Home Blog Page 99

பேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

0

– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம்.

கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது அமெரிக்கா தான். உலகின் எந்த மூலையில் தோன்றும் சித்தாந்தங்களும் ஒன்று – இங்கு தான் போய் முடியும்/அல்லது இங்கிருந்து தான் தொடங்கும். ஒரே கூரையின் கீழ் உலகின் அத்தனை தேசங்களையும் சேர்க்க கனவு காண ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மில் எத்தனை பேருக்கு  New World Order எனும் புதிய உலகைப் பற்றிய சிந்தனைகள் பற்றி தெரியும்?? என்னடா இது பேட்மேனுக்கும் New World Orderக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா?

சமீபத்தில் வெளியான பேட்மேனின் வரிசைப் படமான “The Dark Knight Rising” எனும் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளின் பாதிப்பை நம் சமகாலப் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். சரி, அது என்ன New World Order? இது பாரதியின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்பது போலவா? இல்லை. ஒவ்வொரு சமூகமும், அது சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தான் அதற்கு தேவைப்படும் மாற்றங்கள் குறித்து சிந்தித்து, விவாதித்து தேவையானவற்றைக்(தீர்வினை) கட்டுவித்துக் கொள்ளும், இப்படித் தான் சமூகத்தின் ஒவ்வொரு மாற்றங்களும் நடைபெறும். New World Order – மேலை நாடுகள் முதல் வல்லரசு கனவில் இருக்கும் எல்லா நாடுகளும் தத்தமது பாணியில் சிந்தித்து வருகிறது, அவை உலகின் உள்ள அனைத்து நாடுகளை விட தன்னை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்ட முயன்று வருகின்றன.

 

இந்த இடம் தான் மாற்றத்தின் விளைவுகளை தீர்மானிக்கும் இடம். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான் தீர்வாகக் கிடைக்கும் மாற்றம், அதன் அடிவேரிலிருந்து மாறாமல் மேலோட்டமாக இருந்தாலோ அல்லது அந்த சமூகம் பிற பிராந்திய மாற்றங்களை கடன் வாங்கிக் கொண்டாலோ அதனால் எந்தத் தீர்வும் கிட்டாமல், அதுவே ஒரு புதிய பிரச்சினைக்கு அடிவகுக்கும். சரி பேட்மேன் போன்ற கற்பனைக் கதைகள் இந்த இடத்திற்கு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

******************************************************************

பொதுவாக இந்த மாதிரியான அதிசய மனிதர்களின் உருவாக்கம் குறித்து அலசிப் பார்ப்பது இக் கட்டுரைக்கு மிக அவசியமாகிறது. குழுவாய் வாழத் தொடங்கிய மனித இனத்திற்கு வாழ்தல் மீதான அவநம்பிக்கை தோன்றும் போதெல்லாம் அவர்கள் கடவுளையோ, தேவதைகளையோ வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. அதைப் போலே நேரே அணுகமுடியாத தேவதைகளுக்கு பதிலாக மதத் தலைவர்களோ அல்லது மந்திரவாதிகளோ, அற்புத சக்தி படைத்தவர்களோ மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாக இருந்தனர். அவர்கள் சக்தி மீது இருந்த பயமும், நம்பிக்கையும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வந்தது, அதற்கு பின் அந்த மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமானவர்கள் ஆயினர்.

 

புராணக் காலங்களில் இந்த மனிதர்கள் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு, அவர்களுடைய வடிவங்களில் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து அதிசய மனிதர்களாக உருவெடுத்தனர், இது தான் சூப்பர் மேன்கள் உருவான உண்மையான காலம். இதற்கு முதன்மையான உதாரணம் என்று எளிதாக ஹனுமானைச் சுட்டிவிடலாம், கருடன், பீமன் எனத் தொடங்கும் வரிசையில் கிராமப் புறத் தெய்வங்களான அய்யனார்,முனீஸ்வரர் போன்றோரையும் பட்டியலுக்குள் சேர்க்கலாம். சீனத்தில் கூட புத்தனையும், போதி தர்மனையும் மாயங்கள் செய்யும் ஒரு மஹாபுருசராகவே வணங்குகின்றனர். இயேசுவின் போதனைகள் கூட அவர் செய்த அற்புதங்களைப் பற்றிக் கொண்டு தான் மக்களிடம் வருகின்றன நிற்க, இப்படிப் பட்ட வரிசையில் தான் கற்பனைக் கதாப்பாத்திரங்களாக காமிக்ஸ் புத்தகங்களிலும், திரைப் படங்களிலும் வரும், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கேப்டன் ப்ளானட், எக்ஸ் மேன், இக்கட்டுரையின் நாயகன்.

*****************************************************************

பதினாறாம் நூற்றாண்டுக்கு பின் அதிவேக மாற்றங்களுக்கு காரணமாக தொழிற்புரட்சியும், கம்யுனிச சித்தாந்தங்களும், அதற்கு பின் ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய காலனிகளும் வந்து முற்றிலுமாக மாறிய உலகம் கண்ட இரண்டு உலகப் போர்களின் வடுக்களும் மனித வரலாற்றை சிதைவு படுத்தின. மூன்றாம் உலகப் போர் ஒன்று வந்து விட்டால் மனித இனத்தின் வரலாறும் டைனோசருடன் சேர்ந்து பாறைகளின் படிமங்களாகிவிடும் என்கிற அபாயத்தை உணர்ந்ததால், ஒன்றை ஒன்றுத் தீண்ட முடியாத இரண்டு ராஜநாகங்களின் சீற்றங்களாக இருக்கின்றன, ஆன போதும் உலகையே ஒரு சந்தைக் கடையாக்கிவிட்டு ஒன்றை ஒன்று விழுங்கிடவும் உலகின் வல்லரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கிருத்தவம், இசுலாமியம், கம்யுனிசம், காலனியாக்கல், உலகமயமாக்கல் போன்ற தத்துவங்கள் எல்லாமுமே இப்படி உலகம் முழுவதும் ஒரே அரசை நிறுவுவதை தமது இலட்சியமாக கொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றன.

இப்படி ஓரளவு உலகை கைப்பற்றும் சித்தாந்தங்களை எல்லாம் இன்று நடைமுறைப் படுத்துவதிலும், அவற்றின் சில நவீன கோட்பாடுகளின் வரையறுத்ததில் (உலகமயமாக்கல், அணு ஆயுதம்) மிக அதிகப் பங்கு உடைய, அமெரிக்கா தான் New World Order எனும் கோட்பாடின் தந்தை.

இதன்படி உலகின் ஒரே நாட்டாமையாக தன்னை நிலைப் படுத்த வேண்டும் என்பது இதன் எளிமையான விளக்கம், அமெரிக்க டாலரை உலகின் பொது செலவானியாக பல வர்த்தகத்தில் வைத்திருப்பது போல (உ.ம். கச்சா எண்ணை), வேளாண்மை, வின்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு(ரக்பி,சாஃப்ட் பால்,WWE,ஐஸ் ஹாக்கி), உடை நாகரிகம், சினிமா, வர்த்தகம் என எல்லாவற்றிலும் உலகின் செயல்பாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் துவங்க வேண்டும் என்பது அதன் விரிவான விளக்கம். இவற்றோடு சில நாடுகளுடனும், உள்நாட்டிலும் நடைபெற்று வரும்/வந்த போர்களுக்கும் அமெரிக்கா தான் மூலம். ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இல்லாத ஒரு அமைப்பு, இப்போது உலகையே ஆளும் ஆசையை சுரக்க வைக்க என்ன காரணம் என்பது தான் ஆச்சரியம்.

***************************************************************************

கதை

இந்த படம் பேட் மேன் -3, மிக முக்கியமாக மற்ற வகை அதிசய மனிதர்களோடு சற்று வித்தியாசமானவன். ஆம் இவன் ஒரு சராசரி மனிதன் தான், அதே சமயம் உலகத்தைக் காப்பாற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரசாங்க ஏஜன்சி உளவாளியும் கிடையாது. பேட் மேன் அமெரிக்காவின் ஒரு பிரபல தொழிலதிபர், அதே சமயம் மக்களுக்கு ஆபத்தாண்டவனாகவும் விளங்க தனக்கென ஒரு அறிவியல் கூடத்தை நிர்மானித்து, அதில் அதிநவீன கேட்ஜட்கள், மோட்டர்கள், ஆயுதங்கள், கணிணி போன்றவற்றை உற்பத்தி செய்து, தன்னையும் சூப்பர்மேனாக நிர்மானித்துக் கொண்ட ஒரு கோடீஸ்வர மனிதன். பொதுவாக இவர் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவது எல்லாம் கிடையாது. எப்போதும் மெல்லிய வயலின் கீச்சலுடன் சோக இழை அவர் கதையில் மையம் கொண்டிருக்கும் (அது பேட்மேனின் குடும்பத்து சோகப் பிண்ணனி).

தற்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடிமுடித்த தி டார்க் நைட் ரைஸஸ் சமகாலப் பிரச்சினைகளை நாம் அணுகிட எவ்வாறு உதவுகிறது. படம் ஆரம்பிக்கும் பொழுது எட்டு வருடப் பகைக்காக “பேன்” எனும் ராட்சத உருவ நிழற்படைத் தலைவன் கோதம் நகருக்கு வருகிறான்.

கோதம் நகரில் பொருளாதார மந்த நிலையில், குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில், அரசாங்கமும் அதைக் கட்டுப்படுத்த இயலாமல் தவிக்க, மக்களும் அவநம்பிக்கையுடன் திடீரென்று மறைந்து போன தங்கள் ஹீரோ பேட்மேனின் வருகைக்கு காத்திருக்கிறார்கள். அந்த நகருக்குள் இருள் பரவுகிறது, ஓய்விலிருக்கும் பிரபல தொழிலதிபரான ப்ரூசின்(பேட்மேனின்) நிறுவனமோ மிகப்பெரிய வீழ்ச்சியில் இருக்கிறது, இருந்த போதும் மிராண்டவின் மேல் கொண்ட ஈர்ப்பில், அவளுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு மின்னாற்றல் திட்டத்தில் முதலீடு செய்ய முனைகிறார், அந்த திட்டத்திற்கு தேவைப்படும் ஒரு ஆற்றல் மிகு இயந்திரத்தை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ப்ரூஸ் அது அணுஆயுதாமாகவும் உபயோக்கும் அபாயம் இருப்பதால் அதைச் செயல்படுத்தாமல் ஒரு நதிக்கு அடியே மறைத்து வைத்திருக்கிறார்.

நகருக்குள் புகுந்த சதிகாரக் கும்பல் முதலில் அங்கிருக்கும் பங்குச் சந்தைக்கு சென்று சில நிமிடங்களில் பெரிய அளவில் ப்ரூஸின் நிறுவனப் பங்குகளை விற்று அவரை அந்நிறுவனத்திலுருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாயுதத்தையும் கைப்பற்றுகிறான், அத்துடன் அந்த தீவு நகரத்தையும் நாட்டுடன் இருக்கும் எல்லா இணைப்புகளையும் துண்டித்து தன் படையின் உதவியால் கட்டுக்குள் கொண்டுகிறான்.ப்ரூஸ் எனும் பேட்மேனைப் பிடித்து மீள முடியாத மரணச் சிறைக்குள் தள்ளுகிறான்.

நகரத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் “பேண்”  அந்நகரத்தைப் பழி வாங்கிட அதை அழிக்கும் முன் வேறு ஒரு காரியம் செய்கிறான், அது தான் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் நம்பிக்கையைக் குழைப்பது. இதுவரை அரசாங்கம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும், மக்கள் அதிகம் நம்பிய அரசாங்க அதிகாரிகள் கயவர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறான்.

மேலும் “பொது மக்கள் யாவரும் சுரண்டப் படுகிறார்கள்” என்றும், சிலர் வசதியுடன் வாழ்ந்திடவே பெரும்பாலோர் கஷ்டப் படுகிறீர்கள் என்றும் கூறுகிறான். அந்நகரத்திலிருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவிக்கிறான், அந்தக் கைதிகளையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் பணக்காரர்கள், அரசாங்க அதிகாரிகள் தான் என்று அடையாளம் காட்டி அவர்களை தண்டிக்க சொல்லிவிட்டு, ஊருக்குள் கலவரத்தை உண்டு பண்ணுகிறான். அதுதான்

மக்களுக்கான ஆட்சி என்று சமத்துவம் சொல்வதாக காட்சிகள் வருகிறது. அவன் அவ்வூரையே அழிக்கத் துணிந்தவன் என்றுத் தெரிந்தும் பெரும்பான்மையான மக்களும் அவனை நம்புகின்றனர், அமெரிக்கர்கள் தான் அதிகமாக தங்களை புதுப்பித்து வரும் மனித இனம் என்பதால் இந்த மாற்றம் சாத்தியம் ஆகிறது இத்திரைப்படத்தில்.

CHANGE”  எனும் வார்த்தையை அமெரிக்காவின் தாரக மந்திரமாகி ஒரு குடியரசுத் தலைவரை(2008) உருவாக்கியதும் பின்னர் அவரால் அப்படி எந்த ஒரு மாற்றம் இது நாள் வரை நம் கண்ணுக்குள் புலப்படாமல் அமெரிக்காவின் பொருளாதார நிலை தொங்கிக் கொண்டிருப்பதும், இப்பொழுது அவர் பதவிக் காலமே சிறிது நாளில் முடிந்து அடுத்த தேர்தலில் என்ன வார்த்தையை அமெரிக்கர்களுக்கு (CHANGE) மாற்றப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறது உலகம். படத்திலும் பெரிய புரட்சி ஒன்று நிகழ்ந்து வெற்றி பெற்ற வேளையில்(மக்களின் மனமாற்றம்), அதனை அழித்து  நீதியைக் காப்பாற்ற மீண்டும் பேட்மேன் அச்சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் தர்மத்தை நிலைநாட்டிய வழக்கமான கதை தான் என்றாலும், இது மிக முக்கியமாய் கவனிக்கப் பட வேண்டிய திரைப்படம்.

இதனால் இந்தப் படம் முக்கியமாகிறது

  • கம்யுனிசம் போன்ற சித்தாந்தங்கள் எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு மட்டும் ஒரு புரட்சியாகவும் அதுவே மேல் நிலையில் உள்ளவர்களுக்கு கட்டற்ற அதிகாரம் கொடுத்தும் விடுகிறது என்று காட்சியமைகப் பட்டுள்ளது.
  • மக்களைப் பொருத்தமட்டில் அரசங்கம் மீதான நம்பிக்கை என்பது எல்லா தேசங்களிலும் ஒன்று தான் அது காணாம்ல் போய்விட்டது, இதற்குத் தீர்வாக ஒன்று அவர்கள் புரட்சியை நம்ப வேண்டும் அல்லது பேட்மேன் போன்ற ஆபத்தாண்டவனை(அல்லது கடவுளரை) நம்ப வேண்டும்.
  • பேட்மேன் மட்டுமல்லாது அனேகமாக எல்லா அதிசய ஹீரோக்களும், உலகைக் காப்பாற்றுவதாக இருக்கும் பிண்ணனியில், உலகத்தை ஒரே ஒரு இயக்கத்தில் கட்டுப்படுத்த பல தேசங்களிலிருந்தும் விதை தூவப் படுகின்றன.
  • இந்த படத்தில் வருவதுபோல “ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப் பங்குச் சந்தையில் கை வைப்பது (இரட்டை கோபுரத் தகர்ப்பான 09/11ல் இருந்து பேட்மேன் திரைப்படம் வரை) இது போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு மிக அவசியமானது” என்று விடுக்கும் ஒரு செய்தி நம்மைப் போன்ற நாடுகளுக்கும் பங்கு சந்தை போன்ற மாயவலையில் மொத்தமாக நம் சேமிப்பு தொலையாமல் இருக்க வேண்டும், அமெரிக்காவில் எழுபத்தைந்து சதவீத மக்கள் பங்குச் சந்தயில் முதலீடு செய்கின்றனர். ஆனால், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏழு சதவீதத்திற்கும் குறைவே.
  • New world order குறித்த அறிவு நமக்கு இல்லையென்றாலும், இது போன்ற ஹாலிவுட் படங்களில் சில சமயம், நம் உலகம் எதிர் நோக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள பெரும்பாலும் உலகின் பிரதிநிதியாய் வருவது அமெரிக்க அதிபரே. இது போன்ற திரைப் படங்கள் உங்களுக்கும் இது போன்ற செய்தியை கொண்டு சேர்த்திருக்கும் தானே.
  • அவதார் எனும் திரைப்படம் நம் புராணக் கதைகளில் இருந்து கதாப்பாத்திரங்களின் வடிவம், பெயர் போன்றவற்றை எடுத்துக் கொண்டதாய் தோன்றியிருக்கும், ஆனால் அதன் கதை கூட நம் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் மலை, காடுகளில் இருக்கும் வளங்களைச் சுரண்டிப் பெரும் லாபம் ஈட்டிட பெரு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெரிய அளவில் மலைவாழ் மக்கள், பழங்குடியினரை அப்புறப் படுத்தும் கதையோடு பொருந்திப் போகும்.
  • Change –மாற்றம் என்பது இரு பக்கம் கூர்மையான கத்தி போல மிக மிக ஆபத்தானது என்று உணர்வு தருகிறது.
  • எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும், இது போன்ற அதிசய மனிதர்களைத் தொட்டுக் கொண்டு முக்கியமான விசயம் எதை வேண்டுமானாலும் கட்டுரை, கதை வழியே எளிதில் மக்களுக்கு கடத்தி விடலாம் தானே??

பேட்மேன் மூன்றாம் பாகத்துடன் இந்த சூப்பர் ஹீரோ வரிசை முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக அச்சத்துடனே வாழும் நம் இனத்திற்கு, கற்பனையிலாவது மக்களுக்கு இது போன்ற அசகாய சூரர்கள் என்றுமே தேவைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக புதிய ஹீரோக்கள் இனி வலம் வருவர்.

 

 

ஜீவ.கரிகாலன்

 

பெருந்திணைக்காரன் – விமர்சனம்

0

பெருந்திணைக்காரன்  


கணேச குமாரன் என்கிற G K –  அங்காங்கே சில கவிதைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவும்  தொடர்பில் இருந்தவன். Chating  -ல் அரையும் குறையுமாக வந்து மறைந்து போகிறவனாக மட்டும் அறிமுகம் கிடைத்தவன். நேரடி அறிமுகம்: வெயில் நதி நோக்கிய பயணத்தில், இதற்கு உபயம் நிலாரசிகனும் விழியனும் தான். அந்த பயணத்தில் கற்கோட்டைக்கும் பாறைகளுக்கும் இடையில் பிடிவாதமாய் வந்து அமர்ந்து கொண்டவன், இன்றுவரை நகர மறுக்கிறான். 

தொகுப்பில் உள்ள  பெரும்பாலான கதைகளை வெளி வந்த இதழ்களிலேயே படித்திருந்தேன். மீதி கதைகளை இந்த தொகுப்பில் தான் படித்து முடித்தேன். தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள் உள்ளன. நான் இதில் நான்கு கதைகளை பற்றிய எனது பார்வையையும் தொகுப்பின் மொத்ததிலிருந்து வெளிப்படும் படைப்பு சார்ந்த எனது பொதுவான பார்வையையும் உங்களின் முன் பகிர்கிறேன். 

1 . மழை சன்னதம்  

தொகுப்பின் முன்னுரையில் சொன்னது போல் நான் வளர்ந்த ஊரிலும் இது போன்ற-இந்த கதைகளில் வரும் – மனிதர்களை கண்டு இருக்கிறேன். இந்த தொகுப்பில்  முதல் கதையில் (மழை சன்னதம்) வரும் அம்மாவை போன்று எனது நண்பனின் அம்மாவும் உண்டு. அடிக்கடி தொலைந்து போவார்கள். அவராகவே வந்தும் விடுவார். இப்படியான ஒரு தொலைதலில் ஊருக்கு மத்தியில் உள்ள குளத்தில் ஒரு மழை நாளில் விடிகாலையில் மிதந்தார். இதனை இங்கு சொல்வதற்கு காரணம் இந்த கதை படித்தவர்களுக்கு தெரியும்.கதையின் இறுதியில் மழைபேச்சியாக உருமாறும் போது எனது நண்பனின் தாயை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இப்படியாகவும் நடந்து  இருக்கலாம் என்ற அனுமானத்தை விட இப்படித்தானே என்ற  உணர்வை தருவதும்  படைப்பு தானே. அந்த விதத்தில் ஆகச் சிறந்த ஒன்று இந்த கதை. வெளிச்சம் படாத இடத்திலும் கதிரொளி பாய்ச்சுகிறான் G K . 

2 . கையறு நிலை

சில கதைகளில்/கட்டுரைகளில் ஏதேனும் மேற்கோள் கொண்டு தொடங்குவார்கள். அந்த படைப்பை முழுமையாக படித்த பின்பு அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் அந்த மேற்கோள் விளங்கும். (சிலவற்றில் முழுமையாக் படித்த பின்பும்  விளங்காது என்பது   வேறு கதை ). அப்படியான ஒரு வரலாற்று பதிவை கொண்டு தொடு(ட)ங்கும் ” கையறு நிலை” – அடுத்து வரும் சில பத்திலேயே இன்றைய நிலையை முகத்தில் அறைய வைக்கிறது.  கதையை படித்த முடித்த பிறகு கணேச குமாரனின் இடது கையை ஆறுதலாய் பற்ற வேண்டும் போல் இருந்தது .

3 .  இடது பக்க அறையிலிருந்து சில பாடல்கள் இந்த சிறுகதையில் 80  களில் இருந்த இளைஞனின் மன ஓட்டத்தையும் நிலைமையும் படம் பிடித்து காட்டுகிறது. அதே காலவாக்கில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். இப்படியான சூழலும் இளைஞனும் இன்று இல்லை  என்ற நிலைக்கு வரும்போது இந்த கதையை ஒரு ஏக்கத்துடனே மறு வாசிப்பு செய்தேன் . அப்படியான காலத்தை பதிவு செய்ததாகவே இதனை பார்க்கிறேன்.

 4 .பெருந்திணைக்காரன் 

தனது சித்தப்பாவின் மூலம் வந்த சுய இன்ப பழக்கத்தினை கொண்டு அவரை தன்னுடைய ஆதர்ஷமாக கொண்டு சுயநலத்துடன் அவரின்(சித்தப்பாவின்) மகனின் மீது வெறுப்பை உமிழ்வதும் தன்னையே மாய்த்து கொள்ளும் அளவிற்க்குக் போவது சற்று அதிகபடியாக  இருக்கிறது. ஏனோ என்னை அது ஈர்க்கவில்லை. ஆனாலும் வாசனை தரும் கிளர்ச்சி ஞாபகங்கள் , தனிமை உணர்வை மறுக்க முடியாது தான். நிறங்களுக்கும் வாசனைக்கும் அந்த பண்பு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது தான். அதன் வடிவமாக இந்த கதையை எடுத்து கொள்ளும் போது இந்த கதையை தவிர்க்க முடியாது.


பொதுவாக : 

ஒரு படைப்பில் புனைவையும் உண்மை நிலையும் பிரித்தறியா முடியாதவையாக இருக்குமானால் அதன் சிறப்பு படைப்பாளியை சாரும். புனைவையும் யதார்த்தத்தையும் சரியான விகிகத்தில் கலந்து கட்டி அடிக்கிறார்  G . K -அனேகமாக விளிம்பு நிலை மனிதர்கள் தான்  கதையில்  உலாவும்  மாந்தர்கள்  என்று  கொண்டாலும்  அவர்கள்  அந்த  நிலைக்கு  தள்ளப்பட்ட  காரணத்தையும் சில இடங்களில் சொல்லித்தான் செல்கிறார்  g k – ஆனாலும் ஒரு சந்தேகம் உண்டு சுய இன்பத்தையும் ஓரின சேர்க்கையும் ஒரு வித குற்ற உணர்வுடன் அணுகுகிறாரோ என்கிற ஒரு எண்ணம் தோன்றி மறையத்தான் செய்கிறது. நடுத்தர குடும்பத்தின் மனப்போக்கு பல இடங்களில் வெளிப்படுகிறது. அந்த இடத்திலேயே உட்கார்ந்துக்கொண்டு விளிம்பு நிலையை பார்க்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 

‘இருள் யாசகன் ‘ நீங்கலாக. நல்ல வேலை மலையை அறிந்து கொள்ள மலை ஏறித்தான் ஆகவேண்டும் என்றில்லாமல் அதன் இறுக்கத்தை அறிந்தால் போதுமானது என்பதை உணர்த்துகிறார். G . K கவிதைகள்  எழுதிய பின்பு தான் கதைகள் எழுத தொடங்கினார் என்று நினைக்கிறேன்.பொதுவாகவே கவிதை எழுதுபவர்களின் Text  ஐ நான் சற்று உன்னிப்பாகப் படிப்பதுண்டு. அப்படி ரசித்து படித்த சில வரிகள் – (இதில் ஒரு கவித்துவம் மட்டுமில்லாமல் இயல்பு நிலையும்  இருப்பதாகவே நான் பார்க்கிறேன். )

அம்மா மாதிரி நிறைய பேர் இருந்தார்கள். அம்மா மட்டும் இல்லை.

இரு கண்களிலும் சூரியனை ப் பதித்து கொண்டு அறைக்குள் வந்து படுத்தேன் ரகசிய அவமானங்கள் வரிசையாக் தொடர்கின்றன.

ரத்தம் சொட்டச் சொட்ட மீண்டும் மீண்டும் அடித்து விளாசும் ஊரின் நாக்கு 
நீர் சூலம் எடுத்து நீரை குத்தினாள். மழையை பிடுங்கி மழையில் எறிந்தாள்

தொடர்ந்து இவரின் கதைகள் கவிதைகள் மனித உறவில கிடக்கும் ரகசியங்களையும் வெளிச்சங்களையும் சொல்லி வருகின்றன.  உள்ளாடைகளை திருடும் முகர்வில் இருந்து தெருவின் மங்கிய ஒளியில் நடக்கும் ரகசியங்கள் வரை பல புள்ளிகளை தொகுப்பில் காண முடியும் பைத்தியமாகவே பிறந்த மேரி  மகனின்  கதை எழுதபடாதது போல் வீதியெங்கும் உலாவும் மனித மனங்களின் இருள்களை அள்ளி அள்ளி  இயல்பு மாறாமல் இனியும் தருவார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

 

வேல்கண்ணன்

பேன்ஸ்பெர்மியா

0

 

இந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள் பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடந்து ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு புலம் பெயர்கிறது என்று இதற்கு விளக்கம் தரலாம். பூமியில் உள்ள உயிரினங்களும் இதே போன்று பிரபஞ்சத்தின் விதையிலிருந்து ( வேறு ஒரு இடத்திலிருந்து ) பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்று சொல்வதுதான் பேன்ஸ்பெர்மியாவின் கோட்பாடு.

சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் எண்ணற்ற விண்கற்கள் தாக்குதல்கள் நடைபெற்றன என்றும், அதில் ஒரு விண்கல்லில் இருந்த பாக்டீரியா வளர்ந்து அதன் தொடர்ச்சியாக உயிரினங்கள் உருவாகத்தொடங்கின என்றும் இது சொல்கிறது. எங்கிருந்து வந்திருக்கும் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  15 மில்லியன் வருடங்களுக்கு முன் செவ்வாயில் இருந்து சிதறிய விண்கல் 1984 யில் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு Allan Hills 84001 (ALH84001)   என்று பெயர் சூட்டி அதனை ஆராய்ந்ததில் அதில் நுண்ணியிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் செவ்வாயில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராயப்போவதாக ஒரு அறிவிப்பும் வெளியிட்டார்.

செவ்வாயில் முன்பு நீர் இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வியாழனின் அருகில் உள்ள யூரோப்பா என்ற நிலவில் கீழுலகக் கடல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நீர் மட்டுமே ஒரு உயிர் உருவாகக் காரணமில்லை. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் கார்பனோடு தொடர்புடையவை. விண்கற்களில் சோதனையிடுபோது அதில் கூட்டுப் பொருட்களில் உள்ள கார்பன் மற்றும் அமினோ அமிலங்கள் ( புரோட்டின் அடுக்குகளை உருவாக்கும் ) இருப்பது தெரியவந்தது.  இந்தப் புரோடீன்களே உயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவை .

சில பாக்டீரியாக்கள் + 115 டிகிரி செண்டிகிரேடு வெப்பத்திலும் சில நுண்ணுயிரிகள் – 18 டிகிரி செண்டிகிரேடு வெப்ப நிலையிலும் வளர்வதைப் பார்க்கும்போது, நுண்ணயிரிகள் எந்தச் சூழலிலும் வாழும் திறன் கொண்டவை என்று தெரிய வருகிறது.

எங்கும் பரவி உள்ள பாக்டீரியாக்கள் பூமியில் வாழ்வதைப் போல விண்வெளியில் உயிர் வாழ முடியுமா என்றும் ஆராய்ச்சி செய்தது ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். களிமண், செம்மணற்பாறை, வடிவமைக்கப்பட்ட விண்கல் ஒன்றில் ஒரு குவியல் போல செய்து பூமிக்கு வெளியே உள்ள ஒரு வெளியில் விண்கோள் மூலம் கொண்டு வந்து வைத்தனர். இரண்டு வாரங்கள் கழித்து சோதனை இடுகையில் செம்மணற்பாறையில் கலந்த பாக்டீரியாக்கள் தொடர்ந்து உயிரோடு இருப்பது தெரிய வந்தது. Extraterrestrial solar UV radiation    பாதுகாப்பு செய்யப்பட்டால் பாக்டீரியாக்கள் ஆறு வருடங்கள் கூட வெளியில்(SPACE ) வாழும் என்றும் ஆராய்ச்சி தெரிவித்தது.

பேன்ஸ்பெர்மியா தியரியில் வெளியில் இருந்து உயிரின் விதை பூமிக்கு வந்தது என்று சொல்லப்படுகிறதே ஒழிய அது எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. தற்போதைய சூரியமண்டலத்தில் பூமி மட்டுமே உயிர் வாழும் சூழல் கொண்ட இடம் என்று சொன்னாலும் முழுக்க ஆராயாமல் சொல்ல முடியாதல்லவா? உலகெங்கும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பார்ப்போம் அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதன் வேறு கிரகத்தில் வாழும் சூழல் அமைக்கிறானா என்று?

 

சாத்தப்பன் நா

 

 

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்

0
என்றோ ஒரு நாள்
வீசியெறிந்த உணவிற்கு
காலைச் சுற்றும் நாயென
ஞாபகத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன்நினைவில் காடுள்ள
அங்காடித்தெரு பெரும்பசி யானையாய்
பிரிவை மாத்திரமே
அகோரமாய் வரைகிறாய் நீமிக உக்கிர வெயில்
நம் இருவரையும் புணர்ந்து கொண்டிருக்கிறதுநாளையொரு பெருமழையில்
அழிந்தும் போகலாம் இத்தாவரம்
அல்லது
ஆழப் புதைந்துக் கிடக்கும் 
வேரிலிருந்து மெல்ல
தலையெடுக்கலாம் ஒரு சிறு துளிர்

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்
யாரால்தான் படித்துவிடமுடியும்?*****
ஆறுமுகம் முருகேசன்

கால விஷம் – கிரிஷாந்

0

இதயம் கனத்த மழை
வழிவது காலத்தின் சீழ்.
இருள் படிந்த மலைகளில் நெளிகின்றன
விஷம் கக்கும் மேகங்கள் .
காலின் கீழே சரளைக் கற்கள்
ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஏதேதோ .
மோனங்கள் விழித்தன
பெரும்பகலை விழுங்கியது காலம் .

ராத்திரி நீண்ட பயணம்
கால்களில் இரத்தம் வழிய வழிய
நடக்க வேண்டும்
வெளிறித் துடிக்கும் இதயத்தைக் கையில்ப்
பிடித்தபடி .
மரணம் நின்று கொண்டிருக்கிறது
வரும் வழியில் இரண்டு பறவைகள்
சொல்லிச் சென்றன .
அச்சமற்ற நிழலில் தொங்கிக்கொண்டிருந்தது
வலிமையற்ற எனதாசைகள் .
நெருங்கி விட்டேன்
கண்களில் மரணம்
கைகளில் நகங்களில் மயிரில்….
இதயம் கருகிகிறது ….வாசனை வருகிறது
யாருமில்லை ..யாருமே
பெரும் இருள்  சிதிலமடைந்தன  கேள்விகள் .

மீண்டும் விழித்தது காலம்
கவ்வியதை விட்டபடி சிறகுதைத்து மீள்கிறது
வெளிக்கே .

 

கிரிஷாந்

 

 

 

 

அளவு – கிரிஷாந்

0


வானம்
குடையின்
இன்னுமொரு அளவு .
மழை பூமியின் அளவுகோல் .
கட்டடங்கள்
மனிதனின் .
சொற்கள் எனது .
வானம் விரிகிறது .

கிரிஷாந்.

சர்ப்பங்களிலான உலகம்

0

 

நெருங்கி வருகிற விழிகளிலிருந்து
சர்ப்பங்கள் வெளியிறங்குவது
அறிந்ததே
நகர்தல் மறுதலிக்கிறோம்

விஷம் பூத்த
செந்நிற மௌனம் நிரம்ப
துயர் இசைப் பாடல்

ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து
துரோகத்தையும்
குரூரத்தையும்
குறிப்புகள் சேகரித்து சேகரித்து
மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள்

யாவருக்குமான ஆமென்களோடு
கரைந்து தீரட்டும்
தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த
ஸ்வாதீனத்தில் அல்லாத
நமது வக்கற்ற நேசமும்
நாமும்

****
ஆறுமுகம் முருகேசன்

திட்டமிட்டு பெய்த மழை

2

மழை நீண்டுத் தணிந்த
முன்னிரவில் நடக்கிறோம்
ஒரு குடையில்….

ஈரத்தைப் பொசுக்கி வெளியேறும்
உன் தோள்களின் சுகந்தம்
விரகத்தின் காம்புகளை
உரசத்தான் செய்கிறது
உரையாடல்களில் மதியிருந்த போதும் ..

தற்காலிகமாய்க் குவிந்த
மழைப் பள்ளங்களுக்காகவும்,
இடரும் சிறு கற்களுக்காகவும்,
பரஸ்பரம் கரம் பற்றுகிறோம்.
(அவை
நமக்காகவே உருவாக்கப் பட்டிருந்தன)
வெப்பத்தின் மீட்சிகள்
விரைந்து கடக்கின்றன
உணர்ந்தும் உணராதவை போல்…

குடைக்கான நன்றியைப் பெருக்கிக் கொண்டே
அரவணைக்கிறாய்,
மாளாத வெப்பத்தில் திறக்கின்றன
நாணத்தின் அவிழாத முடிச்சுகள்-
அனைத்தும் ….

கூர்முனைக் கத்தியின் சீற்றத்தோடு
நெருங்கும் சீரற்ற சுவாசக்காற்று
உழுது கிளர்ந்தது
ஆழ்நிலத்துப் பெருங்காட்டை,
விவரிப்பில் அடங்காத
ஈரத்தின் வாசனை
விரவிப் பெருகியது…..

குளிரைப் பொருளாக்கி
தேநீருக்கு ஒதுங்கினோம்.
நீ
இதழ்வெளி பதிந்து
அருந்திய கோப்பையின்
விளிம்புகள் சுவைத்த போது
ஒரு துளி மதுவிருந்தது…..

வெகுதூரம் பயணத்திற்கான
வழியனுப்புதல் போல்
கனத்த இதயத்துடனான என்னைத்
தனித்தனுப்பிய போது
விஷமு மிருந்தது …

சிறு புற்கள் மீதமரும்
பனித்துளியாய்,
மயிர்க் காம்பில் உதிர்ந்து விழும்
மழைத் துளியைப் பருகிக் கொண்டே
கடந்து விடுகிறோம்
நிலமற்ற சொல்லோடும்
பொருளற்ற ஆமோதித்த லோடும்….

அமுதாய்ச் சொரியும் மாரிக்காலம்
அலையாய் தகித்தும்
அயர்ந்து உன் தோள்களில் சாயாமலேயே
மறைந்து விடுகிறது
நீ என்னை
வீடு வரை சேர்ப்பித்த
நெடும் பயணம்…..

உறங்காத மனத்தின் இரவெங்கும்
பெருவெள்ளம்……

–(பாலா இளம்பிறை)

மரம் -(அய்யப்ப மாதவன்)

0

இலைகள்
 

 

 

 

 

 

மரத்திலிருந்து
இலைகள் உதிரும் கணங்கள்

காற்றில் உதிர்கிற நடனங்கள்
ஒன்றுபோலில்லை

ஒன்றுபோலில்லாத உதிரும் கணங்களும்
இலை நடனங்களும் அழகு

எங்கும் நுட்பமாய்ப் பிறப்பும் உதிர்வும்
இடையிடையே நடனமும்
குளிர்ந்த காற்றும்.

 

ஏழாம் அறிவு

0

ஏழாம் அறிவு – தேவையற்ற காலத்தில் தமிழுணர்ச்சி தூண்டிய வியாபாரப் படம்.

ஏழாம் அறிவு பற்றிய முன்னோட்டங்கள் விளம்பரங்கள் என்னைக் கிறுக்குப்பிடிக்க வைக்க திரையிடப்படும் சிறப்பு முதல் காட்சியைப் பார்த்துவிடும் பேராவல் தொற்றிக்கொண்டது. ஆகையால் எவ்வளவு காசு செலவானாலும் பார்த்துவிடவேண்டுமென்ற வெறியுடன் அலைந்து திரிந்து ரூபாய் இருநூறுக்கு சாலிக்கிராமம் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் திரையரங்கில் முன்பதிவு செய்துவிட்டு தமிழ்திரைப்படம் உலகத் தரத்திற்கு எடுக்கப்பட்டிருக்கிறதென்ற இறுமாப்பில் நண்பர்களிடம் டிக்கெட் எடுத்துவிட்டதைப் பற்றிச் சொல்லிப் புளாகாங்கிதமடைந்துகொண்டேன். இதுவரை எந்தத் தமிழ்த்திரைப்படத்தையும் இவ்வாறு பார்க்காத நான் இப்படத்தைப் பார்க்கும் காரியத்தை அடைந்தேன் எனில் அதற்கு முழு பொறுப்பு இத் திரைக்காவியத்தின் இதுவரை தோல்வியே தராத வெற்றியை மட்டுமே ருசித்து புலன்கள் மயங்கியிருந்த ஏ.ஆர். முருகதாஸையேச் சாரும். பல்லவ மன்னன் போன்றே அரிதாரத்தில் ஆஜானுபாகுவாய்க் காட்சியளித்த சூர்யாவையும் முக்கியமாய்க் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

அவதார் என்ற உன்னதத் திரைப்படத்தை இவ்வுலகிற்கு அளித்த ஜேம்ஸ்கேமரூனின் திறமையைப் பற்றியும் இந்த இயக்குநர் விமர்சித்துப்பேசினார். அவதார் போன்ற படத்தில் கதையென்ற ஒன்றில்லையென்றும் தொழில்நுட்பம் மட்டுமே சிறப்பாக இருந்ததென்றும் தன் ஏழாம் அறிவில் பேசிச் சிறப்புப் பெற்றார். அதனால்தான் என்னவோ தன் அதீத நம்பிக்கையில் உலக சினிமாவில் ஒரு தமிழ் சினிமா என்று சுவரொட்டிகளில் அச்சடித்து பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார் போலும். தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் இந்தியாவில் ஹிந்தியில் போய் ஒரு படம் பண்ணி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியும் உலகின் மிகப்பெரிய திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமொன்றிற்கு இயக்குநராக இருக்கும் தகுதியும் மட்டுமே இருந்துவிட்டால் உலகத் திரைப்படம் பற்றி மிகச் சாதாரணமாக விமர்சித்துவிடாலாம் போலும்.

திரைப்பட மேதைகள் நிறைந்த உலகில் ஏழாம் அறிவை எடுத்த இயக்குநரும் இணைந்திருக்கிறாரென்கிற பெருமிதத்தோடு பண்டிகையின் முதல்நாள் மனைவியின் வசவுகளோடு திரையரங்கிற்கு வந்துவிட்டேன். மொத்தம் நான்கு பேர். பங்கஜம் திரையரங்கில் முன்பு ஒரே ஜனத்திரள். உடலில் சதைகளை அல்வாத் துண்டுகளைப்போல காட்டிக்கொண்டிருந்த பல்லவ வர்மன் சூர்யாவின் விளம்பரத் தட்டியை மிகுந்த பரபரப்புடன் ஒரு கூட்டம் அப்போதுதான் நுழைவாயிலின் மேலே கட்டிக்கொண்டிருந்தது, எங்களுக்கான இருக்கைகளில் டார்ச் விளக்கின் ஒளியில்லாமலேயே சிரமமின்றிக் கண்டுபிடித்து அமர்ந்துகொண்டிருக்கையிலேயே முன்னிருந்த திரை ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவமன்னனின் மூன்றாவது மகன் போதி தர்மன் இளவரசனாக நின்றுகொண்டிருந்தார்.

கஜினியில் மொட்டையாக ஞாபகமறதிக்காராக நடித்த சூர்யாவா இது என்பதுபோல் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தினார். தற்காப்புக் கலை, இயற்கை மருத்துவம், நோக்கு வர்மம் போன்றவற்றில் மிக வல்லமைவாய்ந்த போதி தர்மர் புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு அம்மதத்தை மேலும் உலகமெல்லாம் பரவச் செய்ய அவர் முதலில் சீனாவிற்கு அனுப்பப்படுகிறார். பெற்றோர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்புகிறார் அவர் எழுதிய பெரிய நூலை ஒன்று கொடுத்துவிட்டு. உண்மையில் படம் ஆரம்பித்ததுமே பிரமிப்பு மேலோங்கியது மிகப்பெரிய உண்மை. மன்னர் ஆட்சி காலத்தை அப்படியே கண் முன் நிறுத்தியிருந்தார்கள். வியப்பு மேலோங்க இமைக்காது சீனாவிற்குக் குதிரையிலேயே கிளம்பிய போதிதர்மனின் பின்னால் செல்லத் துவங்கினேன். சீனாவில் துறவியின்கோலத்திறங்கி அவ்வூர் மக்களை ஆட்கொள்ளி நோயிலிருந்தும் தான் கற்று வைத்திருந்த மருத்துவமுறையினாலும் கற்றுவைத்திருந்த நோக்கு வர்மத்தாலும் தற்காப்பு கலையாலும் கொள்ளையர்களிடத்திலிருந்தும் காப்பாற்றுகிறார் போதிதர்மன்.

இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் மனதை கொள்ளைகொண்டது உண்மை. சூர்யா உண்மையில் காவியுடையில் ஒரு துறவியைப் போல் மிளிர்கிறார். அந்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவராகவும் மரியாதைக்குரிய புத்த குருவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தாமோ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். அந்நாட்டு மக்களுக்கு தான் அறிந்த ஷாவ்லின் குங் ஃபூவைக் கற்றுத்தருகிறார். இருபது நிமிடங்கள் கழிந்துபின் படம் தாறுமாறாய் ஓடத்துவங்கிற்று தமிழ் திரைப்படமென்றால் ஒரு காதல் பின்னொரு ஊடல் பாடல் கூடல் வேண்டுமில்லையா. அந்தச் சூத்திரத்தையும் தமிழில் தோல்விபடங்களையே தந்திராத இயக்குநர் விட்டுவிட தவறவில்லை. நீள்குடுவை ஜீராவில் ஊறிக்கொண்டிருந்த சூர்யாவைப் பார்த்த போது பரிதாபமாகத்தானிருந்தது. அரவிந்தாகச் சர்க்கஸில் சுற்றிக்கொண்டிருந்தவனைப் பிடித்து சுபா என்கிற விஞ்ஞானி போதி தர்மனின் மரபணுக்கள் அவனின் உடலில் இருப்பதாக ஆராய்ந்து அவனையே பின் தொடர்ந்து அவனை போதி தர்மனாக மாற்றி இவ்வுலகிற்கு நல்லது செய்ய விளைகிறார். ஆனால் அரவிந்தோ சுபா மீது ஒரு தலைக்காதலாகி கசிந்து உருகுகிறார். ஒரு கட்டத்தில் அரவிந்திற்கு சுபா அவனைச் சுற்றிவருகிற காரணம் தெரிந்ததும் காதலித்தவளின் மீது கடுஞ்சினம் கொள்கிறார். தோல்வியடைந்தவிட்ட காதலில் மூழ்கித் தவித்து வழக்கமான தமிழ் திரைப்படத்தில் வரும் சோக கீதம் இசைக்கிறார். படத்தில் வருகின்ற பாடல்கள் அனைத்துமே படத்தின் வேகத்திற்குத் தடையாகவே உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜின் பழைய இசைக்கோவைகளை கொஞ்சம் மாற்றி வாசித்து வாசித்து உற்சாகத்தைக் குழிதோண்டி புதைக்கிறார். பாடல் தொடங்கியதுமே திரையரங்களிலிருந்து ஒரு கூட்டம் எழுந்து புகைப்பதற்கோ மூத்திரம் கழிக்கவோ செல்கின்றது. அந்தக் கூட்டத்தினிடையே நானும் ஒரு ஆளாகயிருந்தேன்.

பிதாமகனில் பாலாவால் செதுக்கப்பட்ட சூர்யா அவருக்களிக்கப்பட்ட காட்சிகளைத் திறம்பட செய்திருக்கிறாரென்றாலும் படம் முடிந்து திரும்பியதும் அவர் மனதில் நிற்கவில்லை. படத்தில் டோங் லீ என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் வியட்நாம் நாட்டைச் சார்ந்த நடிகரே மனதில் ஆழமாகப் பதிந்தாரென்றால் அது மிகையில்லை. முருகதாஸ் உருவாக்கிய திரைக்கதையின் போக்கே இப்படியொரு விபரீத்ததைச் செய்கிருக்கிறது. வில்லனின் உடல்மொழியும் குங்ஃபூ சண்டைக் காட்சிகளில் அவரின் அங்க அசைவுகளின் அழகும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. அவருடைய உடல் பாவனைகள் டெர்மினேட்டரில்(பாகம் 2) வில்லனாக வரும் எந்திரனை நினைவூட்டுவதாக இருக்கிறது. இதற்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றியைத் தமிழிலும் ஹிந்தியிலும் கொடுத்த கஜினி என்கிற படம் மெமண்டோ என்ற அமெரிக்கப் படத்தின் முழுத் தழுவலென்பது உலமறிந்த விசயம். ஆகையால் கதையையே எடுத்து கையாண்டவர் கதாபாத்திரத்தின் தன்மைகளை நகலெடுப்பத்தில் ஆச்சர்யங்கள் எதுவும் மேலோங்கவில்லை.

தமிழ் திரைப்படத்தில் வேறு தேசத்தவன் வில்லனாக படத்திற்குள் நுழைந்ததுமே படம் கொஞ்சம் விறுவிறுப்பானது என்னவோ உண்மைதான். நாயகனையும் நாயகியையும் துரத்தி துரத்திக் கொல்ல முனைகிற காட்சிகளில் படம் பார்க்கிறவர்கள் கொஞ்சம் சுறுசுறுப்படைகிறார்கள். திடீரென வேகத்தடைபோல் ஒரு காதல்பாட்டைப் போட்டு பார்வைகளை சோர்வடைய வைக்கிறார்கள். நோக்கு வர்மம் என்ற கலையில் கைதேர்ந்திருக்கும் வில்லன் பார்க்கின்றவர்களையெல்லாம் கண்களாலேயே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவர்களை ஏவியே நாயகன் நாயகியைக் கொல்ல பல தந்திரங்கள் புரிகிறார். சாலைகளில் துரத்தப்படும் நாயகனையும் நாயகியையும் வில்லன் டோங் லீ நோக்கு வர்மத்தை அதிகமாய்ப் பயன்படுத்திப் படாதுபாடுபடுத்திவிடுகிறார். சாலையில் போவோர் வருவோரையெல்லாம் கிழவனிலிருந்து குமரிகள் வரை கண்களால் மயக்கி இருவரின் மீதும் ஏவிவிடுகிறார். வரைவுருவக்கலை (graphics) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏகப்பட்ட கார்களைச் சாலையெங்கும் தொடர்ந்து மோதவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ரசிக்கும்படியில்லாமல் என்னடா இது என்பதுபோல அலுப்பைத்தான் தருகிறதே ஒழிய மகிழ்வைத் தரவில்லை. காரணம் இருபது நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதாக இருக்கலாமென நினைக்கிறேன். இது மாதிரியான நொறுங்குகிற கார்களிடையே சமாளித்து சண்டைவேறு போட்டு மீற முடியாமல் திணறி அவன் கண்டுபிடித்துவிட முடியாத இடத்திற்கு வந்து ஒளிந்துகொண்டு நாயகன் தமிழனின் கோழைத்தனத்தை நாயகியிடம் நொந்து வெறுத்துப் பேசுகிறான்.

தமிழக வரலாற்றிலிருந்து போதி தர்மனை உருவி அவனுடைய மரபணுக்கள் இன்னும் நம்மிலிருப்பதாக பல மைல் நீளத்திற்கு பூச்சுற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் எதிரியாக விளங்கும் சீனாவை வம்பிற்கிழுத்து வில்லன்களை உருவாக்கி போதி தர்மனின் மரபணுக்கூறுகள் கதாநாயகனுக்காகப் பொருந்திப் போவதாக மரபணு ஆராய்ச்சியில் மருத்துவம் கற்றிற்கும் கதாநாயகி கதைகட்டிவிட திரைப்படம் நம்பகத்தன்மையிழந்து கன்னாபின்னாவென்று நகர்கிறது. ஏமாளித் தமிழனை உறக்கத்திலிருந்து விழிக்க வைப்பதுபோல் வசனங்களை அள்ளியிறைத்து கடைசியில் எதிரியான சீனனை மண்ணைக் கவ்வ வைத்து தமிழனுக்கு அறிவுரைகள் வழங்கி திரைப்படம் உப்புச் சப்பற்று முடிந்துவிடுகிறது. அதிக எதிர்பார்பைப் படுபயங்கரமாய் உருவாக்கி தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்த தமிழனை தமிழ் வெறியூட்டி அனுப்பியதுதான் மிச்சம். ஒரு முழு நீளத் திரைப்படம் பார்த்த திருப்தியை ஏழாம் அறிவு தரவில்லையென்பதுதான் கண்கூடான உண்மை.

மலேசியாவில் இலங்கையில் இப்போது இந்தியாவிற்கு வந்துவிட்டான் சீனன் என்று வீர ஆவேசம் கொண்டு இனிமேல் தமிழன் திருப்பி அடிக்கணுமென்று வசனத்தைச் சொன்னதுதான் தாமதம் திரையரங்கில் தமிழர்களின் உணர்வு கத்தல்களாகவும் கரகோஷங்களாகவும் எழுந்ததை மறுக்க முடியாது. தமிழ் தமிழன் என்று உசுப்பேற்றியே தமிழர்களை வாழவிடாமல் கொன்றழிக்கும் காரியங்கள் உலகெங்கிலும் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். இந்தக் கத்தல்களையும் இம்மாதிரியான வசனங்களையும் மட்டுமே கேட்டு புளித்துப்போன நாம் இவ்வுலகின் முன்னால் நிராயுதபாணிகளாகவே இன்றுவரை இருக்கிறோம்.

தமிழினத்தைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்த இந்தியக்கண்டத்தின் ஆளும் வெறியையோ அதற்குத் துணைபோன பதவி வெறிகொண்ட தமிழக அரசியல் பற்றியோ ஒரு வரி வசனம்கூட இல்லாமல் சீனன் தான் என்பதுபோல் எழுதி இனழிப்பின் ஒட்டு மொத்த வரலாறையே மறைத்து தமிழனின் வீரத்தை மட்டுமே தட்டியெழுப்பி புத்திக்கூர்மையில் நம்மிடையே வியாபாரத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்களென்பதைத் தவிர உண்மையை உலகிற்குச் சுட்டிக்காட்டும் நல்லெண்ணங்களெல்லாம் இவர்களிடம் ஒரு துளியுமில்லை. இருக்கப்போவதுமில்லை. இலங்கையில் எல்லாம் அழித்தோழிக்கப்பட்டுவிட்டது என்பதை உலகமே அறிந்திருக்கவேளையில் போதி தர்மனின் வரலாற்று கதை வழியாக மிகத் துணிச்சலாகச் சொல்வதாக நினைத்துக்கொண்டு இலங்கையின் இன அழிப்பை வியந்தோதுவதில் எவ்வித புல்லரிப்புகளும் புளகாங்கிதங்களும் இங்கு உருவாகிவிடவில்லையென்பதை இப்படத்தைத் தமிழுலகிற்குத் தந்த கூட்டணிக்குத் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

இம்மாதிரியான தந்திரங்களுடன் வரும் திரைப்படங்களில் இந்த உண்மையை நாம் கவனிக்கிறபோது நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற வேதனையை அனுபவித்துக்கொண்டுதானிருக்கிறோம். பொருளாதார ரீதியில் வெற்றியடையவேண்டுமென்ற நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்படும் திரைப்படங்கள் இது மாதிரியான இலங்கைதமிழர் பிரச்னைகளை வெறும் வசனங்களில் மட்டுமே வைத்து வியாபார உத்தியாக மாற்றிருப்பது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையான தமிழனின் தமிழ்பற்றுதலை வெளிப்படுத்துவதாக நம்பமுடிவதில்லை. படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தை திரும்பும் திசையெல்லாம் விளம்பரப்படுத்தி படத்தைப் பார்க்கும் செய்யும் தந்திரத்தைச் செய்யாதார்கள். உண்மையிலேயே இலங்கைத் தமிழனின் விடுதலையைப் பற்றி தன் அடுத்த படமாக முருகதாஸ் எடுத்தாரென்றால் முதலில் பெருமைப்படுபது உலகமெல்லாம் நிரம்பிய தமிழர்களைத்தானிருப்பார்கள்.

இம்மாதிரியான வரலாற்றைத் திரைப்படமாக்கும்போது வரலாற்றறிஞர்களுடன் விவாதித்து உண்மையைக் கண்டறிந்து ஆற்றொழுக்கான திரைக்காவியத்தைப் படைத்திருக்கவேண்டும். தமிழனின் மிகப்பெரும் அடையாளங்களான சிலம்பம், வலரி, களரி, வர்மம் போன்ற நம் கலைகளை பல்லவ ஆரிய வம்சமும் கற்றுத்தேர்ந்தென்று ஆரியர்களெல்லாம் சேர்ந்து கூறுவதை முருகதாஸ் போன்றவர்கள் வேண்டுமானால் நம்பிவிடலாம். உண்மையை அறிந்த தமிழர்களை ஏமாற்றிவிட முடியாது. கதைக்காக பணம் சம்பாதிக்கும் வரலாற்றைத் திரிக்கும் திரைப்படங்களை எடுப்பதை தவிர்த்து தீனா ரமணா கஜினி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் சமூக அக்கறைகளும்கொண்ட கதைக்களன்களை முருகதாஸ் முன்புபோலவே தேர்வு செய்துகொண்டால் உலக சினிமாவில் இடம் பிடிப்பாரோ இல்லையோ தமிழ் வணிகசினிமாவில் மரியாதைக்குரிய தனது இடத்தையெனும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வார் என்பது என் நம்பிக்கை.

– அய்யப்ப மாதவன்