டோனி பிரஸ்லர்
வாழப்பழகுதல்
குழந்தை என்பது கதையில் வளர்ந்த மரம்
இருட்டு விலகாத பாதையில் முளைத்த
ஒரு செருப்பில்லாத பாதத்தை கொத்தும் முள்விதை
தனக்கு தானே பேசிக்கொண்டு
தன் மௌனத்தில் தடுமாறும் வார்த்தைகளால்
காணாமல் போகிற வரை
எரியும் தீக்குச்சிகளில் ஒன்று சேரும் நிழல்
நதியில் நீந்த முடியாதவனின் தத்தளிப்பாக
யார் துணையும் இல்லையென ஆன பிறகும்
பூக்களை போல் மலரும் உன்மத்தம் துள்ளும்
கரும்பாறையை போன்ற தவிப்பை
விரல் நுனிமேல் நகர்த்தி வைப்பதெப்படியென
புரியாமல் வெட்டவெளி வெளிச்சத்தில்
காணாமல் போகிற வரை
உறங்காத ஒரு உள்ளம் முழுதும் மூண்டெரியும் தீயை
நிலம் தன் பளுவால் மிதித்து அழிக்கிற போது
சுழலும் ஞாபகவெளியில்
காலம் தக்கவைக்கும் ஒளி
அவர்கள் விரல்கள் ஒரு பூவை ஏந்தினால்
அது பசியின் வலிமையுடைய விளையாட்டு
பூக்களை முழுச்சூடமாக மாற்றும் வித்தையை
ஒரு அரற்றலின் வழியாக மொழி அவர்களிடம் கற்கிறது
அதனால் இங்கேயே தங்க விரும்புகிறேன்
கிடைத்த இந்த வேஷத்தில்
அவர்களுக்கெல்லாம் வேடிக்கைக் காட்ட
*
பிரான்சிஸ் கிருபா கல்லறையிலிருந்து
அவன் உயிர் விரிந்து பரந்திருந்தது
சம்மனசுகள் அவனுடைய கன்னியின் வார்த்தைகளை மாற்றி மாற்றி மன்றாடினார்கள்
எங்கள் வார்த்தைகளை வாங்குவதற்ககோ முட்செடி தானிருந்தது
பசி என்பது காட்டுத்தீ கிடையாது வெறும் சாம்பல் என்றும்
எங்களை இவ்வூரை விட்டு போக வந்த வழியே திரும்பிப் போவது
எப்படியெனவும் அதுவே வழி சொன்னது
முட்செடிக்கு முன் கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்குமில்லை
மண் மேட்டில் வருவியிருந்த பொடி மண்ணை எடுத்து பிட்டு உண்டோம்
ஆணியடிக்கப்பட்டவனோடு சேர்ந்து வானத்தை பார்த்தோம்
நட்சத்திரங்களை விரும்பிய பத்தினி பாறையை எரிக்கிறது வேக்காலம்
பிழைக்க தெரியாதவன் உச்சிவெயிலை குடித்த படி இங்கே கிடக்கிறான்
*
கட்டளை
இயேசு காட்டிக்கொடுக்கபட்ட அந்த இரவில்,
மனிதன் தன்னை போல் பிறர் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்று சொன்னார். அது வாழ்நாள் முழுக்க பின்பற்ற வேண்டிய முதலும் கடைசியுமான கட்டளை என்றும் சொன்னார்.
இந்த கட்டளை எனக்கு ஏன் மிகக்கடினமாக இருக்கிறது என்றால்,
ஒருவன் தன்னை தானே நேசிப்பது எப்படியென்று,
அந்த ஆள் சொல்லவே இல்லை.
*
குறைகளை கேட்கும் கனவான்
கடவுள் ஒரு பிரதிநிதி
ஊரின் மேன்மை குணத்தை உரைக்கும் ஆள்
ஒரு கடவுளை எதற்காக தேடுகிறார்கள் என்று புரிந்துவிட்டால்
அவ்வூரின் மக்கள் குணம் புலப்பட்டுவிடும்
ஒருவேளை கடவுள் இல்லாவிட்டால்
கொலை செய்யும் மனம் கொண்ட ஆட்கள்
அங்கே குறைவென அர்த்தம்
கடவுளைப் படைத்தது வணங்குவதற்காக அல்ல
ஊர்பழக்கம் என்னவென கண்டுபிடிப்பதற்காக
தூங்கும் போதும் ஒரு கண்ணை மூடாத அனாதைக்காக
யார் மீதும் நம்பிக்கையில்லாத குற்றவுணர்வின் இரக்கத்திற்காக
மனமும் கண்ணீருமே என்றுமுள்ள சாட்சியென குறிப்பெடுப்பதற்காக
கேட்கப்படாத குரல்களாக மௌனத்தால் மிதிக்கப்பட்டு
ஆணவத்தால் கொலைவாங்கும் நாதியற்றவர்க்கு
பூடம் எழுப்புவதற்காக
*
தானற்ற பிற
மீட்சி, யாருக்கு வழங்கப்படவில்லையோ அவருக்கே சொந்தமானது. ஏற்கபடாத மீட்சிகள், விதிகளின் விளையாட்டை நேரங்காலம் பார்க்காமல் உழைக்க வைக்கிறது. தூங்குவதற்கு அனுமதிக்கப்படாத விதியின் விழிகள், கருணையுடன் கைவிடுபவர்களின் சோர்வுக்காக காத்திருக்கிறது. வெட்டவெளியில் ஓய்வறியா பல பாதைகள் அதனதன் வழியே பசியின் பொருட்டு மூட்டை மூட்டையாக கட்டுக்கதைகளை பதுக்கி விளையாடும். கதைகளோ மறைவாய் பேசும் குரல்களின் ரகசியத்தில் உருவம் கொண்ட ஊரின் வரைபடத்தை உருவாக்கியது.
அதுவே மனக்கோட்டையின் திட்டம். குறுக்கு சாலைகள். குடியேற்றம். காட்டு எழில். பால்வாடி. மைதானம். மேம்பாலம். எழும் கிளர்ச்சியின் களம், வடிவமெடுக்காத உயிரினம். வடிவம் வடிவமற்றதை ஆக்கிரமிக்க மோதுகிற சுமைகளின் வடிவமே மனம். மோதலில் பிறக்கும் குழந்தையே கனவு. மண், வானமாக முன்பகையுடன் உறைந்த விரிசல் தழும்புகளாக, பிரிந்தே சேர்ந்து வாழும் எல்லைகளும் தொடுதலும் விலகுதலும் தோலுரித்து முற்றும் உருமாறும் உலகமனைத்தும் காணும் தீராத திருப்புமுனைகளின் திருவிழா.
***
டோனி பிரஸ்லர் – கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். 2023ல் பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பின் ஆசிரியராகவும், 2024ல் ககனம் என்ற கவிதைத்தொகுப்பும் வெளியிட்டுள்ளார். நவீன தமிழ் புலத்தை சேர்ந்தவர். மின்னஞ்சல் : tonypresslers@gmail.com
