Homeஇதழ்கள்2026 இதழ்கள்மறப்பது நன்றன்று

மறப்பது நன்றன்று

பிரானா

ரண்டு கைகளாலும் தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. எனக்கு மேளச் சத்தம், சங்குச் சத்தம் இதெல்லாம் அறவே ஆகாது. ஆனால் இதையெல்லாம் நானே ஏற்பாடு செய்யும் நிலை வந்துவிட்டது. இப்போது ஐஸ் பெட்டிக்கு வேறு பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். கையை மீறி மட்டுமில்லை, கழுத்தை மீறியும் செலவாகிக் கொண்டிருக்கிறது. ஆகட்டும், இவளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒரு கணம் இங்கு வந்தே இருக்கக்கூடாது என்று தோன்றியது. மறுகணம், இதைச் செய்யாமல் வேறு என்ன மகத்தான காரியம் செய்ய இருக்கிறது என்ற கேள்வியும். எல்லாம் இந்தக் குடியைச் சொல்லவேண்டும். குடிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு சிரமம் கிடையாது. குடித்தால்தான் ஆழ்மன எண்ணங்கள் எங்கெங்கோ பாய்கிறதே. அதை செயல்படுத்தச்சென்று திருப்தியடையாமல் தோல்வியில்முடியும் ஒவ்வொரு புது அனுபவமும் “என்னதான் இருந்தாலும் அவளப் போல வருமா” என்ற மன ஏக்கத்தோடு முடிகிறது. அதனால்தான் இம்முறை அவளுக்கே போன் செய்தேன். சில நாட்களாக, நான் இதுபோன்று விஷயங்களில் ஈடுபடுவதில்லை. அதனாலே என்னவோ எனது குறி அடிக்கடி விறைப்பாக ஆனது. விந்து வெளியேறாததால் காந்தசக்தி கூடி கண்ணில் படும் பெண்கள் அனைவராலும் ஈர்க்கப்படுவது போல் உணர்ந்தேன். என்னுடைய இந்த சில நாள் ஒழுக்கத்திருத்தத்திற்கு காரணம் பணம்தான். பணப்பற்றாக்குறை அதிகரித்துவிட்டது.

ஏற்கனவே ஒன்றை அடைக்க இன்னொன்று என்று கடன் வாங்கி சுழற்சி முறையில் சமாளித்துக்கொண்டிருந்தேன். சற்று போக்குவரத்துமாய் இருந்ததால் இந்த சுழற்சியில் விரிசல்விழுந்துவிட்டது. அதனால், சிலநாட்கள் அடங்கியிருந்தேன். நான் கடன்பெற்றவர்கள்வேறு கடும் கோவக்காரர்கள். என்னைப்போல் சாது இல்லை. வட்டி ஒருநாள் தள்ளிச்சென்றதற்கே ரூம் தேடிவந்து மிரட்டினர். உண்மையை சொல்லப்போனால் அவர்கள் என்னை நிர்வாணப்படுத்தமட்டும்தான் இல்லை. அனைவரின் முன்னாலும் மானத்தையே வாங்கிவிட்டனர். இதனால்தான் அவசர-அவாரமாக ஒருவரிடம் சென்று முழுத்திறமையையும் பயன்படுத்தி என்னுடைய பரம்பரைப் பெருமைகளையும், வாக்குமாறா நேர்மையையும் சொல்லி, வார்தையாலே அவரது கால்களைக் கழுவி, சில வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்திட்டு பெரும் வட்டிக்கு ஒரு தொகையை வாங்கினேன். வாங்கிய கையோடு எனது கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் கடனில் சிலவற்றை அடைக்க நினைத்தேன். 

ஆனால் அவரிடம் மூச்சுமுட்ட பேசியதில் மூத்திரமே வந்துவிட்டது. மூத்திரம்போனால் அப்படி ஒரு விறைப்பு. சரி, பணத்தில் கொஞ்சம் எடுத்து விரதத்தை முடித்துக்கொள்ள நினைத்தேன். நான் முடிவு செய்தவுடன் முதலில் நினைவுக்கு வந்தது அவள்தான். வேறுயாரிடமும் சென்று ஏமாற்றமடைய விருப்பமில்லை. உடனே அவளுக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை. 

நான் மூடிக்கொண்டு என் அவசரத்திற்கு வேறு யாருக்காவது போன் செய்திருக்கலாம். குறியைப் பிடித்துக்கொண்டு விடாப்பிடியாக அவளுக்கே தொடர்ந்து முயற்சிசெய்தேன். பல முறைக்கு பிறகு ஒருவன் எடுத்து அவள் இத்தனைநாள் மருத்துவமனையில் கிடந்து இன்றுதான் இறந்துவிட்டதாக சொன்னான். 

‘அவள் இல்லை …’

எனக்கு விறைப்பு அடங்குவதற்குள் வேறு நபர்களைத் தொடர்புகொள்ள நினைத்தேன். அதற்குள் டாஸ்மாக் வந்துவிட்டது. எனக்கு என்னுடைய அளவு நன்றாக தெரியும். யாரும் சொல்லவேண்டியது இல்லை. சரியாக அதில் நிறுத்திக்கொண்டால் ஒரு பிரச்னையும் வராது. ஆனால் ஒருநாள் கூட அந்த அளவில் நான் நிறுத்தியதில்லை. 

குடித்தவுடன், யாரிடம் போகலாம் என்ற பெரும் யோசனை. அவளைத் தவிர வேறுயாரால் இந்த விரதத்தை நிவர்த்திசெய்யமுடியும். அவளுக்கு போன் செய்தேன். நீண்டநேர போராட்டத்திற்குப்பின் ஒருவன் எடுத்தான். இறந்துவிட்டதாக சொன்னான். 

என் நெஞ்சை அடைத்தது. 

‘அவள் இல்லை… இனி எப்போதுமில்லை…’

“அவள சாவ விட்டுட்டு யார் மயிர புடுங்கிக்கின்னு இருந்த…” எனது போன் கட் செய்யப்பட்டது. 

வேறுயாரைத் தொடர்புகொள்வது. பெரும் யோசனை… குடித்தபடி யோசிக்கலாமென்று குடித்தேன். இந்த விரதத்தை முடிக்க புது இடங்களுக்கு சென்றால் மனம் திருப்தியடையாது. அவள்தான் சரியான ஆள். அவளுக்கு போன் செய்தேன். நீண்டநேரம் முயற்சிசெய்தேன். அவளை நேரில்பார்த்தால் அரையவேண்டும்போலிருந்தது. பல முயற்சிக்குப்பின் ஒருவன் எடுத்து அவள் இறந்துவிட்டதாக சொன்னான். 

‘அவள் இல்லை… எனக்கு இல்லை… யாருக்கும் இல்லை…’

அவசரத்துக்கு இல்லாமல் இப்படி போய்விட்டாளே. எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. 

“அவள சாவ விட்டுட்டு யாருத நக்கின்னு இருந்த…”

அவன் கோபப்பட்டு அசிங்க வார்த்தைகளால் என்னை மூழ்கடித்தான்.

“சாவு வீட்டுல என்ன பேசுறோம்னு தெரியாத தரங்கெட்ட நாயே… ஆம்பளயா இருந்தா நேர்ல வாடா…” என்று முடித்தான் 

“நா ஆம்பளன்னு நிரூபிக்க உனக்கு ஓகேனா… எனக்கு ஓகே… குளிச்சிட்டு, பவுடர் போடுட்டு ரெடியா இரு வரேன்” என்று புறப்பட்டேன். 

நான் சென்று பார்த்தபோது அவள் தனியாக படுத்திருந்தாள். இது அரிதுதான். தேடிவந்த என்னை ஏமாற்றத்தோடு ஒருநாளும் திருப்பியனுப்பியதில்லை. முதன்முறையாக பொறுப்பற்றவளாக தெரிகிறாள். என்னால் நடப்பதை நம்பமுடியவில்லை. தலைசுற்றுவது போலிருந்தது. என் நடையில்கூட நிதானமில்லை. அங்கு ஒருவன் ஆத்திரத்துடன் உள்ளேயும் வெளியேயும் நடந்துகொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்ப்பதுபோல் தெரிந்தது.

எங்கிருந்தோ வந்த ஒரு பெண் அவன் கையில் மஞ்சள் ரசீதுடன் பணத்தைக் கொடுத்துவிட்டு, 

“இவ்ளோதான் குடுத்தான்” என்று சொல்லிவிட்டு, அவளருகில் அமர்ந்து முந்தானையால் விசிறி ஈயை விரட்டினாள். 

நான் அவனை நிறுத்தி, “அவ ஏன் இப்படி படுத்திருக்கா…” என்றேன்.

“சாவு வீட்டுல என்ன கேள்விமயிறு இது… உங்களுக்குகெல்லாம் அறிவு பீ துன்னபோய்டுச்சா…”, என்று பல்லை கடித்துக்கொண்டு வாசலுக்குச்சென்று யாரையோ கடும் கோவத்தோடு எதிர்பார்த்தான். 

‘சாவு வீடா… அப்படியென்றால் அவள் இறந்துவிட்டாளா? இனி எல்லைகளைக் கடந்து இன்புற நான் எங்கு போவேன்.’

அவள் இல்லை… முன்பே தெரிந்திருந்தால் புது அனுபவத்தைத் தேடி வீணடித்த நேரங்களை அவளுடனே செலவளித்திருப்பேன். பலமுறை களைத்துப்போய் அவள் மார்பில் காதைப் பதித்ததுபோல் விழுந்து அப்படியே படுத்திருக்கிறேன். என் மூச்சின் வேகத்திற்கேற்ப அவளின் இதயத்துடிப்பும் பேசும். சிலமுறை வேகமாக அடித்துக்கொண்டு கூச்சலிடும். சிலமுறை நிறுத்தி நிதானமாக பேசும். ஆனால் அது நிற்கப்போவதை ஒருமுறைகூட சொல்லவில்லை.

என்னால் எனக்கு, எப்படியும் சமாதானம் சொல்லமுடியவில்லை. 

“எனக்கு அவ வேணும் …

எனக்கு அவ வேணும் …

எனக்கு அவ வேணும் …”

நான் என் பேன்ட் பட்டனைக் கழட்டினேன்.

வெளியே சென்றவன் விறுவிறுவென உள்ளே வந்து “என்ன பன்னிட்டு இருக்க?… எங்க தோணுதோ அங்கயே கழட்டிட்டு பேன்டுருவியா…” என்றான். 

நான் நினைவுத்தட்டி, “டிக்கெட் பாக்கெட்ல காசு எடுக்க…” என்று வார்த்தையை இழுத்தேன்.

அவன் “காசா…” என்றான். தலையை ஆட்டினேன்.

“எப்படி வாழ்ந்தவ… இப்ப பாரு நாலு பேர்கூட இல்லாம, எடுத்துப்போட காசு இல்லாம கெடக்குறா… ஆயிரம் பேர் போன் பண்றானுங்க, ஆனா விஷயத்த சொன்னதும் ஒரு பரதேசி எட்டிப்பாக்கள” என்று தலையைக் குனிந்தபடி கையைப் பிசைந்தான்.

நான் அவளுக்கென்று வைத்திருந்த காசை அவனிடம் கொடுத்தேன். அதை பெறும்போது அவனுடைய கண்களின் பார்வை என்னைப் பிரகாசமாகியது. அமர்ந்திருந்த பெண்ணும் நன்றி சொல்வதுபோல் தலையசைத்தாள். நான் இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல அவன் தோளைத்தட்டினேன்.

போன் அடித்தது. அவன் அதை தூக்கியெறிந்தான்.

என் கையைப் பிடித்துக்கொண்டு, “நீ யாருனே தெரியல… இருந்தாலும் எனக்காக ஒன்னு செய்வியா?” என்றான்.

“ம்ம்…”

“நா கோவத்துல எவனையாவது கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிட்டா நீ அவள நல்லபடியா இருந்து அடக்கம் செய்றியா?…” என்று கேட்டான்.

“ஏன், அப்படி என்ன கோவம்…”

“சாவு வீடுன்னு பாக்காம போன் பன்னி அசிங்கமா பேசுது ஏதோ ஒரு அரிப்பெடுத்த நாதாரி” என்றான்.

நான் ஏதோ சிந்தனையில் தலையாட்டினேன். அவன் வாசலுக்கு சென்றான். ஏதோ சிந்தனையல்ல “சாவு வீடு” என்று அவன் சொன்னதுதான் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

 “சாவு…” அப்படி என்றால்.

அவள் இல்லை… இன்றும் இல்லை… நாளையும் இல்லை… என்னால் ஏனோ இதை நம்பமுடியவில்லை. “சாவு வீடு” என்று அவன் சொன்னாலும் அப்படியொன்றும் தெரியவில்லை. இதோ அவள் படுத்திருக்கிறாள். அவளருகில் ஒருத்தி அமர்ந்திருக்கிறாள். கொலைவெறியுடன் வெளியே இருக்கும் ஒருவன். நின்றுகொண்டிருக்கும் நான். மொத்தம் நாலுபேர். இப்பொழுது கூட மூன்றுபேர் என்று ஏன் மனம் நம்பவில்லை. 

வெளியே இருந்தவன் விறுவிறுவென உள்ளே வந்தான். ஒருகணம் அவள் கால்மாட்டில் நின்று “எப்படியெல்லாம் இருந்தவ… எல்லாமேபோய், இப்போ எப்படி இருக்கா… உடம்பவெட்சி சம்பாரிச்சத, உடம்பு நோவாம ஹாஸ்ப்பித்திரில புடுங்கிட்டானுங்க…” என்று புலம்பினான். கீழே கிடந்த போன் அடித்தது. அவன் அதை எடுக்காமல், “வந்துட்டான்… இன்னைக்கு செத்தான்…” என்று ஓடினான். அவன் கண்ணிலிருந்த வெறியும், கோவமும் அவன் ஏதோஒரு பெரிய ராட்சத உடலை கொண்ட மல்யுத்த வீரனை எதிர்பார்த்து செல்வதுபோல் தெரிந்தது. யார்தான் இந்த பைத்தியக்காரன், நான் இங்கு பலமுறை வந்திருக்கிறேன் ஒருமுறைகூட இவனைப் பார்த்ததில்லை. 

ஆனால் அவன் சொன்னது உண்மைதான், “எப்படி இருக்கா… நான் வந்தது தெரிஞ்சா இந்நேரம் இப்படியா இருப்பா… இவ்வளோ நேரம் என்ன இப்படி நிக்க விட்டிருப்பாளா.” ஒருவேளை அவள் நிஜமாகவே செத்துவிட்டாளா. அருகில்சென்று பார்த்தேன். அவளது முகம் சற்று மாறி சுவற்றில் மாட்டியிருக்கும் அவள் தகப்பனின் சாயலில் தெரிந்தது. ஒருநாளும் அது அப்படி தெரிந்ததில்லை. முகமாற்றமென்றால் பெரிதாகயில்லை பிறந்த குழந்தைக்கு லேசாக அடையாளம் தெரியுமே அதுபோல. இந்த முகமாற்றம் எனக்கும்-அவளுக்குமான பிணைப்பைச் சற்று தள்ளிவைத்தது.

அப்படியென்றால், அவள் இல்லையா… இறந்துவிட்டாளா…

“அவள் இல்லை…” என்று யார் சொன்னாலும், கண்ணால் கண்டாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவள் சிலிர்த்துப்போக பல காரியங்களை அவள்மீது நான் செய்ததுண்டு. அவளாள் எனக்கு அணைத்து சந்தோஷமும் தரமுடியுமென்றால் தந்துவிடவேண்டியதுதானே. அது-என்ன-அது, கடவுளைப்போலவே அவளும் அனைத்தையும் வைத்துக்கொண்டு ஒன்றும் தராமல் என்னை சோதிக்கிறாள். நான் வேண்டுமானால் ஹைதராபாத் பிரியாணி வாங்கிவந்து அவள்முன் விரித்துவைக்கவா?… அவளுக்கு அது பிடிக்கும், ஒன்று வாங்கினால் இரண்டுபேர் சாப்பிடலாம். நான் எப்பொழுது வந்தாலும் வாங்கிக்கொண்டு வருவேன். “முன்ன மாதிரி டேஸ்ட் இல்ல, முன்னெல்லாம் எப்படி இருக்கும்ம்ம்ம்ம்…….”, என்று இழுத்து சொல்வாள். ஆனாலும் மிச்சம் வைக்காமல் தின்றுமுடிப்பாள். மறக்காமல் எலும்புடன் இருக்கும் கறியை எனக்கு கொடுப்பாள். 

“முன்னனா, எப்போ?… ”, என்று கேட்டால். “பல வருசத்துக்கு முன்ன, அப்போ அது சின்ன கடை.” என்று ஒரு பிறந்தநாளை குறிப்பிட்டு சொன்னாள். 

“அந்த ருசி இன்னமும் நாக்குல நின்னு நாட்டியமாடுதா?”, என்றதற்கு.

“சோறு போட்டவங்க கை ருசிய அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா…”, என்று ஒரு புருவத்தைத் தூக்கி வினாடிகளை நிதானமாக்கி கண்ணை மூடி திறந்தாள். 

நான் என்னவோ புரிந்ததுபோல சிரித்தேன்.

“பசிக்கு நாலுவாய் எதத் தின்னாலும் சரியாப்போகும். ருசிதான நிறைவதரும்… என்ன?… ” 

“சரிதான்” என்றேன். 

இதற்குமட்டும்மில்லை அவளிடம் வந்துவிட்டால் அவள் என்ன பேசினாலும் “சரிதான்” என்பேன்.

ஒருமுறை அவளைப் போலவே இருக்கும் ஏழு பேரில் ஒருத்தியைக் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். “சரிதான்”, என்றேன். 

“என்ன நம்பாத மாதிரி சொல்ற? பசியப் பாக்காத…”, என்று அவள் உடலைக் காட்டி. “ருசியப் பாரு…” என்று என் ஆள்காட்டி விரலை பிடித்து அவள் மார்பை மூன்றுமுறை தட்டிக்காட்டி “சரியா…” என்றாள். “சரிதான்” என்றேன்.

“உனக்கு ருசி தெரிஞ்சா ஏழுல ஒன்னா தெரிவா” என்றாள். நான் தெரிந்துகொள்கிறேன் என்று மார்பகத்தோடு நெருக்கமாக வாயால் உரையாடினேன். நான் இடையூறு செய்ததாக உணர்ந்து பேசுவதை நிறுத்திவிட்டாள். 

என் கண்ணில் தெரிந்தவெறி, ‘உனக்கும் எனக்குமான உறவு பணத்துக்கும்-தேவைக்குமானது மட்டுமே’ என்று அவளிடம் ஒருகணம் சொல்லிவிட்டதோ என்னவோ… என்னிடம் சரணடைந்தது போல, “நம்ம தேவைக்கு இல்லாதது. அப்பறம் கிடைச்சா என்ன, கிடைக்கலனா என்ன…” என்று மகிழ்விக்க தொடங்கிவிட்டாள். நான் ஒரு மிருகத்தை போல புணர்ந்தேன். அவள் உடலையும், மனதையும் முழுவதாக என்னிடம் ஒப்படைத்ததைப்போல நிறைவு. 

அவள் ஏதோ மனதிலிருந்து பேசிக்கொண்டிருக்கும்போது தடுத்து மிருகத்தைப்போல நடந்துகொண்டேனோ என்று முடித்தபின் தோன்றியது. அவள் மனதார பேசிக்கேட்க இனி ‘அவள் இல்லை…’ 

நான்… அவள் மனம்… மிருகம்…

மிருகம்… நான்… மனம்… 

மனம்… மிருகம்… நான்… 

நான்… மிருகம்… மனம்… 

அவள்… மனம்… நான்… 

நான்… மிருகம்… அவள்… மனம்… 

மனம்… ஒரு மிருகம்… 

பசி… ருசி… ருசி… பசி… பசி… ருசி… ருசி… பசி… ஆயிற்று.

அவளிடம் என்ன ருசிக்கண்டு மிருகம் தேடிவந்தது. என்னவென்று விளக்கினால், “சை… இதுக்கானு…” பழிப்பார்கள். எனது உணவுமுறை வேறு, அவர்களது உணவுமுறை வேறு என்று எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறார்கள்.

எனக்கு பசிக்கிறது. 

குடித்துவிட்டு வெறும் வயிறோடு இருப்பதால் பசியால் வயிறு எரிகிறது. பசி… உடலெங்கும் பசி… அவளுக்கு ஏன் இந்த அவசரம். அவளைத் தேடி நேரம்கெட்டநேரத்தில் நான் வருவேன் என்று தெரியாதா…?

அவளை ஒரு எத்து-எத்தவேண்டும் போலிருந்தது. ஆனால், என்ன பயன் அவள் என்னோடு பதிலுக்கு சண்டையிடப் போகிறாளா. ஒருவேளை நான் அடித்தால் திடிரென்று எழுந்து வழக்கம்போல் என் தலையில் ஒரு கொட்டு-கொட்டுவாளோ. 

அவள் நறுக்கென்று கொட்டும்-கொட்டு என் அம்மாவை நினைவு படுத்தும். என் அம்மா காரணமின்றி கொட்ட மாட்டாள். சிறு வயதில் ஒருமுறை அம்மாவிடம் இரண்டு கைகளையும் முடிந்தவரை அகல விரித்துக்காட்டி. “அம்மா எனக்கு கொழுகொழுனு குண்டு பொண்டாட்டிய கல்யாணம் செஞ்சிவைமா. இந்த உலகத்துலயே என் பொண்டாட்டிதான் பெரிய பொண்டாட்டியா இருக்கனும்மா…”, என்று கேட்டு கொட்டுவங்கினேன். பருவம் வந்தபின் கல்யாணமோகம் தெளிந்துவிட்டது. அதாவது கல்யாணம் ஒதுங்கிவிட்டு, மோகம் மட்டுமே ஆக்கரமித்துக்கொண்டது. எனது உடல் அவள் இல்லாததை ஏற்றுக்கொள்ளமறுத்தது. பாக்கட்டில் வைத்திருந்த பாட்டலை திறந்து அப்படியே குடித்தேன்.

வெளியே நின்றிருந்த அந்த வெறிபிடித்தவன் வந்து என் கைகளை பிடித்துக்கொண்டு, அவள் யாருமற்ற அனாதைபோல் கிடப்பதை நினைத்து வருந்தினான். “நம்ம மூனுபேர் தவிர ஒரு ஈ, காக்கா இருக்கா?…” என்று உருகிப் பேசினான். நான் அவனைக் கட்டிக்கொண்டேன். அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது. நான் குடித்த சாராயத்தை காட்டிலும் அவன் மீது நாற்றம் அதிகம். அவன் கொஞ்சம் குளித்து பவுடர் போட்டிருக்கலாம். நாற்றம் தாங்கமுடியவில்லை.

நான் எப்படியாவது ஊர்பார்க்கும்படி அவளை எடுக்க முடிவுசெய்தேன். அவனிடம் ஒரு தொகையை கொடுத்தேன். அவன் தேவையானதை செய்யச் சென்றான். அவன் பரபரவென தெருமுனைவரை சென்று கோவத்தோடு என்னிடம் ஏதோ சொல்ல திரும்பிவந்தான். அவன் வாய் திறக்கும்முன்னே எனக்கு அது புரிந்துவிட்டது.

“நீ போய் ஆக வேண்டியத பாரு… அந்த லவடா வந்தா, அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கொன்னு வாசல்ல போடுறேன். பழிய நீ ஏத்துக்க… இன்னைக்கு அவன் பொணத்த தாண்டித்தான், அவள எடுத்துன்னுபோறோம்.”

என்று அவன்மேல் சத்தியம் செய்தேன்.

“நீ வரும்போது மறக்காம சரக்க புடிச்சினு வா…” என்றேன்.

அவன் மனமுருகி மீண்டும் ஒருமுறை என்னைக் கட்டிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் பந்தல், ஷேர், ஐஸ்பேட்டி, பேண்ட் வாத்தியம், பட்டாசு என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தான். சங்கு சத்தம் ஏதோ ஓலத்தை காதில் சொன்னது. ஆனாலும் ‘அவள் இல்லை…’ என்பதை மனம் உணரவில்லை. 

அவளருகில் அமர்ந்திருந்தவளும் அவளையே பித்துபிடித்ததைப்போல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு அசைவில்லை. 

நாங்கள் எதிர்பாராத நேரத்தில் லட்சுமி அம்மா வந்தாள். அவளுக்கு மாலை போட்டாள். வணங்கினாள். காலில் சலங்கையை கட்டினாள். அவளுடன் வந்தவன் ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது சத்தம் கேட்டு வந்ததாக சொன்னான். 

அவள் சலங்கையை கட்டி மெல்ல பாட ஆரம்பித்தாள். கூட்டம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. நிற்க இடமின்றி காலை மிதித்தனர்.

அவள் பாடி இந்த வரியில் நிறுத்தினாள். மேளம் நின்றது. இடமே அமைதியானது.

“பொய்யான ஊரில் பிறந்து… பொய்யான ஊரில் வாழ்ந்து…

மெய்யான ஊரத்தேடி… அந்த சொர்க்கலோகம் போனாயோ ”

அமைதியில் லட்சுமி அம்மாவின் கனத்த குரலில் இந்த வரிகளைப் பாடும்போது, அவள் பொய் நாடகத்திலிருந்து விடுபட்டு மெய் ஜோதியில் கலக்க அனைவரையும் விட்டு சென்றதை உணர்த்தியது.

‘அவள் இனி இல்லை…’ என்பதுபோல் மனம் பெரும் பாரமடைந்தது. என்னால் எச்சி விழுங்க முடியாமல் தொண்டை வலித்தது.

மேளம் சில வினாடி அடித்து நின்றது. மீண்டும் அமைதியில் அதே வரிகள். பாடி உச்சம் தொட்டு திருப்தியடையாததுபோல் மீண்டும்-மீண்டும் அதே வரிகள். 

ஆனால் அவளின் ஒப்பாரியால் அதன் கனம் கூடிக்கொண்டே போனது.

கூடிய பெரும் கூட்டத்தில் பலருக்கு கண் ரப்பையில் கண்ணீர் ததும்பவும், உதடுகள் விம்மி வெடிக்கவும் எந்நேரமும் தயாராக இருந்தது. 

அமைதி…

மீண்டும் அதே வரிகள். அவள் அந்த வரியில் உச்சத்தை தொட்டுநின்றதும், “ஐயோ… போய்டியே…” என்று அவள் அருகில் இருந்தவள் வாய் பிளந்து அழத் தொடங்கினாள். ஜனத்திரள் “ஓஓ…” என்று கதறியது. அவள் பாடல் உயிரெடுத்து சென்ற எமனையே பிடித்திழுத்துவந்து மாரடித்து அழுதாட செய்துவிட்டது 

நான் அடக்க முடியாத ஆதங்கத்தில் அவள்மீது ஏறி அமர்ந்து கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்து “எந்திரிடி முண்ட…” என்று கதறினேன். அந்த கோவக்காரன் என்னைப் பிடித்து இழுத்தான். என் பிடியிலிருந்து அவளை யாராலும் பிரிக்கமுடியவில்லை. என்னைப் பிரிக்க நினைத்து இழுத்ததில் அவளது ஜாக்கெட்டும், புடவையும் பிய்த்துகொண்டுவந்தது. இறுதியில் ஒரே ஒரு முத்தம் குடுத்துவிட்டு நானே விலகிவந்தேன். முத்தத்தில் அவ்வளவு வறட்சி.

நான் என்னிடமிருந்த அனைத்தையும் அவளுக்காக அளித்தேன். மாட்டு வண்டியை அலங்காரம் செய்து, வெடிவெடிக்க மேளதாளத்தோடு ஆடிக்கொண்டு அந்த தெருவே இழுத்துச்சென்றனர். அவள் அருகிலிருந்த பெண், அவளை கொண்டு சென்ற வண்டியின்பின்னே உருண்டு புரண்டு அழுதாள். நான் அவர்களோடு போகவில்லை. அவளை அடக்கம் செய்வதை பார்க்கும் சக்தி எனக்கில்லை. பசியால் தலை கிறுகிறுத்தது. நான் புறப்படநினைத்தேன். சுற்றும்-முற்றும் பார்த்தேன். அந்த பெண்மட்டுமே இருந்தாள், “நா கிளம்புறேன்” என்றேன். 

“சாவு வீட்டுல சொல்லிட்டு போக கூடாது” என்றாள். சிரித்தேன்.

“இவ்வளவு பன்னிருக்க ஒரு காப்பியாவது குடிச்சிட்டு போலாம்ல…” என்றாள். 

“எனக்கும் பசிதான்” என்றேன்.

என்னை வீட்டில் அமர்த்திவிட்டு “சாவு வீட்டுல அடுப்பு பத்தவைக்க கூடாது” என்று கடையிலிருந்து காபி வாங்கிவந்தாள். மிதமான சூட்டில் ஆற்றி தந்தாள். “நீ இல்லனா இன்னைக்கு என்ன ஆகியிருக்கும்னே தெரியல…” என்றாள். ஒரே மடக்காக குடித்துவிட்டு எழுந்தேன். சட்டென்று என்னை அணைத்துக்கொண்டாள். அது சில நொடிகள், சரியாக சொன்னால் ஆறு நொடிகள். வேறு என்ன சொல்ல. பசி போதுமென்றானது. முதன்முறையாக அளவு தெரிந்து அதோடு நிறுத்திக்கொண்டேன். அவள் சொன்னபடி ஏழு பேர் இருப்பது உண்மைதானோ… என்னவோ… சோறு போட்ட கைருசி அவ்வளவு சீக்கிரம் மறக்குமா என்ன… ஏனோ ஒரு நிறைவு. வீட்டிற்கு சென்றேன்.

நான் வீட்டையடையும்முன் கடன்காரர்கள் வீட்டு வாசலில் காத்திருந்தனர். வழக்கமாக பல பொய் கதைகளை சரளமாக சொல்லி அவர்களையே கண்ணீர்விட செய்வேன். ஆனால், இன்று அப்படி ஏதும் செய்யத் தோணவில்லை. 

நான் உண்மையை சொன்னேன். அவர்களுக்கு கொடுப்பதற்காக நான் வாங்கிய கடன் தொகையையும் அவள் நினைவு அனைத்தையும் மறக்கடித்து, இறுதியில் அவளை அடக்கம்செய்ய அனைத்தையும் செலவளித்ததை சொன்னேன்.

அதற்காக வீதியில் அனைவரின் முன்னால் என்னை அடித்து அம்மணமாக்கி வாழ்நாள் முழுவதும் மறக்காதபடி செய்துவிட்டனர்.

***

பிரானா – சென்னையில் வசிக்கிறார். இவரது கதைகள் வல்லினம், சிறுகதைகள், மயிர் உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: prn0054@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here