Homeஇதழ்கள்2026 இதழ்கள்நுட்பமான பெண் உலகின் (உளவியலின்) சித்தரிப்பு

நுட்பமான பெண் உலகின் (உளவியலின்) சித்தரிப்பு

ஆனந்த பிரகாஷ்


வாசக மனம் என்பது எவ்வளவு நுட்பமானதோ, அதே அளவுக்கு விந்தையானதும்கூட. ஒரு சில சமயங்களில் ஒரு எழுத்தாளரின் முழுப் படைப்புலகும் அவனை அறிந்துகொள்ளவும், கொண்டாடவும், தனக்குப் பிடித்தமான, ஆதர்ச எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளவும் தேவைப்படுகிறது. சில சமயங்களில் ஒரே ஒரு கதைகூட போதுமானதாக இருந்து இவை அனைத்தையும் நிகழ்த்திவிடுகிறது. அது அப்போதைய வாசக மனம், அந்தக் கதை நிகழ்த்தும் உரையாடல், கதை கடத்தும் உணர்வுகள், வாசகன் அதனோடு ஏற்படுத்திக் கொள்ளும் விவாதம், தன்னோடு அந்தக் கதையின் ஊடாக நிகழ்த்தும் உரையாடல், கதைக்கும் வாசிப்பவனுக்கும் இடையேயான நுட்பமான தொடர்புச் சங்கிலி எனப் பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன.

அப்படி மிகச் சமீபத்தில், வாசகசாலை ஒரு குழுவாக நடத்தும் ஆண்டுக்கு நூறு சிறுகதைகள் வாசிக்கும் நிகழ்வில், முழுக்க முழுக்க இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளை வாசித்து விவாதிக்கும் குழுவொன்றில் படித்த காலாதீதம் என்ற ஒரே கதை என்னை மிகவும் கவர்ந்து இழுத்தது. அந்தக் கதையின் வழியாகவே அருணா சிற்றரசுவையும், அவருடைய வேறு தொகுப்புகள் வெளிவந்திருக்கிறதா என்ற தேடலிலும் என்னை முழு மூச்சாக இறங்கச் செய்தது. ஒரு கதையிலேயே என்னை இவ்வளவு கவர்ந்திழுத்த எழுத்து நடை அது.

காலாதீதம் வாசித்து முடித்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் மெளனியின் அழியாச் சுடர்கள். எழுத்தில் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் தனிப்பட்ட உத்தி. பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் எழுத்துகளாகவே விவரிக்கப்படுவது பல கதைகளின் வடிவமாக இருக்கிறது. மெளனியின் கதைகள் இதிலிருந்து வேறுபடுகின்றன. மெளனி கடத்தும் உணர்வுகள் வெறும் எழுத்துகளாக மட்டுமே இருப்பதில்லை. அவர் முழுக்க முழுக்க கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள உலகத்தை, இயற்கை, சத்தம், இரவு, ஒளி, கோவில்கள், சிலைகள் முதலிய புற உலகின் இயல்புகளையும் வடிவங்களையும் கொண்டு கதாபாத்திரங்களின் அக உலகைச் சித்தரிக்கிறார்.

அப்படிப்பட்ட நடையில், கதாபாத்திரம் அனுபவிக்கும் உணர்வுகள் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் இருந்தாலும், வாசக மனம் அந்த நுட்பமான சித்தரிப்பின் வழியாக அவனுடைய உணர்வுகளைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கிறது. உதாரணமாக, கதாபாத்திரத்தின் தனிமையை தனிமை என்று நேரடியாகச் சொல்லாமல், இயற்கையின் முன்னால் அவனை நிறுத்திக் காட்டுவதன் மூலம் அந்தத் தனிமையை வாசகனும் தன்னுள் உணர்கிறான். கிட்டத்தட்ட காலாதீதம் என்னை ஆட்கொண்டதும் இப்படியான ஒரு மொழி நடையால்தான். அப்போது தொடங்கிய தேடலின் கண்டடைவே, அருணா சிற்றரசுவின் இதுவரை வெளிவந்துள்ள முதல் தொகுப்பான அருகன்.


அருகன் தொகுப்பு குறித்து அருணா எழுதிய ஏற்புரையும், அதற்கான முன்னுரையும் மிகவும் சுவாரசியமானவை. தன்னுடைய எழுத்தின் மீதான உறுதியும், வெறுமனே எழுதி வைத்த எதுவும் இலக்கியமாகிவிடாது. நிகழ்த்தப்பட வேண்டிய கதைகள்தான் இலக்கியமாகும் என்ற புரிதலும் அந்த முன்னுரையில் தெளிவாக வெளிப்படுகின்றன.

அப்படியே நிகழ்த்தப்பட வேண்டிய கதைகளாகத்தான் அருகன் தொகுப்பிலுள்ள கதைகளும் வந்து இருக்கின்றன. தொகுப்பின் எல்லாக் கதைகளும் நிகழ்கின்றன. எங்கும் மிகை உணர்வோ, அருணாவின் குரலோ, கதாபாத்திரங்களின் மீது வஞ்சனையோ, பரிதாபமோ, கோபமோ, கழிவிரக்கமோ இல்லை. கதை நிகழ்கிறது, கதாபாத்திரங்களும் அதற்கேற்ப இயங்குகின்றன.

தொகுப்பின் முதல் கதையாக தலைப்புக் கதையே இடம்பெற்றிருப்பது ஒரு புதுவிதமான அணுகுமுறை. அதே நேரத்தில், அதுவே இத்தொகுப்பின் மீது வாசகனுக்கான ஆர்வத்தைத் தூண்டும் கதையாகவும் அமைந்துள்ளது.

முதல் கதையான அருகன் சுயநினைவின்றி பல வருடங்களாக, பல தலைமுறைகளாக அதே வயதுடனும் அதே தோற்றத்துடனும் அந்த ஊரின் கோவிலருகே இருக்கும் மடத்தில் வாழும் நேமி என்ற நேமிநாதனையும், அவனைச் சுற்றி நிகழும் அமானுஷ்யங்களையும், அவன் பின்னாலிருக்கும் மர்மத்தைக் கண்டடையத் துடிக்கும் மாதவனையும் மையமாகக் கொண்டு, காலப் பிரக்ஞையை மீறி நூற்றாண்டு இடைவெளியில் புள்ளிகளை இணைத்து, புதிர்களை அவிழ்க்கும் ஒரு மாயஎதார்த்தச் சிறுகதையாக விரிகிறது.

யார் இந்த நேமி? யார் இந்த மாதவன்? யார் அந்தப் பொன்னிற முகம் தெரியாத பெண்? எனப் பல புதிர்களை அடைகொண்டிருக்கும் இக்கதை, இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளுள் ஒன்று. பல முடிச்சுகளோடு முடியும் இக்கதையின் முடிவு வெளிப்படையாகச் சொல்லப்படாமல் விடப்பட்டிருந்தாலும், அதன் தலைப்பு, அருகன் என்ற சொல்லின் பொருள், எதைக் கடந்தவன் அருகன் ஆகிறான், நேமி யார், மாதவன் யார் என்பன உள்ளிட்ட பல திறப்புகளை வாசகனுக்கே விட்டுச் செல்கிறது. அந்த வகையில், மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அருமையான சிறுகதை இது.

காலாதீதம் மற்றும் அருகன் ஆகிய இரு கதைகளையும் வாசித்த பிறகு, அருணாவுக்கு eternity அல்லது காலம் கடந்தமை, காலமற்ற நிலை ஆகியவற்றின் மீது ஒரு தனித்த ஈர்ப்பு இருப்பதை உணர முடிகிறது. அந்த ஈர்ப்பே அவரது கதைகளில் மீண்டும் மீண்டும் தோன்றும் முக்கிய அம்சமாகவும் மாறுகிறது.

அருணாவின் கதைகளுக்கும் கோவில்களுக்கும் ஒரு தனித்துவமான தொடர்பு இருப்பதை யூகிக்க முடிகிறது. அவரது கதைகளில் இடம்பெறும் கோவில்கள், சிற்பங்கள், மாளிகைகள் ஆகியவை வெறும் கட்டிடங்களாகவோ, அழகியல் பார்வைக்கான உருவகங்களாகவோ மட்டுமே நின்றுவிடுவதில்லை. அவை கடந்த காலத்தின் எச்சங்களாகவும், காலத்தை மீறி நிற்கும் சின்னங்களாகவும், காதல், ஏக்கம், பிரிவு, கண்டடைதல், நினைவின் சேகரம் போன்ற மனித அகஉணர்வுகளோடு தம்மை இணைத்துக் கொள்கின்றன.

அருணாவின் மொழி கச்சிதமானது. அதே சமயம், வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமான காட்சிமொழியைக் கொண்டது. காட்சிகளை அவர் வர்ணிக்கும் விதம் பல இடங்களில் அபாரமாக வந்து விழுகிறது. அவை வெறுமனே வாசிப்புச் சுகத்தை மட்டுமல்ல, வாசகனுடைய கற்பனையின் எல்லையையும் ஒரு படி மேலே நகர்த்துகின்றன.

உதாரணமாக, அருகன் கதையில் வரும் இந்த வரிகள்:

கடைக்கும் குளத்திற்கும் இடையிலான வீதி யாருமின்றி தனித்துக் கிடந்தது. ஆடாத ஊஞ்சல் ஒன்று கயிறுகளற்று நிலத்தில் கிடப்பது போல் நல்லதொரு அகலத்தில் வீதி. அவ்வீதியில் மெல்ல அவனின் சோம்பலை வைத்து குளத்திற்குள் ஆட்டினான் மாது. வீதி மெல்ல மேலெழும்பிய நேரத்தில் அதை மிதித்துக் கடந்தான் நேமி. ஊஞ்சல் உயிரிழந்தது.”

 
இப்படியான உயிரோட்டமான காட்சிப்படுத்தல்கள்தான் அருணாவின் கதைகளுக்கு தனித்துவமான கதைசொல்லல் வடிவத்தை வழங்குகின்றன.

தொகுப்பின் முதல் கதையாக அருகன் அமைந்திருப்பது தொகுப்பின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அதற்கடுத்த கதைகள் மாயஎதார்த்த உலகிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைசொல்லல் வடிவங்களுக்குள் நகர்வது ஆரம்பத்தில் ஒரு சிறிய ஏமாற்றத்தை அளித்தது. எனினும், அந்த ஏமாற்றம் கதைகளின் தரம் குறித்ததல்ல. மாறாக, முதல் கதையால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பின் விளைவாக மட்டுமே அதை உணர முடிகிறது.

மாயஎதார்த்தக் கதையிலிருந்து திடீரென பெண் உலகின் நுட்பமான உளவியல் பார்வைக்குள் விரியும் அடுத்தடுத்த கதைகள், அருகன் கதையிலிருந்து மனதை மெதுவாகப் பிரித்து புதிய வாசிப்பு மனநிலைக்குள் நுழைவதற்குச் சிறிது நேரத்தை வாசகனிடம் கோருகின்றன.

அருகன் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் ஆதாரச் சுருதியாக இருப்பது என்னவோ, காமமும், ஈர்ப்பும், மறைக்கப்பட்ட பாலியல் ரகசியங்களும்தான். தமிழில் எண்ணற்ற எழுத்தாளர்களால் பலமுறை எழுதப்பட்டு, வாசிக்கப்பட்டு, ஒருவகையில் சலிப்பை உண்டாக்கிய கூறுகளாக இவை மாறியிருந்தாலும், ஒவ்வொரு புதிய எழுத்தாளரும் அவற்றைத் தன்னுடைய தனித்த பார்வையிலும் கதைசொல்லல் முறையிலும் அணுகும்போது, அந்தக் கூறுகள் மீண்டும் புதிய சுவாரசியத்தைப் பெறுகின்றன. பொருள் பழையதாக இருந்தாலும், அதைப் பார்க்கும் பார்வை புதிதாக இருக்கும்போது, கதையும் புதிதாகவே மலர்கிறது.

பெரும்பாலான கதைகளின் பின்னணியில் இருப்பது பாலியல் சார்ந்த ரகசியங்களும் இச்சைகளும்தான் என்றாலும், எல்லாக் கதைகளையும் அந்த ஒற்றைத் தளத்திற்குள் மட்டுமே அடக்கிப் பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. கதைகளில் மறைக்கப்பட்ட மையப்பொருள் பாலியல் சார்ந்ததாக இருந்தாலும், கதை அதைக் கடந்து பல நுட்பமான வாசிப்புகளை நமக்கு வழங்குகிறது. அந்த மறைபொருளின் வழியாக ஒரு சமூகம், அதன் வாழ்வியல், சடங்குகள், மனதிற்குள் ஆழமாகப் பதிந்திருக்கும் பிற்போக்கான பழக்கவழக்கங்கள், அவற்றின் பெயரில் நிகழ்த்தப்படும் திட்டங்கள், அவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் நிற்கும் பேதைமையான குரல்கள், அதே சமயம் அவற்றை நிகழ்த்த மனித மனம் மேற்கொள்ளும் கணக்கிட்ட நகர்வுகள், கிராமியத் தெய்வங்கள், அவற்றைச் சுற்றியுள்ள சடங்குகள் எனப் பலவற்றை கதைகள் முன்வைக்கின்றன.

அருணா ஒவ்வொரு வரிக்குள்ளும் பலவற்றைச் சொல்லியும், சொல்லாமலும் மிக இயல்பாகக் கதையை நகர்த்திச் செல்கிறார். அந்த இடைவெளிகளை வாசகன் நிரப்பும் தருணத்தில்தான் கதையின் வாசிப்பு முழுமையான வடிவத்தை அடைகிறது. அந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு முன்னர் இருக்கும் கதை ஒன்றாகவும், அவற்றை நிரப்பிய பிறகு முழுமை பெறும் கதை வேறொன்றாகவும் மாறுகிறது. வாசகனை அந்தப் பணியில் பங்கேற்க அழைக்கும் இந்தக் கதைசொல்லல் முறை, இக்கதைகளின் மிக முக்கியமான பலங்களில் ஒன்று.

பாலியல் ரகசியங்களுக்குப் பின்னாலிருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண் உடலின் மீதான இச்சையையும் இருவேறு கோணங்களில் பேசும் கதைகளாக ஓங்குபனை மற்றும் மரிக்கொழுந்தன் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஓங்குபனை, பல ஆண்டுகளுக்கு முன் நிலவியதோடு, இன்னமும் சில இடங்களில் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆண் குழந்தை மனநிலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அந்த மனநிலையின் வாயிலாக வெளிப்படும் ஆணாதிக்கம், ஒரு பெண்ணின் ஏக்கத்தைத் தனக்கான சபலமாக மாற்றிக்கொள்ளும் ஆண், அதற்குத் துணையாக நிற்கும் இன்னொரு பெண், எதையும் அறியாத சிறுமியின் வாழ்க்கைப் பலியாக்கப்படுவது எனப் பல அடுக்குகளை மிக நுட்பமாகக் கையாள்கிறது.

மரிக்கொழுந்தன் கதையும் கிட்டத்தட்ட இதே ஆண் சபலத்தையே பேசுகிறது. ஆனால் அதன் பரிமாணம் இன்னும் ஆழமானது. அண்ணனின் இறப்பைத் தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளும் கொழுந்தன், குடும்பத்தைக் காப்பாற்றும் பெயரில் முடிவெடுக்கும் மாமியார் ஆகியவை கதையின் வெளிப்படையான தளமாக இருந்தாலும், அதன் உள்ளடுக்கில் கணவனை இழந்த பெண்ணின் மனநிலையும், உடல் சார்ந்த ஏக்கங்களும், புதிய வாழ்க்கையை நோக்கி நகரும்போது அவளுக்குள் நிகழும் மாற்றங்களும் மிக இயல்பாகப் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில், பெண்ணின் உளவியலையும் உடலையும் ஒரே நேரத்தில் நேர்மையாக அணுகும் கதையாக மரிக்கொழுந்தன் அமைந்திருக்கிறது.

அருணாவின் கதைகளின் மிக முக்கியமான சிறப்பம்சமாக நான் காண்பதும் இதுவே. அவரது கதைகளில் வெளிப்படும் பெண்ணியக் குரல், எந்த இடத்திலும் கதையையோ கதாபாத்திரங்களையோ மதிப்பீடு செய்ய முனைவதில்லை. கதை நிகழ்கிறது, கதாபாத்திரங்கள் தங்களுடைய இயல்பில் இயங்குகின்றன. அந்த நிகழ்வுகளின் வழியாக மட்டுமே அருணாவின் குரல் வெளிப்படுகிறது.

மரிக்கொழுந்தன் கதையில் கொழுந்தனின் சபலத்தையும் திட்டத்தையும் மட்டுமே பேசிச் சென்றிருந்தாலும் அது ஒரு முழுமையான கதையாக இருந்திருக்கும். ஆனால், அதற்குள் அந்தப் பெண்ணின் மனதையும் உடல் சார்ந்த தேவைகளையும் இணைப்பதன் மூலம், அந்தக் கதாபாத்திரம் ரத்தமும் சதையுமான பெண்ணாக நம்முன் நிற்கிறாள். அப்படியே அந்தப் பெண்ணின் குரலை எழுதும்போதும், முழுமையாக அவளுடைய குரலே வெளிப்படுகிறது. அதில் எழுத்தாளரின் உரிமைக்கோரலோ, கழிவிரக்கமோ, பரிதாபமோ, வெளிப்படையான தீர்ப்போ எதுவும் இல்லை. அதுவே அருணாவின் கதைசொல்லலின் மிகப் பெரிய பலமாக எனக்குத் தோன்றுகிறது.

தொகுப்பிலுள்ள மற்ற எல்லாக் கதைகளிலிருந்தும் தனித்துத் தெரியும் கதையாக உடற்றும் பிணியைக் குறிப்பிடலாம். தன் வாழ்வில் கணவனை இழந்து, தன்னுடைய ஒரே ஆறுதலாகவும் வாழ்க்கையின் பிடிப்பாகவும் இருக்கும் மகனும் இப்போது நோயில் விழுந்துவிட்டால், அந்தப் பெண் எந்த மனநிலையில் தன் வாழ்வோடு போராடுவாள் என்பதை வாழ்வின் எதார்த்தத்துடனும் பெண்ணின் உளவியல் நோக்குடனும் பேசுகிறது உடற்றும் பிணி.

அருகன் கதைக்குப் பிறகு, இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதையாக ஊமச்சியைக் குறிப்பிடலாம். பருவமடைவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ருக்கு, விடுமுறைக்காக பெரியப்பா வீட்டுக்கு வருகிறாள். அவளுடைய பார்வையின் வழியாக அந்த ஊரில் நிகழும் சடங்குகள், கிராமத் தெய்வங்களின் பின்னாலிருக்கும் மர்மங்கள், அவள் பெரியப்பா வீட்டில் மறைந்து கிடக்கும் பாலியல் ரகசியங்கள் எனப் பலவற்றை மிக நுட்பமாகப் பேசும் சிறுகதை இது. இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், கதை மீண்டும் பாலியல் ரகசியங்களைப் பேசினாலும், அதன் அடியாழத்தில் அது எழுப்பும் கேள்விகள் மிக நுட்பமான வாசிப்புக்குரியவை என்பதுதான்.

ஆண் பெண் ஈர்ப்பை இரண்டு தலைமுறைகளின் வழியாக அருணா அணுகியிருப்பதும் சிறப்பானது. தான் ஒரு சிறுவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டதை ருக்கு பெரியப்பாவிடம் இயல்பாகச் சொல்வதும், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அவர் சமாதானப்படுத்துவதும், பெரியம்மாவிடம் மட்டும் சொல்லாதே அவளுக்கு இதெல்லாம் புரியாது என்று கூறுவதும், கதையின் பிற்பகுதியில் பெரியம்மாவின் பாலியல் ரகசியங்கள் ஊமச்சியின் வழியாக வெளிப்படும்போது, முற்பகுதியில் நாம் உருவாக்கிக் கொண்டிருந்த கதாபாத்திரப் புரிதல்களை தலைகீழாக்குகின்றன.

அதோடு, கிராமங்களில் நிகழும் சடங்குகள், தெய்வங்கள், அவற்றின் பின்னாலிருக்கும் மறைவான உண்மைகள் ஆகியவற்றையும் ஒரு சிறுவனின் பார்வையின் வழியாகத் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படுத்துகிறது இக்கதை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிதாகத் திறக்கும் பல நுண் அடுக்குகளைக் கொண்ட சிறந்த சிறுகதையாக ஊமச்சி எனக்குத் தோன்றியது.

மடக்கொடி ஒரு சிறுமியின் பால்யத்திலிருந்து அவள் பருவமடையும் வயதை அடையும் வரையிலான அவளுடைய அக உலகையும், அவளைச் சுற்றியுள்ள உறவுகளையும், பக்கத்து வீட்டுத் அத்தையையும், அந்த வீட்டிற்குள் நிகழும் சிடுக்குகளையும் பேசும் கதையாக அமைகிறது.

தேமாக்காதல் தன்பால் ஈர்ப்பு, அதன் பின்னாலிருக்கும் வெளிப்படாத உணர்வுகள், புரிதல்கள் ஆகியவற்றை ஆராயும் கதை. எழுதப்பட்ட விதத்தில் மிக நேர்த்தியான கதையாக இருந்தாலும், அதன் முடிவில் விடப்பட்ட இடைவெளி கதையின் மீது வேறொரு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

இலக்கியமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், என்னை எப்போதும் ஆழமாக யோசிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் உண்டு. எப்போதெல்லாம் காமத்தைப் பற்றிய தீவிரமான விசாரணைகள் ஒரு படைப்புக்குள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அதனுடன் இறப்பு என்ற உணர்வும் அதே தீவிரத்துடன் விசாரிக்கப்படுவது ஏன்?

பலமுறை இதைப் பற்றி யோசித்திருக்கிறேன். காமமும் இறப்பும் இரண்டுமே மனித வாழ்வின் மிகத் தீவிரமான அனுபவங்கள் என்பதாலா? அல்லது இரண்டிற்கும் தெளிவாக வரையறுத்து விட முடியாத ஒரு எல்லையின்மை இருப்பதாலா? அல்லது காமமும் ஒருவகையில் சிறிய மரணத்தின் அனுபவமாக உணரப்படுவதாலா? இப்படிப் பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்குத் தீனி போடும் கதையாக அமைந்துள்ளது தீஞ்சுவை. முழுக்க முழுக்க நாவின் சுவையை மையமாகக் கொண்டு, திருமணமான ஒரு பெண்ணின் மீது பரமசிவனுக்கு உருவாகும் நேசம், கதையின் முடிவில் அவள் கட்டியவனையும் மறந்து, கொண்டாடியவனையும் துறந்து இன்னொரு ஆணைத் தேடிச் செல்வது, இறுதியில் கணவனிடம் அவள் உதிர்க்கும் அந்த ஒரு வாக்கியம் இவை அனைத்தும் மனித மனங்களின் விசித்திரத்தையும், காமத்திற்கும் புலன்களுக்கும் இடையேயுள்ள நுட்பமான தொடர்பையும் ஆராய்கின்றன.

மைம்மா பாலியல் தொழிலாளியாக சமூகத்தால் பார்க்கப்படும் ஒரு பெண்ணின் மீதுள்ள பரிவையும், அந்தப் பரிவைக்கூட கேள்விக்குட்படுத்தும் சமூகத்தின் பார்வையையும் பேசும் சிறுகதை.

விளியறி ஞமலி நாய்களை விரும்பாத ஒரு பெண்ணின் வாழ்க்கைக்குள் நன்றியுள்ள ஒரு நாய் நுழைந்தால், அவளுடைய வாழ்வியல் எவ்வாறு மாறுகிறது என்பதை ஆராய்கிறது. தன் உயிரைக் காத்த நாயாக இருந்தபோதிலும், அந்தப் பெண்ணின் அகஉணர்வே கதையின் மையமாக உயர்ந்து நிற்கிறது. அதனால், மிக இயல்பானதாய் இருந்தும் மனதில் நீங்காத கதையாக மாறுகிறது ‘விளியறி ஞமலி’.

மொத்தத்தில் மேலடுக்கில் பாலியல் ரகசியங்களைப் பேசும் கதைகளாகத் தோன்றினாலும், அவற்றின் உள்ளடுக்கில் பெண் உலகின் நுட்பமான உளவியலையும், அதன் அடியாழங்களையும் அசைக்கும், கவனமான வாசிப்பையும் அவதானிப்பையும் கோரும் தொகுப்பாக அருகன் வந்திருக்கிறது.

அருணா முன்வைக்கும் குரலில் பெண்ணியப் பார்வைகள் ஆழமாக உறைந்திருந்தாலும், அதன் வீரியமோ, போக்கோ, குரலோ எந்த வகையிலும் கதையின் எதார்த்தத்துடனோ, சமூகத்தின் பிரதிபலிப்புடனோ, பெண்ணின் அகமன ஆசைகள் மற்றும் குமுறல்களைப் பதிவு செய்வதிலோ துளியளவும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அந்த வகையில், அருணாவின் எழுத்து தனித்துவமானது.

இத்தொகுப்பில் எனக்கு ஒரு சிறிய நெருடலாகத் தோன்றிய விஷயம், அருணாவின் கதைசொல்லல் வடிவம்தான். முடிவில் உச்சத்தை அடையும் கதைசொல்லல் வடிவம் என்பது தமிழ்ச் சிறுகதைகளில் மிகச் சிறந்த உத்திகளில் ஒன்று. அதன் வழியாக ஒரே கதைக்கு வேறொரு பரிமாணத்தை வழங்கவும், வாசகனை உச்ச உணர்வை நோக்கி நகர்த்தவும், கதையின் முற்பகுதியைத் தலைகீழாக்கவும், சொல்லாமல் விடுவதன் மூலம் பல புதிய திறப்புகளை உருவாக்கவும் முடிகிறது.

அருணாவின் இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் இதே வடிவத்தைப் பின்பற்றுகின்றன. முதல் சில கதைகளில் இந்த உத்தி ஏற்படுத்தும் தாக்கமும் பிரமிப்பும் மிக வலுவாக இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து பெரும்பாலான கதைகளும் இதே வடிவத்தில் நகரும்போது, ஆரம்பத்தில் இருந்த அந்தப் பிரமிப்பும் தாக்கமும் படிப்படியாகக் குறைந்து, ஒருவிதமான பரிச்சய உணர்வு மேலோங்குகிறது. அதுவே சில இடங்களில் வாசிப்பு இன்பத்தையும் சற்றே குறைக்கிறது.

இருப்பினும், காலாதீதம் போன்ற இன்னும் பல கதைகள் அருணாவிடம் தொகுப்பாக வரக் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பு அளிக்கிறது. அப்படிப்பட்ட கதைகளுக்குத் தேவையான நேர்த்தியான மொழியும், வசீகரமான வர்ணனைகளும், நுட்பமான அவதானிப்பும், கதாபாத்திரங்களின் அக உலகை மிக இயல்பாகச் சித்தரிக்கும் திறனும் அருணாவின் எழுத்தில் மிகத் தெளிவாக தெரிகின்றன.

நவீனத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களில் தேர்ந்த ஒரு சிறுகதையாளருக்கான எல்லா அம்சங்களும் அருணா சிற்றரசுவின்  இந்தத் தொகுப்பில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில், அருகன் நிச்சயம் வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

***

சு. ஆனந்த பிரகாஷ் – சொந்த ஊர் மதுரை. பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். தீவிர வாசகரும் புத்தக மதிப்புரையாளரும் (Bookstagrammer) ஆவார். தமிழ் மற்றும் உலக இலக்கியங்களை வாசித்து, அவற்றைப் பற்றிய தனது வாசிப்பு அனுபவங்களையும், மதிப்புரைகளையும் தனது Bookstagram பக்கமான @paperbacks_and_me இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். மின்னஞ்சல்: ananthaprakash11@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here