Sunday, May 3, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்எதிர் தொன்மத்தைக் கட்டமைத்தல்

எதிர் தொன்மத்தைக் கட்டமைத்தல்

டோனி பிரஸ்லர்

நாம் அனைவருமே ஏதோவொரு தருணத்திற்காக காத்திருக்கிறோம், மேலும் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். இன்பமே, உற்சாகம் தரக்கூடிய உணர்வு என்றாலும், சொர்க்கம் எப்படியிருக்கும் என்கிற கேள்வி போர்ஹேஸ் உட்பட யாரையும் விட்டு வைக்கவில்லை. சொல்ல போனால், நாம் நமக்கான அர்த்தங்களை, அனுபவங்களை, கடவுளை, நம்பிக்கையை, பாடல்களை சதா தேடிக்கொண்டே இருக்கிறோம். 

தமிழ் நிலத்திற்கு அன்னியமான டேனிஷ் சமூகத்திலிருந்து, தரங்கம்பாடியில் ஓர் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. அதுவும் உலகிலேயே இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டையாக சொல்லப்படுகிறது. மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய நீஸெவின் வேர்க்கனி நாவல், 17ஆம் நூற்றாண்டு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கடற்பயணத்தை மையமாகக் கொண்டது.

நாவல், டேனிஷ் கோட்டையை ஒரு புதிராக கட்டமைக்கிறது. அதற்கு கொடுக்கப்பட்ட விலையென்ன என்பதே, அதன் கலை நியாயத்திற்கு(poetic justice) அளிக்கப்பட்ட பணியென சொல்லலாம்.

வணிகத்தின் பெயரால் எழுந்த பிரார்த்தனைக்கும், கலை நுண்ணுணர்வு தரும் கூர்மையான விசாரணைக்கும் இடையே செல்லும் ஒரு கடல் பயணத்தில் – பயம், நோய், ஏக்கம், காதல், காலனியாதிக்கம் என புதிய சாகசங்களுக்கு தன்னையே ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் கதாபாத்திரங்கள்.

தன் நம்பிக்கையின் மீது தீராத பிரியமிருப்பவர்களாக, ஆழமான மனத்திட்பம் கொண்டவர்களே ஆவார்கள். ஏனெனில், வாழும் காலம் முழுக்க அந்நம்பிக்கை, அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேள்விக்கு உள்ளாகும், மறுதலிக்க இயலாமல் சூழலின் மாற்றத்திற்கு உட்பட வேண்டிய ஒவ்வொருவரும் நம்பிக்கையின் புதிர்மையை சீர் செய்ய தலைப்படுவர். அந்த நுண்ணுணர்வு தரக்கூடிய ஊக்கத்தால், மனதின் தீவிர எழுச்சியை ஒருவரால் கவனித்து கூர்ந்து பார்க்கவும், திக்கு தெரியாத பயணத்தின் போது, மனம் கொள்ளக்கூடிய அலைக்கழிப்பின் தீவிரத்தை உக்கிரமாக உணரவும் முடியும். மயிலனின் எழுத்தை அவ்வாறே உணர்கிறேன்.

ஏற்கனவே இதற்கு பழக்கப்பட்டது போல கதாபாத்திரங்களுக்கான முன் அனுமானமும், கதையோட்டத்திற்கு பின்பான யூகமும் உற்சாகம் தருவதாக உள்ளது. 

நாவல் தொடங்கும் பின் மதிய உரையாடலில் பீடிகை ஒன்று துலக்கம் பெறுகிறது.

நீஸெ நம்முடைய டானிஷியத் தொன்மத்தின் நல்லாவி, மனித உருவங்கொண்ட ஒரு மிகச் சிறிய நுண்ணுரு.” என்று nissey என்கிற தொன்ம கதாபாத்திரம், நேதா மற்றும் விர்கஸ் நண்பர்களிடையே ஆத்மார்த்தமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதற்கு சான்றாக கலை சார்ந்த உரையாடல் விளங்கும். அடுத்து, கிழக்கிந்திய நிறுவனம் என்கிற கனவின் நீட்சியாக டேனிஷ்க்காரர்கள் கிளம்புகிறார்கள். வணிக கனவும், காதலின் உள்முரண் மோதலும் மிக்க விதிக்காக தங்களது திட்டங்களை வகுக்கிறார்கள்.

சரளமான தெளிந்த மொழி நடை மிக்க வேறொரு காலத்தில் செல்லும் கடற்பயணத்தில், பெருங்குழப்பத்தை உண்டாக்கும் நோய் பீடித்தும், பயம் முற்றி போயும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் கப்பலில் எவ்வித ஏற்றதாழ்வும் இன்றி அனைத்து நம்பிக்கையும் சீர்க்குலைகிறது. இப்பயணம் எதற்கு என்ற புதிர்மையில் அழுத்தமான நிசப்தம் கேட்கிறது. 

இரண்டாவதாக துலக்கம் பெறும் வசனம். “காதல் ஓர் ஆகச்சிறந்த புத்திக்கொல்லி“. காதல், ஒரு வினை வேகம் தரக்கூடிய விஷயமாக ஊடு பிரதியாக இயங்குகிறது. கதாபாத்திரங்களில், போர்ப்படை தலைவனோ, கலைஞனோ, பாதிரியோ, கொள்ளையனோ, அரசனோ, எவராயினும் தானறிந்த வாழ்வின் அர்த்தமும் பற்றும் அற்றுப்போகும் போது தன்னழிவுக்கு தன்னை ஒப்புக்கொடுகிறார்கள்.

அதிகாரிக்கு, அவனது அதிகாரம் பசியை தீர்க்கிறது. அவனுக்கு குற்றமே உடைமை, ஆனால் குற்றவுணர்வு இல்லை. அதிகாரத்திற்கு கலக்கம் கொள்ளும் மனசாட்சி கிடையாது.

தன் மீது குற்ற உணர்வு கொள்ளும் நேதா என்பவனோ, ஒரு குற்றமும் அறியாதவன். குற்றவுணர்வால் புழுங்கி உழல்கிறான். மனசாட்சி படைக்கப்பட்டவனாக இருக்கும் இவனே, கதையின் நுண்ணுணர்வு மிக்க வேலைப்பாடாகவும் இருக்கிறான்.

அதிகாரம் என்பது ஒரு மனிதனை மட்டும் மாற்றுவதில்லை. அவன் வாழும் நிலத்தின் வரலாற்றையே மாற்றிவிடுகிறது. ஏக்கம் கொண்டு வரும் நோய்களின் ரகசிய பிரேமையை கூட கண்டுகொள்வதில்லை. அதிகார தீவிரம் உண்டாக்கும் போக்கு காரியத்தைத் தவிர வேறெதையும் சட்டை செய்வது இல்லை.

நீஸெவின் வேர்க்கனி என்பது என்ன ?

நீஸெ என்பது டேனிஷ் மக்களின் ஆன்மாவை பிரதிபலிக்கும் தொன்ம கதாபாத்திரம். நீஸெவானது பயிரிடும் நிலங்களை பாதுகாத்து வைக்கும், மிருகங்களை கவனித்துக் கொள்ளும். நீஸெ மீது யாரும் அக்கறை காட்டவில்லை என்றால் கோபமடைந்து, பயிர்களை அழித்து, மிருகங்களை துன்புறுத்தும், துரோகம் செய்யும். 

ஆகவே, டேனிஷ் நிலத்தின் தொன்ம பாதுகாவலன் நீஸெ. விவசாய நிலத்தின் வேர்கனியே சீனிக்கிழங்கு. சீனிக்கிழங்கு (பூஞ்சை ஏறும் கிழங்கு) வேர்க்கனியாக உருவகப்படுத்தப்படுகிறது.

பூஞ்சை ஏறும் கிழங்கையும், கதையின் மனதை உசுப்பும் குற்றவுணர்வையுமே, அதிகார அடக்குமுறையை எதிர்க்கும் ஆயுதமாக மயிலன் கட்டமைக்கிறார்.

சொல்லப்போனால், mythological fiction ஆக மாறியிருக்க வேண்டிய கதையாடல், ஒரு புதிய திசையை இங்கே நிர்ணயிக்கிறது. இது நவீன புனைவின் எல்லையை விரிவாக்குகிறது. தமிழின் முதல் MYTHPUNK என்கிற சாத்தியத்தை இப்புனைவு பிரதி உண்டாக்குகிறது. எதிர் தொன்ம கட்டமைப்பு கொண்ட கதைக்கூறலாக கலைத்து அடுக்குவதால், மனித இயல்புகளை உள்ளடக்கிய கதையோட்டமாக, நவீன புனைவாக்கத்தின் அதிர்வுகளுக்கு செல்திசை கொடுக்கும் என்று தாராளமாக நம்பலாம்.

மயிலன் பின்னுரையில் சொல்வது போல, 

மிச்சமிருக்கும் நாளில் மனிதன் தன்னால் இயன்ற எதையேனும் முயன்று தனக்குத் தன்னையே நிரூபித்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. 

‘தனக்குத் தன்னையே’ என்ற ‘தளர்வகற்றும் சித்திரவதையின்’ மற்றொரு விளைவுதான் இந்தப் படைப்பும்”. 

Citation: நீஸெவின் வேர்க்கனி – மயிலன் ஜி சின்னப்பன் : சால்ட் பதிப்பகம் 

***

டோனி பிரஸ்லர் – கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார்.  2023ல் பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பின் ஆசிரியராகவும், 2024ல் ககனம் என்ற கவிதைத்தொகுப்பும் வெளியிட்டுள்ளார். நவீன தமிழ் புலத்தை சேர்ந்தவர். மின்னஞ்சல் : tonypresslers@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here