மாயச்சேலை நூல் விமர்சனம்
ம.சோனியா
தமிழ்ச்சிறுகதைக்கு கனமான வரலாறு ஒன்று உருவாகிவிட்டது. பிற உலக மொழிகளில் எவற்றுடனும் ஒப்பிடத்தகுந்த உயர்ந்த இடத்தில் தமிழ்ச்சிறுகதை இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறது. நவீன இலக்கியத்தின் முக்கியமான இச்சிறுகதை வடிவமானது மக்களால் நேரடியாகப் படிப்பதற்காக எழுதப்படுகின்றன. அவை மக்களின் வாழ்வியலை நேரடியாகப் பேசுகின்றன. அந்தவகையில் சமகால மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளக் கதைத்தொகுப்பு தான் ‘மாயச்சேலை’. தொன்மம், மாயயதார்த்தம், புராணம் உள்ளிட்ட பல பரிமாணங்களில் கதையைப் புனைவாசிரியர் அணுகியுள்ளார். எழுத்தாளர் சைலபதி நவீன இலக்கியப் பரப்பில் அறியப்படும் முக்கியமான சமகாலப் படைப்பாளர். இவர் தொன்மவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் தாக்கத்தை இத்தொகுப்பில் அமையப்பெற்றுள்ளப் பெரும்பாலான கதைகளின் வழியாகவும் அறியமுடிகிறது.
‘மாயச்சேலை’ இச்சிறுகதை தொகுப்பானது மொத்தம் பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கிறது. துறவுக்கும் இயல்பான மனித வாழ்வியலுக்கும் உள்ள முரண்பாடுகளை நேர்த்தியாக மொழிப்படுத்தியிருக்கும் ‘பித்து’ இத்தொகுப்பின் முக்கியமான கதையாக இருக்கிறது. இது தவிர ‘பெண்ணுலகம்’, ‘அவனும் இன்னொரு அவனும்’, ‘அடுத்த ரயில்’, ‘ஆசையோடு சேர்த்த தயிர்’ முதலியனவும் இத்தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கதைகளாக அமைந்திருக்கின்றன.
மகாபாரதத்தின் ஒரு பகுதியான ‘துகிலுரித்தல்’ நிகழ்வை மையமிட்டு நகரும் கதை ‘மாயச்சேலை’. இக்கதையின் ஆரம்பமானது கதை கேட்பதில் ஆர்வமுள்ள பேத்திக்குப் பாட்டி கதைக்கூறுதல் என்கின்ற உத்தி முறையில் அமைந்திருக்கிறது.இருப்பினும் கதையானது முடிவில் பேத்திக்கு மனதில் எழுகின்ற எண்ணங்களால் ஓர் உச்சத்தை அடைந்திருக்கிறது. இயல்பாக பெண்களுக்கு இருக்கக்கூடிய புடவையின் மீதான மோகத்தைப் பாரதக் கதையினைக் கொண்டு எடுத்துக்காட்டப்பட்டுள்ள விதத்தை அழகாக மொழிப்படுத்தியிருக்கிறார் புனைவாசிரியர்.
‘பித்து’ என்னும் கதையானது சம்முகம் செட்டியாரின் துறவுநிலைப்பற்றும், இறுதியில் அது பைத்தியக்காரத்தனம் என்று மாறுகின்ற மனநிலையையும் எடுத்துக்காட்டுகிறது. உறவிடமிருந்து விலகி அம்மாவின் இறப்பைக் கூட பொருட்படுத்தாது, சுற்றி அலைந்து திரியும் பைத்தியக்காரச்சாமி மூலம் துறவு வாழ்வானது நேர்த்தியாகத் தொழிற்பட்டிருக்கிறது. வேட்டிக்கும் உறவுக்குமான ஊசலாட்டங்களை இடையிடையே சம்முகம் செட்டியாரின் நினைவலைக்குள் வந்து போகும் தெய்வானை ஆச்சியின் வழியாக புனைவு நிறுவ முயன்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மனித வாழ்வியலையும் துறவு வாழ்வியலையும் இரு துருவங்களாக நிறுத்தி ஆராயப்பட்டுள்ள கதையாக இதனைப் பார்க்க முடிகிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் மையம் கொண்டிருக்கும் முக்கியமான விடயம் சில கதைகள் பெண்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. உதாரணமாக ‘பெண்ணுலகம்’ என்னும் கதையானது முழுக்க முழுக்க பெண்களின் கூட்டுக் குரலாக ஒலிப்பதைக் காணமுடிகிறது. சந்தேகப்படுகின்ற ஆண்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்களின் மாறாட்டங்களை புடம்போட்டு காட்டுவதாய் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பெண்களிடமும் உள்ளே கனன்றுக் கொண்டிருக்கும் கதைகளை,“அவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒரு கதை இருக்கத்தான் இருந்தது. அத்தியாயம் முன்னோ பின்னோ, குழம்பிய அதே கதை காயம்பட்ட கதை” என்ற வரிகளின் மூலம் அவர்களின் வலியுணர்வுகளைப் புரிந்துகொள்ளும் படி கடத்தியிருக்கிறார். இதனூடே வைத்து வாசிக்கப்பட வேண்டிய கதைதான் ‘அடுத்த ரயில்’. அவன், அவள் என்ற பெயர்ச்சுட்டா மாந்தர்களின் வழியே கதை நகர்ந்திருக்கிறது. இக்கதையில் வரும் அவளைத்தான் நொடிக்கு நொடி மாறுகின்ற ஆண்மைக் குணத்தைச் சற்று உரசிப் பார்த்துவிட்டு இயல்பாக கடந்துச் செல்லும் பாத்திரமாக பிரதியாசிரியர் படைத்திருக்கிறார். இக்கதையில் பெயர்ச்சுட்டப்பட்டவளாய் காட்டப்பட்டிருக்கும் பூரணி பாத்திரம் ஏமாற்றப்பட்டவள் அல்ல மாறாகக் கணவனால் ஏமாறுபவளாக காட்டப்படுகிறாள். காத்திருப்பின் ஏமாற்றங்களையும், தனிமைத் தரும் வலிகளையும், ஓர் ஆரவாரமற்ற அமைதியின் தேடலையும் நுணுக்கமாக இக்கதையில் புனைவாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘அலசல்’ கதையையும் கவனிக்க வேண்டும். இக்கதை சந்தர்ப்பச் சூழ்நிலையால் மனைவியிடம் மறைத்து வைத்திருந்த கணக்கு வழக்குகளைக் கூறி மாட்டிக்கொள்ளும் நண்பனின் நிலை மற்றும் மரணபீதியால் உழலும் நண்பனின் நிலை என இவ்விரு நண்பர்களின் எதிரெதிரானச் சூழலைப் பகடித்தன்மையுடன் காட்டியிருக்கிறார். இக்கதையில் வரும் பெண்ணும் தன் கணவனால் ஏதோ ஒரு வகையில் ஏமாறுபளாகவே காட்டப்படுகிறாள். இருப்பினும் இக்கதைகளின் வாயிலாக நின்று பிரதியாசிரியர் ஆண்களின் மாயத்திரையை விலக்கிக்காட்ட முயன்றிருக்கிறார்.
மாய யதார்த்தம் என்பது புனைவிலக்கியத்தில் காணப்படும் ஒரு முக்கியமான கதை சொல்லும் உத்தியாகும். இதில் யதார்த்தமான வாழ்க்கைச் சூழல்களும், மாயமான அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. யதார்த்தமான ஒரு கதைக்குள், யதார்த்தம் கடந்த விந்தையான சங்கதிகள் வருவது மாயயதார்த்த கதைகளின் பொருத்தப்பாடு ஆகும். இந்த வகைமைக்குள் வைத்து புனையப்பட்டுள்ள கதைதான் ‘வேதாளம்’. காதல் விரக்தியினால் தற்கொலைக்குத் துணியும் கதிர் என்னும் இளைஞனுக்கு வேதாளம் தனது காதல் அனுபவத்தைக் கூறி தெளிவுப்படுத்தும் நிலையை எடுத்துக்காட்டுகிறது. சாதிப்பிரச்சினையால் காதல் கூடாமையின் காலங்காலமான இருப்பையே இக்கதையும் பேசியிருக்கிறது. தொடக்கத்தில் கதையானது வாசகருக்கு அலுப்பூட்டும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திப்பினும் கூட முடிவானது பெரும் தாக்கத்தை வாசகரிடையே ஏற்படுத்தி நகன்றிருக்கிறது. இதனடிப்படையிலே காதல் சேராமையை மையப்படுத்தியிருக்கும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு சிறுகதையான ‘புயல் பற்றியச் செய்திகள்’ என்ற கதையையும் நோக்க வேண்டும். இவ்விரண்டு கதைகளுக்கும் சாதிப்பிரிவால் காதல் கூடாமல் போவது பிராதானமான பொருளாக இருந்தாலும் கூட, கதை நகர்வானது பெரிய மாற்றத்துடனே கடத்தப்பட்டிருக்கிறது. இக்கதையில் வரும் அருள், செல்வி ஆகியோரின் உண்மையான காதல் உணர்வுகளும் இயல்பான காதலுக்குரிய அம்சங்களுடன் பொருந்திப்போயிருக்கின்றன. தொடக்கத்தில் முடிவடையும் காதல் கதையானது, இறுதியில் ஒரு கனத்த தாக்கத்தை வாசகரிடையே ஏற்படுத்திச் சென்றிருப்பதன் மூலம் ஓர் அருமையான இடத்தை அடைந்திருக்கிறது.
பொதுவாக ஒரு சம்பவத்தை விட அச்சம்பவத்தில் மனித மனம் படுகின்ற அல்லற்பாடுகளையும் அல்லது அதனால் ஏற்படுகின்ற தாக்கங்களையும் காலந்தோறும் நம் மனம் மறவாது அசைப்போட்டுக் கொண்டே இருக்கும். ஏதோ ஒரு நிகழ்வின் ஊடாக அச்சம்பவம் மனதைத் துருத்திக் கொண்டு வெளிவரும். அந்தவகையில் கடந்த காலத்தில் நடந்த அதே துயர சம்பவம் பிறிதொருவனுக்கு நடக்கின்ற நிலையில் அச்சூழலை நினைவின் அலையிலிருந்து மீட்டெடுக்கும் கதையாக ‘அவனும் இன்னொரு அவனும்’ கதை புனையப்பட்டிருக்கிறது. இக்கதையில் காட்டப்பட்டிருக்கும் இருவரின் மனவலிகள் வேறு வேறாக இருப்பினும் கதை நடந்தேறும் சூழலின் ஓர்மைத் தன்மையை கச்சிதமாக வடித்துக்காட்டியிருக்கிறார் புனைவாசிரியர்.
பழமை வாய்ந்த நிகழ்வுகளையும், தெய்வீகக் கதைகளையும், சமயம் சார்ந்த செய்திகளையும் கூறும் மரபுக்கதைகள் புராணம் என்றாகின்றன. ‘ஆசையோடு சேர்த்த தயிர் ’ என்ற கதையானது புராண அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. ஈசனின் திருவிளையாடலாக காட்டப்பட்டுள்ள நிகழ்வானது ஓர் உயிர்ப்புடன் வெளிப்பட்டிருக்கிறது. உயிர் சுமக்க ஆசைகொண்டு தயிர் சுமந்து வாழும் உமையம்மையாக உருக்கொண்டிருக்கும் குமாராயி கதாபாத்திரம் வழியாக கதையானது நேர்த்தியாக நகர்கிறது. பூமியில் தனியளாக வாழும் குமாராயிக்கு சமூக்கத்தினர் கொடுக்கும் அல்லற்பாடுகளும், குழந்தையில்லாமல் தவிக்கும் சங்கரபட்டரின் குடும்பம் மட்டும் அளிக்கும் ஆறுதல்களும் இக்கதையில் கவனம் பெறுகின்ற முக்கிய இடங்களாக அமைந்திருக்கின்றன. இறுதியில் தெய்வீக நம்பிக்கையூட்டும் மனநிலையுடன் கதையினை முடித்திருப்பதன் மூலம் பிரதியாசிரியரின் ஆன்மீக நம்பிக்கையினையும் யூகிக்க முடிகிறது.
‘மாயச்சேலை’ என்ற தொகுப்பானது மனிதர்களின் வாழ்வியலை சிற்சில கதாபாத்திரங்களின் துணைகொண்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்திருக்கிறது. புரிந்துகொள்ளும் படியான சிக்கனமான முறையில் எளிமையான சொற்சேர்க்கைகளுடன் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதைகளையும் புனைவாசியர் அணுகியிருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மைக் கதைகள் முடிவின் மூலமே ஒரு பெரும் கவன ஈர்ப்பை பெறுவனவாகின்றன. இத்தொகுப்பை வெறும் புனைவு என்று கடந்துச் செல்ல முடியாத அளவிற்கு சில கதைகள் ஆழமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.எழுத்தாளர் சைலபதி சமகாலச் சூழ்நிலையை கவனத்தில் கொண்டே இப்பிரதியை கையாண்டுள்ளமையை உணரமுடிகிறது. அந்த வகையில் நிகழ்கால மனித வாழ்வியலைப் பிரதிபலித்து நிற்கும் ‘மாயச்சேலை’ சமூகத்தினரால் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பாக இருக்கக்கூடும்.
***
ம.சோனியா: சென்னை மாநிலக்கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக பயின்று வருகிறார்.‘சு.வேணுகோபால் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்’ என்னும் பொருண்மையின் கீழ் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இந்து – தமிழ் திசை, காலச்சுவடு, உங்கள் நூலகம் முதலிய இதழ்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியும் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: msoniya118@gmail.com

