அ.முனவர் கான்
மணிப்பூர் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மணிப்பூரி மொழி ‘மெய்திலோன்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள திபெத்தோ-பர்மிய மொழிகளிலேயே, 2000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட, ஆழமான இலக்கிய வரலாற்றைக் கொண்ட ஒரே மொழி மணிப்பூரி மட்டுமே.
மணிப்பூரியில் சிறுகதை வடிவம் 1930-களில் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் இவை ‘யகைரோல்’ (1929) போன்ற இதழ்களில் வெளிவந்தன. காதல், சமூக விழுமியங்கள், பெண்களின் பிரச்சனைகள், தார்மீக ஒழுக்கம் சிதைவது போன்றவற்றை இவை பேசின.
R.K. ஷீதல்ஜித் சிங்: இவரே மணிப்பூரி சிறுகதையின் தந்தை எனலாம். இவரது ‘லெய்கோன்னுங்டா’ (1946) தொகுப்பு மிக முக்கியமானது. இவர் தியாகத்தை, அன்பை மையமாக வைத்து எழுதினார். R.K. இளங்பம்: பெண்களின் உணர்வுகளை, அவர்களின் துயரங்களைப் படம்பிடித்தார். யதார்த்தவாதக் காலமான 1960 – 1970 காலகட்டத்தில் சிறுகதைகள் கற்பனை உலகிலிருந்து விலகி, நிஜ வாழ்க்கையின் கசப்பான உண்மைகளைப் பேசத் தொடங்கின. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஏமாற்றங்கள், ஊழல், பொருளாதாரச் சரிவு போன்றவை கதைகளின் கருப்பொருளாயின.
M.K. வினோதினி: ‘நுங்கைராக்தா சந்திரமுகி’ (1965) மூலம் சமூக யதார்த்தத்தைக் காட்டினார். N. குஞ்சமோகன்: ‘இலிசா அமகி மஹாவ்’ (ஒரு இலிசா மீனின் சுவை) என்ற இவரது கதை மிகவும் பிரபலம். இது ஏழை மக்களின் வறுமையையும் ஆசையையும் தத்ரூபமாக விவரித்தது. ஈ. தினமணி: இவர் சமூக அநீதிகளை அங்கதச் சுவையுடன் (Satire) நையாண்டி செய்து எழுதினார்.
1974 – 1990 வரையிலான காலம் நவீன மற்றும் புரட்சிகரக் காலம் எனப்படுகிறது, இக்காலகட்டத்தில் ‘மெயிரிக்’ (Meirik 1974-ல் -) என்ற இதழ் தொடங்கப்பட்டது. இது மணிப்பூரி இலக்கியத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. எழுத்தாளர்கள் சிறுகதைகளில் உருவகம், குறியீடுகள், கனவுருப்புனைவு, நாட்டுப்புறக் கூறுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும், தங்களின் படைப்பு வடிவம் மற்றும் வெளிப்பாடுகளில் தத்துவார்த்த மற்றும் உளவியல் ரீதியான பார்வைகளை அதிகளவில் புகுத்தினர். சுரண்டலுக்கு எதிரான கோபம், வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை முதன்மை பெற்றன.
1990-களுக்குப் பிறகு, மணிப்பூரி சிறுகதைகள் உலகளாவிய சிந்தனைகளை நோக்கி நகர்ந்தன. தனது கலாச்சார அடையாளத்தை மீட்டெடுப்பது, இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களை, அமைதியற்ற சூழலை இவை விவரிக்கின்றன. கே. பிரியகுமார், எல். பிரேம்சந்த், சந்தோஷ் குமார், ஜிம் வுங்ரம்யாவோ காசோம் போன்றோர் இன்றைய சமூகச் சிக்கல்களைத் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
மணிப்பூரி சிறுகதைகள் வெறும் கதைகளாக மட்டும் இல்லாமல், அந்த மாநிலத்தின் அரசியல் மாற்றம், வறுமை, கலாச்சாரப் போராட்டம் ,மக்களின் மனநிலை ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்யும் ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.
ஜிம் வுங்ரம்யாவோ காசோம்(Jim Wungramyao Kasom), மணிப்பூரின் உக்ருல் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர், புகைப்படக் கலைஞர். தற்போது டெல்லியில் வசிக்கிறார். வடகிழக்கு மாநில மக்களின் உண்மையான விளிம்புநிலை அனுபவங்களை உலகிற்குத் தெரியப்படுத்துவதில் மிகுந்த அக்கறைக் கொண்டவர். ஜிம் வுங்ரம்யாவ் காசோம் மணிப்பூரின் தங்குல் நாகா (Tangkhul) சமூகத்திலிருந்து ஆங்கிலப் புனைகதை எழுதிய முதல் எழுத்தாளர்
காசோமின் எழுத்தில் மணிப்பூரின் மலைகள் வெறும் பின்னணி மட்டுமல்ல, அவை கதையை நகர்த்தும் ஒரு உயிருள்ள கதாபாத்திரம். ஒருபுறம் அமைதியான மூடுபனியும், செம்மண்ணும்; மறுபுறம் அந்தப் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இராணுவப் படைகள் என முரண்பட்ட சூழலை அவர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
‘தி லாஸ்ட் ஃப்ரீ நாகா’ நூல், மணிப்பூரின் ‘தங்குல்’ நாகா மக்களின் வாழ்க்கையை 12 சிறுகதைகள் வழியாக மிக நுணுக்கமாக விவரிக்கிறது. இயற்கை எழில், பாரம்பரியக் கதைகள், அரசியல் மோதல்களுக்கு இடையிலான வாழ்க்கையை இக்கதைகள் முன்வைக்கின்றன.
‘தி லாஸ்ட் ஃப்ரீ நாகா’ என்பது வெறும் கதைகளின் தொகுப்பல்ல; அது அரசியல் வரைபடங்களால் பிரிக்க முடியாத மக்களின் ஆன்மா, நிலத்தின் மீதான காதல் பற்றிய ஆவணம். வன்முறை நிறைந்த சூழலிலும் மனிதநேயம், கடின உழைப்பு, குடும்பப் பிணைப்பு எவ்வாறு உயிர்வாழ்கிறது என்பதை இது உலகிற்கு உரக்கச் சொல்கிறது. இவருடைய கதைகளின் கருப்பொருள்களாக அடையாளம், நினைவுகள், பாரம்பரியம் vs நவீனமயமாக்கல், இராணுவ அடக்குமுறையின் தாக்கம் என்பவற்றைச் சொல்லலாம்
மழைக்கால மனிதநேயம், பனி போன்ற கதைகளில், இயற்கை மனிதர்களுக்கிடையிலான அரசியல், இன வேறுபாடுகளைத் தற்காலிகமாக அழித்து, அனைவரையும் “பிழைப்புக்காகப் போராடும் மனிதர்களாக” மாற்றுகிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள தங்குல் நாகா ஆண்கள் மிகக் குறைவாகவே பேசுகிறார்கள். தந்தையர்கள் தங்கள் அன்பை வார்த்தைகளால் சொல்லாமல், ஒரு கத்தியைத் தீட்டுவதிலோ அல்லது கடினமான மலையேற்றத்தில் மகனுக்கு வழிவிடுவதிலோ காட்டுகிறார்கள்..நகரத்தில் இருக்கும் மகன் அனுப்பும் ‘தபால் அட்டைகள்’ (Postcards) ஒரு வகையான மௌனமே. அவன் தனது கஷ்டங்களை மறைத்து, பாட்டிக்குப் பிடித்தமான பொய்களைச் சொல்ல அந்த மௌனத்தைப் பயன்படுத்துகிறான்.
ஒவ்வொரு கதையிலும் ஒரு நுணுக்கமான இழப்பு இழையோடுகிறது. பாட்டிக்குத் தேவைப்படாத ‘அடையாள அட்டை’, பேரனுக்குத் தேவையாகிறது. இது ஒரு சமூகத்தின் “தூய்மையான சுதந்திரம்” காலப்போக்கில் அதிகார அமைப்பிற்குள் நசுக்கப்படுவதைக் காட்டுகிறது. ‘தி ரிவர் தட் பெண்ட்ஸ் டைம்’ கதையில், நவீன நகர வாழ்க்கையில் தொலைந்துபோன தன் வேர்களைத் தேடும் ஒரு இளைஞனின் தவிப்பு, இன்றைய தலைமுறையின் பொதுவான சிக்கலாகும்.
‘சால்ட்’ கதை ஒரு தனிமனிதனின் மனசாட்சிக்கும், அவனைச் சுற்றியுள்ள வன்முறைச் சூழலுக்கும் இடையிலான மோதலைச் சித்தரிக்கிறது. மலையில் வாழும் ஒரு மனிதன், நவீன உலகின் சிறு வசதிகளான ‘உப்பு’ மற்றும் ‘சர்க்கரை’யை நுகரத் தொடங்கும்போது, அவனை அறியாமலேயே நவீன உலகின் விதிகளுக்குள், அதன் மோதல்களுக்குள் இழுக்கப்படுகிறான்.
தனது முன்னோர்களின் வீரத்தையும் சுதந்திரத்தையும் தன்னுள் சுமக்க விரும்பும் அவன், அதே வேளையில் “கொலை செய்ய மறுக்கிறான்”. போர் நிலவும் ஒரு பகுதியில் ‘நடுநிலை’ என்பது சாத்தியமே இல்லை என்பதை ஆசிரியர் இதில் உணர்த்துகிறார். அமைதியை விரும்புவதே ஒரு பெரும் போராட்டமாக அங்கு மாறிவிடுகிறது.
‘தி கசின்ஸ்’ கதையானது நாகா கலாச்சாரத்தில் தந்தை – மகன் உறவு மற்றும் சகோதரத்துவத்தைப் புரிந்துகொள்ள இக்கதை மிக முக்கியமானது. இக்கதையில் வரும் இரு தந்தையர்களில் ஒருவர் ‘உயரமானவர், இன்னொருவர் குள்ளமானவர். இருவரும் தங்கள் மகன்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வார்த்தைகளால் அன்பு செலுத்துவதில்லை. செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் நடக்கும் வேகமும், மூச்சும் உடல்மொழியே மகன்களுக்குப் பாடமாக அமைகின்றன. இராணுவச் சோதனைச் சாவடிகள் வரும்போது, தந்தையர் தங்களை ஒரு கேடயமாக மாற்றிக்கொண்டு மகன்களைப் பாதுகாக்கிறார்கள்.
“ஆண்கள் அழுவதில்லை, அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் அல்லது உழைக்கிறார்கள்” என்ற நாகா சமூகத்தின் ஆணாதிக்கமற்ற, ஆனால் கண்டிப்பான பிணைப்பை இது விளக்குகிறது.
தபால் அட்டைகள் கதையில் நகரத்தில் வாழும் ஒரு இளைஞன் தனது கிராமத்திற்கு அனுப்பும் தபால அட்டைகள் ஒரு முக்கியமான ‘குறியீடு’. நகரத்தில் அவன் அனுபவிக்கும் இனவெறி, தனிமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை அந்த அட்டைகள் சொல்வதில்லை. மாறாக, டெல்லியின் அழகிய இடங்களைச் சித்தரிக்கும் அட்டைகளை அனுப்பி, தான் “நலமாக” இருப்பதாகப் பொய் சொல்கிறான். புலம்பெயர்ந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தின் கௌரவத்திற்காகச் சுமக்கும் “மௌனமான பாரத்தை” இது காட்டுகிறது.
‘சீசன் ஆஃப் சிக்காடாஸ்’ கதையில் வரும் “கங்கயே” என்ற தொன்ம உயிரினம் நாகா மக்களின் ஆன்மீகத் தேடலைக் குறிக்கிறது. வன்முறையில் காணாமல் போனவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் என்னவானார்கள் என்று தெரியாத குடும்பங்களுக்கு, அவர்கள் ‘கங்கயே’ எனும் உயிரினங்களாக மாறி காடுகளில் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு மருந்தாக அமைகிறது. இது இயற்கையோடு இணைந்த ஒரு மரணக் கோட்பாடு. நிலம் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது.
ஜிம் காசோம் தனது கதைகளை வெறும் துயரமான கதைகளாக மட்டும் எழுதவில்லை. மாறாக வறுமையிலும் வன்முறையிலும் நாகா மக்கள் தங்கள் கண்ணியத்தை எப்படிக் காக்கிறார்கள் என்பதையும் அவர்களின் உழைப்பு எப்படி ஒரு வழிபாடாக மாறுகிறது என்பதையும் நிலம் என்பது அவர்களுக்கு வெறும் சொத்து அல்ல, அது அவர்களின் ஆன்மாவின் ஒரு பகுதி என்பதையும் அழுத்தமாகக் பதிவு செய்கிறார்’
‘தி லாஸ்ட் ஃப்ரீ நாகா’வில் வரும் பாட்டி கதாபாத்திரம் வெறும் ஒரு முதியவர் மட்டுமல்ல, அவர் “வரலாற்றுக்கு முந்தைய நாகா சுதந்திரத்தின்” எஞ்சியிருக்கும் ஒரே அடையாளம். அவருக்குத் தன் பெயர், குலம், நிலம் தெரியும். ஆனால் அரசோ அல்லது ராணுவமோ கேட்கும் ‘அடையாள அட்டை’ (Identity Card) அவருக்குத் தேவையில்லை. அடையாளம் கடந்தவர் அவரைப் பொறுத்தவரை, ஒரு மனிதன் யாரென்பதை அவனது உழைப்பும் நேர்மையும் மட்டுமே தீர்மானிக்கிறது.
பாட்டி பிரார்த்தனை செய்வது வேலைக்காகவோ பணத்திற்காகவோ அல்ல; தன் பேரன்களின் கால்கள் மலையேற வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக. அதாவது, “வாழ்க்கை கடினமானது, அதை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறு” என்ற யதார்த்தத்தை அவர் போதிக்கிறார்.
புதிய உலகிற்கும் பழைய உலகிற்கும் இடையே உள்ள இடைவெளியை இவர் காட்டுகிறார். இவர் இறக்கும்போது, அந்தத் தூய்மையான “கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமும்” மறைந்துவிடுகிறது.
நாகா சமூகத்தின் தந்தையர் ஒரு பாறையைப் போன்றவர்கள். அவர்கள் அன்பைக் கொட்டுவதில்லை, ஆனால் நிழலாகப் பாதுகாக்கிறார்கள். ‘தி ரிவர் தட் பெண்ட்ஸ் டைம்’ கதையில், மகன் நகரத்திலிருந்து வந்தாலும் தந்தை அவனிடம் அதிகம் பேசுவதில்லை. ஆனால், மீன் பிடிக்க வலை வீசும் நுட்பத்தைக் கற்றுத்தருவதன் மூலம், தன் முன்னோர்களின் வாழ்வாதாரத்தை அவனுக்குக் கடத்துகிறார். கார் ஹார்னை இரண்டு முறை அடித்து விடைபெறும் தருணம் மிக முக்கியமானது. “நான் உன்னை நேசிக்கிறேன், பத்திரமாகப் போ” என்று சொல்லத் தெரியாத அல்லது சொல்ல விரும்பாத ஒரு சமூகத்தின் மௌனமான ஆசி அது.அவர் தன் மகனுக்கு ஒரு ‘மலை மனிதனாக’ இருப்பதன் கௌரவத்தைக் கற்றுக்கொடுக்கிறார். அவர் ஒருபோதும் அழுது தன் கஷ்டங்களைக் காட்டுவதில்லை; மாறாக, ராணுவச் சோதனைச் சாவடிகளில் அவர் காட்டும் உறுதி மகனுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது.
பாட்டி நவீன உலகின் இரைச்சல்களை (அரசியல், ஆவணங்கள்) மௌனத்தால் புறக்கணிக்கிறார். தந்தை தன் பாசத்தை மௌனத்தால் ஆழப்படுத்துகிறார். இவர்கள் இருவருமே “மௌனத்தை” ஒரு ஆயுதமாகக் கொண்டவர்கள்.
ஜிம் காசோம் தனது புகைப்படக் கலையில் கூட, இத்தகைய மௌனமான மனிதர்களின் முகச் சுருக்கங்களையும், அவர்களின் கரடுமுரடான கைகளையும் படம்பிடிப்பதில் ஆர்வம் காட்டுவார். அந்தப் புகைப்படங்களின் ‘இலக்கிய வடிவம்’தான் இந்த கதாபாத்திரங்கள்.
இந்தக் கதாபாத்திரங்களின் வழியாக, மணிப்பூர் மக்களின் இன்றைய வலிகளை நம்மால் உணர முடிகிறது. குறிப்பாக ‘பெட்டி’ கதையில் வரும் அந்த இளைஞன், நகரத்திற்குச் செல்லும்போது இந்தப் பாட்டியின் நினைவுகளையும் தந்தையின் மௌனத்தையும் எப்படிச் சுமந்து செல்கிறான் என்பது மிக உருக்கமானது.
அரசு மற்றும் இராணுவக் கண்காணிப்பு (AFSPA-வின் தாக்கம்), நாகா மலைப்பகுதிகளில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ இருப்பு (Military presence) கதைகளில் ஒரு கறுப்பு நிழலைப் போலத் தொடர்கிறது. சாலைகளில் ராணுவ வாகனங்கள் செல்வதும், இளைஞர்கள் அடிக்கடி சோதனையிடப்படுவதும் அங்கு “இயல்பான” ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சுதந்திரமான மலை மனிதன் தனது சொந்த மண்ணிலேயே தனது அடையாளத்தை நிரூபிக்க ஒரு காகிதத்தை (ID Card) நம்பியிருக்க வேண்டிய அரசியல் அவலம். அமைதியாக நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை.
‘ஒரு கிராமத்துச் சிறுவனின் கனவு’ கதையில் வரும் இளைஞன், முதல்முறை இராணுவச் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதையே தனது ‘முதிர்ச்சி’ (Adulthood) என்கிறான். அதாவது, அங்குள்ள இளைஞர்கள் இயல்பான விளையாட்டுகளால் வளர்வதை விட, ‘சந்தேகம்’ மற்றும் ‘சோதனை’களால் சீக்கிரம் முதிர்ச்சியடைகிறார்கள். ஒரு சிறுவன் தன் உடலை ராணுவத்தினர் சோதிக்கும்போதுதான் தான் ‘பெரியவன்’ ஆகிவிட்டோம் என்று உணர்வது அந்த நிலத்தின் அரசியல் எவ்வளவு ஆழமாக ஒரு குழந்தையின் மனதைச் சிதைக்கிறது என்பதைக் காட்டுகிறது
நாகா தேசிய இயக்கம் மற்றும் அவர்களது சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இக்கதைகளில் நேரடியாகக் கூறப்படாவிட்டாலும், அதன் வலிகள் ஊடாடுகின்றன.
இன்று விண்ணுலகம் எதைச் சமைத்துக் கொண்டிருக்கிறதோ?’ கதையில், போராட்டத்தில் இறந்த மகன் ஒரு வீரனாக அல்லது தியாகியாகப் பார்க்கப்பட்டாலும், அவனது தாய்க்கு அவன் ஒரு ‘இழப்பு’ மட்டுமே. அரசியல் லட்சியங்களுக்காகக் கொடுக்கப்படும் ‘உயிர் விலை’ என்பது குடும்பங்களுக்குள் ஏற்படுத்தும் ஆறாத வடுவை இது பேசுகிறது.
வேலையின்மை மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக நாகா இளைஞர்கள் டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்வதை ஒரு ‘தவிர்க்க முடியாத அரசியல் இடப்பெயர்வு’ என்று சொல்லலாம்.அவர்கள் அங்கு எதிர்கொள்ளும் இனவெறி மற்றும் அந்நியப்படுதல் போன்றவை தபால் அட்டைகள் மூலம் குறியீடாகச் சொல்லப்படுகின்றன. நவீனமயமாக்கல் vs பூர்வீக அடையாளம் என்பதும் ஒரு வகையான ‘கலாச்சார அரசியல்’தான்.
மணிப்பூரில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்களை ‘பழமையான வன்மம்’ என்று ஆசிரியர் அழைக்கிறார். ஆசிரியர் வன்முறையை வெறும் துப்பாக்கிச் சத்தமாக மட்டும் பார்க்கவில்லை. அது அந்த நிலத்தின் பாறைகளிலும், காற்றிலும் உறைந்திருப்பதாகக் கூறுகிறார். பல தலைமுறைகளாகத் தொடரும் இனக்குழு மோதல்கள், “தந்தையர்கள் தொடங்கிய போரை மகன்கள் தொடர வேண்டிய கட்டாயத்தை” உருவாக்குகின்றன
“தந்தையரின் பேய்கள் மகன்களைத் துரத்துகின்றன” என்ற வரி, அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாறைக்குப் பின்னால் நடந்த ஒரு கொலை அல்லது ஒரு துரோகம், இன்றும் அந்தப் பாதையில் நடக்கும் ஒரு இளைஞனின் மனதை அச்சுறுத்துகிறது. அங்கு அரசியல் மோதல்கள் எப்படித் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
ஆசிரியர் எந்த ஒரு அரசியல் தரப்பையும் ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ இல்லை. மாறாக, அவர் மனிதாபிமானத்தின் பக்கமிருந்து பேசுகிறார்:
நதிக்கும் மழைக்கும் எல்லைகளோ, அடையாள அட்டைகளோ தெரியாது; ஆனால் மனிதர்கள் வரைந்த வரைபடங்கள் அந்த நிலத்தைப் பிளவுபடுத்தியுள்ளன. இது தான் இயற்கைக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடு வன்முறைக்கும் கிளர்ச்சிக்கும் நடுவே, ஒரு சராசரி மனிதன் தனது ‘தா’ (Dao -பாரம்பரியக் கத்தி) -வுடன் காடுகளுக்குச் சென்று மீன் பிடிப்பதும், உழைப்பதும் ஒரு மிகப்பெரிய ‘அரசியல் எதிர்ப்பு’ தான். அமைதியாக இருப்பதே அங்கு ஒரு பெரும் போராட்டம்.
மணிப்பூர் மற்றும் நாகா மலைப்பகுதிகளில் வன்முறை என்பது ஏதோ ஒரு நாள் நடக்கும் நிகழ்வு அல்ல; அது மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
காணாமல் போனவர்களின் கதைகள் இங்கு ஒரு மௌனமான வன்முறையாகத் தொடர்கின்றன. அவர்கள் எங்கே போனார்கள், எப்படி இறந்தார்கள் என்று தெரியாமல் காத்துக்கிடக்கும் கண்களில் அந்த வன்முறை நிலைத்திருக்கிறது. வன்முறை என்பது போர்க்களத்தில் மட்டும் இல்லை; அது ஒரு மகனை இழந்த தாயின் சமையலறையிலும் இருக்கிறது. ‘விண்ணுலகம் எதைச் சமைத்துக் கொண்டிருக்கிறதோ’ கதையில், அந்தத் தாயின் கற்பனை என்பது நிலத்தின் வன்முறையிலிருந்து தப்பிக்க அவர் கண்டறிந்த ஒரு வழியாகும்.
வன்முறை ஒரு பக்கம் இருந்தாலும், அங்கிருக்கும் மனிதர்களிடையே ஒரு விசித்திரமான, அதே சமயம் ஆழமான அன்பு இருக்கிறது. இதைத்தான் ஆசிரியர் ‘கரடுமுரடான கருணை’ என்கிறார்.
தந்தையர் மகன்களைக் கட்டிப்பிடித்து அன்பு செலுத்துவதில்லை. ஆனால், மலைப்பாதைகளில் மகன்களுக்கு முன்னால் நடந்து காற்றைத் தடுப்பதும், ஆபத்து வரும்போது கேடயமாக நிற்பதும் அவர்களின் ‘கரடுமுரடான அன்பின்’ வடிவம். தந்தை தன் மகனிடம் பேசும் குறைவான வார்த்தைகளில் ‘அதிகாரத்தை’ விட ‘அக்கறை’ அதிகமாக இருக்கும். தன் மகனின் பாதுகாப்புக்காகத் தனது பாரம்பரியக் கத்தியை (Dao) தீட்டுவதும், அவன் நகரத்திற்குச் செல்லும்போது உணர்ச்சிகளைக் காட்டாமல் காரின் ஹாரனை இருமுறை அடிப்பதும் அந்தக் கரடுமுரடான அன்பின் உச்சம்.
இந்தப் புத்தகத்தின் மிகச் சிறந்த பகுதியே, இந்த வன்முறைக்கும் கருணைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான். ஜிம் காசோம் சொல்வது போல, “மழைக்கு அரசியல் தெரியாது.” அது ஒரு ராணுவ வீரனையும் நனைக்கும், ஒரு கிளர்ச்சியாளனையும் நனைக்கும். அதேபோலத்தான் இந்தக் கருணையும். வன்முறையால் சூழப்பட்ட ஒரு நிலத்தில், ஒரு அந்நியனுக்குப் புகலிடம் கொடுப்பதும், அவருக்குத் தேநீர் தருவதும் சாதாரண செயலல்ல—அது ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சி. மழைக்கால மனிதநேயம் கதையில், மழையில் சேற்றில் சிக்கிய ஒரு வாகனத்தை மீட்க, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் ஒருவர் உதவுகிறார். அவர் நீண்ட உபதேசங்களோ அல்லது அறிமுகமோ செய்து கொள்வதில்லை.
அவர்கள் “நீங்கள் யார்? எந்த ஊர்?” என்று விசாரிக்க மாட்டார்கள். அந்த உழைப்பே அவர்களுக்கு இடையிலான பிணைப்பு. அந்த உதவி என்பது வார்த்தைகளால் ஆனது அல்ல; அது தோள்களின் உழைப்பால் ஆனது. மலைவாழ் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். “சோம்பேறித்தனம் பாவம்” என்ற அவர்களது கொள்கையே ஒருவரையொருவர் கைவிடாமல் உழைப்பதற்குக் காரணமாகிறது.
மலைகளில் ஒரு வழிப்போக்கனுக்கு நெருப்பு மூட்டித் தருவதும் (Meiphu), ஒரு கோப்பைத் தேநீர் வழங்குவதும் சாதாரண செயலல்ல. இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஒரு அந்நியனைத் தங்களது நெருப்பு மூட்டிக்கு அருகில் அமர வைப்பது மிகப்பெரிய மௌனமான மனிதாபிமானம். விருந்தோம்பலை ஒரு வழிபாடாகக் கொண்டவர்கள்.
வன்முறையையும் சந்தேகத்தையும் மட்டுமே பார்த்த கண்களுக்கு மத்தியில், ஒரு அந்நியனிடம் காட்டப்படும் அந்த ‘கரடுமுரடான கருணை’ தான் நாகா மக்களின் உண்மையான பலம். வன்முறை என்பது திணிக்கப்பட்டது, ஆனால் கருணை என்பது பிறவிக்குணம்.
“வன்முறை உன்னை நிலத்திலிருந்து பிரிக்க முயல்கிறது, ஆனால் இந்தக் கரடுமுரடான கருணைதான் உன்னை மீண்டும் உனது வேர்களுடன் பிணைக்கிறது” என்பதே காசோமின் இறுதிச் செய்தி.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தப் புத்தகம் ‘மணிப்பூர்’ என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வரும் ‘துப்பாக்கிகள்’ மற்றும் ‘வன்முறை’களுக்குப் பின்னால் இருக்கும் ‘மனித முகங்களை’ அரசியல் தெளிவுடன் காட்டுகிறது
ஜிம் காசோம் தனது புகைப்படக் கருவி வழியாகப் பார்ப்பது போலவே, இந்தப் புத்தகத்திலும் ‘வன்முறை’ என்பது அந்தப் புகைப்படத்தின் இருண்ட பின்னணியாகவும் ‘கருணை’ என்பது அதன் மேல் விழும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்றாகவும் இருக்கிறது., அவரது எழுத்துக்கள் மிகத் துல்லியமான காட்சிகளை உருவாக்குகின்றன. ஒரு முதியவரின் முகச் சுருக்கம், கார் ஹார்ன் அடிக்கும் சத்தம், காற்றில் மிதக்கும் வெட்டுக்கிளிகளின் இசை என வாசகர்களை அந்த மலைகளுக்கே அழைத்துச் செல்கிறார். அவரது கதைகள் ஒவ்வொன்றும் ஒரு “இலக்கிய புகைப்படச் சுருள்” போலத் தொகுக்கப்பட்டுள்ளன.
நூல் மற்றும் நூலாசிரியர் குறித்த தகவல்:
THE LAST FREE NAGA — JIM WUNGRAMYAO KASOM,
pub: Speaking Tiger -2025
OTHER WORKS:
HOMECOMING &OTHER STORIES (2020) – மணிப்பூரின் மலைப்பகுதிகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் ஏற்படும் இடப்பெயர்வுகள் குறித்த ஆழமான பதிவாகும்.
CRADLING MEMORIES OF MY LAND (2023) – சொந்த மண்ணின் நினைவுகளைப் பாடும் கவிதைத் தொகுப்பு.
***
அ.முனவர் கான் – தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் முகவரி: amkhansrv@gmail.com


