எனதன்பு இரவே
தூங்கிக் கொண்டிருக்கும் போது
கட்டைவிரல் மட்டும் அசைந்தது
நான் அதை உணர்ந்தேன்
சுவரிலிருந்து
விழத்தயாராகும் பல்லியைப் போல
இரவில் விழும் பாத்திரத்தைப் போல
காற்றுக்கு வேகமாக
ஒட்டிக்கொண்ட ஜன்னலைப் போல
அதை உணரும்போது
அத்தனை தனலோடு
அவளின் கடைசி வார்த்தை
உள்ளிருந்து ஒலிக்கிறது
வெடுக்கென விழித்துவிட்டேன்
நான் முழிப்பதை முன்கூட்டியே அறிந்த
அறையின் உபகரணங்கள்
என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன
பதிலுக்கு என்னால் சிரிக்க முடியவில்லை
எண்ணெய் தீர்ந்த விளக்கைச் சுற்றிப் படிந்த வடுக்களாக வார்த்தைகள் பிசுபிசுக்க
இந்த இரவின் மீது நான் வழுக்கி விழுகிறேன்
இனி என்னால் உறங்க முடியாது
இந்த மீதி தூக்கத்தை எதற்கு தின்னக்கொடுப்பதென தெரியவில்லை
விடிய விடிய முழித்திருப்பதென்பது
எப்போதும் இரவை பார்ப்பதில் சேராது
எனதன்பு கட்டைவிரலே.
*
சடலமென நடிக்கும் சடலம்
பனியின் அந்தரங்கம் உடைய
சவுக்கை மரங்களின் மேல் அமர்ந்து இறங்குகின்றன பார்வைகள்
அம்மா என்று கத்தினேன்
அவளின் சேலை நிறத்திற்கு கடல் மாறியது
அதில் சிக்கிய மூன்று சாமீன்களின்
புலிக்கோடுகளும் பற்றி எரிகின்றன
கரை முழுக்க பாவக்கவுச்சி
ஓடிக் களைத்த அவளின் கால்களைப் பார்க்கிறேன்
நீண்ட கால துயர அச்சில் சோர்ந்திருந்தது
கரையில் தவறி விழுந்த
அனாதை நிழலொன்று அழுகிறது
இனி அதை தேற்ற முடியாது
அதன் சடலம் விழிப்பதும் இறப்பதுமென
மாறி மாறி விளையாடத்தொடங்கி விட்டது.
*
பாறை
பாறைகளின் முன் நிற்கும்போது
கைகளை நீட்டாதே என்பார் தந்தை
பாறைகளின் முன் நிற்கும்போது
எதனுடைய நினைவு வருகிறதோ
அதுதான் அந்த பாறையும் என்றார்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு
இந்த பொட்டல் காட்டின் நடுவே
எங்கிருந்து நடந்து வந்ததென தெரியவில்லை
அப்படியொரு
சொறசொறப்பான தனித்த பாறையின்
முன்தான் நிற்கிறேன்
யாருடைய நினைவும் வரவில்லை
எவ்வளவு வெறுமையாக வாழ்ந்திருக்கிறேன் எனத் தோன்றுகிறது
ஆனாலும் முயற்சி செய்தேன்
சில வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன
அதன்முன் இப்போது கைகளை நீட்டாமலே
நானொரு பாறையாகி மாறிவிட்டேன்.
***
ச.துரை – இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் என்னும் ஊரைச் சார்ந்தவர். 2019ஆம் ஆண்டு சால்ட் பதிப்பகத்தில் ‘மத்தி’,’சங்காயம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘சங்காயம்’ எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக சிற்றிதழ், இணைய இதழ்களில் கவிதை, சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். மலையாள இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: 1991duraimurugan@gmail.com

