Home Blog Page 42

டெல்டா ஊதாரி- 2

0

பேரலைகளின் உறக்கம்

சிவகுமார் முத்தய்யா

குளிக்கரை பாண்டியனை நேற்று கடைவீதியில் பாரத்தேன். ஆள் அடையாளமே தெரியாமல் போய்விட்டிருந்தார். கன்னங்கள் குழி விழுந்து முகமெல்லாம் கருத்துப் போய் கன்றியிருந்தன. பாண்டியனை நான் பார்த்து பத்து வருடங்கள் இருக்கும். இடையில் அவரைப் பார்க்கவில்லை. சென்னையில் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழ்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இப்படியான மோசமான நிலையில் அவரைப் பார்க்கையில் ஏனோ வருத்தமாக இருந்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி அலைகள் எழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது. நாகப்பட்டிணமும் வேளாங்கண்ணியும் அதிக பாதிப்பு என்கிறது புள்ளி விவரமும். சுனாமி அலைகள் தாக்கிய அன்று தொடங்கி தொடர்ந்து முன்று நாட்கள் அடிக்கடி பேரலைகள் தோன்றி கரைக்கு வந்தன. இதனையடுத்து கடலோரக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். சுனாமியின் கோரத்தாண்டவத்தை நேரில் பார்த்தவர்கள் ஒட்டம் பிடித்து திருவாரூர் பகுதிகளுக்கு அடைக்கலம் தேடி வந்துவிட்டார்கள். அவர்களை அரசுப்பள்ளிகளில் தங்க வைத்து உணவு அளித்தது மாவட்ட நிர்வாகம். அப்படி வந்தவர்களில் ஒருத்தி சாந்தா. அவளது கணவன் சுனாமியில் பலியாகிவிட்டார். தனது ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். அப்போது அங்கே சென்று சின்னச்சின்ன உதவிகள் செய்தவர்களில் பாண்டியனும் ஒருவர். அப்போது அங்கு இருந்த சாந்தாவுக்கு ஆறுதல் சொல்லி அவளது மகனை கவனித்துக் கொண்டார் பாண்டியன். அவளது கணவனைத் தேடி சாந்தா போனபோது அவளுடன் கூட சென்று உதவி புரிந்தார். அவளது கணவர் சடலம் கிடைக்கவில்லை.

நாளடையில் பாண்டியனும் சாந்தாவும் நெருக்கமாகிவிட பாண்டியன் அவளோடு சென்னைக்கு போய்விட்டார். அதற்கு பிறகு இந்த பக்கத்திலேயே அவரைப் பார்க்கவில்லை. கணவனை இழந்து நிற்கும் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த பாண்டியனை பாராட்டாதவர்கள் இல்லை. அப்படிப்பட்டவரை சில நாட்களுக்கு முன்புதான் நான் பார்த்தேன். இதற்கு பிறகான விஷயத்தை இறுதியில் சொல்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். அப்போது நான் கூட்டுறவு சொசைட்டி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சுனாமி முடிந்த எங்கள் பகுதியில் மீன் சாப்பிடுவதையே மக்கள் நிறுத்தியிருந்தனர். அங்கு ஏற்பட்ட மரணங்கள் மற்றும் அழிவுகள் அந்தளவுக்கு மன அழுத்ததை உருவாக்கியிருந்தன. 2006-ஆம் ஆண்டு வாக்கில் முதன்முதலாக நாகப்பட்டிணத்தில் இருந்து சித்ரா என்ற பெண் மீன் வியாபரத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு நாற்பது வயது இருக்கும். அவரது இரண்டு மகன்கள் மற்றும் கணவர் சுனாமியில் இறந்து விட்டார்கள் என்று சொன்னார். அதன் பிறகு சிலர் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். மீன் வியாபாரம் சுமாராக நடப்பதாகச் சொன்னார். நான் காலை ஒன்பது மணிக்கு பஸ் ஸ்டாப்பில் தினமும் பார்ப்பேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவரிடம் தான் மீன் வாங்குவேன். அவரிடம் கடல் பற்றியும், மீன் பிடிக்கும் முறை குறித்தும் கேட்பேன் அவரும் என்னிடம் தனக்குத் தெரிந்தவற்றைப் பற்றி சொன்னார்.

இந்த நிலையில் ஒருநாள், நான் காரைக்கால் வானொலி நடத்திய கவியரங்கத்துக்கு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். நானும் கவிதையோடு சென்று வாசித்து முடித்து விட்டு கிளம்பும்போது ரூ.50 கொடுத்தார். வானொலியில் இருந்து உங்கள் முகவரிக்கு செக் அனுப்பி வைப்பார்கள் என்று சொன்னார். மதியம் மூன்று மணி அளவில் காரைக்காலில் இருந்து நாகப்பட்டிணம் வந்து பேருந்து நிலையத்தில் ஏதாவது சாப்பிடலாம் என்று நடந்தபோது காலியான மீன் அன்னக்கூடையோடு சித்ரா எதிரே வந்தாள். என்னை கண்டதும் வா தம்பி! என்று வாஞ்சையுடன் அழைத்தாள். நானும் காரைக்கால் போனது குறித்து சொன்னேன். கவிதையா? அப்படின்னா என்று வியப்புடன் கேட்டாள். பாட்டு எழுதுவேன் என்று சொன்னேன். அப்படிய்யா என்று கேட்ட அவள் . “நான் நல்லா பாடுவேன். இப்ப புள்ளக்குட்டி புருஷனை இழந்த பிறகு பாட்டே மறந்து போச்சு” என்றாள். அப்போது ஊருக்கு போகும் மினி பஸ் வந்தது. “தம்பி என் வீட்டுக்கு வர்றீய்யா, உனக்கு புடிச்ச மீன் குழம்பு வெச்சு தர்றேன். சாப்பிட்டு தூங்கிட்டு காலம்பற நேரத்தோடு வீட்டுக்கு போயிரலாம்” என்றாள். கடலுக்கு போகலமா? என்றேன். “வா… கூட்டிக்கிட்டு போறேன்” என்றாள்.

சித்ரா உடன் பஸ்சில் ஏறி அமர்ந்தேன். இருபது நிமிடப் பயணம் கடலை ஒட்டிய சாலையில் பஸ் போய் நின்றது. சுனாமி குடியிருப்பில் இறங்கினோம். கடலில் இருந்து குறைந்தது அரை பர்லாங் தொலைவில் கட்டப்பட்டு இருந்தது. தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டிடத்தை கட்டி கொடுத்து இருந்தார்கள். கிழக்கு மேற்காக தெரு குடியிருப்பு அமைத்திருந்தார்கள். புதிதாக இருத்தது. கட்டிட அளவு நானூறு அடியில் இருக்கலாம். நான் அமர்ந்திருந்தேன். அவளுடன் நான் போனதை அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெறித்துப் பார்த்தார்கள். சிலர் யாரு? என்று விசாரித்தார்கள். உறவுக்கார பையன் என்று சொன்னாள். இது எனக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. கிளம்பிவிடலாம் என்று நினைத்தேன். சித்ரா என்னை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வெளியே போனாள். நான் குழப்பத்துடன் அமர்ந்திருந்தேன். சில நிமிடங்களிலேயே துடிதுடிக்கும் மீன்களோடு வந்தாள். மீன்களை வாசலில் அமர்ந்து சுத்தம் செய்தாள். புறவாசலில் மண்ணினால் மெழுக்கப்பட்ட அடுப்பு இருந்தது. அதில் ஒரு அடுப்பில் சோறும் மறு அடுப்பில் குழம்பும் வைத்தாள். குழம்பின் வாசம் பசியை கிளர்த்தியது. இரவாகியிருந்தன. தட்டில் சோறு போட்டாள். நல்ல பசி பிரமாதமான குழம்பு அத்தனை சுவையாக இருந்தது.

சாப்பிட்டு விட்டு வந்து வீட்டுக்குள் அமர்ந்தோம். நான் வானொலியில் வாசித்த கவிதைகளை படித்துக் காட்டச் சொன்னாள். நான் வாசித்தேன். மிக கவனமாக கேட்டாள். நான் பாடச்சொல்லி வலியுறுத்தினேன். கடலம்மா பாட்டு பாடினாள். அந்த ராகம் எனக்கு பிடித்து போக அந்த ராகத்திலேயே “கண்ணம்மா.. கண்ணம்மா என் கனவு நீயம்மா” என்று பல்லவி தொடங்க பதினான்கு வரிகள் கொண்ட பாடலை எழுதி அவளிடம் படித்துக் காட்டி பாடச் சொன்னேன். அதனைப் புரிந்து நன்றாகப் பாடினாள். மணி பத்து இருக்கும்.

கதவு திறந்து வைத்து கொண்டுதான் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது நாற்பது வயது இருக்கும் ஒரு ஆள் போதையில் வந்து வாசலில் நின்று, “ஏய் சித்ரா… யார் அவன்? நான் வந்து கதவை தட்டுன்னா கத்தி ஊரை கூட்டுற… இப்படி பப்ளிக்கா ஒருத்தனை கொண்டு வச்சிக்கிட்டு கூத்து அடிக்கிறீயா” என்று கத்தினான்.

பயத்தில் நான் மிரண்டு போனேன்.

சித்ரா, கலைந்த கூந்தலை முடிந்து கொண்டு, “ஏய் மாரியாத சொல்றேன் போய்டு. அப்பறம் நான் மனுஷியா இருக்கமாட்டேன்”
எனக்கு பயத்தில் தொண்டை அடைப்பது போலிருந்தது. என்ன நடக்குமோ என்ற பயம். சித்ரா கடுமையாக சீறினாள். “அவனுக்கு என் புள்ள வயசுடா நாயே” என்று சொல்லிக்கொண்டே கையில் அரிவாள்மனையை எடுத்துக்கொண்டு போனாள். அக்கம் பக்கத்து பெண்கள் வந்து, “அவளுக்கு நீயா சோறு போடுறே. அவளுக்குன்னு யாருமில்ல. யாரனாலும் அழைச்சிக்கிட்டு வருவா, நீ போடா… என்று திட்டினார்கள். அவன் கருவிக்கொண்டே போய்விட்டான். நான் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். சித்ரா என்னிடம் கெஞ்சினாள். அழுதாள். நான் பொருட்படுத்தவில்லை. வீட்டுக்கு வந்திருந்தேன்.

ஒரு வாரம் சித்ரா மீன் வியாபாரத்துக்கு வரவில்லை. அவள் மீன் விற்கும் இடத்தில் அவளைக் காணாது சங்கடத்துடன் சென்றுவந்து கொண்டிருந்தேன். வாரக்கடைசியில் ஞாயிறு சைக்கிளில் போனேன். சித்ரா கடை போட்டிருந்தாள். அவளைப் பார்த்த உடன் அவளிடம் சென்று நலம் விசாரித்தேன். அவள் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அவளது கழுத்தில் புதிய தாலிக்கயிறு தொங்கி கொண்டிருந்தது. அதிர்ச்சியில் அவளைப் பார்த்தேன்.

“வேற வழியில்லை தம்பி, யாவராம் பாத்துட்டு போயி ராவுல நிம்மதி தூங்க முடியல. கண்ட பயலும் ஓறவு மொறை சொல்லிக்கிட்டு வந்து கதவ தட்டுறான். அன்னக்கி நடந்துச்சு பாத்தியே, அதான் மீன் மார்க்கெட்ல வேலைப் பாக்குற ராமர்ன்னு ஒருத்தரு ரொம்ப நாள சொல்லிட்டு இருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிட்டு சேர்ந்து வாழலாமுன்னு. நாலு பேரு முன்னிலையில தாலி கட்டச் சொல்லி வீட்டுக்கு கூட்டியந்துட்டேன். இனிமே நீ யாருக்கும் பயப்படாம என் வீட்டுக்கு வந்து எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கலாம்” என்றாள். வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

அதன் பிறகு அந்த வேலையை துறந்து விட்டு, சென்னைக்கு வந்து விட்டேன். திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் அந்தியில் போடப்படும் பழைய புத்தகக் கடைகளில் ஏதாவது உருப்படியான புத்தகங்கள் பாதி விலையில் கிடைக்குமா? என்று ஒருநாள் தேடியபோது ‘கடலும் கிழவனும்’ என்ற சிறு புத்தகம் ஒன்று என் பார்வையில் சிக்கியது. அந்தப் புத்தகத்தின் அட்டைகள் கிழிந்து போயிருந்தன. முதல் பக்கத்தில் சிறுசிறு கோடுகள் போடப்பட்டிருந்தன. எடுத்துப் பார்த்த போதுதான் அது மொழிபெயர்ப்பு என்பதை அறிந்துக் கொண்டேன். ‘ஹேமிங்வே’ என்ற பெயர் சிறியதாகவும், மொழிப்பெயர்ப்பாளர் பெயர் பெரிதாகவும் புத்தக மையத்தில் இருந்தது.

இராயப்பேட்டையில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சில நாட்கள் கழித்து ‘கடலும் கிழவனும்’ எனும் நாவலை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

அது மழைச்சாரலும், குளிரும் அடர்ந்து நிரம்பிய இரவு. இரண்டுமணி நேரத்தில் நாவலைப் படித்து முடித்து விட்டேன். ஆனால் அன்று இரவு முழுவதும் சிறு தூக்கம் கூட இல்லை. ஒரு போர்வையை போத்திக்கொண்டு, சாரலாய் பெய்யும் மழையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். “நாவலின் சுருக்கம் இதுதான் – கடலுக்கு செல்லும் கிழவன் எப்படியாவது பெரிய மீனை பிடித்து வரவேண்டும் என்ற வேட்கையோடு கடலில் அலைந்து ஒரு மீனை பிடித்து விடுகிறான். அப்போது மீனுக்கும் – கிழவனுக்கும் இடையே வாழ்வா? – சாவா? என போட்டி ஏற்படுகிறது. பிறகு பிடித்த ‘மீனை’ பெரும் திமிங்கலத்திடமிருந்து காப்பாற்றும்படியான நெருக்கடிநிலை உருவாக, மீன் மீது ஒரு கழிவிறக்கம் கிழவனுக்கு உருவாகிறது! பெரும் போராட்டங்களுக்கு பிறகு பிடித்த மீன் இறுதியாக முழுமையாக கிடைக்காமல் போக கிழவன் விரக்தியோடு கரை திரும்புவான். இதுதான் இன்றைய வரையிலான கடலோடிகளின் துன்பம் நிறைந்த வரலாறு. உலகின் வேறு நிலத்தின் பரதவர்களை விட தமிழக மீனவர்களே மிகவும் வேதனைக்குரியவர்கள்.

அன்று இலங்கையில் தமிழனுக்கும், சிங்காளவனுக்கும் பகைமை ஏற்பட்டு பெரும் போர் ஏற்பட்ட பிறகு, தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் துயர அலைகள் சீற்றத்துடன் அடிக்கத் தொடங்கிவிட்டது. எல்லை தாண்டிச் சென்றார்கள் என்ற காரணத்தில் பல ஆயிரம் மீனவர்கள் கைது சம்பவங்களும், துப்பாக்கி சூடும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இன்று வரை அரசு அமைப்புகளால் அதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. அன்றைய ஒன்றிய அரசுகளும் இன்றைய மோடி தலைமையிலான அரசாங்கமும் ராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் காட்டும் அக்கறையை மீனவர்களின் பிரச்சினையில் காட்டவில்லை. ஏதோ ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதில் சிறிதும் வெளிப்படைத் தன்மை இருக்காது. கைது செய்த சிலரை மீட்டு வருவார்கள். அதன் பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும். கைது நடவடிக்கை இருக்கும் இது தான் இன்றுவரை நடக்கும் காட்சி. இதற்கு கச்சத்தீவை மீட்டால்தான் பிரச்சனை தீரும் என்பார்கள்.

இன்று நமது வாழ்வில் ‘மீன் உணவு’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. கரையில் உட்கார்ந்து கொண்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மால் அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பற்றியும் கடல் அலைகளின் வழியே நிகழ்த்தும் சாகசத்தையும் அறிய முடியாது. ஒருபோதும் அவர்கள் அதனை அறிவித்துக் கொள்வது இல்லை.

நெய்தல் இலக்கியங்கள் என்கிற வகைமையில் பெரிய படைப்பிலக்கியங்கள் உருவாகவில்லை. ஐந்து திணைகளில் ஒன்றாக குறிக்கப்பட்டாலும் பரதவ மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் பெரும் அளவில் பண்டை காலத்தில் பதிவு பெறவில்லை. தற்கால இலக்கியங்களில் சில பதிவுகள் சற்று ஆறுதல் தருகின்றன.

சென்னைத் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்குமான கடலோர கிராமங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்கள் எண்ணிக்கை மற்ற கிராமங்களை ஒப்பிடுகையில் மிக குறைவு. காரணம், கடலுக்குச் சென்று மீன் பிடித்து திரும்புவது மிகப்பெரிய போராட்டம், கடலில் பருவ நிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்கிறார்கள் மீனவர்கள். மற்றொன்று கடலில் ஒரு கட்டத்துக்கு மேல் நீளஅகலங்கள், திசைகள், எல்லைகள் அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாதவை. கரையிலிருந்து நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிட்டால், பரந்த நீர்பரப்பு ஒரே மாதிரியாக தெரியும். சூரியனின் உதயம் மறைவு வைத்து எல்லையை குறைத்துவிட முடியாது. அதேபோல காற்று திசைகள் உள்வாடு, வெளிவாடு உள்ளே பாயும் நீரின் போக்கு மிக நிபுணத்துவம் மிக்க அனுபவம் நிறைந்த கடலோடிகளால் மட்டுமே அறிய முடியும்.

அதே போல வடகொண்டல், தென்கொண்டல் என்று காலச் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் காற்று வீசும் திசையை வைத்து சூழலை கணிப்பார்கள். மிக மெல்லிய சாரல் காற்று வடக்கு முகமாய் வீசினால் சூறைக்காற்று அடிக்கும் என்பது உள்ளிட்ட நுட்பமான கணிப்புகள் அவர்களுக்கு தெரியும். புயல் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலின் அமைதியில் நீரில் ஏற்படும் சலனங்கள், உள்ளே நீருக்குள் நடக்கும் மாற்றங்கள் போன்றவை பற்றி அறிவதற்கு நிறைய அனுபவம் தேவை.
இதனைத் தவிரவும் உடல்வலிமை ஒவ்வொரு ‘மீனவனுக்கும்’ மிக அவசியம். அதை விடவும் அலைகளில் நீச்சலடித்து பாய்மரப் படகை போல மிதந்து செல்லும் நுணுக்கம் தெரிய வேண்டும். எந்தப் பகுதியில் எந்தக்காலச் சூழலில் எந்த வகையான மீன்கள் வலையில் மாட்டும் என அறிய வேண்டும். இதை விடவும் மீன் கிடைக்காத நாட்களிலும், இயற்கைச் சீற்றங்களிலும் தளராத நம்பிக்கை வேண்டும். இத்தகைய திறன்கள் கொண்ட மீனவர்கள் தான் கடலுக்கு சென்று உயிருடன் திரும்பி வருகிறார்கள். சமீப காலங்களில், அதாவது சுனாமிக்குப் பிறகு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

கடல் என்னும் பரந்த நீர்ப்பரப்புக்குள் மனிதன் தனது அறிவையும், திறமையையும் செலுத்தி போருக்கு செல்லும் ஒரு வீரனைப்போல வாழ்வா சாவா என்ற நிலைமை புரியாது செல்கிறான். ‘கடல் வீரன்’ என்ற ‘விக்டர் ஹியூகோ’ எழுதிய நாவலில் கடல் பயணங்களில் உள்ள இழப்புகளும், துயரங்களும் ஒரு மீன் வேட்டையாடும் வீரனாக தனது பயணத்தை தொடங்கும் ஒருவனின் கதை. கடற்கொள்ளையர்கள் மற்றும் கடல் கொந்தளிப்புகள், சீற்றங்கள், அதன் ஊடே வாழ்வைத்தேடி பயணம் என்பது அது வாழ்தலுக்கான உத்வேகமாக மாறியிருக்கிறது என்பதை விவரிக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி தனது வீரத்தைச் செலுத்தி மீன்களை வேட்டையாடிக்கொண்டு கரைக்கு வருவதாக பல விஷயங்களையும் ‘கடல்பாடு’களையும் விவரித்து இருப்பார். நாவலின் 36-ம் அத்தியாயத்தில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருப்பார். “வஞ்சகர்களின் முத்தமே துரோகத்தனத்தின் முதல் படியாகும். கடலின் போக்கே அத்தகையதுதான். கடலின் புன்முறுவல் நம்ப முடியாத பெண்களை போன்றது”, கடல் குறித்து அவருக்கு இருந்த கோபமான எண்ணத்தை இந்த வரிகள் சுட்டுகின்றன. கடலுக்கு செல்பவர்களை ‘கடலோடிகள்’ என்கிற வழக்கும், 16-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டு விட்டது. கடல் எல்லை கடந்து மீன் பிடிக்க செல்லும் போராட்டங்களை எல்லாம் தாண்டி, நாடு பிடிக்க செல்ல ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பல வழிகளில் முயன்றனர். அப்படித்தான் கொலம்பஸ் கண்டுபிடித்த நாடாக அமெரிக்கா சொல்லப்படுகிறது. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் கடல் மார்க்கமாகவே இந்தியாவுக்குள் புகுந்தனர். இது ஆதிக்க வரலாற்றின் சரித்திரம்.

இந்தியாவில், தமிழக கடலோடிகளின் வாழ்க்கை, கடலுக்கும் அவர்களுக்குமான இணைப்பு என்பது அகம், புறம் என நெருக்கடி சார்ந்தது. ஒரு நாளைக்கு கடலுக்கு செல்லும் மீனவனுக்கு எப்போது எந்த வகையில் ஆபத்தும், ஏமாற்றமும் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது.

மழைக்காலங்கள் தரும் சிக்கல், கடலோர கிராமங்களில் அநேக மீனவனுக்கு சொந்தமாக ஒரு படகு கிடையாது. கிராமத்தில் நூறு பேர் என்றால், 50 பேருக்கு படகு, வலை மற்றும் வசதிகள். அதுவும் எல்லா பருவத்திலும் மீன் கிடைத்து விடாது.

ஒரு நாளைக்கு ஒரு படகில் ஐந்து பேர் கொண்ட குழு 500 லிட்டர் டீசல், உணவுகள், திசையின் சூழல் என புரிந்து மீன் பிடிக்கக் கிளம்பினால், குறைந்தது திரும்பி வர 4 நாட்கள் ஆகலாம். இந்த நாட்களிலும், இரவு பகல் உறங்காது வலையை விரித்துப் போட்டு வள்ளத்தின் சுக்கனை இழுத்து நிறுத்தி மீன்பிடியில் ஈடுபட வேண்டும். இந்த நான்கு நாட்களில் ஐந்து பேர் சம்பளம், உணவுச்செலவு, மற்றும் டீசலுக்கு சேர்த்து மொத்தம் 50 ஆயிரம் செலவு ஆகும். இதற்கு தேவயான மீனை முதலில் பிடித்தாக வேண்டும். அதுவே சமயங்களில் கிடைக்காமல் போகும். மீன் போதிய பாடு கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக, எல்லைக் கடந்து போனால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை. துப்பாக்கிசூடு, ஜெயிலில் அடைப்பு, பொய் வழக்குகள் என 1983-ல் தொடங்கி இலங்கை கடல் எல்லையைத் தாண்டிச்சென்ற வகையில் பல ஆயிரம் மரணங்கள் நடந்து இருக்கிறது. இலங்கை தமிழர் மீனவப்பிரச்சினை மட்டும் இன்னும் அணையாத தீயாக எரிந்துக் கொண்டிருப்பதற்கு பின்னால் உறைந்திருக்கும் உண்மைகள் அரசியல் சதிராட்டத்தின் நுட்பமான கண்ணிகளில் பின்னப்பட்டவை.

சென்னை தொடங்கி தனுஷ்கோடி வரை அறுகோண வடிவில் கடல்புறத்து கிராமங்களில் ஒவ்வொரு கிராம மக்களும் தனித்துவம் பொருந்தியவர்கள். மீன் பிடித்தலில் ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்த அடையாளம் இருக்கும். சில கிராமங்களில் துடுப்பு வலித்து கடலுக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் உண்டு. அவர்கள் வலைவிரிக்கும் திறனும், நுட்பமும் அவர்களுக்கு உரித்தானது. மற்ற கிராமத்தினர் அதனை பின்பற்ற முடியாது. அதே போல குறிப்பிட்ட ஒரு மீன் வகையைப் பிடிப்பதினாலேயே திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். ராமேஸ்வரம் பகுதியில் சில குறிப்பிட்ட கிராமங்கள் சுறா வேட்டைக்கு செல்வதை கௌரவமாக நினைப்பார்கள். மற்ற மீன்பிடியை விட லாபம் நிறைந்த தொழில் சுறா வேட்டை என்பது அவர்களின் கருத்து.

சுறாவேட்டை மற்ற மீன்பிடியை போல அல்ல. காரணம் தப்பினால் மரணம். சுறா வேட்டைக்கு என்று தூண்டில் போட்டு சுறா வேட்டையாடுவது உலகில் எந்த மீனவ சமூகத்திலும் இல்லாத புதிய தொழிற்நுட்பம் அதற்கு பேர் பெற்றவர்கள் தமிழக மீனவர்கள். சுறாவை இவர்களில் ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு பெயரிட்டு அழைப்பார்கள். வேளா இழுப்பா, கொம்பன், வரிப்புலியின் உழுவை இதில் வரிப்புலியனும், கொம்பனும் தான் மூர்க்கமும், முரட்டுத்தனமும் கொண்டது.

கடலோர கிராமங்களுக்கு தனித்த அடையாளம் உண்டு. நூறு வருடங்களில் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் அழிவுற்று இருக்கின்றன. அதே பண்டைய சிலப்பதிகாரம் நடைபெற்றதாக சொல்லப்படும் காலத்தில் சோழர்களின் துறைமுகம் பூம்புகார் –தரங்கம்பாடி பகுதியில் அமைந்திருந்ததாக சமீபகால ஆய்வுகள் சொல்கின்றன. காவேரிப் பூம்பட்டிணம் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி கடற்கோள் மூலம் அழிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனை சமீபத்திய அமெரிக்க ஆய்வுகள் உறுதி செய்து இருக்கின்றன. கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, பர்மா என்று சென்று போரில் வென்று வெற்றி கண்ட வரலாறுகள் நம்மிடம் உண்டு. கடல் கடந்து படைக்கலம் கண்ட சரித்திரம் அது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் புயலில் தமிழகத்தின் தென்புற ஊரான நான்கு புறமும் கடல் சூழ்ந்த தனுஷ்கோடி என்கிற ஊரை கடல் கொண்டு போனது. அங்கேதான் அரிச்சல் முனை என்கிற ஒரு புண்ணிய ஸ்தலம் கூட இருந்தது. இன்றும் கூட சொந்த மண்ணை விட்டு வெளியே வர விரும்பாத மீனவ மக்கள் தனுஷ்கோடியிலே ஒவ்வொரு நாளையும், மிகுந்த பிரச்சனையோடு எதிர்கொள்கிறார்கள்.

ஊரில் உள்ள மற்றவர்களோடு சபதம் போட்டுக்கொண்டு, தனிமனிதனாக கடலுக்கு போய் ‘சுறா’ வேட்டையாடி வந்த குடும்பங்களுக்கு ‘சுறாபிடி’ குடும்பம் என்ற பட்டபெயரும் உண்டு. அதேபோல தூத்துக்குடியில் சில கிராமங்கள் முத்துக்குளிப்பதில் பெரும் பெயர் பெற்றவை. அவர்கள் குடும்பத்துக்கு முத்துக்குளி பாஹவதர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இவர்கள் கடலுக்கு சென்று ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்து இருக்கிறார்கள். நடுக்கடலில் எந்த ஒரு பாதுகாப்புக் கருவிகளும் இல்லாமல் உள் நீச்சலடித்து அடியாழம் வரை சென்று மூழ்கி முத்தெடுத்து அபாரத் திறன் பெற்றவர்கள் இன்றும் கூட தூத்துக்குடி ஒட்டிய கிராமத்தில் இருக்கிறார்கள்.

வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதில் அபாரத் திறன் கொண்டவர்கள். மழை, புயல் போன்ற காலங்களில் கூட அஞ்சாத திறமைசாலிகள். கடலுக்கும் அவர்களுக்குமான பயணம் இடைவிடாத அலைகளை போல தொடர்ந்து கொண்டிருப்பவை.

எப்போதேனும் கடலுக்குச் செல்லும் மீனவன் புயல் காலத்திலோ, கடும் கடல் சீற்றத்திலோ, படகு கவிழ்ந்து விட்டால் சீறும் அலையோடு கடும் எதிர் நீச்சலைப் போட்டு மூன்று நாள் நான்கு நாள் என்று கடலிலே மிதந்து உயிரைக் காத்துக் கொள்வதும் உண்டு, அல்லது எல்லா உயிர் போராட்டங்களுக்கு பிறகு தனது உயிரை கடலோடு கரைத்துக் கொள்வதும் உண்டு.

ஆனாலும் ஒருபோதும் மீனவன் கடலைப் பழிப்பதோ, சபிப்பதோ கிடையாது. கடலை அன்னையாக, காக்கும் கடவுளாக, கடல் மாதாவாக, வாரி வாரி வழங்கும் பெரும் வள்ளலாகவே கடலோடிகள் நினைக்கிறார்கள். சுனாமிப் பேரலை வந்த காலத்தில் கூட பலியான ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக, அழுத மீனவர்கள், கடல் மீது கோபம் கொள்ளவில்லை. அது அவர்களின் சுபாவம். கடல் சார்ந்த தங்களுடைய வாழ்க்கையை தகவமைத்து கொண்ட அவர்கள் அதனைத் தாண்டி வெளியே வர விரும்பாதவர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் மீனவக் குடும்பங்களில் பல்வேறு காரணங்களால் பெரிய அளவில் உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று, கடலில் கலந்து விடும் கடலோடிகளின் குடும்பம் கரையில் இங்கே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடலோடியின் மனைவி தன் குழந்தைகளைக் காக்க மீன்கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்ற தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறாள். கணவனை இழந்த துயரங்கள், அவர்களை வலிக்கச் செய்தாலும் குழந்தைகள் தன் வயிறு என்கிற விஷயங்களுக்காக இடைவிடாத வாழ்க்கைப் போராட்டத்தை கரையில் நடத்துகிறார்கள். தினந்தோறும் மீன் கூடையோடு வலம் வரும் ஒவ்வொரு மீனவப் பெண்ணின் வாழ்விலும் ரணம் நிரம்பிய வாழ்க்கை கதை இருக்கிறது.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். அதிகாலையிலே அவர்களுக்கான வாழ்க்கைப் போராட்டத்தை தொடங்கி விடுகிறார்கள். கடற்கரைக்கு சென்று, மீன் வாங்கி பஸ் பிடித்து காலை 7 மணிக்குள்ளேயே வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள். இப்படியாகத்தான் இந்த உழைப்பு வீராங்கனைகள் கரையிலும் தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்கிறார்கள்.

மீனவ வாழ்க்கைக்கு அரசு தரும் சலுகைகளை தாண்டி, ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும், அரசுக்காப்பீட்டு தொகையை தானே செலுத்த வேண்டும். பொதுவாக மீனவர்கள், முரட்டுக்குணம், நெகிழ்வு தன்மையும் சம அளவில் கொண்டவர்கள், உயிர் குறித்த பயம் இல்லாதவர்கள். அதுவே அவர்கள் பலவீனம். ஆகவே அந்த சமூகத்தின் மீது அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பொதுவாக மீனவ கிராமங்கள் கடற்கரையை ஒட்டியே அமைந்திருப்பவை. நெடுங்காலத்திலிருந்து கடலின் ஓசையைக் கேட்டு வாழ்ந்து பழகியவர்கள், இயற்கை சீற்றங்கள், சுனாமிப் பேரலைகள் போன்றவை கடந்த காலங்களில் நடந்தும் கூட அதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள். அதனால் மீண்டும் கடற்கரையிலே வாழ்கிறார்கள்.

சுனாமி பாதிப்புக்கு அரசு மூலம் கட்டித்தரப்பட்ட ‘வீடுகளில்’ போதிய தரம் இல்லை. மற்றொன்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை அமையவில்லை என்று மீனவச்சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். வலைகள், டீசல் போன்றவை சலுகை விலையால் வழங்கப்படுகின்றன. இது மட்டும் போதாது. வங்கிகள் கடனுதவி அளிக்க வேண்டும் என்பது அவர்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.

கடலோடிகளின் வாழ்க்கை கடலிலும் சரி, கரையிலும் சரி அவ்வளவு சுபிட்சமாக இல்லை. சிலர் தங்களது வாரிசுகளை, வேறு பணிக்கு திருப்பிவிட நினைக்கிறார்கள். காரணம், போதிய பாதுகாப்பு இல்லை. இது உண்மைதான். மீன் உணவாக மட்டுமல்ல உயிர்காக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மீனவ சமூகத்தை காக்க வேண்டியது நமது கடமை.

சரி பாண்டியன் விஷயத்துக்கு வருவோம். சுனாமியால் கணவனை இழந்து நின்ற சாந்தாவை ஏற்றுகொண்ட அவளோடு சென்னையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த வருடம் மெரினா கடற்கரைக்கு அவளோடு போயிருக்கிறார். இவர்களைப் பார்த்து ஒரு ஆள் வந்து நெருங்கி, சாந்தாவை அழைத்து இருக்கிறான். அவனை அடையாளம் கண்ட அவள் கண்டிக்கொண்டு அழ அவளது மகனும் அப்பாவைக் கண்ட மகிழ்வில் சந்தோஷத்தில் குதிக்க பாண்டியன் பின்வாங்கி கடற்கரையில் இருந்து நடக்கத் தொடங்கிவிட்டராம். ஆனால் அந்த விரிகுடா கடலின் பேரோசை மட்டும் இன்னும் கேட்டு கொண்டிருப்பதாக கலங்கிய கண்களுடன் சொன்னார்.

***

சிவகுமார் முத்தய்யா

நெற்களஞ்சியமான கீழத்தஞ்சை திருவாரூர்- தண்டலைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை, கவிதை, கட்டுரை என இது வரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் – muthaiyasivakumar@gmail.com


அகராதி கவிதைகள்

0

தவித்து தனித்து நின்ற சிறுபொழுதுகள்
துவண்டு விழுந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

கேவலுடன் கசிந்து காத்திருந்த வேளைகளில்
சிதறியப் பூந்தாது நீரில் உவர்ப்பின் சுவை!

முதுவேனிற்கால இறுதியில் இருக்கிறோமென்கிறது பொழுது

நீள் அரும்புகளும், அடர் ஆரஞ்சும் சிவப்பும் கலந்தப் பூக்களாக வெட்சி மனங்கொள்கிறது
கார்காலத்தின் வரவை காற்று காதோடு ஓதிச்செல்கிறது
குயில்கள் பாடிக் கொண்டிருக்கின்றன

இன்றும் அதே நீயாக இருக்கத்தானே இதயத்தின் அத்தனை இச்சைகளின் நாக்குகளும்
எச்சில் விட்டுக் கொண்டிருக்கின்றன

மழைக்காற்றும் ஈரமண்ணும் கிளர்த்தும் நினைவடுக்குகளில்

நீ இல்லாத அடுக்கும் இருக்கக் கூடுமோ!

எந்நேரமும் தொலைந்து போகத் தயாரான விரல்களை
மனம் கோர்த்து அச்சப்பட்டுக் கழிய
சிறுபெரு பொழுதுகள் உவகைக் கொள்வதில்லை
வெட்சியும் கொன்றையும் வெளிற, வெளிற
கார்காலமும் கூதிற்காலமும் வேட்கையின் வெட்கையில்
வெதும்பிச் சாபமுற்றுக் கழியட்டும்
போதும்…
கனாவிலொரு முறைக் கட்டியணைத்து விலகு!

*

வியர்வை பிரசவிக்கும்
உட்கைச் சூட்டில்
பங்கெடுத்துக்கொள,
பிரிந்து பொருள் கொளும் கருப்பொருளின்
எண்ண விரவல்களில் விரிய

களியாட்ட நினைவில் களித்திட

கணப்பொழுதும் கழன்றிடாத
கருவறைத் திருகெனத் தங்கிட

நினைவுச் சுருண்டு
மட்டுமேயாகி ஸ்தம்பித்திட

உயிரின் நாடியில் துடித்திட
நான் இல்லையென்றால் நான் எதற்கு?

மறந்து, தொலைந்து, கடந்து போய்விட
ஒரு வழியுமின்றி
வெறுக்க விரும்புகிறேன்…

*

நரம்புகளின் வழி துளையிட்டு
நான் கொண்ட
அன்பைத் துளி துளியாகக் குருதியுடன்
வடிய வைத்திடும் கூர் ஆயுதமுண்டா

அந்திப் பொழுதுகளில்
சிணுங்கலாய்க் கொஞ்சிக் கொண்டிருந்த
மைனா கொடிய மிருகமாகி அச்சுறுத்தலை
மூடவியலா செவிப்பறை அதிர செவிமெடுத்ததுண்டா

மனவிருட்சம் ஒடித்து
தனித்த வேரறுத்து
புவியதிர நீ சாய்த்துப் போகையிலும்
நிழலுக்கு என் செய்வாயென்று
சருகாய் உதிர்ந்து காற்றில் ஆடும்
இலைக்கு ஏதும் வார்த்தையுண்டா

உன் நினைவு நரம்பு
மூளையின் மடிப்புகளில் எங்கென்றறிந்தால்
உருவிப் போட்டுச் செல்…

குறைந்த பட்சம் உயிரையாவது

*
இடைவிடாத நினைவுத் துரத்தலில்
அயர்ந்து போய்
அழைத்த அலைபேசியின்
திரைத் துளைத்து
பாய்ந்து கட்டிக்கொள்ளத் துடித்த காதல்

சமாதானம் செய்யேனென்று
இதயம் நோக்க
என்னிடம் வார்த்தைகள் இல்லை
என மறுதலித்த இருதயம்

உன் பெயர் ஜபிப்பதைத் தொடங்குகிறது

மண்டியிடும் மூளை மன்னிப்பே கேட்பதில்லை…

சாத்தானே வா!

*

விகம நோய்மையிலும்
விரதம் கொண்டிருக்கும்
அடமான மனது
வியாபிக்க

ஏது வைத்திருக்கிறாய் இடும்பா!

நா சுழற்றிக் கேட்டுவிட
கூண்டிலேற்றிக் கதற விட
காத தூர புகார்கள்
கர்ஜனை கொண்டு
அலைகின்றன!

போகட்டும்…

கருமேகம் தவழ்ந்து கொண்டு இருக்கிறது

சில வார்த்தைகளில் நனை!

*
இருளைக்
கவிழ்த்துக்
கொட்டிவிட்டுப் போகும்

இரவிற்கு

பூனை நடை

*

ஆசுகனுடனிட்ட
ஒப்பந்தம் மீற
உடல் முழுவதும் பாதங்களாக்கிப்
பதுங்கி வந்த இரவு
அணைத்துக் கொண்டு
ஆகிரதம் செலுத்துகிறது

இதழ் வருடலுக்குள்
சுருண்டு கொள்ள
கண்கொட்டி கனவு கொள்கிறது
திமிர் கொண்ட
பின்கழுத்துப் பூனைமயிர்
நகங்களைப் பார்த்தப்படி…

தீட்டவிருக்கும் கோட்டோவியத்தின்
திட்டமிடலைத் தடுத்தாட்கொள்ள
முயங்கி முன்வரும் பற்தடங்களுக்கு
வால் சுருட்டி நிமிர்கிறது

இதழ் திமிர்!!

*
பாலொளி சிந்திய
அன்றைய நிலவிற்கு
வியர்த்திருந்தது

வெப்பம் காய்ந்தோம்

*
சாலை

என்னைத்
தேடிக் கொண்டிருக்கும்
எவரையோ
நான்
கண்டு பிடிப்பதெப்படி?

*

விழி முழுவதும்
வெட்டவெளியாகிப் புழுதியடைகிறது
அனல் தாங்கிய சுவாசம்
சுற்றிச் சுழன்று
ஆகிறது அகதேசி!

நணுக நாழியற்ற
நின் நிலைப்பாட்டில்
நீர்பருக மறந்து
முத்தம் தொலைத்த இதழில்
ஏற்பட்ட வரிவிரிசல்களில்
விழுந்து எழுந்த உச்சிப் பொழுது

கையருகில் கனைத்த
செல்பேசியெடுத்து எண்ணம் தடவி
விரல் ஒற்றி சேதி அனுப்பியது

“பேசித் தொலையேன்”

*

நசை விசை மறுத்து
மனதுள் உட்புதைந்த
விதை

பூனை மயிர் சிலிர்க்கும்
வாழை யிலை வயிற்றில்
மெது வாய் நகர்த்திய
ஸ்கேன ரினால் காட்சி

விரியும் குட்டித் திரையில்
தொப்புள் கொடி யோடு
மிதந்து தலை யசைக்கும்
சிசு போல

முனை யசைத்து துளிர்த்து நிமிர்ந்து
மனம் பார்த்த முத்தம் ஒன்று
முளை விட்டு முத்திரை பதித்தது

எண்ணம் துளைத்து
ஆணி வேர் பாய சல்லி வேர் பரவ
பார மாகிப் போன தற்கண
சுழி யத்திற்குள் சொர்க்க நரகத்தின்
வாயிற் படி யென வளர்ந்து
விருட்சமாகி நிற்கு மதன் கிளைகளில்

காயாகிக் கனிந்த முத்தங்கள்

*

கிளை களிலேயே வெம்பிக் கருகி
உருக் குலைய, விருட்சம் தன்னை
உள்ளிழுத்துக் கொள
ஆணி சல்லி வேர்களில்
அமிலம் பாய்ச்சப் படுகிறது
நிதானமாக

வலியின் சுவை சுகித்த கணம்,
கண் மூடி பிறழ்கிறது

இறந்ததாய் பதைத்த மார்க் ஆண்டனி
ஆயுதம் கொண்டு
மரணம் செய்து
கொள்கிறான் தன்னை

இறக்காத கிளியோபட்ரா
ஐயோ வென
அரவு கொண்டு
அழகியத் தன்
உடலைக் கொல்கிறாள்

படபடக்கும் பக்கங்களில் வரிகள் ஓடுகிறது
ஓயாதக் காற்று வாசித்துக் கொண்டே
இருக்கிறது…

*
உனக்கென சேமித்து வைத்த
வார்த்தைகள் உச்சரிக்கப்படாமல்
உதட்டோடு உறைந்து
உடைந்து அழும்போது
கிழித்துப் போகின்றன

ஒவ்வொரு முறை துகில் களைகையிலும்
உன்னை அணிந்து
குளியலறை செல்ல வேண்டியிருந்த
அசட்டுச் சிரிப்பு நேரங்கள்
கோரப்பற்கள்
முளைத்துச் சிரிக்கின்றன

தூரத்திலிருந்தும் தொலையாதத் தீண்டல்கள்
துயிலில் புரள வைத்து
தீராத கனவுகளினால் செந்தூரம் சிந்தியவை
விசாரணையின்றி
சிலுவையில் அறையப்படுகின்றன

கடற்கரையில் காலாறும் சிறுமி
கண்டெடுத்த வலம்புரி சங்காக
காலநேரமின்றி மனதில் கேட்டுத் திரிந்த
இரகசியச் சேதிகள் கடூரமாகி
வாளும் நீட்டுகின்றன

தவத்தில் மயங்கும் தேவர்கள்
மெளனத்தின் மொழிகளுக்கு
வரமத்தனையும் கொடுத்துவிட
வேண்டி காத்திருந்து
நிஷ்டூர அரக்கர்களாகிப் போயினர்

இறந்து கொண்டிருக்கிறது இதயம்

*

அகராதி
aharathi26@gmail.com

மலையைத் திறக்கும் சன்னல்கள் – மிளகு நூல் மதிப்புரை

0

ஸ்டாலின் சரவணன்

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்குவது அவ்வளவு எளிதல்ல” என்ற கவிஞர் சச்சிதானந்தனின் புகழ்பெற்ற வரியில் காடு என்பதோடு மலையையும் மலை சார்ந்த வாழ்வையும் வைத்து எழுதினால் அது மிளகு தொகுப்புக்கான விமர்சனம் எனலாம். மலைக்காட்டுக்கும் மிளகுக்கும் இக்கவிதைகளை சமர்ப்பித்துள்ளார் கவிஞர் சந்திரா தங்கராஜ்.
திணை, காலம், பொழுதுகளை முன்வைத்து எழுதப்பட்ட கவிதைகள் மிகுந்துள்ளன. இயற்கையைப் பாடுதல் என்பது சங்க காலத்தின் தொடர்ச்சி. மனிதர்களுக்கும் இயற்கைக்குமான வாழ்வை எழுதுவது என்பது காலாதி காலத்தின் எச்சம். அதனை சமகாலத்தோடு இணைத்து பாலின அரசியல் ப்ரக்ஞையோடு எழுதியுள்ளார் சந்திரா.

மேற்குத்தொடர்ச்சி மலையில் தொலைத்த வாழ்வைத் தன் கவிதைகள் மூலமாக மீட்டெடுத்துத் தத்தளிக்கிறார் கவிஞர். நெருக்கடி மிகுந்த நகர வாழ்விலிருந்து உந்திக்கொண்டு மலையை நோக்கிப் பறக்கும் சிறகுகளைத் தன் கவிதைகளுக்கு அணிவிக்கிறார். மலைக்காட்டு வாழ்வு, சமகாலத்தின் நகரத்து நாட்கள், தான் இழந்த உரிமைகளைக் கோரும் பாடல்கள் என்று தொகுப்பை மூன்றுவிதமாக நகர்த்துகிறார்.

கவிதைகளில் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் நாடோடிக் குடும்பமாக இருக்கவே சந்திரா விரும்புகிறார். தனது கற்பனையில் மலைகள், மேகங்கள் மீது புரண்டாலும் அவரது கால்கள் என்னவோ குடிசையின் தரையில்தான் ஊன்றி இருக்கின்றன. கை கொடுக்கும் உறவோடுதான் எங்கும் செல்கிறார். தனித்துச் செல்ல நேர்ந்தாலும் இருட்டுவதற்குள் திரும்பி விடுவேன் என்ற உத்தரவாதத்தைத் தருகிறார்.

இவர் கையாளும் மொழி ஒரே லாவகத்துடன் செல்கிறது. இரவுநேர நட்சத்திர விடுதி விருந்தில் ஒலிக்கும் சீரான லயமிக்க இசையைக் கேட்பதான உணர்வை அது தருகிறது.


உரத்துப் பேசுவதும் நறுக்கென்று பேசுவதும் வேறு வேறு. சந்திராவின் கவிதைகள் இரண்டாம் ரகத்தில் அமைந்துள்ளன. அதிகாரத்தின் சட்டையைப் பிடித்து உலுக்குவதில்லை. ஆனால் அதன் கவனத்தை சாந்தமாகப் பேசியே ஈர்க்கின்றன. இந்த சிறுமியின் குரலைக் கேளுங்கள் – “அம்மா, கற்களை வீசாத தேசம் வேண்டும் / இல்லை உடையாத தலையாவது வேண்டும்”. யாரோடும் மல்லுக்கட்டாமல் அவள் ஒதுங்கிக்கொள்ள நினைக்கிறாள், இல்லையேல் உங்கள் வன்முறையைத் தாங்கிக்கொள்ளும் வலிமையைக் கோருகிறாள். விளிம்புநிலை மக்கள் இந்த தேசத்தில் பிழைத்தாக வேண்டிய லட்சணத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் வரிகள்.
ரோஹினி மணியின் அட்டைப்பட ஒவியம், சல்வேடர் டாலியின் குச்சிக் கால் யானை ஒவியத்தை நினைவுறுத்துகிறது. கிரேக்க மற்றும் எகிப்திய கட்டிடச் சிறப்புமிக்க நினைவுத் தூண்கள் அதன் உச்சியிலே ஒரு பிரமிட்டையும் சுமந்து செல்லும் குச்சிக் கால்கள் கொண்ட டாலியின் யானையை ஒத்த ஒரு யானை மீது ஒரு பெண் அமர்ந்து இருக்கிறாள். அந்தப் பெண் தொலைவில் பார்த்துக் கொண்டிருப்பது அவள் தொலைத்த மலை வாழ்வைத்தான் என்பதற்கான சாட்சியாகிறது.


அநாயசமான கற்பனைகள் கவிதைகளில் இறைந்து கிடக்கின்றன. டார்ஜான் மகளென மரத்துக்கு மரம், மலைக்கு மலை, நட்சத்திர மேகங்களைத் தொட்டுத் திரும்பும் சாகசப் பெண்ணானாலும் தாயின் மடியிலும் தகப்பன் தோளிலும் காதலன் கரங்களிலும் ஓய்வுபெறவே விரும்புகிறவள்.
பொதுவாக ஆண்கள் எல்லாவற்றிலும் இருந்து தப்பித்து வாழவே விரும்புவர். பெண்களோ குடும்பத்தின் தடைகளை உடைத்து அவர்களுடன் சுயமரியாதையும் சுதந்திரமும் நிறைந்த வாழ்வைப் பகிரவே விரும்புவர். இந்த மனநிலையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. பெண்களின் முதல் அரசியல் செயல்பாடு என்பது குடும்பத்துக்குள்தான் இருக்கிறது. ஒரு எல்லைக்கோட்டுக்குள் இருந்துகொண்டு அதற்குள்ளாக ஒரு சுதந்திரத்தைப் பெறுவதே பெரும்பாடாக இருக்கிறது. பல நேரங்களில் இதற்கே நேரம் சரியாகிவிடுகிறது. விதிவிலக்குகள் சில இருந்தாலும் இதுவே பெரும்பான்மையாக இருக்கிறது.


நினைத்ததையெல்லாம் பெண்கள் செய்ய முடிவதில்லை. கற்பனையான வடிவமாக, கனவாக இருந்தால் கூட, அதையும் கண்காணிக்கும் கண்கள் உள்ளன! “இரு பெண்கள்” என்ற கவிதையில் நாணயத்தின் இருபக்கமென அவளையே அவள் குடும்பத் தலைவியாகவும் நாடோடிப் பெண்ணாகவும் வரித்துக் கொள்கிறாள். அந்நியனோடு உணவருந்தக்கூட அவளுக்கு மாறுவேடம் தரப்படுகிறது. கடைசியாக அந்த நாணயம் எங்கோ உருண்டோடித் தொலைந்த பிறகுதான் அவளது வாழ்வின் சுதந்திரம் வந்து சேர்கிறது. எத்தனை பெண்களால் இப்படித் தங்களின் தோல் பைகளில் இருக்கும் இந்த நாணயங்களை வீசித் தொலைக்க முடிகிறது?!


“இன்மையில் அசைந்தாடும் நிலவெளி” என்றொரு கவிதை. அதில் அவள் இன்மையில் உட்கார்ந்து இருப்பாள். பல பெண்களின் வாழ்வு இப்படித்தான் இன்மையில் உட்கார்ந்து, சிரித்து, அழுதபடியே முடிந்துவிடுகிறது. அதே இன்மையின் கைகள்தான் ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறையாத ஆதவனை, செம்பரிதியை நிறுத்துவது எளிது என்கின்றன.

தரிசித்த பெண்களின் வாழ்வை தருணம் தவறாமல் பிரதியெடுக்க விரும்பும் சந்திரா, ஒரு கவிதையில், “நான் எதுவென்று சொல்கிறீர்களோ அதுவாகவே இருக்கிறேன் எப்போதும்” என்று அறிவிக்கிறார். தொடர்ந்து பன்னிரெண்டு வசந்தங்கள் கழித்து அவர்தம் பெரியம்மா சொன்ன வாக்கியமான “நீ குதிரைக்குட்டியைப் போல இருக்கிறாய்” என்ற அறிவிப்போடு குதிக்கிறார்.


மரணத்தை வேறு வேறு அனுபவங்களிலிருந்து எழுதிப் பார்க்கிறார். உயிலின் சாசனமாய் மலைவாசத்தோடு சில கவிதைகள். “சருகிலைகளில் நிழலாடும் மாய்ச்சி” கவிதையில், அம்மா தைல வாசனையோடு விறகுக்கட்டையாக நிமிர்ந்து மினுங்கி என் கைகளில் மரித்தாள் என்ற வரிகள் அதிர்வடையச் செய்கின்றன. அதே அம்மாதான் முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும் என்று தன் மகளிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். இரண்டு நிலைப்பாடுகளில் இருந்தும் எழுதப்பட்ட கவிதைகள் மரணத்தின் சாயையை அரூபமாக வரைகின்றன.

“அம்மாவின் கருவறைக்கு தூரமாகிவிட்ட பிள்ளையின் மரணம் எவ்விதமும் நிகழலாம்” என்று ஆறுதல் கூறும் சந்திரா, மரணத்தைப் பற்றிப் பேசும் கவிதைகளில் எல்லாம் அவர் வேண்டி விரும்பிக் கேட்பதெல்லாம் ஆழ்ந்த அமைதியை. இழந்துபோன நாடோடி வாழ்வையே அவர் விரும்புகிறார். அவர் தவறவிட்ட வசந்த காலத்தைக் காலச்சக்கரத்தில் ஏறி மீண்டும் சிறுமியின் ரூபத்தை அடைந்துவிடும் வேகத்தில் இக்கவிதைகளை எழுதியுள்ளார்.

மனிதர்களைக் கிளிகளாக்கி ஆடுகளை இட்லி தின்று விற்கவைக்க வைப்பதும் காலத்தின் தொலைவை 180 மில்லி லிட்டரால் அளப்பதும் சந்திராவின் கவிதைகளுக்குத் தனி புத்துணர்ச்சியைத் தருகிறது.


“எவ்வளவு நேரம் நின்று பார்த்துக்கொண்டே இருப்பாய்/மலையைப் புரட்டு/அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது யாரும் பருகாத நீர்” போன்ற துண்டு துண்டான கவிதைகள் பேசும் வாழ்வியல் பகுதிகளான காதல், காமம், புறக்கணிப்பு, பிரிவு, மரணம், துக்கம் ஆகியன கச்சிதமாக வார்க்கப்பட்ட வடிவங்களில் கடத்தப்படும் உணர்வுகள்.
தலைகீழாகப் பார்க்கும் பார்வைகள் சில கவிதைகளில் கூடுதல் அழகைத் தருகின்றன. “மலையின்மீது அமர்ந்துகொண்டு சமவெளியில் மின்னும் விளக்குகளை நட்சத்திரங்களென எண்ணினோம்” என்ற வரியில் அந்த அழகியல் மிகுந்திருக்கிறது. இவர் ஒரு திரைப்பட இயக்குநர் என்பதற்கான அசலான எடுத்துக்காட்டு இக்கவிதை.


பெண்களின் வாழ்வியலில் இயற்கையைப் பாடுவது என்பது ஒரு அரசியல். இயற்கையோடு வாழ்வது பெண்களுக்கே கூடுதல் உள,உடல் நலத்தைப் பேணும். இயற்கையோடு வாழ்வதோடு குடும்ப, சமூக விடுதலைக்கான குரலையும் சேர்த்து பெண்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளும் நிறைந்த தொகுப்பு இது.



அரசியல் ப்ரக்ஞையோடு தன்னையே சற்றுத் தள்ளி நின்று பார்ப்பது, நட்சத்திரங்களை சமவெளியில் மின்னச்செய்வது, பறவைகளின் அலகில் மலைகளைத் தொங்கவிடுவது என்று மொழியின் கைக்கொண்டு சாகச உணர்வோடு எழுதப்பட்ட கவிதைகளை வாசிக்கும் அனுபவம், மலையின் பாதையில் உங்களை வழிநடத்தும்.



பெரும்பாலான கவிதைகள் நிலத்தில் ஊன்றியே நிற்கின்றன. நிலம், பெரும்பொழுது, சிறுபொழுதுகளைத் தொடர் ஓட்டம் போல வரிகளால் அமைத்து எழுதப்பட்ட”மரையா” என்ற கவிதை முதல்நாள் இரவில் தொடங்கி மறுநாள் மாலையில் முடிகிறது. தொடர் ஓட்டத்தில் ஏந்தப்பட்ட சுடரொளி குறையாது மிளிரும் இக்கவிதை நல்ல வாசிப்பனுபவம். அதே திணையை அடிப்படையாகக் கொண்ட “ஐந்திணையிலும் சொல்லப்படாத வாழ்வு” என்ற கவிதை வார்த்தைகளை அச்சில் கோர்த்த வரைவாக மட்டுமே நிற்கிறது. தலைப்பை முன்வைத்து திட்டத்தோடு எழுதப்பட்டதோ என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது. சிறு தருணத்தை வார்த்தைகளால் வைத்துவிட்டுப் பறந்துவிடும் கிளியைப் போல சில கவிதைகள் வாசிக்கத் தொடங்கும்போதே முடிந்து விடுகின்றன. சில கவிதைகள் முடிந்தும் நீண்டுகொண்டே செல்கின்றன.


குறிஞ்சித் திணையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் காலம் எதுவென்று குழப்பம் இருக்கிறது. காலத்தில் முந்தைய, பிந்தைய குறிப்புகள் வருகின்றன. ஆரெஸ்பதி தைல வாசனை என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார். மலைக்காடுகளில் ஏராளமான செடிகளும் கொடிகளும் உண்டு. அதேப் போல காபித் தோட்டங்களும் வருகின்றன. ஆடு, குரங்கு, மிளகு ஆகியவை கவிதைகளில் அடிக்கடி தென்படுகின்றன. மலைக்காட்டில் யானையின் ஆளுமை இல்லாமலா போகும்?! அறிமுகப் பாடலில் வந்து போகும் கதாநாயகி போல, அட்டைப் படத்திலும் ஒரே ஒரு கவிதையிலும் வருவதோடு யானையின் வேலை முடிந்துவிடுகிறது. மலைகாட்டின் உயிர்ப்பான காட்சிகள் இல்லாமல் ஒரு பெண் தனது மலைக்காட்டு வீட்டு வாசலில் உட்கார்ந்து பார்த்த காட்சிகளாக இக்கவிதைகள் அமைந்துவிட்டனவோ என்று ஒரு தயக்கம் ஏற்படுகிறது. ஆனால் நாகரிகத்தால் துண்டான வாழ்வின் பிரதிகள் இவை என்பதையும் மறுக்க முடியாது.

மிளகு
கவிதைகள்
சந்திரா
எதிர் வெளியீடு (170 ரூபாய்)

***


ஸ்டாலின் சரவணன் – புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர். “ரொட்டிகளை விளைவிப்பவன்” எனும் கவிதை நூல் வெளிவந்துள்ளது.
stalinsaravanan@gmail.com


கவிஞர் தேவசீமாவின் “வைன் என்பது குறியீடல்ல” எனும் தொகுப்பிற்கான வாசிப்புரை

0

யவனிகா ஸ்ரீராம்

“அழகானதாய் இரண்டு இருந்தன
தொலைந்துவிட்டது ஒன்று
அச்சு அசலாய்
மற்றொன்று செய்து வாங்கினேன்
சாவிக்கரனிடம்
போலிச்சாவி என அதற்குப் பெயர் சூட்டுகிறார்கள்
அதுவும் திறக்கும்
அதே உண்மையை
போலிச்சாவியல்ல
இன்னொரு சாவி என்றே சொல்லுங்கள்
இன்னொருகாதல் என்பதைப்போல.”

சின்ன அதிர்வுதான் இதில் நடுக்கமோ இடிபாடுகளோ ஏதொன்றும் இல்லை. தேவசீமா தனது கவிதைகளை சன சமூகத்திற்கிடையே நடைபாதைகளில் நழுவவிட்டுப் போகிறாரா அல்லது அது கைதவறி விழுந்து விடுகிறாதாவென்று தெரியவில்லை. அவ்வளவு சுயேட்சையும் தன்னியல்பும் மிக்கவையாக இருக்கின்றன. அதிகம் பேசும் உபன்யாசங்களுக்கு எதிராக ஒருதுண்டுச்சீட்டில் “போதும் நிறுத்துங்கள்” என எழுதி அனுப்புவது போலுள்ள கவிதைகள்.

மனிதர்கள் வாழ்வார்கள் அவரவர் கதியில் இடத்தில், சூழலில் அங்கே நானாவித வெளிப்பாடுகள்; அசிங்கம், அவலம், தூய்மை, புனிதம் எனத்தொடரும் இருத்தல்கள் மத, குடும்ப, நட்பு வகையினங்கள்; உரையாடல்கள் அனைத்திலும் கூர்ந்த செவித்திறம் உடைய இக்கவிஞருக்கு இறுதியில் புன்னகையே மிஞ்சுகிறது.

வாழ வழி இருக்கிறதோ இல்லையோ உலகம் விதிகளையும் விமர்சனங்களையும் மட்டுமே முன்னேற்பாடாய்க் கொண்டு வெகுகாலம் ஒரு கண்காணிப்பு வளையத்திற்குள் நம்மை வைத்திருக்கிறது என்பதன் மீதான பகடி கவிஞரிடம் மெல்லிய வெறுப்புடன் மட்டுமில்லாமல் ஆளுமையாய் இருப்பதன் அவசியத்தை வலிமையாக்கி நிகழ்வதாய்ச் சொல்லலாம்.

நம்மை அருகே வைத்திருக்கிறாரா தூரப்படுத்தி இருக்கிறாரா எனும் சம்சயங்களை உண்டாக்கும் கவிதைகள்.

“ஒரு கொடுக்கோ
கொஞ்சம் விஷமோ
கொடுத்திருக்கலாம் கடவுள்
தொடுமுன் ஆயிரம் முறை யோசித்திருப்பார்கள்”

இந்தத் தொடுதல் என்பது தலைக்குள் கூரிய அலகுள்ள பறவை நுழைந்து குரல்வளை இறங்கி இதயத்தின் புழுக்களைக் கொத்தி இரையெடுப்பது போல ஏன் மாறிவிடுகிறது? அப்பறவை கைகளில் வந்து மெதுவாக அமர்ந்து நமது மூக்கில் ஏன் முத்தமிடுவதில்லை?

இந்தச் சமூகம் தொடும் அனைத்திலும் வன்முறையும் அச்சமும் ஒடுக்கமும் அவசரங்களும் கூச்சமும் எமாற்றமும் துரோகங்களும் ஏன் நீரற்றுப்போன வண்டலாய் படிகின்றன. எதுமாதிரியான காலத்தின் பிரதிநிதிகள் நாம்.?

இறையச்சமா இயற்கையின் மீதான புரிந்துணர்வா என்பதைக் கற்கிறோமா. ஒருபக்கம் காடுகள் அழிகின்றன. மறுபக்கம் கடல் மட்டம் உயர்கிறது. செய்திகள் பலவும் நெருக்கி அடித்து வந்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வு கைமீகிறது. சுயநலமோ, பொதுநலமோ எப்படியேனும் நம்கைகளில் ஒப்படைக்கப்பட்டு விடுகிறது. கண்ணீரோ குருதியோ
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் கவிதைகட்கு என்ன நேர்கிறது? அந்தத் துண்டுத்தாள்களில்!

கவிதைகளை எப்படியும் கடந்துதான் போகிறோம். சுவரொட்டிகள் விளம்பரங்கள் ஒளிரும் மின்பேனர்களைக் காட்டிலும் அவை நம்மை ஈர்ப்பதில்லை.

ஒரு துடிக்கும் இதயம் சாலையின் நடுவே கிடந்தால் திடுக்கிட்டுப்போகும் உலகத்திற்கு ஏதுவாகக் கிடத்த வேண்டியதிருக்கிறது கவிதையை!

“அதோ ஒருகல்
யுகம்யுகமாய் நதிக்கரையில்
அவ்வப்போது நீருடன் சல்லாபித்த ஒன்று
கல்லினுள் நீரின் சலனங்கள்
நீரிலும் கல்லினது
பாசிபடர்ந்தாலும் கல் அதுவே
வற்றிச்சுருங்கினாலும் நதியே
பாசி என்பதோர் படிமம்”

இங்கு தேவசீமாவின் கவிதை விலக்கிக் காட்டப்பட்டுள்ள முறையில் ட்ரான்ஸ்ப்ரஸியாகவும் மற்றும் இருத்தலியல் கடந்த சுயத்தை மறுத்து அபௌதீக நிலையை அடைகிறது. இந்த ஒப்புதலின் கீழ் விகாசங் கொள்ளும் நாட்பட்ட அடிமனம் நம்மிடம் கைமாற்றப்பட்டு விடுகிறது. நல்லகவிதைகள் அப்படிச் செய்துவிடுகின்றன. அபூர்வமாக நிகழ்ந்த கவிதை இது.

அத்துடன் “நீங்கள்” என விளித்துக்கூறும் இத்தொகுப்பின் முதல் கவிதையைக் காணலாம்

“இதோ ஒரு தேனீர்ப்பையின்
உதவிகொண்டு
பீங்கான் கோப்பையின்
சுடுதண்ணீரையோ அன்றி
தேனீர்ப்பையையோ சுவையூட்ட
முயற்சி செய்கிறீர்கள்
பையை நீங்கள் பருக முடியாதாகையால்
நீங்கள் சுடுநீரையே
சுவையூட்ட முயல்வதாக ஒருமுடிவிற்கு வரலாம்.”

தேனீருக்கு என டீ பென்ஞ்சுகளை குவளையில் இட்டு ஆட்டும் செயல் எதன் குறியீடு என்பதை விளக்க ஒரு போத்தல் ஒயின் கட்டாயம் தேவைப்பட்டு விடுகிறது கவிஞரே.

“பூனைக்குட்டிகளைப் பிரசவிக்கத் தயாராகும் வீடுகளில்” இருந்துதான் அகத்தையும் புறத்தையும் இக்கவிதைகளாக வாசிக்கிறோம். பலநினைவு மறதிகள் பல புத்துணர்ச்சிகள் பல உரையாடல்கள் நேரங்கழியும் தெருக்காட்சிகளுக்கிடையேதான் நம் பயணங்கள். விமர்சிக்கவும் விமர்சிக்கப்படவும்தான் பழகி விட்டோம்.

ஒயின் என்பது குறியீடல்ல என்ற இத்தொகுப்பின் கடைசிக்கவிதை

நிரந்தரமாய் மூடிக்கொண்ட ஆதிக்குகை எனும் தலைப்பில்

“வெளிவரும் முன் செய்தழித்த பிறாண்டல்களில்
உருவான ஓவியம் என்னென்ன என
எட்டிப்பார்த்தல் எங்ஙனம் அறிகிலேன்
கருவறை சுவர்களில்”

என்று நிறைவெய்துகிறது.

கருவறைச்சுவர்களில் வரைந்த ஓவியங்கள்

அவை வெளிவந்த வண்ணங்கள்
ஆதிக்குகை

கர்ம வினைகள் என்ற ஒரு சொல்லாட்சி அனைத்தையும் பற்றிப்பீடித்திருக்கிறது. கருந்துளையில் எத்தனை துவங்கங்களும் முடிவும்? இன்மையும் பெருக்கமும்? மாறி மாறி நிகழும் இயக்கம்! ஆனால் வெளிவந்த எதுவும் அறியுமா கருப்பையின் கீறல்களை, வடுக்களை. அதையும் கவிஞர் ஓவியமாகவே காணமுயல்கிறார். நிலைப்படுத்தப்பட்ட தாய்மை, பெண்மை, தியாகம் இரண்டாம்பட்சம் போன்றவை தகர்க்கப்படுகின்றன. தனி உயிரி எனும் மனுஷி இங்கு தர்க்கத்திற்கு அப்பால் எதிர் நிற்கிறார். பெண்வழிப் பரிமாணங்கள் ஏதேனும் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன அந்த வகையில் காதலின், காமத்தின் மன உயரங்கள் இக்கவிதைகளில் பேதமற்றுப் பரிந்துரைக்கப்படுகின்றன.

எழுதியவரின் கைகளில் இருந்தா வாசிக்கிறோம்.

ஆம்

தேவசீமாவின் கவிதைகள் சுயம் மற்றும் மற்றமை மீது நிலவியும் நழுவியும் செல்லும் பண்பைக் கொண்டிருக்கின்றன.

தீர்க்கமான முடிவுகள் சில அதன் வன்மத்தில் இளகவும் ஆன ஒரு எதிர்மறை நேசமும் தென்படுகிறது.

இயங்கு விசையா? இயக்கு விசையா? அறம் ஒளிந்து விளையாடும் இக்கவிதைகள் பேசும் மொழி அருகிருப்பதா, அந்நியமானதா என்பதுடன் உறவு கொண்டுள்ளன.

சில கவிதைகள் இக்காலத்திய புதுமைப் பிரச்சனையைக் கையாண்டுள்ளன. இன்னும் சில ப்ரத்யேகச் சொல்லாடல்களைக் கொண்டு வாசகரைக் கவனப்படுத்த இயலாமல் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றன என்றாலும் “மூன்று சட்டைகளால் ஆனது என் பாதை” எனும் கவிஞர் இத்தொகுப்பின் மூலம் இடம், காலம், இருத்தல் எனும் அபத்தங்களுக்குள் ஊடுருவி இருக்கிறார். அவரது பகடியும் வன்மமும் சற்றே நம்மைச் சமன்குலையச் செய்கிறது. இன்னும் உள்ளே சலனமுறும் மொழியின் ஆற்றல் லாவாவைப்போல இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்துவார் எனும் வகையில் தேவசீமா நம்பிக்கை தரும் ஒரு படைப்பாளி! மேலும் ஒரு ஆண் என்ற எல்லைக்கு வரம்பிட்டே இவ்வாசிப்புரையை முன்வைக்கிறேன். இக்கவிதைகளில் ஊடாடி இருக்கும் சில ரகசியங்களை மதிக்கிறேன்!

இன்னும் சில கவிதைகள்

சமரனின் யட்சி, பொத்தான்கள் குறுக்கிடும் வாழ்க்கை, சுயம், சூளையில் சுட்ட கற்கள், மணிப்பூரகம் என்பது நீலமாணிக்கம், கண்ணாடிசில்லு போன்றவை தெளிவான சொல்முறையைக் கொண்டுள்ளன. அடித்தள மக்களின் குறிப்பாக உழைக்கும் பெண்களின் விளிம்பு வாழ்நிலைகள் மீதான சித்திரங்களை கவிஞர் இடப்படுத்தி உள்ளார். தமிழ் வாழ்வின் கலாச்சார மாற்றங்கள் பற்றிய அவதானிப்பும் இருக்கிறது.

இயற்கையுனான தனது தேர்வும் தன்னிலையும் கலந்த இக்கவிதைகளை முன்வைப்பதன் மூலம் அரசியலும் கலையுமாகி நிற்கும் அவர் மென்மேலும் எழுதிச் சிறக்க வாழ்த்துகள்.

வைன் என்பது குறியீடல்ல
கவிதைகள்
தேவசீமா
தேநீர் பதிப்பகம் (100 ரூபாய்)

****

யவனிகா ஸ்ரீராம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மத்தியத்தர போலி கவித்துவத்திற்கு எதிரான அறம் சார்ந்த செயல்பாட்டைக் கொண்டுள்ள தமிழின் முக்கியமான கவிஞர். மின்னஞ்சல்: yavanikaramasamy@gmail.com

நந்தன் கனகராஜ் கவிதைகள்

0

ஒளி மலர்கள்

நாம்
சந்தித்துக் கொள்ளாத
காலத்தில்
பூக்கொண்டிருப்பதை
நிறுத்திவிட்டது
அம் மரம்

இலைகளே தெரியாமல்
மேனி வனப்பை
முழு மஞ்சளுக்குத்
தரித்திருந்த தும் உண்டு

கோடையின்
சிறுபிறை இரவு

பகலின் மேகத்துண்டுகள்
கள்ளமாய்
சிதறிக்கொண்டு விட்டன

பிடாரனின் இசையிலிருந்து
தொலைந்து கொள்ளும்
நிச்சயத்தில்
காதுகளைக் கூர்படுத்தி
நடக்கிறேன்

வந்து போகும்
ஞாபகங்கள்
குறைந்த ஒளியின்
வெளிச்சத்திற்கு
இரவின் மலர்களாகின்றன

எதை எதையோ
பேசித் திரிந்த
எங்கெங்கோ
கடந்து போயிருந்த
நினைவுகள்
ஒளியேறி
கூடி வருகின்றன

இந்த
நற்துவக்கத்தின்
வலசைப் பறவையாகிக்
கொண்டேன்

விரியத் துவங்கும்
சிறகுகளுக்கு

நிறைய பாதைகள்.

*

கண்களை வரைபவனின் தூக்கம்

அவ்வளவு பெரிய ஆகாயம்
இந்த இரவில்
என்னைப்
பார்த்துக் கொண்டேயிருக்கிறது

சூன்யமான பகலை
உதறிக் கொண்டு
போவதில்
அத்தனை மகிழ்ச்சி

நான் போகின்றேன்

எந்த சுவாரசியங்களுமற்ற
வாழ்க்கை ஓட்டம்
என் உணவுப் பாத்திரத்தை
இன்னொருவனிடம்
கைதந்து வைத்திருக்கிறது

பாதைகள் தீர்ந்து கொண்டு
கருப்பு போர்வையாக
நீளும்இப் பெரும் பரப்பிற்கு
இக்கணத்தில்
திசைகள் ஏதுமில்லை

மெல்ல வந்து
ஒட்டிக்கொள்ளும்
நட்சத்திரங்கள்
மேனி ஏறி ஒளிர்கின்றன

பரிசுத்த வெண்மையின்
கண்களை
கைகளில் எடுத்துக்கொண்டு விட்டேன்

பிறிதொரு கரங்களுக்குச்
சேர்ப்பிக்கும் எண்ணம்
நினைவில் அமர்கிறது

வரிசையான
அத்தனை முகங்களுக்கும்
ஒளியேறுவதைக் காண்கிறேன்

கனவுகளில்
விடுத்துக்கொண்டு அவிழ்கிறது
எல்லோருக்குமான
மகிழ்ச்சியின் புலரி.

*

சற்றுநேரச் சித்தம்

மொட்டை மாடியிலொரு
தொட்டிச் செடி
பாந்தமாக நிற்கிறது

தினசரிக்கும் போய்வரும்
தெருவின்
முக்கு வீட்டுப்
பன்னீர் மரத்தை
வெட்டி விட்டார்கள்

கையசைத்து
முத்தம் தரும்
குழந்தையையும் காணவில்லை

மனிதர்களின்
அவசரங்களைப் போல
கொடியது
என்ன இருக்கிறது?

ஊரை
நான்கு துண்டுகளாக்கி
வியாபாரம் செய்யும்
கிழவியோ
வலப்புறத் தட்டை
நன்கு சரிய விடுகிறாள்

நடுக்குறிமுள்
கீழிறங்கிக் கொண்ட
சந்தோசத்தை
சின்ன சிரிப்பாக்கித்
தந்து
தலைச்சுமையை சரி செய்து
நகரத் தொடங்கி விடுகிறாள்.

எதனுள்ளும்
சிடுக்கிக்கொள்ளாத வாழ்வை
பிரமைகளில் தான்
வாழ நேர்கிறது.

*

யுக கசப்பு

உலகின்
கடவுச் சொல்லைக்
கொண்டு வந்த
சிசு
கைகளை இறுக்கி
மூடியிருந்தது
இனிப்புச் சுவையின்
மூன்று சொட்டுகளை
ஒவ்வொருவராக
நாக்கில்
இடத் தொடங்கினர்
நிர்வாண உடம்பில்
பற்றிக் கொண்ட
எல்லாவற்றுக்குமாக
வீறிட்டுக் கொண்டிருக்கிறது.

***

நந்தன் கனகராஜ், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்தவர். தொடர்புக்கு : skrnandhan@gmail.com

சங்கரன் விஸ்வநாதன் குறுங்கதைகள்

0

1

மீனாட்சி… பாக்கறயா?”

“அடுப்புல வேலையா இருக்கேன்”

“ஒரு நிமிஷம் இங்க வாயேன்…”

பாட்டி அடுப்படி வாசலில் வந்து நின்றாள். அவளின் முகம் பார்க்கவும் ஹாலில் கட்டிலில் படுத்திருந்த தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.

“இப்போ சொல்லுவா கேளு” கே.பி சுந்தராம்பாள் ஔவையாராய் நடித்தப் படம் டிடி-யில் ஓடிக்கொண்டிருந்தது. அல்லது காரைக்கால் அம்மையாராய் இருக்கலாம். சரியாய் நினைவில்லை. தோராயமாய் காட்சி இதுதான் – மீண்டும் பிறவாமல் இருக்க என்னசெய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஈசன் “இறக்கும்போது நீ என்ன நினைக்கிறாயோ அதைப் பொறுத்துதான் உன் அடுத்தப் பிறவி அமையும். என்னைச் சிந்தையில் வைப்பவர்கள் என்னை வந்து சேர்வர்”என்பார்.

“மனசுல வச்சுக்கோடி…”

“நல்லதே நெனைக்க மாட்டேளா”

“பரமேஸ்வரன நெனச்சுக்கறது நல்லதில்லையா”தாத்தாவின் சிரிப்பைச் சட்டைச் செய்யாமல், “பொழச்சுக்கிடந்தா என்ன நடக்கும்னு தெரியாது… இதுல இதெல்லாம் என்னத்துக்கு… அப்றம் நம்ம காரியம் என்ன நாளைக்கே முடியப் போறதா” சொல்லிவிட்டு அடுப்படிக்குள் சென்றுவிடுவாள்.

பாட்டியின் வார்த்தைகள் மட்டும் எனக்கு மறக்கவேயில்லை.

தாத்தாவின் காரியம் வெகு சீக்கிரமே முடிந்து போனது. தாத்தா இறக்கும்போது ஆந்தையைப் போல் இருமுறை ஒலி எழுப்பினார், பின் உயிர் பிரிந்தது என்று மாமா சொன்னபோது “இல்லை அவர் ‘சிவ சிவா’ எனத்தான் சொல்லியிருப்பார்” என்றேன்
மாமாவும் இருக்கலாம் என்பதைப்போலத் தலையசைத்தார்.

*

2

“சந்திர உதயத்தையோ, அஸ்தமனத்தையோ யாரும் பார்ப்பதில்லை. மலர் மலர்வதற்கோ, வாடி விழுவதற்கோ பார்வையாளர்கள் உண்டா என்ன! பார்வையாளர்கள் நிலவை மலரோடு ஒப்பிடுவதைவிட நடனமங்கையுடன் ஒப்பிடலாம். அதுதான் சரி… திரை விலகும்வரை தான் பார்வையாளர்கள் காத்திருக்க வேண்டும்… பார்வையாளர்கள் நிலவின் அரங்கில் எப்போதும் மக்கள் உண்டு… ஆனால் பார்வையாளர்கள்? பெளர்ணமி இரவில் கடலில் அலையடிக்கும். நதியில்..?”
மலை உச்சிக்குப்போகும் வரை அவனை நிலவு பின்தொடர்ந்தது.

அவனைப் பற்றிச் சொல்ல பெரிதாய் ஒன்றுமில்லை. சட்டகத்தை விட்டு வெளியேறத் துடிக்கும் ஓவியம் என்று சொன்னால் ஒருவேளை பொருந்தக் கூடும்.

அவன் உச்சியை அடைந்தபோது நிலவும் அடைந்திருந்தது. சில நபர்கள் நல்ல இடைவெளிவிட்டு படுத்திருப்பதைக் கண்டான். எல்லோருமே உடைகளற்று அம்மணமாய் வானம் பார்த்துப் படுத்திருந்தனர். அவனுக்கு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இதைப் போன்ற இடங்களில் நடக்கூடியவைதான். அவனும் ஒரு இடம் பார்த்துப் படுத்துக் கொண்டான்.

கண்விழித்த போது அவனைச் சுற்றி சிறுகூட்டம் நின்று கொண்டிருந்தது. முதன் முறையாக சங்கடமாயும், வித்தியாசமாயும் உணர்ந்தான். இரவில் பார்த்தபோது “போதையாய்”இருக்கும் என்று நினைத்தவன் விடிந்த பின்னரும் நிர்வாணமாய் இருப்பார்களென எதிர்பார்க்கவில்லை.

“போகலாமா”அவனுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தவர் கேட்டார்.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டுவனைப் போல் “ம்ம்”என்றான்

அவன் இருந்த இடத்திற்கு எதிராகத் தெரிந்த பாதையில் இறங்கி கூட்டம் நடக்கத் தொடங்கியது.

அவன் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

ஒரு பத்தடியில் அவர்கள் அவனைத் திரும்பிப் பார்த்தனர். ஒன்றுமே சொல்லாமல் அவனைப் பார்த்தனர். அவன் குழம்பினான். சட்டென்று புரிந்தவனாய் உடைகளைக் களையத் தொடங்கினான்.

உடல் முழுவதும் உணர்ந்த குளிர் நொடியில் காணாமல் போனது.

பின் அவன் மலையை விட்டு இறங்கவேயில்லை

*

3

நீண்ட நேரமாக எழுப்பியும் அசைவற்றுக் கிடக்கும் அக்குருடனின் கருப்புக் கண்ணாடியை கழட்டிப் பார்த்து உறுதிசெய்து கொண்டு மயானத்திற்குத் தூக்கிச் செல்கிறார்கள். கட்டையெல்லாம் அடுக்கி, அதன் மேல் அவனைக் கிடத்தி சாணம் கரைத்து ஊற்றப் போகும்போது புரண்டு படுக்கிறான் குருடன். பிறகு சட்டென்று எழுந்து கொள்கிறான். நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டவனிடம் விசயத்தைச் சொல்கிறார்கள். “குருடன் விழுந்தால் செத்துதான் விழ வேண்டுமா..?”எனக் கேட்கிறான். “எங்களுக்கு எப்படித் தெரியும்…” என்று முணுமுணுப்போடு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்..

*

4

ஆசிரமத்தில் இருக்கும் பாட்டியைப் பார்க்கச் செல்கையில் ஏதேதோ நினைவுகள்.

ஒவ்வொருமுறை போகும்போதும் குறைந்தது இரண்டு புத்தகங்களாவது கொண்டு செல்வது உண்டு. பொன்னியின் செல்வன், யவன ராணி, ராஜ திலகம், ராமாயணம், மகாபாரதம் என ஒரு பெரியப் பட்டியலைச் சீக்கிரமே முடித்துவிட்டாள். கடைசி இரண்டு தடவைகளாக சிவபுராணம் வாங்கி வரும்படி கேட்டாள்.
மனம் ஒப்பவில்லை.

இன்னும் கொஞ்சநாள் போகட்டும் பாட்டி என்று சொல்ல நினைத்தேன்.

பாட்டிக்குப் போய் மோகமுள் கொண்டு போறயேடா என்று சிரித்த அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை.

“ஏன்டா நான் கேக்கறத தவிர மத்ததெல்லாம் எடுத்துண்டு் வர…”

“அடுத்த வாட்டி வர்றச்சே நிச்சயமா கொண்டு வர்றேன் பாட்டி”

“நாளப்பாடு நாரயணனுக்கு… ராம் ராம்” என்றாள்.

சந்தோஷமாகவும் இருந்தது. ஏனோ வருத்தமாகவும் இருந்தது.


சங்கரன் விஸ்வநாதன்
narayanan.sangara@gmail.com

ம.கண்ணம்மாள் கவிதைகள்

1

அதகளத்தி

1

நானும் என் சொற்களுமானதொரு
மின் இணைப்பு எனக்கென்று ஆனது
அதில் பிளவுபட்ட மொழியின் உலராத ஈரம்
கசிந்து கொண்டேயிருந்தது
இங்கு ஈரமென்பதே காய்தலில்லா திரிபுக்காட்சி
ஈரம் அதிகமாகும் போதெல்லாம்
முன்பேச்சுகளைத் திறந்து பார்க்கிறேன்

அது உயர் மின் அழுத்தத்தில் கிடந்தது
எங்கோ ஓரிடத்தில் மின் கசிந்தாலும் காட்டு
மரங்களின் அடர்கரி அழுத்தம் தான்
என் செய்வது?
ஒவ்வொரு கணமும்
ஒரு துப்பாக்கி முனை
குறி வைப்பதில் விலக முடியவில்லை.
எங்கோ எம் பாணர்கள்
சருகு ஆடை அணிந்து புகழ் மாலை பரவுகிறார்கள்

ஆனாலும் இந்த துப்பாக்கிகளுக்கு குண்டை
வைத்து அழுத்த வேண்டும்.
அவ்வளவே

அதற்குத் தெரியாது
உடல் மட்டும் மீந்திருக்கிறதென

திடீரென ஒரு துப்பாக்கியிலிருந்து
குண்டு சிதறி என்னைத் துளைக்கிறது
துளைத்த குண்டில் ‘காத்திருத்தல் இனிதென்ற’
சொல் மருந்தாக
என்னுள்ளே சென்றாள் அதகளத்தி

*

2 அது ஒரு முடிவில்லா இரவு


தடைப்பட்ட மொழியினை
என் ஆத்மாவென சொல்லிச் சொல்லி
ஓர் உரையாடலுக்குத் தயாரானேன்
இப்பொழுது நானும் ஆத்மாவும் மட்டும்

கேள்விப்பாத்திரத்திலிருந்த கேள்விகள்
தம்மை அறிவிப்பு செய்தன
எந்த வகைச்சீட்டை எடுப்பது?
கரிக்கிடங்கின் சாம்பல் பூத்து
ஒவ்வொன்றும் காதோதி நின்றதின் மேல்
விசாரணை ஏதுமில்லை

எச்சார்புமின்றி சாய்ப்பில்லாமல்
அடியில் கிடந்த கேள்விகளை
கைத்துடுப்பினால் மேலெழுப்பினேன்

சாம்பல் உதறி பளிங்காய் வந்தவையெல்லாம்
என்னையே திரும்பக்காட்டின

அதோ பாருங்கள்…

எம் தலைவி பகற்குறி தேடி
அலைகின்றாள்
எந்த மின்துகளின் தூண்டுதலில்லாமலும்
இப்பொழுது ஆத்மா பேசியது
உளி கொண்டு பேசுபவனுக்கு கண்ணே முகம்
நான் சொல்கிறேன்
நீ பேசும் சொல்லை வடிவமைப்பது எளிதல்லவே

ஹே… ஹே…

அதகளத்தியின் குரல் கேட்கிறது
மரணமென்பதே பிறத்தலின் ஒரு
வடிவம் தான் என்றவாறு
ஆத்மாவின் கைச்சிறையை
எடுத்து விடுகின்றாள்

குற்றுமி நீங்கிய நிவர்த்திச் சொற்கள்
பல உருக்களாய் வடிவம் பெற்று
ஒல்லென்று ஒலிக்கத் தொடங்கின
தத்தரிகிட… தத்தரிகிட… தத்தரிகிட…

*

3

என்னைப் பல தீக்கொளுத்திகள் சூழ்கின்றன
மேற்கூரையற்ற நிலச்சாரத்தில்
தாங்குகோலின்றி நிற்பது
அதற்குத் தெரிந்துவிட்டது போலும்

இப்பொழுது தீக்கொளுத்திகள் அருகில் வருவதை
உதட்டுச்சாயம் பூசிய சிவப்பென்று
சொல்லிவிட முடியவில்லை

ஆனால், அச்சிவப்பில்
என் நினைவுமொழியின் கற்றைச்சொற்கள்
நீந்திக் கொண்டேயிருக்கின்றன

மிகச் சரியாக சொல்வதென்றால்

சொற்களுக்குத் தான் சிவப்பின் மேல் எவ்வளவு விருப்பம்???

எம்மூதாய்
அன்றே தீக்கொளுத்தியே அறமென்றுரைத்தாள்
எம்முதுபெண்டிர்
சிறு உலக்கையில் நற்சொல் இடித்துத் துப்பியதில்
தாளித்தலின் நறுமணம் கூட்ட
தீக்கொளுத்தியே தேவையாயிருந்தது
அவர்கள்
குழைந்த கறியின் உடலொத்து
கால் நீட்டி தீக்கொளுத்திக்காகக் காத்திருக்கேன்
என்றனர்

இப்பொழுது

என்னருகில் ஒன்றுக்கு பின்னொன்றாய்
வெப்பப்பிழம்புத் தொடப்போவது தெரிகிறது
நான் எங்கும் ஓடவில்லை
நின்று கொண்டுதானிருக்கிறேன்.
ஆனால் பாருங்களேன்…

ஒரு தீக்கொளுத்தியின்
பின்னிருந்து
அதகளத்தி
மா மழை போற்றுதும்…
மா மழை போற்றுதும்…
எனப் பண்ணிசைத்து வருகிறாள்


ம.கண்ணாம்மாள்
kannamano07@gmail.com

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

0

காலணி எழுதிய குறிப்புகள்

படைக்கப்பட்ட மனிதன்
ஏனோ சபிக்கப்பட்டும் விட்டான்
அவன் காலணியில் புதைந்திருக்கும்
துன்பங்களில் துயில்கொள்கிறான்
மருத்துவமனைக்குச் சென்று வந்த குறிப்புகள்
கடைக்குச் சென்று அதன் அடியில்
மிதிப்பட்டுப் போன சில தக்காளியின்
குமுறல்கள்
அவமானத்தின் அடையாளங்கள் நிறைய இருந்தும்
பேசாமல் அமைதி காத்தது அவன் காலணி
அவன் கோவிலுக்குச் சென்று வந்த
குறிப்புகளில் அவன் நம்பிக்கையிருந்தது
ஆனால் தெய்வத்தைப்பற்றி
ஒரு வார்த்தை கூட இல்லை
இரவில் அவன் நண்பனோடு அமர்ந்து
மது அருந்திய குறிப்புகளில்
நிறைய இன்பத்தின் பக்கங்கள்
நிறைய மனிதர்களின்
வடுக்களைச் சுமந்து வந்த காலணி
மனதைவிடப் பத்திரப்படுத்தியுள்ளது

அதன் பயணங்களை
என் மகளின் காலணியை
புத்துயிர்ப்பாய் வைக்கப் பிரியப்பட்டேன்
ரெனே மாக்ரிட்டின் ஓவியங்களை
அவளிடம் அறிமுகப்படுத்தினேன்
அவள் அடிக்கடி காலணியை
மாற்றிக்கொண்டேயிருந்தாள்.

*

அறிவிப்பு

சில நேரம் தானாகவே
விலகிக்கொள்கிறது மனது
இந்த பசுமையான மரங்கள் கூட
பாலைவனமாக மாறிவிட்டது போல் உணர்வு
சில நேரம் உப்புக் காற்றில் உரையாடிவிட்டு
ஏக்கத்தோடு திரும்புவது வழக்கம்

சில நாட்களாக அதுவும் இல்லை
அங்குள்ள கரும் பாறைகள்
என் அமர்விற்காக ஏங்குவது போல்
பாவனை செய்து அதனிடம் அமர்ந்து
பேசியது உண்டு
இந்த மனித வர்க்கத்திற்கு மட்டும்
இத்தனை ஆசுவாசங்கள் தேவைப்படுகிறது

அது மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில்
எதையோ எழுதியபடி ஓடிக்கொண்டிருக்கும்
தத்துவங்களையும்
கருத்துகளையும்
அறிவுரைகளையும்
தாண்டிச்செல்லவே எண்ணுகிறது மனது
இருந்தாலும் நானும் எழுதுகிறேன்

தொடர்ச்சியான மலைகளிலும்
பெரும் பாறைகளிலும்
நீளமான நதிகளிலும்
என் அறிவிப்புகள்
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அது கடலிலும் காடுகளிலும் கலந்து
நடனமிடக் காத்திருக்கிறேன்

மரணத்திற்காக மனம் அமைதியாக
மனிதனிடம் சண்டையிட்டு
காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது
அதைத்தாண்டி ஆழ்ந்த இருப்பில்
என் அறிவிப்புகள் பயணப்படுகிறது

*

தினம்

இதுவே கடைசி
எனக் காத்திருக்கும்
நேரத்தில்
மீண்டும் நிலவின்
வெளிச்சம் நழுவி
காயத்தைத் தள்ளுகிறது
எலும்பு நழுவி
நீந்துகிறது
உதிர்ந்த இலையைப்போல
இந்த கரை இத்தனை
வேதனையைச் சுமக்கிறது

*

உனக்கும் எனக்குமான
இந்த ஒப்பந்தத்தில் நழுவுகிறது
இந்த கல்
நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக்கொண்டே
அதன் பெயரற்ற நிலையில்
அந்தக் கல் மீது அமரலாம்
அதை இடம்பெயரச் செய்யலாம்
வலியைப் பொறுத்துக்கொண்டே
தனி அறையில் வெறுப்பு
அதன் உளி வலிகளைப்பற்றி
ஒருநாளும் யாரும் கேட்டதில்லை

அந்தக்கல்லுக்குப் பிடிக்காத பாடல்
பிடிக்காத பால்
பிடிக்காத மனிதர்களை ஏக்கத்துடன்
பார்த்தது
கதவைத் திறந்திருக்கும்பொழுது வரும் காற்று
பெய்யும் மழை
தெரியும் வானம்
எனப் பழைய நிலைக்கு மாற நினைக்கும்
கல்லைப்பார்த்து
அழைக்கிறது பிரபஞ்சம்
புதிய நிலைக்குச் செல்வதாக
தவித்துக்கொண்டே நடக்கும்
மனிதர்களுக்குள்
வெளிச்சமே பார்த்தறியாத
இருட்டறையே மூலஸ்தானம்
அதிலிருந்து வெளியேறுகிறது
பதற்றத்துடன் பாடல்

*

மரணத்தில் துளிர்விடும்
மண்டையோடுகளின் அலறலில்
அவிழ்கிறது வாழ்ந்து முடித்த எச்சங்கள்
கானல் நீரின் மேல்
சிறிது கண்ணீர் ததும்புகிறது
நெஞ்சில் ஈரத்துடன்
பிணத்தைச் சுற்றிய ஈமச்சடங்குகள்
எலும்பை அரித்துச் செரிக்கும்
மண்ணிற்கும் அதிகாரத்திற்கும்
தொடர்பை ஏற்படுத்தி
நடுங்கச்செய்கிறது நிலம்
மரணித்தலில் ஒரு விதை
உயிர்பெறுகிறது
மரணித்தலில் மனித உடல் எங்கு
மீண்டும் ஜீவிக்கிறது

ஞானத்திற்கும் மரணம் உண்டு
தியானத்திற்கும் மரணம் உண்டு
வாழ்க்கை சங்கிலியின் தொடர் ஓட்டமே
மரணத்தை எதிர்முனையில் இழுத்து
விளையாடுவதுதான்

மரணித்துப்போன படிமங்களின்
கார்பன் ஐசோடோப்புகளின் நிழலில்
இளைப்பாற மண் அழைக்கிறது
பழைய கால நினைவுகளை
அசைபோட வைத்து
நடப்பு திசையை
இழுத்துச் செல்கிறது மண்
எச்சங்களால் நிரம்பிய மண்ணிற்கு
முத்தங்களால் நிரம்பும் அளவிற்கு
மண்ணில் ஏற்புடைந்து சிதறும்
உயிர் குரலின் ஆழத்தில் தீவிரம்

கால் தடங்களின் புணர்ச்சியில்
உயிர் பெறும் மண்ணை
ஆதி அணு அசைத்துப்பார்த்த லௌகீகம்
திகைப்படையச் செய்து கொண்டே
இடம்பெயர்கிறது கோளம்

*

தொலைதலில் இன்பம்

தொலைந்து போகலாமென
சில கிலோமீட்டர் தூரமுள்ள
வனத்திற்குச் சென்றேன்
மனிதனைக் கொலைகாரனென
அழைத்தது மரம்
ஆம் பச்சை ரத்தம் குடிக்கும்
அரக்கக் குணமே மனிதனென்றாள்
வனயட்சி

அவள் அழகின் ரீங்காரத்தில்
வனயட்சனாக தொலைந்து போனேன்
வன இலைகள் காற்றை மீட்கும்
லயத்தில் ஓர் ஈர்ப்பில் கலந்தேன்
ஆதி மரத்தின் வேர்களில் ஒட்டியிருந்த
ஆதிமண்ணின் உருவம் மாறாத
அன்பின் ஒளி வனமெங்கும்
அங்கு ஆதியில் பிறந்த விதையொன்றின்
தொடர்ச்சியில் அலறியது
மனிதனைப் பார்த்த
காட்டு மிருகமொன்று
வேட்டை ஆர்வம் இரண்டு சிவப்பு
மிருகத்திற்குள்ளும் அலறியது
சிவப்பு ரத்தத்தைப் பச்சை ரத்தத்தோடு
சேர்த்துக் குடித்தான் மனிதன்
காடு
மலை
சமவெளி
பள்ளத்தாக்கு
என வேட்டையாடிய மனிதன்
வேற்று கிரகத்தையும் வேட்டையாடுவதை
பார்த்து அலறியது காடு
தேடலுள்ள மிருகத்தின் குரலாய்
மனிதன்

*

தேடலற்ற அமைதியில் காட்டுச் சுதந்திரம்
அலறிக்கொண்டேயிருக்கிறது
நான் வனயட்சியோடு தொலைந்து போனேன்
அதன் நீட்சியில் எந்த சொல்லைக் கொண்டும்
நீங்கள் நிரப்பலாம்
காமம்
தியானம்
காடு
புத்தகம்
நண்பன்
பாடல்
கடல்
பூ
இப்படித் தொலைவதற்கு
ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது.
*

மரண விலாசம்

மரணத்தைத் தவிர
இந்த பூமியில்
நிலையாக அடைய
ஒன்றுமில்லை
ஆமாம்…
சொர்க்கம்
நரகம்
மரணத்தின் முகவரி
என எழுதப்பட்டிருக்கிறதே
சொல்லப்பட்டிருக்கிறதே
காட்டப்படவில்லை…

நான் கடவுள் என்கிறார் ஒருவர்
மரண விலாசம் தெரியாமலேயே
கொஞ்சம் வி(தை)ந்து
கருமுட்டையில் விலாசம் அமைத்து
மரணிக்கத் தொடங்குகிறது எல்லாமும்

நமக்குத் தெரிந்த
மரண விலாசம்
இந்த உடல் தான்

உயிர் பிரியும் இடமெல்லாம்
சுடுகாடுதான்

பூமியின் ஒவ்வொரு துகளும்
சவத்தைத் துளிர்க்கச் செய்யும்
முயற்சியில் தோற்கிறது


ப.தனஞ்ஜெயன்
மின்னஞ்சல்: danadjeane1979@gmail.com 9751800333

பவித்ரா கவிதைகள்

0

ஒருபக்க அழுகலான மார்புடையவள்

பதினொரு வயதில்
வீங்கத் தொடங்கிய சதையின்
எடை கூடிக்கொண்டே
செல்கிறது

அம்மா ஏழுமலையானிடம்
தலைமுடியை பேரம் பேசியிருக்கிறாள்
மகள் டாக்டரிடம்
விசாரணையை முடுக்குகிறாள்
மகன் இன்டர்நெட்டில்
தகவலை தேடுகிறான்

வலி எனைத் தாக்கும்
போதெல்லாம்
கதறும் நோய்மையை
இவர்களால்
ஏதும் செய்ய முடிவதில்லை

நாளை இந்த
ஒரு பக்கம் மட்டும்
அழுகிய மார்பை துண்டித்த பின்

மற்றொருநாள் இந்த
ஒரு பக்கம் மட்டும்
பஞ்சடைத்த
உள்ளாடை
என் பிணியைக் கூட்டக்கூடும்

*

அவிழாத சொல்

ஒரு வார்த்தையும்
உன்னிடமிருந்து பெறாத போது
அவ்வார்த்தைக்காக
காத்திருப்பதை தவிர
எனக்கு வேறு வழியில்லை.

உனக்குச் சொந்தமான
என் வார்த்தைகளை
சுமந்தபடி
உறங்கிப்போகிறேன்

சிலசமயம் அவ்வார்த்தைகள்
எனை உறங்கவிடாமல்
கனக்கும்

சிலசமயம் அவ்வார்த்தைகள்
எனை எரியூட்டும்

சிலசமயம் அவ்வார்த்தைகள்
என் முகத்தில்
புன்னகையை வரவழைக்கும்

சிலசமயம் அவ்வார்த்தைகள்
என் அவமானங்களுக்காய் கண்ணீர் உகுக்கும்

சிலசமயம் அவ்வார்த்தைகள்
என் பிரியங்களை உனக்கு பந்திவிரிக்கும்

சிலசமயம் அவ்வார்த்தைகள்
உன் மேலான மோகத்தில் எனை
பிய்த்துத் தின்னும்.

*

விருட்சத்தின் சூல் முட்டும் நாள்

பிடாரியின் இடக்கை கொண்டு
ஆகாயம் துடைக்கும்

நிலமெல்லாம்
சூல் முற்றி
துளிமேகம் நிலம் விழ
முட்டி நிற்கும்

மலைக்குன்றின் உச்சிக்கு
தாவித்தாவி பறக்கும்
நித்திரையற்ற கூகையின்
இரைச்சல் அதிரும் நாளில்
தாகம் தாகமென
மழைக்கு இறைஞ்சும்
வேம்புச்சூல் கொட்டை

தூள்தூளாய் அவிழும்
வனமெங்கும்
பிரசவிக்கும்
முட்களடர்ந்த கானகமெங்கும்
நிலம் வெடித்துக் கிளம்பும்.
மழலையின் ஓசை

*

வாழ்த்தட்டையில் உறங்கும் நான்

காலப்போக்கில்
நீ என்னை நோக்கி திரும்பும்படியான
உலகே அஸ்தமிக்கும் படியான
குழந்தை ஒன்று என்னை நோக்கி
ஓடிவரும் படியான
சொற்களை நனைத்து
வாழ்த்தட்டை செய்கிறேன்

உன்னுடைய பழைய
புழக்கத்திலில்லாத
வாழ்த்தட்டைகளோடு
அலமாரியில்
டிரங்கு பெட்டியில்
வீட்டுப்பரணில்
நிம்மதியாய் உறங்கும்
வாழ்த்து அட்டைகளோடு
உன் வீட்டில்
நானும் உறங்குவேன்

நீ
வீடுமாறும் போதோ
வெள்ளை அடிக்கும் போதோ
சுத்தம் செய்யும் போதோ
கலைந்து கிடக்கும்
கரையான்கள் அரித்த
பழைய நினைவுகளோடு
வாழ்த்தட்டையில் இருக்கும்
என்னோடு
உரையாடுவாய் தானே

*

மேகம் வரையும் தோகை

பிறிதொரு நாளில்
எங்கோவோர் மூலையில்
வெள்ளி முளைக்கிறதாவென
கருவானை நீ நோக்கும் சமயம்,

மிக நீண்ட தோகை கொண்ட
ஆண் மயில் போல்
இப்படியும் அப்படியும்
திரும்பித் திரும்பி
உனை பார்க்கிறேன்

சலசலவென ஆடி
முடித்த பிறகு
உதிர்ந்த இறகின்
நிறங்களைக் கொண்டு
என் வானத்தில்
உனக்கோர்
மழை வரைகிறேன்

வண்ணமாய்
உன் வாசலில்
ஓடும் நதியில்
காகிதத்தில் கப்பல்
செய்து விடுகிறாய்

நதியின் மேலிருக்கும்
சிறு பாலத்தில்
அமர்ந்தபடி உனை
சைகை காட்டி
அழைக்கிறேன்

வளையலசையும்
ஓசையில்
நித்திரை கலையாது
அயர்ந்துறங்குகிறாய்.

*


பவித்ரா

மின்னஞ்சல்: pavithrapandiyaraju@gmail.com

தெய்வமே!

0

மணி எம்.கே. மணி

வெண்ணிலா என்பதற்கே இப்போதுதான் அர்த்தம் கிடைத்தது போலிருந்தது. என்ன ஒரு வெண்மை? பதட்டம் கூடிய இந்த நேரத்தில் எந்த ஆராய்ச்சிக்கும் இடமில்லை என்ற போதிலும் அந்த பால் வெண்மையை மூளை துழாவியது. சந்தோசம் கொள்ள முயன்றான். இப்போது இந்தக் கணமே இதை யாரிடமோ சொல்ல வேண்டுமென்று பட்டது. காத்திருக்க முடியாதபோது மனம் துடிப்பது தாங்காமல் தான் அவன் அண்ணாந்தான். அது மேகம் விலகிய நேரம். நிலா சட்டென வெளிப்பட்ட அதிர்ச்சி தான் அவனை மலைக்க வைத்திருக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு முன்பு கூட பௌர்ணமியைக் கொண்டாட ஒரு பாட்டில் விஸ்கியுடன் ரயில்வே கோட்டர்சுக்குப் போயிருந்தான். எல்லாம் அருணா சம்மந்தப்பட்ட வலி தொடங்கியதில் இருந்து தான். வெகுநேரம் அதைப் பார்க்க முடிவதில்லை. மனம் உடனடியாக வெளிறியது. இதயத்தின் துடிப்பு வெளியே கேட்பது போலிருக்கவே, ஒரு நகைப்பு தோன்றியது. தலையை சொறிந்து கொள்ளும்போது அவன் நின்றிருந்த குளியலறையின் கதவு சிறிய அளவில் டொக் என்றது. இவன் திறக்கும்போதே அவள் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கதவை மூடிக்கொண்டாள்.

அவனது தோள்களில் கைகளைப் போட்டுக்கொண்டு, அவனுக்காக முகத்தை ஏந்தி நின்றாள். உதடுகள் பிரிந்திருந்தன. கண்கள் அவனது முகத்தைப் பார்த்திருந்தது. அவன் அவளில் குனிந்தான். இருவருக்கும் நீண்ட முத்தம் பழகி விட்டிருந்தது. அவன் அவளுடைய ருசியை அறிந்திருந்ததும், அவன் தன்னை அருந்துவதை அவள் விரும்புவதும் நிரந்தரமாகி நின்றது. அவள் அவன் தலையை வருடிக் கொண்டிருந்து இப்போது அழுத்தம் தந்தவுடன் அவன் இதழ்களைப் பிரிந்து மார்புகளில் புதைந்தான். அவள் எப்போதுமில்லாமல் அவனை இறுக்குவது தெரிந்தது. அவன் என்ன என்று கேட்பதற்குள் அவள் அவனை நசுக்கினாள். அவ்வப்போது தோன்றியிருப்பது தான் இப்போதும் வந்தது, இவளுக்கு இவ்வளவு வலுவா? தெய்வமே என்று முனகிவிட்டு அவள் ஒருகணம் பிடியை நெகிழ்த்தி அசையாமல், மூச்சுவிடாமல் கூட நின்றாள்.

சட்டென்று கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

இவன் கைவிடப்பட்டவன் போல கொஞ்ச நேரம் நின்றிருந்து ஆடைகளைக் களைந்து தண்ணீரை வேகவேகமாக தலையில் ஊற்றிக் கொண்டான். குளிரைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ள முடியாத மனநிலை. விட்ட இடத்தில் இருந்து தொடங்க முடியுமா என்பது போல நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். காட்சி நெஞ்சில் படியவில்லை. அருணா அவள் இஷ்டத்துக்கு நடந்து கொண்டாள் என்பது எரிய ஆரம்பித்தது. வருவதென்ன, அவள் இஷ்டத்துக்குப் போவதென்ன? தன்மீது அவளுக்கு ஒரு மரியாதையும் கிடையாது என்று நினைத்தான். மேலே எண்ணங்கள் பெருகுவதற்குள் மேலும் தண்ணீரை ஊற்றிக்கொண்டு குளிக்க ஆரம்பித்தான்.

அறைக்குத் திரும்பி வந்து, இரவு தூங்க முடியவில்லை.

அவள் இதழ்களை எப்படி ஏந்தினாள் என்பதும், பின்னால் அவளை அவளை தான் உண்ட முறையையும், அவள் எப்படி வழங்கினாள் என்பதையும் திரும்பத் திரும்ப ஒர்மையில் நெருடி, வலி பெருகியது. ஒன்றுமே சொல்லாமல் அவள் பாட்டுக்கு கதவைத் திறந்துகொண்டு சென்ற அந்தக் கணம் அதன் அசைவுகளுடன் அப்படியே உறைந்து விட்டிருந்தது.

அவன் யாரையாவது அடித்துப்போட விரும்பினான். காலையில் இவனுக்கு இருமுடி கட்டுவதற்கு முன்னால் மாமா குடும்பத்தார் வந்து விட்டார்கள். அருணா தனது மகனை அணைத்துப் பிடித்துக்கொண்டு, குருசாமிக்கு முன்னாலிருந்த விளக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகம் கொண்டிருந்த அந்த தீவிரம் அவ்வளவு அழகாக இருந்தது. மக்களின் சரணவிளிகளுக்கு அவள் உள்ளுக்குள் பதில் சொல்லிக் கொண்டிருப்பது உதட்டின் அசைவில் தெரிந்தது. ஒருமுறை அவளுடைய கண்கள் இவனைப் பார்த்து விலகும்வரைக் காத்திருந்து, அவன் தன்முறை வரவே பலகையில் உட்கார்ந்தான்.

அருணாவின் மகன் ஸ்ரீக்கு எட்டு வயதிருக்கலாம். அவனுக்கு ஒரு நெய் தேங்காய் நிரப்ப வேண்டியிருந்தது. இவனுடைய மடியில் உக்கார வைத்துதான் அதை நிரப்பினார்கள். பையனின் கையைப் பிடித்துக் கொண்டு தேங்காயில் நெய்யை நிரப்பும்போது ஒருமுறை இவன், அரவிந்த் அருணாவைப் பார்த்தான். கை தொழுது நின்று கொண்டிருந்தாள். கண்கள் மூடியிருந்தன. அவள் யாரோ என்று பட்டதில், இவனுக்குள் என்னவோ பிசைந்தது.

கிளம்பும் நேரத்தில் ஸ்ரீ அரவிந்தின் பாதங்களைத் தொட்டு எதோ பணம் கொடுத்து விட்டு நகர்ந்ததும், அருணாவும் தொட்டாள். அவளுடைய கைகள் ஜில்லென்றிருந்தன. அந்தத் தணுப்பு இவனுடைய உடம்பு முழுவது ஓடி முடித்தது. அவள் பையனை அழைத்துக் கொண்டு போவது போலவே மெலிய குரலில் சொன்னாள். “எனக்கு நேத்து ரொம்ப சேட்டிஸ்பேக்சனா இருந்திச்சு. குளிச்சிட்டுதான் படுத்தேன். “அரவிந்த் அவள் அவசரமாக வெளியேறிப் போனதை நினைத்துக் கொண்டு கோடிட்டப்பட்டிருந்த இடத்தைப் பூர்த்தி செய்து புன்முறுவலிப்பதற்குள் அவள் குடும்பத்தாரிடம் இணைத்து கொண்டாள். கோவிலில் இருந்து ரெயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல ஆட்டோக்கள் வந்தன. நண்பர்களின் வரிசையில் இணைந்து நகர்ந்து தேங்காயை உடைத்து விட்டு ஆட்டோவில் ஏறும்போது அபர்ணாவை ஒருமுறை பார்த்துக் கொண்டான். அவன் இவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் மாமாவின் அருகில் நின்றிருந்த வேணு அவளை இடித்துக்கொண்டு நின்றிருப்பதாகப் பட்டது.

ஸ்டேஷன் வந்து சேர்ந்தபோது புகைவண்டி வருவதற்கு இன்னும் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக நேரம் இருந்தது.

இந்த விரதகாலம் சற்று குணங்கள் அவிழ்ந்தது. தன்னை கசங்காமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற மும்முரம் கிடையாது. எங்கே வேண்டுமானாலும் உட்காருவதற்கு படுப்பதற்கு தயார் தான். அப்படி வருவதும் போவதுமான ஜனங்களுக்கு நடுவே, எதையும் பார்க்காமல் தங்கள் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் ஒட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள். முக்கியமாகக் குமாரை. அவனுடைய பயபக்தி பற்றின கேலிகள் ஓடிக் கொண்டிருந்தன.

இப்போது ஒரு பாறாங்கல்லை நகர்த்தியாக வேண்டும். விடுபட்டு சிரித்துக் கொண்டிருக்கிறவர்களுடன் இணைத்துக் கொண்டால்தான் பயணம் ஒத்துழைக்கும். மூச்சுத் திணறிவிடக் கூடாது. யாரிடமும் தன்னைக் காட்டிக்கொண்டு விடக்கூடாது. அரவிந்த் தன்னை கவனிக்கக் கூடியவன். என்ன நடக்கிறது என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிற புத்தி இருக்கிறது. அவன் தன்னை விட்டுப் போவதையும் இப்போதெல்லாம் பார்க்க வேண்டி வருகிறது என்கிற விபரீதத்தை தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. சும்மா ஒருமுறை சிரித்து வைத்தான். அப்புறம் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை ஊன்றி கவனித்தான். அப்படி கவனிக்கும் போதே தான் நகர்வது தெரிந்தது. அருணாவின் ஒரு பார்வையை நினைவு கூர்ந்தான். அது வெள்ளமாகப் பெருகினால் அது தன்னை அடித்துக் கொண்டு செல்ல தான் மனம் தள்ளியது.

ரூபன் நீட்டிய பீடியை வாங்கிக் கொண்டு தொடர்ந்து நான்கு முறை இழுக்கும்போது கவுதம் நிதானமாக ஒரு கெட்ட வார்த்தைப் பாட்டை பாடத் துவங்கினான். நாலும் நாலும் மொத்தம் எட்டு வரிதான். குமாருக்கு சிரிப்பு வருகிறது. மேலும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாட்டு முடியும் தருணத்தில் காதைப் பொத்திக் கொள்கிறான். “என்ன தாஸ் சாமி? இதெல்லாம் கேக்க மாட்டியா? டேய், குருசாமி, நீயாவது அவன்கிட்ட சொல்டா!”

தாசன் பீடி புகைப்பதில் மூழ்கியிருந்தான்.

குருசாமி என்று அழைக்கப்பட்டவன் கூட இவர்களில் ஒருவன்தான். பெயர் பிரகாஷ். வீட்டில் கொடுத்து அனுப்பிய முறுக்குகளை எல்லோருக்கும் கொடுத்தவாறு குமாரிடம் “காது மேல இருந்து கைய எடுக்காத” என்றுவிட்டு கொடுக்க வேண்டிய முறுக்கை அவனுடைய வாயில் சொருகினான்.

கவுதம் தாசனிடம், “நெஜமா ஏட்டா. எங்க பழைய குருசாமி எப்பவும் சொல்வாரு. தலைல இருமுடி ஏர்ற வரைக்கும் நாம ஆசாமிங்க தான். அதுக்கு அப்புறம் சாமிங்க. என்ன வேணுன்னா செய்யலாம், என்ன வேணுன்னா பேசலாம்! யூ டிசைட், யுவர் பாத்!”

“உன் குருசாமி உன்ன மாதிரி ஒரு லூசுகூ..வா தானே இருப்பான்?” என்றான் ஜார்ஜ் ராபர்ட்.

“மேன், அதில ஒரு பிலாசபி இருக்கு தெரியுமா?!”

“லவடா பிலாசபி. போயி சப்ப சொல்லு!”

“லிசன் டா மச்சான், ஐ வில் எக்ஸ்ப்ளெயின் யூ!”

“ஓத்தா. சும்மா இரு. அடிபடுவே!”

சபரி ஸ்பெசல் சாயந்திரம் புறப்பட்டு செல்லுவது. அரவிந்த் முகம் நினைவுகளாலும், முகத்தில் மோதின ஒளியினாலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு எதிரே கூடவே வந்து கொண்டிருந்த அஸ்தமன சூரியன். ஒரு கட்டத்தில் அது ஒரு குன்றின் மீது நின்று ஒளிர்ந்தது. வானம் தன்னை வர்ணங்களால் பிழிந்து கொண்டிருந்தது. அவன் அருணாவிடம் தான் பார்த்ததைச் சொல்லுகிற சொற்களில் இருந்தான். மானசீகமாக தான் அவளிடம் பேசியவாறு இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை தான். ஆனால் திரும்புவதற்கு வழி புலப்படுவதில்லை. பல நேரங்களில் அவன் அவளை வெறுக்கிறான் என்பது அவனே அறிந்தது தான். அப்படி வெறுக்கக் கூடாது என்று புத்தி சொல்லிக்கொண்டு படபடக்கும்போது அவனுக்குள் இருந்து அந்த ஆழ்ந்த தாபம் எழும். தோள்களில் அவளை சாய்த்துக் கொள்ளுவது போல ஒன்று மின்னலடித்துப் போகும். அவள் தன்னுடைய கணவனைப் பறிகொடுத்து நின்ற அந்த நாளில் யாருமே எதிர்பாராமல் அவனுடைய தோளில் சாய்ந்து அழுத அந்த நிமிடங்களின் விதும்பல் இப்போதும் அவனுக்குள் திமிறும். அது நினைவை விட்டுப் போகாது, அன்று இருவருமாக சேர்ந்து கடவுளை என்னமோ கேட்டார்கள்.

இரவு சாப்பாட்டுக்கு முன் ஒரு கச்சேரி வைக்கலாம் என்று முடிவாயிற்று.

பிரகாஷ் துவங்கினான். தாசன் இணைந்து கொண்டான். எல்லாம் பஜனை டோன் தான். நெருக்கமான ஒரு வட்டம் போட்டு அமர்ந்து, ஒவ்வொருவரும் மற்றவர் முகம் நோக்கி சிறிய நடன அசைவுடன் பாடிக்கொள்வது வெறித்தனம் தான். ஒருவரை மற்றவர் மீறினார்கள். ஆனந்தனின் பாங்கூஸ் முறுக்கியது. ரயிலின் தாளம் கூட்டுசேர கைகளால் தட்டிக்கொள்கிற சப்தம் அதைக் கடக்க முந்தியது. சிரமமான வரிகள் வரும்போது மூச்சுவிட்டுக் கொள்ளாமல் தாசனும் பிரகாஷும் அப்படியே குனிந்து தப்பிவிடாத குரலுடன் எழும்போது ரூபன் அவர்களுடன் இணைந்து சமநிலை செய்வான். அரவிந்த் தன்னை மறந்து பின்பாட்டு பாடினான். கோரஸின் தாளநிலை அவனைப் பித்தாக்கும் போதெல்லாம் அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அருணாவை நினைக்காமல் இருப்பதாக நினைப்பிருந்தது. அது ஒரு வீரமணி பாட்டு. இவர்கள் அதை ஒரு வேகத்துக்கு மாற்றிக் கொள்வார்கள். கன்னி மூல கணபதிய வேண்டிகிட்டு என்கிற அந்தப் பாடல் முடியும்போது எல்லோரும் வியர்த்துப் போய், மூச்சிரைப்பில் இருந்தார்கள். மாறிமாறி வாங்கி தண்ணீர் குடித்தார்கள். அக்கம் பக்கம் பெட்டிகளில் இருந்து வந்து சூழ்ந்த சாமிமாரை எப்படி திருப்பி அனுப்பவது என்று தெரியவில்லை. அவர்கள் எல்லாம் அடுத்த பாடலுக்கு காத்திருக்கிறார்கள். ஓரிருவர் கும்பிட்ட கைகளை எடுக்கவில்லை. தங்களுக்குள் பார்த்துக் கொண்டு இருந்து சட்டென்று தாசன் “அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் டெலிபோனு வயரு, உங்கக்கா சாமான் புல்லா மயிரு” என்கிற வரியைத் துவங்கியதும் ஜனம் எகிறியது.

கோட்டயத்தில் மூன்று மணி அளவில் இறங்கி அங்கேயிருந்த ஒரு கோவிலைத் தேடிச்சென்று ஆற்றில் குளித்து, தாசன் சிபாரிசு செய்த பழம்பொரியைச் சாப்பிட்டு பேருந்தில் ஏறினார்கள்.

விடிய விடிய மேடுகள் ஏறுவது பிரம்மாதமாக இருந்தது.

ரப்பர் மரங்கள் இடைவிடாமல் தொடர்ந்தன.

சில நீர்நிலைகளில் பெண்கள் குளிப்பது பார்க்க முடிந்தது.

கவுதம் குமாரிடம், “சேச்சி கண்டா சேச்சி? பாச்சி கண்டா பாச்சி?” என்றான்.

“ஐயப்பா, இவனால மொத்த பஸ்சையும் கவுத்து வுட்ராத!”

எருமேலியில் கூட்டமே இல்லை.

வாடகைக்கு விடுகிற ஷெட்டுகள் எல்லாம் வாடகை வசூலிக்கிற ஆட்கள் கூட இல்லாமல் காலியாக கிடந்தன.

மண்டலகாலம் முடிந்து சபரிமலை நடை பூட்டப்பட்டிருப்பதால், அது திறக்கும் நேரத்துக்கு சமீபமாகத்தான் காட்டுப்பாதையில் செல்ல முடியும் என்றார்கள். அப்போதுதான் ஜனம் வரும். இப்போது சென்றால் மிருங்கங்களின் தொல்லை இருக்கக்கூடும் என்றார்கள். இவர்களால் ஒருநாள் தான் பொறுக்க முடிந்தது. மறுநாள் சாயந்திரம் நடை துவங்கி அன்று இரவே அழுதா ஆற்றின் ஓரத்தில் பல்வேறு சப்தங்களுக்கு பயந்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துப், படுத்து தூங்கினார்கள். நெடிய தேக்குமரங்களின் அசைவையும், நட்சத்திரங்கள் பயப்பட வைத்த வானத்தையும் பார்த்துக்கொண்டு அரவிந்த் எப்படித் தூங்கிப் போனான் என்று தெரியாது. மறுநாள் அழுதையில் குளித்து அங்கேயே இருப்பதாகத் தீர்மானித்தார்கள். காலையில் உப்புமா செய்து பழம் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டார்கள். மதியம் சோறு வடித்து, சாம்பார் செய்து, கப்பா வறுத்து, அப்பளம் பொரித்து விருந்து போல சாப்பிட்டார்கள். மற்ற நேரமெல்லாம் மீன்களாக நீந்திய அழுதாவில் அவைகளுக்கு சப்பாத்திகளை பிய்த்துப் போட்டுக்கொண்டு அதிலேயே ஊறிக்கிடந்தார்கள். ஒரு தம்மடிக்கிற இடைவெளியில் ஈரத்துடன் அத்தனை பேரும் ஒரு பாறையில் ஏறி அமர்ந்தபோது, ரூபன் “அருகில் வந்தாள், உருகி நின்றாள், அன்பு தந்தாளே! அமைதி இல்லா வாழ்வு தந்தேன், எங்கு சென்றாளோ” பாடினான். அவன் ஈழத்துப் பையன். இயக்கத்தில் பயிற்சியில் இருக்கும்போது, அவனுடைய அம்மா அவனைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டாள். அவன் பிபி ஸ்ரீனிவாஸ், ஏ எம் ராஜா குரல்களில் பாடும் பழைய பாடல்களுக்கு மட்டுமல்ல, அவனது அபிநயங்களுக்கு உருகாதவர் மனிதராக இருக்க முடியாது. அரவிந்த் தன்னுடைய கண்ணீரை மறைத்துக் கொள்ள ஆற்றில் குதித்தான்.

பிரிவாலே மோதும் துயர் போதும், போதுமே!

கொஞ்சம் பக்தர்களின் நடமாட்டம் தெரிந்ததும் இரவே கிளம்பி நடப்போம் என்று முடிவு செய்தார்கள். பகலில் நடப்பதைக் காட்டிலும் இரவுநேரம் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ, அதைக் கடந்து விடுவோம் என்றான் தாஸ்.

இதோ, இதோ என்று கிளம்புவதற்கு இரவு ஏழு மணிக்கும் அதிகமாகி விட்டது.

ஒரு ஏற்றம் முடிவதற்கு முன்னேயே அந்தக் கொடும் குளிரில் வியர்த்து வடிந்தது. இன்னம் கொஞ்சம் போனதும் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை எல்லாம் அவிழ்க்க வேண்டி வந்தது. ஓய்வெடுக்க உட்கார்ந்து ஒரு பீடியைப் பற்றவைத்து அதை அடித்து முடிப்பதற்குள் குளிர் வந்து சூழ்ந்து எழுப்பித் துரத்தியது. அவரவர் வைத்திருந்த டார்ச் வெளிச்சத்தைத் தவிர காடேன்றே ஒன்றை அறியமல் பாதையை மட்டும் பார்த்துக் கொண்டு வெகுசீராகச் சரணம் சொல்லிக் கொண்டு நடந்தார்கள். ஒரு பாதையின் திருப்பத்தில், காடு பற்றி தெரிந்தவனும், முன்னால் நடந்தவனுமான ரூபன் நின்றான். பின்னால் தொடர்ந்த அனைவரும் நின்றாகள். ஒரு யானை நின்று கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். பீதியுடன் வெளிச்சத்தை அடித்துப் பார்க்க அது ஒரு பெரிய கற்பாறை.

இப்போது அந்தப் பாதை அந்தப் பாறையை சுற்றிக்கொண்டு போயிற்று.

கொஞ்சம் பயம் விலகின பிறகு எல்லோரும் கொஞ்சம் சிரித்துக் கொண்டார்கள். கவுதம் எப்போதும் அதிக சப்தத்தில் வாய்விட்டுச் சிரிப்பவன். “ஏட்டா, குமாருக்கு அள்ளு விட்டுருச்சு. பயத்துல தலைவர் குசு வுட்டுட்டாரு”

“யோவ், அது யான மாதிரியே இருந்திச்சுய்யா!”

“மாதிரி என்ன மாதிரி? சேச்சியும் பாச்சியும் எல்லாரும் தானே பாத்தோம்? நாம போற ரூட்ல டயனோசரே வரும்.”

அறிந்தும் அறியாமலும் செய்த பிழையெலாம் என்று குமார் துவங்க அத்தனை பேரும் அந்தச் சொற்றொடரை கூச்சலாகச் சொல்லி, அப்புறம் வாய்விட்டுச் சிரித்தார்கள். எல்லோருக்குள்ளும் ஒரு இலக்கற்ற அச்சம் இல்லாமலில்லை. அதைக் கடப்பதற்கு இப்படியெல்லாம் அமைந்து விடுகிறது. அடுத்தமுறை விரதகாலம் வந்தவுடன் மாலையிட்டு, பயண திட்டங்களைப் போட ஆரம்பித்து விடுவதெல்லாம் இந்த திகில் உண்டாக்கக் கூடிய சுவாரஸ்யமாக இருக்கலாம்.

ஜார்ஜ் இந்த வருடம் தான் முதல்முறையாக வருகிறான். அவன் அரவிந்தை கவனித்திருக்க வேண்டும். எல்லோரும் முக்கிமுனகி கூட்டம் பிரிந்து செருப்பில்லாத கால்களுடன் அங்கே இங்கே இடித்துக்கொண்டு பாதங்களின் எரிச்சலுடன் மேடுகளில் ஏறும்போது அவன் சர்வ சாதாரணமாகக் கடந்து சென்று மற்றவர் வந்து சேரும்வரை எங்காவது அமர்ந்து காத்திருப்பது தொடர்ந்து நடந்தது. ஜார்ஜ் மிகவும் ஆச்சரியமாக, “டேய், எப்படிடா?” என்று கேட்டான்.

ஒரு சாலை விபத்தில் அருணாவின் கணவர் உயிரை விட்ட பிறகு அவளைச் சூழ்ந்த வாழ்க்கை அவள் அதுவரை கற்பனை கூட செய்யாதிருந்த அவலம். பலரும் பல திட்டங்களைச் சொன்னார்கள். அவளும் இழுக்கப்படுகிற திசைகளில் முட்டிமோதி விழித்து கடைசியாக மாமா வீட்டில் ஒதுங்கினாள். அவருடைய மனைவிக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தம். கொஞ்சநாள் துணி துவைத்து, பாத்திரம் கழுவி, பையனை ஸ்கூல் சேர்க்கிற வரை ஒருமுறையாவது நிமிர்ந்து யாருடைய முகத்தையாவது ஏறிட்டுப் பார்த்திருப்பாளா? ஒரு விதவை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற படிப்பை ஒரு புத்தகத்தில் படித்து யாரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவள் மெதுவாகத் தன்னை ஒரு மனிதப் பிறவியாக வெளிப்படுத்திக் கொண்டது மாமாவின் மருத்துவமனைக்கு அவருடைய உதவியாளராக வந்த பிறகுதான்.

அவளுக்கு இருந்த அலுவல்கள் அவளைத் தலைநிமிர வைத்தது. அதற்குப் பிறகு அவள் சிரிப்பதற்கு எல்லாம் பலரும் வியந்து கொண்டார்கள். எப்போதாவது தனது சினிமா தேடல்களுக்கு நடுவே அரவிந்த் மருத்துவமனைக்குப் போகும்போது சந்திக்க நேரக்கூடிய தருணத்தில் அருணாவைப் பொருட்படுத்த வேண்டியிருக்கவில்லை. அவளை ஆண்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஜோக் அடிக்கிறவன், நேரடியாகப் புகழ்கிறவன், சகோதரி என்கிறவன், அவளுடைய பிள்ளைக்கு ஜென்மாந்திரக் கடன்பட்டவன் என்று எவ்வளவு கோமாளிகள்? ஒரு புருஷனின் அன்பை இழந்தவள் ஊரில் இருக்கிற மொத்த ஆண்களையுமே தன்னை சுற்றிக் கொண்டிருக்கிற சரசத்தை தூவிக்கொண்டிருக்கிறாள் என்பது தான் எரிந்து கொண்டிருந்தது. உன் லிஸ்டில் நான் வரமாட்டேன் என்பது அவனுக்குள் சுழன்ற சவால். முடிந்தவரையில் திரும்பிப் பார்க்காமல் இருந்தான். ஏதாவது கேட்டால் அலட்சியமாக பதில் சொன்னான். மாமா கூப்பிடாமல் போவதில்லை என்றெல்லாம் இருந்து பார்க்க முயன்று, அது அவனால் முடியவில்லை. எனினும் ஒரு காரணமாகவே வந்தேன் என்பதை நிறுவ முடியாதா என்ன? உண்மையில் எதுவோ கம்பிகளுக்கு அந்தப் பக்கமிருந்து, யாரும் பார்க்காமல் அவன் பதறிக் கொண்டிருந்தான்.

முதல் தடவையாக அரவிந்தும் அருணாவும் மருத்துவமனையில் உள்ள ஒரு பூஜையறையில் முத்தமிட்டுக் கொண்ட ஒருநாளில் தான் அவள் அவன்மீது கொண்டிருந்த பதற்றத்தைச் சொன்னாள். அந்த வியாதி அவனுக்கு வருவதற்கு முன்பே அவள் அனுபவித்துக் கொண்டு இருந்திருக்கிறாள். மனம் நடித்த மொத்த நாடகங்களையும் அவர்கள் பரஸ்பரம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டார்கள். மருத்துவமனைகளுக்கு டிமாண்ட் தோன்றிய ஒரு காலத்தில் கணக்கு வழக்கு பார்க்க உதவி செய்ய முடியுமா என்பதாக அவனை மாமாவே கேட்டதை எல்லாம் ஒரு விதியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தங்களை உரித்து வைக்கிற உண்மைகளைப் பேசிப்பேசி வந்திருந்தது கடைசியாக அவர்கள் கூட்டத்தில் இருந்து தனித்து நின்றார்கள்.

இருவருக்கும் நடுவில் என்னவோ இருக்கிறது என்பதையறியாத ஒரு குஞ்சு குளுவான் கூட அந்தப் பிரதேசத்தில் இல்லை. அது என்ன என்பது பற்றிய என்கிற டிஸ்கசன் சென்று கொண்டிருக்கிறது எனலாம்.
எல்லோரும் முடிந்த வரையில் ஒன்றாக மலையேறிச் சென்று கொண்டிருந்த கட்டம் முடிவடைந்து விட்டது. பீடி புகைக்க உட்கார்ந்த தாசன் இவனிடம் பல சினிமாக்கள் பற்றிப் பேசத்துவங்கியதில் மற்றவர்கள் ஒவ்வொருவராகப் போனார்கள். அசோக் உள்ளிட்ட மூவர் பின்தங்க வேண்டியதாயிற்று. அவ்வப்போது சில சாமிமார்களின் கூட்டம் போயிற்று. காட்டில் எந்தப் பக்கமிருந்தோ கோஷங்கள் கேட்டவாறு தான் இருந்தது. அசோக் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் சுள்ளிகளைப் போட்டு, அதை ஒதுக்கிவிட்டுக் கொண்டு, ஊதிவிட்டுக் கொண்டு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். தாசன் பேசுகிற சினிமா அநேகமாக அவனுக்குத் தேவையில்லை. முகங்களில் மீசை பொசுங்குகிற தீ எரிந்தாலும், முதுகு சில்லிட்டு கூசிக் கொண்டிருந்தது.

“படத்தோட மொதல் காட்சி, ஹீரோ மெட்ராசுக்கு வரான். லாஸ்ட் சீன் அவனை விழுந்து, விழுந்து ஸ்நேகிச்ச அவனோட லவ்வர் அவனை தூக்கி எறிஞ்சுட்டு மெட்ராசை விட்டுப் போறா. இதுக்கு நடுவில என்ன நடந்திச்சு? இதுதான் நம்ம படம்!” என்று தாசன் பேசத்துவங்கிய படத்தின் கதை தொடர்ந்து கொண்டிருந்தது.

அது என்னதான் சமூக நிலைகளைச் சுற்றி வந்தாலும் வெகு ஆழத்தில் யாரையும் அசைக்கக் கூடிய ஒரு காதல் இருந்தது.

படத்தின் நாயகி கல்லுரி விட்டுத் திரும்பும் வழியில் நாயகன் ஒரு ட்ரை சைக்கிளில் சிமெண்ட் மூட்டைகள் வைத்து ஓட்டிக்கொண்டு வருகிறான். ஆகவே அவன் கோலம் கலைந்து போயிருக்கிறான். அவன் எடுத்து செல்லுகிற மூட்டைகள் அந்த ஏரியாவின் மாபியா சந்தானம் புதிதாக கட்டிக் கொண்டிருக்கிற வீட்டுக்காக. தாழ்வு மனப்பான்மை அவனைத் தள்ளுகிறது என்றான் தாசன். அது எதையும் செய்ய வைக்கும் தெரியுமா? மேலும் இத்தலைநகரத்தில் பிறந்து வளர்ந்த யாரும் அவசரத்துக்கு, ஆத்திரத்துக்கு ஆட்பட மாட்டார்கள். தூக்கக் கலக்கமாக இருப்பார்கள். பிழைக்க வந்தவர்கள் அப்படியா? நாயகன் எவ்வளவோ சாகசங்கள் செய்கிறான், வஞ்சகம் துரோகம் உட்பட. அவன் போன தூரம் பயங்கரமாக இருந்தது என்பவை பற்றி கதை சென்று கொண்டிருக்கையில் நிறுத்தி எழுந்து கொண்டான்.

கட்டுகளைத் தலையில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.

சற்று நேரத்தில் மூவரும் ஒன்றாக இல்லை.

குறிப்பிட்ட ஒரு ஏற்றம் முடிந்த பின்னர் அரவிந்த் ஒரு இடம் தேடி உட்கார்ந்தான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அடேங்கப்பா, எவ்வளவு வியர்வை வெள்ளம்? டார்ச்சை அணைக்கத் தோன்றினாலும், அதைச் செய்யவில்லை. முடிந்த வரையில் காட்டை நோட்டமிட முயன்ற போது உள்ளம் அதில் செல்லவில்லை. தனக்கு முன்பெல்லாம் இருந்த அந்த பயம் வந்து உதிக்கவேயில்லை என்கிற எண்ணத்தினால் ஒரு கணம் திகைத்தான். ஆமாம், சொல்லுவதற்குக் கூச்சமாக இருந்தாலும் அவனுக்கு இப்போது சாவை நினைத்தால் பிடிக்கிறது. இந்த மலையேற்றம் இவ்வளவு சாதாரணமாக முடிந்து கொண்டிருப்பதற்கு கூட அடிப்படை காரணம் அதுதான். மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு பெரிய குடி விருந்துக்கு அப்புறம், இவனைக் காட்டிலும் போதையாக இருந்த ஒரு நண்பனைக் கூட்டிக்கொண்டு சிகரெட் தேடிப்போனான். நண்பன் தன்னுடைய முழு தீரத்தையும் காட்டும் விதமாக பைக்கை முறுக்கிக் கொண்டு போக நகரம் குஷிக்கு ஜிமுக்கியது. அரவிந்த் உள்ளே ஒரு பலூன் வெடித்து கூச்சலிட்டான். தன்னை எங்காவது கொண்டு சென்று நொறுக்கித் தூளாக்க தாகம் போல ஆசை முள் குத்தியது. ஓட்டுகிறவனிடம் சொன்னான். “டேய் மச்சான். கண்ண மூடிக்க. அப்டியே விடு!” எவனோ ஒரு பெண் விவகாரத்தில் மனம் வழுக்குவதற்கு, அவனுடன் அவனுக்கு சம்மந்தமில்லாதும் சேர்ந்து சாக வேண்டுமா என்று இப்போது யாருக்கும் தோன்ற வேண்டும்.

அரவிந்துக்கு அப்போது தோன்றவில்லை. அன்று என்ன காலநேர வர்த்தமான சூழல் இழவோ? எதிரே வந்த வண்டிகளில் மோதிக் கொள்ளவில்லை. அல்லது அவர்கள் விலகிக்கொண்டு போயிருக்க வேண்டும். இப்போதுகூட பக்கவாட்டில் இருந்து அந்த மரத்தின் மீதிருந்து ஒரு சிறுத்தை பாயுமானால்? பாயட்டும். அவன் அந்த டார்ச் லைட்டை அணைத்தான். ஒரு கணம் மனம் அரண்டு மறுபடி ஒளியைத் திரும்பினான். அருணா என்று வந்தது நெடுமூச்சு.

அன்று அது ஒரு சாயந்திரம்.

உண்மையில் அரவிந்த் மிகவும் பாதிக்கப்பட்ட காலம் அது. சினிமாவில் மிகவும் சகஜமான வெட்டி காலங்கள் என்கிற ஒன்று உண்டு. ஏதாவது பற்றுவதற்கு முன்னால் தேமேயென்று இருப்பது. அரசியல் பண்ணி யாரையாவது கவிழ்த்துக் கொண்டிருப்பது. எவனுடைய சோற்றிலாவது மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, தன்னுடைய சோற்றுக்கு இரந்து கொண்டிருப்பது. சம்மந்தமில்லாத பிரம்மாண்டங்களுக்கு வயிறெரிந்து கொண்டிருப்பது. இவைகள் எல்லாம் காலம் காலமாக கிளம்பி வந்து கொண்டிருக்கிற சிலுமிஷங்கள் தான் என்றாலும், அருணா வாழ்வில் நுழைந்து கொண்ட பிறகு பொறுமையாக எதையும் வேடிக்கை பார்க்க ஆகவில்லை. அந்த கணம் புறப்பட்டு செல்ல விரும்பினான். ஒரு பொய்யை எறிந்து, அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தபோது அருணா அட்மினில் இல்லை. புற நோயாளிகளைப் பார்க்க மாமா வருவதற்கு நிறைய நேரமிருந்தது. எங்கே? அவனுக்கு இது பிடிக்கவில்லை. அலட்சியமாக இருப்பது போல பலரிடமும் சிரித்து, செருப்பை தேய்த்துக்கொண்டு சப்தமெழுப்பி தன்னை ஒளித்தவாறு, இல்லாமல் போனவளைத் தேடும்போது, அவள் லாபில் இருந்தாள். வேணு சொல்லித்தான் காப்பி வந்திருக்கும். இருவரும் உட்கார்ந்து பேசியவாறு இருந்தார்கள். முகம் மாறியது. அது இவனுடைய முகம் மாறியதால் கூட இருக்கலாம். உட்காருவதற்கு நாற்காலியைக் காட்டினாள். அவன் கண்ணாடிப் பேழையில் உள்ள குழந்தை எலும்பைப் பார்த்து நின்று கொண்டு சீட்டியடித்து விட்டு வேணுவைப் பார்த்தான்.

“சார், நீங்க சைக்கோ படம் பாத்து இருக்கீங்க?”

“ஹிந்தியா?” என்று கேட்ட அவளைப் பார்க்கவில்லை. வேணுவை ஊடுருவி கொண்டு, ஒரு கணம் யோசனையில் இருந்தான். வேணுவை நல்ல ஒரு அழகனாகக் கொள்ள முடியும்.

“இல்ல, இங்கிலீஷ். ஹிட்ச்காக்-னு ஒரு டைரக்டர். ஒர்த்தன் அம்மா, அம்மான்னு சொல்லிட்டிருப்பான். ஒரு ஆளு இருக்கற மாதிரியே இருக்கும். கடசில போர்வை வெலகும்போது பாத்தா அது ஒரு வெறும் எலும்புக் கூடு. அந்த சீன் நமக்கு அற விடுறா மாதிரி இருக்கும்னு வெச்சுக்கோங்களேன். நம்ப பெர்க்மன் அந்த மாதிரியே ஒரு படம் எடுக்கணும்னு சொல்லிகிட்டிருக்கான். சொல்ல முடியாது, அதையே எடுத்தாலும் எடுப்பான். அந்த மாதிரி எலும்புக்கூடு எல்லாம் எங்க கிடைக்கும்? “

ஒரு கலை இயக்குனரிடம் சொன்னால் காலையில் பத்து கூடுகளை தயார் செய்துகொண்டு வந்து வைப்பார்கள் என்பது அரவிந்துக்கு தெரியும்.

அந்தப் பேச்சு நீண்டு போயிற்று.

அருணா எழுந்து போனாள்.

அப்புறம் அவள் இருக்கிற இடத்திற்கு போனபோது அவள் பேசவில்லை. இவன் அவளிடம் என்ன என்று சர்வ சாதாரணமாகக் கேட்கவும் முடிந்தது.

அவள் தனது வேலைகளை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவனுக்குள் இருந்த கோபங்கள் மறைந்து, ஒருவிதமான வதை துவங்கியது.

எழுந்து போவது போலச் செய்தபோது அவள் கண்டுகொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து சும்மா அப்படி இப்படி நடந்தான். மறுபடியும் அவளுக்கு முன்னால் உட்கார்ந்தான். இன்னொரு முறை இதற்கு மேல் எழுந்து கொள்ளவும் முடியாது.

இப்போது நான் சண்டை போடுவதற்கு முயலுகிறேனா, இல்லையெனில் அவளை சமாதானம் செய்வதற்கு முந்துகிறேனா என்பதையே அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

“என் மனசில ஒன்னுதான் படுதுங்க அருணா. எப்படியோ தெரியாம ஒட்டிகிட்டோம். இப்ப உங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அதாவது உங்களுக்கு என்ன பிடிக்கல. அதான் இருக்கற உண்ம!”

நிமிர்ந்து பார்த்தாள்.

இவன் வேறுபக்கம் பார்த்தான்.

“கண்டுபுடிச்சிட்டீயே? சும்மாவா? கத எல்லாம் எழுதி, வசனம் எல்லாம் எழுதி சினிமா எல்லாம் எடுக்கப் போறவனாச்சே?”

இவன் அமைதியாக இருந்தான்.

அவள் ஏதோ அலுவலாக ஒருமுறை போய்விட்டு வந்தவள், அங்கிருந்த சில பூஜைப் பொருட்களைத் தட்டில் வைத்து தொகுத்துக் கொண்டிருந்தாள்.

இவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கண்களில் கண்ணீர் சேர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டு, “இந்த ஆஸ்பிட்டல்ல என்னப் பாத்தாலே யாருமே உன்னப் பத்தி தான் பேசுவாங்க. அப்பிடி மானம் காத்துல பறக்க ஆரம்பிச்சு எவ்வளவோ காலமாச்சு., உன்னைப் பத்தி பேசினா நான் அவங்க கூட உக்காந்து கத பேச ஆரம்பிச்சுருவேன். இப்ப இல்ல. அப்ப கூட, வேணு சார் அப்படி உன்னப்பத்தி கேட்டாரு. நீ அப்டி, நீ இப்டின்னு வாய்க்கு வந்தத எல்லாம் ஆச ஆசயா பேசிகிட்டுருந்தேன். நீ இல்லாத நேரத்துல எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் தெரியுமா?” என்று உட்கார்ந்தாள்.

அரவிந்த் தன்னை வெறுத்த நிலைக்குப் போனான்.

“நீ சொன்னது சரிதான். எனக்கு ஒருவிதத்துல இதெல்லாம் ஏன் நடந்துச்சின்னு இருக்கு. பாத்ரம் பண்டம் கழுவிகிட்டு இருந்தப்ப நல்லா இருந்தேன். அப்புறம் கூட நல்லா இருந்தேன்!”

“அருணா!”

இப்போது அவள் அழுது கொண்டிருந்தாள்.

“அருணா ப்ளீஸ்? சாரி.”

அது தொடர்ந்தது.

அரவிந்த் அவளுடைய அழுகை தன்னை உசுப்பேற்றுவதை அறிந்தான். சற்று ஒருமுறை சுற்றிலும் பார்த்துக் கொண்டு “தயவு செஞ்சு எல்லாத்தையும் விட்ருவோமா? எவ்ளோ நாளா உங்கள நான் கெஞ்சிக்கிட்டுருக்கேன். இன்னைக்கு எனக்கு வேணும்!”

அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.

“கொழந்த மாதிரி பண்ணிக்கறே அரவிந்த்”

“விடு. கொழந்த தான். எனக்கு வேணும். இப்பவே வேணும்!”

அவள் பாட்டுக்கு எழுந்து போனாள். மாமா வருவதற்கு முன்னால் விளக்கு செட்டப் இருக்க வேண்டும். யாரும் கவனிக்கவில்லை என்கிறவரைக் காத்திருந்து இவன் பூஜையறைக்குள் நுழைந்த நிமிடம், அவனது தோளில் கைகளை போட்டுக்கொண்டு அவள் தன்னுடைய உதடுகளைத் தந்தாள். சுதாரித்துக் கொண்ட பின்னர் அவளில் சுரந்த ருசியைத் தொட்டான். விலகின போது அவள் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதுபோல எதையோ உளறினாள். முத்தம் தொடர வேண்டிய அழைப்பிருந்தது. அதைக் காட்டிவிட்டு, அவளுடைய அனுமதி அதற்கு மேலும் இருந்தது. தன்னுடைய முகத்தின் மீதிருந்த அவனது ஒருபக்கக் கரத்தை இறக்கி, முலையை பற்றிக் கொள்ள செய்தாள்.

அன்று பேசிக்கொண்டிருந்த போது அவன் அவளது மார்பைப் பற்றியபோது உண்டான தவிப்பைச் சொன்னபோது, அவள் தன்னுடைய மார்பகங்களின் பெருமை பற்றி சொன்னாள்.

இவனுக்கு முகம் சிவந்து விட்டது.

“என்ன?”

“ஒருநாள் பாக்கணும். அது மட்டும் இல்ல. எனக்கு அது வேணும்!”

“எல்லா கஷ்டத்தையும் நான் கடவுள் கிட்ட சொல்லிகிட்டுதான் இருக்கேன். அவர் இத புரிஞ்சுக்க மாட்டாரா? சான்ஸ் கெடைக்கறப்ப கண்டிப்பா தரேன், ம்ம்?”

அழுதையேற்றம் முடிந்து கல்லிடும் குன்றில் அத்தனை பேரும் சந்தித்து அழுதையில் எடுத்த கல்லைப் போட்டுவிட்ட பிறகு வெகுநேரம் உட்கார்ந்திருந்தார்கள். தாசன் பாடினான். அது ஒரு பாட்டு. “கல்லிட்டு மூடு, கல்லிட்டு மூடு, அசுரப் பிணக்குழியை. கல்லிடுங்குன்றத்தில் நன்றி சொல்லு அந்த மணிகண்டனின் வில்லுக்கு” என்கிற நான்கு வரிகள் அப்பாட்டில் உண்டு. பாட்டை கவனித்துக் கொண்டு இப்போது சுற்றிலும் கொஞ்சம் சாமிமார் கூட்டமிருந்தது. பாட்டு முடிந்து, பீடிக்கட்டை எடுத்ததும் பலரும் விலகினார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றுக்கு இரண்டு பீடி புகைத்தார்கள். பிஸ்கெட்டுகள் சாப்பிட்டார்கள். கௌதமும், ஜார்ஜும் வழக்கம் போல பட்டை சாக்லேட்டுகள்.

இரண்டு

அது ஒரு மழைக்காலம்.

ஆதி தன்னுடைய அழகான ஊருக்கு வந்து சேருகிறான். எதிர்பாராத துயர்கள் சூழ்ந்து முற்றுகை போட்டதைத் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்த அவன், மூன்று வருடங்களாக மூடிக்கிடந்த தன்னுடைய வீட்டைத் திறக்கிறான். அவனைக் காட்டிலும் வயதில் குறைந்த அந்த ஊரின் இளைஞர்கள் சிலர் வந்து சேருகிறார்கள். வெளியே இறங்கிப்போக முடியாத இந்த மழைக்காலத்தை எப்படி கடப்பது என்று வரவே ஒரு நாடக ஒத்திகை துவங்குகிறது. வெண்ணிற இரவுகள். ஆமாம், தஸ்தேய்வ்ஸ்கி தான். ஆதி எழுதிய நாடகப் பிரதியில் நடிக்க பக்கத்து ஊரில் இருந்து வருகிற அபர்ணா ஒரு கூத்துக் கலைஞரின் மகள். ஒத்திகை நகர்ந்து செல்ல, செல்ல அந்த நாடகத்தின் நிகழ்வுகள் அனைத்தும், நிஜத்திலேயும் நடக்கிறது. மழைக்காலம் முடிந்து வெயில் வர, நாடகம் நடத்தப்பட்டு அது முடியும் நேரத்தில் அபர்ணாவின் முறைப்பையன், முழ்கிக் கொண்டிருந்த அவளுடைய துயர்களில் இருந்து எழுப்பித் தூக்கிவிட வருகிறான். அபர்ணா ஆதியிடம் இறுதிவிடை வாங்கிக்கொண்டு செல்லுகிறாள்.

மறுபடியும் வீட்டைப் பூட்டிவிட்டு ஆதி அங்கிருந்து வெளியேறிச் செல்லுகிறான்.

இதுதான் தாசன் சொல்லி வந்த அவனுடைய திரைக்கதை.

அரவிந்துக்கு கொஞ்ச நேரம் எந்த அவஸ்தைகளும் இல்லாமல் நேரம் போயிற்று. தன்னை மறந்து கேட்ட மாதிரி இருந்தது. அதிலும், பெண்பிள்ளைகள் இருக்கிற அபர்ணாவின் வீட்டில் கலைஞனை போஷிக்கிறோம் என்கிற சாக்கில் நடக்கிற அத்துமீறல்கள் அந்த கூத்துக் கலைஞனைப் போட்டுப் பிழிகிறது. நாடகங்களில் பெண் வேஷங்கள் அணிந்து தன்னுடைய கலை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இக்கதையில் தன்னுடைய ஆடைகளைக் களைந்தவாறே அபயம் கிருஷ்ணா என்றவாறே தெருக்களில் ஓடுகிறார். மனநல விடுதியிலும் கூட கம்பிகளுக்குப் பின்னால் அவர் நிர்வாணமாகவே இருக்கிறார். தாசனும், அரவிந்தும் இக்காட்சிகள் எப்படி எடுக்கப்பட வேண்டுமென்பதைத் தங்களையறியாமல் பேசினார்கள்.

கரி மலை ஏற்றம் அது. ஏறக்குறைய மலையின் உச்சிப்பகுதி. டார்ச்சை அடித்துக் கொண்டு தாசனும், அரவிந்தும் வெகு சகஜமாக கதைபேசிக் கொண்டு நடந்த பாதை அப்போதைக்கு சமதளமாகவே இருந்தது. அதனால் குளிரவும் செய்தது. ஒருவருடைய மூச்சொலி மற்றவருக்குக் கேட்டது. பாதங்களில் பழக்கம் நேர்ந்து இப்போது யாருக்கும் வலி தெரியவில்லை என்றாகி விட்டது. மற்றவர்கள் காத்திருப்பார்கள் என்கிற எண்ணத்தால், வேகமாகவே நடந்தார்கள். முன்பு யானை என்று திடுக்கிட்டது மாதிரி, வழியை மறித்துக்கொண்டு என்னவோ இருந்தது. கரடியா என்று கேட்டான் தாசன். இவனுக்குத் தெரியவில்லை. இருவரும் நின்றார்கள். டார்ச் அடிக்கலாமா என்று தெரியவில்லை. ஓரளவுக்கு இருள் பழகிய பிறகு அந்த உருவத்தின் முனகல் கேட்டார்கள். அது ஐயப்பனை வேண்டி விளிக்கிற விளி தான். மெல்ல நெருங்க, நெருங்க ஒரு ஆள் தலையில் இருமுடி வைத்துக் கொண்டு குத்தவைத்து உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. பக்கத்தில் நெருங்கிப் பார்த்தால் அவன் ஒரு இளைஞன் தான். தலை நிமிராமல் இவர்கள் நடப்பதற்கு கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு, அவன் பாட்டுக்கு சொன்னதை சொல்லிக் கொண்டிருந்தான்.

அரவிந்த் “என்ன விஷயம் சாமி? ஒடம்பு சரியில்லையா?” என்று கேட்டான். அவன் இருவரையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

“சொல்லுங்க. என்ன ஆச்சு?”

“நடக்க முடியல சாமி. கூட வந்தவங்க விட்டுட்டுப் போயிட்டாங்க!”

“அவங்க எங்கயாவது இருந்து உங்களுக்கு காத்துகிட்டிருப்பாங்க . கைத்தாங்கலா இருந்து நாங்க கூட்டிக்கிட்டுப் போறோம். வர்றீங்களா?”

அவன் இல்லையென்று தலையசைத்தான். “என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. காலு ரெண்டும் செத்துப் போச்சி.”

“இது காடு. இங்க எல்லாம் இப்படி தனியா இருக்கக் கூடாது!”

“தெரியும். என் விதி இதுதான். செத்துப் போறேன். நீங்க போங்க!”

தாசன் தன்னுடைய இருமுடியை இறக்க, அரவிந்தும் இறக்கினான். அதை ஒரு ஓரமாக வைத்தார்கள். “சாமி, நீங்க ஏன் உங்க முடியை ஏறக்கல?”

“குருசாமி போயிட்டாரு. நானே எப்டி ஏறக்கறது? நான் கன்னி சாமியாச்சே?”

தாசன் அதை இறக்கி வைத்ததும் அவன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். “சரியா, நல்லா கால நீட்டி உக்காருங்க!”

மூவரும் ஒரே மாதிரி அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

அரவிந்த் அவனுக்கு முதலில் கொஞ்சம் குளுக்கோஸ் கொடுத்தான்.

அவனாக அப்புறம் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டான்.

தாசனும் அரவிந்தும் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

“எங்க இருந்து வர்றீங்க?”

அவனுடைய ஊர் பெங்களூர். பெயர் கண்ணன். அப்பா அம்மா தம்பி தங்கை மட்டுமல்ல. சமீபத்தில் திருமணமாகி ஒரு குழந்தை கூட இருக்கிறது. ஓசூரில் வேலை. எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற சுரத்தில்லாமல் தன் பாட்டுக்கு இருக்கிறவன் தான். தனக்குள் இருக்கிற கடவுள் பக்தி என்னவென்றே அவனுக்கு தெரியாது. கற்பூரத்தட்டை நீட்டினால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது தெரியும். எதையும் லட்சியமாகக் கொள்கிற மனப்பாங்கு இல்லை. வேலை செய்கிற கம்பெனியில் இவனைக் காட்டிலும் பாந்தமான சந்திரன் என்கிற நபரோடு ஒருவிதமான தோழமை இருந்திருக்கிறது. வேலை நேரத்தில் அவரைக் கைதுசெய்ய ஒருநாள் போலீஸ் வந்தது. எல்லோரும் வேடிக்கைப் பார்த்திருக்க, அவரைக் கை விலங்கிட்டு அழைத்து சென்றார்கள். பிரமித்துப் போன முகத்துடன் அவர், “நான் ஒரு தப்பும் செய்யலையே சார்?” என்று சொல்லியபடியே அவர்களுடன் சென்றார். கம்பபெனியில் இருந்து கண்ணனுடன் செல்வாக்கான ஓரிருவரும் ஓடியிருக்கின்றனர். ஓடினய வேகத்தில் திரும்பி வரவும் வேண்டியதாயிற்று. சந்திரன் மேஜராகக் கூட இல்லாத தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மகளே தன்னுடைய பள்ளியில் சொல்லி அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் மூலமாக போலீசுக்கு சொல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

கண்ணனுக்கு தலை சுழன்றவாறு இருந்திருக்கிறது.

அவனுக்கு அந்தக் குழந்தையைத் தெரியும், எந்த நேரமும் சந்திரன் வாய்விட்டு மனம்விட்டு உரத்த குரலில் பேசுவதாக இருந்தால், அவளைப் பற்றி மட்டுமே இடைவிடாமல் பேசிக்கொண்டே இருப்பார். அவருடைய பேச்சால் கண்ணனுக்கே கூட அவள்மீது இனம் தெரியாத பாசம் தோன்றியிருக்கிறது. என்ன மாதிரி உலகம் இது, என்ன மாதிரி மனிதர்கள்? கண்ணனுக்கு காமத்தின் விஸ்வரூபம் பற்றி என்ன யோசித்தும் பிடிபடவில்லை. சந்திரனின் குழந்தை போன்ற முகம் நினைவில் வரும்போதெல்லாம் சீ என்று வந்தது. மற்றும் கடவுளே என்றும் வந்தது.

சந்திரனின் மனைவி யாரோ ஒரு வக்கீலை வைத்துக்கொண்டு முட்டி மோதுவதாகச் சொன்னார்கள்.

அது பற்றிய குழப்பம் வரும்போது, அந்தப் பெண்மணியே கண்ணனுக்குப் போன் செய்தாள்.

“நீங்க கூட அவரை தப்பா நெனச்சுகிட்டீங்களா?”

“இல்ல. நான் வந்து…”

“அவரைப் பாக்கப் போவும் போதேல்லாம், அவர் என்ன அதையே தான் கேட்டார். கண்ணன் என்ன தப்பாவா நெனச்சுட்டானான்னு கேட்டு கேட்டு மாளல அவருக்கு. ஒருதடவை அவரைப் போயி பாக்கறீங்களா?”

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தது.

முதலில் அந்தப் பெண் தனது அம்மாவிடம் நான் தவறு செய்து விட்டேன் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறாள். அப்பா என்னை எதுவும் செய்யவில்லை. அப்புறம் என்ன தான் நடந்தது? வயது சிறிதாக இருந்தாலும் அது சூட்டிகையான பெண். மிகவும் பாய்ச்சல் கொண்டவள். பாட்டு, டான்ஸ், ஓவியம், கதை, எழுத்து என்று எல்லா பக்கமும் ஒரு விதமான பதட்டத்துடன் ஓடிக்கொண்டேயிருப்பாள். அவளுடைய உணர்வுகளும் அதே வேகத்துடன் தானிருந்தன. அப்பா அம்மா அண்ணனைக் கொண்டாடிக் கொண்டிருந்த எழுச்சியாகட்டும், அல்லது அந்த ஊராருடன் அவள் வைத்திருந்த வயதை மீறின அக்கறைகளாகட்டும் சகலருக்கும் அது ஒரு வியப்பூட்டும் காரியமாகவேத்தான் எப்போதுமிருந்தது. கொஞ்சம் சினிமாவில் வருவது போன்ற கதாநாயகியாக தன்னைக் கற்பிதம் செய்துகொள்கிற பொறியில் சிக்கும்போது, அடுத்தது என்ன, யாரையாவது ஒரு பையனைக் காதலிக்க வேண்டும் அல்லவா? ஒரு பைங்கிளிக் கதை காதலுக்கு அந்தப் பையன் சரியாகவே இருந்திருப்பான். நூற்றுக்கணக்கான கடிதங்கள், சந்துமுனை சந்திப்பு, இன்னபிற. சந்திரன் ஒருநாள் போயிருந்த கல்யாண வீட்டில் மனைவி மகனை விட்டுவிட்டு ஓசூருக்குக் கிளம்ப பெட்டி எடுக்க வந்தால், பையன் வீட்டின் முற்றத்தில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு காப்பி குடித்துக் கொண்டிருந்தான். இவள் அவன் குடிக்கிற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சந்திரன் மிக சாதாரணமாக “உன் ஸ்கூல் பிரெண்டா?” என்று கேட்டுவிட்டு, பெட்டியை எடுக்க உள்ளே போகும்போது, அவள் இதை சொன்னாள். “ஐயோ, இல்லப்பா… நாங்க லவ்வர்ஸ். பியுச்சர்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோம்!”

சந்திரன் தன்னுடைய மகளிடம் உனக்கு அதற்கு உரிய வயது வரவில்லை என்பதைப் புரிய வைக்க முயன்றான்.

அவள் யார் நினைத்தாலும் எங்கள் காதலைத் தடுக்க முடியாது என்றாள்.

ஒருநாள் எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து டிவி-யில் ஏக் துஜே கேலியே படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் அவனுடைய போட்டோவை நெருப்பு வைத்துக் கொளுத்தி, அதைக் காப்பியில் கலந்து குடித்துவிட்டு எல்லோரையும் பார்த்தாள். மற்றொரு நாள் தோட்டத்தில் இருந்த அவளைப் பார்க்க வந்த பல தோழிகளும் ஆவலுடன் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நடத்தை எல்லாம் யாரோ சிறைக்கைதியைப் பார்க்க வந்தது போல இருந்தது. சந்திரனை அட, கொடுமைக்காரா என்பது போல வெறித்துக்கொண்டு போனார்கள். அந்தப் பையனும் ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டிக்கொண்டு வீடு இருக்கிற சாலையில் வந்துபோய் கொண்டிருந்தார்கள். பதினான்கு வயதுகூட ஆகாத அவளுக்கு சந்திரன் வாய் திறப்பதே பிடிக்கவில்லை. இதற்கு நடுவே இந்தச் சம்பவம் முறுகினால், ஒரு சாதிக்கலவரமே கூட நடப்பதற்கு வாய்ப்பிருந்தது. கோபம் தாங்காமல் “நான் அந்தப் பையனை வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்கு போவப் போறேன். அப்பதான் நீ அடங்குவே!” என்று கூறிவிட்டு சந்திரன் ஓசூருக்கு கிளம்பி வந்தது தான் பிரச்சினை.

அவள் ஒரு பள்ளிநேரத்தில், தன்னுடைய அப்பாவினால் கொல்லப்படப் போகிற காதலனை நினைத்துக் கண்ணீர் உகுத்திருக்கிறாள். எல்லோரும் என்னவென்று கேட்டு உலுக்கியபோது அவளுக்கு தோன்றிய ஒரு உபாயம் தான் இது.

இதுவும் ஒரு சினிமாவில் பார்த்தது தான்.

சந்திரன் ஜெயிலில் இருந்தார். ஜாமீனில் வந்தார். மகளே எழுதிக் கொடுத்திருந்தாலும், கோர்ட் கேசை முடிக்க சில சம்பிரதாயங்கள் இருக்கவே, சந்திரன் கம்பனி பக்கம் இருந்து வீட்டுக்குப் போகவில்லை. போகக்கூடாது. எல்லா நேரமும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டார். விடுமுறைகளில் தூங்கியவாறு இருந்தார். எல்லோருக்கும் ஒருவிதமாக உண்மை புரிந்து அவரை வெறுப்பது நிறுத்தியவரை அவர் கடந்த அவமானங்கள் சொல்லத் தகுந்ததில்லை.

கண்ணன் கேட்டிருக்கிறான்.

எப்படி இவைகளையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வது?

“கம்பெனிக்கு வந்து என்ன கொண்டு போனதில இருந்து, நான் திரும்பி வர்ற வரைக்கும் போலீசு, கோர்ட்டு, ஜெயிலு எங்கயுமே, யாருமே என்னை அவமரியாதையா நடத்தினது இல்ல. அவங்க கேள்விகளுக்கு பதில்கூட சொன்னது இல்ல. என்னோட மகளை நெனைச்சாலே எனக்கு கண்ணீர் மட்டும் தான் வரும்!”

மறுபடியும் சொன்னார்.

“ஆமா, கண்ணா. அந்தக் கண்ணீர அத்தன பேரும் புரிஞ்சிகிட்டாங்க. கடவுள் ஏன் கூடவே இருந்தான். ஒவ்வொரு நிமிஷமும் ஏன் கூடவே இருந்து, என்ன காப்பாத்திகிட்டே இருந்தான்!”

சந்திரன் சொன்னதில் கண்ணனுக்கு அதிகமாக உறைத்தது இந்த விஷயம் தான். கடவுள் என்பதை புதிதாக சிந்திக்கத் தலைப்படுவதால், அந்தப் புதிர் அவிழ்ந்து முடியாமல் திரௌபதி சேலை போல வந்து கொண்டேயிருந்தது. இந்தப் பயணமே கூட அவனுக்கு இதில் ஒருபகுதி தான். எவ்வளவோ வாழ்க்கைப் பாடுகளில் இந்தக் குழந்தைகளும், முதியோர்களும் எத்தனை நம்பிக்கைகளுடன் இப்படி மலையேறிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற நெகிழ்வில் தளர்ந்து போனேன் என்பதாகச் சொன்னான். எனக்கு அது வரவே இல்லை. அது வளர்ந்து, வளர்ந்து ஒரு கட்டத்தில் இனி நடக்க முடியாது என்று பட்டுவிட்டது என்றான்.

“கொழந்தைங்க, முதியோர்னு சொன்னீங்க இல்ல, அவங்க கடவுளை உங்களாலே புரிஞ்சுக்க முடியாது. உங்க நண்பர் சந்திரன் இருக்காரே, அவரோட கடவுளையும் தான்!” என்றான் தாசன். “கடவுளை ஒழிக்க நெனக்கறவங்க எல்லாம் கூட போட்டு தள்ளிகிட்டு இருக்கறது அவங்கவங்க கடவுள்களைத்தான்!”

“ஓஹோ?” என்றான் கண்ணன்.

அரவிந்த் கொட்டிய குளுக்கோசை உள்ளங்கையில் வாங்கி ஆசையுடன் சப்பிக் கொண்டிருந்தான்.

சிறுநீர் கழிக்க வேண்டிய எண்ணம் முட்டியதும், அரவிந்த் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது வாரிப்போட்டது. மனசு மட்டும் என்னவோ ஒரு கூச்சல் போட்டு விட்டது. இவர்கள் நடந்து வந்த பாதையில் ஒருபக்கம் மரங்கள் நெடுக வளர்ந்து நின்று வானம் காட்டினாலும் அடுத்த பக்கத்தில் புதர்கள் இருந்தன. ஒருவேளை யானைகள் இறங்கக் கூடிய சவுக்கு வாயில் வழியாக பெரும் பள்ளத்தாக்கு இருப்பதை அரவிந்த் பயத்துடன் பார்த்தான். அடிவாரமெங்கும் பரந்து விரிந்த மரங்களின் தலைப்பகுதிகள் தெரிந்தன. காற்று அவைகள் மீது கடந்து சென்றதில் நிலா வெளிச்சம் அலைகளைப் போல ஓடிக்கொண்டிருந்தது. இதென்ன சொர்ண அலங்காரமா? அவனால் நிலாவையும் அடிவாரத்தின் இடைவிடாத தளுக்கலையும் பார்க்க முடியாமல் மூச்சுத் திணறியது. மரணபயம் போல என்னவோ வந்து நெருக்கியதில், மற்ற இருவரிடமும் கிளம்பலாம் என்கிற சைகை செய்து, தன்னுடைய கட்டை எடுத்து தலையில் வைத்துக் கொண்டான். அவனுடைய முகத்தை அவர்கள் கவனிக்காத விதத்தில் திரும்பி நின்று கொண்டான். தாசன் மற்றவனுக்கு கட்டை எடுத்து தலையில் வைத்துவிட்டு வாயில் போட்டு சப்பிக்கொண்டு வர ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தான். ஒரு சிறிய இறக்கம் முடிந்து, நான்கு வளைவுகள் முடிவதற்குள், கண்ணனோடு வந்தவர்கள் கண்ணனுக்காக காத்திருந்தார்கள்.

தாசனும் அரவிந்தும் ஒரு கட்டத்தில் பேச்சில்லாமல் நடந்தார்கள்.

அரவிந்துக்கு மனதில் திடீர் என்று தாக்கிய பயத்தின் மிச்சம் இருந்து கொண்டிருந்தது.

காடு எதற்கு தனக்குத்தானே ஒரு திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறது?

தன்னில் உறையும் ஒரு கடவுளை சந்தோஷப்படுத்துகிறதா?

தாசனின் கடவுள் பற்றிய அபிப்ராயங்களை தொகுத்துக் கொள்ள முயன்றான். பழக்கமான காலத்தில் இருந்தே அவன் பல கோணங்களில் பேசியிருக்கிறான். எல்லாம் ஆங்காங்கே கிடந்து தட்டுப்படுகின்றன. சில சமயங்களில் அதிர வைப்பதும், சில நேரங்களில் பேச்சுக்கு அந்தப் பக்கம் தள்ளி விடுவதும் சகஜமாக நடக்கும். யாரும் இதை எல்லாம் பொருட்படுத்தக் கூடியவைகள் தான் என்று கருதுவது கிடையாது.

தாசனுக்குமே அதில் எவ்வளவு தூரம் நம்பிக்கையிருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் இவ்விஷயங்களில் வாதித்து ஜெயிக்க விரும்பி ஒரு நண்பன் பாட்டில்களோடு வருவான். அத்தனை பேரும் படுக்கைக்கு போன பின்னரும் அவர்கள் இருவரும் கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள். தாசன் அந்த நண்பன் இல்லாத நேரங்களில் எங்களிடம் அவன் சொல்வது எல்லாம் தான் உண்மை, நான் சும்மா தர்க்கத்துக்கு பேசிக் கொண்டிருந்தேன் என்பான். எனது கடவுளை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமில்லையா என்பான். இன்னொரு ரகசியம் இருக்கிறது, அவன் எதிர்காலத்தில் மிகப்பெரிய பக்தனாக இருப்பான், அப்படி நடக்காவிட்டால் நான் எனது தலையை அறுத்துக் கொள்கிறேன் என்றான் ஒருமுறை ததும்பி வழிந்த போதையில்.

பொழுது விடிந்தவாறு வந்து காடு மினுங்கியது.

கரிமலைக் காட்டில் மழை பெய்திருக்க வேண்டும்.

யானைகள் இருந்து எழுந்து போன தடங்களைப் பார்க்க முடிந்தது.

ரூபனும் பிரகாஷும் கறுப்பு காப்பிப் போடுவதற்கு சுடுநீர் கொதிக்க வைத்தார்கள். மற்ற அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க, குமாரை வெறுப்பேற்ற கவுதம் வசைப்பாடல் பாடிக் கொண்டிருந்தான். வெயில் எட்டிப்பார்ப்பதில் எல்லோர் மீதும் ஆவி பறந்தது. வாயைத் திறந்து ஊதிக் கொண்டிருந்த குமார் முகம் முழுக்க புன்னகையும், சந்தோஷமும் தான்.

சில சொற்களுக்கு எல்லாம் அதிர்ந்து, தன்னையறியாமல் ஐயப்பா என்றான். அது முடிந்து ஜார்ஜ் அல்லேலூயா என்பதின் அரும்சொற்பொருள் கூற அது பயங்கரமாக இருந்தது. சக்கரை அதிகமாகக் கலந்த காப்பி. கடித்துக் கொள்ளுவதற்கு பப்படம் சுட்டார்கள். கரிமலை இறக்கம் முடியும்போது தான் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும் என்பதால் நன்றாகவே சாப்பிட்டார்கள். அரவிந்த் தனது முலைகளைப் பற்றி அருணா பெருமை கொண்டு சொல்லும் சொற்களில் நகர்ந்து அவனுடைய மனம் பதைத்துக் கொண்டிருந்தது. இந்த நிமிடம் இதுபற்றி நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுவது நடக்கவேயில்லை. அவளுக்குப் பல தோழிகள், சொந்தக்கார பெண்கள் இருக்கிறார்கள். பலரும் ஆடையுடுத்திக் கொள்ளும் வேளையிலோ, குழந்தைகளுக்கு பால் புகட்டுகிற நேரத்திலோ பலமுறையும் பல பெண்களின் மார்புகளை அவள் பார்த்திருக்கிறாள். “செல்லா, நீ என்ன தப்பா நெனச்சுக்க மாட்ட தானே? கடவுள் சாட்சியா சொல்றேன், என் மொலைங்க லைட் மஞ்சள் கலர் மேங்கோஸ் மாதிரி அவ்ளோ தெறுப்பா இருக்கும். காம்பஸ் போட்டு வரைஞ்சா மாதிரி லைட் பிரவுன் சர்க்கிள்சா, அதுக்குள்ளே நிப்பிள்ஸ் மீடியம் ஷேப், சாக்லேட் பிரௌனி. இவ்ளோ அழகா யார்தும் நான் பாத்ததே இல்ல, தெரியுமா? ஒருநாள் நீயும் பாக்கத்தானே போறே?”

இப்போது நினைத்தாலும், அந்தச் சொற்களினால் பீதியுடன் காமம் எழும்புவது உண்மை தான், மறுக்க ஒன்றும் கிடையாது. ஆனால் அவனுக்கு அதில் ஒரு பெருமை துருத்தும். எவ்வளவு நெருக்கத்தில், எவ்வளவு அந்தரங்கமாக இவைகள் சொல்லப்பட்டன. வேறுயாரும் அறியாமல் நமக்கே நமக்கு என்று இருக்கிற ரகசியம். அரவிந்த் இந்த பெருமிதங்களினால் மேலும், மேலும் வதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சொல்ல வேண்டும்.

“அரவிந்த்!”

“ம்!”

“கவனிக்கறியா, இல்லையா?”

“கவனிக்கறேம்பா. நீ ஸ்டார்ட் பண்னு!”

“அது ஒரு கடைக்கோடி கிராமம்னு வெச்சுக்கலாம். பழனிக்கு சராசரிப் பொழைப்பு. ரெண்டு தங்கச்சிகளுக்கு கல்யாணம் காட்சி செய்து முடியறப்ப, அவன் மனசுல கல்யாண ஆசையே இல்ல. இத்தனைக்கும் அவன் பொம்பளை சொகம் பாக்காதவன். அப்டியே வாழ்ந்துட்டுப் போயிடலாம்னு நெனச்சுகிட்டு இருந்தப்ப, ரொம்ப தற்செயலா அவன் அந்தப் பொண்ண பாக்கறான். உடனடியா ஒரு ஆவேசத்தோட அவளை கல்யாணம் பண்றான். அந்தப் பொண்ணு யாமினி ரொம்பவே சாதாரணப் பொண்ணு. ஆனா என்னதான் அவளை ஆண்டு அனுபவிச்சாலும் அவகிட்ட பழனிக்கு ஒரு மரியாத இருக்கு. ஒரு தினுசான பயம்! அவளை அவனால சாதாரணப் பொண்ணா நெனைக்க முடியல. அவ எவ்ளோ தடுத்தும், அவளை வசதியோட வெச்சுக்க ஆசைப்பட்டு வெளிநாடு போறான். எப்பவும் பழநியைப் பத்தியே பேசிகிட்டு இருக்கிற, பழனியால போஷிக்கப்பட்ட குமார் யாமினி கர்ப்பமா இருக்கறதால உதவி செஞ்சு விட்டதெல்லாம் சரி, அவளை அவனால விட்டு விலக முடியல. இவனுக்கு முன்னால அவளுக்கு அவன் மேல வாஞ்சை விழுந்துருச்சி. ஒருநாள் இந்த லவ்வர்சை அவங்க வீட்டுக்குள்ள வெச்சு ஊர் பூட்டு போட்டுடறாங்க. பழனி வர்றான். அவளை ஆறுதல் செஞ்சு தட்டிக் குடுத்து அவளுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சு, போனது போவட்டும், அவனை மறந்துரு ன்னு சொல்றான். அவள் சரின்னுதான் சொல்றா. அதில அழுத்தம் இல்ல. பழனிக்கு குமாரை கொல்றதைத் தவிர வேறு வழியில்ல. மரணம் ரெண்டு பேருக்குமே பக்கத்தில வந்து வந்து போவுது.”

தாசன் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான்.

யாரும் ஒன்றும் பேசவில்லை.

“பயங்கரமா அடிச்சுக்கறவங்க ஒரு புள்ளில சமாதானமாயிடறாங்க. மனசுவிட்டு பேசறாங்க. ரெண்டு பேரில் யாருக்குமே முழுசா எட்டாம தள்ளி நின்னு ஆட்டிப்படைக்கிற அவளோட மோகினி வேலைகளை பேச பேச அவ பாட்டுக்கு விஸ்வரூபம் எடுக்கறதை ரெண்டு பெரும் பயப்படறாங்க. அவளை ரெண்டு பேருமா சேந்து கொல்றதா முடிவு பண்றாங்க!”

“இதுதான் கிளைமாக்ஸா? என்கிறான் ராபர்ட்.

“அப்படி நெனைச்சு தான் எழுத ஆரம்பிச்சேன். திரைக்கதை அதில நிக்கல. அவங்க மூனு பேருமா சேந்து வாழறாங்க. புள்ளக் குட்டிங்களோட. சந்தோஷமா.!”

மூன்று

அந்த வருடம் தான் கடைசி. பின்னால் வந்த காலங்களில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் யாரையும் சந்நிதான வட்டாரத்தில் அனுமதிப்பதில்லை. இவர்கள் அன்று இரவு பக்கவாட்டில் உள்ள படிக்கட்டுகள் வழியாக ஏறிச்சென்று மூடிகிடந்த சந்நிதானத்துக்கு அருகே, அதன் கதவுகளைப் பார்த்துக் கொண்டு பனிரெண்டு மணி வரையில் காத்திருந்தார்கள். அந்த நேரம் வந்ததும் ஒரு ஆத்மார்த்தமான சரண விளியை முடித்துக் கொண்டு ரூபனைப் பாட வைத்தார்கள். அந்த இரவு, அந்த இடம், அந்த குளிர், அந்த பக்தி எல்லாமே ஒருசேரச் சுற்றி வளைத்து முற்றுகைப் போட்டதில் அனைவருக்குமே கண்ணீர் பெருகியது. அது முடிந்து ஒரு நாடன் ஹோட்டலில் அனைவரும் மசாலா தோசை சாப்பிடும்போது கூட, அதன் சந்தோஷங்கள் மிச்சமிருந்தன.

மறுநாள் மாலை வேளையில் சந்நிதானம் திறக்கப்பட்டது.

கூட்டம் என்று வந்துவிட்டால் அது பக்தர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? மூர்க்கம் கொண்டு தள்ளினார்கள். குழந்தைகள் பிதுங்குவதை, முதியவர்கள் அல்லல் கொள்ளுவதை யார் பார்த்தார்கள் அங்கு? எல்லாமே பலமுள்ளவனின் ராஜ்ஜியம் தான். எப்படியோ வரிசையில் நின்று முன்னேறி சாமி தரிசனம் பார்த்தார்கள், அதைக்கூட தாசன் சரிவரப் பார்க்க முடியாமல் எங்கே என்று தேடுவதற்குள் போலீசார் பிடித்துத் தள்ளி விட்டார்கள் என்றான். அதனால் பரவாயில்லை என்று தன் பாட்டுக்கு போனான். கவுதம், ஜார்ஜ், குமார் எல்லாம் இவ்விஷயத்தில் படு கண்டிப்பு. இத்தனை நாள் விரதமிருந்து, இத்தனை கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, காடுமேடுகள் தாண்டி வந்துவிட்டு தரிசனம் கிடைக்காமல் போவதா? போலீசாரைத் தள்ளிவிட்டு, ஏமாற்றிக் கொண்டு புகுந்து ஒருமுறைக்கு இருமுறை பார்த்துவிட்டு வந்து தாசனைத் தங்களுடன் வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் அலட்டிக் கொள்ளவில்லை. விடுங்கடா டேய் என்றான்.

பம்பையில் இறங்கி, பஸ் பிடித்து இடுக்கி வந்து சேர்ந்து அறையை போட்டுவிட்டு, குளித்து ஒரு கோவிலுக்கு சென்று மாலையைக் கழட்டினார்கள்.

பாட்டில்களை எல்லாம் வாங்கிக் கொண்டு பார்ட்டிக்கு தயாராகும் போது அரவிந்த் ஹோட்டல் போனில் தனது வீட்டுக்குப் பேசினான். பரஸ்பரம் குசல விசாரிப்புகளுக்கு அப்புறம், கோவில் விசேஷங்களை எல்லாம் பேசி முடித்தற்கு அப்புறம் ஒரு செய்தி சொன்னார்கள். அருணாவும், வேணுவும் திருமணம் செய்து கொண்டார்கள். வேணுவுடன், குழந்தையோடு அருணாவும் லிபியாவிற்குப் போகிறாள்.

அடுத்த வருடம் விரத காலம் வருவதற்குள் பலருக்கும் திருமணமாகி விட்டது.

விளையாட்டாக ஆறு ஏழு வருடங்கள் பயணம் போன தொடர்ச்சி அறுந்து போயிற்று.

எப்படியோ ஆறு மாதத்திற்குள் உடைந்திருந்த அரவிந்த் தேறிக் கொண்டான். அவனுடைய எழுத்தில் ஆழம் கூடியதை எல்லோருமே அறிந்தார்கள். தாசன் அரவிந்திடம் அருணா எதற்காக உன்னை கைவிட்டுச் சென்று, ஒரு பாதுகாப்பான வாழ்வில் தன்னை ஒளித்துக் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு லாஜிக் சொன்னான். அது ஒரு மூன்றாம் தர சினிமா போல இருந்தாலும் எல்லோருக்கும் உவப்பானதாக இருந்தது. ஒரு கதாநாயகி, கதாநாயகனின் எதிர்கால வாழ்வின் பொருட்டு தியாகம் செய்வது அது. அப்படிப்பட்ட சமாதானங்கள் சரியானவை. அல்லது சரியானவை தான் நம்மில் சமாதானங்களாக வருகின்றன. அப்புறம், அரவிந்தின் இந்தக் காதல் கதையை தாசன் எழுதப் போவதாக சொன்னான்.

அது ஒரு பெரிய நாவல்.

அதன் முதல் பகுதி, வேணுவிற்கும், அருணாவிற்கும் உண்டாகிற சமூக பந்தம். ஒருநாள் அவள் பணிபுரிகிற இடத்தில் அதன் முதலாளி அவளது கையைப் பிடித்து இழுக்கிறார். அவருக்கு சம்மதிக்காமல் தெருவிற்கு வந்துவிட்ட அவள் அந்தத் தருணத்தில் யார்? ஒரு அபலையல்லவா? வேணு ஒரு பெரிய பாதுகாப்பு அரண். அருணா காலாகாலத்திற்கும் சௌகர்யமாக ஏச்சுபேச்சு கேட்காமல், குழந்தையின் எதிர்காலத்தை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக வாழ முடியும். வேணுவிற்கு அவள் போற்றிக் கொண்டு வந்த அரவிந்தின் காதல் பற்றி எதுவும் தெரியாது. அவள் அவனை ஒரு தம்பியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறாள்.

அடுத்த பகுதி, அரவிந்தின் காதல் வலி. அவனுக்கு வேணுவின் மீது சிறிய சந்தேகம் இருந்தாலும், அதைக் கேட்டதற்கு கதறிக் கண்ணீர் பெருக்கி அவனை நொறுக்கி விட்டு, அவர் ஒரு அண்ணனைப் போல என்று அடித்துக் கூறி விடுகிறாள். ஆனால் அரவிந்த் அதைச் சரியாக நம்பவில்லை.

மூன்றாம் பகுதி, இறுதி. லிபியா வாழ்கை விசேஷமாகப் போனாலும் அது சிலகாலம் தான். அருணாவிற்கு இன்னொரு குழந்தை உண்டாகி அதைப் பராமரித்து வந்தாலும், அவளுக்கு முன்னால் ஒரு வெறுமையின் சுவர் எப்போதும் நிற்கிறது. வாழ்க்கை சலித்து விட்டது என்பதை மட்டுமே சொல்ல வேண்டும். வழக்கமான ஒரு புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு அப்புறம் அவள் தன்னை முடித்துக் கொள்ளப் போகும்போது ஒரு போன் அடிக்கிறது. நல்லா இருக்கீங்களா? கேட்கிறான் அரவிந்த். வற்றிப் போயிருந்த மொத்த ரத்தமும் ஊறிக்கொண்டு புதிதாக ஓடி, முகம் மலர்ந்து வெடிக்கிறாள். “நீ என்ன மறக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்!”

தாசன் கதை சொல்லுவது புதியது அல்ல.

அவன் அவைகளை எழுதப் போகிறேன் என்பதும் அப்படித்தான்.

அரவிந்த் அதை எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் சினிமாவில் பிசியாக இருந்தான். பலபேரைப் பார்த்து உறவுகள் கொண்டதில், பெண் மோகம் குறைந்து கொண்டு வந்துவிட்டது. அருணாவை இழந்தது பற்றி பல கோணங்களிலும் திருப்தியே மேவியது. இருந்தாலும் ஒருநாள் தாசனின் கதை உண்டாக்கின ஒருவிதமான குறுகுறுப்பில் தொலைபேசி எண்ணைத் துழாவி அறிந்து அதற்கு தொடர்பு கொண்டபோது அருணாவே எடுத்தாள்.

“தெய்வமே!” என்று ஒரு சொல் சொன்ன மாதிரி இருந்தது.

பிறகு ஒன்றுமில்லை.

***


மணி எம்.கே. மணி – இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள் உள்ளிட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. mkmani1964@gmail.com