ம. பாரத்
திட்டம் தயார்!
நாளைக்கு என் நெற்றி முழுவதும் திருநீறு பூசுவேன்; வட்டமான சந்தனத்தை நடுவில் வைத்துக்கொள்வேன். தொலைவதற்கு முன்பு, அனைவரையும் இறுதியாக அணைத்துக்கொள்வேன். யாருடைய அழுகையெல்லாம் முடிந்துபோயிற்றோ, யாருக்கெல்லாம் பதற்றம் தீர்ந்துபோயிற்றோ மீண்டும் அதற்கெல்லாம் உயிர்தர நான் முயற்சி செய்வேன்.
முடிந்தவரையில், எதிர்காலமொன்றில் உங்களைச் சந்திப்பேன். அதுவரையில் நான், என்னுடைய தடயத்தை அதிர்ச்சியோடு விட்டுச் செல்வேன்.
- பிறழ் நாவலில் நிஜந்தன்
கடந்த ஏப்ரல் 12 இரவு 11 மணி போல நிஜந்தனின் உறவினர் இருவரை மருத்துவர் அழைப்பதாக வாசலில் காத்திருந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அது கோவை அரசு மருத்துவமனையின் ஐ சி யூ பிரிவு. 99 சதவீதம் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்ததால் அனைவருக்குமே அதீத பதற்றம். ஜெயசீலனும் பார்த்திபனும் உள்ளே சென்றனர். அப்போது நிஜந்தனுக்கு CPR கொடுத்து கொண்டிருந்தனர். கடந்த சில மணி நேரங்களில் நான்கு முறை CPR கொடுத்து விட்டோம் என்றும் இனி கஷ்டம் என்றும் மருத்துவர்கள் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் சொல்வது புரிந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஜெயசீலன் மருத்துவர்களிடம் நிஜந்தனைப் பற்றி புலம்பியபடி இருந்தார். “நெறய படிப்பான் டாக்டர். புக்ஸா படிப்பான். நெறயா புக்ஸ் படிச்சி படிச்சே இப்படி ஆகிட்டான் டாக்டர்” எனப் புலம்பியபடியே இருந்தான். நிஜந்தனின் மரணத்திற்கு ஏதோ ஒருவகையில் அவனது அதீத வாசிப்பே காரணம் என ஜெயசீலன் நம்பினான்.
ஆம், நிஜந்தனை பலருக்கும் ஒரு நல்ல வாசகனாகதான் அறிமுகம். அவனது நண்பர்கள் குழுவில் பலர் அவனை அப்படியானவனாகத் தான் அறிமுகம் செய்வதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நல்ல வாசகனாக அவன் அவனை தக்க வைத்துக் கொள்ள பல போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நடுத்தர குடும்பத்தின் மனநிலையில் “இப்படி கத புத்தகமெல்லாம் காசு கொடுத்து வாங்கி படிக்கணுமா நிஜந்தா” எனப் புலம்பல்களாக ஆரம்பித்து, “புத்தகத்தை எல்லாம் தூக்கி வீசிவிடுவேன்” என கோப வார்த்தைகள் வரை நீண்டிருக்கின்றன.
பின் நாட்களில் மனநோயின் பிடியில் அவன் சிக்கி உழன்ற நேரங்களில், அந்தப் போராட்டம் இன்னமும் அதிகமானது. மருத்துவர்களின் பரிந்துரையின்படி திரைப்படங்களையும், புத்தகங்களையும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது. சில நாட்கள் அமைதியாக இருந்தான். நண்பர்களின் அழைப்புகளின் போது, “என்னால படிக்க முடியல, படம் பார்க்க முடியல” என புலம்பியபடி இருப்பான். அப்போதும் தான் முன்பு வாசித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களோடு உரையாடியபடியே இருந்தான்.
தொடர்ந்த சிகிச்சையில் மருத்துவர்களின் அனுமதியோடு மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான். ஆனாலும் சோகம் கொள்ளச் செய்கிற, மனதைக் கனக்கச் செய்கிற எதையும் வாசிக்க கூடாது என்பது நிபந்தனை. அப்படியான புத்தகங்களை தேர்வு செய்து வாசித்தான். அப்படியாக தொடர்ந்த வாசிப்பு அவனது விருப்பமான புத்தகங்களையும் வாசிக்க வழி செய்தது. அ-புனைவுகள், அரசியல், புனைவுகள் என அவனது வாசிப்புப் பட்டியல் மிகப் பெரியது.
தொடர்ச்சியான மருந்துகளும், ஷாக் ட்ரீட்மென்ட்டும் அவனுக்கு அதிகமான ஞாபக மறதியை ஏற்படுத்தியது. வாசித்த புத்தகமெல்லாம் மறந்துவிட்டது. பிடித்த புத்தகங்களை எல்லாம் திரும்பவும் வாசித்தான். திரும்பத் திரும்ப வாசித்தான். அப்படியான வாசிப்பு சோர்வை தரவில்லையா என கேட்டால், “ஒவ்வொரு முறையும் அப்புனைவுலகில் புதிதாக பிரவேசிக்க முடிகிறது” என உற்சாகமாக பதில் சொல்லுவான்.
வாசிப்பின் வழியாகவே நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறான். எளிய குடும்பத்திற்கான மருத்துவ உதவிகள் பலவும் நிஜந்தன் என்னும் வாசகனுக்கு கிடைத்தது. பல புத்தகங்களையும் நண்பர்கள் அனுப்பினர். அப்படியாக புத்தகங்கள் கொரியரில் வருகிற நேரங்களில் உற்சாகமாக இருப்பான். அவனை சந்திக்கிற அனைவருக்கும் புத்தகங்கள் மேல் ஆர்வம்கொள்ளச் செய்யும் அவனது பேச்சு. அவனது கைப்பேசி அழைப்புகள் பலவும், பல மணிநேரங்களாக புத்தகம் சார்ந்த உரையாடல்களாகவே இருக்கும்.
தன் அன்றாட நாளை மனிதன் எதிர்காலத்தை வைத்தே கடத்துகிறான். ஆனால் நிஜந்தன் தன் இறந்த காலத்தின் மனவேதனைகளை இலக்கியத்தில் தொலைத்து, அந்த நொடி வாழ தனக்குப் பிடித்தமான ஒரு வாழ்வை புனைவுகளின் உதவியோடு தேர்ந்து கொண்டான்.
ஒவ்வொரு முறையும் மருத்துவத்திற்காக வெளியூர் செல்லும் நேரங்களில் பயண காலத்திற்கேற்ப அத்தனை புத்தகங்களைத் தூக்கி செல்பவன், அத்தனையையும் படித்து முடித்து, நண்பர்களிடம் புத்தங்களை அனுப்ப சொல்லி படித்துக் கொண்டிருப்பான். பா. வெங்கடேசன், மண்ட்டோ, ஷோபா சக்தி, கோபிகிருஷ்ணன், ஜெ. பிரான்சிஸ் கிருபா, ஜெயமோகன் என அவனுக்கு விருப்பமான எழுத்தாளர்கள் பலர். விசித்திரத் தோட்டம் நாவலை திரும்பத் திரும்ப வாசித்தவன், கன்னி நாவலின் பாண்டியை கடைசி வரையும் நினைவு கூர்ந்தபடியிருந்தான். மனரீதியான பாதிப்புகளின் போதெல்லாம் பாண்டியுடன் அவன் தன்னைப் பொருத்தியிருக்க கூடும். கன்னி நாவலின் தாக்கம் பிறழ் நாவலில் அதிகமிருப்பதையும் உணர முடியும். ஆனாலும் பாண்டியைப் போல முழுவதும் தன்னுலகில் மட்டும் மூழ்கிவிடமால், தன்னைப்பற்றியும் சமூகத்தைப் பற்றிய மிகத் தெளிவான கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தான்.
புத்தகங்கள் மட்டுமில்லாது தொடர்ந்து எழுதியும் கொண்டிருந்தான். நக்கலைட்ஸ் சேனலில் பல கான்செப்ட் எழுதியிருக்கிறான். அவனது எழுத்தில் வெளிவந்த Back to School நிறைய பாராட்டுகளைப் பெற்றது. நக்கலைட்ஸ் சேனலின் நண்பர்கள் அவன் தொடர்ந்து எழுத ஊக்கப் படுத்தியபடி இருப்பார்கள். நண்பர் மித்துனுடன் இணைந்து திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதவும் தொடர்ந்த உரையாடலில் இருந்த நிஜந்தனுக்கு, நடிகர் ஷோபாவின் வாழ்வைத் திரைக்கதையாக்க மிகுந்த ஆசையிருந்தது. அதற்கான முன்தயாரிப்புகளில் சில நாட்களாக தன்னை ஈடுபடுத்தி, அவனளவில் பெரும் தேடலில் தன்னைத் தொலைத்து இருந்தான்.
பிறழ் நாவல் வெளிவருகிற தயாரிப்புகளில் இருக்கும்போதும், வெளிவந்த போதும் உற்சாக மிகுதியோடு இருந்தவன், சென்னை புத்தகக் காட்சியின்போது நிகழ்ந்த வெளியீட்டில் நிறைய நண்பர்களை சந்தித்தபடி சந்தோசமானவனாய் இருந்தான்.
(வீட்டிற்கு எதிரிலிருந்த மரத்தடியை காம்யூ தோட்டம் என அவன் பெயரிட்ட) வீட்டிற்கு வெளியே இருக்கிற சக்கரைப்பழ மரத்தின்கீழ் நாற்காலி போட்டு அமர்ந்தபடி இன்றும் அவன் வாசித்து கொண்டிருப்பதுபோல இருக்கிறது. என்னுடைய தம்பி என்பதெல்லாம் தாண்டி, ஒரு வாசகனாக அவனிடம் கற்றுக் கொள்ள எனக்கு நிறைய இருக்கிறது. ஒரு வாசகன் என்பதாக தன்னை அடையாளம் கொள்ளவே அவனும் விரும்புவான்.
(கட்டுரையாக்க உதவி: ரதியழகன் பார்த்திபன்)
ம. பாரத் – நிஜந்தனின் உடன்பிறந்த அண்ணன். கோயம்பத்தூரில் Tax practitioner ஆக உள்ளர். மின்னஞ்சல்: manobharath30@gmail.com

