Homeஇதழ்கள்2026 இதழ்கள்அறிவியலின் விளையாட்டும் மானுடத்தின் இருப்பும்

அறிவியலின் விளையாட்டும் மானுடத்தின் இருப்பும்

ஆ.ஹரிகிருஷ்ணன்

மிழ் இலக்கியத்தில் அறிவியல் புனைவுக் கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் மிக சொற்பமே. இந்த தலைப்பை பேசியதும் நம் அனைவர் மனதிலும் முதலில் தோன்றும் முகம் சுஜாதா. அவர் எழுதிய அறிவியல் கதைகள் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வேகப் புனைவுக் கதைகளாகவே இருக்கும். மேலும் நாம் பார்த்த திரைப்படங்களும் அதே தன்மையைக் கொண்டவை. டார்காவ்ஸ்கி, டென்னிஸ் வில்லினியுவ், ஜேம்ஸ் கேமரூன் போன்ற சில இயக்குனர்கள் அறிவியல் வளர்ச்சியை விட இயற்கையும் மனிதமும் முக்கியம் என்பதை தங்கள் படங்கள் மூலமாகக் கூறியிருப்பார்கள். மனித குலம் தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் அல்லது அதனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதே நேரத்தில் அதை எதிர்க்கும் முரணும் நம் மனதிற்குள் இருக்கிறது. உதாரணத்திற்கு நம் அனைவர் கையிலும் இருக்கும் ஏஐ செயலிகள். இப்படி தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இருக்கும் மனிதர்களின் வாழ்கைக் கதைளை வெறும் விண்கலங்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் என்று கூறாமல் அறிவியல் தொழில்நுட்பத்திற்கான தர்க்க விளக்கங்களையும் கூறி மனிதர்களுக்குள்ளான தத்துவார்த்தத்தையும் பேசும் கதைகள் தான் ரா.கிரிதரின் கண்ணிநுண் உயிர்த்தாம்பு தொகுப்பு. 

 மொத்தம் 6 சிறுகதைகளும் 4 குறுங்கதைகளும் கொண்ட இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுக்கும் உள்ள ஒரு பொதுத்தன்மை ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அல்லது அதனைப் பயன்படுத்துபவர் ஆரம்பத்தில் அதன் மேல் உள்ள வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அதனுள் முழுமையாக சென்று அதன் ஆதிக்கத்தில் சிக்கியும், பக்க விளைவுகளை நினைத்தும் மனிதன் தன்னிருப்பை தக்க வைத்துக்கொள்ளும் போராட்டத்தைத் தான் பேசிகிறது.

  உடம்பில் இருக்கும் உயிரணுவை வைத்து புது உறுப்பை உருவாக்குவது, கருவில் இருக்கும் சிசுவுக்கு தரக் கட்டுப்பாட்டு மையத்தில் சமூக ஒழுங்கு மதிப்பீடு நடத்துவது, கடலில் நகரும் காற்றாலை நகரம், கவிஞரை கேள்வி கேட்கும் ஏஐ என வியக்க வைக்கும் கருக்களும் அதற்கான எளிதான விளக்கங்களும் வாசிப்பவரை புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. என்னை மிகவும் ஈர்த்த கதைகள் இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது, சாம்பல் பூத்த நிலம், இயற்கைக்கு திரும்புதல். 

சாம்பல் பூத்த நிலம் எனும் கதையில் அணு ஆயுதப் போருக்கு பின் 2081 இல் உலகம் இரண்டு அரசுகளாக பிரிந்து இருக்கிறது. இயந்திரங்களும் ஹியூமன் ஆண்ட்ராயுடுகளும் நடத்தும் தர்க்க ரீதியான பயன் மதிப்பை மட்டுமே கொண்ட “மேல் அரசு”, மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு ஏற்ற சட்டங்களைக் கொண்ட ஆசிய நாடுகளின் கூட்டமைப்பை “கீழ் அரசு”. கதையின் நாயகி அபர்ணா, மேல் அரசின் மெய்நிகர் மையத்தில் தன் கருவில் இருக்கும் சிசுவின் சமூக ஒழுங்கு மதிப்பு சோதனைகள் செய்து சிசுவின் முப்பது வயது வரையிலான எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து, அதன் பயன்மதிப்பு குறைவாக இருந்தால் ஷாமன் எனும் ஹியூமனாய்டு அதை சமூகத்திலிருந்து நிராகரிக்க முனைய இயந்திரங்களின் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்கு எதிராக மனிதனின் சுதந்திரத்தை நிலை நாட்ட அபர்ணா ஒரு தாயாக தன் குழந்தைக்காகப் போராடுகிறாள். அவள் பேசும் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. இன்று நாம் சிறு சிறு விஷயத்திற்கும் ஏஐ செயலியை நாடும் பொழுது எதிர்காலத்தில் நம் சந்ததியினர் இப்படி ஒரு நிலைமை சந்திப்பார்களோ என்ற பயமும் எழுகிறது. 

இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது எனும் கதையில் 2124ல் “கிரீன் ஹவுஸ்” எனும் கடலில் மிதக்கும் நகரத்தில் வாழும் ஆனந்த் பிறந்தது முதல் இங்கே வாழ்ந்து மிதக்கும் காற்றாலைகளால் வலசை மாறிய பறவைகளையும், கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பும் கண்டு ஆற்றாமையால் அரசை எதிர்த்து குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்கிறான். இதனால் நிலம் என்றால் என்னவென்று காண வேண்டும் ஆசையால் தன் முன்னோர்கள் வாழ்ந்த முப்பந்தலுக்கு செல்ல விரும்பும் அவனது ஆசை நிறைவேறாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பது தெரிந்தாலும் அவன் இயற்கைக்காகப் போராடுகிறான். “இயற்கையைப் பாதுகாக்க நினைக்கும் தொழில்நுட்பம் அதை மாற்றுவது மூலம் அழித்துக் கொண்டிருப்பது”, “புரிந்து கொள்ள இயலாத பிரபஞ்ச தரிசனம் ஒன்று உண்டு அதை நோக்கி நாம் இயல்பாக முன்னேறுகிறோம்” போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. முடிவிலா ஆற்றல் என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டும் பேராசைக்கு எதிராக, “முடிவிலா சக்தி மனிதனை அழிக்கும். நமக்கு முடிவில்லா சக்தியை விட முடிவில்லா மனிதத்துவம் தான் தேவை” என்ற மானுடக் குரலை ஆனந்த் ஒலிக்கிறான். 

எண் என்ப கதை கணிதத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு உள்ள செளரி எனும் விசித்திர சிறுவன் மற்றும் மஞ்சுள் பார்கவ் ஆகியோரின் மூலமாக கணிதத்தின் அழகியலைப் பேசுகிறது. கூட்டல் கழித்தல் தவிர்த்து algebra, trignometry ஆகிய மேலும் கடினமான கணிதம் பயில்வதால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி நம்மில் பல பேருக்கு இருக்கும். அதற்கு மிகவும் அழகாக இதில் எழுத்தாளர் பதில் கூறியிருக்கிறார். ‘ஃப்ராக்டல்ஸ்’ (Fractals) மற்றும் வடிவங்களின் பின்னால் இருக்கும் பேரழகு, தபேலாவின் தாளக் கணக்குகளில் இருக்கும் கணிதத் தொடர்பையும் பேசுகிறார் எழுத்தாளர். 

எதிர்கால தொழில்நுட்பம், இயந்திரம், கணிதம் என்று மட்டுமல்லாமல் தத்துவார்த்த ரீதியாகவும் சில கதைகளைப் பேசுகிறது. இயற்கைக்கு திரும்புதல் எனும் கதை மொழி எவ்வாறு நமது சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்ற கருத்தை மிக நேர்த்தியாகக் கையாண்டுள்ளது. பல மொழிகளைக் கற்பது நம் சிந்தனையை வளர்க்கிறதா அல்லது நம் ஆழ் உணர்வுகளின் தீவிரத்தைக் குறைக்கிறதா என்ற விவாதத்தை டாக்டரின் கதாபாத்திரம் மூலம் ஆசிரியர் எழுப்பியுள்ளார். டாக்டர் சிவகடாட்சம் மற்றும் எழுத்தாளர் பஞ்சாபகேசன் இருவருக்குள் நடக்கும் உரையாடல்கள் வழியாக கதையின் அறிவியல் பின்னணியை மிக இயல்பாகவும் சுவாரசியமாகவும் கொண்டு போகிறார் எழுத்தாளர். இறுதியில் வரும் திருப்பம் இயற்கைக்கு திரும்புதல் எனும் தலைப்புக்கு மிக ஆழமான அதேசமயம் மிக அதிர்ச்சிகரமான அர்த்தத்தையும் தருகின்றது. 

அறிவியலின் தத்துவத்துடன் இயற்கையின் தத்துவம் சந்திக்கும் கதைதான் உயிர் தாம்பு. இயற்கையின் பரிணாம வளர்ச்சியைத் தொழில்நுட்பத்தின் மூலம் Override செய்ய முனையும் கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கும், இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ நினைக்கும் விஞ்ஞானியின் தார்மீகப் பொறுப்பிற்கும் இடையிலான முரண்பாடுதான் இக்கதையின் மையக்கரு. “இயற்கையை ஓவர்ரைட் செய்ய மனுஷனுக்கு அதிகாரம் இல்லை. அந்த செல் எந்த உறுப்பை உருவாக்கப்போகிறதுன்னு அதுக்குத் தெரிவதில்லை, ஆனால் அது தெரியாத உயிரணுக்களும் இல்லை” எனும் கூற்று அறிவியல் ஆய்வுகளுக்கு பின்னால் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்று எழுத்தாளர் கூறுகிறார். உயிர் அணுக்களின் பருவநிலை வளர்ச்சியை அவர் அம்மானை விளையாட்டுடன் ஒப்பிட்டு கூறும் இடம் தமிழ் மரபை அறிவியலோடு இணைக்கும் ஒரு உன்னத தருணம். 

ரா கிரிதரனின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் அறிவியல் கருத்துக்களை மட்டும் பேசாமல் தங்களின் தனிப்பட்ட கோபம், ஆசை, காதல், பயம், முரண் ஆகியவற்றை வெளிப்படுத்தும் எதார்த்த மனிதர்களாக இருப்பதால் வாசிப்பவரால் சுலபமாக அவர்களுடன் இணைந்துக் கொள்ள முடிகிறது. அறிவியல் கதைகள் எழுதும் போது அதற்கே உரிய தனித்துவமான பெயர்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் போது நேரும் கஷ்டங்கள் யாவும் இதில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. சில இடங்களில் நாம் கூகுளின் உதவியை நாட வேண்டியுள்ளதே தவிர எல்லோரும் புரிந்து கொள்ளும் விதம் சுலபமாகவே எல்லா கதைகளையும் எழுதி உள்ளார். மேலும் அறிவியல் கதைகளோடு தமிழ் மரபு தத்துவம் ஆகியவற்றை இணைந்து எழுதியிருப்பது ஆசிரியரின் ஆழ்ந்த வாசிப்பும் சிந்தனையையும் காட்டுகிறது. 

  எதிர்கால உலக அரசியல், இயந்திரங்களின் ஆதிக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் குறித்த எச்சரிக்கை மணி நமக்குள் ஒலிக்க, அதே நேரத்தில் கதைகளில் வரும் அறிவியல் தகவல்களில் இருக்கும் அசாத்தியமான துல்லியமும் என்னை வியக்க வைத்தது. கதையின் எதிர்மறை அம்சம் என்று பார்த்தால் தத்துவார்த்த விவாதங்களும், அறிவியல், கணிதம் குறித்த விளக்கங்களுக்கும் ஆழ்ந்த வாசிப்பு தேவைப்படுகிறது. மேலோட்டமாக படிப்பவர்களுக்கு சற்று அயற்சியைத் தரலாம். 

 ரா. கிரிதரனின் ‘கண்ணிநுண் உயிர்த்தாம்பு’ வெறும் கற்பனைக் கதைகளின் தொகுப்பல்ல, அது மனித நாகரிகத்தின் எதிர்காலம் குறித்த பார்வையும் அவதானிப்பும். இயந்திரங்கள் மனிதனை ஆளத் தொடங்கும் காலத்திலும், மனிதத்தன்மையின் இறுதிப் புள்ளியாக எஞ்சி நிற்கப்போவது அவனது சுதந்திரமும், அறமும் தான் என்பதை இத்தொகுப்பு அழுத்தமாகப் பதிவு செய்கிறது. 

அறிவியல் புனைகதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களும், தமிழின் புதிய இலக்கியப் போக்குகளைக் கவனிப்பவர்களும் தாராளமாக வாசிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய நூல் இது. ரா. கிரிதரன் தமிழ் இலக்கியத்தின் அறிவியல் புனைவு கதைத் துறைக்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை இப்புத்தகத்தின் மூலம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

***

ஆ.ஹரிகிருஷ்ணன் – கோவையில் தொழில் நடத்திவருகிறார். சமூக வலைதளங்கள் தன் வாசிப்பனுபவங்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி : harikrish556@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here