Homeஇதழ்கள்2026 இதழ்கள்கலை இலக்கிய விமர்சனம்: தரமதிப்பீட்டைக் கடந்த சமூக அழகியல் நடைமுறை!

கலை இலக்கிய விமர்சனம்: தரமதிப்பீட்டைக் கடந்த சமூக அழகியல் நடைமுறை!

ரூபன் சிவராஜா

டைப்புகளின் வடிவங்கள் எவையாக இருப்பினும், அவை வாசிக்கும் ஒரு புத்தகம் பற்றியோ, பார்க்கும் ஒரு திரைப்படம் பற்றியோ, அரங்கப்படைப்புகள், நாடகங்கள் குறித்தோ, ஓவியங்கள், சிற்பங்கள் பற்றியோ எழுதுவதற்கு அடிப்படையாக அப்படைப்புகள்; மனதில் ஏதேனும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும். அனுபவத்தினைக் கடத்தவேண்டும், அல்லது அவற்றின் பிரதிபலிப்பு கவனத்தை ஈர்ப்பதாக, சமூகப் பயன்பாடு மிக்கதாக, கலைத்துவ அழகியல் மிக்கதாக என அதன் ஏதோ ஒரு படைப்பாக்கக்கூறு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். மனித மனங்களை, வாழ்வை, மனிதர்களுக்கிடையிலான உறவைப் பிரதிபலிக்கவேண்டும். மனிதர்களுக்கும் – சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் – அரசியலுக்கும், மனிதர்களுக்கும் – இயற்கைக்கும், மனிதர்களுக்கும் – உலகத்திற்கும் இடையிலான எனவான ஏதோவொரு உறவு சார்ந்த அம்சங்களைக் கொண்டதாகவும், தாக்கங்களைச் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய அக-புறத் தாக்கங்களுடைய அளவுகோலின் அடிப்படையிலேயே கலை இலக்கியங்கள் சார்ந்த விமர்சனங்கள் எழுதப்படுவதற்கான உந்துதல் ஏற்படுகின்றது.

கலை என்பது மனித மனதின் வெளிப்பாடு, கலை அகம் சார்ந்தது, சுயம் சார்ந்த தேடலோடு தொடர்புடையது. ஒரு மனதை, அதன் உணர்வை இன்னொரு மனதுக்கு புலப்படுத்தும் மொழி. ஆழ்மன உணர்வினைக் கருத்து நிலையுடனும் அழகுத் தன்மையுடனும் சாத்தியமான வடிவங்களைத் தெரிந்தும் புதிதாகக் கண்டடைந்தும் வெளிப்படுத்துவது கலைகளினதும் படைப்பாக்கங்களினதும் அடிப்படை அம்சம் என்றாகின்றது. ஆத்மார்த்தமான ஈடுபாடு, படைப்பாற்றல், மீறல், துணிவு என்பன நல்ல படைப்பாளிக்குரிய அடையாளங்கள்.

கலை இலக்கிய விமர்சனம் என்பது கலையின் தரம், வடிவம், பேசுபொருள், சமகாலப்பொருத்தம், சமூக, வாழ்வியல் பிரதிபலிப்பு ஆகியன குறித்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது. கலை இலக்கிய வரலாற்று அறிவையும் சமகாலக் கலை இலக்கியம் பற்றிய புரிதலையும் அடிப்படையாகக் கொண்டது. அத்தோடு ஆக்ககர்த்தாவின் நோக்கம் (பேசுபொருள்), வெளிப்பாட்டு உத்திகள், படைப்பின் அழகியல், கலைத்துவம், மற்றும் படைப்பாக்கச் செயற்பாட்டின் நோக்கத்தை நிறைவு செய்வதற்கான அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.

அறிமுகம்

இந்த கட்டுரை கலை இலக்கிய விமர்சனத்தின் அடிப்படை இயல்பை ஆராய விழைகிறது. ஒரு படைப்பின் தரத்தை மதிப்பிடுவதற்கு அப்பால் விமர்சனம் எவ்வாறு படைப்பு, வாசகர், விமர்சகர் மற்றும் பொதுவெளி ஆகியவற்றுக்கிடையில் அர்த்தமுள்ள உரையாடல் வெளியினை உருவாக்குகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது. மனித அனுபவத்தில் கலை இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் விமர்சனத்தின் அவசியத்தையும் விவரிக்கிறது. அதற்குத் துணையாக ஐரோப்பிய கலை மற்றும் இலக்கிய விமர்சனத்தின் வரலாறு, அதன் வளர்ச்சி, தரம் குறித்த விவாதங்கள், காலப்பரிமாணம், அழகியல் மதிப்பீடு, விமர்சனத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் சமூகப் பரிமாணம் ஆகியவற்றை ஆராய்கிறது. அதன்பின் கிறிஸ்டோபர் ஜூல்-லார்சன் (Kristoffer Jul-Larsen), போர்தியு (Bourdieu), கந்த் (Kant), ஹாபர்மாஸ் (Habermas) போன்ற சிந்தனையாளர்களின் பார்வைகள் மற்றும் மார்க்சிய இலக்கிய விமர்சன மரபின் கோட்பாட்டுப் பங்களிப்புகள் வழியாக விமர்சனத்தை சமூக, வரலாற்று மற்றும் கலைத்துவ அழகியல் நடைமுறையாகப் புரிந்துகொள்ள முயல்கிறது.

கலை மற்றும் இலக்கிய விமர்சனம் என்பது வெறும் தரமதிப்பீடு மட்டுமல்ல; அது படைப்புக்கும் விமர்சகருக்கும் பொதுவெளிக்கும் இடையில் ஓர் அர்த்தமுள்ள வெளியை அல்லது பிணைப்பினை உருவாக்கும் சமூக மற்றும் அழகியல் நடைமுறையாகும்.

விமர்சனத்தின் வரலாறு: ஒரு சுருக்கம்

ஐரோப்பியக் கலை விமர்சனத்தின் தொடக்கப்புள்ளி மறுமலர்ச்சிக் காலத்தில் (The Renaissance: 1450 – 1600) தோன்றியது. 17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு கலைக் கழகங்களில் (art academies) கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள், பின்னர் கட்டுரைகளாகவும் உரையாடல்களாகவும் இலக்கிய வடிவம் பெற்றன. 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியக் கண்காட்சிகள் (exhibition activity) பொதுவானதாக மாறிய பிறகே, இன்று நாம் அறியும் வழக்கமான கலை விமர்சனம் தோன்றியது. பாரிஸில் 1746 இல் நடந்த கண்காட்சி குறித்து எழுதப்பட்ட லா ஃபான்ட் டி செயின்ட்-யென்னின் (La Font de Saint-Yenne) ‘Réflexions’ என்பதே இவ்வகையிலான முதல் கலை விமர்சனமாகக் கருதப்படுகிறது. பத்திரிகைத்துறையின் வளர்ச்சியால் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கலை விமர்சனம் இலக்கியப் பரப்புகளில் பிரதான இடத்தைப் பிடித்தது. கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு தத்துவார்த்தப் பாலமாக விமர்சகர்கள் செயற்பட்டனர். விமர்சனச் செயற்பாட்டினூடு புதிய கலை வடிவங்களை ஆதரிப்பதிலும் பொதுமக்களின் கருத்துக்களை உருவாக்குவதிலும், கலை இலக்கியங்கள் குறித்த கருத்துருவாக்கங்களிலும் முதன்மையான பங்கினை விமர்சகர்கள் வகிக்கத் தொடங்கினர்.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறிவரும் இலக்கிய முக்கியத்துவம், பெறுமதி குறித்த அளவுகோல்களின் அடிப்படையில், இலக்கியப் படைப்புகளை மதிப்பிடுவதும், ஒப்பிடுவதும், அவற்றின் அழகியல், நுகர்வுச்சுவை குறித்த மதிப்பீடுகளை முன்வைப்பதும் கலை இலக்கிய விமர்சனத்தின் முக்கிய பணி. அவை தருணங்களில் அவற்றின் பயன்பாட்டுப்பெறுமதி சார்ந்த நோக்கங்களான அறிவுசார் பண்படுத்தல், அறிவுத் தேடலை முன்னிறுத்தியதாகவும், வேறு சில தருணங்களில் கட்டமைப்பு, மொழிநடை, வெளிப்பாட்டுச்சீர்மை, படைப்புநேர்த்தி உள்ளிட்ட அழகியல் அளவுகோல்களை முன்னிறுத்தியும் இயங்குகின்றது. புத்தகங்கள் அவற்றின் இலக்கியப் பெறுமதியையும் பேசுபொருளையும் மையமாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. எதன் பொருட்டு, எந்த விளைவு கருதி அவை உருவாயினவோ, அந்தச் சமகாலச் சூழல் மற்றும் சமூக வாழ்வியலுடன் ஒப்புநோக்கியும் புத்தகங்கள் மதிப்பிடப்படுகின்றன.

கலை உலகில் மதிப்பீடு சார்ந்த பொதுச்சொல்லாக ‘தரம்’ விளங்குகின்றது. அதன் அளவுகோல்கள் மாறுபட்டாலும், தரம் எனும் கருத்தாக்கத்திற்கு ஒரு துல்லியமான உள்ளடக்கத்தை வழங்குவது கடினமானது எனும் போதும் மதிப்பீடு, விமர்சனம் என்று வரும்போது குறித்த கலை இலக்கியத்தின் தரம் பற்றிய மதிப்பீடு முக்கியமானது. தரம் என்பது இரண்டு தளங்களில் இயங்குகின்றது. ஒன்று படைப்பின் ஆக்க உத்திகள், கலைத்து அழகியல் கூறுகளின் தரம். மற்றையது கருத்தியல்(பேசுபொருள்) சார்ந்தது.

காலப் பரிமாணம் (Time/Temporal perspective)

சமகால கலையைத் தரமதிப்பீடு செய்வது கடினம் என்கிறார் நோர்வேஜிய கலைத்துறை வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான ஜோருன் வெய்பெர்க் (Jorunn Veiteberg). தரம் குறித்த துல்லியமான ‘தீர்ப்பை’ வழங்குவதற்கான நிபந்தனையாகக் கால இடைவெளி அவசியமாகிறது. இன்று உலகளவில் போற்றப்படும் பல்வேறு உலகக் கலைஞர்கள், படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் (மொனே – Monet), டெகாஸ் – Degas, ரெனுவார் – Renoir) மற்றும் வான்கோ (Van Gogh) தங்களின் சமகாலத்தில் நிராகரிக்கப்பட்டவர்களாக அல்லது கவனிக்கப்படாதவர்களாகவே இருந்தனர் என்பதை அவர் இதற்குச் சான்றாகக் காட்டுகிறார். கலையின் தரத்தினை ஒப்பீட்டு மற்றும் அதன் சமகாலச் சூழலின் அடிப்படையிலேயே மதிப்பிட முடியும் என்று அவர் கருதுகிறார்.

வாழும் காலத்தில் நிராகரிக்கப்பட்ட உன்னத படைப்பாளிகள் பலரை நமது தமிழ்ச் சூழலிலும் நாம் எடுத்துக்காட்டாகக் கூறலாம். பிந்திய உதாரணமாகப் பாரதியை, புலமைப்பித்தனைக் குறிப்பிடலாம். 

மற்றுமோர் கலைத்துறை வரலாற்றாசிரியர் டொம்மி சோர்போ (Tommy Sørbø) ஒரு சாராம்சவாத (essentialist) நிலைப்பாட்டுடன், ‘தரம்’ என்பது படைப்பிற்குள்ளேயே அமைந்திருக்கும் ஓர் உள்ளுறை பண்பாக இருக்க வேண்டும் என்கிறார். கலை என்று அழைக்கப்படும் ஏனையவற்றை கருத்தியல் கலை (conceptual art) என விமர்சிக்கிறார் 

கலையின் ஜனநாயகமயமாக்கலும் சமூகவியல் மாற்றங்களும்

பொதுவாக உலகளவில் 1970கள் வரை, எது நல்ல கலை, எது நல்ல ரசனை என்பது குறித்த பரந்த உடன்பாடு உயரடுக்குக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தால் தீர்மானிக்கப்பட்டது. 1970 களுக்குப் பின் இந்நிலை மாற்றமடையத் தொடங்கியது. கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாகவும் ஜனநாயகப் பண்புடையதாகவும் மாறியதுடன், காலப்போக்கில் பல்வேறு கலை, இசை, இலக்கிய வடிவங்களை உள்ளடக்கியதாக அது விரிவடைந்தது. அதிகமானோர் உயர்கல்வி பெற்று கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்;. அதே நேரத்தில், அவர்கள் பாரம்பரிய முதலாளித்துவ (bourgeois) கலாச்சாரத்திற்கு அப்பால் விரிந்த முன்னுரிமைகளைத் தம்மோடு கொண்டு வந்தனர்.

சமகால விமர்சனங்களில் படைப்பின் அசல் தன்மை (originality), அறிவுசார் அம்சம் மற்றும் பார்வையாளரின் மீது படைப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற அளவுகோல்களே தர நிர்ணய அடிப்படைகளாக இருக்கவேண்டுமென்ற வலுவான பார்வை நிலவுகின்றது. இதனை இன்னொரு வகையில் சொல்வதானால் இன்றைய கலை விமர்சனம் என்பது வெறும் தீர்ப்பு வழங்குவதை விட, கலையுடனான ஊடாட்டத்தை விளக்குவதிலும் கடத்துவதிலும் வியாக்கியானங்களை முன்வைப்பதிலுமே கூடுதல் கவனம் செலுத்துகிறது.

பரந்த தேடலும் அறிதலும் அனுபவத்தின் ஊடாகவும் கலை இலக்கியப் புரிதலை வளர்த்துக்கொள்வது ஒரு விமர்சருக்கு இன்றியமையாததாகும். விமர்சகர் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பது ஏற்புடைய கருத்து அல்ல. ஒரு காற்பந்துப் போட்டியைப் புரிந்துகொள்வதற்கு அதன் விதிகளை அறிந்திருக்க வேண்டியது எத்தகைய அவசியமோ, அதைப் போலவே கலையை மதிப்பிடுவதற்கும் இரசிப்பதற்கும் அறிவும் அனுபவமும் இன்றியமையாதவை ஆகும்.

விமர்சனப் பார்வைகள், கோட்பாடுகள், எல்லைகள்

இலக்கிய விமர்சன ஆய்வுத்துறையில் பல்வேறு வகையான பார்வைகள், கோட்பாடுகள் உள்ளன. இவை நமக்கான சாத்தியப்பாடுகளின் எல்லைகளை (வாய்ப்புகளை) விரிவாக்குகின்றன. பெரும்பாலும் இலக்கிய விமர்சனத்தின் மீதான ஆர்வம், முற்றிலும் நேர்மாறாகத் தோற்றம்காட்டும் இரண்டு பார்வைகளுக்கு இடைப்பட்ட புள்ளியிலேயே வெளிப்படுகிறது. ஆனால், உன்னிப்பாகக் கவனித்தால் அவை ஒன்றையொன்று இட்டுநிரப்புவதைக் கண்டடையலாம். அதாவது அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். சமூகவியல் சார்ந்த அதிகாரப் பார்வையும், முற்றிலும் முறைசார்ந்த/அழகியல் தர நிர்ணயப் பார்வையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட எல்லைக்குட்பட்டவை (deterministic). 

கலை இலக்கிய விமர்சனம் குறித்த ஒரு வரைவிலக்கணத்தை பின்வருமாறு முன்வைக்கின்றார் கிறிஸ்டோபர் ஜூல்-லார்சன் (Kristoffer Jul-Larsen). இவர் மேற்கு நோர்வே அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Western Norway University of Applied Sciences) இலக்கியத்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆசிரியர் கல்வித் திட்டங்களில் இலக்கியம் கற்பித்து வருகிறார். இலக்கியமானது பரந்த பொதுவெளியை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதில் அவர் கவனம் செலுத்துகிறார்;. மேலும் இலக்கிய விமர்சனம் மற்றும் விமர்சனப் பொதுவெளி சார்ந்த ஆய்வுகளோடு, ஓவியக் கலை மற்றும் அல்-புனைவு இலக்கியங்களின் (non-fiction) விமர்சகராகவும் செயற்பட்டு வருகிறார். 

இவர் பின்வரும் விமர்சனக் கோட்பாடுகளை முன்வைக்கின்றார்:

  1. விமர்சனம் ஒரு தனித்துவமான செயற்பாடு (criticism as an autonomous act)
  2. விமர்சனம் என்பது செயலுக்கான ஒரு முரண்பாட்டு வடிவம் (criticism is a paradoxical form of action)
  3. விமர்சனத்தின் இன்றியமையாத இலக்கு, அதன் வெளியை (Space) கட்டமைப்பதாகும். அந்தக் கட்டமைப்பானது இரண்டு அழகியல் உலகங்களை மூன்றாவது ஒன்றிற்குள் கடத்துவதன் (பகிர்வதன்) மூலம் வெளிப்படுகிறது.

இம்மூன்று கோட்பாடுகளையும் அவர் பின்வருமாறு விவரிக்கின்றார். 

கோட்பாடு 1 – விமர்சனம் ஒரு தனித்துவமான செயற்பாடு

விமர்சனம் என்பது வெறும் அதிகாரப் பிரயோகமோ அல்லது வெறும் மதிப்பீட்டுச் செயலோ அல்ல. தனக்கே உரிய பகுத்தறிவைக் கொண்ட ஒரு விமர்சகரால் மேற்கொள்ளப்படும் ஒரு குறிப்பிட்ட செயற்பாடாக, அது அதன் விதிகளின்படி வரையறுக்கப்பட வேண்டும். அந்த விமர்சன உறவே விமர்சனத்தின் பொருள் சார்ந்து (இலக்கியத்தின் தரம்சார் அனுபவத்தை) சிந்திப்பதை சாத்தியமாக்குகிறது.

அதில் அவர் இலக்கிய விமர்சனத்தின் தன்மை மற்றும் இயங்குதளம் பற்றி விவாதிக்கிறார். விமர்சனம் என்றால் என்ன என்பது குறித்த இரண்டு அடிப்படை வேறுபட்ட பார்வைகளை ஒப்பிடுகிறார். இரண்டு எதிரெதிர்க் கண்ணோட்டங்கள் (Two Contrasting Perspectives) அவை.

ஓன்று சமூகவியல் சொல்லாட்சிக் கண்ணோட்டம் (அதிகாரக் கண்ணோட்டம்). மற்றையது அழகியல் (தரம்) கண்ணோட்டம்). சமூகவியற் கண்ணோட்டத்தின் மையக்கருத்தானது விமர்சனம் என்பது நடுநிலையான தரம் சார்ந்தது அல்ல, மாறாக அது அதிகாரம் மற்றும் சமூக நிலையை நிலைநிறுத்துவது சார்ந்தது.இது இலக்கியத்தை ஒரு ‘சமூக ஆற்றல் களமாகப்’ பார்க்கின்ற பிரெஞ்ச் சமூகவியலாளரும் மானுடவியலாளருமான பியர் போர்டியூவின் (Pierre Bourdieu) சமூகவியற் கோட்பாட்டு பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. அழகியற் கண்ணோட்டமானது, தத்துவவியலாளர் இம்மானுவேல் கந்த் (Immanuel Kant) அவர்களின் அழகியற் கோட்பாட்டை இது குறிக்கிறது. விமர்சகர் தனிப்பட்ட அல்லது அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையாகச் செயற்படுதல் என்பது இதன் மைய அணுகுமுறை.

இலக்கிய விமர்சன ஆய்வுத்துறையில் பல்வேறு வகையான பார்வைகள், கோட்பாடுகள் உள்ளன. இவை நமக்கான சாத்தியப்பாடுகளின் எல்லைகளை (வாய்ப்புகளை) விரிவாக்குகின்றன. பெரும்பாலும் இலக்கிய விமர்சனத்தின் மீதான ஆர்வம், முற்றிலும் நேர்மாறாகத் தோற்றம்காட்டும் இரண்டு பார்வைகளுக்கு இடைப்பட்ட புள்ளியிலேயே வெளிப்படுகிறது. ஆனால், உன்னிப்பாகக் கவனித்தால் அவை ஒன்றையொன்று இட்டுநிரப்புவதைக் கண்டடையலாம். அதாவது அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

சமூகவியல் சார்ந்த அதிகாரப் பார்வையும், முற்றிலும் முறைசார்ந்த அழகியல் தரநிர்ணயப் பார்வையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட எல்லைக்குட்பட்டவை (deterministic). 

சமூகவியற் பார்வையில் விமர்சனம் என்பது ஒரு சமூகக் களத்தில் அதிகாரத்தையும் தகுதியையும் பெறுவதற்கான ஒரு தந்திரோபாயக் கருவியாகக் குறைத்து மதிப்பிடுகிறது. இந்த மூடிய அமைப்பு சமத்துவமின்மையை மூடிமறைத்து, அதை மீண்டும் உருவாக்குகிறது என்று எழுத்தாளர் கருதுகிறார். இது ஆராய்ச்சியாளரை விதிகளைத் துல்லியமாகக் கண்டறியும் ஒரு ‘மேலாதிக்க’ நிலையில் வைக்கிறது. அதே நேரத்தில் விமர்சனம் என்பது ஒரு உண்மையான செயற்பாடாக மறைந்துவிடுகிறது. இதனால் வாசகர்கள் படைப்புடன் உரையாடுவதை விடுத்து, அதிகாரப் போட்டிகளின் செயலற்ற பார்வையாளர்களாக மாறும் நிலை ஏற்படுகிறது என்கிறார் லார்சன்.

தூய அழகியற் பெறுமதி சார் பார்வையின் (critique of the purely aesthetic value-judgment perspective) அடிப்படையிலான விமர்சனம், உதாரணமாக ஒரு புத்தகம் சிறந்ததா இல்லையா என்ற எளிய கேள்வியாக மட்டுமே வரையறுக்கிறது. இந்த அணுகுமுறை விமர்சன நுண்ணறிவை விமர்சகரின் இயற்பண்புகள் அல்லது தனிப்பட்ட உணர்திறனாகக் குறைக்கிறது. இது விமர்சனச் செயற்பாட்டைப் பற்றி விவரிப்பதற்குப் பதிலாக, ஒரு தனிநபராக விமர்சகரை வகைப்படுத்தும் உயிரியல் ரீதியான அணுகுமுறைக்கே இட்டுச்செல்லக்கூடியது. 

எழுத்தாளர் எரிக் பிஜெர்க் ஹாகனின் (Erik Bjerck Hagen) கூற்றுப்படி, ஒரு விமர்சகர் எழுதும் தருணத்தில் சமூகவியல் அதிகார அமைப்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர் தன்னை முற்றிலும் சுதந்திரமானவராகவே உணர்கிறார். நாம் அழகியல் ரீதியாக வர்க்கமற்ற சமூகத்தில் வாழ்வதால், சமூகவியல் பகுப்பாய்வுகள் இலக்கிய விமர்சனத்திற்குப் பயன்படாது என்பது ஹாகனின் கருத்து. சமூகவியல் பார்வைகளை ஏற்புடையவை போன்று தோன்றினாலும், உண்மையில் அவர் ‘அழகியல் வர்க்கமற்ற சமூகம்’ என்ற வாதத்தின் மூலம் சமூகவியல் நுண்ணறிவுகளை நிராகரிக்கிறார். அவரது இந்த அணுகுமுறை வெறும் போலி வெளிப்படைத்தன்மையே என்று லார்சன் விமர்சிக்கிறார்.

கோட்பாடு 2: விமர்சனம் என்பது செயலுக்கான ஒரு முரண்பாட்டு வடிவம் (criticism is a paradoxical form of action)

விமர்சனத்தின் தனித்தன்மையானது, ஒரு முரண்பாடுகள் நிறைந்த உறவில் பங்கேற்பதன் மூலம் வரையறுக்கப்படும் ஒரு விமர்சனக் காரணியின் (critical subject) இருப்பைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. விமர்சனம் என்பது ஒரு முரண்பாடான செயல் வடிவமாகும்

எத்தகையதொரு காரணி? இது எத்தகையதொரு உறவு?

இதற்கான ஒரு தொடக்கப்புள்ளியை வொல்ஃப்காங் வான் கொதே (Goethe) அவர்களின் மேற்கோள் ஒன்றிலிருந்து நாம் கண்டடைநயலாம் என விவரிக்கின்றார் லார்சன். ஜோஹான் வொல்ஃப்காங் வான் கொதே (Johann Wolfgang von Goethe, 1749 – 1832) ஒரு ஜெர்மன் எழுத்தாளரும் தத்துவவியலாளருமாவர். ஜெர்மன் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளராகவும், உலக அளவில் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். அவர் 1819இல் நாடகாசிரியரும் விமர்சகருமான யோஹான் ஃபிரீட்ரிஹ் ரோச்லிட்ஸுக்கு (Johann Friedrich Rochlitz) எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘மூன்று வகையான வாசகர்கள் உள்ளனர்: 

முதல் வகையினர் எந்தவொரு மதிப்பீடும் செய்யாமல் வெறுமனே வாசிப்பின் இன்பத்திற்காக வாசிப்பவர்கள். 

இரண்டாம் வகையினர் வாசிப்பின் இன்பத்தை நுகராமல் வெறுமனே மதிப்பிடுபவர்கள்;.

இவ்விருவருக்கும் இடையில், வாசிப்பின் இன்பத்தை நுகர்ந்துகொண்டே மதிப்பிடுபவர்களும், மதிப்பிட்டுக்கொண்டே வாசிப்பின் இன்பத்தை நுகருபவர்களுமான மூன்றார் வகையினர் இருக்கிறார்கள்.

இவர்களே உண்மையில் ஒரு புதிய கலைப்படைப்பை உருவாக்குகிறார்கள்.’ வாசகப் பிரிவின் மூன்றாம் வகையினரான இந்த ‘இடைநிலையைச்’ சுட்டிக்காட்டுவது, விமர்சனத்தின் முரண்பாடான வடிவத்தின் ஒரு கூற்றினைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. அதே வேளையில், விமர்சகரை ஒரு பிறவி மேதை அல்லது ஆற்றல்மிக்க தனிநபராகக் காணும் சிந்தனையோடு இது மிகவும் நெருங்கிப் போவதால், விமர்சனத்தை ஒரு செயற்பாடாக விளக்குவதற்கும் வியாக்கியானப்படுத்துவதற்கும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவது கடினமாகிறது என்கிறார் Jul-Larsen. 

கலை விமர்சனத்தின் எழுச்சி மற்றும் விமர்சகரின் செயற்பாடு குறித்து ஜெர்மனிய தத்துவவியலாளர் ஜூர்கன் ஹாபர்மாஸ் (Jürgen Habermas) இப்படி விளக்குகிறார்: 

‘விமர்சகர் என்பவர் ஒரு விசித்திரமான, முரண்போக்கு பணியைக் கொண்டிருக்கிறார். அவர் தன்னைப் பொதுமக்களின் பிரதிநிதியாகவும் அதே நேரத்தில் அவர்களுக்கு கற்பிப்பவராகவும் தன்னை உணர்கிறார்’. 

ஹாபர்மாஸின் இந்த விளக்கம் முக்கியமானது. அவர் விமர்சகரின் வரலாற்று ரீதியான தோற்றத்தை வலியுறுத்துகிறார். கொதே முன்வைக்கின்ற வாசகரது முரண்பாடான செயல்களான ‘இன்பம் நுகர்தல் மற்றும் மதிப்பிடுதல்’ என்பது, விமர்சன நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாடுகளான ‘பிரதிநிதித்துவம் மற்றும் கல்வியூட்டல்’ என்ற வடிவில் வெளிப்படுத்தப்படுகிறது. ஹாபர்மாஸ் இதனை ஒரு முரண்போக்குப் பணி என்று அழைக்கிறார்;. இந்த அடிப்படையான முரண்பாட்டை இல்லாது ஒழிக்கும் முரண்போக்கின் நகர்வுகள் மூலம் இக்கேள்வியை விளக்கிவிட முடியாது என்கிறார் Kristoffer Jul-Larsen. ஹாபர்மாஸ் சித்தரிக்கும் இந்த முரண்பாடான உறவை ஒருபோதும் தீர்க்க முடியாது. அது அடிப்படையிலேயே ஒரு முரண்பாடான சிக்கலாகும் (paradoxical). Kristoffer Jul-Larsen அவர்களின் புரிதலின்படி, கல்வியூட்டலும் பிரதிநிதித்துவமும் விமர்சகரின் வகிபாகத்தின் இக்கட்டான முடிச்சினைத் தவிர வேறெந்தவொரு பொதுவான புள்ளியிலும் சந்தித்துக்கொள்ள முடியாது.

விமர்சகரின் முரண்பாடு என்பது ஒரே பொதுமக்களுக்கு ஒரே நேரத்தில் பிரதிநிதியாகவும் கல்வியூட்டுபவராகவும் செயற்படும் அவரது இரட்டை வகிபாகத்தில் அடங்கியுள்ளது. இது பல இணையான முரண்பாடுகளை உருவாக்குகிறது. விமர்சகர் சமூகத்தின் (பொதுமக்களின்) ஒரு பகுதியாக இருக்க வேண்டும்; அதே நேரத்தில் அவர்களுக்குக் கல்வியூட்டுபவராகவும் செயற்பட வேண்டும். அவர் தாக்கம் செலுத்தும் ஒரு காரணியாகவும் இருக்கிறார், அதே வேளையில் அத்தாக்கத்திற்கு உள்ளாகும் பொதுமக்களின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். விமர்சகர் ஒரே நேரத்தில் இலக்கிய அனுபவத்திற்குள் முற்றிலும் மூழ்கிய ‘விமர்சனமற்றவராகவும்’, அதே நேரத்தில் அதனை மதிப்பிடுவதற்கேற்ப விலகி நிற்கும் ‘விமர்சனக் கூர்மையுள்ளவராகவும்’ இருக்க வேண்டும் (மதிப்பிடும் போதே இன்பம் நுகரும் ‘கொதே’யின் முன்மாதிரி வாசகரைப் போல). இந்த இரட்டை நிலையானது, பிளாட்டோ விவரிக்கும் ஜனநாயகக் காரணியின் (democratic subject) தன்மையோடு ஒத்துப்போகிறது. அதாவது, பிறப்பு அல்லது தகுதிகளின் அடிப்படையில் அமையும் அதிகாரத்திற்கு மாறாக, தீவிரமான சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஆளுபவராகவும் ஆளப்படுபவராகவும் இருக்கும் நிலையாகும். 

அனுபவ ரீதியான விமர்சகர்கள் பெரும்பாலும் தங்களது அறிவு மற்றும் தனிப்பட்ட திறன்களின் மூலமே தங்களை நிலைநிறுத்த முயல்கிறார்கள். இந்த முரண்பாடான உறவைத் தவிர்த்துவிட்டு விமர்சன நிறுவனத்தை (The institution of criticism) புரிந்து கொள்ள முடியாது என்றே Kristoffer Jul-Larsen வாதிடுகிறார். இந்த முரண்பாடு என்பது நடைமுறையில் தீர்க்கப்படக்கூடிய ஒரு இலட்சிய இலக்கு அல்ல, மாறாக விமர்சனம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான அடிப்படைத் தத்துவமாகும். கலைப்படைப்பின் தனித்துவத்தையும் அந்நியத்தன்மையையும் தன்னிச்சையான வாசிப்பின் மூலம் விமர்சகர் கடத்தும் கணப்பொழுதுகளில் மட்டுமே இது முதன்மையாக வெளிப்படுகிறது.

கோட்பாடு 3: விமர்சனத்தின் இலக்கு, ‘வெளி’யைக் கட்டமைத்தல்

விமர்சனத்தின் முதன்மைப் பணி என்பது அதற்கேயுரிய ஒரு சமூக வெளியை வடிவமைப்பதாகும் (The configuration of one’s own space). இரண்டு அழகியல் உலகங்களை ஒரு மூன்றாவது உலகிற்குக் கடத்தும் ஒரு சமரசப் அணுகுமுறையின் மூலமே இவ்வடிவமைப்பு நிகழ்கிறது. அழகியல் அனுபவத்தைக் கடத்துவதென்பது, ஒவ்வொரு படைப்பும் கொண்டுள்ள தரம் குறித்த உள்ளார்ந்த முன்வைப்பிற்கும், இலக்கிய நிறுவனம் வலியுறுத்தும் பொது உடன்பாட்டிற்கும் (consensus) இடைப்பட்ட ஒரு பதட்டத்திற்குள் ஊடாடுவதாகும். இலக்கியப் படைப்பின் தனித்துவம் (singularity), வாசகர்-பார்வையாளரின்(நுகர்வோர்) விளக்கம் மற்றும் சமூக அனுபவம் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்திலேயே விமர்சன வெளி வடிவமைக்கப்படுகிறது. இதனால் விமர்சனம் என்பது ஒரு கட்டுப்பாட்டுக் கருவியாகவும், படைப்பு முழுமைபெறும் இடமாகவும், பொதுமக்களின் எதிர்வினை வடிவம் பெறும் தளமாகவும் ஒரே நேரத்தில் செயற்படுகிறது.

ஏலவே கட்டமைக்கப்பட்ட ஒரு பொதுவெளியில் இயங்குவதற்குப் பதிலாக, விமர்சனம் என்பது இன்னும் முழுமைபெறாத ஒரு சமூகத்தில் தொடர்ந்து புதிய நிலைகளை உருவாக்குவதற்கான ஒரு போராட்டமாகும். ஓர் அழகியல் நிகழ்வின் மீதான விமர்சகரின் மகிழ்ச்சி அல்லது வெறுப்பின் வெளிப்பாடானது, மனிதகுலத்தின் அனைத்து அழகியல் உலகங்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு பிணைப்பிற்கான பிடிவாதமான வலியுறுத்தலைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்புச் செயல்முறையின் வெளி நிறுவனமயமாக்கப்பட்டு விடுகிறது (institutionalised). இது விமர்சனத்தை ஒரு சமூகவியல் மற்றும் அணியிலக்கண விளையாட்டுக்குள் முடக்கி, ஒரு ஒற்றைத் தீர்ப்பை நோக்கிய குறுகிய தேடலாக அதைச் சுருக்குகிறது.

இந்த மூன்று கோட்பாடுகளின் விளைவானது, இலக்கிய விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட தனித்துவமான நடைமுறையாக (specific practice) என்னவாக இருக்கிறது என்பதையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. அத்தோடு பிரதிநிதித்துவம் மற்றும் கல்வியூட்டல் சார்ந்த ஒரு கருவியாக விமர்சனம் கொண்டுள்ள இந்த முரண்பாடான நிலை விமர்சனத்திற்கு ஒரு கடத்தும் கருவியாகச் செயற்படும் ஆற்றலை வழங்குகிறது. விமர்சனம் என்பது அதன் இறுதிநோக்கில் படைப்பிற்கும் வாசகருக்கும் இடையில் மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு இடையிலும் பிணைப்பை ஏற்படுத்துகிறது.

மார்க்சிய இலக்கிய விமர்சனம்

மார்க்சியத்தின் செல்வாக்கிற்கு உள்ளாகாத சமூக, அறிவியற் துறைகளைக் காண்பது அரிது. விமர்சன அணுகுமுறை சார்ந்த மார்க்சிய நிலைப்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மார்க்சிய இலக்கிய விமர்சனம் (திறனாய்வு) என்பது இலக்கியப் படைப்பை ஒரு குறிப்பிட்ட பொருளாதார மற்றும் சமூகச் சூழலின் வெளிப்பாடாகப் புரிந்துகொள்கிறது. அத்தோடு வரலாற்று ரீதியானதும்; கருத்தியல் விமர்சனம் சார்ந்ததுமான ஒரு இலக்கியச் சமூகவியலாகச் (sociology of literature) செயற்படுகிறது. நெறிமுறைகளையும் சமூகப் பார்வையும் (Basic Principles and Social View) அடிப்படையாகக் கொண்ட கருத்தியலைத் தாங்கி நிற்கும் இலக்கியம் (Literature as a Bearer of Ideology) மார்ச்சியப் பார்வையில் முதன்மையானது. அடித்தளமும் மேல்கட்டுமானமும் (Base and Superstructure) என்ற கருத்தியல் இங்கு முக்கியமானது. கார்ல் மார்க்ஸின் கூற்றுப்படி, அனைத்துச் சமூகங்களும் ஒரு பொருள்சார் மற்றும் பொருளாதார அடித்தளத்தைக் (உற்பத்தி அமைப்பு) கொண்டுள்ளன. இதன் மீது கலை, மதம், சட்டம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுக் கட்டமைப்புகளின் மேற்கட்டுமானம் எழுகிறது. அடித்தளமும் மேற்கட்டுமானமும் ஒரு சிக்கலான, ஒன்றில் மற்றொன்று செல்வாக்குச் செலுத்தும் வகையில் (இயங்கியல் – dialectics) இணைந்துள்ளன. இதில் நிகழும் பண்பாட்டு மாற்றங்கள் காலப்போக்கில் பொருளாதாரக் கட்டமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது மார்க்சிய சிந்தனை..

கலை மீதான நெறிமுறை சார் பார்வை (A normative view of art):

மார்க்சியக் கோட்பாட்டின் வரம்பிற்குள், படைப்பிலக்கியங்கள் எவ்வளவு தூரம் அரசியல் ரீதியாகச் செயற்படக்கூடியன என்ற அடிப்படையிலேயே பெரும்பாலும் அவற்றின் பெறுமதியும் தரமும் அளவிடப்படுகின்றன. வறியோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் (முதன்மையாக உழைக்கும் வர்க்கத்தின்) நலனுக்காக வர்க்க முரண்பாடுகள், அதிகார உறவுகள் மற்றும் சமூக மோதல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதே கலையினதும் எழுத்தாளரினதும் மிக முக்கியமான பணியாகும். சமூகத்தின் முரண்பாடுகளை மறைத்து, தொழிலாளர்கள் தங்களின் புறநிலை சார்ந்த வர்க்க நலன்களுக்கு ஏற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஒடுக்குமுறைச் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவதன் மூலம், வாசகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களை அணிதிரட்டவும் இலக்கியம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போலி விழிப்புணர்வை அம்பலப்படுத்துதல் (exposure of false consciousness) எனப்படுகிறது.

சமூக மற்றும் பொருளாதார உற்பத்தி உறவுகளைப் பற்றிய விரிவான, யதார்த்தமான சித்தரிப்புகளை வழங்குவதற்கான பரந்த வெளியைக் கொண்டிருப்பதால், யதார்த்தவாத நாவல்கள் (realistic novels) மார்க்சிய விமர்சகர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்றன. அதே வேளையில், கவிதை போன்ற வடிவங்கள் யதார்த்தத்திலிருந்து தப்பித்தோடும் ஒரு முதலாளித்துவ வர்க்கச் செயற்பாடு (bourgeois escapism) என்றும் சில மார்க்சிய அறிஞர்களால் விமர்சிக்கப்படுகின்றன.

மார்க்சிய கலைக் கோட்பாட்டுச் சிந்தனை மரபு

மார்க்சிய கலைக் கோட்பாட்டின் முக்கிய சிந்தனையாளர்களின் கூற்றுகளை முன்வைத்து மார்க்சிய விமர்சன அணுகுமுறையின் முதன்மையான தத்துவார்த்தப் போக்குகளைப் புரிந்துகொள்ளலாம். சமூக முரண்பாடுகளை மூடிமறைப்பதற்கும், மக்களைக் கீழ்ப்படிதலுக்குள் வைத்து கையாளுவதற்கும் (manipulate) சாதகமான முறையில் வெகுஜனக் கலாச்சாரத்தையும் பொழுதுபோக்கையும் நவீன முதலாளித்துவம் நுகர்பொருட்களாகப் பயன்படுத்துகின்றது என்று அடோர்னோ, ஹோர்க்ஹைமர் (Adorno, Horkheimer) போன்ற சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டினர். ஆனபோதும் தியோடர் டபிள்யூ. அடோர்னோ (Theodor W. Adorno) நவீனத்துவ மற்றும் பரிசோதனை முயற்சிக் கலைகளை (modernist and experimental art) ஆதரித்தார். ஏனெனில் அத்தகைய கலைகள் தங்களின் எதிர்மறைத் தன்மையின் (negation) மூலம் தற்போதுள்ள சமூக ஒழுங்கிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன என்று அவர் கருதினார். இலக்கியத்தின் உண்மையான சமூகக்கூறு அதன் வடிவத்திலேயே (form) அமைந்துள்ளது என்று ஹங்கேரிய விமர்சகரான கியோர்ஜி லூகாச் (György Lukács) கருதினார். நவீனத்துவத்தின் துண்டாடப்பட்ட மற்றும் அகவயமான உலகப்பார்வைக்கு (subjective worldview) ஒரு மாற்றாகவும், ஒரு முழுமையாகவும் (totality) அவர் யதார்த்தவாதத்தை (realism) முன்னிறுத்தினார்.

லூசியன் கோல்ட்மன் வலியுறுத்துகின்ற மரபணு சார்ந்த அமைப்பியல்வாதம் (Lucien Goldmann – Genetic Structuralism):

லூசியன கோல்ட்மேன் ‘வடிவ ஒத்திசைவு’ (structural homology) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். ஒரு இலக்கியப் படைப்பின் வடிவத்திற்கும், எழுத்தாளர் சார்ந்திருக்கும் சமூக வர்க்கத்தின் மன அமைப்புக்கும் (உலகப்பார்வைக்கும்) இடையே கட்டமைப்புசார் ஒருமித்த தன்மை இருப்பதாக அவர் வாதிட்டார். ரேமண்ட் வில்லியம்ஸ், கலாச்சாரப் பொருள்முதல்வாதம் (Raymond Williams and cultural materialism) குறித்துப் பேசுகின்றார். கலாச்சாரம் என்பது வெறும் மேல்நிலைக்கட்டமைப்பின் ஒரு செயலற்ற விளைவு அல்ல, மாறாக கலாச்சாரம் என்பதே ஒரு பொருள்வயச் செயற்பாடு (material activity) என்று வில்லியம்ஸ் வாதிட்டார்.

லூயிஸ் அல்தூசர், பியர் மஷேரி (Louis Althusser and Pierre Macherey)

கலை என்பது சித்தாந்தத்திற்குள் (ideology) கட்டுண்டு இருக்கும் ஒரு வடிவம் என்றும், அதே நேரத்தில் அது சித்தாந்தத்திலிருந்து ஒரு தூரத்தைப்பேணி நின்று, அச்சித்தாந்தத்தின் தன்மையை நாம் உணரச் செய்கிறது என்றும் அல்தூசர் விவரித்தார். சித்தாந்தத்தின் இருப்பு என்பது உரைநடையின் (text) ‘அர்த்தமுள்ள மௌனத்தில்’, அதாவது அவ்வுரையால் எதைச் சொல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறதோ அதில் மிக முக்கியமாக உணரப்படலாம் என்பதை மஷேரி அழுத்தமாகக் கூறினார். இக்கோட்பாடு, அழகியல் அளவுகோல்களைப் புறக்கணித்து வரலாற்று ரீதியான கருத்தியல்மயப்படுத்தலுக்கும் கோட்பாட்டு உள்ளடக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு என கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அழகியல் நோக்கில் படைப்பினது சிக்கல்கள் மற்றும் கலைத்துவத்தினை கவனம் கொள்ளாத அணுகுமுறை என்றும் ‘இலக்கியத்தை அதன் இயல்பான தன்மையிலேயே’ சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் விமர்சிக்கப்படுவதுண்டு.

விமர்சனம்: மனம், சமூக அனுபவம், வரலாறு, அரசியல் மற்றும் அழகியலுக்கிடையிலான உறவு

கலை மற்றும் இலக்கிய விமர்சனம் என்பது ஒரு படைப்பின் தரத்தை மட்டும் அளவிடும் செயற்பாடு அல்ல என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. ஒரு படைப்பு மனித மனம், சமூக அனுபவம், வரலாற்று நினைவு, அரசியல் உணர்வு மற்றும் அழகியல் உணர்ச்சி ஆகியவற்றுடன் எந்தவிதமான உறவை உருவாக்குகிறது என்பதை ஆராய்வதே விமர்சனத்தின் அடிப்படை நோக்கமாகும். அதனால் விமர்சனம் என்பது படைப்புக்கும் வாசகருக்கும் இடையே நிற்கும் ஒரு வெளிப்புற தீர்ப்பு அல்ல. படைப்பை வாசிப்பு, விவாதம் மற்றும் பொதுவெளி வழியாகத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு அறிவொழுக்கச் செயற்பாடும் நடைமுறையுமாகும்.

காலவோட்டத்தில் இலக்கியத்தின் மதிப்பீடுகள் மாறுகின்றன என்பதையும், ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட படைப்புகள் பின்னர் உன்னதமானதும் முன்னோடியானதுமான கலைச்சான்றுகளாக அங்கீகரிக்கப்படலாம் என்பதையும் உலக மற்றும் தமிழ்க் கலை வரலாறு பதிவுசெய்துள்ளது. இதனால் தரம் என்பது நிலையான, ஒற்றைத் தீர்மானக் கருதுகோள் அல்ல. காலம், சமூகச் சூழல், வாசக அனுபவம் மற்றும் விமர்சனச் செயற்பாடு ஆகியவற்றின் வழியாக மறுமதிப்பீடு செய்யப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

விமர்சனம் சுயாதீனமான செயற்பாடாகவும், அதே நேரத்தில் முரண்பாடுகளால் நிரம்பிய செயல் வடிவமாகவும் விளங்குகிறது. விமர்சகர்கள் பொதுமக்களின் பிரதிநிதியாகவும், அவர்களுக்குப் புதிய வெளிகளைத் திறந்து காட்டும் கல்வியாளராகவும் செயற்படுகிறனர். மார்க்சிய இலக்கிய விமர்சனம் இலக்கியத்தை சமூக அமைப்பு, வர்க்க உறவுகள், கருத்தியல் மற்றும் அதிகாரச் சூழல்கள் ஆகியவற்றோடு இணைத்து வாசிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இவ்விரு பார்வைகளும் சேர்ந்து, விமர்சனம் என்பது தனிப்பட்ட இரசனையின் வெளிப்பாட்டு வடிவம் அல்ல, அது சமூக, வரலாற்று, படைப்பாக்க மற்றும் அழகியல் சார் பொறுப்புகளுடன் கூடிய செயற்பாடு என்பதை உணர்த்துகின்றன.

தமிழ் இலக்கியப் பொதுவெளியின் சூழலில் விமர்சனச் செயற்பாட்டின் அவசியம் இன்னும் அதிகமாக உள்ளது. தாயகம், புலப்பெயர்வு, போர், நினைவுகள், இன, மொழி, சமூக ஒடுக்குமுறை, மொழி, அடையாளம், சமூகநீதி, பெண்ணியம், மற்றும் பாலினம் போன்ற அனுபவங்கள் இன்று தமிழ் இலக்கியத்தின் முக்கிய அடுக்குகளாக உள்ளன. இவ்வகைச் சிக்கலான அனுபவங்களை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும், விவாதிக்கவும் வலுவான விமர்சனப் பண்பாடும் தொடர் செயற்பாடுகளும் அவசியப்படுகின்றன. விமர்சனம் இல்லாத இடத்தில் படைப்புகள் தனித்தனியான அனுபவங்களாகச் சிதறியும் கவனப்படுத்தலின்றியும் போகும் அபாயமுண்டு. விமர்சனச் செயற்பாடு, பொதுவான சிந்தனை, வரலாறு, சமூகப் போக்கு மற்றும் சமூக உரையாடலின் பகுதிகளாக மாறுகின்றன. கலை மற்றும் இலக்கிய விமர்சனம் என்பது படைப்பை மதிப்பிடுவதற்காக மட்டுமான வடிவம் அல்ல. படைப்புகள் மீதான கேள்விகளை எழுப்பவும், மறுவாசிப்பு-மறுபரிசீலனை செய்யவும், அதன் சமூக மற்றும் அழகியல் அர்த்தங்களை விரிவுபடுத்தவும் வழிசமைக்கும். திறந்த உரையாடல் வெளியைச் சாத்தியப்படுத்தும். விமர்சனமானது இலக்கியத்தின் வாழ்வைத் தொடரச் செய்யவும் – வாசகச் சமூகத்தை உருவாக்கவும் – பொதுவெளியை ஆழப்படுத்தவுமான படைப்பாற்றல் மிக்க அறிவுசார் செயற்பாடாகும்.

உசாத்துணை:

What is Literary Criticism? Three Theses | Kristoffer Jul-Larsen | 04.06.2013 | https://jullarsen.org/2013/06/04/hva_er_litteraturkritikk/

What Is Actually Good Quality in Art? | Siw Ellen Jakobsen | 23.09.2016 | www.forskning.no

Marxist Literary Research | Helge Ridderstrøm | Oslo-Met | 17.06.2025 | https://www.litteraturogmedieleksikon.no/gallery/om_leksikonet.pdf

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here