Home Blog Page 97

கணங்களின் விபரீதங்கள்

1

அந்தச் சிறுவன் மாடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான்
வீட்டிற்கு வெளியில் ஈனில் ஊர்தி வந்து நிற்கிறது
அதிலிருந்து ஓர் துணி சுற்றிய உடலை இறக்குகிறார்கள்
வீட்டிற்கு முன்னிருப்பவர்கள் முகங்களிலெல்லாம்
இறந்துபோனவனின் பற்றிய துக்கங்கள்
அந்தச் சிறிய வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்த அந்த உடலை
கொண்டு செல்ல முடியவில்லை
மிகக்குறுகலான அவ்விடத்தில் மனிதர்கள் வாழ்வதே கடினம்
அதற்குள் ஒரு பிரேத்தை நுழைப்பது அவ்வளவு எளிதாக இல்லை
ஒரு வழியாய் அவரை உறைவிப்பானில் வைக்கிறார்கள்
மனைவியைக் கைத்தாங்கலாய்க் அவ்வுடலின் முன் கூட்டிச் செல்கிறார்கள்
உடல் மெலிந்து மனம் நொந்திருந்தவள் என்னங்க என்று
அழுதபோது கூடியிருந்தவர்களின் இதயங்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன
முகத்தைக் கண்டு கண்டு மனம் வெடித்து கதறுவதை நிறுத்தாமலிருக்கிறாள்
தெரிந்தவர்கள் கண்ணீர் மல்க ரோஜா மாலைகளை
கண்ணாடிப் பேழையின் மீது வைத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்
பூமாலையாய் அவ்விடம் நிறைந்தவண்ணமிருக்கிறது
அப்பாவைக் கடைசியாய்க் காட்ட அந்தச் சிறுவனைக் கூட்டிவர
போகிறார்கள்
எதற்கு கூப்பிடுகிறார்கள் என்று தெரியாமல்
அவன் வருகிறான்
அப்பாவைப் பார்க்கிறான்
அவனுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை
எதுவும் பேசாமல் மரணம் புரியாமல் நிற்கிறான்
அழுதுகொண்டிருந்த அம்மாவைப் பார்த்தவன்
அழாதே என்று கூறுகிறான்
அப்பா இயேசுவிடம்தான் போயிருக்கிறார் அம்மா என்கிறான்
அப்புறம் அவனைக் கூட்டி போகிறார்கள்
அவரை மயானத்திற்கு கூட்டிச் செல்ல ஆயத்தமாகிறார்கள்
காத்திருந்த மரண ஊர்தியில் ஏற்றுகிறாகள்
அவர் போவதைப் பார்த்தவள் இறந்த சடம் போலாகிறாள்
அவளின் அந்தக் கடைசிக் கூக்குரல் அந்தத் தெருவையே உலுக்குகிறது
அந்த பூதவுடல் கண்களிலிருந்து மறைந்துகொண்டிருக்கிறது
பின் அங்கு நிலவிய அமைதியில் அப்பாவற்றுப்போன
அந்தச் சிறுவன் அது தெரியாமல் மாடியில் எப்பவும்போல்
கார்களையும் பைக்குகளையும் வாயில் சத்தம் செய்தபடி
வேடிக்கைகள் நிகழ்த்திக் காட்டும் வாழ்க்கையில்
ஓட்டிக்கொண்டு திரிகிறான் அடுத்தடுத்த கணங்களின்
விபரீதங்களுடன்.

அய்யப்ப மாதவன்

தேன்மொழி தாஸ் கவிதைகள்

0

 

காமத்தின் பின் தொடரல்

அவள் நடந்துவரும் போதெல்லாம்
வீதி அயரும் நாய்குட்டியென படுத்துவிடுகிறது
அவளைப் பின்தொடரும் பள்ளிச் சிருவர்களின் கண்களும்
பாதத்து விரலில் விழுந்து ,எரும்பென ஊர்ந்து
தேக்கிய தமது ஆசைகளை
சுவர்கத்தின் அறைக்குள் உடைத்துவிட துடிக்கின்றன
அவள் நகரத்தை
காற்று புல்லாங்குழலுக்குள் பயணப்படுவது போல் கடக்கிறாள்
எதிர்படும் யாவரும் இவளை கனவில் முத்தமிட்ட தருணத்தை
மதுவோடு அருந்தி அலைகிறார்கள்
அவளுக்கு காதலனோ ,கணவனோ கூட இருக்கக் கூடும்
அவளது வாழ்வோ
வழிப்போக்கன் தன் கற்பனையை எச்சில் தொட்டு
அழித்து எழுதும் கருப்பலகையென கட்டமிடப்பட்டுள்ளது
ஊறுற்றுக் கண்கள் கொண்ட  ஸ்தனங்களின் ஒளி
அவளது கழுத்தின் மேல் பொன்னையும் மிஞ்சத்தக்க
ஆபரணமாய் விழுகிறது
யாருடனும் பேசாத மொளனம்
யாருக்காகவோ அதிகமாக காத்திருக்கிறது
இந்நேரம் இவளது உள்ளாடையை திருடிச் சென்றவனின் காமம்
ஒற்றைத் திரியில் ஏற்றப்பட்டு நெய்யின்றி அணைந்திருக்கும்
இவளோ தன்னைப் பின் தொடர்ந்து வந்த
இச்சைகளை காலணியென விட்டுவிட்டு
தனது வீட்டின் கதவை  அது போர்த்தியிருந்த
இரும்பு தண்டுகளால் தாழிடுகிறாள்
தனிமையை பரிமளத் தைலமெனப் பூசி
தன்னை கண்ணாடி முன் திறக்கிறாள்
வெண்குதிரையொத்த  தேகத்தை  அணைத்து
பனியின் தூய்மையில்
அவள் ஆன்மா இருப்பதை அது காட்டுகிறது
வீட்டுத் துவாரம் வழியாக ஊடுறுவிய  மிருகங்களின் கண்கள்
அவமானத்தின் படுகுழிக்குள் திரவமாகின்றன.

5.11.2011  .3.14 am

எனக்குள்ளே தான் வாழ்கிறது
தனிமையின் வலிமை மிக்க சக்தியின் எல்லா விளிம்புகளிலும்
அதன் அணல் பறவிக் கொண்டேயிருக்கிறது

என் பாதங்கள் விரும்பும் பயணத்தை
எலும்புகளுக்குள் பூட்டுகிறது
அவற்றை தாங்கயியலாது தவிக்கிறேன்
(சிலநேரம் சபிக்கிறேன் )

என்னை  நசுக்கி பிடறி பிடித்து
இருளின் வசம் ஒப்படைத்தாலும்
அதன் விசும்பல் பகலுக்கு கேட்ப்பதில்லை

என் கைகளில் கறைபடவிடாமல் முடிச்சிட்டிருக்கிறது

உனக்கென தோய்ந்த ஆன்மா
விழித்துக் கொண்டிருக்கையில்
விடியும் துயரம் வந்துகொண்டே  இருக்கிறது

பதிலற்ற கேள்வி
இறந்த காலத்தை விட எதிர்காலத்தை குறிவைத்தே
குறுகுகிறது

மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியினை விட
குரல்களே அதிகம் கேட்கின்றன

15.02.2010

மின்னல்கள் இருக்கிறேன் என செல்லுகின்றன
ஒளியின் வீச்சில் ஒரு ஓரம் எனது தண்டனையை
முடிந்து விடுகிறேன்
எங்கோ பூமியில் பேரதிர்ச்சியுடன் வீழும் அவை
யாதொரு சலனத்தையும் உனக்கு நிகழ்த்தாது
உனக்கான எனது தண்டனைகள்
சில நட்சத்திரங்களைக் கூட வழிநடத்தலாம்
மேகங்கள் தொங்கும் வெளியில் கண்களாய் காத்து நிற்கலாம்
இவை ஏதும் அறியாமல் நீ யாரிடமாவது
வெளிச்சம் பரவுவதற்கும் ,இருள் மூடுவதற்கும் இடையே
நியாயங்கள் ஏதுமில்லை  என பேசிக் கொண்டிருக்கலாம்
சுட்டு முத்திரையிடப்பட்ட களிமண்ணாய்
மனதை உன்னிடம் தந்ததை
நினைவில் கௌ¢வாயா
மின்னல்களில் தொங்கும் தண்டனைகளை அவிழ்க்கிறேன்
அப்போது
தெற்கிலிருந்து  காற்றும்,வடக்கிலிருந்து மழையும்
மேற்கிலிருந்து குளிரும்,கிழக்கிருந்து இருளும் வரத்துவங்கின
தண்டனைகள் சருகுகளோடு நடந்தன
அவ்வழியே நீ வராதிருக்க வேண்டும்

11.10.2011  02.03 am

தனிமையிடம்  கையளிக்கப்பட்ட  இவ்விரவு
நிலவின் பின் மெல்ல நகர்கிறது
மழையின் ஆரவாரம் பள்ளத்தாக்குகளின் அடியில்
மரிப்பதைப் பார்க்கிறேன்
எனக்குள் நிறைந்திருந்த  வார்த்தைகளை
நித்திரையில் அதிகம் தொலைத்திருக்கிறேன்
குற்ற உணர்வை கொல்த்தெரிந்தவர்களை
சந்தித்ததில்லை
எனது அபிப்ராயங்களுக்கு மருதாணி பூசிவிட்டது
காலமன்றி வேரில்லை
உறைந்த இரத்தத்தில் உப்பை இடத்தெரிந்தது காலம்
இமைப்பதற்குள் அடங்கும் மின்னலாய் எவ்வளவோ
தொலைந்து  விடுகின்றன  வாழ்வில்
உணர்வுகளும் ஆகாயத்தில் அலையும்  தண்ணீரும் ஒன்றே
தென்றலை ஆடையாக அணிந்த போது
நிலவுக்கு சாம்பலின் அங்கம் எனக் கண்டேன்
எனது பாதங்களை சாம்பலுடனும்
எனது உடலை மேகத்தின் இருட்டிலும்
புதைக்கிறேன்
பூமியின் உச்சியில் இட்ட முத்தம்
பகலாகிப் போகிறது

15.09.2011 11.08 pm

என் படுக்கையிலிருந்து அப்பாம்பு சென்றபின்
மூன்று முட்டைகள் கிடக்கக் கண்டேன்
ஒரு கணம் முடியும் முன்
அவைகள் நீர்க்குமிழியெனப் பெருகி வெளியில் உயர்ந்த போது
ஒன்றினுள் சிங்கத்தின் உருவம் பெறுகக் கண்டேன்
தனது வீரியமிக்க கால்களினால் குமிழியை உடைத்தது
மற்றொன்றில் குதிரை காற்றால் அக் குமிழியை நிறைத்தபடியே ஓடத்துவங்கியது
பிரிதொன்றில் இரண்டு மான்குட்டிகள் தன் கொம்புகளால்
விளையாடிக்கொண்டிருந்தன
எல்லாவற்றிகும் மனித சாயலும் மத்தியானத்தில் ஒளியும் சூழ்ந்திருக்கக் கண்டேன்
மான் குட்டிகளின் மேல் என் கனிவு பனிபோல் இறங்கியது
தழுவத்துவங்கும் முன் குமிழிகள் பறக்க
எட்டுத்திசைகளிலும் எட்டுவகைக் காற்றை உணர்ந்தேன்
காந்த மண்டலம் அச் சிங்கத்திற்கு திறவுண்டதையும்
தீர்க்கரேகை வழியாய் அக் குதிரை கடந்ததையும்
சுழலும் பூமியின் கரிய நிழல் ஸவுந்தர்யம் மிக்க மான்குட்டிகளை
வானத்திற்குள் வளைத்துக் கொண்டதையும் கண்டேன்
வேற்றொரு கிரகத்திற்கு அருகே சிங்கம் கடக்கையில்
அதற்கு சிறகுகள் முளைக்கக் கண்டேன்
அப்போது எனக்குள் பல பள்ளத்தாக்குகள் நகர்வதையும்
மழையுண்ட வேர்கள் மூளையின் தாழ்வாரம் வரை நுழைவதையும் உணர்ந்தேன்
சிங்கத்தின் சிறகுகள் என்னை அழைத்தன
மலைகள் மண்டிய வனாந்தரமும்  பறவையாய் என்னை ஏந்திக் கொண்டு பறந்தது
மான் குட்டிகளின் கால்கள் சில நதிகளை எனக்கென நகர்த்தி வைத்தன
சிங்கத்தின் கண்களில் தேநீரைப் போன்ற கடல் அசைவதைக் கண்டேன்
அக் கண்களை மீண்டும் மீண்டும் பார்த்ததில்
குமிழிகள் எங்கோ மீண்டும் உருவானதையும்
குதிரையையும் மான் குட்டிகளையும் எங்கோ அவை எடுத்துச்சென்றதையும்
நான் காணவில்லை
சிங்கத்தின் கண்கள் என்னை கண்டு கொண்டேயிருந்தன.

5.11.2011 … 4.18 am

Edited again 22.10.2013 exactly at 4am to 4.18am 

யாளி பேசுகிறது – 2 // Narrative -நடைபயிற்சி 1

0
open source

வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து பேசும் யாளி இன்று ஒரு முக்கிய கேள்வியை வைக்கிறது, அது சிற்பங்கள் வாழும் கற்கோயில்களில் உள்ள கற்களை அகற்றி அதில் மார்பிளையும், கிரனைட்டுகளையும் பதிக்கும் நவீன உலகின் மனநிலை பற்றி…

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டம், மேற்கத்திய நவீன ஓவியங்களின் தாக்கம் நமது நாட்டில் நன்கு பரிச்சையமான காலமது. இந்தத் தாக்கம் மேற்கத்திய தொழிற்நுட்பங்களின் ஈர்ப்பினால் வெகுவாக நமது கலைகளில் காணப்பட்டது, புராணங்களைத் தவிர்த்து நமது வெளிக்கான ஒரு கலை இயக்கம், மிக அவசியமான தேவையாக இருந்தது. KCS பணிக்கர் அப்படி ஒரு இயக்கத்தின் காரணகர்த்தா என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சோழமண்டலம் பற்றி இன்னொரு பாகத்தில் பேசுவோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை தென்னிந்தியா(திராவிடம்) தன் கலைகளின் மூலம் வட இந்தியவோடு இருந்து பல இடங்களில் தனித்தே இருக்கின்றது. இது கலாச்சார அடிப்படையினாலான பகுப்பு, அதே சமயம் நாட்டின் மொத்த கலைகளையும் இணைக்கும் முக்கியப் புள்ளியாக நாம் புராணங்களின் வாயிலாக மட்டுமே காண முடியும். நாட்டின் நான்கு திசைகளிலும் பரவியிருக்கும் எல்லா கலைகளிலும் தொன்மையான இதிகாசங்களின் தாக்கமே அதிகமிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மை பரதம், மோகினியாட்டம், கதக், மணிப்புரி, ஒடிஸ்ஸி, கதக்களி(கேரளம்), சத்ரியா(அஸ்ஸாம்) என்ற நாட்டியங்களில் மட்டுமல்லாது நமது தெருக் கூத்து, தோல் பாவைக் கூத்து போன்ற கலைகளிலும் இதிகாசங்களே பெரும்பாலும் ஆக்கிரமித்து இருக்கின்றன.

ஆனால் தென்னிந்திய கலாச்சாரத்தில் அதே இதிகாசங்களில் புவியமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றங்கள் இருக்கின்றன, இங்கே கலைகளில் அது தொடர்பான விவாதங்கள் (Interpretation), இதிகாசங்களை வேறு ஒரு தொனியில் சொல்லப் படுகின்றன. இராவணனை வெறுமனே துவேஷிக்கும் இதிகாசமாக மட்டும் இங்கே இராமாயணம் வாசிக்கப் படவில்லை, ஆனால் காலப் போக்கில் இந்த புவியமைப்பு குறுகியது, அது தென்னிந்தியாவாக இல்லாமல் தமிழகமாக மட்டும் பார்க்கும் நிலை உருவானது வேறு நிலை. ஆனால் KCS பணிக்கரின் முயற்சிகள் நவீன ஓவியங்களில் திராவிட மாநிலங்களை இணைத்தே வைத்திருக்கின்றது, அதற்கு சோழ மண்டலத்தின் கலைக் கூடத்தில் நீங்கள் பார்வையிடும் போது ஒருவேளை இந்த கருத்துடன் ஒத்துப் போகக் கூடும்.

மேற்கத்திய தாக்கத்தில் இருந்து பணிக்கர் எந்த மாதிரியான மாற்றங்களை தமது கலைகளில் வெளிப்படுத்தினார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவகையில் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் வழியாக மேற்கத்திய பாணிகளை அவர் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும் , அதனால் தான் அவர் அதை வெறும் தொழில்நுட்பமாக மட்டும் கருதி அதனை நமது நிலத்தின் கலையுணர்வோடு அதை அவர் நுட்பமாக வெளிப்படுத்தினார், இதைப் பற்றி பேசும் முன்னர் நாம் CALLIGRAPHY பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

CALLIGRAPHY ஒரு பழமையான கலை (18-19 நூற்றாண்டு), இதன் பாணி எழுத்தினைச் சித்திரமாக்குவது தான். சம்ஸ்கிருத அக்ஷரங்களை நமது நாட்டில் இதே பாணியில் தான் சித்திரமாக பார்க்கும் வழக்கம் உள்ளது. சொற்கள் பெரும்பாலும் நம் மனதிற்குள் பூடகமான ஒரு சித்திரமாக மாறி தான் நம்முடன் தொடர்பு கொள்கின்றன, இது தான் ஒரு நிறைவான மொழியின் அம்சம். இந்த முறையில் எழுத்துகளையே சித்திரமாக்கும் நுட்பம் கையாளப் படுகிறது அதாவது, இதற்கு இன்று நம் வணிக விளம்பரத்திற்கு தேவைப்படும் பிராண்ட் லோகோ, பேனர் எழுத்துகளையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு மேற்சொன்ன இந்த உதாரணம் போதுமல்லவா, அதாவது இம்முறை விவரனைகளை Narrative தூண்டுகிறது.

 dog

பணிக்கரின் இந்த பிரசித்தி பெற்ற ஓவியம் (DOG-1973) Narrative முறை தான், இவை யாவும் மலையாள வட்டெழுத்துகள். மலையாளத்தில் இந்த ஓவியத்தின் குறியீடுகள் எழுதப் பட்டிருக்கின்றன அல்லது நாம் இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் இந்த ஓவியத்தை அவ்வட்டெழுத்துகளின் குறியீடுகளாகவும் பார்க்கலாம்.

இந்த ஓவியம் ஒரு Oil on Canvas படைப்பு, அச்சமூட்டும் ஒரு நாயின் உருவமும், ஒரு காகமும் இதில் இருக்கின்றன. நீல வண்ணப் பின்னணியில் நிற்கின்ற நாய், நாம் இரவில் பார்க்கும் போது தரும் அச்சத்தைத் தருகிறது, சதைப் பற்று இல்லாத அதன் உடலமைப்பில் மார்பெலும்புகள் தெரிகின்றன. அதன் கீழே நிற்கும் காகம் மிக இயல்பாக இருக்கின்றது. இதை ஒரு மரணத்தின் முன்னெச்சரிக்கையாக நாம் பார்க்க இயலும், மிரட்சியூட்டும் நாயின் கண்கள் நமக்கு சிறிது நேரத்தில் மிரண்டு போனதாகவும் மாறிவிடுகிறது, பெரும்பாலும் நாம் நாயினையும், மரணத்தினையும் இப்படித் தான் எதிர்கொள்கிறோம். நம்மை நெருங்கும் இவ்விரண்டும் நம்மை இப்படித்தான் எச்சரிக்கின்றன.

மரணத்திற்குப் பிந்தைய வாழ்வைக் குறிப்பது போல இந்த ஓவியத்தில் காகத்தின் உருவம் எனக்குக் காட்சிப் படுத்தினாலும், பணிக்கரை ஒரு தாந்திரிகக் கலைஞராகவோ அல்லது அவர் படைப்புகளை மீப்பொருண்மையாகவோ மட்டும் கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. ஆனால் அவர் வாழ்வு மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையில் இருக்கும் அவரது ஓவியங்களை நமது அறிவுத்தளத்தோடு மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறானது. நாம் ஏற்கனவே பார்த்திருந்த அவரது GENESIS ஓவியத்தில் இருக்கும் கருவிற்கும் இவரது மரபு மற்றும் புராணங்களில் இருக்கும் ஈடுபாடும், அதில் அவர் புகுத்தியிருக்கும் நவீனமும் தெரிய வரும்.

இதைக் (METAPHYSICAL) கடந்தும் பார்ப்பதற்கு ,பணிக்கரின் பல NARRATIVE ஓவியங்கள் இருக்கின்றன. அவை எளிய மக்களின் வாழ்வுடன் மிக நெருக்கமாகவும் இருக்கின்றன, இந்த இடத்தில் (மனிதர்கள், கிராமம்) அவரது ஓவியங்கள் வாழ்வியலோடு மிக நெருக்கமாய பயணிக்கின்றது. அவற்றை அடுத்த பாகத்தில் பார்த்து விடுவோம்.

 

இன்னும் பேசும்…

-ஜீவ.கரிகாலன்

நன்னீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி

0

 

appleblack

நன்னீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி

தன் ஆதி வனத்தின்
கடைசி மூங்கில் குருத்தை துழாவும்
தளர்ந்த தும்பிக்கையின்
பசியாக இருந்திருக்கிறது
அது !

மலை உச்சியில் ஊறும்
ஒற்றை கொம்புத்தேனின் ருசி தேடி
வியர்க்க முன்னேறிக்கொண்டிருக்கிறேன்

உச்சந்தலை மயிரை சுண்டி இழுக்கும்
மலை தேனின் முதல் துளியை
ஏந்தும் தருணம்

வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க
கள் வெறி கொள்கிறேன்

மகரந்தத்தில் சிக்குண்ட கருவண்டின் சிறகடிப்பாய்
எனது உயிர்பறவை
நம்பவியலா படபடத்து
வானம் நீங்கியது

சுஜாதா செல்வராஜ் 

 

 

யாளி பேசுகிறது…….. -01 நடை பயிற்சி 1

1

யாளி பேசுகிறது -01 (புதியத் தொடர்)

– ஆயிரங்கால் மண்டபத்தின் வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து.

ஓவியம் பற்றியத் தொடர் ஒன்றினை ஆரம்பிக்கத் தூண்டியது எது?

இது தான் என் முதல் கேள்வி, பல கதை சொல்லிகளுக்கு மத்தியிலே புரண்டு கிடந்தும், சொல்லத் தெரிந்து நிறையக் கதைகள் இருந்தும் சொல்ல முடியாமல் , எங்கெங்கோ  சிக்கித் தவிக்கும் என் கதைகளை தனியே விட்டு விட்டு நான் மட்டும் பிரயாணம் செய்கின்றேன்.

ஒரு குரல் கேட்கிறது, அது ஒரு அறிவியல் ஞானியின் குரல். அக்குரலில் வரும் ரிச்சர்ட் ஃபெய்மெனின் (Richard Feymann)அறிவியல் கோட்பாடாக மட்டும் கீழே வரும் வாக்கியத்தை எடுத்துக் கொண்டு சுருங்கி வாழ முடியாது. அவர் சொன்னது பிரபஞ்சத்திற்கே பொதுவான உண்மை என்பது மிகை.

“There’s A Plenty of a Room at the Bottom” எனும் சொல்லாடல் தான் அது.

குறிப்பாக ஓவியம் பற்றி பேசுவதற்கு மிகவும் குறைவான ஆட்களே இருக்கின்றனர். அதுவும் அவர்கள் பட்டியல் – வான்கோ, பிகாசோ, காகின், கிளிம்ட்,வாஸில்லி கண்டின்ஸ்கி, வில்லியம் பிளேக் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிக்கிறது. விக்கீபிடியா போன்ற தகவல் களஞ்சியங்களில் கூட நமது தென்னிந்திய ஓவியர்களைப் பற்றிய குறிப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  இது நிராகரிப்பா யதார்த்தமா?

அசரீரி: கலையின் உபபொருள் ரசனையா? அல்லது நிராகரிப்பா?

இன்றைக்கு இருக்கும் நவீன ஓவியச் சூழலில், நல்ல தொழில்நுட்பங்களுடன் கூடிய ஓவியப் படிப்பு ஒரு தொழிற்கல்வியாக மாறும் அளவிற்கு கணிசமான வேலை வாய்ப்பை பல்வேறு துறைகளில் உருவாக்கித் தருகிறது. ஆனால் பல ஓவியர்கள் பொருளீட்டும் உலகில் இருந்து தனித்தே இருக்கிறார்கள்.

இக்கட்டுரை, ஓவியங்களோடு  நமது ஓவியர்கள், இன்றைய ஓவியங்களுக்கான உலகச் சந்தை, ஓவியம் மூலமாக உலக அரசியல், ஓவியங்களைப் பற்றிய விளக்கங்கள், நிர்வாணம் முதல் கார்ட்டூன் அரசியல் என உரையாடல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.

பிற நம் கட்டுரையில் வலம் வந்த பின்னர்:

*****

தொழிற்நுட்பத்தின் காரணமாக அது உருவாக்கப்படும் பிரதேசத்தின் சாயல்களை அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் படைப்பில் பிரதிபலிப்பார்கள். அப்படித் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டு இருப்பதால் சொந்த மண்ணின் தொன்மைகள் மறக்கடிக்கப் பட்டுவிடும்.  இதை சமீபத்திய உதாரணமாக, சீன, கொரிய மற்றும் சில மேற்கத்திய கார்ட்டூன்கள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக (Ranger, Ben10, Transformers) பழைய Disney, Mickey mouse போன்ற கதைகள் மறைந்து விட்டன.

இது நேரடியாக நமது நாட்டிலுள்ள பொம்மைகள் சந்தையினை முற்றிலுமாக பாதித்தது. பிறகு நமது பூர்வீகமான புராணங்களில் இருந்து உருவான பாலகிருஷ்ணா, சோட்டா பீம் போன்ற கதைகள் மறுவுருவாக்கம் செய்யப்பட இந்திய பொம்மைச் சந்தைக்கு திரும்பவும் உற்பத்தி செய்யும் வாய்ப்பு கிட்டியது.

இந்திய நவீன ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவரான KCS Panickar-ன் படைப்புகளை நான் கண்ணுறும் போது இது போன்ற சந்தை மாற்றம் பற்றிய பின்புலம் பற்றியும் யோசிக்க இடமிருந்தது. ஏனெனில், அவரும் இத்தகைய ஒரு பெரிய மாற்றத்திற்கான ஒரு முன்னோடியாக செயல் புரிந்தார்.

(இளையாராஜாவை நாம் போற்றிப் பாடுவதன் பின்னணியிலும் இத்தகைய காரணம் தான் அடித்தளம்.)

KCS பனிக்கரை நாம் முக்கியமான ஓவியராக ஒரு புறமும்,  நவீனச் சூழலில் ஒரு புதிய களம் ஏற்படுத்திக் கொடுத்த பிதாமகராகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைஞனாக அவரைப் பார்ப்பதைக் காட்டிலும் அவர் அமைத்துக் கொடுத்த சோழமண்டல அமைப்பின் நிறுவனராகவே பல இடங்களில் கவனிக்கப்படுகிறார். அதன் காரணமாகவே அவரைப் பற்றியே நான்  முதலில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஆனால் முதலில் பேசப்போவது அவர் ஓவியங்களைப் பற்றியே.

சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை நவீன ஓவியர்களில், இவர் படைப்புகள் நுட்பமான உரையாடலையும் (Narrative) வைத்திருந்தது.

இவரது சொந்த ஊரான, கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்துக் காட்சி அப்படிப்பட்டவை இல்லையென்றாலும் அதன் பின்னர் வரைந்தவை இந்த வண்ணங்களிலிருந்து மிகவும் வேறு பட்டவை. மிகக் கடினமான பரிசோதனைகளை மேற்கொண்டது ஒரு புறம் இருந்தாலும், இவரது கோடுகள் மிகச் சாதாரணமான வடிவங்களையே திட்டமிட்டு உருவாக்கின. அவர் வரைந்திருக்கும் மனிதர்களின் வடிவம் மிக எளிமையான (Fruit seller) குழந்தைகளின் முயற்சியைப் போன்ற தோற்றமளித்தன. பிற புராணங்களைத் தழுவிய ஓவியங்களிலும் இவர் வரைந்திருக்கும் மனிதர்களின் தோற்றம் வித்தியாசமானவையே. அவை தம் கண்களைக் கொண்டு உரையாடுவதைப் பார்க்கலாம்.

வாழ்க்கை, மரணம், பிறப்பு குறித்த இவரது ஓவியங்களையும், சில narrative ஓவியங்களையும் தொடர்ந்து  இக்கட்டுரையில்  பார்த்து வருவோம்.

அசரீரி: கலைஞன், கட்டுவிக்கும் அதே அடித்தளத்தில் இருந்து ஆரம்பித்தாலும் கூட ஒரு ரசிகன் உணர்ந்து வடிக்கும் கோபுரங்கள் அது போல இருப்பதில்லை. அது ரசிகனின் தேவைக்கேற்ற அல்லது புரிதலுக்கேற்ற கட்டுமானம், அதில் தவறில்லை. வெறும் அடித்தளத்தைத் தொட்டு வணங்கிவிட்டு செல்லும் பீடமாக மட்டும் இருப்பது தான், பழிக்கு ஆளாகும் நிலை.

அடுத்து அவரது ஓவியம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்:

கே.சி.எஸ்.பனிக்கர்
கே.சி.எஸ்.பனிக்கர்

Genesis எனும் ஓவியம். இது ஒரு கோட்டுச் சித்திரம். 1957-ல் வரையப்பட்டது.

இதை நாம் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இதில் மொத்தம் நான்கு காட்சிகள். அவை காதல் , கற்பம், கரு, பேறுகாலம் என கோடுகளாகத் தீட்டப் பட்டிருக்கும்.

இவர் வரைந்திருக்கும் மனித உருவங்கள் பிரத்தியோகமானவை. கருவை அவர் வரையும் பொழுது கருவறையைச் சுற்றி ஒரு ஜுவாலை இருப்பது ஒரு மரபுச் சார்ந்த படிமம்.

ஓவ்வொரு காட்சிகளில் இருக்கும் கண்களின் வித்தியாசத்தைப் பாருங்கள். அதில் காதல், பூரிப்பு/வெட்கம், வலி – அதோடு கருவில் இருக்கும் குழந்தையின் கண்கள் கவலைகளுக்கு இடமேயில்லாத உலகில் இருப்பது போல் தோற்றமளிக்கும். இவரது கோடுகள் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றை ஆழ்ந்து நோக்குவதற்கு முன்பே இவை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடும்.

நவீன உலகில் நமது மரபுகளை / நம்பிக்கைகளை, ஆன்மீகத்தை குறிப்பிடும்படியான எந்த பரிட்சார்த்தமும் செய்துப் பார்க்காத போதிலும் அவற்றை அழகியலுடனும், மிக நுண்ணியக் குறியீடுகளுடனும் வெளி உலகிற்கு எடுத்துச் செல்லவும், சமகாலத்தின்/சமூகத்தின் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் சில திரைகளை விலக்குவதற்கும் அவை பயன்படும்.

இன்னும் சில ஓவியங்களோடு அடுத்தப் பகுதியில்…

– ஜீவ.கரிகாலன்

************************************************************

ஜீவ.கரிகாலன் –   www.kalidasanj.blogspot.in , kaalidossan@gmail.com

நேற்றைய காந்தி

4

( பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைகள் – 01)

நேற்றைய காந்தி

       –   பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

   முதல் பகுதி

  gandhij

தன்னை உருவாக்கிய கொள்கைகள் பழமைவாதமாக மாறிவிட தற்போதைய இந்தியா அதனுடைய வரலாற்றில் இறந்த போனவற்றின் ஆவிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க அவற்றை ஆற்றுப் படுத்தும் சடங்குகளை தொடர்ந்து செய்த வண்ணம் தன்னுடைய சிந்தனையை வரலாற்றிலிருந்து விடுவித்து அதன் அன்றாடத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைக்க விரும்புகிறது.

காந்தியின் பிறந்தநாள் அப்படி ஓர் ஆற்றுப்படுத்தும் சடங்கு.

ஒரு தேசம் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப தனது iconகளை மாற்றிக் கொள்ளும். சமீப காலங்களில் எல்லைகள் கடந்த iconகளையும் ஏற்றுக் கொள்ளும் சமூகமாக இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு சிந்தனையும் அதன் காலம் கடந்தபின் தூக்கிப் புதைக்க வேண்டிய உயிரற்ற சுமையாகிறது. சமூகக் கூட்டு மனதிலும், பொருள் உற்பத்தியிலும் (வளங்களை கட்டுப்பாடின்றி சுரண்டுதல்) வெளிப்படும் abusive nature வளர்ச்சி என்னும் கருத்தோடு இணைந்து செல்லும் சமகால இந்திய வாழ்வில் எதிலும் கட்டுப்பாட்டையும், தியாகத்தையும் வலியுறுத்திய ஒரு சிந்தனை பழமைவாதமாகவும், கடந்தகாலத்திற்கு உரிய ஒன்றாகவும் ஆதல் தவிர்க்க முடியாமல் ஆகும் பட்சத்தில் அந்தச் சிந்தனையின் துரதிஷ்டம் சுதந்திர இந்தியாவை உருவாக்கி அளித்த மூலச்சிந்தனைகளில் பிரதானமாக இருப்பது.

அதனாலேயே முதலில் கடந்து போக வேண்டிய ஒன்றாகவும் ஆனது. காந்தியத்தை சுதந்திர இந்தியா கடந்து போவதின் குறியீட்டு நிகழ்வின் உச்சங்களை WallMartன் நுழைவிற்கு எல்லா நுழைவாயில்களையும் திறந்துவிட நினைக்கும் பொருளாதாரக் கொள்கைகளும், பிரதமாரகத் துடிக்கும் மத அடிப்படைவாதியான மோடியின் மீதான கவனத்தையும் உடனடி உதாரணங்களாகச் சொல்ல முடியும்.  இந்த இரண்டு நிகழ்வுகளும் காந்திய சொல்லாடல்களுக்கு எதிரானவை. காலனியாதிக்க விடுதலைக்குப் பிறகு இந்திய சமூகம் எப்படித் திகழ வேண்டும் என காந்தி சிந்தித்தாரோ அதற்கு எதிராக வெகு தூரம் வந்துவிட்டோம்.

பொருளியல் தளத்தில் நினைவுக்கு வரும் இன்னொரு குறியீடு கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதியளிக்கும் திட்டத்திற்கு சூட்டப்பட்ட காந்தியின் பெயர். நகர்ப்புற மேம்பாட்டிற்கு ஜவகர்லால் நேருவை பெயரைச் சூட்டினர்.  இதன்வழி நேருவை நவீனத்தோடும் காந்தி பழமையோடும் தொடர்புடைய சிந்தனைப் போக்குகள் கொண்டவர்கள் என்பதனை வெளிப்படையாக பிரித்தல் நடந்தது. ”தங்கநாற்கர” சாலை அமைத்து இந்தியா ”ஒளிர்கிறது” என பெருமிதம் கொண்டவர்கள் தங்களது திட்டங்களுக்கு பெயர்வைக்க “கோல்வால்கரையோ”, “சியாமபிரசாத் முகர்ஜியையோ” உபயோகிக்காமல் இருந்ததின் பின்னால் நோக்கச் சுத்தத்திற்கு வாய்ப்பில்லை, மாறாக மையநீரோட்டத்தில் அவர்களது பங்கு ஏற்றுக் கொள்ளப்படாது என அறிந்திருந்ததே.

சமகால இந்தியாவின் சொல்லாடல்களில் அனைத்து மட்டங்களிலும் முன்னுரிமை கொடுக்கப்படும் பொருளாதார “வளர்ச்சி”யின் வழிகள் அனைத்துமே காந்தியத்திற்கு எதிரானவையாக இருக்க இன்றைக்கு காந்தியின் இடம் எதுவென விவாதிப்பது ஒரு பிரதிக்கான விசயமேயன்றி இந்திய சமூக, பொருளியல் வாழ்வின் நடப்போடு தொடர்புடைய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் பிளவுண்டுவிட்ட இரு சமூகங்களின் குணாம்சங்களை வரையறுக்க முனைந்தால் முதலாவதும், அதிகாரம் செலுத்துவதுமான சமூகம், உலகோடு தகவல் தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்ட, தனது மூலதனத்தை மின்னணுச் சாதனங்களில் ஒளிரும் புள்ளிகளில் கணக்கிட்டுக் கொள்கிற, பொருட்களின், சேவைகளின் பெருக்கத்தினால் தன் முன் குவிந்திருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளில் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிற, சமூக பங்களிப்பை, கூட்டுச் செயல்பாட்டை மறுதலிக்கிற தன் மீதே ஓயாது அக்கறை கொள்ளும் மன அமைப்பையும் கொண்டது.

இரண்டாவது மேற்சொன்னதின் வளர்ச்சிக்கு தனது வளங்களை வழங்குவதும், அதிகாரம் செலுத்தும் பிரிவிற்காக தனது வாழ்வெளியை இழப்பதுமான இரண்டாம் சமூகப் பிரிவு. நிலத்தை SEZகளுக்காக இழக்கும் விவசாயிகளும், வளங்களுக்காக காடுகளை இழக்கும் பழங்குடிகளையும் சொல்லலாம்.  இதற்கு வெளியே சிறப்புக் கவனத்தோடு வினையாற்றப்படுவது மதச் சிறுபான்மையினர் குறித்தது, இந்த இரு பிரிவுகளிலும் காந்தியின் இடம் என்ன என்பதை எளிதல் அறிந்து கொள்ள முடியும். முதலாவது பிரிவில் காந்தி நினைவுக்கும் வரத் தேவையில்லாத ஒருவர். காந்தியிடமிருந்து மேலாண்மைக்கான சிந்தனைகளை எடுத்துக் கொள்வது இந்தப் பிரிவினரின் மத்தியில் நிகழ்ந்தது. அவரது நேரந் தவறாமை, முடிவுகளில் உறுதியாக இருப்பது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வது, தேவைப்படும் போது சமரசத்தை ஒரு உத்தியாகப் பயன்படுத்துவது போன்றவற்றை மேலாண்மைத் துறைகளில் இருப்பவர்கள் வேண்டுமானால் பின்பற்றலாம். எல்லை கடந்த iconஆக திகழும் ஸ்டீவ் ஜாப்ஸை பின்பற்றத்தக்க உதாரணமாகக் கொண்டவர்கள் காந்தியின் பெயரை அறிந்திருப்பதே பெரிய விசயம்.

இந்தச் சமூகப் பிரிவுதான் 21ம் நூற்றாண்டில் இந்தியாவை வழிநடத்துகிற, ஆதிக்கம் செலுத்துகிற விசையாக பொருளாதார வளர்ச்சி மட்டுமே நோக்கமாகவும் மற்றவை அனைத்தும் அந்த வளர்ச்சிக்கு ஏதுசெய்வதாக மட்டுமே இருக்க வேண்டுமேயன்றி அதற்கு எதிரானதாக இருக்கக் கூடாது என விரும்பும் சமூகம். காந்திய பொருளுற்பத்தி முறையை இப்பிரிவு பழமைவாதத்தில் மட்டும் சேர்க்காது மாறாக அப்படி ஒன்று இருப்பதின் தடத்தையே அழிக்க முனையும்.  இந்த வகையிலும் காந்திய பொருளாதார சிந்தனைகள் இப்பிரிவினருக்கு சவால் விடும் விசையாக இல்லாமல் சில பத்தாண்டுகள் முன்பே காணாமல் போய்விட்டது.

இரண்டாம் சமூகப் பிரிவு முதலாவதை எதிர்க்கும் வல்லமையை மெதுவாக இழந்து இடப்பெயர்வின் மூலம் தனது நினைவுகளை அழித்துக் கொள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. வாழ்வெளிகளுக்கான போராட்ட வடிவங்களை இடதுசாரி வழியி்ல் மேற்கொண்டாலும், காந்திய வழியில் மேற்கொண்டாலும் முடிவு ஒன்றுதான். காந்தியத்தால் உயிரிழப்பு மிச்சமாகுமே ஒழிய உடைமையிழப்பும், வெளியிழப்பும் நிகழவே செய்யும்.

கொல்லும் நாஜிக்களின் முன் யூதர்கள் தங்களை தத்தம் செய்துகொள்ள வேண்டும் என்றார் காந்தி.  அப்படி நடந்திருந்தால் இலட்சக்கணக்கான இயேசு கிறிஸ்துக்கள் கிடைத்திருப்பார்கள். வாழ்வெளியை இழந்து கொண்டிருக்கும்  இந்தியச் சமூகத்தில் உருவாகிவிட்ட இரண்டாம் சமூகப் பிரிவினரை காந்தி நிச்சயம் தத்தம் செய்துகொள்ளச் சொல்ல வாய்ப்பில்லை. அதற்கு இடம் கொடுத்தால் காந்தியத்தின் கட்டுமானமே காணாமல் போய்விடும். மாறாக இந்த அதிகாரங்களை எதிர்க்கவே சொல்லியிருப்பார் கோடிக்கணக்கான காந்திகளை உருவாக்கும் நோக்கத்தில்.

காந்தியச் சொல்லாடல்களில் ஒன்றான கிராமப் பொருளாதாரத்தை இனி ஒருபோதும் பழமைவாத, காலத்திற்கு ஒவ்வாத அடையாளம் கிடைத்துவிடும் என்பதனாலேயே ஒரு இயக்கமாகக் கூட வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க வாய்ப்பில்லை.

உலகு முழுதும் அதிகார எதிர்ப்பரசியல் ஆயுத போராட்டத்தின் வழியாக மட்டுமின்றி காந்திய வழியிலும் நிகழ்த்த முடியாத வண்ணம் உலகளாவிய அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால் ஆயுதப் போராட்டம் அதன் ஈர்ப்பை இழந்து விட்ட தருணத்தில் காந்திய வழி அகிம்சைப் போராட்டங்களுக்கு கவனம் கூடியுள்ளது.  இதனை பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு மார்க்ஸின் மீது கவனம் குவிந்ததோடு ஒப்பிடலாம் (உயிர்த்தெழுதல்களின் மீதான ஆர்வம்). அப்படி நிகழும் போராட்டங்களுக்கு ஒருவேளை கிடைக்கும்.  “அனைவருக்குமான பங்கில்” கூட ராயர்களுக்கு உரியது ராயர்களுக்கு போயே சேரும். அவர்கள் பார்த்து ஏதாவது அளித்தால் ஜனங்களுக்கு உரியதல்ல குறைந்தபட்சம் மீதமாவது கிடைக்கும்.

 

(தொடரும்………)

– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

 

bala

 

———————————————————————————————-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

வலைப்பூ :

மின்னஞ்சல் :

  •         tweet2bala@gmail.com

அகரமுதல்வன் கவிதைகள்

10
ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தப்தி
ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி

அஞ்சற்க

1.

எந்த மண்ணும் சொந்தமானதாயில்லை
சொந்தமான மண் என்னிடமில்லை
படுகொலைக் களத்தில்
பூர்வகுடிகளை ஆயுதங்கள் அடிமையாக்க
அட்டூழியமான பிரபஞ்சம் ஏவறை விடுகிறது
புலப்படாத மலை அட்டையென
ரகசியமாய் ஊர்ந்து
இரத்தம் பருகுகிறது இரக்கமற்ற காலம்
என்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட
இன்பங்கள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளில்
குரூர வலியையும் வெறுமையையும்
போரில் தோண்டிய
பதுங்குகுழியில் மறைத்து வைத்து
அழிக்கப்பட்டவற்றை கட்டியெழுப்ப
முனைகிறேன்
வெளிப்படையாகச் சொன்னால்
குருட்டு இராச்சியம்
என் கண்களுக்கு ஒளியெனத் தெரியாது
மீண்டும்
பருமனான எனது தேசம் நோக்கி நடந்து
மகிழ்வாக வீழலாம்.
 

2.
துயரங்களுக்கு சொந்தமான
தீவொன்றில் பிறந்தது பற்றி
கவிதையெழுதுவது
தனது இதயத்தைதானே சுடுவதேயாகும்
அல்லது கண்களை பிதுக்கி தின்பதுபோல
மரண விரல்கள் மேயும்
ஏதுமில்லா சூனிய வெளியில்
பரவி வீழும் எறிகணையிலிருந்தும்
உடல் பிரிக்கும் தோட்டாக்களிலிருந்தும்
தப்பிப்பது பற்றி சிந்திக்கும்
குருதி தவிர வேறேதும் கண்டிராத
புதைகுழி வாழ்வின் பூரண மடியில்
பரவி வீழும் நீதியின்மைகள்
இரக்கக் கீற்றுகளற்று
தொடர் யுகக் கொலை நிகழ்த்தும்
புரியாத மரண சமிக்ஞை
லாடங்களில் படர
நாடோடிக் குதிரைகளென
எங்கெனும் வாழப் பழகி
குழம்படிக் காயங்களோடு
இருண்ட எல்லை நோக்கி
விரைந்து
டொலருக்குள் மறைகிறோம்
இதனால் தான்
கவிதையில் தொடரும் அமைதிக்குள்
தொடர்ந்து முற்றும் வன்மத்தினால்
ஒரு மரண ஓசை ஒலிக்கிறது
எனக்கானதாகவும்
என் பிள்ளைகளுக்கானதாகவும்.

3.
இந்தக் கவிதை
தலைகீழாக தொங்கியபடி எழுதப்பட்டது
நீங்கள் நினைப்பது போன்ற
தலைகீழானது அல்ல
மிகத்துவக்கத்தில்
என் மூத்தோனின் கண்களை
தரையில் சிதைத்த வன்மம்
வதையின் கூடாரத்திற்கு
வெள்ளை வான் ஒன்றில்
என்னைக் கடத்தியிருந்தது
ரத்த நெடில் வீசும்
மானுட வதையின் கூடாரத்தில்
சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பி
மூக்கின் துவாரங்களிற்குள் புகுத்தப்பட்டு
என்னை உயிரோடு புதைத்துக்கொண்டிருக்க
எலும்புகளையும் நரம்புகளையும்
மொழிபெயர்க்கவியலாத கவிதைகளுக்கு உரமாக்கி
வௌவால் வடிவில் தொங்கியிறக்கிறேன்
போரில் தொலைத்த பிள்ளையை
தேடியலைந்து
களைப்புற்ற பறவையாகி
வீடு போய் சேருகிற
அம்மாவைத் தவிர
நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பற்றது
தேசத்திற்கான ஜீவிதத்தையும் அந்திமத்தையும்.

4.
எமக்கென வரைந்த அனுகூலங்களில்
போர்கள் பிரகடனமாவது தவிர
வாழ்வு வேறொன்றும் பரிசளித்ததில்லை
வெளிச்சம் ஓடிப் பதுங்கிய ராத்திரியொன்றில்
மனிதமற்ற ஆயுதங்கள் முன் நகர
பனங்குத்திகளின் காப்போடு
மோசமான காலங்களை தகர்த்திருந்தான்
போர்க்களத்தில் எனது அண்ணன்
அவனது மரணத்தை மிஞ்சி
களத்தில் நேராது எந்தச் சோகமும்
தேச உணர்ச்சியின் அபரிமிதத்தால்
விழுப்புண்களை
தன்னுடலில் உலவவிட்டு
தேச வரமொன்றை வேண்டியிருந்தான்
கனவுத் தடாகத்தின் பாசிச் சேற்றில்
வழுக்கி வீழ சித்தமின்றி
என்னைக் குழைத்து இரவில் பூசி
அஞ்சற்கவென்று
அவனை நகலெடுத்து விரைகிறேன்
மனவெளியில் விரியும் போர்க்களத்திற்கு.

அகரமுதல்வன்

 

குறிப்பு: ஈழக்கவிஞரான அகரமுதல்வனின் முதல் கவிதைத் தொகுப்பு “அத்தருணத்தில் பகை வீழ்த்தி” இந்த வருடம் 2013ல் வெளி வந்தது. இப்படைப்பிறகாக செயந்தனின் படைப்பிலக்கிய விருதும், சிறந்த தமிழ் கலை இலக்கிய கலைஞர்கள் விருதும் கிடைத்துள்ளது.

ப்ச்…!

2

12

 

 

 

 

 

 

 

 

 

 

“அவளுக்கு முன்னெத்தியில, சைடுல கொஞ்சம் முடி விழும். அதப் புடிச்சி விரலுக்குள்ள சுத்திக்கிட்டே இருப்பா!!”.

யாருமில்ல.. நான் மட்டும் தான் பக்கத்துல இருக்கேன்னா, கம்மல் போடுற இடமிருக்குல காதுல, அத மெதுவா வருடிட்டே இருப்பா.

சும்மா இரும்மான்னு சொல்லிட்டா, உடனே மூஞ்சத் தூக்கி வச்சிட்டு கீழக் குனிஞ்சி கண்ண மூடிக்குவா.

இடது கையக் கோத்துக்கிட்டு நடக்கறது தான் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

ராத்திரினா கைய முன்னாடியும் பின்னாடியும் வீசி நடக்கனும்.

பகல்ல வலது கை விரல, என் விரலுக்குள்ள கோத்துக்கிட்டு…
இடது கையால மொழங்கை பக்கமா இறுக்கிப் புடிச்சிப்பா.

“சில நேரம் என் வேகத்துக்கு நடப்பா, சில நேரம் மெதுவா நடப்பா.
அவளுக்கு சிரிக்க மட்டும் தான் தெரியும்.”

“சந்தைக்குப் போயிட்டு திரும்பும்போது, அவ கைல எப்பையும் ஒரு முட்டைகோஸ் இருக்கும் / இருக்கணும்.  ஒவ்வொரு லேயரா எடுத்து எடுத்து சாப்டுட்டே இருப்பா. அப்ப மட்டும் கையப் புடிச்சி நடக்கிறத விடுவா.
ஆட்டுக்குட்டி எதும் பின்னாடி வந்துச்சினா, அதுக்கு ஒரு லேயர் குடுத்துட்டு அதுக்கு ஒரு பேரும் வச்சிட்டு வருவா”.

ஆடு கழுத்துல மணி கிடந்து, அது தலையாட்டும் போது வரச் சத்தம் ரொம்பப் புடிக்கும்.

‘ குல்பி ஐஸ் வண்டிக்காரன் நிப்பான்ல…அது வரைக்கும் நடந்துட்டு வருவுமா? ‘ னு கொஞ்சினா..“முரண்டுப் புடிச்சு, அப்றம் தலைய மட்டும் அசைப்பா.”

ஐஸ்-ல பறக்கும் ஆவியை சைக்கிள்ல கட்டியிருக்கும் சின்ன டியூப் வெளிச்சத்துல அவளுக்குப் பாக்க பிடிக்கும்.

அந்த நேரம் பாத்து எப் எம்ல, அவ மனசுல பதிஞ்ச பாட்டு எதும் ஓடினா, அது முடியிற வரைக்கும் அங்கயே நிக்கச் சொல்லிட்டு குல்பி ஐஸ்காரனையும் போகவிடமாட்டா.

அதுக்கு அப்றம் அவனுக்கு பத்தோ இருவதோ குடுக்கணும்.

ஒருவாட்டி..

‘எனக்கு ஒன்ன மாதிரி இப்டி இப்டி கட்ட முடில, நீள ஸ்கர்ட் வாங்கிக்குடு’ னா..

வாங்கிக் குடுத்தா, படிக்கட்டுல நடக்க முடியாம கால் தெத்திக்கும்.
படியப் பாத்துக்கிட்டு அங்கயே நிப்பா.

அதுக்குள்ள நகம் புல்லா சுண்ணாம்பு ஆயிடும். எதையாவது நகத்தால சுவத்துல எழுத ட்ரை பண்ணுவா.
ஆனா, பேனா குடுத்தா புடிக்கக்கூட வராது அவளுக்கு.

அப்றம் ஸ்கர்ட்ட மடிச்சிக் கட்டிவிட்டா, நொண்டி விளையாடுற மாதிரி ஒவ்வொரு காலா தூக்கி வச்சி வீடு வந்து சேருவா.

அவளும் அவ அம்மாவும் மாடில நொண்டியடிச்சி, ஓடிப் புடிச்சி எப்பயோ விளையாடுனது. அது மட்டுந்தேன் அவளுக்குள்ள ஞாவம் இருக்கு.

”எப்பவுமே, படில நடக்கும்போது அப்டிதான் எதயோ சொல்லிக்கிட்டே இருப்பா.!!”

மொட்டமாடில போயி துணிக் காயப் போடுறதுனா அவ்ளோ இஷ்டம்.
சட்டைய மூஞ்சிக்கு முன்னாடிதான் உதறணும்னு அடம் பிடிப்பா. அந்தச் சாரல் முகத்துல பட்டா குதிச்சிக்கிட்டே கைத் தட்டுவா.

‘இங்க பாரு உன் முடியும் பறக்குது’ -னு… என் தலமுடி புல்லா க்ளிப் மாட்டி விட்டுடுவா.

இப்பல்லாம் என்ன அப்பானு கூப்டுறதே இல்ல.
நீ,வா,போ…. தான்!

வானம், மரம்,
மேகம், கிளை,
நிலா, பழம்,
அணில் கொறிக்கிறது.

அம்மாவாசை அன்னைக்கு மட்டும், இப்டி எதாவது கதை சொன்னாத்தான் சாப்ட வைக்கவே முடியும்.

கூடப் படிச்ச எட்டாங்கிளாஸ் புள்ளைங்கள ரோட்ல பாத்தா மட்டும்..
அந்தப் புள்ளைங்களப் பாத்துட்டு அப்டியே கொஞ்ச நேரம் நின்னுட்டு..

”அம்மா எங்க..?” -னு கேட்டு.. அழ ஆரம்பிச்சிடுவா.

ரெண்டு வருசம் மூச்சப் புடிச்சிட்டு இருந்தாலும்…
அம்மா எங்கன்னு கேக்குறது.. மூச்சப் புடிச்சி நிறுத்துறது மாதிரியே இருக்கும்.

இதுக்காகவே போன மாசம் வீடு மாறுனேன்.

புது எடம் எல்லாம் பாத்துட்டு என்னத்தையோ பறிக்கொடுத்த மாதிரியே இருக்றது உயிர் போற அளவுக்கு வலிச்சாலும்..

அம்மா எங்கனு கேக்காம இருக்காளேனு கொஞ்சம் ஆறுதலா இருந்தேன்.

ஆனா –

மொத தடவையா கொஞ்சம் சுய நெனவோட பேசினா…

‘ போ.. உனக்கு அம்மா மாதிரி சரியாவே வச்சிவிட தெரில, தொடையெல்லாம் வடியுது..’

ப்ச்…!

 

– ரமேஷ் ரக்‌ஷன்

 

 

அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்

0

அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் – யாழன் ஆதி
————————————————
masterpiece

கணிப்பின் புள்ளிகளைத் தாண்டிச் சுழலும் ஒரு படைப்பின் இயங்குதளத்தை அதன் கர்த்தாவே உணராத வேறொரு கோணத்தையும் வேறொரு வடிவத்தையும் பார்வையாளருக்கோ வாசகருக்கோ உணர்த்துவதும் அவரை படைப்பின் இன்னொரு பங்குதாரராக மாற்றி அதை அவருக்கானதாக்கிக் கொடுத்துவிடுவதோ எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால் இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் அப்படிப்பட்ட ஆளுமைகள் தொடர்கிறார்கள். அவர்களின் மூலம் கலைத் தன்னுடைய மாய எதார்த்தங்களை அடைந்து அவர்களிடமிருந்துப் பிரிந்து ஒரு பறவைக் குஞ்சைப் போல பல இடங்களை அடைந்து இறுதியில் தனக்கான ஓரிடத்தை அவை பெற்றுவிடுகின்றன.

மனித வலிகளையும் அவர்களின் அகம் சார்ந்த இச்சைகளையும் அவர்களின் அறம் கூடிய கனமான வாழ்வின் உன்னதங்களையும் ஒரு நொடியில் உறைய வைக்கும் ஆற்றல் கலையின் அடர்ந்த தன்மைக்கும் அதன் இருண்மைக்கும் உண்டு. இருண்மையை வேண்டுமென்றே உருவாக்காமல் அது உருவாகும் தருணத்திற்காய் காத்திருந்து அதில் தன்னிலைகளையும் சமூக நிலைகளையும் குழைத்து உருவாக்கப்படும் எழுத்துப் பிரதியோ ஓவியமோ காலத்தின் மாறுதல்களோடே மாறுதல்களை அடைந்து அது தன் ஒளியை வீசுவதாகவே இருக்கிறது என்பது எப்போதும் கலையின் இயங்கியலில் சாத்தியமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அத்தகைய சாத்திய கலை வடிவங்கள் சிறுபத்திரிக்கைச் சார்ந்தோ அல்லது சிறுக்குழுக்களாக இயங்கியோ வளர்கின்றன. உருவாக்கப்படுகின்றன. அவை புறச்சூழலை நோக்கி வருகையில் மீள் உருவாக்கங்களும் மீட்டெடுத்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒரு கலை வடிவத்தை இன்றைய சிறுபத்திரிகைகள் பல வற்றில் ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி காண முடிகிறது.

ஞானப்பிரகாசம் ஸ்தபதி தன் ஓவியங்களில் பயன்படுத்துகிற இருளும் ஒளியும் மிகவும் நேர்த்தியான ஒரு சிற்பியின் தன்மையில் வெளிப்படுகிறது. அதனால் அவரின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் பல சிற்பத்தன்மையை வீசுகின்றனவாக இருக்கின்றன. கலையில் புதுமரபாக அது வாய்த்திருக்கிறது.

அவர் பயன்படுத்தும் கோடுகள் எல்லாம் அவற்றின் புதிய அவதாரமாக அவரால் அதிகற்பனையில் சொல்ல முடிகிறது. உலகின் எல்லாப் பொருட்களும் இயற்கையாக மனிதப் பயன்பாட்டிற்குத்தான் என்னும் படைப்பின் ஆதாரத் தத்துவம் அல்லது இயற்கையின் மூலம் என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி பல ஓவியங்களில் உணர முடிகிறது. எந்த உருவங்களை அவர் தன் ஓவியப் பிரதியில் வரைந்தாலும் அது எங்காவது மனிதருடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது என்பது என்னுடைய அவதானம்.

மனிதர்கள் அற்ற கலையின் பயன் எதுவுமில்லை. மனிதர்களின் பிரதிபலிப்பாக ஞானப்பிரகாசம் ஸ்தபதி உருவாக்கும் ஒவியங்கள் சொல்லப்படும் கருத்துகளுக்கானது மட்டுமல்ல அதையும் தாண்டி அந்த ஓவியங்கள் பேசப்படுவனாக இருக்கின்றன. சமீப காலங்களில் வெளிவந்திருக்கிற அவரின் ஓவியங்களைக் காணுகையில் கவிதைக்களுக்கானதும் கதைகளுக்கானதும் என்றில்லாமல் அது தன்னியல்பாக இன்னொரு பரிமாணத்தில் இயங்குகின்ற ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.

அவரின் வாழ்வுப் புரிதலும் வாழ்க்கையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அவநம்பிக்கை சக மனிதனை அவர் பார்க்கும் பார்வை அதிலிருந்து அவருக்குக் கிடைக்கும் தரிசனங்கள் இவற்றைக் குழைத்து அவர் ஒரு கவிதைக்காய் வரையும் ஓவியம் கவிதையைத் தாண்டி பல சிந்தனைகளைத் தூண்டுகின்றனவாக இருக்கின்றன.

அவரின் கோட்டோவியங்கள் எல்லாம் மெல்லியதும் தடிமனானதுமானக் கோடுகளால் ஆனவை. அவற்றின் வேறுபாடு, அவற்றிற்கிடையே அவர் வைக்கும் இடைவெளி ஆகியவை ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை அடைவதற்கு ஏதுவானதாக இருக்கிறது.

கோட்டோவியங்களை அவர் உருவாக்கும் பாணியை அவர் கண்டடைந்து உள்ளார் என்பதை அவரின் ஓவியங்களிலிருந்து அறியலாம். நிழலிருந்து வெளிச்சத்திற்கும் வெளிச்சத்திலிருந்து நிழலுக்கும் ஊடு பாவும் ஒரு தாவல் நிலையில் அவருடைய கோட்டோவியங்கள் அமைந்திருக்கும். சமீபத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் எழுத்தாளுமைகளின் கோட்டோவியங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

நவீன உருவங்களை உருவாக்குவதில் கூட அவருக்கென தனி வழியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி இருண்மைகளாலும் ஒளிர்மைகளாலும் அதீதம் காட்டும் ஓவியக்கலைஞன் என்பதாகும்.

-யாழன் ஆதிஞானப்பிராகசம் ஸ்தபதியின் - Self portrait

தீ உறங்கும் காடு – வாசகப் பார்வை

0

ஒரு வாசகனாக என்று சொல்வதை விட ஒரு ஆண் வாசகனாக இது போன்ற கவிதைகள் குறித்து எழுதுவது அல்லது பதிவது ஒரு அகமகிழ்வைத் தருகிறது. ஏனென்றால் பெரும்பாலும் நான் வாசிக்கின்ற கவிதைகளில் அல்லது எழுத முயற்சி செய்கின்ற கவிதைகளில் எல்லாம் கள்ளச்சிரிப்போடு மறைந்து செல்பவளாகவும், காதலில் தோற்று வாடுவதை கண்டு கொள்ளாதவளாகவும் அல்லது இன்னொருத்தவனிடம் போய் ஆப்பிள் கேட்பவளாகவும் பெரும்பாலும் அவள் இருந்து வருகிறாள். ஒரு ஆணின் தகிப்பை, தனிமையை, காமத்தை தாண்டி, ஒரு பெண்ணின் காதலை அவள் தனிமையை, தகிப்பை, படர்க்கையை, ஆற்றாமையை, நம்பிக்கையை, காமத்தினைக் காணக் கிடைப்பது புதிதானது இல்லை, அது சங்க காலத்தின் அக இலக்கியங்களில் விரவி இருந்தாலும். இன்றைய மொழியில் தன் காதலை நுட்பமாகக் கட்டமைத்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

அது என்ன நுட்பமாக என்று கேட்கிறீர்களா?? சக்திஜோதி தன் காதலை கட்டமைத்திருக்கும் விதமாக நான் காண்பது இயற்கையின் வடிவங்களைத் தான் நுட்பம் என்று சொல்ல வருகிறேன், எளிமையாக அவர் கவிதைத் தொகுதிகளின் தலைப்பினையே அதற்கு எ.கா-ஆக சொல்லலாம். முதல் கவிதையில் வரும் கடல் பயணத்தில் தெரியும் நீல வண்ணம் யாவுமே காமத்தின் குறியீடாகத் தென்படுகிறது, இது நவீன ஓவியங்களில் வெறும் வண்ணங்களை மட்டுமே பயன் படுத்தி கோடுகள் தேவைப்படாத சித்திரங்களின் நீல வண்ணச் செய்தியை ஒத்திருக்கிறது.

// அந்தக் கப்பல் நீலக் கடல் மேல், நீல வானத்திற்குக் கீழ்
மிதந்துக் கொண்டிருந்தது
  நான் மீண்டும் நிலம் சேரலாம்,
அல்லது கடலில் மூழ்கலாம்
நீல வானை மிதந்தும் கடக்கலாம்

 எதனையும் அறியாமல் அவன் பெயரைஉச்சரித்தபடி
மன அறை புகுந்து துயிலத் துவங்கினேன்// இங்கேயே கவிதை வலியை தந்துவிட்டு நிறைவாகிறதாக எனக்குத் தோன்றினாலும் இன்னும் நீண்டு அவள் துஞ்சிய பின்னும் கவிதையில் மிதந்து கொண்டிருக்கிறது கப்பல்.
//கப்பல் மிதந்தவாறு இருந்தது
காமம் மிதந்த உடலென//…..

//ஒற்றைச் சொல்// எனும் கவிதையில் ஒரு சொல்லுக்காக ஏங்கும் தனிமையின் வாதை எனக்கு பரிதாபம் தரவில்லை மாறாக அவள் மீது மையல் கொள்ளச் செய்கிறது. இருந்தாலும் என்னாலும் அவ்வளவு விலையுயர்ந்த அல்லது விலைமதிப்பற்ற சொல்லை தேடிக் கண்டுபிடிக்க முடியுமா ? என்பதும் தெரியவில்லை.

//இப்போதும் நான் விரும்பும் ஒற்றைச் சொல்லை நீ சொல்வாயெனில்
அச்சொல்லில்
தேவதைகளும் பேரழகிகளும் கரைந்து போக ஆவாரம்பூ மாலையென் உன கழுத்தை அலங்கரிப்பேன்//

ஒரு கவிதையில் மீன் பிடிக்கிறார், அது சிறிய வண்ண மீன் பின்னர் அதைச் சமைக்க முற்படுகிறார். (வண்ண மீன்களை சமைப்பதா?? வண்ண மீன்களை சமையல் செய்யும் இவர் உண்மையில் அசைவம் உண்பவரா, இல்லை புதிதாகக் கற்றுக் கொண்டவரா??. எல்லாவகை புலால் உண்ணும் சமுதாயங்களுக்கும் புலால் உண்ணக் கூடாத நாட்கள் என்கிற பட்டியல் வரும், அது என்னமோ தெரியவில்லை நான் கண்டவரை வீட்டிற்குத் தெரியாமல் புலால் உண்ணும் சைவமான்களுக்குத் தான் வரைமுறையே கிடையாது)

இக்கவிதையின் இறுதியில்

// அந்தச் சிறிய மீன் உயிர் நீங்கும் போது மன்றாடவே இல்லை,
அது சுதந்திரத்தை என்னிடம் தந்துவிட்டு கனவுகளோடு ஆற்றில்
கரைந்துக் கொண்டிருக்கிறது//

அது காதலின் மிக உயரிய ஒப்புமையாக கையாளப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். நம் தனிமையில் நினைவுகளாக நீந்தும் மீன் கூட அப்படி வந்தது தான். இந்தக் கொலைக்கு எல்லாம் பாவக் கணக்கு வந்துவிடாது என்பதும் என் முடிவு.

இத்தொகுப்பில் வரும் “அவன்” அநேகமாக அவன் ஒருவன் தான், அவன் அவளோடு சேர்ந்து, பழகி, தழுவி, முத்தமிட்டு, வினையின் காரணமாக பிரிந்து செல்கிறான். அவனுக்காக இவள் காத்திருக்கிறாள், ஏங்குகிறாள், நினைவில் பூரித்துக் கொள்கிறாள், தீரா நெருப்பில் தகிக்கிறாள். ஆனால் இவள் என்பவள் ஒருத்தி மட்டுமில்லை, அவள் இந்தக் கவிஞராக இருக்கிறாள், நாளை காதலிக்கப் போகும் சிறுமியாக, கரிசல் மண் தேவதையாக, மலைவாழ் கொடிச்சியாக, நெய்தல் நிலத்து சக்தியாக, நிலாவைப் பார்க்கிறாள், போதாமையில் வாழ்கிறாள், நீந்திக் கொண்டே இருக்கிறாள். கவிஞர் எத்தனைப் பெண்களின் சாயலில் இருந்து பார்த்தாலும் அவள் பார்வையில் ஒருவன் தான் தென்படுகிறான். அதனால் தான் இங்கு அவன் எந்தப் பெண்ணையும் பாலியல் சித்திரவதை செய்யவில்லை, ஏமாற்ற வில்லை, பெண் என்று பரிகசிக்கவில்லை, அடிமைப் படுத்தவில்லை, பயந்தும் ஓடவில்லை.

ஏன் காதலை மட்டுமே தன் இயங்கு தளமாக பெரும்பான்மையான கவிதைகளில் வைத்திருக்கிறார் என்ற கேள்வியைக் கேட்கவே எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் ஐரோம் சர்மிளாவை சாட்சிக்கு அழைக்கிறேன் ஐரோம் சர்மிளாவின் அரசியல், போராட்டம், கொள்கைக்கு பொது எதிரியாக ஒரு சக்தி வாய்ந்த அணி இருக்கின்றது, ஆனால் அவர் அணியில் இருக்கும் சகாக்களே அவர் காதலுக்கு எதிரியாக இருப்பதை கொள்கை சார்ந்த விஷயமாக நியாயம் கற்பிக்க முடியாது அல்லவா?? அது டெஸ்மாண்ட் கூட்டின்ஹோவின்(desmond coutinho) தவறென்றும் கூற முடியாது. காதலில் வீழ்ந்தது தான் மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் முதல் படி, அதை பைபிள் கூட ஒத்துக் கொள்கிறது.

//நதி நீரில் நீந்திக் கடல் சேர்ந்தேன்
கடலில் நீத்திக் கொண்டே இருந்தேன் – அது பெரும் ரகசியம்
கண்டேன் காணவும் இல்லை// இப்படி அவர் காதலின் ஆழம் மெரினா ட்ரென்ச் போல் உள்ளே சென்று கொண்டிருக்கிறது. பின்னே எப்படி ஒரு வாசகனாக அவள் மீது மையல் கொள்ளாமல் இருக்க முடியும், இல்லை குறுக்கு வழியில் நான் என்னை அவனாக நினைத்தும் பார்க்கிறேன். இது பெரும் காதல் கதை தான், ஆனால் அவள் நாஸ்தென்கா போல் குழம்பி, குலைந்து நமக்கு வலி தருபவளும் அல்ல, ஸ்திரமாய் இருக்கிறாள் ஒரு கட்டத்தில் சொல்லாத வார்த்தைகளின் துயரில், பெண்ணின் பிரதிநிதியாக தன்னை பார்க்கின்றாள். அப்பொழுது சொல்கிறாள்.

//பல வேளைகளில் இந்த ஆணை ஏன் சுமக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
என் இருப்பை விரும்பாத ஆணை, என்னைச் சுமக்க விரும்பாத ஆணை
நான் விலக்கிடவே விரும்புகிறேன்//

பொதுவாக இந்தக் கவிதைத் தொகுப்பில் பல பெண் முகங்களில் தோன்றினாலும் மேற்சொன்ன ஒரு கவிதை தவிர ஒரு பெண்ணின் பிரதிநிதியாக தன் குரலை அவர் மற்ற கவிதைகளில் கொடுக்கவில்லையே என்ற கேள்வி எழலாம். தன் வாழ்க்கையில் அவர் சமூக செயற்பாட்டாளராய் இருந்தும், அதுவும் கிராமங்களில் தன் பணியினை பெரும்பாலும் செய்து வ்ந்தாலும், அவர் தொடர்ந்து காதல் கவிதைகள் எழுதுவதால் ஏன் தன் படைப்புகளில் தன்னை ஒரு பெண் சமூகத்தின் பிரதிநிதியாக நிறுத்திக் கொள்ளவில்லை எனும் விமர்சனம் எழுந்து கொண்டு தான் இருக்கும். ஆனால், என் பார்வை இதை அவர் தன் குடும்ப அமைப்பில் இருந்தே எடுத்துக் கொண்டு கையாள்கிறார் என்று சொல்லத் தோன்ருகிறது, ஒரு சிறுமி என்று சொல்வதற்கு பதிலாய் தன் மகள் என்கிறாள்.

   வலியின் ரகசியம்

என்னைப் போலவே
என் மகளும்

எனக்கு எப்படியோ
அப்படியே அவளுக்கும் வலி துவங்குகிறது
என்றாலும்
அவளுக்கு இந்த வலி
ஒரு ரகசியம் என்று தெரியாது

அவளிடம் நானும் கூடச் சொல்லிக் கொள்வதில்லை
என் தாய்
என்னிடம் சொல்லிக் கொள்ளாத
ரகசியத்தின் வலியை
தாங்கவே இயலவில்லை

என் மகள் அயர்ந்து உறங்குவதைக் காண்கையில்
அவள் வயதில்
நானும் இவ்விதம்
தளர்ந்து உறங்கிய நாட்களில்
என் தாயும் கசிந்திருக்கலாம்
அவளின் தாய் போலவே

நானும் இந்த வயதில்
அவ்வளவையும் தாங்கிக் கொள்கிறேன்
இந்த ஜீவிதத்தின் பொருட்டு

என் மகள் உறங்குகுகிறாள்
என்னைப் போலவே
வலியின் ரகசியங்களோடு
அதனை அறியாதபடி.

நிற்க. இக்கவிதையில் கவிஞர், யாரையும் blame செய்யவில்லை, தாங்கிக் கொள்கிறாள் ஜீவிதத்தின் பொருட்டு  இது அவள வலிமையைக் காட்டுகிறது, அதே சமயம் இந்த இடரினை, வலியினை அவள் ரகசியமாகவே காண்கிறாள் , அவளிடம் பகுத்துப் பார்க்கும் அறிவிருக்கிற்து –ஆனால் திறக்கப்படா பேழையாகவே பார்ப்பதை விரும்பாமல் விரும்புகிறாள். அது தான் அவளது வலிமை.

Madness is divine – Ignorance is beauty என்று சொல்வார்கள்

கவிதைக்கும் கூட Madness ஒரு பார்வையாக உதவுகிறது, ஆனால் இந்த தொகுப்பில் கவிஞர் அதற்கு இடம் கொடுக்கவில்லை, பேதமை என்பதை பெண்ணின் கருப்பொருளாக சொல்லி வந்ததாலோ என்னவோ மிகத் தெளிவாக இரண்டிலும் இருந்து விலகியே இருக்கிறார். இந்த அம்சம் குறித்து நான் கண்ணுறும் போது இத் தொகுப்பு ஒரு நிறைவைத் தருகிறது என்பது உண்மை.

மேற்சொன்ன அந்தக் கவிதையில், உண்மையில் யாரோ ஒரு சிறுமியினையும் தன் மகளாகப் பார்த்திருக்கலாம், அவருக்கு மகளும் இருக்கிறார், ஆனால் பிரச்சினை முன் வைக்கப்படுகிறது அது தான் பிரதானம்.

சென்னை எனும் நகர் தன்னை நீட்டிப் பெருக்கும் பூகோள வசதியைப் பெற்றிருக்கிறது. நாளை விழுப்புரம் கூட சென்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம்.இருந்து விட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா? தன்னை இப்படி விரிவு படுத்த முடியாத கொல்கத்தா, மற்றும் பழைய மும்பை நகரங்களின் குடும்ப வாழ்வும், சென்னையின் குடும்ப வாழ்விற்குமான வித்தியாசம் உங்களுக்குப் புலப்படுகிறதா?? அந்நகரங்களில் இருக்கும் குடும்பங்களுடைய நபர்களுடைய எண்ணிக்கையும், சென்னையின் நுயூக்ளியர் குடும்ப அமைப்பாக இருப்பதற்கே வாய்ப்பு இருப்பதில் வித்தியாசம் புலனாகிறது அல்லவா!! அப்படியென்றால் அவர்களின் (கொல்கத்தா போன்ற நகர வாழ் மக்களின்) வாழ்க்கைத் தரம், நுகர்வுப் பண்பு, விழாக்கள், காதல், காமம், பொருளாதாரம், நெருக்கடி என்ற அளவில் எனறெல்லாம் வித்தியாசம் வருமல்லவா? இங்கே சென்னையில் தான் மூன்று பேருக்கு மேல் ஒன்றாக வாழ்வது என்பது நெருக்கடியான வாழ்க்கையாக மாறிவிட்டது போன்ற மாயை இருக்கிரது, ஆனால் சற்று தொலைவில் உள்ள நகரங்களிலோ ஒன்றாக இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வரை சேர்ந்து வாழ்வது புத்திசாலித்தனமான அல்லது பொருளாதாரச் சமரசத்திற்கான அணுகுமுறையாக நடுத்தர வர்கத்தில் கருதப்படுகிறது. இது மாறாத நமது குடும்ப அமைப்பு என்று எடுத்துக் கொண்டாலும் சரி தான். இல்லை புதிய வழிமுறை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு இடத்தில், குடும்பங்களாலேயே நமக்கு இடைஞ்சல், பிரச்சினை, உடைத்து வர வேண்டிய நாகரிக, அறிவின் நிர்பந்தம் ஏற்படுகிறது என்றும் சொல்லலாம். வேறு ஒரு இடத்தில், அதே குடும்பங்களால் மற்ற நெருக்கடிகளில் இருந்து, வாழ்வியல் சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்கும் சமுதாய, பொருளாதார மற்றும் சூழலியல் நன்மைக்கான நவீன யுக்தியாகக் கூட குடும்பங்களின் அமைப்பு உதவுகிறது என்று சொல்லும் புதிய/பழைய பார்வைகள் உலகமயமாக்கலுக்கு மாற்றாக ஒலிக்கின்றது (மேலை நாடுகளிலும் கூட). ஒரே கோட்பாட்டை மேற்கோளிட்டு இங்கு ஏன் நீ நிற்கவில்லை (அமைப்பினை உடைத்து) என்று ஒரு நவீனவாதி சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த வகையில் Old wine in new bottle தான் இந்த தொகுப்பு….

 

– ஜீவ.கரிகாலன்