Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்ஊர்மிளா பவாரின் வழி அண்ணல் அம்பேத்கரை அறிந்து கொள்ளல்

ஊர்மிளா பவாரின் வழி அண்ணல் அம்பேத்கரை அறிந்து கொள்ளல்

சித்ரா பாலசுப்ரமணியம்

ண்ணல் அம்பேத்கர் குறித்த புத்தகங்கள் சிலவற்றையே வாசித்திருக்கிறேன். அவருடைய புத்தரும் தம்மமும் என் மனதுக்கு மிக நெருக்கமான புத்தகம். எத்தகையதான மதம் மனிதர்களுக்குத் தேவை என்பதை அம்பேத்கர் அதில் விரிவாகவே விளக்கியிருப்பார். பல பக்கங்களில் அடிக்கோடிட்டு, அந்த வாக்கியங்களை அடிக்கடி எடுத்து வாசிப்பதுண்டு. தம் மக்களின் விடியலுக்கான வழியாக பௌத்தத்தைப் பார்த்த அண்ணல் அம்பேத்கர், அது குறித்த கருத்துகளை இந்நூலில் விரிவாக எழுதியிருப்பார்.

ஆனால், பௌத்த்திற்கு தம் மக்களோடு சேர்ந்து 1956 ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி மதம் மாறிய பிறகு ஏழு வாரங்களுக்குள் (1956,டிசம்பர் 6) காலமாகி விடுகிறார். பௌத்த மதம் சார்ந்து அவர் தம் மக்களைச் சீர்படுத்த விரும்பிய அத்தனை கனவுகளும் காற்றோடு கரைந்து போயின. அந்த மக்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டிருப்பார்கள், யார் அதன் பின் வழி நடத்தியிருப்பார்கள், ஐயங்கள் எழுமாயின் தீர்ப்பவர் எவரோ என ஏராளமான கேள்விகளை நான் கேட்டுக் கொள்வேன். ஆயினும் வேறு வேறு வாசிப்புத் தளங்கள் நோக்கி மாறி மாறிப் பயணிப்பதால் இந்தக் கேள்விகள் மனதில் கேள்விகளாகவே தங்கி நின்றன.


இந்த வருடத் தொடக்கத்தில், அதிக அளவிலான பெண்களின் தன்வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்துத் தேடிய போது தான் The weave of My life :A Dalit woman’ s memoirs என்ற ஊர்மிளா பவாரின் தன்வரலாற்று நூல் குறித்து அறிந்து கொண்டேன். ஊர்மிளா பவார் தலித் பெண் எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். மகாராஷ்டிராவின் கொங்கண் பகுதியைச் சேர்ந்த உள்ளடங்கிய மலை கிராமத்தைச் சேர்ந்தவரான அவர் Aaydan என்ற பெயரில் மராட்டிய மொழியில் எழுதிய நூலை மாயா பண்டிட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Aaydan என்றால் முடைதல் என்ற பொருள். ஊர்மிளாவின் தாய், மூங்கில் கூடைகளைப் பின்னியே தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதால் தன்னுடைய நூலுக்கு அதே பெயரையே வைத்து, தன் தாய் லட்சுமி பாய்க்கே இந்நூலைக் காணிக்கையாக்கியிருக்கிறார் ஊர்மிளா.

ஊர்மிளாவின் குழந்தைப் பருவம் தொடங்கி, பள்ளி, ஆர்வங்கள், காதல், திருமண வாழ்வு, கணவர், அவரின் குடும்பம், குழந்தைகள், வாசிப்பு அனுபவம், பணியிலமர்தல், எழுதத் தொடங்குதல், களப்பணி செய்யும் செயல்பாட்டாளராகவும் பெண்ணியவாதியாகவும் ரசமாற்றம் நிகழும் தருணங்கள் என விரிவாகவும் மிக வெளிப்படையாகவும் துணிச்சலோடும் இந்த நூலில் பேசியிருக்கிறார். அந்த வகையில் மிக வித்யாசமான வாசிப்பனுபத்தையும் வாசித்த பின்னும் கலவையான சிந்தனைகளையும் உண்டாக்கிய நூல் இது. ஒடுக்கப்பட்டவர்களிலும் மிக மோசமான ஒடுக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் ஒடுக்கப்பட்ட பெண்கள் தான். தலித் எழுச்சியிலும் தந்தைவழி மரபுச் சிந்தனைகளோடே பெண் அதே இடத்திலேயே நிற்க வைக்கப்படும், நடத்தபடும் தன்மையை ஊர்மிளா கேள்வி கேட்கிறார். ஊர்மிளாவின் எழுத்து அம்பேத்கரின் சமூக சந்தனையின் வெளிப்பாடு என்பதை இந்த நூலை வாசிக்கும் எவரும் உணர முடியும் . அவர் உண்டாக்கிய நேர்மறைத் தாக்கத்தை தன் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் அனுபவப்பூர்வமாக ஊர்மிளா பரிசோதித்துப் பார்க்கிறார். போராட்டங்கள் அதிகம் எனினும் அவர் தன் முயற்சியில் விடாப்பிடியாக நிற்க அம்பேத்கரின் சிந்தனைகளும் சொற்களுமே துணை நிற்கின்றன. அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அம்மக்களின் வாழ்வில் அண்ணல் அம்பேத்கர் நிறைந்து நிற்கும் தன்மைக்கு இந்தப் புத்தகம் சிறந்த எடுத்துக்காட்டு. அதுவும் ஒரு பெண்ணின் மலர்ச்சி என்பது இதைக் கூடுதல் பொலிவாக்குகிறது. சிறுகதைகளோடு, அம்பேத்கரின் இயக்கத்தில் தலித் பெண்களின் பங்கு குறித்த நூல் ஒன்றினையும் ஊர்மிளா பவார் மீனாட்சி மூன் உடன் இணைந்து எழுதியிருக்கிறார். Aamhihi Itihass Ghadwala: Ambedkari Chalavalitil Streeyancha Sahabhag என்ற இப்புத்தகம் 1980 இல் சுகவா பிரகாஷன் வெளியீடாகவந்தது.

கொங்கண் பகுதியில் ரத்னகிரி மலைப்பகுதியை ஒட்டிய பன்ஸ்வாலே கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா. மகர் சாதியினைச் சேர்ந்தவர்களாகிய இவர்கள் இந்து வழிபாட்டையே கொண்டிருந்தனர். இவருடைய தந்தை அந்த கிராமத்தின் பூசாரியாகவும் இருந்தவர். ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்த அவர், சினால் என்ற மலை கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கான பள்ளியில் சிலகாலம் ஆசிரியராகவும் இருந்தவர். குழந்தைகளுக்குக் கல்வி வேண்டும் என்பதில் மிகத் தீவிரம் காட்டியவர். அடித்தோ மிரட்டியோ எவ்வாறாகவேனும் தன் குழந்தைகளையும் உறவினர் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விடுவார். எவ்வளவு அடம் பிடித்தாலும் எதுவும் நடக்காது. அந்தளவு கல்வியை ஊர்மிளாவின் தந்தை வற்புறுத்தியிருக்கிறார். இவற்றை எல்லாம் விவரிக்கும் போதே அன்றைய சமூக நிலையையும் விளக்கும் பல்வேறு செய்திகளை ஊர்மிளா விரிவாக எழுதிச் செல்கிறார். சிறிய தகவல்களாயினும் அவை ஆர்வமூட்டுவதாக அமைகின்றன. உதாரணத்திற்கு, இவரின் தந்தை ஆசிரியராக இருந்த பள்ளியில் பிராமண, பண்டாரி, குன்பி சாதியைச் சேர்ந்த குழந்தைகள் உடன் படித்தாலும் அவர்கள் ஒருபுறமாகவும் மகர் சாதிக் குழந்தைகள் ஒரு ஒதுக்குப் புறத்திலும் அமர வைக்கப்பட்டனர் என்ற தகவலையும் சொல்லிச் செல்கிறார். ஊர்மிளா 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்கள் வசித்த கிராமத்தில், மகர் சாதியினர் ஊருக்கு நடுவில் பிராமண, பண்டாரி, குல்வாடி, குன்பி சாதியினருக்கு நடுவிலேயே வசித்திருக்கின்றனர். ஆனால், நீர் சேந்துவது ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கடுமையாக மறுக்கப்பட்ட ஒன்று. எனவே, ஊர்மிளாவின் வீட்டில் இருந்த கிணற்றில், இப்பெண்கள் எந்நேரமும் நீர் சேந்திக் கொள்ளும் ஏற்பாட்டை அவர் தந்தை செய்து வைத்திருந்தார். ஊர்மிளாவின் தந்தை, இவர் மூன்றாம் வகுப்பு பயிலும் போது 1954 இல் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார். தந்தையின் மறைவின் போது, சில கணம் அப்பாடா, இனி பள்ளி செல்லும்படி வற்புறுத்தல் இல்லை என மகிழ்ந்ததாகவும் ஆனால், அதன் பின்னரே கல்வி கற்பதற்காக ஊக்கம் தம்மை ஆட்கொண்டதாகவும் ஊர்மிளா எழுதுகிறார்.


தலித் மக்கள் இந்து சமயத்திலிருந்து பௌத்தம் தழுவுவதன் முன் நடந்த ஒரு சில சம்பவங்களையும் ஊர்மிளா பதிவு செய்கிறார். ஆற்றின் குறிப்பட்ட பகுதியில் மட்டுமே தலித் மக்கள் நீர் எடுக்கலாம் என வரையறுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலும் மராத்தா சவர்ணர்கள் தங்கள் மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்து அவற்றை நீராட்டுவார்கள். அவர்கள் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை, அது எவ்வளவு நேரமானாலும் தலித் பெண்கள் பொறுமையோடு காத்திருந்து சகதியாகக் கலங்கிய அந்த நீரையே அள்ள வேண்டும். தலித் தரப்பினர் இது குறித்து கூடிப் பேசி பொருமுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவியலாத வகையில் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் முதுகெலும்பு இல்லாதவர்களாகவும் இருந்தனர் என எழுதுகிறார் ஊர்மிளா.

ஊர்மிளாவின் தாய், பேய் பிசாசு பில்லிசூனியம் காத்து கருப்பு ஆகிய நம்பிக்கைகளை உடையவராக இருந்தவர். எனினும் பௌத்த மத மாற்றம் நிகழந்த பிறகு இவை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக் கொண்டார் என்கிறார் ஊர்மிளா. இவர் அண்ணல் அம்பேத்கரை அறிந்து கொண்டதே, அவர் காலமான செய்தியிலிருந்து தான். முதலில் அவரைப் பற்றியோ அவர் மதம் மாறச் சொன்னது குறித்தோ தங்கள் கிராமத்தினர் எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் ஷிர்கோன் கிராமத்தைச் சேர்ந்த நாதுராம் கம்ப்ளே, பர்தவானே கிராமத்தைச் சேர்ந்த ஹரிபாவ் ஆயிரே, கேலேவைச் சேர்ந்த பாண்ட்யா சாவேகர், மிரேவைச் சேர்ந்த கோபால் மாஸ்டர் போன்ற செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து கிராம மக்களிடம் அம்பேத்கர் குறித்தும் மதமாற்றத்திற்கான அவசியத் தேவை குறித்தும் வற்புறுத்திக் கூறியதைப் பதிவு செய்கிறார். இவர்கள் தான் அம்பேத்கரின் மறைவுச் செய்தியையும் கொண்டு வந்தவர்கள். ரேடியோவில் அதைக் கேட்டதாகச் சொல்லி பெருங்குரலெடுத்து அழுது கொண்டே நாதுராம் கம்ப்ளே தம் வீட்டின் வராந்தாவில் அமர்ந்திருந்ததையும் கூடவே தம் தாய், அண்ணன் அ்அக்கா அனைவரும் தேம்பி அழுதபடி இருந்ததைப் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த மாலையில் கண்ணுற்ற காட்சி தம் மனதில் நீங்காமல் ஆழமாக உறைந்துவிட்டதாகவும் ஊர்மிளா குறிப்பிடுகிறார். அடுத்த நாள் பம்பாய் சென்று அம்பேத்கரின் கடைசி முக தரிசனம் பெற வேண்டும் எனச் சொல்லிவிட்டு நாதுராம் கம்ப்ளே சென்று விடுகிறார். (இவருடைய குடும்பத்தினர் பம்பாய் சென்றதான பதிவு எதுவும் இல்லை). அதன் பின்னர், ரத்னகிரியின் கோகேட் கல்லூரி வளாகத்தில் சுற்றியிருந்த கிராமங்களிலிருந்தெல்லாம் தலித் மக்கள், மனிதக் கடலெனத் திரண்ட காட்சியை ஊர்மிளா விவரிக்கிறார். இவர்களின் குடும்பமும் அதிலொன்று. அந்தக் கூட்டத்தில் எவ்வாறெல்லாம் இனி நடந்துகொள்ள வேண்டும் என்ற குறிப்புகள் ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. புத்தம் சரணம் கச்சாமி என்பதை மந்திரம் போல மக்கள் முழங்கிக் கொண்டே இருந்தனர்.

கூட்டம் முடிந்து வீடு திரும்பியதும் செயல்பாட்டாளர்கள், ஒவ்வொரு வீடு தோறும் சென்று பூஜை அலமாரியில் சுவற்றில் இருந்த இந்துக் கடவுளர்களின் படங்கள், சிறு செப்புச் சிலைகள், பூஜைக்கான உபகரணங்கள் என அனைத்தையும் கூடையில் இட்டு, திரண்டு போய் ஆற்றில் அவற்றை வீசிவிட்டு வந்தனர். அம்மா அதனை மறுதலிப்பாள் என நினைத்த ஊர்மிளா, அவ்வாறு அவள் செய்யாதது கண்டு நிம்மதி அடைகிறார். ஆற்றை நோக்கித் திரண்டு சென்ற அம்மக்களின் கைகளில் இருந்த கூடைகளில் தெய்வப்படங்கள் இருந்தன. வழக்கமான பிரார்த்தனைப் பாடலின் இராகத்தில் புதிய சொற்களை இட்டு பாடிக் கொண்டே அவர்கள் சென்றனர். மராத்தி மொழியிலான அந்தப் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பையே கீழே தருகிறேன்:


O ye Gods
Yes,that’s right Maharaja
Go back to your own place
Yes,that’s right Maharaja
You never did any good to us.
Yes,that’s right Maharaja
Now our lord Buddha has come.
Yes,that’s right Maharaja.
Now we aren’t scared of anyone.
Yes, that’s right Maharaja.

இதைப் பாடிக்கொண்டே ஆற்றை நெருங்கியதும் அம்பேத்கர் வாழ்க, இறைவன் புத்தர் வாழ்க என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

இந்த நிகழ்வின் முந்தைய நாளின் முன்னிரவில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் கிராமத்தினரின் கூட்டம் நடைபெற்றது. அதில் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.

கடவுளர்களின் படங்கள் இருந்த இடத்தில் இப்போது அம்பேத்கரின் படமும் புத்தரின் படமும் மாட்டப்பட்டன. வீட்டின் முன் புத்தர் சிலை வைக்கப்பட்டது. மகர்களின் குடியிருப்பில் ஒவ்வொரு வீடாகச் சென்று, களப்பணியாளர்கள் புத்த வந்தனத்தைக் கற்றுத் தந்தனர். ஒவ்வொரு நாள் மாலையும் கூட்டமாக இவை பாடப்பட்டன. முதலில் அது குழப்பத்தையும் நகைப்பையும் உண்டாக்கினாலும் போகப்போக மக்கள் பழகிக் கொண்டனர். களப்பணியாளர்கள் கிராமம் கிராமமாகச் சென்று இவற்றைப் பயிற்றுவித்தனர். நல்லது கெட்டது சார்ந்த முந்தைய இந்து மதச் சடங்குகள் கைவிடப்பட்டன. புதிய சடங்குகள் கற்றுத் தரப்பட்டன. திருமண முறைகளிலும் பழைய சடங்குகள் கைவிடப்பட்டன. மணமகளும் மணமகனும் வெள்ளை உடையையே அணிந்தனர். திருமணப் பந்தலில் புத்தரின் படமும் அம்பேத்கரின் படமும் வைக்கப்படும். அவற்றுக்கு மாலைகள் இடப்பட்டிருக்கும். புத்த பிட்சு சடங்குகளைச் செய்வார். மணமக்கள் இருபத்தியிரண்டு உறுதிமொழிகளைச் சொல்வர். (அம்பேத்கர் உண்டாக்கியது) பின் கருக மணிக்குப் பதிலாக வெண்மணி மாலையில் தாலி அணிவிக்கப்படும். பின்னாட்களில் கருக மணியே மீண்டும் தாலியாக அணியப்பட்டதாக ஊர்மிளா குறிப்பிடுகிறார். கூடவே, தான் கிராமத்தை விட்டு நீங்கிப் பல வருடங்கள் கழித்து மீண்டும் சென்றபோது புற வளர்ச்சி பெற்ற கிராமங்களின் ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளில் மீண்டும் பழையபடியிலான சமயச் சின்னங்கள் இடம்பெற்று விட்டதையும் சடங்குகளிலும் புற அடையாளங்களிலும் பழையமுறைக்கே மாறியதையும் குறிப்பிடுகிறார். போலவே, சாதிப் பின்னொட்டுகளிலும் மாற்றங்கள் உண்டாயின. மகர் என்ற பின்னொட்டைத் துறந்து பவார் (Pawar, Powar அல்ல காரணம் powar என்பது சக்கிலியர்களின் சாதிப் பின்னொட்டு) வைத்துக்கொள்ளப்பட்டது. மகர்களிலும் பிரதேசங்களை ஒட்டி, பல்வேறு பிரிவுகள் பீலே மகர், பான் மகர் என்பது போன்றவை இருப்பதையும் இவற்றில் இதைவிட இது தாழ்ந்தது, உயர்ந்தது எனப் பிரிவினைகள் இருந்தத்தையும் பவார் தயக்கமின்றிக் குறிப்பிடுகிறார். சாதிய ரீதியிலான பெயர்களைத் துறத்தல், சாதிப் பின்னொட்டுகளில் மாற்றங்கள், பண்பாட்டு அம்சங்களில் நேர்ந்த மாறுபாடுகள் எனப் பல தகவல்களையும் போகிறபோக்கில் ஊர்மிளா சொல்லிச் செல்கிறார். திருமணமாகும் போது, மணப்பெண்ணுக்குப் புதிய பெயரைச் சூட்டும் வழக்கத்தின்படி இவருக்கு இட்ட பெயர் தான் ஊர்மிளா என்பதும். வேறு ஒரு பெயரை மணமகன் வீட்டார் சொல்லும் போது, இராமாயணத்தில் இலட்சுமணனின் மனைவியின் பெயரான ஊர்மிளை தனக்கு மிகுந்த விருப்பமான பாத்திரம் என்பதால் அந்தப் பெயரையே தான் தேர்ந்தெடுத்ததாக ஊர்மிளா குறிப்பிடுகிறார்.

ஊர்மிளாவின் கணவரான ஹரிச்சந்திரா, அம்பேத்கர் கொங்கண் பகுதியில் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்தபோது பிறந்தவர் எனக் குறிப்பிடும் ஊர்மிளா, உள்ளூர் தலைவர்களான கல்சுல்கார், அருளேகர், கிர்லோஸ்கர், ஹட்கர், ஹிந்த்லேகர் போன்றோர் மிகப்பெரிய பிரச்சாரக் கூட்டங்களை ஒருங்கிணைத்ததையும், அந்தக் கூட்டங்களில் அம்பேத்கர் சாதி ரீதியிலான இழிவான தொழில்களை புறக்கணிக்க வேண்டும் என வற்புறுத்தியதற்கு இணங்க ஹரிச்சந்திராவின் தந்தை இனி அத்தகைய பணிகளை ஒருபோதும் செய்வதில்லை என உறுதி எடுத்துக்கொண்டதையும் சுட்டிக் காட்டுகிறார். கூடவே, கிராமங்களை விட்டு வெளியேறுங்கள், சாதிப் பாகுபாடுகள் ஊறியிருக்கும் கிராமங்கள் இம்மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒருபோதும் துணை நிற்காது என்ற அறைகூவலையும் தாம் முழுமையாக நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.
ஊர்மிளாவின் கணவரும் அம்பேத்கரின் நேரடிக் கூட்ட உரைகளைக் கேட்டு வளர்ந்தவரே. அதைப் பற்றிக் கூறும் போதெல்லாம், ஊடுருவும் அம்பேத்கரின் கண்களையே தாம் பார்த்தது போல் உணர்ந்ததாகப் பதிவு செய்கிறார் ஊர்மிளா.

அதனாலேயே, இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை நாடி பம்பாய்க்கு நகர்கின்றனர்.
பம்பாய், ஊர்மிளாவிற்குப் பல கதவுகளைத் திறந்து விடுகிறது. மேடைக்கூச்சம் என்பதைப் பள்ளி நாட்களிலேயே அறியாத ஊர்மிளா, இங்கு அம்பேத்கரிய இயக்கங்களோடு அறிமுகமாகிறார். தனக்கு எழுதவும் வரும் என்பதையும் கண்டு கொண்டு சிறுகதைகளும் பத்திகளும் எழுதத் தொடங்குகிறார். அவை பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகின்றன. துப்புரவு பணியாளர்களுக்கான அமைப்பு, பெண்ணிய அமைப்புகள் எனப் பலவற்றோடு தம்மை இணைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று உரையாற்றவும் செய்கிறார். எனினும் தலித் அமைப்புகளிலும் ஆண்கள், பழையபடி தந்தைவழிச்சமூக மதிப்பீடுகளுடனேயே பெண்களை நடத்தும் வித்ததையும் சுட்டிக் காட்ட தயங்கவில்லை. பெண்கள் அமைப்புகளில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளை முன்வைக்கும் முறை, இங்ஙனம் செயலாற்றும் விதம் எனப் பல்வேறு கூறுகளுக்கும் அண்ணல் அம்பேத்கரின் சொற்களே தமக்கு உந்துசக்தியாக இருந்ததாக ஊர்மிளா பல பக்கங்களில் எழுதியிருக்கிறார். பி.ஏ.படித்து முடித்த உற்சாகத்தில் எம்.ஏ பட்டத்திற்குப் பதிவு செய்து கொள்ளும் போது, இதுநாள்வரை உறுதுணையாக இருந்த கணவர் மிகக் கடுமையாக இதை எதிர்க்கிறார். நல்ல குடும்பம் என்பது பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்து கவனித்துக் கொண்டால் தான் தழைக்கும் எனப் பிடிவாதம் காட்டுகிறார். ஒவ்வொரு தினமும் சவாலானதாக இருந்தாலும் தன் அரசுப் பணி, எழுத்து, பட்டம் பெறும் முயற்சி, பெண்கள் குழுக்களில் பங்கேற்பு என அனைத்தையும் ஊர்மிளா, ஒரு சதாவதானியைப் போல கவனகரைப் போல கையாண்டிருக்கிறார். அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் என்ற சங்கப் பாடல் வரி நினைவில் எழுந்தது.

ஊர்மிளாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் தன் மகள் காதல் திருமணம் செய்ய முற்படுகையில் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஊர்மிளா தம் மகளுக்குத் துணை நிற்கிறார். ஊர்மிளாவின் கணவர் பவார் புற்றுநோயால் இயற்கை எய்தியபின் ஒரு விதவையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாத, ஊர்மிளாவி்ன் தன்மானப் போராட்டம் வியக்க வைப்பது. கணவர் உயிருடன் இருந்த போது, மங்கல அடையாளம் என வற்புறுத்தப்பட்ட கருகமணி மாலையை அணியாத ஊர்மிளா, பின் அதைத் தன் அடையாளமென அணிந்துகொள்கிறார். இந்த முடிவை எடுக்க அவர் மனதில் நிகழ்ந்த போராட்டங்களையும் பதிவு செய்கிறார். கணவர் காலமானபோது, மனைவி தன் மங்கல அடையாளங்களை இழக்க வேண்டும் என்ற முந்தைய வழக்கமே, பௌத்த மதம் மாறிய தலித்துகளிடையேயும் கடைபிடிக்கப்பட்ட போது, ஊர்மிளா அதையும் அம்பேத்கரின் வார்த்தைகளைக் கொண்டே மறுக்கிறார்.

290 பக்கங்கள் கொண்ட இந்த தன்வரலாற்று நூலை வாசித்து முடித்த போது, பெருமூச்சோடு, தம் மக்களுக்கான அறிவு அரணாக நின்ற அண்ணல் அம்பேத்கரை, விழிகளில் இரண்டு சொட்டுக் கண்ணீரோடு நினைத்துக் கொண்டேன். தம் மக்கள் சுயமரியாதையோடும் நல்வாய்ப்புகளோடும் ஒழுக்கத்தோடும் வாழவேண்டும் என்று அவர் கண்ட கனவுகளும் பேசிய வார்த்தைகளும் எழுத்துகளும் இலட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகமளிப்பதாக என்றும் நிலைத்திருக்கும்.

***

சித்ரா பாலசுப்ரமணியன் – சென்னையில் வசிக்கிறார். பதினைந்து ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய வானொலியிலும், தூர்தர்ஷனிலும் செய்தி வாசிப்பாளராகவும் பணி செய்துள்ளார். காந்தி 150 இற்காக காந்தியர்களை நேர்காணல் செய்திருந்தது அவருடைய அரும்பணி. தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் எழுதியும் பேசியும் வருகிறார். மண்ணில் உப்பானவர்கள், செயலறம் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். தன்னார்வமாக சங்க இலக்கிய வகுப்புகளையும் எடுத்துவருகிறார். மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here