ரூபன் சிவராஜா
(ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பாகம் 16)
தொடரின் இந்தப் பகுதி, உலகமயமாக்கல் குறித்து Boal கொண்டிருந்த கருத்தியலை முன்வைக்கிறது. உலகமயமாக்கலின் பெரும் விளைவினைக் கலாச்சார அழிப்பாக அவர் காண்கிறார். கலைச் செயற்பாடுகள் வழியாக உலகமயமாக்கலின் சீரழிவுகளுக்கு எதிர்வினை ஆற்ற முடியும் என்றும் அவர் வாதிடுகின்றார். உலகமயமாக்கலும் சந்தை சக்திகளும் ஒரே மாதிரியான தன்மையை (Homogenization – ஒருமுகமாக்கல்) கட்டாயப்படுத்துகின்றன. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான தயாரிப்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வெளிப்பாடுகளை உலகமயமாக்கல் உருவாக்குகின்றது. இது உள்ளூர் மொழிகள், கலைகள், வெளிப்பாட்டு வடிவங்கள் மற்றும் தனித்துவங்களைப் (அடையாளங்களை) பலவீனப்படுத்துகிறது. கலாச்சாரம் ஒரு வணிகப் பொருளாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. வணிக நோக்கங்களே கலையின் வகிபாகத்தையும் வடிவத்தையும், கலைக்கான ஆதரவு நிலைப்பாடுகளையும் தீர்மானிக்கின்றன.
நாடகம்: சமூகத்தின் கண்ணாடி, மாற்றத்திற்கான பயிற்சிக் கருவி
உண்மையான பண்பாடும் விடுதலையும் ஒற்றைப் பரிமாணத்திற்கு (ஆதிக்கக் குரலுக்கு) எதிரான உரையாடலை (பல குரல்கள்) அவசியமாக்குகின்றன என்பதை அகுஸ்ரூ போலின் சிந்தனை வலியுறுத்தப்படுகிறது. மக்கள் செயலற்ற நுகர்வோராக இருப்பதைத் தவிர்த்து, சுறுசுறுப்பான படைப்பாளர்களாக மாற வேண்டும் என்கிறார். நாடகம் முதன்மையான ஊடகமாக விவரிக்கப்படுகிறது. அது மனிதச் செயற்பாடுகளை காலம், இடம்சார் அடிப்படையில் ஒழுங்கமைக்கிறது. மட்டுமல்லாமல் சமூகத்தின் ஒரு ‘கண்ணாடியாகவும்’ மாற்றத்தைப் பயிற்சி செய்வதற்கான ‘கருவியாகவும்’ செயற்படக்கூடியது. பார்வையாளர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இல்லாமல், கதையின் போக்கிற்குள் நுழைந்து அதை மாற்றியமைக்கும் ‘பங்குபெறும் பார்வையாளர்களாக – ‘ஆற்றுகைப் பார்வையாளர்களாக’’ (spect-actors) மாற வேண்டும். உலகமயமாக்கலானது மானிடப் பண்பாட்டினை ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. கலையைப் பொருளாக மாற்றுகிறது. நாடகம், கலைகளின் ஊடாக உரையாடலையும் விழிப்புணர்வையும் உருவாக்கி, பார்வையாளர்களைச் செயலில் ஈடுபடும் பங்கேற்பாளர்களாக மாற்றமுடியும். அதாவது நாடகம் எதிர்ப்பிற்கும் சமூக மாற்றத்திற்குமான நடைமுறைப் பயிற்சியாகக் கொள்ளத்தக்க வடிவமாகும்.
மேலும் தொடரின் இப்பகுதி, அதிகாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றோடு நாடகம் எப்போதும் பிணைக்கப்பட்டிருந்திருக்கிறது என்பதைப் பேசுகின்றது. வரலாற்றுப் பின்னணிகளையும் (முக்கியமாக கிரேக்க நாடகம், அரிஸ்டோட்டில், ஃபிளேட்டோ மற்றும் பிரெக்ட் நாடகம் குறித்து முன்வைத்த கோட்பாடுகள்) கோடிட்டுக் காட்டுகிறது.
உலகமயமாக்கலினதும் இலாபமீட்டலினதும் மேலாண்மைக்கு உட்பட்டிருக்கும் உலகில் மானிட அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான அளப்பெரும் வலிமைமிகு கருவியாகக் கலை உள்ளது. அதிகார மையங்களின் சுரண்டல், மனித இயல்பு மற்றும் கலை எவ்வாறு விடுதலையின் கருவியாக மாறுகிறது என்பதையும் விபரிக்கின்றார். ‘வாழ்க்கை மரணத்தின் மீதுதான் வாழ்கிறது’ என்ற தத்துவப் பேருண்மையை அவர் உடைத்துப் பேசுகிறார். பூமியில் பலமானவை பலவீனமானவற்றை உணவாக்கிக் கொள்கின்றன. மனிதன் இன்னும் அந்தக் கொடூரமான, அறமற்ற வேட்டையாடும் குணத்திலிருந்து விடுபடவில்லை. நாம் இன்னும் நம்மை முழுமையாக ‘மனிதனாக’ மாற்றிக்கொள்ளவில்லை. நாம் வெறும் கழுத்துப்பட்டி(வநை) கட்டிய காட்டுமிராண்டிகளே என்கிறார் Boal.
நற்பண்பும், கூட்டுணர்வும் இயற்கையில் தன்னியல்பாக உருவாகுவதில்லை. அவை மனிதக் கண்டுபிடிப்புகள். நமது காட்டுமிராண்டித்தனமான இயல்பிலிருந்து விடுபட்டு, பிணைப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்த வேண்டிய கருவியே ‘பண்பாடு’ (Culture). உலகமயமாக்கல் மனிதர்களின் நலவாழ்வு, கல்வி, அறிவியல் மேம்பாட்டினை முன்னேற்றும் பொருட்டு இருந்திருந்தால் அதன் முதன்மை ஆதரவாளனாகத் தான் இருந்திருப்பேன், ஆனால் அது இலாப வேட்டையையே அது தனது முதன்மை இலக்காகக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தினை முன்வைக்கிறார். இன்றைய சர்வதேசப் பொருளாதார உறவுகளை அவர் ‘வேட்டையாடும்’ போக்காகவே பார்க்கிறார்.
அனைத்தையும் ஒருமுகப்படுத்துதலின் ஆபத்து
உலகமயமாக்கல் மனிதர்களை ஒரே மாதிரியாக ஆக்குவதை (Homogenization) வற்புறுத்துகிறது. நாம் அனைவரும் ஒரே மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும், ஒரே ஹாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டும், ஒரே விதமான நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அது கட்டாயப்படுத்துகிறது. பண்பாட்டு ஏகாதிபத்தியமாக அது வளர்க்கப்படுகிறது. உலகமயமாக்கல்வாதிகள் தமது உற்பத்திகளை விற்கவேண்டுமென்றால், முதலில் உள்ளூர் மற்றும் தேசிய அடையாளங்களை அழிக்க வேண்டும். திரையரங்குகள் நமக்குப் பொருட்கள் மற்றும் நெறிமுறைகளைத் திணிக்கும் ‘கடை விரிப்புகளாக’ (Show windows) மாறி, நமது அடையாளங்களைச் சிதைக்கின்றன.
உலகமயமாக்கலும் தனியார்மயமாக்கலும் கலையையும் பண்பாட்டினையும் சந்தைவிதிகளாற் கட்டுப்படுத்துகின்றன. அதாவது ஜனரஞ்சக மதிப்பு (PR value) அல்லது உற்பத்தி இணைப்புகளாக (Product associations) மாற்ற முடியாத அம்சங்கள் இருத்தலியல் (Extistens) சவால்களுக்கு உட்படுகின்றன. கலைக்கான நிதியுதவி, பொதுத்துறை ஆதரவிலிருந்து (Public patronage) நிறுவன அனுசரணைக்கு மாறும்போது, எந்த மாதிரியான கலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மறைமுக அதிகாரத்தைப் பொருளாதார அமைப்புகள் பெறுகின்றன. ஒரு வணிக முத்திரைக்குப் (Brand) ‘பொருந்தாத’ கலைக் கருப்பொருள்களும் கலைத்துவப் பரிசோதனைகளும் வடிகட்டப்படுகின்றன. கலை திடுமென அழிக்கப்படாவிட்டாலும், கலையின் படைப்பாக்க வளங்கள் மெல்ல மெல்ல வற்றிப்போக வைக்கப்படுவதன் மூலம் அது மெல்ல மெல்ல இறந்துவிடுகிறது. ஒரே மாதிரியான வணிகக் கதைசொல்லல் முறைகளும் பொழுதுபோக்கு வடிவங்களும் (தொலைக்காட்சி, கருப்பொருள்சார் கேளிக்கைப் பூங்கா – Theme park ‘டிஸ்னி மயமாக்கல்’) பரவி வெவ்வேறு இடங்களின் அனுபவங்கள் பொதுமைப்படுத்தப்பட்ட அனுபவங்களாக நிலைகொள்ளச் செய்யப்படுகின்றன. ஒரேமாதியானவற்றைப் பழக்கப்படுத்துவதன் ஊடாக உலகமயமாக்கலின் சுவை (Globalization’s Taste) ஆழமாகப் பதியவைக்கப்படுகின்றது.
அரசியலில் கலையும் கலையின் அரசியலும்
அரசியற் கட்சி என்பது உயிர்ப்பு மிகு சமூகக்கூட்டின் திரட்சியாக இருக்க வேண்டும் என்று டீழயட வலியுறுத்துகிறார். கட்சியில் கருத்து வேறுபாடுகள் நிலவினும் பொதுஇலக்கு அனைவரையும் ஒன்றிணைக்கின்றது. எந்த வழியிற் பயணிப்பது என்பதில் கருத்து முரண்பாடுகள் இருப்பினும் அவர்கள் ஒரு திசையில் நகர்கிறார்கள். அரசியல் என்பது முன்தீர்மானிக்கப்பட்ட தீர்வுகளை பின்பற்றுவதல்ல. விவாதங்களின் கருத்தியற் சிந்தனைகளின் மூலம் அரசியல் உருவாகிறது. ஜனநாயகம் என்பது தலைவர்கள் அல்லது கட்சிகளை மட்டுமின்றி முழுச் சமூகத்தையும் உள்ளடக்கியதாகச் செய்யற்பட் வேண்டும். ஜனநாயகத்தின் பேரில் ஆட்சி குழுக்கள் மாறி மாறி அதிகாரத்தில் இருந்தபடி ஒடுக்குமுறை தொடர அனுமதிக்கக் கூடாது. அதாவது ‘ஜனநாயக நடைமுறை’ ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குபவர்களாக மாற்றக் கூடாது. அதிகாரக் கட்டமைப்புகள் எவ்வாறு இருப்பினும் சிவில் சமூகம் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் அவர்களின் உணர்வுகளிலும் இரண்டறக் கலந்துள்ளது.
கலையும் அரசியலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. கலை என்பது மனிதர்கள் யதார்த்தத்தை ஒழுங்குபடுத்தி மீளமைத்து மாற்றும் செயல். இசை மூலம், உருவாக்கங்கள் மூலம், சொற்கள் மூலம் அல்லது செயல் மூலம் ஒழுங்குபடுத்தலும் மீளமைத்தலும் மாற்றம் நோக்கிய செயல்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் படைப்பாற்றல் கொண்டவர்கள். அவர்கள் படைப்புகளை உருவாக்கும் போது உலகையும் தம்மையும் மாற்றுகின்றனர். குறிப்பாக நாடகத்தில் (ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கில்) பார்வையாளர்கள் செயலில் ஈடுபடும் ‘ஆற்றுகைப் பார்வையாளர்கள் (spect-Actors) ஆக மாறுகிறார்கள். அவர்கள் மேடையிற் பிரவேசித்து சம்பவங்களின் போக்கினை மாற்றுகிறார்கள். இது சமூகத்தில் மக்கள் செயலில் ஈடுபட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதன் குறியீடு. மொத்தத்தில் செயலும் படைப்பும் மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் திறவுகோலாகிப் பங்காளிக்கிறது.
விடுதலையின் கருவியாக மொழியும் படிமங்களும். (பொருளிலிருந்து மனிதனாகும் நிலை)
சொற்கள் அதிகாரத்தால் நிரப்பப்பட்டவை. உதாரணமாக ஒரு பணிப்பெண்ணின் பெயர் அதிகார உயரடுக்குகளால் உச்சரிக்கப்படும் போது அந்தப் பெண் மீதான கட்டளையாக-பணிப்பாக வெளிப்படுத்தப்படும். தனது கதையைச் சொல்வதற்காக அந்தப்பெண் தனது பெயரைத் தானே உச்சரிக்கும் போது அல்லது எழுதும்போது, அவர் அந்தச் சொல்லைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்;. இதன் மூலம் அவர் ஒரு ‘பொருளாக’ (Object: The person, place, or thing affected by the action) இருந்த நிலையிலிருந்து ஒரு ‘செயலுக்குரிய மனிதனாக’ (Subject: The person, place, or thing that does the action.) மாறுகிறார். நமது சொந்தப் படிமங்களை (ஓவியம், சிற்பங்கள், ஒளிப்படம், கதை, கவிதை,…) உருவாக்குவதன் மூலம், உலகம் நிலையானது அல்ல என்பதை நாம் நிரூபிக்கிறோம். மாறாக, உலகத்தை மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் முடியுமென்பதை கலைப்படைப்புகள் பிரதிபலிக்கின்றன. நாடகம் கற்றுக்கொள்வதற்கு மட்டுமானது அல்ல, அது ஒரு கூட்டுணர்வோடு நிகழ்த்தப்படுவது. இன்னொருவருக்குக் கற்றுக்கொடுக்கும் போதே மனிதன் உண்மையில் கற்கின்றான். அது அறிவு மற்றும் விழிப்பூட்டல் சார்ந்து ஒரு சுழற்சிவிளைவைத் தருகின்றது. அந்த வகையில் அழகியற் செயற்பாடாக நாடகம் ஆகுகின்றது. மனிதன் ஒரு மந்தமான நுகர்வோனாக (Passive consumer) அன்றி, ஒரு படைப்பாளியாக (Creater) மாற வேண்டும். நமது சொந்தக் கலை வெளிப்பாடுகளை (சொற்கள், உருவகங்கள், ஒலிகள்) நம் உரித்தாக்கிக் கொள்வதன் மூலம், அதிகார வர்க்கத்தின் ‘பண்பாட்டு மயக்கத்திலிருந்து’ (Cultural hypnotism) விடுபட்டு, சந்தை விதிகளுக்குப் பதிலாக மானுட விழுமியங்களால் ஆளப்படும் உலகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
ஷேக்ஸ்பியரின் கூற்றுப்படி, நாடகம் நமது குறைகளையும் நற்குணங்களையும் பார்க்க வைக்கும் ஒரு கண்ணாடி. ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கில் அது ஒரு மாயக் கண்ணாடியாகவும் மாறக்கூடும். அது காட்டும் படிமம் நமக்குப் பிடிக்கவில்லை என்றால், அதற்குள் நுழைந்து அந்தப் படிமத்தை மாற்றிப் பயிற்சி செய்யக்கூடிய கண்ணாடி எம்மிடம் உண்டு. அந்தக் கண்ணாடியில் நாம் நிகழ்காலத்தைப் பார்க்கிறோம், அதேவேளை கனவுகளின் வழியே எதிர்காலத்தை உருவாக்கச் செயற்படுகின்றோம். மாற்றத்திற்கான செயல் தன்னளவில் மாறிக்கொண்டிருக்கின்ற அம்சமாகும். நாம் ஒரு படிமத்தை மாற்றும்போது, நம்மையே மாற்றுகிறோம்; நம்மையே மாற்றும்போது, மீண்டும் நமது உலகையும் மாற்றுகிறோம்.
சுதந்திரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையேயான பதற்றத்திலிருந்து
சுதந்திரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையேயான பதற்றத்திலிருந்து நாடகம் தோன்றியது. கடுமையான, ஒழுக்கமுடைய உழைப்புக் காலங்களுக்குப் பின்னர், சுதந்திரத்தின் வெளிப்பாடாகக் கூடுகை, கொண்டாட்டம், போதை மயக்கம், பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றிற்கான தேவை உருவானது. இந்த தன்னிச்சையான, படைப்பாற்றல்மிக்க சுதந்திரம் வலிமையானதாயிருந்தாலும், அதன் சில அம்சங்கள் அழிவை ஏற்படுத்தக்கூடியனவாகவும் இருந்தன. எனவே அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.
மனிதர்கள் தாங்கள் யார் என்பதையும் எதுவாக மாறும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் ஆராயக்கூடிய ஒரு கூட்டுத்தளமாகவும் விடுதலை உணர்வைப் பெறும் இடமாகவும் நாடகத்தை முன்வைக்கிறன்றார் Boal. ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கில் ஈடுபடுபவர்கள் கதையாக்கிகளாகவும் கதையாக்கப்படுபவர்களுமாக உள்ளனர் (The creators of the story and the subjects of the story itself.). இந்நிலை அவர்கள் தமக்கான புதிய அல்லது முன்னர் இல்லாமலிருந்த வேறொரு எதிர்காலத்தைக் கற்பனை செய்வதற்கான வாய்ப்பினையும் வெளியினையும் அவர்களுக்கு வழங்குகின்றது. நாடகம் ஒரு கண்ணாடியாகச் செயற்படுகிறது. யதார்த்தத்தை மட்டும் பார்ப்பதற்கான கண்ணாடி அல்ல, மாற்றத்தைப் பயிற்சிசெய்வதற்கான ஒரு ‘மாயக் கண்ணாடியாக’ அது உள்ளது. இதனால், பண்பாட்டு உயிர்ப்பு, அடையாளம் மற்றும் எதிர்ப்புக்கான போராட்டத்தின் கருவியாகவும் சமவேளையிற் கலையாகவும் நாடகம் ஆகிறது.
பண்பாட்டு மரணமாக உலகமயமாக்கல் (Globalisation as Cultural Death)
உலகமயமாக்கல் என்பது கலைகளின் தனித்துவத்தைக் கொல்லும் செயல்முறைகளைக் கொண்டுள்ளது. உரையாடல்கள், தனித்துவமான வெளிப்பாடுகளுக்கு மாற்றாக, அனைவரும் ஒரே மாதிரியாகப் பேசவும், சிந்திக்கவும், விரும்பவும் தூண்டும் ஒரு ‘ஏகத்துவ மொழியை’ (Monologue) இந்த அமைப்பு மனிதர்களிடம் திணிக்கிறது. கலைஞன் புதியவற்றைச் சிருஷ்டிக்கும் படைப்பாளி என்ற நிலையிலிருந்து மாற்றப்பட்டு, சந்தைக்காக ஏற்கனவே உள்ள மாதிரிகளை (Models) மீண்டும் மீண்டும் உருவாக்கும் ஒரு ‘நுட்பத் தொழிலாளியாக’ சுருக்கப்படுகிறான். சந்தை என்பது நம்முள் ஒரு ‘விருப்புகளின் செயற்கை உறுப்பைப்’ (Desire-prosthesis) பொருத்துகிறது. இதன் மூலம் நமது உண்மையான தேவைகளை மறந்து, சந்தை உருவாக்கும் செயற்கையான தேவைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
உலகு இரண்டு முரண்பட்ட சித்தாந்தங்களால் வழிநடத்தப்படுவதாக Boalவாதிடுகிறார். முதலாவது மானிடவாதச் சித்தாந்தம். மனிதகுலம் ஒரு பொதுவான அலகு என்றும், பிறப்பு சார் வேறுபாடுகள், வாழ்வுச் சூழல்களுக்கு அப்பால் அனைவருக்கும் சம வாய்ப்புகளை அரசு வழங்க வேண்டுமென்ற நம்பிக்கை மானுடவாதத்தின் (Humanism) ஒரு அடிப்படைச் சிந்தாந்தப்போக்காக உள்ளது. மற்றையது மனித விழுங்கிச் சித்தாந்தம் (Kannibalisme – Modernity) என்கிறார். இதில் வலிமையானவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள பலவீனமானவர்களை (ஏழைகள், வேலையற்றோர், பெண்கள், குழந்தைகள்) சுரண்டுகின்றனர். இறுதியில் இந்த அமைப்பு தன்னையே அழித்துக்கொள்ளும். வலது-இடது என்பது பிரெஞ்சுப் புரட்சிக்குச் சொந்தமான அம்சம் என்றும் அது காலாவதியாகிவிட்ட கருத்தியலென்றும் இந்த மனிதவிழுங்கிச் சித்தாந்த அமைப்புக் கருதுகின்றது. வலதுசாரி-இடதுசாரி என்ற நிலைப்பாடுகளை விட, இப்போது இந்தச் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டமே முக்கியமானது என்கிறார்.
ஒரே குரலை விரும்புகின்ற, நிர்ப்பந்திக்கின்ற உலகமயமாக்கலை எதிர்க்க உரையாடல் அவசியப்படுகிறது. உண்மையான எதிர்ப்பு என்பது ஒற்றைவடிவத்தைக் கொண்டிராமல், புதிய யதார்த்தம் குறித்த ஆசைகளையும் கனவுகளையும் கோரிநிற்பதாகும். நமது விருப்பங்கள், ஆசைகளின் படிமங்களை உருவாக்குவதன் ஊடாக நாம் யார் என்பதை கண்டறிய உதவும் ஒரு சீரமைந்த தனித்துவக் கருவியே அரங்கம் (நாடகம்). ஆசைகள் இல்லையேல் நாம் மனிதர்களாக வாழ்வதன் அர்த்தம் இல்லாமற்போகின்றது.
ஏன் நாடகம் முக்கியமான கருவி?
இசை போன்ற கலைகள் காலத்திற்குள் (Time) ஒலியையும் மௌனத்தையும் முறைப்படுத்துகின்றன. ஓவியம் போன்ற கலைகள் இடத்திற்குள் (Space) வடிவத்தையும் நிறங்களையும் முறைப்படுத்துகின்றன. அதுபோல நாடகம் மனிதச் செயல்களை இடத்திலும் காலத்திலும் ஒழுங்குபடுத்துகிறது. மனிதச் செயல்களை ஒழுங்குபடுத்தும் போது, நாம் எங்கு இருந்தோம், இப்போது எங்கு இருக்கிறோம், எங்கே செல்லப் போகிறோம் என்பதையும்; நாம் யார், எதனை நாம் உணர்கிறோம், எதனை நாம் விரும்புகின்றோம்; என்பதையும் அது வெளிப்படுத்துகிறது. மனிதர்கள் இயந்திரமயமாகுவதை-ஆக்கப்படுவதை எதிர்க்க, கலை மக்கள் வாழும் இடங்களுக்குச் செல்ல வேண்டும் -வீதிகளுக்கு, தொழிற்சங்கங்களுக்கு, குடிசைப் பகுதிகளுக்குச் செல்லவேண்டும் என்று Boal தீவிரமாக வலியுறுத்துகிறார்.
அரிஸ்டோகிரசி
மரபார்ந்த கிரேக்க நாடகத்தின் தொடக்கத்தைப் பற்றிய சமகால உரைகள் (கதையாடல்கள், சுவடிகள்) மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. குறைந்த ஆதாரங்களும் சிதைந்த விவரங்களும் மட்டுமே இருப்பதால், அந்த ஆரம்பங்களை நாம் கற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பண்டைய கிரேக்கத்திலும் உலகின் ஏனைய இடங்களிலும் கடுமையான கூட்டுப் பணிக்குப் பிறகு, மக்கள் கூட்டுழைப்பு மற்றும் உழைப்பொழுக்கத்த்தின் முடிவுப் பொழுதினைச் சுதந்திரமாகக் கொண்டாட விரும்பினர். ஒழுக்கமும் சுதந்திரமும் பிரிக்க முடியாத இரட்டைகள். எப்போதும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டே இருப்பன. எந்தவொரு குழு அடிப்படையிலான செயல்களும் சாத்தியப்பட ஒழுங்கும் ஒழுக்கமும் அவசியம். எல்லாக் கட்டுமானங்களிலும் ஒழுக்கம் கட்டாயமானது. கூட்டுப் பணிக்குத் ஒழுக்கம் அவசியமாக இருந்தாலும், வேலை முடிந்தபின் அது நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் கொண்டாட்டம், சுதந்திரம், சமூக ஒற்றுமை உருவாக முடியும்.
அரிஸ்டோகிரசியானது (உயரடுக்கு ஆட்சி) செல்வந்தர்களும் அதிகாரம் கொண்டவர்களும் சமுதாயத்தின் உயரடுக்கினை உருவாக்கும் ஒரு சமூக அமைப்பாக 1800 இற்கு முன் ஐரோப்பாவில் பரவலாக நிலவிய ஆட்சி வடிவம். ஒழுங்குகள், விதிகள், கவிதை மற்றும் நடன வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் அந்த ஆட்சி முறைப்படுத்தி அமைக்கப்பட்டது. இவ்வாறாகவே சுதந்திரமானதும் குழப்பமுமான வெளிப்பாடு, ‘Dithyrambic song’ எனும் முறைப்படுத்தப்பட்ட கலையாக மாற்றப்பட்டது. அதிலிருந்தே நாடகம் ஒரு தனித்த வடிவமாகவும் நிறுவனமாகவும் உருவெடுத்தது. இது ஒருவகையில் முன்னேற்றமாக இருந்தாலும், சமவேளையில் சுதந்திரத்தின் குறுக்கீடாகவும் இருந்தது. நாடக வரலாறு படைப்பாற்றல் கொண்ட சுதந்திரத்துக்கும் சமூகக் கட்டுப்பாட்டுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டிலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும். மனித வெளிப்பாட்டிற்கும், அதனை ஒழுங்குபடுத்தவுமான கருவி கலையாகும்.
திதிராம்பிக் பாடல் | தியெஸ்பிஸ் | உரையாடல் | நாடகம்
தியெஸ்பிஸ் என்பவர் பொது யுகத்திற்கு முன் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க கவிஞர், ஆற்றுகையாளர். கிரேக்க தொன்ம மரபின்படி, கிரேக்க நாடகத்தின் முதல் நடிகர் தியெஸ்பிஸே எனக் கருதப்படுகிறார். அவர் துன்பியல் நாடகத்தின் (Inventor of tragedy) மூலவர். அவர் குழுப்பாடலின் முக்கிய ஆற்றுகையாளராக இருந்தபோதும் ‘தியெஸ்பிஸ்’ பதிலளிப்பதன் மூலமும், உரைநடையில் பேசுவதன் மூலமும் அரசியல், மதம் மற்றும் சமூகம் குறித்து தனது சொந்த எண்ணங்களை வெளிப்படுத்தினார். இத்தகு எதிர்வினை மூலம் கலைசார்ந்த கூட்டுத் தோற்றத்தை உடைக்கிறார். ஆரம்பத்தில் ஒழுங்கற்றதும் தற்செயலானதும் போலத் தோன்றிய இச்செயல், தனிநபர் எதிர்வினையும் சுயாதீனச் சிந்தனையும் சாத்தியம் என்பதை வெளிப்படுத்தியமையினால், ஆபத்தான கலைவடிவமாக மாறுகிறது. அதாவது ஆபத்தான கலைவடிவமாக அதிகார சக்திகளால் பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் நாடகம் அதன் தொடக்கத்திலிருந்தே கலையாகவும் போராட்டக் கருவியாகவும் விளங்கியது. நாடகம் என்பது சுதந்திரமும் ஒழுங்கும் இடையறாத மோதலில் இயங்கும் ஒரு வெளி;. அதன் அழகியல் வடிவமானது அரசியல் மற்றும் சமூக அதிகார உறவுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாததாக உள்ளது.
திதிராம்பிக் பாடல் என்பது தொன்மக் கிரேக்கத்தில் டியோனிசஸஸ் எனப்பட்ட ‘மதுபானம், பரவசம் மற்றும் மகப்பேறு’ ஆகியவற்றிற்கான கடவுளைப் போற்றிப் பாடப்பட்ட ஒரு குழுப் பாடல் வடிவமாகும். பாடல், இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் கலவை வடிவமாக அது ஆற்றுகைசெய்யப்பட்டது. பொதுவாக சமய விழாக்களில், வட்டக்களரி வடிவில் அமைந்த குழு ஆற்றுகையாக இது நிகழ்த்தப்பட்டது. ஆரம்பத்தில் திதிராம்பிக் ஒரு கட்டற்ற தன்னிச்சையான வடிவமாக இருந்தது. உடல் மற்றும் உணர்வு சார்ந்த சுதந்திரத்தின் வெளிப்பாடாக இருந்தது. காலப்போக்கில், கவிதை, நடன அமைப்பு, மற்றும் நிலையான வடிவங்கள் மூலம் அது ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்த மாற்றம், கிரேக்க துயர்நாடகத்தின் ஒரு முக்கியமான முன்னோடியாகக் கருதப்படுகிறது. சோலோன் என்பவர் பொது யுகத்திற்கு முன் 630இல் பிறந்தவர். ஏதென்ஸ் நகர அரசியல்வாதி, சட்டம் இயற்றுபவராகவும் கவிஞராகவும் குறிப்பிடப்படுகின்றார். அவர் கிரேக்கத்தின் «ஏழு ஞானிகள்» (Seven Sages of Greece) எனப் போற்றப்படுபவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சோலோன், ஏதென்ஸின் அரிஸ்டோகிராசியைக் சேர்ந்தவர்;. குறிப்பாக உயர்குடியினருள் ஒருவராக இருந்தார்.
கிரேக்கத்தில் குழுப்பாடலுக்குப் பதிலளித்துத் தன் சொந்த வார்த்தைகளில் பேசுவதன் மூலம், தியெஸ்பிஸ் நாடகத்தில் முற்றிலும் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தினார். நாடகம் என்பது விளையாட்டு, கற்பனை மற்றும் சாத்தியப்பாடுகளை உள்ளீடாக்கிய அதேவேளை யதார்த்தத்தின் நேரடி நகலாகவும் அல்லாமல், யதார்த்தத்தின் ஒரு படிமமாக வெளிப்பட்டது. இந்தச் செயல் ஆபத்தானதாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் அது அதிகாரப்பூர்வமானதற்கு மாற்றாக வேறொன்றைச் சொல்ல முடியும் என்பதை வெளிப்படுத்தியது. தனிநபர் சிந்தனையும் கருத்து வெளிப்பாடும் சாத்தியம் என்பதை காட்டியது. இதற்கு சோலோன் கவனத்துடனும் அச்சத்துடனும்; எதிர்வினை ஆற்றுகின்றார். குழுப் பாடல் ஆற்றுகைக்கு அப்பால் உரைகளை உருவாக்குவதன் மூலம், ஒவ்வொரு மனிதரும் தன்னியல்பாகச் சிந்தித்து, தமது சொந்த வார்த்தைகளைத் தேர்வு செய்ய முடியும் என்பதை தியெஸ்பிஸ் நிறுவினார். இந்த மாற்றம் ஏலவே கட்டமைக்கப்பட்டிருந்த ஒழுங்கு, நெறிமுறை, அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது.
***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

