றியோ அக்கறைக் கொள்ளவில்லை. ’எது புத்தருக்கு நிகழ்ந்ததோ, எது இரமணருக்கு நிகழ்ந்ததோ, பரிணாமத்தின் எப்புள்ளியை ஜே.கே குறிப்பிடுகிறாரோ, எதை ஒஷோ இன்னொரு பிறப்பு என்று சொல்கிறாரோ அது என்னில் நிகழ வேண்டும். அப்பரிணாமத்தின் புள்ளியை அடைந்திட வேண்டும்’ என்பதே என் தீராத தாகமாகவும் வேட்கையாகவும் இருந்தது. நான் அந்த தாகத்திற்கு முழுமையாக என்னை அர்ப்பணித்தேன். அந்த பயணம் விரிவாக சொல்லும் இடம் இதுவல்ல என்று நினைக்கிறேன். நான் எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் – அந்த முதல் தொகுப்பை கொண்டுவந்த ஓரிரு வருடங்களிலேயே ஞானத்தேடுதல் என் வாழ்வில் பிரதானமாக ஆகிவிட்டது என்பதற்காகத்தான். இலக்கிய முக்கியத்துவம் குறைந்து விட்டது. உதாரணத்துக்கு என்னை பாதித்த ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:

“படைக்கும் கலைதிறன் என்பது ஓவியம் தீட்டுவதோ, கவிதை எழுதுவதோ, அதன் மூலம் புகழடைவதோ அல்ல. அது கலைத்திறன் ஆகாது. அது ஓர் எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆற்றல்தான். அதைப் பொதுமக்கள் போற்றலாம். அல்லது மதிப்பு கொடுக்காமல் போகலாம். திறமையையும், கலைத்திறனையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. படைப்பாற்றல் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலை. அது ’தான்’ என்பது முற்றிலும் இல்லாது போன இலை. ‘தான்’ என்பது இல்லாத போதுதான் படைக்குங் கலைத்திறன் இருக்க முடியும். அந்த ஒரு நிலையில் மட்டுமே எல்லாவறையும் தோற்றுவிக்கும் மெய்ப்பொருள் இருக்க முடியும். ஆனால் அந்த நிலையை மனதில் உருவகப்படுத்துவதோ கற்பனை செய்வதோ முடியாது. அதை வழிமுறைப்படுத்துவதோ நகல் செய்வதோ முடியாது. அதை எந்த முறையாலும் எந்தத் தத்துவத்தாலும எந்தக் கட்டுப்பாட்டாலும் அடைய முடியாது. மாறாக, தன்னை முற்றிலுமாகப் புரிந்து கொள்வதன் மூலமே அது வருகிறது”( விடுதலை: துவக்கமும் முடிவும்)

“செயலில் திறமையாய் மிளிரும் கலைநயமும் அழகும் நாள் முழுவதற்கும் செயல்பட வேண்டுமே தவிர, ஒரு நாளில் சில மணி நேரத்திற்கே மிளிர்வதாக இருக்கக்கூடாது. ப்யானோ-வை இனிமையாக வாசித்தால் மட்டும் போதாது, நாள் முழுவதற்கும் கலைநயமும் அழகும் இருக்க வேண்டும்- இதுதான் உண்மையில் சவாலாக இருக்கிறது. இசைக்கருவியை நீங்கள் தொடும் விதத்திலேயே, நீங்கள் இனிமையான இசையை எழுப்ப வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது, அது பரந்த வயலில் சிறிய மூலையில் மட்டும் விவசாயம் செய்வதற்கு ஒப்பாகும். நமது அக்கறை மொத்த வயலிலும் இருக்க வேண்டும். வாழ்க்கைதான் அந்த வயல்..”( நாம் பெற வேண்டிய மாற்றம்)

– இத்தகைய ஜே.கே வின் கருத்துகளால் ஏற்பட்ட புரிதலாலும் உணர்தலாலும் நான் நாளடைவில் இலக்கிய ஈடுபாட்டிலிருந்து முற்றிலும் விலகிவிட்டேன். மெய்யுணர்வை நோக்கிய பயணமே பிரதானமாக இருந்தது. என் தேடல் ஒரு பரிணாமப் புள்ளியை அடைந்த பிறகு (அதற்கு யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி முக்கிய காரணமாக இருந்தார்) நான் அமைதியாக வீட்டில் இருந்தேன். தொலைதூரக்கல்வியில் படித்தேன். அரசுப்பணியும் கிடைத்தது. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இலக்கிய செயல்பாடுகளோ ஆர்வமோ இல்லாதிருந்தேன். மீண்டும் 2015 ஆம் ஆண்டு முதல் எப்போதாவது கவிதைகளும், புனைகதைகளும் எழுத ஆரம்பித்தேன். அவ்வாறு நான் அரிதாக எழுதிய கவிதைகளின் தொகுப்பே 2024 ஆம் ஆண்டு உன்னதம் ஆரத் தழுவும் நேரம் என்ற தலைப்பில் ஜோலார்பேட்டை மெய்நிழல் பதிப்பக வெளியீடாக வந்தது. புனைகதைகள் ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம் வெளியீடாக 2025 ஆம் ஆண்டு செம்மஞ்சள் நிற மயானம் என்ற தலைப்பில் வெளிவந்தது.

 இலக்கியத்தை முதன்மையான ஒன்றாக நான் கைக்கொள்ளவில்லை. நான் ஒரு இலக்கியவாதி அல்ல. மெய்யுணர்வாளன் மட்டுமே. 

சக மனிதனுக்கு வாழ்க்கை சார்ந்த மெய்யுணர்வை நோக்கி சுட்டிக்காட்டும் விரல்களாகவே நான் இலக்கிய செயல்பாட்டைக் கொண்டிருக்கிறேன். அக்காரணத்தாலேயே தமிழ்க்கவிதை மரபில் எனக்கென ஒர் இடம் இருப்பதாக நான் கருதவில்லை. அதை நான் பொருட்படுத்தவும் இல்லை. ‘ன்’ விகுதி கொண்டு முடியும் சொற்றொடர்களையும், ’நான்’ என்ற வார்த்தையையும் நான் பயன்படுத்துவது ஒரு உரையாடல் சௌகர்யத்துக்காகவும், புரிதலுக்காகவும்தான் . மற்றபடி நான்- மையம் அழிந்து போன ஒருவன். இங்கு நீடித்த நிலையான செயல்பாட்டை மேற்கொண்டு வருகிற ஒருவன் இல்லவே இல்லை.

நான் எவ்விதமான இலக்கியக் கூட்டங்களிலும் பங்கேற்பதோ, விவாதங்களில் ஈடுபடுவதோ இல்லை. தேடிச் சென்று இலக்கிய ஆளுமைகளை சந்திப்பதும் இல்லை. நான் வெறுமனே இந்த நதிக்கரையில் எனது பாடல்களோடும், மௌனத்தோடும் அமர்ந்திருக்கிறேன். எனது படைப்புகள் சில சமயம் தன்னியல்பாக, சில சமயம் நண்பர்களுக்காக வெளிப்படுகின்றன. அவற்றை படிப்பவர்கள் படிக்கலாம். அவ்வளவுதான்.

கே: உங்கள் இரண்டாம் தொகுப்பின் முதல் கவிதையே “நீர்க்காடு ஒன்றிலிருந்து மெளனம் ஒன்றைப் பறித்தெடுத்த போது” என்று தொடங்குகிறது. “பெரும் வசீகர நீர்ச்சுழி”, “என் வனநதிகளில் நீர்த்தளும்பும் ஒளி”, “அடர்காட்டு பெருமழை”, “திசையறியா திரவ இருள்” போன்ற வரிகளில் நீர் வெறும் இயற்கைக் கூறாக இல்லாமல் ஒரு வாழ்வியல், ஒரு மனநிலை, ஒரு தத்துவமாக மாறுகிறது. இந்த நீர் குறியீட்டின் பின்னணி என்ன? கவிதை எழுதும் போது முதலில் உருவாகுவது காட்சியா, அனுபவமா, மொழியா? 

: காட்சியும் மொழியும் கூடி முயங்கும் அனுபவமாகவே கவிதை உருக்கொள்ளத்தொடங்குகிறது. சில நேரங்களில் ஒரு காட்சி மொழியை அழைக்கிறது. சில நேரங்களில் மொழியே ஒரு காட்சியை உருவாக்குகிறது. ஆனால் இறுதியில் அவை இரண்டும் பிரிக்க முடியாத ஓர் அக அனுபவமாகவே கவிதையில் ஒன்றிணைகின்றன.

நிச்சியமாக நீரை வெறும் இயற்கைக் கூறாக மட்டும் நாம் அணுகிட முடியாது.

நீங்கள் குறிப்பிட்டது போல் நீர் வாழ்வியலின் ஆதி ஊற்று. மனநிலைகளோடு இடைவிடாமல் வினைபுரியும் ஒரு ரசவாதம் . மூலத்தை எப்போதும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஒரு தத்துவம். எந்த உணர்வையும் நீரின் மேல் ஏற்றி மிதக்கவிட முடியும். அது காதலாகவும் துயரமாகவும் மாறும். அது நினைவாகவும் மறதியாகவும் மின்னும். பிறப்பாகவும், மரணமாகவும் உருவெடுக்கும். அதனால்தான் நீர் என் கவிதைகளில், தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கும் ஒரு உயிருள்ள குறியீடாக இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் நீரே தாயின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறது. தாய்ப்பாலின் நிறமும் வாசமும் சுவையும் கொண்ட ஆதித் தாய்மையின் பிரதிபலிப்பே என் நீர்க்குறியீட்டின் உண்மையான பின்னணியாக இருக்கலாம். எல்லாக் கவிதைகளும் இறுதியில் தாயின் கருவறைக்குத் திரும்பிச் செல்லும் ஒரு நீர்ப்பயணம்தான்; அந்தப் பயணத்தின் மொழியே என் கவிதைகளில் மீண்டும் மீண்டும் நீராக வெளிப்படுகிறது என்றும் நான் சொல்ல விரும்புகிறேன்.

கே: உங்கள் கவிதைகளில் வசீகரமான சொற்கோர்வைகள் காணப்படுகின்றன. “இசையை நெய்பவன்”, “நீர்த்தளும்பும் ஒளியை”(ஒளி – எழுத்துப் பிழையல்ல), “மனநாவில் தாகத்தின் அரூப நர்த்தனம்”, “மகரந்த இருள்”, “மருதாணி மேகங்கள் மழை பார்த்து” போன்ற வித்தியாசமான உவமைகள், “முடிவற்ற இருள்தறியால் நெய்தது போல”, “இயலாமையால் ஜோடிக்கப்பட்ட ஒரு பூங்கிண்ணத்தை”, “நினைவின் ரோஜாக்கள் உருகிய அத்தர்” போன்ற வினோத உருவகங்கள் இவ்வாறு விதவிதமான கோணங்களில் படிமங்கள், உருவங்கள், உவமைகளை உருவாக்க காரணமென்ன? இப்படியான படிமங்கள் தற்செயலாக உருவாகிறதா, அல்லது கவிதையின் உள் இயக்கமே அவற்றை உருவாக்குகிறதா?

: கவிதை உருவாக்கத்தின் போது எந்தப் படிமம் அதன் உடலாக மாற வேண்டும், எந்த உருவகம் அதன் சுவாசமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் தன்னியல்பாகவே தீர்மானிக்கப்படுகிறது. நான் அந்த நிகழ்வின் சாட்சியாகவே பெரும்பாலான நேர்வுகளில் என்னை உணர்கிறேன்.

ஒவ்வொரு கவிதையும் ஒரு கனவை மொழிபெயர்க்கும் முயற்சியைப் போன்றது. ஆனால் கனவுக்கு நம் பிரக்ஞை மனம் அறியும் இலக்கணமெல்லாம் கிடையாது. அது ஒளியைத் திரவமாகவும், இருளை மலராகவும், மெளனத்தைப் பறவையாகவும், காலத்தை நதியாகவும் மாற்றிவிடுகிறது. அந்தக் கனவின் தர்க்கத்தை மொழி ஏற்றுக்கொள்ளும் கணத்தில்தான் இது போன்ற கவிதைப் படிமங்கள் பிறக்கின்றன. அவை நான் உருவாக்கியவை என்று சொல்வதைவிட, நான் அனுமதித்தவை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு கவிதையும் தன்னுள் மறைந்திருக்கும் படிமங்களைத் தானே முளைக்கச் செய்கிறது. கவிஞன் அந்த முளைப்பை நிகழ்த்துபவன் அல்லன். அதைக் கேட்டு, அதற்கு இடமளித்து, அதற்கு- தானறிந்த, தான் பழகிய, தன்னால் இயலும் விதத்தில்- மொழியளிப்பவன் மட்டுமே.

கே: “எந்த மயானத்திலிருந்து எழுந்து வந்து இதைப் படிப்பாய் தேவி”, “நீ கையேந்தியிருக்கும் என் அஸ்தியைக் கரைத்து தலைமூழ்கு” போன்ற வரிகளில் ஆழமான கையறுநிலை வெளிப்படுகிறது. அதே நேரத்தில் “உன்னை நான் உணரும் இப்போதில் பூப்பதெல்லாம் என் மரமாகவும்…” என்ற வரிகளில் முழுமையான காதல் அனுபவமும் விரிகிறது. இந்த இரு மனநிலைகளும் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புபடுகின்றன?

: என்னைப் பொறுத்தவரை, கையறுநிலையும் காதலும் ஒன்றுக்கொன்று எதிரான மனநிலைகள் அல்ல. மாறாக, அவை ஒரே நதியின் இரு ஆழங்கள். காதல் உச்சத்தை அடையும்போது அது கையறுநிலையாக மாறுகிறது. கையறுநிலை முழுமையடையும்போது அது காதலின் இன்னொரு வடிவமாக உருமாறுகிறது. ஒருவரை முழுமையாக நேசிப்பது என்பது, நம் ஆளுமையின் எல்லைகளை மெதுவாகக் கைவிடுவதுதான். அந்தக் கைவிடுதலில் ஒரு வகையான மரணம் இருக்கிறது. அதனால்தான் கவிதைகளில் காதலும் மரணமும், புணர்வும் பிரிவும், தரிசனமும் வெற்றிடமும் ஒன்றையொன்று தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்கின்றன. அவை ஒன்றை ஒன்று மறுப்பதில்லை. மாறாக ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன.

“எந்த மயானத்திலிருந்து எழுந்து வந்து இதைப் படிப்பாய் தேவி” அல்லது “நீ கையேந்தியிருக்கும் என் அஸ்தியைக் கரைத்து தலைமூழ்கு” போன்ற வரிகளில் வெளிப்படுவது வெறும் விரக்தியோ இழப்பின் துயரமோ அல்ல. அது நேசித்த ஒருவரிடம் தன்னை முற்றிலுமாக ஒப்படைத்த பிறகு எஞ்சும் அகநிலை. அங்கே ‘நான்’ என்ற மையம் சாம்பலாகி இருக்கிறது. அந்தச் சாம்பல்கூட நேசிப்பவரின் கைகளில் கரைய வேண்டும் என்ற ஏக்கமே அந்த வரிகளின் உயிர்.

அதேபோல், “உன்னை நான் உணரும் இப்போதில் பூப்பதெல்லாம் என் மரமாகவும்…” என்ற வரிகளில் வெளிப்படுவது -காதலின் வழியாக உலகத்துடனான எல்லா பிரிவுகளும் கரைந்து போய்விடும் அனுபவமே. அங்கே பூக்கும் மரமும், பெய்யும் மழையும், பறக்கும் பறவையும், வீசும் காற்றும் தனித்தனியான பொருட்களாக இல்லை. அவை அனைத்தும் ஒரே பேருணர்வின் வெவ்வேறு வடிவங்களே. காதல் அதன் முழுமையில் எப்போதும் தனிமனித தன்மையைத் தாண்டிச் செல்கிறது.

கே: “என் ஒவ்வொரு பிறழ்ச்சியும் ஒரு புதிய அறிதலின் மலரை கைகளில் உதிர்த்துப் போக” என்ற வரியில் பிறழ்ச்சியை புதிய அறிதலின் தொடக்கமாகப் பார்க்கிறீர்கள். இந்த முரணான சிந்தனை எவ்வாறு உருவாகிறது?

ப: பொதுவாக நாம் “பிறழ்ச்சி” என்பதை ஒரு தவறாகவும், வழுவாகவும், தோல்வியாகவும் புரிந்துகொள்ளப் பழக்கப்பட்டிருக்கிறோம். மனிதன் தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் உண்மையாக அறிந்துகொள்ளத் தொடங்குவது அவனது பிறழ்ச்சிகளின் வழியாகத்தான்.

ஒரு நதி நேராகப் பாய்ந்துகொண்டே இருந்தால் அது ஒரு நேர்க்கோட்டை மட்டுமே உருவாக்கும். ஆனால் அது வளைந்து, உடைந்து, கரைகளை அரித்துக்கொண்டு செல்லும்போதுதான் நிலத்தின் உண்மையான முகத்தை வெளிக்கொணர்கிறது. மனித வாழ்வும் அப்படித்தான் இல்லையா. நாம் நம்முடைய உடைவுகளாலும், தயக்கங்களாலும், தவறுகளாலும், தோல்விகளாலும், கையறுநிலைகளாலும் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகிறோம். எனவே பிறழ்ச்சி என்பது முழுமையிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வு அல்ல. இன்னும் ஆழமாக முழுமையை நோக்கி நகரும் பயணமே.

சில அறிதல்களுக்கு உடைதல் தேவைப்படுகிறது. நாம் இழந்ததாக நினைத்த தருணங்களே, பின்னாளில் நம்மை நாம் கண்டடைந்த தருணங்களாக மாறிவிடுகின்றன.

ஒவ்வொரு பிறழ்ச்சியும் நாம் இதுவரை காணாத இன்னொரு சாளரத்தைத் திறக்கிறது. அந்தச் சாளரத்தின் வழியே நுழையும் ஒளிதான் அறிதல்.

பிறழ்ச்சியை நாம் கொண்டாடவில்லை. அதிலிருந்து பிறக்கும் விழிப்புணர்வை நாம் கொண்டாடத்தான் வேண்டும். அதுவே அதற்கு நாம் தரும் முக்கியத்துவம். அந்த முக்கியத்துவத்தின் கனமே விழிப்புணர்வின் ஆயுளைத் தீர்மானிக்கிறது.

வாழ்க்கை நம்மை உடைக்கும் ஒவ்வொரு முறையும், அந்த உடைவின் விளிம்புகளில் விழிப்புணர்வு சுடர்கிறது. அந்தச் சுடரே ’புதிய அறிதலின் மலர்’ என்று உருவகப்படுத்தப்படுகிறது.

பிறழ்ச்சி என்பது ஒரு புதிய பிரக்ஞையின் வாசலாக மாற முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் பிறழ்ச்சி நம்மை மாற்றுவதில்லை. அதிலிருந்து பிறக்கும் விழிப்புணர்வுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம்தான் நம்மை மாற்றுகிறது.

கே: “சொற்களின் பட்டாடைகள் கனத்த மௌனத்தைச் சுற்றி” அல்லது “மகரந்த இருள்” போன்ற உருவகங்களில் முரண் இயல்பாக இயங்குகிறது. முரண்களை கவிதைக்குள் கையாளும் உங்கள் அழகியல் என்ன?”

: முரண் என்பது என் கவிதைகளில் நான் திட்டமிட்டு உருவாக்கும் ஒரு உத்தி அல்ல. அது வாழ்வின் இயல்பிலிருந்தே மொழிக்குள் வந்து சேருகிறது. ஏனெனில் வாழ்க்கை நேர்கோட்டில் இயங்குவதில்லை. அது எப்போதும் முரண்களின் இசையில்தான் தன்னை வெளிப்படுத்துகிறது.

முரண்கள் இல்லாத உலகம் ஒருவேளை தர்க்கத்திற்கு வசதியானதாக இருக்கலாம். ஆனால் அது கவிதைக்கு முற்றிலும் அந்நியமானது.

என் கவிதைகளில் முரண் என்பது மோதலாக வருவதில்லை. ஒளியும் இருளும் சந்திக்கும் அந்தி நேரத்தைப் போல உருகலாக வருகிறது என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.

“சொற்களின் பட்டாடைகள் கனத்த மெளனத்தைச் சுற்றி” என்று எழுதும்போது, அங்கே சொற்களுக்கும் மெளனத்திற்கும் இடையே எதிர்த்தன்மை இல்லை. உண்மையில், ஒவ்வொரு சொல்லும் மெளனத்தின் உடலில் நெய்யப்பட்ட ஒரு நூலிழைதான். அதைப் போலவே “மகரந்த இருள்” என்பது இருளை ஒளியாக்கும் முயற்சியல்ல. இருளுக்கும் அதன் சொந்த மலர்ச்சியும், அதன் சொந்த நறுமணமும் உண்டு என்ற என்கிற தரிசனமே. நாம் ஒளிக்கு மட்டுமேயாக பூக்களை ஒதுக்கிவிட்டோம். ஆனால் இருளும் பூக்கிறது. அந்தப் பூப்பை காணும் பார்வையைத்தான் கவிதை நமக்குத் தருகிறது என்று கூடச் சொல்லலாம்.

கவிதை என்பது எதிர்ச்சொற்களுக்கு இடையே ஒரு பாலம் கட்டுவது அல்ல. அவை ஒருபோதும் பிரிந்திருக்கவில்லை என்பதை நினைவூட்டுவதே.

தர்க்கம் உலகத்தை விளக்குவதாகவும், முரண் உலகத்தை வியப்பதாகவும் உள்ளது. அந்த வியப்பே கவிதையின் அழகியலாகவும் மலர்கிறது என்றும் சொல்லலாம்.

கே: சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரை காதலும் பெண்மையும் தமிழ்க் கவிதையின் மைய அனுபவங்களாக இருந்து வருகின்றன. உங்கள் கவிதைகளிலும் அவை நுட்பமான காட்சிகளாக வெளிப்படுகின்றன. “உன் வனப்பால் வரையப்பட்ட சித்திரங்கள்/என் இரவுகளைப் பூசிக்கொண்டு/மின்னுவது பொறாமல்” என்ற இடத்திலும் சரி “பேரொளியின் ஒரு துளியாய்/உன்னுள் கசிந்து/பெருந்தவிப்பு உள்நிறைய/உன்னில் கரைப்பேன் என்னை” என்ற வரிகளிலும் சரி “ஒவ்வொரு நிலா நாளிலும்/ததும்பி கதிர்வீசும்/தேவியின் மந்தகாச ஒளியை” என்ற இடத்திலும் அதையே கண்ணுறுகிறேன். காமத்தை கவிதையாக்கும் போது அதன் அழகியல், மரியாதை, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் சமநிலையை எவ்வாறு பேணுகிறீர்கள்?

: மெய்யுணர்வை நோக்கிய என் தேடலின் பாதையில், தந்த்ரா மரபின் தத்துவங்களோடு எனக்கு ஆழமான பரிச்சயமும், ஈர்ப்பும், பின்னர் சில காலத்துக்கு தீவிரமான ஈடுபாடும் உருவாயின. என் செம்மஞ்சள் நிற மயானம் புனைகதையை வாசித்தால், அந்தப் பயணத்தின் சில பிரதிபலிப்புகளை நீங்கள் காண முடியும். பழகவாய்க்கும், சந்திக்க நேரும், எதிர்ப்படும் ஓவ்வொரு பெண்ணையும் தேவியாக பாவித்து வணங்கும் தியான மன நிலையில் நீண்ட காலங்கள் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் காமம் நம்மைத் தாங்க முடியாத தவிப்புகளின் உச்சத்திற்கும் அவஸ்தைகளுக்கும் கொத்திச் சென்றாலும் கூட, பிற எல்லாவற்றைக் காட்டிலும் காமமே தெய்வீகத்தின் வாசலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நவீன மனித மனம் காமத்துடன் மிகவும் நோய்க்கூறான, வக்கிரங்கள் நிறைந்த ஒரு உறவைக் கொண்டிருக்கிறது. காமத்தை ஒன்று இழிவாகப் பார்க்கிறது, அல்லது வெறும் நுகர்வுப் பொருளாகச் சுருக்குகிறது. இந்தச் சூழலில் மிகுந்த மரியாதையுடன் பக்தியுடன் பெண்களும், மிகவும் தியானப்பூர்வமாக காமமும் அணுகப்பட வேண்டியது அவசியமாய் உள்ளது.

கே: “நுங்குகளாகச் சிரிக்கும் பனைகண்டு அலட்டலுடன் தலைசிலுப்பும் தென்னை” என்ற வரிகள் வாசகனை உடனே காட்சிக்குள் இழுத்துச் செல்கின்றன. மரங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையே இவ்வளவு இயல்பான உறவை உருவாக்கும் உத்தி எப்படி உங்களிடம் உருவானது? அந்தக் காட்சி பிறந்த தருணத்தைப் பகிர முடியுமா?

ப: யுத்திகள் சார்ந்து பிரக்ஞாபூர்வமாக அந்த கவிதை உருவாகவில்லை. கவித்துவ மனநிலையின் இயல்பான பெருக்கிலிருந்து தானாகவே உருவானது. மனித உணர்வுகள் என்று நாம் வகைப்படுத்தும் அகவயமான ஒன்றிற்கும், மரங்களாகிய இயற்கையின் புறவயமான வெளிப்பாட்டிற்கும் இடையே எந்தப் பாகுபாடும் இல்லாத அபேதமான ஓர் உன்னத நிலைக்கு ஆட்பட்டு, நெக்குருகும் தன்மையே கவித்துவ மனநிலையின் அடிப்படையாக உள்ளது.

எனது சொந்த ஊரான அகரத்திலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ள காரிமங்கலம் என்னும் ஊருக்குச் செல்லும் குறுகிய, அமைதியான தார்ச்சாலையில் சிறு வயதில் அநேக முறை மிதிவண்டியில் பயணித்திருக்கிறேன். அந்தி சாயும் பொழுதுகளில், அந்தச் சாலையில் நான் தனியாகப் பயணித்த கணங்களின் பிரகாசமான நினைவுகளே இக்கவிதைக்கு உயிர் கொடுத்துள்ளன. அத்தகைய அலாதியான அனுபவங்கள் அகத்தில் விட்டுச் சென்ற சுவடுகளும், அவை ஏற்படுத்திய கிளர்ச்சியூட்டும் மனநிலைகளும் இணைந்து, ஒருவகை படிமங்களாக என்னுள் எஞ்சி, அப்படிமங்களின் வசீகரப் பிடியினால்தான், சற்றே சோர்வுற்ற எனது கால்களுடனும், தனிமையின் பேரொளியுடனும் என்னை எதிர்கொண்டழைத்த காரைத்திண்ணையின் குளிர்ச்சி சூழ்ந்த அரசமரத்தடிக்கு என்னால் போய்ச் சேர முடிந்தது.

கே: உங்கள் கவிதைகள் இயற்கையை வெறும் பின்னணியாகப் பயன்படுத்துவதில்லை; அதுவே கவிதையின் உயிராக மாறுகிறது. உன்னிமுள், தூதுவளை, கருநொச்சி, முடக்கற்றான், முசுமுசுக்கை, கிச்சிலி போன்ற எண்ணற்ற தாவரங்கள் கவிதைக்குள் இயல்பாக வருகின்றன. இயற்கையை இவ்வளவு நெருக்கமாக எழுதுவதற்கு காரணமான உங்கள் வாழ்வனுபவம் என்ன? வயல்வெளிகளில் பெரும்காடுகளில் காணக் கிடைக்கும் சிறு சிறு விஷயங்களையும் வண்ணங்களையும் கவிதையுள் எழுதவதற்கும், பிற விஷயங்களைக் கவிதையாக்கும் போது கிடைக்கும் மனநிலைக்கும் இருக்கும் வேறுபாடுகளை சொல்லுங்கள்.

ப: நான் அத்தகையவற்றின் ஆராதகன் என்பதே முதன்மையான விஷயம். இது போன்ற தாவரங்களோடு இயைந்திருந்த வாழ்வியலிருந்து நாம் வெகுவாக விலகி வந்துவிட்டோம். அருட்பிரகாச வள்ளலாரின் ஆன்மநேயப் பரிச்சயமும், சித்தர்கள் மரபின் மீது எனக்குள் அவ்வப்போது வந்து போன ஆகர்ஷணமுமே தூதுவளை, முடக்கற்றான், முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி போன்ற எளிய மூலிகைகளின் மீது நான் ஒரு மிகப்பெரிய ஈர்ப்பையும் ஆராதனையையும் கொள்ளக் காரணமாய் அமைந்தன எனத் தோன்றுகிறது. வயல்வெளிகளிலும், அடர்ந்த பெருங்காடுகளிலும் காணக் கிடைக்கும் மிகச் சிறு விஷயங்களையும், அவற்றின் நுட்பமான வண்ணங்களையும் கவிதையுள் நெய்யும்போது வாய்க்கும் மனநிலை அலாதியானது. பிற விஷயங்களைக் கவிதையாக்குவதைக் காட்டிலும், இந்த இயற்கை ஆராதனை எனக்குள் பேரமைதியை பெருங்களிப்பைத் தருகிறது.

கே: உங்கள் கவிதைகளில் கிராமங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சிகளும் அல்லது முந்தைய தலைமுறை மட்டுமே கண்ட சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. “புளியன் கிளைகளில் டயர் ஊஞ்சலாடும் சிறுமிகள்”, “மிதிவண்டி மேல் பவனி வரும் ஐஸ்பெட்டி”, “கருவேல மரக்கொக்குகள்” போன்ற காட்சிகள் இன்றைய வாசகனுக்கு நினைவையும் ஏக்கத்தையும் தருகின்றன. இப்படியான காட்சிகளைப் பதிவு செய்ய உங்களைத் தூண்டுவது நினைவா, ஆவணப்படுத்தும் விருப்பமா, இழந்துபோன உலகின் மீதான ஏக்கமா, அல்லது வேறு ஏதாவது உள்ளுணர்வா?

: நீங்கள் குறிப்பிட்ட அனைத்துடனும், வாசக மனதில் காட்சி உருவாக்கத்தை மீட்டுவதிலும், அதனூடாக கவித்துவக் கிளர்ச்சியை தூண்டச் செய்வதிலும் மீண்டும் மீண்டும் எனக்கு இருந்த ஆர்வமும் அவற்றிற்கு காரணமாக இருக்கலாம். 

கே: உங்கள் கவிதைகளில் ஒலி, தாளம், லயம் ஆகியவை மிகவும் நுட்பமாக இயங்குகின்றன. “வல்லாரை தீபம் / கற்றாழை சாபம்” போன்ற வரிகளில் ஓசை முக்கியப் பங்காற்றுகிறது. “ஆக, போக” என்ற ஒற்றுகளோடு முடியும் பல வரிகளும், ஏங்காத்தில் முடியும் வரிகளும் உங்கள் கவிதைகளில் காண முடிகிறது. நவீனக் கவிதைக்கும் சந்தமும் லயமும் அவசியமா? இந்த விஷயத்தில் உங்கள் பார்வை என்ன?

: நவீனக் கவிதைக்குச் சந்தமும் லயமும் ஒரு மாறாத இலக்கணம் என்றோ, இன்றியமையாத கட்டாயம் என்றோ சொல்ல முடியாது. ஆனால், எல்லா அழகியல் வழிகளிலும் ஒரு கவிதை செதுக்கப்பட்டு, மெருகேற்றப்பட வேண்டும் என்பதிலும், ஒரு கவிதை தன்னால் இயன்ற அனைத்து சாத்தியங்களிலும் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

வலிந்து சேர்க்கப்படும் ஆபரணங்களாக அவை இருத்தலாகாது. கவிதை தானாகவே சுவாசிக்கும் தருணங்களில் பிறக்கும் இசைகளாக இருக்கலாம்.

கே: உங்கள் கவிதைகள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வை எந்தப் பெரும் அறிவிப்புமின்றி பதிவு செய்கின்றன. “வெயிலை அலுத்துக்கொண்டே/நடக்கும் மூதாட்டியின்” என்ற இடத்திலும் “தனிமையின் பிரகாசத்துடன்/எதிர்கொண்டழைக்கிறது/காரைத்திண்ணையின் குளிர்ச்சி சூழ்ந்ததாயிருக்கும்/அரசன்.” என்ற இடத்திலும் மூதாட்டி, கிராமத்து வீடு, காரைத்திண்ணை, அரசமரம் போன்றவை மிக இயல்பாகக் கவிதையாகின்றன. அன்றாட வாழ்க்கை கவிதையாக மாறும் அந்தக் கணத்தை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?

: சாதாரணத்தின் மீது படிந்திருக்கும் அசாதாரண ஒளியைக் கண்டடையும் தருணங்கள் கவிதைகளில் நிகழ்கின்றன. அத்தகைய எளிய காட்சிகளை அவற்றின் அகவயமான மௌனத்தை, அவை சுமந்து நிற்கும் வாழ்வின் பாரத்தை உற்றுநோக்குகையில், சாதாரணம் என்று கருதப்படும் ஒரு விஷயம் கவிதையாக மாறும் அந்த உன்னத கணம் நேரிடுகிறது. கவிதை என்பது வாழ்க்கையிலிருந்து வேறொரு உலகை உருவாக்குவது அல்ல- வாழ்க்கை ஏற்கனவே கவிதையாக இருந்ததை, மீண்டும் ஒருமுறை வாசிப்பவருக்கு காண்பிப்பதுதான்.

கே: கதவு என்ற குறியீடு உங்கள் பல கவிதைகளில் மீண்டும் மீண்டும் வருகிறது. அது மரணத்தின் முன் மூடப்பட்ட கதவாக ஒன்றிலும், அழிவின் நெடுங்கதவாக இன்னொற்றிலும், நாராசம் கசிய சாத்தப்படும் கருணையின் பெருங்கதவாகவும் வருகின்றன. கதவென்பது வழி மறிப்பது. கதவென்பது பாதுகாப்பது. கதவென்பது உள்ளும் வெளியும் என பிரிக்கும் எல்லையும் கூட. உங்கள் கவிதைகளில் வரும் கதவுகள் உங்களுக்குள் எந்தத் தரிசனத்தை உருவாக்கியது?

: கதவு என்பது வெறும் மரத்துண்டுகளாலான ஒரு பொருளல்ல. அது பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த இருத்தலியல் குறியீடு.

நீங்கள் குறிப்பிட்டது போல, என் கவிதைகளில் கதவு என்பது வெவ்வேறு கணங்களில் வெவ்வேறு தரிசனங்களாக உருமாறி நிற்கிறது. ஒருபுறம் அது மரணத்தின் முன் சலனமற்று மூடப்படும் இறுதி எல்லை. பிறிதொரு புறம் பேரழிவின் பெரும் பிரவாகத்தை நோக்கித் திறந்துகொள்ளும் நெடுங்கதவு. இன்னும் சில இடங்களில், நாராசம் கசிய கசிய, கருணை அற்றுப்போய் சாத்தப்படும் பெருங்கதவு.

கவிதைகளில் கதவுகள் ஒருபோதும் வெறும் வீட்டுக் கதவுகளாக இருப்பதில்லை. அவை மனதின் வாசல்கள். நினைவின் அறைகள். வலியின் சுவர்கள். கருணையின் திறப்புகள். சில கதவுகள் பாதுகாக்கின்றன.சில கதவுகள் சிறையிலடைக்கின்றன. சில கதவுகள் திறக்கப்படுவதற்காக அல்ல, நாம் எவ்வளவு காலமாக அவற்றின் முன் நின்றிருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இருப்பதாகவும் தோன்றுகிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஏராளமான கதவுகளாகவே இருக்கிறோம். யாரோ ஒருவருக்கு நாம் நம்பிக்கையின் கதவு. இன்னொருவருக்கு வேதனையின் கதவு. ஒருவரின் வாழ்க்கைக்குள் ஒளி நுழைய காரணமாகவும் இருக்கலாம். இருள் நுழைய காரணமாகவும் இருக்கலாம். மனிதன் தன்னையே ஒரு கதவாகப் பார்க்கத் தொடங்கும் இடத்தில்தான் கருணைமிக்க பரிணாமம் பிறக்கிறது.

கே: “அந்த இலைகள்/ஒலித்துக் கொண்டிருக்கும்/ஒரு இசை/உறங்கிக் கொண்டிருக்கும் பேரலைகள்” இந்த வரிகள் சிக்கலாக்கும் விஷயம் தான் என்ன? கவிதை வரிகளுக்குள் இத்தனை சுற்றலை வைத்தால் வாசகர்கள் வாசித்து கவிதை தரும் அனுபவத்தை உள்வாங்காமல் போகும் வாய்ப்புகள் சார்ந்த பயத்தை எப்போதேனும் உணர்ந்திருக்கின்றீர்களா? அதே சமயம் சீவக சிந்தாமணியில் விமலை பந்தாடும் காட்சியை சொல்லும் “அங்கை யந்த லத்த கத்த ஐந்து பந்த மர்ந்தவை ” , திருப்புகழின் “பட்டப்பகல் வட்ட திரிகியில் இரவாக” என்ற வார்த்தை சிக்கலாய் கோர்த்த வரிகளும் அதை சார்ந்த பாடல்களும் இப்போதும் அதன் சிக்கலான வடிவத்துக்காவே வார்த்தையமைப்புக்காவே வாசிக்கவும் பாடுவும் படுகின்றன என்பதை நாம் சாதகமாக்கிக் கொள்ளலாமா? சிக்கலான கவிதை அமைப்பு வாசிப்பு அனுபவத்தை செறிவாக்குகிறதா, அல்லது வாசகனை விலக்குகிறதா? எளிமைக்கும் செறிவுக்கும் இடையிலான சமநிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

: கவிதையில் ‘சிக்கல்’ என்று நாம் கருதும் ஒரு வடிவம், உண்மையில் மொழியின் ஆழத்தில் உறங்கும் ஒரு மாயாஜாலம். நீங்கள் குறிப்பிட்ட “அந்த இலைகள் / ஒலித்துக் கொண்டிருக்கும் / ஒரு இசை / உறங்கிக் கொண்டிருக்கும் பேரலைகள்” என்ற வரிகள் வாசகனை ஒரு நேர்கோட்டுப் பாதையில் பயணிக்க அனுமதிப்பதில்லை. அது ஒரு சுழல். அங்கே இலைகளின் அசைவு இசையாகிறது. அந்த இசைக்குள் உறங்கிக் கிடக்கும் பேரலைகளின் ஆதி இரைச்சல் துளிர்க்கிறது. இந்தச் சுற்றல், புறவயமான தர்க்க மனதிற்குச் சிக்கலாகத் தோன்றலாம். ஆனால், அகவயமான தியான மனதிற்கு இது ஒரு தரிசனமாக அமையலாம்.

வாசகர்கள் இந்த வரிகளை உள்வாங்காமல் விலகிவிடுவார்களோ என்ற பயம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஏனெனில், கவிதை என்பது தகவல்களைக் கடத்தும் ஊடகம் அல்லவே. அது ஒரு மனநிலையைக் கடத்தும் அலைவரிசைதானே.

சில சமயம் கவிஞர்கள் ஆழத்திற்குப் பதிலாக இருளை உருவாக்குவதும் நேர்கிறது. கவிதை மர்மமாக இருக்கலாம். ஆனால் செயற்கைத் தனங்களால் கூடுகட்டப்பட்ட ஒன்றாக அது இருப்பது உவப்பானதில்லை. அதன் ஆழம் இயற்கையாகவும், அதன் இருள் உயிருள்ளதாகதாகவும் இருத்தலே சிறப்பு.

கே: “நடுகல் பீலி” என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள கவிதைகள் உங்கள் தொகுப்பில் தனித்துவமான இடம் பெறுகின்றன. சங்ககால நடுகல் மரபையும் இன்றைய மனநிலைகளையும் இணைக்கத் தோன்றிய காரணம் என்ன? இந்தத் தலைப்பின் வழியாக நீங்கள் உருவாக்க விரும்பிய அனுபவம் என்ன?

 நான் ஒருங்கிணைந்த தருமபுரி பிரதேசதைச் சேர்ந்தவன். நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். தருமபுரி பிரதேசத்தில் நடுகற்கள் அதிகமென. நடுகற்களின் பூமி என்று கூட அதைக் குறிப்பிடலாம். நடுகற்களைக் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் தருமபுரியில் உள்ளது. அந்த வகையில் நான் அநேக நடுகற்களைப் பார்க்க நேர்வது உண்டு. பண்டையக் காலத்திலிருந்தே நடுகற்களுக்கு மயில்பீலி சூட்டி, ’கள்’ படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இருந்ததாக படித்தேன். இதைச் சார்ந்த வியப்பு மற்றும் பகிர்வை முதன்மையான காரணமாகக் கொண்டு உருவான கவிதைகள்தாம் அவை. ஆனால் நடுகற்கள் குறிப்புணர்த்தும் ’தன்னைப் பலியிடுதல்’ என்பதை ஒரு ஆன்மீகப் பயணத்தின் குறியீடாகவும் வைத்து இக்கவிதைகளை வாசிக்கலாம்.

கே: நீங்கள் ரமண மகரிஷியிடம் கற்றவை சார்ந்த சில குறிப்புகள் கவிதையுள் இருக்கின்றன. குறிப்பாக ரமணரில் புன்னகை பேரமைதியையும், அக விடுதலையையும் வழங்கும் ஒரு தெய்வீக அனுபவமாகக் கருதப்படுகிறது. ரமணரின் புன்னகையை நீங்கள் கவிதையுள் குறிப்பிட்டிருப்பது அழகானது. அதே கவிதையில் நீங்கள் புத்தனின் தாமரையையும் சேர்க்கின்றீர்கள். பௌத்த மதத்தில் தாமரை சூத்திரம் தூய்மை, ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் ஞானத்தை குறிப்பது. ரமணரும் புத்தரும் போதிப்பது ஒன்று தான் தன்னிலிருந்து விடுபடுவது. கவிதை எழுதும் செயலும், ஆன்மிகத் தேடலும், அக விடுதலையும் ஒன்றோடொன்று தொடர்புடையவையா?

 : ஆம். ரமணரும் புத்தரும் குறிப்பிடுவது ஒன்றுதான். அது தன்னிலிருந்து விடுபடுவது அல்ல. ‘தான்’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து விடுபடுவது. நீங்கள் குறிப்பிடும் ஆன்மீகத் தேடுதலும் அக விடுதலையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். ஆனால் கவிதை எழுதுதல் அப்படியல்ல. அது தனித்தும் இயக்கம் கொள்ளமுடியும். கவிதை எழுதுதல் என்கிற ஒன்று இல்லாத அக விடுதலையும் சாத்தியமே. கவிதை எழுதும் செயல் ஒரு உணர்வு நிலையின் அறிவார்ந்த வெளிப்பாட்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் கேள்வியில் ’கவிதை எழுதும் செயல்’ என்பதற்குப் பதிலாக கவித்துவ மனநிலை என்று சொல்லியிருந்தால் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதாம் என்று சொல்லியிருக்க முடியும்.

கே: “சாமுவேல் பெக்கெட்டின் பிரபல்யமான நாவல்” என்ற அடிக்குறிப்போடு ஒரு கவிதையும், “யதிராஜ ஜீவாவின் பாரூர் கால்வாயில் துணி துவைப்பவர்கள் புனைகதையில் இடம்பெற்ற கவிதை” என்ற அடிக்குறிப்போடு இன்னொரு கவிதையும் இருக்கிறது. இதைச் சார்ந்து உங்கள் கருத்து என்ன? ஒரு வேறு இலக்கிய வடிவத்தின் நினைவையோ பாத்திரத்தையோ கவிதைக்குள் கொண்டு வரும்போது, அதன் இயல்பான ஓட்டத்தை குலைக்காமல் வைத்திருப்பதில் இருக்கும் சவால்கள் என்ன?

: ‘கோடாவிற்கான காத்திருத்தல்’ என்ற சாமுவேல் பெக்கெட்டின் பிரபலமான நாடகத்தின் தலைப்பையும், அதன் அடிநாதமான இருத்தலியல் மற்றும் காத்திருத்தல் குறியீட்டைக் கொண்டும் எழுதிய கவிதை ஒன்றை ‘பாரூரான் கால்வாயில் துணி துவைப்பவர்கள்’ குறு நாவலில் பயன்படுத்தி இருந்தேன். அது குறுநாவலின் அங்கமாக இல்லாமல் தனித்தும் வாசிக்கத்தக்கது என்று நான் கருதியதால் கவிதைத் தொகுப்பிலும் இடம்பெறச் செய்தேன். ஒரு வேறு இலக்கிய வடிவத்தின் நினைவையோ பாத்திரத்தையோ கவிதைக்குள் கொண்டு வரும்போது, அதன் இயல்பான ஓட்டம் குலைக்கப்படும் என்று நான் கருதவில்லை. அது பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கும் போது அவ்வாறு செய்யலாம் என்பதுதான் என் கருத்தாக இருக்கிறது.

கே: ஆன்மீக கவிஞர் மிலரேபாவின் நூறாயிரம் பாடல்கள் மையம் ஆன்மீகமாகவே இருக்க முடியும் என்று நம்புகிறேன். ‘மிலரேபாவின் ஞானச்சபையில் படிக்கப்படும் வலிபுராணம்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளன ஐந்து கவிதைகளில் வலியை ஒரு குழந்தையாக, குருவாக, காதலியாக உருவகித்து எழுதியிருக்கும் கவிதைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? லௌகீக வாழ்விலும் ஞானத்தை அடைய முடியும் என்பது உங்கள் தெரிவா? ஞானமோ அல்லது ஆன்மீகமோ எல்லையற்ற வலிகளின் நிராவண சாரளமா? லௌகீகம், ஞானம் எல்லாம் வலிகள் தானா?

: வலி -வலியை அனுபவிப்பவன்- வலியை அனுபவிப்பதாக நினைத்துக் கொள்பவன்- இவை குறித்தெல்லாம் ஒருவர் சரியான புரிந்து கொள்ளுதலைக் கொண்டிருப்பது அவசியம். தன்னை உணரும் ஞான விடுதலையின் பாதையில் வலியைத் தியானித்தலும், வலியைப் புரிந்து கொள்ளுதலும் தவிர்க்கமுடியாத ஓர் அங்கமாக உள்ளது. அப்படியான ஒரு ‘வலி தியானத்தை’ வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் விளைவில் அக்கறைக்கொண்டிருப்பதே அக்கவிதை.

லௌகீக -ஆன்மீக என்கிற பிரிவினைகளுக்கும் ஞானத்திற்கும் தொடர்பு இல்லை. நீங்கள் எங்கே எப்படி இருந்தாலும், என்னவாக இருந்தாலும் அது உங்களுக்கு நிகழும். நாம் ஒரு புரிந்து கொள்ளுதலுக்காக ஞானமடைதல் என்னும் வாக்கியத்தை பயன்படுத்துகிறோம். உண்மையில் அங்கு ’அடைதல்’ இல்லை. ஒரு மாயையின் இழத்தல் இருக்கிறது. தன்மையம் அற்ற ஒருவகை கண்டுணர்தலும் உள்ளது.

ஞானத்தை நிவாரண சாளரமாக பார்க்க இயலாது. அப்படியான பார்வையே அதை அந்நியப்படுத்திவிடும். நிவாரணத்தை தேடக்கூடிய, அதற்காக ஏங்க்க கூடிய ஒருவர் இல்லாமல் போகும் நிலைதான் அது. வலி இல்லாமல் போவதில்லை. வலியை வலி என்று பெயர் சூட்டிக்கொண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு நிலையான ‘நான்’ தன்மை தானாகவே இல்லாமல் போகிறது.

எனக்கு வலிக்கிறது என்று கதறுவது லௌகீகம். நிலையான ஒரு மையத்திலிருந்து வலியை உணரக்கூடிய ஒருவன் இருப்பதான மாயையிலிருந்து விடுபடுவது ஞானம். இரண்டிலுமே வலி சாஸ்வதம்.

கே: உங்கள் ஆரம்பக் கவிதைகளில் கவிதை எழுதும் செயல் பற்றிய சுயபிரக்ஞை அடிக்கடி வெளிப்படுகிறது. ஆனால் பின்னைய கவிதைகளில் அது கணிசமாகக் குறைகிறது. இதை உங்கள் கவிதை மொழியின் பரிணாமமாகக் கருதலாமா? அல்லது கவிதையைப் பற்றிய உங்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றமா?

ப: கவிதை மொழியின் பரிணாமமாகக் கருதலாம்.

கே: ‘உன்னதம் ஆரத்தழுவும் நேரம்’ தொகுப்பு இன்னும் எழுதப்படாத உங்கள் கவிதைகளை நோக்கி ஒரு மஹா மெளனத்தில்/ஆழ்ந்து விடும் முன்/நதிப்பிரவாாகம் கண்ணுற்றபடி” நகர்வது போலத் தோன்றுகிறது. இதுவரை நீங்கள் முயற்சி செய்யாத கவிதை வடிவங்கள், மொழிச் சோதனைகள், அல்லது புதிய அழகியல் முயற்சிகள் குறித்து பகிர முடியுமா?

ப: உங்கள் கேள்வியில் உள்ள விமர்சன நுட்பத்தைப் புரிந்து கொண்டேன். அதிகமாய் முயற்சி செய்யாத கவிதை வடிவம் என்றால் அது’ ஹைக்கூ’தான். மொழிச் சோதனைகள், அல்லது புதிய அழகியல் முயற்சிகள் எதையும் நான் திட்டமிட்டுச் செய்வதில்லை. சில சமயங்களில் அவை தானாக நடக்கக் கூடும்.

உதாரணத்துக்கு ஆவநாழியில் வெளிவந்த ’காகிதப்பூ வானம் மழைநீர்ச்சிறுமிகள்’ என்ற நீள் கவிதை. அதன் இறுதிப்பகுதியில் உள்ள கவிதையில் இரு வேறுச் சரடுகள் ஒன்றையொன்று பின்னி சென்று பொதுவான ஒரு முடிவை எய்துவதாக இருக்கும். பன்முகத் தன்மை கொண்டதான அக்கவிதையில் செய்து பார்த்த சோதனை தன்னியல்பாய் நிகழ்ந்தது. நீங்கள் விரும்பினால் அந்தக் கவிதையோடு நேர்காணலை நிறைவு செய்து கொள்ளலாம். உங்கள் கூர்மையான வாசிப்புக்கும், கவிதையின் ஆன்மாவைப் புரிந்து தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

மடிமலர் பாரிஜாதம்-

அமிர்த ஸ்பரிசத்தின்
ஊற்றுக்கண்ணாய் இருந்தது
உன் சருமம்.
அவளுக்கு அம்மா சொன்னதில்
நினைவில் இருப்பவை:
தரை பார்த்து நடக்க கற்றுக்கொள்
துப்பட்டா காற்றில் பறக்காதிருக்கட்டும்
அளவாக சிரி
அடக்கமாக உட்கார்
கவனமாக உறங்கு
கண்விழித்தபின் சூரியனைப் பார்
ஓரமாக நட
ஒருபோதும் தம்பியின் கைகளை விட்டுவிடாதே
வனநதியின் கல்லிடுக்கிலிருந்து
நிறங்கள் பிசுபிசுக்க
எழும்பி வரும் பட்டாம்பூச்சியே
உன் இருப்பு
அந்த விசேஷ தினத்தில்
நண்பர்களோடு அவள் கோயிலுக்கு போனாள்
ஒரு மலைவாசஸ்தலத்திற்கு செல்லும் காட்டுவழி
வருடத்தில் சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோயில்
சொன்னதை மறக்காதே
தம்பியின் கைகளை விட்டுவிடாதே
என சொல்லிச்சொல்லி விடையனுப்பினாள் அம்மா.
உன் புன்னகையின் சிறகடிப்புகள்
என் நாட்களில் இருந்து நீங்கிச் சென்றபின்
நான் செய்வதறியாது திகைப்புற்று
பட்டாம் பூச்சிகளைத்தான் தேடிப்போனேன் –
அப்போது
காலம் பழைய இருளுக்கு திரும்பியிருந்தது
கவிதை மௌனத்திற்கும்
காலம் அகாலத்திற்கும்.
எலுமிச்சை பழத்தில் விளக்கு போட்டாள்
தம்பிக்கு சில பொம்மைகள் வாங்கிக் கொடுத்தாள்
நண்பர்களோடு குளிர்பானம் அருந்தினாள்
குரங்குகளுக்கு பொரியும் வாழைப்பழமும் கொடுத்த பின்
தேங்காய் மூடியை பாறையில் மோதி உடைத்து தின்றபடியே
வீடு திரும்பத் தொடங்கினாள்.
பட்டாம்பூச்சிகள்
எனக்கு திராட்சைத் தோட்டங்களை அறிமுகப்படுத்தின
நான் திராட்சை ரஸத்தில் மிதந்துகொண்டே
உன்னை நினைவு கூர்ந்தேன்
பட்டாம்பூச்சிகள்
எனக்கு மூங்கில் வனங்களை அறிமுகப்படுத்தின
நான் மூங்கிலின் நிழலில் அமர்ந்துகொண்டு
உன்னை நினைவுகூர்ந்தேன்.
பட்டாம்பூச்சிகள்
எனக்கு தர்ப்பை புதர்களை அறிமுகப்படுத்தின
நான் தர்ப்பை புதர்களில்
ஒரு சர்ப்பத்தைப் போலச் சுருண்டும்
ஒரு மது உபாசகனைப் போல கவிழ்ந்தும் படுத்தபடி
உன்னை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறேன்.
அன்று மாலை காகிதப்பூ வானம்
அழுதுகொண்டே சொன்னவை:
நான் நீலமாகத்தானிருந்தேன்
நம்புங்கள் நான் நிரபராதி
என் அழுகை ஒரு மழையாகத் திரள்வதற்குள்
என் ஓலம் ஒரு இடியாக எச்சரிப்பதற்குள்
அது நடந்து முடிந்துவிட்டது.
ஆயினும்
ஓராயிரம் நிழல்களின் குளுமை
ஒரு நிஜத்தின் சூட்டிற்கு ஈடாகுமா
இறுதியாக வானம் சொன்னதில்
முக்கியமானது:
சாலையோரம் நடந்துவரும்போது
சிறுநீரை அடக்க விரும்பாதவள்
நண்பர்களை முன்னே அனுப்பிவிட்டு
ஒரு ஈச்சம்செடியின் புதர்மறைவில்
புகுவதற்கு முந்நொடி வரை
தம்பியின் கைகளைப் பற்றியபடியேதான் இருந்தாள்.
வாட்டி வதைக்கிறதே நினைவுப்பெருந்துயர்.
இந்த மெழுகுவர்த்தி
இன்னும் கொஞ்ச நேரம் கூட எரிந்திருக்கலாம் என
அதன் ஒளியில் கவிதை எழுதிக்கொண்டிருந்தவன்
நினைக்கவே கூடாதா.

***

லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com

இலக்கியத்தில் பாலின சமத்துவத்திற்கான காலம் இது!

0

நேர்காணல்: பிரமிளா பிரதீபன்

நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி

பிரமிளா பிரதீபனின் சிறுகதைகள் சமகால இலக்கிய அலகில் தனித்துவம் வாய்ந்தவை. வரலாறு, பண்பாட்டு பின்புலத்தில் கூர்மையாக வார்க்கப்படும் கதாபாத்திரங்களும் அவர்கள் மேற்கொள்ளும் உரையாடல் வழியான தர்க்கங்களும் அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடியன. இலங்கையை சேர்ந்தவர். ஃபாத்திமா மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், SLIIT பல்கலைக்கழகத்தின் முதுமாணி கற்கைநெறிக்கான  இணைப்பாளராகவும் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு பதிப்பு நூல் வெளியாகியிருக்கின்றன. தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். விரும்பித் தொலையுமொரு காடு, கொலைச்சொல் ஆகியன அவருடைய முக்கியமான புனைவு ஆக்கங்கள் ஆகும். போர் நிலத்திலிருந்து எழுதப்படும் கதைகளில் மேலோங்கும் பெண்களின் குரலும், அவர்கள் மையமிட்ட பண்பாட்டு உரையாடல்களும் இவருடைய புனைவுகளைக் கூர்மையடையச் செய்கின்றன. இந்த நேர்காணல் அவருடைய கதைகள் குறித்தும், பொதுவாக புனைவுகள் குறித்தான அவருடைய பார்வையை அறியவும் உதவும் என்று நம்புகிறேன்.

கேள்வி: கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது?

பதில்: என் அப்பம்மாவுடன் வளர்ந்தவள் நான். அப்பம்மா எனக்கு ஏராளமான கதைகளைச் சொல்லுவார். நம்பவே முடியாத கற்பனைகளைக்கூட கதைகளாக்கி நம்ப வைப்பார். அப்பம்மா கதைகள் சொல்லும் போதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமாய் மெய்மறந்திருப்பேன்; ஆனால் அக்கதைகளில் வரும் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியவராய் அப்பம்மா இருக்கவில்லை. குறிப்பாக என் சந்தேகங்களை தீர்க்கும் விடைகள் யாரிடமிருந்தும் எனக்குக் கிடைத்திருக்கவில்லை. சமயங்களில் கதை சொல்லியவாறே அப்பம்மா உறங்கிய பின்னும் நான் அதன் தொடர்ச்சியை நீட்சியடையச் செய்தவாறே உறக்கமின்றிப் பல மணிநேரங்கள் கிடப்பேன்.

 ஒரு வகையில் இப்போது நான் சிறுகதைகளை எழுதும் நாட்களில் உணர்வதைப் போலவே…… 

“மகாராசனும் அவென் பொண்டாட்டியும் எப்பவும் சண்டை போட்டுப்பாங்களாம். மகாராசன் பொண்டாட்டிய திட்டிட்டே இருப்பானாம். எவ்ளோ தான் சண்ட போடறது? ஒரு நாள் அவென் பொண்டாட்டி ஒரு முடிவெடுத்தா. புருசன் பேசும் போது தன் சாரி முந்தானைய விரிச்சிப் புடிச்சி எல்லாத்தையும் சேர்த்துப்பாளாம். பின் அதை வீட்டு பின் பக்கம் இருக்கும் காய்கறிபாத்தியில கொண்டே கொட்டுவாளாம். அது அப்பிடியே சிவப்பு புளிச்ச கீரையா வளருமாம். கடைசில அந்த கீரையெல்லாம் ஆய்ஞ்சு அவனுக்கே சமைச்சுக் கொடுப்பாளாம்” 

இது அப்பம்மா எனக்குச் சொன்ன கதைகளில் ஒன்று. ஆறு ஏழு வயதுகளில் அடியோ நுனியோ முடிவுகளோ இல்லாத கதைகள் என்னைத் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கும். நான் அப்பம்மாவுக்குத் தெரியாமல் எல்லா கதைகளுக்கும் வெவ்வேறு முடிவுகள் எடுப்பேன். அப்படியே அக்கதைகளுக்கு உருவமும் களமும் கொடுப்பேன். அதனாலேயே அக்கதைகளில் அநேகமானவை இப்போது வரை காட்சிகளாக மனதில் பதிந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. 

என் அப்பாவின் தங்கை (சின்ன மாமி) எங்களுடனேயே வசித்தார். வாசிப்பதற்காக எப்போதும் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும் நான் அவருடைய பழைய பாடக்கொப்பிகளை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அதில் அனேகமாக ஏதேனும் கதைகள் எழுத ஆரம்பிக்கப்பட்டு ஒரு பந்தியுடன் நிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு நான் அவதானித்த சில பந்திகளை முடிப்பதற்கு கற்பனைகளுக்கூடாக முயற்சி செய்வேன். அந்தப் பழக்கமும் பரிச்சயமும் தான் நான் தனியே இருக்கும்போதும் நடக்கும்போதும் என்னைச் சிந்திக்கத்தூண்டின. என் வீட்டிலிருந்து பாடசாலைக்கு நடந்துபோக தனியே வாய்க்கும் போதெல்லாம் இப்படியான நினைவுகளுடனும் கதைமாந்தர்களுடனும் சஞ்சரிக்க ஆரம்பித்து, தொடர்ச்சியாக அதனையே பழக்கமாக்கிக் கொண்டேன். ஆனால் இது தொடர்பாக நான் அதிகம் யாருடனும் பேசிக்கொண்டதில்லை என்பதாகவே ஞாபகம். 

கே: முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து….

ப: நிஜத்தில் பாடசாலைக் காலங்களில் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதைகள் வாசித்தல் விமர்சித்தல் தொடர்பான அறிவு எனது க.பொ.த. உயர்தர (பு.ஊ.நு யுஃடு) கல்வியின் போது கிடைத்திருந்தாலும் நான் ஒரு சிறுகதையை எழுத வேண்டுமென முயற்சி செய்யவில்லை. முதன்முதலாக பத்திரிகையில் பிரசுரமான படைப்புகளாகவும் கவிதைகளே இருந்தன. ஆனால் எனது உயர் கல்வியின் நிமித்தம் நான் வீட்டையும் ஊரையும் நண்பர்களையும் பிரிந்து தலைநகரில் வாழத்தொடங்கிய நாட்களில் அந்தப் பிரிவு என்னைச் சரியாக வதைத்தது. மனது ஊருடனும் நண்பர்களுடனும் தொலைவிலிருந்தவாறே தொடர்புகொள்ளத் துடித்தது. அப்போது கைப்பேசிகள் பெருமளவில் புழக்கத்தில் இல்லை. நேரம் கிட்டும் போதிலெல்லாம் கடிதங்கள் எழுதுவேன். கடிதங்களில் நினைவுகளை மீட்டுவேன். அவ்வாறு நான் நினைவுகளை மீட்டி எழுதுகையில் அழுது தேம்பியவாறே எழுதியிருக்கிறேன். பிறகு, நான் எழுதிச்சேர்த்த பதிவுகளையெல்லாம் கவிதைகளாக்கி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். ஒரு சமயம் கவிதையாக்க முடியாத அதிக வார்த்தைகள் கொண்ட விபரிப்பொன்றை அப்படியே அனுப்புவதென தீர்மானித்து ஞானம் இலக்கிய சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தேன். நான் எழுதுவதும் அனுப்புவதும் ஒரு சிறுகதையாக வேண்டுமென்ற எண்ணம் அப்போது எனக்கு இருக்கவில்லை. அதனை வெறும் ஒரு அனுபவ பகிர்வாகவே செய்யத் துணிந்தேன். 

நான் விரும்பி குளிக்கச்செல்லும் பீலிக்கரை பற்றிய பதிவாக அது இருந்தது. 

“அப்போதெல்லாம் எனக்கு அன்றாட வேலைகளில் அதுவும் ஒன்றானது. மாலை ஐந்து மணிக்கெல்லாம் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்க பீலிக்கு சென்று விடுவேன். போகும் வழியில் என்னுடன் இணையும் ரேணு, பாமா, பார்வதி, சின்னவா, கட்டையா…. பிறகென்ன ஏழு மணி வரை ஒரே கும்மாளம்தான் போங்கள். வீட்டில் தண்ணீரும் நிறைந்து விடும் எங்கள் பொழுதும் போய்விடும்.

பீலிக்கரை பற்றிச் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு ரொம்ப பிடித்த இடங்களில் இந்த பீலிக்கரைக்குத்தான் முதலிடம். இரண்டு வாழைப்பட்டைகளை ஒன்றாக இணைத்து ஓடும் தண்ணீர் அணைக்கப்பட்டு கற்பாறைக்குள் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். குளிக்க, குடிக்க, பூக்கன்று வளர்க்க, உடுப்பு கழுவ, பாத்திரம் கழுவ என்று எதற்கெடுத்தாலும் பீலிதான். ஓரத்தில் ரெண்டு பாக்கு மரம். முன்னால் பாக்கியம் கிழவியின் மரக்கறித்தோட்டம். சுற்றி பெரிய பெரிய பாறைகளும் மரங்களும். அந்த கறுப்பு நிற ஒற்றைக் கல்லில் அமர்ந்துகொண்டு எவ்வளவு நேரமென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வழுவழுப்பான வாழைப்படைக்குள் தண்ணீர் ஓடுவதுதான் எவ்வளவு அழகு! அதற்கிடையில் கை வைத்துத் தண்ணீரை தடுக்கும்போது கையை மீறிப் பாயும் தண்ணீர், பட்ட இடமெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே….! அனுபவித்தால்தான் புரியும். சதா ஓடிக்கொண்டிருக்கும் அந்தத் தண்ணீரைப்போல அதைப் பார்ப்பதில் எனக்கு சலிப்பே வராது.

பந்தயத்திற்கு ஓடுவதுபோல் ஓடி, விழப்போவது தெரியாமல் தடுமாறி தொகையாய் வெண் நுரைகள் தள்ளத்தள்ள வந்து விழும் அந்த நீரில் நின்று கண்களை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் குளித்துக் கொண்டிருப்பேன். ஊர்க்கதைகள் எல்லாமே பீலிக்குத் தெரியும்….”

இவ்வாறு தொடரும் இந்த அனுபவமே 2006 செப்டெம்பர் மாத ஞானம் சஞ்சிகையில், இளம் படைப்பாளர் அறிமுகம் எனும் தலைப்புடன் ‘பீலிக்கரை’ எனும் சிறுகதையாகப் பிரசுரமானது. இதுவே இலக்கிய உலகின் சக படைப்பாளர்களிடத்து எனக்குச் சிறந்த அறிமுகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பிறகு சிறிது காலம் நான் பீலிக்கரை பிரமிளா என்றே அறிமுகமானேன். 

கே: அறிவு அனுபவம் மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது?

ப: ஒரு படைப்பின் உயிர் நீடித்தலில் வாசக அனுபவத்தின் பங்களிப்பே பிரதானமானது. அந்த உயிர் நீடிப்பை ஆதாரப்படுத்தும் பிரதான மூன்று விடயங்களாகவே இந்த அறிவு அனுபவம் மொழி ஆகிய மூன்றையும் கருதுகிறேன். 

அறிவானது சமூகத்தின் பொதுபுத்தி கட்டமைப்பிலிருந்து மாற்றி யோசிக்கும் திறனை நம்மிடத்தே வலுப்படுத்துவதோடு ஒரு கருத்தியல் அதிகாரத்தையோ அல்லது நடைமுறையிலிருக்கும் சராசரி மீறல்களையோ தனித்துவமான சிந்தனையாக மாற்றுகிறது. அத்தோடு குறித்த படைப்பிற்குள் சமூக பெறுமானத்தின் தீவிரத்தை அதிகரிக்கவும் அத்திவாரமாக அமைகிறது. ஆனால் ஒரு இலக்கிய படைப்பைக் கலைத்துவம் மிக்கதாக மாற்றுவதற்கும் அதன் தனித்துவத்தைத் தக்க வைப்பதற்கும் அனுபவமும் மொழியுமே மிகப்பிரதானமானவை. 

கதைநிகழ்வின் காட்சிப்படுத்தலையும் வாழ்வின் தத்துவார்த்தமான பிழிவையும் வெளிப்படுத்த அனுபவம் மிகசிறந்த அடிப்படையாக அமைவதுடன் படைப்பின் உயிர்த்தன்மையைத் தக்கவைக்கவும் உதவுகிறது. இவை இரண்டையும் தாண்டி மொழியானது படைப்பின் கலைத்தன்மையினை நிறுவுகிறது. மொத்தத்தில் ஒரு இலக்கியப் படைப்பின் ஜீவனைத் தீர்மானிக்கும் குறிப்பிட்ட மூன்று விடயங்கள் தொடர்பாகவும் நான் அதிக கவனம் கொண்டிருக்கிறேன். 

வலிந்து ஒரு கலைப்படைப்பை உருவாக்குதல் எவ்வளவு அபத்தமானதென நான் நன்கு அறிவேன். அப்படியான அபத்தங்கள் இல்லா ஒரு படைப்பை உருவாக்க அறிவு அனுபவம் மொழி ஆகிய மூன்றும் அனிச்சையாகச் சேரவேண்டும். அதில் ஒன்றையேனும் வலிந்து திணிப்பதால் உருவாகும் படைப்புகளே காலத்தை தாண்டித் தம்மை நிலைநிறுத்த முடியாமல் காணாமல் போகின்றன. 

எனவேதான் என்னால் அதிகளவான சிறுகதைகளை எழுத முடியவில்லையோ என எணணத் தோன்றுகிறது. இம்மூன்றும் ஒருங்கே வாய்க்கும் அந்தப்பொழுது ஒரு தவத்திற்கு ஒப்பானது. அப்படி மூன்றும் இணைந்து என்னை உந்தும் பொழுதில் எத்தனை வேலையிருந்தாலும் அவற்றைத்தாண்டி ஒரு சிறுகதையினை எழுதத் துணிவேன். பொதுவாக அப்படி அதுவாக என்னைப் பயன்படுத்திக்கொண்டு எழுதிக்கொண்ட அச்சிறுகதைகள் மாத்திரமே நிலையாக உயிர் பெற்றிருப்பதாய் நம்ப முடிகிறது. காரணம் அத்தகைய உந்தல் இன்றி நான் எழுதத்தொடங்கி முடிக்கப்பாடாத அனேக கதைகள் என்னிடத்தே உண்டு. 

கே: ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்தியேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளைச் சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங் கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம்? 

ப: எழுத்தாளர்களுக்கென்றில்லை. எவரொருவருக்கும் பால்யத்தின் நினைவுகளே வாழ்வின் தொடர்ச்சியை இயக்கும் சக்தியாகிறது. எனது ஊரினதும் பால்யத்தினதும் நினைவுச் சேகரிப்புகளே எனது இன்பத்தின் வேராக இருந்திருக்கிறது. குறிப்பாக இன்றுவரையிலும் எனது படைப்புகளில் ஏதோ ஒரு விதத்தில் அவை பங்களிப்பு வெய்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை. 

அண்மையில் நான் எழுதிய பிம்பம் சிறுகதை மொத்தமாக என்னைத் தொந்தரவு செய்த பால்ய நினைவுகளின் எச்சங்கள் என்பதைப் பிறகே நான் உணர்ந்தேன். அவை எங்கே எப்படித் தேக்கங் கொண்டிருக்கிறன, எப்படி வெளிவருகின்றன என்பதைக் கணிக்கவே முடியாதிருக்கிறது. அவை அதுவாக வெளிப்படும் போதில்தான் சமயங்களில் எனக்கே அது நினைவிற்கு வருகிறது. ஆக பால்யத்தின் நினைவுகள் இன்பமாக அல்லது வடுவாக ஆழ்மனதில் பதிந்திருப்பதன் விளைவாகவே நான் ஒரு எழுத்தாளர் எனும் அடையாளம் பெற்றிருக்கிறேன் என்றுகூட கூறிக்கொள்ளலாம். 

ஆனால் பால்யத்தின் நினைவுகளை வெறுமனே அனுபவங்களாகக் கடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இதனூடாகவே அவை தர்க்கங்களாக மாற்றமுற்று சமூகப்பெறுமானத்தை அடைவதாக நினைக்கின்றேன். 

நான் ஏற்கனவே கூறியது போல அறிவும் மொழியும் எனது பால்ய அனுபவங்களுடன் கலக்கும் போதிலேயே என்னால் படைப்பூக்கம் பெற முடிந்திருக்கிறது. அதன் எச்சமாக வாழ்வில் நான் எதிர்கொள்ளும் எல்லா அனுபவங்களைகளயும் பிரதீயீடு செய்து படைப்புக்களாக மாற்ற முடிகிறது. 

கே: உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித்தள்ளிய படைப்பு என்று உண்டா?

ப: எழுதுவதற்கு உந்தித்தள்ளிய படைப்பு என்று அடையாளப்படுத்தி என்னால் சொல்ல இயலவில்லை. ஆனால் என்னுடைய எழுத்தில் மொழி எப்படி இருக்கவேண்டும் என்று நான் கற்றுக்கொள்ள எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலைப் பல தடவைப் படித்திருக்கிறேன். சில குறிப்பிட்ட பக்கங்களை மீண்டும் மீண்டுமாய் படித்து எனக்குள் படைப்புச்சக்தியை ஏற்றிக் கொள்வதாய் நம்பியிருக்கிறேன்.

வாசிப்பில் என்று இல்லாமல் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய நபர்களாக அனேகர் என்னைப் பாதித்து எழுத வைத்ததுண்டு. 

கே: எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார்? 

ப: ஒற்றை எழுத்தை ஆதர்சமாகக் கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை. அது போலச்செய்தலாக மாறிவிடும் என்று அஞ்சுவேன். தவிர நான் பல்வேறு வேலைகளையும் எழுத்தையும் தொடர்ச்சியாக கற்றலையும் மேற்கொள்பவள் எனும் வகையில் மிகச் சரியாகத் தெரிவு செய்த எழுத்தாளர்களின் படைப்புகளையே வாசிக்கிறேன். பொதுவாக அவை என் படைப்பூக்கத்தை அதிகப்படுத்தும் விதமானதாக… எழுத்தின் வழி புதிய ஒரு அணுகுமுறையை அல்லது ஏதோ ஒன்றைக் கற்றுத்தருவதாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொள்கிறேன். 

அந்த வகையில் சங்க இலக்கியங்களிலிருந்தே நான் தெரிவு செய்துதான் படித்திருக்கிறேன். சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய மொழி மிகவும் பிடிக்கும் என்பதாலேயே ஒளவையாரின் எழுத்தை விரும்பிப் படிப்பதுண்டு. போலவே பிறமொழி எழுத்தாளர் வரிசையில் ஆன்டன் செகாவ், காப்கா, தஸ்தாயேவ்ஸ்கி, டோல்ஸ்டோய், எட்கர் ஆலன்போ அப்படியே தமிழில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் என்று எனது தெரிவுகள் தொடரும். சமீப காலமாக கே.ஆர். மீராவின் படைப்புகளை விரும்பிப் படிக்கிறேன். 

கே: சிறுகதைக்கான கருவை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? 

ப: இதுதான் இப்படிதான் என ஏதேனும் ஒரு கதைக்கருவைப் பிடித்துக்கொண்டு எழுதுவது சிரமமாக இருக்கிறது. என்னைப் பாதிக்கும் சக மனிதரை அல்லது சில சம்பவங்களை எழுதவேண்டுமென ஆரம்பித்து அதனை அதன்வழியில் விடும்போது கதைக்கரு அதுவாகக் கட்டமைகிறது. சமயங்களில் கதை முடியும்போது நான் ஏலவே தீர்மானித்த கதைக்கரு மாற்றம் பெற்று வேறொன்றாய் மாறியிருப்பதையும் அவதானித்திருக்கிறேன். அதனையொத்ததாய் வாசகர்களிடத்திலிருந்தும் அவ்வாறான பிரிதொரு கரு அடையாளப்படுத்தலையும் காண்கிறேன். 

பொதுவாக மலையக வாழ்வியலை, அழகியலை, விளிம்புநிலை மக்கள்சார் இன்னல்களை, குறிப்பாகப் பெண்களை எழுதத்துணிந்த நான், என் கண்ணில் பட்டு உணர்வுரீதியாகத் திரண்டெழும் அவ்வாறான சிறுபுள்ளியைப் பற்றிக்கொண்டு அதன் வழியில் எழுத ஆரம்பிப்பேன். அது எதுவானாலும் அவற்றை என் அனுபவத்தோடு தொடர்புபடுத்தி அல்லது நான் அதுவாக உணர்ந்து எழுதும்போதிலேயே அப்படைப்பிற்கு முழுமையாக உயிர் தர முடிகிறது என்பதை அனுபவித்திருக்கிறேன். 

கே: சமகாலக் கதைகளில் வரலாறு, தொன்மம், நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணத்துடனான செயல்பாடா? 

ப: வரலாறு, தொன்மம், நவீன வாழ்க்கை எல்லாமே இன்றைய இலக்கியத்திற்கான மூலப்பொருள்களாக இருக்கின்றன. வரலாறு என்பது வெறும் செய்தியல்ல அது காலத்தின் நகர்வு. காலத்தின் நகர்வு ஒரு கதைக்குள் இயங்குகின்றபொழுது அது ஒரு புதிய அனுபவத்தை வாசகருக்குத் தருகிறது. பின்நவீனத்துவ, பின் காலனிய, பெண்ணியச் சிந்தனைகள் வந்த பிறகு வரலாறுகள் மாற்று வாசிப்புக்கு உள்ளாகின்றன. தொன்மங்களுக்குப் புது வீரியம் கொடுக்கப்படுகின்றன. நவீன வாழ்க்கையின் சிதறலான போக்குகள் உரையாடப்படுகின்றன. 

மாற்று உரையாடல்களின் வழியாக வரலாறுகளும் தொன்மங்களும் புதிய முகங்களைப் பெரும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அது ஆப்பிரிக்க தொன்மங்களாகட்டும் தமிழ்த் தொன்மங்களாகட்டும் அல்லது சிங்களத் தொன்மங்களாகட்டும் எல்லாமே கதைக்குள் புகுந்து வீரியம் தரக்கூடியதாக இருப்பதையே அவதானிக்கிறோம். கடந்த சில பத்தாண்டுகளாாக இம்மரபு தீவிரம் பெற்று வருவதைக் காணமுடிகிறது. அத்துடன் மையங்களைக் கடந்த விளிம்புகளை நோக்கிய பயணமாகவும் அது இருக்கிறது. அதாவது சாதாரண மக்களின் பாடுகளிலிருந்து எழுகின்ற இலக்கியம் நாட்டுப்புறத் தொன்மங்களின் வழியாக உயிர்பெறுகிறதென்றும் சொல்லலாம்.  

என்னுடைய சிறுகதைகளில் அவ்வாறான வரலாறு, தொன்மம் தொடர்பான தாக்கம் இல்லாமலில்லை. உதாரணமாக நீலி, பச்சை வாசனை ஆகிய கதைகளைச் சொல்லலாம். எனினும் தொன்மங்களை, சமூக வரலாறுகளை எழுதவேண்டுமென்ற பிரயத்தனத்துடன் நான் அவற்றை எழுதத் துணியவில்லை. அவை இயல்பாக என் கதைக்குள் வந்து உட்கார்ந்துகொண்டன. 

கே: சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்ராயம்? 

ப: என்னுடைய பார்வையில் இலக்கியத்தில் பாலின சமத்துவத்திற்கான காலம் இதுவெனலாம். உலகம் முழுவதுமாகப் பெண்கள் ஏராளமாக எழுதுகிறார்கள் என்பதை அவதானிக்கிறோம். இதுவரை சிந்திக்க அனுமதிக்கப்படாத சரிபாதி மூளைகள் சிந்திக்கின்றன. அதாவது ஆண்களின் கண்களால் பார்க்கப்பட்ட உலகத்தைப் பெண்களின் கண்கள் வழியாக உணர்தல் இப்போது சாத்தியமாகியிருக்கிறது. தவிர சமூக மாற்றத்திற்கான பெண்ணெழுத்தாளர்களின் பார்வையை, அவர்களது படைப்பை, படைப்பு மொழியை இலக்கிய உலகம் மிக வாஞ்ஞையோடு ஏற்றுக்கொள்வதாகவும் தோன்றுகிறது. 

சமூகப் பொதுவெளியில் எக்காலத்திலும் உரையாடலுக்கு உட்படாத மனிதர்களின் வாழ்க்கைகள் எழுதப்படுகின்றன. விளிம்பில் கிடக்கும் மனித வாழ்வை மையமாக வைத்து உரையாடும் இலக்கிய ஆக்கங்களைக் காண்கிறோம். சமூக வரலாறுகளை, இனவரைவியல் கூறுகளைக் கொண்ட எழுத்துக்களும் எழுந்து வருகின்றன. உயர்ந்தது x தாழ்ந்தது என்று கட்டமைக்கப்பட்ட நிலவுடைமைச் சமூகக் கட்டமைப்புகள் எழுத்தில் நொறுங்குகின்றன. முகம் சுளித்த வாழ்வுகளுக்குள் புதைந்து கிடக்கும் வலிகளும் உரிமைக்குரல்களும் எழுத்தில் காலூன்றி நிற்கின்றன. 

கூடவே, எழுதவேண்டும் என்பதற்காகவும், நானும் இருக்கிறேன் என்பதற்காகவும் எழுதுகின்ற ஒரு பெருங்கூட்டமும் மேலெழுந்து வருவதையும் காண்கிறோம். விளம்பரங்களின் மூலம் மையத்துக்குத் தங்களை நகர்த்திக்கொள்வதற்கான சமூக ஊடகச் சாத்தியப்பாடுகளை மிகச்சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்டு களமாடுபவர்களையும் காண்கிறோம். கும்பல் மனநிலையும் குரோத மனநிலையும்கூட எழுத்துலகில் இருப்பதைக் கண்டு அச்சமும் அதிர்ச்சியும் கொள்கிறேன். எது நிற்கும் எது காணாமல் போகும் என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்ற நம்பிக்கையோடு மௌனமாகக் கடந்து போகிறேன்.

கே: உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்? எழுதும் செயல்பாட்டிற்குத் தனிப்பட்ட முறைமைகளைப் பின்பற்றுகிறீர்களா? 

ப: அன்றாடம் நேரம் ஒதுக்கி எழுதுதல் என்பது எனக்கு மிகத்தொலைவானது. மேலதிகத்தொழில், மேற்படிப்பு, குடும்பம், குழந்தைகள், வீடு இவையெல்லாம் தாண்டிய அடுத்தக்கட்ட நிகழ்வாக எழுத்தை வைத்தல் மட்டுமே சாத்தியம். இது எனக்கு மட்டுமல்ல, எழுதக்கூடிய அநேக பெண்களது அனுபவம் இதுவாகத்தான் இருக்கமுடியுமென்று தோன்றுகிறது. ஆனால், நான் முன்சொன்ன அத்தனையையும்விட எழுத்து மனதிற்கு மிக நெருக்கமாக இருப்பதை இரகசியமாக உணர்கிறேன் என்பதும் உண்மை. 

அதனால்தான் ஏற்கனவே கூறியிருந்தேன். நான் எழுதவில்லை என்னைப் பயன்படுத்தி அவை எழுதிக்கொள்கின்றன. ஏதோவொரு உந்தலில் என்னை மீறி எல்லாவற்றையும் தூரமிட்டு, ஒரு படைப்பிற்குள் சில தினங்கள் வாழ்ந்து மீள்வேன். பரிசாக நான் உயிர்தந்த ஒரு படைப்பைப் பெறுவேன். அதனால்தான் அவ்வாறு எழுதக் கூடிவரும் மனநிலையை ஒரு தவமெனச் சுட்டினேன். எனக்கு எழுத்து அதுவாகதான் அமைகிறது. வாசிப்பதற்கு என்னை வருத்தி நேரமொதுக்குவதைப் போல எழுதுவதற்கான நேரத்தைத் திட்டமிட்டு அமைக்க முடியவில்லை. 

எனினும் நான் எழுதும் அந்தப் பொழுதுகள் ஒன்றில் இரவாகவோ அல்லது அதிகாலையாகவோ இருப்பதையே மனம் அதிகம் நாடுவதாகத் தோன்றுகிறது. 

கே: உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து… 

ப: முதற்தடவையாக அபுனைவு முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஆய்வாளரும் என் சக தோழருமான என்.சரவணன் அவர்களுடன் இணைந்து ஒரு ஆழமான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இலங்கை வரலாற்றில் இதுவரை ஆழமாக ஆராயப்படாத வரலாற்றுப் பாத்திரமான ‘குவேனி’ பற்றி விரிவாக ஆராய்ந்துவருகிறோம். ஏராளமான உசாத்துணை எழுத்துக்களை இதற்காகத் திரட்டி, அவற்றைப் பகுத்தாய்ந்து தொடர் உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். 

எனது முனைவர் பட்ட கற்கையில் கிடைக்கிற ஆய்வு முறையியல் பயிற்சிகள் இந்த ஆய்வுக்குப் பேருதவியாக இருக்கிறது. புனைவிலக்கியத்தைப் படைப்பவர்கள் ஆய்வுக்குள் நுழையும்போது எந்தளவு சிரமப்படவேண்டும் என்பதை அனுபவத்தில் அறிகிறேன். இது ஒரு புதிய அனுபவத்தையும் புதிய பயிற்சியையும் எனக்குத் தந்திருக்கிறது. கூடவே, குவேனி பற்றிய இவ்வாய்வினை ஒரு நாவல் வடிவாக்கும் திட்டமும் இருக்கிறது. 

***

நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

இரண்டாம் தேர்வு

0

டி.எச்.லாரன்ஸ்

தமிழில்: சுபஸ்ரீ முரளிதரன்

ஓ, எனக்கு சோர்வாக இருக்கிறது” என எரிச்சலுடன் சிணுங்கிக்கொண்டிருந்த அதே வேளை, புல்தரையின் ஓரமாக ஃப்ரான்சஸ் சரிந்து அமர்ந்தாள். அவளுடைய பாசத்துக்குரிய ஃப்ரான்சஸின் இப்படியான எதிர்பாராத மாற்றங்களுக்கு பழகிப்போயிருந்த அனா, ஒரு கணம் வியப்புடன் நின்றுவிட்டு, சொன்னாள்,

“நேற்று லிவர்பூலிலிருந்து வந்த அந்த நீண்ட பயணத்திற்குப் பிறகு, உனக்கு சோர்வாக இருப்பது இயல்பானதுதானே? என்றபடி அவள் ஆதுரமாக தன் சகோதரியின் பக்கத்தில் பொத்தென அமர்ந்தாள். அனா, வாளிப்பானவள் என்பதோடு, இயல்பான அறிவும் பதினான்கு வயதுக்கேயான உடல்வாகும் கொண்ட புத்திசாலிப்பெண். ஃப்ரான்சஸ் அவளைவிட சற்று மூத்தவள், கணிக்க முடியாத மனநிலை கொண்டவள் என்பதோடு, திடீர்திடீரென மாறும் இயல்புடையவள். அந்தக் குடும்பத்தில் அழகும் அறிவும் கொண்ட பெண்ணாக அவள் திகழ்ந்தாள். தன்னுடைய உடையில் ஒட்டியிருந்த நாயுறுவியின் விதைகளை பதட்டமாக பிடுங்கிக்கொண்டிருந்தாள். அவளது மெலிந்திருந்த பழுப்புநிற கைகள் அதைப் பிய்த்தபடியிருக்க, கருங்கூந்தலுடன் பேரிக்காயின் கருஞ்சிவப்பு வண்ணத்திலான அவளுடைய முகம், ஏதோ முகமூடி அணிந்திருந்ததைப்போல அமைதியாக இருந்தது. 

    அனாவின் மழுப்பலுக்கு மறுப்பு சொல்லும்விதமாக, “அது பயணத்தினால் அல்ல” என்றாள். அனா, அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டி தன் அன்புக்குரிய சகோதரியைப் பார்த்தாள். தன்னம்பிக்கையும் யதார்த்தமும் கொண்ட அந்த இளம்பெண், சஞ்சல மனமுடைய அவள் சகோதரியை கணிக்க முனைந்தாள். ஆனால் அவள் ஃப்ரான்சஸின் கண்களை நேருக்குநேராகத் தான் பார்த்துக்கொண்டிருந்ததை உணர்ந்ததும், இருண்டதும் படபடத்துக் கொண்டிருந்ததுமான அந்த கண்கள், சவால் விடுவதாகத் தோன்றியதில் சற்று பின்வாங்கினாள். இப்படியான மறைப்பேதுமற்ற நேரிடையான பார்வைக்காக, ஃப்ரான்சிஸ் விசித்திரமானவளாக அறியப்பட்டாள் என்பதோடு, அந்த பார்வையில் தென்படும் வன்முறையும் அதன் சடுதித்தன்மையும் மனிதர்களை அசௌகரியப்படுத்திவிடும். 

“என்னாச்சு என் செல்லமே?” என்று பிடிவாதக்காரியான தன் அக்காவை கேட்டபடியே, மெலிந்திருந்த அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள் அனா. ஃப்ரான்சஸும் ஆறுதல் பெறும் விதமாக வலிமையான பெண்ணான அவளின் அரும்பிக்கொண்டிருந்த மார்பகங்களின் மீது சாய்ந்துகொண்டாள். 

“ஓ, எனக்கு சற்று சோர்வாக இருந்தது” என்று கண்ணீர் துளிர்த்திட முணுமுணுத்தாள்.

“சரி. உனக்கு சோர்வாக இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும்?” என்று இதமாகக் கேட்டாள் அனா. அவள் தன்னைவிட மூத்தவளைப்போல, கிட்டத்தட்ட அம்மாவின் நிலையிலிருந்து தன்னை நடத்துவது ஃப்ரான்சஸுக்கு வேடிக்கையாக இருந்தது. 

   ஃப்ரான்சஸ் தன் இருபத்து மூன்று வயதில் நிறையவே அனுபவித்து விட்டிருக்க, அந்த சமயத்தில் அனா கவலைகளேதுமற்ற பதின்பருவத்தில் இருந்தாள். ஆண்கள் அவளுக்கு பெரிய நாய்களைப்போலத் தோன்றினார்கள். 

   அந்த நாட்டுப்புறம் இன்னமும் காலைப்பொழுதின் கனத்த அமைதியில் ஆழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைத்தும் தங்களின் ஒளியை தத்தமது நிழலோடும் சேர்த்தே உமிழ்ந்து கொண்டிருக்க, மலைப்பகுதி மௌனமாக வெம்மையை வெளியிட்டபடியிருந்தது. தவிட்டு நிறத்தில் இருந்த புல்வெளி மென்மையாக தகித்திருக்க, ஓக் மரத்தின் இலைகள் பழுப்பான நிறத்தில் கருகிக் கிடந்தது. கருத்து அடர்ந்ததாக இருந்த இலைச்செறிவின் ஊடாக, தூரத்தில் செம்மையும் காவியும் கலந்த நிறத்தில் கிராமம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

   நீரோடையின் கரையோரமாக வளர்ந்திருந்த சவுக்குமரம், சட்டென காற்றில் தன்னை ஒருமுறை உலுக்கிக்கொண்டதில், வைரம் மின்னுவதைப்போலான தோற்றமளித்தது. அனா தன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள். அவளது கன்னங்களின் ஒருபுறம் பழுப்பும் இளஞ்சிவப்பும் கலந்த வண்ணத்தில் மாறியிருக்க, தன் முழங்காலை அகட்டிக்கொண்டு மடியில் ஒரு கையளவு வெண்மையும் பசுமையுமான இலைகளுடைய ஹேசல் நட்களை போட்டுக்கொண்டாள். அவள் அவற்றினை உடைத்து தின்னத் துவங்கியிருந்தாள். ஃப்ரான்சஸ் தலையைக் கவிழ்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். 

 “ம்.. உனக்கு டாம் ஸ்மெட்லீயை தெரியும்தானே?” என்று கடினமான ஒரு விதையை அதன் ஓட்டிலிருந்து வெளியிலெடுக்க முயன்றவளாக அந்த இளம்பெண் கேட்டாள்.

“அப்படித்தான் நினைக்கிறேன்” ஃப்ரான்சஸ் நக்கலாக பதிலளித்தாள்.

 “அவர் எனக்கு தான் வேட்டையாடிப் பிடித்த உயிருள்ள ஒரு காட்டுமுயல்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்துக்கொள்ள கொடுத்திருக்கிறார்”

 “நல்ல விஷயம்தான்” என்று பற்றற்றவளாகவும் கிண்டலாகவும் உரைத்தாள்.

 “அதுசரிதான். அவர் என்னை ஓலர்ட்டன் விருந்திற்கு கூட்டிச்செல்வார் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர் அதை செய்யவேயில்லை. இங்கே பார், அவர் தேவாலயத்தில் வேலைப்பார்க்கும் ஒரு பெண்ணை அழைத்துச் செல்வதை நான் பார்த்தேன்”

“அவர் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்” என்றாள் ஃப்ரான்சஸ்.

“அப்படியொன்றும் அவசியமில்லை என்று நான் அவரிடம் சொல்லிவிட்டேன். அதோடு இந்த விஷயத்தை நான் உன்னிடம் சொல்வேன் என்றும் சொன்னேன், அதை செய்தும் விட்டேன்”

  அவள் பற்களுக்கிடையில் உடைபட்டு பிளந்தது ஒரு கொட்டை, அதிலிருந்து அவள் அதன் பருப்பை பொறுக்கி நிதானமாக சாப்பிட்டாள். 

 “அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” சொன்னாள் ஃப்ரான்சஸ்.

“இருக்கட்டும். அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போகட்டும். ஆனால், எனக்கு அவர்மீதான கோபம் அப்படியேதான் இருக்கிறது”

 “ஏன்?”

 “ஏனென்றால் அப்படித்தான். அவர் வேலைக்காரியை அழைத்துச் செல்ல எந்த உரிமையும் இல்லை”

 “அவர் செய்தது நிச்சயம் சரிதான்” என்று எந்த உணர்ச்சியும் காட்டாமல் தான் சொன்னதை தொடர்ந்து வலியுறுத்தினாள்.

 “இல்லை. அவர் என்னை அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்த பொழுது, அது நிச்சயம் சரியில்லை”

    ஃப்ரான்சஸ் வேடிக்கையும் ஆறுதலும் கலந்த வகையில் வெடித்து சிரித்தாள்.

“ஓ, நான் கேட்க மறந்துவிட்டேன்” என்றவள் தொடர்ந்து, ”நீ என்னிடம் சொல்லப்போவதாக சொன்னதற்கு அவர் என்ன சொன்னார்?”

 “அவர் சிரித்தபடியே, ’அவள் ஒன்றும் அதற்காக வருத்தபடமாட்டாள்’ என்றார்”

 “அவள் மாட்டாள்” என்றபடி மூக்கை உறிஞ்சினாள்.

  அங்கு அமைதி நிலவியது. காய்ந்து பொன்மஞ்சளாகியிருந்த மலர்களும், குவியலாகப் படர்ந்திருந்த முள்கொடிகளும், வெய்யிலின் பளபளப்பில் பழுப்பு நிறமேறிப்போயிருந்த புல்வகைகளையும் கொண்ட அந்த வெளி, ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

  அந்தச் சிற்றோடைக்கு அப்பால் விவசாய நிலங்களின் மகத்தான வடிவமைப்பு தொடங்கியது. 

   வெண்நிறத்தில் சதுரங்கப் பலகையைப் போலப் பரவியிருந்த பார்லி வயல்களில், அறுவடைக்குப் பின் எஞ்சியிருந்த அதன் தண்டுகள், பழுப்பு நிறத்திலான கோதுமை வயல்களின் சதுர வடிவங்கள், காக்கி நிறமான மேய்ச்சல் நிலத் துண்டுகள், தரிசு நிலத்தின் சிவப்பு நிறக் கோடுகள்—இவற்றோடு சேர்ந்து, அந்த சிறிய கிராமமும் வனப்பகுதியும் கருத்த ஆபரணங்களெனத் தோன்றும்படியாக தொலைதூர மலைகளை நோக்கி நீண்டு செல்லச்செல்ல, அந்தச் சதுர வடிவ வயல்வெளி மேலும் மேலும் சிறிதாகிக்கொண்டே போயின; இறுதியில் வெப்பம் ஏற்படுத்திய புகைமூட்டத்தில், மிகத்தொலைவில், அறுவடைக்குப்பின் எஞ்சியிருந்த பார்லியின் தண்டுப்பகுதி மட்டும் சிறிதாக வெண்நிற சதுரங்களாக தனித்து கண்ணில் பட்டன.

 “ஏஏ… இங்கு ஒரு முயல்வளை இருக்கிறது” என அனா திடீரெனக் கூவினாள். ”ஏதாவது ஒன்று வெளியில் வருகிறதா என்று கவனிக்கலாமா? நீ பதட்டப்படத் தேவையில்லை சரியா?”

  இரண்டு பெண்களும் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். ஃப்ரான்சஸ் தன்னைச் சுற்றியிருந்த சிலவற்றை கவனித்தாள். அவை வித்தியாசமானவைகளாக, சினேகமற்றவைகளாகக் காட்சியளித்தன; ஊதாவண்ண காம்புகளின் மேலிருந்த பச்சைநிற எல்டர்பெரிகளின் நிறையும், ஓரத்தில் வானத்தை நோக்கி உயரமாகவும் கொத்தாகவும் மஞ்சள் மினுங்கத் தொடங்கியிருந்த க்ராப் ஆப்பிள்களும் (crab apple), தளர்ச்சியூட்டின: புதரின் அடியில் ஒட்டிக்கொண்டு, வாடிக்கிடந்த ப்ரிம்ரோஸ் மலர்கள் என அனைத்துமே அவளுக்கு விசித்திரமாகத் தெரிந்தன. அப்பொழுது அவள் கண்கள் ஒரு அசைவை கவனித்தது. சிற்றெலி ஒன்று அமைதியாக வெம்மையான செம்மண்ணில் இங்கும் அங்குமென நகர்ந்துகொண்டே, மோப்பம்பிடித்தபடி, தட்டையாக, நிழல்போன்ற கருமையில் அசைந்து கொண்டிருந்த அது, திடீரென வாழ்வில் பற்று ஏற்பட்டுவிட்டதுபோல சுறுசுறுப்பானது. அந்த சிறிய ஜந்துவைக் கொல்ல சொல்லி அனாவை வழக்கம்போல அழைக்கப் போனவளுக்கு, அன்றைக்கு சோகமாகவும் மந்தமாகவும் இருந்தது. அந்த சிறிய விலங்கு தத்தித்தத்தி செல்வதையும், முகர்வதையும், பொருட்களை தொட்டுப் பார்த்துக் கண்டுபிடிப்பதையும், கண்தெரியாததுபோல ஓடிக்கொண்டு, சூரிய ஒளியின் வெளிச்சமும் அதன் வெம்மையும் தன் வயிற்றுப் பகுதியையும் மூக்கையும் தடவிக்கொடுத்ததில், கிறங்கிப்போய் மெய்மறந்து நின்றது. அவள் அந்த சிறிய உயிரின்மேல் அனுதாபம் கொண்டாள். 

 “ஏ ஃப்ரான், அங்கே பார். அது ஒரு சிற்றெலி”

  அனா எழுந்து நின்று, அந்தக் கருமையான சுயநினைவற்றிருந்த விலங்கை கவனித்துக் கொண்டிருந்தாள். ஃப்ரான்சஸ் பதட்டத்தில் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

 “அது ஓடிப்போய்விடாதுதானே?” அந்த சிறுமி மென்மையாகக் கேட்டாள். அவள் ரகசியமாக அதனருகில் சென்றாள். அந்த சிற்றெலி தடுமாறியபடி நகர்ந்து சென்றது. நொடியில் அனா அதன்மீது தன் காலை அதிக அழுத்தம் தராமல் வைத்தாள். அந்த விலங்கு தன்னுடைய இளஞ்சிவப்புநிற கால்களை நீச்சலடிப்பதைப்போல அசைத்தபடி, தன்னுடைய கூரான மூக்கை முறுக்கியும், இழுத்தும் தவிப்புடன் பூட்ஸின் அடியில் போராடியபடி தவித்துக்கொண்டிருந்ததை ஃப்ரான்சஸால் பார்க்க முடிந்தது. 

 “அது அசைந்துகொண்டிருக்கிறது” என்று அந்த அழகி அருவருப்பான உணர்வினால் புருவங்களை சுருக்கிக்கொண்டு கூறினாள். அவள் தனக்குக் கீழே சிக்கியிருக்கும் அதைப் பார்க்கவேண்டி குனிந்தாள். இப்போது பூட்ஸின் அடிப்பகுதியின் விளிம்பைத் தாண்டி, அந்த விலங்கின் மெல்லிய வெல்வெட் போன்ற தோள்கள், ஏறி இறங்குவதையும், பார்வையற்ற அதன் முகம் பரிதாபமாகத் திரும்புவதையும், தட்டையான இளஞ்சிவப்பு கைகள் வெறித்தனமாகத் துடித்துக்கொண்டு அசைவதையும் பிரான்சஸால் பார்க்க முடிந்தது.

“அதைக் கொன்றுவிடு” அவள் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள். 

 “மாட்டேன். நான் கொல்ல மாட்டேன்” கூச்சத்துடன் அனா சிரித்தாள், ”நீ விரும்பினால் அதை செய்துகொள்”

 “எனக்கு அதில் விருப்பமில்லை” என்று ஃப்ரான்சஸ் அரவமற்ற தீவிரத்தன்மையுடன் கூறினாள்.

     விளையாட்டுத்தனமான பல முயற்சிகளுக்குப் பிறகு, அனா அந்த சிறிய விலங்கை அதன் பிடரியைப் பிடித்து தூக்குவதில் வெற்றி பெற்றாள். அது தன் தலையை உயர்த்தி, கூரான நீண்ட மூக்கை இப்படியும் அப்படியுமாக ஆட்டியபடி, இளஞ்சிவப்பு நிறப் பற்களைக் கொண்ட தன் வாயை வித்தியாசமான நீள்வட்டமாக திறந்தது. பார்வையற்ற அந்த உயிரின் வாய், அகலத் திறந்திருந்த வகையில் அது நெளிந்தது. அதன் கனத்த மற்றும் குழைந்த உடல் மெதுவான அசைவுடன் தொங்கிக்கொண்டிருந்தது, 

“இது மிகவும் சுறுசுறுப்பான உயிரி இல்லையா?” அதன் பல்பகுதியை தவிர்க்க விரும்பி அதைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 “இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என ஃப்ரான்சஸ் நறுக்கென கேட்டாள்.

 “இது கொல்லப்பட வேண்டும். இது ஏற்படுத்தும் சேதத்தைப் பார். இதை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அப்பாவையோ அல்லது வேறு யாரையாவதோ வைத்து கொல்ல வைப்பேன். நான் இதைப் போகவிடமாட்டேன்”

  அவள் அதைத் தன்னுடைய கைக்குட்டையில் மேலோட்டமாகக் கட்டிவிட்டு, தன்னுடைய சகோதரியின் அருகில் அமர்ந்துகொண்டாள். அங்கு ஒரு அமைதிக்கான இடைவேளை நிலவியதில் அந்தச் சிற்றெலியின் முயற்சிகளை தடுக்க அனா போராடிக்கொண்டிருந்தாள்.

 “இந்த முறை ஜிம்மியைப் பற்றி சொல்ல உனக்கு அதிகமாக எதுவும் இல்லை. நீ லிவர்பூலில் அவரை அடிக்கடி பார்ப்பாயா?” என்று அனா திடீரெனக் கேட்டாள்.

“ஒன்றோ இரண்டோ முறை” என்று ஃப்ரான்சஸ், அந்தக் கேள்வி அவளுக்கு எவ்வளவு தொந்தரவை ஏற்படுத்தியது என்பதை வெளிக்காட்டாமல் பதிலளித்தாள்.

 “நீ அவர்மீது இனிமேல் ஆசையுடன் இருக்கப்போவதில்லையா?”

 “அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டடைப் பார்த்தால், இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறேன்”

 “நிச்சயதார்த்தமா? ஜிம்மி பர்ராஸ்! சரி எல்லாவற்றையும் விடு. அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று ஒருபோதும் நான் நினைக்கவேயில்லை”

 “ஏன் நடக்கக்கூடாது, எல்லாரையும்போல் அவருக்கும் அதற்கு உரிமை இருக்கிறது”, என்று திடீரெனக் கோபத்துடன் கத்தினாள்.

 அனா சிற்றெலியுடன் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

 “அப்படித்தான் நினைக்கிறேன்”, என்று நீட்டி முழக்கினாள். ”ஆனாலும் ஜிம்மிக்கு அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை”

 “ஏன் கூடாது?”, என ஆவேசமாக கத்தினாள் ஃப்ரான்சஸ்.

“எனக்குத் தெரியவில்லை. – ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது இந்த சிற்றெலி, இதனால் அசையாமல் இருக்க முடிகிறதா – அவர் யாருடன் நிச்சயிக்கப்பட்டிருக்கிறார்?”

“எனக்கு எப்படி தெரியும்?”

“நீ கேட்டிருப்பாய் என்று நினைத்தேன். உனக்கு அவரை நீண்ட காலமாகத் தெரியுமே. அவர் இப்பொழுது வேதியலில் முனைவர் பட்டம் வாங்கி விட்டதால், நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம்”

   ஃப்ரான்சஸ் தன்னை மறந்து சிரித்துவிட்டாள்.

“அதற்கு என்ன இப்பொழுது?” என்று வினவினாள்.

“நிறையவே இருக்கிறது. அவர் தன்னை யாரென்று காட்டிக்கொள்ள விரும்பியிருக்கிறார். அதனால் நிச்சயம் செய்து கொண்டிருக்கிறார். ஹே, நிறுத்து. உள்ளே போ”

    இப்பொழுது அந்த சிற்றெலி தெளிவாக நெளிவதில் வெற்றி பெற்றிருந்தது. அது பரிதவித்தபடி தன்னை முறுக்கிக்கொண்டு, பொன்மஞ்சள் நிறமான தன்னுடைய கூர் தலையை ஆட்டியது, அதன் வாய் சிறிய தண்டைப்போல திறந்திருந்தது, சுருக்கங்கள் நிறைந்த அதன் பெரிய கரங்கள் விரிந்திருந்தன. 

 “நீ உள்ளே போ!” தன்னுடைய ஆட்காட்டி விரலை அதை நோக்கி நீட்டியபடி கைக்குட்டைக்குள் செலுத்த முயற்சித்தவளாக, அனா அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள். திடீரென வாய் பகுதியிலிருந்து பொறிபோல ஒன்று அவள் விரலைத் தீண்டியது.

 “ஓ” என்று அலறினாள். ”இது என்னைக் கடித்துவிட்டது”

  அவள் அதை தரையில் போட்டாள். அதிர்ச்சியில் அந்த ஜந்து வட்டமாக சுருண்டு கொண்டது. ஃப்ரான்சஸூக்கு கத்தவேண்டும்போல இருந்தது. அவள் அது ஒரு எலியைப்போல மின்னல் வேகத்தில் ஓடிவிட வேண்டுமென்று எதிர்பார்த்தாள், ஆனால் அது அங்கேயே தடுமாறிக் கொண்டிருந்தது. அவள் அதை அங்கிருந்து போகச் சொல்லி கத்தவேண்டுமென நினைத்தாள். அனா, சட்டென முடிவெடுத்தவளாக தன் அக்காவின் கைத்தடியை பற்றினாள். ஒரே அடியில் அந்த சிற்றெலி செத்துவிட்டது. ஃப்ரான்சஸ் அதிர்ச்சியில் திகைத்துப் போனாள். பரிதாபமான அது, ஒரு கணம் வெப்பத்தில் அவதியுற்று பிறகு கருப்பான அசைவற்ற நிலையில், எந்தவித போராட்டமோ, துடிப்போ இன்றி

ஒரு சிறிய பையைப்போலக் கிடந்தது. 

“அது செத்துப்போய்விட்டது” ஃப்ரான்சஸ் மூச்சுத்திணறியபடி கூறினாள். அனா வாயிலிருந்த தன் விரலை வெளியிலெடுத்து, சிறிய குத்துப்பட்ட அடையாளங்களைப் பார்த்தவாறு

“ஆமாம். அது செத்துப்போய்விட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. இவை நமக்குத் தீமை உண்டாக்குபவைகள், தொல்லைப் பிடித்தவைகள்” என்றாள்.

   அதோடு அவளுடைய கோபம் தணிந்துபோனது. இறந்துக் கிடந்த அதைக் கையில் எடுத்தாள்.

“இதனுடைய தோல் அழகாக இருக்கிறதில்லையா” என்று யோசித்தபடியே தன் ஆட்காட்டி விரலால் தடவிக்கொடுத்துவிட்டு, பிறகு கன்னத்தில் தடவிப் பார்த்தாள்.

“கவனம்” ஃப்ரான்சஸ் நறுக்கென்று சொன்னாள். ”உன் பாவாடையில் ரத்தம் பட்டுவிடும்”

     இரத்தின சிவப்பில் துளிர்த்திருந்த ஒரு சிறிய துளி ரத்தம், விழத்தயாராக இருந்தது. அனா அதை அருகிலிருந்த பூண்டுச்செடியின்மீது தட்டிவிட்டாள். ஃப்ரான்சஸ் சட்டென அமைதியானாள். அந்தக் கணத்தில் அவள் முதிர்ச்சியடைந்தவளானாள்.

 “அவை கொல்லப்பட வேண்டியவைகள்தான் என்று நானும் நினைக்கிறேன்” அவளது அந்த வெறுமைக்குப்பின் ஒருவித சோர்வு நிலை ஏற்பட்டது. மின்னிக்கொண்டிருந்த க்ராப் ஆப்பிள்கள், ஜொலித்துக்கொண்டிருந்த ஓடை எல்லாமே அவளுக்கு கவனிக்கத் தேவையற்ற அற்பமானதாகத் தோன்றியது. அவளுள் ஏதோ ஒன்று உயிர்ப்பை விட்டிருந்தது என்பதாலேயே விஷயங்கள் அதன் கசப்புணர்வை ஏற்படுத்தவில்லை. அவளுடைய அமைதியான சோகத்தின்மேல் அலட்சியம் படர்ந்திருந்ததைப்போல அவள் சஞ்சலமற்று இருந்தாள். எழுந்து நீரோடையை நோக்கி நடந்தாள்.

 “இரு நானும் வருகிறேன்” என்று கத்திக்கொண்டு தடுமாறியபடி அவளைத் தொடர்ந்தாள் அனா. 

   ஃப்ரான்சஸ் பாலத்தின்மேல் நின்றபடி, கால்நடைகளின் பாதச்சுவடுகள் செம்மண்ணில் ஏற்படுத்தியிருந்த குழிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு தண்ணீர் ஒரு சொட்டுகூட இல்லை, ஆனாலும் எல்லாவற்றிலும் பசுமையின் சாறும் மணமும் வீசிக்கொண்டிருந்தது. தன்னை பெரிதும் விரும்பும் அனா மீது தான் ஏன் சற்றும் அக்கறை செலுத்துவதில்லை? அவள் தன்னையே கேட்டுக்கொண்டாள். அவள் ஏன் யார்மீதுமே அக்கறை செலுத்துவதில்லை? அவளுக்கே அது தெரியவில்லை,என்றாலும் தான் ஒதுங்கி அலட்சியமாய் இருப்பதில் அவள் உறுதியான தலைக்கனம் கொண்டிருந்தாள். 

     அவர்கள் பார்லியின் தண்டுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டும், சோளத்தின் நீண்ட பொன்னிற கதிர்கள் தரையில் வழிந்தும் தொங்கிக்கொண்டிருந்த ஒரு வயலுக்குள் நுழைந்தனர். கோடையின் தீவிரத்தினால் அறுவடைக்குப்பின் எஞ்சியிருந்த தண்டுப் பகுதிகள் சருகாகியிருந்த வயல்வெளி முழுவதும் வெள்ளை ஒளியில் கண்களைக் கூசச் செய்வதாக இருந்தது. அடுத்து இருந்த வயல் மறுபோகத்திற்கான விதைகளுடன் மென்மையாகவும் இனிமையானதாகவும் இருந்தது. மெலிதாக ஒழுங்கின்றி இருந்த சீமைசால் செடி(தீவனப்புல்) அடர் பச்சை நிறத்தில் இளஞ்சிவப்பு குமிழ்களைக் கொண்டு அழகாக இருந்தது. அதன் மணம் மயக்கமூட்டுவதாகவும் அருவருப்பானதாகவும் இருந்தது. ஃப்ரான்சஸ் முன் நடக்க, பெண்களிருவரும் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்தனர். 

    வாசலுக்குப் பக்கத்தில், ஒருவன் கால்நடைகளுக்கு மதியநேர தீவனம் இடுவதற்காக கையில் புல்லரிவாளுடன் புல் வெட்டிக்கொண்டிருந்தான். அவன் அந்தப் பெண்களைப் பார்த்தவுடன் வேலை செய்வதை நிறுத்திவிட்டு பராக்குப் பார்க்கத் தொடங்கினான். ஃப்ரான்சஸ் வெண்ணிற மஸ்லின் ஆடை அணிந்து, கண்ணியத்துடன் தன்னை மறந்து நடந்து கொண்டிருந்தாள். கலக்கமின்றி அலட்சியமாக அவள் நடந்து வந்ததில் அவனுக்குப் பதட்டம் ஏற்பட்டது. தொலைவில் இருந்த ஜிம்மியை ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்தாள், பதிலுக்கு அவன் அவளை பாதியில் தவிக்கவிட்டு சென்றுவிட்டான். ஆனால், இவன் அவளுள் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.

    டாம் நடுத்தர உடல்வாகுடன் திடமானவனாக இருந்தான். அவனுடைய வழுவழுப்பான வெண்ணிற சருமம் சூரிய வெப்பத்தினால் பழுப்பாகிப் போகாமல் சிவப்பாக மாறியிருந்தது. அந்த செம்மை அவனுடைய நகைச்சுவை மற்றும் எளிமைத்தனத்தை மேம்படுத்திக்காட்டியது. ஃப்ரான்சஸைவிட ஒருவயது மூத்தவன் என்பதால், அவள் மட்டும் தன் பார்வையை சற்று அவன் பக்கம் செலுத்தியிருந்தால் எப்பொழுதோ அவளை தன் வசப்படுத்தியிருப்பான். அவனது வாழ்க்கை அதுவரை எந்தவிதமான சம்பவங்களும் இன்றியே இருந்தது. பல பெண்களுடன் வாயாடியிருந்தாலும் எந்தவித பற்றுதலுமின்றியே இருந்தான். அதனால் பெரும்பாலும் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமலிருந்தது. அவனுக்கு ஒரு பெண் தேவை என்பது மட்டுமே தெரிந்திருந்தது. பெண்கள் நெருக்கமாக வருவதால், அனிச்சையாக தன் கால்சட்டையை சற்று மேலிழுத்துக் கொண்டான். ஃப்ரான்சஸ் மிக அரிதானவளாக, நேர்த்திமிக்கவளாகத் தோன்றினாள். அதை உணர்ந்தவுடன் அவனுடைய நரம்புகளில் வினோதமான இனிமையானதொரு பரவசம் படர்ந்தது. அவள் அவனுக்கு சற்றே இறுக்கமான உணர்வை ஏற்படுத்தியிருந்தாள். ஏதோ ஒரு வகையில் இன்று காலை உண்டான தாக்கம் எப்பொழுதையும்விட அதிகமானதாக இருந்தது. அவள் வெள்ளை நிறத்திலான உடை உடுத்தியிருந்தாள். சொல்லப்போனால் அவன் மனதில் அதை உணரவேயில்லை. அவனுடைய உணர்ச்சிகள் விழிப்புடனோ நோக்கம் கொண்டவைகளாகவோ இதுவரையிலும் இருந்ததில்லை. 

      ஃப்ரான்சஸுக்கு தன்னுடைய தகுதி என்னவென்று தெரியும். அவள் கண் அசைத்தால் போதும் டாம் அவளைக் காதலிக்கத் தொடங்கி விடுவான். இப்பொழுது அவளால் ஜிம்மியை அடையமுடியாது என்பதால் அவள் உருக்கமான அக்கறை எதையும் காட்டவில்லை. என்றாலுமே அவளுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அவளால் சிறந்த ஒன்றை அடையமுடியவில்லை என்றால் – ஜிம்மி, அவளுக்குத் தெரிந்தவரை அவன் ஒரு பகட்டு ஆசாமி – இரண்டாவது சிறந்ததாக அவளுக்கு டாம் இருக்கிறான். அவள் மிகவும் அலட்சியமாக முன்னேறினாள்.

“அப்படியானால் நீ திரும்பி வந்துவிட்டாய்” என்றான் டாம். அவன் குரலில் தெரிந்த ஐயத்தை கவனித்துவிட்டாள். 

 “இல்லை” என்று சொல்லி சிரித்தாள். ”நான் இன்னமும் லிவர்பூலில்தான் இருக்கிறேன்” அந்தக் குரலில் இழையோடிய அன்யோன்யம் அவனைத் தகிக்க வைத்தது. 

  “அப்படியென்றால் இது நீ இல்லையா?” என்று கேட்டான்.

 அவளது உள்ளம் ஆமோதிப்பினால் துள்ளியது. அவன் கண்களை உற்று நோக்கினாள், அடுத்த கணமே அவனுடன் ஒன்றிப்போயிருந்தாள்.

 “ஏன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு சிரித்தாள்.

   அவன் கவனம் சிதறியவனாய் தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றினான். அவள் அவனை விரும்பினாள். அவனது விசித்திரமான கவர்ச்சியை, அவனது அறியாமையை மற்றும் நிதானமான அணுகுமுறையை விரும்பினாள். 

 “இங்கே பாருங்கள் டாம் ஸ்மெட்லீ” அனா குறுக்கிட்டாள். 

 ”முள்ளெலி! இது செத்துக் கிடந்ததா?” கேட்டான்.

 ”இல்லை. இது என்னைக் கடித்தது” என்றாள் அனா

 ”ஓ, ஐயோ அதுதான் உன்னைக் கோபமாக்கி விட்டதா?”

 ”இல்லை, அப்படி இல்லை” அனா கடுமையாக சாடினாள். ”அப்படி கொச்சையாகப் பேசாதே”

 ”அதனால் என்ன?”

“நீ இந்த வழக்கில் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை”

“உன்னால் முடியாதா?”

    அவன் ஃப்ரான்சஸை நோட்டமிட்டான்.

“அது நன்றாக இல்லை” என்று ஃப்ரான்சஸ் சொன்னாள். உண்மையில் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. பொதுவாக அவளுக்கு இப்படியான கொச்சையான பேச்சு எரிச்சலூட்டுவதாக இருக்கும். ஜிம்மி ஒரு நாகரிகமான மனிதன். ஆனால் டாம் பேசியவிதம் அவளுக்கு ஒரு பொருட்டாகவேயில்லை.

“நீ நன்றாக பேசவேண்டுமென்று விரும்புகிறேன்” கூடுதலாகக் கூறினாள்.

“ஓ, அப்படியா” என்று தன் தொப்பியை சரிசெய்தவாறு கலக்கத்துடன் பதிலுரைத்தான்.

“பொதுவாக நீ அப்படித்தான் பேசுவாய் தெரியுமா” அவள் புன்னகைத்தாள்.

 “ஆனாலும் நான் இன்னும் நன்றாக பேச முயற்சிக்க வேண்டும்” பதட்டமாக இருந்தாலும் கண்ணியத்துடன் உரைத்தான்.

“என்ன?” பளிச்செனக் கேட்டாள்.

 “உன்னுடன் நன்றாகப் பேச” என்றான். கோபத்தில் முகம் சிவந்து, தன் தலையைக் குனிந்துகொண்ட ஃப்ரான்சஸ், அந்த குறிப்பை உணர்ந்து பின்னர் மெல்ல சிரித்தாள். 

 “ஏ இப்பொழுது என்ன பேசுகிறீர்கள் என்பதில் கவனம் இருக்கட்டும்” அந்த இளைஞனின் முதுகில் எச்சரிக்கும் விதமாக ஒரு தட்டு தட்டினாள் அனா.

“நீ இந்த சிற்றெலிக்கு இதுபோன்று நிறைய அடிகள் கொடுத்திருக்கத் தேவையில்லை” தன் கைகளைத் தேய்த்தபடி இயல்புநிலைக்குத் திரும்பினான்.

“உண்மையில் அப்படியில்லை. அது ஒரே அடியில் இறந்துவிட்டது” அவளுக்கு இசைவில்லாத வகையில் துடுக்குத்தனமாக சொன்னாள்.

“நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாய்தானே?” அவள் பக்கமாகத் திரும்பிக்கொண்டே கேட்டான்.

“நான் கோபமாக இருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை” ஃப்ரான்சஸ் தீர்மானமாகக் கூறினாள்.

“இல்லைதானே?” அவளைக் கூர்ந்து கவனித்தவனாகக் கேட்டான்.

 “இருந்திருக்கலாம்” என்றவள், ”தேவை ஏற்பட்டிருக்கும் பட்சத்தில்” என்றும் சேர்த்துக் கொண்டாள்.

   அவளது மாற்றத்தை புரிந்துகொள்ள அவனுக்கு நேரமெடுத்தது.

 “அப்படியானால் அது தேவை என்று நீ கருதவில்லையா?” சந்தேகத்துடன் கேட்டான்.

“ம்…ம்.. அப்படியா?” எந்த உணர்சியும் இன்றி அவனை நிலைத்த பார்வையால் பார்த்தாள்.

“அது தேவை என்றுதான் கருதுகிறேன்” உறுதியாக நின்றபடி பார்வையை வேறு பக்கமாக வைத்துக்கொண்டு பதிலளித்தான்.

   அவள் உடனேயே சிரித்தாள்.

“ஆனால் எனக்கு அது தேவையில்லாதது” சற்று இகழ்ச்சியுடன் கூறினாள்.

 “ஆமாம். அது முற்றிலும் உண்மைதான்” என்றானவன்.

அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

“அது எனக்குத் தெரியும்” என்றாள், அங்கு ஒரு அசௌகரியமான அமைதி நிலவியது.

“அப்படியானால் நான் சிற்றெலிகளை கொல்ல வேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய்?” உத்தேசமாக சிறிது நேரத்தில் கேட்டாள்.

“அவை எமக்கு நிறைய சேதங்களை ஏற்படுத்துகிறது” தன்னுடைய நிலத்தில் உறுதியாக நின்றபடி கோபத்துடன் சொன்னான்.

 “சரி அடுத்தமுறை அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தால் பார்த்துக்கொள்கிறேன்” என்று சளைக்காமல் எதிர் வார்த்தைக் கூறினாள். அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்டன, அவள் அவன் முன்னால் தளர்ந்து நின்றாள், அவளுடைய செருக்கு குலைந்தது. அவன் விதி வசப்பட்டவனாக சஞ்சலத்துடனும், வெற்றிக் களிப்புடனும் திகைத்து நின்றான். அவள் மெல்லிய புன்னகை சிந்தியபடி வெளியேறினாள். 

“சரிதான்” சகோதரிகள் இருவரும் கோதுமை வயலை கடக்கும்போது ”சத்தியமாக நீங்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறீர்கள் என்று புரியவில்லை” என்றாள் அனா.

 “உனக்குப் புரியவில்லைதானே?” ஃப்ரான்சஸ் அர்த்தமுள்ள ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

 “இல்லை. எனக்குப் புரியவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை டாம் ஜிம்மியைவிட சிறந்தவன். அவ்வளவுதான். அதோடு நல்லவனும்கூட”  

“அப்படித்தான் நினைக்கிறேன்” உணர்ச்சியற்றவளாக சொன்னாள்.

  அடுத்த நாள், ரகசியமாக அவள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, அவள் வெய்யிலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிற்றெலியைக் கண்டாள். அவள் அதைக் கொன்றும் விட்டாள்.

   அன்று மாலை டாம் தன்னுடைய இரவு உணவிற்குப்பின் புகைப்பிடிப்பதற்காக வாசல் பக்கமாக வந்தபோது, அவனை அந்த செத்துக்கிடந்த ஜந்துவிடம் கூட்டிச் சென்றாள்.

“இதோ பார்” என்றாள்.

“நீ இதைப் பிடித்தாயா?” அந்த வெல்வெட் போன்றிருந்த உடலை விரல்களால் தூக்கி அதை நுணுக்கமாக சோதித்தபடி கேட்டான்.

“என்னால் முடியாது என்று நினைத்துவிட்டாயா?” அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

 “இல்லை. எனக்குத் தெரியவில்லை”

    அவள், அவனது முகத்தைப் பார்த்து ஒரு விசித்திரமான குறுநகையை உதிர்த்தாள்; பதற்றமும், கண்ணீரும், கட்டுக்கடங்காத ஆசையும் கலந்து, அவளது மூச்சை முட்டுவதாக இருந்தது அந்தச் சிரிப்பு. அவன் அச்சமடைந்தவனாகவும், நிலைதடுமாறியவனாகவும் காணப்பட்டான். அவள் அவனது கையின் மீது தன் கையை வைத்தாள்.

“நீ என்னுடன் வெளியில் வருவாயா?” அவன் கவலை தோய்ந்த ஏக்கமான குரலில் கேட்டான்.

   அவள் குலுங்கி சிரித்தபடி தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள். அவனுக்குள் ரத்தம் வேகமெடுத்தது, அவன் அதைக் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றான். ஆனால், அது அவனை சாய்த்துத் தள்ளியது. அவளது அழகிய, மென்மையான பின்னங்கழுத்தைக் கண்டதும், அவள் மீது அவனுக்கு அதிதீவிரமான காதலும் கனிவும் பொங்கியது.

 “நாம் உன்னுடைய தாயாரிடம் தெரிவிக்க வேண்டும்” என்றான். அவள் மீதான தன் இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்து நின்றான்.

“ஆம்” என அவள் ஜீவனற்ற குரலில் கூறினாள். ஆனாலும் அந்த ஜீவனற்ற குரலில் ஒரு களிப்பின் சிலிர்ப்பு இருக்கவே செய்தது.


D H Lawrence டி. எச். லாரன்ஸ் (1885–1930) ஆங்கிலத்தின் முக்கியமான நாவலாசிரியர், கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மனித மனத்தின் மறைமுக உணர்வுகள், உள்ளுணர்வு, ஆசை, அச்சம் ஆகியவற்றை வெளிப்படையாக ஆராய்ந்த ஆரம்பகால ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மனித மனத்தின் ஆழமான உணர்வுகளையும், காதல், இயற்கை, மனித உறவுகளின் சிக்கல்களையும் அவர் தனது படைப்புகளில் நுட்பமாகச் சித்தரித்தார். அவரது மொழிநடை கவித்துவம், உளவியல் நுண்ணறிவு மற்றும் இயற்கை வர்ணனைகளால் தனித்துவம் பெற்றது. இன்று உலக இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளராக மதிக்கப்படுபவரானாலும், அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துகளும் படைப்புகளும் பலரால் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன.

Second best (இரண்டாவது தேர்வு) 1911 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

பூனைகளின் கணவன்

0

நிஜந்தன்

னுபவுக்குப் பூனைகள் பிடித்தன. அதுவும் அவனுடைய மனைவி பரினிதா தாய் வீட்டிற்குச் சென்ற பின்னால் அவனுக்குப் பூனைகள் மிகவும் பிடித்தன. திருமணம் முடிந்து இரவுப் பயணம் செய்து அவனுடைய வீட்டில் அவள் காலடி வைக்கும்போது அந்தக் கரும்பூனை அவளுடைய கால்களை வருடியது. பயந்து அவள் கால்களை விலக்கியபோது அந்தப் பூனை தூரப் போய் விழுந்தது. அனுபவ் பற்களைக் கடித்துக்கொண்டான். அவனுடைய தாய், தந்தை, அக்கா, தம்பிக்கு அவனுடைய பூனைப் பற்று நன்றாகவே தெரிந்தது. வீட்டுக்குப் பின்னால் விரிந்த இருள் காடுகளில் கண்களில் ஒளி வீசும் பூனைகளைத் தேடித் தேடி அவன் காணாமல் போவது அவர்களுக்குப் பெரிய அதிசயமாக இருக்கவில்லை. 

இரவுகள் மிகவும் கொடுமையாக இருந்தன. எப்படியும் ஒரு நாள் சாதித்துவிடுவான் என்றுதான் அவன் நினைத்தான். அது முடியாமலே போனது. பரினிதா ஏமாற்றத்தைக் காட்டாமல் அமைதியாக உறங்கிக் கழித்தாள். ஊரிலிருந்து அவளுடைய தாய் போன் செய்து கேட்டுக்கொண்டே இருந்தாள். ’எல்லாம் நலமா’ என்று அவள் விசாரித்தாள். ’ம்’ என்று மட்டும் பரினிதா சொல்லி வைத்தாள். அவள் ஒரு நாள் உண்மையைச் சொல்லிவிடுவாள் என்று அவன் நினைத்தான். சிறிய ஊர் முன்னால் அவமானம் தாங்க முடியாது. தற்கொலை செய்துகொள்ளக்கூட அவன் நினைத்தான். சே என்று நினைத்துக்கொண்டான். மனைவியும் முழு ஆதரவாக இல்லை. முடியும் என்று அவன் நினைத்தான். அவளிடம் சொன்னான். அவள் எப்போது முடியுமோ என்ற சலிப்பில் முகம் திருப்பிக்கொண்டாள். அவள் அதிருப்தி காட்டினால் அவளுக்குத் தேடல் அதிகம் என்ற அவமானம் வந்து சேரும் என்று அவள் எச்சரிக்கையாக இருந்தாள். அவனுடைய பெற்றோருக்கோ, தம்பிக்கோ எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள். ஒரு பெரிய நகரத்தில் வளர்ந்தவள், ஒரு சிறிய கிராமத்தில் வந்து சேர்ந்து, சிறிய ஊர்க்காரர்களின் மதிப்புக்கு ஏற்ப வாழ்வது பெரும் சுமையாக இருந்தது. அதுவே ஒரு சுய வன்முறையாக இருந்தது. அவளுடைய ஆழ்ந்த மனதின் அவலத்தை அவனுடைய தம்பி புரிந்துகொண்டது போல் இருந்தான். அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அவன் எப்போது வேண்டுமானாலும் எல்லை மீறிவிடுவான் போன்ற உடல் பாவனையில் இருந்தான். அரிசி மண்டிக்கு காலை எட்டு மணிக்குப் போகிறவன் இரவு ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பினான். ஆனால் சில நாட்களில் மதியம் சாப்பாட்டிற்கு வந்து அவள் சாப்பிட்டாளா என்று அக்கறையுடன் கேட்டான். அனுபவ் ஒரு மளிகைக்கடையைப் பார்த்துக்கொண்டான். அவனுக்கும் நாள் முழுக்க கடை வேலையாக இருந்தது. மிச்ச நேரங்களில் வயல்வெளியில் விவசாய மேற்பார்வை செய்தான். 

பரினிதாவுக்குத் தெரியாமல் அனுபவ் மருத்துவர்களை நாடினான். முதலில் நகரத்தில் இருந்த ஒரு உளவியல் மருத்துவரை நாடினான். அவர் அவனை முதலில் அமைதியாக இருக்கச் சொன்னார். சரி என்று சொன்னான். உறவு தொடர்பாக பதற்றம் கூடாது என்று அவர் கூறினார். சரி என்றான். ஒரு முறை பரினிதாவை அவன் மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அவளிடம் அவர் தீர விசாரித்தார். அவள் அவனுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்றார். அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். வீடு வரும் வரை அவள் பைக்கின் பின் இருக்கையில் பேசாமலேயே அமர்ந்திருந்தாள். வீட்டுக்கு வந்து சாப்பிடாமலேயே அவள் உறங்கப் போனாள். அவள் கோபமாக இருக்கிறாளா என்று அனுபவின் அம்மா கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் இல்லை என்றான். அவனுடைய அப்பாதான் கொஞ்சம் கூர்ந்து பார்த்தார். விஷயம் தெரியும் போல இருந்தது. அவனுடைய தம்பி கொஞ்சம் உள்ளூரச் சிரித்தது போல இருந்தது. அப்போது அவனுக்குப் பயமாக இருந்தது. 

அடிக்கடி அனுபவும் பரினிதாவும் மருத்துவர்களிடம் சென்று வருவது வீட்டிற்குத் தெரிந்துவிட்டது. அவனால் முழுமையான செயல்பாட்டுடன் இருக்க முடியவில்லை என்று அறிந்துவிட்டார்கள். பரினிதாவும் அவளுடைய பெற்றோருக்குச் சொல்லிவிட்டாள். அவர்களும் ஒரு முறை வந்து பொதுவாகவே பேசிவிட்டார்கள். அவர்கள் ஆண், பெண் என்றெல்லாம் வெளிப்படையாகப் பேசியது அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவனுடைய பெற்றோர் சமாதானம் பேசி அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு அவன் மூலம் வாரிசு வந்தாக வேண்டும் என்று பெற்றோர் உறுதி பேசிக்கொண்டிருந்தார்கள். ஊரிலிருந்து வந்த அவனுடைய அக்காதான் பரினிதாவைக் குத்திக்கொண்டே இருந்தாள். அவள் ஏதோ சுகத்திற்கு அலைந்துகொண்டிருப்பவள் போல அவள் காட்டிக்கொண்டே இருந்தாள். அதனால் பரினிதா ஒரு முறை செத்துவிடலாம் என்று தோன்றுவதாகச் சொன்னாள். ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாள். போன ஒரே வாரத்தில் அவளை அவளுடைய பெற்றோர் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். எப்படியாவது மகளைத் தாயாக்கி அனுப்ப வேண்டும் என்று கட்டளை இட்டார்கள். ஊரில் தலை காட்ட முடியாது என்று அவர்கள் கவலையுடன் கூறினார்கள். இவனுடைய பெற்றோருக்கு குடும்ப மானம் என்பது இல்லையா என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்படி கூறினார்கள். அனுபவ் மிகவும் வருந்திப் போனான். 

மீண்டும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுபவை பெற்றோர் கூட்டிப் போனார்கள். அவனால் சாத்தியம் ஆவது சிரமம் என்று மருத்துவர்கள் கை விரித்தார்கள். இனி ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் என்று அனுபவின் பெற்றோர் முடிவு செய்தார்கள். குடும்ப மானம் முக்கியம் என்று அவனிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஊர் உலகத்தில் நடக்காதது எதுவும் இல்லை என்று அவனைச் சமாதானம் செய்தார்கள். அவனும் சரி என்று சொல்லாவிட்டாலும், வேண்டாம் என்று சொல்லிவிடவில்லை. மதியச் சாப்பாட்டிற்கு வரும் அவனுடைய தம்பி கடைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துகொண்டான். 

பரினிதா கர்ப்பமடைந்தபோது அனுபவ் மிகவும் அக்கறையுடன்தான் பார்த்துக்கொண்டான். அவளுக்கும் அது ஆச்சர்யமாக இருந்தது. வீட்டுக்குள் நடக்கும் விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதே மேல் என்று இருந்தது. இருந்தாலும் அவன் இத்தனைப் பற்றுடன் இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. குழந்தைப் பேறுக்காக அவள் ஊருக்குப் போனபோது அவன் மிகுந்த துயருடன் அவளை அனுப்பி வைத்தான். அவனுடைய பற்றைப் பார்த்து அவளுடைய பெற்றோருக்கே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. 

பரினிதாவுக்கு குழந்தை பிறக்கும் வரை அவன் ஊர் சென்று பார்க்கவில்லை. குழந்தை பிறக்கும் நாளன்றுதான் அவன் ஊருக்குப் போனான். அந்தப் பெரிய நகரம் அவனுக்கு மிகுந்த அச்சம் ஊட்டியது. பெரும் ஆபத்து காத்திருப்பது போல இருந்தது. குழந்தையைப் பார்க்க அவனுடைய பெற்றோரும், அக்கா, தம்பியும் வந்தார்கள். அவன் எதுவும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. மெதுவாக நடந்து சென்று ஒரு பெரிய பாலத்தின் உச்சியில் நின்றுகொண்டான். விழுந்துவிடலாம் என்று இருந்தது. அது முடியாது. வேண்டாம்.

எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு அனுபவ் ஊர் வந்துவிட்டான். நகரத்திலிருந்து வரும்போதுதான் கிராமத்தின் ஆழம் புரிந்தது. அவன் வந்த இரண்டு நாட்களும் வீட்டில் தனியாகத்தான் இருந்தான். அப்போது அடுத்த வீட்டுப் பூனை ஜன்னலில் எட்டிப் பார்த்தது. வீட்டில் இருந்த பூனை அந்தப் பூனையுடன் சென்று குலாவியது. இரவுகளில் இரண்டு பூனைகளும் சப்தம் எழுப்பி தெருவையே அதிர வைத்தன. 

இரண்டு நாட்களில் அம்மாவும், அப்பாவும் கிளம்பி வந்தார்கள். தம்பி மட்டும் ஊரிலேயே தங்கிக்கொண்டான். அனுபவுக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும்போதுகூட அவன் சீக்கிரம் அவுட் ஆகிவிடுவான். அவனுடைய தம்பிதான் நின்று ஆடுவான். அனுபவை எப்போதும் டக் அவுட் என்றுதான் நண்பர்கள் அழைப்பார்கள். அதுவும் அவனுக்கு கிரிக்கெட் பேட்டே பிடிக்கத் தெரியவில்லை என்ற அவர்கள் கேலி பேசி அழ வைத்துவிடுவார்கள். கிரிக்கெட் பேட்டை அவன் இரண்டு கால்களுக்கு நடுவே பிடித்துக்கொண்டு ஆடுவதுதான் எப்போதும் உடன் ஆடுபவர்களுக்கு சிரிப்பைத் தந்தது. அவன் அதற்குப் பிறகு ஆடுவதை நிறுத்திக்கொண்டான். கொஞ்சம் கால் முன் வைத்து இலேசாக இடுப்பை ஆட்டிக்கொண்டு அவன் நடப்பதைக் கண்டு நண்பர்கள் எள்ளி நகையாடுவது உண்டு. அதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி இருக்கவில்லை. இறுதியில் திருமணம் முடித்து இப்படி ஒரு அவலம் வரும் என்று அவன் நினைக்கவில்லை.

பிரசவத்திற்குப் போன மனைவி திரும்ப வருவாளா என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு முறை வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று அவள் அவனுக்கு போன் செய்து கூறிக்கொண்டிருந்தாள். அவள் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு வரலாம் என்று அவன் கூறிவிட்டான்.

வீட்டில் இருந்த பூனை இரண்டு மாதங்களில் ஐந்து குட்டிகளை ஈன்றது. அந்த ஐந்து குட்டிகளும் அவன் மடியில் விழுந்து புரண்டன. அவற்றின் மெல்லிய ஒலி அவனுக்கு உற்சாகம் ஊட்டியது. இரண்டு மாதங்களில் அந்தப் பூனைக் குட்டிகள் குதித்து ஓடின. அவற்றில் ஒரு குட்டி பெரிய பூனைக்குட்டியாக மாறியது. களத்து மேடுகளில் அது ஓடும்போது அதைத் துரத்திக்கொண்டு அவன் ஓடினான். அவன் பார்வையில் படாமல் அந்தப் பூனைக்குட்டி துள்ளி ஓடியது. இன்னும் மற்ற பூனைக்குட்டிகளும் அவனுடன் விளையாடிக் களித்தன. அவற்றில் ஒரு பூனைக்குட்டி ஆண் பூனைக்குட்டி என்று அவனுக்குப் புரிந்தது. மற்ற பெண் பூனைக்குட்டிகள் காடுகளில் அலைந்து வந்தன. அவற்றில் ஒரு பூனைக்குட்டி கர்ப்பம் தரித்தது. அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. இரண்டு மாதங்களில் அது மூன்று பூனைக்குட்டிகளை ஈன்றது. அவற்றில் ஒன்று இறந்து போனது. மற்ற ஒன்றை இரவு நேரம் உலா வந்த நாய் ஒன்று குதறிவிட்டுப் போனது. அந்தப் பூனைக்குட்டியின் மரணம் அவனை அசைத்துப் போட்டது. இரண்டு நாட்கள் அவன் அழுதபடியே இருந்தான். அவனை அவனுடைய அம்மாதான் தேற்றினாள். 

‘விடுடா. ஏன் இப்படி அழுவறே’ என்று அவள் தேற்றியபடி இருந்தாள். கொஞ்சம் அவன் அடங்காதபோது, ’ஏதோ சொந்த பந்தம் செத்த மாதிரி அழுவறே’ என்று தம்பி குத்திக் காட்டினான். 

அந்தப் பூனைக்குட்டி வளர்ந்து குட்டி ஈன்றபோது தாய்ப் பூனையை அவன் கொஞ்சி மகிழ்ந்தான். அவனைப் பார்த்து தம்பி காறித் துப்பினான். ‘டேய் நீ ஏதோ அந்தப் பூனைக்குட்டிக்கு புருஷன் மாதிரி நடந்துக்கற?’ என்று அவன் கூறினான்.

அவனுக்கு அப்போதுதான் உறைத்தது. தம்பி மீது அனுபவுக்குக் கோபம்தான் வந்தது. 

மேலும் மேலும் பூனைகளை வளர்ப்பது அவனுக்கு உற்சாகம் அளித்தது. அந்தப் பூனைகள் பக்கத்து வீடுகளில் நுழைந்து அட்டகாசம் செய்வதும் அவனுக்குப் பிடித்தது. கழனிக்குப் போகும்போது இரண்டு பூனைக்குட்டிகளை ஒரு பையில் போட்டுக்கொண்டு அவன் உற்சாகமாகச் சென்றான். அவன் கண்காணிக்க கூலிக்காரப் பெண்கள் வயலில் இறங்கி வேலை செய்வதை அவன் மகிழ்வுடன் கவனித்தான். அவன் கொண்டு சென்ற பூனைகள் மரங்களில் தாவி கிளைகளில் உறங்கி தரையில் ஊர்ந்து படுத்துக்கொள்வதை அவன் மிகவும் ஆசையுடன் ரசித்தான். 

மாலை வேலை முடிந்து கூலி கொடுக்கும் சமயங்களில் அந்தப் பெண்கள் அவனைக் கேலியாகப் பார்த்தனர். 

‘என்னங்க முதலாளி, பூனைக்குட்டிகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?’ என்று ஒரு பெண் கேட்டபோது அவன் சற்று புன்முறுவலுடன் பதில் அளித்தான். 

‘பையன் கிடைக்கலை. கிடைச்சதும் கட்டி வைக்க வேண்டியதுதான்’ என்று அவன் பதில் சொன்னபோது அந்தப் பெண்கள் கை கொட்டி வாய் விரித்துச் சிரித்துச் சென்றனர். 

அவனும் சிரித்துக்கொண்டான். 

‘நீங்கதான் இருக்கீங்களே முதலாளி’ என்று ஒரு பெண் பேசிக்கொண்டு போனது அவன் காதில் விழுந்தது. 

வீட்டுக்கு வந்து மற்ற பூனைக் குட்டிகளைப் பார்த்ததும் அவனுடைய கவலைகள் எல்லாம் மறந்து போயின. காற்றில் பறந்து போயின. பூனைக் குட்டிகள் இரவுகளில் சப்தம் எழுப்பி உறவு கொள்வதைப் பார்ப்பதும், அவை கருத்தரித்து கனத்த நடை கொண்டு இயங்குவதைக் கவனிப்பதும் அவனுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தன. இந்த ஆண் பூனைதான் எத்தனை வலு கொண்டதாக இருக்கிறது? எத்தனையோ பெண் பூனைகளை அது தாயாக்கியிருக்கிறது. வாழ்வில் இதெல்லாம் ஒரு மிகுந்த ஆச்சர்யம் கொண்ட அம்சங்கள்தான்.

அனுபவ் வளர்த்த பூனைகள் அந்தப் பகுதி முழுக்க நிறைந்தன. பல தெருக்கள் தாண்டி இருந்த பெட்டிக் கடைகளுக்கு அருகில் அவை நின்று வருபவர் போகிறவர்களை உற்று நோக்கின. ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு இறைச்சிக் கடைக்கும் அவை சென்று அங்கேயே வாசம் புரிந்தன. அவ்வப்போது தரையில் வந்து விழும் கறிக் கழிவுகளுக்காக அவை ஏங்கித் தவித்தன. அங்கேயே குடி கொண்டு குடும்பம் வளர்த்தன. சில பூனைகளை எப்போவாவது சென்ற லாரிகளின் சக்கரங்களில் அடிபட்டுச் செத்தன.

அப்படி ஒரு பூனை செத்தபோது அனுபவ் நேராக அந்த இடத்திற்குச் சென்று லாரி ஓட்டுநரிடம் கடுமையாகச் சண்டை போட்டுவிட்டான். அவனை அடிக்காத குறையாக அந்த லாரி ஓட்டுநர் அனுப்பி வைத்தார். அந்தப் பூனை உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல பூனைகளை ஈன்றெடுக்கும். அந்தப் பூனைகள் இன்னும் பல பூனைகளைப் பெற்றெடுக்கும். அவை இல்லாமல் போன உலகம் வெறுமையானது. இந்த உலகம் எப்போதும் ஏமாற்றமே அளிக்கிறது. இந்த உலகில் இல்லாமல் போய்விட்டால் என்ன என்றுகூட அவன் நினைக்கத் தொடங்கிவிட்டான். அவனுடைய மன நிலை கண்டு அவனுடைய தம்பி சிரித்துக்கொண்டே இருந்தான். எப்போதும் அதிகம் பேசாத அவனுடைய தந்தைகூட கடிந்துகொண்டார். அவனை யாருமே புரிந்துகொள்வதில்லை என்ற விரக்தியில் அவன் மொட்டை மாடியில் சென்று நின்றுகொண்டான். நிலா காய்ந்தது. அவனுக்கு ஏதேதோ திரைப்படப் பாடல்கள் தோன்றின. அந்தச் சூழல் மிகுந்த ஏக்கம் தந்தது. அந்த ஏக்கமே மகிழ்வின் உயர்வாக இருந்தது. அதெல்லாம் மறுக்கப்படுவது போல இருந்தது. அந்த வெற்றிடம், மிகுந்த வெறுப்பைத் தந்தது. அப்படியே மாடியிலிருந்து குதித்துவிடலாம் என்றுதான் எண்ணினான். அது மட்டும் கூடாது. உயிர் மிகவும் மதிப்பு மிக்கது. அதை இந்த மனிதர்களுக்காக விட்டுவிடக் கூடாது என்று அவன் தீர்மானமாக இருந்தான். 

மெதுவாக அவன் கீழே இறங்கி வந்தான். அவனுடைய அம்மா மேஜையில் அவனுக்காக இட்லி வைத்திருந்தாள். அவனுக்குப் பிடித்த தக்காளி சட்னியும் இருந்தது. அதைப் பார்த்ததும் பசியாக இருந்தது. அவன் மெதுவாகக் கை கழுவி விட்டு வந்து மேஜை அருகே அமர்ந்துகொண்டான். அம்மா தட்டு எடுத்து வைத்து இட்லிகளை அடுக்கினாள். அவன் எதுவும் நினைவு அற்றவன் போல இட்லி சாப்பிட்டான். பால்கனியில் நின்றிருந்த இரண்டு பூனைக் குட்டிகள் அவனையே உற்றுப் பார்த்தன. அவன் அவற்றைப் பார்த்துச் சிரித்தான். அவற்றிற்கு அவனுடைய உணர்வு புரிந்திருக்கும் என்று தெரிந்தது. 

‘பூனை பால் குடிச்சதாம்மா?’ என்று கேட்டான் அவன்.

அம்மா பதில் சொல்லவில்லை. 

’நீ சாப்பிட்டுட்டு அப்புறம் கவனிக்கலாம் உன் பூனைகளை’ என்று அவள் கொஞ்சம் சலிப்புடன் சொல்லிவிட்டாள்.

அவன் வேகம் வேகமாக இட்லி சாப்பிட்டுவிட்டு ஃபிரிட்ஜிலிருந்து பால் கவர் எடுத்து, வெட்டி, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து இலேசாக சூடு செய்து, ஆற்றி, ஒரு கிண்ணத்தில் ஊற்றி பூனைகளுக்கு வைத்தான். அவை சப்பிச் சப்பிக் குடிக்கும் காட்சி அவனுக்கு ஆறுதல் தந்தது. பால் குடித்தப் பூனைகள் பால்கனியின் சுவர் தாண்டி வராண்டாவிற்குள் குதித்து விளையாடத் தொடங்கின.

அபினவுக்குத் தூக்கமாக வந்தது. அவன் படுக்கையில் விழுந்து நன்றாக உறங்கிப் போனான். பூனைகள் சண்டை போடுவது போல சத்தம் கேட்டது. அவன் எழுந்து ஒரு பூனை போல நடந்து சென்று பார்த்தான். 

இரண்டு பூனைகள் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவனுக்கு கோபமாகவும் இருந்தது. ஈர்ப்பாகவும் இருந்தது. பூனையால்கூட முடிகிறது என்று நினைத்துக்கொண்டான். அதைப் பார்த்துக்கொண்டு இருப்பதே போதும் போல இருந்தது. அவன் பார்ப்பதை அந்தப் பூனைகள் அறிந்துகொண்டது போல இருந்தது. தங்கள் தனிமையில் அவன் தலையிடுவதை அவை விரும்புவது போலத்தான் இருந்தது. அது தனக்கு அளிக்கப்பட்ட தனிச் சலுகை என்று அவன் நினைத்துக்கொண்டான். அவற்றின் மகிழ்வில் தானும் பங்கு பெறுவது போல அவன் இருந்தான். இருப்பினும் அவற்றிற்கு எந்த வகையிலும் தொல்லை தந்துவிடக் கூடாது என்று அவன் மறைந்திருந்தே அவற்றை ரசித்தான். அது அவற்றிற்குத் தருகிற தனி கவனம் என்று நினைத்துக்கொண்டான். உண்மையில் தான் மகிழ்வுடன் இருக்கும்போது தன்னை யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை போல அது இருந்தது. 

அடுத்த நாள் இரவும் பூனைகள் பெரும் சப்தம் எழுப்பியபோது அவன் எழுந்து சென்று பார்த்தான். பூனைகள் விளையாடிக்கொண்டு இருந்தன. அது அவனுக்கு உற்சாகம் அளித்தாலும் அவை உறவில் இருந்துவிடாதா என்ற எண்ணம்தான் அவனிடம் மேலோங்கி நின்றது. அந்த மகிழ்வை அந்த பூனைகள் அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அடுத்த நாள் இரவு அந்தப் பூனைகள் இணைந்து மகிழ்ந்தபோது அவன் குதூகலித்துக் கிடந்தான். எப்படியும் இந்தப் பூனைகள் இனப்பெருக்கம் செய்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது. இப்படிப் பூனைகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதே பெரும் மகிழ்வு என்று அவன் நினைத்தபடி இருந்தான். 

குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து பரினிதா ஊரில் இருந்து வந்தாள். கொஞ்சம் குண்டாகி இருந்தாள். குழந்தையும் இப்போது கொஞ்சம் வேறு முகம் கொண்டிருந்தது. வளரும் குழந்தைகளுக்கு முகங்கள் மாறும் என்று அவனுடைய அம்மா கூறிக்கொண்டிருந்தாள். அவனுடைய தம்பிக்குத்தான் குழந்தை மீது அலாதியான அக்கறை இருந்தது. இரவுகளில் தனி அறையில் பரினிதாவும் குழந்தையும் உறங்கினார்கள். இரவுகளில் உறங்காமல் குழந்தை அழுதது. அதற்குப் பால் கொடுத்து சீராட்டி விளையாட்டி காட்டினாள் பரினிதா. அபினவுக்கு எங்கோ பூனைகள் போடும் சப்தம்தான் அதிகம் கேட்டது. பூனைகளைச் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்தான். தினமும் உறக்கம் இல்லாமலேயே போனது. பகலில் கடைக்கும் கழனிக்கும் போய் சரியாக பணிகளைக் கவனிக்க முடியவில்லை என்ற வருத்தமும் இருந்தது. பெரும்பாலும் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு வருவதை அவன் நிறுத்தினான். தம்பிதான் தினமும் மதியம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு உறங்கிவிட்டு வந்தான். மாலைகளில் அபினவ் வீடு திரும்பும்போது பரினிதா சோர்வாகவும் கொஞ்சம் மகிழ்வாகவும் இருந்தாள். அவனுக்குக் கோபமாகவும் அவமானமாகவும் இருந்தது. 

எதையும் பொருட்படுத்தாமல்தான் வாழ வேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டான். காலை எழுவது, அம்மா சமைக்கும் இட்லி, தோசையைச் சாப்பிடுவது, கடைக்கு ஓடுவது, கழனிக்குப் போவது, ஓயாமல் வேலை செய்வது, மாலை வந்து குளித்து மீண்டும் அம்மா தரும் உணவைச் சாப்பிடுவது, கொஞ்ச நேரம் டிவி பார்ப்பது, மனைவி, குழந்தை இருக்கும் அறைக்கு ஒரு முறை சென்று எட்டிப் பார்த்து வந்துவிடுவது, உடனே தன் அறையில் சென்று படுத்துவிடுவது, நள்ளிரவில் எழுந்து பூனைகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது. அதில் உளம் மகிழ்வது, உற்சாகம் கொள்வது, மகிழ்வு அடைவது, எதிலும் ஒட்டாமல் இருந்துவிட வேண்டும் என்று மீண்டும் அறையில் வந்து படுத்துவிடுவது. இப்படிப் போயின அவனுடைய நாட்கள்.

இதைவிட வாழ்க்கையில் என்ன முக்கியம் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

இரவில் பூனைகள் சத்தம் இல்லாவிட்டால் அவனுக்கு தூக்கமே வராமல் போய்விட்டது. பூனைகள் வாரம் முழுவதும் சப்தம் போடுவதில்லை. சண்டை இடுவதில்லை. அவற்றிற்குள் முரண் வரும்போதுதான் அவை மூர்க்கம் காட்டுகின்றன. அவற்றிற்குள் ஆசை வந்துவிட்ட போதும் அவை ஒன்றையொன்று துரத்தி அன்பால் கடித்துக் கொஞ்சி சப்தம் எழுப்புகின்றன. இவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி ஆகிவிட்டது. ஒரு நாள் தூக்கம் கலைந்து பூனைகளைத் தேடி அவன் வெளியே வந்து பார்த்தான். பூனைகள் எந்தச் சப்தமும் எழுப்பாமல் சல்லாபம் புரிந்துகொண்டிருந்தன. அவனுக்கு அதைப் பார்க்கப் பார்க்க மகிழ்வும் உற்சாகமும் தலைக்கு ஏறின. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்து அவன் உறங்கினான். மீண்டும் பூனைகளின் சப்தம் கேட்டபோது அவன் எழுந்து செல்ல முயன்றான். மனைவியின் அறைக்குள்ளிருந்து தம்பி வருவதைப் பார்த்தான். அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் கோபமாக வந்தது. அதைப் பார்க்காமல் இருந்திருக்கலாம் என்றுதான் நினைத்தான். படுக்கையில் வந்து விழுந்தான். மனம் படபடத்தது. மூளையில் ஏதோ துடித்தது. இதெல்லாம் புதிதாக எதற்கு வர வேண்டும் என்று நினைத்தான். எத்தனையோ மாதங்களாகப் பழகிவிட்டதுதானே. மனதை தேற்றிக்கொண்டு அவன் படுத்தான்.

அடுத்த நாள் அவன் அலுவலகம் போகவில்லை. ஜுரம் என்று சொல்லிக்கொண்டு அவனுடைய அறையிலேயே அவன் முடங்கினான். அவனுடைய அறைக்கே கஞ்சி கொண்டு வந்து கொடுத்தாள் அம்மா. அவள் அவனைப் புரிந்துகொண்டது போல இருந்தது. இதற்கெல்லாம் அவளும்தானே காரணம் என்று அவனுக்கு புதிதாகக் கோபம் வந்தது. அவள் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள்.

மதியம் வழக்கம் போல தம்பி சாப்பிட வந்தான். அவனும் அபினவின் அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு கடைக்குப் புறப்பட்டுவிட்டான். இல்லாவிட்டால் அவன் கடைக்குப் போயிருக்க மாட்டான் என்று அபினவ் அறிவான். தான் எதற்குப் புதிதாக கிளர்ந்து எழ வேண்டும் என்று தனக்குத் தானே அவன் கேட்டுக்கொண்டான்.

அந்த இரவுதான் அவனுக்கு அன்று பெரும் சுமையாக இருந்தது. தூக்கமே வராமல் அவன் புரண்டு படுத்தான். பூனைகளின் சப்தம் கேட்டால் நலமாக இருக்கும் என்று அவன் ஏங்கினான். அவன் எதிர்பார்த்தது போல பூனைகளின் சப்தம் கேட்டது. அவன் படபடப்பாக எழுந்து வெளியே சென்றான். பூனைகளைக் காணவில்லை. அவன் அவற்றின் சப்தம் இருக்கும் இடம் தேடிப் போனான். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. ஒரு இடம் போனால் வேறு இடத்தில் சப்தம் கேட்டது. அவன் சரியாக ஒரு இடத்தைக் கண்டுபிடித்தான். அவனுடைய வீட்டில் இருந்த பெண் பூனையை வேறு ஒரு ஆண் பூனைத் துரத்திக்கொண்டு இருந்தது. அவனுக்கு ஒரு கணம் கோபமாகத்தான் வந்தது. எப்போதும் வீட்டுப் பூனையுடன் வேறு ஒரு ஆண் பூனை இணைவதில்லை. வழக்கமாக அடுத்த வீட்டுப் பூனைதான் இணையத் துரத்தும். இது புது பூனையாக இருந்தது. பூனைகளுக்கும் அந்த வேறுபாடு இருக்காது என்று அவனுக்கும் புரிந்தது. இருந்தாலும் பெரும் கோபமும் ஆற்றாமையும் அவனுள் தகித்துக் கிடந்தன. பூனைகளின் இணைப்பைக் கண்டு பெரு மகிழ்வு கொள்பவன்தான் அவன். தானே அந்த செயல்பாட்டில் இருப்பது போல் அவன் சிலிர்த்துக் கிடந்தது உண்டு. ஆனால் அன்று அவன் இழப்பில் இருந்தவன் போல உணர்ந்தான். அவன் எதிர்பாராத கணம் ஒன்றில் இரண்டு பூனைகளும் இணைப்பில் இருந்தன. அவற்றின் இயக்கத்தில் ஒரு இறுக்கம் இருந்தது. அவற்றின் முகங்கள்கூட மகிழ்வும், வலியும் கொண்டதான ஒரு படபடப்பில் இருந்தன. அதைப் பார்க்கும்போது அவனுக்கு வெறுப்பு தலைக்கு ஏறியது. அவனுக்கு மேல் மூச்சு வாங்கியது. இதை நிறுத்த வேண்டும் என்று அவன் நினைத்தான். ஒரு வேகத்தில் அவன் ஒரு கல்லை எடுத்து பூனைகளின் மீது வீசினான். அது நேராக ஆண் பூனை மீது விழுந்தது. அந்தப் பூனை எழுப்பிய சப்தம் பக்கத்துக் காடு வரை எதிரொலித்தது. அவனுடைய வீட்டுப் பூனை மாயமாக எங்கோ பறந்து மறைந்தது. மூச்சு வாங்க அவன் மெதுவாக தன் அறைக்கு வந்து படுத்தான்.

‘அட என்னடா ஆச்சு?’ என்று அம்மா கதறும் சப்தம் கேட்டது.

‘அய்யோ’ என்று பரினிதா போடும் சப்தமும் கேட்டது.

’ஏங்க இங்க வாங்க. டேய் அபினவ் வாடா. இங்கே வந்து பார் தம்பியை’ என்று அம்மா கதறுவது கேட்டது.

அவன் மெதுவாக எழுந்து வெளியே வந்தான். முன் வாசலில் முகம் கோண தம்பி கீழே கிடந்தான். அவனுடைய இடுப்புக்குக் கீழே பெரிய காயம் ஏற்பட்டு வேட்டியில் இரத்தம் கொட்டிக்கொண்டு கிடந்தது. 

அவனையே உற்றுப் பார்த்தான் அபினவ்.

***

நிஜந்தன் எழுதிய முதல் சிறுகதை 1984ல் ‘கணையாழி’ இதழில் வெளியானது. 1985ல் தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற அவரது படைப்பு வெளியானது. 1990களின் தொடக்கத்தில் நாடகங்கள் எழுதி, அவற்றை நிஜந்தன் மேடையேற்றியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு 12 நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கின்றன. நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலுக்கு 2014ல் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. 37 ஆண்டு காலம் தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக, தலைமை செய்தி ஆசிரியராக, விவாத நெறியாளராக நிஜந்தன் பணியாற்றியிருக்கிறார். தற்போது வலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நிஜந்தன் நடித்து வருகிறார். மின்னஞ்சல்: knijanthan@gmail.com

தொல்காப்பியத்தில் ஆன்மவாதம்

0

தி.கு. இரவிச்சந்திரன்

மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்

-தொல்காப்பியர்

ர் இனத்தின் ‘சிந்தனை மரபு’ என்பது அந்த இனம் வாழும் சூழலைப் பொருத்தது. இதில், இயற்கை முதல் சமூகம், அறிவியல், வரலாறு வரையிலான பரிமாணங்கள் அடங்கியுள்ளன. இவற்றின் பின்னணியில்தான் அந்த இனத்தின் சிந்தனையோட்டம் இருக்கும். இதற்கேற்பத் தனியர் முதல் சமூக வாழ்க்கைமுறை அமையப்பெறும். பிறப்பிலிருந்து உணவு, உடை, திருமணம், இறப்புச் சடங்கு வரையிலான அனைத்தும் இனத்துவமாக இருப்பது கண்கூடு. இதற்கு மருத்துவம் சிறந்த சான்று. ஓர் இனம் தாம் வாழ்கின்ற இயற்கைப் பின்னணிக்கு ஏற்ற மருந்துகளே அந்த இனத்துள் புழக்கத்தில் இருக்கும். அடுத்து, மொழி. மொழிதான் மனிதனின் முதல் சமூக அடையாளம். இயற்கை உலகில் விலங்கினத்திடமிருந்து வேறுபடுத்தி மனிதனைச் சிந்திக்க வைப்பது மொழி. இனத்துக்கு இனம் மொழி அமைந்ததுபோல் சிந்தனை மரபும் அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரே மொழியாக இருந்தாலும் இடத்துகேற்ற சமூக விழுமியங்கள் இருக்கும். சான்றாக, நெய்தல் வாழ்க்கையும் குறிஞ்சி வாழ்க்கையும் ஒன்றல்ல. இருப்பினும், தமிழ் என்கிற மொழித் தளத்தில் இவற்றுக்கு இடையே பொதுமைக் கூறுகள் பல இருக்கும். அதுதான், சிந்தனை மரபு. சங்க காலச் சமூகத்தில் நிலவி வந்த சிந்தனையோட்டக் கருத்துகளைக் கவனித்த புலவர்கள், அவற்றைத் தமது படைப்பில் கவித்துவமாகப் பதிவு செய்துள்ளனர். அதனால், சங்க இலக்கியங்கள் வெறும் புனைவுகளாக அல்லாமல், வரலாற்றுப் பெட்டகமாகவும் மானிடவியல் ஆவணங்களாகவும் அறிவுக் களஞ்சியமாகவும் விளக்குகின்றன. 

I

சங்க காலத்து வாழ்வியல் பதிவுகளான சங்க இலக்கியங்களில் அன்றைய தமிழரின் சிந்தனை மரபுகளைக் காணலாம். இந்தப் பதிவுகளைத்தான் தொல்காப்பியர் இலக்கணமாக்கினார். தொல்காப்பியம் என்பது மொழி மற்றும் இலக்கியங்களுக்கான இலக்கணம் மட்டுமின்றி, வாழ்க்கைக்கான இலக்கணமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாகச் சமூக வாழ்வுக்கான சொல்லாடலாகவும் விளங்குகின்றது. எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியங்களில் இருந்து இலக்கணச் சொல்லாடலைக் கண்டவர் தொல்காப்பியர். இதனுள் சிந்தனை மரபுச் சொல்லாடல்கள் இயல்பாகப் பதிவாகியுள்ளன. அதனால், தொல்காப்பியத்தை ஆராய்ந்தால் அன்றைய தமிழரின் சிந்தனை மரபுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனுள் பொதிந்துள்ள பல்துறை அறிவை அடையாளம் காணக்கூடும். 

இந்தத் தொல்காப்பியத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்புள்ளது. அதாவது, ‘என்ப’, ‘மொழிப’ முதலிய சொற்கள் இடம்பெற்றுள்ளதால், இந்தச் சிந்தனை மரபுகள் தொல்காப்பியருக்கு முன்பே இலக்கணமாக்கப் பட்டிருப்பதை ஊகிக்கலாம். தொல்காப்பியம் மட்டுமின்றித் திருக்குறள் முதலிய நீதி நூல்களிலும் பண்டையத் தமிழ்ச் சமூகத்துச் சிந்தனை மரபுகள் பொதிந்திருப்பதைக் காணலாம். ஆனால், இவை வாழ்வியல் பின்னிணியில் மட்டுமின்றித் தத்துவப் பின்னணியிலும் உள்ளன. குறிப்பாக, சமண, பௌத்தத்தின் தாக்கங்களை இவற்றில் காணலாம். இந்தத் தமிழ்சார் சமணத்தை ஆசீவகம் என்போரும் உண்டு. இந்த ஆசீவகமே தமிழரின் ஆதிச் சமயம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலியவற்றில் ஆசீவகக் கூறுகள் உள்ளன. ஆசீவகத்தின் அடிப்படையான விதிக் கோட்பாடு இதற்குச் சான்று. இந்த விதியைத் தொல்காப்பியர் ‘பால்’ என்கிறார். கணியன் பூங்குன்றன் செய்யுளில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என விதியை வலியுறுத்துகிறது. திருக்குறளில் ‘ஊழ்’ அதிகாரமே உள்ளது. இவற்றை ஆய்வதன் மூலம் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த விதத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியில் உளவியல் சிந்தனைப் போக்குகளை அடையாளம் காண வழிகள் உள்ளன. உள்ளம் குறித்துத் தொல்காப்பியர் ஒரு நூற்பாவில் கூறும்போது, ‘ஆறாம் அறிவே மனம்’ என்கிறார்:

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
(தொல். பொருள்.583)

இந்த நூற்பாவில் டார்வினின் பரிணாமச் சிந்தனை இருப்பதை அறிய முடிகின்றது. அதுமட்டுமின்றி, உள்ளம் குறித்த நுட்பம் இதில் உள்ளது. 

மனம் பற்றித் தொல்காப்பியர் பல இடங்களில் கூறியிருந்தாலும், மேற்கண்ட நூற்பா கவனிக்கத்தக்கது. இது, உளவியல் சார்ந்த ஆறாம் அறிவு பற்றிப் பேசுகிறது. மனிதன் ஆறறிவு கொண்டவன். பொதுப்புத்தியில் இந்த ஆறாம் அறிவைப் பகுத்தறிவு என்கிறோம். உண்மையில் எல்லா உயிரினங்களுக்கும் பகுத்தறிவு உள்ளது. சிறு எறும்பிலிருந்து யானை வரை அனைத்துக்கும் அதனதன் இயல்புக்கும் வாழ்வியலுக்கும் ஏற்பப் பகுத்தறிவு இருக்கவே செய்கிறது. இது அந்தந்த இனத்தின் இருத்தலுக்கான இயற்கை ஏற்பாடு. பகுத்தறிவின்றி எந்த உயிரும் இந்த உலகில் வாழவோ இருப்புக் கொள்ளவோ முடியாது. தாவரங்களுக்கும் பகுத்தறிவுண்டு என்கிறது இன்றைய அறிவியல். அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றங்களும் நடக்கின்றன. எனவே, பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் உரியதல்ல. இது அடிப்படை விதி. இந்தக் கருத்தைத்தான் தொல்காப்பியர் சுட்டுகிறார். மேற்கண்ட நூற்பாவில் பகுத்தறிவே ஆறாம் அறிவு என்று தொல்காப்பியர் சொல்லவில்லை. உள்ளமே ஆறாம் அறிவு என்கிறார். எனில், மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் எங்கே வேறுபடுகின்றான் என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு அறிவியல் சரியாக இன்றளவும் விடை கூறவில்லை. ஆனால், தொல்காப்பியர் அன்றே கணித்து விட்டார். ‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே’ என்றார். அதாவது, மனநிலையே ஆறாம் அறிவு. வேறுவிதமாகக் கூறின், உள வாழ்வே ஆறாம் அறிவு. 

நவீன உளவியல்படி, psyche என்ற சொல்லுக்கு உடற்செயல்களுக்கு அப்பாலான செயல்பாடுகளின் தொகுதியைக் குறிக்கும். எண்ணுதல், சிந்தித்தல், தர்க்கித்தல், காரணித்தல், உள்ளுணர்தல் முதலிய செயல்பாடுகள் உடலுக்கு அப்பால் நடப்பவையாகும். இவை உள்ளடங்கிய நுண்பொறி (சூக்குமம்) உள்ளமாகும். இந்தியத் தத்துவம் கூறுகின்ற சூக்கும உடலல்ல. அதற்கு இணையான இருக்கும் ஓர் இருண்மை நிலையே உள்ளம் என்கிறது. உளவியல்துறை முன் வைக்கின்ற இந்த வரையறை ஓரளவுக்குச் சரியே. ஆனால், தொல்காப்பியர் கூறும் ‘மனம்’ என்கிற சொல் ‘சைக்கி’ எனும் சொல்லைவிடக் கனமானது; ஆழமானதும்கூட. 

இந்திய மரபில் ‘மனம்’ எனும் சொல் பௌத்த வழியாகப் புழக்கத்தில் வந்த ஒன்று. இது பாலி மொழிச் சொல். இதன் வேர்ச் சொல் : மானஸ். இதன் நீட்சிதான் ‘மனிதன்’. மனத்தால் வாழ்பவன் என்பதால் ‘மனிதன்’ என்கிற பெயர் வந்தது. மானஸ்- மனஸ் – மனுஷ் – மனுஷன்-மனிதன். இதுதான் சொல் வரலாறு. மனித வாழ்வு என்பது மனத் தேவைகளுக்கான வாழ்வாகும். பிற உயிரினங்கள் உடலாதாரத்தில் வாழ்ந்து வர, மனிதன் மட்டும் உளமாதாரத்தில் வாழ்ந்து வருகிறான். இந்த உலகில் தோன்றிய காலத்திலிருந்து பிற உயிரினங்கள் இன்றளவும் அப்படியேதான் வாழ்ந்து வருகின்றன. மனிதன் மட்டும் காலத்துக்கேற்ப வளர்ந்து வருகிறான். இந்தியத் தத்துவம்படி, முக்தி வரையில் செல்கிறான். அதனால், இவன் உயர்திணை. இது, வினையெச்சம். உயர்ந்த, உயர்கின்ற, உயரப்போகின்ற உயிரினம் மனிதன். பிற உயிரினங்கள் யாவும் ஆதி முதல் இன்று வரை எவ்வித மாற்றமுமின்றி ஒருபடித்தான வாழ்வை இருப்புக்கொண்டு வருகின்றன. எனவே, இவை உயர்நிலையற்ற அஃறிணை. இந்த நுட்பத்தைத் தொல்காப்பியர் அறிந்துள்ளார் என்பதைத் திணைச் சொற்களிலேயே காணலாம். இங்கே, திணை என்றால் வாழ்வொழுங்கு. 

இந்தியவியல் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதரிடமும் உடல்நிலை, மனநிலை, ஆன்மநிலை ஆகியவை உள்ளன. உடல்நிலை என்பது விலங்குத்தனமானது. அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. அடுத்தது, மனநிலை. இதுதான் மனிதத்தனமானது. காரணம், மனத்தால் வாழ்பவனே மனிதன். இவ்விரண்டு நிலைகளும் மனிதரிடம் வெளிப்படையாகக் காணலாம். மூன்றாவது நிலையான ஆன்மநிலை மனிதரில் ஒரு சிலருக்கே மிக அரிதாக வாய்க்கும். ஆன்மீக ஈடுபாட்டில் அகப்பயணம் செய்து மூலாதாரத்தை அடைந்து மேல் நோக்கிப் பயணம் செய்வோரே ஆன்மநிலை இருப்புக் கொள்வர். உடல் கடந்து மனம் கடந்து ‘நான்’ சென்றால் ஆன்மநிலை எய்தலாம் என்கிறது ஆன்மிகம். (மதமும் ஆன்மீகமும் ஒன்றல்ல. மதத்துக்கு மனம் ஆதாரம். ஆன்மீகத்துக்கு ஆன்மா ஆதாரம். மதத்துக்குக் கடவுள் கட்டாயம். ஆன்மீகத்துக்குக் கடவுள் கட்டாயமில்லை). ஆன்ம இருப்பை அறிவியலால் நிருபிக்க முடியாது என்றாலும் இதில் உண்மை உள்ளது. அதைப் பட்டறிவு வழியில்தான் அறியமுடியும். அப்படிப் பட்டறிவு மூலம் உண்மையை அறிவதைப் பட்டறிவு அறிவியல் (empirical science) என்பர். சித்தர்கள் இவ்வகைப் பட்டவர்கள். 

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றும் மனித இருப்புக்கான நிலைகள் என்று இந்தியவியல் கூறுகிறது. இவற்றில் ஒருவரின் ‘நான் அல்லது ஈகோ’ எங்கே உள்ளதோ அதன் இயல்பில்தான் ‘இருத்தல்’ அமையும். மேலும், இந்த மூன்று நிலைகளிடையே இழையோடுகின்ற பொது ஆற்றல் ‘அறிவு’ ஆகும். அதாவது, இந்த மூன்றிலும் அறிவு இருக்கும். இதன்படி, உடலில் இருக்கின்ற அறிவு புலனறிவு. உள்ளத்தில் செயல்படுகின்ற அறிவு கருத்தறிவு. ஆன்மாவில் இயங்குகின்ற அறிவு ஆன்மறிவு. வேறுவிதமாகக் கூறின், புலனறிவு (உடல்) கருத்தறிவு (மனம்) ஆன்ம அறிவு (ஞானம்) ஆகிய மூன்றும் கலந்த கலவையே மனிதன். இவற்றைச் சிற்றறிவு, அறிவு, பேரறிவு எனக் கூறப் பொருந்தும். இவற்றில் அதிப்பெரும்பாலும் மனம் சார்ந்த நிலையில்தான் மனித இனம் வாழ்ந்து வருகின்றது. அதனால் உள வாழ்வே முதன்மை. இதைத்தான் இன்றைய நவீன உளவியல் துறை ஆராய்ந்து வருகின்றது. இதைத் தொல்காப்பியர் அன்றே அடையாளம் கண்டுவிட்டார்.  

தொல்காப்பிய வரையரைப்படி, மனமே ஆறாம் அறிவு; ஆறாம் அறிவே மனம். இது உலகின் மிகச் சுருக்கமான வரையறை மட்டிமின்றி, மிகவும் சிந்திக்கத்தக்க ஒன்று. மனிதன் ஏன் மனத்தால் வாழ்கின்றான்? அப்படி வாழவேண்டிய நிலை அவனுக்கு எப்படி ஏற்பட்டது? இவற்றுக்குத் தகுந்த விடை காண்பது கடினம். பிரபஞ்ச விதிப்படி, இது நடக்கின்றது எனச் சொல்லி நாம் சமாதானமடையலாம். இது உண்மையாகவும் இருக்கக்கூடும். இருப்பினும், அறிவியல் முறைப்படி மனிதன் ஏன் மனத்தால் வாழ்ந்து வருகின்றான் என்பதற்கான விடை காண வேண்டியுள்ளது. மனிதப் பரிணாமத்தின் ஒரு கட்டமாக அகப் பயணம் உள்ளது. புறநிலை உடல் வளர்ச்சி கண்ட மனிதனின் பரிணாமம், அகநிலை வளர்ச்சிக்கு வந்து விடுகின்றது. இந்தியவியல் கூற்றுப்படி, மனமும் ஆன்மாவும் அகநிலை அம்சங்கள் ஆகும். மாறாக, உடலும் சமூகமும் புறநிலை அம்சங்கள் ஆகும். 

பரிணாம வளர்ச்சிப்படி, மனித நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இது உடலியல் பரிணாமத்தைக் குறிக்கும். இதுவே ஒட்டுமொத்த பரிணாமத்தின் கடைசிக் கட்டம். இதனையடுத்து அறிவுப் பரிணாமம் நடந்ததென்று மேற்கண்ட நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். சித்தர்கள் கருத்துப்படி, ஆன்ம வளர்ச்சி ஒன்று மனிதனுக்கு உள்ளது. அதுதான் இறுதிப் பரிணாம வளர்ச்சி. இதை ‘அட்டாங்க யோகம்’ எனும் கோட்பாட்டின் கீழ் சித்தர்கள் விவரிக்கின்றனர். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரணம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ரநாமம் ஆகிய படிநிலைகளில் ஆன்மா வளர்ச்சியடையும். சித்தர்களுக்கு நடந்துள்ளது. இந்த ஆன்ம வளர்ச்சி அகத்துள் நடக்கின்ற சூக்குமப் பரிணாம வளர்ச்சி. இதற்குத் தன்னுள் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் (ஆன்ம பயணம்) மனிதனுக்கு ஏற்பட்டது. சுருங்கச் சொல்லின், ‘உடல்’ நானிலிருந்து ‘உள்ள’ நான் கடந்து ‘ஆன்ம’ நானாகி அது மூலாதாரத்திலிருந்து படிப்படியாக சுழுமுனை நாடி வழியாக மேல் நோக்கிப் பயணித்து, சூன்யம் ஆவதே முழுமையான பரிணாமமாகும். இவற்றில் அகப் பயணம் என்பது உளப் பயணத்தையும் ஆன்ம பயணம் என்பது அட்டாங்க யோகத்தையும் குறிக்கும். இரண்டையும் சேர்த்து ‘அகப் பயணம்’ எனக் கூறுவதில் தவறில்லை. இதை ‘அகத்தாய்வு’ எனவும் கூறுவர். 

நடப்பில் பயணம் செய்யும்போது அந்தப் பாதையை நாம் கவனிப்போம். அதுபோல், ஆன்மா நோக்கிய இந்த அகப்பயணத்தின்போது மனத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. ‘நானுக்கும்’ ஆன்மாவுக்கும் இடையே இருப்பது ஆன்மா. அதாவது, பாதையைக் கடப்பது போல் உள்ளத்தையும் கடந்து சென்று அடைவிடத்தை ‘நான்’ அடைய வேண்டியுள்ளது. இங்கே ‘அடைவிடம்’ என்பது ஆன்மா. அவ்வாறு அடைந்தவனே ‘கடவுள்’. அதாவது, ‘உள்ளத்தைக் கடந்தவன்’ என்றாகின்றான். ‘உள்’ என்றால் ‘உள்ளம்’ என்று பொருள். மனத்தால் வாழ்ந்து யோக முறைப்படிக் கடந்தால் இறைநிலை முடியும். இந்த மனத்தைக் கடந்த நிலையே புத்தர் சொன்ன ‘சூன்யம்’. இதுவே நிர்வாண நிலை. அதாவது, எண்ணமற்ற நிலை. எண்ணமே உள்ளம் என்பதால் உள்ளமற்ற நிலையே சூன்யம். இந்த நிலையை அடைந்தவனே புத்தன். இது ஆன்ம ஞானம். ஞானத்துக்கு இன்னொரு பெயர் புத்தி. இதை அடைந்தவன் புத்தன். இவனை ‘அறிவன்’ என்கிறது தொல்காப்பியம். அறிவன், புத்தன், ஞானி எல்லாம் ஒன்றே. இந்த ஞானத்தை மனிதனால் மட்டுமே அடையக்கூடும். இதுதான் பிரபஞ்ச விதி. அதனால்தான், ‘மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்கிறார் அவ்வையார். அகப்பயணம் என்கின்ற ‘மனத்தைக் கடத்தல்’ மனிதனால் மட்டும் நடக்கும். காரணம், மனிதனுக்கே ‘உள வாழ்வு’ உள்ளது. சமூக வாழ்வு என்பது உள வாழ்வின் அங்கமாகும். (சூபர் ஈகோ உள்ளத்தின் பகுதி). ஆன்மீகம் கூறும் ‘வாழ்க்கையைத் துறத்தல்’ என்பது ‘உள வாழ்வைத் துறத்தல்’ எனப் பொருள்படும். இந்த ஆன்ம பயணத்தைப் பல இந்தியத் தத்துவ மரபுகள் வலியுறுத்துகின்றன. சார்வாகம் மட்டும் ஆன்மாவை மறுக்கிறது. 

பௌத்தத்தையும் அனாத்மா வாதம் என்பர். அனாத்மா வாதம் என்பது ஆன்மாவை மறுக்கின்ற வாதமில்லை. மாறாக, ‘ஆன்மாவும் அழிவுக்கு உட்பட்டது’ என்பதை உணர்த்துகின்ற வாதமாகும். இதன்படி, நிரந்தர ஆன்மாவைப் பௌத்தம் மறுக்கிறது. ‘அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது’ என்கிற வட்டத்தில் ஆன்மாவும் உள்ளது. நிரந்தரம் என்பது சனாதனம். நிரந்தரமின்மை என்பது சனாதன மறுப்பு. ஆன்மா நிரந்தரமானது என்கிற கருத்துக்கு மாற்றாகச் சொன்னதே ‘அனாத்மா’. அதனால், பௌத்தம் தனது இயல்பில் சனாதனத்துக்கு எதிராக அமைந்து விடுகின்றது. இது பட்டறிவு வாதமாகும். புத்தர் காலத்தில் ‘ஆன்மா அழிவில்லாதது’ என்று வைதீகம் கூறி வந்த நிலையில், ஆன்மாவும் அழிவுக்கு உட்பட்டதே என்பதை வலியுறுத்தியவர் புத்தர். இவரிடம் கர்ம வினை, விதி, மறுபிறவி, நிர்வாண நிலை கோட்பாடுகள் அடிப்படையாக உள்ளன. தனது முற்பிறவிகள் சிலவற்றை புத்தர் அறிந்துள்ளார் என்கிற குறிப்பும் உள்ளது. 

தொல்காப்பியரிடத்தில் விதிக் கோட்பாட்டின் தாக்கம் இருப்பதைக் காணலாம். இது ஆசீவகம், சமணம் அல்லது பௌத்தத்தின் வழியில் பெறப்பட்ட கருத்தியலாகும். சங்க காலத்தில் விதி நம்பிக்கை இருந்தது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’. தொல்காப்பியத்தில் ‘பால்’ என்ற சொல் விதியைக் குறிக்கும். இதன்படி, காதலுக்கு அடிப்படையான உள்ளப் புணர்ச்சியின் பின்னணியில் விதி உள்ளது என்கிறார்: 

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே (தொல். பொருள். 94) 

இதன் பொருள்: ஆணும் பெண்ணுமாகிய இருவேறு பிரிவினர், வெவ்வேறு திசைகளிலோ அல்லது வெவ்வேறு குடும்பங்களிலோ வாழ்கின்றனர். முற்பிறவியில் அவர்கள் செய்த நல்வினையின் பயனாகவோ அல்லது ஊழின் (விதி) ஆணையாலோ அவர்களின் எண்ணங்கள் ஒன்றுபடுகின்றன. இதுவே ‘பாலதாணை’ எனப்படுகிறது. இது, பால்+ அது+ ஆணை. அதாவது, ‘விதியின் ஆணைப்படி காதல் புணர்ச்சி நடப்பது’ என்று பொருள். இந்த ஆணைப்படி ஒன்றிணைந்த உள்ளத்தைக் கொண்ட தலைவனும் (ஆண்) தலைவியும் (பெண்) ஒருவரையொருவர் சந்தித்துக் கண்டு மகிழ்வர். அவ்வாறு இணையும் போது தலைவன், தலைவியை விட வயது அல்லது குணத்தில் உயர்ந்தவனாக இருந்தாலும் எந்தத் தடையுமில்லை. இதன்படி, காதல் என்பது குலம், குடி, செல்வம் இவற்றால் அமைவதன்று. கண்ணிமைக்கும் நேரத்தில் இரு மனங்கள் இணையக் காரணம் முற்பிறவித் தொடர்பும், ஊழின் செயலுமே ஆகும். இங்கே விதியை உணர்த்தவே ‘பாலதாணை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் தொல்காப்பியர். இவ்வாறு விதியை ஏற்கின்ற தொல்காப்பியர் ஆன்மாவைப் பற்றி விளக்கமாகக் கூறவில்லை. அவர் ஆறறிவுடன் நிறுத்தி விடுகின்றார். இருப்பினும், ஆன்ம அறிவை ‘அறிவன்’ சொல்லில் குறிப்பாக உணர்த்துகிறார். இதுதான் உடல் கடந்த உள்ளம் கடந்த ஆன்ம அறிவு அல்லது ஞானம். அறிவுதான் ஆதாரம். உடல் சார்ந்த அறிவு புலனறிவு. உளம் சார்ந்த அறிவு கருத்தறிவு. ஆன்மா சார்ந்த அறிவு பேரறிவு அல்லது ஞானம். சித்தரைப் பேரறிவாளர் என்றும் கூறுவர். சித்= ஆன்ம அறிவு. இதன்படி, அறிவனும் சித்தனும் ஒன்றே. தொல்காப்பியருக்கு ஆன்ம நம்பிக்கை இருந்துள்ளது என்பதை இவை உணர்த்தும். இதை இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.

II

ஆன்ம வாதத்துக்கு ஆன்மா, கர்மா, விதி, மறுபிறவி, முக்தி ஆகிய ஐந்தும் அடிப்படை. இவை அனைத்துக் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை இன்றைய அறிவியல் முறைப்படி நிரூபிக்க முடியாது. காரணம், ஆன்மீகத்தின் முன் அறிவியல் ஒரு குழந்தை, புத்தரையும் வள்ளலாரையும் அறிவியலாக்க முடியாது. தொல்காப்பியர் காலத்துச் சிந்தனை மரபுகளில் ஆன்மீகமும் இருந்தது என்பதற்குச் சில குறிப்புகள் உள்ளன. இதை உணர்த்தும் வகையில் ‘அறிவன்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் உள்ளது. இதைப் பின்வரும் நூற்பா பகரும்: 

மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம் (தொல். பொருள்: 77)

என்று தொல்காப்பியர் அறிவனைக் கூறுகிறார். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘காமம், வெகுளி, மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்வுடையோன் பக்கம்’ என்று கூறுகிறார். அதாவது, துறவியை அறிவன் எனச் சுட்டுகிறார். முன்பு சொன்னதுபோல் சித்தரை அறிவன் என்கிறார். வேறு சில உரையாசிரியர்கள் இந்த அறிவனை முக்காலத்தையும் கணிப்பவர் எனக் கருதுகின்றனர். இது பொருத்தமாக இல்லை. ‘கணித்தல்’ என்பது எதிர்காலத்தை மட்டும் குறிக்கும். எதிர்காலத்தை மட்டும் கணிப்பவர் ‘கணியன்’. மாறாக, ‘அறிவன்’ என்பது முக்காலத்தையும் ஞானத்தால் அறிபவர். அந்த ஞானியைத்தான் ‘அறிவன்’ என்கிறார் தொல்காப்பியர். இங்கும் அறிவே ஆதாரம். பௌத்தத்தில் புத்தன் என்பர். புத்தியில் இருந்து வந்தது புத்தன். அறிவிலிருந்து வந்தது அறிவன். இந்த அறிவன் புத்தனைக் குறிக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் பௌத்தத்தின் தாக்கம் இருந்ததை அறிய முடிகிறது. ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் (தொல்.பொருள்.649). இதில் வரும் ‘முனைவன்’ முற்றும் துறந்த பௌத்த அல்லது சமணத் துறவியைக் குறிக்கும். (இந்த ‘முனைவன்’ சுழுமுனையை அடைந்தவன் எனப் பொருள் கொள்ளலாம்). தொல்காப்பியத்தில் வரும் ‘காஞ்சித் திணை’ நிலையாமையைக் குறித்து நிற்கிறது. ‘நில்லா உலகம் புல்லிய நெறித்தே’ என்கிறார் தொல்காப்பியர். அவர் காலத்தில் ஆன்மீகச் சிந்தனையும் வழக்கில் இருந்ததை உணரலாம். அசோகர் தாக்கமாகவும் இருக்கலாம்.  

பௌத்த வழியில் தொல்காப்பியர் மனதை ஆறாம் அறிவெனக் கொண்டதில் அறிவியல் தர்க்கம் உள்ளது. மனிதன் இந்த ஆறாம் அறிவின் ஆதாரத்தில் (மனம்) வாழ்ந்து வருகிறான். பறவை விலங்குகள் யாவும் உடலியல் இருப்புக்காகத்தான் வாழ்கின்றன. மனித இருப்பு அப்படியல்ல. இந்த இயற்கை உலகில் செயற்கையாக ஓர் உலகை உருவாக்கி (சமூகம்) அதில் இருப்புக் கொள்ளவே போராடுகிறான். காரணம், இவன் இயற்கை விலங்கல்ல; அதையும் கடந்த சமூக விலங்கு. இந்தச் சமூகம் புறத்தில் இருந்தாலும் அதை அகத்தில் உள்வாங்கிக்கொண்டு, அதன் விதிகள்படி வாழ வேண்டும். இது மனித நிர்பந்தம். அதனால்தான், சமூக விதிகளை ஃப்ராய்ட் அகத்தில் (சூபர் ஈகோ) வைத்தார். சமூகவியலரான மார்க்ஸ் சமூகத்தைப் புறத்தில் வைத்து ஆராய்ந்தார். மார்க்சைவிட ஃப்ராய்ட் ஆழமானவர். இருவரின் சிந்தனைப் போக்கு வேறுபட்டது. அதனால்தான், ‘எனது வழி வேறு.. மார்க்ஸ் வழி வேறு. இருவரும் இணைந்து பயணிக்க முடியாது’ என்றார் ஃப்ராய்ட். 

ஃப்ராய்ட் வழி வந்த லக்கான், சமூகத்தையே புனைவு என்றார். (ஃப்ராய்டியத்தில் மார்க்சியத்தைக் கொஞ்சம் இணைத்துக் கொண்டவர் லக்கான்). மொழி விதிகளே சமூக விதிகளை ஏற்படுத்தி வருகின்றன என்பது இவரின் புரிதல். அந்த விதிகள் நெறியில் உளச் செயல்பாடுகள் நடக்கின்றன என்பதைக் ‘குறியீட்டு முறைமை’ (symbolic order) என்கிற கோட்பாட்டைக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நிறுவி வந்தவர் லக்கான். எனவே, அகத்துக்கு (சமூக விதிகளுக்கு) ஏற்ப வாழ வேண்டிய தேவை மனிதனிடத்தில் ஏற்பட்டுவிட்டது. சமூகம் புறத்தில் இருந்தாலும் அதன் விதிகள் அகத்தில் இருப்பவையாகும். இதன் காரணமாகவே, ‘மனத்தால் வாழ்பவன் மனிதன்’ என்று பௌத்தம் சொல்கிறது. அறிவியல் பார்வையில் இன்றைய நவீன உளவியல் சொன்ன விடயங்கள் ஆன்மீகப் பார்வையில் அன்றே புத்தர் சொன்னது சிறப்பு. மனிதனுக்கு ‘உள வாழ்வு’ முதன்மையானது என்கிறது உளவியல். இதைத்தான் ‘மனுஷன்’ என்கிறது பௌத்தம். மனசால் வாழ்பவன் மனுஷன். இதன் எதிரொலியே ‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே’ ஆகும். 

***

தி கு இரவிச்சந்திரன்: ஃப்ராய்ட், யூங், லக்கான் சிந்தனைப் புலங்களில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வருபவர். ‘சிக்மண்ட் ஃப்ராய்ட்- உளப்பகுப்பாய்வு அறிவியல்’ நூல் மூலம் ஃப்ராய்டையும் ‘ழாக் லக்கான்- குறியியல் உளப்பகுப்பாய்வுக்கு ஓர் அறிமுகம்’ நூல் மூலம் லக்கானையும் தமிழில் விரிவாக  அறிமுகப் படுத்தியவர். இதுவரை உளப்பகுப்பாய்வு தொடர்பாகப் பதினாறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தொல்காப்பியமும் ஃ ப்ராய்டியமும், தீண்டாமை நனவிலி, எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, அம்மா வந்தாள்- உளப்பகுப்பாய்வு, ஃப்ராய்ட் யூங் லக்கான்- அறிமுகமும் அதற்கு அப்பாலும்  ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சிக்மண்ட் ஃப்ராய்ட் நூலுக்காகச் சிறந்த நூலாசிரியர் விருதை நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியிலும் (2007), காப்பிய உளப்பகுப்பாய்வு நூலூக்காகச் சிறந்த திறனாய்வாளர் விருதான பஞ்சு பரிசிலைப் புதுவையிலும் (2019) பெற்றுள்ளார்.  திருப்பத்தூரைச் சார்ந்த இவர், தற்போது புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மின்னஞ்சல்:  tkravichandranphd@gmail.com

ஆதவனின் சிறுகதைகளில் பெண்கள்: காலத்தை மீறிய உளவியல் உருவாக்கங்கள்

1

சரவணன் மாணிக்கவாசகம்

மிழ் நாளிதழ்களை எப்போதும் வாசிக்கும் வழக்கமில்லை. அன்று உடன் யாருமில்லை என்று தற்செயலாகப் பார்வை போனபோது கண்ணில்பட்ட தலைப்பு “சுழலில் மூழ்கி ஒருவர் சாவு” அதில் கடைசிவரி இவர் ஆதவன் என்ற பெயரில் கதைகள் எழுதி வந்தார். ஆதவனை ஏறக்குறைய முழுக்க வாசித்து, அவர் மீது Hero worship செய்த காலமது. சுற்றிலும் நண்பர்கள், தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆதவன் இறந்த வருத்தத்தை உடன் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஆதவன் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். அவரது கதைகளின் மையத்தில் பெரும்பாலும் நகர்ப்புற நடுத்தர வர்க்க ஆண்களும், அவர்களின் அகச்சிக்கல்களும், தனிமையும், தோல்விகளும், உறவுச் சிக்கல்களும் நிறைந்திருக்கும். அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் காலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆதவனின் பார்வை இன்னும் உளவியல் சார்ந்தது. மனித மனத்தின் நுண்ணிய அசைவுகளே அவரது கதைகளின் உயிர்நாடி.

அவரது படைப்புகளில் பெண்கள் எண்ணிக்கையில் குறைவாகவே தோன்றுகிறார்கள். ஆனால் தோன்றும் ஒவ்வொரு பெண்ணும் அந்தக் காலத்திய தமிழ்ச் சிறுகதைகளில் வழக்கமாகக் காணப்படும் ‘கற்பின் உருவம்’, ‘தியாகத்தின் சின்னம்’, ‘குடும்பத்தின் காவலர்’ போன்ற ஒரே மாதிரியான பிம்பங்களிலிருந்து விலகி நிற்கிறார்கள். அவர்கள் சமூகப் புரட்சியாளர்கள் அல்ல; பெண்ணியக் கோட்பாடுகளைப் பேசுபவர்களும் அல்ல. ஆனால் தங்கள் மனதிற்குள் நிகழும் கணக்குகளையும் தயக்கங்களையும் முடிவுகளையும் தாங்களே தீர்மானிக்கும் மனிதர்கள்.

இந்தக் கட்டுரை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஆதவனின் சில முக்கியச் சிறுகதைகளில் பெண்கள் எவ்வாறு தங்கள் காலத்தை மீறிய சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது.

அப்பர்பெர்த் –

அப்பர்பெர்த் கதையின் இந்திராணி, தமிழ்ச் சிறுகதைகளில் அரிதாகக் காணப்படும் ஒரு பெண். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில், வருங்காலக் கணவன் அருகிலிருக்கும்போது தனது ஆண் நண்பனின் உடல் நெருக்கத்தை அவள் அனுமதிக்கிறாள். இதை ஆதவன் ஒழுக்கச் சிதைவாகவோ அதிர்ச்சிக் காட்சியாகவோ சித்தரிக்கவில்லை. மாறாக, பெண்ணின் உடல் மீதான முடிவை அவளே எடுக்கிறாள் என்ற அமைதியான உண்மையாகக் காட்டுகிறார். 1960–70களில் பெண்களின் ஆசைகள் பொதுவெளியில் பேசப்படாத காலத்தில் இந்திராணி மிக வித்தியாசமானவள்.

தாஜ்மஹாலில் பௌர்ணமி இரவு –

நளினி காதலனின் “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்ற முதல் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறாள். அது தயக்கம் அல்ல; சோதனை. அதே கேள்வியை இரண்டாவது முறையும் அமைதியாகக் கேட்கும் ஆண்தான் திருமண வாழ்க்கையிலும் பொறுமையுடன் நடந்து கொள்வான் என்று அவள் மதிப்பிடுகிறாள்.

காதல் என்பது உணர்ச்சி மட்டுமல்ல; மனித குணத்தைப் பரிசோதிக்கும் ஒரு வெளி என்பதையே ஆதவன் இங்கே முன்வைக்கிறார். நளினி உணர்ச்சியால் முடிவு செய்யவில்லை; குணநலனைக் கணக்கிடுகிறாள். அந்த உளவியல் முதிர்ச்சியே அவளை நினைவில் நிற்கும் கதாபாத்திரமாக மாற்றுகிறது.

தைரியம் வந்த போது –

ரேணுகா, தன்னை விரும்பிய இளைஞனுக்கு முகம் கொடுக்காமல் விலகுகிறாள். ஆனால் அவன் வேறொருத்தியைத் திருமணம் செய்து கொண்டதும் தாங்க முடியாமல் அழுகிறாள்.

இது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் மனித மனம் நேர்கோட்டில் இயங்குவதில்லை. காதலை நிராகரிப்பது, காதலை இழக்க விரும்புவதாக அர்த்தமல்ல. “என்னை அவன் இன்னும் விரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற மறைமுக ஆசையும், “நான் இன்னும் முடிவு செய்யவில்லை” என்ற மனநிலையும் ஒரே நேரத்தில் இயங்க முடியும். இந்த உளவியல் சிக்கலை எந்தத் தீர்ப்பும் வழங்காமல் பதிவு செய்வதே ஆதவனின் பலம்.

காலடியோசை –

இந்தக் கதையின் மனைவி, இரவில் தனியாக நடந்து வருகிறாள். பின்னால் காலடியோசை கேட்டு அச்சப்படுகிறாள். அந்த நேரத்தில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் ஸ்கூட்டரில் வருகிறாயா என்று கேட்க, தயக்கமின்றி ஏறி வீட்டுக்குச் செல்கிறாள். பின்னால் வந்தது அவளது கணவன் என்பது பின்னர்தான் தெரியவருகிறது.

இன்றைய வாசகனுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், திருமணமான பெண் மற்றொரு ஆணின் ஸ்கூட்டரில் இரவில் பயணிப்பது இலக்கியத்தில் கூட அரிதான காட்சி. ஆதவன் இதை ஒழுக்கப் பிரச்சினையாக அல்ல, பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட இயல்பான முடிவாகக் காட்டுகிறார்.

நிழல்கள் –

காதலன், காதலியை இரவில் தனது அறைக்கு வர அழைக்கிறான். அவள் முதலில் மறுக்கிறாள். பின்னர் வர சம்மதிக்கிறாள். ஆனால் அந்தச் சமயத்தில் காதலன், “உன் நம்பிக்கையே போதும்; நீ வர வேண்டியதில்லை” என்று கூறுகிறான்.

இந்தக் கதையின் மையம் காதலன் அல்ல; காதலி. அவள் சம்மதிப்பது உடலுறவுக்காக அல்ல; நம்பிக்கைக்காக. அவளது சம்மதம் கிடைத்தவுடன் அவன் மறுப்பதும், அந்த நம்பிக்கையை உடலாக மாற்ற மறுப்பதும் கதைக்கு உயர்ந்த உளவியல் பரிமாணத்தை அளிக்கிறது. பெண் இங்கு ஆசையின் பொருள் அல்ல; நம்பிக்கையின் மையம்.

அந்த மரம் சாட்சியாக நானும் அவர்களும் –

இந்தக் கதையில் மனைவி உண்மையில் தவறு செய்கிறாளா என்பதைக் காட்டிலும், கணவனின் மனதில் உருவாகும் சந்தேகமே முக்கியம். பாத்ரூமிலிருந்து பார்க்கும்போது மனைவியும் அண்டை வீட்டுக்காரரும் சிரித்துப் பேசுகிறார்கள். Flush ஒலி கேட்டதும் இருவரும் அமைதியாகிறார்கள். அதற்குப் பிறகு உண்மை என்ன என்பதை ஆதவன் சொல்ல மறுக்கிறார். இந்த மௌனமே கதையின் இலக்கிய வெற்றி. பெண்ணை குற்றவாளியாக்காமல், ஆணின் மனத்தில் சந்தேகம் எவ்வாறு கற்பனையை உருவாக்குகிறது என்பதையே கதை ஆராய்கிறது. வாசகனே தீர்ப்பளிக்க வேண்டும்.

காதலின் முகங்கள் –

மீரா, காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், முதலிரவே உடலுறவைத் தவிர்க்க விரும்புகிறாள். ஆனால் கணவன் குளியலறையில் விழுந்து காயமடைந்தபோது அவனுக்கு ஆறுதல் கூறும் தருணத்தில், அவளுடைய மனநிலை மாறுகிறது.

உடலுறவு என்பது திருமணச் சடங்கின் கட்டாயத் தொடர்ச்சி அல்ல; உணர்ச்சி முதிர்வின் விளைவு என்பதை ஆதவன் மிக நுட்பமாகச் சொல்கிறார். உடலுக்கான சம்மதம் மனத்தின் நிலையைப் பொறுத்தது என்ற கருத்து, இன்று “consent” என்று பேசப்படும் எண்ணத்திற்கு நெருக்கமானது.

ஆதவனின் பெண்கள் வெளிப்படையான புரட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கோஷம் எழுப்புவதில்லை; சமூக அமைப்புகளை உடைப்பதில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதின் உரிமையாளர்கள். காதலை எப்படி அணுக வேண்டும், யாரை நம்ப வேண்டும், எப்போது சம்மதிக்க வேண்டும், எப்போது மறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் தாங்களே தீர்மானிக்கிறார்கள்.

இதுவே ஆதவனை அவரது சமகால எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. பெண்களை அவர் ஒழுக்கத்தின் குறியீடாகவோ, ஆணின் கதையை முன்னெடுக்கும் துணைப் பாத்திரங்களாகவோ பயன்படுத்தவில்லை. மாறாக, மனித மனத்தின் சிக்கல்களை வெளிப்படுத்தும் சுயமான மனிதர்களாக உருவாக்கினார்.

இன்று இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவை பெண்ணியப் பிரகடனங்களாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவை எழுதப்பட்ட காலத்தை நினைவில் வைத்துப் பார்த்தால், ஆதவன் பெண்களைப் பற்றிய தனது பார்வையில் தன் காலத்தை முந்திய எழுத்தாளராகத் தென்படுகிறார். அவரது பெண்கள் சமூக விதிகளை வெளிப்படையாக எதிர்க்கவில்லை; ஆனால் அவற்றை அமைதியாக மீறுகிறார்கள். அந்த அமைதியான மீறல்தான் ஆதவனின் சிறுகதைகளுக்கு இன்னும் நவீனத் தன்மையையும் காலத்தை வெல்லும் உயிரையும் அளிக்கிறது.

***

சரவணன் மாணிக்கவாசகம் – மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரில் வாழ்ந்துவருகிறார். இருபதாண்டுகள் வங்கி மேலாளராகவும் அதன்பிறகான பத்தாண்டுகள் தனியார் நிறுவனமொன்றின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியபின் விருப்ப ஓய்வுபெற்றவர். தீவிர வாசகர். தொடர்ச்சியாக மதிப்புரைகளும் இலக்கியக் கட்டுரைகளும் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: sarakavivar@gmail.com