நிஜந்தன்
லட்டுவை நான் திரும்பவும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. லட்டுவுக்கு வயதாகியிருந்தது. லட்டு என்று உடனே அடையாளம் காண முடியவில்லை. பேச்சுவாக்கில் லட்டு என்று உறுதி ஆனது. லட்டுவை அப்படிக் கற்பனை செய்ய முடிந்திருக்கவில்லை. காலம் கடந்தால் லட்டு என்ன, யாராக இருந்தாலும் மாற்றம் வந்திருக்கும்.
லட்டுவுக்கு சுமார் ஐந்து வயதிருக்கும்போது முதலில் எதிர்ப்பட்டான். மிகவும் குறும்பான சிறுவனாகத் தெருவில் திரிந்தான். அப்போது அவன் முதல் வகுப்புப் படித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். அல்லது அதற்குக் கீழ் வகுப்பில் இருந்திருக்கலாம். பெரும்பாலும் அவன் கால் சட்டை அணியாமலேயே திரிந்தான். சாலைகளில் மலம் கழித்தான். வீடுகளின் முன்பாக மலம் கழித்தான். வீட்டுப் பெண்கள் கடும் கோபம் அடைந்தார்கள். சிலர் அவன் மீது தண்ணீர் தெளித்து அனுப்பினார்கள். அவன் வந்து மலம் கழித்துவிடாமல் இருக்க வீடுகளின் வாசல்களில் தனியாகக் கவனம் செலுத்தினார்கள்.
லட்டு பல நிறங்களில் மலம் கழித்தான். ஒரு முறை ரோஸ் வண்ணத்தில் அவன் கழித்த மலம் தெருவோரங்களில் காய்ந்தது. ஒரு முறை அவன் அடர் பச்சை நிறத்தில் மலம் கழித்தான். சாலை முனைகளில் இருந்த தண்ணீர் அடிக்கும் பம்புகளின் அடியில் அவன் குதம் கழுவினான். தண்ணீர் பிடிக்க வந்த பெண்மணிகள் அவனை அடித்துத் துரத்தினார்கள். அவர்களிடம் லட்டுவின் தாயார் செல்லமாகச் சண்டை போட்டாள்.
லட்டு குடியிருந்த வீட்டில் ஏராளமான குடித்தனங்கள் இருந்தன. அங்கு பல வீடுகளுக்கு ஒரே கழிவறை இருந்தது. அதனால் லட்டு சாலையோரங்களை கழிவறையாகப் பயன்படுத்தினான். இதனால் பலரின் வெறுப்பை அவன் ஈட்டிக்கொண்டான். எப்போதும் மோசமான வயிறு கொண்டிருந்த அவன் எப்போது பள்ளிக்குப் போனான், எப்படி வகுப்பில் இருந்தான் என்பது வியப்பு ஏற்படுத்தியது.
ஒரு நாள் அந்தச் சூழலில் இருந்து லட்டு காணாமல் போனான். அல்லது நான் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தேன்.
ஆனால் லட்டு என்ற பிம்பம் மட்டும் எப்போதும் நினைவில் பதிந்து போயிருந்தது.
பல ஆண்டுகள் கழித்து லட்டுவை மீண்டும் சந்திக்க நேரிடும் என்று நினைக்கவில்லை.
ஒரு அழகுப் பொருள் அங்காடி முன்னால் லட்டு எதிர்ப்பட்டான். என்னைப் பார்த்ததும் அவன்தான் வந்து பேசினான். அப்போது அவன் லட்டு என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவனை அறிந்தவன் என்றுகூட அவனுக்குத் தெரியவில்லை.
அந்த அங்காடியின் கீழ்ப்பகுதியில் ஒரு உளவியல் சிகிச்சை மையம் இருந்தது. அங்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் அந்த வளாகத்தில் நிற்பது வழக்கமாக இருந்தது. அப்படி ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான் என்று நான் கடந்து போக நினைத்தேன். யாரோ ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு லட்டுவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒரு தொலைக்காட்சி நெறியாளனாக, வலைக்காட்சி தொகுப்பாளனாக, அரசியல் விமர்சகனாக என் முகம் சமூகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது.
ஓரமாக நின்றுகொண்டிருந்த லட்டு என் முன்னால் ஏறக்குறையக் குதித்தது போல வந்து நின்றான்.
லட்டுவுக்கு வயதாகியிருந்தது. கண்ணாடி அணிந்திருந்தான். நெற்றி முன்னால் முடிக் கற்றை விழுந்தது. அதுதான் அவனை லட்டு என்று எனக்கு அடையாளம் காட்டியது. பிறகு அந்த முன்பற்கள் அவனை எனக்கு அவன்தான் என்று நிரூபித்தன. சுமார் முப்பது ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோதும் லட்டுவின் அடிப்படைகள் அப்படியே இருந்தன.
நேராக அவன் என்னிடம் கேள்விதான் கேட்டான்.
‘ஏன் சார், ஊடகங்களில் சர்ச்சையாகப் பேசினால் ஜெயிலில் போட்டுவிடுவார்களா?’ என்று அவன் கேட்டான்.
எனக்கு உடனே புரியவில்லை.
அவன் என் முகத்தை அடையாளம் கண்டுகொண்டு ஊடகங்களில் கருத்துச் சொல்வது பற்றித்தான் கேட்கிறான் என்று புரிந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னாலும் அவன் லட்டு என்று எனக்கு அடையாளம் தெரிந்ததுதான் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்தது.
அவன் பேசிக்கொண்டே போனான்.
‘சார், நான் யூட்யூபில் பேசுகிறேன். என் ப்ளாக்கில் கருத்துப் போடுகிறேன். இந்த அரசியல்வாதிகள் எல்லாம் செய்யற காரியத்தைக் கழுவி ஊற்றுகிறேன். ஆனால் அப்படிச் செய்தால் கைது செய்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையா சார்?’ என்று மிகுந்த அப்பாவியாக அவன் கேட்டான்.
அவனிடம் ஒரு இயல்பின்மை இருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவன் கழுத்து இறுக்கமாக இருந்தது. கண்களில் சோர்வு இருந்தது. அவன் உளவியல் சிகிச்சை மையத்திற்கு வந்திருந்தவன் என்று பார்த்தவுடன் புரிந்தது.
அவனைப் பதிவு செய்துகொள்வதிலேயே என் கவனம் இருந்தது.
‘நீங்க சங்கர்தானே’ என்றேன் நான்.
‘எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?’ என்று லட்டு ஆச்சர்யப்பட்டான்.
அவன் பெயர் சங்கர் என்று என் நினைவுக்கு வந்ததுகூட ஆச்சர்யம்தான்.
லட்டு என்ற சங்கரை யாரால் மறக்க முடியும்?
இயற்கை உபாதையை வைத்துக்கொண்டு ஒரு தெருவையே கதிகலங்க வைத்தவன் அல்லவா அவன்? அவனை என் பிற கதைகளில்கூட பயன்படுத்தியிருந்த நினைவு எனக்கு உண்டு. அவன் சிறிய வயதில் இருந்த உயரத்திற்கு இப்போது அதிக உயரமாகி இருக்க வேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் நடுத்தர உயரத்திலேயே அடங்கிவிட்டான்.
‘தெரியும்’ என்றேன் நான்.
அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
‘சார், நீங்க புரசைவாக்கத்தில இருந்தீங்களா?’ என்றான் அவன்.
‘ஆம்’ என்றேன் நான்.
‘நான் சின்னக் குழந்தையா இருந்தபோது அங்கே இருந்தேன்’ என்றான் அவன்.
‘ஆம்’ என்றேன் நான்.
நீ சின்னக் குழந்தையா இருந்தபோது செய்த அட்டூழிங்கள் கொஞ்சமா, என்று நான் நினைத்துக்கொண்டேன்.
‘சார், நான் இந்த அரசியல்வாதிகளை போட்டுப் பிழிஞ்சு எடுக்கறேன் என் வீடியோவுல எல்லாம். அதனால எனக்குப் பிரச்சனை வருமா?’ என்று கேட்டதையே அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.
‘அளவாப் பேசினா, ஒன்னும் ஆகாது’ என்று நான் கூறினேன்.
‘அந்த அளவுதான் என்னன்னு தெரியலை சார். இந்த அரசியல்வாதிங்க செய்யற அட்டூழியம் கொஞ்சமா சார்’ என்றான் அவன்.
நான் அமைதி காத்தேன்.
‘அப்புறம், இந்த சினிமாக்காரங்களைப் பத்தியும், நிறையப் பேசறேன் சார். அவுத்துப் போட்டுட்டு ஆடறது. பிறகு பத்தினிங்க மாதிரி பேசறது. குடிச்சுட்டு சுத்தறது. பிறகு உத்தமனுங்க மாதிரி அறிவுரை கொடுக்கறது. இதை எல்லாம் எதிர்த்து நான் குரல் கொடுக்கறேன் சார்’ என்றான் அவன்.
‘அதையும் நாகரீகமா செய்யுங்க’ என்று நான் சொன்னேன்.
‘உக்காந்து பேசலாமா சார்’ என்றான் அவன்.
அருகில் இருந்த நீண்ட படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டோம். எதிரில் இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர்கள் மெதுவாக இறங்கி நடந்து சென்றார்கள். நிலையத்திற்குள் எதிரொலித்த அறிவுப்புக் குரல் கொஞ்சம் மனதைக் கலங்கடித்தது.
‘இங்கே எங்கே வந்தீங்க?’ என்று நான் கேட்டேன்.
எனக்கு ஆவல் தாங்க முடியவில்லை.
‘எனக்கு கொஞ்சம் பிரச்சனை சார்’ என்றான் அவன்.
நான் எதுவும் சொல்லவில்லை.
அவன் உடனே இறுக கண்களை மூடிக்கொண்டான்.
‘வாழ்க்கையில் நான் கண்ட பிரச்சனைகளை சொன்னால் நீங்க அழுதுடுவீங்க சார்’ என்று சொல்லிவிட்டு அவன் கண்களை மூடிக்கொண்டான்.
‘என்ன ஆச்சு’ என்றேன் நான்.
அவன் வெகு நேரம் பேசவில்லை.
‘காலாற நடந்து போய்ட்டு வரலாமா’ என்றான் அவன்.
சாலையில் போக்குவரத்து படு வேகமாக இருந்தது. கிளை சாலையில் இறங்கி நடந்தபோது அவன் அடிக்கடி இருமிக்கொண்டான். துக்கம் தொண்டையை அடைத்தது என்று புரிந்தது.
’சார், நான் ஒரு பொறுப்பான பிரஜை சார்’ என்றான் அவன்.
அதுதான் குழந்தை காலத்திலேயே தெரியுமே என்று நான் நினைத்துக்கொண்டேன்.
‘சார் நான் என் மனைவியைக் கொலை செய்யலாம்னு முடிவு பண்ணேன் சார்’ என்று அவன் அதிர்ச்சி அளித்தான்.
ஏன் என்பது போல்தான் நான் அவனைப் பார்த்தேன். அவன் என் அதிர்ச்சி பாவனையை ரசித்தவன் போல இருந்தான்.
‘ஆமாங்க சார். ரொம்ப இம்சை பன்றா. தாங்கல சார். என் அரசியல் விமர்சனங்களைப் பார்த்து இந்த அரசியல்வாதிங்க எனக்கு மிரட்டல் கொடுக்கற மாதிரி ஆயிடுச்சு சார்’ என்றான் அவன்.
‘அப்படியா’ என்றேன் நான்.
‘ஆமாங்க சார். நேரா பயமுறுத்த மாட்டாங்க. இலேசாத்தான் மிரட்டல் வரும். தெரிஞ்சவங்க மாதிரி வந்து, இப்படி எல்லாம் பேசுனா அவ்வளவுதான்னு அன்பா மிரட்டுவாங்க சார்’ என்றான் அவன்.
அவன் கொஞ்சம் கற்பனை செய்துகொள்கிறான் என்று எனக்குப் புரிந்தது.
‘சார், அது மட்டும் இல்ல சார். ஒரு நாள் என் கனவுல ஒரு அரசியல்வாதி வந்து என் காலை வெட்டிட்டாரு சார்’ என்றான் அவன்.
நான் சிரித்துவிட்டேன்.
‘சார். என் வாழ்க்கைப் பிரச்சனை பத்திப் பேசறேன். நீங்க என்னடான்னா, சிரிக்கறீங்க’ என்றான் அவன்.
‘இல்லை சாரி, சொல்லுங்க’ என்றேன் நான்.
ஒரு இருள் சாலை வந்துவிட்டது. வாகனப் போக்குவரத்தும் குறைந்துவிட்டது. ஓரிரு இரு சக்கர வாகனங்கள் மட்டும் போய்க்கொண்டிருந்தன. ஏதோ கிராமத்திற்கு வந்துவிட்டது போல இருந்தது. அடர்ந்த மக்கள் தொகையும், வாகன நெரிசலும் இருந்த நகரப் பகுதிக்கு அருகே இப்படி ஒரு கிராமத்தன்மை கொண்ட இடம் இருந்தது ஆச்சர்யம் அளித்தது.
‘சார். என் மனைவியும் என்னை மிரட்டத் தொடங்கிட்டா சார்’ என்றான் அவன்.
‘அது எப்படி. நீங்க சொன்ன புரிஞ்சுக்க மாட்டாங்களா?’ என்றேன் நான்.
’இல்லை சார். அரசியல்வாதிங்க சில பேர் கிட்ட போட்டுக் கொடுப்பவளே இவள்தான் சார்’ என்றான் அவன்.
’சே’ என்றேன் நான். கொஞ்சம் பாவனை கூடிவிட்டது போல் இருந்தது.
’சார். கேலி பண்றீங்களா’ என்று மிகுந்த வருத்தத்துடன் கேட்டான் அவன்.
’இல்லைங்க சங்கர். நான் வருத்தமாத்தான் சொன்னேன்’ என்றேன் நான்.
‘அதனால்தான் எனக்கு ரொம்ப மன உளைச்சல் சார். என் மன நிம்மதிக்காகத்தான் நான் அந்த ஆலோசனை நிலையத்திற்கு வர்றேன் சார்’ என்றான் அவன்.
‘என்ன சொன்னாங்க?’ என்றேன் நான்.
அவன் அமைதியாக இருந்தான். அதற்குள் ஒரு விளையாட்டு மைதானம் அருகே நாங்கள் வந்துவிட்டிருந்தோம்.
அங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். உயர்ந்த கோபுர விளக்குகளிலிருந்து ஒளி வெள்ளம் பாய்ந்தபடி இருந்தது. சிறுவர்களின் உற்சாகம் மயக்கும் வகையில் இருந்தது. அப்போதும் லட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். என் காதில் அதிகமாக விழவில்லை.
‘சார் எனக்கு மன அழுத்தம் தீருமா?’ என்றான் லட்டு.
‘தீரும்’ என்று நான் கூறினேன். தூரத்தில் ஒரு சிறுவன் அடித்த பந்து சிக்சரை எட்டுமா என்பதிலேயே என் கவனம் இருந்தது.
‘என் மனைவியைக் கொன்றுவிடுவேனோ என்று பயமாக இருக்கு’ என்றான் அவன்.
‘கொல்ல மாட்டீங்க’ என்றேன் நான். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து காட்ச் ஆகிவிட்டது. நான் உரக்க, ‘அவுட்’ என்று கத்திவிட்டேன்.
‘அவுட்டா சார்’ என்றான் லட்டு.
’ஆம்’ என்றேன் நான்.
‘சார் எனக்கு வயிறு வலிக்குது. டாய்லெட் போகணும்’ என்றான் அவன். முகத்தில் பதற்றம். கழுத்தில் வியர்வை வழிந்தது அவனுக்கு. ரொம்பவும் அவசரம் என்று புரிந்தது.
பக்கத்தில் எங்கு பொதுக் கழிவறை இருந்தது என்று தெரியவில்லை. அருகில் மாநகராட்சி கழிவறை ஏதாவது இருக்கும் என்று தோன்றியது. அவனை அழைத்துக்கொண்டு நானும் தேடினேன். அவன் மிகுந்த பதற்றத்தில் இருந்தான். ஒரு கை அவனுடைய வயிற்றைப் பிடித்தபடியே இருந்தது. அவன் முகம் கழுத்திலிருந்து கீழே தொங்குவது போல் மாறிவிட்டது. அவனால் அடக்க முடியவில்லை. தொலைவில் ஒரு இடிந்த கட்டிடம் போல் தெரிந்தது. வேகமாக அங்கு நடந்து சென்றபோது அது ஒரு கழிவறை என்று புரிந்தது. அவன் உடனே உள்ளே சென்று பார்த்தான்.
‘ஐயோ தண்ணீ வரலை’ என்று வேகமாக அவன் வெளியே வந்தான். அந்த தெரு நீண்டுகொண்டே போனது.
‘ஏதாவது ஒரு ஹோட்டலுக்குப் போயிடலாம்’ என்றேன் நான்.
‘ம், சரிங்க சார்’ என்றான் அவன்.
வெகு தூரம் நடக்க வேண்டியிருந்தது. தொலைவில் சாலைகள் மின்னுவது தெரிந்தது. அங்கு சென்றுவிட்டால் ஏதோ ஒரு உணவகம் அகப்படும். லட்டுவும் ஆசுவாசப்படுத்திக்கொள்வான்.
நடக்க நடக்க அந்த சாலை நீண்டுகொண்டே போனது. அவனுக்கு வயிற்று வலி அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. அவன் முகத்தில் துயர ரேகைகள் வளர்ந்து வந்தன. அவன் நேரடியாக என்னிடம் கேட்டான்.
‘நான் இந்த தெருவிலேயே போய்விடட்டுமா?’
’அடி பின்னிடுவாங்க. அவ்வளவுதான். ஓட ஓட விரட்டி அடிப்பாங்க’ என்றேன் நான்.
‘என்னால தாங்க முடியல’ என்றான் அவன்.
‘கொஞ்சம் தாங்கிக்கங்க’ என்றேன் நான்.
அவன் அமைதியாக வந்தான்.
நான் பேச்சை மாற்ற நினைத்தேன்.
‘எந்த அரசியல்வாதியை இனி திட்டுவதாக உத்தேசம்’ என்றேன் நான்.
அவன் உற்சாகம் அடைந்தான். பேசினால் போதும் என்று உணர்ந்தவனாக அவன் ஆனான். அவனுடைய வயிற்று வலி மறந்துவிட்டவன் போல அவன் மாறினான்.
‘யார் அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிறாங்களோ, அவங்க அத்தனை பேரும் என்கிட்ட திட்டு வாங்குவாங்க சார்’ என்றான் அவன்.
‘ஏனாம்’ என்றேன் நான்.
அவன் பாட்டுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கினான். முதலமைச்சர் ஆக நினைப்பவர்களுக்கு அடிப்படை கொள்கை இல்லை, மக்கள் நலன் சார்ந்த நோக்கம் இல்லை, சமூகப் பொறுப்பு இல்லை என்று அவன் பேசிக்கொண்டே போனான். சாலையும் நீண்டுகொண்டே போனது. போகிற போக்கில் அவன் கழிவறைக்குப் போக வேண்டும் என்பதையே மறந்துவிட்டிருந்தான்.
ஒரு நாள் அவன் வீட்டில் கழிவறையில் அமர்ந்திருந்தபோதுதான் அந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது என்று அவன் அதிர்ந்து கூறினான். அப்போது நாங்கள் ஒரு தெரு விளக்கின் கீழே நின்றுகொண்டிருந்தோம். அவனுடைய தலை மீது ஒளி பாய்ந்து அவன் ஒரு அறிஞன் போலத் தோன்றினான். இத்தனை அறிவொளி மிக்க ஒருவனை வெறும் கழிவு நீக்குபவன் போலப் பார்த்துவிட்டேனே என்று நான் நினைத்துக்கொண்டேன்.
அன்று அவனுடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவன் கருப்பு நிறப் பேண்டும் வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவன் நீல நிற ஜீன்ஸும், பழுப்பு நிற சட்டையும் அணிந்திருந்தான். இருவரும் உயர்ந்து கனத்திருந்தார்கள். கதவு திறந்த லட்டுவின் கண்களை அவர்கள் விடாமல் பார்த்தார்கள். அவனும் பார்த்தான். அவனை அவர்கள் தாக்கிவிடுவார்கள் போல இருந்தது. வயிற்றிலிருந்து முழுக்கக் கழிவு நீங்கியிருக்கவில்லை. அவனுக்கு வயிறு வலித்தது. அவர்கள் ஏதாவது கூறினால் அவன் வாசலிலேயே கழிவு நீக்கிவிடுவது போலத்தான் அப்போது இருந்தான். வந்தவர்கள் அதிகம் பேசவில்லை.
அவன் உற்றுப் பார்க்க முடியாமல் கொஞ்சம் பார்வையை விலக்கிக்கொண்டான். அவர்களில் ஒருவன் பேசினான்.
‘என்னா, யூட்யூப் எல்லாம் பலமா இருக்கு?’ என்றான் அவன்.
‘ம்’ என்று மட்டும் சொல்லி வைத்தான் லட்டு.
‘பாத்து, பல்லு விழுந்துடப் போவது’ என்று சொல்லிவிட்டு மற்றவன் சிரித்தான்.
லட்டு சிரிக்க முடியவில்லை.
அவர்கள் சிரித்தபடியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஏறிப் பறந்துபோனார்கள்.
அப்போது தொடங்கிய நடுக்கம்தான். அவனைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. இனி அவன் எந்த வீடியோவும் போடக் கூடாது என்று அவனுடைய மனைவி உத்தரவு போட்டுவிட்டாள். அவளுக்குத் தெரியாமல் அவன் ஏதோ ஒரு ஐடியில் வீடியோ போட்டாலும் அவளுக்குத் தெரிந்துவிடுகிறது. அவனை மிரட்ட அவள்தான் ஆட்களை வீட்டுக்கு அனுப்புகிறாள் என்று அவன் நினைத்துக்கொண்டான். அவளுடைய இம்சை தாங்காமல் அவளைக் கொன்றுவிடலாம் என்றுகூட அவன் நினைக்கத் தொடங்கிவிட்டான். ஆனால் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தீர்வு காண வேண்டும் என்றுதான் அவன் உளவியல் ஆலோசனைக்கு வந்திருந்தான். வந்த இடத்தில் அவன் என்னைச் சந்தித்துவிட்டான்.
இனி அரசியல் விமர்சனங்கள் செய்தால் மிரட்டல் நிச்சயம் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. அப்படி இல்லை என்று நான் சொன்னாலும் அவன் நம்பும் நிலையில் இல்லை. அவனுக்கு அரசியல் விமர்சனம் செய்யும் விருப்பம் இல்லை என்று நான் உணர்ந்தேன். அதை நிறுத்திக்கொள்ள அவனுக்கு ஒரு சாக்கு வேண்டியதாக இருந்தது. அதற்காக அவன் இப்படி உளவியல் ஆலோசனை என்றெல்லாம் அலைகிறான் என்று நான் நினைத்துக்கொண்டேன். அவன் உள்ளூரச் சிரித்துக்கொள்வதை நான் கவனித்தேன். அவனும் அதைப் பதிவு செய்துகொண்டான். இனி அரசியல் விமர்சனங்களை அவன் நிறுத்திக்கொள்வான் என்றுதான் தோன்றியது.
’அதுதான் இல்லை’ என்றான் அவன்.
அப்போது ஒரு பைக் வேகமாகச் சாலையில் வந்தது. ஒதுங்கி இடம் கொடுக்கலாம் என்று நினைத்தால் அந்த பைக் எங்கள் அருகில்தான் வந்து நின்றது.
என்னைப் பார்த்ததும் பைக்கில் வந்தவர்கள் அடையாளம் கண்டுகொண்டு ஏதோ கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் அவர்கள் லட்டுவைப் பார்த்த விதம் அபாயகரமானதாக இருந்தது.
ஒருவன் பைக்கிலிருந்து இறங்கி லட்டு அருகே சென்றான். லட்டு கண்களில் கிலேசம் படர அவனைப் பார்த்தான்.
’நீதான் சங்கரா?’ என்றான் அவன்.
‘ஆமாங்கண்ணா?’ என்றான் லட்டு.
‘என்னடா லோமாங்கண்ணா’ என்று அவன் லட்டுவை ஒரு அறை விட முயற்சித்தான்.
‘அண்ணா. இல்லைங்கண்ணா’ என்று லட்டு அழுதுவிட்டான். அவன் சிறு வயதில் ஒரு முறை அழுததுதான் என் நினைவுக்கு வந்தது.
‘கொன்னுடுவேன்டா’ என்றான் லட்டுவை அடிக்க வந்தவன்.
‘இல்லைங்கண்ணா, இல்லைங்கண்ணா. இனிமே என் யூட்யூப் சேனல்ல யாரையும் திட்டிப் பேச மாட்டேன் ணா’ என்றான் லட்டு.
‘இன்னாது. யூட்யூப் சேனலா? அது இன்னாது? டேய் ரூட்டை மாத்தறியா? என்று அடிக்க வந்தவன் மீண்டும் பாய்ந்தான்.
லட்டு வெடவெடத்துப் போனான். அவனுடைய கை கால்கள் நடுங்கின.
‘ஆமாங்கண்ணா. யூட்யூப் சேனல்ல எந்தக் கட்சியையும் இனி திட்ட மாட்டேன் ணா’ என்றான் லட்டு மிகவும் பவ்யமாக.
‘டேய். நீ யாரை திட்டினா என்ன, திட்டாட்டி என்ன? எனக்கு என்ன மயிராப் போவது’ என்று வந்தவன் மீண்டும் சீறினான்.
’பின்னே எதுக்குங்கு கோபம்?’ என்றான் லட்டு.
‘டேய். நேத்தைக்கு எங்க வீட்டு முன்னாலே ஏண்டா வந்து ரெண்டுக்கு போன?’ என்றான் அடிக்க வந்தவன்.
‘இல்லைங்க’ என்றான் லட்டு.
‘இனிமே இப்படி ஏதாவது பண்ண. கொன்னுடுவேன் பாத்துக்க?’ என்றான் அடிக்க வந்தவன்.
லட்டு மிகவும் அமைதியாக நின்றான்.
வந்தவர்கள் மீண்டும் படுவேகமாக பைக்கில் பறந்தார்கள்.
‘இவங்கதான் உங்கள மிரட்டுனவங்களா லட்டு?’ என்றேன் நான்.
‘லட்டு. அது என் சின்ன வயசுப் பேரு. அதை வச்சுக் கூப்பிடறீங்க?’ என்றான் லட்டு.
’லட்டு, லட்டுதானே’ என்றேன் நான்.
‘ஆமா. இப்போ வயிறு ரொம்ப வலிக்குது. என்ன செய்ய?’ என்றான் லட்டு.
’கொஞ்ச தூரத்துல ஒரு ஹோட்டல் வந்துடும். போகலாம்’ என்றேன் நான்.
’முடியாது’ என்று அவன் உறுதியாகக் கூறினான்.
அந்த இடம் அவ்வளவாக இருட்டாக இருக்கவில்லை. ஒரு நவீன குப்பைத்தொட்டி அங்கு இருந்தது. அதில் ‘மட்கும் குப்பை,’ ‘மட்காத குப்பை’ என்று எழுதி இருந்தது. லட்டு அந்த குப்பைத்தொட்டி பின்னால் சென்று மறைந்து அமர்ந்துவிட்டான். எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.
நான் மெதுவாக நடந்து சென்றேன். முக்கியச் சாலை வந்துவிட்டது. வாகனங்கள் இரைச்சலுடன் வேகமாக நகர்ந்தன. சின்னச் சின்னதாய் உணவகங்களும் அங்கு இருந்தன. கொஞ்சம் பொறுத்திருந்தால் அதில் ஒன்றை லட்டு பயன்படுத்தியிருக்கலாம். அவனுடைய தொடக்க காலப் பழக்கம் இப்போதும் போயிருக்கவில்லை. அவன் வேகமாக வந்து என் பின்னால் மெதுவாக நடந்தான். நான் அவனிடம் எதுவும் பேச விரும்பவில்லை.
‘கழுவுனீங்கா?’ என்று மட்டும் கேட்டேன்.
‘ம் ஆமா. அங்கேயே ஒரு பைப் இருந்தது’ என்று அவன் மிகுந்த பெருமையுடன் கூறினான்.
மீண்டும் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அவன் மீது மல நாற்றம் வீசியது. அவனிடம் நான் எதுவும் பேசவில்லை. நடையாகவே மீண்டும் நாங்கள் சந்தித்த இடத்திற்கே வந்துவிட்டோம். அந்த வளாகம் சற்று இருட்டாக இருந்தது. நேரம் போனது தெரியாமல் லட்டுவுடன் நான் பயணப்பட்டிருந்தேன். அந்த வளாகத்தில் இருந்த உளவியல் ஆலோசனை மையத்தில் இன்னும் கூட்டம் இருந்தது. எங்கிருந்தோ வேகமாக வந்த பெண் லட்டுவின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தாள்.
‘என்னா, எங்கே சுத்தப் போயிட்டே’ என்று அவள் கோபமாக சத்தம் போட்டாள்.
‘இல்லை. சாரோடப் பேசிட்டு இருந்தேன். அரசியல் விமர்சனம் செய்தால் மிரட்டல் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்’ என்றான் அவன் மிகவும் சாந்தமாக.
அந்தக் கணத்தின் நெருக்கடி உணர்ந்து அந்தப் பெண் சற்று அமைதியாக முயன்றாள். அவள் லட்டுவின் மனைவி என்று புரிந்தது.
‘சாரி சார்’ என்று அவள் என் கண்களைச் சந்திக்காமல் சொன்னாள்.
லட்டு ஒரு திருடன் போல முழித்துக்கொண்டே இருந்தான். ஒரு முறை அவன் உரக்கமாக ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி, ‘ஒழிக ஒழிக’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான்.
‘பிறகு ஒழிக்கலாம். நீ வா. உனக்குத்தான் அடுத்து டாக்டர் மீட்டிங்’ என்றாள் அந்தப் பெண்.
’ஒன்னு கக்கூஸ் போறது, இல்லாட்டி யாரையாவது பிடிச்சு திட்டறது’ என்று கொஞ்சம் அழாத குறையாக அந்தப் பெண் பொதுவாகக் கூறினாள். அது எனக்கான பேச்சாகத்தான் இருந்தது.
நான் அவளையே கவனிப்பதைப் பார்த்துவிட்டு அவள் நேரடியாக என்னைப் பார்த்தே பேசினாள்.
‘சும்மா, அரசியல் அரசியல்னு அலையறாருங்க. கண்டவனைத் திட்டிப்புட்டு வீணா வீட்டுக்கு பிரச்சனையாக கொண்டு வராறு. யாராவது வந்து மிரட்டினா உடனே கக்கூஸுக்குப் போயிடறாரு’ என்று அவள் புகாராகச் சொல்லி முடித்தாள்.
நான் எதுவும் பேசாமல் அவளையே கவனித்தேன்.
‘இவரை இப்போ சைக்காலிஜிஸ்ட் கிட்ட அழைச்சுட்டு வந்திருக்கேன். ஒன்னு இந்த திட்டற புத்திய நிறுத்தணும். இல்லாட்டி கக்கூஸ் போறதை நிறுத்தணும்’ என்று சொல்லிவிட்டு அவள் கொஞ்சம் சிரித்தாள்.
அப்போது அவன் வேகமாகச் சொன்னான்.
‘ஏய் போதும் நிறுத்து. இங்கே பக்கத்துல எங்கே கக்கூஸ் இருக்கு. அவசரமா வருது’ என்று அவன் பலமாகச் சொன்னான்.
நான் வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்.
‘சார். அரசியல்வாதிகளைத் திட்டினா அடிப்பாங்களா சார்’ என்று அவன் எதுவும் தெரியாதவன் போல என்னிடம் கேட்டான்.
‘இல்லை’ என்று நான் சொன்னேன்.
‘தூ’ என்றாள் அவனுடைய மனைவி.
‘என்ன பெயரில் நீங்கள் அரசியல் விமர்சனம் செய்கிறீர்கள்’ என்று அவனிடம் நான் கேட்டேன்.
‘கசக்கும் லட்டு’ என்றான் அவன்.
***
நிஜந்தன் எழுதிய முதல் சிறுகதை 1984ல் ‘கணையாழி’ இதழில் வெளியானது. 1985ல் தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற அவரது படைப்பு வெளியானது. 1990களின் தொடக்கத்தில் நாடகங்கள் எழுதி, அவற்றை நிஜந்தன் மேடையேற்றியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு 12 நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கின்றன. நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலுக்கு 2014ல் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. 37 ஆண்டு காலம் தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக, தலைமை செய்தி ஆசிரியராக, விவாத நெறியாளராக நிஜந்தன் பணியாற்றியிருக்கிறார். தற்போது வலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நிஜந்தன் நடித்து வருகிறார். மின்னஞ்சல்: knijanthan@gmail.com

